Thursday, April 30, 2009

ஜெஃப்ரி ஆர்ச்சரின் இரு புத்தகங்கள், தமிழில்



வெஸ்ட்லண்ட் நிறுவனமும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து, ஜெஃப்ரி ஆர்ச்சரின் இரு புத்தகங்களைத் தமிழில் கொண்டுவருகிறார்கள்.

A Twist in the Tale என்ற சிறுகதைகளின் தொகுப்பு. Not a Penny More, Not a Penny Less என்ற நாவல்.

ஐஐடி சென்றபின்னர்தான் ஆங்கில பல்ப் புத்தகங்களை ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன். நான் 1990-ல் ஐஐடி ஹாஸ்டலில் கண்டெடுத்த புத்தகம் A Twist in the Tale. அதன்பின், ஜெஃப்ரி ஆர்ச்சரின் ஒரு புத்தகம் விடாமல் படித்திருக்கிறேன். A Prisoner of Birth வரை. Paths of Glory வாங்கி வைத்துள்ளேன், இன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை.

அவரது புத்தகங்களை தமிழுக்குக் கொண்டுவருவதில் நான் ஈடுபடுவேன் என்று ஒருக்காலும் நினைத்ததில்லை. இந்தப் புத்தகங்களுக்கான இந்திய மொழிகள் உரிமை (டாடா/லாண்ட்மார்க்) வெஸ்ட்லண்ட் நிறுவனத்திடம் உள்ளது. தமிழ் மாற்றம், மற்றும் இந்தப் புத்தகங்களின் விற்பனை உரிமை கிழக்கு பதிப்பகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் ஜெஃப்ரி ஆர்ச்சர் இந்தியா வருகிறார். மே 10 அன்று அவர் சென்னை லாண்ட்மார்க்கில் புத்தகங்களைக் கையெழுத்திட்டுத் தருகிறார். அப்போது அவரிடமிருந்து தமிழ்ப் புத்தகங்களையும் கையெழுத்திட்டுப் பெறலாம். இது தொடர்பான அறிவிப்பை, நேரம் முடிவானதும் தெரிவிக்கிறேன்.

சோழர் கால ஓவியங்கள்

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று மாலை, தமிழகப் பாரம்பரியம் பற்றி ஒரு சிறப்புப் பேச்சு ஒன்றை நாங்கள் நடத்திவருகிறோம். நாங்கள் என்றால் அதில் நான், அடிக்கோடியில் ஒரு சிறு துரும்பை மட்டும் கிள்ளிப்போடுபவன்.

பேராசிரியர் சுவாமிநாதன் ஐஐடி டெல்லியில் (இடையில் ஐஐடி சென்னையில் ஓரிரு வருடங்கள்) பேராசிரியராக இருந்தவர். இப்போது ஓய்வுபெற்று சென்னையில் வசிக்கிறார். அண்ணாமலை, தக்கர் பாபா (Bapa) வித்யாலயாவில் உள்ள காந்தி ஆராய்ச்சி மையத்தை நடத்திவருபவர். டி.கே.ராமச்சந்திரன், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சேர்மனாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர். கண்ணன். பிறகு நான்.

இவர்களது முன்முயற்சியில் உருவானதுதான் தமிழகப் பாரம்பரியம் என்ற குழுமம். அதன் முயற்சிதான் இந்தத் தொடர் பேச்சுகள். ஓவியம், இசை, சிற்பம், கட்டடக் கலை, மொழி, பண்பாடு போன்ற பலவற்றைப் பற்றியும் பெரும்பான்மை மக்களுக்குக் கொண்டுசெல்வது எங்கள் நோக்கம்.

இது சிறு ஆரம்பமே. செய்யவேண்டியவை நிறைய உள்ளதன. என்ன செய்வதென்று சரியாகப் புரியாத நிலையில், எங்கிருந்தாவது ஆரம்பிப்போம், பிறகு வழி தெளிவாகத் தெரியக்கூடும் என்றுதான் எங்களது முயற்சிகள் தொடங்கியுள்ளன.

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை, மாலை 5.00 மணி தொடங்கி 7.00 மணிக்குள் தி.நகர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயா பின்பக்கமாக உள்ளே நுழைந்தால் அங்கே எங்களைப் பார்க்கலாம். (கொஞ்சம் கொசு ஜாஸ்தி, எனவே அதற்கேற்ப ஆடை அணிந்துவருதல் நலம். ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு சென்று காலை ரணகளமாக்கிக்கொண்டு வந்துள்ளேன்!) பேச்சுடன் (சுமாரான) காப்பி அல்லது டீயும் கிடைக்கும்.

சரி. பீடிகை போதும். விஷயத்துக்கு வருவோம். வரும் சனி, மே 2 அன்று...

இந்திய தொல்லியல் துறையின் ஸ்ரீராமன், தஞ்சை பிருகதீஸ்வரர் கோயில் கருவறையைச் சுற்றியுள்ள, பொதுவாக யாருக்கும் செல்ல அனுமதி கிடைக்காத இடத்தில் வரையப்பட்டுள்ள சோழர் கால ஓவியங்களைப் பற்றிப் பேசுகிறார். ஸ்ரீராமன், இந்த ஓவியங்களை படமெடுத்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல் முறையாக நம்மில் பலருக்கு இந்த ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது.

இந்த ஓவியங்கள் உலகக் கலை வரலாற்றிலேயே மிகச் சிறப்பு வாய்ந்தவை என்று அறியப்படுபவை. இது உண்மைதானா என்று நீங்களே பார்த்து உணர்ந்துகொள்ள இது அரிய வாய்ப்பு.

இந்தப் பேச்சின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் (ஜூன் முதல் சனிக்கிழமை) தொடரும். அப்போது (நாயன்மார்களில் ஒருவரான) ‘சுந்தரரின் வாழ்க்கையிலிருந்து சில பகுதிகள்’ என்ற ஓவியத்தை எடுத்துக்கொண்டு, அதை ஆழ்ந்து, கூர்ந்து பார்க்கும் முயற்சியில் ஸ்ரீராமன் ஈடுபடுவார்.

ஒரு புதிய உலகை உங்களுக்குக் காண்பிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் கட்டாயம் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Wednesday, April 29, 2009

ஷெர்லாக் ஹோம்ஸ் - தமிழில்

நான் சில நாள்களாக மொழிமாற்றம் செய்துவருவது அடுத்த ஒரு வாரத்தில் புத்தகமாக வெளியாகும். ஆர்தர் கோனன் டாயில் உருவாக்கிய இந்தப் பாத்திரம், துப்பறியும் கதைகளுக்கு முன்னோடி. எட்கர் ஆலன் போ டாயிலுக்கு முன்னமே எழுதியிருந்தாலும், என்னைப் பொருத்தமட்டில், ஷெர்லாக் ஹோம்ஸ் தனித்து நிற்கிறார்.

சில ஆண்டுகளுக்குமுன், இந்தக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்குமாறு ஒருவரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் பல நாள்கள் கழித்து, ஏதோ கோபம் காரணமாக மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதன்பின் இரண்டு வருடங்கள் சும்மா இருந்தேன். பின், அலைந்து திரிந்து இன்னொருவரைப் பிடித்து, மொழிமாற்றம் செய்யச் சொன்னேன். திருப்தியாக வரவில்லை.

சரி, நானே செய்துவிடுவது என்று முடிவெடுத்து, இப்போது வர உள்ள இந்த முதல் நெடுங்கதை - A Study in Scarlet என்று 1887-ல் வெளியானது. தமிழில் இதன் பெயர்: ‘ஒரு மோதிரம் இரு கொலைகள்’.


டெமி 1/8-ல் சுமார் 184 பக்கங்கள் வரும். விலை சுமாராக ரூ. 120 ஆகும். குறைவான பிரதிகளே அச்சாவதால் அதிக விலை. இதுபோன்ற புத்தகங்களுக்கு சந்தை உள்ளதா என்று தெரியவில்லை. இருந்தால், ஒருவேளை பின்னர் விலை குறைக்கப்படலாம்.

டாயில் எழுதிய ஹோம்ஸ் கதைகள் - 4 நெடுங்கதைகள், 56 சிறுகதைகள் - அனைத்தையுமே தமிழில் மொழிபெயர்க்க உள்ளேன்.

ஸ்விஸ் வங்கியில் இந்தியப் பணம்?

அத்வானி, பாஜக முன்னிருந்து இந்தத் தேர்தலில் முக்கியமான பிரச்னையாகப் பேசுவது ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் கொண்டுபோய் வைத்திருக்கும் கோடி கோடியான வரி கட்டாத, கணக்கில் காட்டாத, ‘கறுப்புப் பணம்’.

இது உண்மையா? அப்படியே இருந்தாலும் இந்தப் பணத்தை அங்கே கொண்டுபோய் வைத்திருப்பது யார்? அந்தப் பணத்தை திரும்ப இந்தியாவுக்குக் கொண்டுவருவது என்றால் என்ன? நிஜமாகவே சாத்தியமா? ஸ்விஸ் வங்கியில் நாம் போய்க் கேட்டதுமே கொடுத்துவிடுவார்களா?

ஏன் ஒருவர் தன் பணத்தை வெளிநாட்டு வங்கி ஒன்றில் கொண்டுபோய் வைக்கிறார்? இது இந்தியர்கள் மட்டுமே செய்யும் காரியமா? அல்லது பிற நாட்டவர்களும் செய்கிறார்களா?

இப்படிப் பல கேள்விகள் இருக்கலாம்.

1 மே 2009 அன்று, மாலை 5.30 மணிக்கு, சென்னை, மைலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் தக்ஷிணாமூர்த்தி அரங்கில் ஐஐஎம் பேராசிரியர் ஆர்.வைத்யநாதனும், ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். நிகழ்ச்சி சுதேசி விழிப்புணர்வு இயக்கம், இந்தியன் லிபரல் குரூப், ராஜாஜி பொது விவகார மையம் ஆகியோர் ஆதரவில் நடைபெறுகிறது.

இதே நேரம், இந்தப் பிரச்னை தொடர்பான பல கட்டுரைகள், கேள்வி பதில்கள் கொண்ட, சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் ஆங்கிலத்திலான சிறு பிரசுரம் (நன்கொடை ரூ. 50) விற்பனைக்குக் கிடைக்கும்.

Monday, April 27, 2009

மென்பொருள் புரோகிராமர்கள் கைது

நேற்று ட்விட்டரில்/வலைப்பதிவுகளில் வந்த செய்தி: ப.சிதம்பரத்துக்கு எதிராக பிரசாரம் செய்த 50 ஐடி இளைஞர்கள் கைது. [சசி | ஸ்ரீசரண்]

இன்றைய தினமணியில் நெடுமாறன் சொல்வதாக வந்த செய்தியில், கைது என்று குறிப்பிடப்படவில்லை.
திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுவிட்டது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தை எதிர்த்து மாணவர் ராஜீவ்காந்தி போட்டியிடுகிறார். இவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட 16 மாணவர்களை காங்கிரஸ், திமுகவினர் தாக்கியுள்ளனர்.

சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அம்மாணவர்களை அழைத்து மிரட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் படும் அவஸ்தைகள் குறித்து சி.டி.கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதை தேர்தல் ஆணையமே தடுக்காத நிலையில் போலீசார் சிடிகள் பறிமுதலில் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்றார்.
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தி:
On Saturday, some Congress supporters pelted stones at 13 of them as they distributed pamphlets in Alangudi market. Police rushed to the spot and took them to the Alangudi station under the pretext of protecting them, said Rajiv, but moved them to Ganga Nagar police station in Pudukkottai around 7.30 pm, booked them under sections 188,147,153, 504 and 505 of IPC at midnight and remanded them in judicial custody on Sunday morning.
இது அதிகார துஷ்பிரயோகம். எதிர்த்து யாருமே பிரசாரம் செய்யக்கூடாது என்று அதிகாரத்தை ஏவிவிடுதல் வெட்கக்கேடு.

இந்தச் செய்தி, தி ஹிந்துவில் சுத்தமாகக் காணக் கிடைக்கவில்லை.

யாருக்கு வாக்களிப்பது?

இன்று காலை கருணாநிதியின் லேடஸ்ட் ஸ்டண்ட் - வீட்டுக்குத் தெரியாமல் உண்ணாவிரதம். இந்தியா சொல்லியும் இலங்கை கேட்கவில்லை என்று மனவேதனையாம். இந்தியா என்ன சொன்னது? இலங்கை எதைக் கேட்கவில்லை?

மறுபுறம், ஜெயலலிதா மக்களை முழு முட்டாளாக்கும் விதத்தில் “போடுங்கம்மா ஓட்டு, தமிழ் ஈழத்தைப் பார்த்து!” என்கிறார். வீரமணி சொல்கிறார்: இலங்கையில் இந்தியாவால் தலையிட முடியாது; அது உள்நாட்டுப் பிரச்னை!

கடந்த ஆறு மாதங்கள் கோமாவில் இருந்து வெளிவரும் ஒருவர் தமிழக அரசியல் வாதங்களைக் கேட்டால் அதிர்ச்சி அடைவார்.

தேர்தலைப் புறக்கணிப்பதால், மக்களின் கருத்து என்ன என்று யாராலும் புரிந்துகொள்ள முடியாது. எனவே வாக்களிக்கவேண்டும். யாருக்கு என்பதில்தான் குழப்பங்கள் இருக்கும்.

என் கருத்து இவை:

1. எந்தத் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் நிற்கிறதோ, அங்கு காங்கிரஸுக்கு எதிரான வாக்கு, அது வலுவான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு.

2. எங்கெல்லாம் மதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் நிற்கிறார்களோ, குழப்பங்கள் தவிர்த்து (பாமக vs விசி), அவர்களுக்கு வாக்கு.

3. திமுக - அஇஅதிமுக நேருக்கு நேர் போட்டி என்றால், அங்கு நல்ல சுயேச்சை வேட்பாளர் இருந்தால் அவருக்கு முதல் வாய்ப்பு. நல்ல சுயேச்சை இல்லை என்றால் (உ.ம்: மத்திய சென்னை), திமுக வேட்பாளர் நல்லவர் என்று நம்பிக்கை இருந்தால் அவருக்கு. இல்லாவிட்டால் வாக்கு அஇஅதிமுகவுக்கு.

***

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வர அஇஅதிமுக ஆதரவு தேவை என்றால், சோனியா சிறிதும் கவலைப்படாமல், திமுகவை கழற்றி விட்டுவிட்டு, ஜெயலலிதாவின் ஆதரவைக் கோருவார். ஜெயலலிதா சிறிதும் கவலைப்படாமல் ஆதரவைத் தருவார். மத்தியில் மந்திரி பதவியோ, ஈழமோ ஜெயலலிதாவின் நோக்கமல்ல. கருணாநிதியைப் பதவியில் இருந்து கீழே இறக்குவது. அதன்பிறகு மற்றவை, முடிந்தால்... நேரம் இருந்தால்... விருப்பம் இருந்தால்...

Wednesday, April 22, 2009

தேர்தல், ஐ.பி.எல், இலங்கை

ஒரு அவலம் அண்டை நாட்டில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. பல ஆயிரம் தமிழர்கள் சிங்கள் ராணுவத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் மாட்டிக்கொண்டு உயிரை இழந்து, திகிலில் வாழ்ந்துவருகின்றனர்.

இன்றும் இந்தியாவில் ஒருமித்த குரல் இல்லை. தமிழகத்துக்கு வெளியே யாருக்கும் இதைப்பற்றிய பிரக்ஞை இல்லை. இதற்காகப் பிறரை குற்றம் சொல்லக்கூடாது. நாம்தான் இந்தப் பிரச்னையைப் பற்றிய முழுத் தகவல்களையும் பிற இந்தியர்களிடம் கொண்டுசெல்லவில்லை.

பிரபாகரன் தீவிரவாதியா, இல்லையா என்ற விவாதத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இப்போதைய தேவை அது இல்லை. தமிழக முதல்வர் கருணாநிதி நாளை ஒரு வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நான் அலுவலகம் வந்து வேலை செய்யப்போகிறேன். இந்த வேலை நிறுத்தங்களும் கடிதங்களும் தந்திகளும் மாபெரும் ஏமாற்றுவேலை. அரசியல் எதிரிகளும் பத்திரிகையாளர்களும் சூழ்ச்சி செய்து தன்னை சிக்கவைத்துவிட்டனரே என்ற பதற்றத்தில், தேர்தல் நெருங்குகிறதே என்ற பயத்தில் முதல்வர் கருணாநிதிக்குத் தோன்றிய கடைசி அஸ்திரம் இது.

ஒரு பக்கம், காங்கிரஸ் சற்றும் கவலைப்படாமல் தன் பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி பேசுகிறது. அதற்குச் சரியான பதில் சொல்ல வக்கின்றி, காங்கிரஸைத் தன் விருப்பத்துக்கு இழுக்க முடியாமல், காங்கிரஸை எதிர்த்தால் தன் ஆட்சி போய்விடுமே என்ற பயத்தில் கருணாநிதியின் சொல்லும் செயலும் மதிப்பின்றிப் போய்விட்டன.

***

இலங்கை இன அழிப்பு எந்த வகையில் இந்தியாவின் தேர்தலை பாதிக்கும்? முக்கியமாக தமிழ்கத்தில் அதன் தாக்கம் எப்படியிருக்கும்? இரு பெரும் அணிகளுக்கு இடையில் கருத்தில் பெரிய மாற்றம் இல்லை. ஜெயலலிதாவுக்கும் காங்கிரஸுக்கும் பெரும் வித்தியாசமில்லை. ஆனால் வாக்குகளுக்காக ஜெயலலிதாவால் பல்டி அடிக்கமுடிகிறது. காங்கிரஸால் அது முடியவில்லை. காங்கிரஸ் இருக்கும் அதே அணியில் இருக்கும் தொல்.திருமாவளவன், ஏதோ லாஜிக்கைப் பயன்படுத்தி வைகோவையும் ராமதாஸையும் தாக்குகிறார்!

யார் அதிகப் பரிதாபம்? கருணாநிதியா அல்லது திருமாவளவனா என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினம்தான்.

தமிழனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் மாபெரும் சிக்கல். அனைத்துக் கட்சியினரும் தாங்கள்தான் ஈழத்தமிழர் நலனை முன்வைப்பவர்கள் என்று வாயால் மட்டும் சொல்கிறார்கள். ஆனால் செயலில் காட்டுவது வெறும் வேலை நிறுத்தத்தை மட்டுமே.

அரசியல்ரீதியாக, எந்த வகையில் தங்களது எதிர்ப்பை ஒருமுகப்படுத்துவது, தங்களது ஆதங்கத்தை எப்படிச் செயலாக்குவது என்று தெரியாமல் மக்கள் தடுமாறுகின்றனர். வழிநடத்த சரியான தலைவன் இல்லை. ஒரு பெரும் வாய்ப்பை ராமதாஸ், வைகோ, திருமாவளவன் இழந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது.

***

நான் போகும் பல இடங்களில், இலங்கை அவலம், இந்தியத் தேர்தல் ஆகியவற்றைவிட ஐ.பி.எல்தான் பெரிய விஷயமாக உள்ளது. விவாதங்கள் அதில்தான் ஆரம்பிக்கின்றன, அதில்தான் முடிகின்றன.

எந்த ஒரு கேளிக்கையும் இந்த அளவுக்கு மக்களை அலைக்கழிக்கக்கூடாது.

மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிக அவசரத் தேவை. அடுத்த தலைமுறையாவது இந்தத் தலைமுறையைப் போல இல்லாமல், அரசியலிலும் உலக விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டுகிறேன்.

Tuesday, April 21, 2009

பல்லாவரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி

சென்னையில் பல இடங்களிலும் தொடர்ந்து நடந்துவரும் கிழக்கின் புத்தகக் கண்காட்சி, அடுத்து பல்லாவரம் செல்கிறது.

இடம்:

TDR காம்ப்ளக்ஸ்
சிங்கப்பூர் ஷாப்பி அருகில்,
7/19, இந்தியானா காந்தி ரோடு,
பல்லாவரம்.

நாள்: ஏப்ரல் 23 முதல்.

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை.

இப்போது விருகம்பாக்கத்திலும் கண்காட்சி நடந்துவருகிறது. தி.நகரில் நடந்துவந்த கண்காட்சி நேற்றோடு முடிவுற்றது.

இதற்குமுன் கண்காட்சி நடந்த இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், திருவல்லிக்கேணி.

Monday, April 20, 2009

தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009

சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், புத்தகம் பேசுது மாத இதழ் ஆகியவை இணைந்து இரண்டு நாள் கருத்தரங்கத்தை நடத்துகின்றனர்.

நாள்: 22, 23 ஏப்ரல் 2009
இடம்: பவள விழா அரங்கம், மெரீனா வளாகம், சென்னை பல்கலைக்கழகம்

நிகழ்ச்சி நிரல்:

22/4/2009

10.00-11.00: தொடக்க விழா, நூல் வெளியீடு

11.00: அமர்வு 1: புத்தக உருவாக்கமும் வெளியீட்டு வரலாறும்
தலைமை: இரா.முத்துக்குமாரசாமி
19-ம் நூற்றாண்டில் புத்தக உருவாக்கம்: வீ. அரசு
புத்தக உருவாக்கம் 1900-1945: அ.சதீஷ்
சுதந்தரத்துக்குப் பிந்தைய காலங்கள் - புத்தக உருவாக்கம் 1947-1990: ஸ்ரீரசா
பின்காலனிய உலகமயச் சூழலில் புத்தக உருவாக்கமும் வெளியீட்டு முறைகளும் 1990-2009: எஸ்.பாலச்சந்திரன்

14.00: அமர்வு 2: புத்தகத்தின் உள்ளடக்க முறைகள்
தலைமை: ச.தமிழ்ச்செல்வன்
புனைகதைகள் 19-ம் நூற்றாண்டு: பெருமாள் முருகன்
மரபு இலக்கியங்கள்: 1900-1945: கா.அய்யப்பன்
அரசியல் குறுநூல்கள்: 1947-1990: ஆ.சிவசுப்ரமணியன்

23/4/2009

10.00: அமர்வு 3: புத்தக உருவாக்கத்தில் தொழில்நுட்பம்
தலைமை: மா.சம்பந்தன்
19-ம் நூற்றாண்டில் எழுத்து வடிவங்களும் அச்சு முறைகளும்: தமிழ்நாடன்
இரண்டாம் உலகப்போருக்கு முன்பும் பின்பும் உருவான தொழில்நுட்பம்: அசோக்குமார்
இன்றைய தொழில்நுட்பம் - இணையத்தில் தமிழ் நூல்கள்: விருபா து. குமரேசன்
நூல் வடிவமைப்பு முறைகள் - செ.ச.செந்தில்நாதன்
தமிழும் கணிப்பொறியும் - ஆண்டோ பீட்டர்

14.00: அமர்வு 4: புத்தக வெளியீடுகளும் நிறுவனங்களும்
தலைமை: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி
பத்தொன்பதாம் னூற்றாண்டுத் தமிழ் இலக்கியப் பதிப்புப் போக்குகள் - வெ.ராஜேஷ்
காலனிய காலத்தில் செய்த பதிப்புகள்: பொ.வேல்சாமி
பதிப்பு உலகில் மறைமலையடிகள் நூலகத்தின் பங்களிப்பு (1947-90): ரெங்கையா முருகன்
பிந்தைய காலனியச் சூழலில் நூல் வெளியீடு (1990-2009): மனுஷ்யபுத்திரன்

17.00 நிறைவு விழா

Thursday, April 16, 2009

வாழ்வை வண்ணமயமாக்க - ரங்க்.தே

குறுங்கடன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். http://www.rangde.org/ என்று ஒரு தளம் உள்ளது. அது, குறுங்கடன் தருவதற்கான ஒரு person-to-person தளம். பணம் உள்ளவர்கள் குறைந்தது 500 ரூபாய் அளவில், பணம் தேவைப்படுபவர்களுக்குத் தரலாம். நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு சிறு அளவு வட்டியும் கிடைக்கும்.

நான் இந்தத் தளத்தில் உறுப்பினராக இருந்து, சிறு சிறு அளவுகளில் பணம் கொடுக்கிறேன். இதனால், எங்கோ இருக்கும் மக்கள், அதிக வட்டியில் கடன் வாங்கி தங்கள் வாழ்வை அழிக்காமல் இருக்க ஏதோ சிறு அளவில் உதவி செய்யமுடிகிறதே என்று மகிழ்கிறேன்.

சில மாதங்களாகவே நான் உறுப்பினராக இருந்தாலும், பணம் ஒழுங்காகத் திரும்பக் கட்டப்படுகிறதா என்பதைப் பார்த்தபின் இதைப் பற்றி எழுத விரும்பினேன்.

இது, kiva.org என்ற தளத்தைப் போன்றதுதான். ஆனால், வரும் மாதங்களில் அதனைவிடப் பெரிதாக வளரக்கூடியது என்று தோன்றுகிறது.

இந்தியாவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், அவற்றை வழிநடத்த தொண்டு நிறுவனங்கள் என்ற பலவும் உள்ளன. கிராமீன் வங்கி மாதிரி அல்லாத, இந்தியாவுக்கே உரித்தான சுய உதவிக் குழுக்கள் வாயிலாகக் கடன் வாங்குவது என்ற முறை இந்தியாவில் பரவியுள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் பலரும் முன்வந்து சிறு சிறு தொகையாகக் கடன் கொடுக்க ஆரம்பித்தால், பல ஏழை மக்களுக்குத் தேவையான ரூ. 5,000, ரூ. 10,000 பணம் எளிதாகக் கிடைத்துவிடும்.

இதில் கடன் பெறுபவர்கள் என்ன செய்கிறார்கள், அப்படி சிலர் நிஜமாகவே உள்ளார்களா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் நாமே நேரில் சென்று பார்த்துவிடலாம். அல்லது நண்பர்களிடம் சொல்லி, விசாரிக்கலாம். முதலில் நான் பணம் கொடுத்தது திருச்சி பகுதியில் இருந்த சிலருக்கு. முடிந்தவரை தமிழகத்தில் இருக்கும் தேவைப்படுபவர்களுக்குப் பணம் தருவதாக எண்ணியுள்ளேன்.

முயற்சி செய்து பாருங்கள். அதே சமயம், caveat emptor. நாளை பணம் போய்விட்டது என்றால் என்னைக் குறை சொல்லாதீர்கள். இதை நான் வருமானம் தரும் விஷயமாகப் பார்க்கவில்லை. முதலுக்கு மோசம் இல்லாமல் இருந்தால் குறிப்பிட்ட அளவு பணத்தை இதில் ‘சுழற்சி’ செய்துகொண்டே இருக்கலாம்.

தென் சென்னை - சரத் பாபு - சுயேச்சை

மே 13 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கெடுப்பில் தென் சென்னை தொகுதியில், சரத் பாபு, சுயேச்சை வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க்கையை மாற்றும் தருணங்கள்

டார்வின்பலரது வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கும்போது, எது அல்லது யார் ஒருவரது வாழ்க்கையை மிக ஆழமாகப் பாதிக்கிறார்கள், வாழ்க்கையின் திசையையே மாற்றுகிறார்கள் என்பதை, நான் எப்போதும் கவனமாகப் பார்ப்பேன்.

டார்வினின் வாழ்க்கை வரலாறைப் படிக்கும்போது முக்கியமாகத் தெரிவது இரண்டு விஷயங்கள்: ஜான் ஸ்டீவன்ஸ் ஹென்ஸ்லோ என்ற பேராசிரியர். பீகிள் கப்பல் பயணம். ஆழ்ந்து பார்த்தால் பீகிள் கப்பல் பயணத்துக்கும் காரணம் ஹென்ஸ்லோதான்.

எனவே டார்வினின் வாழ்க்கையில் மிக முக்கியமாக இருந்தது அவர் ஹென்ஸ்லோவைச் சந்தித்தது; ஹென்ஸ்லோவின் வகுப்பில் படித்தது. ஹென்ஸ்லோவுடனான நட்பு. ஹென்ஸ்லோ இருந்திருக்காவிட்டால் டார்வின் தனது வாழ்க்கையின் உச்சிக்குப் போயிருக்கவே முடியாது. எங்கோ ஓர் ஆங்லிகன் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வாழ்க்கையை வீணாக்கியிருப்பார்.

ராமானுஜனுக்கு எப்படி ஒரு ஹார்டி கிடைத்தாரோ, அதேபோல. ஆனால் பெரும் வித்தியாசங்கள். ஹார்டியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரேயே ராமானுஜன் தட்டித் தடவி தானாகவே பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுவிட்டார். ஹார்டி, ராமானுஜனுக்கு ஃபார்மல் கணிதத்தைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். ராமானுஜன் pure mathematics என்றால் என்ன என்பதே தெரியாமல் வளர்ந்தவர்; தேற்றம், நிரூபணம் போன்றவற்றை கண்டு பின்வாங்கிப் பயந்தவர். அவற்றையெல்லாம் ராமானுஜனுக்குக் கற்றுக்கொடுத்த ஹார்டி, ஒரு கட்டத்தில் அவையே ராமானுஜனின் தறிகெட்டு ஓடும் கற்பனையை பாதித்துவிட்டதோ என்றுகூட நினைக்கலானார்.

டார்வின் பிறவியிலேயே ஜொலித்த ஆசாமியல்ல. ராமானுஜன் போல சோத்துக்கு வழியில்லாத குடும்பத்தில் பிறந்தவருமல்ல. டார்வினின் தந்தை நல்ல வசதி படைத்தவர். இங்கிலாந்து கிராமத்தில் நல்ல பெரிய வீடு, மருத்துவராக நல்ல வசதியான வருமானம். அந்த வருமானத்தை சமர்த்தாக முதலீடு செய்து ஒன்றை நான்காக்கும் திறன் எல்லாம் இருந்தது. டார்வினுக்குத்தான் படிப்பில் அவளவு நாட்டம் இல்லை. பள்ளியிலும் சரி, பின்னாள்களில் மருத்துவம் கல்லூரி அல்லது கேம்பிரிட்ஜ் படிப்பிலும் சரி, பாஸாகவே கஷ்டப்படும் நிலையில் இருந்தவர்தான்.

ஹென்ஸ்லோஇயற்கையிலேயே தாவரங்கள், விலங்குகள்மீது இருந்த ஆர்வமும், ஹென்ஸ்லோ என்ற மிகத் திறமையான ஆசிரியர் பாடம் நடத்திய முறையும் மட்டுமே டார்வினைக் காப்பாற்றின. ஹென்ஸ்லோ ‘இயற்கை வரலாறு’ (Natural History) என்ற பாடத்தை நடத்தினர். அந்தக் காலத்தில் அதுதான் உயிரியல் பாடத்தின் பெயர். ஆனால் ஹென்ஸ்லோ அத்தோடு நிற்கவில்லை.

தன் வீட்டில் வார இறுதிகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு டீ விருந்து தருவார். அங்கு இண்டெலெக்சுவல் பேச்சுகள், விவாதங்கள் இருக்கும். இன்னதான் என்றில்லாமல் அரசியலிலிருந்து அறிவியல்வரை அனைத்தைப் பற்றியும் பேசுவார்கள். தனக்கு ஆர்வம் ஏற்படுத்துமாறு பாடம் நடத்திய ஆசிரியர் மீதுள்ள அபார மரியாதையால் டார்வினும் அங்கே செல்வார். பல நேரங்களில் டார்வினைத் தனியே அழைத்துக்கொண்டு ஹென்ஸ்லோ ‘வாக்கிங்’ போவார். ஆக, வகுப்பு, தனிப்பயணம், பொது விவாதம் என்ற பல வழிகளிலும் தன் துறையின் ரகசியங்களை ஹென்ஸ்லோ டார்வினுக்குப் போதித்தார்.

அதைத் தவிர, ஆசிரியர் குறிப்பிட்டுச் சொல்லும் அனைத்துப் புத்தகங்களையும் டார்வின் வாங்கிப் படித்துவிடுவார். அல்லது குறைந்தபட்சம், புரிகிறதோ இல்லையோ, காசு கொடுத்து வாங்கி வைத்துவிடுவார்.

பீகிள் கப்பலின் பயண வாய்ப்புகூட, ஹென்ஸ்லோ மூலமாகவே டார்வினுக்குக் கிடைத்தது. ஹென்ஸ்லோவே அந்தப் பயணத்தில் செல்வதாக முடிவு செய்தார். ஆனால் அவருக்கு மணமாகி இருந்தது. அவரது மனைவி மீண்டும் கருவுற்றிருந்தார். இரண்டு ஆண்டுகள் கடலில் சுற்றவேண்டும் என்ற நிலையில் அவரது மனைவி எரிக்கும் பார்வை பார்த்ததில், அவர் சத்தமே இன்றி தன் மாணவன் டார்வினுக்கு அந்த வாய்ப்பு போகட்டும் என்று சிபாரிசு செய்தார்.

பீகிள் பயணத்தின்போதும், ஹென்ஸ்லோ, டார்வினுக்கு புத்தகங்கள் பற்றி தகவல் சொல்வார். டார்வின் தன் அண்ணனைக் கொண்டு புத்தகத்தை வாங்கச் செய்து கப்பலுக்குத் தருவித்துவிடுவார். டார்வின் தன் கண்டுபிடிப்புகள் பற்றி ஹென்ஸ்லோவுக்கு எழுதுவார், ஹென்ஸ்லோ அதற்கான பதிலை உடனே தருவார்.

கேம்பிரிட்ஜ் வகுப்பறை ஒன்றில் டார்வின் ஹென்ஸ்லோவைச் சந்தித்திருக்காவிட்டால் இந்த ஆண்டு, டார்வின் பிறந்து 200 வருடங்கள் ஆனதை நாம் கொண்டாடி இருக்கவே மாட்டோம்.

***

என் வாழ்க்கையில் இவ்வளவு ஆழமான மாற்றத்தை எந்த ஆசிரியராவது ஏற்படுத்தியிருக்கிறாரா என்று யோசித்துப் பார்த்தேன். நான் டார்வினோ ராமானுஜனோ கிடையாதுதான்:-) மேலும் நான் அகடமிக் ஆராய்ச்சித் துறையில் இல்லை. எனவே ஆசிரியர்களிடத்தில் தேடுவது நியாயமில்லாமல் இருக்கலாம்.

ஆனால், வேறு வகையில் ஒரு சிறு பொறிபோல என் வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது சீனிவாசன் என்பவர். நான் பத்தாவது படித்துமுடித்து, விடுமுறையில் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும்போது என் வீட்டுக்கு வந்த இவர் என் தந்தையிடம் வெகு சாதாரணமாகச் சொன்ன சில வார்த்தைகள்தான் என் வாழ்க்கையை மாற்றின.

அது வேறு பெரிய கதை. பின்னர் ஒரு நாள்.

***

படங்கள்: விக்கிபீடியா

Wednesday, April 15, 2009

விருகம்பாக்கம் கிழக்கு புத்தகக் கண்காட்சி

சென்னையில் பல இடங்களிலும் தொடர்ந்து நடந்துவரும் கிழக்கின் புத்தகக் கண்காட்சி, இந்த மாதம் விருகம்பாக்கம் செல்கிறது.

இடம்:

ஸ்ரீ பத்மாவதி கல்யாண மண்டபம்,
(நேஷனல் தியேட்டர் அருகில்),
93/1, ஆர்காட் ரோடு,
விருகம்பாக்கம்,
சென்னை - 92.

நாள்: ஏப்ரல் 16 முதல். (குறைந்தது 10 நாள்களுக்காவது இருக்கும். அதற்குமேல் செல்லலாம்; செல்லாமல் இருக்கலாம்.)

நேரம்: காலை பத்து மணி முதல் இரவு 9 மணி வரை.

===

இதற்குமுன், மைலாப்பூர், நங்கநல்லூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் நடைபெற்றது. சென்ற மாதம் தி.நகரில் தொடங்கிய புத்தகக் கண்காட்சி, இன்னமும் தொடர்ந்து நடந்துவருகிறது.

Friday, April 10, 2009

கோதாவரி ஹாஸ்டல் திருவிழா


நேற்று ஐஐடி மெட்ராஸ், கோதாவரி ஹாஸ்டல் மாணவர்கள் அவர்களது ஹாஸ்டல் ஆண்டு விழாவுக்கு என்னைத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள்.

எல்.கே.ஜியாக இருந்தாலும் சரி, ஐஐடியாக இருந்தாலும் சரி, ஆண்டு விழாக்களுக்குத் தலைமை தாங்குவது போன்ற கொடுமை வேறு எதுவும் கிடையாது. ஒப்புக்கு நாலு பேச்சு பேசவேண்டும். நான்கைந்து பேருக்குப் பரிசுகள் தரவேண்டும்.

எல்.கே.ஜி குழந்தைகளைக்கூட கதை சொல்லி ஈர்த்துவிடலாம். ஐஐடியில் கதைகள் சொன்னாலும் எடுபடவில்லை. இந்தப் பையன்களுக்கு என்னதான் பிடிக்கிறது என்றே தெரியவில்லை. ஏதோ கொஞ்ச நேரம் பேசினேன். பிறகு அவசர அவசரமாகப் பரிசுகள் கொடுத்துவிட்டு, ‘கலை நிகழ்ச்சிகளை’ கொஞ்சமாகப் பார்த்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டேன்.

கலை நிகழ்ச்சிகள் என்னவோ, எல்.கே.ஜி போலவேதான் இருந்தன. தமிழ் சினிமா, தெலுங்கு சினிமாப் பாடல்களுக்கு இரண்டு ‘புதுமுகங்கள்’ (முதலாம் ஆண்டு மாணவர்கள்) இடுப்பை வளைத்து ஆட்டம் போட்டனர். தாற்காலிக மேடையில் விரித்திருந்த துணி தடுக்கி கீழே விழுந்துவிடுவார்களோ என்று கவலையாக இருந்தது. ஒரு பையன் தடுக்கினாலும் சுதாரித்துக்கொண்டு தொடர்ந்து ஆடினான். பிறகு ஹெவி மெட்டல் மேற்கத்திய இசை. இங்கு எல்.கே.ஜி மாணவர்களே தேவலாம் என்றாகிவிட்டது. காட்டுக் கூச்சலே இசையாக, அதை மேலும் லட்சம் டெசிபெல்லாகப் பெருக்க ஆம்ப்ளிஃபையர்கள்.

இசை நிகழ்ச்சி தொடரும்போது, சமயோஜிதமாக ஹாஸ்டல் வார்டன் சாப்பிட அழைத்துப்போய்விட்டார். ரெஃப்ரிஜிரேஷன் அண்ட் ஏர்கண்டிஷனிங் (ஆர் அண்ட் ஏசி) பேராசிரியர் ஒருவர்தான் ஹாஸ்டல் வார்டன்களின் குழுத் தலைவர். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, நான் படித்தபோது யார் ஆர் அண்ட் ஏசி பாடம் எடுத்தார்கள் என்பது. சுத்தமாக நினைவில்லை.

***

கோதாவரி மட்டுமல்ல. ஐஐடி மெட்ராஸ் ஹாஸ்டல்கள் அனைத்துமே நிறைய மாறிவிட்டன. இரண்டாம் மாடிக்கு மேல் ஒரு மூன்றாம் மாடி வந்துவிட்டது. கிழக்கு-மேற்காக அறைகள் இருக்காது; அவற்றையும் மாற்றி மூன்று மாடிகளிலும் அங்கெல்லாம் அறைகளைக் கொண்டுவந்துவிட்டனர். ஹாஸ்டலில் மெஸ் கிடையாது. (இரண்டே இரண்டு பிஜி ஹாஸ்டல்களில் மட்டும் மெஸ் பழையபடி நடக்கிறது.) வெளியே பல உணவகங்கள் அடங்கிய ஒரு தனி இடமே வந்துவிட்டதால், மாணவர்கள் அங்கே சாப்பிடுகிறார்கள்.

பையன்கள் ஹாஸ்டலுக்குள்ளே வார்டன் இருக்கும்போதே சற்றே மறைந்து, ஆனால் தைரியமாக தம் அடித்துக்கொண்டிருந்தனர். பல பையன்களும் தங்கள் பெண் நண்பிகளுடன் வந்திருந்தனர். இதெல்லாம்தான் வளர்ச்சி.

கடைசி வருட மாணவர்கள் அமெரிக்கா ஓடுவதற்கு அவ்வளவாக ஆசைப்படுவதில்லை என்று தெரிந்தது. பலரும் ஓரிரு வருடங்கள் இந்தியாவிலேயே வேலை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளனர். ஆனாலும் உள் மனத்தில், மேற்படிப்பு படிக்க அமெரிக்கா போகவேண்டும் என்ற ஆசை உள்ளது என்று தெரிகிறது. இரண்டு வருடங்கள் சம்பாதித்தபிறகு போகலாம் என்று நினைக்கிறார்கள்.

ஐஐடி மெட்ராஸ், மூன்று அல்லது நான்காவது இடத்தில்தான் உள்ளது என்றார் கோதாவரியின் தற்போதைய வார்டனும் வேதியியல் துறை பேராசிரியருமான செல்வம். கான்பூர், மும்பை முதல் இரண்டு இடங்களில் உள்ளனவாம். ஆராய்ச்சியில் போதவில்லை போல.

மற்றபடி, மாணவர்கள் கணக்கு, கம்ப்யூட்டர் சிமுலேஷன், தியரி ஆகியவற்றில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். உடம்பு வணங்கி, கையால் ஒரு பொருளைத் தயாரிக்கும் ஆர்வம் இல்லை என்று நன்றாகத் தெரிகிறது. அது வராதவரையில் ஐஐடியின் உபயோகம் குறைவுதான்.

இன்று நம் நாடும் சமுதாயமும் எதிர்கொள்ளும் சோதனைகள் பல. அதில் பலவற்றை தொழில்நுட்பத்தின் உதவியால் வெல்லமுடியும். ஆனால், அப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் ஆர்வம் நான் படிக்கும்போதும் ஐஐடி மாணவர்களிடம் இல்லை; இன்றும் இல்லை. இது வருத்தமான விஷயம்.

தேர்தல் காமெடி - 1: சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை


பேசாமல் “யாதவக் கட்சி” என்று பெயர் வைத்திருக்கலாம். எங்கோ ஜெமினி ஃப்ளை ஓவர் அருகே பிடித்த படம்.

Monday, April 06, 2009

சர் ஜான் பால் கெட்டி (Getty)

பால் கெட்டி என்றால் ஏதோ மாட்டுப் பால் தண்ணீர் கலக்காமல் இருக்கிறது என்று நினைக்கவேண்டாம்.

சென்ற வாரம் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கிரிக்கின்ஃபோ, விஸ்டன் ஆகியவை பற்றி பேச்சு எழுந்தது. அப்போது அதில் ஈடுபட்ட பலரைப் பற்றிப் பேசவேண்டி இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர்தான் பால் கெட்டி.

இவரை நான் கடைசிவரை சந்திக்கவேயில்லை.

அமெரிக்காவில் பெட்ரோல் வியாபாரம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் கெட்டி ஆயில் என்ற நிறுவனத்தை உருவாக்கியவர் ஜே.பால் கெட்டி. அவரது மகனாகப் பிறந்தவர்தான் யூஜீன் பால் கெட்டி, பின்னர் தனது பெயரை ஜான் பால் கெட்டி என்று மாற்றிக்கொண்டார்.

ஜே.பால் கெட்டியின் பெட்ரோல் தொழில் படுவேகமாக வளர்ந்து அவர் மில்லியன்களுக்கு அதிபதியானார். அவரது மகன் ஜான் பால் கெட்டியோ, வேலையில் அவ்வளவு சமர்த்து கிடையாது. 1960களின் அமெரிக்க ஹிப்பி கலாசாரத்தில் வளர்ந்த ஜான் பால் கெட்டி, கஞ்சாவில் மிதந்தார்.

இத்தாலி நாட்டின் கெட்டி ஆயில் கிளைக்குத் தலைமை நிர்வாகியாக அனுப்பப்பட்ட ஜான் பால் கெட்டியின் வாழ்வில் மாஃபியா குறுக்கிட்டது. அவரது பையன் ஜான் பால் கெட்டி-3 இத்தாலிய மாஃபியாவால் கடத்தப்பட்டான். பையன் வேண்டுமானால் எடுத்து வை 17 மில்லியன் டாலரை என்றது மாஃபியா. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன் என்றார் கெட்டி. பில்லியனுக்கு அதிபதியான தன் தந்தையிடம் கேட்டார். அவரோ, தனக்கு மேலும் பல பேரப் பிள்ளைகள் இருப்பதாகவும், ஒருவருக்குப் பணயப் பணம் கொடுத்தால் மேலும் மேலும் கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் சொல்லிவிட்டார்.

மாஃபியா, சிறு பிள்ளையில் காதை அறுத்து தபாலில் அனுப்பிவைத்தார்கள். வேறு வழியின்றி, தாத்தா பணம் கொடுத்தார்.

ஜான் பால் கெட்டியின் வாழ்வில் போதை மருந்துகள் பெரும் அங்கம் வகிக்க ஆரம்பித்தன. நடிகை ஒருவரை மணம் புரிந்துகொண்டு போதையில் மிதக்க ஆரம்பித்தார். ஒரு நாள் அந்த நடிகை அதீதமாக போதை மருந்தை உட்கொண்டதில் இத்தாலியில் உயிரிழந்தார். காவலர்கள் ஜான் பால் கெட்டியை விசாரணை செய்ய விரும்பினர்.

தான் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்று பயந்த கெட்டி ஓடினார். அப்போது (1970-கள்) பிரிட்டன் மட்டும்தான் இத்தாலியுடன் extradition ஒப்பந்தம் இல்லாத நாடாக இருந்தது என்று நினைக்கிறேன். அதனால் பிரிட்டன் ஓடிவந்த கெட்டி depression-இல் விழுந்தார்.

அவரது தந்தையோ, பையன் உதவாக்கரை என்று அவருக்குப் பணம் எதையும் தராமல் உயில் எழுதிவிட்டு உயிரை விட்டார். மருத்துவமனையில் சேர்ந்த பால் கெட்டி உயிர் வாழ உதவியது கிரிக்கெட்.

பால் கெட்டியுடன் கூட கஞ்சா அடித்த ராக் ஸ்டார் மிக் ஜாக்கர், மருத்துவமனையில் போதைப் பழக்கத்தைக் கைவிடப் பாடுபடும் நண்பருக்கு உதவ நிறைய கிரிக்கெட் வீடியோ கேஸட்களைக் கொடுத்து உதவினார். (மிக் ஜாக்கர் கிரிக்கின்ஃபோவுடன் சேர்ந்து லைவ் வெப் ஸ்ட்ரீமிங் செய்த கதை மற்றொரு சமயம்.)

போதை மருந்து, குடி, பெண்கள் என்று வீணாகிப்போன கெட்டி, கிரிக்கெட்டின் உதவியால் உயிர் பிழைத்து மனிதரானார்.

இதற்குள் அவரது பாட்டி இறந்து, எக்கச்சக்க மில்லியன் டாலர்களை பேரனுக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பணத்தைச் செலவு செய்ததுதான் பால் கெட்டி உருப்படியாகச் செய்த ஒரே வேலை. நல்ல காரியங்களுக்கு பணத்தை வாரிவிட்டார். அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து பிரிட்டிஷ் குடிமகன் ஆனார். மார்கரெட் தாட்சரை எதிர்த்து நியூ காசில் கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது அவர்களுக்கு உதவ நிறையப் பணம் அளித்தார். கிரிக்கெட்டுக்கும் நிறையப் பணம் கொடுத்தார்.

ஜான் விஸ்டன் என்பவரால் 1864-ல் தொடங்கப்பட்ட விஸ்டன் கிரிக்கெட் அல்மனாக் நிறுவனம் நஷ்டத்தில் திண்டாடியபோது 1980களில் அந்த நிறுவனத்தை கெட்டி வாங்கி, நஷ்டத்தை தன் பணத்திலிருந்து கொடுத்துவந்தார். பின்னர் விஸ்டன் கிரிக்கெட்டர் என்ற மாத இதழ் தொடங்கி நடந்தபோது அதில் இருந்த நஷ்டத்தையும் ஈடுகட்டினார்.

கிரிக்கின்ஃபோ ஆரம்பித்து வளர்ந்த காலத்தில் குவிண்டஸ் என்ற நிறுவனத்தின் சில ஆசாமிகள், பால் கெட்டியை வளைத்து விஸ்டன்.காம் என்ற இணையத்தளத்தை ஆரம்பித்து மில்லியன் மில்லியனாகக் குவிக்கலாம் என்று திட்டம் கொடுத்தனர். அந்த முயற்சிக்குத் தேவையான சில மில்லியன்களை அள்ளிக் கொடுத்தவரும் பால் கெட்டிதான்.

ஆனால் விஸ்டன்.காம் செலவு செய்த அளவுக்கு அதைப் பார்க்க ஆள்களும் கிடைக்கவில்லை, வருமானமும் வரவில்லை. ஆனால் கெட்டியின் கைகளில் நிறையப் பணம் இருந்தது. மறுபக்கம் கிரிக்கின்ஃபோவிடம் வாடிக்கையாளர்கள் இருந்தனர்; வருமானம் ஓரளவுக்கு இருந்தது; ஆனால் கையில் நிறையக் கடன்கள். எனவே விஸ்டன்.காம், கிரிக்கின்ஃபோவை வாங்கியது. அப்போது கிரிக்கின்ஃபோவின் முக்கியமான பொறுப்பில் நான் இருந்தேன்.

கிரிக்கின்ஃபோ வாங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளாக பால் கெட்டி இறந்துவிட்டார். அவரது மகன் (காது அறுபடாத) மார்க் கெட்டியின் கைக்கு கிரிக்கின்ஃபோ வந்தது. மார்க் கெட்டி பிரிட்டனில் இருந்தாலும் ஒரு முழு அமெரிக்கன். அவரை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

மார்க், தந்தையைப் போன்றவர் அல்லர். வேலை செய்து, சம்பாதித்து, பெரிய ஆளாகவேண்டும் என்று நினைத்தவர். அதனால் கெட்டி இமேஜஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். மார்க் கெட்டி கிரிக்கெட்டில் அவ்வளவாக ஈடுபாடு கொண்டவர் அல்ல. எனவே நல்ல விலை வந்ததும் கிரிக்கின்ஃபோவை ஈ.எஸ்.பி.என் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். ஆனால் விஸ்டன் அல்மனாக்கை மட்டும் இன்னமும் கையில் வைத்துள்ளார். தந்தையின் ஞாபகார்த்தமாக இருக்கலாம்.

Sunday, April 05, 2009

மன்மோகன், அத்வானி, மாயாவதி

இந்த மூன்று பேரில் ஒருவர்தான் அடுத்த பிரதமர்.

இம்முறை காங்கிரஸ், பாஜக இரண்டுமே கூட்டணியை நிர்வகிப்பதில் தடுமாறியுள்ளன.

காங்கிரஸ் கட்சி, உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் கடந்த 19 வருடங்களில் கடுமையான வீழ்ச்சியை அடைந்துள்ளது. தனது வீழ்ச்சியைக் கருத்தில்கொண்டு, முலாயம் சிங் யாதவுடனும் லாலு பிரசாத் யாதவுடனும் சரியான கூட்டணி உறவை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம். இந்த இருவருடனும் சோனியா காந்தி நேரடியாகவே பேசி வேண்டிய இடங்களைப் பெற்றிருக்கலாம் என்பதே என் கருத்து. பல நேரங்களில் கட்சி மேனேஜர்கள் உபயோகமாக இருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்களே ஆபத்தாக இருந்துவிட நேரிடும்.

லாலுவுக்கும் முலாயத்துக்கும் சில ‘வெயிட்’டான அமைச்சரகங்களைத் தருவதாக வாக்களித்திருந்தால் போதும். மேலும் சில சீட்டுகளை விட்டுக்கொடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

மற்றொரு பக்கம், பாஜக எந்த விதத்திலும் காங்கிரஸால் பயன் அடைந்ததாகத் தெரியவில்லை. பல மாநிலக் கட்சிகளும் பாஜகவை விட்டு விலகிப்போகிறார்கள். தமிழகத்தில் அஇஅதிமுகவுடன் பாஜக கூட்டணியை ஏற்படுத்தமுடியாமல் போனது அதன் பெரும் பலவீனங்களில் ஒன்று. ஒரிஸ்ஸா கூட்டணி கைவிட்டுப்போனது, ஆந்திரத்தில் தெலுகு தேசத்துடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள முடியாதது போன்றவை பாஜகவை பாதிக்கும். மஹாராஷ்டிராவில் சிவ சேனையுடன் இன்னும் தொகுதிப் பங்கீடு முடியவில்லை.

காங்கிரஸும் பாஜகவும் நேரடிப் போட்டியில் ஈடுபடுவது வெகு சில மாநிலங்களில் மட்டுமே. ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டிஸ்கார், உத்தராகண்ட், கோவா - அவ்வளவுதான். இவற்றில் சமீபத்தில் நடந்து முடிந்த மாநில இடைத்தேர்தல்களை வைத்துப் பார்த்தால், பாஜகவுக்கு அதிக சாதகங்கள் உண்டு. ஆனால் மேலே உள்ள மாநிலங்களின் தொகுதிகளில் அதிகபட்சம் 60% இடங்கள் மட்டுமே பாஜகவுக்குக் கிடைக்கும். மீதம் காங்கிரஸுக்கு.

தமிழகம், கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம், வட கிழக்கு மாநிலங்களில் பாஜக கிடையவே கிடையாது. கர்நாடகத்தில் நடைபெறப்போகும் மும்முனைப் போட்டியில் பாஜகவுக்கு சாதகமே. பஞ்சாப், ஹரியானா, பீகார் மாநிலங்களில் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. எனவே அதிக இடங்கள் அவர்களுக்குத்தான் கிடைக்கும். மஹாராஷ்டிரம், அசாமில் பாஜக கூட்டணி இரண்டாம் நிலையில் வரும்; காங்கிரஸ் தரப்பு சொதப்பினால் மட்டுமே பாஜக அதிக இடங்களைப் பெற வாய்ப்பு உள்ளது.

மறுபக்கம், காங்கிரஸ் கூட்டணி இம்முறை தென்னிந்தியாவில் படு தோல்வியைச் சந்திக்கும். ஓரிஸ்ஸாவின் மும்முனைப் போட்டி காங்கிரஸுக்குச் சாதகமாக இருக்கும். மேற்கு வங்கத்தில் திரினாமுல் ஆதரவில் முன் கிடைத்ததைவிட அதிக இடங்கள் கிடைக்கும். உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் காங்கிரஸ் கடைசி இடத்தில் இருக்கும்.

காங்கிரஸ், பாஜக அணிகள் இரண்டுமே சென்றமுறையைவிடக் குறைவான இடங்களையே பெறுவார்கள். விளைவாக மூன்றாம் அணி என்ற குழுவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.

இந்த எண்களை வைத்துப் பார்த்தால்தான் மாயாவதிக்கு பிரதமர் வாய்ப்பு உண்டா இல்லையா என்று சொல்லமுடியும். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், அஇஅதிமுக மட்டும் அதற்கு ஒத்துழைக்காது. அந்நிலையில், அஇஅதிமுக மூன்றாம் அணியிலிருந்து விலக (இப்போது இருக்கிறதா என்றே சொல்லமுடியாது!), திமுக அந்தக் கூட்டணியில் சேரும். காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும்.

மாயாவதி பிரதமரானால், அதனால் இந்தியாவுக்கு நன்மை ஏதும் இருக்காது. இது மாயாவதி என்ற தனி நபர் மீதான விமரிசனம் கிடையாது. மூன்றாவது அணி என்ற உதிரக்கூடிய கூட்டணியின் துர்ப்பாக்கியம் இது. இது நிகழ 20% வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட ஆட்சி குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது பதவியில் இருக்கும். பிறகு ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தல்தான்.

ஆனால் இந்த இரண்டு வருடங்களில் ஆட்சியில் நிலைத்தன்மை இல்லாததால் நிதி, தொழில்துறை, ஏற்றுமதி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்தியா திண்டாடும்.

Thursday, April 02, 2009

சீட்டு இழுபறி

இப்போதைக்குள் அஇஅதிமுக, திமுக கூட்டணியில் இடப் பங்கீடு நடந்து முடிந்திருக்கும் என்றால், இல்லை.

மதிமுக, நிறைய இடங்களைக் கேட்கிறதாம். 5 அல்லது அதற்குமேல். அஇஅதிமுக, 3 கூடத் தரமாட்டேன் என்கிறதாம். 4-ல் செட்டில் ஆகலாம் என்று பேச்சு. என்ன தைரியத்தில் மதிமுக, 5 அல்லது அதற்குமேல் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பலவீனப்பட்ட தமிழகக் கட்சி என்றால் அது மதிமுக மட்டும்தான். கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் உதிர்ந்து திமுகவுக்குப் போனார்கள். அது இன்றுவரை தொடர்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் வைகோ மிகவும் ஆவேசமாக குரல் கொடுத்த ஒரே விஷயம் இலங்கைப் பிரச்னை மட்டுமே. அதில் மட்டும்தான் ஜெயலலிதாவுக்கு எதிர்க்கட்சியில் இருந்தார். மற்றபடி கட்சியை அடிமட்டத்தில் வளர்ப்பதற்கான எந்த முயற்சியிலும் வைகோ ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

மாறாக, பாமகவை சந்தர்ப்பவாதி என்று யார் திட்டினாலும், அவர் கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது. கருணாநிதி மதிமுகவை உடைத்த அளவுக்கு, பாமகவை உடைப்பதில் வெற்றி பெறவில்லை. ராமதாஸ், தனக்கு என்ன வேண்டுமோ, அது எங்கு கிடைக்குமோ அங்கு சென்று சாதித்துக்கொள்கிறார்.

*

காங்கிரஸ் தொண்டர்கள், கன்னியாகுமரியிலும் சென்னையிலும் தொகுதிகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்களாம். ஏற்கெனவே காங்கிரஸுக்கு அளவுக்குமீறி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது என் எண்ணம். எங்கோ இல்லை என்றால், வேறு ஓர் இடத்தில் அள்ளிக்கொடுத்துள்ளது திமுக என்ற எண்ணம் தொண்டர்களுக்கு வரவேண்டும். வேண்டுமானால் தனித்துப் போட்டியிட்டால் 39 இடங்களிலும் (40 இடங்களிலும்) போட்டியிடலாம். தேமுதிக மாதிரி!

*

கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் தொகுதிப் பங்கீட்டில் அஇஅதிமுகவுடன் உடன்பாட்டுக்கு இன்னமும் வரவில்லை. நான் என் முந்தைய பதிவில் இவர்களுக்கு அஇஅதிமுக, ஐந்து தொகுதிகள் வரை கொடுக்கக்கூடும் என்று எழுதியிருந்தேன். அது தவறான கணிப்பு. மூன்றுதான் கிடைக்கும் என்று தோன்றுகிறது. என் கணிப்பில், தமிழகத்திலும் CPI-ஐவிட, CPM வலுவான கட்சியே. CPI-க்கு என்ன கிடைக்கிறதோ அதைவிட ஒன்று அல்லது இரண்டு CPM-க்குக் கூடுதலாகத் தரலாம்.

*

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வடிவம் மனிதநேய மக்கள் கட்சி என்பது. பெயரில் முஸ்லிம் இல்லாவிட்டாலும் இது ஒரு முஸ்லிம் கட்சிதான். இந்தக் கட்சி ஆரம்பித்ததே சில மாதங்களுக்கு முன்னர்தான். திமுக கூட்டணியில் இந்தக் கட்சி மூன்று இடங்களைக் கேட்கிறதாம். ஏற்கெனவே திமுக, டோக்கன் முஸ்லிம் சீட் ஒன்று என்று வேலூரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்குக் கொடுத்துவிட்டது.

தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 5.5% என்று கணிக்கப்படுகிறது. கிறித்துவர்களின் மக்கள்தொகையும் கிட்டத்தட்ட அதே - 5.5%. இருவரும் சேர்த்து, 11%. மனிதநேய மக்கள் கட்சி மட்டுமே எதிர்பார்ப்பது சுமார் 7.5% இடங்களை! இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேலூர் தொகுதியைச் சேர்த்தால், 10%.

மனிதநேய மக்கள் கட்சி கேட்பது கிடைக்காது. என்னைக் கேட்டால் இவர்களுக்கு ஒரு சீட் கூடக் கொடுக்கமாட்டேன். கருணாநிதி ஒரு சீட் தருவதாகச் சொல்கிறாராம்.

கிறித்துவர்கள் ஏன் இப்படி கட்சி ஆரம்பித்து இடங்கள் கேட்பதில்லை? அவர்களுக்குள் உட்பிரிவுகள் நிறைய இருப்பதுதான் காரணம்; அவர்களால் முஸ்லிம்கள் போல ஒன்றுசேரமுடியாது என்று நினைக்கிறேன்.

*

தமிழக யாதவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். அவர்கள் தமிழக மக்கள் தொகையில் 14%-க்கும் மேலாம். அதற்கு ஏற்றபடி அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கவேண்டுமாம். பேசாமல், லாலு அல்லது முலாயமை அழைத்து இவர்களே ஒரு யாதவக் கட்சி ஒன்றை ஆரம்பித்து, மருத்துவருக்குச் சரி சமமாக உட்கார்ந்து, மக்களவை 7, மாநிலங்களவை 1 என்று பேரம் பேசலாமே?

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் என்று திடீரென சில விளம்பரங்களைப் பார்த்தேன். அப்போதுதான் இந்தப் பேரைக் கேள்விப்பட்டேன். இது என்ன ஜாதி? எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் ‘ஓனர்’ பச்சமுத்து இந்தச் சங்கத்தின் தலைவராம். நல்ல விஷயம்.