Monday, August 30, 2010

தமிழக ஓவியங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். ஜோப் தாமஸ் என்ற அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் பேராசிரியர் ஒருவர் தமிழகத்தின் கோயில் ஓவியங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுத விரும்புகிறார் என்று எங்கள் ஆங்கில எடிட்டோரியலிலிருந்து தகவல் வந்தது. யாரோ ஒரு அமெரிக்கர் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒரு தமிழர்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் டேவிட்சன் கல்லூரியில் இந்தியக் கலை, கலாசாரம், காந்தியம், இஸ்லாமியக் கலை ஆகியவை தொடர்பான பாடங்களை நடத்துபவர்.

பொதுவாக நாங்கள் அகடெமிக் புத்தகங்களைச் செய்வதில்லை. பொதுமக்களுக்கான புத்தகங்கள்தாம். அவரிடம் அதைத்தான் சொன்னேன். அவரும் அதைத்தான் விரும்பினார். அவரது பிரதியில் ஏகப்பட்ட அடிக்குறிப்புகள் இருந்தன. அகடெமிக் ரிகர். ஆனால் அனைத்தையும் வைத்துக்கொள்வோம், அடிக்குறிப்பாக அல்ல, புத்தக இறுதியில் end notes ஆக என்று முடிவெடுத்தோம்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் பாறை ஓவியங்கள் எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் படிமங்கள் மிக அதிகமாகக் கிடைத்துள்ளன. ஜோப் தாமஸின் புத்தகம் அதிலிருந்தே தொடங்குகிறது. அடுத்து, சங்க காலத்தில் ஓவியங்கள் நிச்சயம் இருந்திருக்கவேண்டும் என்பதை சங்க இலக்கிய மேற்கோள்களிலிருந்தே தாமஸ் நிறுவுகிறார். துரதிர்ஷ்டவசமாக அவை ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை. அடுத்து நமக்குக் கிடைப்பது பல்லவர் கால ஓவியங்களும் பாண்டியர்களின் சித்தன்னவாசல் ஓவியங்களும். வெகு நாள்களாக பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்களுடையவை என்று தவறாகச் சொல்லப்பட்டன. இப்போது அந்தத் தவறு திருத்திக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின், பிற்காலச் சோழர்களின் அருமையான ஓவியங்கள். அவற்றில் முக்கியமான பலவும் தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள உள்பிராகாரத்தில் உள்ளன. அவை பொதுமக்களுக்குக் காணக் கிடைக்கா.

தாமஸின் புத்தகம் இவை அனைத்தையும் அழகாகப் பதிவுசெய்து, அவை பற்றிய ஒரு புரிதலை நமக்குத் தருகிறது.

அடுத்து, தமிழகத்தின் வரலாற்றில் பெரும் மாற்றம். விஜயநகர அரசர்கள், அதன்பின் அவர்களது ஆளுநர்களான நாயக்கர்கள் காலத்தில் அழகுணர்ச்சி போய், வேறுவிதமான நோக்கங்கள் கோயில் ஓவியங்களில் வந்துசேருகின்றன.

அடுத்து, கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ்காரர்கள் காலம். அப்போது தஞ்சை மராத்திய மன்னர்கள் அவையில் முதன்முதலாக, செகுலர் காட்சிகள் படமாக வரையப்படுகின்றன. போர்ட்ரே என்ற ஆசாமிகளைத் தத்ரூபமாகப் படமாக வரையும் முறை வருகிறது. மற்றொரு பக்கம், கம்பெனியார், ஓவியத்தை தங்களது வணிகக் காரணங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சாமிகளையும் பக்தர்களையும் வரைந்தவர்கள், பருத்திச் செடிகளையும் மாம்பழ வகைகளையும் வரைகிறார்கள். வெள்ளைக்காரப் பெண்கள் அணிந்துகொள்ளவேண்டிய கவுன் துணியில் அழகழகான வடிவங்களை வரைகிறார்கள். சென்னையில் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரி, தியோசாஃபிகல் சொசைட்டி வரை தாமஸ் ஓவிய மோஸ்தர் மாற்றங்களைப் பின்பற்றிச் செல்கிறார்.

இந்தப் புத்தகத்தின் ஆரம்ப வடிவம் முதற்கொண்டு, அதன் இறுதி வடிவம் வரை பணியாற்றியது நான் ஈடுபட்ட சந்தோஷமான வேலைகளில் ஒன்று. இறுதியில் 32 பக்க வண்ண ஓவியங்களுடன் புத்தகமாகக் கொண்டுவந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடே கிடையாது. நியூ ஹொரைஸன் மீடியா கொண்டுவந்துள்ள மிகச் சிறந்த புத்தகங்களில் இது ஒன்று.

புத்தகத்தின் அறிமுக விழாவின்போது பேரா. ஜோப் தாமஸ் கொடுத்த காணொளிப் பேச்சை இங்கே தருகிறேன்.

புத்தகத்தை வாங்க இங்கே செல்லவும். ரூ. 300 புத்தகம், சில நாள்களுக்கு மட்டும் சலுகை விலையாக ரூ. 250/-க்குக் கிடைக்கும்.



வீடியோவைத் தரவிறக்கம் செய்துகொள்ள
.

Sunday, August 29, 2010

வீடு

நாகபட்டினத்தில் நான் வசித்தது ஒரு ஓட்டு வீட்டில். அன்றைய காலத்தின் வீடுகளுக்கே உரிய வடிவம். நடுவில் திறந்த சதுர வடிவிலான முற்றம் (முத்தம் என்று அழைக்கப்படும்). நான்கு பக்கமும் சுற்றி தாழ்வாரம், அதற்கு அடுத்து கூடம். பல வீடுகளில் கூடமும் நான்கு பக்கங்கள் இருக்கும். ஆனால் எங்கள் வீட்டில் இரண்டு பக்கத்தில் மட்டும்தான் இருந்தது. வீடு வடக்கு தெற்கானது. தெற்கு பார்த்த வாசல், வடக்கில் கொல்லை. கூடம் கிழக்கிலும் மேற்கிலும்தான். கூடத்தின் இரு முனைகளிலும் அறைகள். வட எல்லைகளில் அச்சாக இரு பக்கமும் சமையலறை போன்ற பகுதி. அறை என்றால் இரட்டை அறையானது. சமையல் அறைக்கு முன்பகுதி அறைக்கு காமிரா அறை என்று பெயர். அங்குதான் அரிசி டின் இருக்கும். பெரிய இரும்பு டின். அங்குதான் ஆராதனைக்குரிய பெருமாள் விக்கிரகங்களும் சாளக்ராமங்களும் இருக்கும்.

வாசலின் இரு பக்கமும் திண்ணைகள் உண்டு. எங்கள் வீட்டில் ஒரு பக்கம் திண்ணை சற்று பெரிதாகவும், மற்றொரு பக்கம் திண்ணை சிறிதாகவும் ஆக்கப்பட்டிருந்தது. திண்ணை இழந்திருந்த பகுதி ஒரு அறையாக உருவெடுத்திருந்தது.

வாசலிலிருந்து பார்த்தால் முற்றமும், தொடர்ந்து தாழ்வாரப் பகுதியும், பிறகு ரேழி தாண்டி கொல்லையும், கொல்லையில் இருக்கும் கிணறும் நேராகத் தெரியும். கிணறைச் சுற்றி கொஞ்சமாக தரையில் சிமெண்டு போடப்பட்டிருக்கும். சுற்றி மண் தரையில் வாழை, தென்னை மரங்கள், சில பல செடிகள், அதில் முக்கியமாக செம்பருத்திச் செடி, பின் மதில் சுவர்கள். ஒரு கோடியில் கழிவறை இருக்கும். கழிவறைக்கு வந்து மலத்தை எடுத்துச் செல்ல துப்புறவுப் பணிப்பெண்கள் வர கொல்லைக் கதவு ஒன்றும் இருக்கும். எங்கள் வீடு தெருக்கோடி என்பதால் கொல்லைக் கதவு மேற்குச் சுவரில் இருந்தது.

ஆரம்பத்தில் திண்ணைப் பகுதியை உள்ளடக்கி வெளிக் கதவுகள் எவையும் கிடையாது. திண்ணை தாண்டிதான் கதவே. பின்னர்தான் திண்ணையை உடைத்து வெளியேயும் கேட் போட்டோம்.

கூடம், தாழ்வாரம், அறைகள் அனைத்தின்மேலும் ஓடுகள்தான். ஓடுகள் முற்றத்தில் வந்து சரியும். அதேபோல, வெளிச்சுவர்கள் மேலாகவும் சரியும். எனவே நடுவே சுமாராக, கூடமும் தாழ்வாரமும் பிரியும் இடத்தில்தான் மிக உயரமாக எழும்பி இருக்கும். நல்ல மழை பெய்யும்போது முற்றத்தில் நான்கு மூலைகளிலிருந்தும் நீர் ஒரு பரவளையப் பாதையில் வந்து கொட்டும். மழை மிகவும் கடுமையாக இருக்கும்போது மூலை விட்டத்தின் இரு பக்கங்களிலிருந்தும் கொட்டும் தாரைகள் ஒன்றை ஒன்று தொடும் அளவுக்குப் போய்விடும்.

வீட்டின் கூரை ஓடுகளால் ஆனது. கூரையைத் தாங்குவது மரத்தால் ஆன தூண்களும் உத்தரங்களும். உத்தரங்களுக்குக் குறுக்கே மர ரீப்பர்கள் அடிக்கப்பட்டு, அவற்றின்மீதுதான் ஓடுகள் உட்காரவைக்கப்படும். கடுமையான புயல் வீசும்போது ஓடுகள் அப்படியே பறந்துவிடும். நல்ல மழை பெய்தால், என்னதான் ஓடுகள் நெருக்கமாக இருந்தாலும் தண்ணீர் ஒழுக ஆரம்பித்துவிடும்.

சுவர்கள் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டவையே. செங்கற்களை காரையில்தான் பதிய வைப்பார்கள். மேல் பூச்சுக்கு மட்டும்தான் சிமெண்ட். ஆரம்பகாலத்தில் இவை அனைத்தும் களிமண்ணாலேயே பிணைக்கப்பட்டு, சுவரில் பூசுவதும் களிமண்ணாகவே இருந்திருக்கவேண்டும். பின்னர் காரை (சுண்ணாம்பு) பயன்பட்டிருக்கவேண்டும். பிறகு சிமெண்ட் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய ஆரம்பித்துள்ளது. நான் வசித்த வீட்டில் தரையும் சுவர் மேல்பூச்சும் சிமெண்ட்தான். தரை வழவழ என்று இருக்காது. சொரசொரப்பாகவே இருக்கும். கீழே விழுந்து முட்டியைப் பேர்த்துக்கொண்டால் அப்படியே வழட்டிவிடும். சில பகுதிகளில் சிமெண்ட் பால் ஊற்றி, அதில் சில வண்ணங்களைச் சேர்த்துக் குழைத்து பூசியிருப்பார்கள். அங்கே தண்ணீர் தரையில் சிந்தியிருந்தால் வழுக்கும்.

வாசல்கள் எல்லாமே மரத்தால் ஆனவை. சிக்கல் என்னவென்றால் முழுவதுமான ஃபிரேமும் மரத்தால் ஆனதால், தரையில் நிலப்படி இருக்கும். சிறுவர்கள் தடபுடவென்று ஓடமுடியாது. நன்கு தடுக்கிவிடும். நான் ஒருமுறை கீழே விழுந்து தாவாங்கட்டையைப் பேர்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு பல் அடிவாங்கியது, இன்றும் தனி வண்ணத்தில் தெரிகிறது. தாடையிலும் ஒரு பெரிய தழும்பு உண்டு.

அதேபோல வாசலை ஏதோ நாலடிக்காரர்கள் உள்ளே நுழைவதற்காக மட்டுமே வைத்திருப்பார்கள். குனிந்துதான் உள்ளே நுழையவேண்டும். அதிலும் நான் வளர்ந்தபின் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக, நான் வசிக்கும்போதே என் வீட்டில் பல மாற்றங்கள் நிகழந்தன. ஒட்டுமொத்தமாக இடித்துவிட்டு வேறு கட்டடத்தைக் கட்டவில்லை. அந்த அளவுக்கு என் தந்தை சம்பாதிக்கவில்லை. கொல்லைத் தோட்டத்தில் ஒரு பகுதி அழிக்கப்பட்டு, சமையல்கட்டுடன் சேர்க்கப்படு, என் தாய்க்குப் பிடித்தமான அளவுக்கு சமையலறை விரிவாக்கப்பட்டது. புதிதாக வாங்கப்பட்ட கேஸ் அடுப்பு, பின்னர் வந்துசேர்ந்த கிரைண்டர், மிக்ஸி (ஆனால் நாகபட்டினத்தில் நாங்கள் இருந்தவரை கடைசிவரை ரெஃப்ரிஜிரேட்டர் வரவேயில்லை) ஆகியவற்றுக்கும், அப்போதும் தேவைப்பட்ட அம்மி, கல்லுரல் ஆகியவையும் அந்தச் சமையல் அறையில் நுழைந்தன. அதற்குமுன் இருந்த சமையலறையில் தேள்கள் குடித்தனம் இருக்கும். ஓடுகள் விறகடுப்பின், கரி அடுப்பின் கரியால் அண்டக்காக்கை நிறத்தில் இருக்கும். ஆனால் சமையலறை விரிவாக்கத்தின்போது அந்த இடம் ‘ஒட்டப்பட்டது’.

ஒட்டு என்றால் நடுவில் உத்தரங்கள் போட்டு, குறுக்காக பல மரக்கட்டைகளை வைத்து, ஒரு ஓரத்திலிருந்து நன்கு சலித்த சுண்ணாம்பில் ஒட்டப்பட்ட பட்டையான சுட்ட ஓடுகளை ஒட்டிக்கொண்டே வருவார்கள். பிறகு மேலும் கீழும் சிமெண்ட் பூசப்படும். நாங்கள் இருந்தவரை நாகப்பட்டினம் வீட்டில் ரீஇன்ஃபோர்ஸ்ட் காங்கிரீட் வரவில்லை. இப்போதெல்லாம் தூண்களும் காங்கிரீட், உத்தரங்களும் காங்கிரீட். செங்கற்களுக்கு இடையில் சிமெண்ட், சுவரின் மேல்பூச்சு சிமெண்ட். தரையில் டைல்ஸ் அல்லது கிரானைட் அல்லது மார்பிள் அல்லவா? அப்போதெல்லாம் மொசாயிக் என்ற தொழில்நுட்பம் நுழைந்திருந்தது. தரையில் எதையோ பதித்து, வழவழ என்று இழைத்துக்கொட்டுவார்கள். பிறகுதான் அது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆனது.

வீட்டில் வேலை நடக்கும்போதெல்லாம், தலைமைக் கொத்தனார், தலைமைத் தச்சர், அவர்கள்கீழே வேலை செய்யும் பல வேலையாட்கள், சித்தாள்கள், இடை இடையே அவர்கள் வேலையை நிறுத்திவிட்டு, ஒருவரை அனுப்பி வாங்கிக்கொண்டுவந்து தின்னும் வடை, குடிக்கும் டீ, ஒதுங்கிச் சென்று அடித்துவிட்டுவரும் பீடி என்று ஜெயகாந்தன் கதைப் பின்னணியில் இருக்கும். தச்சர்கள் வேண்டிய உத்தரங்களை, ரீப்பர்களை, தூண்களை உருவாக்குவார்கள். நமக்கு வேண்டும் என்றால் உட்கார நாற்காலிகள், மேஜைகளையும் செய்துதருவார்கள். அலமாரிகளைச் செய்வார்கள், ஜன்னல்களுக்கான கதவுகளைச் செய்வார்கள். பிறகுதான் காங்கிரீட் ஸ்லாப்கள் அமைக்கப்பட்டு ராட்சச ஸ்டோரேஜ் இடங்கள் உருவாக ஆரம்பித்தன. தச்சர்கள் காணாமல் போக ஆரம்பித்தனர்.

நாகபட்டினத்தின் உப்புத் தண்ணீரைக் கொண்டு செய்த சுவர்களும் தரைகளும் மழைக்காலத்தில் ஊற ஆரம்பித்துவிடும். அப்போதெல்லாம் வீடு கட்ட நல்ல தண்ணீர் கொண்டுவர வழியே இல்லை. இப்போது ஒருவேளை சாத்தியமோ என்னவோ. மழைக்காலத்தில் தரையில் சாக்குகளை விரித்துவைப்பது ஒன்றுதான் வழி. மேலிருந்து ஒழுகும் நீரையும் எடுத்துக்கொள்ளும், கீழிருந்து ஊறும் நீரையும் எடுத்துக்கொள்ளும்.

மார்கழி மாதத்தில் என்னவோ பெரிய குளிர் என்று என் தந்தை சாக்குப் படுதா கொண்டு முற்றத்தின் திறந்த வெளியை எல்லாம் மறைப்பார்.

எந்தக் கோடையிலும் எங்களுக்கு மின்விசிறி தேவைப்பட்டதே கிடையாது. நாங்கள் பொதுவாக கூடத்திலோ தாழ்வாரத்திலோதான் படுத்திருப்போம். மிகக் கடுமையான கோடையில் விசிறி கொண்டு விசிறிக்கொண்டே தூங்கவேண்டும். ஆனால் தூக்கம் வந்தபின் விசிறிக்குத் தேவை கிடையாது. சிறு குழந்தைமுதல் கிழவர்கள்வரை அந்தக் கோடைக்குக் கஷ்டப்பட்டதாக நினைவில்லை. இப்போது ஏசி இல்லாமல் முடிவதில்லை.

***

ஏன் இந்தப் பெரிய நாஸ்டால்ஜிக் கட்டுரை? தொடர்கிறேன்.

Tuesday, August 24, 2010

பூணூல்

பார்ப்பானுக்குத்தான் பூணூலா? இல்லை பிறரும் அணியலாம் என்று சொல்கிறார்கள். எத்தனை பார்ப்பனர்கள் இன்று பூணூல் அணிகிறார்கள் என்பது வேறு விஷயம்.

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களில் பலவகைப் பூணூல்களைப் பார்க்கலாம். இவை நூலால் செய்யப்பட்டவை, துணியால் செய்யப்பட்டவை, ருத்ராக்‌ஷ மாலையால் ஆனவை என மூன்று வகை.

சிலர் அணிந்துள்ள பூணூல் உபவீதம் என்ற வகையில் இடது தோள் மேலிருந்து வலது இடுப்பில், கைக்குக் கீழாகச் செல்லும். பிறர் அணிந்துள்ள பூணூல் நிவீதம் என்ற வகையில், இடது தோள் மேலிருந்து வலது கைக்கு மேலாக இருக்குமாறு இருக்கும். சிலர் சன்னவீரம் என்ற வகையில் இரு பூணூல்களை இரண்டு தோளிலிருந்தும் மாறு கையை நோக்கிச் செல்லுமாறு அணிந்திருப்பார்கள்.

தேவர்கள், அசுரர்கள், கடவுள்கள், ராஜாக்கள் என அனைத்து ஆண்களும் பூணூல் அணிந்துள்ளனர். சில மனிதர்களுக்குப் பூணூல் இல்லை என்பதையும் இந்தச் சிற்பங்களில் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.

இப்போது சில படங்களைப் பார்ப்போம்.

இடது பக்கம் நீங்கள் பார்ப்பது ‘அர்ஜுனன் தபசு’ என்று சொல்லப்படும் பெருந்தவ வெளிப்புற சிற்பத் தொகுதியில் காணப்படும் சிவனின் சிற்பம். இவர் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். உபவீதமாக அணிந்துள்ளார். அருகில் உள்ள பூதகணங்கள் பூணூல் அணியவில்லை.

இந்தக் காட்சியில் அர்ஜுனன் தவம் செய்வதும், சிவன் காட்சி அளித்து அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தைத் தருவதும் காட்டப்பட்டுள்ளது. சிவன் கையில் வேல் போலத் தோற்றம் அளிக்கும் ஆயுதம்தான் பாசுபத அஸ்திரம்.

கடவுளைப் பார்த்தோம். அசுரர்கள் எப்படி? மகிஷாசுரனை எடுத்துக்கொள்வோம். தேவியுடன் போரிடும் மகிஷனின் சிற்பத்தை வலப்புறம் பார்க்கலாம். மகிஷனும் கனமான துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளான். மகிஷனுக்குமேல் உள்ள ஓர் அசுரனும் வஸ்திரத்தால் ஆன பூணூலை அணிந்திருப்பதை உங்களால் பார்க்கமுடியும்.
ஆக, கடவுள்களுக்கு உண்டு; அசுரர்களுக்கு உண்டு. தேவகணங்களுக்கு இல்லையா என்றால் பூணூல் அணிந்த கணங்களும் உண்டு, அணியாத கணங்களும் உண்டு என்றுதான் சொல்லவேண்டும். பூணூல் அணிந்துள்ள கணம் ஒன்றின் படத்தை வலப்பக்கத்தில் காணலாம். வராக மண்டபத்தில் துர்கையின் அருகில் காணப்படும் இந்த கணம், துணியால் ஆன பூணூலை அணிந்துள்ளதை நீங்கள் பார்க்கலாம்.

எத்தனை பூணூல்? அதில் என்ன கணக்கு என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு, கீழே உள்ள இரண்டு படங்களைப் பாருங்கள். இரண்டுமே கோவர்தன சிற்பத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டவை.


மேலே, இடப்புறம் உள்ளது பலராமன். பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் ஓர் இடையனைக் கட்டி அணைத்து பயத்தைப் போக்குவிக்கும் நிலையில் உள்ள பலராமன் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். அருகே, ஒரு கையால் மலையைத் தூக்கிக்கொண்டு நிற்கும் கிருஷ்ணன் அணிந்திருப்பது இரண்டு பூணூல்கள். இரண்டுமே துணியால் ஆனவை.

ஆனால், பலராமன் அணைத்துக்கொண்டு நிற்கும் இடையன் பூணூல் அணிவதில்லை!

சரியான கிராஸ் பெல்ட் என்றால் அது சுப்ரமணியர்தான். திரிமூர்த்தி மண்டபத்தில் பிரம்ம சாஸ்தாவாக நிற்கும் சுப்ரமணியர் அணிந்திருக்கும் பூணூலை இடப்பக்கம் காணலாம். இந்தப் பூணூல் ருத்ராக்‌ஷ மணிகளால் ஆனது. இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று செல்லுமாறு அணியப்பட்டுள்ளது.

பொதுவாக வெகு சிலரே இப்படி அணிந்திருக்கிறார்கள்.


நூலால் ஆன பூணூலை யாருமே அணிவதில்லையா? நிவீதம் முறையில் யாரும் அணிவதில்லையா என்றால், அதற்கான் ஒரு முழுமையான உதாரணம் இந்தக் காட்சி. அனந்தசயனக் காட்சி.

இங்கே படுத்திருக்கும் விஷ்ணு அணிந்திருப்பது நிவீதமாக துணியால் ஆன பூணூல். கீழே இருக்கும் ஆயுத புருஷர்களில் வலப்பக்கம் தெரிபவர் நூலால் ஆன பூணூலை அணிந்துள்ளார் - நிவீதம். கீழே இடப்பக்கம் உள்ளவர் ருத்ராக்‌ஷத்தால் ஆன பூணூலை நிவீதமாக அணிந்துள்ளார். மேலே உள்ள கணங்களில் இடப்பக்கம் உள்ள கணம் துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளது. அருகில் உள்ள பெண் போன்ற உருவம் பூணூல் ஏதும் அணிந்தாற்போலத் தெரியவில்லை.

கவனமாகப் பார்த்தால் மது, கைடபன் இருவரில் ஒருவர் முதுகில் பூணூல் ஓடுவதைப் பார்க்கலாம். எனவே மற்றவரும் பூணூல் அணிந்திருக்கத்தான் வேண்டும் என்பதை யூகிக்கலாம்.

Sunday, August 22, 2010

சினிமா வியாபாரம் - புத்தக அறிமுகம் - வீடியோ

நேற்று மாலை தக்கர் பாபா வித்யாலயா, வினோபா அரங்கில், கேபிள் சங்கரின் சினிமா வியாபாரம் புத்தகத்தின் அறிமுக விழா நடைபெற்றது. அதன் ஒளிப்பதிவு இங்கே.

Thursday, August 19, 2010

மெட்ராஸ் தினம்: மெட்ராஸில் சினிமா தியேட்டர்கள் - தியோடர் பாஸ்கரன்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மெட்ராஸ் வாரத்துக்குகாக நான்கு பேச்சுகளை ஏற்பாடு செய்திருந்தது. நான்கும் தமிழில். எனவே இந்த நான்குக்கும் போகவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். முதலாவது, பேரா. சுவாமிநாதன், மாமல்லபுரம் பற்றியது. அடுத்தது, பிரதீப் சக்ரவர்த்தி, சென்னையில் கிடைக்கும் சோழர் காலக் கல்வெட்டுகளும் அவை சொல்லும் கதைகளும். மூன்றாவது, நரசய்யா, இடக்கை, வலக்கை சாதிகளுக்கு இடையேயான பூசல் பற்றி. இறுதியாக, இன்று தியோடர் பாஸ்கரன், மெட்ராஸின் சினிமா பற்றிப் பேசினார். அதன் ஒளிப்பதிவு இங்கே:



ஒளிப்பதிவைத் தரவிறக்கிக்கொள்ள

ஒலிப்பதிவைக் கேட்க



ஒலிப்பதிவைத் தரவிறக்கிக்கொள்ள

மெட்ராஸ் வாரத்தின் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் நான் செல்வேனா என்று தெரியாது. இந்த வாரம் முழுவதுமே வேலை பெருமளவு பாதிக்கப்பட்டது. அடுத்த நிகழ்ச்சி கேபிள் சங்கரின் சினிமா வியாபாரம் புத்தக அறிமுகம். வரும் சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010, தக்கர் பாபா வித்யாலயாவில்.

Wednesday, August 18, 2010

மெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண்டைகள் - நரசய்யா

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இன்று மூன்றாவது நாளாக மெட்ராஸ் வாரக் கொண்டாட்டத்தில், கே.ஆர்.ஏ நரசய்யா மெட்ராஸில் சாதிப் பிரச்னை என்பது பற்றிப் பேசினார்.

ஒரியண்டல் ரிசர்ச் மேனுஸ்க்ரிப்ட்ஸ் நூலகத்தில் அவர் கண்டுபிடித்த நான்கு ஆவணங்களிலிருந்து தொடங்குகிறார். அதில் இரண்டு ஓலைச் சுவடிகள், இரண்டு தாளில் அச்சடிக்கப்பட்டது. ஒரு ஆவணம் தெலுங்கில் எழுதப்பட்டது; மற்றவை மூன்றும் தமிழ். தவிர கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள், பிற புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து தொகுத்து இந்த அரிய வரலாறை வழங்குகிறார் நரசய்யா.

சோழர் காலத்துக்கு முந்தைய ஆவணங்களில் வலக்கை, இடக்கை சாதிகள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ராஜராஜ சோழன் காலத்தில்தான் நிரந்தரப் படை என்று ஒன்று உருவாகியுள்ளதாம். அதில் முன்னின்று போர் புரிந்தவர்கள் வலக்கையினர் என்றும் அவர்களுக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் தந்தவர்கள் இடக்கையினர் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர் என்பது நாகசாமியின் கூற்றாம். ஆனால் அப்போது ஒரே சாதியைச் சேர்ந்த சிலர் வலக்கையினர் என்றும் இடக்கையினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் நாளடைவில் சில சாதிகள் வலக்கை என்றும் சில சாதிகள் இடக்கை என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். சில சாதியினர் தங்களைத் தாங்களே வலக்கை அல்லது இடக்கை என்று கூறிக்கொள்வதும் நிகழ்ந்துள்ளது. சில சாதிகள் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடம் பெயர்வதும் நிகழ்ந்துள்ளது.

மெட்ராஸை கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியதும், பெரும்பாலும் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் புதிய குடியிருப்புக்கு வந்துள்ளனர். ஏற்கெனவே மைலாப்பூர், திருவொற்றியூர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் தமிழர்கள் குடியிருந்தனர். 17-ம் நூற்றாண்டு முழுவதிலும் வெள்ளையர்களின் வெள்ளை நகருக்கு வெளியே கறுப்பர் நகரில் தமிழர்களும் தெலுங்கர்களும் குடியேறியுள்ளனர். இவர்களில் வலக்கை, இடக்கை சாதிகள் இரண்டுமே அடக்கம். இருவரும் தொடர்ந்து பூசல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் ஆங்கில-பிரெஞ்சு யுத்தங்களுக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி அதிகரித்துள்ளது. முத்தயால் பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை என இரு புதுப் பகுதிகள் உருவாகியுள்ளன. இதில் இடக்கையினர் ஒரு பகுதியிலும் வலக்கையினர் மற்றொரு பகுதியிலும் குடியேறியுள்ளனர். இருவரும் புழங்கும் பொதுப்பகுதியாக எஸ்பிளனேட் (பழைய கறுப்பர் நகரம் அல்லது ஜார்ஜ் டவுன்) இருந்துள்ளது. இந்தப் பகுதிகளைப் பயன்படுத்துவதில், குடியேறுவதில், கோயில் கொடை தொடர்பாக, யார் எந்த வர்ணக் கொடியை, எந்த மாதிரியான கோலைப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக, கோயில் மரியாதையைப் பெறுவது தொடர்பாக பிரச்னைகள் எழுந்துள்ளன.

18-ம் நூற்றாண்டு முழுவதிலும் கம்பெனியார் சமரசம் செய்துவைப்பதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒரு கட்டத்திலும் சமரசம் எடுபடவில்லை. இறுதியாக, கம்பெனியினர் கோயில்களைத் தமது ஆளுகைக்குள் கொண்டுவருகின்றனர். உடனடியாக 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து இந்தப் பிரச்னைகள் முடிவுக்கு வருகின்றன. இன்றுகூட சில சாதியினர் தங்களை வலக்கை, இடக்கை என்று சொல்லிக்கொள்கிறார்களாம்.

மிகச் சுவையான வரலாறு. ஒளிப்பதிவைப் பார்க்க:



ஒளிப்பதிவைத் தரவிறக்கிக்கொள்ள

ஒலிப்பதிவை மட்டும் கேட்க



ஒலிப்பதிவைத் தரவிறக்கிக்கொள்ள

சினிமா வியாபாரம் - வெளியீடு

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள கேபிள் சங்கர் எழுதிய சினிமா வியாபாரம் என்ற புத்தகத்துக்கான வெளியீட்டு விழா தக்கர் பாபா வித்யாலயா பள்ளியின் வினோபா அரங்கில் வரும் சனிக்கிழமை 21 ஆகஸ்ட் 2010 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்.

வெளியான நாள் முதல் பரபரப்பாக விற்றுவரும் இந்தப் புத்தகத்தை கிட்டத்தட்ட அனைத்து செய்தித்தாள்களும் இதழ்களும் தங்கள் நூல் அறிமுகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளன.

இந்தப் புத்தகத்துக்கான ஃபார்மல் வெளியீடு - ஓர் அறிமுகக்கூட்டம் என்பதுதான் சரி - இந்த வாரக் கடைசியில் நடைபெறுகிறது. இதற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

சினிமாத் துறையைச் சேர்ந்த நா.முத்துக்குமார், பிரமிட் நடராஜன், ஒளிப்பதிவாளர் மதி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கீழே உள்ளது.

சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் சிந்து சமவெளி ஆராய்ச்சிகள் தொடர்பான ஒரு மையம் உள்ளது. ஐராவதம் மகாதேவன் அதன் தலைவராக உள்ளார். அவ்வப்போது சிந்து சமவெளி தொடர்பாக சில சொற்பொழிவுகளை நடத்துகிறார்கள். கீழே அதுபோன்ற இரு சொற்பொழிவுகளுக்கான ஒளிப்படங்களை இணைத்துள்ளேன். (இரண்டு பேச்சுகளுமே ஆங்கிலத்தில் உள்ளன.)

முதலாவது ஃபின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்ப்போலா கொடுத்த உரை. ஜூன் மாதம் முதலாவது செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றபோது அதில் கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்றவர் அஸ்கோ பர்ப்போலா. சிந்து சமவெளியின் மொழி திராவிட மொழிக்குடும்பத்துடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்பது இவரது கருதுகோள். இது தொடர்பாகவே இவரது கீநோட் பேச்சு செம்மொழி மாநாட்டில் இருந்தது. ஆனால் அந்த மாநாட்டில் மேடையில் விருதுகள் வழங்குவதுதான் முக்கியத்துவம் கொண்டதாக இருந்ததால் இவர் பேச அதிக நேரம் தரப்படவில்லை. நல்ல வேளையாக அதே பேச்சை மேலும் விரிவாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் வழங்கினார். இந்தப் பேச்சைப் பின்பற்றிப் புரிந்துகொள்வது எளிதல்ல. ஆனால் சென்னையில் உள்ள மத்திய செம்மொழி ஆராய்ச்சி மையம், அஸ்கோ பர்ப்போலாவின் கோவை உரையை அச்சடித்து சிறு புத்தகமாக ஆக்கியுள்ளார்கள். அதில் ஒரு பிரதி எனக்குக் கிடைத்தது. அதற்குப்பின் மீண்டும் இந்த வீடியோவைப் பார்த்தபோது சற்று அதிகமாகப் புரிந்தது. அந்தக் கையேடு பொதுவில் அனைவருக்கும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அஸ்கோ பர்ப்போலாவின் இணையத்தளம் எதிலாவது அந்த ஆராய்ச்சிக் கட்டுரை பி.டி.எஃப் கோப்பாகக் கிடைக்கலாம்.

சிந்து சமவெளி ஓடுகளில் காணப்படும் மீன் எதைக் குறிக்கிறது? முருகு அல்லது முருகன் என்பதை சிந்து சமவெளிச் சின்னங்களில் படிக்கமுடியுமா? சிந்து சமவெளி மக்கள் பேசியது தமிழ் மொழியா அல்லது தமிழுக்கும் சற்றே மூத்த புரோட்டோ-திராவிடமா?



தரவிறக்கிக்கொள்ள

***

ஆர்.பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் ஆணையராகப் பணிபுரிபவர். தற்போது குறுகிய காலத்துக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பெனி ஒன்றின் கண்காணிப்பாளராக உள்ளார். அவர் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்ததாகச் சொல்லப்படும் இடங்களில் இப்போது புழங்கும் ஊர்ப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றை, சங்க இலக்கியப் பெயர்களுடன் ஒப்பிடுகிறார். அதில் கிடைக்கும் ஒற்றுமை வியப்பைத் தருகிறது. இந்த அளவுக்கான ஒற்றுமை எப்போது சாத்தியமாகிறது?

பாலகிருஷ்ணனின் கூற்று இதுதான். சங்க இலக்கியம் என்பது தமிழகத்தில் நடந்த வாழ்க்கையின் நேர்முக வர்ணனை மட்டும் அல்ல. சிந்து சமவெளி மக்களின் ஒரு பிரிவினர் அங்கிருந்து தமிழகம் வந்து குடியமர்ந்தபின், சிந்து சமவெளித் தொன்மங்களையும் தமிழக வாழ்க்கையையும் ஒன்று சேர்த்து உருவான வாய்மொழி இலக்கியமே சங்க இலக்கியமாக இருக்கவேண்டும்.

கருத்து சொல்வதற்குமுன் வீடியோவை முழுமையாகப் பார்த்துவிடுங்கள்.



தரவிறக்கிக்கொள்ள

Tuesday, August 17, 2010

மெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப் சக்ரவர்த்தி

மெட்ராஸ் கோயில்களில் இருக்கும் சோழர் காலக் கல்வெட்டுகளை அடிப்படையாகக்கொண்டு, ‘கோயில் சுவர்கள் பேசினால்...’ என்ற தலைப்பில் பிரதீப் சக்ரவர்த்தி பேசினார்.

சோழர் காலத்தில் மெட்ராஸ் என்ற பெயரைத் தவிர கிட்டத்தட்ட இன்றைய சென்னை இருந்தது. திருவொற்றியூர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய இடங்கள் முதற்கொண்டு பல இடங்கள், அங்குள்ள மக்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள், அவர்களுக்கு இடையேயான பூசல்கள் எப்படித் தீர்க்கப்பட்டன, வரிகள் எப்படி வசூலிக்கப்பட்டன, ஆட்சி அமைப்பு முறை எப்படி இருந்தது போன்ற பலவற்றையும் கல்வெட்டுகளின் அடிப்படையில் பிரதீப் விளக்கினார்.

இந்த அளவுக்கு விரிவான கல்வெட்டுகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் பகுதிக்கும் கிடையாதாம். வீடியோ கீழே:



இந்த வீடியோவை தரவிறக்கிக்கொள்ள | நேற்றைய மாமல்லபுரம் வீடியோவைத் தரவிறக்கிக்கொள்ள

தாயின் மணிக்கொடி

ஐ.சி.எஃப் சில்வர் ஜூபிலி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, சென்னை.

கொடியை நோக்கி...

கொடி ஏற்றுகிறேன்

மாணவர்களுக்குக் கதை சொல்கிறேன்

மெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்

மெட்ராஸ் தின வாரக் கொண்டாட்டங்களில் சென்னை முழுதும் பல இடங்களில் பேச்சுகள் நடக்கின்றன. அவற்றில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மட்டும் தமிழில் பேச்சுகளை ஏற்பாடு செய்துள்ளது. முடிந்தவரை அந்த நான்கு பேச்சுகளுக்குமாவது செல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். முதலாவது - மாமல்லபுரம் - கோயில் கட்டுமானத்தின் கலைக்கூடம் என்ற தலைப்பில் சுவாமிநாதன் பேசியது - 16 ஆகஸ்ட் 2010 அன்று. அதன் வீடியோ இங்கே.



இன்று, 17 ஆகஸ்ட் 2010 அன்று பிரதீப் சக்ரவர்த்தி; 18 ஆகஸ்ட் அன்று நரசய்யா, 19 ஆகஸ்ட் அன்று தீயோடர் பாஸ்கரன்.

Saturday, August 14, 2010

மன்மோகன் சிங் என்ன செய்கிறார்?

நாளைக்கு செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார். மற்றபடி நாட்டின் தலைவராக அவர் எங்கேயும் காட்சி தருவதில்லையே?

ஒரு பக்கம் பிரணாப் முகர்ஜி கிட்டத்தட்ட பிரதமர் போலவே நடந்துகொள்கிறார். நிதி அமைச்சகம் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதற்கு மேலாக மாநிலங்கள்மீது தன் பிடியை இறுக்கும்போலத் தெரிகிறது. ஒட்டுமொத்த சேவை/பொருள் வரி பற்றி முகர்ஜி பேசுவதையும் அதற்கு மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதையும் பார்க்கலாம். ஆனால் மன்மோகன் சிங் இதுபற்றி வாயே திறப்பதில்லை. கட்சிக்குள் ஏதேனும் பிரச்னையா, அல்லது கூட்டணியில் ஏதேனும் பிரச்னையா என்றால் அதிலும் பிரணாப் முகர்ஜிதான் தலையிடுகிறார், தீர்த்துவைக்க முயற்சி செய்கிறார். மமதா பானர்ஜி பிரச்னை செய்தாலோ அல்லது மக்களவையில் கூட்டம் நடைபெறவிடாமல் எதிர்க்கட்சிகள் ரகளை செய்தாலோ, பிரணாப்தான் ஆளும் கட்சி சார்பாக அங்கு நிற்கிறார்.

ப.சிதம்பரம் ஒரு பக்கம், எஸ்.எம்.கிருஷ்ணா மறுபக்கம், அவரவர் துறையை அவரவர் இஷ்டத்துக்கு நடத்திக்கொள்கிறார்கள். மன்மோகன் சிங்கின் கருத்து என்ன என்று நாட்டுக்கு யாரும் தெரிவிப்பது கிடையாது.

ஜெயராம் ரமேஷ் தனி ஆளாக அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார் ஒரு பக்கம்.

கூட்டணியின் மாணிக்கமான மமதா பானர்ஜி அடுத்து துப்பாக்கி ஏந்தி தந்தேவாடாவில் கண்ணிவெடிகளை வெடிக்கவேண்டியதுதான் பாக்கி.

காமன்வெல்த் ஊழல் பற்றி மன்மோகன் சிங் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

விலைவாசி ஏற்றம் பற்றி அவர் கவலை கொண்டுள்ளாரா, அதைக் குறைக்க ஏதேனும் முயற்சிகளை எடுக்கிறாரா என்று நமக்கு துளிக்கூடத் தெரிவதில்லை.

காஷ்மீர் பற்றி அவர் கவலைப்படுகிறார் என்று தெரிகிறது; ஆனால் பிரச்னையைத் தணிக்க தன் அரசு இன்னவெல்லாம் செய்யும் என்று எதையும் அவர் பேசுவதில்லை.

ராஜா, அழகிரி போன்றவர்களையோ அவர்களது பிரச்னைகளையோ அவர் கண்டுகொள்வதில்லை.

மொத்தத்தில் இந்தியாவின் மிக முக்கியமான கட்டத்தில், அதன் தலைவர் ஒரு டம்மி பீஸாகக் காட்சியளிக்கிறார்.

இதென்ன புதுசு? அவர் எப்போதுமே டம்மிதான் என்பவர்களுக்கு... சென்ற ஐந்தாண்டுகளில் அப்படித் தோற்றம் அளிக்கவில்லை. சோனியாதான் அதிகார மையம் என்றாலும் மன்மோகன் சிங் அரசின் தலைவராக, ஒரு தெளிவான நோக்கத்துடன் இயங்குவதாகத் தெரிந்தது. இப்போது அப்படி ஏதும் இல்லை என்பது மட்டும் தெளிவாக இருக்கிறது.

மன்மோகன் சிங் உடல்நிலை காரணமா அல்லது சோனியாவின் மனநிலை காரணமா? எதுவாக இருந்தாலும் மன்மோகன் சிங் பேசாமல் ராஜினாமா செய்துவிட்டு கடைசிக் காலத்தை ஓய்வாகக் கழிக்கலாம். பிரணாப் முகர்ஜிக்கும் கொஞ்ச நாள் பிரதமராக இருக்க வாய்ப்பு அளிக்கலாம்.

நண்பர் ஒருவர், கபில் சிபல்தான் அடுத்த பிரதமர் என்றார். இதற்கு ராகுல் காந்தியே தேவலாம்.

மேகங்களின் மேலாகப் பயணம்

அப்படியே வைரங்களைக் கொட்டி இறைத்தாற்போல் இருக்கும். கரிய இருள். அதில் பல்வேறு பேட்டர்ன்களில் மினுக் மினுக் வெளிச்சப் புள்ளிகள். விமானத்திலிருந்து பார்க்கும்போது எல்லா நகரங்களும் அழகாகவே தெரிகின்றன. இருபுறமும் விளக்குகள் அமைந்த சாலைகள், அவற்றில் ஊர்ந்து செல்லும் ஒளித் துகள்கள். சென்னை போன்ற கடல் நகரங்களில் விமானம் கீழிறங்கும்போது கடலில் ஆங்காங்கே நிற்கும் கப்பல் வடிவ ஒளிப்புள்ளிகளையும் காணலாம்.

சென்னைக்கு வரும் விமானங்கள் ஏனோ வித்தியாசமாக ஒரு லூப் அடித்தே தரை இறங்குகின்றன. நேராக வடக்கு தெற்காக இறங்காமல், முதலில் தெற்கில் சற்றே தாண்டிப்போய், அப்படியே கடலுக்கு மேலாக நுழைந்து, ஒரு சுற்று சுற்றி, தென் மேற்குத் திசையில் மைலாப்பூர், கிண்டி என்று பறந்து கத்திப்பரா சந்திப்பின் ராட்சச இதய வடிவத்தையும் ஜோதி தியேட்டரின் பிரம்மாண்ட ஃப்ளெக்ஸ் பேனரையும் தாண்டி, ரன்வேயை நோக்கி சற்றே நேர்ப்படுத்தி அப்படியே தரை இறங்குகின்றன இந்த விமானங்கள்.

இப்போது சூல் கொண்ட மேகங்கள் இருக்கும் மழைக்காலம். மேலே ஏறும்போது மேகங்களைக் கிழித்துக்கொண்டு மேகங்களுக்கு மேலாகப் போகவேண்டும். கீழே இறங்கும்போதும் மேகங்களைக் கிழித்துக்கொண்டு இறங்கவேண்டும். மேகங்கள் ஊடாகப் பறக்கும்போது விமானம் தடதடவென்று ஆடிக்கொண்டே இருக்கும். டர்புலன்ஸ் என்பார் விமானி. டர்போ ப்ராப் விமானங்கள் ரொம்பவே ஆடும். பலருக்கு வயிற்றைப் பிசையும். சற்றே பெரிய ஜெட் விமானங்கள் என்றால் அந்த அளவுக்குத் தொல்லை இல்லை. ஆனாலும் விமானத்தில் பறப்பவர்கள் முகத்தில் கலவரம் தெரிவதைக் காணலாம்.

மேகங்களுக்கு மேலே செல்லும்போது ஆச்சரியமான வடிவங்களைப் பார்க்கமுடியும். உங்கள் மனத்தில் எந்த வடிவத்தை நினைத்துக்கொண்டாலும் அதேபோல இருக்கும் அந்த மேகங்கள். பழையகாலப் புராணப் படங்களில் அடாஸாக மேகங்கள் செய்துவைத்திருப்பார்கள். நிஜ மேகங்கள் ஆங்காங்கே அடர்த்தியாக, உறைபனி போலப் பரவியிருக்கும். சில இடங்களில் பஞ்சு மிட்டாய் போலத் தூவப்பட்டிருக்கும். சில இடங்களில் புகைபோல உள்ளே பார்க்கக்கூடிய மாதிரி டிரான்ஸ்பேரண்டாக இருக்கும். பாற்கடல் என்பதற்கான இன்ஸ்பிரேஷன் மேகக் கூட்டங்களை மேலிருந்து பார்க்கும்போதுதான் வந்திருக்கவேண்டும்.

இந்த மேகங்கள் எல்லாமே நீரால் ஆனவை. ஆனால் எல்லா மேகங்களுமே மழையாக ஆவதில்லை. நமக்கே தெரியும், சாம்பல் அல்லது கறுத்த மேகங்கள்தான் மழையைக் கொண்டுவரும் என்று. வெண் மேகம், கறு மேகம் இரண்டுமே நீரால் ஆனாலும் எப்படி ஒன்றுமட்டும் மழையாகப் பொழிகிறது; மற்றொன்றில் மழை இல்லை?

சொல்லப்போனால், இதற்கான விடையே அதன் வண்ணத்தில்தான் உள்ளது.

சூடான காற்று நீராவியை கிரகித்து, மேலே மேலே ஏறிச் செல்கிறது. ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டதும், அங்கே நீராவி குளிர்ந்து ஆங்காங்கே காற்றின் இடையே உறை துளிகளாகக் கிடக்கிறது. ஆனால் அவற்றுக்கு கீழ்நோக்கி விழும் அளவுக்கான கனம் இல்லை. அதே நேரம், இந்தத் துளிகளுக்கு இடையே அதிக இடைவெளி கிடையாது. இந்த மேகத்தின்மீது சூரிய ஒளி படும்போது அந்த ஒளியால் நீர்த் துளிகளுக்கு இடையேயான இடைவெளியை ஊடுருவமுடிவதில்லை. இதனால் ஒளி பட்டுத் தெறிக்கிறது. அப்படிப் பட்டுத் தெறிக்கும் ஒளி காரணமாகவே அந்த மேகம் வெண்மையாக உள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த மேகத்தில் இருக்கும் நுண்துளிகள் நெருங்கி ஒன்றுசேரத் தொடங்குகின்றன. அப்போது நீர்த் துளிகள் கனம் பெறுகின்றன. அதே நேரம், துளிகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது. இதனால் இப்போது அதன்மீது படும் ஒளியில் பெரும்பங்கு இடைவெளி வழியாக ஊடுருவி உள்ளே செல்வதால், பட்டுத் தெறிக்கும் ஒளி குறைவு. எனவே சாம்பல் நிறம்.

மேலும் மேலும் நீர்த் திவலைகள் ஒன்றுசேர, நீர்த்துளிகளின் கனம் அதிகமாக, இடைவேளி மேலும் அதிகமாக, அந்த மேகம் ஒளி எதையுமே சிதறடிப்பதில்லை. எனவே கறு மேகம். இந்நேரம் மழை கொட்டும் அளவுக்கு நீர்த் துளிகளுக்குக் கனம் உள்ளது. மழையும் கொட்டுகிறது.

இந்தக் கறு மேகங்கள் வழியாகச் செல்லும் விமானத்துக்குத்தான் அதிக டர்புலன்ஸ் - கொந்தளிப்பு. விமானம் மேலெழுந்து செல்லக் காரணமே அழுத்தத்தில் உள்ள மாறுபாடு. ஏரோஃபாயில் எனப்படும் விமான இறக்கையின் வடிவம் காரணமாக கீழே அதிக அழுத்தமும் மேலே குறைவான அழுத்தமும் இருக்கும். இதனால் ஏற்படுவதுதான் லிஃப்ட் எனப்படும் விசை. ஆனால் ஆங்காங்கே நீர்த்திவலைகள் பரவி இருக்கும் மேகத்துக்குள் வெவ்வேறு அடர்த்தி (டென்சிடி) நிலவும். இதனால் மேல் நோக்கி உருவாகும் லிஃப்ட் விசை ஒவ்வொரு புள்ளியிலும் மாறுபட்டு இருக்கும். இதனால்தான் விமானம் குலுங்குகிறது.

சில சமயம் ஏர் பாக்கெட் எனப்படும் திடீர் வெற்றிடத்தில் (மிகக் குறைந்த அழுத்தம் கொண்ட இடத்தில்) மாட்டிக்கொள்ளும் விமானம் சடார் என்று கீழ் நோக்கி இறங்கும். உடனே விமானி அதன் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வார். ஆனால் அந்த ஒரு விநாடிக்குள் வயிற்றில் கலவரமாக இருக்கும். நெஞ்சு அடைக்கும். ஒருமுறை நான் பெங்களூரிலிருந்து வரும்போது விமானம் சடாரென 5-6 அடி விழுந்திருக்கும். சட்டென விமானத்தில் ஒரே அமைதி. (மயான அமைதி என்று சொன்னால் அசிங்கமான ஜோக் ஆக இருக்கும்.) வண்டி கீழே இறங்கும்வரை யாருமே வாயைத் திறக்கவில்லை.

ஒருமுறை (1996) நான் நியூ யார்க் ஜே.எஃப்.கேயிலிருந்து லண்டன் ஹீத்ரோ வரை வந்த பயண அனுபவம் திகிலானது. கடுமையான மழை. அட்லாண்டிக் மேலாகப் புயல். நியூ யார்க் நகரில் பல இடங்களில் கடல் நீர் புகுந்திருந்தது. தெருவெல்லாம் டிராஃபிக் நெரிசல். விமானங்கள் பலவும் கேன்சல். பின் மழை கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில் லண்டன் செல்லவேண்டிய நான்கைந்து பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானங்கள் வரிசையாகக் கிளம்பின. விமானி தெளிவாகச் சொல்லிவிட்டார்... உணவு கிடையாது. காப்பி, டீ கிடையாது. எல்லொரும் பெல்ட்டை இறுகக் கட்டிக்கொண்டு அப்படியே உட்காரவேண்டியதுதான். டாய்லெட் போகமுடியாது. (ஆனாலும் சிலர் வெறு வழியின்றி எழுந்திருந்து தள்ளாடித் தடுமாறிப் போய்விட்டுதான் வந்தார்கள்.) விமானத்தில் பாதி பேர் வாந்தி. சிக் பேகைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்திருந்தார்கள். நம்மூர் ரோட்டில் டப்பா பஸ் குலுங்கிக் குலுங்கிப் போவதுபோலத்தான் வண்டி சென்றது. அவ்வப்போது கீழே இறங்கி, ஜிவ்வென்று மேலே ஏறி, ஒரு மாதிரி லண்டன் சென்றடைந்தது. கடல் மீது பறக்கும்போதுதான் அதிகபட்சப் பிரச்னையே. ஒருவழியாக லண்டனில் இறங்கியபோது இதமான காலை வெயில் அடித்துக்கொண்டிருந்தது.

எனக்கு பஸ்ஸில் பயணம் செய்வதே ஒத்துக்கொள்ளாமல் இருந்தது. ஐஐடி போனபிறகும்கூட ரயிலில் மட்டுமே பயணம் செய்வேன். பல்லவன் டிரான்ஸ்போர்ட்டில் கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை போனாலே வயிறு தொல்லை தரும். எனவே சைக்கிள்தான். முதல் விமானப் பயணம் திகிலாக இருந்தது. சென்னை-மும்பை-தில்லி (வழியாக)-ஃபிராங்ஃபர்ட்-ஜே.எஃப்.கே-(ல கார்டியா)-இதாகா - இதுதான் என் முதல் விமானப் பயணம் - 1991-ல். அதைவிடக் கொடுமையான அனுபவம் வேறு எதுவும் கிடையாது. போகும் வழி முழுக்க ஒன்றுமே சாப்பிடாமல், அப்படியும் வயிறைச் சங்கடப்படுத்தியபடியே இருந்தது. ஆனால் நாளடைவில் விமானத்தில் பறந்து பறந்தே சரியாகிவிட்டது.

பஸ்ஸில் போகும்போதோ, விமானத்தில் போகும்போதோ ஏன் வயிறு சங்கடம் தருகிறது? ரயிலில் நல்ல வேகட்தில் போனால் அந்த அளவுக்குப் பிரச்னை இல்லையே? ஏன்? பஸ்ஸில் உட்கார்ந்து செல்லும்போது பஸ் போகும் திசைக்கு எதிர்த் திசையை நோக்கி உட்கார்ந்தால் தலை சுற்றி, வாந்தி வரும்போலத் தெரிகிறதே? (எல்லோருக்கும் இல்லை; சிலருக்கு.) ஆனால் பஸ் போகும் திசையை நோக்கி உட்கார்ந்தால் பிரச்னையாக இல்லையே? ஏன்? ஆனால் இதே சிக்கல் ரயிலில் போகும்போது இல்லையே? ஏன்? இதைப்பற்றி நேரம் கிடைக்கும்போது விவாதிப்போம்.

Thursday, August 12, 2010

சீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்

பண்டைய எழுத்துமுறைகள் பற்றிய தொடரில் முதல் மாதம் அறிமுகம், இரண்டாம் மாதம் சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துகள், மூன்றாம் மாதம் எகிப்திய ஹியரோகிளிஃப் ஆகியவற்றுடன் தொடர்ந்து நான்காம் மாதம் சீன எழுத்துகள் பற்றிப் பேசினார் பேராசிரியர் சுவாமிநாதன்.

சுமேரிய, எகிப்திய எழுத்துகள் என்ன என்று கண்டுபிடிக்கப்பட முடியாமல் தொலைந்துபோனபின், ஐரோப்பிய ஆய்வாளர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சீனாவுக்கு அந்தப் பிரச்னை இல்லை. சில ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் எழுத்து இது. மாற்றங்கள் கண்டாலும் அவை தொடர்ந்தே இருந்துவந்துள்ளன. எனவே அவர்களது பண்டைய ஆவணங்களைக் கண்டுபிடித்துச் சொல்ல அந்நியர்கள் தேவைப்படவில்லை. மேலும் சீனா, எழுத்துகளை முதன்மைப்படுத்திய ஒரு கலாசாரம். அவர்கள் அனைத்தையும் எப்போதுமே எழுதிவைத்தார்கள். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

அடுத்த மாதம் மெசோ அமெரிக்கன் எழுத்து பற்றி. அதைத் தொடர்ந்து இந்திய எழுத்துகளுக்கு வருவோம்.



முந்தைய மூன்று மாத வீடியோக்களும் இங்கே:

Tuesday, August 10, 2010

சீன எழுத்துகள் பற்றி சுவாமிநாதன்

எழுத்துகள் பற்றியான தொடரில் இந்த மாதம், 11-ம் தேதி (புதன் கிழமை, நாளை), மாலை 6.30 மணிக்கு, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் பேராசிரியர் சுவாமிநாதன் சீன எழுத்துமுறை பற்றிப் பேசுகிறார்.

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வியாழன் அன்று நடக்கும் கூட்டம் இம்முறை மட்டும் இரண்டாம் புதன் அன்று நடக்க உள்ளது.

முதல் மூன்று மாதங்கள் நடந்த பேச்சுகளின் ஒளிப்பதிவை இங்கே காணலாம்.

Sunday, August 08, 2010

கேணி: ஷாஜியுடன் சந்திப்பு


இன்று ஞாநி, பாஸ்கர் சக்தி நடத்தும் கேணி நிகழ்ச்சியில் இசை விமரிசகர் ஷாஜி கலந்துகொண்டார்.

இவருக்கு தமிழில் எழுதத்தெரியாது என்றும் ஆங்கிலத்தில் இவர் எழுதுவதை நண்பர்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்குகிறார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் தமிழில் மிக நன்றாகவே பேசினார்.



நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு (இங்கேயே கேட்க:)



தரவிறக்கிக்கொள்ள


நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டத்தில் வாசகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் இது குறைவான கூட்டம் என்றார் ஞாநி. கிட்டத்தட்ட 200 பேருக்குமேல் வருவார்களாம். இன்று 100-க்குமேல் இருந்தனர்.
.

ஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (வீடியோ)

நேற்று மாலை, தக்கர் பாபா வித்யாலயா, வினோபா ஹாலில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

சுமார் ஒன்றரை மணி நேரம், தங்கு தடையின்றி, எந்தக் குறிப்புகளையும் எழுதிவைத்துக்கொள்ளாமல், தேதி, நேரம் உட்பட துல்லியமாகப் பேசினார். அரு. கருப்பன் செட்டியார் (ஏ.கே. செட்டியார்) என்பவரைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைத்தது. அடுத்த ஆண்டு, இன்னும் விஸ்தாரமாக, ஏ.கே.செட்டியாரின் நூறாவது ஆண்டு நிறைவின்போது, அவரது குமரிமலர் இதழ்கள், அவர் எழுதிய புத்தகங்கள், அவரது காந்தி ஆவணப்படம் ஆகியவற்றைக் கொண்டு இதே இடத்தில் ஒரு கண்காட்சியோடு மீண்டும் பேசுவதாகவும் உறுதி அளித்தார்.

வீடியோ படம் கீழே:



தரவிறக்கிக்கொள்ள
.

Saturday, August 07, 2010

உலகமயமாதல் - 2

நவீன கருத்தாக்கமான பணம், முதல், நிதிச் சந்தை ஆகியவை வருவதற்கு முந்தைய உலகம் எப்படி இருந்தது?

நில உடைமைச் சமுதாயமாக அது இருந்தது. மதிப்பு மிக்கது என்றால் அது நிலம் மட்டுமே. அதைத் தவிர அடுத்த மதிப்பு மனிதர்களின் திறமையில் இருந்தது. அது கைவினைஞர்களிடம் இருந்த பொருள்களை உருவாக்கும் திறமை, அல்லது ஆடல், பாடல், சிரிக்கவைப்பது போன்ற கேளிக்கைத் திறமைகள், அல்லது மந்திரம், தந்திரம், கடவுள் போன்றவை, அல்லது மருத்துவம் போன்றவை.

அதே நேரம், நாட்டின் ஆட்சிமுறை, மன்னர்கள் எனப்பட்ட ஏகபோக அதிகாரம் கொண்டவர்களிடம் இருந்தது. அவர்கள் பரம்பரை பரம்பரையாக நாட்டை ஆட்சி செய்வார்கள். அப்பனுக்குப் பிறகு பெரும்பாலும் முதல் மகன். சில இடங்களில் முதல் குழந்தை பெண்ணாக இருந்தாலும் நாட்டை ஆளும் உரிமை உண்டு (இங்கிலாந்து). அப்படி வம்சமே இல்லாமல் ராஜா மண்டையைப் போட்டாலும் மக்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பக்கத்து நாட்டு ராஜாவிடம் போய் எங்கள் நாட்டையும் ஆளுங்கள் என்று கேட்டுக்கொள்வார்கள். அல்லது தெருவில் போகும் யாருக்கோ யானையைக் கொண்டு மாலை அணிவித்து, அவனை ராஜா ஆக்கிவிடுவார்கள்.

நிலத்துக்கான உரிமைகூட எழுத்தில் எழுதிவைக்கப்பட்ட ஒன்றல்ல. அனைத்து நிலங்களும் மன்னனின் சொத்து. மன்னன் நினைத்தால் யாருடைய நிலத்தையும் பிடுங்கி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். மன்னனுக்கு மேலாகச் சட்டம் ஒன்றும் கிடையாது. மன்னன் இயற்றுவதுதான் சட்டம்.

உலகின் வெவ்வேறு பகுதியில், இந்த நிலங்கள் பெருநிலப் பிரபுக்களிடம் இருந்திருக்கலாம். அல்லது வேளாளர்கள் கையில் இருந்திருக்கலாம். அவர்கள் நேரடியாக நிலத்தை உழுதிருக்கலாம். அல்லது வேலையாட்களை அல்லது அடிமைகளை வைத்து நிலத்தை உழுதிருக்கலாம். எது எப்படியோ, நில உடைமையாளர்கள் இருந்தனர். நிலத்தை உழும் வேலைக்காரர்கள் அல்லது அடிமைகள் இருந்தனர். கைவினைஞர்கள் இருந்தனர். சில சேவைத் தொழில்கள் இருந்தன. அவற்றைச் செய்வோர் இருந்தனர். அரசன் இருந்தான். அவன்கீழ் போர் வீரர்களும் தளபதிகளும் இருந்தனர்.

இவர்களுக்கிடையில் பொருள், சேவை பரிமாற்றம் இருந்தது. பணம் வழியாகவும் பரிமாற்றம் நடந்தது. அரசன் அடித்துத் தந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. அரசனிடம் உரிமை பெற்று நாணயங்களை அச்சடித்து வெளியிடும் ஆசாமிகள் இருந்தனர். தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பான உலோகங்களும் பணத்துக்கு நிகராகக் கருதப்பட்டதும் உண்டு. முக்கியமாக நாடு விட்டு நாடு நடக்கும் வர்த்தகங்களுக்கு தங்கம்தான் தேவைப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியா வந்து பொருள்களை வாங்க முற்பட்டபோது, ஆரம்பத்தில் தங்கம் கொண்டே மிளகு, துணிமணிகளை வாங்கினர்.

அவ்வப்போது நாடுகளுக்கு இடையே போர்கள் நடைபெற்றன. நாடுகளை விஸ்தரிப்பதற்கான ஆசை. மதக் காரணங்கள். தனிப்பட்ட கோபம். பெண் எடுப்பதில், கொடுப்பதில் பிரச்னை. இப்படிப் பல. இந்தப் போர்களால் நாடுகளின் எல்லைகள் மாறின. எண்ணற்றோர் போரில் கொல்லப்பட்டனர். போர்களில் ஈடுபடாத பொதுமக்களும் கொல்லப்பட்டு, விரட்டப்பட்டனர். போர்கள் நடப்பதை பெரும்பாலும் பொதுமக்களால் தடுக்கமுடிந்ததில்லை. மன்னர்கள் முடிவு எடுத்தால் வீரர்கள் செயல்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். மன்னர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டதில்லை.

அரசனுக்குத்தான் முழுமையான அதிகாரம் என்றாலும்கூட ஐரோப்பாவில் மதம் முக்கியமான இடத்தைப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. கிறிஸ்துவுக்குப்பின் கிறிஸ்தவ சர்ச் என்ற அமைப்பு வலுப்பட ஆரம்பித்து, அரசர்களுக்கும் மேலான நிலையை அடைந்திருந்தது. பல நாட்டு மன்னர்களும், போப்பின் அனுமதி பெற்றே பல காரியங்களைச் செய்யக்கூடிய நிலைமை ஏற்பட்டது. இஸ்லாத்திலும் ஆரம்பக் கட்டத்தில் மதத்தலைமை, அரசாட்சி இரண்டும் ஒன்றாக இணைந்தே இருந்தன. சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டு வரை கலீபா எனப்பட்ட துருக்கி சுல்தான் கையில் இஸ்லாம் மீதான கட்டுப்பாடு கொஞ்சம் இருந்தது. உலகின் பிற பகுதிகளிலும் (இந்தியா சேர்த்து) அவ்வப்போது மதம் அரசன்மீது ஆட்சி செய்தது. சில நேரங்களில் அரசன் மதத்தைக் கட்டுப்படுத்தினான்.

அரசன், மதத்தலைவன், படைத்தளபதி, நில உடைமையாளன், பெரும் வர்த்தகன் ஆகியோருக்கு அடுத்ததாக சாதாரணப் பொதுமக்கள் வந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் பணம், கடன், சொத்து என்பவையெல்லாம் எப்படி இருந்தன என்று பார்த்துவிட்டு, நவீன கருத்தாக்கத்துக்கு வருவோம்.

Friday, August 06, 2010

வேலூர் புத்தகக் கண்காட்சி: 28 ஆக - 5 செப்

பல முக்கியமான நகரங்களில் புத்தகக் கண்காட்சி நடப்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். சென்னைக்குப் பிறகு, மதுரையிலும் பதிப்பாளர்கள் சங்கமான பபாஸி கண்காட்சி நடத்துகிறது (இந்த ஆண்டு செப் 2 முதல் மதுரையில்). கோவையில் கொஞ்சம் தடங்கல்கள் இருந்தாலும் இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடக்கும் என்று தெரிகிறது.

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் கடந்த சில வருடங்களாக அமர்க்களமாக நடந்துவருகிறது புத்தகக் காட்சி. (இப்போது நடந்துகொண்டிருக்கிறது.) திருச்சி ஒரு சோகம். இதுவரையில் அந்த ஊருக்கு ஏற்ற பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி நடைபெறவில்லை.

இப்போது கிடைத்துள்ள நல்ல செய்தி, வேலூர் வாசகர் பேரவையும் ஆழி அறக்கட்டளையும் சேர்ந்து வேலூரில் முதல் முறையாக ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியைத் திட்டமிட்டுள்ளார்கள். வேலூர் கோட்டை மைதானத்தில் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கி 5 செப்டெம்பர் வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்தும் அரசுத் துறைகள் தரப்பிலிருந்தும் மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளதாகச் சொல்கிறார் ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன். அவர்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாடுகளை முன்னின்று நடத்துகிறார்.

சமீப காலங்களில் ஒரு நிலையான ஏற்பாடாக ஆகியிருக்கும், பாரதி புத்தகாலயம் முன்னின்று நடத்தும் திருப்பூர் புத்தகக் கண்காட்சியையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதேபோல ரோடரி கிளப் ஆரம்பித்திருக்கும் தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சியும் தொடர்ந்து நடந்து பெரிய அளவுக்குச் செல்லமுடியும் என்று தோன்றுகிறது.

வேலூர் மற்றும் அருகில் உள்ள மாவட்ட மக்கள், வேலூர் புத்தகக் கண்காட்சியை மாபெரும் வெற்றியாக மாற்றுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Tuesday, August 03, 2010

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை: ஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

வரும் ஆகஸ்ட் 7, சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, ’ஏ.கே.செட்டியார் - உலகம் சுற்றிய தமிழர்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.

இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வெங்கட்நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

புதுக்கோட்டையில் ஞானாலயா ஆய்வு நூலகத்தை வைத்து நடத்திவருபவர் கிருஷ்ணமூர்த்தி. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்.

ஏ.கே.செட்டியார் (1911-1983), மகாத்மா காந்தி பற்றி தமிழிலும் தெலுங்கிலும் உருவாக்கி வெளியிட்ட ஆவணப்படத்தின் மூலம் அறியப்பட்டவர். குமரிமலர் இதழின் ஆசிரியர். தமிழ் இதழியல் உலகில் ஒரு முன்னோடி.

Monday, August 02, 2010

உலகமயமாதல் - 1

இரு நாள்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியின் நீயா, நானா படப்பிடிப்புக்காகச் சென்றிருந்தேன். பொதுவான நீயா, நானாவிலிருந்து இந்த நிகழ்ச்சியில் ஒரு மாற்றம். 14 ‘நிபுணர்கள்’ வந்திருந்தனர். இரு குழுக்களாகப் பிரிந்து உலகமயமாதலால் இந்தியாவுக்கு நன்மையா, தீமையா என்பது பற்றி விவாதிக்கவேண்டும். அதுதவிர இளைஞர்கள் பலரும் அரங்கில் இருந்தனர். நிகழ்ச்சி பற்றி இங்கே நான் ஏதும் சொல்லப்போவதில்லை.

என்னைப்போலவே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த பத்திரிகையாளர் ஞாநி, இடைவேளையின்போது, ‘பிரச்னை என்னன்னா, எல்லாத்தையும் பிளாக் அண்ட் வைட்டாவே பார்க்கறோம்’ என்றார். உண்மைதான். எனவே இந்தத் தொடர்பதிவுகள்.

உலகமயமாதல் என்றால் என்ன என்பதை நாராயண மூர்த்தி இவ்வாறு விளக்குகிறார்: ‘மூலதனம் எங்கு அதிகமாகக் குவிந்து இருக்கிறதோ, அங்கிருந்து அதனைப் பெற்று, மனிதவளம் எங்கு அபரிமிதமாகவும் செலவு குறைவானதாகவும் இருக்கிறதோ அங்கு உற்பத்தி செய்து, பொருள்களுக்கு எங்கு சந்தை அதிகமாக இருக்கிறதோ, அங்கு விற்பனை செய்வதுதான் உலகமயமாதல்.’ இங்கு நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கோடுகள் அழிந்துபோகின்றன.

ஆனால் உலகமயமாதல் என்பதை வெறும் பொருளாதாரப் பார்வையில் மட்டும் சுருக்கிவிடமுடியாது. பொருளாதாரம் சமூகத்தைக் கட்டாயம் பாதிக்கிறது. அதனால் தொடர்ந்துவரும் பாரம்பரியக் கலாசாரங்கள் வேகமாக பாதிக்கப்படுகின்றன.

பாதிப்பு என்றாலே அது மோசமான பாதிப்புதான் என்று எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. நல்ல பாதிப்புகளும் உண்டுதான்.

நிகழ்ச்சியின்போது உலகமயமாதல் என்பதைத் தனியாகப் பார்க்காமல், தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (தா.த.உ) - அதாவது Liberalisation, Privatisation, Globalisation (LPG) என்று சேர்த்துப் பார்க்குமாறு கூறப்பட்டது. சிலர் உலகமயம் என்றால் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதையெல்லாம் சொன்னார்கள். ஆதிகாலத்திலிருந்தே இந்தியா உலகமயத்தைத் தழுவியது என்றார்கள். ஆனால் இன்று உலகமயத்தின் வரையறையே பொருளாதாரப் பின்னணியில் முதல் எப்படி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எளிதாகப் பாய்கிறது என்பதிலிருந்து ஆரம்பமாகிறது. உலகளாவிய அளவில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தை நாம் உலகமயம் என்பதில்லை. முதலியம் என்ற கேபிடலிசம் உருவானபின் உருவான சொல்லான உலகமயத்துக்கு இன்றைய பொருள், முதலியப் பொருளாதாரப் பின்னணியில்தான் உள்ளது.

எனவே முதலியத்தை முதலில் ஆராய்ந்து, அதன் பின்னணியில்தான் உலகமயத்தை விளக்கவேண்டும்.

(தொடரும்)

Sunday, August 01, 2010

நாகபட்டினக் கல்வெட்டுகள்

நேற்று நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த

Ancient and Medieval Tamil and Sanskrit Inscriptions Relating to South East Asia and China: Noboru Karashima and Y. Subbarayalu

என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில், நாகபட்டினம் தொடர்பான மூன்று கல்வெட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றின் தமிழ் வடிவம் இங்கே:

கி.பி 1014 அல்லது 1015-ல் எழுதப்பட்டிருக்கவேண்டும்:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரிபன்மரான ஸ்ரீராஜேந்திர சோழர்க்கு யான் ... த்து நாகபட்டினத்து திருக்காரோணமுடைய மஹாதேவர் திருச்சுற்று மாளிகை வாசல் க்ஷத்ரியசிகாமணி யி... கொண்ட செய்வித்தான் ஸ்ரீ விஷையத்தரையர் கன்மி ஸ்ரீ மூலனகத்தீஸரன் இத்தன்மம் சந்திராதித்தவற் நி... இதினுக்கு.... கல்வெட்டிக் குடுக்கவென்று இவ்வாண்டு ஸ்ரீகாரியன் செய்கின்ற அளனாட்டு புத்தமங்கலமுடையான் னக்கன் குமரன் செங்.... தமு... பஞ்சாசாரியத் தேவ கன்மிகள் சொல்லவும் இப்பரிசு கல்வட்டினென், இவ்வூர் தச்சன் ஏறன் சடையனேன் தேவர் கண்ட ஆசாரியேன் எ...
கி.பி. 1015-ல் எழுதப்பட்டது:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மரான ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு 3 ஆவது க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு... பட்டினக்... ரோண... வெள்ளித்திருமேனி நாகையழகற்கு ஸ்ரீவிஜயத்தரையர் கன்மி ராஜராஜமண்டலத்து கீட்செம்பினாட்டு மேன்றோன்றி பட்டினத்... ய்வித்த க்ஷெ... ச... நிறை[பொ]ன் பதினால்க் களஞ்சரை இதில் வீரபட்டத்துக் கட்டின சாதிமாணிக்கம் பதினொன்று நடுவில் மகரத்து நடுவு கட்டின மரகத... ன மாணிக்... [உபாய] டின மாணிக்கம் மூன்று இதின்மேல்வாய்க் கட்டின பச்சை மகரத்தின் கீழ்வாய்க்... ன மாணிக்கம் அஞ்சு இதில் கீழ்வாய்க் கட்டின சற்பமொத்தி வலபக்கத்[து வட்டப்பூவில்] கட்டின மர... ஏழு இடப்பக்கத்து வட்டப்பூவில் கட்டின மாணிக்கம் ஏழு பின்பில் பருத்தக்குறளில் கட்டின மாணிக்கம் நாலு மகாமணியாகக் கட்டின மாணிக்கம் சாதி மாக்கல்லு நாற்ப.... வெற்றி... மாக நிறை ஆறு மாஞ்சாடி கல்லுட்பட காசு நிரை பதினாற்காழஞ்சே முக்காலே ம்... சாடி இப்பரிசு கல்வெட்டுக வென்று இவாண்டு ஸ்ரீகாரியஞ் செய்கின்ற அருமொழி... நாட்டுக... ரத்து காண்டியூருடயார் சேந்தன் ச... இத்தேவகன்மிகளும் சொல்லக் கல்வெட்டினேன் நாகபட்டினத்து ஏறஞ்சடையனான கண்டரா[சா]ரியனேன்.
கி.பி 1019-ல் எழுதப்பட்டது:
கோப்பரகேசரிபன்மரான ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்கு யாண்டு 7 ஆவது க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு பட்டினக் குற்றத்து நாகபட்டினத்து திருக்காரோண ... டைய மஹாதேவர் கோயிலில் கிடாரத்தரையர் கன்மி ஸ்ரீ குருத்தன் கேசுவன்நான அக்ரலேகை எழுந்தருளிவித்த அர்த்தநாரிகளுக்கு அவிபலி அர்ச்சனைக்கு என்று மேற்படியான் வரக்காட்டின சீனக்கனகம் எண்பத்தேழு கழஞ்சே முக்காலும் மேற்படியா[ன்] இத்தேவர் கோயிலில் உத்தமாக்ரம் இரண்டு கலமுண்ண போகட்டுக்கு என்று வரக்காட்டின சீனக்கனகம் எண்பத்தேழு களஞ்சே முக்காலும் மேற்படியான் தேவர்க்கும் ப்ராமணர்க்கும் ... தயிரு ... என்று வரக்காட்டின உண்டிகைப்போன் [அ]றுபதின் கலஞ்சே முக்காலும் ஆக இப்பொன் இருநூற்று முப்பத்தாறு கலஞ்சே காலும் திருக் காரோணமுடையார்க்கு வேண்டும் திருவாபரணம் உள்ளிட்டன செய்யக் கொண்டு இத்தேவர் பண்டாரத்தை....
மூன்றுமே காயாரோகணஸ்வாமி திருக்கோயிலில் (நீலாயதாட்சி அம்மன் கோயிலில்) கடார அரசன் விஜயனின் காணிக்கைகளை ஆவணப்படுத்தும் கல்வெட்டுகள். அப்போது தமிழகம் ராஜேந்திர சோழன் ஆட்சியில் இருந்தது.

ஒவ்வொரு கல்வெட்டிலுமே, எங்கள் ஊரை நாகபட்டினம் என்றே குறித்துள்ளனர். நாகப்பட்டினமோ, நாகப்பட்டிணமோ அல்ல.
.