Thursday, August 30, 2007

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ப்ராஜெக்ட்

INFITT அமைப்பின் விவாதமேடையில் இரண்டு விஷயங்களை நான் நிர்வகிக்க உள்ளேன்.

1. பொறியியல் நான்காம் ஆண்டு ப்ராஜெக்ட் - தமிழ் + கணினி தொடர்பானது
2. தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பானவை

பொறியியல் கல்லூரி மாணவர்கள் தமிழ் கணினி தொடர்பாக ப்ராஜெக்ட் செய்ய விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளவும். (மொபைல் எண்: 098840-66566)

உத்தமம் (INFITT) உறுப்பினர் சேர்க்கை

நண்பர்களே,

இணையம், கணினியில் தமிழ் வளர்வதற்கு உதவ கணினி வல்லுனர்கள், தன்னார்வலர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றும் லாப நோக்கில்லாத அமைப்பு உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) - ஆங்கிலத்தில் INFITT.

இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர கட்டணம் உண்டு. இந்தியா, இலங்கை ஆகிய இடங்களிலிருந்து உறுப்பினராக கட்டணம் US$10, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலிருந்து உறுப்பினராக US$25.

தமிழ்க் கணிமையை முன்னெடுத்துச் செல்ல இந்த அமைப்பில் உறுப்பினராக உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

Wednesday, August 29, 2007

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி எகானமிஸ்ட்

எகானமிஸ்ட் பத்திரிகை உலக அரசியல், பொருளாதார விஷயங்களைப் பற்றி எழுதும் பத்திரிகை. உலக அரங்கில் மிகவும் பாராட்டப்படும் பத்திரிகை.

பொதுவாக அவர்கள் இந்தியா பற்றி எழுதுவது எனக்கு எரிச்சலைத்தான் வரவழைக்கும். ஒருவித எகத்தாளம் தொனிக்கும் supercilious கட்டுரைகளாகவே அவை இருக்கும்.

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி அவர்கள் எழுதியிருப்பதைப் படியுங்கள்.

இதைப் படித்தால் எந்த அளவுக்கு உலகில் இந்திய அமெரிக்க ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று தெரியும். அத்தனை எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவிடம் ஒரு நல்ல ஒப்பந்தம் செய்துகொண்டு வந்தால் இங்கே உள்நாட்டில் மன்மோகன் சிங்குக்குக் கிடைப்பது முழு அவப்பெயர்! ரோனென் சென்னுக்கு ஏன் கோபம் வராது?

Tuesday, August 28, 2007

1...2...3... ஷாக் - ஞாநி - ஓ பக்கங்கள்

எனது முந்தைய பதிவில் நகுல் இவ்வாறு கேட்டிருந்தார்.

"Can you read this week's "O Pak-kangal" article by Gyani in Ananda Vikatan..
His doubts and thoughts also looks like 100% Valid!
Can u read it and share your thoughts?"

எனவே ஓ பக்கங்களைப் படித்து ஞாநி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன். ஞாநி 123 ஒப்பந்தம், ஹைட் சட்டம் என்று எதையும் படிக்கவில்லை என்று நன்றாகத் தெரிகிறது. ஞாநி, இந்த ஒப்பந்தம் மோசமானது என்பதற்குச் சொல்லும் காரணங்களைப் பார்ப்போம்:

ஞாநி: அணு மின்சாரம் தயாரிக்கும் எல்லா உலைகளையும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் நேரடிக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். இதன்படி இந்தியாவின் மொத்த 22 உலைகளில் 14-ஐ கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா சம்மதித்திருக்கிறது.

பத்ரி: இதில் தவறு எதுவுமே இல்லை. இந்தியா ஏகப்பட்ட யுரேனியத்தைத் தானே தயாரித்துத் தன் கையில் வைத்திருந்தால் அதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் யுரேனியம் இல்லை என்றுதானே அடுத்தவனிடம் அதைக் கேட்கப் போகிறோம்? அப்படிப் பெறும் யுரேனியத்தை மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது. அது ஓப்பந்தத்தின் ஒரு ஷரத்து. இந்த யுரேனியத்தை இந்தியா திருட்டுத்தனமாக வேறு காரியத்துக்கு எடுத்துக்கொள்ளாது என்பதை யார் கண்காணிப்பது? அங்குதான் IAEA வருகிறது.

அவர்களது இணையத்தளத்தில் அவர்கள் என்னவிதமான வேலையைச் செய்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார்கள்: "[IAEA] Inspectors work to verify that safeguarded nuclear material and activities are not used for military purposes."

எனவே அமெரிக்கா இதை எதிர்பார்ப்பது தவறில்லை. இந்தியா ஏற்றுக்கொண்டதிலும் தவறில்லை.

ஞாநி: அணு மின்சார உலைகளில் பயன்படுத்திய எரிபொருளை மறுபயன்பாட்டுக்குச் சுத்திகரிப்பதற்கு அதி நவீன தனி உலை ஏற்படுத்தி, அதை அமெரிக்க, சர்வதேச அணுசக்தி அமைப்புகளின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். இதற்கும் இந்தியா சம்மதித்துவிட்டது.

பத்ரி: ஞாநி சிறு விஷமத்தில் ஈடுபடுகிறார். ஒப்பந்தம் IAEA கட்டுப்பாடு என்றுதான் சொல்கிறது. ஞாநி அதை "அமெரிக்க, சர்வதேச அணுசக்தி அமைப்புகளின் கண்காணிப்புக்கு" என்று மாற்றுகிறார். ஒப்பந்தம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்: "India will establish a new national reprocessing facility dedicated to reprocessing safeguarded nuclear material under IAEA safeguards and the Parties will agree on arrangements and procedures under which such reprocessing or other alteration in form or content will take place in this new facility."

ஆக IAEA safeguards மட்டும்தான் தேவை. அதுவும் மேலே ஏற்கெனவே சொன்னதுதான்.

ஞாநி: அணு மின்சாரத் தயாரிப்புக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள் சில அணுகுண்டுத் தயாரிப்பிலும் பயன்படுமானால், அவற்றை அமெரிக்காவோ, இதர நாடுகளோ இந்தியாவுக்குத் தரக்கூடாது என்பது முக்கியமான ஷரத்து.

மறுபடியும் இந்தியா அணுகுண்டுச் சோதனை நடத்தினால், ஒப்பந்தம் ரத்தாகிவிடும். கொடுத்தவற்றையெல்லாம் அமெரிக்கா திரும்ப எடுத்துக்கொள்ளும். அதே சமயம், இந்தியா இந்த ஒப்பந்தத்தின்கீழ் தன் உலைகளைச் சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு உட்படுத்தியது மட்டும் ரத்தாகாது. ஒப்பந்தம் ரத்தானும், கண்காணிப்பு என்றென்றும் தொடரும். இதற்கும் இந்தியா சார்பாக மன்மோகன் சிங் சம்மதித்திருக்கிறார்.

பத்ரி: இந்த ஒப்பந்தம் 'அமைதிப்பணி'களுக்கானது. எனவே இந்தியா அணுகுண்டு தயாரிக்க இந்த ஒப்பந்தத்தின்மூலம் பெறும் இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அமெரிக்கா கேட்டுக்கொள்வது நியாயமானது.

அடுத்து IAEA உடனான ஒப்பந்தம். முதலில் 123 வாசகங்களைப் பார்ப்போம்.

"... an India-specific safeguards agreement will be negotiated between India and the IAEA providing for safeguards to guard against withdrawal of safeguarded nuclear material from civilian use at any time as well as providing for corrective measures that India may take to ensure uninterrupted operation of its civilian nuclear reactors in the event of disruption of foreign fuel supplies. Taking this into account, India will place its civilian nuclear facilities under India-specific safeguards in perpetuity and negotiate an appropriate safeguards agreement to this end with the IAEA."

IAEA உடனான ஒப்பந்தம் "in perpetuity" - அதாவது எப்பொழுதும், காலம் காலத்துக்கும் இருக்கக்கூடியது, என்பது உண்மைதான். இது நல்லதா, கெட்டதா? உலகின் பல நாடுகள் தாங்களாகவே முன்வந்து IAEA உடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின்படி, எந்தெந்த அணு உலைகளை IAEA பாதுகாக்கிறதோ அங்கு வரும் அணு எரிபொருள் மற்றும் பிற தொழில்நுட்பம் அமைதிப்பணிகளுக்காக அன்றி அணுகுண்டுகள் தயாரிக்க அனுப்பப்படாது.

123 ஒப்பந்தம் முறிவடைந்தாலும் இந்தியாவிடம் இப்பொழுது இருக்கும் 22 அணு உலைகளில் உள்ள 14 எப்பொழுதுமே IAEA கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

மீதமுள்ள அணு உலைகள் (8), இனி இந்தியா கட்ட இருக்கும் அணு உலைகள் ஆகியவை IAEA கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. இந்தியா உள்நாட்டில் உற்பத்தி செய்யும் யுரேனியம், பிற அணு எரிபொருள்களை வைத்துக்கொண்டு சந்தோஷமாக அணுகுண்டுகளைத் தயாரித்துக்கொள்ளலாம். அதையெல்லாம் IAEA கண்டுகொள்ளது.

இதிலும் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியும் அமெரிக்கா, இல்லாவிட்டால் ரஷ்யா, இல்லாவிட்டால் வேறு ஏதோ வெளிநாடுதான் யுரேனியத்துக்கு கதி என்றாகிவிட்டபிறகு IAEA கட்டுப்பாடு பற்றி ஏன் கூப்பாடு போடுகிறோம்? இதில் அமெரிக்காவிடம் நாம் சரணடையவில்லையே? IAEA என்பது ஐ.நா சபையின்கீழ் இயங்கும் ஓர் அமைப்புதானே?

ஞாநி: ஒப்பந்தம் ரத்தாவதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்?

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் முதல் காரணம், இந்தியா மறுபடியும் அணுகுண்டு வெடிப்பு சோதனை செய்தால் ஒப்பந்தம் ரத்தாகும். ஆனால் இது 123 அக்ரிமெண்டில் சொல்லப்படவில்லை. இது நிறைவேறுவதற்கு முன்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர்கள் போட்ட ஹைட் சட்டத்தில் இருக்கிறது.

...

ஒப்பந்தப்படி அமெரிக்கா அணுசக்திக்கான எரிபொருள், தொழில்நுட்பம், இயந்திரங்கள் தருவதில் பிசகினால் இந்தியா ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியுமா? இந்திய நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யச் சொல்ல முடியுமா? முடியாது. ஒப்பந்தத்தில் இதற்கு இடம் இல்லை!

பத்ரி: ஞாநி சொல்வது முழுத்தவறு. இந்தியா விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை ரத்துசெய்யலாம். ஒப்பந்த்தத்தில் இந்த ஷரத்தைப் பாருங்கள்: (ARTICLE 14 - TERMINATION AND CESSATION OF COOPERATION)

"Either Party shall have the right to terminate this Agreement prior to its expiration on one year's written notice to the other Party. A Party giving notice of termination shall provide the reasons for seeking such termination. The Agreement shall terminate one year from the date of the written notice, unless the notice has been withdrawn by the providing Party in writing prior to the date of termination."

எப்பொழுது வேண்டுமானாலும் - யார் வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம். என்ன காரணம் என்று சொல்லவேண்டும். அந்தக் காரணம் - "அமெரிக்கா ஒப்பந்த ஷரத்துகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை" என்பதாகவும் இருக்கலாம்.

"If a Party seeking termination cites a violation of this Agreement as the reason for notice for seeking termination, the Parties shall consider whether the action was caused inadvertently or otherwise and whether the violation could be considered as material. No violation may be considered as being material unless corresponding to the definition of material violation or breach in the Vienna Convention on the Law of Treaties."

அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தப் பிசகு தெரியாமல் ஏற்பட்டதா, வேண்டுமென்றே ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப அதைச் சரி செய்யமுடியுமா, முடியாதா என்று பார்த்து, சரிசெய்ய முடியாதென்றால் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்தில் ரத்து செய்யமுடியும்.

ஞாநி சொல்வதுபோல இந்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானதல்ல.

ஆனால் ஒன்று... இந்தியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால், அமெரிக்கா தான் கொடுத்த எரிபொருளைத் திரும்பக் கேட்கலாம். அதுவும் நியாயம்தானே? அப்படிக் கேட்டால் அதை இந்தியா உடனடியாகக் கொடுக்கவேண்டியதில்லை. தனது அணு உலைகள் நின்றுவிடாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்துகொள்ள இந்தியாவுக்கும் உரிமை உள்ளது. அத்துடன் எரிபொருளைத் திரும்பக் கொடுத்தாலும் அதற்கென இந்தியா முன்னர் கொடுத்திருந்த பணத்தைத் திரும்பக் கேட்கலாம்.

எனவே எல்லாவித இக்கட்டுகளையும் எதிர்பார்த்தே இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது.

ஞாநி: அதுமட்டுமல்ல, அணு சக்தி பற்றிய இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையே அமெரிக்கக் கொள்கையுடன் இசைவாக இருக்கவேண்டும் என்பது 123 அக்ரிமெண்டின் இன்னொரு ஷரத்து. குறிப்பாக இரான் நாடு அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் இந்தியா ஆதரிக்க வேண்டும். இதற்கும் இந்தியா சம்மதித்திருக்கிறது.

பத்ரி: இது பெரும் புளுகு. முதலில் இதுபோன்ற ஒரு ஷரத்து 123 ஒப்பந்தத்தின் இல்லவே இல்லை. மேற்கண்ட விஷயம் கண்ணில் படுவது ஹைட் சட்டத்தில்தான். அப்படி இந்தியாவின் கையை முறுக்க முடியாது என்றும் தான் ஹைட் சட்டத்தின் இந்த ஷரத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு (அதாவது குடியரசுத் தலைவருக்கு) அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய முழு அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே என்றும் அதனை செனட்டால் கட்டுப்படுத்த இயலாது என்று தான் நம்புவதாகவும் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். அது தொடர்பான சுட்டிகளை எனது முந்தைய பதிவுகளில் காட்டியுள்ளேன்.

அடுத்து இரான் தொடர்பானது. இந்தியா எந்தவிதத்திலும் அமெரிக்காவின் இரான் கொள்கைகளை ஆதரிக்கவேண்டியதில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு இந்தியா எந்தச் சம்மதமும் தெரிவிக்கவில்லை.

ஞாநி இதுபோன்ற பொய்களைப் பரப்பக்கூடாது.

ஞாநி: மேற்படி ஒப்பந்த விவரங்களைப் படிக்கும் எவருக்கும் இந்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்பது தெளிவாகப் புரியும். அவை பற்றிக் கேள்வி கேட்டால், "அவற்றையெல்லாம் அமெரிக்க காங்கிரஸிடம் சொல்லித் தளர்த்தச் செய்ய, தன் செல்வாக்கைப் பயன்படுத்துவதாக புஷ் என்னிடம் சொல்லியிருக்கிறார்" என்கிறார் மன்மோகன் சிங்.

பத்ரி: ஞாநி கொடுத்திருக்கும் மேற்படி விவரங்களை என்னுடைய விளக்கங்களுடன் படித்தால் ஒப்பந்தம் மிகவும் கண்ணியமானது, இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தக் குந்தகத்தையும் விளைவிப்பதல்ல என்று புரியவரும். எனவே மன்மோகன் சிங் மீது அவதூறு வீசுவதை ஞாநி, கம்யூனிஸ்டுகள், பாஜக ஆகியோர் நிறுத்தவேண்டும்.

Monday, August 27, 2007

உள்ளாட்சிகள் நூலகங்களுக்குத் தரவேண்டிய பாக்கி

ஒவ்வோர் உள்ளாட்சியும் - பஞ்சாயத், நகராட்சி, மாநகராட்சி - சொத்து வரி வசூலிக்கும்போது Library Cess எனும் நூலக வரியைச் சேர்த்து வசிக்கவேண்டும். இந்தப் பணத்தை பொது நூலகத்துறைக்கு அனுப்பவேண்டும். இந்தப் பணத்தைக் கொண்டு நூலகத்துறை புத்தகங்களை வாங்குவதற்கும் நூலகங்களை நடத்துவதற்கும் புதிய நூலகங்களைக் கட்டுவதற்கும் செலவழிக்கவேண்டும்.

இதைப் பற்றி நான் 31 மே 2006 எழுதிய பதிவு.

அந்தப் பதிவில், லைப்ரரி செஸ் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்று எழுதியிருந்தேன்.

அதே சமயம், தி ஹிந்துவில் வந்திருக்கும் ஒரு செய்தியில் உள்ளாட்சிகள் தாங்கள் வசூலிக்கும் லைப்ரரி செஸ் வரியை நூலகத்துறைக்குத் தராமல் வேறு எதற்கோ செலவு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. உள்ளாட்சிகள் தரவேண்டிய பாக்கி சுமார் 85 கோடி ரூபாய் என்று சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா (திமுக) தெரிவித்துள்ளார்.

இந்தப் பணத்தை உள்ளாட்சிகளிடமிருந்து எப்படிப் பெறுவது என்று தமிழக அரசுக்குத் தெரியவில்லையென்றால் நான் ஓர் ஆலோசனை சொல்வேன். உள்ளாட்சித் துறை ஆண்டுக்கு ஒவ்வோர் உள்ளாட்சி அமைப்புக்கும் பணம் தருகிறதல்லவா? அந்தப் பணத்திலிருந்து தேவையானதைக் கழித்துவிட்டு மீதியைக் கொடுத்தால் போதும்.

லைப்ரரி செஸ் என்பது நூலகங்களின் வளர்ச்சிக்காக என்று வசூலிக்கப்படும் தொகை. இதைக் கையகப்படுத்தி வேறு காரியங்களுக்கு அனுப்ப உள்ளாட்சிகளுக்கு அனுமதியில்லை.

85 கோடி ரூபாயில் பல ஆயிரம் புது நூலகங்களை அமைக்கமுடியும், பல புத்தகங்களை வாங்கமுடியும்..

Sunday, August 26, 2007

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

தமிழக உள்ளாட்சித் துறை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி ஐந்தாண்டுகளில் 12,618 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் வீதம் பணம் ஒதுக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 2500 கிராமப் பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

ரூ. 20 லட்சத்தை எதற்கெல்லாம் செலவு செய்வார்கள்? அடிப்படை வசதிகளை மேம்படுத்த என்று சொல்கிறார்கள்.

இந்தப் பணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நூலகம் அமைப்பது என்று முடிவெடுத்துள்ளார்கள். ஒவ்வொரு நூலகத்துக்கும் இந்த 20 லட்சத்திலிருந்து ரூ. 35,000 புத்தகம் வாங்குவதற்கு என்று முடிவு செய்துள்ளனர். அதிகமாகத் தமிழும், கொஞ்சம் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் இருக்குமாம். இந்த நூலகங்களை உருவாக்கியபின், இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு பொது நூலகத்துறையிடம் வழங்கப்படுமாம்.

இந்த ஆண்டு, இந்த கிராமப் பஞ்சாயத்து நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

Wednesday, August 22, 2007

தலையில்லாக் கோழி

'தலையில்லாக் கோழி' என்ற தொடர் ஆங்கிலத்தில் எதைக் குறிக்கிறது என்றெல்லாம் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள். தலையை ஒரே வெட்டாக வெட்டியபின் கோழிக்குக் கொஞ்சம் உயிர் இருக்கும். தலையற்ற முண்டம் பரபரவென்று அங்கும் இங்கும் ஓடும். அதைப் பார்க்கும்போது அது ஒரே அவசரத்தில் இருப்பதுபோலத் தோன்றும்.

'தலையில்லாக் கோழி' என்ற தொடர், ஆழ்ந்து யோசிக்காமல் அவசர அவசரமாக அதையும் இதையும் செய்வதைக் குறிக்கிறது.

இப்பொழுது அணு ஒப்பந்தம் தொடர்பாக நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்வதைப் பார்த்தால் இந்தச் சொற்றொடரைவிடக் கடுமையான சில சொற்களால் அவர்களைச் சாடலாம் என்றே தோன்றுகிறது.

ஆனால் யார் இதனைச் செய்யலாம்? நிச்சயமாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரோனென் சென் இதனைச் சொல்லியிருக்கக் கூடாது. ராஜாங்க அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி - உண்மை என்றாலும்கூட - சில கருத்துகளை வெளியே சொல்லக்கூடாது.

ஆனால் பொதுமக்களாகிய நாம் நிச்சயமாக, இதுபோன்ற இடைஞ்சல்கள் ஏதும் இன்றி, நம் பிரதிநிதிகளைக் குறை சொல்லலாம்.

அணு ஒப்பந்தப் பிரச்னையை தேவையின்றி ஊதிப் பெரிதாக்கி, அந்தக் குழப்பத்தில் அரசியல் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலையில்லாக் கோழிகள் மட்டுமல்லர், தலையில்லா மனிதர்களும்கூட.

நெய்வேலி, ஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மூன்று புத்தகக் கண்காட்சிகள் தமிழகத்தில் நடைபெற்றன. இவை மூன்றுமே சென்னைக்கு அடுத்து நல்லமுறையில் நிர்வகிக்கப்படும் கண்காட்சிகள்.

இவற்றுள் ஈரோடுக்கு இது மூன்றாவது வருடம்; மதுரைக்கு இரண்டாம் வருடம். நெய்வேலி பத்து வருடங்களைத் தொட்டுவிட்டது. நெய்வேலி கண்காட்சியை நடத்துவது நெய்வேலி நிலக்கரி நிறுவனம். ஈரோடு கண்காட்சியை நடத்துவது மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பு. மதுரை கண்காட்சியை நடத்துவது பபாஸி (BAPASI) எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் கூட்டமைப்பு. சென்னைக் கண்காட்சியையும் இதே அமைப்பே நடத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கோவையிலும் பபாஸி முதல்முறையாக ஒரு கண்காட்சியை நடத்தியது.

சென்னைக்கு அடுத்து ஈரோடு கண்காட்சிதான் கூட்டத்தை அதிகமாகத் திரட்டுவதிலும் விற்பனையிலும் முன்னிலையில் உள்ளது. கோவை, மதுரை கண்காட்சிகள் ஒருவகையில் ஏமாற்றத்தையே அளித்தன. கோவையில் கண்காட்சியைப் பிரபலப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் வெகு சுமார். மதுரையில் சென்ற ஆண்டு மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் தற்போது இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியராக உள்ளார்.

புத்தகக் கண்காட்சிகள் சில ஆண்டுகளாவது தொடர்ந்து ஓரிடத்தில் நடைபெற்றால்தான் மக்கள் மனத்தில் நிலைபெறும். அதைத் தொடர்ந்து கூட்டம் தானாகவே வரத்தொடங்கும். நகர மக்கள் அனைவருக்கும் இந்த மாதம், இந்த நாள்களில், இந்த இடத்தில் புத்தகங்கள் குவியல் குவியலாகக் கிடைக்கும் என்ற தகவல் முன்னதாகவே பரவியிருக்கும். கண்காட்சித் திடலுக்கு மிளகாய் பஜ்ஜி வாங்கிச் சாப்பிடுவதற்காகவாவது கூட்டம் வரும்.

அடுத்து, புத்தகம் வாங்குவோர் மேற்கொள்ளும் முறைகளிலும் மாற்றம் இருக்கும். இதை இப்போது சென்னையில் மட்டுமே காணமுடிகிறது. சென்னையில் நிறைய வாசகர்கள் முதல் ஓரிரு நாள்களில் கண்காட்சிக்கு வந்து நோட்டம் விடுவர். பணம் என்பது குறைவாகவும் குறிப்பிட்ட அளவிலுமே உள்ளது. ஆனால் எதை வாங்கிப் படிப்பது என்று பார்த்தால் நிறைய. அதனால் முதல் சில நாள்களில் புதிதாக என்ன புத்தகங்கள் வந்துள்ளன, என்ன விலை ஆகியவற்றைப் பல வாசகர்கள் தீர்மானித்து பின் கடைசி இரண்டு நாள்கள் வந்து விரும்பிய, அதே சமயம் பட்ஜெட்டுக்குள் வரக்கூடிய புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால் மதுரை, ஈரோடு போன்ற இடங்களில் வாசகர்கள் அந்த அளவுக்குத் தேர்ச்சி பெற்றவர்களாகத் தெரியவில்லை. நேரடியாக வந்து கண்ணில் படும் முதல் சில கடைகளில் பார்ப்பதை வாங்கிவிட்டு உடனடியாக வெளியேறிவிடுகிறார்கள். இதனால் பல சிறு பதிப்பாளர்கள், அல்லது கண்காட்சி வளாகத்தில் இடைப்பட்ட பகுதியில் (ஆரம்பத்தில் அல்லாமல்) மாட்டிக்கொள்பவர்கள் நிலை திண்டாட்டமாகிவிடுகிறது. வாசகர்களுக்கும் இதனால் பாதிப்புதான். நல்ல பல புத்தகங்கள் அவர்களது பார்வைக்கே படாமல் போய்விடுகின்றன.

கண்காட்சி நிர்வாகிகள் வேறு பல விஷயங்களையும் கவனிக்கவேண்டும். மதுரையில் பத்து நாள் கண்காட்சியில் முதல் நாள் மாலை 6 மணிவரையில் வாசகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாள், சோனியா காந்தி கொடி அசைத்து ரயிலை ராமேஸ்வரத்துக்கு அனுப்பியதால் மதுரையே பாதுகாப்பு வளையமாக்கப்பட்டு மக்கள் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நடுநடுவே விட்டுவிட்டுப் பெய்யும் மழையும் ஆதரவாக இல்லை.

இவற்றையெல்லாம் சமாளிப்பது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் முடியாத காரியம். ஆனால் அதற்கு ஏற்றார்போல மேலும் ஓரிரு நாள்கள் இருக்குமாறு கண்காட்சியை நடத்தலாம். பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் 11 நாள்கள் கண்காட்சி நடக்கிறது. தொடக்க விழா போன்றவை கண்காட்சி தினங்களை பாதிக்காதவாறு ஒரு நாள் முன்னதாகவே அமைத்து, 1+11 நாள்கள் என்று நடத்தலாம். இதனால் திடல் வாடகை, மின்சாரம் போன்ற செலவுகள் சற்றே அதிகரித்தாலும் அவற்றை பங்குபெறும் கடைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மதுரை கண்காட்சியில் முதல் நாள் முற்றிலுமாக இழக்கப்பட்டு மொத்தம் கிடைத்தது 9 நாள்கள் மட்டுமே. அதிலும் சோனியா காந்தி, மழை, 'சுமாரான புரோமோஷன் மட்டுமே' ஆகியவை சேர்ந்து பல விற்பனையாளர்கள் சோகத்தில் காணப்பட்டனர்.

===

பபாஸி செயற்குழுவில் பங்கெடுக்கும் அனைவரும் தத்தம் பதிப்புத் தொழிலையும் மேற்பார்வை பார்க்கவேண்டிய நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது புதிதாக ஒவ்வோர் ஊரிலும் ஒரு கண்காட்சியை நிகழ்த்திக்காட்டுவது பெரும் சிக்கலான ஒரு விஷயம். நேர விரயம் அதிகமாகும். தனது தொழிலையும் சரியாகக் கவனிக்கமுடியாது. எனவே கூடிய விரைவில் இந்த அமைப்பு ஒரு புரொஃபஷனலான செயலாளர்களை நியமிக்க வேண்டியிருக்கும். பபாஸி ஆண்டுக்கு தனது உறுப்பினர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்கிறது. அதனை அதிகரிக்கலாம். கிடைக்கும் பணத்தில் ஒரு முழுநேர CEO, அவருக்குக் கீழே பணியாற்ற நான்கைந்து முழுநேர ஊழியர்கள் ஆகியோரை வேலைக்கு அமர்த்தலாம்.

இந்த executives அனைவரும் காலாண்டுக்கு ஒரு பெரு நகரம் (சென்னை, மதுரை, கோவை, திருச்சி) என்றும் பிற எட்டு மாதங்களில் முக்கியமான எட்டு நகரங்களிலும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்து, நடத்தித் தரவேண்டும். நெய்வேலி, ஈரோடு போன்ற நகரங்களில் பிற அமைப்புகள் நன்றாகவே கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதால் அங்கி பபாஸி தனது ஆதரவையும் புரோமோஷனல் உதவிகளையும் செய்தால் போதும். தமிழகத்தில் எந்த ஊரில் புத்தகக் காட்சி நடந்தாலும் அதற்கு பபாஸி எந்த வகையில் உதவி செய்யலாம் என்பதையும் பார்க்கவேண்டும். தகவலைப் பரப்புவது, பபாஸி உறுப்பினர்கள் ஸ்டால்களை எடுத்துக்கொள்ள உதவுவது, பிற மாநில அமைப்புகளுக்குத் தகவல்களை அளித்து அங்கிருக்கும் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்களை வரவேற்பது போன்றவற்றை பபாஸி திறம்படச் செய்யலாம்.

===

செப்டெம்பர் இறுதியில் பெங்களூருவிலும் தொடர்ந்து திருச்சியிலும் புத்தகக் கண்காட்சிகள் நடக்க உள்ளன.

அக்டோபர் மாதத்தில் ஃபிராங்ஃபர்ட்டில் புத்தகப் பதிப்பாளர்கள் பங்கெடுக்கும் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாண்டிச்சேரி, சேலம் போன்ற இடங்களில் கண்காட்சிகள் நடைபெறும்.

ஜனவரியில் சென்னையில்.

மேலும் பல ஊர்களிலும் சிறுசிறு கண்காட்சிகள் நடைபெறலாம்.

Wednesday, August 15, 2007

காந்தி பற்றிய இரண்டு பழைய பதிவுகள்

1. ராமச்சந்திர குஹா சென்னையில் 2004 ஜனவரி பேசியது ஒன்று | இரண்டு

2. வி.கல்யாணம் பேச்சு, மே 2005 | ஒலிவடிவில் (மேற்கண்ட பதிவில் இருந்த ஒலியை மேலும் சுத்தம் செய்து mp3 வடிவில் கொடுத்துள்ளேன். பிற format.)

Tuesday, August 14, 2007

ஒலிப்பதிவு: குருமூர்த்தி - தொழில் முனைவர்களைப் பற்றி

இந்தியாவில் தொழில் முனைவோர்களைப் பற்றி 7 ஜூலை 2007 (சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பொதுக்கூட்டம்) அன்று எஸ்.குருமூர்த்தி பேசியது (சுமார் 30 நிமிடங்கள்)

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த இரு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு அணுசக்தி தொடர்பான ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லாத வகையில் இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் இணையத்தில் போடப்பட்டுள்ளன. (நல்லதுதான்!) ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து அதன்மீது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள், தோழமைக்கட்சிகள் இரண்டும் கேட்கின்றன.

முதலில் இந்த ஒப்பந்தம் பற்றி இரண்டு நாடுகளின் பார்வையிலும் (அந்த நாட்டின் கட்சிகள் பார்வையில் அல்ல) பார்த்துவிடலாம்.

இந்தியாவின் பார்வையில்:

* இந்திய அணுசக்தி ஆராய்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அணுசக்தி வழியாக மின்சாரம் தயாரிப்பில் ஓரளவுக்கு நாம் வெற்றிபெற்றிருந்தாலும் நமது இலக்காக நாம் தீர்மானித்திருந்ததில் குறைவான அளவையே அடைந்திருக்கிறோம். மேற்கொண்டு அந்நியத் தொழில்நுட்பம், உதவி இல்லாமல் முன்னேறுவது எளிதல்ல. வெறும் தேசியவாதம், பழம்பெருமை பேசுவது பயன் தராது.

* இந்தியாவுக்குத் தேவையான அணுசக்தி எரிபொருள் வெளி நாடுகளிலிருந்துதான் வரவேண்டும். இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தை வைத்து மின்சாரம் தயாரிப்பது இன்றளவுக்கு நடைமுறைச் சாத்தியத்தில் இல்லை.

* மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே போகும். எனவே அணு மின்சாரத்தின் விலை பெட்ரோலிய, நிலக்கரி மின்சாரத்தில் விலையைவிடக் குறைவாக இருக்கக்கூடிய காலம் சீக்கிரமே வரும்.

* கடைசியாக அணுகுண்டுச் சோதனைக்குப் பிறகு அணு ஆயுத நாடுகள் இந்தியாவை ஒதுக்கி வைத்து, dual use தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குத் தராமல் வைத்திருந்தனர். அந்த நிலையை மாற்றவேண்டிய அவசியம் உள்ளது.

* அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் பிற அணு ஆயுத நாடுகளுடன் அமைதிக்கான அணுசக்தி ஒப்பந்தத்தைச் செய்துகொள்வது எளிதாக இருக்காது. அதேபோல நம்முடைய சொந்த அணு உலைகளுக்கும் nuclear supplies group (NSG) நாடுகளிடமிருந்து அணு எரிபொருளைப் பெறுவது சாத்தியமில்லை. எனவே அமெரிக்காவுடன் எவ்வளவுதான் பிரச்னைகள் வந்தாலும் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம். பிறகு ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் கொஞ்சம் நமக்குச் சாதகமான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம்.

* முடிந்தவரை அணு ஆயுதங்கள், அணுகுண்டுச் சோதனை ஆகியவற்றில் அந்நியத் தலையீடு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இவைதான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது.

அமெரிக்காவின் பார்வையில்:

* இந்தியா முக்கியமான நாடு, மிக வேகமாக வளரும் நாடு. ஆனால் அதே சமயம் உலகில் அணு ஆயுதப் பரவல் இருக்கக்கூடாது என்று நாம் நினைத்திருந்த நேரத்தில் அணுகுண்டுச் சோதனை செய்து நம்மைக் கேலி செய்தவர்கள். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பவர்கள்.

* இந்தியாவுக்கு நாம் அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களையும் எரிபொருளையும் கொடுத்தால் அவை எந்த விதத்திலும் அணு ஆயுதப் பரவலுக்கு வழிவகுக்கக் கூடாது. எந்த விதத்திலும் அந்த எரிபொருளைக் கொண்டு இந்தியா அணு ஆயுதங்களை உருவாக்கி ஆசியாவைப் பிரச்னையில் ஆழ்த்திவிடக்கூடாது.

* நாம் இவ்வளவு தூரம் இறங்கிவந்து இந்தியாவுடன் உறவுகொண்டாடுகிறோம். ஆனால் இவர்களோ இரான் போன்ற அமெரிக்க எதிர்களுடன் கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள். நாம் இந்தியாவுக்கு உதவிசெய்தால் அவர்களும் பதிலுக்கு நம்முடைய அயலுறவுக் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருக்கவேண்டும்.

இவைதவிர அமெரிக்காவுக்கே இயல்பான சில அரசியல் அமைப்புச் சிக்கல்கள் உள்ளன. அதில் ஒன்று செனேட்டின் (legislature) அதிகாரம், அதிக அளவுக்கு குடியரசுத் தலைவரை (executive) கட்டுப்படுத்தும். அதனால்தான் அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என்பதை அறிந்தவுடன் செனேட்டில் கொண்டுவரப்பட்ட ஹைட் சட்டம் (Hyde Act). இந்தச் சட்டம் அமெரிக்க-இந்திய அணுசக்தி உறவு ஏற்பட்டால் எப்படியெல்லாம் அந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தப்படும் என்பதை வலியுறுத்துகிறது.

இதைப்போன்ற சட்டதிட்டங்கள் இயற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திடம் கிடையாது. மத்திய கேபினெட் (executive) முடிவெடுத்தால் போதும். இதைத் தடுக்க வேண்டுமென்றால் ஆட்சியையே கவிழ்க்கவேண்டும். அதைச் செய்ய கம்யூனிஸ்டுகள் விரும்ப மாட்டார்கள்.

இப்பொழுது இந்திய அரசியல் கட்சிகள் சார்பிலும் அணு விஞ்ஞானிகள் சார்பிலும் இந்திய தொழில்துறையின் சார்பிலும் இருந்துகொண்டு இந்த ஒப்பந்தத்தைப் பார்ப்போம்.

* கம்யூனிஸ்டுகள்: ஒப்பந்தத்தை முற்றிலுமாக எதிர்க்கிறார்கள். ஒரே காரணம் ஒப்பந்தம் அமெரிக்காவுடன் என்பதால்தான். அமெரிக்கா என்றால் ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியம் என்றால் கம்யூனிஸ எதிர்ப்பு, எனவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கவேண்டும்.

இந்த ஒப்பந்தம் எந்த வகையில் இந்தியாவுக்குத் தீமை என்று கம்யூனிஸ்டுகளால் சரியாகச் சொல்லவே முடியவில்லை. இந்தியா அமெரிக்காவின் கையாளாக மாறிவிடும் என்றே சொல்கிறார்கள். ஆனால் அது எப்படி நடக்கும் என்று சொல்லவில்லை. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அல்லது உள்நாட்டுக் கொள்கையை இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.

* பாஜக: நாம் ஓர் எதிர்க்கட்சி. காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் கையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. எனவே காங்கிரஸை நன்றாகத் திண்டாட வைப்போம் என்ற ஒரே காரணுத்துக்காக பாஜக இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறது. ஹைட் சட்டம் பெரும் பிரச்னை என்று கிளப்புகிறார்கள். ஆனால் பாஜகவே ஆட்சியில் இருந்தால் இதனைவிடப் பிரமாதமாக இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்க முடியாது.

* சமாஜ்வாதி, ஜெயலலிதா முதலான மூன்றாவது அணியினர்: பெரிய காமெடியன்கள். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள். சும்மா, நாமும் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக சத்தம் போடுகிறார்கள்.

* முன்னர் குற்றம் சொல்லிய அணு விஞ்ஞானிகள் பலரும் இப்போது இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

* தொழில்துறை: தனியார் மின்சார நிறுவனங்கள் பலவும் இப்பொழுது அணு மின்சாரம் தயாரிப்பதற்கு அமெரிக்க நிறுவனங்கள் (அல்லது பிரான்சு நிறுவனங்கள்) சிலவற்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அவர்கள் நிச்சயம் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறார்கள்.

===

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு பல இக்கட்டுகள் உள்ளன. முதலாவது சீனா உள்பட பிற அணு ஆயுத நாடுகளின் ஆசீர்வாதம் இந்தியாவுக்குத் தேவை. பிறகு NSG-யின் ஆதரவு தேவை.

இந்த ஒப்பந்தத்தைத் திறம்படச் செய்து முடித்த மன்மோகன் சிங் பாராட்டுக்குரியவர்.

கம்யூனிஸ்டுகள் சும்மா பயம் காட்டுகிறார்களே தவிர இந்த ஒப்பந்தத்தைத் தடை செய்ய அவர்களால் முடியாது. காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கவும்வர்கள் விரும்ப மாட்டார்கள். திடீரென ஒரு தேர்தல் இன்று நடந்தால் அதில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய உண்டு.

===

சுட்டிகள்:

1. 123 ஒப்பந்தம்
2. ஹைட் சட்டம்
3. ஹைட் சட்டம் பற்றிய ஜார்ஜ் புஷ்ஷின் அறிக்கை
4. பாஜகவின் எதிர்ப்பு
5. கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு
6. பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் வாசித்தது

7. அணு ஆற்றல் ஒப்பந்தம் தொடர்பான விவாதம்

Friday, August 10, 2007

பதிவர் பட்டறை - அடுத்த கட்டம்

(தமிழ் வலைப்பதிவர் பட்டறை கூகிள் குழுமத்துக்கு நான் அனுப்பிய மடல்.)

1. வாரா வாரம் ஒரு கல்லூரியையாவது எடுத்துக்கொண்டு, அங்கு தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பான செயல்முறை விளக்கம் செய்து காண்பிப்பது. இதற்குத் தேவை...

(அ) (ஊர் ஊராகக்) கல்லூரிகளைக் கண்டறிந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெறும் குழு.
(ஆ) ஒவ்வொரு கல்லூரிச் சந்திப்பிலும் என்னென்ன செய்யவேண்டும் என்பதற்கான உள்ளடக்கத்தை (பயிற்சி உதவிகள், கையேடுகள்) தயாரிக்கும் குழு. இந்த உள்ளடக்கத்தைத் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டும்.
(இ) கல்லூரிக்குச் சென்று செயல்முறை விளக்கத்தைச் செய்யக்கூடியவர்கள் குழு.

2. லாபியிங்: மாநில அரசு, ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியோர்களிடம் லாபியிங் செய்து அவர்களை தமிழ் இணையத்தில் (யூனிகோட் எழுத்துருவில்) தளங்களையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கத் தூண்டும் குழு.

(அ) பல சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பது எளிது. கட்சி கட்சியாகவோ தனிப்பட்ட முறையிலோ இவர்களைச் சந்தித்து நமது கருத்துகளை எடுத்துக்கூறி அழுத்தத்தை உருவாக்குவது. நமது தேவைகளை விளக்கிக்கூறி அதற்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என்று வலியுறுத்துவது.
(ஆ) ஊடக நிறுவனங்களைச் சந்தித்துப் பேசி அவர்கள் ஏன் யூனிகோடில் இணையத்தளங்களை வைக்கவேண்டும், ஏன் தங்கள் பத்திரிகையாளர்களுக்கு (தமிழில்) வலைப்பதிவுகள் தொடங்க அனுமதி தரவேண்டும் என்பது பற்றிப் பேசுவது, அவர்களுக்குத் தேவையான உதவிகளை இலவசமாகச் செய்து தருவது.
(இ) பல்கலைக்கழக, கல்லூரி முதல்வர்களைச் சந்தித்து அவர்களுக்கென தமிழில் (யூனிகோடில்) இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் உருவாக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான உதவிகளைச் செய்து தருவது.

3. கம்ப்யூட்டர் விநியோகஸ்தர்கள்: தமிழகம் முழுவதிலும் உள்ள பெரிய, சிறிய கணினி விற்பனையாளர்களை அணுகி, தமிழ் எழுத வகை செய்யும் மென்பொருள்களை கணினியில் இன்ஸ்டால் செய்தே தருமாறு வலியுறுத்துவது.

4. கணித்தமிழ் சங்க உறுப்பினர் நிறுவனங்கள், பெரிய மென்பொருள் நிறுவனங்கள் (மைக்ரோசாஃப்ட், அடோபி-மேக்ரோமீடியா) ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு தமிழ் யூனிகோடுக்கான ஆதரவு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுதல், நமக்கேற்ற ஆதரவைக் கோருதல்.

5. பிற நகரங்களில் பட்டறை நடத்த முன்வருபவர்களுக்கு ஆதரவு, உதவி. (புதிதாகச் சேர்த்துள்ளேன்.)

இது தொடர்பான விவாதம் தேவை.

Wednesday, August 08, 2007

இந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு

சென்ற ஆண்டு இந்திய அமெரிக்க அணு ஆற்றல் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் பற்றிய செய்திகள் வெளியே வந்த நேரத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் உலை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திரு. எல்.வி.கிருஷ்ணனிடம் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பேசியிருந்தேன். அந்த ஒலிப்பதிவு இங்கே மறு ஒலிபரப்பாக... (நாள்: 30 ஜூலை 2006)

இணையத்தில் கேட்க | கீழிறக்க

பதிவர் பட்டறை ஒலித்துண்டுகள்

சென்னை வலைப்பதிவர் பட்டறையில் விவாத அரங்கில் நடைபெற்ற விஷயங்களை 90%க்கும் மேல் ஒலிப்பதிவு செய்துள்ளேன். (மாலன் பேச்சும் விவாதமும் முழுதாகவே உள்ளது.) வலையேற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும் பதிவுகளில் நடக்கும் விவாதம் காரணமாக மாலனது பேச்சை முன்னதாக ஏற்றிவிட்டேன். பிற ஒலித்துண்டுகள் வரவர, இந்தப் பதிவை இற்றைப்படுத்துவேன்.

1. விக்கி, மா.சிவகுமார் அறிமுக உரை: இணையத்தில் கேட்க | கீழிறக்க
2. முதலாம் அமர்வு - பத்ரி சேஷாத்ரி, தமிழ் இணையம் அறிமுகம்: இணையத்தில் கேட்க | கீழிறக்க
3. இரண்டாம் அமர்வு - முகுந்த், தமிழ் இணையத்தில் மைல்கற்கள்: இணையத்தில் கேட்க | கீழிறக்க
4. மூன்றாம் அமர்வு - மாலன், இணைய நெறி: இணையத்தில் கேட்க | கீழிறக்க
5. நான்காம் அமர்வு - லக்கிலுக், நாகூர் இஸ்மாயில்: இணையத்தில் கேட்க | கீழிறக்க

Tuesday, August 07, 2007

மசூதியின் நிறம் சிவப்பு

பாகிஸ்தானில் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், அண்டை நாடுகளுடனான பிரச்னைகள், தீவிரவாதத்தை எதிர்கொள்வது ஆகியவற்றோடு மதம் கொடுக்கும் உளைச்சல்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பாகிஸ்தானின் தீவிரவாதப் பிரச்னையில் மதத்துக்குப் பெரும் பங்கு உள்ளது. இஸ்லாம் என்ற பெயரால்தான் பாகிஸ்தானே உருவானது. ஆனால் அப்பொழுதைய பாகிஸ்தானிய இஸ்லாம், பிரிக்கப்படாத இந்தியாவின் இந்துப் பெரும்பான்மையைக் கண்டு அஞ்சி, தம் மக்களுக்கு என்று ஒரு தனி வாழ்விடத்தைப் பெற முனைந்த அரசியல் இஸ்லாம்.

ஆனால் இன்றைய பாகிஸ்தானின் இஸ்லாம் பெரும் குழப்பத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறது. ஜியா-உல்-ஹக் காலத்தில் ஆஃப்கனிஸ்தானில் சண்டை போட முஜாஹிதீன் வீரர்கள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டார்கள். காஷ்மீரில் புனிதப்போர் புரிய மதச்சத்து ஊட்டப்பட்ட போராளிகள் உருவாக்கப்பட்டார்கள். கான்கிரீட் மசூதிகள், சவூதி அரேபியப் பணத்தில் தெருவுக்குத் தெரு முளைத்தன. மதரசாக்களிலிருந்து தாலிபன்கள் கிளம்பினார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, தனது சொந்தக் காரணங்களுக்காக ஜியா-உல்-ஹக் கிளப்பிவிட்டார். எல்லா நாடுகளிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்ன கேட்பார்களோ அதையேதான் பாகிஸ்தானிலும் கேட்கிறார்கள். சவூதி அரேபியா, தாலிபன்களின் கையில் சிக்கிய ஆஃப்கனிஸ்தான் - இதுதான் அவர்களது விருப்பம். இஸ்லாமிய நாடு என்றால் வெறும் ஷரீஅத் சட்டத்தைப் பின்பற்றுவது மட்டுமல்ல, சில கருத்துகளில் மாறுபாடு என்பது கூடவே கூடாது என்று அடிப்படைவாதிகள் நினைக்கிறார்கள்.

பெண்கள் கல்வி, சமூகத்தில் பெண்கள் நிலை, பெண்கள் வேலை வாய்ப்பு, விவாகரத்து, ஜீவனாம்சம், குற்றங்களுக்கான தண்டனைகள், ஓர் ஆண் வைத்திருக்கும் தாடியின் நீளம், கேளிக்கைகள் இருக்கலாமா-கூடாதா என்று பல தளங்களில் அடிப்படைவாதிகள் கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புகிறார்கள்.

பாகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடா, அல்லது இஸ்லாமிய நாடா? பாகிஸ்தான் துருக்கியைப் போன்றோ மலேசியாவைப் போன்றோ இருக்க விரும்புகிறதா அல்லது சவூதி அரேபியா போல இருக்க விரும்புகிறதா? இதற்கான விவாதம் பாகிஸ்தானில் நடைபெறவேண்டும்.

9/11-க்கு முன்புவரை பாகிஸ்தானின் ஆட்சியாளர்களுக்கும் அங்குள்ள மத அடிப்படைவாதிகளுக்கும் இடையே பெரும் பிரச்னை இருந்ததாகத் தெரியவில்லை. இந்தியா மீதான வெறுப்பை இருவரும் சேர்ந்தே வளர்த்தனர். ஆஃப்கனிஸ்தானில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான எதிர்ப்பை இருவரும் சேர்ந்தே ஆதரித்தனர்.

ஆனால் 9/11-க்குப் பிறகு இந்நிலையில் பெரும் மாற்றம். அமெரிக்கா ஆஃப்கனிஸ்தானைத் தாக்கப் போகிறது என்ற நிலையில் முஷரஃப் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டார். பாகிஸ்தானின் மத அடிப்படைவாதிகள் தங்களது அரசாங்கத்துக்கு எதிராக, தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் ஆதரவளித்தனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் லாஹூரின் சிகப்பு மசூதியின் அப்துல் ரஷீத் காஸி.

காஸியின் தலைமையில் பெண்கள், ஆண்கள் இருவருக்குமான மதப் பள்ளி நடைபெற்றது. இந்தப் பெண்களும் ஆண்களும் சட்டத்தைத் தங்கள் கைக்குள் எடுத்துக்கொண்டு லாஹூரில் புகுந்து விளையாடினர். 'கெட்ட காரியம்' செய்யும் பெண்கள் சிலரைச் சிறைப்பிடித்து தண்டித்தனர். கையில் கம்புகளுடன் முகம் மறைத்த புர்க்காவுடன் இளம்பெண்கள் இப்படி நடந்துகொள்வது அதிர்ச்சியான ஒரு விஷயம். முஷரஃப் பல மாதங்கள் பொறுத்திருந்து கடைசியில் ராணுவத்தை அனுப்பி, காஸியையும் அவரது தோழர்கள் சிலரையும் பரலோகத்துக்கு அனுப்பினார்.

ஆனால் இந்தப் பிரச்னை காஸியோடு முடிந்துவிடப்போவதில்லை.

மதவாதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முஷரஃபைத் தீர்த்துக்கட்டவேண்டும் என்று அல் காயிதா அழைப்பு விடுத்துள்ளது. வாசிரிஸ்தானில் தாலிபன்கள் ஊடுருவியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தலைவலியைத் தந்தவண்ணம் உள்ளனர். முஷரஃபுக்கு பேநசீர் புட்டோ, நவாஸ் ஷரீஃப் இருவரிடமிருந்தும், மறுபக்கம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரியிடமிருந்தும் குடைச்சல்கள் வந்தவண்ணம் உள்ளன.

ராணுவம் ஒன்று மட்டும்தான் இப்போதைக்கு முஷரஃபுக்கு ஆதரவு. அந்த ஆதரவும் எப்பொழுது வேண்டுமானாலும் விலக்கிக்கொள்ளப்படலாம். இந்நிலையில் அடுத்த மாதமே ஒரு 'ஒப்புக்கான' தேர்தலை வைத்து ராணுவ உடையுடனே அதிபராகத் தனது பதவியை நீட்டிப்பது என்று முடிவுசெய்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

அப்படி ஒரு தேர்தல் நடந்தால், அந்தத் தேர்தல் உச்ச நீதிமன்றத்தில் வழக்காகப் போகும். அப்பொழுது இஃப்திகார் சவுதுரி என்ன செய்வார், எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், தாலிபன்களும் மத அடிப்படைவாதிகளும் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்.

பழைய பதிவுகள்:
பாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா
பாவம் முஷரஃப்!

இந்திய கிரிக்கெட் லீக்

ஜீ தொலைக்காட்சியின் சுபாஷ் சந்திரா 'இந்திய கிரிக்கெட் லீக்' என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு கபில் தேவைத் தலைவராக நியமித்திருக்கிறார். அதைப்பற்றிய ஒரு பார்வை.

Monday, August 06, 2007

சென்னை வலைப்பதிவர் பட்டறை

யூட்யூப் ஆதரவில், எழுதுவதற்கு பதில் முகத்தையும் காட்டி பேசியும் விட்டேன். வலைப்பதிவர் பட்டறைக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டாமா?



தமிழ் வலைப்பதிவர் பட்டறை