Sunday, November 30, 2008

மும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்

வரும் புதன் கிழமை, 3 டிசம்பர் 2008 அன்று, மதியம் 3.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை YMIA கட்டடத்தில் ஒரு கூட்டம் நடக்க உள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு பி.எஸ்.ராகவன் தலைமை தாங்குகிறார்.

மும்பையில் நடந்தது சாதாரண பயங்கரவாதம் அல்ல. இந்தியா மீதான ஒரு போர் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். பாதுகாப்பு ஏஜென்சிகள் கோட்டைவிட்டுள்ளன. எதனால்? இந்த ஏஜென்சிகள் ஒழுங்காக இயங்குவதில் என்ன பிரச்னைகள் உள்ளன? பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் அரசிடம் வலுவான கொள்கைகள் இல்லை என்று தோன்றுகிறது. உலகெங்கிலும் இருந்து எதிர்வினைகள் வரும் நிலையில் இந்திய அதிகாரிகளிடமிருந்து நிசப்தமே நிலவுகிறது. ஊடகங்களின் நிலைப்பாடு, அவர்களது ஒளிபரப்பு.

முன்னாள் அரசுத்துறை நிர்வாகிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்குபெற உள்ளனர். நான் செல்வதாக உள்ளேன். முடிந்தவரை ஒலிப்பதிவு செய்கிறேன்.

அதேபோல, நாளை (திங்கள், 1 டிசம்பர் 2008) மாலை 6.15 மணிக்கு கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரியில் அருன் ஷோரி பேசுகிறார். இதையும் முடிந்தால் ஒலிப்பதிவு செய்து பதிவில் வெளியிடுகிறேன்.

Saturday, November 29, 2008

வானவில்

Rainbow in Gopalapuram

ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக எனது நோக்கியா E-51-ல் இன்று காலை பிடித்த வானவில்.

சூரியனிலிருந்து வரும் வெண்மையான ஒளி, ஒரு குறிப்பிட்ட வண்ண ஒளி கிடையாது. பல வண்ண ஒளிகள் கலந்து கொடுக்கும் வண்ணமே இந்தப் பளிச்சிடும் வெண்மை. வெள்ளை ஒளி என்ற ஒன்று கிடையவே கிடையாது.

இது சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம்!

வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள். வயலட், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு என்பதே இந்த வண்ணங்கள். இதில் பொதுவாக, மனிதக் கண்களால் பார்க்கும்போது, வயலட் (அல்லது நீலம்), மஞ்சள், சிகப்பு என்ற மூன்று வண்ணங்கள்தான் ஓரளவுக்குத் தெளிவாகத் தெரியும்.

நியூட்டன் ஒரு கண்ணாடி முப்பட்டகத்தை (Prism) வைத்து ஒளியை இந்த ஏழு வண்ணங்களாகப் பிரித்தார். பின் அதே முப்பட்டகத்தை தலைகீழாக அருகில் வைத்து, மீண்டும் ஏழு வண்ணங்களையும் கலந்து வெள்ளை ஒளியாக்கினார்.

ஒவ்வொரு வண்ண ஒளிக்கும் வெவ்வேறு அலை நீளம், அதிர்வெண் உண்டு. (பார்க்க: ஸ்பெக்ட்ரம் தொடர்பான பதிவு. அலை நீளத்தையும் அதிர்வெண்ணையும் பெருக்கினால் கிடைப்பது மாறிலியான ஒளியின் வேகம்: விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்.)

வெவ்வேறு அலை நீளம் இருப்பதால்தான், ஒரு கண்ணாடிப் பட்டை வழியாக ஊடுருவிச் செல்லும்போது, ஒவ்வொரு வண்ண ஒளி அலையும் வெவ்வேறு கோணத்தில் வளைகிறது. அதனால் வெளியேறும்போது தனித்தனியாக வருகின்றன.

நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது. ஆனால் இதற்குப் பின்னாலான அறிவியல் அவ்வளவு எளிதானதல்ல! மழை பெய்யும்போதெல்லாம் வானவில் தோன்றாது. என்றாவதுதான்.

என் மகள் தான் வானவில்லைப் பார்ப்பது இது மூன்றாவது முறை என்றாள். இதற்கு முன்பு பார்த்ததும் இங்கே வீட்டில் இருந்துதான்.

***

கோபாலபுரத்தில் உள்ளவர்கள் பாக்கியவான்கள். தெருவில் அதிகம் தண்ணீர் தேங்கவில்லை. அதனால் ஒரு விநாடிகூட மின்சாரம் வெட்டப்படவில்லை. தினசரி ஆவின் பால் கிடைத்தது. மாநகராட்சி தண்ணீர் தினமும் கிடைத்தது. ஹெரிடேஜில் காய்கறி கிடைத்தது. ஓயாமல் பெய்த மழையில் என் பெண்ணுக்கு பள்ளி விடுமுறை விட்ட ஒன்றுதான் disruption.

ஆனால், பிற சென்னை மக்கள் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை. Storm water disposal சாக்கடைகள் இன்னமும் பல இடங்களில் அமைக்கப்படவில்லை. நமது மாநகரம் திட்டமிட்டு அமைக்கப்பட்டதல்ல. பிரச்னை வந்தால் அப்போது அந்த விநாடி, என்ன முடியுமோ அதைச் செய்துகொள்ளலாம் என்பதுதான் இந்தியப் பண்பாடு. அது சென்னை மழையானாலும் சரி, மும்பைத் தாக்குதலானாலும் சரி.

இதற்கு அரசுகளை மட்டும் குற்றம் சொன்னால் போதாது. அது நியாயமே கிடையாது. சிவில் சமூகமான நாம்தான் நம்முடைய அரசியல்வாதிகளிடம் பேசி, நம் அஜெண்டாவை அவர்கள்முன் வைக்கவேண்டும்.

Wednesday, November 26, 2008

புயல்

தமிழகக் கடற்கரை ஓரங்களில் புயல் அடிப்பது அல்லது பயங்காட்டுவது தொடர்ச்சியாக நடக்கும் ஒன்று. எப்போதாவது நிஜமாகவே கடுமையான புயல் கரையைக் கடக்கும்.

எனக்கு சிறு வயதில் இது தொடர்பாக நிறையவே கேள்விகள் இருந்தன. ஆனால் பள்ளிக்கூடங்களில் இதைப் பற்றியெல்லாம் உருப்படியான பதில்கள் வந்ததே கிடையாது. நான் பார்த்த மிகக் கடுமையான புயல் 1977-ல் என்று நினைக்கிறேன். அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாகப்பட்டினம் தமிழகத்தின் பிற பாகங்களிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் பள்ளிக்கூடம் இல்லை என்று ஞாபகம். எங்கள் வீட்டின் ஓடுகள் அனைத்துமே பறந்துவிட்டன. அப்போது அவ்வளவாக காங்க்ரீட் வீடுகள் கிடையாது. வீட்டின் ஒரு மூலையில் என் அம்மா, அப்பா, அத்தை, நான், என் 2 வயதுத் தங்கை, வீட்டிலேயே இருந்த ஒரு பூனைக்குட்டி என அனைவரும் ஒண்டிக்கொண்டிருந்தது ஞாபகம் உள்ளது.

புயலுக்கு முன் அமைதி என்பதைப் போல, அன்றைய மாலை நிசப்தமாக இருந்தது. அன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்று ஆல் இந்தியா ரேடியோ செய்தியில் சொல்லியிருந்தார்கள். கரையைக் கடந்த புயல், கடும் நாசத்தை விளைவித்திருந்தது. கரையோர மீனவர் குடிசைகள் அனைத்தும் அடித்துப் பறந்துபோய்விட்டன. ஊருக்குள் இருந்த ஓட்டு வீடுகள் அனைத்தும் மொட்டையாகக் காட்சியளித்தன. பல இடங்களில் சுவர் இடிந்து விழுந்து, முழு வீடுகள் உடைந்து நொறுங்கியிருந்தன.

தெருவெங்கும் பெரும் மரங்கள் பிய்த்து எறியப்பட்டிருந்தன. உயிர்ச்சேதம் எத்தனை என்று ஞாபகம் இல்லை. பலர் முன்னதாகவே கோயிலின் பத்திரத்தில் வந்து தங்கிவிட்டனர். அடுத்த சில நாள்கள், தாழ்வான பகுதியிலிருந்து மக்கள் எல்லோருமே கோயில்களிலும் பள்ளிகளிலும்தான் தங்கியிருந்தனர். ஒரு வாரத்துக்குப் பின்னரே மாவட்ட நிர்வாகம் கொஞ்சம் ஊருக்கு உள்ளே வந்து நிவாரணப் பணிகளை ஆரம்பிக்க முடிந்தது.

அதற்குப் பின், இன்றுவரை அதுபோன்ற கடுமையான புயல் தமிழகத்தில் அடித்ததில்லை. ஆனால், தமிழகத்தை பயமுறுத்திவிட்டு ஆந்திரா அல்லது ஒரிஸ்ஸா சென்று அங்கு நாசத்தை விளைவிக்கும்.

இன்று நாகப்பட்டினத்துக்கு அருகே வேதாரணியத்தில் கரையைக் கடக்கும் என்கிறார்கள். [பார்க்க: இந்திய வானிலை அமைப்பின் தகவல் அறிக்கை; பக்கத்தில் புயலின் இன்றைய காலை படம்]

***

வங்காள விரிகுடாவில் ‘புயல்’ என்று நாம் குறிப்பிடுவது, ஆங்கிலத்தில் Cyclone எனப்படுவது. சுழற்புயல் என்று சொல்லலாம். சூறாவளி என்று சொல்லலாம்.

நில நடுக்கோட்டுக்கு இரண்டு பக்கங்களிலும் ஒரு குறிப்பிட்ட தூரம் (23.4 டிகிரி வடக்கு அட்ச ரேகை, தெற்கு அட்ச ரேகை) வரை உள்ள பகுதிகள்தான் வெப்ப மண்டலப் பகுதிகள். இந்தியாவைப் பொருத்தமட்டில், தென்னிந்தியா மட்டும்தான் இதில் மாட்டும். வட இந்தியா, இதற்கு வெளியே உள்ளது.

தென்னிந்தியாவின் வங்காள விரிகுடாக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதாக ரேடியோவில், தொலைக்காட்சியில் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதென்னது?

பொதுவாக, ஒவ்வொரு நாளுமே கடல் காற்று (Sea Breeze), நிலக் காற்று (Land Breeze) என்பன வீசும். காலையில் சூரியக் கிரணங்கள் படும்போது, மண் தரை வேகமாகச் சூடாகிறது; கடல் நீர் மெதுவாகச் சூடாகிறது. (இதற்குக் காரணம் specific heat என்ற தன்மை. அதை இப்போது பார்க்கவேண்டாம்.) இதனால், தரைக்கு மேல் உள்ள காற்று வேகமாகச் சூடாகி, அதன் அடர்த்தி குறைந்து, மேலே செல்கிறது. அதனால் ஏற்படும் காற்றழுத்தக் குறைவைப் போக்க, சற்றே குளிர்ந்த காற்று கடலுக்கு மேலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது. இதுதான் கடல் காற்று.

அதேபோல மாலையில் சூரியன் மறைந்ததும், தரை வேகமாகக் குளிர்கிறது. கடல் குளிர்வதில் நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் கடலுக்கு மேல் உள்ள காற்று சூடாகி மேலே செல்கிறது. நிலத்திலிருந்து காற்று கடலை நோக்கி வீசுகிறது. நிலக் காற்று.

இது கடலோரத்தில் தினம் தினம் நடக்கும் நிகழ்வு. ஆனால் இதற்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துக்கும் வித்தியாசங்கள் உண்டு.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாக் கடலில் தொடர்ச்சியாக இது ஏற்படும். சுற்றியுள்ள காற்றின் வெப்பம் குறைகிறது. ஏனெனில் இந்த மாதங்களில் வடக்கு அரைக்கோளம் சூரியனிலிருந்து தொலைவில் இருப்பதால், சூரியனின் கிரணங்கள் சாய்வாக விழுகின்றன. ஆனால் கடலின் வெப்பம் சட்டென மாறுவதில்லை. கடலில் உள்ள வெப்ப நீரோட்டம் காரணமாக வங்காள விரிகுடாக் கடலில் நீரின் வெப்பம் 26-27 டிகிரி செண்டிகிரேட் என்ற அளவிலேயே உள்ளது. இதனால், கடலில் மேல் உள்ள காற்று சூடாகிறது. அத்துடன் கடல் நீர், நீராவியாகி காற்றுடன் சேர்ந்து மேலே போகிறது.

பொதுவான கடல் காற்று, நிலக் காற்று விஷயத்தில் இந்த சூடான காற்று மேலே சென்று சூட்டை இழந்துவிடும். ஆனால் இப்போது நாம் பார்ப்பதில் மட்டும் ஒரு வித்தியாசம் ஏற்படுகிறது.

தினசரி போல் அல்லாது, அக்டோபர், நவம்பர் மாதம் கடலுக்கு மேலே செல்லும் வெப்பக் காற்றில் எக்கச்சக்கமான நீராவி இருக்கிறது. ஒரு பக்கம் காற்று மேலே சென்று குளிரத் தொடங்குகிறது. அப்போது நீராவி, தன் வெப்பத்தை விடுத்து, நீராகி மேகத்துக்குள் சென்று தங்குகிறது. நீராவி வெளிவிட்ட வெப்பம், காற்றைச் சூடாக வைத்திருக்கிறது. இதனால், மையத்தில் சூடான காற்றும் அதைச் சுற்றிக் குளிர்ந்த காற்றும் கொண்ட சுழல் உருவாகிறது. இந்தச் சுழலின் மையத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்கிறது.

இதுதான் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.

இந்தத் தாழ்வு மண்டலத்தின் காற்றழுத்தம் குறைவாக இருப்பதால் அது தன்னை நோக்கி வெளியிலிருந்து காற்றை இழுக்கிறது. அப்படி உள்ளே வரும் காற்றும் நிறைய நீராவியுடன் இருந்தால், அந்த நீராவி குளிர, அதனால் மேலும் வெப்பம் வெளியாக, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் விரிவடைந்துகொண்டே போகிறது.

இதற்கிடையில் இந்த சுழல் அள்ளிக்கொண்டுபோன தண்ணீரால், கடல் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெருமழை பெய்யும். இந்த மழை கனமானதாக, இடியுடன் கூடியதாக இருக்கும். ஆங்கிலத்தில் Thunderstorm என்பார்கள்.

இங்கே கொரியாலிஸ் விசை என்பதை மேலோட்டமாகப் பார்ப்போம்.

பூமி தன் அச்சில் சுழலும்போது, அதன் மேல் நிற்கும் நாம் அனைவரும் பூமியுடன் சேர்ந்து சுழல்கிறோம். நமக்கு நாம் சுழல்வதே தெரிவதில்லை. ஆனால் பூமியில் பரப்புக்கு சற்று மேலே இருக்கும், மிதக்கும் வஸ்துக்களுக்கு என்ன ஆகும்? அவை பூமியுடன் சேர்ந்து சுழலும்; ஆனால் பூமியுடன் ஒத்தபடிக்குச் சுழலா. உதாரணமாக, நாம் பார்த்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்கெனவே நீராவி சேர்ந்த காற்றினால் ஒரு சுழற்சியைக் கொண்டுள்ளது. அத்துடன் அது இடமிருந்து வலமாகவும் (clockwise) சுழலும். இந்தச் சுழற்சி, நாம் வட அரைகோளத்தில் இருப்பதால் இப்படி இடமிருந்து வலமாக இருக்கிறது. இதை உருவாக்குவது கொரியாலிஸ் விசை. இதையும் இப்போதைக்கு சாய்ஸில் விட்டுவிடுவோம்.

ஆகமொத்தம் சுழன்றுகொண்டிருக்கும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மையம் கொண்டிருக்கும். அந்த மையத்தை cyclonic eye என்று குறிப்பிடுவர்.

இப்படிப் பெரிதான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறலாம் அல்லது பிசுபிசுத்துப் போகலாம். கடல் நீரின் வெப்பம் குறைந்தால், தாழ்வு மண்டலத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் தேவையான நீராவி கிடைக்காது. அப்போது தாழ்வு மண்டலம் குலைந்துபோகும். அப்படி இல்லாமல், தாழ்வு மண்டலம் மிகப் பெரியதாக ஆகிவிட்டால், அடுத்து அது நகர்ந்தபடியே வந்து கரையைக் கடக்க முயற்சி செய்யும்.

கரையைக் கடக்கும்போது சூறாவளிக் காற்று வீசும். மணிக்கு 70-150 கி.மீ வேகத்தில் இந்தக் காற்று கரையை அடிக்கும். கூடவே இந்தப் புயல் அள்ளிக்கொண்டுவரும் நீரும் மழையாகக் கொட்டும். கடலை விட்டு விலகி கரைக்குள் வந்ததால், அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நீராவி மேற்கொண்டு கிடைக்காமல் போய்விடும். எனவே புயல் ஓய்ந்துவிடும்.

ஆனால் அதற்குள்ளாகக் கடும் அழிவை ஏற்படுத்திவிடும்.

***

இதை எழுதிமுடிக்கும்போது சென்னை அமைதியாக, மழை கொட்டாமல், காற்றடிக்காமல் உள்ளது. இன்று மாலை சிறிது நேரம் சுழன்று சுழன்று காற்றடித்தது. நேற்றும். நேற்று முழுவதும் கடுமையான மழை.

இன்று இரவு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

Monday, November 24, 2008

அறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்

80 பக்கங்களில், ரூ. 25 விலையுடன் நல்ல தாளில், பள்ளி மாணவர்களுக்கான பல புத்தகங்களை NHM நிறுவனம், Prodigy Books என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு வருகிறது. இவற்றை ஒவ்வொரு சிற்றூரிலும் பெரு நகரங்களிலும் பெட்டிக் கடைகளில்கூட வாங்கமுடியும்.

இது தொடர்பாக வாசகர்களிடம் நடத்திய கணிப்பின்மூலம், வாசகர்கள் நாட்டு நிகழ்வு, இந்திய அரசியல், உலக அரசியல் ஆகிய துறைகளிலும் இதுபோன்ற "Quick Read" புத்தகங்களை எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள். எனவே Prodigy பாணியிலேயே, 80 பக்க, ரூ. 25 புத்தகங்களை NHM அறிமுகம் செய்கிறது. இந்தப் பதிப்புக்கு MiniMax என்று பெயர்.

           

முதல் எட்டு புத்தகங்களில் நான்கு தமிழகக் கட்சிகளின் சுருக்கமான வரலாறாக உள்ளன. இப்போது வெளியாகியுள்ள புத்தகங்கள்:

திமுக
அதிமுக
பாமக
மதிமுக

இதே வரிசையில் இன்னும் பல புத்தகங்கள் வெளிவர உள்ளன.

           

மினிமேக்ஸில் தற்போதைக்கு வெளிவரும் உடல்நலம் சார்ந்த புத்தகங்கள்:

எச்.ஐ.வி - எய்ட்ஸ்
தலைவலி
யோகாசனங்கள்
சித்தமருத்துவம்

இனி வரும் நாள்களில் பல இந்திய, தமிழக, உலக அரசியல் நிகழ்வுகள், பொருளாதார நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றுடன் உடல்நலம் சார்ந்த சில புத்தகங்களும் இந்தப் பதிப்பில் வெளியாகும்.

நல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்

நேற்று மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நல்லி நிறுவனமும் ‘திசை எட்டும்’ மொழிமாற்றல் காலாண்டிதழும் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சியில், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழிமாற்றப்பட்ட புத்தகங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன (ரூ. 10,000 + பட்டயம்). கூடவே, மொழிமாற்றல் துறையில் வாழ்நாள் சாதனையாளர்கள் இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன (ரூ. 25,000 + பட்டயம்).

விழாவுக்கு நானும் சென்றிருந்தேன்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினர். நல்லி குப்புசாமி செட்டி, தலைமை. கு.ஞானசம்பந்தன், வாழ்த்துரை வழங்கியவர் (அதாவது சிரிக்கச் சிரிக்கப் பேசியவர்). அமைச்சர் கிளம்பிச் சென்றதும் லோக்கல் எம்.எல்.ஏ நன்மாறன் (கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான எளிமை) அரங்குக்கு வந்தார். அமைச்சர் உட்கார்ந்த இடத்தில் மேடையில் அமர்ந்தார். ஏகப்பட்ட பேர் மேடையில் வந்து பரிசு வாங்கி, படம் எடுத்து, 2 நிமிடம் பேசுகிறேன் என்று சொல்லி 20 நிமிடத்துக்கும் மேலாகப் பேசியதில், அழைப்பிதழில் பேசுவதாகச் சொல்லியிருந்த நான்கு பேருக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை (என்னையும் சேர்த்து:-) அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.

சில படங்கள் கீழே: பேராசிரியர் நா.தர்மராஜன், (கடைசியாக அன்னா கரேனினாவை தமிழாக்கம் செய்தவர். 100 நூல்களுக்கு மேல் தமிழாக்கம் செய்துள்ளார்; ரஷ்யாவில் 8 ஆண்டுகள் வசித்துள்ளார்; பல ரஷ்ய நூல்களை மொழிபெயர்த்துள்ளார்) வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்.
Prof. N.Dharmarajan receiving 'lifetime' achievement award.
சௌரிராஜன், வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார். பல தமிழ் நூல்களை இந்திக்கும் இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்தவர்.
Sourirajan receiving 'lifetime' achievement award.
Indian Writing பதிப்புக்காக, ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” நாவலை “Once an Actress” என்ற தலைப்பில் மொழிபெயர்த்த கே.எஸ்.சுப்ரமணியன், சிறந்த ஆங்கில ஆக்கத்துக்கான விருதைப் பெறுகிறார்.
Dr. K.S.Subramanian receiving award for best translation (from Tamil to English)
கேரளாவில் வசிக்கும் மருத்துவர் டி.என்.ரகுராம், மலையாளத்திலிருந்து தமிழுக்கு வைசாகன் என்ற எழுத்தாளரின் சிறுகதைகளை மொழிமாற்றி “வைசாகன் சிறுகதைகள்” என்ற பெயரில் கொண்டுவந்ததற்காக சிறந்த மலையாளத்திலிருந்து தமிழாக்கத்துக்கான விருதைப் பெறுகிறார்.
Dr. Raghuram receiving award for best translation (from Malayalam to Tamil)

பிற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை:

* சிவகாமி ஐ.ஏ.எஸ்ஸின் “பழையன கழிதலும்” நாவலை தமிழிலிருந்து கன்னடத்துக்கு மாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறைப் பேராசிரியர் தமிழ்ச் செல்வி.

* Platero y Yo (Platero and I) என்ற நோபல் பரிசு பெற்ற ஸ்பெயின் எழுத்தாளர் Juan Ramón Jiménez-ன் (1881-1958) ஸ்பெயின் மொழி நாவலை ஆங்கிலம் வழியாக “ப்ளேடெரோவும் நானும்” என்று தமிழாக்கிய சா.தேவதாஸ் (வம்ஸி புக்ஸ்) (ஏதோ காரணத்துக்காக பலரும் இதை “ஃப்ளோரிடாவும் நானும்” என்று குறிப்பிட்டனர்! விழாவினர் கொடுத்த கையடக்கப் புத்தகத்திலும் இப்படியே குறிப்பிட்டிருந்தனர்!).

* Up From Slavery, Booker T Washington (1856-1915)
புத்தகத்தை “அடிமையின் மீட்சி” (நிவேதிதா பதிப்பகம்) என்று தமிழாக்கிய 80 வயதுக்கும் மேற்பட்ட M.N.ராமசாமி.

மற்றபடி, தமிழ்->இந்தி, தமிழ்->இந்தி->மராத்தி (சின்னப்ப பாரதியின் நாவல்), சமஸ்கிருதம்->தமிழ், தமிழ்->தெலுங்கு போன்ற விருதுகளும் இருந்தன.
***

விழா பற்றிய என் முந்தைய பதிவு

ஞானபீட விருது

41-வது ஞானபீட விருது, கொங்கணி மொழியில் எழுதும் 83 வயதாகும் ரவீந்திர ராஜாராம் கேலேகர் என்ற கோவா எழுத்தாளருக்கும் சமஸ்கிருத நிபுணர் சத்வீத் சாஸ்திரி என்பவருக்கும் இணைந்து கொடுக்கப்படுகிறது. கேலேகர், கொங்கணியைத் தவிர, மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் எழுதுபவர் என்பது குறிப்பிடத்தகக்து.

40-வது ஞானபீட விருது, ரஹ்மான் ராஹி (அவருக்கும் 83 வயதானபோது) என்ற காஷ்மீரி மொழி எழுத்தாளருக்குக் கிடைத்தது.

39-வது ஞானபீட விருது மராத்தி எழுத்தாளர் கோவிந்தா கராண்டிகருக்கும், 38-வது ஞானபீட விருது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் கிடைத்தது.

இந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்?

தலாய் லாமா (டென்ஸின் க்யாட்ஸோ), தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சீடர்கள் ஆகியோரோடு இந்தியாவுக்கு ஓடிவந்து தஞ்சம் புகுந்தது 1959-ல். அன்றுமுதல் இன்றுவரை ஹிமாசலப் பிரதேசத்தின் தர்மசாலா என்ற இடத்தில் அவர் தனது ஆன்மிக, அரசியல் தலைமையிடத்தை அமைத்து திபெத்தியர்களின் ஆன்மிக, அரசியல் தலைவராக இருந்துவருகிறார்.

சீனா, திபெத்தை முழுமையாக தன் ஆக்ரமிப்பில் கொண்டுவந்துவிட்டது. அதையடுத்து (வேறு காரணங்கள் இருந்தாலும் தலாய் லாமாவுக்கு இந்தியா கொடுத்த ஆதரவும் ஒரு முக்கியக் காரணம்) சீனா, இந்தியாவுடன் ஒரு போரையும் நடத்திவிட்டது.

சீனாவின் கம்யூனிச அரசைப் பொருத்தமட்டில், தலாய் லாமா ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி. பிற்போக்கு நிலவுடைமைச் சக்தி. முக்கியமாக, சீனாவின் தலைமையை ஏற்க விரும்பாத ஓர் எதிரி. தர்மசாலாவில் இருந்தபடி, திபெத்தியர்களைத் தூண்டிவிட்டு சீனாவில் கலகத்தை ஏற்படுத்தும் அடாவடிப் பேர்வழி.

தலாய் லாமா மற்றும் பாரம்பரிய திபெத்தியரைப் பொருத்தமட்டில், சீனா திபெத்தை விழுங்கப் பார்க்கிறது. ஹான் சீனர்கள் திபெத்தின் பொருளாதாரத்தை ஏற்கெனவே விழுங்கிவிட்டனர். சீன மொழி, திபெத்திய மொழியை அழித்துவிடும். சீனாவின் கம்யூனிசமும் சந்தைப் பொருளாதாரமும் கலந்த குழப்பமான கலாசாரம் திபெத்திய பாரம்பரியக் கலாசாரத்தை நாசமாக்கிவிடும். தன்னாட்சி அதிகாரம் இல்லாத திபெத், தனி அடையாளம் இல்லாமல், சீனக்கடலில் கலந்த பெருங்காயமாகப் போய்விடும்.

தலாய் லாமா, சுதந்தரம் கேட்டுவந்தார். இப்பொது, சீனாவுக்குள் தன்னாட்சி அதிகாரம் போதும் என்கிறார்.

சமீபத்தில் சீனாவுக்கும் தலாய் லாமா தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் பேசவந்த சீனத் தரப்பு அதிகாரிகள் தலாய் லாமாவை கன்னாபின்னாவென்று திட்டிவிட்டு வெளியேறினர்.

தலாய் லாமா, இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறார். இந்தியாவால் என்ன உதவியைச் செய்யமுடியும்?

இந்திய - சீன உறவு கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறும் இந்த நேரத்தில், இந்தியா தர்மசங்கடமான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கும் திபெத்துக்கும் உள்ள உறவு காலம் கடந்தது. தலாய் லாமா, திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல, இந்திர்களாலும் மதிக்கப்படும் ஓர் ஆன்மிக குரு.

சீனா, என்றுமே இந்தியாவின் நண்பனாக இருக்கமுடியாது. அதிகபட்சம், சீனா, இந்தியாவின் வெளிப்படையான எதிரியாக இல்லாமல் இருக்கலாம். சீனா சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிக்கிமை இந்தியாவின் பிரதேசம் என்று ஏற்றுக்கொண்டது. இன்றும்கூட அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவுடையது என்று ஏற்பதில்லை. மக்மஹான் (எல்லைக்)கோட்டை சீனா அங்கீகரிப்பதில்லை.

ஆனால், இந்தப் பிரச்னைகள்கூட நாளடைவில் இந்தியாவும் சீனாவும் சுமுகமாகப் பேசி முடித்துக்கொள்ளலாம். இந்தப் பிரச்னைகளுக்கு மாற்றாக இருக்கவேண்டும் என்பதற்காக, சீனாவுக்கு எப்போதும் ஒருபக்கம் பல்வலிபோல திபெத் குடைந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தலாய் லாமாவை ஆதரித்தால் அது அற வழிப்பட்ட நிலையாக இருக்காது.

தலாய் லாமாவும் திபெத்தியர்களும் இந்தியாவின் நண்பர்கள்; அவர்களுக்கு இந்தியாவின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்லும் அதே நேரம், இந்தியா தலாய் லாமாவிடம் நியாயமாக ஓர் உண்மையையும் சொல்லவேண்டும். திபெத் தொடர்பாக, திபெத்தில் தன்னாட்சி உரிமை தொடர்பாக, இந்தியா சீனாவிடம் எந்த முகத்தைக் கொண்டும் பேசமுடியாது. இந்தியா அப்படிப் பேசினாலும் சீனா கேட்கப்போவதில்லை. காஷ்மீர் என்ற கொடியை சீனா பதிலுக்குத் தூக்கும். இந்தியாவில் பல இடங்களில் சுய நிர்ணய உரிமையை வைத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றை தார்மீக வழியில் எதிர்கொள்ள இந்தியா தயங்குகிறது. ராணுவ வழியில்தான் எதிர்கொள்கிறது. அப்படி இருக்கையில், இந்தியா எந்த முகத்தை வைத்துக்கொண்டு சீனாவிடம் பேசமுடியும்?

அதேபோல, இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை, இந்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. அதைப்பற்றிப் பேச மறுக்கிறது. அதைப் பற்றி தமிழகத்தில் யாருமே பேசமுடியாது என்ற நிலை இருக்கிறது. திபெத், இலங்கை இரண்டும் ஒரே மாதிரியாக ஆரம்பித்த பிரச்னைகள் இல்லை என்றாலும், அடிப்படையில் இன்று இரு சிறுபான்மையினரும் எதிர்கொள்வது பெரும்பான்மையினரின் அடக்குமுறையைத்தான்.

தலாய் லாமா, இந்தியாவில் தங்கிக்கொண்டு, வேறு அரசுகளின் உதவியைத்தான் எதிர்பார்க்க வேண்டிவரும். இப்போது இருக்கும் நிலையில் அவரது வாழ்நாளில் திபெத்துக்கு விடிவு வரும் என்று தோன்றவில்லை.

Tuesday, November 18, 2008

இந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்

பொருளாதாரச் சுணக்கம் காரணமாக இந்திய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆனால் நிதியமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து, ஆட்குறைப்பு தேவையில்லை என்பதை வலியுறுத்தி வருகிறார். வர்த்தக அமைச்சர் கமல்நாத், தன் பங்குக்கு, ஆட்குறைப்பு தேவையில்லை என்றும், இந்தியத் தொழில் நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்றும் சொல்லியுள்ளார்.

***

என் கருத்தில் ஆட்குறைப்பு என்பது குறுகிய காலத்தில் தடுக்க முடியாதது என்றே தோன்றுகிறது. பொதுவாகவே, பல நிறுவனங்களும் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, தேவைக்கு அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். வளர்ச்சி இருக்கப்போவதில்லை என்று தெரிந்ததுமே, அந்த ‘அதிகப்படி’ பணியாளர்களுக்கு பணியகத்தில் இடமிருக்காது.

தனியார் துறையில், நிச்சயமாக வேலை வாய்ப்புகள் அடுத்த ஒரு வருடத்துக்கு பாதிக்கப்படும். ஏற்கெனவே வேலையில் இருக்கும் பலர் வெளியேற்றப்படுவர். அதே நேரம் புதிதாகப் படித்துமுடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலைகள் எளிதாகக் கிடைக்காது. புதியவர்களுக்கு சம்பளங்களும் பெரிதாக இருக்காது.

இவை அனைத்துமே, மீண்டும் பொருளாதாரத்தைப் பாதிக்கும். அடிப்படைத் தேவைகளுக்குமேல் மக்கள் செய்யும் செலவுகள் குறையும்.

***

அரசின் கொள்கைகள் உடனடியாக என்னவாக இருக்கவேண்டும்?

* வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் கடுமையாகக் குறைக்கவேண்டும். ஒரு கட்டத்தில் 7% என்று இருந்த இந்த வட்டி, இப்போது எம்பிக் குதித்து 12-13.5% என்று உள்ளது. இது, 9-10% என்ற நிலைக்கு வரவேண்டும். இதற்குத் தேவையானவற்றை ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சரும் செய்யவேண்டும்.

வீடு வாங்குவது, கட்டுவது தொடர்ந்து நடந்தால், கட்டுமானத் தொழிலாளர்கள், இரும்பு, சிமெண்ட் உற்பத்தியாளர்கள் என்று ஆரம்பித்து பல துறைகளில் வேலைவாய்ப்பு தொடரும்.

* மக்கள் கையில் பணம் இருந்து, அவர்கள் பொருள்களை வாங்கினால்தான், பல தொழிற்சாலைகள், தங்களது உற்பத்தியைப் பெருக்கமுடியும் அல்லது தொடரமுடியும். வேலை வாய்ப்புகள் குறையும்போது, வேலையில்லாதவர்கள் கையில் பணம் இருக்காது. வேலையில் இருப்பவர்கள் கைக்கு அதிகப் பணம் போக வைக்கவும் அரசால் முடியாது. நேரடி அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்கெனவே பேசியாயிற்று. வருமான வரி விகிதத்தைப் பார்த்தால் அங்கும் குறைப்பதற்கு ஒன்றுமில்லை. (வேண்டுமானால் கூட்டலாம்!)

அப்படியென்றால் என்ன செய்வது? மறைமுக வரிகளை ஒரு வருடத்துக்குக் குறைக்கலாம். ஆயத்தீர்வை (Excise), பொருள்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி (VAT), சேவை வரி (Service Tax) ஆகியவற்றைச் சற்றே குறைக்கலாம். இதில் VAT மாநிலங்கள் கையில் உள்ளது. மற்ற இரண்டும் மத்திய அரசின் கையில் உள்ளது. எனவே மாநிலங்களை மறந்துவிட்டு, மத்திய அரசு, இவற்றைக் குறைத்தால், மக்கள் கையில் அதிகமான பணம் இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படும்.

ஆயத்தீர்வை குறையும்போதே, பல பொருள்களின் விற்பனை விலையும் கம்மியாகும். இவ்வாறு குறைக்கப்படும் வித்தியாசத்தை அப்படியே மக்களுக்குத் தராவிட்டால், அந்தத் துறைக்கான ஆயத்தீர்வை மீண்டும் அதிகமாக்கப்படும் என்று நிதி அமைச்சர் தொழிற்சாலைகளை எச்சரிக்கவேண்டும்.

இதனால் அரசுக்கு என்ன ஆகும்? அரசின் வருமானம் நிச்சயம் குறையும். ஆனால், அரசு ஒரே ஆண்டில், பொருளாதாரம் சரியானவுடன் தனது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள, ஆயத்தீர்வை, சேவை வரி ஆகியவற்றை மீண்டும் அதிகமாக்கிக்கொள்ளலாம்.

* பெட்ரோல் விலையைக் குறைப்பதா, வேண்டாமா? இந்தக் கேள்விக்கு எனது பதில் - இப்போதைக்குக் குறைக்கவேண்டாம் என்பதே. பொதுமக்கள் பெட்ரோலை மிக மோசமான முறையில் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது, விலை ஏற்றம் காரணமாக, நிறைய சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். எனவே உடனடியாக மாற்றவேண்டியதில்லை.

இதனால் பணவீக்கம் சற்றே அதிகமாக இருக்கும்தான். ஆனால் வேறு பல காரணங்களால் மிக அதிகமாக ஆன பணவீக்கம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியுள்ளதால், பெட்ரோல்/டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்கவேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.

Monday, November 17, 2008

இட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு

80% என்பதே எங்கள் இலக்கு - பத்ரி

தமிழில் எழுத எந்த மென்பொருளைப் பாவிக்கிறீர்கள் என்று இட்லிவடை பதிவில் ஒரு வாக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவை வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்டிருந்தார். நான் அதற்கு பதில் சொல்லியிருந்தேன். அவை மேற்சொன்ன பதிவில்.

Sunday, November 16, 2008

அடிதடி, ரகளை

நான் 6-வதோ, 7-வதோ படிக்கும்போது, பள்ளி மாணவர்கள் அனைவரையும் சினிமா பார்க்க அழைத்துக்கொண்டு போனார்கள். படம் ஏதோ அடாசுப் படம்தான். ஏதோ பிரச்னை. என்னவென்று நினைவில்லை. ஆனால் எங்கள் மாணவர்கள் அன்று படம் பார்க்கமுடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது சில மாணவர்கள், தெருவில் இருந்த சரளைக் கற்களை எடுத்து தியேட்டரை நோக்கி வீசத் தொடங்கினர். நானும் என் கைக்குக் கிடைத்த கற்களை வீசி எறிந்தேன். ஆனால் திடுமென பயம் வந்தது. யாராவது பார்த்துவிட்டு, என் தந்தையிடம் போய் சொல்லிவிடுவார்களோ என்று. அவரும் அதே பள்ளியில் ஆசிரியராக இருந்தார். ஓடிவிட்டேன்.

பின் 1983 இலங்கைக் கலவரங்களை அடுத்து, தமிழகம் எங்கும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு இருந்தது. அப்போது நான் 8-ம் வகுப்பு. நாகை தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட்டமாகக் கிளம்பி சுற்றி இருக்கும் ஒவ்வொரு பள்ளியாக மூடச் சொல்லியபடிச் சென்றனர். முக்கியமாக 11, 12-ம் வகுப்பு மாணவர்கள். 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நானும் அந்தக் கூட்டத்தோடு சென்றேன்.

எங்களது பள்ளிக்கூடம் இருக்கும் அதே தெருவில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. ரவுடிப் பசங்கள் வருகிறார்கள் என்பதால் உடனடியாக இழுத்துமூடிவிட்டனர். பின் அங்கிருந்து சி.எஸ்.ஐ இடைநிலைப் பள்ளி (1-8 வகுப்பு வரையிலானது). அங்கும் பள்ளிக்கு விடுமுறை விட்டாயிற்று. அடுத்து தேசிய தொடக்கப் பள்ளி (1-5 வகுப்பு). இதுவும் எங்கள் தேசிய மேல்நிலைப் பள்ளியின் அதே நிர்வாகத்தின் கீழ் இயங்குவது. ஏதோ காரணத்தால் அவர்கள் பள்ளியை மூடவில்லை. அங்கு எங்கள் மாணவர்கள் ரகளை செய்தனர். தலைமை ஆசிரியர் கடுப்பாகி, மூட மறுத்துவிட்டார். உடனே கல்லடி. அதற்கு அடுத்த தெருவில்தான் என் வீடு. அதனால் கொஞ்சம் பயத்தோடு நான்கு கற்களை விட்டெறிந்துவிட்டு, நைஸாகக் கழற்றிக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

அதற்கு சில வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, கருணாநிதியைக் கைதுசெய்தார். பள்ளிக்கூடம் முடிந்து நான் பெருமாள் கோவில் தேர் நிலையைத் தாண்டி வீட்டுக்குப் போகவேண்டும். தேருக்குப் பின், புளியமரத்தடி பாபுவும் அவரது நண்பர்கள் சிலரும் நின்று முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

கெரசின் பாட்டிலெல்லாம் ரெடியா? ரெடி. நாளைக்குக் காலைல...

அடுத்த நாள் வேளாங்கண்ணி செல்லும் 2-ம் நம்பர் பஸ்ஸைக் கொளுத்திவிட்டனர். பாபு பின்னர் நகராட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு, எங்கள் வார்ட் கவுன்சிலர் ஆனார். எங்கள் தெருவுக்கு குப்பைத்தொட்டி கொண்டுவந்தார். தண்ணீர்ப் பஞ்ச காலத்தில் டேங்கரில் தண்ணீர் கொண்டுவந்தார். பின் அகாலத்தில் - 35 வயதுக்குள்ளாக - மாரடைப்பால் காலமானார்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒருமுறை ஸ்டிரைக் நடந்தது (2 நாள்). காரணம் ஞாபகத்தில் வரவில்லை. பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. அப்போதும் கல் எறிந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் போகவில்லை. என் தந்தை விடவில்லை.

நாகப்பட்டிணத்தில் உருட்டுக் கட்டைகள், கத்திகள், இரும்புத் தடிகள் என்று பள்ளி, பாலிடெக்னிக்கில் நான் பார்த்ததில்லை, கேட்டதில்லை. சாதிரீதியாக மாணவர்கள் சண்டை போட்டதாகவும் சரித்திரம் இல்லை.

திருவாரூர் காலேஜில் நிறைய ஸ்டிரைக் நடக்கும். சண்டைகள் எல்லாமும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கத்திக் குத்து நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படித்தான் அங்கே படித்த நண்பன் பசுபதி சொல்லி ஞாபகம். மீண்டும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

என் எதிர்வீட்டில் இருந்த நண்பன் சுரேஷ், சிதம்பரத்துக்கு அருகில் இருந்த ஒரு பாலிடெக்னிக்கில் படித்தான். அங்கே ஹாஸ்டலில் நடந்த ஊழலைக் கண்டுபிடித்த காரணத்தால் “நிர்வாகம்” ஒரு மாணவனை ஆள் வைத்து அடித்துவிட்டது. அது பிரச்னையாகி, Students Federation of India அங்கே ஸ்டிரைக் செய்தது. அப்போது மாணவர்கள் பலருக்கும் “நிர்வாகத்தினரிடமிருந்து” உயிர் மிரட்டல் வந்தது என்று சுரேஷ் சொல்லியிருக்கிறான். (சில வருடங்களுக்குப் பின்னர், நான் அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்றபோது, சுரேஷ், தஞ்சாவூரில், லாரி ஏற்றிக் கொல்லப்பட்டான். அது வேறு கதை.)

1980கள் வரையில் தமிழகக் கல்லூரிகளில் பெரிய அளவில் வன்முறைகள் நிகழ்ந்திருக்கும் என்றும், 1990களில் ராகிங் தவிர்த்து, பெரும்பாலும் வன்முறைகள் குறைந்துவிட்டதாகவும் எனக்கு ஓர் எண்ணம். 2000-த்துக்குப் பிறகு, மாணவர்கள், தாம் உண்டு, தம் வேலையுண்டு என்று படித்து, பாஸ் மார்க் வாங்கி, அல்லது தெருவில் அலைந்து ஃபெயில் ஆகி, ஏதோ வேலைக்குப் போய், மிடில் கிளாஸ் மாதவனாக, மதியழகனாக, மாடசாமியாக வாழ்க்கையைக் கவனிப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.

வியாழன் காலையில் அந்த எண்ணம் முற்றிலுமாகத் தகர்ந்தது.

***

இன்று ஜெயா பிளஸ் அல்லது மைனஸில் ரபி பெர்னார்ட், இந்த விஷயத்தைப் பற்றி பத்திரிகையாளர் ஞாநி, பாஜகவின் எச்.ராஜா மற்றும் கலிவரதன் (யார் என்று தெரியவில்லை) என்ற ஓர் அரசியல்வாதி ஆகியோருடன் பேசினார்.

கலிவரதன் பேசியதிலிருந்து அவர் அதிமுககாரர் என்பதுபோலத் தெரிந்தது. கருணாநிதி ஆட்சியில் வன்முறை எப்போதும் பெருகும் என்று பேசினார். இது அபத்தம். அம்மா ஆட்சியில் நாட்டில் அமைதி நிலவியது என்றால் மூன்று கல்லுரி மாணவிகளை பஸ்ஸோடு எரித்தது எதில் சேர்த்தி? கலிவரதன் பேசும்போது, திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் சில மாணவர்கள் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து, நாய் ஒன்றின் கழுத்தில் டாக்டர் என்று எழுதிய பலகையை மாட்டியதால் கோபமடைந்த கருணாநிதி, போலீஸை ஹாஸ்டலுக்குள் அனுப்பி, மாணவர்களை அடித்து துவம்சம் செய்தார் என்றார். இதை விசாரணை செய்த கமிஷன் வெளியிட்ட அறிக்கையிலிருந்தும் மேற்கோள் காட்டினார். விவரம் அறிந்தவர்கள் விளக்கவும். நான் கேள்விப்பட்டதில்லை.

ராஜா, காவல்துறை என்ற அமைப்பின்மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டால் அவர்கள் சட்டத்தைத் தங்கள் கைக்குள் எடுத்துக்கொள்வார்கள் என்றார். கொஞ்சம் இதை அவர் சங்க பரிவாரங்களுடன் பகிர்ந்துகொண்டால் நல்லது.

இந்த விஷயத்தை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி வரதராஜன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்கிறார். திமுக கூட்டணியில் தொடர்ந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாரோ, தெரியாது.

எதிர்க்கட்சிகள் சகட்டு மேனிக்கு கருணாநிதியை வாங்கு வாங்கியுள்ளன. அவர் இன்னமும் முரசொலியில் கவிதை எதையும் எழுதவில்லை.

***

கட்சிகள் யாருமே இந்த விஷயத்தைச் சரியாக அணுக விரும்பவில்லை என்று தெரிகிறது. திமுகவோ ஆதரவுக் கட்சிகளோ வாயே திறக்கவில்லை. எதிர்க்கட்சிகள், எல்லாவற்றுக்கும் திமுகவே காரணம் என்று சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

ஆனால் “நீ அடி, நான் ஆதரவு தருகிறேன்” என்று சில அரசியல்வாதிகள் சொல்லியிருக்காவிட்டால், இரு தரப்பு மாணவர்களும் இந்த அளவுக்கு ஆயுதங்களைச் சேகரித்து, தாக்குதலில் ஈடுபட்டிருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்படித் தாக்கிக்கொள்ளும்போது, தாங்கள் எந்த சாதியினராக இருந்தாலும், கடைசியில் தங்களுடைய உயிரே போகலாம்; அல்லது படிப்பு போய், ஜெயிலில் தங்க நேரிடலாம் என்று யோசிக்கமாட்டார்களோ?

பிரச்னை வரும், அதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்; வேண்டுமென்றால் கொலையும் செய்யும் அளவுக்கு. இப்படி ஒருவர் யோசிக்கும் அளவுக்கு வாழ்வா, சாவா பிரச்னையா சட்டக்கல்லூரியில் நடந்தது? தேவர் ஜெயந்தி என்ற விழாக் கொண்டாட்டம், முத்துராமலிங்கம் என்ற தனியொரு மனிதனைக் கொண்டாடுவதாக இல்லாமல் அவர் சார்ந்த சாதியின் பெருமையை நிலைநாட்டுவதாக இருப்பதே அசிங்கம். அதில் கூட்டம் கூட்டமாக அரசியல்வாதிகள் கலந்துகொண்டு ரம்ஜான் கஞ்சி குடிப்பது போல பாவலா செய்வது அதைவிட அசிங்கம். அதற்கு போஸ்டர் அடித்துக் கொண்டாடுவது கல்லூரிகள் வரையிலா வரவேண்டும்?

சரி, ஒழியட்டும். குடியாட்சி முறையில் இதைச் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. போஸ்டரிலோ, பிட் நோட்டீஸிலோ அம்பேத்கர் பெயர் விடுபட்டுப் போனால், அதனால் அம்பேத்கர் என்ற மாமேதைக்கு என்ன களங்கம் வந்துவிடமுடியும்? பதிலுக்கு தலித் மாணவர்கள் மற்றுமொரு பிட் நோட்டீஸோ, போஸ்டரோ போட்டுவிட்டுப் போயிருக்கலாம்.

எனது பயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியால் தலித்களுக்கு தென் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதுதான். ஆதிக்க சாதியினரை எதிர்த்துப் போராடுவது என்பது எளிதான காரியமல்ல. பொருளாதாரத்தைத் தங்கள் கைகளில் வைத்து, அதன்மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது ஆதிக்கசாதிகளின் இயல்பு. ரிசர்வ்ட் பஞ்சாயத் தொகுதிகளில் தலித்கள் தலைவர்களாக வருவதைத் தடுக்க எவ்வளவு ஆவேசத்துடன் செயல்பட்டனர்? திமுக ஆட்சியில்தான் இதற்கு வழி கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழக தலித் கட்சிகள், தங்கள் மக்களுக்கு சரியான வழியைக் காட்டவேண்டும். எங்கெல்லாம் ஆதிக்க சாதி வன்முறை வெடிக்கிறதோ, அங்கே தங்கள் மக்களைக் காக்க, வலுவான அரண்களை அமைக்கவேண்டும். பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட்டால் அவற்றை உடைக்க, தங்கள் மக்களைக் காக்க, வலுவான பொருளாதார அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும். ஆனால் அதே நேரம், சட்டக்கல்லூரி போல், தாங்கள் முன்னின்று அடிதடிகளில் இறங்கக்கூடாது. அது counterproductive ஆகிவிடும்.

விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியும் தமிழகத்தில் காலூன்றத் தொடங்கியுள்ளது. பல விஷயங்களில் இந்தக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஒன்றுபட்ட அஜெண்டாவை உருவாக்குவது நல்லது.

பிற கட்சிகள் செய்யவேண்டியது இது ஒன்றைத்தான். தலித்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், பிற சாதியினரைத் தூண்டிவிட்டுக் குளிர் காயாதீர்கள்.

Saturday, November 15, 2008

NHM புத்தகங்கள் இலவசமாக!

ஆம், எங்களது புத்தகங்கள் முற்றிலும் இலவசமாக உங்களுக்கு வேண்டுமா?

கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!
  1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
  2. கீழே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
  3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
  4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
  5. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 800 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமரிசனம் எழுதவேண்டும்.
  6. விமரிசனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமரிசனம் எழுதியாகவேண்டும். 800 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
  7. புத்தக விமரிசனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
  8. விமரிசனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
  9. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
  10. ஒரு புத்தகத்தைப் படித்து, விமரிசனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
  11. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
  12. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
  13. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
என்ன, ரெடியா?

புத்தகப் பட்டியல்:
  1. நான் வித்யா - லிவிங் ஸ்மைல் வித்யா
  2. ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - ஏ.ஆர்.குமார்
  3. கடல்புரத்தில் - வண்ணநிலவன்
  4. உயிர்ப் புத்தகம் - ஸி.வி.பாலகிருஷ்ணன்
  5. ஒண்டிக்கட்டை உலகம் - சிபி கே. சாலமன்
  6. களை எடு - கே.நம்மாழ்வார்
  7. அடடே பாகம் 1 - மதி
  8. என் பெயர் எஸ்கோபர் - பா.ராகவன்
  9. டௌன் சிண்ட்ரோம் - டாக்டர் ரேகா ராமச்சந்திரன்
  10. ஊனமுற்றோருக்கான கையேடு - டாக்டர் எஸ். முத்து செல்லக்குமார்
  11. ஹெச்.ஐ.வி. கொல்லப் பிறந்த கொடுங்கோலன் - நாகூர் ரூமி
  12. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - டாக்டர் எஸ். முத்து செல்லக்குமார்
  13. அற்புதக் கோவில்கள் - கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்
  14. இது உங்கள் குழந்தைகளுக்கான மகாபாரதம் - ஜெயா சந்திரசேகரன்
  15. ரகுவம்சம் - ஆ.வே.சுப்ரமணியன்
  16. ஜெயகாந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஒலிப்புத்தகம் (MP3 ஆடியோ சிடி)
  17. புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஒலிப்புத்தகம் (MP3 ஆடியோ சிடி)
  18. Heroes or Villains : Sri Lanka circa 2007 - N.Sathiya Moorthy
  19. Star Crossed - Ashokamithran (கரைந்த நிழல்கள் நாவலின் ஆங்கில மொழியாக்கம்)
  20. மகா வம்சம் - தமிழில் ஆர்.பி.சாரதி

புத்தக விருப்பத்தை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: haranprasanna@nhm.in

Friday, November 14, 2008

நல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்

நியூ ஹொரைசன் மீடியா பதிப்பித்துள்ள இரு புத்தகங்களுக்கு நல்லி - திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள் கிடைத்துள்ளன.

      

ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, K.S.சுப்ரமணியனின் மொழிமாற்றத்தில் ஆங்கிலத்தில், Once an Actress என்ற தலைப்பில் Indian Writing பதிப்பாக வெளியானது. வைசாகன் என்ற மலையாள எழுத்தாளரின் சிறுகதைகள், வைசாகன் சிறுகதைகள் என்ற பெயரில் ரகுராமின் மொழிமாற்றத்தில் தமிழில் வெளியானது. இவை இரண்டுக்கும் விருதுகள் கிடைத்துள்ளன. பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் நேரடியாகச் செல்லும் புத்தகங்களுக்கு திசை எட்டும் காலாண்டிதழ், நல்லி குப்புசாமி செட்டியாருடன் சேர்ந்து, இந்த விருதுகளை ஆண்டுதோறும் வழங்குகிறது.

இந்த மாதம் 23-ம் தேதி மதுரையில் இந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

சுற்றுப்பாதையில் சுற்றும் நேரம்

சந்திரன் பூமியைச் சுற்றிவர சுமார் 27 நாள்கள் ஆகின்றன. இதில் சொல்லப்போனால் சந்திரனால் ஆவது ஒன்றுமில்லை. பூமியில் இருந்து சந்திரன் எந்தத் தொலைவில் உள்ளதோ (அதாவது அந்த கிட்டத்தட்ட வட்டப்பாதையின் ஆரம்) அங்கே ஒரு ஸ்பூன், கரண்டி, பாறாங்கல் என்று எதைவேண்டுமானாலும் சுற்ற விடுங்கள். அது பூமியைச் சுற்றிவர அதே 27 நாள்கள்தான் எடுத்துக்கொள்ளும். துல்லியமாகச் சொல்வதானால் 27 நாள், 7 மணி, 43.1 நிமிடம்.

அதேபோலத்தான் பூமி சூரியனைச் சுற்றிவருவதும். சுமார் 365 நாள்கள். (அதாவது நம் கணக்கில் ஒரு வருடம்.) சூரியனிலிருந்து இவ்வளவு தொலைவில் ஒரு பொருள் சுற்றிவருகிறது என்றால் (அதாவது அதன் நீள்வட்டப் பாதை - அண்மை நிலை, தொலைவு நிலை - இரண்டும் சரியாகத் தெரிந்திருக்கவேண்டும்) அது ஒருமுறை சுற்றிவர இவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்லிவிடலாம்.

எதைப் பொருத்து இது அமைகிறது? பூமியை சந்திரன் சுற்றிவந்தாலும் சரி, வெந்நீர் அண்டா சுற்றிவந்தாலும் சரி, ஒரே வேகம்தான் என்றால், இந்த நேரம், சுற்றும் பொருளின் நிறையால் மாறுவதல்ல என்று தெரிகிறது. ஆனால் எந்தப் பொருளைச் சுற்றிவருகிறதோ, அதன் நிறை இதனை பாதிக்கும்.

இப்போது சந்திரயான் சந்திரனை 100 கி.மீ சுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது. அப்படியானால் சந்திரயான் இந்தப் பாதையில் ஒரு முழுச் சுற்று சுற்றி முடிக்க, எவ்வளவு நேரம் ஆகும்?

நான் முன்னர் எழுதிய ஒரு பதிவில், வட்டப்பாதையில் சுற்றும் ஒரு பொருளின் வேகம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சமன்பாட்டைக் குறிப்பிட்டேன். இந்த வேகம் மாறாத வேகம். திசை மட்டும் மாறும். அதே நேரம் சுற்றுப்பாதையின் நீளம் என்ன என்பதும் நமக்குத் தெரியும். ஒரு வட்டத்தின் சுற்றளவு = 2 * Pi * r அல்லவா? ஒரு முறை சுற்றிமுடிக்க ஆகும் நேரம் = நீளம் / வேகம். அதாவது, சந்திரயான் ஒருமுறை சுற்றுவரும் வேகத்தைக் கணிக்க நமக்குத் தேவையானது G என்ற மாறிலி, சந்திரனின் நிறை, சந்திரயான் இருக்கும் தொலைவு. G = 6.67 x 10-11 m3 kg-1 s-2; M = 7.36 x 1022 kg; r = 3475/2 + 100 Km = 1,837,500 m.

இந்த எண்களை சமன்பாட்டில் சேர்த்தால் கிடைக்கும் விடை: 1.962 மணி. அதாவது 1 மணி, 58 நிமிடம்.

ஆக, ஒருமுறை பூமி தன் அச்சில் தானே சுழல்வதற்குள் - 24 மணி நேரத்துக்குள் - சந்திரயான், சந்திரனை 12 முறைக்கும் சற்று அதிகமாகவே சுற்றி முடித்துவிடும்.

வட்டப்பாதைக்கான சுற்று நேரத்தைக் கணக்கிடுவது எளிது. ஆனால் நீள்வட்டப்பாதைக்கான கணக்கு சற்றே நெடியது, கடினமானதும்கூட. நீள்வட்டப்பாதையில் ஒவ்வொரு புள்ளியிலும் வேகம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் சுற்று நேரத்தின் வடிவம் மிக எளிமையானது. வட்டப்பாதைக்கான விடையில், r என்ற ஆரத்துக்கு பதில் a என்ற அரை பேரச்சு (semi major axis) வரும். அவ்வளவுதான். நீள்வட்டப்பாதையில் major axis = பேரச்சு, minor axis = சிற்றச்சு. சிற்றச்சு எதுவாக இருந்தாலும், அதனால் இந்த சுற்று நேரம் மாறுபடாது. ஒரே பேரச்சும், வெவ்வேறு சிற்றச்சுகளும் உள்ள பாதையை எடுத்துக்கொண்டாலும், அவை அனைத்திலும் சுற்றும் நேரம் ஒன்றாகவே இருக்கும்.


மேலே உள்ள படத்தில் உள்ள அனைத்துப் பாதைகளையும் ஒரு துணைக்கோள் அல்லது விண்கலம் சுற்ற ஒரே நேரத்தைத்தான் எடுத்துக்கொள்ளும்!

Thursday, November 13, 2008

சந்திரயான் - 100 கி.மீ சுற்றில்

நேற்று இரவு (புதன்கிழமை, 12 நவம்பர் 2008) சுமார் 7.00 மணிக்கு சந்திரயான் (சுமார்) 100 கி.மீ வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது. இத்துடன் சந்திரயான் திட்டம் முழு வெற்றி அடைந்துவிட்டது எனலாம். அடுத்த இரண்டு நாள்களில் அந்தக் கலத்தில் உள்ள ஒவ்வொரு கருவியாக செயலுக்குக் கொண்டுவரப்படும். தொடர்ந்து, அவை வெவ்வேறு படங்களைப் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பும்.

சந்திரயானின் உயிர் 2 வருடங்கள் என்கிறார்கள். அப்படியென்றால் என்ன பொருள்?

சந்திரயானில் கொஞ்சம் எரிபொருள் மிச்சம் உள்ளது. இந்த எரிபொருள் எதற்குத் தேவை? பூமியையோ, சந்திரனையோ ஒரு கலம் சுற்றிவந்தாலும் நாளாவட்டத்தில் அதன் பாதையில் சிறு மாற்றங்கள் ஏற்படும். இதற்குப் பல காரணங்கள்:

1. பூமியோ, சந்திரனோ, முற்றிலும் முழுமையான கோளம் கிடையாது. அதாவது மொழுமொழுவென்று அச்சில் உருவாக்கிய பிளாஸ்டிக் பந்துபோல அல்ல; சுமாராகப் பிடித்த வெல்ல உருண்டை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதனால் ஈர்ப்பு விசையில் ஆங்காங்கே சிறுசிறு மாற்றங்கள் இருக்கும்.

2. சந்திரயான், சந்திரனைச் சுற்றிவந்தாலும், பூமியின் ஈர்ப்பு இன்னமும் அங்கே ஓரளவுக்கு இருக்கும். இதனால், சந்திரயானின் பாதையில் சிறு மாற்றங்கள் ஏற்படும்.

இந்த மாற்றங்களை அவ்வப்போது அட்ஜஸ்ட் செய்யவேண்டும். அதற்கு, சந்திரயானின் மோட்டாரை அவ்வப்போது இயக்கி, வேண்டிய அளவு வேகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யவேண்டும். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த எரிபொருள் தீர்ந்துவிடும். அதன்பிறகு இந்தச் சிறுசிறு அட்ஜஸ்ட்மெண்ட்களைச் செய்யமுடியாது. அந்தக் கட்டத்தில் சந்திரயான் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரன் பாதையிலிருந்து விலகும். சுற்றிச் சுற்றி, சந்திரனின் மேல்பரப்பில் விழுந்து உடையலாம்.

பூமியின் மேல்பரப்பில் இதேமாதிரியான கதி செயற்கைக்கோள்களுக்கு ஏற்படும். ஆனால் அவை பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும்போது உராய்வினால் எரிந்து சாம்பலாகிவிடும்.

அதையும் மீறி, ஸ்கைலாப் போல சில சமயம் எரிந்த உலோகத் துண்டுகள் சில இடங்களில் விழலாம். நம் தலையில் விழாமல் இருந்தால் நல்லது.

Tuesday, November 11, 2008

திருநங்கைகள் பற்றிய ஆவணப்படம்

NDTV-யில் இரவில் 9.30-10.00 (?) நேரத்தில் Documentary 24x7 என்ற ஒரு நிகழ்ச்சி சில நாள்கள் வருகிறது. அரை மணி நேர நிகழ்ச்சி.

2-3 வாரங்கள் இருக்கும். தமிழகத்தின் திருநங்கைகள் பற்றி தமிழில் ஓர் ஆவணப்படம் (ஆங்கில சப்டைட்டில்களுடன்) இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. பிரீதம் சக்ரவர்த்தி (சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இருவருள் ஒருவர்) மோனோ ஆக்டிங் செய்தார். பல திருநங்கைகளுடன் எடுத்த பேட்டியையும், இந்த மோனோ ஆக்டிங்குடன் சேர்த்து தொகுத்துத் தந்திருந்தனர்.

பிரீதம் சக்ரவர்த்தியின் மோனோ ஆக்டிங்கை மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். நன்றாக ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். நிறைய ஆராய்ச்சிகள் செய்து இதனை எழுதியதாகக் குறிப்பிட்டார். அத்துடன் உணர்வுபூர்வமாக நடித்தும் பேசியும் காண்பித்தார். ஆணாக இருக்கும் ஒருவர் தன் கதையை விவரித்துக்கொண்டே, கடைசியில் தனக்கு ‘நிர்வாண’ அறுவை நடப்பதை தத்ரூபமாக விளக்குமாறு அமைந்திருந்தது அந்த மோனோ ஆக்டிங். (வசனங்கள் சிறு குழந்தைகளுக்கு ஏற்புடையவை அல்ல. Parental guidance required!)

பிரீதம், குறிப்பிட்ட தினத்தன்று குறி அறுப்பதை நடித்துக் காட்டியதைப் பார்த்து, சில திருநங்கைகளே அசந்துபோய்விட்டதாக ஆவணப்படத்தில் குறிப்பிட்டனர்.

திருநங்கைகளின் வாழ்க்கையைப் பற்றி ஓரளவுக்குத் தொட்டுப் போகும் இந்த ஆவணப்படம், காலக் குறைபாடு காரணமாக பலவற்றை விட்டுவிட்டது. இது சிடியாகக் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் மறக்காமல் நீங்கள் பார்க்கவேண்டும். NDTV 24x7 இதனை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யவும் வாய்ப்புள்ளது.

இதனை சென்சார் செய்யாது அப்படியே காண்பிக்கும் தைரியம் தமிழ் சானல்களிடம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

NDTV 24x7-ல் இதுவரை வேறு சில ஆவணப்படங்களையும் பார்த்துள்ளேன். எல்லாமெ உயர் தரம் என்று சொல்லமுடியாது. ஆனால் மிகவும் ஆதரிக்கப்படவேண்டிய, வரவேற்கவேண்டிய மாறுதல் இதுபோன்ற நிகழ்ச்சிகள்.

ராக்கெட் எப்படி இயங்குகிறது?

PSLV ராக்கெட் ஒரு செயற்கைக்கோளையோ அல்லது சந்திரயானையோ எப்படி பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்தபடி மேலே தூக்கிக்கொண்டு செல்கிறது? ஒரு சுற்றுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் விண்கலம் அல்லது செயற்கைக்கோளின் இயல்பு வேகத்தை எப்படி செயற்கையாக மாற்றுகிறார்கள்?

இவை இரண்டுமே ஜெட் விமானங்கள் எப்படி இயங்குகின்றனவோ அதே முறையில்தான் இயங்குகின்றன.

ஒரு நுண்துளை (nozzle) வழியாக அதிக அழுத்தமுள்ள பாய்மம் (fluid) ஒன்று பீய்ச்சப்படும்போது, அதற்கு எதிர்வினை ஒன்று இருக்கும். நாம் வீட்டிலேயே செய்து பார்க்கக்கூடிய ஒன்று பலூனை எடுத்து அதில் காற்றை நிரப்பி, வாயைக் கட்டாமல் சட்டென்று விட்டுவிடுவது. பலூனின் வாய் வழியாக காற்று வெளியேறும்போது பலூன் முன்னோக்கி (சற்றே கன்னா பின்னாவென்று சுருண்டபடி) பாயும். இது நியூட்டனின் மூன்றாவது விதியிலிருந்து வருவது. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு.

படகு ஓட்டும்போது, துடுப்பால் தண்ணீரை வலிந்து பின்னோக்கித் தள்ளுகிறீர்கள். படகு முன்னோக்கிச் செல்கிறது. அதேபோல படகில் மண்ணெண்ணெய் அல்லது டீசலால் இயங்கும் சிறு புரொபெல்லரை (உந்துகருவி) பொருத்துகிறீர்கள். புரொபெல்லர் சுழன்று தண்ணீரைப் பின்னோக்கித் தள்ளுகிறது. இதனால் விசைப்படகு முன்னோக்கி முன்னேறுகிறது.

இதேபோலத்தான் ஜெட் விமானத்திலும் நடக்கிறது. ஜெட் எஞ்சினில் நிறைய எரிபொருள் இருக்கும். எஞ்சினின் முன்புறத்தில் ஒரு சுழலி இருக்கும். சுழலி சுற்றும்போது வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுக்கும். அந்தக் காற்று அழுத்தப்படும். அதில் எரிபொருள் கலக்கப்படும். பற்றவைக்கப்படும். எரிபொருள் எரிந்து, எக்கச்சக்கமாக கரியமில வாயுவை உருவாக்கும். இந்தக் கரியமில வாயு வெளியேறுவதற்கு பல நுண்துளைகள் ஜெட் எஞ்சினின் பின்பக்கம் இருக்கும். இந்த நுண்துளைகள் வழியே வெகு வேகமாக வெளியேறும் வாயுக்கள், ஜெட் எஞ்சினைக் கடுமையான வேகத்தில் முன் நோக்கிச் செலுத்தும். இதனால் ஜெட் எஞ்சினும் அதோடு இணைந்த விமானமும் முன்னோக்கிப் பாயும். இந்தப் பாய்ச்சலை வான் நோக்கிய பாய்ச்சலாக மாற்றுவது (உயரத்தில் செலுத்துவது) எப்படி என்பதை பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கும்போது குறிப்பிட்டுள்ளேன்.

சரி, ராக்கெட் வடிவமைப்பில் என்ன வித்தியாசம்? ஜெட் விமானங்கள் பற்றகு உயரம் காற்று மண்டலத்துக்குள்ளாகவேதான் உள்ளது. சுற்றிலும் உள்ள காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் இருந்தால்தான் எரிபொருள் எரியும். ஆனால், ராக்கெட்டோ, காற்று மண்டலத்தை விட்டு அப்பால் செல்கிறது. அந்த உயரத்தில் சுற்றிலும் ஆக்சிஜன் என்பது மருந்துக்கும் கிடையாது. அப்படியென்றால் எரிபொருள் எரிய என்ன செய்வது?

கூடவே எரிபொருளை எரிக்கத் தேவையான ஆக்சிஜனையும் எடுத்துச் செல்லவேண்டும். இது மேற்கொண்டு சுமையை அதிகரிக்கும்! ஆனால் வேறு வழியில்லை. கீழே அமெரிக்க ராக்கெட் ஒன்றின் படம் உள்ளது.

பி.எஸ்.எல்.வி மட்டுமல்ல, சந்திரயானில் உள்ள எஞ்சினும் இப்படித்தான். அதில் எரிபொருளும் உண்டு. கூடவே ஆக்சிஜனும் உண்டு.

இந்த எரிபொருள் எப்படி இருக்கும்? இது திட வடிவில், தூளாக இருக்கலாம். அல்லது திரவமாக இருக்கலாம் (பெட்ரோல் போல). அல்லது வாயு எரிபொருள் ஒன்றை மிக அழுத்தத்திலும் மிகக்குறைவான வெப்பத்திலும் (அதாவது கடுங்குளிரிலும்) திரவமாக்கிச் சேர்த்து வைக்கலாம். நீர்மமாக்கப்பட்ட வாயு எரிபொருள்தான் மிக மிக அதிகச் செயல்திறன் கொண்டது. ஹைட்ரஜனை கடுங்குளிரில், கடும் அழுத்தத்தில் திரவமாக்கி, அத்துடன் ஆக்சிஜனையும் அதேபோல திரவமாக்கி எரிபொருளாகவும் ஆக்சிஜனேற்றியாகவும் எடுத்துச் செல்வதுதான் ஒரு ராக்கெட்டுக்கு மிக அதிக சக்தியைத் தரும். அந்த எஞ்சினுக்கு கிரையோஜீனிக் எஞ்சின் என்று பெயர்.

சந்திரயானில் இருப்பது கிரையோஜீனிக் எஞ்சின் கிடையாது. திரவ எரிபொருள் ஒன்றையும் ஆக்சிஜன் வழங்கி திரவம் ஒன்றையும் எடுத்துச் செல்கிறது.

***

சரி. சந்திரயான் எப்படி போகும் வழியில் வேகத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்?

ஒரு குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லும் எந்தப் பொருளுக்கும் என்று ஒரு குறிப்பிட்ட வேகம் இருக்கும். இதைக் கொடுக்கக்கூடிய சமன்பாடு இந்தப் பதிவில் உள்ளது. ஒரே அண்மை நிலை உள்ள, ஆனால் இருவேறு தொலைவு நிலைகள் உள்ள இரண்டு பாதைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

இங்கே சிறிய பாதையிலிருந்து பெரிய பாதைக்குச் செல்ல, அண்மை நிலை வரும்போது, அதன் வேகத்தை அதிகரிக்கவேண்டும். அப்படிச் செய்தால் அது சுற்றும் பாதையின் தொலைவு நிலை அதிகமாகும். இதை, கீழ்க்கண்ட சமன்பாட்டை வைத்தே பார்க்கலாம்.
இங்கே G என்பது மாறாத ஓர் எண். m என்பது நடுவில் இருக்கும் கனமான பொருளின் எடை. பூமியைச் சுற்றிவரும்போது பூமியின் எடை. சந்திரனைச் சுற்றி வந்தால் சந்திரனின் எடை. a என்பது நீள்வட்டப்பாதையின் semi major axis. அதாவது அண்மை நிலை, தொலைவு நிலை ஆகியவற்றுடன் பூமியோ சந்திரனோ எதைச் சுற்றுகிறதோ அதன் விட்டத்தையும் கூட்டி, அதை இரண்டால் வகுத்தால் வரும் தொகை. சிறிய நீள்வட்டத்தைச் சுற்றும்போது அண்மை நிலையில் இருக்கும் வேகம், பெரிய நீள்வட்டத்தைச் சுற்றும்போது இருப்பதைவிடக் குறைவாக இருக்கும். இந்த வேகங்களைத் துல்லியமாகக் கணக்கிடலாம். இதிலிருந்து வேக மாறுதலையும் துல்லியமாகக் கணக்கிடலாம்.

உதாரணத்துக்கு சந்திரனை, சந்திரயான் சுற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். சந்திரனின் நிறை 7.36 x 1022 kg. ஈர்ப்பு மாறிலி G என்பது 6.67 x 10-11 m3 kg-1 s-2. சந்திரயான் 200 - 7,502 கி.மீ பாதையில் சுற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். சந்திரனின் விட்டம் 3475 கி.மீ. அப்படியானால் இந்தப் பாதையில் a = (200+7502+3475)/2 = 5588.5 கி.மீ. இந்தப் பாதையில் சுற்றும்போது, அண்மை நிலையில் (200 கி.மீ) இருந்தால் அப்போது r = 3475/2 + 200 = 1937.5 கி.மீ.

இவை அனைத்தையும் மேலே உள்ள சமன்பாட்டில் போட்டால் கிடைப்பது: அண்மை நிலை வேகம் = விநாடிக்கு 2.05 கி.மீ.

இப்பொது தொலைவு நிலையை சுமார் 250 கி.மீ என்று குறைக்கவேண்டும். அப்படியானால், 200-250 கி.மீ பாதைக்கான a என்ன? = (200+250+3475)/2 = 1962.5 கி.மீ. r என்பது முன்போலவே 1937.5 கி.மீ. இதை சமன்பாட்டில் நிரவினால் கிடைப்பது, வேகம் = விநாடிக்கு 1.6 கி.மீ.

அதாவது அண்மை நிலை (200 கி.மீ) வரும்போது, அதற்கு இருக்கும் வேகம் விநாடிக்கு 2.05 கி.மீ. இதனை விநாடிக்கு 1.6 கி.மீ என்று குறைக்கவேண்டும். பிரேக் எதுவும் கிடையாது, பிடிப்பதற்கு. எனவே எரிபொருள் எஞ்சினை இயக்கி, போகும் வழி எதுவோ அந்தத் திசையில் எரிந்த வாயுக்களை வெளியேற்றுவார்கள்.

எவ்வளவு நேரம் இந்த மோட்டாரை இயக்குவது? எவ்வளவு எரிபொருளை எரிப்பது? இது சற்றே கடினமான கணக்கு. இதற்கு சந்திரயானின் நிறை என்ன என்று தெரியவேண்டும். அந்த மோட்டாரின் உந்துசக்தி என்ன என்று தெரியவேண்டும். அதைக்கொண்டு, எவ்வளவு நேரம் எரிபொருளை எரிக்கவேண்டும் என்று கணக்கிடவேண்டும். அதை நாம் இங்கே பார்க்கவேண்டாம்.

மற்றொன்று: இவ்வாறு மோட்டாரை இயக்கி வேகத்தைக் குறைப்பது ஒரு நொடியில் நிகழ்ந்துவிடாது. உதாரணமாக, தொலைவு நிலையை 7502 கி.மீலிருந்து 250 கி.மீக்கு மாற்ற மோட்டாரை 866 விநாடிகள் இயக்கவேண்டியிருந்தது. இதற்குள் சந்திரயான் தனது சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் 1400 கி.மீ தூரம் நகர்ந்திருக்கும் என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! இதனால் என்ன ஆகும் என்றால் அதன் பாதையில் அண்மை நிலையிலும் சற்றே மாற்றம் நிகழ்ந்திருக்கும். அதனால்தான் இந்தப் பாதையில் அண்மை நிலை 200 கி.மீ என்பதிலிருந்து 187 கி.மீ என்று ஆகிவிட்டது.

Monday, November 10, 2008

சந்திரயான் - பாதை மாற்றம்

நேற்று இரவு (ஞாயிறு, 9 நவம்பர் 2008) சுமார் 8.00 மணி அளவில், சந்திரனைச் சுற்றி வரும் சந்திரயானின் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது சந்திரனைச் சுற்றிவரும் அதன் பாதையின் அண்மை நிலை 200 கி.மீ என்றும் தொலைவு நிலை 7,502 கி.மீ என்றும் இருக்கும். அடுத்து தொலைவு நிலை குறைக்கப்படும். பின் அண்மை நிலை, பின் மீண்டும் தொலைவு நிலை குறைக்கப்பட்டு, 100 கி.மீ முழு வட்டப்பாதையாக மாற்றப்படும்.

அப்டேட்: திங்கள் இரவு சுமார் 10.00 மணிக்கு, சந்திரயானின் பாதையில் மற்றுமொரு மாற்றம் செய்யப்பட்டது. இப்போது அதன் தொலைவு நிலை 255 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அண்மை நிலை 187 கி.மீ. இனி மேலும் இரண்டு பாதை மாற்றங்கள் நிகழும். ஒன்று இன்று இரவு நடக்கும். அப்போது அது 100-187 கி.மீ பாதைக்கும், அடுத்த மாற்றத்தில் 100 கி.மீ வட்டப்பாதைக்குமாக மாறும்.

Sunday, November 09, 2008

Good Will Hunting

இரண்டு நாள்கள் முன்னால், அகஸ்மாத்தாக சானல்களைத் திருப்பும்போது, கண்ணில் பட்டது இந்தப் படம். கேள்விப்பட்டிருந்தாலும் பார்த்ததில்லை. முதல் சில நிமிடங்கள் தவிர்த்து முழுதாகப் பார்த்தேன்.

திரைக்கதைக்கும் துணை நடிகருக்குமான ஆஸ்கர் விருதுகள் பெற்ற படம். பத்து மில்லியன் டாலர் செலவு செய்து, 225 மில்லியன் டாலர் வசூல் செய்த படம்.

மிக நல்ல ஞாபக சக்தியும் கணிதச் சிக்கல்களைத் தீர்க்கும் சக்தியும் பெற்ற (ஆனால் அதிகம் படிக்காத) ஓர் இளைஞன் (வில் ஹண்டிங்க்), பாஸ்டன் எம்.ஐ.டி-யில் குப்பை கூட்டும் வேலை செய்கிறான். அங்கே ஃபீல்ட்ஸ் மெடல் பெற்ற ஒரு கணிதப் பேராசிரியர் (ஜெரால்ட் லாம்போ) பார்வையில் படுகிறான். பேராசிரியர், அவனை எப்படியாவது வழி செலுத்தி, பெரிய கணித மேதை ஆக்குவது என்பதில் ஆர்வமுடன் இருக்கிறார்.

வில் ஹண்டிங்கின் பின்னணி சோகமானது. சிறுவயதில் அவனது ‘மாற்றுத் தந்தை’ அடித்து, உதைத்து துன்புறுத்தியிருக்கிறார். இப்போது அநாதையாக வளருகிறான். கட்டுமானத் தொழிலில் கூலி வேலை செய்கிறான். எம்.ஐ.டியில் குப்பை கூட்டும் வேலையும் செய்கிறான். பாஸ்டனின் ஏழைக் குடியிருப்பில் வசிக்கிறான்.

ஹண்டிங்க், ஓர் அடிதடியில் ஈடுபட்டிருக்கும்போது, காவலர் ஒருவரையும் அடித்துவிட, சிறை செல்ல நேருகிறது. சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க, ஜெரால்ட் லாம்போ, அவனைத் தன் இருப்பில் வைத்து, உளவியல் நிபுணரிடம் சிகிச்சை எடுக்க வைப்பதாக நீதிமன்றத்தை வேண்டிக்கொள்கிறார். அனுமதி கிடைக்கிறது.

ஹண்டிங்க் வாழ்க்கையில் காதல் வருகிறது. காதலியை அடைகிறானா? உளச் சிக்கல் சரியாகிறதா? பேரா. லாம்போ காட்டிய வழியில் பெரும் பதவிகளைப் பெறுகிறானா? இந்தக் கேள்விகளுக்கான விடை படத்தில்.

***

படத்தில் என்னைக் கவர்ந்தது சர்வசாதாரணமாக அறிவியல், கணிதப் பெயர்களை வசனங்களில் சேர்த்திருப்பது. ஃபீல்ட்ஸ் மெடல் என்றால் என்ன என்று பொதுவாக சராசரி இந்தியர்கள் யாருக்கும் தெரியாதோ, அதைப்போன்றே சராசரி அமெரிக்கர்களுக்கும் தெரியாது. ஆனால், திரைக்கதை/வசனம் எழுதுபவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அந்த இடத்தில் இந்த வசனம் பொருத்தமாக இருக்கும் என்றால் அதைச் சேர்க்கவேண்டும், மக்கள் சற்றே யோசித்து, ஒருவழியாகப் புரிந்துகொள்வார்கள் என்பது அவர்கள் கருத்து. தமிழ்ப் படத்தில் இதைக் காணவே முடியாது.

ஸ்ரீனிவாச ராமானுஜன், எவரிஸ்ட் கலுவா ஆகியோரின் பெயர்கள் சர்வசாதாரணமாக வருகின்றன. (ராமானுஜன் பற்றிச் சொல்லும்போது அவர் ஒரு குடிசையில் வாழ்ந்தார் என்கிறார் பேரா. லாம்போ. ஆனால் ராமானுஜன் வாழ்ந்தது காரைக் கட்டடங்களிலும் ஓட்டு வீடுகளிலும்தான். விட்டுவிடுவோம்!) ‘தியடோர் கசின்ஸ்கி’ பெயர் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. ஆனால் உனாபாம்பரின் பெயர் அமெரிக்கர்களுக்கு சற்றே அதிகம் ஞாபகத்தில் இருக்கும்.

பொதுவாகவே மிக ஷார்ப்பான வசனங்கள். ஓரிடத்தில் National Security Agency-யிலிருந்து வில் ஹண்டிங்கை வேலைக்கு எடுக்க வருகிறார்கள். அப்போது நடக்கும் உரையாடல்:

என்.எஸ்.ஏ: நீ ஏன் எங்களிடம் வேலைக்குச் சேரக்கூடாது?

ஹண்டிங்: ஏன் கூடாது என்று சொல்லட்டுமா? ஒரு நாள் என் மேசையில் உடைக்கமுடியாத ஒரு கிரிப்டாலஜி துப்பைக் கொடுப்பீர்கள். நானும் ஐந்து நிமிடத்தில் அதை உடைத்துவிடுவேன். அது எங்கோ ஓர் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கிராமத்தில் உள்ள எதிரிகளின் இடத்தைப் பற்றிய தகவலாக இருக்கும். உடனே அந்தத் தகவல் நமது படைகளுக்கு அனுப்பப்படும். ராணுவத்தில், தெற்கு பாஸ்டன் பகுதியைச் சேர்ந்த என் நண்பன் ஒருவன்தான் வீரனாக இருப்பான். வீரர்கள் அந்த கிராமத்தில் போய் சரமாரியாகக் குண்டுகளை வீசி அழிப்பார்கள். எதிரிகளோடு சேர்ந்து அப்பாவி கிராம மக்களும் கொல்லப்படுவார்கள். ஏன், கவனமாக பொதுமக்களைத் தவிர்த்து, எதிரிகளை மட்டும் கொல்லக்கூடாதா என்று கேட்பீர்கள். ஆனால் அப்படிச் செய்வதால் தங்களது உயிருக்கு அபாயம் வரும் என்பதால் பயந்து, தாறுமாறாகச் சுடுவார்கள் வீரர்கள். போர் முடிந்து வீட்டுக்கு வரும்போது, இங்கிருக்கும் தொழிற்சாலைகள், அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு அதே கிராமத்துக்கு இடம் மாற்றப்பட்டிருக்கும் என்பதை என் நண்பன் கண்டுபிடிப்பான். அவனுக்கு வேலை போயிருக்கும். இதற்கிடையில் சண்டையை முன்வைத்து பெட்ரோல் விலை ஏறியிருக்கும். ஆக, என் நண்பனுக்கு வேலையும் கிடையாது, விலை அதிகமுள்ள பெட்ரோல் வாங்கக் காசும் கிடையாது. ...

இப்படிச் செல்லும் அந்த வசனம் (குத்துமதிப்பாக).

மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வாதம் என்றாலும், அமெரிக்க அரசுமீதான இந்த விமரிசனத்தைவிடக் காட்டமாக வேறு ஏதாவது விமரிசனத்தை யாராவது வைக்கமுடியுமா?

Saturday, November 08, 2008

சந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது

இன்று மாலை சுமார் 5.00 மணி அளவில், சந்திரயான் விண்கலம் சந்திரனைச் சுற்றுமாறு நமது விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்.

இந்த சந்திரயான் பயணத்திலேயே மிக முக்கியமான நிகழ்வு இதுதான். இப்போது இந்த மிஷன், வெற்றியடைந்துள்ளது என்று தைரியமாகச் சொல்லலாம். இனியும் சில நிகழ்வுகள் பாக்கியுள்ளன என்றாலும், அவற்றை இந்திய விஞ்ஞானிகள் சாதிப்பதில் பெரும் பிரச்னை ஏதும் இருக்கமுடியாது. இப்போது சந்திரயான், சந்திரனைச் சுற்றி, 504 - 7,502 கி.மீ நீள்வட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டிருக்கிறது.

இங்கிருந்து அடுத்த சில நாள்களுக்குள் இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 100 கி.மீ வட்டப் பாதைக்கு மாற்றப்படும்.

இன்றுதான் சந்திரயான் இதுவரை இல்லாத ஆளவுக்கு சந்திரனுக்கு மிக அருகில் வந்தது. இதுவரையில் பூமி ஒன்றின் ஈர்ப்பு மட்டும்தான் சந்திரயானைச் சுற்றவைத்துக்கொண்டிருந்தது. ஆனால் இன்று சந்திரனும் அருகில் வந்ததால், சந்திரனின் ஈர்ப்பு விசையும் சேர்ந்துகொண்டது. இதன் விளைவாக, இந்திய விஞ்ஞானிகள் இன்று செய்த சிலவற்றைச் செய்திருக்கவில்லை என்றால், சந்திரயானின் வேகம் அதிகரித்து, அது எங்கோ பூமியின் பரப்பை விட்டுச் சென்று காணாமல் போயிருக்கும்.

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். இங்கே பாதை 1 தான் 1,000 - 3,80,000 கி.மீ சுற்றுப்பாதை. இதில்தான் சந்திரயான் 4 நவம்பர் 2008 அன்று சுற்றத்தொடங்கியது. சந்திரன் பாதை 2-ல் எப்போதும் பூமியைச் சுற்றிவருவது. அப்படியே விட்டிருந்தால், கவண் கல்லைப் போல, சந்திரனைத் தாண்டும்போது, சந்திரயானின் வேகம் அதிகரிக்கும். விநாடிக்கு 2 கி.மீ என்ற வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் சந்திரயான், சந்திரனின் ஈர்ப்பும் சேர்த்து வேகத்தை அதிகரித்து, பாதை 3-ல் பயணித்திருக்கும். பிறகு மீளவே முடியாத வெளியில் எங்கோ, எங்கோ காணாமல் போயிருக்கும்.

இதைத் தடுக்க, சந்திரயானின் உள்ளே இருக்கும் லிக்விட் அபோஜீ மோட்டாரை இயக்கி, வேகத்தைக் கணிசமாகக் குறைத்தனர். விநாடிக்கு 1.5 கி.மீ என்று வேகம் குறைந்ததும், சந்திரயான், சமர்த்தாக பாதை 4-க்கு வந்துவிட்டது. இனி இது சந்திரன் பூமியைச் சுற்றிவர, சந்திரனைச் சுற்றியபடியே செல்ல ஆரம்பிக்கும். ஒரு ஜாங்கிரியின் வடிவத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இனிமேல் சந்திரயானின் பாதை என்பது ஒரு ஜாங்கிரி.

நடுவில் இருப்பது பூமி. அதைச் சுற்றி இருக்கும் வட்டப்பாதை சந்திரனின் பாதை. சுற்றி இருக்கும் சற்றே அசிங்கமாக வரையப்பட்ட ஜாங்கிரிதான் சந்திரயான் சுற்றும் பாதை - பூமியுடன் ஒப்பிட்டால். (சூரியனுடன் ஒப்பிட்டால் சந்திரனின் பாதையே ஜாங்கிரி. அப்படியென்றால் சூரியனுடன் ஒப்பிட்டால் சந்திரயானின் பாதை ஜாங்கிரிக்குள் ஜாங்கிரி! சுழலும் பால்வீதி அண்டத்துடன் ஒப்பிட்டால்? ஒரே ஃப்ராக்டல் ஜாங்கிரிதான்.)

இப்போடு முதற்கொண்டே சந்திரயான், சந்திரனைப் படம் பிடித்து அனுப்ப ஆரம்பிக்கும். ஆனால் 100 கி.மீ பாதைக்குள் வந்துவிட்டால், இன்னும் அழகாக, துல்லியமாகப் படம் பிடிக்க ஆரம்பிக்கும்.

அது இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நேரு பிறந்தநாள் பரிசாக இருக்கும்.

Wednesday, November 05, 2008

செய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி

அமெரிக்க எலெக்ஷன் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், பராக் ஒபாமாதான் வெற்றி பெறுவார் என்று கிட்டத்தட்ட மெக்கெய்ன் தவிர அனைவருமே ஒப்புக்கொண்டாகிவிட்டது.

ஜார்ஜ் புஷ் + பொருளாதார வீழ்ச்சி + கடன் நெருக்கடி என்று எல்லாமாகச் சேர்ந்து மெக்கெய்னை வீழ்த்தியுள்ளது என்று ரிபப்ளிகன் கட்சி ஆசாமிகளே தொலைக்காட்சியில் வந்து சொல்ல ஆரம்பித்தாயிற்று. அத்துடன் செனேடர் தேர்தல், உறுப்பினர் சபை தேர்தல் என்று அனைத்திலும் ரிபப்ளிகன் கட்சிக்கு அடி, உதை.

சன்னாசி, ஆலிவர் ஸ்டோனின் 'W' என்ற படத்துக்கு எழுதியுள்ள விமரிசனத்தில் ஜார்ஜ் புஷ்ஷை, “செய்யும் தொழிலையெல்லாம் சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி” என்று வர்ணிக்கிறார்.

ஈராக் முதற்கொண்டு அமெரிக்கப் பொருளாதாரம்வரை சப்பட்டை பஞ்சர்பாண்டி உருவாக்கியிருக்கும் உலக மகா சொதப்பல்களை, பராக் ஒபாமா என்ற அதிக அனுபவம் இல்லாத ஒருவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது அடுத்த நான்கு வருடங்களுக்கான ஹாலிவுட் திரைக்கதை.

ஒபாமாவின் அமைச்சரவை அணி எப்படிப்பட்டதாக இருக்கும்? ஒபாமாவின் பொருளாதாரத் திட்டங்கள் எவ்வளவு வேகமாக அடிபட்ட அமெரிக்காவுக்கு ஆயிண்ட்மெண்ட் தடவிவிடும்? வெளியுறவுக் கொள்கையில் முரட்டுத்தனம் காட்டாமல் எந்த அளவுக்கு அமெரிக்கா பண்புடன் நடந்துகொள்ளும்? ஈராக்கிலிருந்து எவ்வளவு வேகத்தில் படைகளைச் சுருட்டிக்கொண்டு வெளியேறும்? அமெரிக்கர்களின் ஊதாரித்தனத்தைக் குறைப்பதில்; வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதில் எந்த அளவுக்கு முயற்சிகளை எடுக்கும்? பிரச்னை பூமிகளில் எண்ணெயை ஊற்றுவதற்கு பதில் தண்ணீரை ஊற்றி அணைக்க எந்த அளவுக்கு ஆயத்தங்களை மேற்கொள்ளும்?

Tuesday, November 04, 2008

சந்திரயான் - Lunar Transfer Trajectory

இன்று (4 நவம்பர் 2008) காலை 4.56 மணிக்கு சந்திரயான் 1,000 - 3,80,000 கி.மீ சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதே பாதையில் செல்லும்போது, சனிக்கிழமை (8 நவம்பர் 2008) அன்று சந்திரயான், சந்திரனுக்கு வெகு அருகில் வரும். அன்றுதான் இந்த ஆபரேஷனின் மிக முக்கியமான கட்டம்.

அன்றுதான், Lunar Insertion Manouvre எனப்படும் சந்திர ஈர்ப்புக்குள் சந்திரயானைச் செலுத்தும் வேலை நடைபெறும்.

நாடெங்கும் வெடிக்கும் குண்டுகள்

கடந்த ஓராண்டில் இந்தியாவில் குண்டு வெடிக்காத பெரிய நகரமே இல்லை என்று சொல்லலாம். அதுவும் அடுத்தடுத்த சில நாள்களில் ஜெய்ப்பூர், பெங்களூரு, அஹமதாபாத், டில்லி என்று தொடராக வெடித்து இந்தியாவையே பீதியில் ஆழ்த்திய கட்டம். இந்த குண்டுகள் தொடர்ந்து இப்போது அசோமில் வெடித்து கலவரத்தை அதிகப்படுத்துகின்றன.

தீவிரவாதிகள் சிலர், அரசைப் பணியவைக்க அல்லது பொதுமக்களிடையே பீதியைக் கிளப்ப, இதுபோன்ற நகர குண்டுவெடிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். Urban terror.

பொதுவாக இந்தியாவில் குண்டு வைப்பவர்கள் என்றால் அவர்களை ஒரு வகைமாதிரிக்குள் அடக்கிவிட முடியும். காஷ்மீர் பயங்கரவாதிகள். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஆதரவு. உள்ளூர் முஸ்லிம் அமைப்புகளுடன் (சிமி) உறவு. இதுவே வடகிழக்கு என்றால் உல்ஃபா. பங்களாதேஷ் உளவு அமைப்பு உதவியுடன்.

இந்த நிலையில்தான் மஹாராஷ்டிராவில் சில இந்துத் தீவிரவாதிகள் ஒரு குண்டுவெடிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடந்துள்ள அனைத்து குண்டுவெடிப்புகளுமே ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் முஸ்லிம்கள்மீது வெறுப்பு வருவதற்காகச் செய்துவருபவை என்று சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்கெனவே சொல்லிவருகின்றன. தமிழ் வலைப்பதிவுகளிலேயே இப்படிச் சொல்லும் பல பதிவுகளைக் காணலாம். ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பு இதில் ஈடுபடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட இந்து வெறியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு நிறையவே உள்ளது.

மாலேகாவ் மசூதியில் குண்டு வைத்தது சில இந்துக்களாக இருக்கலாம். அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் அதற்கான தண்டனையைப் பெறவேண்டும். ஆனால் வழக்கு முடிவதற்கு முன்னமேயே, சிவசேனை மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியும் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது.

பாஜகவின் கோபிநாத் முண்டே, இந்துக்கள் என்றுமே இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டதில்லை என்கிறார். உல்ஃபா என்பது இந்துக்கள் நிறைந்த தீவிரவாத இயக்கம்தானே? இந்து என்றால் குண்டு வைக்கமாட்டான்; முஸ்லிம் என்றால் எப்போதும் குண்டு வைப்பான் என்ற எண்ணம் அபத்தமானது.

அதே நேரம், இந்தியாவின் பெரும்பான்மை நகர குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய தீவிரவாதிகளால்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. காஷ்மீர், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, சிமி ஆகியவற்றின் கை பல இடங்களில் தெரிந்துள்ளது. ஆனால் இதைத் தடுக்க வெறுமனே பாதுகாவலை அதிகப்படுத்தினால் மட்டும் போதாது. இந்தப் பிரச்னை உருவாகும் அடிப்படையை ஆராய்ந்து அதைக் களைய முற்படவேண்டும்.

கடந்த 50 வருடங்களில் காஷ்மீர் பிரச்னையைக் கையாள்வதிலும் வடகிழக்கு பிரச்னைகளைக் கையாள்வதிலும் இந்தியா சரியாகச் செயல்படவில்லை. இந்தப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துதல், அரசியல் ஊழலைக் குறைத்தல், உள்ளூர் கலாசாரம் அடிபட்டுவிடாமல் பாதுகாத்தல், கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துதல், அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் - இவற்றை ஒழுங்காகச் செய்தாலே போதும்.

சிறுபான்மை பயங்கரவாதம் பயத்தால் வருவது. இதனை காவல்/ராணுவத் தாக்குதலால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இது பயத்தை அதிகரிக்கவே செய்யும். ஆனால் பெரும்பான்மை (இந்து) பயங்கரவாதம் வெறுப்பால் வருவது. அதனை எதிர்கொள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது இது. தடியால் அடித்தால்தான் அடங்கும் இது.

Monday, November 03, 2008

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை

2003-ல் வாங்கிய புத்தகங்கள். இத்தனை வருடங்களாகப் படிக்காமல் விட்டது. திடீரென எடுத்து ஒரு மூச்சில் இரண்டையும் படித்து முடித்தேன்.

செம்மீன், தோட்டியின் மகன். இரண்டுமே மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதி, இரண்டையுமே சுந்தர ராமசாமி தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். முதல் புத்தகம் சாஹித்ய அகாடெமி பதிப்பாகவும், இரண்டாவது காலச்சுவடு பதிப்பாகவும் வெளியாயின.

செம்மீனைத்தான் முதலில் எடுத்துக்கொண்டேன்.

நீர்க்குன்றம் மீனவக் கிராமத்தின் மீனவன் செம்பன்குஞ்சு, மனைவி சக்கி ஆகியோரின் மகள் கறுத்தம்மா. இளம்பெண் கறுத்தம்மா பரீக்குட்டி என்கிற முஸ்லிம் பையன் மேல் அவளையும் அறியாமலேயே காதல் வயப்படுகிறாள். பரீக்குட்டி - ‘சின்ன முதலாளி’ - மீன், கருவாடு வாங்கி விற்பவன்.

செம்பன்குஞ்சுவுக்கு வேலையாளாக இல்லாமல், சொந்தமாகத் தோணி வாங்க ஆசை. ஆனால் அதற்கேற்ற பணம் அவனிடம் இல்லை. எனவே பரீக்குட்டியிடம் கருவாட்டை ரகசியமாக, காசு கொடுக்காமல் வாங்கி, அதனை விற்று, அதன்மூலம் பணம் திரட்டுகிறான். பரீக்குட்டி, கறுத்தம்மா மீதுள்ள காதலால், இதனை அனுமதிக்கிறான்.

செம்பன்குஞ்சு தோணி வாங்கியபின், முற்றிலும் மாறிய மனிதனாகிவிடுகிறான். பரீக்குட்டியின் ‘கடனை’ அடைப்பதில்லை. பரீக்குட்டியும் அதைக் கடனாக நினைக்காமல் திரும்பக் கேட்பதில்லை. கறுத்தம்மாவுக்கு மட்டும் மனது உறுத்துகிறது.

பக்கத்து ஊர் திருக்குன்றத்தில் உள்ள அனாதைப் படகோட்டி பழனி, மிகத் திறமைசாலி. அவனைத் தன் பெண்ணுக்கு மணமுடித்து, அவனை வீட்டோடு மாப்பிள்ளையாகத் தங்கவைத்தால், தோணியை ஓட்டி நிறைய சம்பாதிக்கலாம் என்பது செம்பன்குஞ்சுவின் எண்ணம்.

கறுத்தம்மா திருமணம் நடக்கிறது. ஆனால் அதற்குள் ஊருக்கே, கறுத்தம்மா - பரீக்குட்டி காதல் தெரிந்துவிடுகிறது. பழனிக்கும் அரசல் புரசலாகத் தெரியும். பரீக்குட்டியின் வியாபாரம் அதற்குள் நொடித்துவிடுகிறது. அவன் ஏகப்பட்ட கடனில் மூழ்குகிறான். பித்துப் பிடித்தவன்போல இரவெல்லாம் பாடிக்கொண்டே அலைகிறான்.

பழனி, மணம் முடித்ததும், கறுத்தம்மாவைத் தன்னோடு அழைத்துச் செல்கிறான். மாமனார் வீட்டில் தங்க மறுக்கிறான். செம்பன்குஞ்சு - பழனி உறவு கெட்டுவிடுகிறது. மகள் தன்னைவிட்டுப் பிரிந்த சோகத்தில் சில மாதங்களுக்குள் அவளது தாய் சக்கி இறந்துபோக, அந்தச் செய்தியைச் சொல்ல யாரும் திருக்குன்றம் வருவதில்லை. பரீக்குட்டி மட்டும் அங்கு வந்து விஷயத்தைச் சொல்கிறான்.

செம்படவர்களிடையே ஒரு நம்பிக்கை - மனைவி ஒழுக்கமானவளாக இருந்தால்தான், கடலுக்குப் போன கணவன் உயிரோடு திரும்புவான் என்று. பரீக்குட்டி திருக்குன்றம் வரை வந்து சென்றது விஷமிகளை நிறையப் பேசவைக்கிறது. இதனால், அவனது தோழர்கள் பழனியை கடலுக்குக் கூட்டிச் செல்ல மறுத்துவிடுகிறார்கள். அவனோடு கடலுக்குப் போனால், பழனியை விழுங்கும் கடல் கடவுள், அவர்களையும் கொன்றுவிடலாம் என்று பயம்.

பழனி, மனைவியின் நகையை விற்று சிறு தோணியும் தூண்டிலும் வாங்கி ஒண்டியாக மீன் பிடிக்கிறான். பழனி - கறுத்தம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

கறுத்தம்மாவின் தந்தை செம்பன்குஞ்சு வேறொருத்தியை மணம் செய்துகொள்கிறான். அவனது தொழில் நசித்துப் போகிறது. சொல்லப்போனால், அந்தக் கடலில் யாருக்குமே மீன் கிடைப்பதில்லை. எங்கும் பஞ்சம், கஷ்டம். செம்பன்குஞ்சுவின் இரண்டாம் மனைவிக்கு முதல் மணத்தால் பிறந்த மகன், பணம் கேட்டுத் தாயை வற்புறுத்த, அவள் வீட்டில் பணம் திருடுகிறாள். அடுத்து நடக்கும் பிரச்னையால் கறுத்தம்மாவின் தங்கை பஞ்சமி வீட்டைவிட்டு ஓடி அக்காளிடம் வருகிறாள்.

அக்காளும் தங்கையும் ஊர்க் கதைகளையெல்லாம் பேசும்போது, பழனி ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்கிறான். அப்போது கறுத்தம்மா பரீக்குட்டியைப் பற்றி விசாரிப்பதைக் கேட்டுவிடுகிறான். கடும் கோபத்துடன் அவளை வற்புறுத்திக் கேட்க, கறுத்தம்மா, தனக்கு பரீக்குட்டி மேல் உள்ள காதலைச் சொல்லிவிடுகிறாள்.

அன்று இரவு பழனி, தனது சிறு தோணியில் நடுக்கடலுக்குச் சென்று சுறா மீனைப் பிடிக்க முயற்சி செய்கிறான். அதே இரவு பரீக்குட்டி கறுத்தம்மா வீடு வந்து அவளுடன் உறவு கொள்கிறான். அடுத்த நாள் சுறாவுடன் போராடிய பழனி உயிர் துறந்த சடலமாகக் கிடைக்கிறான். கறுத்தம்மாவும் பரீக்குட்டியும் பிணமாகக் கரை சேருகிறார்கள்.

***

அடுத்து தோட்டியின் மகன் கதை, நாளை. தொடர்ந்து இரு கதைகளைப் பற்றிய என் சிந்தனைகள்.

Sunday, November 02, 2008

அனில் கும்ப்ளே

இந்தியாவின் கிரிக்கெட் கேப்டன் அனில் கும்ப்ளே, இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே © AFP via Cricinfo.com
இப்போதிருக்கும் வீரர்களில் டெண்டுல்கருக்கு அடுத்து சர்வதேச கிரிக்கெட் விளையாட வந்தவர் இவர். அணியின் மூத்தவர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆகஸ்ட் 1990-ல் ஆடத் தொடங்கினார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் ஆட ஆரம்பித்திருந்தார்.

இந்தியாவின் மோசமான உலகக் கோப்பைத் தோல்வியை அடுத்து, 2007-ல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். ராகுல் திராவிட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய காரணத்தால், கும்ப்ளே டெஸ்ட் கேப்டன் ஆனார்.

தொடர்ந்த தோள்பட்டை காயங்கள் காரணமாகவும், இன்று நடந்து முடிந்த டெல்லி டெஸ்டில் பட்ட விரல் காயத்தாலும் ஓய்வெடுக்க முடிவு செய்ததாக அறிவித்தார். ஆனால் அதற்கும் மேலாக ஒன்று அவர் மனத்தை உறுத்தியிருக்கவேண்டும். மொஹாலியில் தனது முதல் டெஸ்டில் விளையாடிய அமித் மிஷ்ரா என்ற லெக் ஸ்பின்னரின் பந்துவீசும் திறமை.

தான் தொடர்ந்து விளையாடினால், அமித் மிஷ்ராவால் விளையாட முடியாது என்று கும்ப்ளேவுக்குத் தெரியும். தனது உடல் இனியும் ஒத்துழைக்காது; இந்தியாவுக்கு தான் அளிப்பதைவிட, அமித் மிஷ்ராவோ, பியுஷ் சாவ்லாவோ மேலும் நன்றாகப் பந்துவீசி சேவையைத் தரமுடியும் என்ற எண்ணம் கும்ப்ளேவுக்கு நிச்சயம் தோன்றியிருக்கவேண்டும்.

***

கடந்த 18 ஆண்டுகளில், கும்ப்ளே அளவுக்கு யாருமே - டெண்டுல்கர் கூட! - இந்தியாவுக்கு ஆட்டங்களை வென்றுகொடுத்தது கிடையாது.

கும்ப்ளேயின் பங்களிப்பு இரண்டுவிதமான ஆடுகளங்களில் இருந்துள்ளது. இந்தியாவின் டிசைனர் சுழற்பந்துவீச்சு மைதானங்களில். அசாருதீன் - வடேகர் கூட்டணியில், மணற்குவியலை ஆடுகளம் என்று சொல்லி இந்தியா தொடர்ச்சியாக எதிரணிகளை அடித்து நொறுக்கிய கட்டம். [விளக்கம்: 1990களில் அசாருதீன் இந்திய அணியின் கேப்டனாகவும் அஜித் வடேகர் பயிற்சியாளராகவும் இருந்தனர். அப்போதுதான் இதுபோல ஸ்பின் அதிகமாக எடுக்கும் மணற்குவியல் ஆடுகளங்கள் அதிகமாகத் தயாராக்கப்பட்டன. இந்தியா வரும் எந்த நாடும் ஸ்பின்னர்களால் தோற்கடிக்கப்படும். இந்திய அணியில் ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே ஒப்புக்கு இருப்பார். 3 ஸ்பின்னர்கள் விளையாடுவார்கள். கும்ப்ளே அதில் ஒருவர்.]

ஆடுகளத்தில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றியிருக்க மாட்டார்கள். புல்லைக் களிமண்ணுடன் சேர்த்துப் பிசைந்து அழுத்தமானதாக ஆக்கியிருக்க மாட்டார்கள். இதனால் இரண்டாம் நாளிலிருந்தே மேல்பரப்பில் மண் உதிர ஆரம்பிக்கும். அதில் விழும் பந்து, விழுந்தபிறகு சரேலென எழும்பும். பந்தில் கொடுக்கப்படும் சுழற்சியில் பந்து எப்படி எகிறும், எந்தத் திசையில் திரும்பும் என்று சொல்லமுடியாது. அதிலும் கும்ப்ளே வீசும் வேகத்தில், எதிராளி திக்குமுக்காடிப் போவார்.

ஆனால், கும்ப்ளே இந்த இடத்தில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவான நல்ல பவுன்ஸ் உள்ள ஆடுகளங்களிலும் சோபித்தார். ஷேன் வார்ன் அளவுக்கு இல்லை என்றாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார்.

ஒரு வலது கை லெக் ஸ்பின் சுழற்பந்து வீச்சாளர், மணிக்கட்டைத் திருப்பி அதன்மூலம் பந்துக்கு சுழற்சியைக் கொடுப்பார். பொதுவான பந்து, வலதுகை ஆட்டக்காரரின் கால் திசையில் விழுந்து, ஆஃப் திசையை நோக்கி வெளியே செல்லும். பந்து வலமிருந்து இடமாகச் சுழலும் (anti-clockwise). பந்து தரையில் விழும்போது, அதில் உள்ள தையல் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தரையில் படும். எந்த அளவுக்குப் பந்தில் சுழற்சியைக் கொடுக்கிறாரோ அந்த அளவுக்கு தரையில் விழுந்த இடத்திலிருந்து வெளியே செல்லும் கோணம் அதிகமாக இருக்கும். இதுதான் லெக் ஸ்பின்னரின் ஸ்டாக் பந்து. இந்தப் பந்தின் பெயரும் லெக் ஸ்பின்னர்தான் (leg spinner).

ஆனால் ஒரு லெக் ஸ்பின் பந்துவீச்சாளரின் அம்புறாத்தூணியில் மேலும் பல அம்புகளும் உண்டு.

கூக்ளி (googly) என்று சொல்லப்படும் பந்து, லெக் ஸ்பின்னர் போடுவதைப் போலவே இருக்கும். ஆனால் கடைசி நேரம், மணிக்கட்டை வேறுவிதமாகத் திருப்பி, பந்துக்கு இடமிருந்து வலமான சுழற்சியைத் தருவது (clockwise). அல்லது, கடைசி நேரம் மணிக்கட்டைச் சுழற்றாமல், விரலைச் சுழற்றுவதால் இடமிருந்து வலம் சுழற்சியைத் தருவது. இது ஆஃப் ஸ்பின் போல, வலதுகை மட்டையாளருக்கு ஆஃபில் விழுந்து உள்ளே வரும்.

டாப் ஸ்பின்னர் (top spinner) என்பது மற்றொரு பந்து. இது சாதாரண லெக் ஸ்பின்னர் போலவே போடப்படுவது. ஆனால் பந்தின் தையல், வீசும் திசைக்கு நேராக இருக்கும். பந்தின் சுழற்சி வலமிருந்து இடமாக இருக்கும். மணிக்கட்டால் சுழற்றப்படும் பந்து இது. பந்தின் சுழற்சி நேராக இருப்பதால், பந்து தரையில் பட்டதும் சராலென எழும்பும். பந்து விழும் இடமும் சற்றே அளவு குறைவாக இருக்கும். பக்கவாட்டில் நகர்வு இருக்காது.

ஃப்ளிப்பர் (flipper) எனப்படுவது டாப் ஸ்பின்னருக்கு நேர் மாறானது. தையல் நேராக இருக்கும். ஆனால் சுழற்சி இடமிருந்து வலமாக இருக்கும். எனவே பந்து கீழே விழுந்ததும் மட்டையாளர் எதிர்பார்க்கும் அளவுக்கு எழும்பாது.

லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் அதிகமாகப் பயன்படுத்துவது ஃப்ளைட் (flight) எனப்படும் மிதவை. பந்தைக் காற்றில் மிதக்குமாறு தூக்கி எறிவது. இதைச் சரியாகப் பயன்படுத்தினால், பந்து காற்றில் மிதந்து வந்து சரேலென ‘டிப்’ ஆகும்; அதாவது கீழே இறங்கும். கொஞ்சம் தவறு செய்தாலும் பந்து ஃபுல் டாஸ் (full toss) ஆகிவிடும். ஃப்ளைட் கொடுக்கவேண்டும் என்றால் பந்தை வீசும் வேகம் குறைவாக இருக்கவேண்டும்.

கும்ப்ளே, பொதுவாக டாப் ஸ்பின்னர்களைத்தான் தனது ஸ்டாக் பந்தாக வைத்திருந்தார். நிறைய ஃப்ளிப்பர்களையும் கூக்ளிகளையும் வீசுவார். லெக் ஸ்பின்னர்களைக் குறைவாகத்தான் வீசுவார். அவர் வீசும் பந்தின் வேகம் அதிகம். அதனால் அவரிடம் ஃப்ளைட் குறைவு. அதனால் லூப் குறைவு.

கும்ப்ளே அதனாலேயே ‘ஆசாரமான’ லெக் ஸ்பின்னர் என்று கருதப்படவில்லை.

கும்ப்ளேயின் பலம் அவரது துல்லியம். அத்துடன் அலுக்காமல் சளைக்காமல் வீசிக்கொண்டே இருப்பது. அதிக ரன்கள் தராமல் வீசிக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் எதிராளியின் விக்கெட் விழத்தானே செய்யும்?

கும்ப்ளே ஓடிவந்து, ஒரு குதி குதித்து வீசுவார். அவரது பந்துகளும் டாப் ஸ்பின்னராக இருப்பதால் எழும்பிக் குதித்துத்தான் வரும். அதனால் ‘ஜம்போ’ என்று (விக்கெட் கீப்பர்) நயன் மாங்கியாவால் அழைக்கப்பட்டார். அப்போதிலிருந்தே ‘கமான் ஜம்போ’ என்று கும்ப்ளேயை விக்கெட் கீப்பர்கள் உற்சாகப்படுத்தத் தொடங்கினர்.

கும்ப்ளே டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஓர் இன்னிங்க்ஸில் பத்து விக்கெட் எடுத்தார் என்பதைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. ஆனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கும்ப்ளே மட்டையால் பெற்ற டெஸ்ட் சதம்.

இந்திய விளம்பரதாரர்கள் பொதுவாகவே மட்டையாளர்களுக்குச் சாதகமானவர்கள். ஓரிரு சதம் அடித்தால் போதும்; மட்டையாளர்களுக்கு பணமும் புகழும் குவிய ஆரம்பிக்கும். ஆனால் பந்துவீச்சாளர்களை யாரும் சீண்டுவதில்லை. இந்த வருத்தம் கும்ப்ளேவிடம் நிறையவே உண்டு.

இந்தியாவின் பல ஸ்பின்னர்கள் திடீரென வானில் தோன்றும் எரி நட்சத்திரங்களாக இருந்து, விரைவில் கருகிக் காணாமல் போயிருக்கிறார்கள். முக்கியமாக லெக் ஸ்பின்னர்கள். நரேந்திர ஹிர்வானி, லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் - உடனே ஞாபகத்துக்கு வரும் இரண்டு பெயர்கள். கும்ப்ளே அப்படி ஆகாமல் பார்த்துக்கொண்டார். எப்போதும் ஒளிரும் நட்சத்திரமாக இருந்தார்.

வலதுகை ஆஃப் ஸ்பின்னர்கள் (ஹர்பஜன் சிங், வெங்கடராகவன்) அல்லது இடதுகை ‘ஆசார’ ஸ்பின்னர்கள் (பிஷன் சிங் பேதி, திலீப் தோஷி) - இருவருமே விரலால் பந்தை ஸ்பின் செய்பவர்கள். இவர்கள் அதிக காலம் ஆட்டத்தில் இருப்பார்கள். ஆனால் கொத்து கொத்தாக விக்கெட் எடுப்பார்கள் என்று சொல்லமுடியாது.

வலதுகை மணிக்கட்டு ஸ்பின்னர்கள் (இடதுகை மணிக்கட்டால் பந்துவீசுபவர்கள் வெகு குறைவு!), மிக அதிக நாள்கள் விளையாட்டில் இருக்கமாட்டார்கள். ஆனால் விளையாடும் காலத்தில் அதிகம் விக்கெட் எடுப்பார்கள். ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே இருவரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். இதில் ஷேன் வார்ன் வீசுவதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாகப் பந்துவீசுபவர் கும்ப்ளே.

இருவரும் சமகாலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது லெக் ஸ்பின்னின் பொற்காலம்.

கும்ப்ளே இந்தியாவுக்காக அதிகம் சாதித்த லெக் ஸ்பின்னர் மட்டுமல்ல. இந்தியாவுக்காக மிக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தவர். 132 ஆட்டங்களில் 619 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். அடுத்த நிலையில் இருக்கும் கபில் தேவ், 131 டெஸ்ட்களில் 434 விக்கெட்டுகளை மற்றுமே பெற்றிருந்தார் என்பதைக் கவனியுங்கள். இவர்கள் இருவரையும் தவிர, வேறு எந்த இந்தியப் பந்துவீச்சாளரும் 300 விக்கெட்டுகளைத் தாண்டவில்லை. (ஹர்பஜன் சிங் இப்போது 299 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.)

இதிலிருந்தே கும்ப்ளே இந்தியாவுக்கு ஆற்றியிருக்கும் மகத்தான சேவை தெரியவரும்.

இனிவரும் காலங்களில் அவர் தான் எடுத்துக்கொள்ள இருக்கும் பணிகளில் சிறப்பான சாதனை புரிய வாழ்த்துகள்.

சந்திரயான் - காட்சி விளக்கம்

நேற்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சந்திரயான் விண்கலம் பற்றி மிக எளிமையான ஒரு பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் ஒன்றைக் கொடுத்தேன். அதன்பின் கேள்வி-பதில்கள் இருந்தன. இப்போதைக்கு இந்த காட்சிவிளக்கத்தை மட்டும் பதிவேற்றுகிறேன். ஆடியோ கிடைத்தால், அதை இத்துடன் இணைக்கிறேன்.
Chandrayaan
View SlideShare presentation or Upload your own.

சுமார் 30-35 பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்தது. மக்களுக்கு மேலும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நிறையக் கேள்விகளைக் கேட்டனர்.