Thursday, October 29, 2009

பபாஸி தேர்தல் முடிவுகள்

நேற்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டிறுதிப் பொதுக்கூட்டமும், அடுத்த இரு ஆண்டுகளுக்கான அலுவலர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.

தேர்தலில் செயற்குழு உறுப்பினர் (தமிழ்) பதவிக்காக நின்று நான் தோற்றுப்போனேன். மொத்த உறுப்பினர்கள் 383. வாக்களிக்க வந்தவர்கள் 316. வாக்குச்சீட்டுகளை வாங்கி வாக்களித்தவர்கள் 307. எனக்குக் கிடைத்த வாக்குகள் 91. (என்னைத் தவிர 90 பேர் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்!)

கடந்த முறை செயலராக இருந்த ஆர்.எஸ்.சண்முகம் உருவாக்கிய அணி, இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கடந்த முறை தலைவராக இருந்த காந்தி கண்ணதாசன் ஆதரித்த அணி முற்றிலுமாகத் தோற்றுள்ளது. சுயேச்சையாக நின்ற மூன்று பேர் (என்னையும் சேர்த்து) தோல்வியுற்றோம் என்பது தெளிவு.

ஜெயித்தவர்கள் விவரம் வருமாறு:

தலைவர்: சொக்கலிங்கம் (கவிதா பதிப்பகம்)
துணைத்தலைவர் (தமிழ்): சண்முகம் (செண்பகா)
துணைத்தலைவர் (ஆங்கிலம்): சுப்பிரமணியன் (டைகர் புக்ஸ்)
செயலர்: இராம.லட்சுமணன் (உமா பதிப்பகம்)
இணைச்செயலர்: சண்முகநாதன் (என்.சி.பி.எச்)
பொருளாளர்: ஷாஜஹான் (யுனிவெர்சல்)

செயற்குழு (தமிழ்): வைரவன், நாகராஜன், முருகன், வெங்கடாசலம்
செயற்குழு (ஆங்கிலம்): அஷோக்குமார், சிவராமன், ஜெயக்குமார், டி.எஸ்.சீனிவாசன்

நிரந்தரப் புத்தகக் கண்காட்சி உறுப்பினர்கள் (தமிழ்): சுரேஷ்குமார், பாலகிருஷ்ணன்

***

தேர்தல் நடைபெற்றதே தவிர, சென்ற ஆண்டு கணக்கறிக்கை, ஆண்டறிக்கை ஆகியவற்றில் பல குளறுபடிகள், எண்கள் தவறாக அச்சானது, தலைவர், செயலர் அறிக்கைகளில் பல இடங்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லாதது ஆகிய காரணங்களால் அவை எவையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மாறாக, சென்ற இரு ஆண்டுகளில் இருந்த அலுவலர்களே, அவற்றை அடுத்த மாதத்துக்குள் சரி செய்து மீண்டும் பொதுக்குழுவில் வைக்குமாறு பணிக்கப்பட்டனர். அப்போதுதான் பொதுக்குழு அவற்றை அங்கீகரிக்கும்.

ஆண்டிறுதி அறிக்கைப் புத்தகம் உண்மையில் படு மோசமாகத் தயாரிக்கப்பட்ட ஒன்று. புத்தகப் பதிப்புத்துறையில் ஈடுபட்டிருக்கும் ஒரு சங்கம், இதுபோன்ற ஓர் அறிக்கையைத் தயாரித்திருப்பது வெட்கக்கேடான செயல் என்று சிலர் பொதுக்குழுவில் பேசினர். (உண்மைதான்!) அவ்வளவு மெய்ப்புப் பிழைகள், பெயர்களை, நிறுவனங்களை எழுதுவதில் பிழைகள், (இலக்கணப் பிழைகளை விட்டுவிடலாம்), பாதி விஷயங்கள் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல், எண்கள் பலவற்றிலும் மெய்ப்புப் பிழைகள் என்று இருந்தன. அடுத்த மாதத்துக்குள் இவை அனைத்தும் களையப்பட்டு, சரியான, நேர்த்தியான அறிக்கை உறுப்பினர்கள் கைகளுக்குக் கிடைத்தால், அது மாபெரும் அதிசயமே.

பார்ப்போம்.

(இனி வரும் நாள்களில் பபாஸி அமைப்பு பற்றியும், அதில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் பற்றியும் எழுத உள்ளேன்.)

Wednesday, October 28, 2009

பபாஸி தேர்தல்

இன்று மாலை (புதன்கிழமை, 28 அக்டோபர் 2009) தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டிறுதிப் பொதுக்கூட்டமும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது.

இந்தச் சங்கத்தில் முதலில் உறுப்பினர் ஆவதற்கு மூன்று ஆண்டு காலமாவது புத்தகத் துறையில் பதிப்பாளராக இருக்கவேண்டும் என்று சொன்னார்கள். அடுத்து, உறுப்பினர் ஆனபிறகு, மூன்று ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் நிற்கமுடியாது என்றும் கமிட்டி எதிலும் உறுப்பினர் ஆகமுடியாது என்றும் சொன்னார்கள். (இதெல்லாம் சங்கத்தின் அமைப்பு யாப்பில் உள்ளதா என்று கவனமாகப் பார்க்கவேண்டும்.)

ஆக, நான் தேர்தலில் நிற்கக்கூடிய முதல் வாய்ப்பைப் பெறுவது இப்போதுதான். தலைவர், துணைத்தலைவர் (தமிழ்), துணைத்தலைவர் (ஆங்கிலம்), செயலர், இணைச்செயலர், பொருளாளர் ஆகியவை முதன்மைப் பதவிகள்.

அடுத்து செயல்குழுவில் 8 பேர் - அதில் 4 பேர் தமிழ் பதிப்பாளர்/விற்பனையாளர்கள், 4 பேர் ஆங்கில பதிப்பாளர்/விற்பனையாளர்கள்.

இதில் செயல்குழு உறுப்பினர் (தமிழ்) என்ற நிலைக்கு நானும் நிற்கிறேன்.

நான் இதுவரை நேரில் பார்த்தது ஒரு தேர்தல்தான். இம்முறை தேர்தலில் இரு அணிகள் போட்டியிடுகின்றன. அணிகளாகப் போட்டியிடும் முறை எனக்குப் புதுமையாக உள்ளது. நான் தனியாகப் போட்டியிடுகிறேன். எந்த அணியிலும் இல்லை.

இதுவரையில் வாக்கு கேட்டு வந்த சில கடிதங்களுடன் ஒரு மொட்டைக் கடுதாசியும் அதற்கு ஒரு பதில் கடுதாசியும் வந்துள்ளன.

பபாஸி, தேர்தல், பதிப்புலகம் செல்லவேண்டிய பாதை, தூரம் போன்ற பலவற்றைப் பற்றி நிறையக் கருத்து சொல்ல விரும்புகிறேன். ஆனால் அனைத்தும் இன்று தேர்தல் முடிந்தபின், நாளையிலிருந்து!

Saturday, October 24, 2009

கிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராசிரியர் மோகனா

நேற்று (23 அக்டோபர் 2009) பேராசிரியர் மோகனா, செக்ஸ் குரோமோசோம்கள் X, Y பற்றிப் பேசினார். அதன் வீடியோ கீழே, இரு பகுதிகளாக. இதன் ஆடியோ பதிவு ‘தொங்கிவிட்டது’. இந்த வீடியோவிலிருந்து ஆடியோவைப் பிரித்து அதைத் தனியாகப் போட முடியுமா என்று பார்க்கிறேன்.

முன்போலவே, veoh.com வழியாகவே ஏற்றியுள்ளேன். ஒவ்வொரு வீடியோ துண்டும் 400 MB-க்கு மேல் உள்ளது. இங்கே போடு, அங்கே போடு என்றால் அதை உடனடியாகச் செய்வது மிகவும் எளிதல்ல என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதனால் பழக்கமானதையே செய்துவருகிறேன். விரைவில் வேறு இடத்தில் சேர்க்கமுடியுமா என்று பார்க்கிறேன். இதை முழுதாகப் பார்க்க plug-in வேண்டியிருக்கும்.


Watch Prof Mohana on "Will Y Chromosome become extinct?" (1/2) (Tamil) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Prof Mohana on "Will Y Chromosome become extinct?" (2/2) (Tamil) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

கிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்

இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் வியாழக்கிழமை 29-10-2009 அன்று மாலை 6.00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி பற்றிய பிற விவரங்கள் இங்கே.

Friday, October 23, 2009

கிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து



இது தொடர்பான கிழக்கு பாட்காஸ்ட்
.

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்பா தேவர்


முருக பக்தர் தேவர். நாத்திகப் போர்வாள் ராதா. தமிழ் நாடகத்துறையை மாற்றி அமைத்தவர் ராதா. தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி, இருவரையும் வைத்து வெற்றிப்படங்கள் எடுத்துத் தள்ளியவர் தேவர்.

எம்.ஆர்.ராதா - எம்.ஜி.ஆர் துப்பாக்கிச் சூட்டுக்கு, தேவர் படத்தில் இருவரும் நடிக்கும்போது ஏற்பட்ட ஒரு தகராறும்கூடக் காரணம்.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகள் ராதாவும் தேவரும். இருவருமே கடவுளைத் திட்டுவார்கள். தேவர் செல்லமாக. ராதா கடவுள் மறுப்பாளனாக.

எம்.ஆர்.ராதாயணம் புத்தகத்தை எழுதிய முகிலும் சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்தை எழுதிய தீனதயாளனும் சித்ராவுடன் பேசுகின்றனர். ஜுகல்பந்தியை ரசியுங்கள்.

இங்கேயே கேட்க:



தரவிறக்கம் செய்ய: கிழக்கு பாட்காஸ்ட்

முகிலின் புத்தகங்கள் | தீனதயாளனின் புத்தகங்கள்

தொடர்புள்ள புத்தகங்கள்:

                   

2007 தமிழக நூலக ஆணை

தமிழ்நாடு தமிழ்ப் பதிப்பாளர் சங்கத்தின் வெளியீடான “பதிப்பாளர் குரல்” இதழிலிருந்து:

2007-ம் ஆண்டு நூலக ஆணை தொடர்பாக:

பரிசீலனைக்கு வந்த நூல்கள்: 7,819
தேர்வான நூல்கள்: 4,016
ஆணை வழங்கப்பட்ட நூல்கள்: 2,792
தேர்வு பெற்ற நூல்களில் ஆணை வழங்கப்படாதவை: 1,224

தேர்வு செய்யப்பட்ட 4,016 நூல்களையும் வாங்கத் தேவையான பணம்: ரூ. 19 கோடி
ஆனால் ஒதுக்கப்பட்ட தொகை: ரூ. 11 கோடி
(அதனால்தான் 1,224 புத்தகங்கள் வாங்கப்படவில்லை.)

தகவலுக்காக மட்டுமே. கருத்து ஏதும் இப்போதைக்கு இல்லை.

Thursday, October 22, 2009

ஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீடு

ஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீட்டு விழா கோவையில் திங்கள் (26 அக்டோபர் 2009) அன்று நடைபெறுகிறது. திங்கள், செவ்வாய் இரு நாள்களும் கோவையில் இருப்பேன். கோவை பி.எஸ்.ஜி டெக் நிர்வாகவியல் துறை மாணவர்களுடன் நானும் சத்யாவும் திங்கள் காலை உரையாடுகிறோம்.


Tuesday, October 20, 2009

Banking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை

கிராமங்களில் பெற்றோர்கள் அல்லது மனைவி/குழந்தைகள் வசிக்க, நகரத்தில் வேலை செய்யும் ஆண்கள் எத்தனையோ பேர். பொருளாதார நிலையில் கீழே இருக்கும் குடும்பங்களில்தான் பணப் பட்டுவாடா அதிகமாக இருக்கும். நகரில் இருந்து பணம் வந்தால்தான் சாப்பாடு என நிலையில் பல குடும்பங்கள். இன்னும் பல குடும்பங்களில் சாப்பாட்டுப் பிரச்னை இல்லை என்றாலும் ஏதேனும் பொருள்கள் அல்லது துணிமணி வாங்கவேண்டும் என்றால் அதற்கு பிள்ளைகளிடமிருந்து பணம் வந்தாகவேண்டும்.

மற்றொரு பக்கம், கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் பணம் அனுப்புகிறார்கள். சென்னையில் வேலை தேடி வாடும், மேன்ஷனில் வசிக்கும் பிள்ளைகளும் பெற்றோர்கள் பணம் அனுப்புகிறார்கள்.

எங்கள் அடுக்ககத்தில் பாதுகாவல் வேலையில் இருந்தவர்கள் அனைவருக்கும் இது ஒரு பிரச்னை. இப்போது வேலையில் இருப்பது இந்த வேலைக்கு என்றே ‘விதிக்கப்பட்ட’ நேபாளி ஒருவர். இதற்குமுன் இருந்த மூவர் தமிழகத்தின் பஞ்ச பூமியிலிருந்து வந்தவர்கள் (மதுரைப் பக்கம், திருவாரூர் பக்கம், இப்படி). இவர்கள் மாதச் சம்பளத்தை என்ன செய்கிறார்கள், எப்படி தத்தம் ஊர்களுக்கு அனுப்புகிறார்கள் என்று ஆராய்ந்தால் ஆச்சரியமாக இருக்கும்.

முதலில் இவர்கள் யாருக்கும் வங்கிக் கணக்கு என்பதே கிடையாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கு முன் இருந்தவர்கள் கையில் மொபைல் போன் கூட இருந்ததில்லை. இப்போது இருக்கும் நேபாளி கையில் போன் உண்டு.

பொதுவாக இவர்கள் அனைவருக்கும் பணம் கேட்டு ‘செய்தி’ வரும். இப்போது போன் கால் வருகிறது. பணம் அனுப்பவேண்டும் என்றால் இவர்கள் பொதுவாக formal channel எதையுமே பயன்படுத்துவதில்லை. “எங்கூருக்கு சொந்தக்காரன் ஒர்த்தன் போறான், அவங்கிட்ட கொடுத்து அனுப்பப்போறேன்” என்றுதான் பதில் வரும். பணத்தைச் சுருட்டி, ஒரு பண்டில் ஆக்கி கொடுத்து அனுப்பப்படும். நேபாளியும் அதைத்தான் செய்கிறார். சென்னையில் இருக்கும் பல்வேறு நேபாளி பாதுகாவல் வேலை செய்பவர்களில் யாராவது ஒருவர் ஒவ்வொரு மாதமும் ஊருக்குச் செல்கிறார். அவர் கையோடு எடுத்துச் செல்வார். சரியாகப் பணத்தைப் பட்டுவாடா செய்துவிடுவார் என்பது நம்பிக்கை. பொதுவாக இந்த நம்பிக்கை பொய்ப்பதில்லை.

ஆனால் இதில் என்ன பிரச்னை? பணம் எதிர்பார்க்கும்போது கிடைக்காது. நான்கு நாள், ஐந்து நாள் முதல் ஒரு மாதம் வரை ஆகிவிடும். திடீர் செலவு என்றால்?

அடுத்து மனி ஆர்டர் எனப்படும் தபால் ஆஃபீஸ் வழியாக அனுப்பப்படும் பணவிடை. இன்றும்கூட எங்கள் பதிப்பகத்திலிருந்து புத்தகம் வாங்க மனி ஆர்டர் அனுப்பப்படுகிறது. அதற்கு 5% அஞ்சலகத்துக்கு கமிஷன் தொகை தரவேண்டும். அந்தத் தொகை பணம் கட்டுபவரிடமிருந்து பெறப்படுகிறது.

5% என்பதே மிக அதிகம். ஆனால் அதைத் தாண்டி இதில் வேறு ஒரு பிரச்னை உள்ளது. எங்கள் அலுவலகத்துக்கு வந்து பணம் தரும் அஞ்சல் ஊழியர் எங்களிடம் லஞ்சப் பணம் கேட்பதில்லை. கேட்டாலும் கொடுக்கமாட்டோம். ஆனால் கிராமங்களில், சிறு நகரங்களில் பணம் கொண்டுவந்து தரும் ஊழியருக்கு கையில் பணம் வெட்டியே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலும் மிக மோசம் அரசு உதவித்தொகை பெறும் முதியோர்கள். தமிழக அரசு கொடுக்கும் முதியோர் உதவித்தொகை அஞ்சலகம் வழியாக பணவிடையாகத் தரப்படுகிறது. இதில் கணிசமான பகுதியை அஞ்சலக ஊழியர்கள் அடாவடியாகத் திருடுகிறார்கள். எதிர்த்தால், உங்கள் பணம் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது. “குறிப்பிட்ட ஆசாமி இல்லை” என்று சொல்லி பணத்தைத் திரும்ப அனுப்பிவிடுவார்கள்.

வெஸ்டெர்ன் யூனியன் மனி டிரான்ஸ்ஃபர் வசதியை இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்துவதில்லை. அது பெரும்பாலும் அந்நிய நாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்ப மட்டுமே பயனாகிறது. அதிலும் transaction cost அதிகமே! வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்புவதிலும்கூட இன்றும் ஹவாலா முறையே பல இடங்களில் நிகழ்கிறது. ஆனால், நம் ஃபோகஸ் இந்தியாவுக்குள் பணம் அனுப்புவதில்/பெறுவதில் மட்டுமே.

இந்தியாவுக்குள்ளேயே, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பணம் அனுப்புவது எளிதல்ல. வங்கிக் கணக்கு இருந்தால், at par காசோலை கொடுக்கும் வசதி இருந்தால், பெரும்பாலும் காசோலை கிடைத்து அடுத்த நாளே பணம் கிடைக்கும். வரைவோலை அனுப்புவதில் கமிஷன் தொகை உண்டு. ரிசர்வ் வங்கி NEFT (National Electronic Funds Transfer) என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று NEFT முறையில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கியில் உள்ள கணக்குக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை பணம் செலுத்த ஒரு டிரான்சாக்‌ஷனுக்கு ரூ 5 செலவாகிறது. சில நூறு ரூபாய்கள் செலுத்துவது என்றால் இது அதிக சதவிகிதம் செலவு. ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்றால் பரவாயில்லை. ஒரு லட்சத்துக்கு மேல் என்றால் ரூ 25 செலவு. (நீங்கள் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் அனுப்பவேண்டும் என்றால், 99,999 அனுப்பினால் 5 ரூபாய் செலவு. 1,00,000 அனுப்பினால் ரூ 25 செலவு!) இந்தப் பணம் ஒரு நாளைக்குள் சென்றுவிடும்.

வங்கிக் கணக்கு வைத்திருந்தாலே தலையால் தண்ணி குடிக்கவேண்டும் என்னும்போது வங்கிக் கணக்கே இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அஞ்சலகம் என்னும் பெரும்பாலும் ஊழல் செய்யும் ஊழியர்களைக் கொண்ட துறையை மட்டுமே நம்பி இருக்கவேண்டும். அங்கும் oversight கிடையாது. அனுப்பிய பணம் சென்று சேர்ந்ததா என்பதை எப்படிப் பரிசீலிப்பது? போய்ச் சேராவிட்டால் எப்படிப் பணத்தைத் திரும்பப் பெறுவது?

ஒரு நொடியில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பணம் அனுப்ப முடியுமா? நம் உறவினர்கள் போனில் நம்மிடம் பேசிய உடனே அடுத்த விநாடியே அவர்கள் கையில் பணம் இருக்குமாறு செய்யமுடியாதா?

இன்று ஒரே வங்கியில் இருவர் கணக்கு வைத்திருந்தால் இதைச் செய்ய முடியும். வங்கிக் கணக்கே இல்லாவிட்டால்?

தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்தலாம்? எப்படி இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யலாம்?

(தொடரும்)

ஒன்று | இரண்டு
.

Monday, October 19, 2009

NHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)

முந்தைய பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று

இந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா?
  1. 1857 சிப்பாய் புரட்சி, உமா சம்பத்
  2. ஏ.ஆர். ரஹ்மான், என்.சொக்கன்
  3. சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் பார்முலா, ராபர்ட் குந்தர்
  4. வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா, டாக்டர் கேரன் ஒடாஸோ
  5. நம்பர் 1 சேல்ஸ்மேன், சோம. வள்ளியப்பன்
  6. மாயாவதி, சி.என்.எஸ்
  7. இண்டர்வியூ டிப்ஸ், எஸ்.எல்.வி. மூர்த்தி
  8. அத்வானி, ஆர்.முத்துக்குமார்
  9. ஒரு மோதிரம் இரு கொலைகள், ஷெர்லாக் ஹோம்ஸ்
  10. சீனா - விலகும் திரை, பல்லவி அய்யர் (இந்தப் புத்தகம் கோட்டா முடிந்துவிட்டது! அவ்வளவு ஆர்வமாக பலரும் கேட்டு, கேட்டவர்களுக்கு எல்லாம் கொடுத்தாகிவிட்டது. பிற புத்தகங்களைக் கேட்கவும்.)
  11. பிரபாகரன் வாழ்வும் மரணமும், பா.ராகவன்
  12. விஜய்காந்த், யுவ கிருஷ்ணா
  13. பன்றிக்காய்ச்சல், டாக்டர் புரூனோ மஸ்கரனாஸ்
  14. வைரஸ் நோய்கள், டாக்டர் முத்து செல்லக் குமார்
  15. நோய் தீர்க்கும் சித்த மருந்துகள், டாக்டர் கே.எஸ்.சுப்பையா
  16. மு.க. ஸ்டாலின், ஜி.ஆர்.சுவாமி
  17. விடுதலைச் சிறுத்தைகள், ஜோதி நரசிம்மன்
  18. மெட்ராஸ் - சென்னை, நந்திதா கிருஷ்ணா
  19. தும்பிக்கை வந்தது எப்படி?, ருட்யார்ட் கிப்ளிங்
  20. ஜங்கிள் புக், ருட்யார்ட் கிப்ளிங்

கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!
  1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
  2. மேலே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
  3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
  4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
  5. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமர்சனத் திட்டங்களும் நிறைவு பெற்றுவிட்டன. மேலே உள்ள புத்தகங்களில் இருந்து மட்டுமே புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும்.
  6. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.
  7. விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 500 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
  8. புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
  9. விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
  10. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
  11. ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
  12. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
  13. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
  14. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
  15. ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.
  16. ஏற்கெனவே உங்களின் முகவரி, தொலைபேசி எண் எங்களிடம் இருந்தாலும், புத்தகம் கேட்டு எழுதும்போது மறக்காமல் உங்கள் முகவரியையும் மொபைல் எண்ணையும் மீண்டும் குறிப்பிடவும்.
மின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி: bookreviews@nhm.in

கிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம், இந்த உலகம் என்ன ஆகும்?

[மாற்றம்: வேறு ஒரு நிகழ்வு (சிந்து சமவெளி நாகரிகம் பற்றி ரோஜா முத்தையா நூலகத்தில் நடைபெறுவதால்) இந்தப் பேச்சு 29 அக்டோபர் 2009, புதன்வியாழக் கிழமைக்கு மாற்றப்படுகிறது.]

திடீர் வெள்ளம். கடும் வறட்சி. பனிப்பாறைகள் உருகுகின்றன. ஒரு பக்கம் புயலும் சூறாவளியும். மறு பக்கம் பருவ மழை தள்ளிக்கொண்டே போகிறது.

எல்லாவற்றுக்கும் குளோபல் வார்மிங் எனப்படும் புவி வெப்பமடைதலே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலரோ இதைக் கடுமையாக மறுக்கிறார்கள்.

பூமியில் திடீரென கரியமில வாயு அதிகமாக வெளியேறுவதே இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். தினம் தினம் செய்தித்தாளில் இது பற்றி என்னென்னவோ செய்திகள் வருகின்றன. ஆனால் நமக்குத்தான் இவற்றைப் பற்றி அதிகம் புரிவதில்லை.

வானிலை மாற்றம் பற்றி எல்.வி.கிருஷ்ணன் பேச உள்ளார். இவர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில், அணுப் பாதுகாப்புப் பிரிவில் பணி ஆற்றி ஓய்வு பெற்றவர்.

நாள்: 24.10.2009, சனிக்கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி

கிழக்கு மொட்டைமாடி: ஆண் இனம் அழிவை நோக்கியா?

உயிர்களின் அடிப்படை அலகு செல். ஒவ்வொரு செல்களின் உள்பிரிவிலும் குரோமோசோம்கள் உள்ளன. குரோமோசோம்களில் மரபணுக்கள் (genes) இருக்கின்றன. இந்த மரபணுக்கள்தான் பரம்பரை குணங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் சாதனங்கள். உங்கள் மூக்கு அப்பா போலவா, கண்கள் அம்மா போலவா, குரல் அத்தை போலவா என்று நிர்ணயிப்பது மரபணுக்களே! மனித செல்லில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில் 22 ஜோடி உடலின் குணநலன்களைக் கட்டுப்படுத்துகின்றன. மீதி உள்ள ஒரு ஜோடி நீங்கள் பெண்ணா, ஆணா என்பதை நிர்ணயிக்கிறது. பெண்களுக்கு XX குரோமோசோம்கள், ஆண்களுக்கு XY குரோமோசோம்கள். பிறக்கும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயம் செய்வது ஆண் மட்டுமே!

இன்று X குரோமோசோமில் 1000 மரபணுக்களும் Y குரோமோசோமில் 78 மரபணுக்களும் இருக்கின்றன. ஆனால் மனித இனம் உருவானபோது X மற்றும் Y குரோமோசோம்களில் தலா 1000 மரபணுக்கள் இருந்தன. ஆனால் இப்போது Y குரோமோசோமில் உள்ள மரபணுக்களின் எண்ணிக்கை குறைந்து அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது ஏன்? எதிர்காலத்தில் ஆண் இனம் என்ன ஆகும்?

இந்த சுவாரசியமான விஷயத்தைப் பற்றி பேச வருகிறார் பேராசிரியர் மோகனா. இவர் 22 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் அறிவியலை மக்களிடம் எடுத்துச் சென்று வருகிறார். அறிவியல் நூல்களை எழுதியிருக்கிறார்.

நாள்: 23.10.2009, வெள்ளிக்கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை

Sunday, October 18, 2009

Banking the unbanked - 2: பணம் இருந்தாலும் ஏழைகள்

நானும் சாலமன் ஜெயப்பிரகாஷும் ஒரு குறுங்கடன் நிறுவனத்தில் (independent) இயக்குனர்களாக உள்ளோம். சில மாதங்களுக்குமுன் இயக்குனர் சந்திப்பின்போது பெங்களூருவில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பெங்களூருவில் லேபர்நெட் என்ற அமைப்பை உருவாக்கி நடத்திவருகிறார். அமைப்புசாராத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

இந்தத் தொழிலாளர்கள் குழாய் வேலை செய்பவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், மின் வேலை செய்பவர்கள்... ஆனால் தினக்கூலிகள். இதில் பலரும் மாதச் சம்பளம் வாங்குபவர்களைவிட அதிகப் பணத்தை ஒரு மாதத்தில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் மாதச் சம்பளக்காரர்களை விட ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்றார் சாலமன்.

தினக்கூலி பெறுபவர்களது மனநிலையே ஏழைமை சார்ந்தது என்கிறார் இவர். இவர்கள் கையில் பணம் தங்குவதே இல்லை. உணவுக்கு என இவர்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்கிறார்கள். மாதாமாதம் மளிகைப் பொருள்களை வாங்குவதற்குபதில் தினம் தினம் மளிகைச் சாமான்களை வாங்குவதனால் நமக்கு ஆகும் செலவைவிட அதிகமாக இவர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. பணத்தை வீட்டில் வைத்திருக்க இவர்களிடம் இடம் இல்லை. மளிகைப் பொருள்களை, உணவுப் பொருள்களை வாங்கிச் சேர்த்துவைக்கவும் இவர்கள் வீடுகளில் இடம் இருப்பதில்லை.

தினக்கூலி என்பது வாரக்கூலியாக மாறும்போது இவர்களது வாழ்க்கை சற்றே மேம்படுகிறதாம். மாதம் இருமுறை என்றாலும், மாதச் சம்பளம் என்றாலும் ஒன்றுதான் என்கிறார்.

***

இந்தத் தகவல் கிடைத்தபிறகு, இதனை பிராக்டிகலாகச் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.

எங்களுக்கு துணிகளை அயர்ன் செய்து தருபவர் நாளுக்கு எளிதாக 300 ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் அவருக்கும் மாதக் கடைசியில் கையில் ஒரு பைசா மிஞ்சுவதே இல்லை. கடைசியில் அவரிடம் பேசி, நாங்கள் தினமும் தரும் தொகையை உடனடியாகத் தராமல், கணக்கு வைத்திருந்து, மாதக் கடைசியில் மொத்தமாகத் தருவதாகச் சொன்னோம். ஒப்புக்கொண்டார். அதன்படி மாதக் கடைசியில் அவர் கையில் துளியும் பணம் இல்லாதபோது கணிசமாக ஒரு தொகை அவருக்குக் கிடைக்க ஆரம்பித்தது.

***

ஆனால் இதனை எப்படி முறைப்படுத்துவது? தினக்கூலி வேலை மாறப்போவதில்லை. மாதச் சம்பளத்துக்கு அவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. அவர்களது சம்பளம் உடனுக்குடன் அவர்கள் கைக்குக் கிடைக்கக்கூடாது! சற்றே கிறுக்குத்தனமாக இருந்தாலும் இதுதான் உண்மை. அவர்களுக்கு ஃபினான்ஷியல் டிசிப்ளின் வரும்வரை அவர்களது பணம் மாதம் ஒருமுறை கைக்குக் கிடைப்பதாக இருக்கவேண்டும். அந்தப் பணத்திலிருந்து அவர்கள் வீட்டு வாடகை, மளிகைப் பொருள்கள், பால் என்று பெரும் செலவுகளை உடனடியாக முடிக்கவேண்டும். மீதிப் பணத்தை மாதாமாதம் சேமிக்கவேண்டும்.

ஏதேனும் அவசரச் செலவுகள் என்றால், தேவைப்பட்டால்தான் பணத்தை எடுக்கவேண்டும்.

ஆனால் வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதில் என்ன பிரச்னை? வங்கிக் கணக்கு ஆரம்பித்தாலும் தினம் தினம் இரவு 8.00 மணிக்கு(?) வங்கிக் கணக்கில் 200 அல்லது 300 ரூபாயைச் சேர்க்கமுடியுமா? முடியாது! தினம் தினம் நமது வங்கிக் கணக்கு இருக்கும் அதே கிளைக்குச் சென்று பணத்தைப் போட முடியுமா? முதலில் தினக்கூலி வேலை செய்வோருக்கு வேலை முடிய ஆகும் நேரம் மாறிக்கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு டாக்ஸி டிரைவர்கள். வேலை முடிந்து வீட்டுக்குப் போய்த் தூங்குவதற்கே நேரம் இருக்காது. இப்படிப் பல பிரச்னைகள்.

இதை ஆராய்வதற்குமுன் வேறு சில விஷயங்களைப் பற்றியும் ஆராய்வோம்.

(தொடரும்)

முதல் பகுதி

Friday, October 16, 2009

Banking the unbanked - 1: வங்கிகளுக்கு வெளியே உள்ளவர்கள்

இன்று காலை மிண்ட் இதழில் எஸ்.கே.எஸ் மைக்ரோஃபினான்ஸ் தலைமை நிர்வாகி சுரேஷ் குருமணி எழுதியிருந்ததிலிருந்து:
எஸ்.கே.எஸ். மைக்ரோஃபினான்ஸ் கடன் அலுவலர் வேலை செய்துவிட்டுத் திரும்பும் வழியில் கொள்ளை அடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

...

அவர் ஏன் கையில் நிறையப் பணத்தை வைத்திருந்தார்? பல கிராமங்களில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த குறுங்கடன்களுக்கான வட்டியை வசூல் செய்து எடுத்து வந்திருந்தார். அந்த கிராமங்களில் வங்கிகள் கிடையாது. எனவே அவர் வேறு வழியின்றி கையில் பணம் எடுத்துவர வேண்டியிருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கின்படி, இந்தியாவில் 60% பேருக்கு வங்கிக் கணக்கு கிடையாது. உண்மையில் இந்த எண்ணிக்கை இதற்கும் அதிகமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவில் 100-க்கு 80 பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கலாம்.

அதென்ன பெரிய விஷயம், இதில் பாதி பேருக்குக் கையில் பணமே இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஒரு நாளைக்கு 50 ரூபாய் வருமானம் கூட இல்லாத எத்தனையோ குடும்பங்கள் உள்ளன. ஆனால் மீதமுள்ளவர்கள், மாத, வார, நாள் சம்பளக்காரர்கள் கையில் உள்ள வருமானத்தை ஒழுங்காகச் சேர்க்கமுடியாமல் பணத்தை வீணடிக்கிறார்கள். காரணம்: வங்கிக்கணக்கு இல்லாதது. கிராமப்புறங்களில் வங்கிகளே இல்லை. நகரங்களில் பொருளாதார-சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட பலருக்கும் படிப்பறிவின்மை காரணமாகவும், உள்ளார்ந்த பயம் காரணமாகவும் வங்கிக் கணக்குகள் இல்லை.

சென்ற மாதம் ஒரு நாள் இரவு சென்னை ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரும்போது டாக்ஸி ஓட்டுனருடன் பேசிக்கொண்டு வந்தேன். வாடகை டாக்ஸி. அவர் ஒரு நாளைக்கு சராசரியாக 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். படிப்பு கிடையாது. வங்கிக் கணக்கு கிடையாது. இதுவரை கையில் ஒரு பைசா மிச்சமில்லை. வீட்டில் பணம் இருக்கும். ஆனால் யாராவது வந்து கேட்பார்கள், கொடுப்பார், திரும்ப வராது. அல்லது செலவழிந்துவிடும். அவருக்கு வயது 60-ஐ நெருங்குகிறது. பிள்ளைகள் சரியில்லை. இத்தனை ஆண்டுகள் சம்பாதித்து அவர் கையில் ஒரு பைசா மிச்சமில்லை. உடல் சோரும்போது அவரையும் அவரது மனைவியையும் யார் காப்பாற்றப் போகிறார்கள்? இந்தியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்று எதுவும் இல்லை.

பேசிக்கொண்டே இருந்ததில் வீடு வந்து சேர்ந்துவிட்டது. இறங்கும்போது, அவரிடம் வங்கிக் கணக்கு திறப்பது பற்றிச் சொன்னேன். இனியாவது மாதம் 2,000 ரூபாய் என்று சேர்த்துவைத்தால், ஐந்து வருடங்கள் கழித்து ஓரளவுக்குப் பணம் இருக்கும் என்றும் அதைக்கொண்டு கண்ணியமாக இறுதிக் காலத்தில் வாழமுடியும் என்றும் விளக்கினேன். அவர் முகத்தில் நம்பிக்கை தெரியவில்லை. அவர் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வங்கி ஒன்றை அணுகச் சொன்னேன். செய்தாரா என்று தெரியாது.

(தொடரும்)

Thursday, October 15, 2009

ரிச்சர்ட் ஃபெய்ன்மன் பற்றிய அறிமுகம்

பேராசிரியர் சுவாமிநாதன் நோபல் பரிசு பெற்ற இயல்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபெய்ன்மனை அறிமுகப்படுத்திப் பேசுகிறார்.


Watch Prof Swaminathan introduces Richard Feynman in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

எம்.ஏ கலைஞர் தாட்ஸ்

நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜி.திருவாசகம் முக்கியமான இரு கருத்துகளைக் கூறுவதை தொலைக்காட்சியில் பார்க்க/கேட்க நேரிட்டது.

1. இனி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மொழியாக தமிழ் இருக்குமாம். முதல் கட்டமாக அனைவரையும் தமிழில் கையெழுத்திடக் கேட்டுக்கொள்ளப்போவதாகத் துணைவேந்தர் கூறினார்.

2. அடுத்த வரியிலேயே, மூன்று புதிய முதுநிலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதாகச் சொன்னார். எம்.ஏ இன் பெரியார் தாட்ஸ், எம்.ஏ இன் அண்ணா தாட்ஸ், எம்.ஏ இன் கலைஞர் தாட்ஸ். (ஆமாம். முற்றிலும் ஆங்கிலத்தில்தான் இந்தப் படிப்புகளின் பெயர்கள் சொல்லப்பட்டன.)

ஜோக்கர்கள்தான் நமக்குத் துணைவேந்தர்களாக வாய்க்கிறார்கள். இது இவரது கண்டுபிடிப்பா அல்லது இவருக்கு முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டு இவரால் நிகழ்த்தப்படுகிறதா என்று தெரியவில்லை.

தமிழில் கையெழுத்து போடுவதுதான் தலையாய விஷயம் என்று நினைக்கிறவர், “முதுகலைப் படிப்பு - கலைஞர் சிந்தனை” என்று சொல்லியிருக்கலாமே?

கையெழுத்து என்பது ஒரு கிறுக்கல். இன்று புதிதாகக் கையெழுத்து போடத் தொடங்குபவர்கள் தமிழிலா, ஆங்கிலத்திலா என்று முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் பல ஆண்டுகளாக ஏதோ ஒரு மொழியில் கையெழுத்திடுபவர்களை திடீரென தமிழில் கையெழுத்து போடு என்று சொல்வது என்ன அபத்தம்?

அது கிடக்கட்டும். இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் யார் பெயரை எதற்கு வைப்பது என்று அடித்துக்கொண்டார்கள். கருணாநிதியின் பெற்றோரின் பெயர்களை ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு வைப்பது பற்றி ஜெயலலிதா விடுத்த அறிக்கைதான் பிரச்னையின் ஆரம்பம். அதற்கு கருணாநிதி சரியாகவே பதில் அளித்திருந்தார். இந்த அம்மா முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா என்றுகூடப் பெயர் வைக்கமாட்டார்கள். ‘புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களின் காலுக்கு செருப்பு கொடுக்கும் திட்டம்’ என்றுதான் பெயர் வைப்பார்கள். எப்போதும்போல கருணாநிதி தன் அறிக்கையின் கடைசியில் sexist remark ஒன்றை வீசிவிட்டுத்தான் போனார். மைசூர் மகாராஜா கொடுத்த ஒட்டியாணம் பற்றிய கமெண்ட் இங்கே தேவையில்லாதது.

அடுத்த நாளே ஒரு பல்கலைக்கழகம் ‘எம்.ஏ கலைஞர் தாட்ஸ்’ என்ற படிப்பைக் கொண்டுவருகிறது. மூன்று, நான்கு செமஸ்டர்கள் படிக்கவேண்டிய அளவுக்கு இந்த ‘தாட்ஸ்’-இல் என்ன இருக்கிறது? ஒரு புண்ணாக்கும் இல்லை. பெரியார் தாட்ஸ்? நிச்சயம் செய்யலாம். அதுகூட ஒரு முதுநிலைப் படிப்பு அளவுக்குத் தேவையா என்று தெரியவில்லை. அண்ணா தாட்ஸ் என்பதே verhy thin! நல்லவேளை... இத்துடன் கலைஞர் தாட்ஸ் என்பதுடன் நிறுத்திக்கொண்டார்கள். எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே!

அரிஸ்டாட்டிலின் ‘காரணங்கள்’

மானுடவியல் வகுப்பு (Itunes U: Terrence W. Deacon, UC Berkely, Anthropology 1, 001, Spring 2009) ஒன்றில் சேர்ந்து படித்து வருகிறேன். அதில் நடுவில் அரிஸ்டாட்டிலின் Causes என்பது பற்றி வந்தது. கிரேக்க தத்துவவியலாளர்கள் பற்றி நான் படித்ததில்லை. தேடிப் படிக்கவேண்டும். அதுவும் Itunes U-ல் இருக்கும்.

Causes என்பதை ‘காரணங்கள்’ என்று மொழிபெயர்க்கலாமா? அரிஸ்டாட்டில் எந்த ஒரு தயாரிப்புக்கும் நான்கு காரணங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

(1) Material Cause - பொருள் காரணம். ஒரு தயாரிப்பு எந்தப் பொருளால் உருவாக்கப்படுகிறது என்பது. மேஜை மரத்தால் உருவாக்கப்படுகிறது என்றால் மேஜையின் பொருள் காரணம் மரம். சட்டை பஞ்சுத் துணியால் உருவாக்கப்பட்டால், சட்டையின் பொருள் காரணம் பஞ்சுத் துணி.

(2) Formal Cause - உருவக் காரணம். ஒரு தயாரிப்பு இப்படித்தான் வடிவத்தில், அளவில் இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உருவக் காரணம். அதாவது அந்தத் தயாரிப்பின் வடிவமைப்பாளர் உருவாக்கியிருக்கும் டிசைன்தான் அந்தத் தயாரிப்பின் உருவக் காரணம். ஒரு மேஜை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு வடிவம் உள்ளதல்லவா? நான்கு கால்கள், ஒரு மேல் தட்டு, சில ஆணிகள் (மிக எளிமையான ஒரு மேஜை).

(3) Efficient Cause - உருவாக்கும் காரணம். வடிவம் தெரியும். பொருள் கையில் உள்ளது. யார் அந்தப் பொருளை உருவாக்கப் போகிறார்கள்? ஒரு மனிதன் அல்லது மனிதன்+இயந்திரம் சேர்ந்து அந்தத் தயாரிப்பை உருவாக்கும்போது அவர்கள் அந்தத் தயாரிப்பின் உருவாக்கும் காரணமாக இருக்கிறார்கள்.

(4) Final Cause - இறுதிக் காரணம். ஒரு தயாரிப்பு எதற்காக உருவாக்கப்படுகிறது? மேஜை என்றால் உட்கார்ந்து எழுத, கம்ப்யூட்டரை வைத்துக்கொள்ள அல்லது உட்கார்ந்து உணவு உண்ண. (என் அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், எல்லாப் புத்தகங்களையும் கொத்தாக அள்ளிக் குப்பையாகப் போட்டுக்கொள்ள!) காரணமில்லாமல் ஒரு தயாரிப்பு உருவாக்கப்படாது என்ற கொள்கை மூலம் வருவது இது.

சரி. இந்தப் பதிவின் இறுதிக் காரணம் என்ன என்று கேட்கிறீர்களா? ஒருவேளை இதைப் படிக்கும் யாராவது அரிஸ்டாட்டில் வேறு என்னதான் சொல்லியிருக்கிறார் என்று தேடி, அவரது புத்தகத்தை முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாமே என்பதுதான்.

தொடர்புள்ள சுட்டி: The Four Causes

தினமலர் - நடிகைகள் பிரச்னை

தினமலர் பத்திரிகையில் எழுதப்பட்ட அநாகரிகமான, அவதூறான ஒரு செய்தி, பொதுவாக சட்டத்தின் வரம்புக்குள் தீர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நடிகர் சங்கத்தினர் அதை வரம்புக்கு வெளியே கொண்டுசென்று பிரச்னையைப் பெரிதாக்கியுள்ளனர். அதன் விளைவாக நிறைய கேலிக்கூத்துகள் நடைபெறப்போகின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

முதலில் தினமலர் பத்திரிகைச் செய்தி, என் கணிப்பில் அவதூறு என்ற வகையை மட்டுமே சார்ந்ததாகும். அந்தச் செய்தி உண்மையா, இல்லையா என்பதல்ல விஷயம். ஒரு செய்தியில் சில உண்மைகள் இருந்தாலும் செய்தியாகப் பதிப்பிக்கும்போது அதனால் பொது நன்மை என்ன என்பதையும் பார்க்கவேண்டும். ஒரு செய்தி உண்மையே ஆனாலும், அதைப் பதிப்பிப்பதன்மூலம் பிறருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றால், அந்தச் செய்தியால் பொது நன்மை ஏதும் இல்லை என்றால், அப்போதுகூட மானநஷ்ட வழக்கு விதிக்கமுடியும். பொது நன்மை என்ற விஷயத்தின் பின்னால் நின்றுகொண்டு மட்டுமே தனிநபர்கள் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளில் வெளியிடமுடியும்.

அப்படிப் பார்க்கும்போது தினமலர் செய்தி முழு வதந்தி என்பது மட்டுமல்ல, முழு அவதூறு. பாதிக்கப்பட்ட அனைத்து நடிகைகளும் ஒவ்வொருவராக அந்தப் பத்திரிகையின்மீது வழக்கு தொடர்ந்து, பெருமளவு நஷ்ட ஈடு கேட்டிருக்கலாம். அதன் விளைவாக நடக்கும் வழக்குகளில் மேலும் பல ‘அசிங்கங்கள்’ வெளிவரலாம். அப்படி வருவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அல்லது மறைப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள் தாரளமாக வழக்கு தொடர்ந்திருக்கலாம். தினமலர் நிச்சயம் தோற்றிருக்கும்; நிறையப் பணத்தையும் இழந்திருக்கும்.

ஆனால், அப்படிச் செய்யாமல், நடிகர் சங்கம் கூட்டம் போட்டுக் கண்டித்தது. அதிலும் பிரச்னை இல்லை. ஆனால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று சத்தம் போட்டது மட்டுமில்லாமல், முதல்வரைச் சந்தித்து, தங்கள் பலத்தைப் பிரயோகித்து தினமலர் நிருபரைச் சரியான காரணம் இன்றிக் கைது செய்யத் தூண்டினர்.

பிரச்னை இங்குதான் ஆரம்பம் ஆகிறது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கைதை எதிர்த்துப் போராடினர். அதில் தாவ்று ஏதும் இல்லை. ஆனால் நடிகர்கள் நடத்திய கண்டனக் கூட்டத்தில் சூர்யா ‘ஈனப்பயல்கள்’ என்று சொன்னதை (அல்லது வேறு சிலர் சில விஷயங்களைச் சொன்னதை) எதிர்த்து வழக்கு போடுவோம் என்று வரும் செய்திகள் அபத்தம்.

“இந்த மாதிரி செய்தி எழுதுபவர்கள் ஈனப்பசங்க” என்று சொல்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இதை எதிர்த்து வழக்கு போட முன்வரும் பத்திரிகையாளர்கள், மெலிந்த தோல் கொண்டவர்கள் என்பது மட்டுமல்ல, முழு முட்டாள்களும் கூட. இந்த வழக்கு நிஜமாகவே போடப்படும் பட்சத்தில் பத்திரிகையாளர்கள் துண்டு, துணி என அனைத்தையும் இழக்கவேண்டிவரும்.

பத்திரிகையாளர்கள் எந்த இழவையும் எழுதி, போராட்டம் மூலம் தப்பித்துவிட முடியும் என்ற நிலை இந்தியாவில் இருக்கக்கூடாது. அதற்கு நடிகர்கள் தைரியமாகச் சில வழக்குகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றால்தான் முடியும்.

தினமலர் ஆரம்பித்து வைத்த வம்பு வழக்கை எப்படியாவது முன்னெடுத்துச் செல்வதே நல்லது என்று நக்கீரன் போன்ற சில அக்கப்போர் பத்திரிகைகள் முடிவெடுத்திருப்பதுபோல் தோன்றுகிறது. (நக்கீரன் ஒன்றுதான் கண்ணில் பட்டது. “நான் விபசாரி என்றால் நயந்தரா என்னவாம்?” என்று புவனேஸ்வரி சொல்வதுபோல முன் அட்டை. மேலும் பல வாரம் இருமுறை இதழ்களும் இந்தக் குளத்தில் குளித்து முத்தெடுக்க முற்பட்டிருக்கலாம்.)

சிவில் வழக்குகள் மூலம் சில பத்திரிகளுக்குப் பாடம் கற்பிக்க நடிகர் சூர்யா சொல்வதுபோல நடிகர் சங்கத்தினர் ஒன்றுசேர்ந்து சட்டப் பிரிவு ஒன்றை அமைக்கவேண்டும்.

Wednesday, October 14, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 12: தொழில்முனைவோர் பற்றி எஸ்.எல்.வி. மூர்த்தி

சென்ற வாரம் ஞாயிறு 12.00 - 1.00 மணி ஆஹா FM 91.9 MHz கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் எஸ்.எல்.வி.மூர்த்தி பத்ரி சேஷாத்ரியுடன் பேசிய நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

தொழில்முனைவோருக்கான குணாதிசயங்கள், என்ன தேவை, என்ன தேவையில்லை, யார் வேண்டுமானாலும் தொழில்முனைவர் ஆகலாமா போன்ற பல கேள்விகளுக்கு நிறைய கதைகளுடன் பதில் அளித்தார்.

பதிவர் (வலதுசாரி) அதியமான் தொலைபேசி மூலம் பேசினார். தன் சொந்த அனுபவங்களுடன் பல சுவாரசியமான தகவல்களையும் சொன்னார். எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியின் வணிகத்துறைத் தலைவர் பேராசிரியர் ரோஸி அவர்கள் நடத்தும் தொழில்முனைதல் பாடம் பற்றி சில வார்த்தைகள் பேசினார்.

இங்கேயே கேட்க:



தரவிறக்கிக் கொள்ள

மூர்த்தி எழுதியுள்ள புத்தகங்கள்

தொடர்புள்ள புத்தகங்கள்

               
   

சீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்

இந்தியப் பிரதமர் அருணாசலப் பிரதேசம் சென்றதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது சீனா. அதனால் ‘மன வருத்தம்’ அடைந்து புலம்பியிருக்கின்றனர் இந்திய அரசாங்க அதிகாரிகள்.

சீனா இந்த விஷயத்தில் மிகவும் கெட்டிக்கார நாடு. ஜம்மு காஷ்மீர் வாழ் மக்கள் சீனாவுக்குச் செல்ல விசா கேட்டால் அந்த விசா ஸ்டாம்பை இந்திய பாஸ்போர்ட்டில் போடாமல் தனியாக ஒரு தாளில் போடுவது. அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அதிகாரிகளுக்கு சீனா செல்ல விசா விஷயத்தில் குழப்புவது. மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் சென்றால் சும்மா ஒரு பிட்டைப் போட்டுவைப்பது.

உடனே இந்தியா பதறும். எல்லைப் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தைமூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்கிறோமே, இப்படி எங்களை டார்ச்சர் செய்கிறீர்களே என்று புலம்பும்.

இந்தியாவைப் பதற்றத்தில் ஆழ்த்தும் உளவியல் டெக்னிக் இது. இந்தியா இதில் சிக்குகிறது. மாற்றாக இந்தியா என்ன செய்யவேண்டும்?

1. பதற்றத்துடன் பதில் சொல்லவேண்டாம். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இதற்கு பதில் சொல்லவேண்டாம். சீனா பக்கத்திலிருந்து கண்டனம் சொல்லியிருப்பது யார் என்று பாருங்கள். கடைமட்ட ஊழியர் ஒருவராக இருப்பார். அதைப்போல இந்தியாவில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கடைமட்ட கிளர்க்கைக் கொண்டு மட்டமான தாளில் டைப்ரைட்டர் கொண்டு அச்சடித்த கண்டனக் கடிதத்தை இந்தியன் போஸ்டல் சர்வீஸ் மூலம் டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்துக்கு அனுப்பிவைத்தால் போதும்.

2. ஒவ்வொரு மாதமும் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் போய் ஒரு சிலையைத் திறந்துவைக்கலாம். அவரது ‘சொந்த மாநிலமான’ அசோமுக்குப் போவதற்கு அருணாசலப் பிரதேசம் வழியாக சுற்றிவளைத்துச் செல்லலாம். இன்னும் சொல்லப்போனால் அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் அருணாசலப் பிரதேசம் சார்பில் மன்மோகன் சிங் நிற்பது நலம். (யோசித்துப் பார்க்கும்போது, இது பிரமாதமான ஐடியாவாகத் தோன்றுகிறது!)

3. சீனாவின் ஹு ஜிண்டா, சீனாவின் எந்தப் பிரதேசத்துக்குச் செல்லும்போதும், இந்திய உள்துறை அமைச்சகத்தின் கடைமட்ட கிளர்க் ஒருவர் அதைக் கண்டித்து ஒரு கடிதத்தை (இந்திய போஸ்டல் சர்வீஸ் மூலம்) அனுப்பி வைக்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் திபெத் பற்றி யாராவது ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு கருத்தை வெளியிடலாம். “திபெத் புத்தமதம் இந்தியாவுக்கே வழிகாட்டும்” என்று ஒரு அமைச்சர். “திபெத் உணவகங்கள் இந்தியா முழுதும் திறக்கப்படும்” என்று சுற்றுலாத் துறை அமைச்சர். “தலாய் லாமா முகம் போட்ட ஸ்டாம்ப் - பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுகிறார்” என்று ஒரு அமைச்சர்.

5. இந்தியர்கள் மாண்டரின் கற்றுக்கொள்ள நிறைய உதவிகளை வழங்கவேண்டும். இந்தியர்கள் மாண்டரின் மொழியில் வலைப்பதிவுகளை ஆரம்பிக்க இந்திய அரசு மானியம் வழங்கவேண்டும்! அப்போது நாம் எல்லாம் இந்தக் கருத்துகளை மாண்டரினில் எழுதி சீனர்களைக் கடுப்பில் ஆழ்த்தலாம். அவற்றை சென்சார் செய்வதிலேயே சீன அரசு செத்துவிடும்!

Monday, October 12, 2009

கிழக்கு பதிப்பகம் நடத்திய கட்டுரைப் போட்டி

ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு புத்தகத்தைப் பள்ளி மாணவர்களுக்குப் பரிசாகத் தர டி.ஆர்.சந்தானகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் அளித்துள்ள உதவியைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்காக ஒரு கட்டுரைப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. அதன் வீடியோ:

Saturday, October 10, 2009

ஒபாமா நோபல் பரிசு

அவசரப் பதிவு. பராக் ஒபாமாவுக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுத்திருப்பது வருத்தம் தருகிறது. ஒபாமா மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆகி, சில மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில், ஒன்றும் கான்கிரீட்டாகச் சாதிக்காத நிலையில், ஆஃப்கன் போரில் காலை விட்டுவிட்டு வெளியே மீளமுடியாமல், ஈராக்கில் சொன்னதுபோல் வெளியேறமுடியாமல், காண்டானமோ பே சிறை பிரச்னையை சரியாகத் தீர்க்கமுடியாமல் தடுமாறும் நிலையில், இந்த விருது அவசியம் இல்லை.

ஒபாமாவுக்கே இது distraction ஆக அமையும். ஒபாமா எதிரிகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக.

[ஆனால், அதேநேரம், ஒபாமாவின் புத்தகங்களை தமிழில் வெளியிடும் அதிகாரபூர்வ பதிப்பாளனாக - Dreams From My Father, The Audacity of Hope, Change We can Believe in - அவர் நோபல் வாங்கிய விஷயத்தை மிகவும் பெருமையுடன் அட்டையில் குறிப்பிடுவோம். விரைவில் புத்தகங்களை எதிர்பாருங்கள்!]

Wednesday, October 07, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத்த விநாடி

நாகூர் ரூமி எழுதிய புத்தகம் அடுத்த விநாடி வெளியாகி சுமார் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. கிழக்கு பதிப்பகம் வெளியிடும் முன்னரே ஒரு பதிப்பு வெளியாகியிருந்தது. கிழக்கின் வெளியீடாக, இதுவரையில் குறைந்தது 25,000 பிரதிகளாவது இந்தப் புத்தகம் விற்றிருக்கும். இந்தப் புத்தகத்தின் ரூமி, ஆல்ஃபா தியானம் என்பது பற்றிச் சொல்லியிருப்பார். இரு ஆண்டுகளுக்குமுன், அதே தலைப்பில், அந்தப் பகுதியை விரிவாக எழுதி ஒரு புத்தகமாகத் தருமாறு அவரைக் கேட்டிருந்தோம்.

கிழக்கு பாட்காஸ்ட்டில் சென்ற வாரம், நாகூர் ரூமி, சித்ராவுடன் உரையாடினார்.

இங்கேயே கேட்க:



ஒலிவடிவத்தில் தரவிறக்கிக் கொள்ள

நாகூர் ரூமியின் புத்தகங்கள்

நாகூர் ரூமியின் வலைப்பதிவு

தொடர்புள்ள நூல்கள்

           

[வரும் ஞாயிறு அன்று நான், எஸ்.எல்.வி. மூர்த்தியுடன் தொழில்முனைதல் பற்றிப் பேசுகிறேன். பதிவர் அதியமான் இடையில் தொலைபேசி மூலம் பேசியதும் வரும்.]

Monday, October 05, 2009

பாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரையாடல்

இன்று மதியம் அலுவலகத்தில் வேலை செய்வோரிடையே பாமக, அஇஅதிமுக அணியிலிருந்து விலகியது தொடர்பாக ஒரு சிறு கருத்துக் கணிப்பு + உரையாடல் நடத்தினேன். அதன் ஒலிவடிவம் இங்கே:



மேலே உள்ள இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை என்றால், ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்லுங்கள்.

உரையாடல் சிறுகதைப் பட்டறை - ஒளிப்பதிவுகள்

13 செப்டெம்பர் 2009 அன்று உரையாடல் அமைப்பு சென்னையில் ஒரு சிறுகதைப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது.

அதன் ஒளிப்பதிவை நான் முன்னமே இணையத்தில் ஏற்றியிருந்தேன். என்றாலும் அப்போது பல துண்டுகளாக ஏற்றவேண்டி இருந்தது. யூட்யூப், ஸ்லைட்ஷேர் என்று பல மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டி இருந்தது. இம்முறை முழுவதையும் ஒரே கோப்பாக, veoh.com மூலம் இணைத்துள்ளேன். சரியான plug-in இருந்தால், அப்படியே நேரடியாக முழுவதையும் பார்க்கலாம். ஒலிப்பதிவில் சற்றே முன்னேற்றம் உள்ளது.

பாஸ்கர் சக்தி

Watch Bhaskar Sakthi on writing short stories - His personal experience (Tamil) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

யுவன் சந்திரசேகர்

Watch Yuvan Chandrasekhar on writing short stories - His personal experience (Tamil) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

தேவதாஸ் (கடைசியில் சில நிமிடங்கள் ஒளிப்பதிவு ஆகவில்லை.)

Watch Devadas on writing short stories - International short stories and Tamil translations (Tamil) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

பா. ராகவன்

Watch Pa. Raghavan on writing short stories - Writing for weekly Tamil magazines, Tips for beginners (Tamil) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

வி.பி.தனஞ்செயன்: பாரதமும் பரதமும்

மாதா மாதம் முதல் சனிக்கிழமை தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் நடத்தும் கூட்டத்தில் இந்த மாதம் (3 அக்டோபர் 2009) அன்று நாட்டிய மேதை வி.பி. தனஞ்செயன் கலந்துகொண்டு பேசினார்.

அதன் ஒளிப்பதிவு கீழே. வீடியோவை முழுதாகப் பார்க்க plug-in ஒன்று தேவை. ஒளி ஓகே. ஒலிப்பதிவின் தரம் சுமார்தான்.


Watch V.P. Dhananjayan on the art of Bharatam (Indian Classical Dance) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

சென்ற மாதம் (5 செப்டெம்பர் 2009) அன்று நடந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு இங்கே உள்ளது.

Sunday, October 04, 2009

மாமல்லபுரம்: கலையின் பேராச்சரியம்

பேராசிரியர் சுவாமிநாதன் பலமுறை மாமல்லபுரத்தைப் பற்றி விளக்கிப் பேசும்போது நான் கேட்டிருக்கிறேன். இப்போது நீங்கள் காணப்போகும் பவர்பாயிண்ட் பிரெசெண்டேஷனை பலமுறை பார்த்துள்ளேன். அவருடன் மாமல்லபுரம் சென்று அவர் ஒவ்வோர் இடமாக விளக்கிச் சொல்லும்போது கேட்டிருக்கிறேன். ஒருமுறை ‘மகேந்திரவர்மன் பாதையில்’ என்று மகேந்திரவர்மன் எங்கெல்லாம் குகைக் கோயில்களை உருவாக்கினான் என்று பின்பற்றிச் சென்றோம்.

இனியும் பலமுறை அவருடன் மாமல்லபுரம் செல்வேன்.

காந்தி ஜெயந்தி அன்று நடந்த ஒரு பிரெசெண்டேஷனை விடியோ படமாக எடுத்தேன். சுமார் 2 மணி நேரம். என் கையில் இருந்த வீடியோ பிடிக்கும் கருவியால் இவ்வளவுதான் செய்யமுடிந்தது. திரையில் காணப்படும் பல அவ்வளவு தெளிவுடன் இருக்காது. இருந்தாலும் ஓரளவுக்கு மாமல்லபுரத்தின் சிறப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.

பேச்சு பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். முழுமையாகப் பார்க்கவேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு plug-in தேவை.


Watch Prof Swaminathan on the Uniqueness of Mamallapuram Sculptures (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Prof Swaminathan on the Uniqueness of Mamallapuram Sculptures (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி அன்று, கீழ்க்கட்டளை ஹோலி ஃபேமிலி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒரு விழாவில் கலந்துகொண்டேன்.

கிண்டி வரை சென்னை நகராட்சியின் கையில் உள்ளது என்று தெரிகிறது. அதற்கு அப்பால் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை எல்லாம் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த ஏதோ ஓர் அமைப்பால் பராமரிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அந்த கிரகத்தின் லேண்ட்ஸ்கேப் போலவே சாலைகளை அமைத்துள்ளனர்.

நான் ஸ்கூட்டரில்தான் சென்றேன். மடிப்பாக்கம் சாலையில் ஆதம்பாக்கம் முதல் கீழ்க்கட்டளை வரை நான்கைந்து முறை சென்று வருதல் முதுகெலும்பு உள்ள மிருகங்கள் (நம்மையும் சேர்த்து) அனைத்துக்கும் மிகுந்த ஆபத்து என்று புரிந்துகொண்டேன். அந்தச் சாலையில் செல்ல ஏற்ற ஒரே வாகனம், அப்துல் கலாம் வடிவமைத்ததாகச் சொல்லப்படும் ஹோவர்கிராஃப்ட் மட்டுமே.

திடீரென்று வழியில் ஓரிடத்தில் புழுதிவாக்கம் என்று பெயர் போட்டிருந்தனர். அதற்கு முந்தைய பகுதியும் புழுதி வழிந்தபடியேதான் இருந்தது. இந்த இடத்துக்கு மட்டும் ஏன் இந்தச் சிறப்புப் பெயர்? அடுத்து மேடவாக்கம். மேடும்(பள்ளமும்)வாக்கம் என்ற பெயர் அப்படித் திரிந்துபோனதா தெரியவில்லை. தமிழறிஞர்கள்தான் சொல்லவேண்டும்.

ஒருவழியாக அந்தப் பள்ளியைக் கண்டுபிடித்து (மெயின் ரோடில்தான் உள்ளது. ஆனால் மெயினில் ரோடுதான் இல்லை) உள்ளே நுழைந்தேன். நிறைய என்.எஸ்.எஸ் மாணவர்கள் பசியோடு இருந்தனர். ஒரு பெரிய அலுமினியப் பாத்திரத்தில் இருந்து தட்டுகளில் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. பிரிஞ்சி?

தூரத்தில் ஒரு மேடையில் சிலர் உட்கார்ந்திருந்தனர். அரிமா சங்கத்தினர். அவர்களுக்கே உரித்தான ஒரு கண்டாமணி மேஜையில் இருந்தது. நான் உள்ளே நுழையவும் நிகழ்ச்சி ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. பிரசன்னா கையில் கேமராவுடன் இருந்தார். பாதி நிகழ்ச்சி ஆரம்பித்ததும் திடீரென நான் வந்துவிட்டேனா என்பதை உறுதிசெய்துகொண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் என்னையும் மேடைக்கு அழைத்தார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 70 பள்ளிக்கூடங்களின் மானவர்களுக்கு கட்டுரைப் போட்டி நிகழ்த்தியிருந்தனர் அந்த அரிமா சங்கத்தினர். அதற்கான பரிசுகளை (புத்தகங்கள்) அளிக்க நாங்கள் ஒப்புக்கொண்டிருந்தோம். அரிமா சங்கத்தினர் பலரும் பேசினர். நானும் காந்தியைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினேன். முக்கியமாக காந்தி எழுதிய ‘தென் ஆப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ நூலை அனைவரையும் படிக்கச் சொன்னேன். (இந்த நூல் விரைவில் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக, நல்ல, எளிமையான தமிழாக்கமாக வர உள்ளது. சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாக இப்போதே கிடைக்கிறது. ஆனால் தமிழ் கொஞ்சம் கஷ்டம்தான்! இணையத்தில் ஆங்கில வடிவம் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளமுடியும்.)

அந்தப் பள்ளியில் ஒரு புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளோம். இன்றுவரையில் நடைபெறும்.

===

பேராசிரியர் சுவாமிநாதனை காந்தி ஜெயந்தி அன்று ஒரு பள்ளிக்கூடத்தினர் பேசுவதற்காக அழைத்திருந்தனராம். அந்தப் பள்ளி சென்னையில் உள்ள ஒரு ‘சர்வதேச’ பள்ளி. அவர்கள் தெளிவாகவே சொல்லிவிட்டனராம். ‘எங்கள் மாணவர்களுக்கு காந்தியைப் பற்றி அக்கறை இல்லை. தேவையும் இல்லை. அதனால் நீங்கள் காந்தியைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை. வேறு என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.’

இதுபோன்ற தெளிவுதான் நமக்கு மிகவும் அவசியம்!

===

காந்தி ஜெயந்தி அன்று பேராசிரியர் சுவாமிநாதன் மாமல்லபுரச் சிற்பங்கள் பற்றி நீண்ட பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன் உரை நிகழ்த்தினார். அந்த வீடியோவை வலையில் ஏற்றிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இதைப் படிக்கும்போது veoh.com வழியாக அந்த உரை உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.

Saturday, October 03, 2009

கிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை

எழுத்தாளர் சா.கந்தசாமி ஓர் ஆவணப்படம் எடுத்துவருகிறார். 18-ம் நூற்றாண்டில், பாண்டிச்சேரியில் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை என்பவர்மீதான ஆவணப்படம் அது. மதுரை புத்தகக் கண்காட்சியின்போது அங்கே அவரைச் சந்தித்தேன். அப்போது ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி உரையாடினோம். அதன் தொடர்ச்சியாக இன்று காலை அவரை அவரது வீட்டில் சந்தித்து ஒலிப்பதிவு செய்த பாட்காஸ்டிங் இது.

கிழக்கு பாட்காஸ்ட்

எனது முந்தைய பதிவு ஒன்று: ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்
.

Thursday, October 01, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்

கிழக்கு பாட்காஸ்டில் சென்ற ஞாயிறு அன்று ஸ்ரீநிவாச ராகவனும் உமா சம்பத்தும் சித்ராவுடன் உரையாடினார்கள். சித்தர்கள் பற்றிய நம்பிக்கைகள், சதுரகிரி மலை என பல விஷயங்கள் உரையாடலில் வெளியானது.

கிழக்கு பாட்காஸ்ட்




தொடர்புள்ள புத்தகங்கள்: