Tuesday, November 27, 2007

பிரபாகரனின் 2007 மாவீரர் உரை

வன்னி வானொலி நிலையத்தில் இலங்கை விமானப்படை வீசிய குண்டுகள், இணைய வானொலியில் வந்த நேரடி ஒலிபரப்பைத் தடுக்கவில்லை. இப்பொழுது pdf கோப்பாக தமிழ்நெட்டில் கிடைக்கிறது.

சில உடனடிக் கருத்துகள்:

1. புதிதாக இந்தப் பேச்சில் ஒன்றுமில்லை.

2. இந்தியாவுடன் சுமுகமான உறவுக்கு வழிகோலும் வகையில் இந்தப் பேச்சு இருப்பதாகத் தெரியவில்லை. ‘இந்தியாவின் தவறு' பற்றி பிரஸ்தாபம் நிறைய உள்ளது. இந்தியாவின் உதவியைப் பற்றி பிரபாகரன் அதிகமாக யோசிப்பதில்லை என்றே தோன்றுகிறது.

3. அமெரிக்காவைப் பெயர் சொல்லிக் குற்றம் சொல்ல பிரபாகரன் தவிர்த்திருக்கிறார். “எம் மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.”

4. தமிழ்ச்செல்வன் கொலைக்கு சர்வதேச நாடுகளே காரணம் என்ற அபத்தமான கருத்து. “சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது. .... சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான்.”

5. “பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்.” - இந்த வாக்கியத்தை கவனமாக வேறு மாதிரிச் சொல்லியிருக்கலாம். “எமக்கென ஒரு நாடு” என்பது இந்த எண்பது மில்லியன் தமிழர்களுக்குமான ஒரு நாடு என்ற பொருளில் இருந்தால் அது இந்தியாவில் எவ்வாறு திரிக்கப்படும் என்பதைப் புரிந்து வேறுவிதமாகச் சொல்லியிருக்கலாம்.

“உலகம் முழுதும் வாழும் தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்கு உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு” வேண்டும் பிரபாகரன், அதற்கான நடவடிக்கைகள் சிலவற்றையும் எடுக்கலாம்.

2005 மாவீரர் தின உரையை ஒட்டி நான் எழுதியது

Sunday, November 25, 2007

அரபி மொழிக்கு மொழிமாற்றம்

கார்டியன் வழியாக தி ஹிந்துவில் வந்த கட்டுரை. கார்டியனில் தேடிக் கண்டுபிடித்ததில் மேற்கொண்டு தகவல்கள் கிடைத்தன.

அபு தாபியைச் சேர்ந்த கலிமா என்னும் அமைப்பு பிற மொழிகளிலிருந்து நிறைய புத்தகங்களை அரபி மொழிக்கு மொழிமாற்றம் செய்ய உள்ளது. முதல் ஆண்டு (2007-ல்) 100 புத்தகங்கள். 2010-லிருந்து ஆண்டுக்கு 500 புத்தகங்கள். முதல் 100-ல் பாதி ஆங்கிலத்திலிருந்து அரபிக்கு. மீதம் உள்ள புத்தகங்கள் 16 மொழிகளிலிருந்து வரப்போகிறதாம்.

இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

*

ஓர் ஆண்டுக்கு ஸ்பெயின் மொழிக்கு எவ்வளவு புத்தகங்கள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றனவோ, அந்த எண்ணிக்கையை அரபி மொழி கடந்த 1000 ஆண்டுகளில்கூட எட்டவில்லையாம்.

இங்கு அரபி மொழியை எடுத்துவிட்டு தமிழ் என்று போட்டால் அதே நிலைதான் இருக்கும்.

இந்தியாவில் மலையாளத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால் பிற மொழிகளிலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது என்பது அபூர்வமே. அதற்கான உள்கட்டுமானம் இல்லாத நிலை. அப்படி ஒன்றைச் செய்தால் அதற்குத் தேவையான சந்தை இருக்குமா என்ற பயம். சந்தை இருக்கும் என்று தோன்றினாலும் எப்படி சரியாகச் செய்வது என்று தெரியாத சூழ்நிலை. தரம் பற்றிய கவனம் இல்லாமை.

இதனை மாற்றவேண்டுமென்றால் நிறைய புத்தகங்கள் சுமாரான தரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று தமிழுக்குக் கொண்டுவரப்படவேண்டும். பின்னர் அவற்றைச் செப்பனிடும் பணியும் தொடர்ந்து நடைபெறவேண்டும்.

மொழிபெயர்ப்பு பற்றிய என் முந்தைய பதிவு

Friday, November 23, 2007

விடுதலைப் புலிகள், காங்கிரஸ், திமுக

இன்றைய தி ஹிந்து கருத்துப் பத்தியில் ஹரீஷ் கரே எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:
... Mr. Antony was not in favour of the AICC resolution taking a critical note of the eulogy of LTTE cadres. (This was an indirect reference to the Tamil Nadu Chief Minister’s recent paean to a slain LTTE activist). His argument was that the Tamil Nadu Congress had already voiced its objection. Where was the need for the AICC to rub it in once again against a critical ally?
விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் இருவரான தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படை குண்டுவீச்சுத் தாக்குதலில் இறந்ததற்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து ஒரு கவிதை பாடியிருந்தார். உடனே அவர் என்னவோ உலகிலேயே பெரிய தப்புக்காரியம் செய்ததைப் போலவும் இந்திய இறையாண்மையைச் சீர்குலைத்ததுபோலவும் ஜெயலலிதா கருணாநிதியைச் சாடினார்.

விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் கருணாநிதி செய்தது தவறு என்பது சிலரது வாதம். அதுவும் அவர் தனிப்பட்ட முறையில் இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பதவியில் இருப்பவர் என்பதால் என்கிறது இந்த வாதம்.

விடுதலைப் புலிகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தவித அச்சுறுத்தலையும் தருவதாகத் தோன்றவில்லை. அப்படிப்பட்ட சில அமைப்புகளைக்கூட இந்தியா இதுவரை தடை செய்யவில்லை. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் இந்தியா புலிகள் அமைப்பைத் தடைசெய்வதை ஒரு சடங்காகச் செய்துவருகிறது. யாரும் இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதில்லை. உள்துறை அமைச்சகம் ரப்பர் ஸ்டாம்ப் அடிப்பதோடு சரி.

காங்கிரஸ் கட்சிக்கு ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வருத்தம் இருப்பது நியாயமே. அதுவும் முக்கியமாக தமிழக காங்கிரஸுக்கு இது மனவருத்தத்தைத் தரக்கூடிய விஷயம் என்பதிலும் சந்தேகம் இல்லை. இதில் மேற்கொண்டு சோனியா காந்திக்கு என்ன நிலை என்பதை அறியவேண்டியது அவசியம். சோனியா காந்தி வெளிப்படையாக விடுதலைப் புலிகள் விவகாரத்தில் என்ன நிலை எடுக்க விரும்புகிறார் என்று எங்கும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அவரைச் சந்தோஷப்படுத்தவென்றே தமிழக காங்கிரஸ்காரர்கள் சிலவற்றைச் சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி சற்று தீவிரமாக சோனியாவின் மனத்தை அறிய முயற்சி செய்யவேண்டும். ஒரு ஸ்டேட்ஸ்மேன் சொந்த சோகத்தைத் தாண்டிச் செயல்படவேண்டும். கட்சி, நாடு, அண்டை நாடு, அங்குள்ள மக்கள் படும் அவலம் ஆகியவற்றைப் பற்றி யோசிக்கவேண்டும்.

இந்நிலையில் ஏ.கே.அந்தோனியின் கருத்து கவனிக்கப்படவேண்டும். முக்கியமாக திமுக, இலங்கையில் தமிழர்கள் நிலைமீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்குமா என்று நாம் பார்க்கவேண்டும்.

Saturday, November 17, 2007

அமேசானின் கிண்டில் (Kindle)

அமேசான் எந்த நேரமும் கிண்டில் எனப்படும் தனது மின்புத்தகப் படிப்பானை வெளியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்கோ ஆரம்பித்த சில வதந்திகள் இந்தக் கருவி திங்களன்று வெளியாகலாம் என்று சொல்ல, அத்தனை நியூஸ்வயர் செய்திகளும் அதையே திருப்பித் திருப்பி சொல்லி, வதந்தியை உண்மையாக உரைத்தன. இப்பொழுது அடுத்த வதந்தி, இந்த மின்புத்தகப் படிப்பான் கருவி வெளியாக ஜனவரிவரை ஆகலாம் என்கிறது.

$400 என்ற விலை அதிகம்தான்.

இலியாட் எனப்படும் கருவி - லினக்ஸ் இயங்குதளம், திறமூல ஆர்வலர்களுக்கு சந்தோஷம் தரக்கூடியது - இப்பொழுது $700-க்கு விற்கிறது. அதை வாங்கி அதில் தமிழ் மின்புத்தகத்தைப் போட்டுப் பார்த்தேன்.


மேலே, அளவு ஒப்புமைக்காக ஒரு ஆடியோ புத்தகம், ஒரு அச்சுப் புத்தகம் ஆகியவற்றையும் வைத்துப் படம் எடுத்துள்ளேன்.

இலியாடில் எல்.சி.டி திரை கிடையாது. உயர்தரமான e-ink தொழில்நுட்பத்தால் உருவான திரை உள்ளது. இதனால் மின்புத்தகத்தைப் படிக்கும்போது கண்ணை உறுத்துவது கிடையாது. எல்.சி.டி திரைதான் இருக்கப்போகிறது என்றால் அமேசானின் கிண்டிலை இன்னமும் குறைந்த விலைக்குக் கொடுக்கலாம்.

இந்தியாவுக்குத் தேவை மிகக் குறைந்த விலை மின்புத்தகப் படிப்பான் கருவி. ரூ. 5,000 என்பதே இந்தியாவுக்கு அதிகம்.

Sunday, November 11, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி 2008

சென்னை புத்தகக் கண்காட்சி நடக்க உள்ள நாள்கள்: 4-17 ஜனவரி 2008

இடம்: சென் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகம் (பச்சையப்பர் கல்லூரிக்கு எதிராக)

வெளியூரில் இருப்பவர்கள், சென்னைக்கு இந்த நேரத்தில் வருபவர்கள், தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

Sunday, November 04, 2007

தமிழ்ச்செல்வனின் கொலையும் ஈழத்தின் எதிர்காலமும்

இப்போது இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்துகொண்டிருப்பது முழு யுத்தம். இன்னமும் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக யாருமே நினைக்கவில்லை.

தமிழ்ச்செல்வன் மற்றும் சில புலிகளின் முக்கியஸ்தர்கள்மீது இலங்கை விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் புரிந்துள்ளது. அத்துடன் வெளிப்படையாகவே மேலும் இதேபோன்று தாக்குதல் நடத்தி புலிகளின் தலைமையை அழிப்போம் என்று இலங்கை அரசு சொல்லியுள்ளது.

படைகளின் பலம், கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் போரின் வெற்றி தோல்விகள் ஆகியவை, இப்போது நடக்கும் போரில் சிங்களர் பக்கமே கை ஓங்கி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்த நிலையில் இலங்கை அரசு சமாதானத்தை நோக்கி தனது கரத்தை நீட்டாது. சமாதானத்தை நோக்கிப் போக, விடுதலைப் புலிகளின் தன்மானமும் இடம் கொடுக்காது. கடந்த ஒவ்வொரு தடவையும் சமாதானத்தை நோக்கிச் சென்றபோது புலிகளின் கையே (மிகக் குறைவான அளவுக்கு) மேலோங்கி நின்றது. சிங்கள அரசும் ராணுவமும் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது குழம்பிய நிலையில் இருந்தபோதே அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர்.

-*-

இரு தரப்பினருமே எதிரிகளின் தலைமையை அல்லது முக்கியஸ்தர்களைத் தாக்கி அழிப்பதில் மும்முரமாகவே இருந்துள்ளனர். விடுதலைப் புலிகள் பலமுறை இலங்கை அரசின் அமைச்சர்களை, முக்கியஸ்தர்களை தற்கொலைப் படை மூலம் அழித்துள்ளனர். பிரேமதாச, ரஞ்சன் விஜெரத்னே, லலித் அதுலத்முதலி, காமினி திஸ்ஸநாயகே, குணரத்னே, லக்ஷ்மண் கதிர்காமர் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். சந்திரிகா குமாரதுங்க மயிரிழையில் கொல்லப்பட்டிருந்திருப்பார்.

நேரடியான போரல்லாது தற்கொலைப் படையால் ஏவி அழிக்கப்பட்ட ராணுவ துணைத்தளபதி பரமி குலதுங்க. கொலையிலிருந்து தப்பியவர் தற்போது ராணுவத் தலைவராக இருக்கும் சரத் ஃபொன்சேகா.

அதேபோல இலங்கை ராணுவம் போரில் நேரடியாகக் கொல்லாமல் பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை நிச்சயமாகக் கொன்றிருக்கும். இதற்கான தகவல்கள் சீராகக் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தரப்பில் குழப்பத்தை ஏற்படுத்த இலங்கை ராணுவம் முயன்றதில் பெற்ற வெற்றி கருணா.

இந்த நேரடி மற்றும் மறைமுகமான சண்டைகளில் எது நியாயம், எது அநியாயம் என்பது முற்றிலுமாக மறைந்துவிட்டது.

-*-

தமிழ்ச்செல்வன் கொலையை முதலில் கேள்விப்பட்டதும் எனக்கு இது அநியாயம் என்றுதான் தோன்றியது. போர்க்கோலம் பூணாத - குறைந்தபட்சம் இந்த நேரத்தில் போர்க்கோலம் பூணாத - ஒருவரை; பிற நாடுகளுடனும் அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் ராஜதந்திரப் பிரமுகரை குறிப்பிட்டு, குறிவைத்து, விமானங்களை அனுப்பிக் கொலை செய்வது முறையா? அந்த வகையில் இலங்கை அரசு கட்டாயமாகக் கண்டிக்கப்படவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

மிகவும் மோசமான சண்டைகளுக்கு ஊடாகவும் சில குறைந்தபட்ச நாகரிகங்களைக் கடைப்பிடிப்பது இரு தரப்பினருக்கும் தேவையானது. ராணுவ இலக்குகள் என்று அறியப்பட்ட இலக்குகளைத் தவிர்த்து, பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்துவது அநாகரிகமானது என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வர்.

பல நேரங்களில் போர் நடக்கும் அதே நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். போர் நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் சிங்களப் பகுதிகளிலும் சரி, தமிழ்ப் பகுதிகளிலும் சரி, சிவிலியன் நிர்வாகம் நடக்கிறது. அந்த நிர்வாகத்தின் அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தப்படுவது அநாகரிகமான செயல் என்பதை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

-*-

தமிழர்களுக்கு இனியும் ஃபெடரல் கூட்டாட்சி முறை என்பது நடைமுறை அளவில் ஒத்துவராத விஷயம். சிங்களர்களிடமிருந்து கனிவான அணுகுமுறை இனி வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளின் அணுகுமுறைமீது நமக்கு எவ்வளவுதான் விமரிசனங்கள் இருந்தாலும் இன்றைய தினத்தில் நமது ஆதரவு அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

முக்கிய எதிர்க்கட்சியான அஇஅதிமுக விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலையை மட்டுமே எடுக்கக்கூடியது. ஆனால் மற்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியும். தமிழக காங்கிரஸ் தனியான ஒரு கொள்கையை எடுக்கக் கூடியதல்ல. மத்திய காங்கிரஸ் என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

எனவே பிற கருத்துருவாக்கங்களை முன்வைக்காமல் தனித் தமிழீழம் என்ற நிலையை இந்தியா ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய விடுதலைப் புலிகளும் தமிழகக் கட்சிகளும் முன்வரவேண்டும்.

இதற்கான சில வழிமுறைகள்:

1. விடுதலைப் புலிகள் offense அன்பதை விடுத்து defense என்ற நிலைக்கு மாறவேண்டும். இன்று சிங்கள அரசின் கையே ஓங்கியுள்ளது. 'சரியான பதிலடி கொடுப்போம்' என்று பேசுவது அபத்தம். நாலைந்து தற்கொலைத் தாக்குதல்களால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது. இலங்கை விமானப் படை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்திகொண்டே இருக்கும்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சொல்லி பேச்சுவார்த்தை மேசைக்குத் தயாராக வேண்டும். இதன்மூலமும் சர்வதேச அழுத்தம் மூலமும் தமிழர் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடைபெறாவண்ணம் செய்யவேண்டும்.

2. இன்று விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு ஆதரவு தமிழகத்தின் தமிழ் தேசியவாதிகளிடமிருந்தே வருகிறது. இது வருத்தம் தரத்தக்க வகையில் தனித் தமிழீழத்துக்கு எதிரானதாகவே இருக்கும். தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் மத்திய அரசுக்கு கிலியூட்டக்கூடியவர்கள். தமிழகத்தைத் துண்டாக்கி, ‘அகண்ட தமிழ்நாடு' என்ற கருத்தை முன்வைப்பவர்கள் என்று அவர்களைக் காரணம் காட்டி மத்திய அரசை பயமுறுத்த சில திறமையான பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் முன்வருவர்.

இதை மாற்றவேண்டுமானால் விடுதலைப் புலிகள் தங்களது ஆதரவை இந்திய மைய நீரோட்டக் கட்சிகளிடமிருந்து பெற வேண்டும். இதில் சில கட்சிகள் தமிழகத்துக்கு வெளியே உள்ள பிற மாநிலக் கட்சிகளாக இருக்கலாம். உதாரணத்துக்கு தெலுகு தேசம், ஜனதா தளம் (செகுலர் மற்றும் இதர சில்லறைகள்), பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியோருடன் புலிகள் தொடர்பு கொண்டு, தங்களது நிலையை விளக்கவேண்டும்.

3. பாரதீய ஜனதா கட்சி, கம்யூனிஸ்டுகள் ஆகியோரோடு நேரடித் தொடர்பு தேவை. இந்தக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்குப் பரிந்து பேசினால்தான் இந்தியா ஒருமித்த கருத்தை நாடாளுமன்றத்தில் உருவாக்கும். இந்திய நேரடியாக யுத்த தளவாடங்களை அனுப்பி விடுதலைப் புலிகளுக்கு உதவ வேண்டும் என்பதில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ஒரு சீரிய விவாதம் வந்தால் அதுவே நல்லது. இலங்கையில் தமிழர்கள் நலன் என்பது தனித் தமிழீழத்தில்தான் சாத்தியமாகும் என்பது பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தால் அதை உலகம் கூர்ந்து கவனிக்கும்.

-*-

விடுதலைப் புலிகள் இனியும் தமது சொந்த முயற்சியால், படை பலத்தால் தனி ஈழத்தைப் பெறக்கூடும் என்று என்னால் நம்பமுடியவில்லை.

எவ்வளவு விரைவில் பிரபாகரனுக்கும் இந்த எண்ணம் தோன்றும் என்பதை வைத்தே அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்லமுடியும்.

Saturday, November 03, 2007

பாகிஸ்தானில் நெருக்கடி நிலை

கிட்டத்தட்ட அனைவருமே எதிர்பார்த்த ஒரு நிகழ்வு இன்று நடந்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வீஸ் முஷரஃப், நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளார்.

அவரது கோணத்திலிருந்து இதை மட்டும்தான் அவரால் செய்திருக்க முடியும். ஆனால் இது பாகிஸ்தானைப் பெரும் உள்நாட்டுப் போரில் கொண்டுபோய் சேர்க்கப்போகிறது.

1. நீதிபதிகள் ஒடுக்கப்படுவர். ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்கப்படுவர். சிலர் தீர்த்துக்கட்டப்படலாம். தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரி நிச்சயமாக சிறையில் தள்ளப்படுவார்.

2. முக்கியமான சில வக்கீல்கள் - முஷரஃபை எதிர்ப்பவர்கள் - காணாமல் போகலாம். உயிருடன் திரும்பி வந்தால் பெரிய விஷயம்.

3. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிச்சயமாக ஒடுக்கப்படுவர். நவாஸ் ஷரீஃப், பேநசீர் புட்டோ இருவருக்கும் தலைவலி.

பாகிஸ்தானின் முன்னாள் ஆட்சியாளர்கள் கொடுத்த நெருக்கடி நிலை ஆட்சிக்கும் இப்போதுள்ள ஆட்சிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். முஷரஃபின் முதல் நெருக்கடி நிலை ஆட்சிக்கும் இப்போதுள்ளதற்கும்கூட வித்தியாசங்கள் உண்டு. முதல்முறை முஷரஃபை மக்கள் ஆதரித்தனர். இப்போது முஷரஃபுக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

ஆனால் முஷரஃபின் பெரும் தலைவலி மதத் தீவிரவாதிகளிடமிருந்துதான் வரும். அவர்களைத்தான் முஷரஃப் தாக்குவார். அவர்கள் பதில் தாக்குதல் தொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சியினரும் மக்களில் சிலரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவார்கள். விளைவு... பாகிஸ்தான் அரசியலே தீவிரவாதத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளும்.

பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலி. விளைவாக, இந்தியாவுக்கும் தலைவலிதான்!