Thursday, January 31, 2008

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை

கடந்த நான்கைந்து நாள்களாக தொலைக்காட்சியில் இதுபற்றிய செய்திகளைக் காண்பிக்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பு (அட்டவணை சாதியினர் - SC) மாணவர்கள் மத்திய அரசுக் கல்லூரிகளில் மேல்படிப்பு படிக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் ஐஐடி முதலான அனைத்தும் அடங்கும். சென்ற ஆண்டுவரை(?) இந்த உதவித்தொகை எந்தவித நிபந்தனைகளும் இன்றிக் கொடுக்கப்பட்டன. ஆனால் இப்போது மத்திய அரசு, 12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்கள் எடுத்திருந்தால்தான் இந்த மாணவர்களுக்கு மேல்படிப்பின்போது உதவித்தொகை வழங்கும் என்று அறிவித்துள்ளது.

SC மாணவர்களுக்கான உதவித்தொகை 'merit cum means' என்ற வரையறைக்குள் வரக்கூடாது. SC வகுப்பினரில் படிப்பு குறைவாக உள்ளது, அதனை அதிகரிக்கவேண்டும் என்ற காரணத்தால்தான் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது பெற்றோரின் ஆண்டு வருமானம், மாணவர்கள் 12-ம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண் ஆகியவற்றைக் கண்காணிப்பதால் பெருமளவு SC மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் ஒரு கணிப்பின்படி, சுமார் 2.25 லட்சம் SC மாணவர்கள் இந்தியா முழுவதிலும் கல்லூரிப் படிப்பிலிருந்து வெளியேற நேரிடும் என்கிறார்கள்.

அப்படி நேர்ந்தால் அது மோசமான ஒரு நிகழ்வாகும்.

இது தொடர்பாக ஆதாரபூர்வமான தகவல் ஏதும் Ministry of Social Justice and Empowerment -இடமிருந்து வரவில்லை. அவர்களது இணையத்தளத்தில் தேடியதில், சில விஷயங்கள் அகப்பட்டன. 2000-01 முதல் 2003-04 வரை, மத்திய அரசு கொடுத்துவந்துள்ள "Post Metric Scholarship" எவ்வளவு, அது எத்தனை பேரைச் சென்று அடைந்துள்ளது என்ற விவரம் இதோ: (ஆதாரம்)

ஆண்டுஉதவித்தொகை
ரூ. கோடி
மாணவர்கள்
லட்சம்
2000-01114.1515.50
2001-02159.2717.18
2002-03153.0518.19
2003-04264.9922.00

இந்த உதவித்தொகை வழங்குவதில் பெற்றோர்களது வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ. 50,000 என்று இருந்தது, 2003-04 முதல் ரூ. 1,00,000 என்று உயர்த்தப்பட்டுள்ளதாக மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆண்டறிக்கை கூறுகிறது.

***

பல தாழ்த்தப்பட்ட வகுப்பு தலைவர்கள், திருமாவளவன், வீரமணி போன்றோர் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளனர். திருமாவளவன் நேற்று தொலைக்காட்சி பேட்டியில் பேசும்போது, பெற்றோர் வருமான வரம்பை ரூ. 2,00,000 என்று மாற்றவேண்டும், 60% மதிப்பெண்கள் என்பதை நீக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கோரிக்கை நியாயமானது.

திருமாவளவனுக்கு ஆதரவாக

திருமாவளவன் சமீபத்தில் சென்னையில் கருத்துரிமை (மீட்பு) மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவன் வைத்தார். அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற காரணத்தாலேயே ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டிப்பது, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் சாவுக்கு இரங்கல் தெரிவிப்பது போன்றவற்றை யாரும் செய்யக்கூடாது என்று சொல்வது கருத்துரிமைக்கு எதிரானது என்றார்.

திருமாவளவனது கருத்துடன் நான் முழுவதுமாக ஒத்துப்போகிறேன். ஓர் இயக்கம் தடை செய்யப்பட்டது என்ற காரணத்தாலேயே அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது, அந்த இயக்கத்துக்கு ஆதரவாக எதையுமே “பேசக்கூடாது” என்ற கருத்து மிகவும் ஆபத்தானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

முதலில் எந்த இயக்கம் தடை செய்யப்பட்டாலும் அந்தத் தடை தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பேசுவதற்கான உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது, தேசவிரோத நடவடிக்கை என்று சொல்லிச் சொல்லியே நியாயமான விவாதங்கள் நடைபெற விடாமல் செய்வதை அறிவுஜீவிகள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.

திருமாவளவன் இந்த விஷயத்தை ஓர் அரசியல் பிரச்னையாக்கி, நீதிமன்றம், மக்கள் மன்றம், பத்திரிகைகள் என அனைத்துக்கும் கொண்டுசெல்லவேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழக சட்டமன்றத்தின் தீவிரமான விவாதம் நடத்தப்படவேண்டும். சட்டமன்ற விவாதங்கள் என்றால் உறுப்பினர்களுக்கு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேச immunity உண்டு. அதனால் பயமின்றிப் பேசலாம்.

Wednesday, January 30, 2008

உலகிலேயே பெரிய பணக்காரர்கள்

அவ்வப்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒரு பட்டியல் கொடுக்கும். அதில் யார் நம்பர் 1, யார் நம்பர் 2 என்று போட்டிருக்கும். பில் கேட்ஸ், வாரன் பஃபட், லக்ஷ்மி மிட்டல், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி....

பலர் என்னிடம் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். நிஜமாகவே இந்த ஆசாமிகளிடம் இவ்வளவு பணம் உள்ளதா என்று. 50 பில்லியன் டாலர் இவர்களது சொத்து மதிப்பு என்றால் என்ன பொருள்? இன்று இவர் நினைத்தால் 50 பில்லியன் டாலரை அள்ளிக்கொடுத்துவிட முடியுமா?

முடியாது என்பதுதான் பதில்.

முதலில் இவர்களுடைய சொத்து மதிப்பை ஃபோர்ப்ஸ், அல்லது பிறர், எவ்வாறு கணிக்கிறார்கள்? இந்தக் கணிப்புகள் முழுமையானவை கிடையாது. பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் (listed public companies) இவர்களிடம் எத்தனை சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன என்பதை வைத்து, ஒரு பங்கின் இன்றைய விலை என்பதைக் கணக்கிட்டு, ஓர் எண்ணை உருவாக்குகிறார்கள். இது 'நிஜமான' பணம் அல்ல. பிரைவேட் லிமிடட் நிறுவனங்கள், வீடு, நிலம், வங்கிக் கணக்கு ஆகியவற்றை இந்தக் கூட்டல் கழித்தலில் முறையாகச் சேர்ப்பதில்லை.

ஒருசில 'ஃபைனான்ஷியல் எஞ்சினியரிங்' காரணங்களால் திடீரென ஒருவரது சொத்து மதிப்பு உயரும். எலுமிச்சை சாற்றால் ஓடும் கார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்ஸ் நாட்டில் யாரோ சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உடனே அனில் அம்பானி, ரிலையன்ஸ் எலுமிச்சம்பழம் லிமிடெட் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குகிறார். இந்த நிறுவனத்தில் அனில் அம்பானி முதலீடு செய்வது ரூ. 100 கோடி. At par. அவருக்கு மொத்தம் 10 கோடி பங்குகள், ஒரு பங்கு ரூ.10 என்ற விகிதத்தில் அந்த நிறுவனம் தருகிறது.

அனில் அம்பானி எலுமிச்சை சாறு தயாரித்து கார் விடப்போகிறார் என்ற தகவல் ஊரெல்லாம் பறக்கிறது. உடனே நான்கைந்து இன்வெஸ்ட்மெண்ட் வங்கிகள், 'எனக்கும் பங்கு கொடு' என்று கேட்டு வருகின்றன. தருகிறேன் என்கிறார் அனில் அம்பானி. ஆனால் பங்கு ஒன்று ரூ. 500 என்கிறார். சரி என்று ஒப்புக்கொண்டு ரூ. 500 கோடி கொடுத்து, ஒரு கோடி பங்குகளைப் பெற்றுக்கொள்கிறது 'நகர வங்கி'.

இப்பொழுது அனில் அம்பானியிடம் 10 கோடி பங்குகள், நகர வங்கியிடம் 1 கோடி பங்குகள். கடைசியாக நடந்த ஷேர் டிரான்சாக்ஷனில் ஒரு பங்கு ரூ. 500 என்று போயிருப்பதால், அனில் அம்பானியிடம் உள்ள 10 கோடி பங்குகளின் மதிப்பு ரூ. 5,000 கோடி.

அனில் அம்பானி மொத்தமாக உள்ளே கொண்டுவந்ததே ரூ. 100 கோடிதான். ஆனால் இப்போதோ அவரது நிகர மதிப்பு பலூன் போல ஊதிப் பெருத்துவிட்டது. அதாவது இனி, எலுமிச்சைகளைப் பயிர் செய்ய நிலம் வாங்கி, எலுமிச்சை போட்டு, அதை அறுவடை செய்து, அதிலிருந்து சாறு பிழிந்து, பிரான்ஸ் நாட்டு கார் நாடெங்கும் ஓடும்போது ரிலையன்ஸ் எலுமிச்சை லிமிடட் காட்டில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்பதால் இன்றே அதன் பங்குகளுக்கு இத்தனை மதிப்பைக் கொடுக்க நகர வங்கி தயாராக உள்ளது.

இன்னும் எலுமிச்சையே பயிர் செய்ய ஆரம்பிக்கவில்லை. ஆனால் அனில் அம்பானி தனது நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறார். அனில் கம்பெனி என்றால் கண்ணை மூடிக்கொண்டு பணத்தைப் போடலாம் என்று மக்களும் நினைக்கிறார்கள். புக் பில்டிங் ரூட் என்று சொல்லி, செபியிடம் அனுமதி வாங்கி, ரெட் ஹெர்ரிங் பிராஸ்பெக்டஸ் கொண்டுவருகிறார் அனில். யாரும் அதைப் படிப்பதில்லை. ஆனால் பங்கு ஒன்றுக்கு ரூ. 950-1050 என்ற ரேஞ்சில் இருக்கும் என்பதை மட்டும் கவனிக்கிறார்கள்.

ஆளாளுக்கு கூட்டம் அலைமோதுகிறது. அனில் மேற்கொண்டு கொடுப்பதாகச் சொல்வது 1 கோடி பங்குகளை. ஆனால் அதைப்போல நூறு மடங்கு கேட்டு மக்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள். கடைசியில் பங்கு ஒன்றுக்கு ரூ. 1000 என்று தீர்மானித்து வழங்குகிறார் அனில் அம்பானி.

இப்போது, அனிலிடம் இருக்கும் 10 கோடி பங்குகளும் சேர்ந்து சந்தை மதிப்பு ரூ. 10,000 கோடி. இதுதான் ரூ. 100 கோடி, ரூ. 10,000 கோடி ஆன கதை!

பங்குகள் மும்பை, தேசியப் பங்குச்சந்தைக்கு வருகின்றன. செகண்டரி மார்க்கெட்டில் ஆளாளுக்கு ஏற்றிவிட, பங்கு ஒன்று ரூ. 2,000-ல் பறக்கிறது. அனில் கையில் இருக்கும் பங்குகளின் மதிப்பு இப்போது ரூ. 20,000 கோடி.

பிரகாஷ் காரத் ஏதோ சொல்கிறார் அல்லது அமெரிக்காவில் ஏதோ ஒரு வங்கி திவாலாகிறது. அடுத்த நாள் பங்குச்சந்தை தடாரென கீழே விழுகிறது. ரிலையன்ஸ் எலுமிச்சை லிமிடட் பங்குகளின் விலை ரூ. 2,000-லிருந்து ரூ. 1,500க்குக் கீழே விழுகிறது. உடனே எகனாமிக் டைம்ஸ், லூசுத்தனமாக, அனில் அம்பானியின் சொத்தில் ரூ. 5,000 கோடி காணாமல் போய்விட்டது என்று அழுகிறது.

அத்தனையுமே 'தாள் பணம்'. இதில் 100 கோடி மேலே போனால் என்ன, 400 கோடி கீழே போனால் என்ன?

இப்படித்தான் தினம் தினம் பல லட்சம் கோடிகள் 'உருவாக்கப்பட்டு', 'அழிக்கப்படுகின்றன'.

ஆனால் இவையெல்லாமே fraud என்று நினைக்கக்கூடாது. ஒரு நிறுவனம் நன்றாகக் காலூன்றி, உருப்படியாக ஆண்டாண்டுக்கு வருமானத்தைக் கொடுக்கிறது, அந்த வருமானம் ஆண்டாண்டுக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது, லாபமும் அதிகமாகிக்கொண்டே போகிறது என்றால், அந்த நிறுவனத்தின் அடிப்படை - fundamentals - நன்றாக உள்ளது என்று பொருள். P/E விகிதம் என்று சொல்வோம். ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டை வைத்து அதன் ஒவ்வொரு பங்கும் எவ்வளவு சம்பாதித்துக் கொடுக்கிறது என்பதைக் கணிக்கலாம். அந்தப் பங்கின் இப்போதைய சந்தை விலை என்ன என்பது தெரியும். அந்தப் பங்கின் புக் வேல்யூ - அதன் சொத்துகள், கடன்கள் ஆகியவற்றை வைத்து உருவாக்கப்படும் மதிப்பு என்ன என்பதைக் கணிக்கலாம். அதனை வைத்து அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கும் குறைந்த பட்சம் என்ன விலை போகலாம் என்பதைத் தீர்மானிக்கலாம்.

அப்படி வரும் மதிப்புகூட உடனடியாகப் பணமாக மாற்றக்கூடியதல்ல.

உங்கள் கையில் ஒரு கிலோ தங்கம் இருந்தால், அதை உடனடியாக வாங்கிக்கொள்ள ஆள் இருந்தால்தான் அந்தத் தங்கத்துக்கு மதிப்பு. ஆளே இல்லாத தீவு ஒன்றில் உங்கள் கையில் ஒரு கிலோ அல்லது நூறு கிலோ தங்கமே இருந்தாலும் அதற்கு மதிப்பு பூஜ்யம்தான்.

அதேபோல பில் கேட்ஸ், தன் கையில் இருக்கும் அத்தனை பங்குகளையும் விற்க சந்தைக்கு வருகிறார் என்றால், அதை வாங்க யாருமே இல்லை என்றால் விளைவு என்னாகும்? பில் கேட்ஸ் கையில் வெறும் பேப்பர்தான் மிஞ்சும்.

எனவே அடுத்தமுறை இவர் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர், அவர் சொத்து மதிப்பு எங்கேயோ போய்விட்டது என்றால் அதைப் பார்த்து அதிர்ச்சி அடையாதீர்கள்.

ரியல் மதிப்பு என்பது - அதாவது இன்றைக்கு விற்று பைசாவாகக் கையில் கிடைப்பது - ஃபோர்ப்ஸ் போன்றவர்கள் சொல்லும் நம்பரைவிட மிகமிகக்குறைவாகத்தான் இருக்கும்.

மரபணு மாற்றப்பட்ட விதைகள்

இரண்டு நாள்களுக்கு முன் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் திரையில் தோன்றினார். மரபணு விதைகளுக்கு எதிரான ஒரு கூட்டம் அது. அங்கு நிருபர்களிடம் பேசிய அவர், “இந்த விதைய சாப்பிட்டா புழுவே செத்துடுதாம். அப்ப அதைச் சாப்பிடற மனுஷன் கதி என்னாகும்? விஷத்தை உள்ள வச்சு விதையைச் செய்யறான்” என்றார்.

நம்மாழ்வார் பாரம்பரிய இயற்கை வேளாண்மையை முன்வைப்பவர். எனக்கும் அந்த முறைமீது நிறைய நம்பிக்கை உள்ளது. அவரது கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (களை எடு!)

ஆனால், அதே நேரம் நம்மாழ்வாரும் பிற இயற்கை விவசாயிகளும் மரபணுத் துறையில் நடைபெற்றுவரும் மாற்றங்களைப் புரிந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் உயிரியல் பாடம் படிப்போம்.

***

எல்லா உயிரினங்களுக்கும் - தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகளாக ஒற்றை செல் அமீபா, பேக்டீரியா போன்றவை - அடிப்படையாக இருப்பவை அவற்றின் செல்கள். இந்த செல்லுக்குள் இருப்பது டி.என்.ஏ (டீ-ஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம்) என்ற சுருள் சுருளான (double helix) வேதிப்பொருள்.

மாடு, நாய், மனிதன், குரங்கு, வாழைமரம் என்று ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு டி.என்.ஏ உள்ளது. மனிதர்களை மட்டும் எடுத்துக்கொண்டால், இரண்டு வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு டி.என்.ஏக்கள். ஒரே வயிற்றில், ஒரே நேரத்தில் கருவாகும் இரண்டு குழந்தைகளுக்கும்கூட வெவ்வேறு டி.என்.ஏக்கள்தான். ஒரு டி.என்.ஏவில் இருக்கும் ஒரு சிறு 'வரிசை' துண்டு (sequence), மரபணு எனப்படும். இந்த வேதி வரிசை எப்போதும் ஒரு டி.என்.ஏவுக்குள் ஒன்றாகவே தோன்றும். பெற்றோர்களிடமிருந்து கரு உருவாகும்போது இந்த வரிசை, சேர்ந்தாற்போலவே பிரிந்து, பிற வரிசைகளுடன் சேர்ந்து புதிய டி.என்.ஏக்களை உருவாக்கும்.

மனிதனாக இருந்தாலும் சரி, மரங்களாக இருந்தாலும் சரி, இப்படித்தான் நடக்கிறது.

இயல்பில், புதிய புதிய தாவரங்களை உருவாக்க, மனிதர்கள் ஒட்டுவளர்ப்பு முறைகளைப் பின்பற்றுகிறார்கள். தங்களுக்கு வேண்டிய தன்மை உள்ள தாவரங்களை ஒட்டிச் சேர்த்து, புதிய விதைகளை உருவாக்குகிறார்கள். அதன் விளைவாகத்தான் ருசியுள்ள மாம்பழங்கள் கிடைக்கின்றன. வளர்ப்பு நாய்களை உருவாக்குபவர்களும் இப்படித்தான் பல நாய் இனங்களை சேர்த்து, புதிய நாய்களை உருவாக்குகிறார்கள்.

***

மரபணு ஆராய்ச்சியில் மிக முக்கியமான முன்னேற்றம் ஒட்டிச்சேர்க்கப்பட்ட டி.என்.ஏ (Recombinant DNA) என்பதாகும்.

டி.என்.ஏ என்பதே ஒரு ரசாயனம்தானே? ஒரு தாவரத்தின் பல செல்களின் மேல் சுவற்றைப் பிய்த்து, உள்ளே இருக்கும் டி.என்.ஏக்களை வெளியே எடுத்து, அவற்றை ஒரு ரசாயனக் கரைசலில் போட்டால் அந்த டி.என்.ஏவின் சில பகுதிகள் வெட்டுப்படும். கிட்டத்தட்ட ஒரு கத்திரிக்கோலால், ரிப்பனின் ஒரு பகுதியை வெட்டுவதற்கு ஒப்பாகும் இது. ஆனால் ரசாயனக் கத்திரிக்கோல்.

வெட்டிய துண்டை எடுத்து, மற்றோர் உயிரினத்தின் டி.என்.ஏவின் இறுதியில் வைத்து ஒட்டமுடியும். இதையும் சில ரசாயனங்களின் உதவியுடன் செய்யலாம்.

இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் புதிய டி.என்.ஏ ‘ஒட்டிச்சேர்க்கப்பட்ட டி.என்.ஏ' எனப்படும். இது எப்படி நடக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட யூடியூப் விடியோவில் பார்க்கலாம்.



***

டி.என்.ஏவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வேதி வரிசை (மரபணு = gene) அந்த உயிரின் ஒரு குறிப்பிட்ட தன்மைக்குக் காரணமாகும். ஒரு மனிதனின் உயரம், நிறம், குணம் ஆகிய அனைத்தையும் வெவ்வேறு மரபணுக்கள் கட்டுப்படுத்துகின்றன.

ஒரு செடியின் பல்வேறு தன்மைகளையும் அந்தச் செடியின் டி.என்.ஏவில் உள்ள மரபணுக்கள் கட்டுப்படுத்துகின்றன.

இப்போது பருத்திச் செடியை எடுத்துக்கொள்வோம். பருத்தியை பல புழுக்கள் தாக்கி அழிக்கக்கூடியவை. இந்தப் புழுக்கள் தாக்காமல் இருக்க பூச்சிமருந்து தெளிக்கலாம். இது ஒரு வழி. ஆனால் நாளடைவில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தாங்கும் சக்தி படைத்தவையாக இந்தப் புழுக்கள் பலவும் மாறிவிட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் 'இயற்கை' பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. Bacillus Thuringiensis (bt) என்ற பேக்டீரியம், பருத்தியைத் தாக்கும் புழுக்களைத் தாக்கி அழிக்கிறது என்று கண்டுபிடித்தனர். இந்த பேக்டீரியம் 1901-ல் ஒரு ஜப்பானியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல நாடுகளில் இந்த பேக்டீரியக் கரைசலையே பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தினர். ஆனால் பூச்சிக்கொல்லி படாத பருத்திச் செடிகள் நாசமடைந்தன.

அந்தச் சமயத்தில்தான் இந்த பேக்டீரியம் எப்படி வேலை செய்கிறது; எப்படி புழுக்களைக் கொல்கிறது என்று ஆராய்ச்சிச் சாலையில் ஆராய்ந்தனர். இந்த பேக்டீரியம் தனது செல்லில் ஒரு குறிப்பிட்ட ரசாயனப் படிகத்தை உருவாக்குகிறது என்று கண்டுபிடித்தனர். இந்த ரசாயனப் படிகம் சில வகைப் புழுக்களின் குடல்களுக்குள் சென்று அவற்றைக் கொல்கின்றன. ஆனால் மனிதர்களின் குடலில் இந்த ரசாயனம் சென்றால் அதனால் மனிதனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை என்று கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, bt பேக்டீரியத்தின் டி.என்.ஏவில் எந்த மரபணு இந்த ரசாயனப் படிகத்தை உற்பத்தி செய்கிறது என்று கண்டுபிடித்து, அந்த மரபணுவை வெட்டி எடுத்து, பருத்திச் செடியின் மரபணுவுக்குள் நுழைத்துவிட்டனர். அப்படி உருவானதுதான் bt பருத்தி.

இந்த bt பருத்தி விதையைச் சாப்பிடும் புழுவின் வயிற்றுக்குள் bt ரசாயனப் படிகம் உள்ளே சென்று அதனைக் கொன்றுவிடும்.

ஆக, பூச்சி மருந்தில் முக்கி எடுக்கப்பட்டவையல்ல இந்த விதைகள். பருத்தியில் ஆரம்பித்து, பல உணவுப்பொருள்களிலும் இந்த bt மரபணு நுழைக்கப்பட்டுள்ளது.

இவற்றைச் சாப்பிட்டால் உயிர் போய்விடாது. ஆனால் வேறு ஏதாவது பின்விளைவுகள் இருக்கக்கூடும். அதைப்பற்றிய முழுதான புரிதல் எனக்குக் கிடையாது.

***

மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவது பற்றி நிறைய கவனம் தேவை. அதன் பின்விளைவுகள் என்ன என்பதை கவனமாக ஆராயவேண்டும். ஆனால் அதைப்பற்றி கருத்து சொல்பவர்கள், எதிர்ப்பவர்கள் இந்தத் தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

புழுவைக் கொல்லும் ஒரு ரசாயனம் மனிதனையும் கொல்லும் என்ற 'பாமரத்தனமான' கருத்து ஓர் இயக்கத்தை முன்னே செலுத்தும் தலைவர்களிடமிருந்து வரக்கூடாது.

bt பருத்தி விதை வளர நிறைய தண்ணீர் தேவை. அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாத பல மஹாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தப் பருத்தி விதைகளை ஒரு தனியார் நிறுவனம் உற்பத்தி செய்திருப்பதால் விதைகளுக்கான விலை எக்கச்சக்கமாக உள்ளது. இவை அனைத்துமே மறுக்கமுடியாத உண்மைகள்.

ஆனால் அவற்றைக் கண்டிக்கும் அதே வேளையில் அறிவியலை முறையின்றிக் கண்டித்துவிடக்கூடாது. அறிவியல் ஆராய்ச்சிகளை சிறுமைப்படுத்தி, பொதுமக்களை குழப்பக்கூடாது.

Monday, January 28, 2008

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு - விடியோ

அப்துல் கலாமின் வாழ்க்கையை ஒரு கதையாக, ஆவணப்படமாகத் தயாரித்துள்ளார் பி.தனபால், மின்வெளி மீடியா வொர்க்ஸ் நிறுவனத்துக்காக.

இந்த விசிடி தற்போது ஆங்கிலப் பின்னணிக் குரலில் உள்ளது. இதன் தமிழ் வடிவம் விரைவில் தயாராக உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படத்தின் விலை ரூ. 50 + 4% வரி (மொத்தம் ரூ. 52).

கலாமின் இளமைப் பருவம், திருச்சியிலும் சென்னையிலும் படித்தது, DRDO-வில் வேலைக்குச் சேர்ந்தது, ISRO-வில் பணியாற்றியது, குடியரசுத் தலைவரானது, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை என பல துண்டுகளை இணைத்து அற்புதமான ஒரு கதையாக மாற்றியிருக்கிறார் தனபால். தாய், மகன், தாத்தா மூவருக்கும் இடையே நடக்கும் உரையாடலின் விளைவாக கலாமின் வாழ்க்கை வெளிப்படுகிறது.

இந்த விசிடியை இணையத்தில் வாங்க, இங்கே செல்லவும்.

இந்த விசிடியின் டிரெயிலர் இங்கே:



விசிடி வெளியீ்டு பற்றி தி ஹிந்து | சென்னை ஆன்லைன்

Sunday, January 27, 2008

சல்மாவுடன் நேர்காணல் - தி ஹிந்து

இன்றைய தி ஹிந்து துணையிதழில் எழுத்தாளர் சல்மா நேர்காணல்.

ஜெய்ப்பூர் மொழிமாற்றல் கருத்தரங்கம்

ஜெய்ப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் இலக்கிய விழாவில் இந்த ஆண்டு நிகழ்வு, மொழிமாற்றல் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்காக இருந்தது.

இந்தியாவிலிருந்து பலரும், வெளிநாடுகளிலிருந்து சிலரும் கலந்துகொண்டனர்.

தமிழகத்திலிருந்து யாரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படவில்லை. கேரளத்திலிருந்து எம்.டி.வாசுதேவன் நாயர், சச்சிதானந்தன், கர்நாடகத்திலிருந்து யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். அனந்தமூர்த்தி ஆனால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. வட மாநிலங்களிலிருந்து பலர் வந்திருந்தனர். மராட்டி மொழியில் எழுதும் இரண்டு தலித் எழுத்தாளர்கள், ஒரு தலித் இலக்கிய விமரிசகர் ஆகியோர் தலித் இலக்கியம் பற்றிய ஓர் அமர்வில் கலந்துகொண்டனர். வட கிழக்கு மாநிலங்களிலிருந்து பல சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய சிறப்பு அமர்வு ஒன்று இருந்தது.

***

முதல் நாள் நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கலந்துகொண்டார். பொதுவாக தமிழகத்தில் முதல்வர்கள் கலந்துகொள்ளும்போது நடக்கும் பந்தாக்கள் ஏதும் இன்றி மிகவும் இயல்பாக இருந்தது. அவர் வரப்போகிறார் என்பதற்காக தெருவில் கட்சிக்கொடிகள் ஏதுமில்லை. 'அண்ணன்/அக்கா வாழ்க', 'தலைவி வாழ்க' கோஷங்கள் ஏதும் இல்லை. தெருவில் 'அம்மா வருகிறார்' போஸ்டர், தட்டிகள் ஏதுமில்லை. கட்சிக்காரர்கள் யாரும் இல்லை. இரண்டு போலீஸ் அதிகாரிகள், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் கூட வந்தனர். அவ்வளவுதான்.

அவர் உள்ளே நுழைந்தபோது யாரும் சடாரென்று எழுந்திருக்கவில்லை. அவரவர், அவரவர் இருக்கையிலேயே உட்கார்ந்திருந்தனர். வந்தவுடன் முதல்வர் கருத்தரங்கில் பாதியிலேயே வந்து குழப்பம் ஏற்படுத்துவதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பிறகு சுருக்கமாக ஐந்து நிமிடங்கள் பேசினார். பின் முதல் வரிசையில் பிற பார்வையாளர்களுடன் வந்து உட்கார்ந்துகொண்டார். கருத்தரங்கில் அடுத்த அமர்வு தொடர்ந்து நடந்தது. ஒரு கட்டத்தில் முதல்வர் கிளம்பிப் போக, அப்போதும் யாரும் எழுந்திருக்கவில்லை. அமர்வு தொடர்ந்து நடந்தது.

***

முதல் நாள் இறுதியில் பெங்குவின், ஆங்கிலம்-ஹிந்தி அகராதி, சொல்கோவை (தெசாரஸ்) - மூன்று தடிமனான புத்தகங்கள் அடங்கிய தொகுதியை (விலை ரூ. 3999/-) வெளியிட்டனர்.

***

முதல் நாள் அமர்வில் எம்.டி.வாசுதேவன் நாயர், கீதா கிருஷ்ணன்குட்டி (மலையாளம் -> ஆங்கிலம் மொழிமாற்றுபவர்) கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று இருந்தது. இந்திய மொழிகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை ஆங்கிலத்தில் கொண்டுவருவதில் உள்ள சிரமங்கள், எழுத்தாளர் தன்னுடைய மொழிமாற்றுபவர்மீது கொள்ளவேண்டிய நம்பிக்கை, இருவருக்கும் இடையே ஒரு புத்தகத்தை மொழிமாற்றும்போது ஏற்படும் ‘நெகோசியேஷன்' (உறவாட்டம்) ஆகியவை பற்றி ஓரளவுக்குப் புரிதல் கிடைத்தது.

***

இந்திய மொழிகளுக்கு இடையே நிறைய மொழிமாற்றங்கள் அவசியம் என்று பேசப்பட்டாலும் யாரும் இதைச் செய்யப்போவதில்லை என்று தோன்றியது. சாஹித்ய அகாதெமியின் மொழிமாற்றங்களில் உள்ள தரமின்மை பற்றி அனைவருமே அறிவர். அகாதெமி தனது புத்தகங்களைத் தரமாகத் தயாரிப்பதில்லை. மொழிமாற்றத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அப்படித் தயாரிக்கும் புத்தகங்களையும் சரியாக விற்பதில்லை. அரசு நிறுவனங்களுக்கே பிரத்யேகமாக உள்ள பிரச்னைகள்.

ஆனால் வர்த்தகரீதியில், பிற இந்திய மொழிகளிலிருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றப்படும் புத்தகங்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன.

***

பொதுவாக, மொழிமாற்றம் தொடர்பான கருத்தரங்கு என்றாலுமே இலக்கியம் தொடர்பானதாகவே இந்தக் கருத்தரங்கு இருந்தது. கவிதை, கதை ஆகியவற்றை மொழிபெயர்ப்பது பற்றியே பேச்சு இருந்தது. இலக்கியத்துக்கு வெளியே ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளதையும் அவற்றையும் மொழிமாற்றவேண்டிய அவசியத்தைப் பற்றியும் அதிகமாக யாரும் கவலைப்படவில்லை.

அதேபோல ஆங்கிலத்திலிருந்தும் பிற உலக மொழிகளிலிருந்தும் இந்திய மொழிகளுக்குக் கொண்டுவரவேண்டிய பலவற்றைப் பற்றி பேச்சு அதிகம் இல்லை. இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலம் வழியாக பிற உலக மொழிகளுக்கு எடுத்துச் செல்வதைப் பற்றித்தான் கவலை அதிகமாக இருந்தது.

ஓர் அமர்வில், எழுத்தாளர் பினு ஜான் (Entry from backside only: Hazaar fundas of Indian English) ஏன் இந்திய மொழி எழுத்தாளர்கள் எப்படியாவது தங்களது புத்தகம் ஆங்கிலத்தில் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று அங்கலாய்த்தார். பிரிட்டனில் இருக்கும் யாரும் இந்தியப் புத்தகங்களைப் படிக்க விரும்புவதில்லை. ஆனால் மலையாள இலக்கிய இதழில் ஒரு கதை தொடராக வந்தால் அதை லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள் என்றார். ஆனால் இந்த வசதி இந்தியாவின் பிறமொழி எழுத்தாளர்களுக்குக் கிடையாது என்பதை அவர் யோசிக்கவில்லை. மேலும் ஜான் எழுதுவது ஆங்கிலத்தில்.

இந்திய மொழியில் எழுதுபவர்களது எழுத்துகள் ஆங்கிலத்துக்குப் போவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

* இந்தியாவிலேயே பலர் தமது மொழியில் படிப்பதில்லை. இது சரியா, தவறா என்பது வேறு விஷயம்.
* இந்தியாவின் பிற மாநிலத்தவர் பலரும் ஒரு படைப்பைப் படிக்கவேண்டும் என்றால், அந்தப் படைப்பை ஆங்கிலத்தில் கொண்டுவருவது மிக முக்கியம்.
* அதன்பிறகு உலகம். இப்போது உலகத்தவருக்கு இந்தியாமீது நிறைய ஆர்வம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியே இதற்குக் காரணம். ஒரு நாட்டைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள அந்த நாட்டின் இலக்கியத்தைப் படிப்பது அவசியம். ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்கள் காட்டும் இந்தியாவுக்கும், இந்திய மொழிகளில் எழுதப்படும் படைப்புகள் காட்டும் இந்தியாவுக்கும் பெருமளவு வித்தியாசங்கள் உள்ளன. எனவே உண்மையான இந்தியாவை வெளிநாட்டவர் அறிந்துகொள்ள இந்திய மொழிகளில் எழுதும் படைப்புகளைப் படிப்பது அவசியம். அதற்கு இந்தப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் செல்லவேண்டும்.

வெளிநாட்டவர் வந்து இந்திய மொழிகளைக் கற்று இந்தியப் புத்தகங்களை தங்களது மொழிக்குக் கொண்டுசெல்வதற்கும் இந்தியர்கள் அதனைச் செய்வதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. ஓர் ஆங்கிலேயர் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தால், தமிழின் நுட்பமான சில விஷயங்களைப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். அதனால் மொழிமாற்றம் மொன்னையாக, அல்லது தவறாகப் போய்விட வாய்ப்புள்ளது. ஆனால் ஆங்கிலம் படிப்பதற்கு இயல்பாக இருக்கும். ஒரு தமிழர் இந்த மொழிமாற்றத்தைச் செய்தால், மொழிமாற்றம் நன்றாக வரலாம், ஆனால் ஆங்கிலம் சுமாரிலிருந்து படுமோசம் என்று எந்த நிலையிலும் இருக்கலாம். ஆனால் இன்று இந்தியர்களது ஆங்கில எழுத்துத் திறன் மேம்பட்டு வருகிறது. பல இந்தியர்கள் ஆங்கிலத்தில் இயல்பாக, சரளமாக எழுதுகிறார்கள்.

***

ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிமாற்றம் தொடர்பாக தமிழக அளவில் நிறையக் கருத்துப் பரிமாற்றங்கள் தேவை.

வெறும் ஆவல் காரணமாக மட்டுமே மொழிமாற்றத்தில் ஈடுபடுபவர்கள், பதிப்பாளர்கள், துறை வல்லுனர்கள், எடிட்டர்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து பேசவேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது.

Friday, January 25, 2008

சென்னை புத்தகக் கண்காட்சி - 2

தில்லியில் உலகப் புத்தகக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. அங்கே யார் வேண்டுமானாலும் எவ்வளவு சதுர அடிகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அரங்கு அமைக்கலாம். ஆனால் ஒட்டியுள்ளதாக அதிகபட்சம் 1200 சதுர அடிகள் மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு மேல் வேண்டுமானால் தள்ளிப் போய் வேறு இடத்தில் எடுத்துக்கொள்ளலாம். அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட் நடத்தும் கண்காட்சி இது.

இந்தியாவிலேயே நடக்கும் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி கொல்கத்தா புத்தகக் கண்காட்சி. இங்கேயும் பங்குபெறும் பதிப்பகங்கள் அனைத்துக்கும் வேண்டிய அளவு இடம் கொடுக்கிறார்கள். பல நிறுவனங்கள் 2000-3000 சதுர அடிக்கு இடத்தை எடுத்து, அழகாக அலங்கரித்து வாடிக்கையாளர்களுக்கு நல்ல வசதிகளை ஏற்படுத்தித் தருகிறார்கள்.

ஜெய்ப்பூர், பெங்களூர் என்று எந்த இடமாக இருந்தாலும் சரி, இடத்தைக் குறுக்குவதில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி நிர்வாகிகளும் இதைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

ஆனால் சென்னையில் அதிகபட்சம் 400 சதுர அடிகளுக்குமேல் தருவதில்லை. தனித்தனியாகத் தள்ளித் தள்ளி இருக்கும் பல இடங்களை எடுத்து ஒருவரிடம் இருக்கும் முழுமையான புத்தகங்களையும் காட்சிக்கு வைப்பதற்கும் முழுமையான அனுமதி கிடைப்பதில்லை.

ஒருவருக்கே நிறைய இடம் கொடுத்துவிட்டால் பிறரது வருமானம் குறைந்துவிடும் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. வாசகர்களை ஏமாற்றிப் பணத்தைப் பிடுங்கிவிட முடியாது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களைத்தான் காசு கொடுத்து வாங்கப்போகிறார்கள்.

நிறைய இடம் கிடைத்தால், வாசகர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுக்க முடியும்.

'நிரந்தரப் புத்தகக் கண்காட்சி' அல்லது 'புத்தகப் பூங்கா' உருவானால் ஓரளவுக்கு இந்தப் பிரச்னைகள் தீரலாம்.

***

ஒரே பதிப்பகத்தின் புத்தகங்கள் பல கடைகளில் கிடைப்பது பற்றி நிறைய விமரிசனங்கள் எழுந்துள்ளன. இதை இந்த 'ஓரிரு' பதிப்பகங்கள் அடுத்தவர் மிது திணிப்பதாகச் சொல்வது அபத்தம். பல்வேறு விநியோகஸ்தர்கள் தங்களுக்கு சில புத்தகங்கள் வேண்டும் என்று கேட்கும்போது அதைக் கொடுக்காமல் இருப்பது சரியல்ல.

புத்தக விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் கண்காட்சியில் இருக்கக்கூடாது என்ற கொள்கையை பபாஸியால் செயல்படுத்த முடியாது. ஏனெனில் இந்தச் சங்கமே பதிப்பாளர், விற்பனையாளர் இருவரும் சேர்ந்து உருவானது.

***

சென்ற முறையைவிட இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரங்கள் குறைவுதான். மேலும் விளம்பரங்கள் வேண்டுமென்றால், அரங்க வாடகை அதிகமாக்கப்படவேண்டும். மேலும் பல பதிப்பகங்கள் ஸ்பான்சர்ஷிப் செய்யவேண்டும். அல்லது அரங்க எண்ணிக்கையை மேலும் அதிகமாக்கி, பதிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கேட்கும் அளவுக்குக் கொடுத்து, வருமானத்தைப் பெருக்கவேண்டும். இது எதையும் செய்யக்கூடாது, ஆனால் கூட்டம் மட்டும் வேண்டும் என்று சிலர் எதிர்பார்த்தால் அது நடக்காது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியால் புத்தகக் கண்காட்சி பாதிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை.

***

இந்தியா டுடே (தமிழ்) இதழில் தரமற்ற புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளில் வந்து வாசகர்களை ஏமாற்றுகிறது என்று சிலர் புலம்பியிருந்தனர். எப்படியாவது இதுபோன்ற புத்தகங்களைத் தடுத்து நிறுத்துவதுதான் தமிழ்ப் பதிப்புலகை எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் என்று கட்டுரையாளர் முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.

அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். இதற்கென ஒரு வாரியத்தை நியமிக்கலாம். புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க விரும்புபவர், முதலில் அரசிடம் காட்டி சான்றிதழ் பெறவேண்டும். தரமுள்ளதா இல்லையா என்று இந்த வாரியம் தீர்மானிக்கும். இந்த லைசென்சைப் பெற்ற ஒருவர்தான் புத்தகத்தைப் பதிப்பிக்க முடியும்.

அல்லது மதுரை மீனாக்ஷி கோயிலில் சங்கப் பலகை ஏதாவது இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தலாம்.

***

தமிழ்நாட்டில் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஆனால் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் வழிமுறைகளில்தான் சிக்கலே. இப்போதுள்ள புத்தகக் கடைகள் போதா. புத்தகக் கடைகள் ஒதுக்கியுள்ள இடவசதியும் போதாது. புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்களுக்கு இடையேயான உறவு மேம்படவேண்டும். பதிப்பாளர்களுக்கு உரிய நேரத்தில் விற்பனையாளர்களிடமிருந்து பணம் கிடைப்பதில்லை.

இவை அனைத்தையும் மேம்படுத்தினாலே இப்போதுள்ள புத்தகச் சந்தையின் அளவு, குறைந்தபட்சம் 10 மடங்கு பெரிதாகும் என்பது என் கருத்து.

யாருமே புத்தகங்கள் வாங்குவதில்லை, யாருமே நல்ல புத்தகங்களைப் படிப்பதில்லை என்று நாம் ஆற்றாமைப் படவேண்டியதில்லை.

Saturday, January 19, 2008

உலகப் புத்தகக் கண்காட்சி - புது தில்லி 2008

புது தில்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கு உலகப் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு பிப்ரவரி 2-10 நடக்கிறது. இந்த ஆண்டு விருந்தினர் ரஷ்யா. ரஷ்யாவின் பதிப்பாளர்களுக்கு என்று சிறப்பாக சில இடங்களை ஒதுக்கியிருப்பர். ரஷ்ய கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் சில நடக்கும்.

இந்தக் கண்காட்சியை நடத்துவது மத்திய அரசு அமைப்பான நேஷனல் புக் டிரஸ்ட். நடைபெறும் இடம் பிரகதி மைதான்.

சில தமிழ் பதிப்பாளர்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்வார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தக் கண்காட்சி நடந்தபோது காலச்சுவடு + நான்கைந்து தமிழ் பதிப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இம்முறை - முதல்முறையாக - கிழக்கு பதிப்பகம் கலந்துகொள்ளும். மேலும் ஆங்கிலத்தின் Indian Writing பதிப்பும் கலந்துகொள்ளும்.

மிக அதிகமான அளவு புத்தக நிறுவனங்கள் கலந்துகொள்ளும் புத்தகக் கண்காட்சி இந்தியாவிலேயே இதுதான். ஆனால் விற்பனை மற்றும் மக்கள் பங்கேற்பு என்று பார்த்தால் மிகப் பெரியது என்பது கொல்கத்தா கண்காட்சிதான். சென்னை மூன்றாவது இடத்தில் (புது தில்லிக்கு அடுத்து) இருக்கும்.

தில்லி கண்காட்சி நடக்கும் அதே நேரத்திலேயே - ஜனவரி 30 முதல் பிப்ரவரி 10வரை கொல்கத்தாவில் கண்காட்சி நடக்கிறது.

ஜெய்ப்பூர் இலக்கிய விழா - மொழிமாற்றம்

ஜனவரி 21-22 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் மொழிமாற்றம் தொடர்பான ஒரு சந்திப்பு நடைபெறுகிறது. இதில் Indian Writing சார்பாக நானும் ராம்நாராயணும் கலந்துகொள்கிறோம்.

இந்தச் சந்திப்பு தொடர்பான தகவல்கள் சியாஹி என்ற தளத்தில் கிடைக்கும்.

அப்துல் கலாம் ஆவணப்படம், விழுதுகள் 99

21 ஜனவரி 2008, திங்கள் கிழமையன்று சென்னை நாரத கான சபாவில் நடக்கும் ஒரு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொள்கிறார். இது தொடர்பாக ஒரு செய்தி வெளியீடு (குறைந்தபட்சம் நான் படித்த ஒரு செய்தித்தாளில்) வெளியாகியிருந்தது. ஆனால் பலர் பார்வைக்கு வந்திருக்குமா என்று தெரியவில்லை.

சிறகு அமைப்பு (SIRAKU - Skills and Income for Rural Aspirants and Knowledge Unlimited - Foundation) என்ற அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட 99 சமூக முனைவர்கள் (Social Entrepreneurs) சமூக சேவைக்காக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த 99 பேருக்கும் சிறகு அமைப்பு, மாதம் ரூ. 5,000 வீதம் இரண்டு வருடங்களுக்கு உதவித்தொகை கொடுக்கும். இது ஒருவிதமான ஃபெலோஷிப் போல. இதனால் தங்களது வாழ்க்கையைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படாமல், சமூக சேவையில் ஈடுபட அவர்களுக்கு நல்ல வாய்ப்பை அளிக்கிறது இந்தத் திட்டம்.

இந்த சமூக சேவகர்களின் சேவையால் என்ன மாற்றம் வருகிறது என்பதைக் கண்காணிப்பது, தேவைப்பட்டால், அவர்களுக்கு வழிகாட்டுவது போன்றவற்றை CIOSA என்ற நிறுவனம் செய்யும்.

இது தொடர்பான செய்தி வெளியீடு.

21 ஜனவரி 2008 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 99 பேரும் அப்துல் கலாம் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். இந்த விழாவின்போது 'மின்வெளி' உருவாக்கிய அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் ஒன்றும் வெளியாகிறது. இது ஆங்கிலத்தில் உள்ளது. அடுத்த 10-15 நாள்களுக்குள்ளாக தமிழிலும் இந்த ஆவணப்பட சிடி வெளியாகும். (இந்த ஆவணப்பட சிடிக்களை விற்பனை செய்யும் உரிமையை நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் பெற்றுள்ளது.)

அதையடுத்து அப்துல் கலாம் சுமார் 1200 பள்ளிக் குழந்தைகளுடன் பேசுவார்.

நிகழ்ச்சி மதியம் 2.00 மணி முதல் 4.00 மணிவரை நடைபெறுகிறது.

இடப்பற்றாக்குறை காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, 'அழைப்பிதழ்' உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

Friday, January 18, 2008

தமிழ் ஒலிப்புத்தகங்கள் - Audible.com

நியூ ஹொரைசன் மீடியாவின் கிழக்கு/வரம் ஒலிப்புத்தகங்களை இப்போது Audible.com மூலம் இணையம் வழியாகவே இறக்கிக்கொள்ளமுடியும். இன்று காலை பார்த்ததில் 28 ஒலிப் புத்தகங்கள் இருந்தன. அடுத்த சில நாள்களில் எங்களுடைய 60-க்கும் மேற்பட்ட ஒலிப்புத்தகங்கள் ஏற்றப்பட்டுவிடும்.

Audible.com தளத்திலிருந்து ஒலிப்புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முதலில் அந்தத் தளத்தில் உறுப்பினராகவேண்டும். உங்களது உறுப்பினர் கணக்குக்கு ஏற்றவாறு ஒலிப்புத்தகங்கள் பல்வேறு விலைகளில் அங்கே கிடைக்கின்றன.

கிழக்கு/வரம் ஒலிப்புத்தகங்கள் வேண்டுவோர் ‘tamil' என்ற குறிச்சொல்லைக் கொடுத்து தேடி, வேண்டியவற்றை (பணம் கொடுத்து) டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

முன்னணி தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பத்து ஆடியோ புத்தகங்களாக வெளியிட்டிருந்தோம். அவை இன்னமும் ஏற்றப்படவில்லை. வந்ததும் தகவல் கொடுக்கிறேன்.

இந்த வசதி இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Thursday, January 10, 2008

சென்னை சங்கமம்

சென்னையில் டிசம்பர், ஜனவரியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள், திருவிழாக்கள். கர்நாடக சங்கீதம், தமிழிசை விழாக்கள் டிசம்பரில் களைகட்டும். அனைத்தும் சங்கீத சபாக்கள், இசை மன்றங்கள் ஆகிய தனியார் அமைப்புகளின் வாயிலாக. அடுத்து தமிழக அரசு ஜனவரி மாதம் முழுவதும் மாமல்லபுரத்தில் நடத்தும் நாட்டிய விழா. சென்னை புத்தகக் கண்காட்சி. பொங்கல் நேரத்தில் இப்போது தமிழ் மையம், தமிழக அரசின் ஆதரவுடன் நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி.

சென்ற ஆண்டு சென்னை சங்கமம், பொங்கலுக்குப் பிறகே நடந்தது. இந்த ஆண்டு முதல் பொங்கல் சமயத்தில் நடக்கும் என்று தோன்றுகிறது.

தனிப்பட்ட கட்சி ஆதரவுடன் நடக்கும் சில விஷயங்களைத் தொடர்ந்து நடத்தமுடியுமா என்று தெரியவில்லை. பொதுமக்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சி அரசியல் கட்சி தொடர்பான சண்டைகளால் நாளை நின்றுபோக நேரிடுமானால் அது நல்லதல்ல. அதனால் தமிழ் மையம் நிர்வாகிகள் வெளிப்படையான திமுக ஆதரவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

சென்ற ஆண்டு சங்கமம் நிகழ்ச்சிக்கான வரவு செலவு இன்று தி ஹிந்து பத்திரிகையில் வந்த துணையிதழில் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து:

ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைத்த வருமானம்: ரூ. 2.96 கோடி

செலவு:
விளம்பரச் செலவு: ரூ. 52.88 லட்சம்
நிகழ்ச்சி நடந்த இடங்களைத் தயார் செய்யும் செலவு: ரூ. 20.65 லட்சம்
நிகழ்ச்சி நடத்துவதற்கான செலவு: ரூ. 71.74 லட்சம்
கலைஞர்களுக்கான செலவு (வெகுமதி, உணவு, உறைவிடம்...): ரூ. 80.58 லட்சம்
அச்சுச் செலவு: ரூ. 5.97 லட்சம்
நிர்வாகச் செலவு: ரூ. 5.24 லட்சம்
விழா ஒருங்கிணைப்புக்கான கட்டணமாகக் கொடுத்தது: ரூ. 12.67 லட்சம்
இதர செலவினங்கள்: ரூ. 4.54 லட்சம்

மொத்தச் செலவு: ரூ. 2.54 கோடி.

உபரி வருமானம்: ரூ. 41.27 லட்சம்

இந்த உபரி வருமானத்தை 21 தொண்டு அமைப்புகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.

சென்னை புத்தகக் கண்காட்சி - இதுவரை - 1

சென்ற ஆண்டு, புத்தகக் கண்காட்சி பற்றி தினம் தினம் பதிவுகள் எழுதவேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் தினமும் எதையாவது எழுதக்கூடிய அளவுக்கு சக்தியில்லை. இந்த ஆண்டும் யோசித்தேன். விட்டுவிட்டேன். அதற்குத்தான் யாரோ கூட்டு வலைப்பதிவாக போட்டோக்களுடன் எழுதுகிறார்களே...

மிட் இன்னிங்ஸில் இருக்கும் இந்த கண்காட்சி பற்றி இதுவரையிலான என் எண்ணங்கள்...

* முதல் நாள் வந்த மழை, கண்காட்சி நிர்வாகிகளை மிகவும் படுத்திவிட்டது. அன்று பெய்த மழையை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. அவ்வளவு கனமழை. அதனால் நுழையும் வாயில் முழுவதும் சேரும் சகதியும். அனைத்தையும் இரண்டாம் நாள் கடைசிக்குள்ளாக சரி செய்த கண்காட்சி நடத்துனர்களைப் பாராட்டவேண்டும்.

* அரங்க அமைப்பு ஏற்பாடுகள் காயிதே மில்லத் கல்லூரியில் இருந்த ஏற்பாடுகளை விடச் சிறந்ததே. ஆனால் பெங்களூரு கண்காட்சியில் இருப்பதுபோல் இல்லை. பெங்களூரு தரத்துக்குச் செய்யவேண்டும் என்றால் வாடகையை அதிகமாக வசூலிக்கவேண்டும். ஆனால் வாடகையை ஏற்றக்கூடாது என்று பபாசி அவசரப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைய பேர் பேசினார்கள். வாக்கெடுப்பில் வாடகையை சென்ற ஆண்டு அளவிலேயே வைத்திருக்கவேண்டும் என்று முடிவானது. பட்ஜெட் கொடுக்காமல் வசதிகள் மட்டும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நிச்சயம் முடியாது.

ஆனால் அதே சமயம், பல சிறு பதிப்பாளர்களால் அதிகம் பணம் கொடுத்துவிட்டு, பணத்தை மீண்டும் சம்பாதித்துவிட முடியுமா என்று தெரியவில்லை.

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சிறு பதிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மான்யம்... அதாவது அவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ஸ்டால் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அப்படியானால் யார் சிறு பதிப்பாளர்கள் என்ற வரைமுறையும் (ஆண்டுக்கு என்ன டர்ன் ஓவர் என்பதைக் கொண்டு இருக்கலாம்) அதற்கான ஆடிட் சான்றும் இருந்தால் இதனைச் செய்யலாம்.

* கூட்டம். சென்ற ஆண்டைவிடக் குறைவு என்று சிலர் நினைத்தனர். சென்ற ஆண்டைப் போல, அல்லது அதற்கும் மேலாகவே கூட்டம் வருகிறது என்றே எனக்குத் தோன்றியது. சரியான புள்ளிவிவரம் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பதிப்பாளரும் தனது விற்பனையை சென்ற ஆண்டு விற்பனையோடு ஒப்பிட்டே, கூட்டம் அதிகமாக வந்ததா இல்லையா என்று சொல்லமுடியும்.

ஆனால் கூட்டத்தை வரவழைக்க பபாசி இந்த ஆண்டு நல்லதோர் ஏற்பாட்டைச் செய்துள்ளது. பல பள்ளிகளில் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இலவச கூப்பனைக் கொடுத்துள்ளது. மாணவர்களுக்கு அனுமதி இலவசம். இந்தக் கூப்பனைக் கொண்டு மாணவர்கள் தங்களது பெற்றோரையும் இலவசமாக அழைத்துவரலாம். வரும் பொங்கல் விடுமுறை நாள்களில் கூட்டம் இதனால் அதிகமாக வாய்ப்புண்டு.

* சின்னஞ்சிறு ஸ்டால்கள்: இந்த ஆண்டு 36 சதுர அடி (6x6) ஸ்டால்கள் பலவற்றை உருவாக்கி சிறு பதிப்பாளர்களுக்கு என்று கொடுத்துள்ளனர். வாடகை ரூ. 4,000 மட்டுமே. இது நல்ல ஐடியா என்றாலும்கூட நான் பார்த்த வரையில் குறைந்த வாடிக்கையாளர்களே இந்தப் பகுதிக்கு வருவதுபோலத் தெரிந்தது. வாசகர்களின் ஆதரவு இருந்தால்தான் இந்தப் பகுதியில் இருக்கும் பதிப்பாளர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

* நிறைய கடைகள்: சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மேலும் பல கடைகள். என்னைப் பொறுத்தமட்டில் இது நல்ல விஷயம் என்றே கருதுகிறேன். அதிகப் போட்டி என்பதைவிட, மக்களுக்கு அதிக சாய்ஸ் என்றே இதனைப் பார்க்கவேண்டும். இப்போதுகூட பல முக்கியமான ஆங்கிலப் பதிப்பாளர்கள் இங்கு வரவில்லை. பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ், ஹாஷெட், ராண்டம் ஹவுஸ், ரூபா அண்ட் கோ, ரோலி புக்ஸ் போன்ற மிக முக்கியமான டிரேட் புத்தக விற்பனையாளர்கள் யாரையும் தனியாகக் காணோம்.

இதே அடுத்த மாதம் தில்லியில் நடக்க இருக்கும் உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று பாருங்கள். மேலே சொன்ன ஒவ்வொருவரும் ஆளுக்கு 1,000 சது அடிப் பரப்பில் மாபெரும் கடைகளைப் பரப்பியிருப்பார்கள்!

சென்னையிலேயே இருக்கும் லாண்ட்மார்க், அவர்களது வெஸ்ட்லாண்ட், ஈஸ்ட்-வெஸ்ட் விநியோக மற்றும் பதிப்பு அங்கம் எவையுமே ஸ்டால்களை எடுத்துக்கொள்ளவில்லை.

விசாலாந்திரா என்ற ஒரே ஒரு தெலுங்கு பதிப்பகம் மட்டுமே கண்ணில் பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் கடை எடுத்த டிசி புக்ஸ் (மலையாள சூப்பர் ஸ்டார் பதிப்பகம்) காணப்படவில்லை. கன்னடம் - சான்சே இல்லை. ஹிந்தியிலும் யாரையும் காணோம். மதுரையில்கூட ஒரு ஹிந்தி பதிப்பாளர் வந்ததாக ஞாபகம்!

பெங்களூரு கண்காட்சியில் பிறமொழிப் பதிப்பகங்கள் 10, 20-ஆவது கலந்துகொள்வார்கள்.

ஆக, சென்னை புத்தகக் கண்காட்சியை விரிவுபடுத்த நிறைய வாய்ப்புகள் இனியும் உள்ளன.

இப்போதே கால் வலிக்கிறது என்று சொல்பவர்களுக்கு - ஒருமுறை கொல்கத்தா புத்தகக் கண்காட்சிக்குப் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள். சென்னையில் இருப்பதைப் போல நான்கு மடங்கு பெரிய இடம். இரண்டு மடங்கு அதிகமான கடைகள். நான்கு மடங்கு அதிகமான வாசகர்கள். மூன்று மடங்கு அதிகமாக விற்பனை.

புத்தக விரும்பிகள் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்துவிட்டுப் போவார்கள்.

******

மேலும் நிறைய எழுதவேண்டும். பிறகு பார்ப்போம்.

Tuesday, January 08, 2008

இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரச்னை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவினால் ஏற்பட்டிருக்கும் இரண்டாவது பெரிய பிரச்னை இது.

முதலாவது இந்தியா, 2001-ல் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடந்த மிக மோசமான ஒரு நிகழ்ச்சி. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மூன்று டெஸ்ட் போட்டியின் இரண்டாவது டெஸ்ட். இந்திய அணியின் பெரும்பான்மை வீரர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த மேட்ச் ரெஃபரி மைக் டென்னிஸ் என்பவருக்கு முன் குற்றம் சாட்டப்பட்டு நின்றனர். சச்சின் டெண்டுல்கர் பந்தை விரலால் நோண்டினார் என்று அவர்மீது குற்றம். வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், ஷிவ் சுந்தர் தாஸ், தீப் தாஸ்குப்தா (விக்கெட் கீப்பர்) ஆகியோர் அளவுக்கு அதிகமாக அப்பீல் செய்தனர் என்பது அவர்கள்மீதான குற்றச்சாட்டு. இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை என்பது கேப்டன் சவுரவ் கங்குலி மீதான குற்றச்சாட்டு.

இவர்கள் அனைவருக்கும் தண்டனை. அதில் சேவாகுக்கு ஒரு டெஸ்ட் தடை, உடனடியாக அமலுக்கு வந்தது. மற்ற அனைவருக்கும் கொடுக்கப்பட்ட தண்டனை - சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது. அதாவது, அவர்கள் தண்டனையை அனுபவிக்கவேண்டாம். ஆனால் அவர்கள் மேற்கொண்டு வேறு ஏதேனும் குற்றம் செய்தால் தண்டனை இரட்டிப்பாகும்.

மைக் டென்னிஸ் நிஜமாகவே பைத்தியக்காரன் போல்தான் நடந்துகொண்டார்.

ஆனாலும் அதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடந்துகொண்டவிதம் படுமோசமாக இருந்தது. மைக் டென்னிஸ் இருந்தால் நாங்கள் விளையாடமாட்டோம் என்று இந்தியா சொன்னது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், பயந்துபோய், இந்தியாவுக்கு ஆதரவாக, ஐசிசி அலுவலரான மைக் டென்னிஸை மூன்றாவது/கடைசி டெஸ்டுக்கு அரங்குக்குள் நுழையவிடாமல் செய்தது. வெகுண்ட ஐசிசி, மூன்றாவது டெஸ்டை அங்கீகரிக்கமுடியாது என்று சொல்லிவிட்டது.

அடுத்து இந்தியா விளையாடும் டெஸ்ட் இங்கிலாந்துக்கு எதிரானது. அதில் சேவாக் விளையாடக் கூடாது, அவர்மீதான தடை நிறைவேற்றப்படவேண்டும் என்று ஐசிசி உறுதியாக இருந்தது. இந்தியா கடைசிவரை ஐசிசியை பயமுறுத்தியவாறே இருந்தது. கடைசியில் சேவாக் விளையாடவில்லை.

இந்த நிகழ்ச்சியின்போது இந்தியாவின் பக்கம் நிறைய நியாயம் இருந்தாலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் இந்திய ஆதரவாளர்களும் நடந்துகொண்டது சரியாக இல்லை.

ஒருவர்மீது நியாயம் இருக்கும்போது அவர் கண்ணியமான முறையில் நடந்துகொள்ளவேண்டும். மூஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டு, அவனை மாற்று, இவனை மாற்று என்று குதித்து சின்னக் குழந்தை போல அசிங்கமாக நடந்துகொள்ளக்கூடாது. மைக் டென்னிஸ் விதிப்படி நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு மேட்ச் ரெஃபரி. அவர் கொடுத்த தீர்ப்பு ஏற்புடையதில்லை என்றால் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டும். அடுத்த ஆட்டத்தில் அவருக்குக் கீழாகவே விளையாடியிருக்கவேண்டும். ஆனால் இந்தியா அப்படிச் செய்யவில்லை. மைக் டென்னிஸ் இருந்தால் நாங்கள் விளையாட மாட்டோம் என்று சொன்னதன்மூலம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை சிக்கலில் மாட்டிவிட்டனர். இத்தனைக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நட்பு வாரியம்.

இந்திய ரசிகர்களுக்குத்தான் சட்டம், ஒழுங்கு என்று எதுவுமே தெரியாது. ரவுடிகள்போல நடந்துகொள்பவர்கள். ஆனால் இந்திய மீடியா செய்யும் அழும்பு தாங்கமுடியவில்லை. எல்லா சட்டங்களும் விதிகளும் மேல் முறையீட்டுக்கு வழி செய்து கொடுத்திருக்கும்போது அதனை ஏற்றுக்கொள்ளாமல், பிடிவாதம் பிடிப்பது எந்த ஓர் அமைப்புக்கும் நல்லதல்ல.

ஒட்டுமொத்தமான அமைப்பே ஒரு நாட்டுக்கு, அணிக்கு எதிராகச் சதி செய்கிறது என்று தீர்மானமாகத் தெரிந்தால்மட்டுமே அந்த நாடு/அணி வேறு வழிகளில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும்.

இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரச்னைக்கு வருவோம். இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்டில் நடுவர்கள் கொடுத்த பல தீர்ப்புகள் தவறானவை என்பது உண்மை. அதனால் டிரா ஆகியிருக்கவேண்டிய டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது என்பதும் உண்மை. சொல்லப்போனால், முதல் இன்னிங்ஸில் சிமாண்ட்ஸ் சரியாக அவுட் கொடுக்கப்பட்டிருந்தால், இந்தியா இந்த ஆட்டத்தை கஷ்டப்பட்டு ஜெயித்திருந்திருக்கலாம். அத்துடன் ஹர்பஜன் சிங்குக்கு ‘இனவெறி' பட்டமும், மூன்று டெஸ்ட்கள் தடையும் சேர்ந்து கிடைத்திருப்பது இந்திய ஆட்டக்காரர்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது.

ஆனால் அதற்காக இந்தியா கடந்த இரு தினங்களில் செய்த அழும்பு பார்க்க சகிக்கவில்லை.

நடுவர்மீது புகார் கொடுக்கலாம். ஆனால் அவர் அடுத்த ஆட்டத்தில் இருக்கக்கூடாது, இல்லாவிட்டால் நான் மூட்டையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

பாண்டிங் அழுகுணி ஆட்டம் ஆடுகிறார் என்று நாம் சொல்லலாம். அவர்மீதும் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்கள் மீதும் குற்றம் சொல்லலாம். மேட்ச் ரெஃபரி மைக் புராக்டர் மீதும் குற்றம் சொல்லலாம். ஹர்பஜன் சிங் விவகாரத்தில் ஐசிசியிடம் மேல்முறையீடு செய்யலாம். (இந்தியா செய்துள்ளது.)

பிரச்னை நடந்தபோது தென்னாப்பிரிக்காவிலும் சரி, இப்போது ஆஸ்திரேலியாவிலும் சரி, இந்தியாவின் ஆட்டம் பார்க்கச் சகிக்கவில்லை. பேட்டிங் கண்றாவி. பவுலிங் ஏதோ தேவலாம். அதனால் frustration. வெறுப்பு. இதில் ஓரிரு நடுவர் முடிவுகள் தவறாகப் போனால் அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் விளையாட்டு வீரர்களிடமும் இல்லை, இந்திய மீடியாவிடமும் இல்லை, இந்திய ரசிகர்களிடமும் இல்லை. என்னமோ எல்லாரும் சேர்ந்து இந்திய அணிக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்ற சுய பச்சாதாப உணர்வு. இந்த எண்ணம் வந்துவிட்டால் எந்தத் தனி நபரும் அமைப்பும் உருப்படவே முடியாது.

எவ்வளவோ டெஸ்ட் போட்டிகளில் நடுவர் செய்த தவறுகளால் பல அணிகள் தோற்றுப்போயுள்ளன. யாரும் இந்தியா போல நடுத்தெருவில் உட்கார்ந்து கொண்டு அடம் பிடிக்கும் குழந்தைபோல நடந்துகொண்டதில்லை.

ஆஸ்திரேலியாவை ஜெயிப்பது இருக்கட்டும். முதிர்ச்சியோடு நடந்துகொள்ள, இந்தியா முதலில் கற்றுக்கொள்ளட்டும்.

அப்துல் ஜப்பார் எழுதியது - அதுவும் ஸ்டீவ் பக்னரை ஒருமையில் விளித்தது - எனக்கு சற்றும் ஏற்புடையதல்ல. அவ்வாறு அவர் எழுதியதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒருவரைக் குற்றம் சாட்டவேண்டுமானாலும் கண்ணியமான முறையில் செய்யவேண்டும்.

Friday, January 04, 2008

வரம் புத்தகங்கள்

இதிகாச, புராணங்கள், தலவரலாறுகள் வரிசையில் வரம் வெளியீட்டிலிருந்து நான்கு புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் வெளியாகின்றன.

ராமாயணம், மகாபாரதம் - இரண்டுமே பலமுறை, பலரால் எளிமைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டவை. இவற்றை இன்றைய தமிழில், விறுவிறுப்பாக எழுதியுள்ளார் உமா சம்பத். குழந்தைகளும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ள இந்தப் புத்தகங்கள் 320 பக்கங்கள் + 16 பக்க கலர் படங்களுடன் கூடியவை. அதே வரிசையில் பாகவத புராணமும் - அதே பக்கங்கள், வண்ணப் படங்களுடன், உமா சம்பத் எழுத்திலேயே வெளியாகியுள்ளது. அனைத்தும் விலை ரூ. 150/-

அதேபோல பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து இப்பொது அச்சில் இல்லாத வேங்கடநாத விஜயம் புத்தகமும் இப்போது கெட்டி அட்டையில் ரூ. 300 என்ற விலைக்கு வெளியாகிறது.




முந்தைய பதிவு: விடுதலைப் புலிகள்

Thursday, January 03, 2008

விடுதலைப் புலிகள்

நேற்றுதான் ‘போர் நிறுத்த ஒப்பந்த'த்தைக் கிழித்து எறிந்துள்ளது இலங்கை அரசு. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதே இரண்டு பக்கங்களும் மாறி மாறி அதனை மீறினர். ஆனால் ஒருவர் மீறும்போது அடுத்தவர் நார்வே தலைமையிலான கண்காணிப்புக் குழுவிடம் புகார் செய்வார். செய்த உடனேயே தன் தரப்பிலிருந்து மீறுவார். எதிர்ப்பக்கம் ஒரு புகார் கொடுக்கும்.

இன்று தி ஹிந்துவில் இலங்கை அரசு 351 முறையும், விடுதலைப் புலிகள் 3,830 முறையும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஒரு தகவல் வந்துள்ளது. இது கண்காணிப்புக் குழுவின் அதிகாரபூர்வ தகவலா அல்லது தி ஹிந்துவின் திரிபா என்று தெரியவில்லை.

இனி கண்காணிப்புக் குழுவும் இலங்கையை விட்டுச் சென்றுவிடும். முழுப் போர் தொடங்கும். இது மிகவும் வருத்தமான ஒரு நிலை.

விடுதலைப் புலிகளின் வரலாற்றை முடிந்தவரை சுருக்கமாக விளக்க முயற்சி செய்கிறது கிழக்கிலிருந்து வெளியாகும் புத்தகம் ‘விடுதலைப் புலிகள்'. இலங்கைப் இனப்பிரச்னை எங்கிருந்து தோன்றியது, ஏன் சாத்வீக போராட்டங்கள் அங்கே வெற்றிபெறவில்லை, ஆயுதம் ஏந்திய போராளிகள் ஏன் உருவானார்கள், அவ்வாறு தோன்றிய பல குழுக்களின் எவ்வாறு விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு மட்டும் இறுதியில் எஞ்சியது, பல்வேறு ஈழப் போர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தம், அமைதிப்படை இலங்கைக்குப் போனது, அங்கு ஏற்பட்ட குழப்பங்கள், புலிகளால் கொல்லப்பட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், போர் நிறுத்த ஒப்பந்தம், சுனாமி, அதன்பிறகான செயல்பாடுகள், சமீபத்திய நிலைமை என்று பலவற்றையும் தொட்டுப்போகிறது இந்தப் புத்தகம்.

இலங்கைப் பிரச்னையைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து நிறைய எழுதவேண்டியுள்ளது. இந்தப் புத்தகம் ஓர் அறிமுகம் மட்டுமே.

முந்தைய பதிவு: மலையாளத்திலிருந்து தமிழுக்கு

மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன், மலையாளத்திலிருந்து தமிழுக்கு, தொடர்ச்சியாக நல்ல புத்தகங்களை, நல்லபடியாக மொழிபெயர்க்கவேண்டும் என்ற திட்டத்தை கிழக்கு பதிப்பகம் தொடங்கியது. ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறவில்லை. ஆல்ஃபா, சூஃபி சொன்ன கதை, பாண்டவபுரம், வைக்கம் முகமது பஷீர் (வாழ்க்கை வரலாறு) ஆகிய நான்கு மட்டுமே வந்தன.

இப்பொழுது சென்னை புத்தகக் கண்காட்சியின்போது ஐந்து புத்தகங்கள் வெளியாக உள்ளன. அவை:

1. புத்தபதம். எழுத்தாளர் ரவீந்திரன். மொழிமாற்றம் ருத்ர. துளசிதாஸ். புத்தர் பயணம் செய்த வழியில் அமைந்துள்ள புத்த ஆலயங்களுக்கெல்லாம் சென்று அந்த நகரங்களில் வாழும் மக்களின் பிரச்னைகளையும் சேர்த்து விளக்கும் நூல் இது.

2. காலச்சிற்பியின் கைகளில். எழுத்தாளர் வல்ஸலன் வாதுஸ்ஸேரி. மொழிமாற்றம் தி.சு.சதாசிவம். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். பல்வேறு அரசியல் காரணங்களால் குறிப்பிட்ட சமூகம் எத்தனை விதமான இன்னல்களுக்கு ஆளாகிறது என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யும் நாவல்.

3. தேடித்தேடி. எழுத்தாளர் ஸாரா ஜோசப். மொழிமாற்றம் தி.சு.சதாசிவம். திருச்சூரில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை எழுத்தில் பிரதிபலிக்கும் நாவல் இது. மாத்ருபூமியில் ‘ஒதப்பு’ என்ற பெயரில் தொடராக வெளிவந்த நாவல்.

4. உயிர்ப் புத்தகம். எழுத்தாளர் ஸி.வி.பாலகிருஷ்ணன். மொழிமாற்றம் வை.கிருஷ்ணமூர்த்தி. நாவல். மலையாளத்தின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர் பாலகிருஷ்ணன். கேரள சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

5. வைசாகன் சிறுகதைகள். மொழிமாற்றம் டி.எம்.ரகுராம். மத்தியதர மக்களின் வாழ்க்கையை மிகவும் அழகான ஓவியமாகத் தீட்டியிருக்கும் வைசாகன் கேரளத்தின் மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளர். கேரள சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.




முந்தைய பதிவு: தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு

Wednesday, January 02, 2008

NHM Converter - தமிழ் எழுத்துக் குறியீடு மாற்றத்துக்கு

NHM Writer எழுதுகருவிக்கு அடுத்தபடியாக NHM Converter என்ற கருவியை வெளியிடுகிறோம்.

தமிழில் ஓர் எழுத்துக் குறியீட்டிலிருந்து மற்றொரு குறியீட்டுக்கு மாற்றிக்கொள்ள இந்தக் கருவி பயன்படும். டிஸ்கி, யூனிகோட், டாம், டாப், பாமினி போன்ற பலவகை குறியீடுகளிலிருந்து வேண்டிய பிற குறியீட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இந்த மென்பொருளும் இலவசமே. இது இப்போதைக்கு மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2003, விஸ்டா ஆகிய இயக்குதளங்களில் மட்டுமே வேலை செய்கிறது.

மென்பொருளை இறக்கிக்கொள்ள

இந்த மென்பொருள் .NET framework மூலம் எழுதப்பட்டிருப்பதால், இறக்குவதற்கு மிகவும் சிறியதாக இருந்தாலும், உங்களது கணினியில் .NET framework இல்லையென்றால், அதனை மைக்ரோசாஃப்ட் தளத்திலிருந்து இறக்கிக்கொள்ளவேண்டும். மென்பொருளை நிறுவும்போது அதுவே தானாக இதைச் செய்துவிடும் - உங்களது அனுமதியைக் கேட்டபிறகு. ஆனால் ஒரு பிரச்னை - இந்த டவுன்லோட் சுமார் 23 எம்.பி ஆக இருக்கும். எனவே இதைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

இதே மென்பொருளை சிடி வடிவிலும் கொடுக்கிறோம். அதில் உள்ளேயே .NET framework சேர்த்தே இருப்பதால் டவுன்லோட் எதுவும் தேவையில்லை.

இந்த மென்பொருளும் XML வழியாக எழுத்துக் குறியீடுகளை வைத்துக்கொண்டு வேலை செய்கிறது. எனவே புதிதாக ஓர் எழுத்துக் குறியீட்டைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றால், அதனை நீங்களாகவே செய்துகொள்ளலாம்.

-*-

NHM Writer-ல் சில டைப்ரைட்டர், பாமினி போன்ற உள்ளீட்டு முறைகளில் சில சிறு பிரச்னைகள் உள்ளன. அவற்றை சிலர் அஞ்சலில் குறிப்பிட்டுள்ளனர். அவற்றைச் சரி செய்யும் முயற்சியில் உள்ளோம். இந்த மென்பொருள்களுக்கென தனியாக ஃபாரம், வலைப்பதிவு ஆகியவற்றையும் ஆரம்பித்து என்னென்ன மாறுதல்கள் செய்கிறோம் என்ற தகவல்களையும் விரைவில் கொடுக்க உள்ளோம்.

அடுத்ததாக NHM Converter செய்யும் காரியங்களை இணையம் வழியாகவே பெற்றுக்கொள்ளுமாறு ஒரு தளம் வெளியாக உள்ளது. அப்போது, நீங்கள் எதையும் உங்களது கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இருக்காது. அந்தத் தளம் தயாரானதும் தகவல் தெரிவிக்கிறேன்.

இந்த மென்பொருளுக்கும் லினக்ஸ் திறந்த மூல வெர்ஷன் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய தகவலையும், வேலை முடிந்தவுடன் தெரிவிக்கிறேன்.