Friday, June 30, 2006

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006

இன்று நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. ஆண்டுதோறும் தமிழகத்தில் பல இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன மூன்று. ஒன்று சென்னையில் நடக்கும் மஹா கண்காட்சி - ஜனவரி மாதம். அடுத்தது நெய்வேலியில் ஜூன் இறுதி, ஜூலை தொடக்கத்தில் நடக்கும் கண்காட்சி. அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் நடக்கும் கண்காட்சி. ஈரோடு கண்காட்சி தொடங்கியதே கடந்த வருடம்தான்.

நெய்வேலியில் இந்த முறை கண்காட்சி எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்லமுடியவில்லை. திங்கள் (4 ஜூலை) முதல் நிலக்கரி நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு என்.எல்.சி பங்குகளில் 10% பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம்.

மத்திய அரசு பின்வாங்கப்போவதில்லை என்று சொல்லியுள்ளது. ஆனால் திமுக முதலான தோழமைக் கட்சிகளும் இந்த விற்பனையை எதிர்க்கின்றன. திமுக யூனியன்தான் என்.எல்.சியில் பெரிய யூனியன்.

வேலை நிறுத்தம் காரணமாக புத்தகக் கண்காட்சியை மாற்றவேண்டியிருக்கலாமோ என்ற எண்ணம் கடைசிவரை இருந்து, பின்னர் நடத்திவிடலாம் என்று ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கிழக்கு பதிப்பகம், கண்காட்சி வளாக முகப்பு வளைவை ஸ்பான்சர் செய்துள்ளது.

கிழக்கு விற்பனை ஸ்டால்கள் எண் 114-115 ஆகிய இடங்களிலும் சிறப்பு ஸ்டால்கள் (வங்கி, மின்சார வசதி செய்வோர் ஆகியோர் இருக்கும் பகுதி) வரிசையில் மற்றுமோர் இடத்திலும் உள்ளது.

நான் 8-9 ஜூலை சமயத்தில் நெய்வேலி செல்வேன். திரும்பி வந்தபின் கண்காட்சி பற்றிய பதிவை எழுதுகிறேன்.

சென்ற இரண்டு வருடப் பதிவுகள்:

மாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு
நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005

புலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை

தினமணி செய்தி

தமிழக அரசு 'புலவர் குழந்தை' எழுதிய நூல்களை தேசிய உடைமையாக்கியுள்ளது. அவரது வாரிசுகளுக்கு ரூபாய் பத்து லட்சம் வழங்கியுள்ளது.

இனி யார்வேண்டுமானாலும் அவரது இராவண காவியம், திருக்குறள்/தொல்காப்பியம் உரைகள் போன்றவற்றை ராயல்டி ஏதும் வழங்காமல் பதிப்பிக்கலாம்.

Saturday, June 24, 2006

கணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக

கணக்கு வாத்தியார் பி.கே.ஸ்ரீநிவாசன் (பி.கே.எஸ்) என்று ஒருவர் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அவர் இறந்தபோது நான் எழுதியிருந்த பதிவு இங்கே.

அவரது முதலாம் ஆண்டு நினைவையொட்டி அவரது குடும்பத்தினர் நேற்று ஒரு நிகழ்ச்சியைத் நடத்தினர். அதில் பி.கே.எஸ் பற்றிய ஒரு குறும்படத்தைத் திரையிட்டனர். தொடர்ந்து பி.கே.எஸ் பற்றி பலர் பேசினர். இந்த நிகழ்ச்சி பற்றிய தி ஹிந்து செய்தி இங்கே.

பி.கே.எஸ் என்ன சாதித்துள்ளார் என்பதை இங்கே சுருக்கமாகக் கொடுக்கிறேன்:

1. பி.கே.எஸ் Association of Mathematics Teachers of India (AMTI) என்ற அமைப்பு உருவாக முக்கியமான காரணியாக இருந்திருக்கிறார். இந்த அமைப்பின்மூலம் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன்மூலம் பள்ளிகளில் கணிதம் பயிற்றுவிப்பதை 'ஜாலியான' ஒரு நிகழ்வாக மாற்றவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். நான் அவரது ஒரு பயிற்சி வகுப்புக்குச் சென்றுள்ளேன். ஆனால் பயிற்சியில் கலந்துகொண்ட கணித ஆசிரியர்கள் அவ்வளவு சுவாரசியம் காட்டியதுபோலத் தோன்றவில்லை.

இன்று ஆத்மராமன் பி.கே.எஸ் செய்ததைத் தொடர்கிறார். ஆத்மராமன் நேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அற்புதமாகப் பேசினார்.

2. சிறுவர்களுக்காக பி.கே.எஸ் Junior Mathematician என்ற ஜர்னலைத் தொடங்கி நடத்தி வந்தார். (நான் இந்த ஜர்னலை இதுவரை பார்த்ததில்லை!). பி.கே.எஸ்ஸுக்குப் பிறகு இப்பொழுது இந்த ஜர்னலை நடத்திவருவது N.பாலசுப்ரமணியன். இவர் வேறு யாருமல்ல! ராயர் காபி கிளப்பில் 'நகுபோலியன்' என்ற பெயரில் புகுந்து விளையாடும் ஹ்யூமரிஸ்ட்! இந்த ஜர்னலின் பழைய இதழ்களைக் கொஞ்சம் வாங்கிப் படிக்க வேண்டும்.

நகுபோலியனும் நேற்று நன்றாகப் பேசினார்.

3. பி.கே.எஸ் சிறுவர்களுக்கு எளிமையாக கணக்கு சொல்லிக்கொடுப்பது பற்றி சில வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறார். இந்த வழிமுறைகளைத் தொகுத்து சில புத்தகங்களை எழுதியுள்ளார். இணையத்தில் தேடியதில் இந்தத் தளத்திலிருந்து சில புத்தகங்களின் முழு PDF வடிவம் கிடைக்கிறது. அவை கீழே:

Romping in Numberland
Number Fun with a Calendar
Math Club Activities

அவர் இறக்கும் தருவாயில் எழுதிவந்த ஒரு புத்தகத்தை நேற்று வெளியிட்டனர். அவ்வை நடராஜன் பேசும்போது அந்தப் புத்தகத்தின் தலைப்பு 'கனிந்த வயதினருக்குக் களிப்பூட்டும் கணக்கு' என்று சொன்னார். 'தி ஹிந்து'வில் 'Math Fun For Senior Citizens' என்று போட்டிருந்தார்கள். அதனால் புத்தகம் தமிழிலா ஆங்கிலத்திலா என்று தெரியவில்லை.

4. ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் எழுத்துகளை ஒழுங்குபடுத்தி சேகரித்து இரண்டு வால்யூம்களை உருவாக்கினார். அவை

(அ) Ramanujan: Letters and Reminiscences
(ஆ) Ramanujan: an Inspiration

இவையிரண்டும்தான் ராமானுஜத்தின் கணிதங்களை வைத்து உருவாக்கப்பட்ட முதல் இரண்டு புத்தகங்கள். அதன்பின்னர்தான் Bruce C. Berndt கொண்டுவந்துள்ள ஐந்து வால்யூம் புத்தகங்கள் வெளிவந்தன. இன்று உலகெங்கும் ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகளை வைத்து Number Theory ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

5. சென்னை ராயபுரத்தில் உள்ள ராமானுஜன் கண்காட்சியகம். இதைப்பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

சிட்டி சுந்தரராஜன் மறைவு

மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவரான சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் நேற்று தன் 96வது வயதில் காலமானார்.

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுத்துப் புலமை வாய்ந்த சிட்டி தி.ஜானகிராமனுடன் சேர்ந்து 'நடந்தாய் வாழி காவேரி' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். காவிரி ஆற்றை அதன் ஊற்றிலிருந்து பின்பற்றி கடலில் கலக்கும்வரை தொடர்வார்கள் இருவரும்.

சிட்டியின் வாழ்க்கை வரலாற்றை நா.கண்ணனின் தூண்டுதலில்பேரில் 'கடலோடி' நரசய்யா தொடராக வலைப்பதிவில் எழுதத் தொடங்கினார். ஆனால் 27 April 2004 அன்றோடு அது நின்றுவிட்டது.

மூத்த தமிழ் எழுத்தாளருக்கு நம் அஞ்சலிகள்.

தி ஹிந்து செய்தி

[மேற்கண்ட படம் சிட்டியின் 94வது வயதில் நான் எடுத்தது.]

Friday, June 23, 2006

விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா

இன்றைய தினமணியில் இருந்து:

"தேர்தல் வாக்குறுதிப்படி அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்காக வங்கிகளுக்கு மாநில அரசு இன்னமும் பணம் செலுத்தவில்லை. ரூ. 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என்று அறிவித்தார்கள். அதை வங்கிகளுக்குச் செலுத்தினால்தானே புதிய கடன்கள் கொடுக்க முடியும்? சட்டப் பேரவையில் இது பற்றிக் கேட்டபோது, கடன் தொகையைச் செலுத்த ஆற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக ரூ. 106 கோடிதான் செலுத்தி உள்ளனர். ஆனால் குறைந்தது ரூ. 1,000 கோடி அல்லது ரூ. 1,200 கோடி தேவை" என்கிறார் ஜெயலலிதா.

முந்தைய பதிவு: கடன் தள்ளுபடி - தவறான செயல்

சிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்

புதன் அன்று National Folklore Support Centre, நுங்கம்பாக்கத்தில் ஜானகி விஸ்வநாதனின் 'தீக்ஷிதர்கள்' விவரணப்படம் காண்பிக்கப்பட்டது. இது ஆறு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம்.

தீக்ஷிதர்கள் ஒரு தனி இனக்குழுவாகச் செயல்படுகிறார்கள். தில்லை நடராஜர் சிதம்பரம் வந்தபோது அவருடன் கூடவே வந்த 3,000 அந்தணர்கள் குடும்பத்தின் இன்றைய வழித்தோன்றல்கள் என்று நம்புகிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயில் இவர்களுடைய தனிச்சொத்து என்று நினைக்கிறார்கள். தீக்ஷிதர்களைத் தவிர்த்து வேறு யாரும் இந்தக் கோயிலின் எந்த வேலையையும் செய்யமுடியாது - அர்ச்சனை மட்டுமல்ல, சமையல்முதல் நிர்வாகம்வரை அனைத்தையும் இவர்களே செய்கிறார்கள்.

இவர்கள் கடுமையான அகமண முறையைப் பின்பற்றுகிறவர்கள். தம் குடும்பங்களுக்குள்ளாக மட்டுமே மணம் செய்துகொள்கிறார்கள். இன்று எஞ்சியிருக்கும் தீக்ஷிதர் குடும்பங்கள் 320தாம். அவற்றுக்குள்ளாக மீண்டும் மீண்டும் மணமுடிப்பதால் பிறக்கும் பல குழந்தைகள் ஜெனெடிக் பிரச்னைகளுடன் பிறக்கின்றன. விகாரமான முகம், மூளைக்குறைபாடுகள், பிற அவயக் குறைபாடுகள் ஆகியவை இம்மாதிரியான திருமணங்கள் வழியாக ஏற்படுகின்றன என்று அறிவியல்பூர்வமாகத் தெரிந்தாலும் இன்றும் இந்தக் குடும்பங்களிடையே இந்த வகைத் திருமணங்கள் தொடர்கின்றன.

அடுத்ததாக குழந்தைத் திருமணங்கள். தீக்ஷிதர்கள் குடும்பங்களில் இன்றும்கூட 12 வயதுக்குள் திருமணம் முடித்துவிடுகிறார்கள். தில்லை நடராஜர் கோயிலில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுவதில்லை. வைதீக முறைப்படி நடக்கிறது. வைதீக முறைப்படி மணமான ஆண்தான் வழிபாடு செய்யத் தகுதிபெற்றவன். தீக்ஷிதர்கள் பொதுவாக வேறு எந்த வேலையையும் செய்வதில்லை என்பதால் சிறுவயது முதற்கொண்டே வருமானத்தை மனத்தில் வைத்து சிறுவர் சிறுமிகளுக்குத் திருமணம் செய்துவைத்து விடுகிறார்கள்.

பெண் குழந்தைகளுக்கு திருமணத்துக்குப்பிறகு படிப்பு சொல்லித்தருவதில்லை. ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் வெளியே சென்று படித்தால் "கலப்பு" ஏற்பட்டுவிடலாம் என்ற பயம். சிறுவயதுத் திருமணம் என்பதால் சிறுவயது முதலே கருவுறுதல், குழந்தை பிறப்பு, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன. விதவையான பெண்களுக்கு மறுமணத்தை இந்த இனக்குழு அனுமதிப்பதில்லை.

மணமான பெண்கள் வெளியே சென்று வேலைபார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விவரணப்படம் எடுத்த சமயத்தில் ஒரேயொரு பெண் மட்டுமே மணமாகி வேலை செய்துகொண்டிருந்தார்.

பெண்ணுரிமை என்பது இந்த இனக்குழுவில் எள்ளளவும் இல்லை. படத்தில் வந்த பெண் ஒருவர் சொல்வதுபோல "அவா என்ன சொல்றாளோ அதுதான். அவா யெஸ்னா யெஸ், நோன்னா நோதான்".

சமீப காலங்களில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவையும் ஆண்களுக்கு மட்டும் சாதகமானவை. உதாரணத்துக்கு ஓர் ஆண் தன் 'அர்ச்சனை' முறையை விட்டுக்கொடுத்து வெளியே சென்று படித்து அரசாங்க வேலை செய்ய விரும்பினால் தன் முறையை தன் அண்ணன், தம்பி என்று குடும்பத்துக்குள்ளாக மாற்றிக்கொடுக்கலாமாம். படம் திரையிடலுக்கு சென்னையில் இருந்த அரசாங்க வேலை பார்க்கும் தீக்ஷிதர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருந்தார்.

தீக்ஷிதர்கள் தனித்துத் தெரிவதற்காக தலைமுடியைச் சுருட்டி முன்பக்கம் கொண்டை மாதிரி வைத்துக்கொள்கின்றனர். கோயில் நடைமுறைகளை ஒரு பொதுக்குழு, செயல்குழு மூலம் செயல்படுத்துகின்றனர். எந்த வயதுடையவராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரு வாக்கு உண்டு. தீக்ஷிதர்களுக்குள் நிறைய வேறுபாடுகள் சமீபத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன. சிலர் பாரம்பரியப் பழக்கவழக்கத்தைத் தொடர விரும்புபவர்களாகவும் வேறு சிலர் முன்னேறும் நாகரிகத்தை விரும்புபவர்களாகவும் இருப்பதால் ஓயாத டென்ஷன்.

உமாபதி சிவாச்சாரியார் எனும் தீக்ஷிதர் திருஞானசம்பந்தருடன் சேர்ந்து உணவு உண்டதால் குழுவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டாராம். பின்னர் நடராஜர் கேட்டுக்கொண்டதன்பேரில் அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டாலும் அவருக்கு உரிய மரியாதையைச் செய்ய பிற தீக்ஷிதர்கள் தவறிவிட்டதால் கோபம் கொண்ட உமாபதி சிவாச்சாரியார் அவர்களை சபித்துவிட்டாராம். அதன் விளைவாகவே தீக்ஷிதர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று குறைபட்டார் ஒரு தீக்ஷிதர்.

தமிழக அரசு தில்லை கோயில் நிர்வாகத்தைத் தன் கையில் எடுக்க முயற்சிகள் செய்துள்ளது, ஆனால் தீக்ஷிதர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதனை எதிர்த்துள்ளனர். இதன் இன்றைய நிலை என்ன என்று தெரியவில்லை என்றார் ஜானகி விஸ்வநாதன்.

தீக்ஷிதர்கள் அனைவரும் ஒரே பொருளாதார நிலையில் இல்லை. பணம் படைத்த பலர், ஆதீனங்கள் ஆகியவை கொடுக்கும் கட்டளைகளை வைத்தும் கோயிலில் சேரும் பணத்தை வைத்தும்தான் இவர்கள் வாழவேண்டும். ஆனால் சில கட்டளைகள் அதிகப் பணத்தைக் கொடுப்பதால் அந்தக் குடும்பங்கள் சற்றே வசதி படைத்தவையாகவும் பெரும்பாலானவை ஏழைக்குடும்பங்களாகவுமே உள்ளன.

====

ஜானகி விஸ்வநாதனின் விவரணப்படம் தீக்ஷிதர் இனக்குழுவின் வாழ்க்கையை முழுமையாகவே படம் பிடித்துள்ளது. வழிபாட்டு முறைகள், கோயில் என்று நேரத்தை வீணாக்காமல் வாழ்க்கை முறை, குடும்பம், பெண்களின் நிலை, ஆண்களின் நிலை என்று சமுதாயக் கண்ணோட்டத்தில் அவர்களை எடுத்துக்காட்டுகிறது.

தீக்ஷிதர்கள் சமுதாயம் பழமையில் தோய்ந்து பிற்போக்காக உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. சிறுவயதுத் திருமணங்கள், பெண்களுக்குக் கல்வி உரிமை மறுப்பு, அடிப்படை உரிமைகள் மறுப்பு, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் குறுகிய அகமண முறை ஆகியவை இன்னமும் தொடர்கின்றன என்பது ஆச்சரியமாக உள்ளது.

இத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படையானது சிதம்பரம் கோயிலின் ownership. இந்தக் கோயில்மீதான உரிமையை நிலைநாட்டவும் தன் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்கவுமே தீக்ஷிதர் ஆண்கள் இத்தனை அட்டூழியங்களையும் செய்கிறார்கள். இதற்கு சாத்திரங்களும் என்றோ நடந்ததாகச் சொல்லப்படும் புரட்டு புராணங்களும் துணைபோகின்றன. கிருத யுகத்தில் 3,000 குடும்பங்களும் திரேதா யுகத்தில் 2,000 குடும்பங்களும் துவாபர யுகத்தில் 1,000 குடும்பங்களும் பின்னர் கலியுகத்தில் 300 குடும்பங்களும் மட்டும்தான் இருக்கும் என்று ஏதோ சுலோகத்தில் சொல்லியிருப்பதாக மேற்கோள் காட்டுகிறார் ஒரு தீக்ஷிதர்.

சிதம்பரம் கோயில் பராமரிப்புக்கு அரசு எந்தப் பணமும் தருவதில்லை. அதனால் அதன் பல பகுதிகள் சிதிலமடைந்துள்ளன. முதலில் தமிழக அரசு சிதம்பரம் கோயிலை தன் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அங்கும் யாரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிலைநாட்டவேண்டும்.

குழந்தைத் திருமணத்தைக் கட்டாயமாகத் தடைசெய்யவேண்டும். மீறி அதைச் செய்பவர்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனைகள் கொடுக்கவேண்டும். பெண்கள் அனைவருக்கும் கட்டாயமான பள்ளிக்கல்வி அளிக்கவும் அதனை மறுக்கும் பெற்றோர்களுக்கு சட்டபூர்வமான தண்டனை கொடுக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.

குறுகிய அகமண முறை எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்பொழுதைய தீக்ஷிதர்கள் சமுதாயம் அறிந்துகொள்ளாது. ஏனெனில் அவர்களது படிப்பறிவு அவ்வளவு மோசமாக உள்ளது. சாஸ்திரம், சம்பிரதாயம் என்று உளறிக்கொண்டு ஆண்கள் தம் விருப்பப்படி நடந்துகொள்கிறார்கள். அந்தக் குடும்பங்களுக்கு உள்ளாகவே சீர்திருத்தவாதிகள் தோன்றவேண்டும்.

படம் © Tamil Nadu Tourism

Wednesday, June 21, 2006

மின்சார இருசக்கர வண்டி

பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளிலிருந்து

செய்தியில் சில முக்கியமான தகவல்கள் இல்லை. மின்சார பேட்டரியால் இயங்கும் இருசக்கர் வண்டியை ஏஸ் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாம். 60 கிலோ எடையுள்ள இந்த வண்டியில் கியர் இல்லை, பெல்ட் இல்லை, பல்சக்கரங்கள் இல்லை. முக்கியமாக சூழல் மாசுபடாது.

ஆனால் வண்டி 100-140 கிலோ எடை வரைதான் தாங்கும். அதாவது என்னை மாதிரி இரண்டு பேர் சேர்ந்து போக முடியாது. இன்றைய நகர மாந்தர்களைப் பார்த்தால் நிச்சயமாக பல கணவன், மனைவி ஜோடிகள் சேர்ந்து போகமுடியாது.

அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர்தான். 40 வரை போனால் வசதியாக இருக்கும். இந்த வண்டி அண்ணா மேம்பாலம் போன்ற இடங்களில் மேலே ஏறுமா என்று தெரியவில்லை.

7-8 மணி நேரம் வண்டியை சார்ஜ் செய்யவேண்டும் என்கிறார்கள். ஆனால் அதற்கு எவ்வளவு கரண்ட் யூனிட்கள் குடிக்கும் என்று சொல்லவில்லை. அதைவைத்துதான் ஒரு கிலோமீட்டருக்கு எவ்வளவாகும் என்று கணக்கிடவேண்டும்.

ஆனால் ஒரு நல்ல விஷயம் - இந்த வண்டிக்கு ரெஜிஸ்டிரேஷன், லைசென்ஸ் எதுவும் தேவையில்லையாம். தெருவில் போலீஸ் பிடித்தால் என்ன ஆகும் என்று பார்க்கவேண்டும்.

நல்ல ஐடியா. யாராவது இதை எடுத்து மேற்கொண்டு உருப்படியாக்கினால் நன்றாக விற்பனையாக வாய்ப்புகள் உண்டு.

சுப்ரமண்ய ராஜு கதைகள்

வெகு நாள்களாக அச்சில் இல்லாதிருந்த சுப்ரமண்ய ராஜு கதைகள் முழுத்தொகுப்பு இப்பொழுது கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

சுப்ரமண்ய ராஜு வாழ்ந்த காலம் (6.6.1948 - 10.12.1987), எழுதியவை இரண்டுமே கொஞ்சம்தான். ஆனால் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்தாளர் அவர்.

அவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தா ளர்கள் முதல் இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் தலைமுறைவரை அவரைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் செய்கிறார்கள்.

'காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜூவின் கதை ஒன்று' என்று சுஜாதா சொன்னதை எண்ணிப் பார்க்கலாம்.

'இன்று நிஜம்' என்கிற ஒரு தொகுப்புதான் ராஜு வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது புத்தகம். புத்தகமாகவே ஆகாமல் வேறு எத்தனையோ பல கதைகள் பத்திரிகைத் தாள்களுக்குள் பல வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன.

அவருடைய கதைகளின் இந்த முழுத்தொகுப்பு, ராஜுவுக்குச் செலுத்தும் அஞ்சலி மட்டுமல்ல. எதிர்வரும் தலைமுறைக்கு ஒரு தலைசிறந்த எழுத்தாளரை மறு அறிமுகப்படுத்தும் ஓர் எளிய முயற்சியும் கூட.

பாண்டிச்சேரியில் பிறந்தவரான சுப்ரமண்ய ராஜு (இயற்பெயர் விஸ்வநாதன்), சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றியவர். மனைவியும் இரு பெண் குழந்தைகளும் அவருக்கு உண்டு. சென்னை நந்தனம் சிக்னல் அருகே நடந்த ஒரு மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தபோது அவருக்கு வயது 39 மட்டுமே.

விலை: ரூ.200
ISBN எண்: 81-8368-134-4

புத்தகத்தை இணையம் வழியாக வாங்க: வித்லோகா

சென்னையில் என்றால் நேரில் வந்து வாங்க:

வித்லோகா
புது எண் 238/பழைய எண் 197
ரபியா கட்டடம்
பீமசேனா கார்டன் தெரு
ராயப்பேட்டா ஹை ரோட் (மேம்பாலம் அருகில் உள்ள நோக்கியா ஷோரூம் பக்கத்தில்)
மைலாப்பூர்
சென்னை 600 004

தொலைபேசி எண்: 044-42312803/05

தமிழகம் முழுவதும் அனைத்துப் புத்தகக் கடைகளிலும் இந்த வாரம் முதல் கிடைக்கும்.

இலங்கை நிலவரம் - Update

இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருணாநிதி (திமுக), டி.சுதர்சனம் (காங்), ச.ராமதாஸ் (பாமக), டி.கே.ரங்கராஜன் (கம். மா), தா.பாண்டியன் (இந்திய கம்.), கே.எம். காதர் மொகிதீன் (மு.லீக்). தீர்மானத்தின் சுருக்கம்:
இலங்கை அரசும் போராளிகளும் மோதிக்கொள்ளும் நிலை உள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்தியா - இலங்கை வாழ் மக்களின் மனதைப் பாதிக்கும் அளவுக்கு இச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் நிறுத்தப்படவும் அந்த மீனவர்களுக்கு உயிர், உடைமை, உரிமைக்கு உத்திரவாதம் அளிக்கப்படவும் இந்திய, இலங்கை அரசுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்தத் தீர்மானம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முதல்வர் கருணாநிதி மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மன்மோகன் சிங் தம் சார்பில் கருணாநிதியுடன் பேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அனுப்பலாம் என்று தெரிய வருகிறது.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து சொல்லாத அஇஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் "இலங்கையில் ராணுவமும் விடுதலைப் புலிகளும் நடத்திவரும் தாக்குதலால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதும் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவதும் தமிழக மக்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்து வருகிறது. இத்தகைய சூழலில் இலங்கையில் அமைதி நிலை திரும்ப இந்திய அரசு உரிய முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா நாளை (ஜூன் 22) இந்திய அரசுடன் பேச வருகிறார்.

Monday, June 19, 2006

கடன் தள்ளுபடி - தவறான செயல்

சமீபத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் கொடுத்திருந்த விவசாயக் கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்தது. கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய்கள். இதுவரையில் மாநில அரசு அந்தப் பணத்தை எங்கிருந்து பெறுவது என்று திட்டவட்டமாக யோசித்து முடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எனக்கு இந்தக் கடன் தள்ளுபடி சரியானதென்று தோன்றவில்லை. "ஏழை விவசாயிகளுக்கு ஒரு நன்மை என்றால் உனக்கு ஏன் எரிச்சல்? பணக்காரர்களுக்கு எவ்வளவு சலுகை பார்த்தாயா" என்று கேள்விகள் வரும் என்று தெரியும். Of course, பணக்காரர்களது கடனும் தள்ளுபடி செய்யப்படக்கூடாது. எந்தக் கடனும் என்னைப் பொருத்தவரையில் தள்ளுபடி செய்யப்படவே கூடாது. அது எவ்வளவு ஏழைக்கு, பிச்சைக்காரருக்குக் கொடுத்த கடனாக இருந்தாலும் சரி. கடன் என்று கொடுத்த பின்னால் அதனை வசூல் செய்தே ஆகவேண்டும். ஆனால் மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும். மேலும் தேவையான கடன்களைக் கொடுக்கலாம். அதற்கான வட்டியைக் குறைக்கலாம். ஆனால் முதலை எப்படியும் வசூல் செய்தே ஆகவேண்டும். இது ஈவிரக்கமற்ற செயல்பாடு அன்று!

(இலவசமாகக் கொடுப்பது, மான்யமாகக் கொடுப்பது ஆகியவை வேறு. அதை முன்னரே முடிவெடுத்து, பட்ஜெட் போட்டு, பின்னர்தான் கொடுக்கிறோம்.)

இதைச் சரியான வழியில் இப்படி எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நான் யோசித்ததை மிகச்சிறந்த வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் பங்களாதேசத்தில் கிராமீன் வங்கி என்ற புகழ்பெற்ற மைக்ரோ கிரெடிட் நிறுவனத்தை ஆரம்பித்த முகமது யூனுஸ். கீழே உள்ளது அவரது சுயசரிதையிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது:

=====
பங்களாதேசம் இயற்கைச் சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு நாடு. எனவே இங்கு தொழில் செய்வதில் [கடன் கொடுப்பதில்] இயற்கைச் சீற்றங்களை முக்கியமான ஒரு காரணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் எப்பேற்பட்ட பேரழிவாக இருந்தாலும் சரி, இயற்கைச் சீற்றமோ கடன் பெற்றவர் வாழ்வில் சொந்த இழப்போ எதுவானாலும், அவரிடமிருந்து கடனை வசூல் செய்வதே - வாரத்துக்கு 50 பைசா ஆனாலும் சரி - எங்கள் கொள்கை. இதன்மூலம் கடன் பெறுபவரின் தன்னிறைவடையும் தன்மையையும் அவரது திறமையின்மீது அவருக்கு இருக்கும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கமுடிகிறது. ஆனால் கடன்களைத் தள்ளுபடி செய்வது இதற்கு மாறான ஒரு நிலையையே உருவாக்குகிறது. பல வருட உடைப்பின் பலனாக கடன் பெறுபவருக்குக் கிடைத்துவந்த தன்னம்பிக்கை குலைகிறது.

வெள்ளத்தாலோ பஞ்சத்தாலோ ஒரு கிராமம் அழிந்துபோனால், கடன் பெற்றவரது பயிர்கள், மாடுகள் அழிந்துபோனால் நாங்கள் அவருக்கு உடனடியாக மேற்கொண்டு புதிய கடன்களைத் தருகிறோம். அதைக்கொண்டு அவர் மீண்டும் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும். ஆனால் நாங்கள் பழைய கடன்களைத் தள்ளுபடி செய்வதில்லை. பழைய கடன்களை நீண்டகாலக் கடன்களாக மாற்றி அவர் அதனை மெதுவாகத் திருப்புக்கொடுக்குமாறு மாற்றுகிறோம்.

...

அரசுகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கொடுத்திருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்வதன்மூலம் மைக்ரோ-கிரெடிட் நிறுவனங்களின் இயக்கத்தை வெகுவாக பாதிக்கிறார்கள்.

...

பிரமீளாவின் கதையை உங்களுக்குச் சொல்கிறேன். அதிலிருந்து எங்களிடம் கடன் பெறுபவர்கள் எம்மாதிரியான இயற்கையின் அழிவுகளைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவரும். ஜூன் 1971-ல் [பங்களாதேச] விடுதலைப் போரின்போது அவரது வீடு எரிக்கப்பட்டது. மீண்டும் அக்டோபரில் அவரது வீட்டை பாகிஸ்தான் படையினர் எரித்தனர். அவர் 1984-ல் கிராமீன் இயக்கத்தில் இணைந்தார். [அதாவது கடன் பெற்றார்.] 1986-ல் குடல் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். சிகிச்சைக்குப் பிறகு அடுத்த இரண்டு வருடங்கள் அவர் வேலை செய்யக்கூடாது; ஓய்வெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டார். அவரது மைக்ரோ-கிரெடிட் குழு உறுப்பினர்கள் குழு நிதியிலிருந்து அவரைக் கடன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு மேலும் பணம் தேவைப்பட்டதால் பிரமீளா தன் மாட்டையும் பலசரக்குக் கடையையும் விற்க வேண்டியிருந்தது.

கறவை மாடுகள் வாங்க அவருக்கு மீண்டும் கடன் கொடுத்தோம். ஆனால் இந்த மாடுகள் ஏதோ வியாதியினால் இறந்துவிட்டன. அவர் மீண்டும் கிராமீன் மையத்துக்கு வந்து சிறு கடனாக $60 வாங்கி மற்றுமொரு மாட்டை வாங்கினார்.

1988-ல் வெள்ளத்தின்போது அவரது கிராமம் நீரில் மூழ்கியது. அவரது வீடு அழிந்துபோனது. அவரது பயிர் நாசமானது. [....]

பிரமீளாவுக்கு 40 கிலோ கோதுமையும் காய்கறி விதைகளும் கொடுக்கப்பட்டன. அதற்கான விலையை அவர் பின்னர் செலுத்தினார். அவர் மூன்றே வாரங்களில் மீண்டும் ஒரு பலசரக்குக் கடையைத் தொடங்கினார்.

1992-ல் அவரது வீடு தீப்பிடித்து அழிந்துபோனது. அண்டை வீட்டார் அவருக்கு உதவியபோதும் அவரால் எதையும் காப்பாற்ற முடியவில்லை. அவரது வீடு, உணவு, பலசரக்குக் கடை, சரக்குகள், பயிர்கள், இரண்டு கறவை மாடுகள் என்று அத்தனையும் நாசமானது. அவர், அவரது கணவர், குழந்தைகள் ஆகியோர் கட்டியிருந்த துணிமட்டும்தான் மிஞ்சியது.

அவருக்கு கிராமீன் மீண்டும் புதிய கடன் வழங்கியது. அந்தக் கடனில் அவர் மீண்டும் ஒரு பலசரக்குக் கடை அமைத்தார். தனது நிலத்துக்கு உரம் வாங்கினார். தன் மூன்று வளர்ந்த மகன்களின் உதவியோடு தன் கடன்களை அடைக்கத் தொண்டங்கினார். மூன்று மாதங்களுக்குப் பிறகு கிராமீன் அவர் வீடுகட்ட வீட்டுக்கடன் கொடுத்தது. அதைவைத்து அவர் ஒரு நல்ல வீட்டைக் கட்டிக்கொண்டார்.

அவர் இதுவரையில் 12 முறை கடன் வாங்கியுள்ளார், அதில் பெரும்பாலானவற்றை அடைத்து விட்டார். இப்பொழுது அவருக்கு, அவரது குடும்பம் உண்டது போக மீதமாக கிட்டத்தட்ட 400 கிலோ அரிசி இருக்குமாறு விளைவிக்கும் அளவுக்கு நிலம் உள்ளது.
=====

கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதன்மூலமா நாம் நம் விவசாயிகளுக்கு உதவி செய்கிறோம். மேற்கொண்டு அவர்களுக்குக் கடன்வசதி செய்து, அவர்கள் வாழ வழி செய்யவேண்டாமா? கூட்டுறவு வங்கிகளிடம் பணம் இல்லாவிட்டால் அவர்களால் மீண்டும் கடன் கொடுக்கமுடியுமா?

தேர்தலில் வெற்றிபெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் விவசாயிகள் நாளடைவில் தன்னிறைவு பெற்றவர்களாக, தன்னம்பிக்கை பெற்றவர்களாக மாறவேண்டுமானால் தமிழகத்திலும் இந்தியாவிலும் கிராமீன் வங்கி போன்ற அமைப்பு உருவாக வேண்டும். கடன் தள்ளுபடிகளால் நன்மை கிடையாது.

====

கடன் தள்ளுபடி பற்றிய என் முந்தைய பதிவுகள்:
தமிழகத்துக்கு திட்டக்குழு நிதி
முதல் கையெழுத்து[கள்]

சிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்

புதன், 21 ஜூன் 2006, மாலை 5.30 மணிக்கு Indian School of Folklore, நுங்கம்பாக்கத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்று திரையிடப்படுகிறது. படத்தை எடுத்தவர் ஜானகி விஸ்வநாதன்.



Sunday, June 18, 2006

வியாழனும்செவ்வாயும் சனியும் அருகருகே

இன்று இரவு வியாழன்செவ்வாய், சனி ஆகிய கோள்கள் ஒன்றுக்கொன்று வெகு அருகில் வரும் என்று தி ஹிந்துவில் செய்தி வந்திருந்தது. சென்னை பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் இதனைப் பார்க்க வசதிகள் செய்து தரப்போவதாக எழுதியிருந்தார்கள். சற்றுமுன்னர் அங்குச் சென்றுவிட்டுத் திரும்பினோம்.

வெறும் கண்களாலேயே இரு கோள்களும் ஒன்றுக்கொன்று அருகே இருப்பது இரவு சுமார் 7.30 மணிக்குத் தெரிய ஆரம்பித்தது. கோளரங்கத்தில் நிறைய கூட்டம். 8.30 மணிக்கு மேல் தெரியாது என்ற நிலை. நாங்கள் தொலைநோக்கிக்கு வெகு அருகே செல்லும்போதே வெறும் கண்களுக்குத் தெரியாமல் மறையத் தொடங்கிவிட்டது. 8.15க்கு தொலைநோக்கியில் பார்க்கும்போது சனி மட்டும்தான் ஓரளவுக்குத் தெரிந்தது.

நாளை இரவும் தெரியுமாம். ஆனால் சூரியன் மறைந்தபின் சீக்கிரமாகவே கிரகங்களும் மறைந்துவிடுமாம்.

Saturday, June 17, 2006

நியூ ஹொரைசன் மீடியா

நியூ ஹொரைசன் மீடியா (New Horizon Media) என்னும் நிறுவனத்தை நாங்கள் தொடங்கி இரண்டாண்டுகளுக்குமேல் ஆகிறது.

முதல் படியாக இந்த நிறுவனம் 'கிழக்கு பதிப்பகம்' எனும் தமிழ் பதிப்பு பிராண்டை உருவாக்கி பொதுவான துறைகளில் அச்சுப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. வாழ்க்கை வரலாறுகள், அரசியல் வரலாறுகள், நாடுகள், நிர்வாகவியல், நிதி, தன்னம்பிக்கை நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்ற துறைகளில் நூறுக்கும் அதிகமான புத்தகங்களை இதுவரை வெளியிட்டுள்ளோம்.

இந்த நிதியாண்டில் அடுத்த கட்ட வளர்ச்சியாக மேலும் மூன்று தமிழ் பதிப்புகளை - imprints - உருவாக்க உள்ளோம். ஒன்று இந்துமதம் சார்ந்த புத்தகங்களுக்காக. இரண்டாவது உடல் நலன், உடலை வருத்தும் நோய்கள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் (பொதுவாக "ஆரோக்கியமான வாழ்வு") தொடர்பானது - இந்த இரண்டிலும் புத்தகங்கள் ஜூலை மாதம் முதல் கடைகளில் கிடைக்கும், நெய்வேலி புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும்.

மூன்றாவது, குழந்தைகளுக்கான imprint. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வெளியாகும். 3-8 வயதுள்ள குழந்தைகளுக்காக வண்ணப்படங்கள் அடங்கிய புத்தகங்களும், 9-14 வயதானவர்களுக்காக எழுத்தும் படங்களும் சரிசமமாக உள்ள புத்தகங்களும் வெளிவரும்.

பா.ராகவன் தலைமையிலான ஆசிரியர் குழு இவை அனைத்தையும் கவனித்துக் கொள்ளும்.

ஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளியிட ஓர் imprint ஒன்றையும் தொடங்கியுள்ளோம். புத்தகங்கள் வெளிவர 2-3 மாதங்கள் ஆகும். பின்னர் விளக்கமாக எழுதுகிறேன்.

மேற்கண்ட புத்தகங்கள் தவிர கிழக்கு பதிப்பகம் வழியாக இதுவரை உருவாக்கியுள்ள புத்தகங்கள் விரைவில் மின்புத்தகங்களாகக் கிடைக்கும். அத்துடன் ஒலிப்புத்தகங்கள் உருவாக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இவை பற்றிய தகவல்களும் வெளியாகும்.

இப்போதைக்கு இருக்கும் ஆதங்கம் தமிழில் நல்ல தரத்தில் எளிய அறிவியல் புத்தகங்களைக் கொண்டுவர இயலாமையே. முழுநேர அறிவியல் பதிப்பு ஆசிரியராக விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் 3,000 சதுர அடி உள்ள முற்றிலும் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் குடிபுகுந்துள்ளோம். புத்தகங்கள்மீது அக்கறை உள்ள நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் நேரில் வந்து என்னுடன் பேசலாம்.

Friday, June 16, 2006

சந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)

CV ராமன்
© Wikipedia
நியூ ஜெர்சி சிந்தனை வட்டம் மற்றும் BGM சென்னை சார்பாக, முருகானந்தம் தயாரித்த, அம்ஷன் குமார் எழுதி இயக்கிய CV ராமன் பற்றிய விவரணப்படம் சென்னையில் ரஷ்ய கலாசார மையத்தில் திரையிடப்பட்டது.

ராமன் இயல்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஆசியர். இந்தியாவிலிருந்துகொண்டே இயல்பியலில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்கிய ஒரேயொருவர் (இன்றுவரையில்). ஆனால் இதற்கெல்லாம் மேலாக இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி என்பதை முறையாகத் தோற்றுவித்து அதன்மூலம் பல்லாயிரம் அறிவியல் அறிஞர்களை உருவாக்கியவர். விழாவுக்கு வந்திருந்த M.S.சுவாமிநாதன் சொன்னதைப் போல ராமன் அறிவியலாளர்களின் அறிவியலாளர்.

அம்ஷன் குமார்
© சாமிநாதன்
ராமனின் வாழ்க்கை வரலாற்றை திறம்படக் காண்பிக்கிறது அம்ஷன் குமாரின் விவரணப்படம். ராமன் பிறந்தது திருச்சி (திருவானைக்காவல்). பள்ளிக்கல்வி விசாகபட்டினம். கல்லூரிக்கல்வி சென்னை பிரெசிடென்சி கல்லூரியில். அரசாங்க வேலை பார்க்க ஆரம்பித்தது கொல்காதாவில். அங்கிருந்து கற்பித்தல், அறிவியல் ஆராய்ச்சி என்று மாறியதும் கொல்காதாவில்தான். பின் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), பெங்களூர். கடைசிவரை பெங்களூரில் இருந்தார்.

ராமன் அவரது ஒளியியல் சார்ந்த ஆராய்ச்சிக்காகப் பெயர் பெற்றிருந்தாலும் ஒலி, நுகர்வு ஆகியவற்றிலும் ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். எண்ணற்ற ஆராய்ச்சியுரைகளைப் படைத்திருக்கிறார்; சில புத்தகங்களை எழுதியுள்ளார்.

அம்ஷன் குமாரின் படத்தில் ராமன் எனும் மனிதர்தான் அதிகமாகத் தெரிகிறார். ராமன் எனும் அறிவியலாளர் பற்றி ஓரளவுக்குத்தான் தெரிந்துகொள்ளமுடிகிறது. ராமனது ஆராய்ச்சிகள் பற்றி மிகக் குறைவாகவேதான் தெரிந்துகொள்ளமுடிகிறது. மாணவர்களுக்கான விவரணப்படம் என்றால் இன்னமும் 10-15 நிமிடங்களாவது ராமனது ஆராய்ச்சிகள், அவற்றின் முடிவுகள் ஆகியவற்றை எளிய விதத்தில் கிராபிக்ஸ், அனிமேஷன், பின்னணிக்குரல் கொண்டு சேர்க்கலாம் என்பது என் கருத்து.

ராமன் பற்றி M.S.சுவாமிநாதன், CNR ராவ், A.ஜயராமன், கொல்காதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் (பெயர் ஞாபகமில்லை) ஆகியோர் விவரணப்படத்தில் பேசுகிறார்கள். ஜயராமன் என்பவர் ராமனின் மாணவர். நியூ ஜெர்சியில் இருக்கிறார். அவரது புத்தகம் C. V. Raman – A. Memoir, Affiliated East-West Private. Ltd, New Delhi, 1989 மற்றும் அவரது பங்களிப்பு இந்தப் படத்துக்கான திரைக்கதை அமைப்புக்கு உதவியுள்ளது.


ஜெயஸ்ரீ, MS சுவாமிநாதன், ஜெயசந்திர சிங், கங்கை அமரன்
© சாமிநாதன்


விழாவின் தொடக்கத்தில் M.S.சுவாமிநாதன், அம்ஷன் குமார் ஆகியோர் பேசினர். தயாரிப்பாளர் முருகானந்தம் சார்பாக அவரது உரையை அவரது உறவினர் ஜெயஸ்ரீ படித்தார். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி இன்று உயர்ந்த தரத்தில் இல்லை. மாணவர்கள் பொறியியல், மருத்துவம் என்றே தங்களைக் குறுக்கிக்கொண்டுள்ளனர். பெற்றோர்களும் அதனையே விரும்புகின்றனர். ராமன் பற்றிய இந்த விவரணப்படம் ஓரளவுக்கு இளம் மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியை நோக்கிச் செலுத்தும்.


டிவிடியைப் பெற்றுக்கொள்ளும் OSLC பிரிவில் மாநிலத்தில் முதலாவதாக வந்த மாணவி
© சாமிநாதன்


விழா நடத்துனர்கள் மிகுந்த சிரத்தையுடன் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்றிருந்த இருவரை மேடைக்கு அழைத்து அவர்கள்மூலம் இந்த விவரணப்பட டிவிடியை வெளியிட்டனர்.


நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் வெளியில் அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும்
© சாமிநாதன்


விழாவுக்கு ஓரளவுக்கு மாணவர்கள் வந்திருந்தனர். அத்துடன் இலக்கியப் பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், மனுஷ்ய புத்திரன் என்று பலர் வந்திருந்தனர்.


விவரணப்படத்தை ஆர்வத்துடன் பார்க்கும் ஜெயகாந்தன்
© சாமிநாதன்


பல நேரங்களில் இதுபோன்ற ஆவணப்படங்கள் வெறும் திரையிடலுடன் முடிந்துவிடும். ஆனால் இங்கு படத்தின் டிவிடியை அரங்கிலேயே விற்பனை செய்தனர். சிறப்பு விலையாக ரூ. 100க்குக் கிடைத்தது. பரவலாக எல்லாக் கடைகளிலும் இந்த டிவிடி விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் அவசியமாக வாங்கி வைக்கவேண்டிய டிவிடி இது. தயாரிப்பாளர் முருகானந்தம் இதுபோன்று பல ஆவணப்படங்களைத் தயாரிக்கவேண்டும்.

Thursday, June 15, 2006

இலங்கை நிலவரம் பற்றி

என் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நான் எழுதியிருந்தபடி முதல் கட்டமாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கியமான தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கொடுப்பதற்காக ஒரு சிறு அறிக்கையைத் தயார் செய்துள்ளேன். அடுத்த இரண்டு நாள்களுக்குள் முடிந்தவரை பல அரசியல்வாதிகளுக்கு இந்தக் கடிதம் சென்றடையலாம்.

இன்று மாலை பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப ஆரம்பிப்பேன். அதற்குள் முக்கியமாக ஏதேனும் தகவல் பிழை இருப்பின் அதனை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

PDF கோப்பு: இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டிப்பது இந்தியாவின் தார்மீகக் கடமை

Tuesday, June 13, 2006

வங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை

கடந்த சில வாரங்களாகவே இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் போர் நடந்துகொண்டிருக்கிறது. இது வெளிப்படையான all-out war அல்ல. Low intensity conflict எனப்படும் வகையைச் சார்ந்தது. ஆனால் இதில் ஓர் அவலம் சாதாரண மக்கள்மீது நடத்தப்படும் வெறித்தாக்குதல்கள். வங்காலை எனுமிடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் - கணவன், மனைவி, இரு சிறு குழந்தைகள் - படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சின்னஞ்சிறு குழந்தைகள் கோரமான முறையில் வயிற்றுக்குக் கீழ் கிழிக்கப்பட்டு கயிற்றில் சுருக்கு மாட்டித் தொங்க விடப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளைச் செய்தது ராணுவத்தினராகத்தான் இருக்கும் என்று உள்ளூர் மக்கள் சொல்கின்றனர்.

ஆனால் இலங்கை அரசு மறுத்து, கொலை செய்யப்பட்டவர் புலிகள் எதிர்ப்பாளர் என்பதால் புலிகள் அவருக்குத் தண்டனை கொடுத்துள்ளனர் என்கின்றனர்.

இலங்கை அரசின் மறுப்பு ஏற்கக்கூடியதல்ல. புலிகள் கடுமையான தண்டனை வழங்கக்கூடியவர்கள் என்றாலும்கூட குழந்தைகளை நிச்சயமாக இதுபோன்று கொன்றிருக்க மாட்டார்கள்.

இந்தச் செய்தி இந்திய ஊடகங்கள் எதிலும் வரவில்லை என்று பலர் ஏற்கெனவே எழுதியுள்ளனர். கடந்த ஒருவாரமாக Airtel Broadband மூலம் என்னால் [எச்சரிக்கை: மனத்தை பாதிக்கக்கூடிய படங்கள் உள்ளன] தமிழ்நெட் தளத்துக்குச் செல்ல முடியவில்லை. நேற்றிரவுதான் அங்கு சென்று சில படங்களைப் பார்க்க முடிந்தது. Airtel Broadband-ல் வலிந்து சென்சார் செய்திருப்பார்கள் என்று நினைக்கமுடியவில்லை. இருந்தாலும் ஏன் இந்தத் தளம் மட்டும் கடந்த ஒருவாரமாகக் கிடைக்கவில்லை என்பது புரியவில்லை.

இந்தியாவில் சன் டிவி முதல் எங்கும் இதைப்பற்றிய செய்திகள் இல்லை. "Vankalai" என்று கூகிள் நியூஸ் தேடலுக்குச் சென்றால் பிபிசி செய்தி ஒன்று மட்டும்தான் உலக அளவிலான செய்தி நிறுவனம் ஒன்றால் வெளியிடப்பட்ட செய்தியாக உள்ளது. மற்றதெல்லாம் ஈழத்தமிழர், இலங்கை செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகள்.

ராணுவ அத்துமீறல் பற்றி ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் ஏதாவது சொல்லியிருக்கிறதா என்றால் கடைசியாக அவர்களது தளத்தில் இலங்கை பற்றிய செய்தி மார்ச் 2006 மாதத்தில் எழுதப்பட்ட ஒன்றாக உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்குச் சென்று நிலவரத்தைக் கண்டறியவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும். இதுநாள்வரையில் வெளியுறவு அமைச்சகம் மட்டுமே இலங்கைப் பிரச்னையில் தொடர்பு கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் இனியும் அப்படி இருந்துவிடக்கூடாது.

கருணாநிதியும் ராமதாசும் ஒன்றிணைந்து மத்திய அரசை வலியுறுத்தி இந்த மாத இறுதிக்குள்ளாக இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.

இந்தியா அவசர அவசரமாக இலங்கை அரசுக்கு ஒரு demarche அனுப்பி, ராணுவம் நடத்தும் extra-judicial கொலைகளை - முக்கியமாக வங்காலை கொலைகளை - தாம் வன்மையாகக் கண்டிப்பதாகச் சொல்லவேண்டும்.

பார்க்க: Failed State and Illiberal Democracy that is Sri Lanka, கில்லி

Saturday, June 10, 2006

புதுச்சேரிக்கு விமானச்சேவை

தில்லியைச் சேர்ந்த ஜாக்சன் ஏர்லைன்ஸ் (Jagson Airlines) புதுச்சேரியிலிருந்து சென்னை, திருப்பதி, பெங்களூருக்கு சிறு விமானச் சேவையைத் தொடங்க உள்ளனர். 18 இருக்கைகள் கொண்ட Dornier 228 விமானம் இந்தச் சேவைக்குப் பயன்படுமாம்.

இதில் 50% இருக்கைகள் - 9 இடங்கள் - புதுச்சேரி அரசே எடுத்துக்கொள்ளும் - தன் உபயோகத்துக்கு அல்லது பிறருக்கு விற்க. இதன்மூலம் குறைந்தது 50% இடங்களையாவது விற்பனை செய்யலாம் என்ற உத்தரவாதத்துடன்தான் ஜாக்சன் இந்தச் சேவையைத் தொடங்குகிறது.

இப்பொழுது சென்னை - புதுச்சேரி ஒருவழிப் பயணத்துக்கு ரூ. 1,721 என்று ஜாக்சன் நிர்ணயித்திருப்பதாகவும் அதனை புதுச்சேரி அரசு ரூ. 1,000க்குக் குறைக்க விரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்பான செய்திகள்:
The Hindu: Flight from Pondy likely on June 14
New Indian Express: Flights from Pondicherry postponed

Friday, June 09, 2006

காஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு

தருமியின் பதிவில் பின்னூட்டமாக காஞ்சா அய்லய்யாவின் நான் ஏன் இந்து அல்ல புத்தகத்தை விமரிசித்து எம்.வி.ஆர்.சாஸ்திரி என்பவர் எழுதிய நீண்ட கட்டுரை போடப்பட்டுள்ளது.

காஞ்சா அய்லய்யாவின் புத்தகத்தைப் படித்துவிட்டு நான் எழுதிய அறிமுகம் இங்கே:

செப்டம்பர் 14, 2003: நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா

Thursday, June 08, 2006

சன் குழுமம் பற்றி செவந்தி நினான்

செவந்தி நினான் வாராவாரம் (இப்பொழுது மாதம் இருமுறை?) Media Matters என்று தி ஹிந்துவில் கட்டுரை எழுதி வருகிறார். கடைசியாக சன் டிவி குழுமம் பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையை தி ஹிந்து பதிப்பிக்க மறுத்து விட்டதாம். அந்தக் கட்டுரையை தன் வலைத்தளத்தில் அவர் பதிப்பித்துள்ளார்.

Sun-shine in Tamil Nadu

தமிழ் வலைப்பதிவுகளில் (என் பதிவு உட்பட) நாம் இந்த விஷயங்களைப் பற்றித் தீவிரமாகவே பேசியிருக்கிறோம். இதைப் பதிப்பிப்பதில் என்ன பிரச்னை வரும் என்று தி ஹிந்து நினைத்தது என்று புரியவில்லை.

இந்தக் கட்டுரையை வைத்து Churmuri என்னும் வலைப்பதிவில் நடந்த விவாதம் இங்கே.

சன் டிவி குழுமம் பற்றி நான் எழுதிய முந்தைய பதிவுகள்:

அக்டோபர் 20, 2004: ராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை
அக்டோபர் 23, 2004: குங்குமம் உருமாற சில யோசனைகள்
நவம்பர் 17, 2004: ஏமாறு கண்ணா ஏமாறு!
ஜூன் 18, 2005: மீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா? - 1
நவம்பர் 11, 2005: சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன?
மே 01, 2006: தயாநிதி மாறன் & conflict of interest
மே 01, 2006: மாறன் conflict of interest - தொடர்ச்சி

Creamy Layer குறித்து கிருஷ்ணசாமி

புதிய தமிழக, கட்சியின் நிறுவனர் கே.கிருஷ்ணசாமி, இட ஒதுக்கீட்டிலிருந்து Creamy Layer-ஐ நீக்குமாறு வகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Bar creamy layer from purview of quota
He said Tamil Nadu had a history of reservation schemes for decades, covering Backward Classes and Scheduled Castes/Tribes.

This had benefited some but, in the ultimate analysis, not ensured upward mobility for all. "Sections such as the dhobis (washermen) and barbers have not benefited under the reservation scheme. When will they get the benefits?"

It was time that sections that had benefited allowed others to reap the fruits of reservation, Dr. Krishnasamy said.
எனக்குத் தெரிந்து, தமிழக அரசியல்வாதி ஒருவர் Creamy Layer பற்றிப் பேசுவது இதுவே முதல் முறை.

கிருஷ்ணசாமி, ஜூன் 17 அன்று இட ஒதுக்கீடு பற்றிக் கலந்துரையாட ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறாராம். (எங்கே, யார் கலந்துகொள்கிறார்கள் என்ற தகவல்கள் இல்லை.)

Wednesday, June 07, 2006

தமிழகத்துக்கு திட்டக்குழு நிதி

2006-07ம் வருடத்துக்கு என திட்டக்குழு தமிழகத்துக்கு ரூ. 12,500 கோடி ஒதுக்கியுள்ளது.

ஒரு மாநில அரசுக்குச் செலவழிக்கக் கிடைக்கும் பணத்தில் திட்டக்குழு கொடுக்கும் பணமும் முக்கியமான பங்களிப்பாகும். ஆனால் திட்டக்குழு கொடுக்கும் பணத்தை ஒருசில துறைகளில் மட்டுமே, ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் மட்டுமே செலவழிக்கமுடியும்.

மத்திய அரசும் திட்டக்குழுவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உருவாக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திட்ட நிதியாக எவ்வளவு அளிக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்கின்றன. அதற்குமேல் மத்திய அரசின் நட்பு இருந்தால் கொஞ்சம் அதிகமாக வாங்கிக்கொள்ளமுடியும்.

திட்ட நிதியை மான்யமாகவோ இலவசமாகமோ வாரிவழங்க எடுத்துக்கொள்ளமுடியாது. கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் சில குறிப்பிட்ட துறைகளில் உருவாக்கப்படும் திட்டங்களுக்காக மாநில அரசுக்குப் பணம் கொடுக்கின்றன:
  • கல்வி, அடிப்படைச் சுகாதாரம்
  • விவசாயம், தொழில்துறை வளர்ச்சி
  • உள்கட்டமைப்பு (சாலைகள், பாலங்கள், மின் உற்பத்தி, பாசனம்)
  • சமூக/பொருளாதாரச் சேவைகள் (வீட்டுவசதி, சத்துணவு போன்றவை)
  • மாநிலங்களின் கடன் சுமை குறைப்பு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி உதவிகள்
முதல்வர் கருணாநிதி திட்டக்குழுவிடமிருந்து சென்ற வருடத்தைவிட கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி அதிகமாகப் பெற்றுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் - அதாவது பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் திட்ட நிதி இதோ:

வருடம்திட்ட நிதி
(ரூ. கோடி)
2006-0712,500
2005-069,100
2004-058,001
2003-047,000
2002-035,754

முதல்வர் கருணாநிதி விவசாயக் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் அல்லவா? அதற்கு எங்கிருந்தாவது ரூ. 7,000 கோடியைத் தேற்றியாக வேண்டும். இப்பொழுதே திட்டக்குழுவை இந்த விவசாயக் கடன் தள்ளுபடியை திட்டச் செலவாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை திட்டக்குழு நிராகரிக்கவேண்டும் என்பது என் கருத்து. இந்த ரூ. 7,000 கோடியை, அல்லது அதில் ஒரு குறிப்பிட்ட அளவை திட்டச்செலவு என்று எடுத்துக்கொண்டால் அது மாநில அரசைச் சோம்பேறியாக வைத்திருப்பதற்கு உதவும்.

திட்டக்குழுவிடமிருந்து வாங்கிய பணத்துக்கு ஒழுங்காக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். தேர்தல் அறிக்கையில் மான்யம், இலவசம் என்று அறிக்கை விட்டால் அதை மாநில அரசின் வருமானத்திலிருந்து சரிக்கட்டவேண்டும். அதுதான் நியாயம். அப்பொழுதுதான் மற்றொருமுறை தேர்தல் அறிக்கையில் வாய்க்கு வந்தபடி வாரிவழங்காமல் சற்றே யோசித்துச் செய்யவேண்டியிருக்கும்.

அதேபோல கிலோ அரிசி ரூ. 2 திட்டமும் நிச்சயம் தடுமாற்றத்தில்தான் முடியப்போகிறது. மத்திய அரசு அரிசி விலையை ஏற்றப்போகிறது. அத்துடன் தமிழகத்துக்கு என்று ப.சிதம்பரம் ஸ்பெஷல் மான்யம் ஏதும் கொடுக்கப்போவதில்லை. கருணாநிதி நிருபர் கூட்டத்தில் பேசும்போது வாய்ப்பந்தல் போட்டிருக்கிறார். பாஜக தலைவர் வெங்கையா நாயுடு அரிசி கிலோ ரூ. 2 என்று இனி கொடுக்க முடியுமா என்று கேட்டதாக நிருபர்கள் கருணாநிதியைக் கேட்க அவர் பதிலுக்கு "வெங்கையா நாயுடு முடியுமா என்கிறார். வீராசாமி நாயுடு முடியும் என்கிறார்" என்றுள்ளார்.

வீராசாமி, நாயுடு ஜாதி (??) என்பதைத் தவிர இதிலிருந்து வேறெதையும் நாம் தெரிந்து கொள்ள முடியாது.

அரிசிக்கே காசு எங்கிருந்து வரப்போகிறது என்று தெரியாத நிலையில் கலர் டிவிக்கு காசு எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். இந்த ஆண்டுக்கான முழு மாநில பட்ஜெட் வரும்வரை பொறுத்திருப்போம்.

Tuesday, June 06, 2006

அரசியலமைப்பின் 93வது சட்டத்திருத்தம்

இன்றைய எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 93வது சட்டத்திருத்தம் (பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் enabling legislation) அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் கைவைக்கிறதா என்ற கேள்வி மீதான விவாதம்: (Is 93rd amendment constitutionally tenable?)

குடியாட்சியில், எத்தனை சதவிகிதம் அளவுக்கு நியாயமான இட ஒதுக்கீடு இருக்கலாம் என்று தீர்ம்மானிக்கக் கூடிய அதிகாரம் நாடாளுமன்றக்கு இருக்க வேண்டும் என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்.

தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்துக்கொண்டே போவது, உண்மையிலேயே சமுதாய அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை அவமதிப்பது போலாகும் என்கிறார் சமீபத்தில் அறிவு கமிஷனிலிருந்து பதவி விலகிய பிரதாப் பானு மேஹ்தா.

பெரும்பான்மையோரின் அரசியல் கொள்கைகளை நடத்திவைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வப்போது சட்டத்திருத்தங்கள் கொண்டுவருவது அரசியலமைப்புச் சட்டத்தை பலவீனமாக்கும் என்கிறார் JNU பேராசிரியர் ஜெய்வீர் சிங்.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்

இந்த ஏற்றம் எதிர்பார்த்ததுதான். ஆனால் இன்னமும் செய்யவேண்டிய ஒன்று பாக்கி உள்ளது.

மண்ணெண்ணெய் விலை ஏற்றாமல் இருக்கலாம். சரி. ஆனால் சமையல் எரிவாயுவின் விலையை ஏற்றியே ஆகவேண்டும். கிட்டத்தட்ட ரூ. 100க்கும் மேல் சமையல் எரிவாயுவுக்கு மான்யம் கிடைக்கிறது. தனியார் எரிவாயு சிலிண்டர் விற்பனை மையங்களை (ஸ்பிக் ஜோதி போன்றவை) அணுகி அவர்கள் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று கேட்டால் புரிந்துகொள்வீர்கள். மேலும் வீடுகளுக்காக என்று மான்யத்துடன் கிடைக்கும் சமையல் எரிவாயு கடத்தப்பட்டு ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசால் முடிவதில்லை.

பொதுவாக, இந்த மான்யம் போய்ச்சேருவதெல்லாமே நடுத்தர, உயர்தர குடும்பங்களுக்குத்தான். எரிவாயு விலையை ஏற்றினால் பெட்ரோல், டீசல் விலையை இந்த அளவுக்கு ஏற்றவேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்.

மற்றபடி எதிர்பார்த்ததுபோலவே எதிர்க்கட்சிகள், கம்யூனிஸ்டுகள் இந்த விலை ஏற்றத்தை எதிர்ப்பார்கள். ஆனால் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $73 என்ற நிலையில், இப்பொழுது இருக்கும் வரிக் கொள்கைகளுக்கு உள்ளாக வேறெதையும் செய்யமுடியாது. இந்த விலை ஏற்றமே ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்காகக் கொஞ்சம் தள்ளிப்போடப்பட்டது.

மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து மான்யம் யாருக்குப் போய்ச்சேருகிறது என்பதனை ஒழுங்காக முடிவுசெய்யவேண்டியது அவசியம். அது பொது விநியோகத்தில் கொடுக்கப்படும் அரிசி, கோதுமையானாலும் சரி, சமையல் எரிவாயுவானாலும் சரி. மான்யம் வீணாகிப்போவதால் ஏழைகளுக்கும் பலனில்லை, பணம் படைத்தவர்களுக்கும் பலனில்லை.

கோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்

இன்று தி ஹிந்துவில் பிரிந்தா காரத் எழுதியுள்ளது: The PDS and eroding food security

மத்திய அமைச்சரவையில் ஷரத் பவாருக்கு விவசாயம் மற்றும் உணவு என இரண்டு துறைகளையும் ஒருசேர அளித்திருக்கக் கூடாது. Conflict of Interest!

விவசாய அமைச்சரின் நோக்கங்களும் உணவு அமைச்சரின் நோக்கங்களும் மாறுபட்டவை.

மற்றபடி பொது விநியோகத் துறையின் பல கொள்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ், மேல் ஆகிய இரண்டு பிரிவினருக்கும் வெவ்வேறு வகையில் மான்யங்கள் போய்ச்சேருமாறு சில மாறுதல்கள் செய்யப்படவேண்டும். முக்கியமாக மாநிலங்களுக்கு (தமிழகம் சேர்த்து) இதைப்பற்றி நிறைய சொல்லித்தரவேண்டும்.

இந்தியாவின் உணவுக்கொள்கை பற்றிய தீவிரமான விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள், தோழமைக்கட்சிகள் அரசை இழுக்க வேண்டும்.

என் முந்தைய பதிவுகள்:
ரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்
கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு
அரிசி அரசியலும் கோதுமை அரசியலும்
அரிசி மான்யம் redux
அரிசி மான்யம் (Rice subsidy)

Sunday, June 04, 2006

இலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை

சசி, தன் பதிவில் சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" என்று ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறார். அதன் முதல் பாகம் இங்கே.

சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் புலிகள்மீது கொண்டுவந்த தடை, அதற்குமுன் கனடா அரசு கொண்டுவந்த தடை, அது தொடர்பாக சர்வதேச அரங்கில் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள ராஜதந்திர தோல்வி ஆகியவற்றை முன்வைத்து சசி பேசுகிறார்.

இந்தப் பிரச்னை புலிகள் வலியத் தேடிக்கொண்டது. புலிகள் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கேயுடன் நல்லதொரு சூழலில் அமைதி பற்றி பேசியிருக்கமுடியும். நிச்சயமாக இப்பொழுதிருக்கும் சூழல் இருந்திருக்காது. இன்று புலிகள் பெருத்த பின்னடைவில் இருக்கின்றனர். அடுத்து கடுமையான போர், அதில் ஏற்படும் வெற்றிதோல்வி, யார்பக்கம் அதிக இழப்பு ஆகியவை பொருத்தே மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டியிருக்கும். இலங்கைப் பிரச்னையில் இந்த நிலை கிட்டத்தட்ட 10 வருடங்கள் பின்னடைவு என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் ரணிலின் வெற்றிவாய்ப்பை விரும்பிக் குலைத்தது புலிகள்தாம். ரணிலென்ன, மஹிந்தாவென்ன, இருவருமே சிங்கள வெறியர்கள்தாம் என்று பிரபாகரனும் ஈழத்தமிழர்களும் எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுகின்றனர்.

எனது பதிவில் சென்ற வருடம் ஆகஸ்ட், செப்டெம்பர், நவம்பர் மாதங்களில் நான் எழுதியவை, அவற்றுக்கான ஈழத்தமிழர்களின் எதிர்வினைகள் ஆகியவற்றைப் படித்தால் நான் சொல்வது புரியவரும்.

ரணில் விக்ரமசிங்கே தோல்விக்கு புலிகள்தாம் முதல் + முழுக்காரணம். அதனை அவர்கள் விரும்பி வரவேற்றதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷே குடியரசுத் தலைவராக வந்தால் அதனால் தங்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும் என்று நினத்ததே. என்ன பலன்? மஹிந்த ஜே.வி.பி, ஜே.எச்.யு போன்றவர்களின் கூட்டுடன் வந்ததாலும் அவருடைய சொந்தக் கொள்கையே unitary state என்பதை நோக்கி இருப்பதாலும் அவரால் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியாது. புலிகளின் பல விருப்பங்களை நிறைவு செய்யமுடியாது. இதனால் மஹிந்தவைக் காரணம்காட்டி புலிகள் போரில் ஈடுபடலாம். இலங்கை அரசின் போக்குதான் தங்களை இந்த நிலைக்கு இழுத்துவந்துவிட்டது என்று பழியை அவர்கள்மீது போடலாம். நார்வே புலிகளின் நிலையை ஏற்றுக்கொண்டு புலிகளுக்கு அனுசரணையான போக்கை எடுக்க ஐரோப்பிய யூனியனை வற்புறுத்தலாம். ஏராளமான அகதிகள் புலம்பெயர்வதைக் காரணம் காட்டி உலக நாடுகளின் ஆதரவை அல்லது குறைந்த பட்சம் அவர்கள் புலிகளை எதிர்க்காத நிலையைப் பெறலாம்.

ஆனால் இந்தக் கணக்குகள் பல இடங்களில் தவறிவிட்டன. கதிர்காமர் இல்லாத நிலையிலும் SLFP-யின் உட்கட்சிப் பூசல்களுக்கிடையேயும் இலங்கை அரசின் ராஜதந்திரிகள், Human Rights Watch போன்ற சில குழுக்களின் "உதவியோடு" கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் புலிகளின் ரகசிய அடிப்படைக் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றனர். இப்பொழுது இலங்கையில் நடக்கும் low intensity conflict-இல் இரண்டு பக்கங்களுமே தவறிழைப்பதாக நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகள் நினைக்கின்றன. எனவே புலிகள் எதிர்பார்த்த ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

தமிழகத்துக்கு கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 3,000 அகதிகள் வந்துள்ளனர். வந்துள்ள பலரும் புலிகள்தாம் தங்களைத் தமிழகத்துக்குப் போகுமாறு சொன்னதாகச் சொல்கின்றனர். [உடனே என்னைத் தமிழ் எதிரியாகச் சித்திரிக்கவேண்டாம். நான் கலந்துகொண்ட சில பேச்சுகளில் ஈழத்தமிழ் அகதிகளிடையே உழைக்கும் சில தொண்டு அமைப்புகளின் தன்னார்வலர்கள் சொன்ன செய்தி இது.] ஆனால் இந்த அகதிகள் தமிழகத்துக்கு வந்தது இங்குள்ள அரசியல் நிலைமையை எந்த அளவும் மாற்றவில்லை. தொடர்ந்து இந்திய அரசு புலிகளைத் தடைசெய்த வண்ணம் உள்ளது. தமிழக ஆட்சிமாற்றம் எந்த விதத்திலும் புலிகளுக்கு ஆதரவானதாக இல்லை. இன்னமும் சொல்லப்போனால் கேலிக்கூத்தாக வைகோ தன் புலிகள் ஆதரவை வைத்து தயாநிதி மாறனை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார் என்று திமுக எம்.பிக்கள் பிரச்னை எழுப்பி அதன்மூலம் வைகோ, விடுதலைப் புலிகள் இருவருக்கும் பழி தேடித்தரப் பார்க்கிறார்கள்.

இலங்கைப் பிரச்னையில் விடுதலைப் புலிகள் கடந்த வருடம் எடுத்த நிலைப்பாடு தவறானதாகவே இதுவரை சென்றுள்ளது. இன்று விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழர்களின் நியாயமான பிரதிநிதிகள் என்ற வகையில் இந்தத் தவறான முடிவுகள் அனைத்தும் நேரடியாக ஈழத்தமிழர்களை பாதிக்கிறது.

[பி.கு: நான் கடைசியாகச் சென்றிருந்த ஒரு பேச்சு: Geneva Peace Talks: Political and Peace Developments in Sri Lanka"- தரிணி ராஜசிங்கம், 11 ஏப்ரல் 2006. அந்தப் பேச்சின்போது நான் எடுத்துவைத்த குறிப்புகளைக் கொண்டு பதிவெழுத நினைத்து, பின்னர் ஒட்டுமொத்தமாக விட்டுத்தள்ளிவிட்டேன். இந்தப் பேச்சின்போதுதான் தமிழகத்தில் உள்ள சில தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்கள் அகதிகள் பற்றி சொல்வதைக் கேட்டேன்.]

Friday, June 02, 2006

ரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்

நான் எழுதிய இந்தக் கட்டுரையை முன்னதாகப் படித்துவிடவும். கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு

இந்தக் கட்டுரை 10 நாள்களுக்கு முன்னதாக எழுதப்பட்டது. இன்று 'தி ஹிந்து'வில் வெளியான செய்தி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்கும் என்று சொல்கிறது.

கோதுமை கொள்முதலில் ஏற்பட்ட பயங்கரமான வீழ்ச்சியினால் அரசு வேறு வழியின்றி மாநில அரசுகளுக்குத் தரும் கோதுமையின் விலையை ஏற்றவேண்டியுள்ளது. அத்துடன் மாநிலங்களுக்குக் கொடுக்கும் கோதுமையின் அளவையும் குறைக்கவேண்டியுள்ளது. அது போதாது என்று அரிசியின் விலையையும் ஏற்றப்போகிறார்கள்.

இதனால் தமிழகத்துக்கு என்ன நஷ்டம்? முதல்வர் கருணாநிதி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி அரிசி கிலோ ரூ. 2/-க்குக் கொடுக்கப்போகிறார். நாளை அவரது பிறந்த நாள் முதல்! அரிசி ரூ. 2 என்று வைத்து விற்றால் ரேஷன் கடைகளில் விற்பனை அதிகமாகும். இதனால் மட்டுமே மான்யத் தொகை அதிகமாகும் என்று நான் முன்னம் சொல்லியிருந்தேன். இப்பொழுது மத்திய அரசு விற்கும் அரிசியின் விலையை ஏற்றினால் தமிழகத்துக்கு ஆகும் மான்யச் செலவு நிச்சயமாக அதிகமாகும்.

கருணாநிதியால் மத்திய அரசை வற்புறுத்தி மாநில அரசுக்கு விற்கும் விலையைக் குறைக்க வைக்க முடியும் என்று சிலர் சொன்னார்கள். சிதம்பரம் "it is feasible" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். ஆனால் நாளை அரிசி விலையை சத்தமில்லாமல் ஏற்றப்போகிறார். அப்பொழுது தமிழக அரசால் புலம்ப மட்டும்தான் முடியும்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வருடம் பட்ஜெட்டின்போதோ அல்லது Policy Note எழுதும்போதோ அரிசிக்கான மான்யம் என்று ரூ. 2,500 கோடி அல்லது அதற்கு அதிகமாக, செலவாகக் காட்டுவார்கள்.

இதிலிருந்து மீள ஒரே வழிதான் உள்ளது.

அரிசி ரூ. 2/- என்பதை வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்றும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு ரூ. 10/- என்றும் வைக்க வேண்டும்.

அரிசி மான்யம் பற்றிய என் முந்தைய பதிவுகள்:

அரிசி அரசியலும் கோதுமை அரசியலும்
அரிசி மான்யம் redux
அரிசி மான்யம் (Rice subsidy)

கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு

முன்னெச்சரிக்கை: இந்தக் கட்டுரை 'சுதேசி செய்திகள்' என்ற பத்திரிகைக்காக (ஜூன் 2006) எழுதப்பட்டது. சுதேசி செய்திகள், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச்) என்னும் இயக்கத்தால் நடத்தப்படுவது. இந்த அமைப்பு RSS இயக்கத்தின் குடைக்குள் வருவது.

கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு

கடந்த ஆறு வருடங்களில் நடக்காத ஒன்று இந்த வருடம் நடந்துள்ளது; மேலும் நடக்கவுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவிலிருந்து 3.5 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. மேற்கொண்டு கிட்டத்தட்ட 30 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப்போகிறது.

திடீரென நம் நாடு குறைவான அளவு உணவை உற்பத்தி செய்கிறதா? ஏன் கோதுமையை வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு நாம் வந்துள்ளோம்?

இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவது, கோதுமை பயிரான அளவு கடந்த வருடத்தில் குறைந்துள்ளது என்பது. அதிக வெப்பத்தாலும் சரியான மழையின்மையாலும் ராபி பயிர் கிட்டத்தட்ட 10-15% குறைந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

இரண்டாவது மத்திய அரசின் கோதுமை கொள்முதல் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக உள்ளது என்பது. பொதுவாக மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட விலையைக் கொடுத்து கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வார்கள். ஆனால் கடந்த வருடத்தில் கோதுமையை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்க அரசு விவசாயிகளுக்கு அனுமதி கொடுத்தது. மத்திய அரசு கொள்முதல் விலையாக முதலில் நிர்ணயித்திருந்தது கிலோவுக்கு ரூ. 6.50. பின்னர் இந்த விலையை அதிகரித்து கிலோவுக்கு ரூ. 7.00 கொடுக்க முன்வந்தனர். விவசாயிகளுக்கோ வெளிச்சந்தையில் கிலோவுக்கு ரூ. 8.70 முதல் ரூ. 10.00-ம் அதற்குமேலும் கிடைத்தது. கார்கில், ஐ.டி.சி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இத்தகைய விலை கொடுத்து கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கியுள்ளனர். ஒருவிதத்தில் இதனால் விவசாயிகளுக்கு லாபம் என்றாலும்கூட இந்தக் காரணத்தால் அரசு எதிர்பார்த்த அளவுக்கு மத்திய அரசால் கோதுமையைக் கொள்முதல் செய்யமுடியவில்லை.

ஜனவரி 2002-ல் மத்திய அரசின் கையில் இருந்த கோதுமையின் அளவு 324.15 லட்சம் டன் கோதுமை. இது படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது. ஜனவரி 2003-ல் 288.30 லட்சம் டன்னாகவும், ஜனவரி 2004-ல் 126.87 லட்சம் டன்னாகவும், ஜனவரி 2005-ல் 89.31 லட்சம் டன்னாகவும் இருந்து இப்பொழுது ஜனவரி 2006-ல் 62.00 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

எப்படி இந்த அளவுக்கு கையிருப்பு குறைவதற்கு நம் அரசு அனுமதித்தது? உற்பத்தி கடந்த நான்கு வருடங்களில் இந்த அளவுக்குக் குறைந்திருக்க முடியுமா? உற்பத்தி குறையவில்லை என்றால் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை எங்கு போயுள்ளது? இந்தியர்கள் திடீரென்று அதிகமாக உணவு உட்கொள்கிறார்களா? இந்தியாவின் மக்கள்தொகை திடீரென்று அதிகமாகிவிடவில்லையே? இப்படி நமக்கு ஏகப்பட்ட கேள்விகள் தோன்றுகின்றன.

மூன்றாவது - உணவு அமைச்சர் சரத் பவாரின் கூற்றுப்படி தென்னிந்தியாவில் கோதுமை முன்னில்லாத அளவுக்கு உட்கொள்ளப்படுகிறதாம். இப்பொழுது இறக்குமதி செய்யப்படும் கோதுமை முழுவதும் தென்னிந்தியாவுக்காகத்தான் என்கிறார் உணவு அமைச்சர். அத்துடன் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையை நேரடியாக தென்னிந்தியாவுக்கு இறக்குமதி செய்தால் கொள்முதல் விலை குறைகிறது என்றும் அமைச்சர் சரத் பவார் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அவர் கொடுத்த புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவிலிருந்து நேரடியாக கோதுமையைக் கொள்முதல் செய்தால் குவிண்டாலுக்கு - அதாவது நூறு கிலோவுக்கு - ஆகும் செலவு ரூ. 997. ஆனால் வட இந்தியாவிலிருந்து கோதுமையை தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்தால் அதற்கு ஆகும் செலவு குவிண்டாலுக்கு ரூ. 1,100க்கும் மேல் ஆகலாமாம். ஆக இதன்மூலம் இந்திய விவசாயிகளுக்கு சற்று அதிகம் பணம் கிடைப்பதைவிட ஆஸ்திரேலியாவுக்குப் பணம் போனால் போகட்டும் என்கிறார் நம் உணவு அமைச்சர். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

இந்திய விவசாயிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள். குவிண்டாலுக்கு ரூ. 700 கொடுத்து வட இந்தியாவில் வாங்கும் கோதுமையை தென்னிந்தியாவுக்கு அனுப்ப ரூ. 400க்கும் மேலாகவா ஆகிறது? மத்திய அரசின் நிர்வாகம் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்ன? தென்னிந்தியாவில் நிஜமாகவே கோதுமையின் தேவை அதிகமாக ஆகியுள்ளதா? உண்மையில் என்ன நடக்கிறது?

மற்றொருபக்கம் மத்திய அரசின் அரிசி கொள்முதல் அதிகமாகியுள்ளதாக பிசினஸ்லைன் செய்தித்தாள் தெரிவிக்கிறது.

Conspiracy theory என்று சொல்வார்கள். சிலர் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டி இந்தியாவை இந்த நிலைக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லலாமா? அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை எடுத்துக்கொள்வோம். இவை தேவைக்கும் அதிகமாக கோதுமையை உற்பத்தி செய்கின்றன. சொல்லப்போனால் அமெரிக்கா தனது விவசாயிகளை உற்பத்தியைக் குறைக்கச் சொல்லி - அதாவது பயிரிடும் பரப்பளவைக் குறைப்பது, உற்பத்தி செய்த தானியங்களை அழிப்பது ஆகியவற்றின்மூலம் - அவ்வாறு குறைப்பதற்காக இவர்களுக்கு மான்யம் கொடுக்கிறது. ஏனெனில் இவர்கள் மிக அதிகமாக உற்பத்தி செய்வது அனைத்தும் பொதுச்சந்தைக்கு வந்தால் அதனால் உணவுப்பொருள் விலை வெகுவாகக் குறையும். இது அந்த நாட்டின் சிறு விவசாயிகளை ஒரேயடியாக அழித்துவிடும்.

சரி, அதையும் மீறி உருவாக்கிய மலைபோன்ற தானியங்களை என்ன செய்வது? எந்த விலை கிடைத்தாலும் அந்த விலையை வாங்கிக்கொண்டு உணவுப்பொருளை வேறு நாடுகளுக்கு விற்றுவிடவேண்டியதுதான்!

பின் என்ன ஆகும்? முதலில் விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று இந்தியா வெளிநாட்டு உணவுப்பொருளை வாங்கும். இதே நேரம் சரியான விலை கிடைக்காமல் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள்; சிறிதுசிறிதாக விவசாயத்தை விட்டு வெளியேறி பிற வேலைகளுக்குச் செல்வார்கள். நாளடைவில் இந்தியா பெருமளவுக்கு அல்லது முழுதாக வெளிநாட்டில் விளையும் உணவுப்பொருளை நம்பி வாழவேண்டி இருக்கும். அப்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கோதுமை விலையை அதிகரித்துக்கொண்டேபோனால் உயிர்வாழ்வதற்காக என்ன விலை கொடுத்து தானியங்களை வாங்கினாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படும். இப்பொழுது பெட்ரோலியத்துக்கு முழுவதுமாக வெளிநாட்டை நம்பியிருப்பதுபோல நாளை கோதுமைக்கும் வெளிநாட்டை நம்பியிருக்கவேண்டியிருக்கலாம்.

இதை மனத்தில்கொண்டே பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்து அதை நாட்டிலிருந்து வெளியே கொண்டுபோவதும் மற்றொரு பக்கம் குறைந்த விலையில் கோதுமையை இந்திய அரசுக்கு விற்பனை செய்வதுமாக இருக்கலாம். இப்படியும்கூட ஒரு conspiracy theory இருக்கலாம்.

நமது கற்பனை பொய்யாக இருந்தால் நல்லது. உண்மையாக இருந்தால்?

வெளிநாட்டிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்வதில் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. ஆஸ்டிரேலியாவிலிருந்து வந்த கோதுமையில் ரசாயன உரம் அதிகமாக இருந்தது என்று பேசப்பட்டது. பின அரசு அவசர அவசரமாக எல்லாம் சரியாகத்தான் உள்ளது என்று தனக்குத்தானே சான்றிதழ் வழங்கிக்கொண்டது. டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில் சென்னையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆஸ்திரேலியா கோதுமையில் இந்தியாவில் இல்லாத சில களைகளும் (weeds) பூச்சிகளும் (pests) உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பூச்சிகளும் களைகளும் இந்தியாவில் பரவினால் வரும் வருடங்களில் பயிராகும் கோதுமைக்குப் பெருமளவு பாதிக்கப்படும்!

இந்தப் பிரச்னையிலிருந்து மீள அரசு என்ன செய்யலாம்?

1. வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களை இந்தியாவில் கோதுமை, அரிசி போன்ற பொருள்களை வாங்குவதில் இருந்து முழுமையாகத் தடை செய்யலாம். இந்திய நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதிக்கலாம்.

2. வெளிநாட்டுக்குப் பணம் போவதற்கு பதிலாக இந்திய விவசாயிகளுக்கே போய்ச்சேருமாறு அதிக விலை கொடுத்து அரசே அவர்களிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்யலாம். அதன்மூலம் கோதுமைக் கையிருப்பை அதிகமாக்கலாம். இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகமாகும், அவர்களது வாழ்வும் வளம்பெறும்.

3. நியாயவிலைக் கடைகளில் வறுமைக்கோட்டுக்குக்கீழே இருப்பவர்கள்தவிர பிறருக்கான கோதுமை விற்பனை விலையை அதிகரிக்கலாம். இன்றைய தேதியில் உணவுப்பொருளுக்கு ஆகும் செலவைவிட அதிகமாக இன்று நாம் போக்குவரத்துக்கும் கல்விக்கும் பிறவற்றுக்கும் செலவு செய்கிறோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மேலே போய்க்கொண்டே இருக்கிறது!

4. கோதுமை, அரிசி இரண்டின் கொள்முதலையும் பொருத்து மக்களை இரண்டு தானியங்களையும் உண்பதற்குப் பழக்கப்படுத்தலாம்.

மொத்தத்தில் பிற நாட்டிலிருந்து உணவுப்பொருளை இறக்குமதி செய்வதன்மூலம் நம் நாடு அழியாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் உடனடியாகச் செய்யவேண்டும். இப்பொழுது உள்ளே வந்திருக்கும் 3.5 லட்சம் டன் கோதுமைக்கு மேலாக 30 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யாமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்.

தடையற்ற வர்த்தகம் பிற பொருள்களுக்கு இருக்கலாமே தவிர, உணவுப்பொருளுக்கு என்று வந்துவிட்டால் நிலைமை மிக மோசமாக ஆகிவிடும். அதுவும் staple food என்று சொல்லப்படும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் இறக்குமதி செய்வது நம்மை மொத்தமாக அழிவை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்

குமார், நாகப்பட்டினத்தில் நான் வசித்த அதே தெருவில் - பெருமாள் வடக்கு மடவிளாகம் - வசித்தவர். எங்களுக்கெல்லாம் பெரிய அண்ணா. இவர் தினமும் கையில் T-Square எடுத்துக்கொண்டு பாலிடெக்னிக் போகும்போது நான் மூன்றாவதோ என்னவோ படித்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது சிங்கப்பூரில் இருக்கிறார். நாகையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் பற்றி எழுதியிருக்கிறார்: ஒன்று | இரண்டு | மூன்று

Thursday, June 01, 2006

தமிழ் கட்டாயப்பாடம்

தமிழகக் கல்வித்துறையின்கீழ் வரும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக இந்த ஆண்டு முதல் ஆக்கப்படுகிறது என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக, வரும் பத்து வருடங்களில் எல்லா வகுப்புகளுக்குமாக அமையும்.

இன்று பள்ளிக்கூடங்களில் தமிழ் படுமோசமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. வலைப்பதிவுகளை மேலோட்டமாக மேய்ந்தால் நான் சொல்வது தெரியவரும். பிழையின்றி நல்ல தமிழில், அதே சமயம் புரிந்துகொள்ளக்கூடியவகையில், எழுதுபவர்கள் மிகச்சிலரே. 'தமிழே என் உயிர்' என்று கோஷம்போடும் பலரும்கூட படு மோசமான தமிழில் எழுதுகிறார்கள். இன்பத்தமிழ், வெல்லத்தமிழ் என்று பாரதிதாசனிடமிருந்து மேற்கோள்கள் பெறும் அன்பர்கள்கூட காதுவலிக்கும் தமிழில்தான் எழுதுகிறார்கள்.

பத்திரிக்கைகளில் நாம் காணும் பிழைகள் நம்மைக் கூசவைக்கின்றன. தேர்தல் அறிக்கைகள் முதற்கொண்டு தெரு போஸ்டர் வரை பிழையான தமிழ்தான்.

இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்களால்தான் நல்ல தமிழில் எழுதமுடிகிறது.

கடந்த சில வருடங்களாக பள்ளிகளில் தமிழை ஒருபொருட்டாக யாரும் மதிக்காத காரணம் தமிழ் மதிப்பெண்கள் தொழில் கல்விக் கல்லூரிகளில் நுழைவுக்கான ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப்படாததுதான். அதற்காக உடனடியாக தமிழ் மதிப்பெண்களை நுழைவுத்தேர்வில் எப்படியாவது நுழைத்துவிடலாம் என்று சிலர் சொல்வதை நான் ஏற்கவில்லை.

தமிழ் அல்லது ஆங்கிலம் - எதுவாக இருந்தாலும் மொழியின் அடிப்படைத் தேவை என்ன என்பதைப் பள்ளிகளும் கல்லூரிகளும் உணர்வதில்லை. நம் சிந்தனைகளைச் சரியாக வெளிப்படுத்த மொழி ஆளுமை அவசியம் என்பதைப் பள்ளிகள், கல்லூரிகள் ஏற்றுக்கொள்ளாமையே பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். சிந்தித்து எழுதுவது என்பதே தேவையில்லாதது; படித்து மனப்பாடம் செய்து அதை மீண்டும் வாந்தியெடுத்தால் போதும் என்ற நிலையில் சிந்தனை எதற்கு, மொழி எதற்கு என்று மாணவர்களும் ஆசிரியர்களும் நினைக்கிறார்கள்.

இன்று எங்கள் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் வேலைக்குச் சேர்கிறார். எங்கள் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கு ஒழுங்காகத் தமிழ் கற்பிக்க. எங்களது புத்தகங்களில் உள்ள பிழைகளை முற்றிலுமாகக் களைய நாங்கள் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன சில விஷயங்கள் நம்மை பயமுறுத்துகின்றன. 10வது, 12வது தமிழ்ப்பாடத் தேர்வில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருந்தால் அவற்றைக் கண்டுகொள்ளவேண்டாம், கருத்துப்பிழை இருந்தால்மட்டும் அதற்கு மதிப்பெண்கள் குறைக்க வேண்டும் என்ற நிலையாம் இப்பொழுது. அப்படி இருந்தால் எப்படி ஒருவர் பிழையின்றி தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுவார்?

ஆங்கிலத்தில் எழுதும்போதோ, பேசும்போதோ பிழைகள் இருந்தால், அதை மற்றொருவர் சுட்டிக்காட்டினால் நமக்குக் கூச்சம் ஏற்படுவதில்லையா? அதேபோன்ற கூச்சம் தமிழில் நாம் தவறாக எழுதும்போதோ பேசும்போதோ அது சுட்டிக்காட்டப்பட்டால் நமக்கு ஏற்படவேண்டும்.

பள்ளிக்கூடத்தில் தமிழ் ஒரு பாடமாக இருந்தால் மட்டும் போதாது. ஒழுங்கான தமிழ், பிழையில்லாத தமிழ் கற்றுக்கொடுக்கப்படவேண்டும். இதை அரசாணைகளால் திணிக்க முடியாது. ஆனால் சரியான மொழி ஆளுமை இல்லாத மாணவர்களால் பிற்காலத்தில் உருப்படமுடியாது என்ற எண்ணத்தைப் புகட்டவேண்டும்.

தமிழைக் கட்டாயப்பாடமாக்குவது, தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவது போன்றவற்றை வெறும் அரசியல் பிரச்னைகளாக மட்டும் நினைத்துப் பார்க்கக்கூடாது. மனிதவள மேம்பாட்டின் மிக முக்கியமான அங்கங்களாக இவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதே சமயம் ஆங்கிலமோ, இந்தி முதற்கொண்ட பிற இந்திய மொழிகளோ எதுவாயினும் தேவைக்கேற்றவாறு அதனையும் பிழையின்றித் தெரிந்துகொள்ள மாணவர்கள் முற்பட வேண்டும்.