Friday, April 29, 2005

கட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

இந்த வாரம் தெஹெல்காவில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் நான்கு தலித் அதிகாரிகள் எந்த வேலையும் கொடுக்கப்படாமல் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதை எதிர்த்து கிறிஸ்துதாஸ் காந்தி (இவரும் கட்டாயக் காத்திருப்பில் இருப்பவர்) நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார் என்றும் எழுதியிருந்தனர்.

வழக்கம் போல இதைப்பற்றி முன்னணி செய்தித்தாள்களும் தொலைக்காட்சிச் செய்திகளும் எதுவும் சொல்லவில்லை. அந்த நான்கு பேர் கிறிஸ்துதாஸ் காந்தி, சிவகாமி, கோவிந்தன், கண்ணகி பாக்கியநாதன்.

இதற்குமேல் தலைமைச் செயலர் லக்ஷ்மி பிரானேஷ், காந்தியும் சிவகாமியும் ஜனவரி மாதம் ஒரு தலித் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக விளக்கம் கேட்டு கடிதங்கள் எழுதியுள்ளாராம். இந்தக் கூட்டத்தை "வகுப்புவாதக்கூட்டம்" (communal) என்று லக்ஷ்மி விளித்துள்ளார்.

காந்தி நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகு மேற்படி நால்வரி்ல் இருவருக்கு வேலை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெஹெல்கா கூறுகிறது. ஆனால் அந்த இருவர் யாரென்று சொல்லவில்லை. ஓரளவுக்கு யூகித்தால் சிவகாமி, காந்தி இருவருக்கும் வேலை ஒதுக்கப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.

இதற்கிடையில் லக்ஷ்மி பிரானேஷ் ஓய்வு பெறுகிறார். புதிய தலைமைச் செயலர் இன்றோ நாளையோ அறிவிக்கப்படுவார்.

[ஜனவரி 2004-ல் மித்ர வெளியீடாக சிவகாமியின் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. காந்தி வெளியிட, பிரதிபா ஜெயச்சந்திரன் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். நான் வேறொரு புத்தகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த மேடையில் அமர்ந்திருந்தேன். எனக்கும் சிவகாமியின் சிறுகதைத் தொகுதி பிரதி கிடைத்தது. அதன்பின் அதைப் படிக்க முழுவதுமாக மறந்துபோனேன். இன்று மீண்டும் தெஹெல்கா செய்தியைப் படித்ததும், அந்த சிறுகதைத் தொகுதியைக் கையில் எடுத்துள்ளேன். முதல் கதையைப் படித்து முடித்துவிட்டேன். அடுத்த வாரம் அனைத்தையும் படித்து முடிந்தபின் எழுதுகிறேன்.]

Thursday, April 28, 2005

கெட்டிமேளம்

பா.ராகவன் கதை-வசனம் எழுதும் டிவி சீரியல் மெகா காவியம் 'கெட்டிமேளம்', திங்கள் கிழமை, 2-5-2005, இரவு 9.00 மணி முதல் ஜெயா டிவியில் ஆரம்பிக்கிறது.

ராகவன் என்னிடம் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இரண்டு தொழிலதிபர்களின் வாழ்க்கை, அவர்களுக்கிடையேயான போராட்டம் என்று செல்லும் கதை.



ஆனால் நம்மூரில் தொலைக்காட்சி சீரியலை இப்படியெல்லாம் எடுக்க விட்டுவிடுவார்களா என்ன? இரண்டு மூன்று பெண்களையாவது கொண்டுவரவேண்டுமே? சரி, கொண்டுவந்தாயிற்று. வெளியில் விளம்பரத்தைப் பார்த்தீர்களானால் மூன்று பெண்களின் கதை என்றுதான் இருக்கும். ஆனால் கதை பொதுவான டிவி சீரியல் அம்சங்கள் இல்லாமல் நன்றாக இருக்கும் என்கிறார் ராகவன்.

பொதுவாக நான் சீரியல்களே பார்ப்பதில்லை. முதல் சில நாள்களுக்காவது இந்த சீரியலைப் பார்ப்பேன். அதற்குமேல் எப்படி போகிறது என்று பார்ப்போம்!

Wednesday, April 27, 2005

ரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4

காந்தி ஒருமுறை சொன்னாராம்: "முதலில் அவர்கள் உன்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். பின் உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். பின் உன்னுடன் சண்டையிட வருவார்கள். பின்... நீ ஜெயித்திருப்பாய்."
இது ரெட்ஹாட் இணையத்தளத்தில் கண்ட மேற்கோள்.

நேற்று, சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டல் ஆடலறையில் ரெட்ஹாட் நிறுவனம் தனது 'ரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4' வெளியீட்டு விழாவினை நடத்தியது.

ரெட்ஹாட் போன்ற திறமூல, தளையறு மென்பொருள்கள் சார்ந்த இயக்குதளத்தை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் நடத்தும் ஒரு விழாவுக்கு வந்திருக்கும் கூட்டமே, 'லினக்ஸ் வயசுக்கு வந்துடுச்சு' என்பதை உணர்த்தியது. Maturity - லினக்ஸ் பொதி முதிர்ச்சியடைந்த ஓர் இயக்குதளப் பொதியா என்பதே பல நிறுவனங்களின் கவலையாக இருந்தது. பின் டெஸ்க்டாப் - சாதாரணப் பயனர் கணினி - தவிர்த்து பின் அலுவல் விஷயங்களைக் கவனிக்கும் வழங்கிக் கணினிகளில் (சர்வர்) லினக்ஸை நிறுவ யாருமே தயங்கவில்லை. தரவுத்தள வழங்கி, தடுப்புச்சுவர், இணையத்தள வழங்கி, மின்னஞ்சல் பரிமாற்றி எனப் பல்வேறு விஷயங்களுக்கும் இன்று அனைத்து முன்னணித் தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் பயன்படுத்துவது லினக்ஸ்தான். அதிலும்கூடப் பெரும்பான்மை ரெட்ஹாட்தான்.

ரெட்ஹாட் தன்கூடவே சில கணினி உலகப் பெருங்கோக்களைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தனர். இண்டெல், ஆரக்கிள் நிறுவனங்களிலிருந்து சிலர் வந்திருந்தனர்.

ரெட்ஹாட் பயனர் கணினிக்கும் - உங்கள் மேசைக்கும் - வந்துவிட்டது என்று அவர்கள் சொன்னார்கள். ஆங்கில இடைமுகத்தில் கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு இது நிச்சயம் நடந்துவிட்டது என்றுதான் சொல்வேன். ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பேர்ட், ஓப்பன் ஆஃபீஸ் - இவை லினக்ஸில் பார்க்க அழகாகவும், வேண்டிய வேலைகளைச் செய்யத் தகுதியானவையாகவும் உள்ளன. எழுத்து வடிவங்கள் எக்ஸ் சாளர அமைப்பில் (கேடிஈ, குனோம்) சற்று சுமார்தான். இப்பொழுது True Type, Open Type எழுத்து வடிவங்கள் ஓரளவுக்கு நன்றாகவே தெரிந்தாலும் மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு மாற்று கம்மிதான். ஆனாலும் இன்றைய நிலையில் இது போதும் என்று தோன்றுகிறது.

நேற்று ரெட்ஹாட் இந்திய மொழிகள் ஐந்தில் இடைமுகத்தைக் கொண்டுவந்திருப்பதனைக் காட்டினார்கள். ஆனால் நேரம் அதிகமானபடியால் நான் பாதியில் கிளம்பி வந்துவிட்டேன். ஹிந்தி, தமிழ், வங்காளம், பஞ்சாபி (குர்முகி எழுத்தில்), குஜராத்தி ஆகிய ஐந்து மொழிகள் இவை. இதில் தமிழைப் பொறுத்தவரை ழ கணினி குழுவுடன் இணைந்து ரெட்ஹாட் இந்த வேலையைச் செய்திருக்கின்றனர். அங்கூர் பாங்ளா என்ற குழுவுடன் இணைந்து வங்காள இடைமுகத்தைச் செய்திருக்கின்றனர். [அங்கூர் பாங்ளா தளத்தைப் பார்த்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதுபற்றி நிறைய விவாதிக்க வேண்டும்!] அதனால் கடைசிவரை தமிழ் இடைமுகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவில்லை. இன்றோ, நாளையோ யாரிடமிருந்தாவது குறுந்தட்டை வாங்கிப் போட்டுப் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு தமிழ்க் கணினி மென்பொருள் வெளியீட்டு விழாவைப் போன்று இல்லாமல், வரிக்கு வரி திறமூல ஆர்வலர்களது பங்களிப்பை அங்கீகரித்தனர் ரெட்ஹாட் பேச்சாளர்கள்.

ஃபெடோரா பற்றி ஒரு கேள்வி எழுந்தது. அதற்கு ரெட்ஹாட் அதிகாரிகள் பதில்: "ஃபெடோரா என்பது பரிசோதனைப் படுகை. ஃபெடோராவை ஆர்வலர்களிடம் விட்டுவிட்டு அதில் புகுத்தியுள்ள புதுமைகள் முதிர்ச்சியடைந்ததும் அவற்றை ரெட்ஹாட் தொகுப்பில் சேர்க்கிறோம். எனவே ஃபெடோராவில் வேலை செய்வதெல்லாம் ரெட்ஹாட்டில் வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் ரெட்ஹாட்டில் ஒன்று சரியாக வேலை செய்கிறது என்றால் அது ஃபெடோராவில் சரியாக வேலை செய்திருக்கும்."

ரெட்ஹாட்தான் இப்பொழுதைக்கு இந்தியாவில் மைக்ரோசாஃப்டுக்குத் தீவிர மாற்று. பிற லினக்ஸ் சார்ந்த பொதிகளை வெளியிடும் நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவன ரீதியில் இல்லை. அதுவரையில் ரெட்ஹாட் நிறுவனத்துக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!

Monday, April 25, 2005

வானதி திருநாவுக்கரசு செட்டியார்

இன்று The Hindu Madras Miscellany-ல் S.முத்தையா வானதி பதிப்பகத்தின் ஐம்பதாண்டு பதிப்புலகச் சாதனையை முன்னிட்டு திருநாவுக்கரசு செட்டியாரின் வாழ்க்கையை சிறுகுறிப்பாகத் தருகிறார்.

50 years of publishing

வானதி பதிப்பகத்துக்கு வாழ்த்துகள்!

Sunday, April 24, 2005

"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்"

நேற்று நானும் சத்யாவும் க்ரியா ராமக்ரிஷ்ணனைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம்.

ராமகிருஷ்ணன் தமிழ்ப் பதிப்புலகின் தரத்தை மிகவும் உயர்த்தியவர். அதில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பவர். க்ரியா தற்காலத் தமிழகராதி என்னும் மிகச்சிறந்த தமிழ் அகராதியை வெளியிட்டிருப்பவர். மொழி அறக்கட்டளை மூலம் தமிழ் நடைக் கையேடு, தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி (இரண்டும், இப்பொழுது அடையாளம் பதிப்பாக வெளிவருகிறது) ஆகியவற்றை உருவாக்கியதில் பங்குவகித்தவர். ராமகிருஷ்ணன் 1974-ல் க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார். கடந்த முப்பது வருடங்களில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தரத்தால் மிகச்சிறந்த புத்தகங்களைத் தமிழுக்குக் கொடுத்திருக்கிறார்.

க்ரியா தற்காலத் தமிழகராதி விரைவில் ஆறாவது பதிப்பாக வெளிவரவிருக்கிறது.

ஓர் அகராதியை உருவாக்கும்போது சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இல்லையென்றால், அவற்றை அவர்களே உருவாக்குவார்கள் என்று நான் தவறாக நினைத்திருந்தேன். ராமகிருஷ்ணன் அவ்வாறில்லை என்று விளக்கினார். "அகராதியின் நோக்கம் புதிய சொற்களை உருவாக்குவதல்ல. ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும், புழக்கத்தில் இருக்கும் சொற்களுக்கு அங்கீகாரம் வழங்குவது. அந்தச் சொற்களின் பல்வேறு பொருள்கள் என்ன என்பதை விளக்குவது. சொற்களை எப்படிப் பல்வேறு வட்டாரங்களில், துறைகளில் பல்வேறு பொருள்களில் கையாள்கிறார்கள் என்று விளக்குவது. இலக்கண முறைப்படி ஒரு சொல்லை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைச் சொல்வது." என்றார்.

அதே சமயம் பல்வேறு காரணங்களுக்காக ராமகிருஷ்ணன் புதுச் சொற்களையும் உருவாக்கியுள்ளார். "Condom என்பதற்கு ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்" என்கிறார் ராமகிருஷ்ணன். சில நாள்களுக்கு முன்னர், முன்னாள் இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் எஸ்.ரமேஷ் நடத்திய ஜெயா டிவி கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். கொளுத்தும் வெய்யிலில் கொச்சி, விஷாகப்பட்டிணம், ஜாம்ஷெட்பூர் என்று இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் dehydration-ஆல் பாதிக்கப்பட்டார்கள். Cramps வந்தது. Rehydration தேவைப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துகொண்ட மற்றொருவர் physical trainer. அவர் மாறி மாறி dehydration, rehydration என்று பேசிக்கொண்டிருந்தார். எத்தனை பேருக்கு அது புரிந்திருக்கும் என்று அன்றே யோசித்தேன். சரியான தமிழ்ச்சொல் எனக்கு அன்று கிடைக்கவில்லை.

ராமகிருஷ்ணன் "Where There is no Doctor - A Village Health Care Handbook" என்னும் அற்புதமானதொரு புத்தகத்தினை க்ரியா மூலமாகத் தமிழில் "மருத்துவர் இல்லாத இடத்தில்" என்ற பெயரில் கொண்டுவந்திருந்தார். அந்த நேரத்தில் மருத்துவம் தொடர்பான பல சொற்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது என்றார். Dehydration என்ற சொல்லுக்கு இணையாக "நீரிழப்பு" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியதாகச் சொன்னார். எளிமையான, அழகான சொல். இனி இந்தச் சொல்லை நிறையப் பயன்படுத்துவேன். அதேபோல rehydration என்ற சொல்லுக்கு "நீரூட்டம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார். (இப்பொழுது இந்தப் புத்தகத்தின் அண்மைப் பதிப்பு க்ரியாவால் வெளியிடப்படுவதில்லையாம்.)

-----

எப்பொழுதெல்லாம் கணினித் துறையில் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தேவைப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் முனைவர் இராம.கியை அணுகுவது வழக்கம். வெங்கட்டும் பல இணையான தமிழ்ச்சொற்களை ஏற்படுத்திக் கையாண்டு வருகிறார்.

பலரும் புதிதாகத் தமிழ்ச்சொற்களைக் கண்டுபிடிப்பவர்களைக் கேவலமாகப் பார்க்கிறார்கள். சோ ராமசாமி முதல் இணையத்தில் நேற்று முளைத்தவர்கள் வரை கேலியும், கிண்டலும் எக்கச்சக்கம். இராம.கி கடற்கரைக் கூட்டத்தின்போது எவ்வாறு பேருந்து என்ற சொல் இன்று அனைவரும் அறியக்கூடியதாக உள்ளது என்று விளக்கினார். பேருந்து நிலையம் என்றுதான் இன்று எங்கும் எழுதப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பஸ் ஸ்டாண்ட் என்றாலும் பேருந்து நிலையம் என்றாலும் என்ன என்பதை அறிந்துகொண்டிருக்கின்றனர். இயல்பியல் (இன்றி இயற்பியல் என்று வழங்கப்படுகிறது) என்ற சொல்லை 1970களில்(?) உருவாக்கியதும் தான்தான் என்று இராம.கி. சொன்னார். அதுவரையில் பவுதீகம் என்ற சொல்லே இருந்து வந்தது. ஆனால் இன்று தானே இயல்பியல் என்ற சொல்லை விரும்புவதில்லை என்றார். வேறொரு சொல்லைக் குறிப்பிட்டார் ஆனால் நான் அதை என் மனதில் சரியாக வாங்கிக்கொள்ளவில்லை. (பருண்மவியல்?)

முன்னர் ஒருமுறை முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியன் ஏதோ ஓர் இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் வேட்பாளர் என்ற சொல் எப்படி வந்தது என்று விளக்கியிருந்தார். அப்பொழுதெல்லாம் 'அபேட்சகர்' என்ற சொல்தான் புழக்கத்தில் இருந்தது. அண்ணாதுரை 'வேட்பாளர்' என்ற சொல்லை முன்வைத்தபோது பலரும் - முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் - அதை எதிர்த்தனர். 'வேட்குனர்' போன்ற சொற்களெல்லாம் முன்வைக்கப்பட்டன. கடைசியில் வேட்பாளர் என்ற சொல்தான் இன்று நிற்கிறது. (ஆம், கேண்டிடேட் என்ற தமிழ்ச்சொல்லும் கூடவே உள்ளது:-)

பாரதியார் எவ்வாறு member என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லைத் தட்டுத் தடுமாறி உருவாக்க முயற்சி செய்தார் என்று ஒருமுறை எழுதியிருக்கிறேன். இப்பொழுது சட்டெனச் சுட்டி கிடைக்கவில்லை. என்னென்னவோ முயற்சிகளுக்குப் பிறகு அங்கத்தார் என்றுவரை வந்து, பின் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். இன்று அங்கத்தினர், உறுப்பினர் என்ற இரண்டு சொற்களுமே புழங்குகிறது.

தினமலர் கம்ப்யூட்டர் மலரில் எப்பொழுதுமே அந்நியமான ஆங்கிலச் சொற்களை மட்டுமே கையாண்டு வந்தனர். இணையத்தில் நாம் அனைவரும் மருத்துவர் ஜெயபாரதி கண்டுபிடித்த சொல்லான "இணையம்", அதலிருந்து "இணையத்தளம்" என்பதைப் புழங்க, தமிழ் இதழ்கள் பலவும் இண்டெர்நெட், வெப்சைட் என்று பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று தமிழ் நாளிதழ்கள் அனைத்துமே இணையம் என்பதை ஏற்றுக்கொண்டு விட்டன. ஆனால் முழுமையாக இல்லை. இண்டெர்நெட்டும் இருக்கும், இணையமும் இருக்கும். வெப்சைட்டும் இருக்கும், இணையதளம் (அ) இணையத்தளமும் இருக்கும். கணினியும் இருக்கும், கம்ப்யூட்டரும் இருக்கும். நாளடைவில் ஆங்கிலச் சொற்கள் மறைந்துபோகும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு இன்றைய தினமலரைப் பாருங்கள். இணையம், இணையத்தளம், கணினி, மென்பொருள், எழுத்து வடிவம், கணினியில் உள்ளீடு செய்தல், கணினி வழி அச்சுக்கோர்ப்பு, விசைப்பலகை என்ற சொற்கள் சர்வசாதாரணமாகப் புழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே கட்டுரையில் கம்ப்யூட்டர், ஃபாண்ட், "இண்டெர்நெட் எனப்படும் இணையம்", "கீ-லே-அவுட்" என்றும் உள்ளது.

தமிழ்ச்சொற்கள் புழங்க ஆரம்பித்திருப்பதே மிகவும் ஆரோக்கியமான செயல்.

நான் எனது வலைப்பதிவில் ஆரம்பத்தில் இணையதளம் என்றே எழுதிவந்தேன், பின்னர் இணையத்தளம் என்று 'த்'த ஆரம்பித்தேன். அது தினத்தந்தியைப் பார்த்துக் கற்றுக்கொண்டது. பா.ராகவனிடம் தினத்தந்தியில் 'த்'துகிறார்கள், பிறர் (தினமலரில்) 'த்'தவில்லை. எது சரி என்று கேட்டேன். தமிழைச் சரியாக எழுதத் தெரிந்தவர்கள் தினத்தந்தி, அதனால் தினத்தந்தியில் சொல்லியிருந்தால் அதுதான் சரி என்றார். அன்றுமுதல் 'இணையத்தளம்'தான்.

வலைப்பதிவா, வலைப்பூவா, வலைக்குறிப்பா என்பது பற்றி சில விவாதங்கள் இருந்தது. அதேபோல மென்பொருள், மென்கலன், சொவ்வறை ஆகியவற்றுக்கும் சில விவாதங்கள் நடைபெற்றன. குறுவட்டு, குறுந்தட்டு, குறுந்தகடு - இதுவும் அப்படியே. ஆனால் இந்த விவாதங்கள் முழுமையாக நடைபெறாததற்குக் காரணம் தேவையான அளவு தமிழ் மொழியியல் அறிவுடையவர், ஆர்வமுடையவர் இப்பொழுதைக்கு இணையத்தில் மிகக்குறைவு என்பதுதான். வலைப்பதிவு, மென்பொருள், குறுந்தட்டு ஆகிய சொற்களையே நான் புழங்குகிறேன். ஏன் என்று கேட்டால் எனக்குச் சரியான பதில் சொல்லத் தெரியாது. ஆனாலும் ஓசையில் எனக்கு இவைதான் பிடித்துள்ளன. நான் அச்சு இதழ்களில் எழுதும் கட்டுரைகளிலும், தொலைக்காட்சியில் பேசும்போதும் இவற்றையே பயன்படுத்துகிறேன்.

இவற்றுள் ஏதோ ஒன்று ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, க்ரியா அகராதியில் போய்ச்சேரும். அப்பொழுது அந்தச் சொல்லுக்கும் அங்கீகாரம் கிடைத்துவிடும்!

[பி.கு: முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு எந்தத் தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது, தமிழ்ப் பத்திரிகை தர்மப்படி இதுதான் மனதில் தோன்றியது, மன்னிக்கவும்:-)]

Saturday, April 23, 2005

சி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு

மத்திய அரசின் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சமீபத்தில் வெளியிட்ட குறுந்தட்டு விஷயமாக நான் நிறையவே வலைப்பதிவில் எழுதிவிட்டேன். அத்துடன் ஜெயா டிவி செய்தியில் என் முகமும், நான் சொல்லும் சில துண்டுச் செய்திகளும் வந்தன. அத்துடன் இன்னமும் இரண்டு பேர் ஏதேதோ (தவறாகவும்) சொன்னார்கள். செய்தி வாசிப்பவரும் சற்று 'ஜெயா ஸ்லாண்ட்' கொடுத்தார். இன்று மாலை ஜெயா டிவி விவாதத்தில் சுதாங்கன், நான், தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர் சங்கரநாராயணன் ஆகியோர் பேசினோம். சுமார் 30 நிமிடங்கள் நிகழ்ச்சி. இதில் திறமூல மென்பொருள்கள் என்றால் என்ன, முகுந்தராஜ்/தமிழா பங்களிப்பு என்ன, ழ கணினி பங்களிப்பு என்ன, பொன்விழி விஷயம் என்ன, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மென்பொருள் வளர்ச்சி நிதி யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது, இந்தக் குறுந்தட்டில் என்ன உள்ளது, என்ன இல்லை என்பதைப் பற்றியும் பேசினோம். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்ன செய்துள்ளது என்பது பற்றியும் சிறு விவாதம் இருந்தது.

கல்கி நிருபர் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கு முழுமையாக இந்தக் குறுந்தட்டைப் போட்டுக் காண்பித்து, வரும் பிரச்னைகளை விளக்கிச் சொன்னேன். அதே நேரம் இந்தக் குறுந்தட்டில் உள்ள நல்ல விஷயங்களைப் பற்றியும் சொன்னேன். ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் குறைவாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் என்ன வெளியாகும் என்பது இதழ் வந்தவுடன்தான் தெரியும். குமுதம் ரிப்போர்டரில் ஒரு கட்டுரை நீண்டதாக வரலாம், அல்லது வராமலேயே கூடப் போகலாம்! வந்தால் சொல்கிறேன்.

----

இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு கோபம் வந்தது, ஏன் வரிந்துகட்டிக்கொண்டு இதைப்பற்றி எழுதினோம், பேசினோம் என்று யோசித்துப் பார்த்தேன்.

1. தமிழில் முதன்முறையாக என்று டிவி பாணியில் சொந்தம் கொண்டாடி, தினசரிகளில் விளம்பரம் கொடுத்து, பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு செல்பேசி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பி, குறுந்தகடு முகப்பில் தேவையற்ற சுய விளம்பரம் செய்து கொண்டார்கள் என்பது காரணமாக இருக்குமா?

2. சி-டாக் அவசர, அவசரமாக முழுவதும் யோசிக்காமல் ஏதோ ஒன்றைக் கொடுத்துவிட்டு (நர்சரிப் பாடல்கள்?) அது விண்டோஸ் எக்ஸ்.பி யில் மட்டும் வேலை செய்யுமா அல்லது விண்டோஸ் 98-லும் வேலை செய்யுமா என்று சொல்லவில்லை. விசைப்பலகை டிரைவர்கள் ஏதும் கொடுக்கவில்லை. உதவிக்கோப்புகள் என்று எதுவும் இல்லை. காப்புரிமை பற்றி எந்தத் தகவலும் சரியாக இல்லை. விநியோகம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. திறமூல ஆர்வலர்களுக்குக் கொடுக்கவேண்டிய குறைந்தபட்ச அங்கீகாரம் கூட இல்லை. அவர்களது இணையத்தளம் professional-ஆக இல்லாமல், படு மந்தமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால் வந்த கோபமா?

3. தயாநிதி மாறனின் இரண்டு பேட்டிகளில் எல்லாவற்றையும் நான்தான் செய்தேன், இனியும் இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி மாதிரி சொன்னது வரவழைத்த கோபமா? (நிச்சயமாக அவர் சொன்னதையெல்லாம் ஆறு மாதத்துக்குள் செய்து முடிக்க முடியாது. அதுபற்றி அக்டோபர் 2005-ல் எழுதுகிறேன்.)

ஒருவேளை எனது ரியாக்‌ஷன் தேவைக்கு அதிகமோ என்று தோன்றியது.

ஞாயிறு அன்று மாலை 5.30க்கு சன் நியூஸ் சானலில் IT.com நிகழ்ச்சியில் சி-டாக் நிறுவனத்தின் ராமன், மாலனுடன் உரையாடுகிறார். அதில் இந்தக் குறுந்தட்டினைப் பற்றி விளக்குவார். அத்துடன் ஃபயர்ஃபாக்ஸ் பொதி தயாரிப்பில் முகுந்தின் பங்கு பற்றியும் ஒப்புக்கொள்வார் என்றும் தெரிகிறது. பார்க்க முடிந்தால் அதையும் பார்க்கவும்.

கணித்தமிழ் சங்கத்தின் சில உறுப்பினர்களின் மென்பொருள்கள் மட்டும் இந்தக் குறுந்தகட்டில் இடம்பெற்றிருப்பது பலருக்குக் கோபத்தை வரவழைத்திருக்கிறது என்றும் கேள்விப்படுகிறேன். இந்தத் தேர்வு எப்படி நடைபெற்றது? 200 எழுத்து வடிவங்கள் ஏன் தேவை? இதற்கென சி-டாக் எத்தனை பணம் செலவழித்தது? யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? ஏன் எக்கச்சக்கமான TAM, TAB எழுத்து வடிவங்கள் பெறப்பட்டன?

----

இஃது ஒருபக்கம் இருக்க, சும்மா பிறரைக் குற்றம் மட்டும் சாட்டிக்கொண்டிருக்காமல் நாமும் உருப்படியாக ஏதேனும் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. திறமூலச் செயலிகள் பலவற்றையும் சரியான முறையில் தமிழாக்கி விண்டோஸ் எக்ஸ்.பி, விண்டோஸ் 98 ஆகியவற்றில் வேலை செய்யுமாறு, எளிதான முறையில் நிறுவுமாறு குறுந்தட்டு ஒன்றை உருவாக்குவது பற்றி நாராயணிடம் பேசினேன். அவர் முகுந்திடம் பேசியுள்ளார். இது தொடர்பாக ஒரு கூட்டு வலைப்பதிவு ஒன்றையும், கூட்டுச்செயல்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்புச் செயலி ஒன்றையும் நிறுவுவது பற்றி நாராயண் பேசியுள்ளார். இது மிக விரைவில் செயல்படுத்தப்படும்.

அதன்மூலம் உருப்படியான ஒரு குறுந்தட்டை விரைவில் தயாரித்து, சிறு குழந்தை கூட எந்த வகை இயக்குதளத்திலும் இந்த மென்பொருள்களை நிறுவி (முதலில் எக்ஸ்.பி, பின் 98, பின் லினக்ஸ்), உடனடியாக தமிழில் மிகவும் அடிப்படையான விஷயங்களைச் செய்யத் தொடங்கினால் அதுதான் நமது தார்மீகக் கோபத்தை சரியான முறையில் காட்டுவதாகும் என்று தோன்றுகிறது.

Wednesday, April 20, 2005

எஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்

எஸ்.ஆர்.எம் கல்லூரியின் நிர்வாகவியல் படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் செய்துள்ள சில பிராஜெக்ட்களை மதிப்பிடுவதற்காக சென்ற வாரம் (புதன்கிழமை) நான் அங்கு சென்றிருந்தேன். என்னை ஏன் அழைத்திருந்தார்கள் என்று ஒருவர் கேட்டிருந்தார். உண்மையைச் சொல்லவேண்டுமானால் "தெரியாது" என்றுதான் சொல்லவேண்டும்.

முதலாவதாக இது கல்லூரிக் கல்வியின் ஓர் அங்கம் இல்லை. அதிகப்படியான பிராஜெக்ட். இதற்கு மதிப்பெண்கள் கிடையாது. எஸ்.ஆர்.எம் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்பதால் அவர்களாகவே இதுபோன்று தம் மாணவர்களின் தரத்தை உயர்த்த வேண்டுமென்று செய்திருக்கிறார்கள் என்று தோன்றியது. வெவ்வேறு துறையிலிருந்து பலரும் இந்த பிராஜெக்ட்களை மதிப்பிட வந்திருந்தனர்.

நான் சென்ற வகுப்பில் கிட்டத்தட்ட 60 மாணவர்கள் (இருபாலரும் உண்டு). சிலர் அன்று வரவில்லை. அங்கு இருந்தவர்கள் 11 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். சில குழுக்களின் ஐந்து பேர், சில குழுக்களில் நான்கு பேர்.

இந்தக் குழுக்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் சிலவற்றைத் தருகிறேன்.

"எல்.ஜி வாஷிங் மெஷின் பற்றி பயனாளர் கருத்து"
"சியட் டயர் நிறுவனம் சென்னையில் முதலிடத்துக்கு வர என்ன செய்ய வேண்டும்?"
"வாடிக்கையாளரைத் திருப்தி செய்வதில் தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் - ஓர் ஒப்பீடு"
"இந்தியன் ஏர்லைன்ஸ் - ஏர் டெக்கான் - ஒப்பீடு"
"தாம்பரம் பகுதியில் குப்பைகள் அகற்றுவதில் குறைபாடுகள் - ஓர் ஆய்வு"
"சூப்பர் மேக்ஸ் பிளேடுகளும், பிற பிராண்ட்களும் - மார்கெட் ரிஸர்ச்"
"காஸ்மெடிக் உபயோகத்தில் பன்னாட்டு நிறுவன பிராண்ட்கள் நிலை"
"எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே குடியின் கேடு"

மேற்கொண்டு இதுபற்றி அடுத்த பதிவில்.

Tuesday, April 19, 2005

பால்ஸ் தமிழ் மின் அகராதி

குறுந்தகட்டில் உள்ள பயனுள்ளதொரு செயலி "பால்ஸ் தமிழ் மின் அகராதி". இதுவும் கடையில் விற்கப்படுகிறது. ஆனால் இப்பொழுது இந்த C-DAC குறுந்தகட்டில் இலவசமாக வழங்கப்படுகிறது.


இது தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி. அதாவது தமிழ் வார்த்தைகள் ஏதேனும் பொருள் விளங்கவில்லையென்றால் அதற்கான தமிழோ, ஆங்கிலமோ இணைச்சொல்லை, பொருளைக் காண முடியும். ஆனால் ஆங்கிலச் சொல் ஒன்றுக்குப் பொருள் புரியவில்லை என்றால் அதற்கான நேரடிப் பொருளை இதில் காண முடியாது! இதனால் தமிழர்களுக்கு முழுமையான பயன் கிடையாது. முழுமையான பயன் வேண்டுமென்றால் தமிழ்->தமிழ், ஆங்கிலம் + ஆங்கிலம்->ஆங்கிலம், தமிழ் என இரண்டும் வேண்டும்.

எழுத்துக்களை Tamilnet99 மூலமாகத்தான் உள்ளிட முடிகிறது. அது தெரியாதவர்கள் மென்பொருள் விசைப்பலகை ஒன்றைப் பயன்படுத்தலாம்.

எனக்கு ஒரு சந்தேகம். வணிகச் செயலிகள் பலவற்றையும் இப்படி இலவசமாக வெளியிடுவதற்காக அரசு இந்த நிறுவனங்களுக்கு ஏதேனும் பணம் கொடுத்துள்ளதா? அப்படியானால் யார் யாருக்கு எவ்வளவு? என்ன கணக்கு? ஏதேனும் டெண்டர் முறைப்படி நடந்ததா? ஏன் பால்ஸ் தமிழ் அகராதி? வேறு தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் மின்-அகராதிகள் மாறுகடையில் கிடைக்கின்றனவா?

ஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி

சில நாள்களுக்கு முன்னர் ஆனந்தரங்கப் பிள்ளை விரிவான நாட்குறிப்புகள் பற்றி நான் ஒரு பதிவை எழுதியிருந்தேன். அது கோபாலகிருஷ்ணன் அல்லயான்ஸ் பிரான்சேஸில் கொடுத்த ஒரு பேச்சைக் கேட்டதிலிருந்தும், அவர் எழுதிய இரண்டு புத்தகங்களைப் பார்த்ததிலிருந்தும் நினைவில் வைத்து எழுதியது.

நான் எழுதிய பதிவில் சில தவறுகள் இருந்ததை கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் எனக்கு அனுப்பிய அஞ்சலிலிருந்து தேவையான பகுதிகளை இங்கு சேர்க்கிறேன். இது பிற்காலத்தில் இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

====
You have rightly pointed out that I saw the manuscripts in Paris, on which I worked thoroughly by comparing pagewise the three: those manuscripts, the english translation and the tamizh edition. In order to enhance your presentation so as to render it errorless and make it a reference text, I will suggest you few modifications taking in account the following considerations/remarks:

1/ The copies were separately made by Gallois-Montbrun and by Edouard Ariel. While Gallois-Montbrun's was in Pondicherry until the end of 19th cent., the one made by E.Ariel has been brought to Paris after HIS demise in 1854, at the age of 36. Gallois-Montbrun's (who continued to live in Pondicherry as his children afterwards) copy of Pondicherry has been viewed by the British who made a copy - probably of selected passages - which has been used for translation purpose as english edition. That copy is probably kept in the State Archives of Tamizhnadu, but, for administrative reasons - not existing so tightly in Europe - and in spite of my explanations and insistance, I was unable to see it and ascertain this assumption during my short passage at Chennai 7 years ago).

2/ கலுவா-மொம்பிரேன் திருவேங்கடப்பிள்ளை நாட்குறிப்புகள் என்று சிலவற்றை எடுத்து சேகரித்தபோது அவை ஆனந்தரங்கப் பிள்ளை டயரிகளைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று கண்டுகொள்ளாமல் தூக்கிப் போட்டுவிட்டதாகவும், மேலும் திருவேங்கடப்பிள்ளை என்ற பெயரில் ஒருவர்தான் அனைத்து நாட்குறிப்புகளையும் எழுதினார் என்றே அவர்கள் அனைவரும் கருதியதாகவும்

The diaries of Tiruvengadappillai were not thought to be of less importance by the Tamizhars of Pondicherry or by Gallois-Montbrun, BUT BY THE LIBRARIANS OF PARIS when they examined the copies for cataloging in the end of 19th century.

3/ நான் கேள்விப்பட்ட வரையில் புதுச்சேரி அரசு ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள் என்று எதையோ விற்பதாகத் தெரிகிறது. இது J.F.ப்ரைஸ், ரங்காச்சாரி ஆங்கில மொழியாக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

The English version (12 volumes, from 1736 to 1761) has been reprinted by Asian Educational Services. And the tamizh version (9 volumes, from 1736 to 1753) has been reprinted recently by Pondicherry State Government. I consider the latter reprint as useless, except the first volume which initially has been prepared by R.Desikan who wrote the important biography of Anandarangappillai. and whose work was E-keyed optically by Dr.N.Kannan, as you rightly mention also. I worked on this biography about 12 years ago, one copy of this work being preserved in National Library of France, Paris.

பொன்விழி - ஒளிவழி எழுத்துணரி

C-DAC கொடுத்த குறுந்தகட்டில் உள்ள முக்கியமான மற்றுமொரு இலவச மென்பொருள் பொன்விழி எனப்படும் ஒளிவழி எழுத்துணரி (optical character recognition) மென்பொருள் ஆகும்.

இதை நான் ஏற்கெனவே வாங்கி வைத்துள்ளேன். நான் வாங்கும்பொழுது ரூ. 7,000 ஆனது. பின்னர் ரூ. 5,000 ஆனது. இப்பொழுது இந்த வணிக மென்பொருளின் பயன்பாட்டில் சிறு மாற்றங்களுடன் (பிழைதிருத்தி குறைவான செயல்பாட்டுடன் வருகிறது) இலவசமாக வழங்கப்படுகிறது.

சற்றுமுன்னர்தான் பயன்படுத்திப் பார்த்தேன். நன்றாகவே வேலை செய்கிறது.

இதன் பயன்பாட்டைப் பற்றியும், எப்படி இதனை உபயோகிப்பது என்றும் முன்னர் தமிழோவியத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைத் தேடிப் பிடித்துக் கொடுக்கிறேன்.

ஆனால் இதிலும் ஒரு சிறு விஷயம். இந்த மென்பொருள் தயாரிப்பில் மத்திய அரசும், தயாநிதி மாறனும் எந்த உதவியும் செய்யவில்லை. இது ஏற்கெனவே தமிழக அரசின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தி்ன் பண உதவியுடன் உருவாக்கப்பட்ட மென்பொருள்.

அப்படிப்பட்ட நிலையில் அரசியல் காரணங்களுக்காக இந்த மென்பொருளையும் இப்பொழுதைய மத்திய அரசின் பங்களிப்பாக யாரும் சொல்லக்கூடாது. முக்கியமாக தயாநிதி மாறன்.

புதிய யூனிகோட் எழுத்துருக்கள்

C-DAC குறுந்தகட்டில் நமக்குக் கிடைக்கும் அதிகபட்ச நன்மை அதில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துருக்கள் ஆகும். இப்பொழுதுதான் அந்த எழுத்துருக்கள் அனைத்தையும் முழுவதுமாகப் பரிசோதித்துப் பார்த்தேன்.

மொத்தமாகக் கிடைத்துள்ள எழுத்துருக்கள்:

1. C-DAC கொடுத்துள்ள 22 OpenType எழுத்துருக்கள், யூனிகோட் எழுத்துக் குறியீட்டில் இயங்குபவை. (இதே எழுத்துருக்கள் TAM, TAB குறியீடுகளிலும் கொடுக்கப்பட்டுள்ளன.) ஆனால் இவற்றில் உள்ள முக்கியமான குறைபாடு - இது வணிக நோக்கு இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். வணிக நோக்குடன் உபயோகிப்பவர்களுக்கு இலவசம் அல்ல! இதில் உள்ள காப்புரிமையை அப்படியே இங்கு கொடுக்கிறேன்:

"Copyright (c) 2005, C-DAC, GIST PUNE, INDIA-TAMIL-OPEN TYPE-<font name>.FOR NON-COMMERCIAL FREE USAGE. For commercial license contact C-DAC, GIST, Pune."

அதாவது என் இலவச வலைப்பதிவில் இந்த எழுத்துருவை உபயோகிக்கலாம். என் பதிப்பகத்துக்கான வலைப்பதிவில் உபயோகிக்க முடியாது. நான் ஒரு புத்தகம் போட வேண்டுமானால் இந்த எழுத்துருவைக் கொண்டு அச்சிட்டு, அதிலிருந்து நெகடிவ் தயாரித்து அதிலிருந்து புத்தகங்களை அச்சிட முடியாது. இதுபற்றி எங்குமே வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் அன்றைய தினம் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது இந்த எழுத்துருக்கள் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் இதனால் கணினி வழிப் பதிப்புத்தொழில் மேன்மையடையும் என்றும் சொன்னார்களாம். மேற்படிக் காப்புரிமையைப் பார்க்கும்போது இது சிறு வணிகர்களுக்கு வேலைக்குதவாது என்றும், இந்த எழுத்துருக்களை வணிக நோக்கில் உபயோகித்தால் அதன்மூலம் அவர்கள் சட்டத்தை மீறியவர்களாவார்கள் என்றும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும்.

2. Cadgraf கொடுத்துள்ள 50 யூனிகோட் குறியீட்டிலான TrueType எழுத்துருக்கள். இந்த எழுத்துருக்களில் எந்தவிதமான காப்புரிமைத் தகவலும் கொடுக்கப்படவில்லை. அதனால் எல்லாவிதமான வணிக நோக்குள்ள தளங்களிலும், அச்சிடுதலிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

3. சென்னை கவிகள் நிறுவனத்தின் 24 TAB எழுத்துருக்கள், 43 TAM எழுத்துருக்கள். இதனால் நமக்கு அதிகப் பயன் இல்லை.

4. Modular Infotech நிறுவனத்தின் 20 TrueType யூனிகோட் எழுத்துருக்கள். இவற்றிலும் எந்தக் காப்புரிமைத் தகவலும், அனைவரும், எல்லாவிதமான செயல்களுக்கும் உபயோகித்துக்கொள்ளலாமா என்ற தகவலும் இல்லை.

இதில் சிரிப்பு என்னவென்றால் அரசு நிறுவனம் - நம் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனம் - தளையற்ற உபயோகத்தைக் கட்டுப்படுத்துகிறது. வணிக நோக்குள்ள நிறுவனங்கள் கொடுத்துள்ள எழுத்துருக்கள் நம் உபயோகத்தின்மீது எந்தத் தளையையும் விதிக்கவில்லை என்று தோன்றுகிறது.

குறைந்தபட்சம் லதா எழுத்துருவை மட்டுமே பார்த்து வளர்ந்த நம்மில் பலர், பார்க்க நன்றாக இருக்கும் 92 புது யூனிகோட் எழுத்துருக்களை உபயோகிக்க முடியும் என்று சந்தோஷப்படலாம்.

Monday, April 18, 2005

ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்?

வெள்ளிக்கிழமை (15 ஏப்ரல் 2005) அன்று சென்னையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பல தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட்டனர்.

அதில் தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியும் உள்ளது. இன்று மாலை எனக்கு அந்தக் குறுந்தகட்டின் நகல் கிடைத்தது.

இன்று காலையே நாராயண் அந்தக் குறுந்தகட்டில் உள்ள ஃபயர்ஃபாக்ஸ் பற்றிக் கேட்டிருந்தார். அது முகுந்த் (தமிழா குழு) செய்ததாக இருக்கும் என்று தான் சந்தேகப்படுவதாகச் சொன்னார். எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. எனவே மென்பொருள் சிடி கையில் கிடைத்ததுமே முதலில் நான் பார்வையிட்டது அதைத்தான்.

ஈயடிச்சான் காப்பி என்று சொல்வார்களே, அதைப்போல இருந்தது. இது முழுக்க முழுக்க முகுந்த் மற்றும் அவரைப்போன்ற தன்னார்வலர்களின் வேலை. ஆனால் CDAC செய்தது என்று சொல்லியிருக்கிறார்கள். முகுந்த் கொடுத்த பொதியில் உள்ள தவறுகள் கூட இதில் அப்படியே வந்துள்ளது. உதாரணம் "மாலுமி கருவிப்சட்டம்" - அதாவது 'ச்' வருவதற்கு பதில் 'ப்' தவறாக உள்ளது. ஒரே இடத்தில்தான் முகுந்த் செய்யாத ஒரு மொழிமாற்றம் (Close = மூடு) வந்துள்ளது என்பது மேலோட்டமாகப் பார்த்ததில் தெரிய வந்தது.

ஆனால் இந்தக் குறுந்தகட்டில் முகுந்த், மற்றும் தமிழா குழுவினர் பெயர்கள் இல்லை. அவர்கள் செய்த வேலை அங்கீகரிக்கப்படவில்லை. இந்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இதுபற்றி மேலே விசாரிக்க முகுந்திடம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவர் இதுபற்றிய மேலதிக விவரங்களை அறிவாரா என்று தெரியவில்லை. அவரிடமிருந்து இதுவரையில் பதிலில்லை.

அதைப்போலவே ஓப்பன் ஆஃபீஸ் தமிழ்ப்படுத்துதலிலும் அதிகாரபூர்வமாக முகுந்த்தான் ஈடுபட்டுள்ளார். ஆனால் CDAC தானாக ஓர் ஓப்பன் ஆஃபீஸ் தமிழ்க் கோப்பை வெளியிட்டுள்ளது. இந்த forking தேவையா என்று தெரியவில்லை. நான் இன்னமும் ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருளைச் சோதனை செய்யவில்லை. ழ கணினி குழுவினர் ஓப்பன் ஆஃபீஸைத் தமிழ்ப்படுத்துவதில் முனைந்தபோது ஏன் அவர்களும் முகுந்த்/தமிழா குழுவினருடன் இணைந்து செயல்படக் கூடாது என்றொரு பிரச்னை எழுந்தது.

இந்திய அரசு நிறுவனம் தன்னார்வலர்களின் செயல்களைக் கேவலமாக நினைக்கக் கூடாது. தன்னார்வலர்களைத் தூண்டிவிடுதலே இந்தியாவுக்கு நல்லது.

பிற மென்பொருள்களைப் பார்வையிட்டபின் நாளை எழுதுகிறேன்.

பை பை ஜான் ரைட்

ஜான் ரைட்டின் கடைசி மேட்ச் தில்லியில் நடைபெற்ற ஆறாவது ஒருநாள் போட்டி. இந்திய அணியைத் தூக்கி நிறுத்திய அவருக்கு மரியாதை செய்யும் விதத்திலாவது இந்தியா நேற்று விளையாடியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.

பல்வேறு காலக்கட்டங்களில் இந்திய அணியினர் தாம் பிறர் மீது கொண்டிருக்கும் மரியாதையாலோ, பயத்தாலோ, அவர்களைத் தம்மால் அவுட்டாக்க முடியாது என்றும், அதனால் ரன்கள் தருவதை நிறுத்தினால் மட்டுமே போதும் என்றும் பந்துவீசுவார்கள். ஷாஹீத் ஆஃப்ரீதி வெள்ளிக்கிழமை அன்று கான்பூரில் அடித்த 45 பந்து சதத்தால் அரண்டு போன இந்தியர்கள் தொடக்கத்திலிருந்தே தடுமாற்றத்துடன்தான் அவருக்குப் பந்துவீசினார்கள். முக்கியமாக நேஹ்ரா. அவர் ஆஃப்ரீதிக்கு வீசிய முதல் ஓவரில் முதல் பந்தை ஆஃப்ரீதி அடிக்கப் போய் தோற்றார். ஆனால் தொடர்ச்சியாக அதேமாதிரியான பந்துகளாக வீசாமல் கால் திசையில் பந்துகளை வீசினாட். அடுத்தடுத்து மூன்று பந்துகள் கால் திசையில். மூன்றும் எல்லைக்கோட்டுக்குப் பறந்தன. ஐந்தாவது பந்து லாங் ஆன் மேல் சிக்ஸ். ஆறாவது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே. கவர் திசையில் எல்லைக்கோடு. இப்படி ஆரம்பித்த ஆஃப்ரீதி இன்னிங்ஸ் இந்தியர்களைக் கதறடித்தது. அதன்பின் பாகிஸ்தானின் முதல் ஆறு ஆட்டக்காரர்களும் - சல்மான் பட் தவிர்த்து - நன்றாக விளையாடி 300ஐத் தாண்டினர்.

தில்லி ஆடுகளம் 100 ஓவர்கள் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி இருந்தாலும், இதே கேள்விதான் கான்பூரிலும் கேட்கப்பட்டது. ஆனால் ஆஃப்ரீதி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால் இந்தியர்களுக்கோ மனது முழுக்கக் கவலை. டெண்டுல்கர் இறங்கி வந்து தேவையின்றி அடிக்க முயற்சி செய்து சிலமுறை தோற்றார். பின் பவுல்ட் ஆனார். சேவாக் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகம் அடிப்பதில்லை. இங்கும் தர்ட்மேன் திசையில் ரன்கள் பெறுகிறேன் என்று பந்தை ஸ்லிப் கையில் லட்டு போல கேட்ச் கொடுத்தார். திராவிட் வந்ததிலிருந்து இறங்கி இறங்கித் தூக்கி அடிக்க முனைந்தார். இது அவர் எப்பொழுதும் விளையாடும் ஆட்டம் அன்று என்று தோன்றியது. மிட் ஆன் யோஹானாவிடம் பந்தைத் தட்டிவிட்டு வேகமாக ரன் எடுக்க முனைந்தவர் நேர் எறிதலில் ரன் அவுட் ஆனார். அத்துடன் இந்தியா தோற்றது. யுவராஜ் சிங்கும் யோஹானாவால் ரன் அவுட் ஆக, தோனி லாங் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட்டாக, காயிஃப் ஏமாற்றம் தரும் வகையில் எல்.பி.டபிள்யூ ஆனார். தினேஷ் மோங்கியா ரன் ஏதும் எடுக்காமல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். ஆக ஏழு மட்டையாளர்கள், அதில் ஒன்று கூட உருப்படியில்லை.

மொத்தத்தில் பாகிஸ்தான் 4-2 என்ற கணக்கில் வென்றிருந்தாலும் கூர்ந்து பார்த்தால் இந்தியா ஜெயித்த இரண்டு ஆட்டத்திலும் பாகிஸ்தான் கடைசிவரை போராடினர் என்பது புரியும். ஆனால் இந்தியா தோற்ற நான்கில், ஒரேயோர் ஆட்டத்தில் மட்டும்தான் கடைசிவரை போராடியது. மற்ற மூன்றிலும் பத்து ஓவரிலேயே தோற்றுவிட்டது.

இதுதான் இந்திய ரசிகர்களுக்கும் ஜான் ரைட்டுக்கும் ஏமாற்றத்தைத் தந்திருக்கும்.

இனி, இந்தியாவின் பயிற்சியாளர் யார் என்பதிலிருந்துதான் இந்தியா எப்படித் தன்னை மீண்டும் கட்டமைத்துக்கொள்ளும் என்பது தெரிய வரும்.

இதுவரையில் இந்தியாவுக்குப் பயிற்சியாளர்களாக இருந்தவர்களுள் ஜான் ரைட் ஒருவர்தான் சொல்லிக்கொள்ளக் கூடிய அளவுக்குத் திறமை வாய்ந்தவர் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது.

பை பை ஜான் ரைட்.

ஜான் ரைட் பிறந்தநாள் வாழ்த்துகள்
கிரிக்கெட் பயிற்சியாளர்கள் பற்றி நான் முன்னம் எழுதியிருந்த கட்டுரை

Sunday, April 17, 2005

ஆஃப்ரீதி பல்லே பலே!

இரண்டு நாள்கள் கழித்து எழுதுகிறேன். வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் ஷாஹீத் ஆஃப்ரீதி வெளுத்து வாங்கிவிட்டார்.

கங்குலி இல்லாத ஆட்டத்துக்கு திராவிட் தலைமை. டாஸில் வென்றதும் கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங். சரி, மட்டையைக் கையில் வைத்துக்கொண்டுமா கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங் செய்யவேண்டும்? காலையில் கான்பூரில் பந்து அங்கும் இங்குமாகக் காற்றில் சுழன்றது. டெண்டுல்கர், சேவாக் இருவரும் அவுட்டானதும் நான் ஏற்கெனவே சொல்லியிருந்தது போல காயிஃப், திராவிட் வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் தோனி வந்து அவுட்டானார். பின் யுவராஜ் சிங் அவுட். மிகக் கஷ்டமான நிலையிலிருந்து காயிஃப், திராவிட் இருவரும் ஆட்டத்தை நிலைநிறுத்தி இந்தியாவை 249/6 என்ற ஸ்கோருக்குக் கொண்டு வந்தனர்.

ஆடுவரிசையை மாற்றியிருந்தால் நிச்சயமாக 300 வரை போயிருக்கலாம். தோனி, யுவராஜ் இருவரும் 5, 6 இடங்களில் பேட்டிங் செய்திருந்தால்.

போகட்டும். மதியம் பாகிஸ்தான் - ஆஃப்ரீதி - செய்த மாயத்துக்கு யாருமே பதில் சொல்லியிருக்க முடியாது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் கதிகலங்கி ஓடினர். எங்கு யார் பந்து வீசினாலும் முன்னால் இறங்கி வந்து ஆஃப்ரீதி ஒரு சுழற்று சுழற்றுகிறார். மாட்டினால் சிக்ஸ். மாட்டாமல் விளிம்பில் பட்டாலும் சிக்ஸ். மாட்டவே இல்லையா? அவுட்டானால் ம** போச்சு என்ற கவலையே இல்லாத எண்ணம். இதற்கு வசதியாக பாகிஸ்தான் அணியில் 8 பேர் பேட்டிங் செய்யக்கூடிய நீண்ட வரிசை.

அடித்தார், அடித்தார், அடித்துக்கொண்டே இருந்தார். 9 ஆறுகள், 10 நான்குகள். 45 பந்துகளில் 102 ரன்கள். அடுத்த பந்தில் அவுட். கடைசியில் ஜாகீர் கான் வீசிய சில நல்ல பந்துகள் நாலைந்தை ஆஃப்ரீதியால் அடிக்க முடியவில்லை. இல்லாவிட்டால் 38-40 பந்துகளில் சதம் வந்திருக்கும். நடுவில் ஒருமுறை நோபாலில் ஷார்ட் ஃபைன்லெக்கில் கேட்ச். அதையெல்லாம் மறந்துவிடலாம்.

ஆனாலும் இதுபோன்ற இன்னிங்ஸை என்னவோ தலையில் வைத்துக் கூத்தாடத் தோன்றவில்லை. இந்தியாவின் பந்துவீச்சின் பலவீனம்தான் இப்படி ஆகின்றது. ஏன் ஆஃப்ரீதியால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவோ, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவோ, இங்கிலாந்துக்கு எதிராகவோ இப்படியெல்லாம் அடிக்க முடிவதில்லை?

கும்ப்ளே தன் முதல் ஓவரில் 23 ரன்கள் கொடுத்தார். பின் நன்றாகவே வீசி அடுத்த 9 ஓவர்களில் 31 ரன்கள் மட்டும்தான் கொடுத்தார். ஆனால் இதனாலெல்லாம் பாகிஸ்தானைத் தடுகக் முடியவில்லை. அடுத்து பேட்டிங் செய்ய வந்த அனைவருமே திறமையாக விளையாடி 43வது ஓவரில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.

இனி இன்று தில்லியில் நடக்கவிருக்கும் ஆட்டம் மட்டும்தான் பாக்கி. பாகிஸ்தான் இதையும் எளிதாக வெல்லும் என்று உள்மனதில் தோன்றுகிறது.

தி ஹிந்து ஆங்கிலம்

முன்னெல்லாம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 'தி ஹிந்து' படிக்கச்சொல்வார்கள். இப்பொழுது 'தி ஹிந்து'வின் டிசைன்தான் அழகாக மாறியுள்ளதே தவிர, ஆங்கிலம் படிக்கச் சகிப்பதில்லை. அதின் உச்சகட்டம் இன்று 'Downtown' பகுதியில் வந்திருக்கும் ஒரு சினிமாச் செய்தி: (அப்படியே மாற்றாமல் தந்திருக்கிறேன். எத்தனை தவறுகள் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு 'தி ஹிந்து'வில் சப்-எடிட்டர் வேலை கிடைத்தாலும் கிடைக்கலாம்.)
Rajini's next film

Kamal Hassan has announced his next film as "vattaiyadu villaiyadu produced by Roja combines Kaja Mydeen. What is the name of the next film of the super Star Rajnikanth?

It is a million dollar question! There are two persons who my producer the Super Star's film. They are one is Editor Mohan, who has produced some of the best films in recent times like "Jayem" and "M.Kumaran, son of Mahalakshmi".

The other being Dhanu whose recent production is "Sachien" which is now doing good business. It is reliably told that Super Star has asked his next producer to wait for a couple of months so that he can start the new film with vigour and energy. Most probably it may be Mohan who is rumoured to have got the project and he may soon become related to the Rajnikanth.

Saturday, April 16, 2005

FDI in Retail

நாளை (ஞாயிறு, 17/4/2005) அன்று மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி, தக்ஷிணாமூர்த்தி அரங்கத்தில் மாலை 6.00 மணி அளவில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (Swadeshi Jagran Manch) நடத்தும் பொதுக்கூட்டத்தில் 'சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு' பற்றி டாக்டர் ஆபிரகாம் வர்கீஸ் என்பவர் பேசுகிறார். இவர் சு.வி.இ அமைப்பின் அகில இந்திய இணையமைப்பாளர். ப்ரூக் பாண்ட் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குனர்.

கலந்து கொள்ளும் பிறர் எச்.ராஜா, எம்.எல்.ஏ, பா.ஜ.க; ஜி.பிரபாகர், காஞ்சி கிழக்கு மாவட்டத் தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.

Wednesday, April 13, 2005

கல்வி வாரம்

இந்த வாரம் என்னவோ கல்வி சம்பந்தப்பட்ட பல விவகாரங்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது.

முதலில் திங்கள் அன்று தூரதர்ஷன் பொதிகை சானலுக்காக ஒரு நிகழ்ச்சி - புத்தக விமரிசனம். அதில் கல்வி தொடர்பான இரண்டு புத்தகங்களை அறிமுகம் செய்ய விரும்பினேன். அதில் ஒன்று: தமிழகத்தில் கல்வி, வே.வசந்தி தேவியுடன் உரையாடல். சந்திப்பு சுந்தர ராமசாமி. காலச்சுவடு பதிப்பகம், முதல் பதிப்பு ஆகஸ்ட் 2000, திருத்தப்பட்ட மூன்றாம் பதிப்பு ஜூன் 2004, பக்கங்கள் 210, விலை ரூ. 90

புத்தக விமரிசனத்தைத் தொலைக்காட்சியில்தான் பார்க்க வேண்டுமென்றால் வரும் வெள்ளிக்கிழமை இரவு 10.20க்குப் பாருங்கள். ஆனால் பற்பல காரணங்களால் நிகழ்ச்சி சொதப்பலாக இருக்கும். நிகழ்ச்சி எத்தனை நேரம் என்று எனக்கு முன்னதாகத் தகவல் ஏதுமில்லை. நிறைய எழுதி எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன். உரையாடலாக இல்லாமல் ஒருவர் என்னை அறிமுகம் செய்ய நான் தொடர்ச்சியாகப் பேசவேண்டிய நிலை. நடுவில் திடீரென்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இன்னமும் இரண்டு நிமிடங்கள்தான் இருக்கிறது என்பது போல நெருக்கடி கொடுக்க அவசர அவசரமாக மேற்படி புத்தகத்தைப் பற்றி பேசி முடித்து விட்டு, அடுத்த புத்தகத்தை எடுத்து அதைப்பற்றி ஓரிரு வார்த்தைகளைச் சொல்லி முடிந்துவிட்டேன். (இந்த இரண்டாவது புத்தகம் - "எனக்குரிய இடம் எங்கே? கல்விக்கூடச் சிந்தனைகள்", ச.மாடசாமி - பற்றிப் பின்னால் சொல்கிறேன்.)

இப்பொழுது தமிழகத்தில் கல்வி பற்றி:

வே.வசந்தி தேவி 1992 முதல் 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர். தற்பொழுது தமிழக மாநில மகளிர் ஆணையத்தின் (Tamil Nadu State Commission for Women) தலைவராக உள்ளார்.

சுந்தர ராமசாமி தமிழில் அதிகம் அறியப்படும், முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர்.

சுந்தர ராமசாமியும், வசந்தி தேவியும் சந்தித்து கல்வி பற்றி நிகழ்த்திய உரையாடலின் புத்தக வடிவம்தான் மேற்சொன்ன புத்தகம். சுந்தர ராமசாமி தவிர கவிஞர் மனுஷ்யபுத்திரனும் சில உரையாடல்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் கல்வித்துறை சந்திக்கும் பிரச்னைகள் பல. அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு முன்னர் அந்தப் பிரச்னைகளை முழுவதுமாக அலசி ஆராய்ந்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தப் புத்தகம் பிரச்னைகளை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள உதவும். உரையாடல்கள் பல மேலோட்டமாக இருந்தன. ஆழமாகச் செல்லவில்லை. பல இடங்களில் உரையாடல்கள் மிகவும் செயற்கையாகவும் இருந்தன. அதாவது பேச்சில் பொதுவாக வராத, எழுத்தில் மட்டுமே வரக்கூடிய சில நீண்டு வளைந்த, புரிந்துகொள்ளக் கடுமையான வாசகங்கள். ஒருவேளை இவை, செறிவு கருதி, பின்னால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

புத்தகத்தின் அத்தியாயங்கள் இன்னமும் நன்றாகத் தொகுக்கப்பட்டிருக்கலாம்.

புத்தகத்தில் தமிழகக் (கல்லூரிக்) கல்விமுறையில் உள்ள பிரச்னைகள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வசந்தி தேவி கொண்டுவந்திருந்த சில மாற்றங்கள், வசந்தி தேவியின் சொந்தப் பின்னணி ஆகியவை வருகின்றன. அதில் கடைசி இரண்டையும் பற்றி இங்கு நான் எதுவும் சொல்லப்போவதில்லை.

பொதுவாக தமிழகக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகளைப் பின்வருமாறு சொல்லலாம்:

1. பாடத்திட்டங்கள்: பாடத்திட்டங்கள் படைப்புத் திறமையைத் தூண்டாமல் உருப்போட்டு மதிப்பெண்கள் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறது. பாடத்திட்டம் எங்கோ தயாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகிறது. கல்லூரிகளிலாவது சில ஆசிரியர்கள் பாடத்திட்டம் தயாரிப்பதில் ஈடுபடுகிறார்கள், ஆனால் பள்ளிகளில் அதுவும் கிடையாது.

2. கற்பித்தல் வழிமுறை: பாடப்புத்தகங்களைக் கூடப் படிப்பது கிடையாது, வழிகாட்டிகள் மூலமாகப் படித்து, எந்தக் கேள்விகள் பரிட்சையில் வராது என்பதை முடிவு செய்து, பரிட்சையில் வரக்கூடிய கேள்விகளாக யூகித்து, அதற்கென மட்டுமே தம்மைத் தயார் செய்து தேர்வில் பாஸ் செய்வது மட்டும்தான் குறிக்கோள் என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களை இந்த வழியில்தான் தயார் செய்கிறார்கள்.

3. ஆசிரியர்களின் தரம்: ஆசிரியர்களை, தரத்தின் பேரில் பணிநீக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. சரியாகப் பாடல் சொல்லித்தராத, பள்ளிக்கூடத்துக்கே வராத ஆசிரியர்களை மாணவர்களோ, அவர்களது பெற்றோர்களோ அலல்து நிர்வாகமோ தட்டிக்கேட்க முடியாத நிலை. பல கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க அரசியல் தலையீடுகள் நடக்கின்றன. லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

4. மாணவர்களை மதிப்பிடுவது: பொதுவாக, கல்லூரிகளைப் பொறுத்தவரை யாரோ ஒருவர் பாடத்திட்டம் தயாரிக்கிறார், யாரோ பாடம் நடத்துகிறார், யாரோ கேள்வித்தாள் தயாரிக்கிறார், வேறு யாரோ அதை மதிப்பிடுகிறார். ஆனால் ஐஐடி போன்ற இடங்களிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் பாடங்களை நடத்தும் ஆசிரியரே பாடத்திட்டம் தயாரிப்பதிலிருந்து விடைத்தாள்களை மதிப்பிடுவது வரை செய்கிறார். அதுதான் சிறந்த முறையாக இருக்கும். ஆனால் பல மாணவர்களுக்கு இந்த முறையில் ஆசிரியர் மாணவர்களைப் பழிவாங்கிவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது.

அதேபோல பொதுத்தேர்வு முறையிலேயே பல குறைபாடுகள். வினாத்தாள்கள் திருடப்பட்டு வெளியாவது. விடை திருத்துபவரைத் தேடிச்சென்று லஞ்சம் கொடுத்து மதிப்பெண்களை அதிகப்படுத்த முயற்சி செய்வது, ஆசிரியர் உயிரை அச்சுறுத்தி மதிப்பெண்களை அதிகமாகப் போடச்செய்வது. இப்படி பல ஊழல்கள்.

5. உயர் கல்விப் படிப்பில் குறைகள்: எம்.பில், பி.எச்டி போன்ற ஆராய்ச்சிப் படிப்புகள் கேலிக்கூத்தாக உள்ளன. ஏற்கெனவே கல்வித்துறையில் உள்ளவர்கள்தான் இந்தப் படிப்புகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் coursework எதுவும் செய்வதில்லை. ஆராய்ச்சிக் கட்டுரை மட்டும் எழுதி பட்டம் வாங்கிவிடுகின்றனர். பிற நாடுகளில் இப்படி கிடையாது.

6. சுயநிதிக் கல்லூரிகள்: சுயநிதிக் கல்லூரிகள் எக்கச்சக்கமாக நிதி வசூலிக்கின்றன. மாணவர்களுக்கு சரியான வசதிகளைச் செய்து தருவதில்லை. ஆசிரியர்களுக்கு சரியாக சம்பளம் தருவதில்லை. தன்னிஷ்டத்துக்கு பல்கலைக்கழகங்களிடம் அனுமதி பெறாமலேயே பலமுறை பாடத்திட்டங்களை அறிவிக்கின்றனர். மாணவர் எண்ணிக்கைகளை முன்னனுமதி இன்றி அதிகரிக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகங்களால் இவர்களை முழுவதுமாகக் கண்காணிக்க முடிவதில்லை. இவர்கள் பொதுவாகவே எந்தப் பாடத்திட்டத்தையும் பட்டத்தையும் கொடுத்தால் மாணவர்கள் வருவார்கள் என்று பார்த்து அதை மட்டும் தருகின்றனர். ஆனால் அரசுக் கல்லூரிகள் தமது பாடத்திட்டங்களை மாற்றாமல் பழைய, எதற்கும் உதவாத பாடங்களையே வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

7. ஆங்கில வழிக் கல்வி: மாணவர்களுக்கு ஆங்கிலம் புரிவதில்லை. ஆனாலும் பெற்றோர்கள் எல்.கே.ஜி முதற்கொண்டே ஆங்கிலம்தான் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் மாணவர்களுக்கு இன்றைய நிலையில் ஆங்கிலத்திலும் பேசத் தெரிவதில்லை, தமிழும் தகராறு! சில பாடங்கள் தமிழில் படித்தால் நன்றாக விளங்கும், ஆனால் வேலை கிடைக்காது என்று பயம் இருக்கிறது.

8. மாணவர் பிரச்னைகள்: படிப்பைத் தவிர பல்வேறு பிரச்னைகள். இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளில் காதல் விவகாரங்கள். மாணவிகள் தம் பெற்றோர், உற்றாருடன் சண்டை போட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வருவது. ஈவ்-டீஸிங். இன்ன பல பிரச்னைகள். இதற்கெல்லாம் கவுன்செலிங் தேவை. மாணவர்களை முழுமையானவர்களாக்க படிப்பைத் தவிர பிறவும் அவசியம். முக்கியமாக விளையாட்டு. மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வருமாறு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பது அவசியம்.

9. அஞ்சல் வழிக் கல்வி: அஞ்சல் வழியாகப் படிப்பவர்கள் தரும் பணத்தில்தான் பல பல்கலைக்கழகங்கள் நடக்கின்றன. அரசு கொடுக்கும் நிதி மிகக் குறைவு. தமிழக அரசு பல்கலைக் கழகங்களுக்கென ஒதுக்கும் மொத்த நிதி அளவுக்கு பிற மாநிலங்களில் ஒரு பல்கலைக்கழகத்துக்கே கொடுக்கிறார்கள். அஞ்சல் வழிக் கல்வியின் தரம் மோசமாகத்தான் இருக்கிறது.

10. இட ஒதுக்கீடு: இட ஒதுக்கீடு அவசியம். ஆனால் இதன் பயன் பரவலாகப் போய்ச்சேரவில்லை. பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு 50% என்பது இப்பொழுது இரண்டாகப் பிரிக்கப்பட்டு 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குச் சென்றுள்ளது. ஆனால் இப்பொழுதும் எல்லாத் தரப்பினருக்கும் போய்ச்சேரவில்லை. இதைப் பிரித்துக்கொண்டே போகவும் முடியாது. உச்ச நீதிமன்றம் creamy layer என்றெல்லாம் சொன்னது. ஆனால் நடைமுறைப்படுத்த முடியாத நிலை.

இது ஒருபுறமிருக்க பல தனியார் கல்லூரிகளில் ஜாதி சார்ந்துதான் ஆளெடுக்கிறார்கள். பல இடங்களில் தலித் மாணவர்கள் தள்ளி, தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். பிற மாணவர்களுடன் கலப்பதில்லை.

======

இந்தப் பிரச்னைகளுக்கு பெரிய தீர்வுகளாக எதுவும் சொல்லப்படவில்லை. வசந்தி தேவி தன் ஆறாண்டுப் பணியின்போது சிலவற்றை முயற்சி செய்துள்ளார். ஆனால் இதுபோன்ற சிறு முயற்சிகள் போதாது என்றே நினைக்கிறேன். இந்தப் பிரச்னைகளின் ஆதாரங்களை கவனமாகப் பார்க்க வேண்டும். இதுபற்றி அதிகமாக விவாதிக்க வேண்டும். இந்த விவாதங்களிலிருந்து சில வழிமுறைகள் நமக்குக் கிடைக்கலாம்.

======

இன்று SRM School of Business கல்லூரிக்குச் சென்றிருந்தேன். முதலாமாண்டு MBA மாணவர்கள் செய்துள்ள புராஜெக்ட்களுக்கு நடுவராக. மேலே உள்ள பல பிரச்னைகள் பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதுபற்றி நாளை எழுதுகிறேன். நாளை ஐஐடி மெட்ராஸ் MBA மாணவர்களுடன் கலந்துரையாட இருக்கிறேன். இந்த அனுபவம் நிச்சயம் இன்றுபோல மோசமாக இருக்காது என்றே நினைக்கிறேன். இதுபற்றியும் நாளைக்கு.

கண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்

1. ஐஐடி மெட்ராஸ், பிற்படுத்தப்பட்ட, SC/ST மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய இடங்களை ஒதுக்குவதில்லை என்று ஒரு ரிட் மனுவை கமலக்கண்ணன் என்ற மாணவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது சம்பந்தமாக ஏற்கெனவே ஒரு பொதுநல வழக்கு சென்னை உயர்நீதி மன்ற டிவிஷன் பெஞ்சில் உள்ளதால் இரண்டும் சேர்த்து விசாரிக்கப்படும்.

2. சுப்ரமணியம் சுவாமி, சோனியா காந்தி தன் தேர்தல் மனுவில் பொய்யான கல்வித் தகுதி பற்றிய தகவலைச் சேர்த்திருந்தார் என்றும், அதனால் தேர்தல் ஆணையம் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

3. பல பொதுநல அமைப்புகள் (சென்னையைச் சேர்ந்த உந்துநர் அறக்கட்டளை சேர்த்து), தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தீம்தரிகிட ஆசிரியர் ஞானி ஆகியோர் வரவேற்கும் தேர்தல் சீர்திருத்தம் - தேர்தல் இயந்திரத்தில் (வாக்குச்சீட்டில்) "எனது வாக்கு யாருக்கும் இல்லை" என்ற தேர்வையும் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை உச்ச நீதிமன்றம் முன் வந்துள்ளது. இந்தப் பொதுநல வழக்கைத் தொடுத்திருப்பது மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL). விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் வழக்கு விசாரணையைத் தொடரும்.

இதில் விசேஷம் என்னவென்றால் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் இதை ஆதரித்துப் பேசுகிறார். மத்திய அரசின் வழக்கறிஞர் எதிர்க்கிறார்.

(Source: The Hindu)

Tuesday, April 12, 2005

கங்குலி மீது தடை

இன்றைய ஆட்டத்தில், கடைசி பந்தில் பாகிஸ்தான் இந்தியாவை வென்று இதுவரையிலான ஆட்டங்களை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

டெண்டுல்கர் இன்றைய ஆட்டத்தில் சதமடித்து தன் மோசமான ஃபார்மில் இருந்து மீண்டார். ஆனால் கங்குலி தொடர்ந்து திண்டாடுகிறார். இந்தியாவின் நல்ல காலம்... அணித் தேர்வாளர்கள் அவரை நீக்காவிட்டாலும், ஐசிசி மேட்ச் ரெஃபரீ கிறிஸ் பிராட் இந்திய அணி மிக மெதுவாக ஓவர்களை வீசிக்கொண்டிருப்பதால் அடுத்த ஆறு ஒருநாள் போட்டிகளில் கங்குலி விளையாடத் தடை விதித்துள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன!

கங்குலி இன்று செய்த ஒரே நல்ல காரியம் டாஸை ஜெயித்தது. ஆடுகளத்தில் முதல்நாள் விட்டிருந்த தண்ணீர் காயாததால் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. சேவாக், டெண்டுல்கர் இருவருமே தொடக்கத்திலிருந்தே அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சேவாக், டெண்டுல்கர் அடித்த பந்தில் ஒரு ரன் எடுக்க முன்னேறி இருந்தார். ஆனால் யூனுஸ் கான் அருமையாக பந்தைப் பிடித்து நேராக ஸ்டம்பில் எறிந்து சேவாகை ரன் அவுட் ஆக்கினார். அடுத்து வந்த மஹேந்திர சிங் தோனி டெண்டுல்கருக்குத் தேவையான ஆதரவிக் கொடுத்தார்.

இந்த ஆடுகளம் டெண்டுல்கர் தான் இழந்த ஃபார்மை மீட்க வசதியாக சற்று மெதுவாக விளையாடியது. பந்துகள் அவ்வளவாக எழும்பவில்லை. பந்துகள் ஆடுகளத்தில் விழுந்ததும் சற்றும் மெதுவாக மட்டைக்கு வந்தன. டெண்டுல்கர் எந்தத் தவறுமே செய்யவில்லை. இரண்டு அருமையான சிக்ஸ்களை அடித்தார். அதில் இரண்டாவது, படம் பிடித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி கேமராமேன் தலையில் நங்கென்று விழுந்து அவருக்கு பலத்த காயத்தைக் கொடுத்தது.

டெண்டுல்கர் சதத்தைத் தாண்டியதும் கைவிரல்களை விரிக்க முடியாது, கால்களை அகற்ற முடியாது crampsஇனால் கஷ்டப்பட்டார். அதனால் ரன்கள் பெறுவது குறைந்து போனது. சேவாக் அவருக்கு உதவி ஓட்டக்க்காரராக வந்தார். ஆனாலும் 123 ரன்களில் (130 பந்துகள்) மிகவும் சோர்வுடன் ஸ்வீப் செய்யப்போய் பவுல்ட் ஆனார். தோனி அவுட்டானதும் வந்த கங்குலி பல பந்துகளை வீணடித்து, தடவித் தடவியே விளையாடினார். ரன்களை வேகமாகப் பெற வேண்டியவர் 33 பந்துகளில் வெறும் 18தான் அடித்தார். இதனால் அடுத்து வந்த பிற விளையாட்டு வீரர்கள் மீது பெருத்த அழுத்தத்தைக் கொடுத்தார். திராவிட் 19 (13), யுவராஜ் 35* (26), காயிஃப் 5 (3) என்று ஒவ்வொரு பந்துக்கும் அதிக ரன்கள் பெற வேண்டியிருந்தது. இதனால் அணியின் எண்ணிக்கை 48 ஓவர்களில் 315 என்றானது.

டெண்டுல்கர் ஆடுகளத்தின் danger area வில் இரண்டு முறை ஓடியதால் நடுவரின் கண்டனத்துக்கு ஆளானார். இரண்டாவது எச்சரிக்கையின் போது அவர் எடுத்த ரன் நிராகரிக்கப்பட்டது. இன்னமும் ஒருமுறை ஓடியிருந்தால் இந்தியாவுக்கு அபராதமாக எதிரணிக்கு ஐந்து ரன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். டெண்டுல்கர் போன்ற அனுபவம் வாய்ந்த 38 சதங்கள் பெற்றவர் இப்படி எச்சரிக்கைக்கு ஆளானது புதிராக இருந்தது.

பாகிஸ்தான் தனது இலக்கை அடைய அற்புதமாக பேட்டிங் செய்தனர். யாருமே பெரிய அளவுக்கு ரன்கள் பெறவில்லை என்றாலும் முதல் ஐந்து வீரர்களும் வேகமாக, ரிஸ்க் ஏதும் எடுக்காமல் அதே சமயம் நல்ல எண்ணிக்கைகளைப் பெற்றனர். ஷாஹீத் ஆஃப்ரீதி எப்பொழுதும் போல 23 பந்துகளில் 40 எடுத்தார். சல்மான் பட் 48 (55), அப்துல் ரஸாக் 44 (60), ஷோயப் மாலிக் 65 (65), இன்ஸமாம்-உல்-ஹக் 60* (59) என்று இவர்கள் அனைவரும் எடுத்த எண்ணிக்கை இந்தியாவைத் தோற்கடிக்க உதவியது. முக்கியமாக இன்ஸமாம் கடைசி வரை இருந்து பாகிஸ்தானை ஜெயிக்க வைத்தார்.

ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் ஜெயிக்க 3 ரன்கள் தேவை. ஓவரை வீச வந்தவர் டெண்டுல்கர். நன்றாகவே பந்து வீசினார். முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதுமில்லை. ஆனால் மூன்றாவது பந்தில் 2 ரன்கள். பின் அடுத்த இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதுமில்லை. கடைசிப் பந்தில் ரன் ஏதும் கொடுக்காவிட்டால் ஆட்டம் டை ஆகியிருக்கும். ஆனால் இன்ஸமாம் சற்றும் கவலைப்படாமல் பந்தை தர்ட்மேன் திசையில் தட்டிவிட்டு நான்கைப் பெற்றார். தடுப்பாளர்கள் அனைவரும் பந்தைப் பக்கத்திலே தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க முயற்சி செய்வார் என்பதால் உள்ளே வந்திருந்தனர்.

இந்தியாவின் பந்துவீச்சு சற்றே ஏமாற்றம் தருவதாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவருமே உதை வாங்கினர். முக்கியமாக நேஹ்ரா. முரளி கார்த்திக் நன்றாகப் பந்து வீசினார்.

அடுத்த ஆட்டத்தில் தினேஷ் மோங்கியா உள்ளே வருவார். ஆனால் எந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்பது தெரியவில்லை. காயிஃப் சற்று மேலே வர வேண்டும். தோனி சற்று கீழே வரலாம் என்று நினைக்கிறேன். டெண்டுல்கர், சேவாக், காயிஃப், தோனி, திராவிட், யுவராஜ், மோங்கியா என்ற வரிசை சரியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

தெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி

இந்த வார - 16 ஏப்ரல் 2005 தேதியிட்ட - தெஹெல்காவில் நிருபர் வி.கே.சஷிகுமார் புலிகள் பகுதியில் மூன்று வாரம் தங்கியிருந்து ஒரு நான்கு பக்க ரிப்போர்ட் எழுதியிருக்கிறார். அத்துடன் S.P.தமிழ்ச்செல்வன், தமிழ்க் கவி ஆகியோருடன் பேட்டிகள். தமிழ்க் கவி என்ற பெண் வே.பிரபாகரனின் speech writer என்று குறிப்பிடுகிறார்.

இந்த ரிப்போர்ட்டில் புது விஷயம் எதுவும் இல்லை. ஆனால் இந்திய மக்களுக்கு இது புது விஷயம். புலிகள் சார்புநிலை உள்ள ஒரு ரிப்போர்ட் இந்திய mainstream பத்திரிகையில் வருவது இதுவே முதல் தடவை.

சார்புநிலை என்று சொல்வதைக் காட்டிலும் புலிகள் பகுதியில் உள்ள இயல்புநிலையைக் காண்பித்துள்ளது என்பதுதான் சரியானதாக இருக்கும். 'தி ஹிந்து' மட்டும்தான் அவ்வப்போதாவது இலங்கை விவகாரத்தைப் பற்றி எழுதி வருகிறது. ஆனால் அது முழுவதுமாக புலி எதிர்ப்பு நிலையாகவும், இட்டுக்கட்டிய செய்திகளாகவுமே இருந்து வருகிறது.

ஆனால் சஷிகுமாரின் செய்தி விளக்கமாகச் சொல்வது இதுதான்:

* புலிகள் ஏற்கெனவே ஒரு தேசியத்தை அடைந்து விட்டார்கள் - a state within a state, a nation of their own.

* புலிகளின் தேசத்தை சுனாமிக்குப் பிறகு சர்வதேச அரசுகளும் ஓரளவுக்கு அங்கீகரித்துவிட்டன. இல்லாவிட்டால் புலிகளைச் சேர்க்காமல் நிவாரணப் பணி என்றால் காசு கொடுக்க மாட்டோம் என்று பல நாடுகள் அறிவித்துள்ளன. இது புலிகளுக்கு, முக்கியமாக பிரபாகரனுக்கு, புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது.

* சுனாமி அழிவு ஏற்பட்ட 20 நிமிடங்களுக்குள்ளாக ஈழப்பகுதியின் சிவில் அரசமைப்பு புணர்வாழ்வுக்கான வேலைகளில் ஈடுபட்டது. இதிலிருந்து புலிகள் வெறும் பயங்கரவாத அமைப்பல்ல, மக்கள் நலனை முன்வைக்கும் முழுமையான அரசமைப்பு என்று புலனாகிறது (என்று தமிழ்ச்செல்வன் சொல்கிறார், அதை சஷிகுமார் ஆமோதிக்கிறார்.)

* ஈழத்தில் நடைபெறும் நீதிமன்றம். 1993-ல் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றம் இப்பொழுது முழுதானதோர் அமைப்பாக விளங்குகிறது. சிவில், கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இந்திய நீதிமன்ற முறைப்படி நடக்கின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு இடங்களில் உயர் நீதிமன்றங்கள் உள்ளன.

* முழுமையான உள்நாட்டுக் காவல்துறை.

* குடியேறல் துறை. ஈழப்பகுதிக்குச் செல்பவர்கள் பாஸ்போர்ட் தனியாக பரிசோதிக்கப்படுகிறது. ஈழத்திலிருந்து இலங்கை அரசுப் பகுதிகளுக்குச் செல்வதும், வருவதும் கண்காணிக்கப்படுகிறது.

* ஆனாலும் பல அத்தியாவசியப் பொருள்களுக்காக கொழும்பு அரசைத்தான் ஈழ மக்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

புலிகள் இந்தியா உறவு பற்றி சிறு பத்தி வருகிறது. அதிலிருந்து நேரடி மேற்கோள்:
The LTTE claims that it has witnessed a phenomenal rise in grassroots support for its cause in Tamil Nadu through the growth of caste parties.

The party leaders in Tamil Nadu, who the LTTE claims to be in contact are -- Tamil Nationalist Movement president P.Nedumaran; MDMK general secretary Vaiko; PMK leader S.Ramadoss, who has the support of the Vanniyars who form a sizeable chunk of the middle class in the state and dalit leader R.Thirumavalavan.

But the LTTE is extremely careful of the way it positions the growing political support as it does not want India to feel threatened by Tamil expansionism.
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக புலிகள் இந்திய அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் இந்தப் பத்தி சொல்கிறது.

இந்த நீண்ட கட்டுரையை முடிக்கும் முன் ஆசிரியர் சொல்வது இதுதான்:
இங்குள்ள புலிகள் தலைமையிடம் பேசும்போது, அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்காகக் காத்திருக்காமல், புலிகள் தாமாகவே சுதந்தரத்தை பிரகடனம் செய்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அவர்களே ஈழத்தை அங்கீகரித்தது போலாகும். ஆனால் இந்த முடிவை எதிர்த்து புலிகள் மீது போர் தொடுத்தால், அது பிரபாகரனுக்கு வசதியாகப் போகும். பிரபாகரன் இலங்கை அரசுதான் அமைதிக்கு எதிராகப் போரை ஆரம்பித்தது என்று அவர்கள் மீது கையைக் காண்பித்து விடலாம். மேலும் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை அமைதியை ஆதரித்து அமைதி இருந்தால்தான் இலங்கை அரசுக்கு நிதியுதவி செய்வோம் என்ற கொள்கையில் இருக்கும்போது, புலிகள் மீது படையெடுப்பது இலங்கை அரசுக்கு முடியாத செயலாக இருக்கும்.

ஆக சந்திரிகா எந்த முடிவை எடுத்தாலும் அது புலிகளுக்கு வசதியாகவே இருக்கும். இலங்கையில் ஓர் அரசியல் சூறாவளி நிகழவிருக்கிறது. ஆனால் புலிகளுக்கு இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை.

Sunday, April 10, 2005

நீதிக்கட்சி

டி.நகர் என்று வெறும் இனிஷியல் மட்டும் வைத்திருக்கும் தியாகராய நகர், அங்குள்ள பனகல் பார்க், நடேசன் பூங்கா - இவையெல்லாம் யாருடைய நினைவுச் சின்னங்கள் தெரியுமா?

நீதிக்கட்சி என்றொரு கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பாக, மாற்றாக நவம்பர் 1916-ல் சென்னையில் உருவானது. South Indian Liberal Federation அல்லது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், நீதிக்கட்சி அல்லது Justice Party என்ற பெயரில்தான் பொதுமக்களால் அது அறியப்பட்டது.

இந்தக் கட்சியை ஆரம்பித்தவர்களின் முக்கிய நோக்கம் பார்ப்பனரல்லாதார் நலன். அந்நேரத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியின் (ஆந்திரா, கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் சில பகுதிகள் இதில் உண்டு) மக்கள் தொகை 4.75 கோடிகளாகவும், அதில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை 75 லட்சமாகவும் இருந்ததாம். ஆனால் 1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் பார்ப்பனர். உதவிப் பொறியாளர் தேர்வில் 21 பேரில் 17 பேர் பார்ப்பனர். அப்பொழுது பதவியில் இருந்த டிப்டி கலெக்டர்களில் 140 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். நீதித்துறையில், 1913-ல் ஜில்லா முன்சீப்களின் 128-ல் 93 பேர் பார்ப்பனர். 1915-ல் சென்னை மாகாணத்தில் கல்வி கற்றோர் தொகை 8%. ஆனால் பார்ப்பனர்களில் கல்வி கற்றோர் 75%. அதுவரையில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 650 பேரில் 452 பேர் பார்ப்பனர். 1916-ல் மாகாண அரசுப்பணியில் 100 பேர் பார்ப்பனர், 29 பேர்தான் பார்ப்பனரல்லாதோர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணப் பிரதிநிதிகளில் 16-ல் 15 பேர் பார்ப்பனர்.

முதலாம் உலகப்போர் நேரம். அப்பொழுதுதான் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்தார். காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னி பெசண்ட் 1915-ல் ஹோம் ரூல் இயக்கம் என்றொரு திட்டத்தைக் கொண்டுவந்திருந்தார். கிளர்ச்சியின் மூலம் இந்தியாவுக்கு அதிகப்படியான அதிகாரத்தைப் பெறுதலே அத்திட்டத்தின் நோக்கம். ஐரோப்பாவில் போர் நடந்துகொண்டிருப்பதால் இந்தியா மீது அதிகமாக நேரத்தைச் செலுத்த முடியாது என்பதால், பிரிட்டன் ஒருவேளை ஹோம் ரூல் எனப்படும் குறைந்த சுயாட்சியை வழங்கிவிடும் என்ற விருப்பம் காங்கிரசில் சிலரிடம் இருந்தது.

ஆனால் 1916 சமயத்தில் சுயாட்சி கிடைத்தால் அதனால் தென்னிந்தியாவில் பார்ப்பனரின் மேலாதிக்கம்தாண் இருக்கும் என்று பார்ப்பனரல்லாத பல தலைவர்கள் நினைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி போய் பார்ப்பனர் ஆட்சி வரும் என்று அவர்களுக்குத் தோன்றியது. அதனால் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்ப்பது என்றும், பார்ப்பனரல்லாதோர் நலனுக்காக கட்சி ஒன்றை உருவாக்குவது, சில பத்திரிகைகளை உருவாக்குவது என்றும் தீர்மானித்தனர். அதன் விளைவே நீதிக்கட்சி. ஆங்கிலேயர் ஆட்சி தொடரவேண்டும் என்றும் அதன் தொடர்ச்சியில் பார்ப்பனரல்லாதோர் சமூகங்களும் கல்வியில் முன்னேறி பார்ப்பனர்களுக்குச் சமமாக இருக்கும்போது சுயாட்சி அல்லது முழு விடுதலை கிடைத்தால் சமூக நீதி நாட்டில் இருக்கும் என்றும் நீதிக்கட்சியினர் நினைத்தனர். தமது கொள்கைகளை விளக்க நீதிக்கட்சியினர் 'Justice' என்ற ஆங்கிலத் தினசரி, 'திராவிடன்' என்ற தமிழ்த் தினசரி, 'ஆந்திரப் பிரகாசினி' என்ற தெலுங்குத் தினசரி ஆகியவற்றை நடத்தினர்.

நீதிக்கட்சியின் முதல் பொதுச்செயலராக இருந்தவர் சர். தியாகராய செட்டியார். இவர் பெயரில்தான் தியாகராய நகர்.

ஹோம் ரூல் இயக்கம் வெற்றி பெறவில்லை.

1918-ல் முதலாம் உலகப்போர் முடிந்ததும், 1919-ல் பிரிடிஷ் பாராளுமன்றம் இயற்றியிருந்த சட்டப்படி (Government of India Act 1919) இந்தியாவில் மாகாணங்களுக்குத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் இந்தியர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் தீர்மானமானது. இந்த இந்திய உறுப்பினர்கள் பிரிடிஷ் கவர்னர்கள் கீழ் ஆட்சி செய்வார்கள். காங்கிரஸ் இந்தத் தேர்தல்களை பகிஷ்கரித்தது. வடக்கிந்தியாவிலும், கிழக்கிந்தியாவிலும் காங்கிரசின் எதிரி முஸ்லிம் லீக், இந்தத் தேர்தல்களை ஆதரித்தது. தெற்கிந்தியாவில் காங்கிரஸ் எதிரியான நீதிக்கட்சி இந்தத் தேர்தல்களை ஆதரித்தது. அப்படியாக 1920 முதல் 1923 வரையில் முதலாவது சட்டசபை இருந்தது. இந்த சமயத்தில் முதன்மந்திரியாக இருந்தவர் பனகல் ராஜா எனப்படும் ராமராயநிங்கார். இவரது பெயரில்தான் பனகல் பார்க்.

1923-ல் மற்றுமொரு தேர்தல் நடந்தது. இதில் நீதிக்கட்சியின் ஆட்சி மீது அதிருப்தி உடைய சிலர் நீதிக்கட்சி வேட்பாளர்களையே எதிர்த்துப் போட்டியிட்டனர். அவர்களுள் முக்கியமானவர் நடேச முதலியார். (நடேசன் பூங்கா). நடேச முதலியார் வெற்றி பெற்றார். கவர்னர் தன்னைத்தான் ஆட்சியமைக்கக் கூப்பிடுவார் என்று நடேச முதலியார் எதிர்பார்த்தார். ஆனால் அவர் கட்சித்தலைவர் தியாகராய செட்டியாரை அழைக்க, அவரும் முன்போலவே பனகல் ராஜாவையே முதன்மந்திரியாக நியமித்தார். தியாகராய செட்டியார் கடைசிவரை எந்தப் பதவியும் வகிக்கவில்லை.

இந்த நேரத்தில்தான் தமிழர், ஆந்திரர் என்ற பிரிவினைப் பாகுபாடும் தோன்றியுள்ளது. இரண்டாவது சட்டசபையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்று ஒரு கருத்து தோன்றி அதற்காக சில சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீதிக்கட்சியில் ஏற்பட்ட பல்வேறு உட்பூசல் காரணமாக 1926 தேர்தலில் அக்கட்சி தோல்வியுற்றது. அப்பொழுதும் காங்கிரஸ் தேர்தலில் பங்குகொள்ளாததால் காங்கிரஸ் சார்புக்கட்சியான சுயராஜ்யக் கட்சி முன்னணியில் இருந்தது. ஆனால் ஆட்சியை அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இல்லை. அதனால் சுயேச்சையான சுப்பராயன் என்பவர் தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது. அவரை சுயராஜ்யக் கட்சி தொடக்கத்தில் ஆதரித்தாலும் பின்னர் அந்த அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது! அப்பொழுது உடனே நீதிக்கட்சி சுப்பராயன் மந்திரிசபையை ஆதரித்து, காப்பாற்றியது.

இதற்கிடையில் 1920-ல் காங்கிரசில் சேர்ந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1925-ல் காங்கிரஸ் தலைவர்களின் வர்ணாஸ்ரமக் கொள்கைகளால் வெறுப்புற்று காங்கிரஸை விட்டு விலகி சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அத்துடன் நீதிக்கட்சியையும் வெகுவாக ஆதரித்தார். 1930 தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. சில குழப்பங்களுடன் முதலில் திவான் பகதூர் முனுசாமி நாயுடு தலைமை அமைச்சரானார், பின் கட்சியினரின் அதிருப்தியால் பதவி விலகி பொப்பிலி ராஜா என்பவர் முதல் மந்திரியானார்.

ஆனால் இந்தச் சட்டசபை முடியும் நேரத்தில் நீதிக்கட்சி கலகலத்துப் போயிருந்தது. 1934 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. இந்நேரத்தில் நீதிக்கட்சியின் பலரும் காங்கிரஸில் சேர்ந்து அதன்மூலமாகவே கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றலாம் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். அப்படியே பலரும் காங்கிரஸில் சேர்ந்தனர். ஆனால் காங்கிரஸில் அவர்களுக்கு எந்தச் செல்வாக்கும் கிடைக்கவில்லை.

1937-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் முதன்முறையாகப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெருவெற்றியும், நீதிக்கட்சி படுதோல்வியும் அடைந்தன. சில நாள்கள் மந்திரிசபை அமைக்க முடியாவிட்டாலும் முடிவாக சி.ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் காங்கிரஸ் மந்திரி சபை அமைந்தது.

இந்த ஆட்சியின் போதுதான் ஹிந்தித் திணிப்பும், அதன் எதிர்ப்பும் முதலில் தொடங்கியது. ஹிந்தியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியில் பெரியார் ராமசாமி நாயக்கர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போது 1938-ல் நீதிக்கட்சியினர் கூடி பெரியாரையே கட்சியின் தலைவராக்க முடிவு செய்தனர்.

ஆனால் அதன் பின்னர் நீதிக்கட்சி எப்பொழுதும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. நீதிக்கட்சி மறைந்து போய் பெரியார், திராவிடர் கழகத்தை ஏற்படுத்தி அரசியலமைப்பில் ஈடுபடாது தன் கொள்கைகளைப் பரப்பினார். ஆனால் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி 1967-ல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். அன்றுமுதல் இன்றுவரை திராவிட பாரம்பர்யத்தின் வழிவந்த கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன.

உதவிய புத்தகங்கள்:

1. நீதிக்கட்சி வரலாறு, பண்டித எஸ்.முத்துசாமிப்பிள்ளை, முதல் பதிப்பு 1938, நான்காம் பதிப்பு 2000, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, விலை ரூ. 16
2. தமிழர் தலைவர். (பெரியார் வாழ்க்கை வரலாறு), சாமி.சிதம்பரனார், முதல் பதிப்பு 1939, பன்னிரெண்டாம் பதிப்பு 2001, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, விலை ரூ. 95
3. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம். இருநூற்றாண்டு வரலாறு, அருணன், 1999, வைகை வெளியீட்டகம், விலை ரூ. 40

Saturday, April 09, 2005

இந்தியாவுக்குப் படு உதை

இரண்டு ஆட்டங்களில் அதிரடியாக ஜெயித்த இந்தியா தோற்றே ஆக வேண்டும் என்பது போலவே மூன்றாம் ஆட்டம் அமைந்திருந்தது. டாஸில் தோல்வி. இன்ஸமாம் இதற்காகவே காத்திருந்தது போலவே முதலில் பேட்டிங் என்றார். தொடர்ந்து பாகிஸ்தானின் பேட்டிங் பொறுப்பான முறையில் அமைந்திருந்தது. ஷாஹீத் ஆஃப்ரீதி சீக்கிரம் அவுட்டானாலும் சல்மான் பட், ஷோயப் மாலிக் இருவரும் பொறுப்பாக ஆடினர்.

சல்மான் பட் சதமடித்தார். மாலிக் 75 ரன்கள். இரண்டாம் விக்கெட்டுக்காக இருவரும் சேர்த்த 145 ரன்கள் மிக முக்கியமானவை. தொடர்ந்து யூசுஃப் யோஹானா 31 பந்துகளில் 43 ரன்கள் பெற்றார். ஐம்பது ஓவர்களில் 319 ரன்கள் கிடைத்தன. இந்த நிலையிலேயே இந்தியா ஆட்டத்தைத் தோற்றுவிட்டது.

இந்திய அணி மிகவும் மெதுவாகவே ஓவர்களை வீசியது. இந்தியா ஐம்பது ஓவர்கள் போட்டு முடிக்கும்போது மணி கிட்டத்தட்ட மதியம் 1.00 ஆகியிருந்தது. ஆனால் அடுத்த இன்னிங்ஸ் 1.15க்கே ஆரம்பிக்க வேண்டிய நிலை. பந்துவீச்சில் நேஹ்ரா ஒருவர்தான் நன்றாக வீசினார். இர்ஃபான் பதான் இரண்டு நெஞ்சளவு ஃபுல் டாஸ்களை வீசியதால், நடுவர் ஹரிஹரன் அவர் மேற்கொண்டு பந்து வீசத் தடை விதித்தார்.

ஹரிஹரன் அவசரக்குடுக்கை நடுவராக இருக்கிறார். இரண்டு முறை அவசரப்பட்டு சிக்ஸ் என்று சமிக்ஞை கொடுத்தார். ஆனால் பின் மூன்றாவது நடுவரிடம் பேசி அது நான்கு என்று தீர்மானமானதும் தன் தீர்ப்பை மாற்ற வேண்டிய நிலை.

மதியம் இந்தியா பேட்டிங்கில் சோபிக்க வேண்டுமானால் இருவராவது சதமடிக்க வேண்டும் என்றிருந்தது. சேவாக் வரிசையாக இரண்டு ஆட்டத்திலும் நல்ல ரன்கள் பெற்றதால் இங்கு தோல்வியுற வேண்டும் என்று குறளி சொல்லியது. அதைப்போலவே ஒரு பந்தை ஸ்கொயர் கட் செய்யப்போய் ஆஃப்ரிதியிடம் பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். டெண்டுல்கரையும், கங்குலியையும் பீடித்திருக்கும் வைரஸ் அவர்களைக் கொள்ளை கொண்டது. இருவரும் இரண்டாவது ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் சொல்லிக்கொள்ளுமாறு ரன்கள் பெறவில்லை. தோனி, திராவிட் இருவரும் சற்றே சரிவை நிறுத்தி நன்றாக விளையாடினார். ஆனால் இருவருமே எதிர்பாராது எழும்பும் பந்துகளில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இருவரும் தலா 28 ரன்கள் பெற்றனர்.

யுவராஜ் சிங்கும் அதிகம் ரன்கள் பெறாமல் ஆட்டமிழந்தார். காயிஃப், இர்ஃபான் பதான் இருவரும் சற்றாவது மானத்தைக் காத்தனர். பதான் பொறுமையாக ஆடினார். அவ்வப்போது இறங்கி வந்து சிக்ஸ் அடித்தார். இவர் ஒருவர்தான் அரை சதத்தைத் தாண்டினார். காயிஃப் கனேரியாவை கட் செய்து பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். பதான் ஸ்வீப் செய்யப்போய் மட்டையின் பின்பக்கத்தில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் வேகமாக பிற விக்கெட்டுகள் விழுந்தன. பாகிஸ்தான் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நவீத்-உல்-ஹஸன் மிக நன்றாகப் பந்து வீசினார். மொத்தமாக ஆறு விக்கெட்டுகளைப் பெற்றார். இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு ஆதரவு கொடுத்தது. பந்துகள் சற்றே எழும்பி வந்தன. ஆனால் இந்திய மட்டை வீரர்களை மட்டும்தான் குற்றம் சொல்லவேண்டும். இப்பொழுதைக்கு முதல் ஏழு வீரர்களில் இருவர் நம்புதற்குரியனராக இல்லை. சேவாக் இரண்டில் ரன்கள் பெற்றால் ஒன்றிலாவது ஏமாற்றுவார். தோனி புதியவர்; அவர்மீது மிக அதிக நம்பிக்கை வைத்தல் தவறு. யுவராஜ், காயிஃப் இருவரும் இன்றைய ஆட்டத்தில் பெருத்த ஏமாற்றத்தை அளித்தனர்.

பிஹாரிலிருந்து பிரிந்தாலும் ஜார்க்கண்ட் மக்கள் நாகரிகத்திலிருந்து தள்ளியே இருக்கிறார்கள். ராஞ்சியில் பாகிஸ்தான் அணி செல்லும் பஸ் மீது கல்லெறிந்து கண்ணாடியை உடைத்திருக்கிறார்கள். கண்ணாடி அருகில் உட்கார்ந்திருந்த இன்ஸமாம் அதிர்ந்து போயிருக்கிறார். இன்று ஆட்டத்தில் சிறிய தடங்கல். மற்றுமொரு முட்டாள், இந்தியா தோற்பது உறுதி என்று தெரிந்ததும், பாகிஸ்தான் பந்து தடுப்பாளர்கள் மீது டீ குடிக்கும் மண் சட்டியை விட்டெறிந்தார். நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் சென்றிருந்தபோது இதுபோன்று ஏதேனும் நடந்ததா என்று இந்தியர்கள் தம்மைக் கேட்கவேண்டும்.

கொச்சியிலும், விசாகப்பட்டினத்திலும் பாகிஸ்தான் போராடிய அளவு இந்தியா இந்த ஆட்டத்தில் போராடவில்லை. காலையில் டாஸில் தோற்றவுடனேயே தோல்வி மனப்பான்மை பற்றிக்கொண்டது. இனி வரும் ஆட்டங்களில் இந்தியா டாஸில் தோற்றால் வெல்வதற்கு முயற்சி கூடச் செய்யாது என்று தோன்றுகிறது.

கங்குலி இனியும் 'எனக்குத் தேவை அதிர்ஷ்டம்' என்றெல்லாம் புருடா விட்டு, தன்னைத்தானே நம்ப வைத்துக்கொள்தல் கூடாது. அத்துடன் டெண்டுல்கரும் சற்று தன் ஆட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். தினேஷ் மோங்கியாவுக்கு ஓர் ஆட்டமாவது தர வேண்டும். ஆனால் யாருக்கு பதில்? இன்றைய ஆட்டத்தைப் பார்க்கும்போது யுவராஜ் சிங்கைத்தான் சற்று வெளியே தள்ள வேண்டியிருக்கும். டெண்டுல்கரும், கங்குலியும் பழம்பெருமையில் இன்னமும் இரண்டு ஆட்டங்களில் தொடர்வார்கள்.

Wednesday, April 06, 2005

கானாவிலிருந்து கஸல் வரை

அபுல் கலாம் ஆசாத்கானா அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக் கூறுகளை முன்வைக்கும் பாடல் வடிவம். நாட்டுப்புறப் பாடல்களைப் போல நகர்ப்புறப் பாடல் எனலாம். "[இந்த] கானாவைப் பாட மெல்லிய போதை வேண்டும். மங்கலான இரவு வேண்டும். கூட சேர்ந்து பாட ஒரு கூட்டம் வேண்டும். இவை எதுவுமில்லாமல் பாட முடியாது. குறைந்த பட்சம் செய்யது பீடியோ, காஜா பீடியோ கிடைத்தாலொழிய கானா கிட்டாது." என்கிறார் கவிஞர் யுகபாரதி.

சவுதி அரேபியாவில் வசிக்கும் அபுல் கலாம் ஆசாத், மேற்படி சமாச்சாரங்கள் ஏதுமில்லாமலேயே, மயிலாப்பூரை கானாவில் வடிக்கிறார்:

காமதேனு த்யேட்டராண்டை காக்கி டவுசர் போட்டுக்குனு
கஞ்சா வித்த பையன் நானு எல்லே சார்! - அந்த
கதைய இங்க அவுத்து வுட்டா தொல்ல சார்!

மயிலாப்பூர் டேசனுக்கு மாமூலு வெட்டிக்கினு
மப்புலதான் வாழ்ந்த பையன் எல்லே சார்! - அத்த
மாருதட்டி சொல்ல நானும் வல்ல சார்!

தண்ணித்தொற மார்க்கெட்டுல தம்மட்ச்சு ஜகா வாங்கி
தாவாப் போன பம்பரந்தான் எல்லே சார்! - ஆனா
தள்ளாடி நடக்கறவன் இல்ல சார்!

கச்சேரி ரோட்டுலதான் கமுக்கமாக சைட்டட்ச்சு
கருவாட்டுக் கொயம்பு துன்னேன் எல்லே சார்! - அத்தக்
கைல தந்த பொண்ணழகி முல்ல சார்!

அன்னாடங்காச்சி நானு ஆகாசக் கோட்டகட்டி
அறுவத்தி மூவருல எல்லே சார்! - அங்க
அரபக்கிட்டு கூழ்குட்ச்ச புள்ள சார்!

கொளத்திச் சுத்தி வந்து பரமசிவ அண்ணாவாண்ட
கடனவாங்கி கம்பிநீட்டி எல்லே சார்! - இன்னும்
கடனடைக்க வசதி வாச்ச தில்ல சார்!

லஸ்ஸு கார்னருல லவ்ஸு வுட்ட பய்யன நான்
லைனு கட்டி சுளுக்கெடுத்தேன் எல்லே சார்! - அந்த
லடாய் இன்னும் பைசலாக வில்ல சார்!

போதும் போதுமடா பொறுக்கி வாழ்க்க போதுமுன்னு
பொறப்பட்டேன அங்கேருந்து எல்லே சார்! - இன்னும்
பொழுதுபோனா அய்துக்கறன் எல்லே சார்!

மயிலாப்பூரைச் சுற்றிச் சுற்றி வரும் எனக்கு இந்தப் பாடல் பிடிக்கும். ஆனால் ராகம் போட்டு பாடத்தான் தெரியாது.

இதே ஆசாத் எழுதி இப்பொழுது வெளிவந்திருப்பது சில புகழ்பெற்ற உர்து கஸல் பாடல்களின் தமிழாக்கம், ஆனால் அதே சந்தத்தில். கஸல் வடிவம் பாரசீக மொழியில் தோன்று, அங்கிருந்து முகலாயர்கள் வழியாக இந்தியா வந்தது. உர்து மொழியில் கவியரங்கங்களிலும் பேரரசர்கள் முதல் சிற்றரசர்களின் அரண்மனையில் வளர்ந்து இந்தி சினிமாவின் வழியாகப் பொதுமக்களைச் சென்றடைந்தது.

ஆசாத் புத்தகத்திலிருந்து - ஹஸ்ரத் மோஹானி இயற்றி நிக்காஹ் என்னும் படத்தில், குலாம் அலி பாடிய பாடலின் தமிழாக்கம்:

நித்தம் நித்தம் கண்களும் நீர்ச்சுனைகள் தந்ததே
நீங்கிடாத காதலின் நெருக்கம் நினைவில் நின்றதே!

நீயென் முன்னே வந்ததும் நான் பேச்சின்றி நின்றதும்
நகங்கடித்து நாணிய காட்சி நினைவில் நின்றதே!

மறைந்து பேசக் காவலாய்ப் படர்ந்து நின்ற மதிற்சுவர்
காலப்போக்கில் கல்வெட்டாகியென் நினைவில் நின்றதே!

திரையைக் கைகள் இழுத்ததும் திடுக்கிட்டே நீ தவித்ததும்
முகத்தை மறைத்து முக்காடிட்டதும் நினைவில் நின்றதே!

தனிமை என்னைத் தீண்டும் போதில் கருணை காட்டியே
என்னில் இணையும் காதல் தாகம் நினைவில் நின்றதே!

மீண்டும் ஓர்நாள் சேர்ந்த இரவில் விழிகளில் அருவியாய்
பிரிந்த கதைகள் பேசித் தீர்த்தது நினைவில் நின்றதே!

பாதம் நோகப் பகலிலே வெய்யில் வீசும் வீதியில்
நீ என் துணையாய் நடந்த நாழிகை நினைவில் நின்றதே!

=======

ஆசாத் எழுதி வெளிவரும் புத்தகம் "கஜல்: பாடப்பாடப் பரவசம்" கஸலின் இலக்கணம் என்ன என்பதை விளக்குகிறது. சில கஸல் பாடல்களின் பின்னணியை விளக்கி, அதன் பின்னர் அவற்றுக்கான தமிழ் மொழியாக்கத்தை அளிக்கிறது. கடைசியில் கஸல் கவிஞர்களின் வாழ்க்கை பற்றிய சிறுகுறிப்பும் புகைப்படங்களும் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

கானா, அபுல் கலாம் ஆசாத், ஜூன் 2004, கிழக்கு பதிப்பகம். விலை ரூ. 30
கஜல்: பாடப்பாடப் பரவசம், அபுல் கலாம் ஆசாத், மார்ச் 2005, கிழக்கு பதிப்பகம், விலை ரூ. 45

ரா ரா ரஸ்புடின்

போனி எம் பாடலைக் கேட்டிருப்பிர்கள்.

RA RA RASPUTIN
Russia's greatest love machine

நேற்று இரவு HBO-வில் 'ரஸ்புடின்' என்ற திரைப்படம் காண்பிக்கப்பட்டது. கிரிகொரி யெஃபிமோவிச் ரஸ்புடின் என்னும் தேசாந்திரி ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் சுற்றிவிட்டு ரஷ்யாவில் ட்ஸார் மன்னர் நிகோலாய் 2 அரண்மனைக்கு வந்து சேர்கிறார். நிகோலாய் 2 வின் மனைவி அலெக்சாண்டிரா, மகன் சிறுவன் அலெக்ஸி.

ரஸ்புடின் தன்னை கடவுளின் தூதனாக, அவ்வப்போது எதிர்காலத்தைக் காண்பவனாக முன்னிறுத்துகிறார். சிறுவன் அலெக்ஸிக்கு 'ஃபாதர் கிரிகொரி'யைப் பிடித்துப் போகிறது. அலெக்ஸிக்கு ஹீமோஃபீலியா என்ற நோய். இரத்த நாளங்கள் வெடித்து, இரத்தம் உறையாமல் அவ்வப்போது கொட்டும். ஃபாதர் கிரிகொரி தன்னைக் காப்பாற்றுவார் என்று அவனுக்கு நம்பிக்கை. அதனால் அலெக்ஸியின் தாய் அலெக்சாண்டிராவுக்கும் ரஸ்புடின் மீது நம்பிக்கை.

ரஸ்புடின் வித்தியாசமான மனிதர். மணமானவர். செக்ஸ் தொழிலாளர்கள் உள்பட, பல பெண்களுடன் உறவு வைத்திருப்பவர். ரஷ்யாவிலேயே மிக நீளமான ஆண்குறியை உடையவர் என்ற 'பெருமை'யையும் உடையவர். ஒரு காட்சியில் குடித்துவிட்டு அசிங்கமாக ஏதோ பேசுகிறார். ட்ஸாரினாவுடனும் தான் உறவு வைத்திருப்பதாக ஏதோ சொல்கிறார். அவரை எதிர்கொள்வோர்களின் வாயை அடைக்க, தனது உடையைக் கழற்றி, சுற்றி இருப்போர் ஆச்சரியப்படும் வகையில் தனது குறியைக் காண்பிக்கிறார்.

ரஷ்ய பிரபுக்குடும்பங்கள் பலவற்றிலும் உள்ள பெண்களுடன் உறவு கொள்கிறார். அவரது மத வழியைப் பின்பற்ற பல பெண்கள் (மட்டும்) அவருடன் சேர்கின்றனர். ரஸ்புடினின் சித்தாந்தம் என்னவென்றால் ஒருவர் பாவத்தைச் செய்வதன் மூலமும், பின் அதற்காக மன்னிப்புக் கோருவதன் மூலமுமே கடவுளை அடைய முடியும் என்பது.

ட்ஸாரின் ரகசிய போலீஸ் ரஸ்புடினின் நடத்தையைக் கண்காணித்து ட்ஸாரிடம் போட்டுக்கொடுக்கிறது. இதனால் ட்ஸார் ரஸ்புடினை நாடுகடத்தி சைபீரியா அனுப்புகிறார். ஆனால் சிறுவன் அலெக்ஸிக்கு ஒருநாள் நோய் முற்றிப்போக, அவன் ஃபாதர் கிரிகொரி வேண்டும் என்று அழ, தொலைபேசி மூலம் ட்ஸாரினா ரஸ்புடினைத் தொடர்பு கொள்ள, தொலைபேசி மூலமாகவே சிறுவனிடம் பேசி அவனுக்குத் தற்காலிகமாக நிம்மதியைத் தருகிறார் ரஸ்புடின்.

இதற்கிடையில் செர்பியன் ஒருவர் ஆஸ்திரிய இளவரசனைக் கொல்ல, முதலாம் உலகப்போர் மூள்வதற்கான நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. செர்பியாவும் ரஷ்யாவும் நண்பர்கள். ஆஸ்திரியாவும் ஜெர்மனியும் நண்பர்கள். செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுக்க, ரஷ்யா செர்பியாவுக்கு வேறு வழியின்றி உதவி செய்யப்போக, ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுக்க, பின் இங்கிலாந்து, பிரான்சு என்று அனைவரும் கோதாவில் இறங்க, முதலாம் உலகப்போர் ஆரம்பம். ரஷ்யாவிலோ மக்கள் உணவுப் பற்றாக்குறையில் வாடுகிறார்கள். போல்ஷ்வீக் புரட்சிக்கான வித்தும் இடப்படுகிறது. ட்ஸார் நிகோலாய் 2 போர் நடக்கும் முன்னணிக்குச் செல்கிறார். அந்த நேரத்தில் ட்ஸாரினா ஆட்சி நடத்த, ரஸ்புடின் தன் ஆள்களை உள்ளே கொண்டுவருகிறார். போல்ஷ்வீக்குகள் போஸ்டர் அடித்து எப்படி ரஷ்யா ரஸ்புடின் கையில் சிக்கித் தவிக்கிறது என்று பிரசாரம் செய்கின்றனர்.

ட்ஸாரினாவின் உறவினரும் வேறு சில பீட்டர்ஸ்பர்க் பெரிய ஆசாமிகளும் ரஸ்புடினைக் கொல்லத் தீர்மானிக்கின்றனர். அவரை யுசுபோவ் என்பவர் தன் வீட்டுக்கு வரவழைத்து உணவிலும், மதுவிலும் பொடாஷியம் சயனைடைக் கலந்து கொடுக்கிறார். அதையெல்லாம் சாப்பிட்ட ரஸ்புடின் இறப்பதில்லை. தொடர்ந்து அவரைத் துப்பாக்கியால் சுட்டு இழுத்துக்கொண்டு போய் தண்ணீரில் வீசி எறிகின்றனர். தான் இறப்பதற்கு முன் ட்ஸாரினாவுக்குக் கடிதம் எழுதிய ரஸ்புடின், தான் ட்ஸாரினாவின் உறவினர்களால் கொல்லப்பட்டால் அதன் விளைவாக ட்ஸார் குடும்பமே அழிந்துபோகும் என்று சொல்லியிருக்கிறார்.

அது உண்மையாகிறது. ரஸ்புடினின் இறப்புக்கு மூன்று மாதங்களுக்குள் போல்ஷ்வீக் புரட்சியில் காம்ரேடுகள் ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சியைக் கொண்டுவருகிறார்கள். இரண்டு வருடங்களுக்குள் நிகோலாய் 2, அலெக்ஸாண்டிரா, மற்ற பிறர் அனைவரும் கொல்லப்படுகின்றனர்.

சுவாரசியமான படம். நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் ரஸ்புடினைப் பற்றிக் குறைவாகவே தெரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் படம் பற்றிய பிற விவரங்களை அறிந்து கொள்ள IMDBஐ அணுகவும். ரஸ்புடினைப் பற்றிய விவரங்களுக்கு விக்கிபீடியா.

Tuesday, April 05, 2005

சேவாக், தோனி அபார ஆட்டம்

இந்தியா இரண்டாவது வெற்றி


டாஸில் ஜெயித்த இந்தியா, கொச்சியில் வெறுமே 282 மட்டும் அடித்ததோடில்லாமல் விசாகப்பட்டிணத்தில் நிறைய அடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர் என்று மட்டும் புரிந்தது. ஆனால் நிறைய என்றால் என்ன என்று முழுவதுமாகப் புரியவில்லை.

சேவாக் எப்பொழுதும் போல முதல் பந்திலிருந்தே அடிதடியை ஆரம்பித்தார். முதல் ஓவரிலேயே ஒரு பந்து உள்புற விளிம்பில் பட்டு ஸ்டம்ப்பில் விழாமல் பத்திரமாக ஃபைன் லெக் எல்லைக்கோட்டுக்குச் சென்றது. அதன்பின் ஒரே அடிதடியில் இறங்கினார். கவர் திசையில் சாமியை ஒரு சிக்ஸ். நவீத் வீசிய அளவு குறைந்த பந்தை ஸ்கொயர் லெக்கில் ஹூக் செய்து ஒரு சிக்ஸ். ஆனால் இதற்கிடையில் டெண்டுல்கர் மிக அவசரமாக ஒரு ரன் எடுக்க நினைத்து மிட்-ஆனில் நின்றிருந்த யூசுஃப் யோஹானா கையில் பந்து நேராக, வேகமாகச் சென்றிருந்தும் ஓடத் தொடங்கினார். யோஹானா நேராக ஸ்டம்பைப் பதம் பார்த்து டெண்டுல்கரை வீட்டுக்கு அனுப்பினார். இது தேவையற்ற ரன் அவுட்.

அடுத்து இந்தியா விக்கெட் கீப்பர் மஹேந்திர சிங் தோனியை அனுப்பியது. கமெண்டரி சொல்லிக்கொண்டிருந்தவர் - அமீர் சொஹெய்ல் என்று நினைக்கிறேன் - இந்த மாற்றத்துக்குக் காரணம் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரராக ஷாஹீத் ஆஃப்ரீதி வருவதாக இருப்பதுதான் என்றும் அதனால் இந்தியா பயந்து 280 எல்லாம் போதாது, நாம் 300க்கு மேல் அடிக்க வேண்டும் என்று தோனியை அனுப்பியுள்ளனர் என்பது போல ஏதோ பேசினார். பாவம், ஆஃப்ரீதி தான் பேட்டிங் செய்யும்போது ரன்களே பெறப்போவதில்லை என்று அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும் இந்த மாறுதல் தேவையில்லாதது போலவே தோன்றியது. அப்பொழுது இந்தியா ஓவருக்கு 7-8 ரன்கள் பெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் தோனி வந்ததும் ஓவருக்கு 8-10 ரன்கள் வந்தன.

சேவாக் ஆஃப்ரீதியின் ஓர் ஓவரில் முதல் நான்கு பந்துகளில் வரிசையாக நான்கு பவுண்டரிகளை அடித்தார். ஐந்து ஓவர்கள் கடைசியில் இந்தியா 47/1, பத்து ஓவர் கடைசியில் 89/1. யார் பந்து வீசினாலும் சேவாக் பிய்த்து உதறினார். நவீத்-உல்-ஹஸன் ஒருவர்தான் ஓவருக்கு ஆறு ரன்கள் என்று கொடுத்துக்கொண்டிருந்தார். பிறரெல்லாம் ஓவருக்கு 8-10 ரன்கள் என்று போய்க்கொண்டிருந்தனர். அதனால் மீண்டும் வந்த நவீத்-உல்-ஹஸன் 14வது ஓவரில் சேவாகை அவுட்டாக்கினார். முந்தைய பந்தில் ஃபைன் லெக் மேல் சுழற்றி நான்கை அடித்த சேவாக், அடுத்த பந்தில் மிட்-விக்கெட் மேல் தூக்கி அடிக்கப் போய் சல்மான் பட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். சேவாக் 40 பந்துகளில் 74 ரன்கள், 12x4, 2x6!

தோனி அறிந்து கொள்ள முடியாத அற்புதமாக இருந்தார். காட்டடி அடிக்கக் கூடியவர் என்று உள்ளூர் ஆட்டங்களிலிருந்தே தெரியும். ஆனால் சேவாக் அவுட்டானதும், நிதானமாக விளையாட ஆரம்பித்தார்.

கங்குலி வழக்கம் போல சொதப்பல். கொஞ்ச நேரம் பந்துகளை மட்டைக்கு நடுவில் வாங்கி அடித்து 'நெட் பிராக்டீஸ்' செய்வது போல விளையாடினார். பின் ஒரு நல்ல நான்கை அடித்தார். பின் மொஹம்மத் சாமி பந்தில் க்ளீன் பவுல்ட் ஆனார். இம்முறை தேவலாம். 9 ரன்கள். அடுத்து இந்தியாவின் காவல் தெய்வம் திராவிட் ஆட வந்தார். தோனி போன்ற முரட்டுக் காளையை சற்றே வழி காட்டி சதமடிக்க வைத்தார். சதத்தைத் தாண்டியும் தோனி நல்ல வலுவுடன் இரண்டு ரன்கள் ஓடிக்கொண்டிருந்தார். கொச்சியில் சேவாக், திராவிட் இருவருமே சதத்தைத் தாண்டியதும் வலுவிழந்து ஆட்டமிழந்ததை ஞாபகம் வைக்கவும்.

நடுவில் ஒரு தேனீக்கூட்டம் உள்ளே புகுந்து ஆட்டக்காரர்களை பயமுறுத்தியது. தோனியைத் தவிர அனைவரும் கீழே விழுந்து தரையோடு தரையாகக் குப்புறப் படுத்துக் கிடந்தனர். தோனிக்கு பந்து வீச்சாளர்கள் மீதும் பயமில்லை, தேனீக்கள் மீதும் பயமில்லை. தோனி இருந்த ஃபார்மில் தேனீக்களுக்குத்தான் பயம், மைதானத்தை விட்டுப் ப்றந்து சென்றன.

ஆட்டத்தின் தொடக்கத்தில் யாரோ சில பாவிகள் ஒரு புறாவைப் பிடித்து அதன் கழுத்தில் ஏதோ ஒரு கடிதத்தைக் கட்டி வைத்து அதன் முதுகில் இந்தியாவின் மூவர்ணக் கலவையைப் பூசியிருந்தனர். அது பாவம், மைதானத்தில் ஓரிடத்தில் கழுத்தைச் சுற்றி இறுக்கியிருந்த கயிற்றை எப்படி விடுவிப்பது என்று திண்டாடிக் கொண்டிருந்தது. அதன் வலியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத வர்ணனையாளர்கள் அது இன்ஸமாம்-உல்-ஹக்குக்கு ஒரு தகவலை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறது என்று ஜோக் அடித்து அசத்திக்கொண்டிருந்தனர்.

தோனி 15x4, 4x6 என்று 123 பந்துகளில் 148 ரன் அடித்து பந்தைத் தூக்கி அடித்து எல்லைக்கோட்டின் அருகில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு இன்னுமொரு ஸ்டார். திராவிட் அரை சதத்தைப் பெற்றார். பின் வந்தவர்கள் அனைவரும் (காயிஃப் தவிர்த்து) தம்மால் முடிந்தவரை வேகமாக ரன்கள் சேர்த்தனர். முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் ஜாகீர் கான் அடித்த இரண்டு சிக்ஸர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். இந்தியா கடைசியில் 50 ஓவர்களில் 356 ரன்கள் பெற்றிருந்தது.

பாகிஸ்தான் பந்து வீச்சாலர்கள் மோசமாக வீசினார்கள் என்று சொல்ல முடியாது. சேவாக், தோனி இருவரும் மிக அற்புதமாக விளையாடினார்கள் என்று மட்டும்தான் சொல்ல முடியும். பாகிஸ்தான் தடுப்பாளர்கள் அதிகமாக இரண்டு கேட்ச்களை விட்டிருக்கலாம். அதுவும் கடைசி நேரங்களில்தான். இன்ஸமாம் ஒரு நேரத்தில் ஆட்டத்தில் ஆர்வத்தை இழந்து எதையுமே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

இந்த எண்ணிக்கையை பாகிஸ்தானால் மீறுவது மிகக் கஷ்டமே என்றாலும் கடைசிவரை போராடினர். சில முக்கியமான நிகழ்வுகளால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. முதலாவது ஆஃப்ரீதியின் விக்கெட். இரண்டாவது ஓவரை வீசவந்த நேஹ்ரா ஆஃப்ரிதிக்கு சற்றும் வாய்ப்பு கொடுக்காமல் நேராக ஸ்டம்பில் வீசினார். அதை வெட்டி ஆட முயற்சி செய்து பவுல்ட் ஆனார் ஆஃப்ரீதி. ஜீரோ.

இரண்டாவது இன்ஸமாமின் ரன் அவுட். அப்துல் ரஸாக் பந்தை ஷார்ட் ஃபைன் லெக்கிற்குத் தட்டிவிட்டார். இன்ஸமாம் படு வேகமாக ஓடி ரன் எடுக்கப் பார்த்தார், ஆனால் ரஸாக் நகரவேயில்லை. ஹர்பஜன் பந்தை டெண்டுல்கருக்குக் கொடுக்க, எளிதான ரன் அவுட். கொதித்துப் போன இன்ஸமாம், ரஸாக்கைத் திட்டிக்கொண்டே டிரெஸ்ஸிங் ரூமுக்குப் போனார். போகும் வழியில் கடுப்புடன் மட்டையை விட்டெறிந்தார். நிச்சயம் இந்தச் செய்கைக்காக அவருக்கு அபராதம் காத்திருக்கிறது.

மூன்றாவது ரஸாக்கின் விக்கெட். போனமுறை ஓசி விக்கெட்டுகள் டெண்டுல்கருக்குக் கிடைத்தது போல இந்த முறை யுவராஜ் சிங்குக்கு. மோசமான பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே. விட்டிருந்தால் வைட் கிடைத்திருக்கும். ஆனால் ரஸாக் அதை அடிக்கப் போய், மெலிதான விளிம்பில் பட்டு தோனியிடம் கேட்ச். ரஸாக் ஏற்கெனவே காலை நொண்டிக்கொண்டு ஷாஹீத் ஆஃப்ரிதியை ரன்னராக வைத்துக்கொண்டு ரன்கள் பெற்றுக்கொண்டிருந்தார். தொடர்ந்து யுவராஜ் சிங்குக்கு இன்ன்னமும் இரண்டு ஓசி விக்கெட்டுகள் கிடைத்தன.

நான்காவது யோஹானாவின் விக்கெட். அனைவரும் அவுட்டானாலும் யோஹானா இன்னமும் அவுட்டாகாமல் வேகமாகவே ரன்களைச் சேர்த்தார். ஹர்பஜன், டெண்டுல்கர், யுவராஜ் என்று அனைவரையும் சிக்ஸ் அடித்து விளாசினார். ஆனால் நடுவில் ரன் அவுட்டிலிருந்து மீள கீழே விழுந்து கையில் சிராய்ப்பு. அதை வைத்து சிறிது நேரம் கடத்தினார் யோஹானா. இதனால் கங்குலிக்குக் கோபம். நடுவர்களிடம் முறையிட்டார். பின் யோஹானாவிடமே சண்டை போட்டார். பொறுமையாக கையில் பிளாஸ்டர் போட்டுக்கொண்டு வந்த யோஹானா நேஹ்ராவை சிக்ஸ் அடிக்க முனைந்து கவர் திசையில் நின்ற காயிஃப் கையில் கேட்ச் கொடுத்தார்.

இதற்குப்பின் ஆட்டம் முடிய வேண்டியது ஒன்றுதான் பாக்கி. மெதுவாக ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்தது. ஆனாலும் 44 ஓவர்களில் பாகிஸ்தான் 298 வரை வந்துவிட்டது.

இந்தியாவின் பந்துவீச்சிலும் பிரமாதமாக ஒன்றுமில்லை. ஆனால் பேட்டிங் செய்தபோது நன்றாக ரன்கள் சேர்த்தது இந்தியாவுக்குக் கடைசியில் உதவி புரிந்தது. இப்பொழுதெல்லாம் 300, 350 போன்ற ரன்கள் கூட ஓர் அணியைக் காப்பாற்றாது போலிருக்கிறது.

அடுத்த முறை எப்படியாவது டாஸில் ஜெயித்துவிட வேண்டும் என்று இப்பொழுதிலிருந்தே இன்ஸமாம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்திருப்பார்.

Monday, April 04, 2005

M.வரதராஜுலு கைது

இன்று செய்தித்தாளைப் புரட்டும்போது கண்ணில் பட்டது இந்தச் செய்தி. M.வரதராஜுலு என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டார். இவருக்கு MV ராஜா, லூயி ஜூலு என்றெல்லாம் வேறு பெயர்கள் உண்டு. நடுவில் பிரெஞ்சுக் குடியுரிமையும் பெற்றுள்ளார்.

வரதராஜுலு 1996-ல் இந்தியன் வங்கியிலிருந்து ரூ. 200 கோடி பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் போலீஸிடம் மாட்டாமல் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து பிரான்சு சென்றார். இப்பொழுது ஒன்பது வருடங்கள் கழித்து CBIஇடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

நான் 1996ல்தான் இந்தியா திரும்பி வந்திருந்தேன். அப்பொழுது இந்த வழக்கைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ள வேண்டிய அவகாசம் ஏற்பட்டது.

வரதராஜுலுவின் மோசடித் திட்டம் மிகவும் எளிமையானது. முந்திரி விற்பனையை மையமாகக் கொண்டது. அந்த நேரத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் முந்திரிக்கு நல்ல வெகுமானம் உண்டு. ஆனால் அதே சமயம் இந்த ஏற்றுமதியாளர்கள் இந்தியாவின் வரித்தொல்லைகளிலிருந்து விடுபட விரும்பினர். அதனால் சிங்கப்பூரில் ஒரு வர்த்தக நிறுவனத்தை ஆரம்பிப்பார்கள். (பிரிட்டானியா நிறுவனத்தின் முன்னால் முதலாளி ராஜன் பிள்ளையின் வாழ்க்கைக் கதையைப் படித்தால் இதை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம்.) அதன்படி இந்திய நிறுவனம் தயாரிக்கும் முந்திரிக்கொட்டைகளை சிங்கப்பூர் நிறுவனம் குறைந்த விலையில் வாங்கும். பின் அதே முந்திரியை எந்தவித மதிப்பையும் கூட்டாமல் அதிக விலைக்கு பிற நாடுகளுக்கு விற்கும். இதனால் இந்தியாவின் வரித்தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். சிங்கப்பூரில் குறைந்த வரிதான்.

இங்கிருந்து ஆரம்பித்த வரதராஜுலு அதற்கடுத்த நிலைக்குச் சென்றார். தன்னிடம் வேலை பார்ப்பவர்களை இயக்குனர்களாக வைத்து 'டப்பா கம்பெனி'களை நிறுவுவது. இவையெல்லாம் shell companies. அதாவது இந்த நிறுவனங்களுக்கென அலுவலகம், ஊழியர்கள் என்று எதுவும் கிடையாது. பெயரளவில் கம்பெனிகளாக இருக்கும். வரதராஜுலுவின் சிங்கப்பூர் நிறுவனம் இந்த டப்பா நிறுவனங்களுக்கு முந்திரி ஆர்டர் கொடுக்கும். அந்த ஆர்டரை வைத்துக்கொண்டு இந்தியன் வங்கியில் கடன் வாங்குவார்கள். அதற்கு இந்தியன் வங்கியின் மேல் அதிகாரிகள் - மிக மிக மேலிடம் வரை - உள்கை. அந்தக் கடன் பணத்தை வைத்துக்கொண்டு வரதராஜுலுவின் இந்திய நிறுவனத்திடமிருந்து கை மேல் காசு கொடுத்து முந்திரிகளைக் கொள்முதல் செய்யும் இந்த shell company. இந்த முந்திரியை வரதராஜுலுவின் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வரதராஜுலுவுக்குச் சொந்தமான கப்பலில் அனுப்பி வைப்பார்கள். ஆனால் சிங்கப்பூர் சென்றவுடன் வரதராஜுலுவின் சிங்கப்பூர் நிறுவனம் இந்த முந்திரி மோசமான தரத்தில் உள்ளது என்று பணம் கொடுக்காமல் சரக்கைத் திருப்பி அனுப்பிவிடும். உடனே இந்த shell company மேற்படி முந்திரியை மோசமான தரத்தில் உள்ளது என்று அடிமாட்டு விலைக்கு வேறொரு நிறுவனத்துக்கு (அதுவும் வரதராஜுலுவின் மற்றொரு phony நிறுவனம்) விற்றுவிடும். அந்த நிறுவனமோ அதைக் கொள்ளை லாபத்துக்கு வேறொரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்றுவிடும்.

நஷ்டமடைந்த shell company இந்தியன் வங்கியிடம் வந்து தான் போண்டியாகிவிட்டதாகவும் அதனால் கடனைத் திரும்பக் கட்ட முடியாது என்றும் கையை விரித்து விடும். அந்த ஷெல் நிறுவனத்துக்கு என்று எந்தச் சொத்தும் இருக்காது. இவையெல்லாம் limited liability companies. எனவே நிறுவன இயக்க்குனர்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்தியன் வங்கியும் இந்தக் கடனை non-performing asset என்று எழுதி, இழுத்து மூடிவைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுவார்கள்.

இப்படியாக இந்தியன் வங்கிக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம். இது, மற்றும் அப்பொழுது வங்கியின் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ணன் செய்த சில புரட்டு வேலை ஆகியவற்றால் இந்தியன் வங்கி முற்றிலுமாக அழியப்போனது. அதன்பின் மத்திய அரசு சில கோடிகளை பங்குப்பணமாகக் கொண்டுவந்து அழிவிலிருந்து இந்த வங்கியை மீட்டது.

இப்பொழுது வரதராஜுலு கைது செய்யப்பட்டுள்ளார். இனி வரும் நாள்களில் எம்மாதிரியான திருட்டு வேலைகள் மூலம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்று விலாவரியாகத் தகவல்கள் கிடைக்கும். ஆனால் எத்தனை பணத்தை அவரிடமிருந்து மீட்க முடியும் என்று தெரியவில்லை.

Saturday, April 02, 2005

இந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்

இந்தியா (டாஸ்) 281/8 (50 ஓவர்கள்), பாகிஸ்தான் 194 ஆல் அவுட் (45.2 ஓவர்கள்)

கொதிக்கும் வெய்யிலில், கொட்டும் வியர்வை மழையில், இந்தியா பாகிஸ்தானை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டத்தில் ஒரு சில முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்போம். டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு முதல் பந்திலேயே அதிர்ஷ்டம். சாமியின் பந்துவீச்சில் சேவாக் வெட்டி ஆடுகிறார். பாயிண்ட் திசையில் மொஹம்மத் ஹஃபீஸ் கேட்சை நழுவ விடுகிறார். பின் சேவாக் 8 ரன்களில் இருக்கும்போது நவீத்-உல்-ஹஸன் வீசிய எழும்பும் பந்தை ஸ்லிப் திசையில் தட்டி விடுகிறார், பந்து கம்ரான் அக்மலின் கையுறையில் பட்டு எல்லைக்கோட்டுக்குப் போகிறது. அடுத்து சேவாக் வாய்ப்பைத் தருவது அவர் 108-ல் இருக்கும்போதுதான்.

அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இந்தியாவின் பழம்பெரிசுகள் ஆட்டம் இழக்கின்றன. டெண்டுல்கரும் கங்குலியும் சேர்ந்து இந்தியாவுக்கு எத்தனையோ ஒருநாள் போட்டிகளை ஜெயித்துத் தந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய தேதியில் இருவருமே பேட்டிங்கில் சற்றே தடுமாறுகிறார்கள். கங்குலி அதிகமாகவே. நவீத்-உல்-ஹஸன் பந்தை வெட்டி ஆடி முதல் நான்கைப் பெறுகிறார் டெண்டுல்கர். ஆனால் அடுத்து எழும்பி வரும் பந்தை 'புல்' செய்யப் போய் சரியாக மட்டையில் படாமல் மிட்-ஆனில் எளிதான கேட்ச். அடுத்த பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியில் குத்தி காலுக்குப் பின்னாலிருந்து லெக் ஸ்டம்பின் வெளிப்புறத்தில் அடிக்கிறது. ஸ்டம்ப் உருண்டோடி ஆஃப் ஸ்டம்புக்கு ஏழெட்டடி தள்ளி விழுகிறது! கங்குலி 0. முகத்தில் கலக்கம்.

சேவாகும், திராவிடும் ஜோடி சேர்ந்து அற்புதமாக ஆடுகிறார்கள். ஒரு நிலையில் இருவரும் 36 ரன்களில் சேர்ந்தே இருக்கிறார்கள் (ஆனால் திராவிட் அதிகப் பந்துகளை சந்தித்துள்ளார்). பின் இருவரும் ஐம்பதை சேர்ந்தே நெருங்குகிறார்கள். ஆனால் சேவாக் திடீரென வேறொரு கியருக்குச் செல்கிறார். திரும்பிப் பார்ப்பதற்குள் சேவாக் 70, 80, 90 என்று ஓடிவிடுகிறார். பின் சதத்தையும் அடித்து, அப்துல் ரஸாக் பந்தில் பவுல்ட் ஆகிவிடுகிறார். சேவாக் சதமடித்தது தான் சந்தித்த 84வது பந்தில். கடைசியில் 95 பந்துகளில் 108, 9x4, 3x6. திராவிட் முன்னைப் போலவே ஒரே சீரான வேகத்தில் செல்கிறார். மறுமுனையிலோ பிறர் சட-சடவென அவுட்டாகிறார்கள். சதத்தைத் தாண்டியபின் திராவிடால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ரன் அவுட் ஆகிறார். அதுவரையில் பாகிஸ்தான் தடுப்பாளர்கள் மூன்று ரன் அவுட் வாய்ப்புகளைத் தடவியிருந்தனர்.

இதுநாள் வரை நாம் அதிகம் நம்பி இருந்தது திராவிட்தான். இப்பொழுது அந்த லிஸ்டில் சேவாகையும் சேர்த்துக் கொள்ளலாம். சேவாகை இனியும் இந்தியாவின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக சேர்ப்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

இன்ஸமாம்-உல்-ஹக் அணித்தலைமையும் சரியாக இல்லை. இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள். சேவாக், திராவிட் இருவரில் ஒருவர் அவுட்டாகியிருந்தாலும் இந்தியாவின் நிலைமை படுமோசமாகியிருக்கும். ஆனால் இவர்கள் மீது கடுமையான அழுத்தத்தைத் தராமல் எளிதாக விட்டுவிட்டார் என்றுதான் தோன்றியது. மேலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சரியாகத் தேர்வு செய்யப்படவில்லை. டெஸ்ட் போட்டிகளில் வெகு அருமையாக வீசிய தனீஷ் கனேரியா இல்லை. பதிலுக்கு ஆல்-ரவுண்டர்கள் என்று சொல்லிக்கொண்டு நான்கைந்து பேர் இருந்தார்கள். இரண்டு ஆஃப் ஸ்பின்னர்கள்: அர்ஷத் கான், மொஹம்மத் ஹஃபீஸ். இருவருமே இந்திய அணியினரைத் தொல்லை செய்யவில்லை. கடைசியில் அர்ஷத் கான் நான்கு விக்கெட்டுகளைப் பெற்றாலும் அவரது பந்துவிச்சு எவ்வகையிலும் திராவிட், சேவாகை கஷ்டப்படுத்தியிருக்காது.

பாகிஸ்தானால் அடிக்கக் கூடிய டார்கெட்தான். இந்தியாவின் தொடக்கப் பந்து வீச்சு சற்று சுமார்தான். கங்குலி பாயிண்டில் நின்று கொண்டு இரண்டு கேட்ச்களை விடுகிறார். யுவராஜ், காயிஃப், சேவாக் போன்றவர்கள் இருக்கும்போது இவர் ஏன் பாயிண்டில் நிற்க வேண்டும் என்று தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் கடுப்பாகின்றனர். சோகமாக கங்குலி தன் இடத்தை சேவாகுக்குக் கொடுத்துவிட்டு ஸ்லிப்பில் போய் நிற்கிறார். [ஸ்லிப்பில் எப்பொழுதும் நிற்கும் திராவிட் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதில் தினேஷ் மோங்கியா ஃபீல்டிங்.] இரண்டு பந்துகள் கழித்து சேவாக் கையில் நேராக ஒரு கேட்ச். இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது பாகிஸ்தானின் தோல்வி.

அடுத்த ஓவரிலேயே சல்மான் பட் கேட்ச் ஸ்கொயர் லெக்கில் நிற்கும் கங்குலிக்குச் செல்கிறது. நல்லவேளையாக அவர் அதைப் பிடித்து விடுகிறார். இல்லாவிட்டால் அவரது கதை கந்தல்தான். அடுத்த பாலாஜி ஓவரில் மீண்டும் பாயிண்ட் திசையில் நல்ல கேட்ச். இம்முறை யுவ்ராஜ் சிங். அடுத்தடுத்து மூன்று ஓவர்களில் விழுந்த இந்த மூன்று கேட்ச்களில் ஆட்டம் முடிவதில்லை. அதற்கடுத்த இரண்டு விக்கெட்களில்தான் ஆட்டம் இந்தியா வசமாகிறது. யூசுஃப் யோஹானா ஏழு பந்துகளில் ரன்கள் எதுவும் பெறாமல் இருக்கிறார். அவர் அடிப்பதெல்லாம் நேராக தடுப்பாளர் கைகளுக்கே செல்கிறது. மறுமுனையிலோ இன்ஸமாம் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ரன்கள் பெறுகிறார். ஜாகீர் கான் மீண்டும் வந்து போடும் ஓவரின் முதல் பந்தில் யோஹானா ஆன்-டிரைவ் செய்கிறார். பந்து சற்றே மேலாக ஜாகீர் கானுக்கு வலப்புறத்தில் செல்கிறது. ஜாகீர் கான் அற்புதமாக டைவ் அடித்து கீழே விழுந்து தன் வலது கையை நீட்டிக்கொண்டே இருக்கிறார். தரைக்கு ஒரு செ.மீ மேலே பந்து அவர் கையில் மாட்டிக்கொள்கிறது. இது மிக முக்கியமானதொரு விக்கெட்.

அடுத்து புதியவர் மொஹம்மத் ஹஃபீஸ், இன்ஸமாம்-உல்-ஹக்குடன் சேர்ந்து எளிதாக ரன்களைப் பெறுகிறார். இந்நிலையில் கூட பாகிஸ்தான் ஜெயிக்க ஓரளவு வாய்ப்பு உள்ளது. இந்தியா இதுதான் சாக்கு என்று டெண்டுல்கர் மூலம் சில ஓவர்களைத் தள்ளிவிடப் பார்க்கிறது. அதுகூட சேவாக் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் உள்ளே சென்றதால்தான். திராவிட் எக்கச்சக்கமான de-hydrationஆல் மதியம் ஃபீல்டிங் செய்யவே வரவில்லை. சேவாக் தொடக்கத்திலிருந்தே ஃபீல்டிங் செய்தார். முதல் கேட்சைப் பிடித்ததும் அவரே. ஆனால் அதற்குப் பிறகு உள்ளே சென்றுவிட்டார். பின் அவர் வந்ததும் பந்துவீச முடியாத நிலை. அவர் மீண்டும் களத்தில் 45 நிமிடங்கள் (எவ்வளவு நேரம் உள்ளே இருந்தாரோ, அவ்வளவு நேரம் மீண்டும் களத்தில் இருந்தபிறகுதான்) பந்து வீசமுடியும்.

சரி, டெண்டுல்கருக்கு சில ஓவர்கள் கொடுத்துப் பார்ப்போமே என்று கங்குலி முடிவு செய்கிறார். டெண்டுல்கரின் முதல் ஓவர் படுமோசம். லாங் ஹாப், ஃபுல் டாஸ். பின் அடுத்த சில ஓவர்கள் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகிவர, கால்களுக்குத் தள்ளி வீசுகிறார். ஆனால் consistency கிடையாது. மொஹம்மத் ஹஃபீஸ் இறங்கி வந்து லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ் அடிக்கிறார். இனி டெண்டுல்கருக்கு அதிக பட்சம் ஓர் ஓவர்தான் கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் யாருமே எதிர்பார்க்க்காத வகையில் வேகமாக வீசிய ஒரு பந்து - லெக் ஸ்டம்பில் விழுந்து ஆஃப் ஸ்டம்பை நோக்கிச் செல்கிறது. இன்ஸமாம் கட் செய்ய முயற்சி செய்கிறார். மட்டையில் பந்து படவில்லை. திடீரென பின்னால் நிற்கும் விக்கெட் கீப்பர் மஹேந்திர சிங் தோனி துள்ளிக் குதிக்கிறார். இன்ஸமாமால் நம்ப முடியவில்லை. பந்து ஆஃப் ஸ்டம்ப் மீது நிற்கும் பெயிலை சற்றே தட்டி விட்டுச் சென்றிருக்கிறது. ஒருவேளை தோனியே பெயிலைத் தட்டிவிட்டாரோ என்று இன்ஸமாம் அங்கேயே நிற்கிறார். தொலைக்காட்சி ரீப்ளேயில் பார்த்தால் அது கிளீன் பவுல்ட் என்று தெரிகிறது.

இங்கு... இங்குதான் இந்தியாவின் வெற்றி நிச்சயமாகிறது. அதற்குப் பிறகு டெண்டுல்கருக்குக் கிடைத்த மீதி நான்கு விக்கெட்டுகளும் ஓசி. ஒன்று ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச். ஒன்று டீப் மிட் விக்கெட்டில் கேட்ச். ஒன்று டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச். ஒன்று டெண்டுல்கர் கைக்கே. எல்லாம் முடிந்துவிடும் என்று பார்த்தால் கடைசி விக்கெட்டுக்காக 42 ரன்கள் சேர்க்கின்றனர் அர்ஷத் கானும் நவீத்-உல்-ஹஸனும். ஜாகீர் கான் வந்து பந்துவீசி கடைசி விக்கெட்டை எடுக்க வேண்டியிருக்கிறது.

சேவாக் ஆட்ட நாயகன். இந்தியா மிக எளிதாக வெற்றிபெற்றது போலத் தோன்றினாலும் பேட்டிங்கில் உள்ள குறைபாடுகள் தெள்ளத் தெளிவு. பந்துவீச்சு தேவலாம். ஹர்பஜன் நன்றாகவே வீசினார். நேஹ்ரா, பாலாஜி, ஜாகீர் மூவருமே நன்றாக வீசினார்கள். அடுத்த ஆட்டம் இதேபோல humidity மிக அதிகமாக இருக்கும் விசாகப்பட்டிணம். அங்கும் எக்கச்சக்க ரன்கள் வரும். ஆட்டத்தைப் பார்க்க 30-40,000 பேர்கள் இருப்பார்கள். கங்குலிக்கு இங்காவது அதிர்ஷ்டம் இருக்கும் என்று எதிர்பார்ப்போம்.

Friday, April 01, 2005

Whose Truth - response to Venkat

வெங்கட்: உங்கள் பதிவில் 5000 char வரம்பு இருப்பதால் இந்த நெடிய பின்னூட்டம் இங்கே.

[முன்-பின் புரியாதவர்களுக்கு: வெங்கட் முதலில் எழுதிய பதிவு இது. அதில் என் பின்னூட்டம் இருக்கும். என் பின்னூட்டத்தை முன்வைத்து வெங்கட் இரண்டாவதாக எழுதிய பதிவு இது. அதற்கான பதில் இந்தப் பதிவில்.]

வெங்கட்: போராளிகளாக மாறுபவர்கள் வற்புறுத்தலின் பேரிலும் இருக்கலாம், சுய விருப்பத்தாலும் இருக்கலாம். அப்படியிருக்கும்போது வயது இடையில் வந்து என்னவிதத்தால் மாறுபாட்டினைக் கொண்டுவர முடியும்? 17 வயதான, தானாகவே போராளியாக மாற விரும்பும் ஒருவர். 19 வயதான, கையில் ஆயுதமெடுக்க விரும்பாத, ஆனால் வற்புறுத்தலின் பேரில் ஆயுதத்தைக் கையிலெடுத்த ஒருவர். இதிலிருந்து 18 வயது என்கிற arbitrary கோடு அபத்தமானதொரு வரம்பு என்று தெரிகிறதல்லவா?

சட்டபூர்வமான படைகளுக்கு ஆளெடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட வயது வரம்பை வைக்கின்றனர். ஆனால் தற்காப்புப் படைகள் இந்த வரம்பைப் பின்பற்ற முடியாது. தன்னைத் தாக்கவருபவனை எதிர்த்துத் தாக்காமல் "எனக்கு 16 வயதுதான் ஆகிறது, அதனால் நான் அடி வாங்கிக்கொள்கிறேன்" என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

விடுதலைப் புலிகள் பல்வேறு காரணங்களால் வயது குறைந்தவர்களைத் தங்கள் படைகளில் வற்புறுத்தியே சேர்த்திருக்கலாம். அதையும் நான் குறை கூற மாட்டேன். போரே கூடாது என்ற நிலையே நான் விரும்புவது. ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு சமூகத்தைக் காப்பாற்ற ஒருவர் தேவையான அனைத்தையும் செய்யலாம் - வயது குறைந்தவர்களைக் கையில் ஆயுதமெடுக்க வைப்பதிலிருந்து. சமூகமே சீரழிந்து வாழ வகையில்லாத போது சிறுவர்களை மட்டும் விட்டுவைத்து என்ன பிரயோசனம்? அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா?

தந்தை இல்லாத வீட்டில், மூத்த பிள்ளை - 18 வயதுக்குக் கீழே இருந்தாலும் - ஏதோ வேலை பார்த்து தன் தம்பி தங்கைகளைக் காப்பதில்லையா? சில சமயங்களில் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில், மாற்று வழிகளை வைக்காமல் செய்வதால் எத்தனையோ பேரின் வாழ்க்கைகளைப் பாழடிக்க வேண்டியிருக்கும். நம் நாட்டில் முழு சமூகப் பாதுகாப்புத் திட்டம் இருந்தால் நாமும் தைரியமாக குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கலாம்.

அதைப்போல முழு அமைதி இருந்தால் ... நம் படைகளில் குழந்தைப் போராளிகளையும் ஒழிக்கலாம். Survival என்று வந்துவிட்டால் நாகரிக நாடுகளின் சட்ட திட்டங்கள் அனைத்தும் காற்றில்தான் பறக்கவேண்டும். These are wars fought in extraordinary circumstances. There cannot be any rules in guerilla warfare. Unfortunately.

மற்றபடி, மேற்படி வானொலி நிகழ்ச்சி நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது. யாரும் எதையுமே பேசாத நேரத்தில் இவர்கள் அதையாவது செய்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். டொராண்டோவில் விடுதலைப் புலிகள், அவர்களது ஆதரவாளர்கள் வம்பு செய்கிறார்கள் என்ற பேச்சு வரும்போது, இவர்கள் மட்டும்தானா அல்லது இன்ன பிறரும் சட்டம் ஒழுங்கைக் குலைக்கிறார்களா என்ற கேள்வி எழுவது நியாயமற்றது என்று நினைக்கிறீர்களா?

புலிகளுக்கு ஆதரவாக பிரான்சிஸ் சேவியர் பேசினாலும் அதைப் பற்றி விமர்சிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: "There is a contradiction here." அதாவது ஒருவர் ஒரே நேரத்தில் பாதிரியாராகவும், புலிகள் ஆதரவாளராகவும் இருக்க முடியாது என்பதே மறைபொருள். இந்த வரியின் மூலம் சேவியரின் வாக்குமூலத்தை சற்றே நீர்த்துப்போகச் செய்கிறார் ஒருங்கிணைப்பாளர்.

ஆனால் பத்திரிகையாளர் டேவிட் ஜெயராஜ் பேசுவதை ஆமோதிக்கிறார். ஜெயராஜின் சோகம் சேவியரின் சோகத்தை விட அதிகமாகிறது. ஜெயராஜின் வாக்குமூலம் புலிகளை "assholes" என்கிறது. நான் ஏன் இந்த "assholes"களுடன் என் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று ஜெயராஜ் வருந்துகிறார். ஒருங்கிணைப்பாளரும் அதையே ஆமோதிப்பது போலப் பேசாமல் இருக்கிறார்.

புலிகள் மீதான கடுமையான குற்றச்சாட்டை மென்மையாக வைக்கிறார் லக்ஷ்மி. புலிகள் ஜார்ஜ் புஷ்ஷைப் போல "you are either with us or against us" என்ற கொள்கைகளை உடையவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். அவர் மீது ஜெர்மனியில் நடந்த தாக்குதல்கள் அவர் புலி ஆதரவாளர் இல்லை என்பதால் ஜெர்மனியில் இருந்த புலிகள்/ஆதரவாளர்கள் நிகழ்த்தியது என்பது.

சமீபத்தில் "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்" புஷ்பராஜாவைச் சந்தித்த போது, தான் இப்பொழுது இலங்கை சென்றால் தன்னைக் கொல்ல பலரும் ஆவலாயிருப்பார்கள் என்றார். அதில் புலிகளும் உண்டு. டக்ளஸ் தேவானந்தாவும் உண்டு என்றார்!

டேவிட் ஜெயராஜோ, 'லக்ஷ்மி'யோ, புஷ்பராஜாவோ, யாராயிருந்தாலும் புலிகளுக்கு எதிரானவர் என்றால் அவர்கள் உயிர் எப்பொழுது வேண்டுமானாலும் போய்விடலாம் என்பது உண்மை நிலையா அல்லது வெறும் propagandaவா என்பது எனக்குத் தெரியவில்லை.

இது உண்மை என்றால் இவர்கள் இவ்வளவு தைரியமாக புத்தகங்கள் எழுதுவது, பத்திகள் எழுதுவது, வானொலிப் பேட்டிகள் கொடுப்பது என்று செயல்படுகிறார்களே? கடந்த ஆறு மாதங்களின் டொராண்டோவில் புலிகள் யாரையாவது கொன்றிருக்கிறார்களா? கை கால்களை உடைத்திருக்கிறார்களா? ஜெர்மனியில்? பிரான்சில்? பிரிட்டனில்? இந்தப் புள்ளி விவரம் இல்லையென்றால் புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு இது என்றாகும்.

ஆனால் இந்த வானொலி நிகழ்ச்சி மறைமுகமாக இதையெல்லாம் endorse செய்கிறது. இந்த நிகழ்ச்சியைக் கேட்டவர்களுக்கு மனதில் இதுதான் பட்டிருக்கும்:

* புலிகள் தீவிரவாதிகள். சிலர் அவர்களை விடுதலைப் போராளிகள் என்றும் சொல்கின்றனர்.
* குழந்தைகளை ஆயுதப்போரில் வற்புறுத்தி ஈடுபடுத்துகிறார்கள்.
* ஒரு பத்திரிகையாளர் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் இப்பொழுது புலிகளின் உண்மை முகத்தைக் கண்டு, அவர்களை எதிர்க்கிறார். அதனால் அவரது காலை உடைத்தனர். இருந்தும் விடாது, அச்சுறுத்துதலுக்கு இடையே, புலிகளை எதிர்க்கும் தன் பணியை நியாயமான வழியில் செய்து வருகிறார்.
* ஒரு சமூக சேவகி, இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்துதலின் போது வீரத்துடன் பல பெண்களைக் காத்தவர். ஆனால் நடுநிலையாக நிற்கிறார் என்ற காரணத்துக்காக அவரைப் புலிகளும், ராணுவமும் அச்சுறுத்தினர். ஜெர்மனி வந்தார். அங்கு அவர் மீது கொடிய தாக்குதல் நடந்தது. அதனால் கனடா வந்து மறைந்து வாழ்ந்து வருகிறார். புலிகளால் அவருக்கு எப்பொழுதும் அபாயம் நேரலாம்.
* ஒரு கிறித்துவப் பாதிரியார். ஆனாலும்!! புலி ஆதரவாளராக இருக்கிறார்.

மேலே சொன்ன அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான ஒருங்கிணைத்தலில் ஒரேயோர் 'உண்மை' மட்டும்தான் புலனாகும். டேவிட் ஜெயராஜின் பாஷையில்: Tigers are assholes.

That may be quite unfair in the end.

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்

15-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்தே மிளகையும், கிராம்பையும், ஜாதிக்காயையும் தேடி ஐரோப்பியர்கள் உலகெங்கும் சுற்றத் தொடங்கினர்.

அதுவரையில் அரேபியர்களும் வெனிஸ் நகர வியாபாரிகளும் ஐரோப்பியர்களுக்கு மிளகு விற்றே கொழுத்த லாபம் பார்த்திருந்தனர். எனவே எப்படியாவது இவர்களை வெட்டிவிட்டு தாமே நேரடியாக பொருள்களை உற்பத்தி செய்யுமிடத்துக்கே சென்று வாங்கிவிடுவது என்று துடியாய்த் துடித்தனர் போர்ச்சுகீசியர்கள். வாஸ்கோ ட காமா 1498இல் இந்தியா வந்தார். அதனைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், டென்மார்க் நாட்டவர், பிரெஞ்சு, கடைசியாக ஆங்கிலேயர் அனைவரும் கம்பெனிகளை அமைத்து, பெருஞ்செலவு செய்து கப்பல்களில் வந்து இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய இடங்களில் மிளகு வகையறாக்களை வாங்கிச்சென்றனர்.

அப்படி ஆரம்பித்து, அங்கிருந்து தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நெசவு ஆடைகள், பிற கைவினைப்பொருட்கள் என்று வியாபாரம் மட்டுமே குறியாக இருந்து பணம் சேர்த்தவர்கள் இந்தியாவின் சில பகுதிகளை வாங்குவது, அங்கு நகரங்கள் அமைப்பது, சில அரசர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு எதிரானவர்களை அழிப்பது என்றாகி, அங்கிருந்து ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கடைசியாக இந்தியா முழுமையும் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1700களின் தென்னிந்தியாவின் தலைவிதி பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் கையில் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் இவர்களுக்கு இடையே நடந்த போராட்டங்கள், அக்கால மக்களின் வாழ்க்கை, வியாபாரம் அனைத்தையும் இன்று ஒருவர் அறிய வேண்டுமானால் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளின் துணையை நாடவேண்டும்.

ஆனந்தரங்கப் பிள்ளை பாண்டிச்சேரியை ஆண்டுவந்த பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேயின் (Marquis Joseph-Francois Dupleix) துபாஷியாகவும், பிரதம மந்திரியாகவும், இராணுவ ஆலோசகராகவும், பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரப் பங்காளியாகவும் இருந்தார். ஆனந்தரங்கப் பிள்ளை 1736 முதல் 1761-ல் தான் இறக்கும்வரை நாட்குறிப்புகளை எழுதிவைத்தார். இவர் எழுதிச் சென்ற நாட்குறிப்புகளை 1846-ல் கலுவா-மொம்பிரேன் (Gallois-Montbrun) என்பவர் ஆனந்தரங்கப் பிள்ளையின் சந்ததிகளிடமிருந்து கண்டெடுத்து தான் ஒரு பிரதியெடுத்துக்கொண்டார். எதுவார் அரியேல் (Edward Ariel) என்பவரால் இது பிரதியெடுக்கப்பட்டது. ஆனந்தரங்கப் பிள்ளை தமிழில் எழுதியதை ஏன் இந்த பிரெஞ்சு ஆசாமிகள் பிரதியெடுத்து வைத்துக்கொள்கிறார்கள்... ஒருவேளை இதில் ஏதேனும் விஷயம் இருக்குமோ என்பதால் அப்பொழுது பாண்டிச்சேரியிலிருந்த ஆங்கில அரசப் பிரதிநிதி ஜெனரல் மெக்லீட் (McLeod) அந்தப் பிரதியிலிருந்து மற்றுமொரு பிரதியெடுத்து அதனைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார். இந்தப் பிரதியை எடுத்தது பேராசிரியர் G.W.பாரஸ்ட் என்பவர். எதுவார் அரியேல் பிரதியெடுத்தது கலுவா-மொம்பிரேன் இறந்ததும் பிரான்சு சென்றது. ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிவைத்த மூலப்பிரதி அவரது சந்ததியினரால் தொலைக்கப்பட்டது.

சென்னையிலிருந்த ஆங்கிலேய அரசின் மூலமாக இந்த நாட்குறிப்புகள் ஆங்கிலத்தில் J.F.ப்ரைஸ், ரங்காச்சாரி ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டன. [The Private Diary Of Ananda Ranga Pillai in 12 vol. A Record of Matters Political, Social, Historical and Personal- From 1736 to 1761 Translated from the Tamil by The Order Of The Govt. of Madras - Ananda Ranga Pillai, Dubash to J.F.Dupleix; - Editors J.F. Price, Rangachari. Vol.1 (1736-1746) 488p, Vol.2 (Apr.1746-Oct.1746) 464p, Vol.3 (Oct.1746-Mar.1747) 508p, Vol.4 (Apr.1747-Mar.1748) 521p, Vol.5 (Apr.1748-Oct.1748) 496p, Vol.6 (Oct.1748-Mar.1750) 494p, Vol.7 (Apr.1750-Apr.1751) 492p, Vol.8 (May1751-Dec.1753) 303p, Vol.9 (Sep.1754-Dec.1755) 474p, Vol.10 (Jan.1756-Dec.1757) 452p, Vol.11 (Jan.1757-Jun.1759) 510p, Vol.12 (Jan.1760-Dec.1760) 456p. 12 Volumes - ISBN 81 206 0181 5]

ஆனால் மேற்படி ஆங்கில மொழியாக்கத்தில் பல பகுதிகள் விடுபட்டுள்ளன என்கிறார் ஓர்சே மா. கோபாலகிருஷ்ணன். பிரான்சு நாட்டில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் (Gobalakichenane) கடந்த மாதம் சென்னையில் சில இடங்களில் ஆனந்தரங்கப் பிள்ளை பற்றியும் இன்ன பிற பற்றியும் பேசினார். அதில் Alliance Francaise-ல் அவர் பேசியதைக் கேட்க நான் சென்றிருந்தேன். பிரான்சில் நூலகத்தில் இருக்கும் முதலாம் பிரதியைத் தான் பார்த்ததாகவும் அதில் இருப்பதில் கிட்டத்தட்ட 30% J.F.ப்ரைஸ் ஆகியோரது ஆங்கில மொழியாக்கத்தில் காணக்கிடைப்பதில்லை என்றும் சொல்கிறார் கோபாலகிருஷ்ணன். அதை நிரூபிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட வருடத்துக்கான (பிரஜோத்பத்தி) நாட்குறிப்புகளைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார் இவர்.

ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு, பிறசொற்பத்தி ஆண்டு (1751-1752), மெய்யப்பன் பதிப்பகம், டிசம்பர் 2004, பக். 430, விலை ரூ. 140.

தான் தமிழக, புதுச்சேரி அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டு இந்த நாட்குறிப்புகளை முழுமையாக, தரமாக, செம்பதிப்பாக வெளியிட விரும்புவதாகச் சொன்னாலும் அதற்கு உதவி செய்ய நம் நாட்டு அரசாங்கங்கள் முன்வரவில்லை என்று வருத்தப்பட்டார்.

ஆனந்தரங்கப் பிள்ளையைத் தவிர இன்னமும் சிலரது நாட்குறிப்புகள் உள்ளன, அவற்றில் முக்கியமானது ஆனந்தரங்கப் பிள்ளையின் சகோதரர் பிள்ளை விஜய திருவேங்கடப்பிள்ளை (3), அவரது மகன் முத்து விஜய திருவேங்கடப்பிள்ளை (4) மற்றும் வீர நாய்க்கர் (2) ஆகியோரது நாட்குறிப்புகள் என்கிறார் இவர். கலுவா-மொம்பிரேன் திருவேங்கடப்பிள்ளை நாட்குறிப்புகள் என்று சிலவற்றை எடுத்து சேகரித்தபோது அவை ஆனந்தரங்கப் பிள்ளை டயரிகளைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று கண்டுகொள்ளாமல் தூக்கிப் போட்டுவிட்டதாகவும், மேலும் திருவேங்கடப்பிள்ளை என்ற பெயரில் ஒருவர்தான் அனைத்து நாட்குறிப்புகளையும் எழுதினார் என்றே அவர்கள் அனைவரும் கருதியதாகவும், தான் அதனை கவனமாகப் பார்த்தபோதுதான் இந்தக் குறிப்புகள் இரண்டு வெவ்வேறு (தந்தை, மகன்) ஆள்களால் எழுதப்பட்டது என்று தெரிய வந்ததாகவும் சொல்கிறார்.

அத்துடன் இரண்டாம் வீராநாய்க்கர் என்ற திருவேங்கடப்பிள்ளைகளின் இரண்டாம் நிலை அதிகாரியின் நாட்குறிப்புகளையும் பிரான்சு நூலகத்திலிருந்து எடுத்து 1992-ல் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792). பதிப்பு விவரம்: நற்றமிழ் பதிப்பகம், E11, பி.ஏ.டவர்ஸ், 33, ஹால்ஸ் சாலை, எழுமூர், சென்னை 600 008, பிப்ரவரி 1992, பக். 310, விலை ரூ. 130

நான் கேள்விப்பட்ட வரையில் புதுச்சேரி அரசு ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள் என்று எதையோ விற்பதாகத் தெரிகிறது. இது J.F.ப்ரைஸ், ரங்காச்சாரி ஆங்கில மொழியாக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தெரியவில்லை. ஒருவேளை சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பிரதியிலிருந்து (G.W.பாரஸ்ட் உடையது) புதுச்சேரி அரசு ஒரு பிரதியெடுத்து அதனை மலிவு விலைப் பதிவுகளாகவும் விற்கலாம். இதுபற்றி மேற்கொண்டு விசாரிக்க வேண்டும். தகவல் தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லவும்.

ஆனந்தரங்கப் பிள்ளையின் சுவாரசியமான வாழ்க்கை வரலாறு ரா.தேசிகன் என்பவரால் எழுதப்பட்டு 1941-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மின்பிரதி நா.கண்ணனின் முதுசொம் காப்பகத்தில் உள்ளது.