Wednesday, February 24, 2010

கரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்

நாளை (25 பிப்ரவரி 2010) கரூரில்

22, செங்குந்தபுரம்
5வது குறுக்குத் தெரு
(திண்ணப்பா திரையரங்குக்குப் பின்புறம்)
கரூர் - 2

என்ற முகவரியில் கிழக்கு பதிப்பகத்தின் பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட உள்ளது. கரூரில் இருக்கும் நண்பர்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை அங்கு வந்தால் என்னைச் சந்திக்கலாம்.

Zoho அலுவலகத்தில் ஒரு நாள்

சென்ற வாரம் சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள Zoho அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே எங்கள் புத்தகங்களை வைத்து விற்பது முதன்மை நோக்கம். அவர்களது Zoho University ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசுவது இரண்டாவது. அங்கே உள்ள புக் கிளப் உறுப்பினர்களுடன் கலந்து பேசுவது மூன்றாவது.

மென்பொருள் வேலையில் ஈடுபடுவோருக்கு பெரும்பாலும் நேரம் கிடைப்பது அரிது. அலுவலகம் விட்டால் வீடு. வீடு விட்டால் அலுவலகம். போக வரவே நிறைய நேரம் எடுக்கும். வார இறுதிகளிலும் சிலர் வேலையில் ஈடுபட்டிருப்பர். இந்த நிலையில் வீட்டிலிருந்து புத்தகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்குவது அரிது. படிக்கும் ஆர்வம் இருந்தாலும் புத்தகங்கள் வாங்குதல் குறைவு.

இதற்குமுன் ஒரு முறை சென்னையில் இருக்கும் இன்ஃபோசிஸ் கேம்பஸ் ஒன்றில் புத்தகங்கள் விற்கும் முயற்சியை எடுத்திருந்தோம். அது இரண்டு வருடங்களுக்கு முன்பாக. அதன்பின் ஏதோ காரணங்களால் (விற்பனை குறைவு + அனுமதிகள் பெறுவதில் நிறைய தாமதங்கள்) அதனை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்லவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள்!


Zoho அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சுமார் 1,000 பேர். சனி மதிய உணவு நேரத்துக்குச் சற்று முன்னதாக கிழக்கு பதிப்பகமும் இந்தியா டுடே புக் கிளப் ஆசாமிகளும் தனித்தனியாக கடை பரப்பிக் காத்திருந்தோம். உணவுக்காக மக்கள் கூட்டம் வர ஆரம்பித்ததுமே அனைவரும் கூட்டம் கூட்டமாக புத்தகங்களை நோக்கிப் படையெடுத்தனர்.

Zoho மற்றுமொரு வசதியும் செய்துகொடுத்திருந்தது. புத்தகம் வாங்கும் ஊழியர்கள், ஒரு தாளில் தொகையை எழுதி கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றால் போதும். சம்பளத்திலிருந்து அந்தத் தொகையைப் பிடித்தம் செய்து அலுவலகம் நேராக எங்களுக்கு அனுப்பிவிடும். சுமார் 95% பேர் அந்த முறையிலேயே புத்தகம் வாங்கினர். கிரெடிட் கார்ட், பணம் என்று எதுவும் தேவையில்லை.

நாங்கள் மொத்தம் பதிப்பித்திருந்த 1500 புத்தகங்களில் வெறும் 300-ஐ மட்டுமே எடுத்துச் சென்றிருந்தோம். இல்லாத புத்தகங்களுக்கும் ஏக டிமாண்ட். எனவே அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களும் புத்தக விற்பனையை நீட்டித்தோம்.

இப்போது மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தினத்தில் வாருங்கள் என்று கேட்டுள்ளனர். நிச்சயம் செய்வோம்.


Zoho-வில் வேலை செய்யும் சிலருக்கு என் வலைப்பதிவு பழக்கம். கிழக்கு புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள். சிலர் காரமாக விமரிசனமும் செய்துள்ளவர்கள். ஆனாலும் பெரும்பாலானோர் (70%?) கிழக்கு அல்லது தமிழ்ப் புத்தகங்களை அதிகம் அறியாதவர்கள் என்றே தோன்றியது. முதல்முறையாக இந்தப் புத்தகங்களைப் பார்க்கிறார்கள். பார்த்து, தேடி, விருப்பத்துடன் வாங்கிக்கொண்டார்கள். பல புதிய வாசகர்கள் கிடைப்பது சந்தோஷமாக இருந்தது.

இணையத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என்பதால், இணையம் வழியாகவே - அதுவும் Zoho suite of services துணைகொண்டு புது புத்தகம் வந்தால் அந்த அலுவலகத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் தரும் வகையிலும், Intranet வழியாகவே புத்தகங்கள் வாங்கும் வகையிலும் சில காரியங்களைச் செய்யலாம். Zoho-வில் வேலை செய்யும் ஆர்வலர்கள் இந்தத் திட்டத்தை எடுத்துக்கொள்ளலாமே? :-)

***

இந்தத் திட்டத்தால் எங்களுக்கும் பயன். தமிழ்ப் புத்தகங்களைப் படிக்க விரும்பும் Zoho ஊழியர்களுக்கும் பயன். இதேபோல சென்னையில் உள்ள பிற மென்பொருள் (அல்லது பிற) நிறுவனங்கள் - குறைந்தது 1,000 பேர் வேலை செய்யும் இடங்கள் என்று வைத்துக்கொள்வோமே - எங்களுக்கு அனுமதி கொடுத்தால், சந்தோஷமாக அங்கே வந்து கடைபரப்புவோம். டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், காக்னசண்ட், எச்.சி.எல் இன்னபிற மென்பொருள் கம்பெனிகளைச் சேர்ந்த, சென்னையில் உள்ள, இந்த வலைப்பதிவைப் படிக்கும் புத்தக விரும்பிகள் என்னை உடனடியாகத் தொடர்புகொள்ளவும்!

Sunday, February 21, 2010

குரங்கு + சிப்ஸ் + கோக-கோலா

இன்று மாமல்லபுரம் போயிருந்தபோது பிடித்த வீடியோ. வேறு சில படங்களும் எடுத்தேன். அவையெல்லாம் பின்னர். இதற்கு விளக்கம் தேவையில்லை என்பதால்...

Friday, February 19, 2010

ஹாட் சாக்லேட்டில் சிலந்திவலை

சென்னை ராதாகிருஷ்ணன் சாலை Hot Breads கடையில், ரசித்துக் குடித்தது:

Thursday, February 18, 2010

அஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு

அஜந்தா ஓவியங்கள் அற்புதமானவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கூர்ந்து நோக்கும்போது எந்தவிதமான ஆடைகளை அந்தக் கால மாந்தர் அணிந்திருந்தனர், அந்தத் துணிகளை அவர்கள் எப்படித் தயாரித்திருக்கக்கூடும், எம்மாதிரியான சாயம் பூசுதல், பிற நுட்பங்கள் அக்காலத்தில் இருந்தன, ஆடைகளை எப்படித் தைத்தனர் போன்ற பலவற்றையும் ஒரு நிபுணரால் கண்டுபிடிக்கமுடியும்.

பூஷாவளி நடராஜன் என்ற ஆடை வடிவமைப்பாளர், பிப்ரவரி மாதம் தமிழ் பாரம்பரியக் குழுமம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் வீடியோ கீழே. கூடவே தானே தயாரித்திருந்த சில துணி வகைகளையும் எடுத்து வந்து ஒரு கண்காட்சியையும் நடத்தினார். வீடியோ veoh.com என்ற தளத்திலிருந்து வருகிறது. பார்க்க plugin தேவைப்படும்.


Watch Bushavali Natarajan on Ajanta Paitings and Textile Design (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Bushavali Natarajan on Ajanta Paitings and Textile Design (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

வீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்

கடந்த சில மாதங்களாக ஆடியோ, வீடியோ துண்டுகளை ஏற்றாமல் வைத்திருந்தேன். வேலைப் பளுதான் காரணம். அடுத்து இரண்டு, மூன்று நாள்களில் அனைத்தையும் சேர்த்துவிடுகிறேன்.

முதலில் ஜனவரி 2010-ல் தமிழ் பாரம்பரியம் குழுமம் சார்பாக பேராசிரியர் சுவாமிநாதன் அஜந்தா குகை ஓவியங்கள் பற்றிப் பேசியதன் வீடியோ கீழே (இரண்டு துண்டுகளாக). Veoh.com என்ற தளத்திலிருந்து வருகிறது. தனியான plug-in இருந்தால்தான் பார்க்கமுடியும். வேண்டியவர்கள் அந்தத் தளத்திலிருந்து mp4 கோப்பாகவே இறக்கிக்கொள்ளலாம். பிறகு எப்படிவேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் கிட்டத்தட்ட 700 MB அளவுக்கு மேல் இருக்கும்.


Watch Prof Swaminathan on Ajanta Paintings (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Prof Swaminathan on Ajanta Paintings (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

Saturday, February 13, 2010

இந்தியர்களால் துயருறும் காந்தி - 1

காந்தியின் நினைவு தினத்துக்கு மூன்று தினங்களுக்கு முன் பிரிட்டனின் கார்டியன் செய்தித்தாளில் மைக்கல் கானலன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தியாவில் பெண்கள் இன்று படும் துயரங்களுக்கெல்லாம் காரணம் காந்திதான் என்பது அந்தக் கட்டுரையின் சாராம்சம். (Women suffer from Gandhi's legacy)

இதை முன்வைத்து மருதன் தன் வலைப்பதிவில் காந்தியின் பெண்கள் என்று எழுதினார். அடுத்து ரவிபிரகாஷ் அந்த கார்டியன் கட்டுரையை காந்தியால் துயருறும் பெண்கள் என்று தமிழில் மொழிபெயர்த்தார்: (ரவிபிரகாஷ் | மருதன்). ரவிபிரகாஷின் மொழியாக்கத்தில் சில பிழைகள் உள்ளன.

காந்தியின் கருத்துகள் காரணமாக இந்தியாவில் பெண்கள் இன்றும் துயர் உறுவதாகச் சித்திரிக்கும் மைக்கல் கானலனைப் போல காந்தியால் இன்று இந்தியாவில் இந்துக்கள் துயர் உறுகிறார்கள் என்று பலர் சித்திரிக்கிறார்கள். இன்னும் பலர் இந்தியாவில் உள்ள அனைவருமே காந்தியால் துயர் உறுகிறார்கள் என்று சித்திரிக்கிறார்கள்.

ஒருவேளை இவை அனைத்துமே உண்மையாக இருக்கலாம். இந்தக் கருத்துகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் வலுவான பகுத்தறிவின் பின்னணியிலும் இயங்கியல் பொருள்முதல்வாதப் பின்னணியிலும் வந்திருக்கும் நாம் அப்படியே பிறர் சொல்வதை ஏற்பது நியாயமா? கொஞ்சம் ஆழ்ந்து உண்மை என்ன என்று கண்டறிய வேண்டுமல்லவா? மைக்கல் கானலன் என்ற வெள்ளைக்காரர்கூட காந்தியை அப்படி இப்படி படித்து எதையோ எழுதிவிடுகிறார். நம்மவர்கள் எந்த இடத்தில் காந்தி இப்படியெல்லாம் சொன்னார், எழுதினார் என்பதைக் கண்டறியவேண்டுமல்லவா?

மீண்டும் சாராம்சத்துக்கு வருவோம். காந்தி பெண்கள் பற்றிச் சொன்ன கருத்துகள் என்று மருதன் கானலனைப் படித்து முன்வைப்பவை இவை:
1) ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான்.

2) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.

3) ஒரு தகப்பன், தன் குடும்பத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம்.
மருதன் இதற்கான ஆதாரங்களை காந்தியின் எழுத்துகளிலிருந்தே எடுத்து முன்வைப்பதாகச் சொல்கிறார். அவர் எவ்வளவு தூரம் காந்தியைப் படித்துள்ளார், எவ்வளவு எளிதில் இவற்றை முன்வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. எனவே என்னால் முடிந்த அளவு அவருக்கு உதவி செய்யலாம் என்றிருக்கிறேன்.

கானலன் முதலில் குறிப்பிடுவது டால்ஸ்டாய் பண்ணையில் காந்தி ஒரு சோதனை செய்தபோது நடைபெற்றது. வழக்கம்போல, காந்தியே இந்தச் சம்பவத்தை தனது ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ என்ற புத்தகத்தில் 35-ம் அத்தியாயத்தில் விரிவாகக் குறிப்பிடுகிறார். அதன் தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்.
ஒரு நாள் ஒரு வாலிபன் இரு பெண்களை தவறான முறையில் கேலி செய்தான் என்ற விஷயம், அப்பெண்கள் மூலமாகவோ அல்லது வேறு குழந்தைகள் மூலமாகவோ எனக்குத் தெரிய வந்தது. அந்தச் செய்தி என்னை நடுங்கச் செய்தது. விசாரித்ததில் அது உண்மைதான் என்று அறிந்தேன். அந்த வாலிபனைக் கூப்பிட்டுக் கண்டித்தேன். ஆனால், அது போதவில்லை. இனி அந்தப் பெண்களை எவரும் தவறான கண்களுடன் பார்க்காமல் இருப்பதற்கான எச்சரிக்கையாகவும், தங்களுடைய பரிசுத்தத்தை எவரும் தாக்கமுடியாது என்ற தைரியம் பெண்களுக்கு வருவதற்கு அறிகுறியாகவும் அப்பெண்கள் மேனியில் ஏதாவது சின்னங்கள் இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.

ஸ்ரீராமனிடமிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பிரிந்து இருந்த சீதையை, அவள் தூய்மையின் காரணத்தால் காம, குரோதம் மலிந்த ராவணன் தொடக் கூட முடியவில்லையல்லவா? இந்தப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கவும், அதே சமயத்தில் பாவியின் கண்கள் சுத்தப்படவும் இதைச் செய்யலாம் என்று நினைத்தேன்.

என்ன விதமான குறியை அவர்கள் அணியவேண்டும்? இப்பிரச்னையைப் பற்றி இரவு முழுவதும் உறக்கமின்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். காலையில் எழுந்ததும், அந்தப் பெண்களின் அழகான நீண்ட முடியை வெட்டிவிட அனுமதிக்கும்படி மெதுவாகக் கேட்டுக்கொண்டேன். பண்ணையில் நாங்களே ஒருவருக்கொருவர் முடிவெட்டிக்கொண்டு சவரமும் செய்துகொள்வது வழக்கம். எனவே எங்களிடம் முடிவெட்டும் கருவியும் கத்தரிக்கோலும் இருந்தன.

முதலில் அப்பெண்கள் நான் சொன்னதற்குச் சம்மதிக்கவில்லை. பண்ணையில் இருந்த மூத்த பெண்களுக்கு இதைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அவர்களாலும் முதலில் முடிவெட்டுதலை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கடைசியில் என் சொல்லை ஆதரித்தார்கள்.

அந்தச் சிறுமிகள் இருவரும் பெருந்தன்மையுள்ளவர்கள். பாவம், அதில் ஒருத்தி இப்போது உயிருடன் இல்லை; அவள் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவள். மற்றொருத்தி இப்போது திருமணம் ஆகி குடித்தனம் நடத்தி வருகிறாள்.

இறுதியில் அவர்கள் இருவரும் சம்மதித்ததும், நானே, என் கைகளால் அவர்கள் தலை மயிரை வெட்டினேன். பிறகு என் செய்கையின் கருத்தை வகுப்பில் விளக்கிக் காட்டினேன். அதன் மூலம் பெரிய பயன் விளைந்தது. அதற்குப் பிறகு தவறான கேலி வார்த்தை எதுவும் என் காதில் விழவில்லை. மயிர் வெட்டப்பட்ட அப்பெண்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. அவர்களுக்கு இதன் மூலம் எவ்வளவு லாபம் என்பதை யார் அறிவார்?

அந்த வாலிபர்கள் இந்தச் சம்பவத்தை இன்னும் மனத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும், தம் கண்களைப் பாவம் செய்வதிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்றும் நம்புகிறேன்.

இந்தப் பரிசோதனைகளைப் பற்றி நான் எழுதுவது, மற்றவர்கள் பின்பற்றுவதற்காக அல்ல. அப்படிப் பின்பற்றும் ஆசிரியர்கள் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாவார்கள். எவ்வளவு தூரம் ஒருவன் இவ்விஷயங்களில் செல்ல முடியும் என்பதையும் சத்தியாக்கிரகத்தின் தூய்மையையும் காட்டுவதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.

இந்தத் தூய்மையே வெற்றிக்கு நிச்சயமான உத்தரவாதம். இவ்விதமாகப் பரிசோதனைகளை ஆரம்பிக்குமுன் ஓர் ஆசிரியர், அந்தக் குழந்தைக்குத் தாயும் தந்தையுமாக இருந்து எந்த விதமான விளைவுகளுக்கும் தயாராகவும் இருக்க வேண்டும். மிகக் கடுமையான தவம்தான் இப்படிச் செய்ய அவரைத் தகுதியுள்ளவராக்கும்.
இந்தச் செயலைச் செய்தவர் யார் என்று பார்ப்போம். யாரோ தெருவில் போகும் ஒரு பெண்ணை தெருவில் போகும் ஓர் ஆண் சீண்டினான் என்ற காரணத்தால் அரச மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் நாட்டாமை ஒருவர், ‘அட, அந்தப் பொண்ண இழுத்துகிட்டுவாலே! அவ முடிய இழுத்து வெட்டுலே!’ என்று தீர்ப்பு கூறவில்லை.

காந்திதான் அந்தப் பெண்களுக்கும் வம்பு செய்த ஆணுக்கும் தந்தையாக இருந்தார். அவரது அரவணைப்பில்தான் அவர்கள் மூவரும் படித்துக்கொண்டிருந்தனர். காந்தியின் கஸ்டடியில் பல ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் படித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அந்தக் குழந்தைகளின் அம்மாக்களும் அப்பாக்களும் அருகே கூட இல்லை. அப்போது, ‘நல்லா பஜனை செய்யுங்க, நானே காண்டம் வாங்கித் தரேன்’ என்றா காந்தி அவர்களிடம் சொல்லியிருக்கமுடியும்?

காந்தியின் மனம் பதைபதைத்துப்போனது. இதெல்லாம் நடந்தது 1910-களில். அதாவது இன்றைக்குச் சுமார் 100 வருடங்களுக்கு முன். அமெரிக்கா முதற்கொண்டு பிரிட்டன் வரை கட்டற்ற செக்ஸ் உறவு என்று யாருமே பேசியதில்லை. ஆனால் மனித இனம் உருவான காலந்தொட்டே அடாலசண்ட் கட்டத்தின் டெஸ்டாஸ்டெரோன் ஹார்மோன் ஆண்களைக் குரங்குகளாக்கி விடுகிறது. அப்போது இந்த ஆண்கள் செய்யும் கேலியும் கிண்டலும் இன்றும்கூட பெண்களை வதைக்கிறது.

இதற்கு என்ன தீர்வு என்று இன்று நமக்குத் தெரியுமா? ஆண்களுக்கு செக்ஸ் வேண்டும். அவர்களது இலக்குக்கு ஆளாகும் பெண்களுக்கும் அப்படியே என்றால் பிரச்னை இல்லை. அதுவும் அந்த ஆணிடமே அவர்களுக்கு ஈர்ப்பு உள்ளது என்றால் பிரச்னையே இல்லை. பிரச்னை எங்கு வருகிறது? அந்த ஆண், பிற பெண்களைத் துன்புறுத்தும்போது. அப்போது என்ன செய்யலாம்? அந்த ஆணை அடித்து நொறுக்கலாம். அல்லது சிறையில் தள்ளலாம். மருதன், ரவிபிரகாஷ் பக்கங்களில் காந்தியை எள்ளி நகையாடும் ஆண்களை அவர்களது பதின்ம வயதில் செய்த பொறுக்கித்தனங்களுக்காக ஜெயிலில் போட்டு பெண்டு நிமித்த எனக்கும்தான் ஆசை!

ஆனால் காந்திக்கு அங்கும் ஒரு பொறுப்பு இருந்தது. அவர்தான் அந்த ஆணுக்கும் பொறுப்பு. அவனைக் கூப்பிட்டுக் கண்டுக்கிறார். ஆனால் அந்தக் கண்டிப்பு, டெஸ்டோஸ்டெரான் முன் எம்மாத்திரம்? அந்தப் பையனை அந்த இடத்திலிருந்து விலக்கி அவனது வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் அதனை காந்தி தனக்கு ஏற்பட்ட தோல்வியாகக் கருதக்கூடியவர். எனவே அப்போது தனக்குத் தோன்றிய ஒரு தீர்வை அவர் முன்வைக்கிறார். அந்தப் பெண்களைக் குரூபியாக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. ஓர் அடையாளம். அந்த அடையாளம் அந்தப் பெண்களைத் துன்புறுத்துவதைவிட அந்த ஆணைத் துன்புறுத்தவேண்டும். என்னால்தானே இந்தத் தொல்லை இந்தப் பெண்களுக்கு? என்னால்தானே? நான் இனி இந்தமாதிரி நடந்துகொள்ள மாட்டேன். அதே சமயம் அந்த அடையாளம் ஒரு நீங்காத வடுவாக உடலில் தெரியக்கூடாது. மனத்தில் மட்டும்தான் இருக்கவேண்டும். தீர்வு? முடி.

இன்று நாம் வேறுமாதிரி இந்தப் பிரச்னையைக் கையாண்டிருப்போம். நாமெல்லாம் மிகச் சிறந்த அறிவாளிகள்தான். காந்தி, பாவம், அந்த அளவுக்கு முன்னேறாதவர்.

ஆனாலும் அவர் அனைவரிடமும் ஒரு டெமாக்ரட் ஆக, பேசிப் பேசித்தான் முடிவெடுத்தார். இதுதான் என் கருத்து. நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வரை நான் பொறுத்திருப்பேன்.

இன்றைய பெண்ணியவாதிகள் காட்சிதரும் தோற்றத்தைத்தான் அவர் அன்று அந்தப் பெண்களுக்குக் கொடுத்தார்.

அதற்குப்பின் தீவிரமான ஓர் எச்சரிக்கையையும் அவர் பிறருக்கு முன்வைக்கிறார். இந்த முடிவை நீங்கள் யாரும் எடுக்காதீர்கள். என்னைப் பின்பற்றாதீர்கள்! அந்தக் குழந்தைகளுக்குத் தாயும் தகப்பனுமாக நீங்கள் இல்லாவிட்டால், இதுபோன்ற முடிவை எடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஆக, பொத்தாம்பொதுவாக, பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் மொட்டை அடித்துக்கொள்ளவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. இப்போது நாம் சில கேள்விகளை முன்வைப்போம்.

1. உங்கள் மகள், ஒரு குரங்குப் பையனின் பாலுறவுத் தொந்தரவுக்கு ஆளாகிறாள். என்ன செய்வீர்கள்?

2. உங்கள் குரங்கு மகன், பக்கத்து வீட்டுப் பெண்ணை பாலுறவுத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறான். என்ன செய்வீர்கள்?

3. உங்கள் வீட்டில், உங்கள் பொறுப்புக்கடியில், உங்கள் சொந்தக்காரப் பையன் ஒருவனும் பெண் ஒருத்தியும் தங்கிப் படிக்கிறார்கள். இருவருக்கும் நீங்கள்தான் கார்டியன். அந்தப் பையன் அந்தப் பெண்ணை பாலுறவுத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறான். இப்போது என்ன செய்வீர்கள்?

(தொடரும்)

Thursday, February 11, 2010

In defence of மதி

படிக்க: இட்லிவடை பதிவு

மதி போடும் கார்ட்டூன்கள் கருணாநிதிக்கு இவ்வளவு கோபம் வரவழைக்கும் என்று எனக்குத் தெரியாது. நான் முரசொலி படிப்பதே இல்லை.

சில தினங்களுக்குமுன் மதியுடன் அடுத்த புத்தக ப்ராஜெக்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது முரசொலியில் வந்திருந்த ஒரு கட்டுரையை என்னிடம் காண்பித்தார். அதில் மதியின் கார்ட்டூன் ஒன்றைக் குறிப்பிட்டு, அதன்கீழ் மதியைத் தரக்குறைவாக விமரிசித்து எழுதப்பட்டிருந்தது. அந்தக் கார்ட்டூன் இதுதான்.



பார்த்தவுடனேயே சிரிப்பை வரவழைத்த கார்ட்டூன் இது. இதைப்போல பல கார்ட்டூன்களை மதி வரைந்துள்ளார். இன்றைய ஆட்சியாளரான கருணாநிதிதான் இதில் பல கார்ட்டூன்களுக்குத் தீனி. உதாரணமாக ‘உளியின் ஓசை’ படத்துக்கு சிறந்த வசனத்துக்கான விருது கருணாநிதிக்குத் தரப்பட்டபோது அந்த விழாவுக்கும் கருணாநிதியே தலைமை தாங்கி விருதுகளைத் தருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. (கார்ட்டூன் தினமணி தளத்தில் இருக்கும். இப்போது தேடி எடுக்க நேரமில்லை.) அப்போது அவரவர் ட்விட்டர், ப்லாகர் என்று எல்லா இடங்களிலும் கேலி பேசியிருந்தனர். ஆனால் மதி அநாயாசமாக ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார். இரண்டு பேர் பேசிக்கொள்வதாக வரும். ஒருவர் சொல்வார்: “அதாங்க எனக்கும் புரியலை. இவரே விருதை மேலே தூக்கிப்போட்டு கேட்ச் பிடிச்சுப்பாரா?” மாய்ந்து மாய்ந்து பக்கம் பக்கமாக எழுதுவதைவிட சிறப்பானதில்லையா இந்தக் கார்ட்டூன்? இதைவிட நச்சென்று இந்த வெட்கக்கேடான விஷயத்தை எப்படி வெளிப்படுத்துவது?

ஆங்கிலத்தில் propriety என்றொரு சொல் உண்டு. தமிழ் விக்‌ஷனரி இதற்கு “ஒழுங்கு முறை; ஒழுங்குமுறை; தகுதி; நேர்மை; பொருத்தமுடைமை; பொருத்தம்; முறைமை; நியாயம்” போன்ற சொற்களை முன்வைக்கிறது. சரியான ஒழுக்கநடத்தை என்று வைத்துக்கொள்வோம். தானே நடத்தும் ஒரு போட்டியில், தானே நடுவராக இருக்கும் ஒரு போட்டியில் தனது படைப்பாக்கம் அல்லது தன் உறவினர்களின் படைப்பாக்கத்தை விண்ணப்பிப்பது பொதுவாக ஒழுக்கநடத்தையில் சேராது. அதேபோல, நடுவுநிலைமையுடன் தேர்ந்தெடுக்கப்படாது, நடுவர்கள் மனத்தில் அச்சம் நிலவலாம் என்றால் அந்த நிலையில் ஒரு சில போட்டிகளில் பங்கெடுக்கக்கூடாது என்பதும் ஒழுக்கநடத்தை என்பதற்குள்ளாக வரும்.

உளியின் ஓசை சிறந்த படமாக இருந்தாலுமே, அதன் வசனங்கள் உலக மகாத் திறமையுடன் உருவாக்கப்பட்டிருந்தாலுமே, கருணாநிதி முதல்வராக இருக்கும் காலகட்டத்தில் அந்தப் படம் வசனம் என்ற பிரிவில் போட்டியில் அனுமதிக்கப்பட்டிருக்கவே கூடாது. கருணாநிதியாகவே முன்வந்து அதனை திரும்பப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் அதையும் தாண்டி அந்தப் படம் வசனத்துக்காக முதல் பரிசு பெறுகிறது. அதற்கான விழாவுக்கு கருணாநிதியே தலைமை தாங்கி பரிசளிக்கிறார். எல்லாவித ஒழுக்கநடத்தை விதிகளின்படியும் இது கேலிக்கூத்து என்பதைத் தவிர வேறு என்ன? அண்ணா விருதை நிறுவி, அதை முதலில் கருணாநிதிக்குத் தருவது. ஒரு ஆண்டில் பலமுறை சினிமாக் காரிகளை பயமுறுத்தி ஜல்சா டான்ஸ் வைத்து நிகழ்ச்சி நடத்தி அதனை கலைஞர் தொலைக்காட்சியில் exclusive-ஆகக் காண்பிப்பது. இப்படி அனைத்துவிதமான நாகரிக வரைமுறைகளையும் மீறி நடந்துகொள்கிறார் இன்றைய முதல்வர் கருணாநிதி.

அதை இன்று மனச்சாட்சிக்குக் குறை இல்லாமல் சரியாகக் கண்டிப்பவர் மதி ஒருவர் மட்டுமே. அவர் சார்ந்திருக்கும் கார்ட்டூன் என்ற ஊடகம் இந்த சுதந்தரத்தை அவருக்குத் தருகிறது.

மேற்சென்று இடித்தற் பொருட்டு நட்புகள் இல்லாதபோது, அனைவருமே ஜால்ராக்களாக மாறிவிட்டபோது, ஊடகங்கள் செய்யவேண்டிய பணி அல்லவா இது?

மதி ஜெயலலிதாவை கேலி செய்துள்ளாரா என்று கேட்கும் முரசொலி, மதியின் கார்ட்டூன்களை முழுவதுமாகப் பார்த்ததில்லை என்றே தோன்றுகிறது. சம்பந்தப்பட்டவர் எனக்கு முகவரி அளித்தால் மதியின் கார்ட்டூன்கள் அடங்கிய முழு செட்டையும் அவருக்குப் பரிசாக அளிக்க விரும்புகிறேன். அவரே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

மதியின் மற்றொரு கார்ட்டூன். ஒரு சாமியார் ஜெயிலுக்கு உள்ளே வருகிறார். அங்கே உள்ளே இருக்கும் குற்றவாளி அந்தச் சாமியாரிடம் சொல்கிறார்: “சாமி, விடுதலை ஆனதும் நேர உங்ககிட்ட வந்துதான் ஆசீர்வாதம் வாங்கணும்னு இருந்தேன். நல்லவேளை, நீங்களே இங்க வந்துட்டீங்க!” இது பதிப்பான காலகட்டம் சங்கராச்சாரியார்கள் ஜெயிலில் இருந்த நேரம்.

முரசொலியில் மதிக்கு பூணூல் வரைந்து குடுமியெல்லாம் வைக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டுள்ளது. அர்ச்சனை எப்போதும் உண்டு. ஆனால் இதையெல்லாம் மீறி, கருணாநிதி கொஞ்சம் இந்தக் கார்ட்டூன்களை உளமாற ஆராய்ந்து பார்த்தால் தன் இத்தனை ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் எங்கெல்லாம் சறுக்கியிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சரி, அடுத்து கஸ்டமரி விளம்பரங்கள். மதியின் அனைத்து கார்ட்டூன் தொகுப்புப் புத்தகங்களையும் வாங்க இங்கே செல்லவும்.

                       

Wednesday, February 10, 2010

இந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-reader devices)

எப்போதோ சோனி ஆரம்பித்துவைத்தது. இலியட் முதற்கொண்டு சில கருவிகள் வந்தன. ஆனால் பயன் ஏதும் இல்லை. பிறகு அமேசான் தன் கிண்டில் கருவியை அறிமுகப்படுத்தியது. அங்குதான் மாற்றம் ஆரம்பித்தது.

கிண்டில் வெறும் படிப்பான் மட்டும் அல்ல; அதன்மூலம் புத்தகங்களை வாங்கமுடியும், வான் வழியாகப் பெறவும் முடியும். அதுதான் பெரிய மாற்றமே. அதன் விளைவாக மின் புத்தகங்களை வாங்கிப் படிப்போரின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்தது. அடுத்து பார்ன்ஸ் & நோபிளின் நூக் என்னும் கருவி. இது கிண்டில் போல கறுப்பு/வெள்ளை என்றில்லாமல் கலரில் இருந்தது. இதிலும் வயர்லெஸ் மூலம் புத்தகங்களைப் பெறமுடியும். ஆனால் தீவிர வாசகர்கள் கலர் ஸ்க்ரீன் வேண்டும் என்றெல்லாம் கேட்பார்களா என்று தெரியவில்லை.

இப்போது ஆப்பிள் தன் ஐ-பேட் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இதுவும் வண்ணத் திரை கொண்டது. ஆப்பிள் என்றாலே கோயில் கட்டிக் கும்பிடும் ஒரு கூட்டம் அமெரிக்காவில் உள்ளது. இந்தியாவில் இல்லை.

சரி, இதெல்லாம் அமெரிக்காவில். இந்தியாவில் என்ன நிலை?

முதலில் விலைதான் இங்கு விஷயமே. எவ்வளவு குறைந்த விலைக்குக் கருவிகள் சந்தைக்கு வரப்போகின்றன என்பது முக்கியமான விஷயம். இந்த தில்லி புத்தகக் காட்சியில் infibeam என்ற ஒரு நிறுவனம் தங்களது கருவியைக் காட்சிக்கு வைத்திருந்தனர். பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை. ஆங்கிலம் தவிர இந்திய மொழிகளிலும் படிக்கலாம் என்று சொன்னார்களே தவிர அதெல்லாம் pdf கோப்பாகத்தான். அப்படியென்றால் ஸ்க்ரால் செய்துதான் படிக்கவேண்டும். படிக்கும் தரம் நன்றாகக் குறையும். வாங்கும் புத்தகங்களில் சரியான DRM இருக்காது என்றே தோன்றுகிறது. அது பற்றி அங்கே கடையில் இருந்த அடிமட்ட ஊழியர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. எல்லாவற்றையும் இணையம் வழியாக வாங்கிப் படிக்கவேண்டும். அத்துடன் அவர்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் Project Gutenberg வெளியிட்டுள்ள ஆயிரக்கணக்கான நூல்களைத்தான் உயர்வாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். எல்லாமே இலவசம், எனவே இந்தக் கருவியை வாங்குங்கள் என்ற வாசகம் ஓரளவுக்குத்தான் மக்களைக் கவரும். கணினியிலேயே இவற்றை இறக்கி இலவசமாகப் படிக்கலாமே?

இந்தியாவில் அறிமுகம் செய்யும் எந்த மின் படிப்பான் கருவியாக இருந்தாலும் அதற்கென சில முக்கியமான குணாதிசயங்கள் இருக்கவேண்டும்.

1. கொஞ்சம் மெதுவாக இறங்கினாலும், வயர்லெஸ் மூலம் நேரடியாகக் கருவிக்கே வந்துசேரும் வழியில் தொடர்பு இருக்கவேண்டும்.

2. இதற்கென தனியான கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது. எப்படி அச்சுப் புத்தகத்தில் தாள், அச்சு, பைண்டிங் கூலி உள்ளதோ அதற்குப் பதில் இந்த வயர்லெஸ் இணைப்புக் கூலி. அதை விற்கும்/உருவாக்கும் நிறுவனம்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

3. பதிப்பாளர்கள் மனம் விரும்பும் அளவுக்கு DRM இருக்கவேண்டும். (அதாவது புத்தகங்களை எளிதில் பைரேட் செய்யமுடியாத நிலை இருக்கவேண்டும்.)

4. இந்திய மொழிப் புத்தகங்கள் எல்லாம் pdf கோப்பின் வாயிலாகத்தான் என்று இருக்கக்கூடாது. அவையும் யூனிகோட் எழுத்துருக்கள் வாயிலாகக் கிடைக்கவேண்டும். அப்போதுதான் page re-flow ஒழுங்காக நடக்கும். இதனைச் செய்யாதவர்கள் எல்லோரும் விற்கும் கருவிகள் வெறும் பஜனைக் கருவிகளே.

5. பதிப்பாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் டிஜிட்டல் ஃபைல்களை அவை எந்த எழுத்துக் குறியீட்டில் இருந்தாலும் சரி, இந்த மின் புத்தகக் கருவி எதிர்பார்க்கும் யூனிகோட் எழுத்துக் குறியீட்டுக்கு மாற்றித்தரும் மென்பொருள் kit உருவாக்கித் தரப்படவேண்டும்.

6. இணையப் புத்தகச் சந்தைகளான indiaplaza, firstandsecond, flipkart (இன்னபிற) ஆகியவற்றின் வழியாக இந்தக் கருவியைச் சந்தைப்படுத்த வேண்டும்.

7. சர்வதேச எடிஷன் ஆங்கிலப் புத்தகங்கள் யாவும் இந்த இந்தியக் கருவியில் இந்திய விலையில் கிடைப்பது கஷ்டம். ஏனெனில் பிற நாடுகளில் - முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன் - உள்ளவர்கள் இந்திய எடிஷனை குறைந்த விலையில் வாங்கிவிடக்கூடும். எனவே இந்தக் கருவிகளை இந்தியாவில் விற்பது ஆரம்பத்தில் பெரும் கஷ்டமாகவே இருக்கும். ஆனால் இந்திய மொழிப் புத்தகங்களை விற்பதில் கஷ்டம் ஏதும் இருக்காது.

இந்த ஆண்டு (2010) குறைந்தபட்சம் 7-8 கருவிகளாவது இந்தியச் சந்தையில் கிடைக்க ஆரம்பிக்கும். இவை எவற்றிலும் நான் மேலே சொன்ன எதுவும் இருக்காது! ஆனாலும் எங்காவது ஆரம்பித்துதானே ஆகவேண்டும்!

Tuesday, February 09, 2010

புத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி

சென்னை புத்தகக் காட்சி நடந்தபோது மாபெரும் தமிழ் அறிவுஜீவிகள் கிழக்கு பதிப்பகத்தின்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள்:- (1) இவர்கள் போலி பெயர்களில் கடைகள் எடுக்கிறார்கள். (2) எங்கு பார்த்தாலும் இவர்களது புத்தகங்களே கிடைக்கின்றன. இதனால் காட்சிக்கு வரும் வாசகர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

உண்மை என்ன? பினாமியோ இல்லையோ, நக்கீரன், விகடன் மட்டுமல்ல, தமிழினி கூட இரண்டு இடங்களில் கடைகள் வைத்து ஒரே புத்தகங்களை வைத்து விற்றன. ஆனால் நியூ ஹொரைசன் மீடியா நான்கு இடங்களில் கடைகளை வைத்திருந்தும் ஒரே புத்தகத்தை இரண்டு இடங்களில் விற்பனைக்கு வைக்கவில்லை. ஒரு கடையில் கிழக்கு பதிப்பகத்தின் non-fiction, வரம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. (வரத்துக்கு தனி ஸ்டால் கிடைக்காது என்று தெரியும்.) ஒரு கடையில் நலம் புத்தகங்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு கடையில் ப்ராடிஜி, மினிமேக்ஸ் புத்தகங்கள் மட்டும் இருந்தன. உண்மையில் மினிமேக்ஸ் தனியாகவும் ப்ராடிஜி தனியாகவும் வைக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் இடம் தர மறுத்துவிட்டனர் என்பதால் இரண்டு imprint-களையும் ஒரே இடத்தில் வைக்கவேண்டியதாயிற்று.

விருட்சம் ஸ்டாலில் கிழக்கின் இலக்கியப் புத்தகங்களை மட்டும் வைத்திருந்தோம்.

இது எங்களுக்குமே வசதிப்படுவதில்லை. மொத்தமாக 2000 சதுர அடி இடம் எங்களுக்கு ஒதுக்கினால் (அதற்கேற்ற கட்டணத்தை வாங்கிக்கொண்டுதான்!) எங்கள் அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்வோம். உள்ளே வருபவர்கள் உட்கார நாற்காலிகள், குடிக்க தண்ணீர், நிறைய மின்விசிறிகள் என்று வசதி செய்துதருவோம்.

இதையெல்லாம் காண நீங்கள் தில்லி உலகப் புத்தகச் சந்தைக்குச் செல்லவேண்டும். வேண்டிய அளவு இடம். அதில் விரும்பியபடி ஒவ்வொரு பதிப்பகமும் அழகு செய்துகொள்ளலாம். இந்த வசதியை ஏன் செய்துதர பபாஸி விரும்புவதில்லை?

பாரதி புத்தகாலயம் நாகராஜனுடன் தில்லியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒரு விஷயம் சொன்னார். 4-ஸ்டால்கள் (அதாவது 400 சதுர அடி ஸ்டால்கள்) இருக்கவேண்டுமா, கூடாதா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒரே வாக்கு வித்தியாசத்தில் 4-ஸ்டால்கள் இருக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாம்! அந்தக் காரணத்தால்தான் 4-ஸ்டால்கள் இந்த 2010 சென்னை புத்தகக் காட்சியில் இருந்தனவாம். இல்லாவிட்டால் ஒரு ஸ்டால் என்பது அதிகபட்சம் 200 சதுர அடி மட்டுமே!

வாசகர்களாக இதனை யோசித்துப் பாருங்கள். உள்ளே நுழைந்தால் வெளியே செல்லமுடியாது. உயிர்மை, காலச்சுவடு, வ.உ.சி நூலகம் என பல இலக்கியப் பதிப்பகங்களும் நான்கு ஸ்டால்கள் எடுத்திருந்தனர். இரண்டு இடங்களில் தமிழினி, யுனைடெட் ரைட்டர்ஸ் என்ற பெயரில் இருந்ததற்கு பதில் ஒரு 4-ஸ்டால் வைத்திருந்தால் அவருக்கே வசதியாக இருந்திருக்கும்.

கண்காட்சியில் இடம் என்பது நேரடியாக பணத்தோடு சம்பந்தப்பட்டதில்லை. இவனுக்கு 400 சதுர அடி கொடுத்தால் இத்தனை பணம் பண்ணுகிறான்; 800 கொடுத்தால் இரண்டு மடங்கு பண்ணுவான்; அப்போது நாமெல்லாம் அம்பேல்தானா என்று யோசிப்பது தவறு.

பல பதிப்பகங்கள் கொண்டுவந்திருக்கும் புத்தகங்கள் குறைவு. அவர்களுக்கு 100 சதுர அடி போதும். ஆனால் பிறர் அப்படியல்லவே? இப்படி கேட்போருக்குக் கேட்கும் அளவு இடம் தில்லி உலகப் புத்தகக் காட்சியில் கொடுத்திருப்பதைப் பார்க்கலாம். அப்படியான இடம் கிடைக்காததால்தான் சென்னைக்கு இவர்கள் பலரும் வருவதில்லை. (அதனால் எனக்கென்ன என்றால் என்னிடம் பதில் ஏதும் இல்லை!) பெங்களூருவுக்கு வரும் பெங்குவின் சென்னைக்கு வருவதில்லை!

***

அடுத்து கிழக்கின் புத்தகங்கள் பல கடைகளில் கிடைக்கின்றன என்ற குற்றச்சாட்டு! இதில் என்ன குற்றம் என்று எனக்குத் தெரியவில்லை. கிழக்கின் புத்தகங்கள் இருக்கும் கடைகளில் பாருங்கள். வானதியும் இருக்கும். விகடனும் இருக்கும். கண்ணதாசனும் இருக்கும். இல்லை என்றால் சொல்லுங்கள். ஆக சில விற்பனையாளர்கள் பலருடைய புத்தகங்களையும் ஒன்றுதிரட்டி விற்று பணம் செய்ய என்றே வருகிறார்கள். அப்படி யாரும் வரக்கூடாது என்று பபாஸியால் சொல்லமுடியுமா? அப்படி ஓர் ஒருமித்த கருத்து இருந்தால், நாங்களும் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்கிறோம்.

***

தமிழ்ப் புத்தக உலகம் செல்லவேண்டிய தூரம் அதிகம். நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டிய வேலைகளும் அதிகம். குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளியே வந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்.

தில்லி உலகப் புத்தகக் காட்சி 2010

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லியில் நடைபெறுகிறது உலகப் புத்தகக் காட்சி. ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறும்.

நான் புத்தகத் தொழிலுக்கு வந்ததற்குப் பிறகு மூன்று முறை நடந்துள்ளது. முதல்முறை 2006 ஜனவரியில் நானும் சத்யாவும் சும்மா சுற்றிப் பார்க்க என்று சென்றோம். 2008 ஜனவரியில் இரண்டு இடங்களில் கடைகள் எடுத்தோம். ஆனால் தெளிவாக என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்திருக்கவில்லை. இப்போது 2010 ஜனவரியில் எங்கள் அலுவலகத்திலிருந்து பலர் சென்றுவந்துள்ளோம். இந்தக் காலகட்டத்தில் பிற மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனாயாசமானவை.

2008-லேயே இந்திப் பதிப்பகங்கள் கண்ணைக் கவர்ந்தன. இம்முறை அவர்கள் செய்யும் பல விஷயங்கள் நன்கு புரிந்துள்ளது. அதைப்போன்றே இம்முறை பார்த்ததில் மராத்தி பதிப்பகங்கள்மீதும் பெரும் மதிப்பு வந்துள்ளது. இந்த இரண்டு மொழிகளைத் தவிர பிற மொழிகள் பழையபடியே பின்தங்கியே உள்ளன. Of course, ஆங்கிலப் பதிப்பகங்கள் எங்கேயோ பாய்ச்சல் இட்டபடி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றன.

இந்தியில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது அவர்களது அளவு. ஒரு நல்ல புத்தகம் என்றால், அவர்களால் நான்கைந்து மாதங்களுக்குள் 50,000 பிரதிகள் அல்லது அதற்குமேல் விற்கமுடிகிறது. மோசம் என்றால் 5,000 பிரதிகளாவது விற்றுவிடுகிறார்கள். இந்த எண்ணிக்கை தரும் சுதந்தரம் அதிகம்.

மற்றபடி குடும்ப நிறுவனங்களாக மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த இந்தி பதிப்பாளர்களில் ஒரு சிலர் நன்கு நவீனமாகியிருக்கிறார்கள். வாணி, ராஜ்கமல், ராஜ்பால்/ராதாகிருஷ்ணா, மஞ்சுல், பிரபாத் ஆகியோருடன் பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் ஆகியோரின் இந்தி பதிப்புகளும் சேர்ந்துகொண்டுள்ளன.

இவர்கள் என்னவெல்லாம் செய்துள்ளனர்?

1. ஒரு பக்கம் உலக கிளாசிக் புத்தகங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இந்தி மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. இது வெறும் ரஷ்யப் புத்தகங்களுக்கு மட்டும் என்றில்லை. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளவற்றுக்கும் இந்தி மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. இத்துடன் தமிழை ஒப்பிட்டுப் பாருங்கள். கிளாசிக் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு நாம் தடவ வேண்டியுள்ளது.

2. அடுத்து நவீன உலக இலக்கியத்துக்கான மொழிபெயர்ப்பு. இதுவும் சர்வசாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இங்கே பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் இருவரும் தங்கள் கையில் இருக்கும் ஆங்கிலப் புத்தகங்களை இந்தியாக்கம் செய்துவிடுகிறார்கள். மிகுதியை நான் மேலே சொன்ன பலருள் ஒருவர் எடுத்துக்கொள்கிறார். இந்தி போகவேண்டிய தூரம் அதிகம் என்றாலும் பாதை தெளிவாக உள்ளது. மஞ்சுல் கொண்டுவந்த ஹாரி பாட்டர் மொழியாக்கம் ஓர் உதாரணம். இந்திய மொழிகளில் இந்தியில் மட்டுமே ஹாரி பாட்டர் புத்தகங்கள் கிடைக்கின்றன. அவை மொத்தமாகச் சேர்ந்து 2 லட்சம் பிரதிகள் விற்றுள்ளனவாம்! சேதன் பகத்தின் கதைகள் அனைத்தும் கிடைக்கின்றன். அவையும் பல்லாயிரக்கணக்கில் விற்றுள்ளன. தீவிர உலக இலக்கியம் என்று பார்த்தால் மலையாளத்தில் ஓரளவுக்கு மொழிபெயர்ப்புகள் வருகின்றன.

3. அடுத்து உலக அளவிலான non-fiction மொழிபெயர்ப்பு. இதை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். தன்னம்பிக்கை நூல்கள். அறிவுசார்ந்த நூல்கள். தன்னம்பிக்கை நூல்களில் உலக அளவில் எந்தப் பெயர் முன்னுக்கு வந்தாலும் பிரபாத், மஞ்சுல் ஆகியோர் அடித்துப் பிடித்துக்கொண்டு வாங்கிவிடுகின்றனர். (தமிழில் கண்ணதாசன் மட்டுமே இதுவரையில் இந்தத் துறையில் கொஞ்சம் புத்தகங்கள் கொண்டுவந்திருந்தனர். அதற்குமேல் வேறு யாரும் தலையிடவில்லை.) தமிழில் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் ஆண்டுக்கு 3000 விற்கிறது என்றால், இந்தியில் 30,000 விற்கிறது! இதனால் இந்தி பதிப்பாளர்கள் சிலர் இந்திய மொழிகளுக்கான ஒட்டுமொத்த மொழிமாற்ற உரிமத்தை வாங்கிவிடுகிறார்கள்.

4. அறிவுசார்ந்த புத்தகங்களும் அதிக அளவில் வர ஆரம்பித்துவிட்டன. உதாரணத்துக்கு அமர்த்யா சென்னின் அனைத்துப் புத்தகங்களும் இந்தியில் இன்று கிடைக்கின்றன. வங்காள மொழியில் கிடைக்குமா என்பதே சந்தேகம்! இங்கும் வரும் சில ஆண்டுகளில் பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் போன்றவை முன்னணியில் இருக்கும். பெங்குவின் வெளியிட்ட நாராயண மூர்த்தி, நந்தன் நீலகனி ஆகியோரின் ஆங்கிலப் புத்தகங்களை அவர்களே இந்தியிலும் வெளியிட்டுவிட்டனர். அதுவும் வேகவேகமாக. பிற மொழிகளில் இது நடப்பது அரிது.

பிரபாத் பிரகாஷன் போன்றவர்களும் இன்னும் பலரும் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் பல non-fiction புத்தகங்களை இந்தியில் கொண்டுவர விரும்புகின்றனர். ஆனால் நேரடியாக தமிழிலிருந்து இந்திக்கு மொழிமாற்ற ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்த ஆண்டு இதனை அதிக அளவில் செய்ய இருக்கிறோம்.

மொத்தத்தில் இன்றைய இந்தி வாசகனுக்கு தமிழ் வாசகனுக்குக் கிடைப்பதைவிட அதிகமாகத் தீனி கிடைக்கிறது.

மராத்தியில் மேத்தா என்ற ஒரு பதிப்பக நிறுவனம் பல்வேறுவிதமான மொழிபெயர்ப்புகளைக் கொண்டுவந்துள்ளது. மேலும் சிலரும் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் விற்கும் பிரதிகளின் எண்ணிக்கை இந்தி அளவுக்கு இல்லை, தமிழ் அளவுக்குத்தான். ஆனாலும் பெருமளவு நவீன உலக இலக்கியங்கள், அ-புதினங்கள் என்று மொழிமாற்றுவதோடு உலக விஷயங்கள் பற்றி ஒரிஜினல் புத்தகங்களையும் கொண்டுவந்துள்ளனர். நான் பார்த்தவரை இலங்கைப் பிரச்னை பற்றி புத்தகம் கொண்டுவந்திருந்த தமிழ் (மற்றும் ஆங்கிலம்) அல்லாத ஒரே இந்திய மொழி மராத்தி மட்டும்தான்.

இந்த ஆண்டு பூனா சென்று அங்குள்ள மராத்தி பதிப்பகங்கள் என்ன செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை முற்றிலுமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

மற்றபடி மலையாளத்தில் எந்த மாற்றமும் இல்லை. டிசி புக்ஸ் தனி ஆளாக ஓடிக்கொண்டிருக்க, பின்னால் யாருமே தென்படவில்லை. வங்காள மொழியில் ஆனந்தா எங்கேயோ சென்றுகொண்டிருக்க பின்னால் யாரும் இல்லை.

இம்முறை பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் தவிர்த்து வேறு பல ஆங்கிலப் பதிப்பகங்களிடமும் நிறையப் பேசினோம். பெங்குவின், ஹார்ப்பர் ஆகியோர் பல புதினங்களைக் கொண்டுவருகிறார்கள். அவற்றுக்கு தமிழ் மொழிபெயர்ப்புகள் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் கிழக்கு பதிப்பகம் அதில் அவ்வளவு ஈடுபாட்டுடன் இல்லை. புதினத்தில் ஆர்வம் கொண்டுள்ள தமிழ்ப் பதிப்பாளர்கள் பலரும் இவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

ஹார்ப்பர் காலின்ஸ் உரிமம் தொடர்பான அலுவலரிடம் பேசும்போது நீங்கள் ஏன் சென்னை புத்தகக் காட்சிக்கு வருவதில்லை என்று கேட்டோம். இங்கு வந்து என்ன பெரிதாக வியாபாரம் ஆகப்போகிறது என்று பதில் கேள்வி கேட்டார். இந்த ஆண்டு கொல்கத்தா கண்காட்சிக்கே அவர்கள் செல்லவில்லையாம். குறைந்தபட்சம் ‘மொழிமாற்றம் உரிமம்’ விற்பதற்காகவேனும் சென்னை வந்து ஒரு கடையை எடுத்துக்கொண்டு அதில் உட்காரலாமே என்றோம். தில்லியிலேயே NBT இதில் ஆர்வம் காண்பிப்பதில்லை என்றார். அடுத்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின்போது உரிமம் விற்க, வாங்க என்ற தனியான பகுதி ஒன்றை உருவாக்கச் சொல்லி கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இன்னும் நிறைய எழுதவேண்டும். துண்டு துண்டாக அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது எழுதிச் சேர்க்கிறேன்.

Sunday, February 07, 2010

திருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்

ஜனவரி 29 தொடங்கி இன்று பிப்ரவரி 7 வரை திருப்பூரிலும் தஞ்சாவூரிலும் புத்தகக் காட்சிகள் நடக்கின்றன. இன்றுதான் கடைசி தினம்.

திருப்பூரில் புத்தகக் காட்சி ஏழாவது ஆண்டாக நடைபெறுகிறது. திருப்பூர் டவுன் ஹால் மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்வை பாரதி புத்தகாலயமும் பின்னல் புக் டிரஸ்டும் இணைந்து நடத்துகின்றன. இந்த ஆண்டு நான் இந்தக் கண்காட்சிக்குச் செல்லவில்லை. ஆனால் தஞ்சாவூர் சென்றிருந்தேன். தஞ்சாவூரைச் சேர்ந்த ஏழு ரோட்டரி கிளப்கள் இணைந்து இந்தக் காட்சியை நடத்துகின்றன. இதுதான் முதலாம் ஆண்டு. சில ஆண்டுகளுக்குமுன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு புத்தகக் காட்சியை நடத்தியது. ஆனால் தொடர்ந்து நடத்த அவர்களால் முடியவில்லை.

தஞ்சாவூர் நிகழ்வில் ஒருநாள் மாலை என்னைப் பேச அழைத்திருந்தார்கள். இந்தக் காட்சியை ஏற்பாடு செய்திருந்த குழுவின் தலைவரான ஆசிஃப் அலியிடம் பேசிக்கொண்டிருந்தேன். இவர்கள் குடும்பம், மகாராஜா என்ற ஜவுளிக் கடை (கும்பகோணம், மாயவரம் போன்ற இடங்களில் சீமாட்டி என்ற பெயரில்...) தொழிலை நடத்துகிறது. தஞ்சாவூரின் அனைத்து ரோட்டரி கிளப்களின் துணை கவர்னர் ஆக இருக்கிறார்.

அவரிடம் பேசும்போது, ஈரோடு புத்தகக் காட்சியை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளச் சொன்னேன். ஐந்து ஆண்டுகளுக்குமுன் புத்தகக் காட்சி என்று ஏதும் நடக்காத ஈரோடு இன்று மக்கள் சிந்தனைப் பேரவை, ஸ்டாலின் குணசேகரன் உழைப்பால் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய புத்தகக் காட்சியாக மாறியுள்ளது. இதனை பிற நகரங்களில் செய்வது கடினம் என்றாலும் சாத்தியமே. தஞ்சாவூரில் நிச்சயம் அதற்கான அடிப்படைக் கூறுகள் உள்ளன. ஆனால் மனத்தில் உறுதி வேண்டும்.

ஆரம்ப காலங்களில் நிகழ்வை நடத்துபவர்களுக்கு பண நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதனை விளம்பரதாரர்கள் வழியாகச் சரிக்கட்ட வேண்டியிருக்கும். புத்தகக் காட்சியால் ஏதேனும் நன்மை இருக்கிறதா என்று அந்த ஊர் மக்கள் அல்லது மக்கள் தலைவர்கள் தெளிவாக உணர்ந்தால்தான் முன்வந்து நடத்துவார்கள். “இம்முறை நிகழ்வை நடத்தியதில் பல தவறுகளைத் தெரிந்துகொண்டோம். அடுத்த ஆண்டு இவற்றைக் களைய முயற்சி செய்வோம்” என்றார் ஆசிஃப்.

யாரோ சில பதிப்பகங்கள், “தஞ்சாவூரில் 60 ஸ்டால்களுக்கு மேல் தாங்காது, எனவே அதிகரிக்காதீர்கள்” என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். நான் என் பங்குக்கு, ஸ்டால்களை நன்கு அதிகரியுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஈரோட்டில் 60-70 என்றுதான் ஆரம்பித்தது. இன்று 160 ஸ்டால்கள். மேலும்கூட அதிகரிக்கவேண்டும். ஆங்கிலப் பதிப்பகங்களை அழைத்துவரவேண்டும். தஞ்சாவூரில், கல்விப் புத்தகங்களை வெளியிடுபவர்களையும் (அல்லது விற்பவர்களையும்), ஆங்கிலப் பதிப்பாளர்களையும் அழையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

திருப்பூர் புத்தகக் காட்சியின் முதுகெலும்பாக இருக்கும் பாரதி புத்தகாலயத்தின் நாகராஜனை டெல்லியில் சந்தித்துப் பேசினேன். (திருப்பூர் நிகழ்வு முடிவதற்குள் அவசர அவசரமாக டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியை பார்த்துவிடவேண்டும் என்று அங்கு வந்திருந்தார்.) திருப்பூரிலும் ஸ்டால்களை அதிகப்படுத்தக்கூடாது என்று அழுத்தம் உள்ளது என்றார்.

உண்மையில் ஒரே நேரத்தில் நடப்பதால் திருப்பூரிலும் தஞ்சாவூரிலும் இரு இடங்களிலும் கலந்துகொண்டவர்கள் மிகவும் குறைவு. கிழக்கு, பாரதி, விகடன், என்.சி.பி.எச், இன்னும் இரண்டு மூன்று பேர்தான் இரண்டு இடங்களிலும் இருக்கிறார்கள். பெரும்பாலான பதிப்பகங்களிடம் வேலையாட்கள் இல்லை அல்லது குறைவு. எனவே ஒரு நேரத்தில் ஓரிடத்தில் மட்டும்தான் கலந்துகொள்ள முடியும். சில விற்பனையாளர்கள் பல பதிப்பகங்களிடம் இருந்து ஒருசில புத்தகங்களை மட்டும் வாங்கிவந்து விற்பனை செய்கிறார்கள். இதனால் அந்த ஊர் வாசகர்களிடம் அனைத்துப் புத்தகங்களையும் (Full range) கொண்டுசெல்ல வழி இல்லை. இதனால் பதிப்பாளர்களுக்கும் பாதிப்பு, வாசகர்களுக்கும் பாதிப்பு.

Clash-ஏ இல்லாமல் புத்தகக் காட்சிகளை அமைக்கமுடியாது. ஆனால் பெரிய ஊர்களில் காட்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் பிற ஊர்க்காரர்களுடன் முன்னதாகவே பேசி முடிவெடுத்தால் இதுபோல் உரசல்களைக் குறைக்கலாம். அதனால் அதிகமான பதிப்பாளர்கள் நிகழ்வுகளில் பங்கெடுப்பார்கள். அதனால் ஒவ்வோர் ஊரிலும் உள்ள மக்கள் அதிகம் பயனடைவார்கள்.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கோலாகலமான புத்தகக் காட்சி நடைபெறவேண்டும். அதன் வாயிலாக மட்டுமே படிப்போரின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கமுடியும்.

Wednesday, February 03, 2010

காப்பாற்றப்படவேண்டிய கோயில் ஓவியங்கள்

படிக்கவேண்டியது:
கலையறிவு அதீதமாக இல்லையெனினும், அதை கலை என்று புரிந்து மென்மையாக அணுகவேண்டிய மனிதர்களின் பொதுவறிவு கூட இன்றி, பக்தி என்று மஞ்சள்காப்படித்தும், ரெனொவேஷன் என்று சடுதியில் வெள்ளையடித்தும் எனாமலடித்தும் (எனாமலை எடுக்கையில் பின்னால் இருக்கும் சுவரோவியம் இலவசமாக உரிந்து வந்துவிடும்), ரெஸ்டோரேஷன் என்று மாற்றி வரைந்து முதலுக்கே உலைவைத்தும், இவ்வகை சரித்திர-கலைப் பொக்கிஷங்களை நாம் வேகமாக இழந்துகொண்டிருக்கிறோம். போறாக்குறைக்கு இச்சுவரோவியங்கள் உள்ள பல கோவில் பிரகாரங்களில், சுவற்றுக்கருகிலேயே தேங்கும் மதுபாட்டில்கள்.
அருண் நரசிம்மனின் பதிவு
.

Tuesday, February 02, 2010

திரு சிராப்பள்ளி - 3

ஆனால் இந்தக் கருவறைகளைக் காண முடியாத அளவுக்கு உங்களை ஈர்ப்பது பின் சுவற்றில் காணப்படும் ஐந்து சிற்பத் தொகுப்புகள். நடுநாயகமாக உங்களை ஈர்ப்பது பிரம்மன். அவரது முன் தலையுடன் இரு பக்கவாட்டுத் தலைகளைக் காணமுடியும். அவருக்கு இரு பக்கங்களிலும் யார் யார்?

இடது கோடியிலிருந்து பார்வையைத் திருப்புவோம். முதலில் கணபதி! இதுதான் தமிழகத்தில் காணக்கிடைக்கும் முதல் விநாயகர் சிற்பமோ? ஆளுயர கணபதி, தொந்தியும் தொப்பையுமாக, யானைக் காதுகள் பெரிதாக இல்லை. தும்பிக்கை சற்றே சிதைந்துள்ளது, ஆனாலும் தெளிவாகத் தெரிகிறது. இரு குட்டைக் கால்கள். இரு பக்கங்களிலும் கீழே இரு கணங்கள். மேலே இரு தேவர்கள் விஸ்மய முத்திரையுடன். நான்கு கரங்களில் இரு கரங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை. மற்ற இரு கரங்களில் மலர்களை ஏந்தியுள்ளதுபோல் தெரிகிறது. இடுப்பில் கௌபீனம். ருத்ராக்‌ஷ மாலையால் ஆன பூணூல்.

விநாயகருக்கு அடுத்து யார்? நீண்ட நெடிய கால்கள். ருத்ராக்‌ஷத்தால் ஆன பூணூல், நிவீதம். கைகளில் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆயுதங்கள் ஏதும் இல்லை. இது சுப்ரமண்யராகத்தான் இருக்கவேண்டும். ஏன் என்று கீழே பார்ப்போம். கீழே இரு கணங்கள். மேலே இரு தேவர்கள். கௌபீனம்தான் ஆடை.

அடுத்து நாம் முன்பே சொன்ன பிரம்மன். ஒரு கையில் ருத்ராக்‌ஷ மாலை. மறு கையில் சக்கரம். ஒரு கை அபய முத்திரையில், மற்றொன்று இடுப்பில். முழு ஆடை. கீழே கணங்கள் நிற்கவில்லை, ஆனால் இரு அடியவர்கள் உட்கார்ந்துள்ளனர். பார்த்தால் ரிஷிகளாகத் தெரியவில்லை. தேவர் சாயல் தெரிகிறது. மேலே மற்ற இரு தொகுப்பில் உள்ளதுபோல தேவர்கள், விஸ்மய முத்திரையில்.

அடுத்து யார்? சூரியன். தலையைச் சுற்றித் தெரியும் ஒளிவட்டம். ஒரு கையில் தாமரைப்பூ. மறு கையில் ருத்ராக்‌ஷ மாலை. ஒரு கை இடுப்பில். ஒரு கை அபய முத்திரையில். இடுப்பில் கௌபீனம். பிரம்மன்கீழ் அமர்ந்திருப்பதுபோலவே இங்கும் இரு அடியார்கள் அமர்ந்துள்ளனர். மேலே இரு தேவர்கள் விஸ்மய முத்திரையில்.


அடுத்து? தேவி, சக்தி, துர்கை. இது முழுதாகச் செதுக்கி முடிக்காத பகுதி என்று தெரிகிறது. மேலே உள்ள இரு தேவர்களில் ஒன்றும் மட்டும்தான் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்றை முடிக்கவில்லை. கீழே சற்றே விகாரமான இருவர். அதில் ஒருவர் தன் தலையை கத்தியால் தானே வெட்டிக்கொள்கிறார். இந்த தற்கொலைப் படையல் வடிவத்தை வராகமண்டபத்தில் உள்ள துர்கை சிற்பத்தொகுப்பிலும் திரௌபதி ரதத்தில் உள்ள துர்கை சிற்பத்திலும் காணலாம். துர்கையின் ஒரு கையில் சக்கரம். மறு கை தெளிவாக இல்லை. ஒரு கை இடுப்பில். மற்றொரு கை எதையோ ஏந்துவதுபோல் தெரிகிறது.

இது இந்துமதத்தில் குறிப்பிடும் ஷண்மதம் என்பதைக் குறிக்கும் தொகுப்புச் சிற்பம் எனலாம். சிவன், விஷ்ணு, கணபதி, சுப்ரமணியன், சூரியன், சக்தி ஆகிய ஆறு பேர்களை வழிபடும் ஆறு மதங்கள். இதில் கூடவே பிரமனும் காட்சி தருகிறாரே ஒழிய பிரமனை வழிபடும் மதம் என்று ஒன்றும் இல்லை. இந்தக் காரணத்தாலேயே நம்மால் எளிதில் கண்டுபிடிக்கக்கூடியவர்களைத் தவிர எஞ்சியிருக்கும் இடது பக்கத்திலிருந்து இரண்டாவது சிற்பம் சுப்ரமணியராக மட்டுமே இருக்கமுடியும் என்று சொன்னேன்.

***

திருச்சி செல்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய கோயில்கள் இவை. இரண்டிலும் வழிபாடு கிடையாது. அதுவும் நல்லதற்கே.

(முற்றும்)

Monday, February 01, 2010

திரு சிராப்பள்ளி - 2

மகேந்திரனின் இந்தக் கோயிலை நீங்கள் பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் மகேந்திரன் மகன் நரசிம்மனால் கட்டப்பட்ட ஒரு கோயிலை நீங்கள் பார்ப்பது எளிதல்ல. உச்சிப் பிள்ளையார் கட்டுமானம் அமைந்துள்ள இடத்துக்கு நேர் கீழாக உள்ள இடத்தில் இந்த மகா அற்புதமான கோயில் உள்ளது. தொல்லியல் துறையினரால் மிக நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. நான் சென்றபோது ஒரு ஈ, காக்காய் இல்லை.

படிகள் ஏறி வரும்போது திடீரென ஒரு சாலை வரும் என்று முன்னர் சொன்னேன் அல்லவா? கீழிருந்து மேலே வரும்போது அந்தச் சாலையில் இடது பக்கம் திரும்புங்கள். சுவரில் “பல்லவர் கால குகைக்கோயில்” என்று ஒரு கை காண்பிக்கும். அதை நம்பி அது காட்டும் திசையில் பயணம் செய்யுங்கள். ஒரு சில அடிகள் சென்றதும் மற்றுமொரு கை வலப்பக்கம் திரும்பும். அங்கே வரிசையாகக் குடிசை வீடுகள். இருவர் நடந்து செல்லும் அளவுக்குத்தான் பாதை இருக்கும். குடிசை மக்கள் அந்தப் பாதையையும் பயன்படுத்துவார்கள். நான் செல்லும்போது ஒருவர் குளித்துக்கொண்டிருந்தார். அவர் முகர்ந்து கொட்டும் நீர் என்மேல் படாதவாறு கவனமாகத் தாண்டிச் சென்றேன். மேலும் குடிசை வீடுகள். திடீரென குன்றின் அடிப்பாகம் தெரிந்தது. வலது பக்கம் திரும்பவா, இடது பக்கம் திரும்பவா என்று வலது பக்கம் திரும்பி, பின் இடதுபக்கம் திரும்ப, ஆஹா, என்ன ஆச்சரியம்!


தொல்லியல் துறையின் பலகை இது நரசிம்மன் கட்டியிருக்கலாம் என்ற ஹேஷ்யத்தை முன்வைத்து, அந்த இடத்தை யாரும் அசுத்தம் செய்யக்கூடாது என்று எச்சரித்தது. மாபெரும் பாறை முகப்பில் நான்கு தூண்கள் (Pillars), இரண்டு அரைத் தூண்கள் (Pilasters). தூரத்தில் இருந்து பார்க்கும்போதே அவை மகேந்திரன் காலத்துக்கு அடுத்த காலம் என்று காட்டுபவை. கீழே சதுரம், மேலே எட்டு பட்டிகள், ஆனாலும் அதிலும் சில வடிவ மாற்றங்கள், மேல் நோக்கிச் செல்லும்போது தாமரை மலர்வதுபோல் தலைகீழான மொழுக் டிசைன்.

மண்டபத்துக்கு மேல் பாறை சுமார் 60 மீட்டர் உயரம் எழும்பிச் செல்கிறது. அதற்கு மேலாகத்தான் உச்சிப்பிள்ளையார் கோயிலின் கட்டுமானம். கீழே உள்ள படத்தில் அதனைப் பார்க்கலாம்.


உள்ளே நுழைந்ததும் மேலும் பல ஆச்சரியம். இதுவும் டிபிகல் பல்லவர் கால மண்டபங்களிலிருந்து வெகுவாக மாறுபட்டது. முன்னர் பார்த்த மகேந்திரன் மண்டபத்தில் உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் கருவறை. இங்கே வலப்பக்கம் ஒரு கருவறை, இடப்பக்கம் ஒரு கருவறை. இரண்டு கருவறைகளும் சற்றே உயர்ந்த மண்டபங்களாகக் காணப்படுகின்றன.


இரு கருவறை மண்டபங்களிலும் முன் இரு தூண்கள், பின் இரு அரைத்தூண்கள். உயர்ந்த மண்டபத்தின்மீது ஏற மூன்று படிகள்.


கருவறை முகப்பில் இரு துவார பாலர்கள். அதைத் தவிர கருவறைக்கு இரு பக்கமும் இருவர்.

ஒரு சந்நிதி (மேற்கு) சிவனுக்கு என்பது துவார பாலர்கள் கையில் உள்ள தடிக்கழியிலிருந்து தெரிகிறது. ஆனால், மகேந்திரன் கோயிலில் உள்ள துவாரபாலர்கள் கையில் இருக்கும் கழிகளைவிட இந்தக் கழிகள் மிகவும் அழகாகச் செய்யப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம். அந்த துவாரபாலர்கள் ஜடா மகுடம் தரித்துள்ளனர் - அதாவது மகுடத்துக்கு வெளியே ஜடை முடி தெரியும். இதுவும் சிவ துவாரபாலர்களின் ஓர் அடையாளம்.


மாறாக எதிர்ப்பக்கம் உள்ள சந்நிதியைக் காக்கும் துவாரபாலர்கள் கையில் கழி ஏதும் இல்லை. அவர்கள் முழுமையான மகுடம் மட்டும் தரித்துள்ளனர். முடி வெளியே கிடையாது. இது விஷ்ணுவுக்கான கருவறை என்பது எளிதில் புரியும். இங்கே ஒரு வாயிற்காப்போன் ஓர் அரக்கன்மீது காலை வைத்து அழுத்துவதைப் பார்க்கலாம். மகேந்திரன் கோயிலில் வாயிற்காப்பாளர்கள்போல் அல்லாமல் இங்கே உள்ள நான்கு வாயிற்காப்பாளர்களும் பல்வேறு விதமாகத் திரும்பியுள்ளனர் என்பதை நீங்கள் பார்க்கலாம். எந்த இருவரும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள்.



(தொடரும்)

திரு சிராப்பள்ளி - 1

திருச்சியில் இரண்டு பல்லவர் கால குகைக்கோயில்கள் உள்ளன. கொஞ்சம் முயற்சி செய்தாலொழிய உங்களால் அவற்றைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஒன்று சற்றே எளிதில் கண்டுபிடிக்கக்கூடியது. மற்றொன்று கவனமாக மறைத்துவைக்கப்பட்டுள்ளது.

உச்சிப் பிள்ளையார் வெகு பிரசித்தம். தரையில் தாயுமானவ சுவாமியை தரிசித்துவிட்டு சரேலென ஏறும் படிகளின் வழியாக பிள்ளையாரை தரிசிக்க ஒரு கூட்டம் செல்லும். இளைஞர்கள் தம் பிடித்து ஏறுவார்கள். குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் சிரமப்பட்டேதான் ஏறமுடியும்.

திடீரென இடையில் கார்கள் செல்லக்கூடிய ஒரு பாதை வரும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாதையைக் கடந்து மேலே மேலே ஏறி, இடக்கைப் பக்கம் திரும்பி, ஒரு வளைவு வளைந்து மேலே சென்றால், கொஞ்சம் திறந்தவெளி வரும். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் இடதுபக்கம் (டிக்கெட் பரிசோதகரைத் தாண்டியதும்) மகேந்திரன் கட்டிய குடைவரைக் கோயில் தென்படும்.


பொழுதுபோக்க, அல்லது ஃபிகரை கரெக்ட் செய்ய வந்த சிலர் மட்டும் அங்கே உட்கார்ந்திருப்பார்கள். அவர்களை நோக்காமல் நீங்கள் அங்கே சென்றால் அற்புதமான ஒரு சுவர்ச் சிற்பக் காவியத்தைக் காணலாம். லலிதாங்குர பல்லவேசுவர கிருஹம் எனப்படும் இந்த மண்டபம் பொதுவான மகேந்திர மண்டபங்களிலிருந்து வித்தியாசப்பட்டது. அதில் கருவறை மண்டபத்தில் முகப்பிலிருந்து பார்த்தால் நேராகத் தெரியும். ஆனால் இங்கே மண்டபத்தில் நுழைந்து வலதுபக்கம் (கிழக்குப் பக்கம்) திரும்பினால்தான் கருவறையைக் காணலாம். சிவனுக்கான கருவறை என்பது துவார பாலர்களின் கையில் உள்ள தடிக்கழியைக் கொண்டே உணரலாம்.

    

கருவறையில் உள்ளே ஏதும் இல்லை. அக்காலத்தில் துணியில் வரைந்த அல்லது மரச்சட்டத்தில் செதுக்கிய உருவமே வழிபடப்படும் கடவுளாக இருந்தது. ஆனால் எதிர்ப்பக்கம் (மேற்குப் பக்கம்), கருவறைக்கு நேர் எதிராகப் பார்த்தால் மிக அற்புதமான ஒரு கங்காதரர் சிற்பம் உங்கள் கண்களுக்குப் புலப்படும். சொல்லப்போனால், உள்ளே நுழையும் எவரும் கருவறையைப் பார்க்கமாட்டார்கள். கங்காதரரில்தான் உங்கள் பார்வை நிலைக்கும்.


நெருங்கி அருகே வந்து பார்த்தால், சிவன்; நான்கு கரங்களில் மேலுள்ள வலக்கரம் பெண் வடிவில் காணப்படும் கங்கையை ஏந்துகிறது. அதே கரத்தில் சிவனின் ஜடைமுடி ஒரு சரம் வருகிறது. ஆக கங்கையை வாங்கி ஜடையில் செலுத்துகிறார். கீழுள்ள வலக்கரம் பாம்பை ஏந்துகிறது. அந்தப் பாம்பு வளைந்து எதிர்த்து முகத்தை மேல் நோக்கி உயர்த்தியபடி உள்ளது. மேலுள்ள இடக்கரத்தில் ருத்திராட்ச மாலை உள்ளது. அதற்கு மேல் ஒரு மான் உட்கார்ந்தாற்போல உள்ளது. கீழுள்ள இடக்கரம் இடுப்பில் ஒயிலாக (கடிஹஸ்தம்) உட்கார்ந்திருக்கிறது. வலக்கால் முயலகன் என்ற ராட்சசனின் தலையின்மேல் பதிந்துள்ளது. முயலகனின் இடக்கை சிவனின் பாதத்தின் குதிகாலை ஏந்தியுள்ளது. சிவனின் இடது கால் லேசாக வளைந்துள்ளது.

சிவனின் இடுப்பில் முழுமையான ஆடை உள்ளது. பொதுவாக சிவனுக்கு கௌபீனம் மட்டும்தான் இருக்கும். விஷ்ணுதான் முழுமையான கச்சம் அணிந்திருப்பார். இங்கே கங்காதரர் முழுமையான ஆடை உடுத்திருப்பது அபூர்வம். மாமல்லையில் ஆதிவராஹ மண்டபத்திலும் தர்மராஜ ரதத்திலும் கங்காதரர் சிலைகள் உள்ளன. அவற்றில் இருவரும் கௌபீனம்தான் அணிந்துள்ளனர். பூணூல் துணியால் ஆனது, நிவீத முறையில் கைக்கு மேலாக அணியப்பட்டுள்ளது.

கங்காதரர் தலையில் கிரீடம் அணிந்துள்ளார். கூம்பு வடிவிலான கிரீடம். ஒரு காதில் மகரக் காதணி, மறு காதில் குண்டலங்கள்.

கங்காதரருக்கு இரு பக்கத்திலும் நான்கு தேவர்கள் விஸ்மய (ஆச்சரிய) முத்திரையில் ஒரு கையையும் இடுப்பில் ஒரு கையையும் வைத்துள்ளனர். இரு முனிவர்கள் ஒவ்வொரு பக்கமும் (அவர்களது மேலுடம்பு மட்டும்தான் தெரிகிறது) காணப்படுகின்றனர்.

இந்தச் சிற்பத் தொகுப்பு ஆச்சரியமான ஒன்று. மகேந்திரன் காலத்தில் அதிகபட்ச வேலைப்பாடு என்றால் அது துவாரபாலர்களுடன் முடிந்துவிடுகிறது. இந்த கங்காதரர் மட்டுமே ஒரு முழு panel ஆக, மொத்தம் 10 உருவங்கள், எக்கச்சக்கமான விவரணைகள் என்று செதுக்கப்பட்டுளது.

இந்த அளவுக்கு விஸ்தாரமாக இந்த ஓரிடத்தில்தான் மகேந்திரன் முயற்சி செய்துள்ளான்.

நான்கு தூண்கள் முன் வரிசையில் இருப்பதுபோல பின்வரிசையிலும் உள்ளன. மகேந்திரன் தூண்கள் - மேலும் கீழும் சதுரவடிவம், இடையில் எட்டு பட்டிகள். தூண்களில் நிறைய டிசைன்கள். பல்லவ கிரந்தத்தில் நிறைய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. பின்வரிசை நான்கு தூண்களுக்குப் பின்புறம் ஒரு சுவர் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்புறச் சுவருக்கும் பின்வரிசைத் தூண்களுக்கும் இடையில் ஒரு ஆள் செல்லும் அளவுக்கு இடைவெளி உள்ளது. இந்தச் சுவர் முழுவதிலும் பிற்காலத்தில் (10-ம் நூற்றாண்டு) யாரோ ஒருவர் பாடிய பாடல் தமிழ் எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)

மாமல்லை - 2: செய்வித்தவர்கள்

மாமல்லையின் சிற்பங்களை ரசிப்பதற்கு, அவை எந்த நூற்றாண்டில் செதுக்கப்பட்டன, யார் ஆணையின்பேரில் செய்யப்பட்டன என்பது பெரிதும் அவசியமில்லை. செய்துவித்தவர்கள் போய்விட்டனர். சிலைகள் அப்படியே (சிற்சில அழிவுகளையும் தாண்டி) நிற்கின்றன.

ஆனால் என் முந்தைய பதிவில் மகேந்திரன், நரசிம்மன், பரமேஸ்வரன், ராஜசிம்மன் ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன். அது தொடர்பாக இந்தப் பதிவு. நண்பர் லலிதாராம் பேசினார். மாமல்லையின் பெரும்பாலான கட்டுமானங்களை நரசிம்மன்தான் செய்துவித்தான் என்று வரலாற்றாளர்கள் சொன்னாலும் மாற்றுக் கருத்துகள் உள்ளன என்பது பதிவுசெய்யப்பட வேண்டும் என்றார்.

மகேந்திரன் மாமல்லையில் எதுவும் செய்யவில்லை. மாமல்லை முழுக்க முழுக்க மகேந்திரனின் மகன் நரசிம்மன் காலத்தில் உருவாகி, அதன் தொடர்ச்சியாக நரசிம்மனின் பேரன் பரமேஸ்வரன் சிலவற்றை உருவாக்கி, அவனது மகன் ராஜசிம்மன் மேலும் சிலவற்றை உருவாக்கினான். பின்னர் ராஜசிம்மன் தன் தலைநகர் காஞ்சியில் கட்டுமானங்களை உருவாக்க ஆரம்பித்ததும் மாமல்லை கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. மாமல்லையில் இருக்கும் கடற்கரைக் கோயிலில் உள்ள சயனத் திருக்கோல விஷ்ணு மட்டும் மகேந்திரனுக்கும் முந்தைய காலத்தில் - சிம்மவிஷ்ணு காலத்திலேயே - உருவாக்கப்பட்டிருக்கலாம். நரசிம்மன் காலத்தில் அதற்குமேல் ஒரு கட்டுமானம் உருவாகப்பட்டது என்றும் அது உடைந்து விழுந்தபின், ராஜசிம்மன் காலத்தில் இப்போது உள்ள கட்டுமானக் கோவில்கள் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மாமல்லை என்ற பெயரே மாமல்லன் என்ற நரசிம்மனின் பட்டப் பெயர் காரணமாக இந்த நகருக்கு ஏற்பட்டது என்பதும் ஒரு கருத்து.

ஆனால் வரலாற்றாளர், தொல்லியல் ஆராய்ச்சியாளர் நாகசாமி தொடங்கிவைத்த மற்றொரு கருத்து இது: மாமல்லையில் உள்ள அனைத்துமே ராஜசிம்மன் காலத்தில் உருவானது. ஏனெனில் மூன்று வெவ்வேறு விதமான கட்டுமான அமைப்புகளில் ‘அத்யந்த காமன் என்பவன் இதனைக் கட்டுவித்தான்’ என்ற கல்வெட்டு காணப்படுகிறது. ஒன்று தர்மராஜ மண்டபம். இரண்டாவது சாலுவக்குப்பத்தில் உள்ள அதிரணசண்ட மண்டபம். மூன்றாவது கணேச ரதம்.

மறுபக்கம், தர்மராஜ ரதத்துக்கு அத்யந்த காம பல்லவேசுவர கிருஹம் என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகசாமியின் கூற்று இங்கு அத்யந்த காமன் என்று சொல்லப்படுவது ராஜசிம்மன் ஒருவன்தான் என்பது.

கலைவடிவம் காரணமாக மாமல்லை கட்டுமானங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுவதை நாகசாமி மறுக்கிறார்.

தர்மராஜ மண்டபம் மிகவும் எளிமையான கட்டுமானத்தில் இருக்கிறது. தூண்கள் அகலமாக, மேலும் கீழும் சதுரமாகவும், இடையில் எட்டு பட்டிகள் கொண்டதாகவும் உள்ளன. மகேந்திரன் கட்டுவித்த மண்டபங்கள் இப்படிப்பட்டவையே. அதிரணசண்ட மண்டபத்தில் உள்ள தூண்களும் இப்படி எளிமையானவையே. ஆனால் இந்த மண்டபத்தில் கருவறையில் ஒரு சோமாஸ்கந்தர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. சோமாஸ்கந்தரை கல்லிலேயே செதுக்குவது என்பது பரமேஸ்வரன் காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ராஜசிம்மன் காலத்தில் மேலும் மெருகேற்றப்பட்டது என்கிறார்கள். அதற்குமுன் மரத்திலோ அல்லது துணியிலோ வரையப்பட்ட சோமாஸ்கந்தர்தான் வழிபடும் கடவுளாக இருந்ததாம். கணேச ரதம் என்பது மாமல்லபுரத்தில் உள்ள ரதங்களிலேயே மிகவும் உயர்வாக உருவாக்கப்பட்ட, மிகவும் அழகான ஓர் அமைப்பு.

ராஜசிம்மன்தான் இவை அனைத்தையும் உருவாக்கினான் என்றால் ஏன் மிகவும் primitive ஆன அமைப்பையும் மிகவும் sophisticated ஆன அமைப்பையும் ஒரு சேரக் கட்டுவித்தான் என்பது ஒரு கேள்வி.

தர்மராஜ மண்டபத்தையும் அதிரணசண்ட மண்டபத்தையும் நரசிம்மன் கட்டுவித்தான் என்றால் அதில் ராஜசிம்மன் போய் ஏன் தன் பட்டப்பெயரான ‘அத்யந்த காமன்’ என்பதைப் பொறித்தான்? அற்புதமான படைப்புகளைத் தானே உருவாக்கக்கூடிய ராஜசிம்மன் அவ்வளவு கீழ்த்தரமாகப் பொய் சொல்லக் கூடியவனா? இருக்காது என்பது நாகசாமியின் கருத்து.

ரதங்கள் அனைத்தும் நரசிம்மன் உருவாக்கியது என்பது பெரும்பாலானோர் கருத்து. அதிலும் தர்மராஜ ரதத்தின் ஒரு பக்கம் செதுக்கப்பட்டுள்ள உருவம் நரசிம்மனுடையது என்கிறார்கள். ஆனால் கலைக்கோவன் இதனை மறுத்து இதையும் ராஜசிம்மன்தான் உருவாக்கியுள்ளான் என்று தன் புத்தகத்தில் கூறுவதாக லலிதாராம் தெரிவிக்கிறார். (நான் இந்தப் புத்தகத்தை இன்னமும் படிக்கவில்லை.)

ஆக, நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், இன்னார்தான் இதனைச் செய்துவித்தார் என்று தெளிவாகச் சொல்லமுடியாத நிலை.

இந்த வரலாற்று ஆய்வுகள் பிரச்னை அளிக்கக்கூடியவை என்பதாலும், எனக்கு வரலாற்றைப் பற்றி திட்டவட்டமாகச் சொல்லும் அளவுக்கு ஞானம் இல்லை என்பதாலும் இனிவரும் பதிவுகளில் இந்த அரசர்களின் பெயர்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்போகிறேன். ஆதிவராக மண்டபம், தர்மராஜ ரதம் என்ற இரண்டு படைப்புகளைப் பற்றிப் பேசும்போது மட்டும் சில பெயர்கள் வரும். அங்கும் இந்த caveat தொடரும்.

இனி வரும் பதிவுகளில் விஷயத்துக்குள் இறங்குவோம்.