கடந்த சில நாள்களாக உச்ச நீதிமன்றம் சென்ற வாரம் வெளியிட்ட தீர்ப்பு மீதான சர்ச்சைகள் பல தளங்களிலும் எழுந்துள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி முழுமையான தகவல்களைப் பெறாமலேயே நீதிபதிகளின் செயலுக்கு உள்ளர்த்தம் கற்பிக்கும் பதிவுகளும் வந்துள்ளன. தமிழகத்தின் சமூகநீதிக் காவலர்கள் - முக்கியமாக ஜெயலலிதா - மிகவும் அபத்தமான தீர்வுகளை முன்வைக்கிறார்கள்.
ரவி ஸ்ரீநிவாஸ் தனது பதிவில் மூன்று பகுதிகளாக இதுபற்றி எழுத ஆரம்பித்தார். ஆனால் முதல் பகுதிக்குப் பின் நிறுத்திக்கொண்டார். இப்பொழுது அவரது பதிவில் முதல் பகுதி கூடக் காணக் கிடைக்கவில்லை.
இந்த என் நீண்ட பதிவு நடந்தது என்ன என்பதை நான் புரிந்துகொண்ட அளவுக்கு விளக்கவும், அடுத்த கட்டம் என்னவாக இருக்கவேண்டும் என்ற என் கருத்துக்களைச் சொல்லவும் மேற்கொள்ளும் ஒரு முயற்சி.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழுமையாக ஆன்லைனில் கிடைக்கிறது. அதை இரண்டு மூன்று முறைகள் படித்தபின்னரே இதை எழுதுகிறேன். நான் மற்றபடி சட்ட வல்லுனர் அல்லன்.
-*-
2002-ல் TMA பாய் Vs கர்நாடக அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பதினொரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒரு தீர்ப்பை அளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பிலேயே சில குழப்பங்களும் உள்-முரண்பாடுகளும் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பை ஒட்டி பல உயர் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் வந்தன. இதையெல்லாம் (இஸ்லாமிய அமைப்பு மற்றும் பிற Vs கர்நாடக அரசு மற்றும் பிற) ஒன்றாகக் கவனிக்க ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச்சட்ட பெஞ்ச் அமர்ந்தது. 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில் ஐந்து நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பில் 'பாய்' வழக்கு தீர்ப்பை மேலும் புரியவைப்பதற்காக சில விளக்கங்களைக் கொடுத்தனர்.
உச்ச நீதிமன்ற வழக்கப்படி பதினொரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் மாற்றமுடியாது. 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில் மேலும் சில குழப்பங்கள் இருந்தன என்பதால் மேலும் பல வழக்குகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வந்தன. அவையனைத்தையும் எடுத்துக்கொண்டு (இனாம்தார் மற்றும் பிறர் Vs மஹாராஷ்டிரா அரசு மற்றும் பிற) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முன் வந்தது. இதை விசாரிக்க ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் நிறுவப்பட்டது.
'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பு தன் சக்தியை மீறி 'பாய்' தீர்ப்புக்கு எதிரான சிலவற்றைத் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர் என்றும் அவை செல்லுபடியாகாது என்றும் பல வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இப்பொழுதைய 'இனாம்தார்' தீர்ப்பில் நீதிபதிகள் எங்கெல்லாம் 'பாய்' தீர்ப்பை 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பு தாண்டியுள்ளதோ அவற்றை மட்டும் நீக்கியுள்ளனர். அதைத் தாண்டி, சுயநிதிக் கல்லூரிகளில் - முக்கியமாக சுயநிதி பொறியியல்/மருத்துவக் கல்லூரிகளில் - அரசு தனது மாணவர் சேர்க்கைக்கான கொள்கைகளைத் திணிக்க முடியுமா, முடியாதா என்ற கேள்விக்கும் விடை கொடுத்துள்ளனர்.
இந்த ஏழு நீதிபதி பெஞ்ச் தீர்ப்பில், 'பாய்' தீர்ப்பில் சில முரண்பாடுகள் உள்ளதாகச் சொன்ன நீதிபதிகள், அதைத் தங்களால் நிவர்த்தி செய்யமுடியாது என்றும் பதினொன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய பெஞ்சால் மட்டுமே 'பாய்' தீர்ப்பின் சில குறைபாடுகளைச் சரிசெய்யமுடியும் என்றும் சொல்லியுள்ளனர்.
'பாய்' தீர்ப்புக்குப் பிறகு வந்த 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில்தான் நீதிபதிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு கமிட்டிகள் உருவாக்கப்படவேண்டும் (தாற்காலிகமாகவாவது), ஒவ்வொரு கமிட்டியும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இயங்கும், அதில் இன்னமும் நான்கு உறுப்பினர்கள் இருப்பார்கள், அவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கையையும் கல்விக் கட்டணத்தையும் கட்டுப்படுத்துவார்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் சுயநிதிக் கல்லூரிகளில் இருக்கும் இடங்களை அரசும் கல்லூரி நிர்வாகமும் பங்குபோட்டுக்கொள்ளும் என்றெல்லாம் சில வழிமுறைகளை வழங்கியிருந்தனர்.
-*-
தற்போதைய வழக்கில் நீதிபதிகள் நான்கு கேள்விகளை முன்வைத்து அதற்கான விடைகளைப் பெற முனைகின்றனர். அப்படி விடைகளைக் காண, தங்களுக்கு மேலாக அவர்கள் இரண்டு விஷயங்களைத்தான் வைக்கின்றனர்: ஒன்று - அரசியலமைப்புச் சட்டம், மற்றது பதினொரு நீதிபதிகள் அமர்ந்து கொடுத்த 'பாய்' தீர்ப்பு. இப்பொழுது கொடுத்துள்ள தீர்ப்பு மேற்படி இரண்டையும் மீறக்கூடாது என்னும் கட்டுப்பாடுகள் நீதிபதிகளுக்கு உள்ளது.
மேலும் இந்த வழக்கில்தான் முதன்முறையாக மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டு முறையை சுயநிதிக் கல்லூரிகள் மீது திணிக்கமுடியுமா என்ற கேள்வி எழும்புகிறது. பாய் வழக்கிலும் இஸ்லாமிய அமைப்பு வழக்கிலும் இந்தக் கேள்வி வெளிப்படையாக எழும்பவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
என்னென்ன கேள்விகளை நீதிபதிகள் எடுத்துக்கொள்கிறார்கள்?
1. சுயநிதிக் கல்லூரிகளில் (சிறுபான்மைக் கல்லூரிகளோ அல்லது பெரும்பான்மையினர் நடத்தும் கல்லூரிகளோ) எந்த அளவுக்கு அரசு மாணவர் சேர்க்கையைக் கட்டுப்படுத்த முடியும்? எந்த அளவுக்கு அரசு தனக்கென சில இடங்களை எடுத்துக்கொள்ளமுடியும்? எந்த அளவுக்கு தன்னுடைய இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மேற்படிக் கல்லூரிகள் மீது திணிக்கமுடியும்? (மூன்றுமே சற்றே விலகிய வெவ்வேறு கேள்விகள்.)
2. சுயநிதிக் கல்லூரிகள் (சிறுபான்மை அல்லது பெரும்பான்மை) தங்கள் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விதிகளைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியுமா? அல்லது 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பின்படி கட்டாயமாக அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு அல்லது சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்புகள் நடத்தும் நுழைவுத்தேர்வு என்று இரண்டில் ஏதோ ஒன்றின் வழியாக மட்டும்தான் மாணவர்களைத் தேர்வு செய்யமுடியுமா? இது எந்தவிதத்தில் 'பாய்' தீர்ப்பின்படி செல்லுபடியாகும்?
3. 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பு, சுயநிதிக் கல்லூரிகள் எத்தனை கட்டணம் வசூலிக்கலாம் என்பதற்காகச் சில வரைமுறைகளைக் கொடுத்தது. அந்த பெஞ்சுக்கு அப்படியான வரைமுறைகளைக் கொடுக்கக்கூடிய சக்தி உண்டா?
4. 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பின்படி, மத்திய, மாநிலச் சட்டங்கள் இயற்றப்படும்வரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு கமிட்டிகளை ஏற்படுத்தி அதில் ஒன்று மாணவர் சேர்க்கையையும் மற்றொன்று கட்டணத்தையும் கட்டுப்படுத்தும் என்று சொன்னது செல்லுபடியாகுமா?
வழக்கு நடக்கும்போது பல்வேறு மாநிலங்களில் இருக்கும் சுயநிதிக் கல்லூரிகளின் அமைப்புகளுக்காக ஹரீஷ் சால்வே, அஷோக் தேசாய், ஃபலி நாரிமன், ராஜீவ் தவான், U.U. லலித் ஆகியோர் வாதாடுகின்றனர். கேரள மாநில அரசுக்காக K.K.வேணுகோபால், கர்நாடக அரசுக்காக T.R.அந்தயார்ஜுனா, தமிழ் நாடு அரசுக்காக P.P.ராவ் ஆகியோர் வாதாடுகின்றனர்.
இறுதியில் தீர்ப்பில் மேற்படி கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்கள்.
1) (சிறுபான்மை/பெரும்பான்மை) சுயநிதிக் கல்லூரிகளில் தங்களுக்கென சில இடங்களை ஒதுக்கவேண்டும் என்று அரசுகள் கேட்பது நியாயமல்ல. அதைப்போலவே சுயநிதிக் கல்லூரி நிர்வாகங்கள் இப்படித்தான், இவர்களைத்தான் கல்லூரியில் சேர்க்கவேண்டும் என்று வரைமுறைகளைக் கொடுப்பதற்கும் மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது - ஆனால் சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நியாயமாக, வெளிப்படையாக, மெரிட் முறையில் இருக்கவேண்டும்.
இந்தத் தீர்ப்பைக் கொடுக்கும்போது இதற்கு முன் வந்துள்ள 'பாய்' தீர்ப்பிலும் அதற்கு முன் வெளியான 'கேரளா கல்வி மசோதா' மீதான தீர்ப்பிலும் எந்த இடத்திலும் மாநில அரசுகள் சுயநிதிக் கல்லூரிகளின் சேர்க்கை முறையைக் கட்டுப்படுத்தலாம் என்று சொல்லப்படவில்லை என்பதைக் குறிப்பிடுகிறார்கள். அதைப்போலவே 'பாய்' தீர்ப்பில் எங்குமே அரசுகள் சுயநிதிக் கல்லூரிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள இடங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சொல்லப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள்.
எனவே 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில் சுயநிதிக் கல்லூரிகளின் இடங்களை அரசுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்குமாகப் பங்குபோட்டுக்கொள்ளலாம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது, அது 'பாய்' தீர்ப்புக்கு எதிரானது என்றும் முடிவெடுக்கிறார்கள்.
2) ஒற்றைச் சாளர முறைப்படி சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செய்வது நலம். இது மாணவர்களின் வசதி கருதி செய்யப்படுகிறது. இது முறையான சட்டமாக்கப்படாத வரையில், 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பில் உருவாக்கப்பட்ட கமிட்டிகள் மூலம் மாணவர் சேர்க்கையைக் கட்டுப்படுத்தலாம் - 'மெரிட்' பாதிக்கப்படக்கூடாது என்பதால்.
3) எல்லாக் கல்லூரிகளும் தங்களுக்கான கட்டணங்களைத் தனித்தனியாகத் தீர்மானிக்கலாம். அதாவது மாநில அரசு இதுதான் கட்டணம் என்று தனது கருத்தைத் திணிக்கமுடியாது. ஆனால் கல்லூரிகள் சுட்டும் கட்டணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை. அதைக் கட்டுப்படுத்தலாம் (அதாவது இந்தக் கட்டணம் நியாயமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது). நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடிக்கக் கூடாது.
4) 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பின்படி உருவாக்கப்பட்ட கமிட்டிகள் மாணவர் சேர்க்கையையோ கட்டணத்தையோ கட்டுப்படுத்துவது தவறாகாது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகிள் 30(1), ஆர்டிகிள் 19(1)(g) ஆகியவற்றுக்கு எதிரானதல்ல. 'பாய்' தீர்ப்புக்கும் எதிரானதல்ல. ஆனால் இதுபோன்ற கமிட்டிகளை அமைப்பது தாற்காலிகமான முடிவாகத்தான் இருக்கவேண்டும். நிரந்தரமான முறையை அந்தந்த மாநில அரசுகள் ஏற்படுத்தும் வரையில் வேறு வழியின்றி நீதிமன்றங்கள் தாற்காலிக நடைமுறையை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.
ஆனால் இப்படி ஏற்படுத்தப்பட்ட கமிட்டிகள் தமது சக்திக்கு மீறி அடாவடித்தனமாக நடந்துகொண்டால் அவற்றை நீதிமன்றங்களில் எதிர்க்க முடியும்.
ஆக, 'இஸ்லாமிய அமைப்பு' தீர்ப்பின்படி உருவான கமிட்டிகள் இருக்கலாம். ஆனால் 1)ல் சொன்னபடி மாநில அரசுகள் சுயநிதிக் கல்லூரிகளில் தமக்கென சில இடங்களைத் தக்கவைத்துக்கொள்வதும் தம்முடைய இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சுயநிதிக் கல்லூரிகள் மீது விதிப்பதும் ஏற்கக் கூடியதல்ல, அவை மட்டும் ரத்து செய்யப்படுகிறன.
-*-
எதிர்பார்த்தபடியே பல்வேறு அரசியல் கட்சிக்களும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இதைச் சரிக்கட்டும் விதமாக சட்டங்கள் இயற்றுவோம் என்றும் சத்தம் போடுகின்றனர். இது... சற்றும் யோசிக்காமல் சொல்லப்படுவது. நினைத்தமாதிரி சட்டமன்றங்களிலோ நாடாளுமன்றத்திலோ சட்டங்கள் இயற்றினால், அவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால் அவற்றை மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொண்டுவந்து ரத்து செய்யமுடியும்.
இந்த விஷயத்தை நாம் முதலில் தமிழகத்தின் கோணத்தில் மட்டும் பார்ப்போம்.
தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று பிராமணர்களோ, பிள்ளைமார்களோ அல்லது பிற FC ஜாதியினரோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை.
தமிழகத்தில் மிகப்பெரும்பான்மையான சுயநிதி பொறியியல் கல்லூரிகளை நடத்துவது FC ஜாதியில்லாத BC, MBC ஜாதியினர் அல்லது பிற மதத்தவர்கள்.
தமிழகத்தில் ஒரு கட்சி விடாது (பாஜக வாயைத் திறக்கவில்லை) அனைவருமே இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்றுதான் கூறுகின்றனர்.
ஜேப்பியார் போன்ற அரசியல்வாதி + பல சுயநிதிக் கல்லூரிகளின் சொந்தக்காரர் + சுயநிதிக் கல்லூரிகளின் சங்கத் தலைவர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால் அரசு தங்களது செயல்பாட்டில் தலையிடுவதை விரும்பவில்லை. அவ்வளவே. ஜேப்பியார் இந்தத் தீர்ப்பைப் பற்றி தினத்தந்தியில் சொல்லியிருந்த கருத்து: "நாங்கள் அரசுக்கு குறிப்பிட்ட இடங்களைத் தரத் தயாராக இருக்கிறோம், ஆனால் அந்த இடங்கள் முழுமையாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றால் அரசு அந்த இடங்களுக்கான கட்டணத்தை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்."
ஆக ஜேப்பியாருக்கும் பிற சுயநிதிக் கல்லூரி உரிமையாளர்களுக்கும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமூக நீதிக்கு எதிராகச் செல்ல விருப்பமில்லை. காசு கையில் வந்துவிட்டால்.
அதேபோல தமிழகத்தின் டெமொகிராபியைப் பார்க்கும்போது பிராமணர்களோ, பிற FC ஜாதியினரோ மிகக் குறைவு. அவர்களை மட்டும் வைத்துக்கொண்டு எந்தப் பொறியியல் கல்லூரியும் காலம் தள்ள முடியாது. இந்த வருடம் 25,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன, யாரும் எடுத்துக்கொள்ளாமல். அதனால் பார்ப்பனரோ, செட்டியாரோ, பள்ளரோ, அருந்ததியாரோ - யார் வேண்டுமானாலும் சீட்டை எடுத்துக்கொள்ளலாம் - காசைக் கொடுத்துவிட்டு என்றுதான் அனைத்து சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும் சொல்கின்றன.
அவர்களைப் பொறுத்தவரையில் இடங்கள் முழுவதுமாக நிரப்பப்படவேண்டும். ஆனால் தமிழக அரசின் நுழைவுத் தேர்வை அவர்கள் பொருட்படுத்தப் போவதில்லை. அவர்களே ஒரு நுழைவுத் தேர்வை நடத்துவார்கள் (அல்லது நடத்தாமலும் போகலாம்). தமிழக அரசு வேண்டுமானால் தனது கைக்குள் இருக்கும் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வை நடத்தலாம் அல்லது நடத்தாமல் போகலாம். சொல்லப்போனால் அரசின் 60% மதிப்பெண்கள் என்னும் கட்டுப்பாடு தமிழக சுயநிதிக் கல்லூரிகளுக்குப் பிரச்னையாக உள்ளது. மேற்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் +2வில் பாஸானால் போதும், பொறியியல் கல்லூரிகளில் சேரலாம் என்றாகிறது. இதனால் வரும் வருடங்களில் அதிகமான பொறியியல் இடங்கள் எடுத்துக்கொள்ளப்படலாம்.
சரி, தமிழகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்கு மேற்படி தீர்ப்பினால் ஏதேனும் நஷ்டமா? அப்படியொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. SFI, DYFI போன்ற சங்கங்கள் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தன. சில மாணவர் தலைவர்கள் இந்தத் தீர்ப்பினால் ஏழை, நடுத்தர(!) மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் என்று சொன்னார். எப்படி என்று எனக்குப் புரியவில்லை. யாராவது விளக்கிச் சொன்னால் புரிந்துகொள்வேன். நீ ஏழையோ, நடுத்தரமோ, என்ன ஜாதியோ முக்கியமில்லை. சுயநிதிக் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் கையில் டப்பு வைத்திருந்தால் சீட்டு. அவ்வளவுதான். அதுவும் FC ஜாதியில்லாதவர்கள் நடத்தும் அத்தனை கல்லூரிகளிலும் தங்களுக்கு ஏதோவொரு வகையில் கெடுதல் வரப்போகிறது என்று தமிழத்தில் அனைவரும் ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று புரியவில்லை.
-*-
தமிழகம் தாண்டிப் பார்த்தால், பல மாநிலங்களிலும் தமிழகம் அளவுக்கு பொறியியல் இடங்கள் இல்லை. அங்கு நிறையப் போட்டிகள் உள்ளன. அதனால் சில குழப்பங்கள் இருக்கும். ஒவ்வொரு மாநிலமும் தனக்கு ஏற்ப சில சட்டங்களைக் கொண்டுவந்தாகவேண்டும். அதிலும் சில மாநிலங்களில் அப்படிக் கொண்டுவரும் சட்டங்கள் உச்ச நீதிமன்றத்தில் தீவிரமாக எதிர்க்கப்படும். முக்கியமான வழக்குகள் அனைத்தையும் கவனித்தால் அவை கர்நாடக அரசை எதிர்த்து, மஹாராஷ்டிரா அரசை எதிர்த்து என்று எழுப்பப்பட்டவையே.
சரி, ஒட்டுமொத்தமாக இந்தப் பிரச்னையே எழாதவகையில் என்ன செய்யலாம்?
ஜெயலலிதா இரண்டு முட்டாள்தனமான யோசனைகளை முன்வைக்கிறார். ஒன்று: கல்வியை State listக்கு மாற்றுங்கள், Concurrent listஇலிருந்து எடுத்துவிடுங்கள். இது அபத்தமானது. இது ஏற்பட்டால் AICTE, UGC முதல் MCI போன்ற பல்வேறு அமைப்புகள் இருப்பதைத் தகர்க்கும். IIT, IISc, IIM இருக்க முடியாது. இன்னமும் பல குழப்பங்களை விளைவிக்கும். உயர் கல்வியில் மத்திய அரசின் பங்கு முக்கியமானது. மாநிலங்களுக்கு என்று கல்வியை முழுமையாக விட்டுக்கொடுக்க முடியாது. தமிழக அரசையே உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் கடந்த 50 வருடங்களில் உருப்படியான எந்த உயர் கல்வி அமைப்பையும் இந்த அரசு ஏற்படுத்தவில்லை.
இரண்டாவது: தமிழகத்தில் இருக்கும் தனியார் கல்லூரிகளை அரசே எடுத்துக்கொள்ள வேண்டிவரும் என்று சூளுரை. இது படு அபத்தமானது. 'இனாம்தார்' தீர்ப்பில் வரிக்கு வரி கல்விக் கூடங்களை தேசியமயமாக்க முடியாது என்று சொல்கின்றனர் நீதிபதிகள். ஆர்ட்டிகிள் 19(1) படி யார் வேண்டுமானாலும் கல்விக்கூடங்களை அமைக்கமுடியும். ஆர்ட்டிகிள் 30(1) படி சிறுபான்மையினர் தமக்கு வேண்டிய கல்விக்கூடங்களை அமைத்துக்கொள்ள முடியும். ஆக அரசியலமைப்புச் சட்டங்களை மீறினால் ஒழிய ஜெயலலிதாவின் நினைப்பு சாத்தியமல்ல. எதையாவது உளறி, அதன்மூலம் தான்தான் திமுகவை விட சமூக நீதியில் அதிகம் நாட்டம் வைத்திருப்பதாகக் காண்பிக்கவேண்டும் இவருக்கு.
-*-
முதலில் எந்தெந்த மாநிலங்களில் பிரச்னைகள் இல்லையோ அங்கெல்லாம் மாநில அரசுகள் சுயநிதிக் கல்லுரிகளுடன் கலந்துபேசி (நிச்சயமாக தமிழகத்தில் இதச் செய்யமுடியும்), ஓர் ஒப்பந்தம் மூலமாக இட ஒதுக்கீட்டைக் கொண்டுவரமுடியும். தமிழகத்தில் பிரச்னை இத்துடன் எளிதாக முடிந்துவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
ஆனால் இந்திய அளவில் சட்டங்களை இயற்றுவதுதான் பல மாநிலங்களில் ஒத்துவரும். மத்தியில் உள்ள அரசு எல்லா மாநிலங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய அளவில் சட்டம் இயற்றமுடியுமா, அதே சமயம் அந்தச் சட்டம் ஏற்கெனவே உள்ள அரசியலமைப்புச் சட்டத்துடன் ஒத்துவரக்கூடியதாக இருக்குமா என்று கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். Knee-jerk reaction இல்லாமல் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கல்வியாண்டுக்குள் சட்டங்களைக் கொண்டுவர ஆவண செய்ய வேண்டும்.
இந்திய அளவில், தனியார் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் - முக்கியமாக பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் - இட இதுக்கீடு அவசியமானது என்பதே என் கருத்து.
ஆனால் மேற்படித் தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதிகள் உள்ளூர ஜாதிவெறி பிடித்தவர்கள் என்று அர்த்தம் கற்பிப்பது நியாயமற்ற செயல்.