Tuesday, October 30, 2007

லா.ச.ராமாமிருதம் மறைவு

91 வயதான தமிழ் எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் இன்று காலை உயிர்நீத்தார். லா.ச.ரா பற்றி பா.ராகவன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சின்ன பிட்:

**

நேற்றிரவு, மும்பை வெடிகுண்டு வழக்கு தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைப் பிரதி - ஒரு கட்டுரைக்காக அவசரமாக வேண்டியிருந்தது. பதினொரு மணிக்கு அதைத் தேடத் தொடங்கி, அதைத் தவிர வேறு என்னென்னவோ அகப்பட்டன. அவற்றுள் ஒரு போஸ்ட் கார்டும் அடக்கம்.

சுமார் பதினேழு வருடங்கள் முன்பு எனக்கு ஒரு பெரியவரால் எழுதப்பட்ட போஸ்ட் கார்டு அது. பார்த்ததும் என் கண்கள் நிறைந்து ததும்பிவிட்டன. கால ஓட்டத்தில் எத்தனையோ விஷயங்கள் மனத்தின் ஞாபகத்தட்டுகளிலிருந்து விழுந்து உதிர்ந்தே போய்விடுகின்றன. திரும்ப எடுத்துக் கோக்கும்போது உள்ளம் சொல்லமுடியாத நெகிழ்ச்சியையும் வேதனை கலந்த பரவசத்தையும் அடைந்துவிடுகிறது. அந்த போஸ்ட் கார்டுக்கு அன்று நான் எழுதிய பதிலும் வரி வரியாக நேற்று நினைவுக்கு வந்தது. வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் சந்திப்போமா என்று என்னை ஏக்கம் கொள்ளச் செய்த நபர் அவர். என் விருப்பத்தை அவருக்கு எழுதியபோது, அதற்கு பதிலாகத்தான் அவர் அந்த கார்டைப் போட்டிருந்தார். பதிலுக்கு பதிலாக, மறுவாரம் கிளம்பி வந்து அவரைப் பார்ப்பதாகத்தான் எழுதினேன்.

ஆயிற்று, பதினேழு வருடங்கள். இன்னும் போகப்போகிறேன்! ஏன் நான் அவரைச் சந்திக்கப் போகவில்லை என்பதைச் சொல்லுவதற்கு முன் அவரது கடித வரிகள் இங்கே:

அன்புள்ள சிரஞ்சீவி பா.ராகவன்,

உன் கடிதம் கிடைத்தது. என்னை வந்து பார்ப்பதற்கு எதற்கு இத்தனை நடுக்கமும் தயக்கமும்? நீ எப்போது வேணுமானாலும் வரலாம். அம்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ஞானமூர்த்தி நகர் எங்கே என்று கேள். குத்து மதிப்பாக வழி சொல்லுவார்கள். ஆட்டோ பிடித்தால் பத்து ரூபாய் கேட்பான். தவறியும் என் பேர் சொல்லிக் கேளாதே. யாருக்கும் இங்கே என்னைத் தெரியாது. ஸ்ரீக்காந்தின் அப்பா என்றால்தான் தெரியும். நீ, ஸ்ரீகாந்த் வீடு என்றே கேட்கலாம். இந்த ஊரளவில் என் கீர்த்தியைக் காட்டிலும் அவனுடையது பெரிது. நீ வா. நேரில் நிறையப் பேசலாம். பின்புறம் அம்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து ஞானமூர்த்தி நகரை அடைவதற்கு வரைபடம் ஒன்று எழுதியிருக்கிறேன். அதன்படி கிளம்பி வந்து சேர்.

ஆசீர்வாதம்.
லா.ச. ராமாமிருதம்.

நான் ரிஷியென மதிக்கும் எழுத்தாளர் ஒருவர் எனக்கெழுதிய கடிதம் அது! காலத்தின் பேய்ப்பாய்ச்சலில் காணாமல் போகாமல் திரும்பக் கிடைத்ததில் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

லா.ச.ராவை எழுத்துமூலம் எனக்கு அறிமுகப்படுத்தியவர் அமரர் நா.சீ. வரதராஜன். அவர் லாசராவின் மிக நெருங்கிய நண்பர் வட்டத்தில் ஒருவர். அவரைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அவரது ஜனனி தொகுப்பைப் படித்துவிட்டு கிறுக்குப் பிடித்து அலைந்த காலத்தில்தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு போஸ்ட் கார்டு போட்டேன். அதற்கு அவர் எழுதிய பதில் தான் மேலே இருப்பது.

லாசராவின் இந்தக் கடிதம் வந்தபின், மீண்டும் அவரது தொகுப்பை எடுத்து வைத்துக்கொண்டு முழுவதுமாக ஒருமுறை படித்தேன். எத்தனை முறை படித்தாலும் ஜிவ்வென்று ஏறும் போதை எழுத்து அவருடையது. அவரது எழுத்துகளினூடாக அவரது பிம்பம் ஒன்றை என் மனத்துக்குள் நான் எப்போதோ வரைந்துவைத்திருந்தேன். எப்போதும் கண்மூடி ஏகாந்தத்தில் லயித்திருக்கும் தோற்றமாக எனக்குள் அவர் அந்தக் காலங்களில் வீற்றிருந்தார். நிஜத்திலும் அவர் அப்படித்தான் இருப்பாரா என்று நா.சீ.வவிடம் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன்.

"ம்ம்..சொல்லலாம். உள்முகமாவே யோசிச்சிண்டிருக்கறவர்தான். ஆனாலும் பேச ஆரமிச்சுட்டா உன் வயசுக்கு, உன் பக்குவத்துக்கே இறங்கி வந்துடுவார்"

அந்த ஆசையில்தான் கடிதம் எழுதிப் போட்டேன்.

ஆனால் அவர் வரச்சொல்லி உத்தரவு கொடுத்தபின் ஏனோ தயக்கம் பற்றிக்கொண்டது. நேரில் பார்க்காமல் நானாக உருவாக்கிக்கொண்ட என் மனத்துக்கான பிரத்தியேக லாசரா எங்கே, நேரில் பார்த்ததும் காணாமல் போய்விடுவாரோ என்கிற பயம் காரணம். ஒருவாரம் தள்ளிப்போட்டேன். அது தானாக ஒருமாதம் ஆனது. பிறகு ஆறுமாதம் ஆனது. ஆறு வருடங்கள். அப்படியே மறந்தும் விட்டேன்.

அந்த ஒரு கடிதம் எனக்குப் போதுமானதாக இருந்தது அப்போது. அன்புள்ள சிரஞ்சீவி பா.ராகவன். ஆசீர்வாதம்.

போதாது? பதினேழு வருடங்கள் கழித்து, நேற்றுக் கிடைத்தது, மீண்டும் அந்தக் கடிதம். லாசராவைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் மீண்டும் எழுந்திருக்கிறது. இப்போதும் ஒரு கடிதம் எழுதிப்போடலாம். வரச்சொல்லி அவசியம் பதில் வரும்.

பார்க்கலாம். என்ன அவசரம்?

**

லா.ச.ராவின் 'அபிதா' ஆங்கிலத்தில் கே.எஸ்.சுப்ரமணியத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு இப்பொழுது எங்களது 'Indian Writing' இம்ப்ரிண்டில் எடிடிங்கில் உள்ளது. புத்தகம் அச்சில் வருவதைப் பார்க்க லா.ச.ரா இருக்கமாட்டார் என்பது வருத்தம் தரக்கூடியது.

====

இட்லிவடை பதிவு

Friday, October 26, 2007

கலைஞர் டிவியால் சன் டிவிக்கு என்ன நஷ்டம்?

சில மாதங்களுக்குமுன் மாறன் - கலைஞர் குடும்பங்களுக்கு இடையே சண்டை வந்தபோது சன் டிவி பங்குகள் பயங்கரமாக அடிவாங்கின. தொடர்ந்து கலைஞர் குடும்பம் ராஜ் டிவி ஆசாமிகளுடன் சேர்ந்து புதிதாகத் தொலைக்காட்சி நடத்தலாம் என்று புரளிகள் வந்ததும், ராஜ் டிவி பங்குகள் உயர உயரப் பறந்தன. கடைசியில் கலைஞர் தொலைக்காட்சி என்று ஒன்று (ராஜுடன் உறவு வைத்துக்கொள்ளாமல்) தனியாகப் பிறந்தது.

சன் டிவி காலி என்று பலரும் நினைத்தனர். 15 மே 2007 அன்று நான் எழுதிய பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
அரசியல் ஆதரவு இல்லாவிட்டால் சன் டிவியின் வருமானமும் லாபமும் சடாரெனக் குறைந்துவிடும் என்று கணக்கு செய்யவே கூடாது. அதற்கான 'நிரூபணம்' ஏதும் சந்தையிடம் இல்லை.

...

இரண்டு நிறுவனங்களின் [அதாவது ராஜ், சன்] அடுத்த இரண்டு காலாண்டு வருமானத்தையும் லாபத்தையும் கவனிப்பது நல்லது.
இந்தப் பிரச்னைகளுக்குப் பிறகு சன் குழுமத்தின் இரண்டு காலாண்டு வருமானமும் வெளியாகியுள்ளது.

ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர் 2007 காலாண்டில், சன் தொலைக்காட்சி குழுமம் பெற்ற வர்த்தக வருமானம் ரூ. 194.45 கோடி. நிகர லாபம் ரூ. 80.16 கோடி. அதற்கு முந்தைய காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன் 2007) பெற்ற வர்த்தக வருமானம் ரூ. 202.34 கோடி. நிகர லாபம் 93.07 கோடி.

வர்த்தக வருமானத்தில் சுமார் ரூ. 8 கோடி குறைந்துள்ளது. அவ்வளவே. லாபத்தில் ரூ. 13 கோடி குறைந்துள்ளது; இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். மார்க்கெட்டிங்கில் நிறையச் செலவுகளை செய்திருக்கலாம். (இதர செலவுகள் என்ற தலைப்பில் ரூ. 8 கோடி அதிகமாகச் செலவாகியுள்ளது.)

ஆக, சன் டிவி வருமானம், கலைஞர் டிவி வரவால் சொல்லிக்கொள்ளும்படிக்கு பாதிக்கப்படவில்லை. சுவாரசியமான விஷயம்... சன் டிவி குழுமத்தின் சம்பளச் செலவுகள் வெகுவாகக் குறைந்துள்ளன. ரூ. 22.4 கோடியிலிருந்து ரூ. 17.5 கோடியாக - அதாவது 22% குறைந்துள்ளது. இதற்கு ஒரே காரணம், நிறைய ஊழியர்கள் சன் டிவியை விட்டுவிட்டு, கலைஞர் டிவியில் சேர்ந்துள்ளனர் என்பதாக மட்டுமே இருக்கமுடியும்!

இந்த நிலையையும், வேறு சில தகவல்களையும் வைத்துப் பார்க்கும்போது, அடுத்த இரண்டு காலாண்டுகளில் சன் டிவியின் வருமானமும் லாபமும் வெகுவாக அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.

சரி, இதனால் சிறு முதலீட்டாளர்களுக்கோ என்ன வந்தது என்கிறீர்களா, அதுவும் சரிதான். ஆறு மாதங்களுக்கு முன்னர் சிறு முதலீட்டாளர் வசம் இருந்தது வெறும் 0.91% சன் டிவி பங்குகள் மட்டுமே. இப்பொழுதோ அது வெறும் 0.8%தான்!

Thursday, October 25, 2007

நீதித்துறையின் அதிகார வரம்பு

அக்டோபர் 7, 2007 அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தின் ஒலிப்பதிவு. இதைப்பற்றிய என் கருத்துக்களை முன்னமே எழுதியுள்ளேன்.

இரவிக்குமார், எம்.எல்.ஏ - அறிமுகம் (தமிழில்) - MP3, 5.5 min, 2.67 MB | other formats
கனிமொழி, எம்.பி - முன்னுரை (தமிழில்) - MP3, 12.27 min, 5.7 MB | other formats
அ.ராசா, மத்திய அமைச்சர் (தமிழ் + அவ்வப்போது ஆங்கிலம்) - MP3, 32.54 min, 15 MB | other formats
பிரிந்தா காரத், எம்.பி (ஆங்கிலம்) - MP3, 37.24 min, 17.1 MB | other formats
மனோஜ் மிட்டா, டைம்ஸ் ஆஃப் இந்தியா (ஆங்கிலம்) - MP3, 21.05 min, 9.65 MB | other formats
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி AS ராஜன் (ஆங்கிலம்) - MP3, 30.56 min, 14.1 MB | other formats
என்.ராம், தி ஹிந்து (ஆங்கிலம்) - MP3, 35.36 min, 16.3 MB | other formats

Wednesday, October 24, 2007

பங்குச்சந்தை: பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்

இந்தியப் பங்குச்சந்தைகளில் பங்குகளை வாங்கி விற்பவராக இருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களது PAN எண்ணை - அதாவது வருமான வரி எண் - உங்களது பங்குத்தரகருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் அந்த எண்ணை பங்குச்சந்தைக்குத் தெரிவிப்பார். ஆக, எந்த நேரத்திலும் எந்தப் பங்கை யார் வாங்குகிறார்கள் என்ர தகவலை அரசு நிறுவனங்கள், வருமான வரி அலுவலகம், காவல்துறை ஆகியவற்றால் தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த ஓர் ஆண்டில், வருமான வரி எண் இல்லாமல் யாருமே பங்குச்சந்தையில் முதலிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வெளி நாடுகளிலிருந்து இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய என்.ஆர்.ஐகளுக்கும் அந்நிய நாட்டுக் குடிமக்களுக்கும் தடை உள்ளது. விதிவிலக்கு: வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய, பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் முதலீடு செய்யமுடியாது. இவர்கள் அனைவருமே பரஸ்பர நிதி - மியூச்சுவல் ஃபண்ட் - மூலம் மறைமுகமாக இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.

தனிமனிதர்களுக்குத்தான் கட்டுப்பாடே ஒழிய, அந்நிய நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors - FIIs) இந்தியப் பங்குச்சந்தையில் குறிப்பிட்ட சதவிகிதத்துக்குள் முதலீடு செய்யமுடியும். இந்த FIIக்கள் முதலில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி (SEBI) இடம் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

ஆனால் இந்த இடத்தில் இந்த FIIக்கள் ஓர் ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு அந்நிய நாட்டவர் அல்லது அனுமதிக்கப்படாத என்.ஆர்.ஐக்களை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வழிசெய்துகொடுக்கின்றன.

அதற்குப் பெயர்தான் பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ். இதைப் பார்ப்பதற்கு முன், இதைப்போன்றே உள்ள ஒரு நிதிக்கருவியைப் பார்ப்போம். அதற்குப் பெயர் டெபாசிட்டரி ரிசீப்ட்ஸ். ADR, GDR என்ற பெயர்களில் இவை பிரபலமாக உள்ளன.

இப்பொழுது அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் வர்த்தகமாகும் இந்திய நிறுவனப் பங்குகள் சிலவற்றை எடுத்துக்கொள்வோம். இன்ஃபோசிஸ், ரீடிஃப், சிஃபி போன்றவை. உண்மையில் இவற்றின் பங்குகள் ஏதும் நாஸ்டாக்கில் வர்த்தகமாவதில்லை. இரண்டு கட்டங்களில் இது நடக்கிறது. முதலில் ஒரு நிதி நிறுவனம் (வங்கி), இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகமாகக்கூடிய பங்குகளை நேரடியாக அந்த நிறுவனத்திடமிருந்தோ (public offer), அல்லது sponsored முறையிலோ பெறுகிறது. இந்த நிதிநிறுவனத்தின் பெயர் டெபாசிட்டரி.

அந்தப் பங்குகளுக்கு இணையான வேறு கருவியை (டெபாசிட்டரி ரிசீப்ட்) இந்த டெபாசிட்டரி நிறுவனம் உருவாக்கி அவற்றை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஓடவிடுகிறது. ஒரு பங்குக்கு இணையாக ஒரு டெபாசிட்டரி ரிசீப்ட் இருக்கலாம். அல்லது இரண்டு, மூன்று, நான்கு பங்குகளுக்கு இணையாக ஒரு டெபாசிட்டரி ரிசீப்ட் இருக்கலாம். இந்த டெபாசிட்டரி ரிசீப்டை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஈடுபடும் எவரும் வாங்கி, விற்கலாம். இந்தியப் பங்குச்சந்தையில் இருக்கும் விலைக்கும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் விலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்; ஆனால் பல நேரங்களில் ஒரு சந்தையில் மற்றொரு சந்தையைவிட விலை அதிகமாகவோ குறைந்தோ இருக்கலாம். இடையிலான ஆர்பிட்ராஜை வைத்துப் பணம் சம்பாதிப்பது முடியாமல் போகும்.

அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்வது தடைசெய்யப்பட்டிருக்கும்போது இந்த முறையைக் கொண்டு அவர்கள் இந்திய நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய வழிவகுக்கலாம்.

இந்திய நிறுவனம் டிவிடெண்ட், போனஸ் ஆகியவற்றை அளிக்கும்போது, டெபாசிட்டரி நிறுவனம் அவற்றைப் பெற்று, அவற்றை பத்திரமாக அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மாற்றிக்கொடுக்கும்.

இதுபோன்ற சமயத்தில் செபி, இந்த அமெரிக்கத் தனி முதலீட்டாளர்களைப் பற்றி கவலைப்படாது. அவர்களது குலம், கோத்திரம் என்ன என்றெல்லாம் விசாரிக்காது. ஆனால் அந்த வேற்று நாட்டு (அமெரிக்கா) பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம் இந்த முதலீட்டாளர்கள் யார் என்பதைக் கட்டுப்படுத்தும்; அவர்களிடம் ஒழுங்காக வரி வசூலிக்கும்.

இப்பொழுது பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் என்றால் என்ன என்று பார்ப்போம். இது டெபாசிட்டரி ரிசீப்ட்ஸுக்கு நேர் எதிர்.

இந்தியப் பங்குச்சந்தை பிற நாட்டுக் குடிமகன்களுக்குத்தான் தடை என்றும் அந்நிய நிதி நிறுவனங்கள் செபியிடம் பதிவு செய்துகொண்டால் அனுமதிக்கப்படும் என்றும் பார்த்தோம் அல்லவா? இப்படிப் பதிவுசெய்துகொண்ட FIIக்கள், தனி ஆசாமிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் சார்பில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றனர். ஆனால் பங்குகள் என்னவோ இந்த FIIக்கள் பேரில் இருக்கும். தனி ஆசாமிகள் கணக்குக்கு, அவர்களுக்கு பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் எனப்படும் PN ரசீதுகளைக் கொடுத்துவிடுவார்கள். அதாவது இது ஒரு பினாமி வழி.

யார் முதலீடு செய்கிறார்கள் என்பதை FIIக்கள் செபியிடம் இதுவரை சொன்னதில்லை. செபியும் கேட்டதில்லை. அப்படி செபி கேட்கப்போகிறது என்று விஷயம் கசிந்தால் உடனே பங்குச்சந்தை ஆட்டம் காணும். நிதியமைச்சரும் பயந்துபோய், இன்னும் கொஞ்சம் நாள் விட்டுவிடுவோம் என்பார். அதுதான் சென்ற வாரம் நடந்தது.

இப்பொழுது நமக்குத் தோன்றவேண்டிய கேள்விகள் இவை:

1. செபி ஏன் PN வழியாக வர்த்தகம் செய்வோரது தகவலைக் கேட்கவேண்டும்?
2. அப்படிக் கேட்டால் ஏன் இந்த ஃபாரின் வஸ்தாதுகள் பயப்படவேண்டும்? கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே?
3. PN/FII-க்களுக்கு ஏன் இந்தியப் பங்குச்சந்தை/செபி/நிதியமைச்சர் பயப்படவேண்டும்?
4. இந்தியாவில் இருக்கும், பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நாம் என்ன நிலையை எடுக்கவேண்டும்?

பதில்களைப் பார்ப்போம்.

PN வழியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்வோரில் உருப்படியான, நியாயமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தமது தகவலைச் சொல்ல பயப்பட மாட்டார்கள். ஆனால் பல கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதில் முதலாவது இந்தியாவில் கறுப்புப் பணத்தைத் தேக்கி, ஹவாலா வழியாக அதை வெளிநாடுகளுக்குக் கொண்டுசென்றுள்ளவர்கள். இரண்டாவது சர்வதேச தீவிரவாதிகள்.

இந்த இரண்டு ஆசாமிகளும் இந்தியப் பங்குச்சந்தைக்குள் பணத்தைப் போட விரும்புகிறார்கள். ஏன்? ஏனென்றால் இப்பொழுது இந்தியா ‘வளர்ச்சி' கதையால், இந்தியப் பங்குச்சந்தையில் நல்ல லாபம் புரளுகிறது. நல்லவர்கள் போல, கெட்டவர்களும் இந்த ‘வளர்ச்சி'யின் பயனை அறுவடை செய்ய விரும்புகிறார்கள். PN வழியாக இதைச் செய்தால் கேள்வி கேட்க யாருமே இல்லை.

PN வழியாக இந்தியச் சந்தையில் புரளும் பணம் சுமார் 90 பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். இதில் பாதிக்கு மேல் கெட்ட பணமாக இருக்கலாம்.

கடந்த சில வாரங்களில் தேவையில்லாமல் இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டுள்ளதற்கு வெளிநாட்டுப் பணம் முக்கியமான காரணம். திடீரென PN-ல் கையை வைப்பதாக செபி அறிவித்ததுமே இவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால் பங்குச்சந்தை கீழே விழும் என்றெல்லாம் பயப்படாமல் செபி, இந்த விஷயத்தில் கறாராக நடந்துகொள்ளவேண்டும். PN வழியாக இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களுக்கும் PAN எண் போல ஒரு எண்ணை வழங்கவேண்டும். அட்ரஸ் ப்ரூஃப் இருக்கவேண்டும். தவறான ஆசாமிகள் என்று தெரியவரும்போது அவர்களுக்கு வர்த்தகம் செய்துகொடுத்த FII-க்களை ஒட்டுமொத்தமாகத் தடைசெய்யவேண்டும்.

அதாவது யாரிடமிருந்து பணம் பெற்று பங்குச்சந்தை வர்த்தகம் செய்யவேண்டும் என்ற விதியை FII-க்கள் மீது புகுத்தவேண்டும்.

இதை ஏற்காத FII-க்களை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கக்கூடாது.

இந்தியாவில் முதலீடு செய்யும் மொபியஸ் என்னும் FII செபியின் விதிமுறைகளை ஏற்பதாகவும் PN முறையில் செய்யப்படும் முதலீடும் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதை ஒப்புக்கொள்வதாகவும் இன்று தகவல் வந்துள்ளது. பிற FII-க்கள் ஒத்துவந்தால் அனுமதிப்போம். இல்லாவிட்டால் துரத்திவிடுவோம்.

Monday, October 22, 2007

ஞாநியும் சிநேகிதர்களும்

ஞாநி தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி எழுதிய 'ஓ பக்கங்கள்' கட்டுரை ‘விருப்பப்படி இருக்க விடுங்கள்', உள்நோக்கத்துடன் எழுதப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.

ஞாநிக்கு கருணாநிதி மீது எந்தக் கரிசனமும் கிடையாது. அவரது எழுத்துக்களைப் படித்துவருவோர் அனைவருக்கும் இது தெரியும். அப்படிப்பட்ட நிலையில் ‘வஞ்சக் கரிசனத்துடன்', “அய்யோ பாவம்! ஒரு கிழவரை இப்படிப் போட்டு வாட்டி வதைக்கிறார்களே” என்று ஞாநி எழுதினால் அதைவிட கயமைத்தனம் ஏதும் இருக்கமுடியாது.

ஞாநிக்கு பல நோக்கங்கள் இருந்திருக்கலாம்.

வயதானவர் மாநிலத்தின் முக்கியமான பதவியில் இருந்தால் மாநிலத்தின் நலனுக்குக் கேடு என்று அவர் கருதியிருந்தாரானால் அதை வெளிப்படையாக எழுத்தில் காட்டியிருக்கலாம்.

இல்லை, கருணாநிதியை தனக்குப் பிடிக்கவில்லை என்று ஞாநி நினைத்திருந்தாரானால், அதையும் நேரடியாகச் சொல்லி, இவரைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு யாரையாவது முதல்வராக்குங்கள் என்று நேரடியாகச் சொல்லியிருக்கலாம். (அது நடக்காது என்பதை ஞாநி உணர்ந்திருப்பார்.)

ஜெயமோகன் ஒருமுறை சுந்தர ராமசாமி/காலச்சுவடு பற்றி எழுதும்போது, யானைப்பாகன், கிழ யானையைக் காட்டிப் பிச்சையெடுத்து சம்பாதிப்பதைப்போல என்று (கேவலமாக) எழுதியிருந்தார். ஞாநியும் அதைப்போலவே கருணாநிதியின் பிள்ளைகள் தங்கள் தகப்பனை தங்களது சொந்த விருப்பங்கள் காரணமாக, தள்ளாத வயதிலும் தெருவில் அழைத்துவந்து அவரைச் சுரண்டி, அவரை வைத்து வித்தை காட்டிப் பிழைப்பு நடத்துகின்றனர் என்று பொருள்பட எழுதியிருப்பது கண்டனத்துக்குரியது.

ஞாநி ஒரே சீராக நடுநிலையுடன் தனது எழுத்தைச் செய்வதில்லை. கருணாநிதியை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதாவை எதிர்ப்பதில்லை.

ஞாநி சில விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் குணம் உடையவர். மாற்றுக் கருத்துகள் தொடர்பாக என்ன ஆதாரம் கிடைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தனது கருத்தை மாற்றிக்கொள்ள மறுப்பவர்.

இப்படி ஞாநியைக் குறைசொல்ல எவ்வளவோ இருக்கிறது.

-*-

ஞாநிக்கு பேச்சு, எழுத்து சுதந்தரம் இருந்தாலும் கண்ணியமற்ற முறையில் சிலவற்றை எழுதினால் அதனால் கோபம் கொள்பவர்கள் கண்டனக் கூட்டம் நடத்துவதில் தவறில்லை. அப்படி நடந்த கூட்டம்தான் வாணி மஹாலில் சனிக்கிழமை நடந்த ஒன்று.

ஆனால் ஞாநியைக் கண்டித்த சிநேகிதர்கள் (அவர்கள் அனைவரும் ஞாநியுடன் இப்பொழுதும் நல்ல பரிச்சயம் வைத்திருப்பவர்களாம்), பல அபத்தங்களையும் வாரி உதிர்த்தனர்.

மேற்படி விஷயத்தில் ஞாநியைக் கண்டிக்க ஆயிரம் முகாந்திரங்கள் இருந்தாலும் மேலும் பலவற்றை இழுக்கவேண்டுமே. அதைச் சரியாகக் கண்டறிந்து 20-20 கிரிக்கெட் போட்டியின் தரத்தில் தடாலடியாக ஆரம்பித்து வைத்தார் தொடக்க ஆட்டக்காரரான கவிஞர் அறிவுமதி.

அதுதான் 2000 வருடப் பகைமை. தன் மூதாதையர் உழைப்பில் 'உண்டு', 'பேண்டு' இன்று சுகமாக இருக்கும் பார்ப்பனர்களை அறிவுமதி நன்றாகச் சாடினார். புரசைவாக்கமாக இந்த இடம் இல்லாமல் போய்விட்டதே, கொஞ்சம் நாகரிகமாகப் பேசவேண்டுமே என்று வருத்தப்பட்டார். ‘உங்கள் யாருக்காவது வசிக்க வீடில்லாமல் இருக்கிறதா' என்று பார்ப்பனர்களைக் கேட்டார். பார்ப்பனர்களை இவர் ஒன்றும் செய்யாவிட்டாலும் இணையத் தம்பிகள் ஒருகை பார்த்துவிடுவார்கள் என்று கோடி காட்டினார்.

அடுத்து பேசவந்தவர்களில் பலர் இந்த 2000 வருடப் பாரம்பரியச் சண்டை (அப்படி ஒன்று இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. எழுத்தாளன் சொன்னால் மேல் அப்பீல் கிடையாது) பற்றி பலரும் தொடர்ந்தார்கள்.

தோழர் மகேந்திரன் தொடர்ந்தார். பிரபஞ்சன் ஒருபடி மேலே போனார். அ.மார்க்ஸ் பற்றி சொல்லத் தேவையே இல்லை. பிரபஞ்சன் அதெப்படி ஊடகங்கள் எல்லாம் சட்டையை அவிழ்த்துவிட்டுக்கொண்டு பூணூல் போட்டுக்கொள்கிறார்கள் என்று கேட்டார்.

ஞாநிக்கான கண்டனக் கூட்டமா, தி.கவின் பார்ப்பன எதிர்ப்புக் கூட்டமா என்று புரியாத வகையில் இறையன்பன் குத்தூஸ் வந்து ஒரு பாடலைப் பாடினார். அதன் வரிகள் பின்வருமாறு:
வடக்கே ஒரு பார்ப்பன வேதாந்தி கலைஞரின் தலை கேட்கிறான்
இங்கே ஒரு பார்ப்பன அஞ்ஞாநி நஞ்சைக் கக்குகிறான்
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்
முதலில் பார்ப்பானை அடி என்றார் தந்தை பெரியார்
நம் சிந்தையெல்லாம் நிறைந்த தந்தை பெரியார்

தொண்டால் பொழுதளக்கும் தலைவரை
இங்கு கொச்சைப்படுத்துகிறான் ஒரு தறுதலை
பொறுமை கலைஞரின் பெருந்தன்மை
இது புரிந்திடுமா அஞ்ஞாநிக்குப் பேருண்மை

யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்? இங்கே
யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்?

பார்ப்பன அரசியலைப் புரிந்துகொள்ளடா
பார்ப்பன பத்திரிகை அரசியலைப் புரிந்துகொள்ளடா

தமிழா! தமிழா! தமிழா!
இந்தப் பாடல் பாடப்படும்போது இணையப் பிரமுகர்கள் இருவர் ‘அய்யோ' என்று தலையில் அடித்துக்கொள்வதைப் பார்க்க முடிந்தது.

இதற்கடுத்து தலைமையுரை ஆற்றிய பன்னீர்செல்வம், ஞாநியின் எளிமைப்படுத்தப்பட்டு வெகுஜன ஊடகங்களில் கொடுக்கப்படும் கருத்துக்களை எதிர்க்கவேண்டும் என்றார். ஆனால் அதே எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரம்தான் இந்த கண்டனக் கூட்டத்திலும் காணக் கிடைத்தது.

ஞாநி = பார்ப்பான்
விகடன் = பார்ப்பனப் பத்திரிகை
பார்ப்பான் = 2000 வருடப் பகைமை
கலைஞர் = பெரியாரின் வழிவந்த சூத்திரத் தலைவர்
பார்ப்பான் x சூத்திரன்
(ஞாநி + விகடன்) x கலைஞர் => எனவே விகடன் கட்டுரை

எனவே... போடு பார்ப்பான் தலையில் நாலு சாத்து!

-*-

அ.மார்க்ஸ் ஒரு கான்ஸ்பிரசி தியரியை முன்வைத்தார்.
கலைஞர் x மாறன் சகோதரர்கள் பிரச்னைக்குப் பிறகுதான் விகடன் கலைஞருக்கு எதிராக எழுதுகிறது... இதற்கு விகடன் டெலிவிஸ்டா - சன் டிவி சீரியல் வழியாக ஏதேனும் தொடர்பு இருக்குமோ...
அ.மார்க்ஸ் அடுத்து கனிமொழி, இரவிக்குமார், சல்மா ஆகியோர்மீது கடுமையான ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
கலைஞர் மீது இன்று என்ன தைரியத்தில் இப்படி எல்லாம் எழுதமுடிகிறது? காலச்சுவடு கொண்டுவந்த பெரியார் சிறப்பிதழில் பெரியாரை அவமரியாதை செய்து (அவர் பெண்பித்தர்... தலித்களுக்கு எதிரானவர்...) எழுதியிருந்ததை யாருமே பெரிய அளவில் கண்டிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக இன்று யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் அவதூறாகப் பேசமுடிகிறது. இதற்கு கனிமொழியும் பிறரும் பதில் சொல்லவேண்டும்.
இரவிக்குமாரும் சல்மாவும் அடுத்து பேசினாலும் இதைத் தொட்டே செல்லவில்லை. கனிமொழி பேசவில்லை. ஆனால் அவர் சார்பாகப் பேசிய பிரபஞ்சன், அந்த இதழுக்கு அடுத்த இதழிலிருந்து கனிமொழி காலச்சுவடு ஆசிரியர் குழுவிலிருந்து விலகிவிட்டார் என்ற தகவலை வெளியிட்டார்.

-*-

தினமணி, காலச்சுவடு, கார்ட்டூனிஸ்ட் மதி ஆகியோரும் திட்டு வாங்கினர்.

-*-

பேசிய பலரும் பெரியாரையும் கலைஞரையும் ஒப்பிட்டுப் பேசினர். இரவிக்குமார் தனது 20+ நிமிடப் பேச்சில் பெரியாரைக் கொண்டுவரவேயில்லை. பார்ப்பனர்களையும் இழுக்கவில்லை.

-*-

மனுஷ்ய புத்திரன் பேசும்போது பாய்ஸ் படப் பிரச்னையின்போது ஞாநி, எழுத்தாளர் சுஜாதாவின் ‘இருதய ஆபரேஷனை' குறிப்பிட்டு கேவலமாக எழுதியதை சொன்னார்.

-*-

இருவர் (அரசு, மணி), “இந்தாளு போடற நாடகமே புரியாது” என்று, ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவை ஒரு பிடி பிடித்தனர். அதைக் கண்டிக்க தனியாக ஒரு கூட்டம் நடத்தியிருந்தால் தேவலை.

-*-

விழாவின் முக்கியமான கான்ஸ்பிரசி தியரி - கிட்டத்தட்ட அனைவருமே ஏற்றுக்கொண்டது இதுதான்.
கலைஞர் இருந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிடுவார். அதைத் தடுக்கவேண்டும். எனவே சிலர் (பார்ப்பான்கள்?) ஒன்றுசேர்ந்து திட்டம் தீட்டி இப்படி கலைஞருக்கு எதிரான காரியங்க்களில் இறங்கியுள்ளனர். பத்திரிகைகள் ஒன்றுசேர்ந்து கலைஞரைத் தாக்குவதற்கு இதுதான் காரணம். அங்கே டில்லியில் நீதிமன்றத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு முட்டுக்கட்டை போடுகின்றனர். இங்கே இவரை எப்படியாவது துரத்திவிட நச்சைக் கக்குகின்றனர்.
-*-

கண்டனக் கூட்டத்தில் பலரும் சொன்னது:
ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் ஆட்டோ போயிருக்கும். இங்கு கண்ணியமான முறையில் எழுத்து/பேச்சு சுதந்தரத்துக்கு எந்த பங்கமும் வராத வகையில், குடியாட்சி முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைதான். ஆனால் ஆட்டோ வரும் என்றெல்லாம் பயந்து அடுத்த ஜெயலலிதா ஆட்சியில் (அப்படி ஒன்று ஏற்பட்டால்) ஆட்சியாளரின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை நிறுத்தாதீர்கள்.

ஆட்டோ அனுப்பாத ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்போம். எந்த ஆட்சியாளர் காலத்திலும் ஆட்டோக்கள், ரவுடிகள் மூலம் நமது சுதந்தரம் தடைப்படுவதை அனுமதியோம்.

-*-

ஒலிப்பதிவுகள்
மணிகண்டன்
மதுமிதா

Sunday, October 21, 2007

ஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் - ஒலிப்பதிவு

சென்னை வாணி மஹாலில் நேற்று (20 அக்டோபர் 2007) நடைபெற்ற கண்டனக் கூட்டத்தின் முழுமையான ஒலிப்பதிவு.

[இதற்குமுன் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்.]

வரவேற்பு: கவிஞர் இளையபாரதி (MP3, 3.31 min, 1.61 MB) | Other formats
முகவுரை: கவிஞர் தமிழச்சி (MP3, 10.15 min, 4.69 MB) | Other formats

சிறப்புரைகள்:

கவிஞர் அறிவுமதி (MP3, 26.27 min, 12.1 MB) | Other formats
கவிஞர் கரிகாலன் (MP3, 7.58 min, 3.65 MB) | Other formats
பேராசிரியர் அ.மார்க்ஸ் (MP3, 14.29 min, 6.63 MB) | Other formats
கவிஞர் சல்மா (MP3, 7.29 min, 3.43 MB) | Other formats
எழுத்தாளர் இமையம் (MP3, 9.33 min, 4.37 MB) | Other formats
சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் (MP3, 23.42 min, 10.8 MB) | Other formats
பேராசிரியர் வீ.அரசு (MP3, 8.30 min, 3.89 MB) | Other formats
தோழர் சி.மகேந்திரன் (ஆசிரியர் - தாமரை) (MP3, 20.38 min, 9.45 MB) | Other formats
பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ்.மணி (MP3, 17.34 min, 8.04 MB) | Other formats
கவிஞர் மனுஷ்ய புத்திரன் (MP3, 10.13 min, 4.67 MB) | Other formats
எழுத்தாளர் பிரபஞ்சன் (MP3, 8.25 min, 3.85 MB) | Other formats

சிறப்புப் பாடல்: இறையன்பன் குத்தூஸ் (MP3, 3.40 min, 1.68 MB) | Other formats

தலைமையுரை: பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் (MP3, 22.41 min, 10.3 MB) | Other formats

நன்றியுரை: கவிஞர் தமிழச்சி (MP3, 1.34 min, 742 KB) | Other formats

Saturday, October 20, 2007

புத்தக உரிமைச் சந்தை - 1

புத்தகச் சந்தை என்பது புத்தகத்தைப் பதிப்பிப்பவர் (பதிப்பாளர்), புத்தகத்தை விற்பனை செய்பவர் (விநியோகஸ்தர், கடைக்காரர்), புத்தகத்தை வாங்குபவர் (நுகர்வோர்) ஆகியோருக்கு இடையேயான சந்தையைக் குறிப்பது. பெரும்பான்மையான புத்தகக் கண்காட்சிகள் இந்தச் சந்தையைக் குறிவைத்து இயங்குகின்றன. உதாரணம்: சென்னை புத்தகக் கண்காட்சி. பதிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கடையைப் பரப்புவார்கள். படிப்பவர்கள் வந்து புத்தகத்தை வாங்கிச் செல்வார்கள். இது b2c (business to consumer) சந்தை.

ஆனால் இந்தியர்கள் அதிகம் அறியாத ஒன்று புத்தக உரிமைச் சந்தை. எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் பிரதிநிதிகள், பதிப்பாளர்கள் மட்டுமே இயங்கும் சந்தை இது. அதாவது b2b (business to business) சந்தை.

உலகில் அதிகமாக விற்கும் ஹாரி பாட்டர் அல்லது டா விஞ்சி கோட் போன்ற புத்தகங்களை எடுத்துக்கொள்வோம். இதுபோன்ற புத்தகங்கள் எவ்வாறெல்லாம் விற்பனை செய்யப்படலாம்?

* புத்தகம் எழுதப்பட்ட மூல மொழியில் உலகெங்கும் ஒரே பதிப்பாளரால் விற்பனை செய்யப்படலாம்.

* ஆனால் அந்தப் பதிப்பாளருக்கு உலகெங்கும் விற்பனை செய்யக்கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். ஹாரி பாட்டர் புத்தகங்களை பிரிட்டனில் பதிப்பித்து விற்பனை செய்ய உரிமம் பெற்றிருந்தது ப்ளூம்ஸ்பரி நிறுவனம். அமெரிக்காவில் அந்த நிறுவனத்துக்கு கட்டுமானம் கிடையாது. அமெரிக்காவில் இந்தப் புத்தகங்க்களுக்கான 'ஏலம்' நடைபெற்றபோது ஸ்கோலாஸ்டிக் என்ற நிறுவனம் அமெரிக்காவில் பதிப்பித்து விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றது.

அதாவது நாம் மேலே குறிப்பிடுவது ‘நிலப்பகுதிவாரிப் பதிப்பு உரிமை' - Territorial Publishing Right.

* மறு அச்சாக்கும் உரிமை (Reprint Right). புது பதிப்பு என்றால் பதிப்பாளர் புத்தகத்துக்குள் பல இடங்களில் கையை வைக்கலாம். அமெரிக்காவில் ஸ்பெல்லிங்க் மாற்றம் பெறும். சில பிரிட்டானியச் சொல்லாக்கங்கள் மாற்றம் அடையும். அட்டை மாற்றம் காணும். புத்தகத்தில் தலைப்பே மாற்றம் பெறும். உலகெங்கும் Harry Potter and the Philosopher's Stone என்ற பெயரில் வெளியான புத்தகம் அமெரிக்காவில் Harry Potter and the Sorcerer's Stone என்ற பெயரில் வெளியானது. ஆனால் மறு அச்சாக்கும் உரிமையில் இதுபோன்ற மாற்றங்கள் ஏதும் இருக்கா. அப்படியே அச்சாக்கி, அட்டையை வேண்டுமானால் மாற்ற அனுமதி கிடைக்கலாம்.

பொதுவாக அமெரிக்கா, பிரிட்டனில் வெளியாகும் பல புத்தகங்கள் இந்தியாவில் கிடைக்கா. சில, இறக்குமதி செய்யப்பட்டு மிக அதிக விலையில் இந்தியாவில் விற்பனையாகும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவற்றின் மறு அச்சாக்கும் உரிமையை சில இந்திய நிறுவனங்கள் வாங்கலாம். இந்த நிறுவனங்களுக்கு எடிட்டோரியல் திறமை ஏதும் இருக்கவேண்டிய தேவையே இல்லை.

* மொழிமாற்றிப் பதிப்பிக்கும் உரிமை (Translation Right). ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்து புத்தகங்களைப் பதிப்பித்து, அவற்றை உலகமெங்கும் விற்பனை செய்யும் உரிமை. இது பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

* சுருக்கிப் பதிப்பிக்கும் உரிமை (Abridgmenet Right). பல புத்தகங்களை உரிமம் பெற்று சுருக்கு, சில (அதிகாரபூர்வ) மாறுதல்களைச் செய்து, மீண்டும் பதிப்பிப்பது.

* மலிவுவிலைப் பதிப்பு உரிமை: பல வருடங்களாக விற்பனை ஆகும் புத்தகங்களின் உரிமையைப் பெற்று அவற்றை மலிவு விலைப் புத்தகங்களாக அச்சிட்டுக் கொண்டுவருவது. இதற்கு மாற்றாக சில புத்தகங்களை அதிகவிலைப் புத்தகங்களாக (Coffee-table books, Premium Production) உருவாக்கி விற்பதும் சாத்தியமே.

* வேறு பல உரிமங்களும் சாத்தியமே:

ஒற்றைப் பதிப்பு (Single Print run Right) என்பது தமிழகத்திலேயே நடைமுறையில் இருப்பது. ரமணி சந்திரன் கதைகள் ஒற்றைப் பதிப்பு முறையில் மாதநாவலாக வந்து, பின்னர் அதுவே அருணோதயம் பதிப்பகம் வழியாக தொடர்ச்சியாக வெளியிடப்படும்.

தொடர்நாவல் உரிமம் (Serialisation Right) என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். தமிழகத்தில் பொதுவாக தொடர்கதையாக (கட்டுரையாக) வந்தவை, பின் முழுப் புத்தகமாக அச்சேறும். ஆனால் பிற இடங்களில், புத்தகமாக வந்தவற்றை, தொடர் கதையாக/கட்டுரையாக மறுபிரசுரம் செய்வார்கள்.

திரைப்படமெடுக்கும் உரிமை (Cinema Rights) நமக்குக் கொஞ்சம் புதுசு. பொதுவாக தமிழ் இயக்குனர்கள் கதைகளைத் திருடி, உல்டா செய்து, நான்கைந்து இடங்களிலிருந்து வெட்டி ஒட்டி, கடைசியில் யாருக்கும் காசு கொடுக்காமல் ஒப்பேற்றி விடுவார்கள். அல்லது காசு கொடுத்து உரிமம் வாங்கினாலும் கதையைக் கைமா செய்துவிடுவார்கள். ஹாலிவுட்டில் ஓரளவுக்கு ஒழுங்காக, காசு கொடுத்து வாங்கி கதையை அப்படியே சினிமாக்குவது நடந்துவருகிறது.

ஒலிப்புத்தக உரிமை (Audio book Rights) இப்பொழுது பிரபலமாகி வருகிறது. புத்தகத்தை அப்படியே படித்து ஒலிப்பதிவாக்கி விற்பனை செய்வது.

மின் புத்தக உரிமை (E-book Rights) என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்ததே. இப்பொழுது மின் புத்தகப் படிப்பான் கருவிகள் (சோனி ரீடர், ஐரெக்ஸின் இலியட், இதோ வந்துவிடும் என்று சொல்லப்படும் அமேசானின் கிண்டில்) போன்றவை. கணினியில் படிப்பது கண்களுக்கு எளிதான வேலை அல்ல. ஆனால் மின் புத்தகப் படிப்பான்கள் கண்ணுக்கு இதமாக உள்ளன.

மேலும் பல உண்டு. இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொள்வோம். அடுத்த பதிவுகளில் இந்த உரிமங்களுக்கு உள்ளே சென்று ஆழமாகப் பார்ப்போம்.

Monday, October 08, 2007

ஃபிராங்க்ஃபர்ட் புத்தகக் காட்சி

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் இரண்டாவது ஆண்டாக, ஃபிராங்ஃபர்ட் புத்தகக் காட்சியில் பங்குபெறும். எங்களது அரங்கு முகவரி 6.0 E 904.

Sunday, October 07, 2007

நீதித்துறையின் அதிகார வரம்பு என்ன?

கனிமொழி (எம்.பி), ரவிக்குமார் (எம்.எல்.ஏ), வேறு சிலர் சேர்ந்து "நாம்" என்ற ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளனர் (போலும்). அந்த அமைப்பின் சார்பில் இன்று சென்னையில் (இமேஜ் ஆடிட்டோரியம்) 'Limits of Judicial Authority' என்ற தலைப்பில் விவாதம் (A discussion in the background of recent judicial contempt proceedings) நடந்தது.

நிகழ்ச்சிக்கு திமுகவின் மத்திய அமைச்சர் A.ராஜா தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினர் பிரிந்தா காரத் (எம்.பி), ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி A.K.ராஜன், தி ஹிந்துவின் என்.ராம், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மனோஜ் மிட்டா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இந்த நிகழ்வை ஒலிப்பதிவு செய்துள்ளேன். ஆனால் வலையேற்ற பத்து நாள்களுக்கு மேல் ஆகலாம்.

கலந்துகொண்டவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் "recent judicial contempt proceedings" என்றால் என்ன என்பதைச் சரியாக விளக்கவில்லை. பிரிந்தா காரத் தில்லி 'மிட்-டே' வழக்கு பற்றி ஒரு வார்த்தை பேசினார். மற்றபடி அக்டோபர் 1 தமிழ்நாடு பந்த் பற்றியும், பொதுவாக நீதித்துறை எப்படி பிற துறைகள்மீது தனது ஆக்கிரமிப்பை அதிகமாக்கியுள்ளது என்பது பற்றியும் பேசினார். மனோஜ் மிட்டா முழுக்க முழுக்க மிட்-டே வழக்கு பற்றி மட்டுமே பேசினார். ராம் இரண்டையும் எடுத்துக்கொண்டார். ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன், நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளையும் சுட்டாமல், எந்தெந்த வழக்குகளின்போது நீதித்துறை கொஞ்சம் கொஞ்சமாக எக்சிக்யூட்டிவின் நிர்வாக அதிகாரத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்தது என்று கோடிட்டுக் காட்டினார்.

நிறைய உபயோகம் இருந்தாலும் இந்தக் கூட்டம் சற்றே குழப்பமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது போல இருந்தது. 5.00 மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்த கூட்டம் 5.45க்குப் பிறகுதான் தொடங்கியது. திமுக அமைச்சர்கள், பிரமுகர்கள் பலரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். நிறைய திமுக தொண்டர்கள் வண்டிகளில் அழைத்துவரப்பட்டிருந்தனர். ஆனால் அமைச்சர் ராஜா தவிர அனைவரும் ஆங்கிலத்தில் பேசினர்.

பல்வேறு காரணங்களுக்காக பொதுக்கூட்டங்கள் ஆங்கிலத்தில் நடைபெற வேண்டியிருக்கும். (பிரிந்தா காரத், மனோஜ் மிட்டா ஆங்கிலத்தில்தான் பேசியிருக்க முடியும். ராம், ஏ.கே.ராஜன் ஆகியோர் மேடையில் தமிழில் பேசிப் பழக்கமில்லாதவர்கள்.) கூட்டத்தில் பலர் ஆங்கிலத்தில் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என்று தெரிந்தது.

இதுபோன்ற முக்கியமான விஷயங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க, முழுக்க முழுக்க தமிழில் (பிற மாநிலங்களில் அந்தந்த மொழிகளில்) நடக்கும் விவாதக் கூட்டங்கள் தேவை. "நாம்" என்னும் அமைப்பின் பின்னணி, நோக்கம் ஆகியவை எத்தகையதாக இருப்பினும் நீதித்துறை பற்றிய விவாதம் பொதுமக்களிடையே நடந்தாக வேண்டும்.

-*-

அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்களின் மெத்தனம், ஊழல் ஆகிய காரணங்களால், பெரும்பான்மை மத்திய தர மக்கள், மாதச் சம்பளக்காரர்கள் நீதித்துறையின்மீது பெருமதிப்பு வைக்க ஆரம்பித்தனர்.

நெருக்கடி நிலையின்போது தரம் தாழ்ந்திருந்த/காயடிக்கப்பட்ட நீதித்துறை, அடுத்த சில பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நாயகன் என்ற நிலைக்கு உயர்ந்து, இன்றோ சர்வாதிகாரத் தன்மையை எட்டப் பார்க்கிறது. பல வழக்குகளில் நீதித்துறை தரும் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. அதையும் விடக் கொடுமை, அவ்வப்போது பல நீதிபதிகள் உதிர்க்கும் கருத்துகள். கொஞ்சம் கொஞ்சமாக நீதித்துறை, நிர்வாகக் கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாகவும் மாறத்தொடங்கியுள்ளது. இதற்கு மோசமாக இயங்கும் அரசாங்கமும் ஒரு காரணம் என்றாலும், நீதித்துறை தன்னிச்சையாக கமிட்டிகளை நியமித்து, மத்திய மாநில அரசுகளுக்குத் தொல்லை கொடுப்பதில் தொடங்கி, பள்ளியில் குழந்தைகளை அனுமதிக்க இன்னின்ன வரைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பது வரை நடந்துகொள்வது அனுமதிக்க முடியாத ஒன்று.

அடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என்ற அபத்தம்.

அரசியல் கட்சிகள், மக்களின் கருத்தைக் கேட்டறிந்து, நீதித்துறையின் வரம்பு என்ன என்பதை நிர்ணயித்து அதை நீதித்துறை மீறாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்யவேண்டும். அத்துடன், நீதித்துறை மீதான அவமதிப்பு என்றால் என்ன, நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் செய்யும் குற்றங்களை, தவறுகளை, ஊழல்களை யார் தண்டிப்பது ஆகியவற்றையும் சட்டமாக்கவேண்டும்.

அதற்கு, மேலும் பல விவாதங்கள் தேவை.

பதிப்புத் தொழில் பற்றி பாரதியார்

350 years after the first Tamil book was published, entrepreneurs who will take up publishing as a business have not yet emerged. Tamil authors continue to remain in a difficult situation. Publishers should read new manuscripts and decide whether they are worthwhile, to figure out whether such manuscripts have a market. They should acquire manuscripts from the authors by paying them an advance or by some other arrangement and invest money to publish them and earn profits. It is quite surprising that our entrepreneurs have not taken sufficient interest in publishing.

Books are of course being published now. And a vast number of people of course buy and read them. If the book trade is carried out in a systematic manner, people will have better books to choose from. Right now, only the books that are published by those who can afford to do so, are available to the public. There is no doubt at all that good profits will accrue from book publishing, if it is pursued with enterprise.

-- Subramanya Bharathi, Circa 1907.

Quoted by AR Venkatachalapathy, in a conference organized in New Delhi by NBT to discuss the future of Independent Publishing in India. 3rd October 2007.

மூலம், தமிழில் இருந்ததா, ஆங்கிலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.

சீனி.விசுவநாதன் கலெக்ஷனில் தேடிப் பார்க்க வேண்டும்.

Friday, October 05, 2007

மியான்மார் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவின் நிலை

கடந்த சில தினங்களாக நமது அண்டை நாடான மியான்மாரில் (பர்மாவில்) புத்த பிக்குக்கள் ஆளும் ராணுவத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குடியாட்சி வரவேண்டும் என்று போராடும் ஆங் சான் சூ சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களும் புத்த புக்குக்களுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கிப் போராடினர். ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்து சிலரைக் கொன்றுள்ளது. பலரைச் சிறைபிடித்துள்ளது.

உலக நாடுகள் பல மியான்மார் அரசைக் கண்டித்துள்ளன. இந்தியா அப்படி எதையும் வெளிப்படையாகச் செய்யவில்லை.

அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் தலையிடப்போவதில்லை என்று இந்தியா சும்மா இருக்க முடியாது.

மியான்மாரைச் சுற்றியுள்ள சில நாடுகளைப் பார்ப்போம். தாய்லாந்தில் ராணுவம் ஆட்சியைப் பிடித்து அங்கு அரைகுறை ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. பங்களாதேசத்தில் உருப்படியான குடியாட்சி அழிந்துபோக அங்குள்ள கட்சிகளின் தலைவர்கள் காலிதா ஜியாவும் ஷேக் ஹசீனாவும் பாடுபட்டு, இப்பொழுது அங்கும் கேர்டேக்கர் ஆட்சியை நடத்திவருவது திரைமறைவில் இருக்கும் ராணுவமே. சீனாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அங்கு நடப்பது ஒரு கட்சியின் ஆட்சி. அவர்களுக்கும் குடியாட்சி முறைக்கும் சம்பந்தமே இல்லை. நேபாளம் மன்னராட்சியிலிருந்து குடியாட்சி முறைக்கான டிரான்சிஷன் நிலையில் உள்ளது.

இந்தியா ஒன்றுதான் மியான்மாரை அடுத்துள்ள ஒரே குடியாட்சி நாடு - இப்பொழுதைக்கு.

இப்பொழுதைய மியான்மார் ராணுவ ஆட்சிக்கு முழு ஆதரவு தருவது சீனா. மியான்மாரின் ராணுவ ஆட்சியைக் குறைகூறினால், மியான்மார் முழுவதுமாக சீனாவின் பக்கம் சென்றுவிடும் என்று இந்தியா பயப்படுகிறது. மியான்மாரின் எண்ணெய் வளங்கள், பிற கனிம வளங்களுக்கு ஆசைப்பட்டு இந்தியா இவ்வாறு எண்ணுகிறது. அதேபோல சீனா, மியான்மாருடன் முழுவதுமாக ஒப்பந்தம் செய்துகொண்டால் இந்தியாவின் எல்லையை ஒட்டி கடல் முழுவதும் சீனாவின் ஆதிக்கம் இருக்கும் என்றும் இந்தியா பயப்படுகிறது.

ஆனால் ராணுவ ஆட்சி மியான்மாரின் என்றுமே இருக்கும் என்று சொல்லமுடியாது. அனைத்து நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சர்வாதிகாரம் ஒழிந்து குடியாட்சி முறை வந்துதான் தீரும். மியான்மாரின் அந்தத் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

தார்மீக முறைப்படியும் இந்தியா மியான்மாரின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தரவேண்டும். அதற்காக இந்தியா உடனடியாக மியான்மார் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கவேண்டும், உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கடுமையான வார்த்தைகளில் ராணுவ ஆட்சிக்கும் அடக்குமுறைக்கும் தனது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும். சூ சியை உடனடியாக விடுவிக்குமாறு குரல் கொடுக்கவேண்டும். பிரணாப் முகர்ஜி சொல்வதுபோல மென்மையான பேச்சினால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது.

நமது அண்டை நாடுகளில் நடக்கும் பிரச்னைகளில் நாம் மூக்கை நுழைக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் தார்மீக நியாயத்தை எடுத்துக் கூறும் வண்ணம் பளிச்சென்று பேசுவதில் தவறில்லை. இதனால் சில வாய்ப்புகள் பறிபோனாலும் அதைப்பற்றிக் கவலைப்படக்கூடாது. அடுத்த நாட்டு மக்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, எனக்குக் கொஞ்சம் பெட்ரோல் கிடைக்கிறது என்று நடந்துகொள்பவர்கள் கேவலமானவர்கள். இந்திய அரசு அப்படி நடந்துகொள்ளக்கூடாது.

[மியான்மார் பற்றிய எனது முந்தைய பதிவு.]

Tuesday, October 02, 2007

हे राम



நெருப்பு இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

மத உணர்வுகளைப் புண்படுத்துவது

சேது சமுத்திரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி இந்துக் கடவுள் ராமர் பற்றிப் பேசியது பிரச்னையை எழுப்பியுள்ளது. ராமர் உண்மையில் வாழ்ந்தார்; சமுத்திரத்தின்மீது பாலம் ஒன்றை எழுப்பினார் என்று பல இந்துக்கள் நம்புகின்றனர். அதைக் கேலி செய்யும் விதமாக அல்லது இதுபோன்ற நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் விதமாக யாராவது பேசினால் உடனே தலையை வெட்டுவோம், பஸ்ஸைக் கொளுத்துவோம் என்று முரட்டுத்தனமாக பலர் நடந்துகொள்கிறார்கள்.

1. மத உணர்வுகளைப் புண்படுத்துவது என்றால் என்ன?

(அ) ஒவ்வொரு மதமும் தனக்கென சில நம்பிக்கைகளை வைத்துள்ளன. அந்த நம்பிக்கைகளை யாராவது கேள்விக்கு உட்படுத்தினால் அந்த மத நம்பிக்கையாளர்களுக்குக் கடும் கோபம் வருகிறது.
(ஆ) ஒரு மதம் புனிதமாக நினைக்கும் சிலவற்றை சிலர் கேலி செய்யும்போது அந்த மதத்தவருக்குக் கோபம் வருகிறது.
(இ) ஒரு மதத்தவரின் புனிதச் சின்னங்களை, கோயில்களை, சிலைகளை அசுத்தம் செய்வதால், தாக்குவதால் கோபம் வருகிறது.

உதாரணம்: தமிழக முதல்வர் செய்தது (அ) மற்றும் (ஆ). ராமன் என்னும் கடவுள் இருந்தாரா இல்லையா என்ற கேள்வியை எழுப்பி, இல்லை என்பது தனது கருத்து என்றும் அதனால் ராம சேது என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அறிவியல்பூர்வமாக அது வெறும் மணல்திட்டு என்றும் கருணாநிதி பேசியிருந்தால் பிரச்னையை ஊதிப் பெரிதாக்க முடிந்திருக்காது. ஆனால் அரசியல் மேடைகளில் அடுத்தவரைக் குத்திக் காட்டிப் பேசுவது சர்வசாதாரணமானது. எனவே "ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான்?" என்று பேசும்போது பிரச்னை பெரிதாகிறது.

டென்மார்க் முகமது கார்ட்டூன் பிரச்னையை எடுத்துக்கொள்வோம். முகமது நபியை கார்ட்டூனாக உருவமாகவோ வரைவது ஏற்புடையதல்ல என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால் டென்மார்க் பத்திரிகை ஒன்று தன் வாசகர்களை முகமது நபியை கார்ட்டூனாகச் சித்திரிக்குமாறு அழைத்தது. அப்படி வரையப்பட்ட பல கார்ட்டூன்கள் வேண்டுமென்றே மோசமாகச் சித்திரிக்கப்பட்டவை. முஸ்லிம்கள் கோபம் கொள்ளவேண்டும் என்றே வரையப்பட்டவை.

2. யார் யாரெல்லாம் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள்?

(அ) அறிவியல், மருத்துவக் கண்டுபிடிப்புகள் அனைத்துமே மதங்களின் அடிப்படைகளைத் தவறு என்று அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இதனால் மத உணர்வாளர்கள் ஒரு காலத்தில் கடுமையாக அவதியுற்றனர். இப்பொழுது வேறு வழியில்லை என்று அறிவியலை, மருத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனாலும் பல இடங்களில் அறிவியல் அறிஞர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டனர் என்று மதவாதிகள் சண்டைக்கு வருகின்றனர்.
(ஆ) சமூக அறிவியல் அறிஞர்கள், சிந்தனைவாதிகள், அரசியல்வாதிகள் பலரும் மதங்களின் மோசமான பின்தங்கிய நோக்கைச் சாடுகின்றனர். கருத்து ரீதியில் மதங்களின் தவறான கருத்துகளை எதிர்கொள்வது அவசியம். இங்கு மத உணர்வுகளைப் புண்படுத்துவது அவசியமாகிவிடுகிறது. எல்லா மதங்களும் பெண்களை நடத்துவது; இந்து மதத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் போன்ற பலவற்றை எதிர்த்துப் போராடுவது அவசியமாகிறது.
(இ) மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் முன்னிலை வகிப்பவர்கள் பிற மதங்களின் அடிவருடிகள்தாம்! முஸ்லிம்கள் பலரும் ஒவ்வொரு நாளும் கிறித்துவ, இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். இந்துக்கள் பலரும் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். டென்மார்க் கார்ட்டூன் நிகழ்வின்போது சந்தோஷமாக அந்த கார்ட்டூன்களை மீண்டும் பரப்பியவர்கள் கிறித்துவ, இந்து அடிப்படைவாதிகள்.
(ஈ) நாத்திகர்கள். இவர்கள் அறிவியல் சார்ந்த நாத்திகவாதிகளாக இருக்கலாம்; அல்லது பெரியார் வழிவந்த 'நம்பிக்கை' சார்ந்த நாத்திகவாதிகளாகவும் இருக்கலாம்.

3. அடிப்படை உரிமை (பேச்சுரிமை) Vs மத உணர்வுகளைப் புண்படுத்துதல்.

இந்தியா போன்ற நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின்படிக் கிடைத்த பேச்சுரிமையைக் கொண்டு பிறரது மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசலாமா?

மத உணர்வுகளைக் கேலி செய்யும் விதமாகப் பேசுவது தவறில்லை என்பது என் வாதம். மதங்கள் முட்டாள்தனமான கருத்துக்களால் நிறைந்தவையாகவே எனக்குப் படுகிறது. இந்துமதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மூன்றுமே இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கருத்துகள் அந்தந்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்லாது அந்த மதத்தவர் இணைந்து வாழும் சமூகத்தையும் துன்பத்துக்குள்ளாக்குகிறது. (உதாரணம்: போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது, குழந்தை மணம், கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருத்தல், சதி... இப்படி எத்தனையோ.)

ஒரு மதத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனை முறையைத் தாண்டி, சுயமாகச் சிந்தித்து, தனிச் சிந்தனை வழியில் வருபவர்கள் மதங்களில் காணப்படும் மூடக் கருத்துகளை கேலி செய்தே தீரவேண்டும். அதனால்தான் சமூகத்தை பாதிக்கும் பல அவமானகரமான குற்றங்கள் நாளடைவிலாவது தடுக்கப்படும்.

தமிழக முதல்வர் ராமரைப் பற்றிப் பேசுவதற்கு முழு உரிமை அவருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். அவர் அப்படிப் பேசுவது பிடிக்கவில்லை என்றால் குடியாட்சி முறைக்குள்ளாக அவருக்கு எதிராக என்ன செய்ய முடியுமோ அதை அவரது எதிரிகள் செய்துகொள்ளலாம். ஆனால் அவரது கழுத்தை வெட்டினால் எடைக்கு எடை தங்கம் என்றெல்லாம் அறிவிப்பு செய்யும் அபத்தமானவர்களை சட்டம் உடனடியாகப் பிடித்து தண்டிக்கவேண்டும். ஆனால் இதுபோன்ற சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைவருக்கும் பொருந்துமாறு இருக்கவேண்டும். தஸ்லிமா நஸ்ரினைக் கொலை செய்யச் சொல்லித் தூண்டிய ஹைதராபாத் எம்.எல்.ஏ, டென்மார்க் கார்ட்டூனிஸ்டைத் தண்டிக்கச் சொன்ன உத்தர பிரதேச எம்.எல்.ஏ என்று அனைவரையும் உள்ளே தள்ளவேண்டும்.

புனிதமாகக் கருதப்படும் கருத்துகளைத் தாக்கலாம். ஆனால் புனித இடங்கள், மனிதர்கள் ஆகியோரைத் தாக்குவதை வரவேற்கக்கூடாது. இதுவும்கூட மதம், புனிதம் ஆகிய காரணங்களால் அல்ல. உயிர், உடைமை ஆகியவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டிய கடமை அரசுகளிடம் உண்டு.

4. அரசியலாக்கப்படும் மதம், மதத்தால் இயக்கப்படும் அரசியல்

மதமும் அரசியலும் இருக்கும்வரை ஒன்றோடு ஒன்று இணைந்தே செல்லும். மதத்துக்கு அரசியலின் ஆதரவு தேவை. அரசியல்வாதிகளுக்கு மதவாதிகளின் செல்வாக்கால் கிடைக்கும் வாக்குகள் தேவை. அதனால்தான் பாஜக ராமசேது விவகாரத்தைப் பெரிதாக்க நினைக்கிறது. அதில் கிடைக்கும் வாக்குகளால், சரிந்து கிடக்கும் தன் நிலையை முன்னுக்குக் கொண்டுவர விரும்புகிறது.

கருணாநிதி ராமர் பற்றி எதுவுமே சொல்லாவிட்டாலும்கூட பாஜக இதைப் பெரிய விஷயமாக மாற்றவே விரும்பும். ஆனால் கருணாநிதியின் பேச்சு காங்கிரஸை இக்கட்டில் மாட்டிவிட்டுள்ளது. கருணாநிதிக்கு பாஜக பற்றி எந்தக் கவலையுமில்லை. தமிழகத்தில் இப்பொழுதைக்கு பாஜக ஒரு பொருட்டே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு வட மாநிலங்களில் ராமரும் பாஜகவும் தலைவலிகள்.

கருணாநிதி மத அடிப்படைவாதத்தை ஒழிக்க காங்கிரஸுக்கு உதவ விரும்பினால் சிலவற்றைச் சொல்லாமல் விடுவது நலம்.

====

அறிவியல் ரீதியில் என் கருத்து...

ராமர் என்று ஒருவர் இருந்தாரா என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. காலத்தால் பிற்பட்டவர்களாகக் கருதப்படும் இயேசு இருந்ததற்கான ஆதாரங்களையே பல அறிஞர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

ராமசேது என்ற கடல்மீது கல்லையும் மண்ணையும் போட்டு பல ஆயிரம் வானரங்கள் நடந்து செல்ல, பாலம் கட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. புஷ்பக விமானம், பத்து தலை அரக்கன், மாயாவிகள், சஞ்சீவி மலை, நாகாஸ்திரம், பிரம்மாஸ்திரம் என்று அனைத்துமே கற்பனை. இன்றைய தேதியில் இதுபோன்று ஏதும் முற்காலத்தில் இருந்திருப்பதற்கான/நடந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் முற்றிலும் இல்லை.

அறிவியல் கூறும் உண்மைகள் மட்டுமே இன்று ஏற்கக்கூடியன.

இலங்கையைச் சேர்ந்த செரான் தெரணியகல என்ற அகழ்வாராய்ச்சி நிபுணர் சென்னையில் கொடுத்த பேச்சில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாக் நீரிணைப்பில் கடந்த 7,00,000 ஆண்டுகளில் 17 முறை மண் திட்டாகவே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கடைசியாக இது நடந்தது கிட்டத்தட்ட 7,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். [ Search for a common past, S.Muthiah]

அப்படி முழுதும் மணலால் தொடர்பிருந்த ஒரு கால கட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளை கடல்மீது பாலம் கட்டியதாகக் கற்பனை செய்துகொள்ளும் வளம் மனிதனிடம் உண்டு. ஹோமரின் இலியட் போல வால்மீகியின் ராமாயணமும் அற்புதமான சம்பவங்கள் நிறைந்த அருமையான காவியம். [அவ்வளவே!]

எனவே, மத உணர்வுகள் என்னும் பூச்சாண்டியைத் தூக்கி மூட்டை கட்டி வைத்துவிட்டு, இந்தத் திட்டத்தால் பொருளாதார ரீதியில், சூழலியல் ரீதியில் என்ன நன்மை, தீமை என்பதை ஆராய்ந்து அதன்படி நடப்பதே நல்லது.