Wednesday, September 29, 2010

தஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 1



திடீரெனத் தோன்றிய வேகத்தில், ஒரே நாளில் தஞ்சாவூருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் சென்றுவரலாமே என்று தோன்றியது. உடனே கிளம்பிவிட்டோம். காலை சென்னையில் காரில் கிளம்பினால், ஐந்து மணி நேரத்துக்குள் நேராக திருச்சி. ஸ்ரீரங்கத்தில் பெற்றோர்கள் வீட்டுக்குச் சென்று காலை உணவை முடித்துவிட்டு, அப்படியே நேராக தஞ்சாவூர். முடித்துவிட்டு கும்பகோணம், அணைக்கரை வழியாக ஜெயங்கொண்டம் போகும் வழியில் கங்கைகொண்ட சோழபுரம். அங்கிருந்து நேராக மீண்டும் ஸ்ரீரங்கம். மறுநாள் காலை இலவச இணைப்பாக, ஸ்ரீரங்கம் கோயிலில் ஹோய்சாள அரசர்கள் கட்டிய வேணுகோபால சுவாமி கோயிலைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினால் மதிய உணவுக்கு சென்னை வந்துவிட முடிந்தது! சாலைகள் அவ்வளவு நன்றாக உள்ளன.

*

ராஜராஜன் தஞ்சையில் பெருவுடையார் (பிரகதீஸ்வரம்) கோயிலைக் கட்டியதன் 1,000-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாங்கள் கோயிலுக்குள் நுழையும்போது, அமைச்சர் பெருமக்கள் - ஸ்டாலின், அன்பழகன், அவர்கள்பின்னே அத்தனை அமைச்சர்களும் வெளியே வந்துகொண்டிருந்தனர். ராஜராஜனின் பிள்ளை ராஜேந்திரனுக்கு ஏதோ அப்பன்மீது கோபம்போல. தஞ்சாவூரைப் புறக்கணித்தது மட்டுமின்றி, தந்தைக்குப் போட்டியாக தானும் ஒரு பெரிய கோயிலைக் கட்டவேண்டும் என்று முடிவெடுத்தான். அதற்கு அவன் தேர்ந்தெடுத்த இடம்தான் கங்கைகொண்ட சோழபுரம். இன்று அந்த ஊர் யாரும் வசிக்காத ஓர் இடம். அந்த ஊரில் ராஜேந்திரன் கட்டிய கோயிலின் மாதிரி கிட்டத்தட்ட தஞ்சைக் கோயிலை ஒட்டியது. கருவறை, அதன்மீதுள்ள விமானம், உள்ளே இருக்கும் லிங்கம், கோஷ்டத்தைச் சுற்றிய சுவர்களில் இருக்கும் சிற்பங்கள் எனப் பலவும் தந்தையின் கோயிலின் மாதிரியில். கோயிலின் பெயரும் தந்தையுடைய கோயிலின் அதேப் பெயர்தான் - பெருவுடையார் (பிரகதீஸ்வரம்) கோயில். தஞ்சாவூர்க் கோயிலுக்குத் தந்தை அளித்த பல நேர்த்திகளை எல்லாம் மகன் தன் கோயிலுக்குத் திருப்பிவிட்டான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இரண்டு கோயில்களுமே இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இரண்டுமே அற்புதமான கோயில்கள். வேறு அனைத்தையும் விட்டுவிட்டு, பிரதான கோஷ்டத்தைச் சுற்றியுள்ள சிற்பங்களை மட்டும் பார்க்கும்போது மகனுடைய கோயில்தான் ஜெயிக்கிறது என்பது என் தனிப்பட்ட, பாமரத்தனமான கருத்து.

உதாரணமாக ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் பார்ப்போம். கங்கைகொண்ட சோழபுரத்தில் காணப்படும் சண்டேச அனுக்ரஹ மூர்த்தி. இது தஞ்சையில் கிடையாது. சொல்லப்போனால், இதற்கு இணையான ஒன்று தஞ்சையில் இல்லவே இல்லை.


காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார். அருகில் பார்வதி.

மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் அழகான சில சிலைகள் உண்டு; சிவனும் தாண்டுவும், சண்டேச அணுக்ரஹ சிவன் (பார்வதி இல்லாமல்), விஷ்ணுவும் கருடனும், சிவனும் நந்தியும். இவற்றில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் அவர்களது வாகனங்கள்மீதோ, மாணவன்மீதோ, தொண்டன்மீதோ அளவுக்கு அதிகமான பரிவுணச்சி இருக்கும். அது அந்தக் கல் முகத்தில் செதுக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அந்தப் பரிவை இங்கே முகத்திலும் பரிவட்டம் கட்டும் செயலிலும் காணலாம்.

(தொடரும். அடுத்த பதிவில் இரு இடங்களிலும் இருக்கும் சிற்பங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம்.)

தமிழ் பேப்பர்

நண்பர்களுக்கு வணக்கம்.

வருகிற சனிக்கிழமை, அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி தினம் முதல் தமிழ் பேப்பர் என்னும் இணைய இதழைத் தொடங்குகிறேன். இது எங்களுடைய New Horizon Mediaவின் மற்றொரு மின்வெளி முயற்சி. இணைய எழுத்து – அச்சுப் பத்திரிகை எழுத்து இரண்டுக்குமான இடைவெளியை மேலும் சற்றுக் குறைக்க எங்களால் ஆன எளிய முயற்சி.

இது தினசரியா, வார இதழா, மாதம் இருமுறையா, மாதம் ஒருமுறையா என்கிற கேள்விகளுக்கு இடமில்லை. ‘பீரியாடிஸிடி’ என்னும் பத்திரிகை உலக ஒழுக்கத்தை நிராகரிப்பதுதான் இணைய ஒழுக்கம். நிகழும் கணத்தில் வாழும் கலைக்குப் பழகிவிட்டோம். தமிழ் பேப்பரும் அப்படியே. இதன் ட்விட்டர் பக்கத்தை நீங்கள் பின் தொடர்வதன்மூலம் எதையும் தவறவிடாதிருக்க இயலும்.

அது சரி, எதற்கு இது?

மிகத் தீவிரமாக, முகத்தை உர்ர்ரென்று வைத்துக்கொண்டுதான் வாசிக்கவேண்டும் என்று ஒரு தரப்பும், தீவிரத்துக்கு வாழ்வில் சற்றும் இடமில்லை என்ற பிரகடனத்துடன் முழு மொக்கை விருந்தளிக்கும் மறு தரப்பும், எழுத்து என்னும் கலை தொடங்கிய நாளாக என்றுமுள்ளது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட தளம் ஒன்று உண்டு. நல்ல எழுத்து. முக்கியமான எழுத்து. கவனிக்கப்படவேண்டிய எழுத்து. அதுவே படிக்க சுவாரசியமாகவும் ஏன் இருக்கக்கூடாது? நகைச்சுவைக்கும் கேளிக்கைக்கும் கொண்டாட்டங்களுக்கும் குதூகலங்களுக்கும் இடமில்லா வாழ்க்கையில் ரசமில்லை. அதே சமயம் அது மட்டுமே வாழ்க்கையுமில்லை.
எழுத்தென்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பது. தமிழ் பேப்பர் அதைச் செய்யப்போகிறது.



வரலாறு, இலக்கியம், அனுபவங்கள், திரைப்படம், செய்திகள், சிந்தனைகள், கதைகள், கவிதைகள், நகைச்சுவை, ஆன்மிகம் அனைத்தும் தமிழ் பேப்பரில் உண்டு. அனைத்தும் தரமானதொரு வாசிப்பு அனுபவம் தரக்கூடியவையாக மட்டுமே இருக்கும். வாசகர்களும் எழுத்தாளர்களும் நெருங்கி உறவாடும் தளமாக இது அமையும். உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள். அபிப்பிராயங்களை, விமரிசனங்களைத் தயங்காமல் முன்வையுங்கள். மாற்றமென்பதும் வளர்ச்சியென்பதும் இரு கட்சிக்கும் பொதுவானவையே அல்லவா?

இன்னும் இரு தினங்கள். சனிக்கிழமை தமிழ் பேப்பர் பிறக்கிறது. வாசிக்க வாருங்கள்.

Wednesday, September 22, 2010

ஃபெர்மாவின் கடைசித் தேற்றம்: பத்து வயதுச் சிறுவனின் வாழ்நாள் கனவு

(புத்தகம் பேசுது செப்டெம்பர் 2010 இதழில் வெளியானது)

Fermat’s Last Theorem, Simon Singh, Harper Perennial

சிறு வயதில் கணிதப் பாடப் புத்தகத்தில் பிதகோரஸ் தேற்றம் என்பதைப் படித்திருப்போம். ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்களின் வர்க்கத்தைக் கூட்டினால், அதன் செம்பக்கத்தின் வர்க்கம் கிடைக்கும். x2 + y2 = z2 என்பதுதான் இதன் சமன்பாட்டு வடிவம். இதைப் படிக்காமல் எந்த மாணவரும் பத்தாம் வகுப்பைக் கடக்கமுடியாது.

பியர் தி ஃபெர்மா என்ற ஒரு பிரெஞ்சுக்காரர் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் வக்கீலாகவும் துலூஸ் என்ற நகரின் நீதிபதியாகவும் இருந்தவர். ஓய்வு நேரத்தில் கணிதத்தில் ஆழ்வது அவரது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவில் கணித மறுமலர்ச்சி நடந்துகொண்டிருந்தது. இந்தியாவிலிருந்து அரேபியா சென்ற கணிதம், அங்கிருந்து இத்தாலிக்கு 12-ம், 13-ம் நூற்றாண்டுகளில் சென்றிருந்தது. மற்றொரு பக்கம், 2,000 ஆண்டுகளுக்குமுன் கிரேக்கர்கள் உருவாக்கியிருந்த அற்புதமான கணிதங்கள் மொழிமாறி லத்தீன் வழியாக மீண்டும் ஐரோப்பாவுக்குள் நுழைந்தது.

இரண்டு முக்கியமான புத்தகங்கள் ஐரோப்பிய கணித மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. ஒன்று யூக்ளிட் எழுதிய ஜியோமெட்ரி. வடிவ கணிதம் பற்றிய அற்புதமான இந்தப் புத்தகம் இன்றும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் தரத்தில் உள்ளது. மற்றொன்று டயஃபேண்டஸ் எழுதிய அரிதமெடிகா என்ற புத்தகம். யூக்ளிட், டயஃபேண்டஸ் இருவருமே கிரேக்கர்கள். தங்கள் புத்தகங்களை கிரேக்க மொழியில் அவர்கள் எழுதியிருந்தாலும், 17-ம் நூற்றாண்டில் லத்தீன் மொழி வழியாகவே இந்தப் புத்தகங்கள் ஐரோப்பியர்களுக்குக் கிடைத்தன.

ஃபெர்மா, தினமும் டயஃபேண்டஸின் புத்தகத்துடன்தான் தன் பொழுதைக் கழிப்பார். அரிதமெடிகா புத்தகம், இன்றைய ‘நம்பர் தியரி’ எனப்படும் துறையின் ஆரம்பம் என்று வைத்துக்கொள்ளலாம். இந்தப் புத்தகத்தில் பல்வேறு சமன்பாடுகள் இருக்கும். அவை அனைத்துக்கும் முழு எண்கள் மட்டுமே விடைகளாக இருக்கலாம். 1, 2, 3, 4... போன்ற நேர் எண்களும், -1, -2, -3, -4 போன்ற எதிர்ம எண்களும், 0 என்ற பூஜ்யமும் மட்டுமே அந்தச் சமன்பாடுகளுக்கு விடைகள் ஆகமுடியும். பின்னங்களும் சில இடங்களில் அனுமதிக்கப்படும்.

அந்தப் புத்தகத்தில்தான் பிதகோரஸின் சமன்பாட்டை ஃபெர்மா பார்த்தார். x2 + y2 = z2 என்ற சமன்பாட்டுக்கு முழு எண்கள் விடைகளாக வரக்கூடிய பல தீர்வுகள் உண்டு. உதாரணமாக, 32 + 42 = 52. அதேபோல, 52 + 122 = 132. இப்படிப் பல முழு எண் தீர்வுகள் உள்ள ஒரு சமன்பாடு இது. ஆனால் x3 + y3 = z3 என்ற சமன்பாட்டுக்கு முழு எண்களில் தீர்வுகள் உண்டா? x4 + y4 = z4 என்ற சமன்பாட்டுக்கு?

ஃபெர்மா கொஞ்சம் குறும்புக்கார மனிதர். தன் புத்தகத்தின் மார்ஜினில் ஒரு சிறு குறிப்பு எழுதியிருந்தார்: ‘xn + yn = zn என்ற சமன்பாட்டில், n ≥ 3 என்ற கட்டத்தில் முழு எண்களில் தீர்வுக்குச் சாத்தியமே இல்லை. அதற்கான அழகான நிரூபணம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். ஆனால் அதனை எழுத இந்த மார்ஜினில் இடம் இல்லை.’

இப்படிச் சொல்லிவிட்டு மனிதர் செத்தும் போய்விட்டார். அடுத்த 350 ஆண்டுகளுக்கு உலகின் கணித நிபுணர்கள் பைத்தியம் பிடித்து அலைந்தனர். இந்த மனிதர் ஃபெர்மா சொன்னது நிஜம்தானா? இதற்கு நிரூபணம் உள்ளதா? அந்த நிரூபணம் அவ்வளவு எளிதானதா? ஃபெர்மாவின் இந்தக் கூற்றைத்தான் ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் (ஃபெர்மாஸ் லாஸ்ட் தியரம்) என்றனர் கணிதவியலாளர்கள். கடைசி என்றால், 20-ம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் இன்னமும் விடை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் ஒரு கணிதச் சிக்கல் என்று பொருள். உண்மையில் இதனை ‘தேற்றம்’ என்று சொல்லக்கூடாது. ‘யூகம்’ என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ‘தேற்றம்’ என்ற பெயரே கடைசிவரை பரவியிருந்தது.

358 ஆண்டுகள் கழித்து ஆண்ட்ரூ வைல்ஸ் என்பவர் இந்தச் சிக்கலுக்கான நிரூபணத்தை முன்வைக்கிறார்.

இதுதான் சைமன் சிங்கின் புத்தகம் எடுத்துக்கொள்ளும் பொருள். ஃபெர்மா யார், ஆண்ட்ரூ வைல்ஸ் யார் என்பதிலிருந்து ஆரம்பிக்கும் கேள்விகளுக்கான விடைகளில் மேலும் பலர் வருகின்றனர். கணித உலகின் பல வித்தியாசமான, வியக்கத்தக்க நபர்களை நாம் பார்க்கிறோம்.

முதலில் ஆண்ட்ரூ வைல்ஸையே எடுத்துக்கொள்வோம். பத்து வயதில் ஒரு நூலகத்தில் இ.டி. பெல் என்பவர் எழுதிய ‘கடைசி கணிதப் புதிர்’ என்ற புத்தகத்தைப் படிக்கும்போதுதான் வைல்ஸ், ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் பற்றித் தெரிந்துகொள்கிறார். ஒரு சிறுவனுக்கே உள்ள ஆர்வத்தில் ஃபெர்மாவின் மார்ஜினுக்குள் அடங்காத நிரூபணத்தை தன் ஐந்தாம் வகுப்பு கணக்கு கொண்டு நிரூபித்துவிடத் துடிக்கிறார். முடியாதபோது ஆர்வம் பன்மடங்கு அதிகமாகிறதே தவிர, குறையவில்லை. மேற்படிப்பில் கணிதம் எடுத்து கேம்பிரிட்ஜில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர், தன் வாழ்நாளுக்குள் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை உடைத்தே தீருவது என்று தனக்குள்ளாகக் கங்கணம் கட்டிக்கொள்கிறார்.

சோஃபி ஜெர்மைன் என்ற ஃபிரெஞ்சுப் பெண் கணித நிபுணரின் கதை அற்புதமானது. பெண்களுக்கு கல்வி கற்க அனுமதி இல்லாத காலம் அது. எனவே ஆணாகப் பொய் சொல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கிறார். அவரது ஆசிரியர் ஜோசஃப் தி லக்ராஞ்ச் என்ற மாபெரும் கணித, இயல்பியல் மேதை சோஃபியின் சில வீட்டுப் பாடங்களைப் பார்த்து அதிர்ந்துபோய் அவரை நேரில் பார்க்க வருமாறு கூறுகிறார். சோஃபி உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிடுகிறது. ஆனால் நல்ல வேளையாக லக்ராஞ்ச், ஒரு பெண்ணா கணிதம் படிப்பது என்று கொதித்து எழுவதில்லை. ஜெர்மானியக் கணித மேதை கார்ல் கவுஸுடன் சோஃபி கடித உரையாடலில் ஈடுபட்டு, ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை நிரூபிக்குமாறு வேண்டிக்கொள்கிறார். ஆனால் கவுஸுக்கு இதுபோன்ற கணிதப் புதிர்களில் ஆர்வம் இல்லை. ஆனாலும் சோஃபியே இந்தப் புதிரைத் தீர்ப்பதில் பெருமளவு முன்னேறுகிறார். நெப்போலியனின் படை ஜெர்மனியைத் தாக்கும்போது கவுஸின் உயிருக்கு எந்தவிதத்திலும் ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்று பிரெஞ்சுப் படைத் தளபதிகளுக்குத் தகவல் அனுப்பி, அதனைச் சாதித்த சோஃபி, அதற்காகவும் சேர்த்து கணித வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு கணிதச் சாதனைகளைக் கொண்டு ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை யாராலும் முழுமையாக நிரூபிக்க முடிவதில்லை. தனித்தனியாக n = 3, n = 4, n = 5 என்பதெற்கெலாம் தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் கணித வல்லுனர்களால், எல்லா n-க்கும் சேர்த்துத் தீர்வு காணமுடிவதில்லை.

இருபதாம் நூற்றாண்டில்தான் இதற்கான அடிப்படைக் கருவிகளைக் கண்டுபிடிக்கவேண்டும்.

அடுத்து நாம் காண்பது ஒரு சோகக் கதையை. இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட ஜப்பானில் ஒரு இளைஞர் கூட்டம் கணிதத்தில் மூழ்கி தங்கள் சோகத்தைத் தணித்துக்கொள்கிறது. அந்தக் கூட்டத்தில் இருவர் யுடாகா தானியாமா, கோரோ ஷிமுரா என்பவர்கள். நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை இரவல் வாங்க வரும் ஷிமுரா, அதே புத்தகத்தை தானியாமா எடுத்திருப்பதைக் கண்டு நட்பாகிறார். இருவரும் மாடுலாரிடி தேற்றம் என்ற துறையில் மூழ்குகின்றனர். தானியாமாவுக்கு ஒரு பெண் நண்பரும் உள்ளார். இருவரும் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் திடீரென ஒரு நாள் தானியாமா தற்கொலை செய்துகொள்கிறார்.

தன் தற்கொலைக் குறிப்பில், தான் பாதி பாடம் நடத்திக்கொண்டிருந்த வகுப்பு மாணவர்களிடமும் தன் சக ஆசிரியர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் தானியாமா, தான் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பதற்கான காரணத்தைச் சொல்லவே இல்லை. சில நாள்களில் அவருடைய பெண் நண்பரும் தற்கொலை செய்துகொள்கிறார். ஷிமுரா, தன் நண்பரின் நினைவாக மேற்கொண்டு தொடரும் ஆராய்ச்சியின் முடிவில் ‘தானியாமா-ஷிமுரா யூகம்’ என்ற புதிரை முன்வைக்கிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த யூகத்தில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்யும் ஆந்திரே வெய்ல் என்பவர் பெயரையும் சேர்த்து, ‘தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகம்’ என்று அதற்குப் பெயர் வருகிறது.

அதைப் பார்க்கும் அனைவருக்குமே ஒன்று தெளிவாகிறது. ஒருவிதத்தில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றமும், இந்த தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகமும் ஒன்றுதான். ஒன்றை நிரூபித்தால் மற்றொன்று நிரூபிக்கப்படும்.

ஆண்ட்ரூ வைல்ஸ் இந்த தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகத்தைத்தான் கையில் எடுத்துக்கொள்கிறார். கடைசியில் வெற்றியும் பெறுகிறார்.

358 ஆண்டுகள், நூற்றுக்கணக்கான கணித மேதைகளை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய இந்தப் புதிருக்கு ஃபெர்மா நிஜமாகவே விடையைக் கண்டுபிடித்திருந்தாரா அல்லது சும்மா புருடா விட்டாரா என்ற கேள்விக்கு நம்மால் நிஜமாகவே விடை காணமுடியாது. ஆனால் எப்படி ஒரு பத்து வயதுப் பையன் விளையாட்டாக நூலகத்தில் படித்த ஒரு புத்தகம் அவனது வாழ்க்கையை முற்றிலும் வியாபித்து, அதற்கான விடையைக் கண்டுபிடிக்கும்வரை அவனைத் துரத்தியது என்பது நம் மாணவர்களுக்குப் பெருத்த நம்பிக்கையை ஊட்டும்.

சைமன் சிங்கின் புத்தகம் ‘பாபுலர் மேத்ஸ்’ என்ற வகையைச் சேர்ந்தது. கடினமான சமன்பாடுகள் ஏதும் இருக்காது. ஜாலியாக கதை படிப்பதுபோலப் படிக்கலாம். எல்லாமே நிஜ மனிதர்களைப் பற்றியது. ஆனால் அந்த உலகத்தில் ஆழும்போதே சோஃபி ஜெர்மைன், தானியாமா, ஆய்லர், கவுஸ், வைல்ஸ் போன்ற மேதைகளைச் சந்திக்கலாம். அவர்கள் துறையைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். இதுபோன்ற சுவாரசியமான பல புத்தகங்கள் தமிழில் தேவை.

அவற்றைப் படிக்கும் பத்து வயதுத் தமிழ் மாணவனும் நாளை ஆண்ட்ரூ வைல்ஸைப் போல சாதனை படைப்பான்.

அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி: துல்லியமான வரலாறு


(புத்தகம் பேசுது ஜூலை 2010 இதழில் வெளியானது.)

Too Big To Fail: Inside the Battle to Save Wall Street, Andrew Ross Sorkin, Allen Lane, Penguin, 2009

2008-ல் அமெரிக்காவில் வரிசையாக பல நிதி நிறுவனங்கள் சரிந்து விழுந்தன. எண்ணற்ற சிறு சிறு வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு இடையே, பல பெரிய நிறுவனங்களும் சரிந்து விழுந்தன. பியர் ஸ்டெர்ன்ஸ் என்ற பங்குத் தரகு விற்பனை நிறுவனத்தை அரசின் வற்புறுத்தல் காரணமாக ஜேபி மார்கன் வங்கி விலைக்கு வாங்கியது. லெஹ்மன் பிரதர்ஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் திவால் ஆனது. மெரில் லிஞ்ச் நிறுவனத்தை பேங்க் ஆஃப் அமெரிக்கா என்ற வங்கி வாங்கியது.

வாக்கோவியா என்ற வங்கியை வெல்ஸ் ஃபார்கோ என்ற வங்கி வாங்கிக்கொண்டது. மார்கன் ஸ்டேன்லி, கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய முதலீட்டு வங்கிகள், பொதுமக்களிடமிருந்து பணம் பெறக்கூடிய வங்கிகளாக மாறின. ஏ.ஐ.ஜி என்ற அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் அப்போது தடுமாற ஆரம்பித்தது, இன்றுவரை சரியாகவில்லை. வீட்டுக் கடன் தரும் ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் ஆகிய இரு நிறுவனங்களிலும் அமெரிக்க அரசு எக்கச்சக்கமான முதலீட்டை உள்ளே கொண்டுவர வேண்டியிருந்தது.

சிடிபேங் முதற்கொண்டு அனைத்து நிதி நிறுவனங்களும் அரசிடமிருந்து பல பில்லியன் டாலர்களை உதவிக்காக வாங்கவேண்டியிருந்தது. ஒரு சிலர் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டாலும், அமெரிக்க அரசு செலவிட்ட அனைத்துப் பணமும் அதற்குத் திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கியது என்று மேலே வரிசையாகச் சொல்லியிருந்தேன். அதில் என்ன கஷ்டம் என்று நீங்கள் கேட்கலாம். இது எதுவுமே விரும்பி வாங்கப்பட்டவை அல்ல. உங்கள் பக்கத்து வீடு கடனில் தத்தளிக்கிறது. அவர்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டியதுதான் என்ற நிலை. அப்போது அந்த வீட்டில் வசிப்பவர்கள் சோறு இன்றித் தள்ளாடுவார்கள் அல்லவா? அதை விரும்பாத அரசு, உங்களை வற்புறுத்தி பக்கத்து வீட்டின் சொத்துகளையும் கடன்களையும் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. நீங்கள் மறுக்கமுடியாது. வேண்டுமானால், பக்கத்து வீட்டின் கடன்களை ஏற்பதற்காக அரசு உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.

இதுதான் நடந்தது. இதனால் எல்லாம் அமெரிக்காவின் நிதிப் பிரச்னை முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை. 2008-ல் நிகழ்ந்த பொருளாதார பூகம்பத்தின் அதிர்வுகள் இன்றும் தொடர்கின்றன. இந்தப் பிரச்னை 2008-க்கு வெகு நாள்கள் முன்னதாகவே, 9/11 எனப்படும் அமெரிக்க ரெட்டை கோபுரத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டி ஆரம்பித்தது என்று சொல்லலாம்.

பிரச்னையின் ஆரம்பம் அமெரிக்க வாழ்க்கைமுறையிலும் அவர்களது அரசியலிலும் இருக்கிறது. கடன் வாங்கியாவது பணம் செலவழித்து, விரும்பிய பொருளை வாங்கிக் குவிக்கும் ஒரு ‘அமெரிக்கக் கனவு’ அவர்களுடையது. தன் சக்திக்கு மேற்பட்டு பொருளை நுகரவேண்டும் என்று மக்கள் ஒருபக்கம் விரும்ப, பெரும் நிறுவனங்களோ அதற்கு விளம்பரம், சிறப்புச் சலுகை என்று தூபம் போட்டன. மற்றொரு பக்கம் அரசாங்கமோ, பொருளாதார வளர்ச்சி என்பதே பொதுமக்கள் தம் இஷ்டத்துக்குப் பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஏற்படுவது என்ற எண்ணத்தில், சேமிப்பை ஊக்குவிக்காமல், செலவை ஊக்குவித்தது.

9/11 தாக்குதலை அடுத்து அமெரிக்கப் பொருளாதாரம் தடுமாறும் என்று பயந்த அமெரிக்க மத்திய வங்கி (ஃபெட்) தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான், வட்டி விகிதத்தைக் குறைத்துக்கொண்டே வந்தார். வட்டி குறைந்தால், நீங்கள் வங்கியில் வாங்கும் கடனுக்கு வட்டி குறையும். அதே நேரம் உங்கள் வங்கி வைப்புக்கும் வட்டி குறையும். எனவே பணத்தை வங்கியில் வைத்துப் பூட்டுவதற்கு பதில், செலவு செய்யலாம் என்று தோன்றும். இல்லாத பணத்தையும் குறைந்த வட்டிக் கடனுக்கு வாங்கிச் செலவு செய்யத் தோன்றும்.

நிறுவனங்கள், தனியார்கள் என அனைவரும் அதைத்தான் செய்தனர். அவர்களுடன் சேர்ந்து அமெரிக்க அரசும் அதே காரியத்தைச் செய்தது. அமெரிக்கா என்ற நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மிக அதிகம். அதாவது அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கும் பொருள்கள் அதிகம்; வெளி நாடுகளுக்கு விற்கும் பொருள்களோ குறைவு. இந்த வித்தியாசத்தை ஈடுகட்ட அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை (டிரெஷரி பில்) வெளியிடும். இந்தக் கடன் பத்திரங்களை இந்தியா முதற்கொண்டு, சீனா, ரஷ்யா, பிரேசில், அரபு நாடுகள், ஜப்பான் ஆகியவை வாங்கிக் குவிக்கும். ஆக, அமெரிக்க அரசு, உலக நாடுகளிடமிருந்து கடன் வாங்குகிறது; அமெரிக்க மக்கள் அமெரிக்க வங்கிகளிடமிருந்து கடன் வாங்குகிறார்கள். அமெரிக்க நிறுவனங்கள் உலகம் எங்கும் கடன் வாங்குகிறார்கள்.

ஆனால் அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களின் வட்டியை ஆலன் கிரீன்ஸ்பான் குறைத்துக்கொண்டே வந்தார். இதனால் இந்தப் பத்திரங்களை வாங்கிய உலக நாடுகள், உலக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வருமானம் அதிகம் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அமெரிக்க நிதி நிறுவனங்கள் CDO என்ற புதிய நிதிப் பத்திரத்தை உருவாக்க ஆரம்பித்தன. அமெரிக்காவில் வீட்டுக் கடன்கள் என்பது பெரிய பிசினஸ். அனைவரும் சொந்தமாக வீடு வைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க அரசே வீட்டுக் கடன்களைக் கடுமையாக ஊக்குவித்தது. அப்படி உருவாக்கப்பட்ட வீட்டுக்கடன் நிறுவனங்கள்தான் ஃபேனி மே, பிரெட்டி மேக் ஆகியவை.

வீட்டுக் கடன்கள் பலவகை. கட்டாயமாகக் கையில் பணம் கிடைத்துவிடும் என்ற வகைக் கடன்கள் சில. நல்ல சம்பளம் பெறுபவர்களுக்குக் கொடுக்கப்படும் கடன்கள் இத்தகையவை. ஆனால் இங்கு ஆரம்பித்து நாளடைவில் கடன் பெறத் தகுதியற்ற பலருக்கும் வீட்டுக் கடன்கள் தரப்பட்டன. காரணம் CDO என்ற கருவிதான். அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்கள் அதிக வட்டி தராத நிலையில், பல்வேறு வீட்டுக் கடன்களைச் சேர்த்து ஒரு குவியலாக்கி, அவற்றிலிருந்து பல துண்டுகளை எடுத்து, அந்தத் துண்டுகளை ‘கடன் பத்திரங்கள்’ என்ற பெயரில் விற்க ஆரம்பித்தனர். நீங்கள் இந்தப் பத்திரம் ஒன்றை வாங்கினீர்கள் என்றால், மாதாமாதம், ஒரு ஆயிரம் பேர் கட்டும் வீட்டுக் கடன் EMI-யிலிருந்து ஒரு பகுதி உங்களுக்கு வந்துவிடும். இது மிகவும் பாதுகாப்பான பத்திரம் என்று கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கின. பாதுகாப்பும் அதிகம், வட்டியும் அதிகம் என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் பலவும் உலக நாடுகள் முதற்கொண்டு பல அமைப்புகளும் இந்தப் பத்திரங்களை வாங்க ஆரம்பித்தன.

ஆனால் விரைவில் இந்தப் பத்திரங்கள் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டது. எல்லா வீட்டுக் கடன்களையும் இப்படிப் பத்திரமாக்கி விற்றுவிட்டால் பிறகு என்ன ஆகும்?

மேலும் மேலும் வீட்டுக் கடன்களை உருவாக்கினால்தான் இந்தப் பத்திரங்களை மேலும் உற்பத்தி செய்யலாம்; அவற்றை விற்று லாபம் சம்பாதிக்கலாம். உடனே பல புதிய நிறுவனங்கள் முளைத்தன. அவற்றைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை. தெருவில் போவோர், வருவோருக்கெல்லாம் வீடு வேண்டுமா, கடன் வேண்டுமா என்று கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு வீடு வைத்திருப்போரை நான்கு வீடுகள் வாங்கச் சொன்னார்கள். இந்தியாவில் ஒரு வீடு வாங்கக் கடன் கேட்டால், வீட்டின் விலையில் 75%-தான் உங்களுக்குக் கடனாகத் தருவார்கள். ஆனால் அமெரிக்காவில் வீட்டின் விலையைப் போல 110% கடன் தருவதாகச் சொன்னார்கள்! ஏனெனில் வீட்டின் விலை வாங்கிய ஒரு வருடத்தில் மேலே ஏறிவிடுகிறதாம்! கடன் பெறுபவர் வேலையில் இருக்கிறாரா, சம்பளம் வாங்குகிறாரா என்றெல்லாம் கவலைப்படாமல் கடன் கொடுக்கப்பட்டது.

இப்படிக் கடன் வாங்கியவர்கள் ஒரு கட்டத்தில் வாங்கிய பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு, வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தொகையைக் கட்ட முடியாமல் வீட்டை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரியல் எஸ்டேட் மார்க்கெட் விழுந்தது. ஏகப்பட்ட வீடுகள்; வாங்கத்தான் ஒருவரும் இல்லை. இதனால் CDO பத்திரங்களை வாங்கியவர்களுக்குப் பணம் வருவது நின்றுபோனது. இதனால் அமெரிக்க நிதிச் சந்தை ஆட்டம் கண்டது. அத்துடன் உலக நிதிச் சந்தையுமே ஆட்டம் கண்டது.

இதுதான் சீட்டுக் கட்டு மாளிகை சரிய ஆரம்பித்த நேரம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது இருப்புக் கணக்கைப் பார்க்க ஆரம்பித்தபோது இந்த வீட்டுக்கடன் பத்திரங்களால் பெரும் ஓட்டை இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். பெரும் ஓட்டை என்றால் பல பில்லியன் டாலர். இந்த ஓட்டையை எப்படி அடைப்பது?

இந்தக் குழப்பம் அவர்களை ஆட்கொண்ட செப்டெம்பர் 2008 முதற்கொண்டு தினம் தினம் என்ன நடந்தது என்பதை ஆண்டிரூ ராஸ் சார்கின் அற்புதமாக விளக்குகிறார். கோல்ட்மேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, மெரில் லிஞ்ச், லெஹ்மன் பிரதர்ஸ், பியர் ஸ்டெர்ன்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்க, சிடிபேங்க், வெல்ஸ் ஃபார்கோ, வாக்கோவியா, ஏ.ஐ.ஜி, ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் போன்ற நிறுவனங்கள் ஒரு பக்கம். இந்தப் பிரச்னையில் சிக்காத வாரன் பஃபெட் போன்ற முதலீட்டாளர், சீனா, ஜப்பான், கொரியா நாடுகளின் வங்கிகள் அல்லது அரசின் முதலீட்டு அமைப்புகள் ஆகியோர் ஒரு பக்கம். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நிதி அமைச்சர் ஹென்றி பால்சன், அவரது ஆலோசகர்கள், ஃபெட் தலைவர் பால் பெர்னாங்க், மத்திய வங்கியின் முக்கிய ஆளுநர்கள், நாடாளுமன்ற செனட்டர்கள், ரெப்ரசெண்டேடிவ்கள் ஒரு பக்கம். இந்த நிதிச் சிக்கலால் பயந்து நடுங்கும் பொதுமக்கள் மற்றொரு பக்கம்.

நிறுவனம் என்றால் அந்த நிறுவனத்தை நடத்தும் தலைமை நிர்வாகிகள், ஒவ்வொரு நிறுவனத்தின் இயக்குனர் குழுமம், அவர்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள், ஒவ்வொரு நிறுவனத்தின் உள்ளே வேலை செய்யும் முக்கியமானவர்களின் எண்ண ஓட்டங்கள், அவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை பல நேர்முகங்கள் மூலம் சேகரித்து, நடந்தது நடந்தபடியே ஒப்பிக்கிறார் சார்கின். பாரதப் போர் நடக்கும்போது சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு அளித்த நேர்முகம் போல உள்ளது இந்தப் புத்தகம்.

புத்தகம் எந்தவிதக் கருத்தையும் முன்வைப்பதில்லை. இது சரியா, தவறா, யார் நல்லவர், கெட்டவர் என்று எதையும் சொல்வதில்லை. ஆனால் சமீப காலத்தில் நடைபெற்றுள்ள மிக முக்கியமான பொருளாதார நிகழ்வு ஒன்றைத் துல்லியமான வரலாறாக மாற்றிக் கொடுத்துள்ளது இந்தப் புத்தகம். இதைப் படிப்போர் நிகழ்வுகளை சரியான முறையில் அலசி, யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்.

ஒரு செய்திப் பத்திரிகையாளர் தினசரிச் செய்தியில் எதைத்தரவேண்டும் என்பதற்கு நியூ யார்க் டைம்ஸ் நிருபர் சார்கினின் இந்தப் புத்தகம் ஒரு உதாரணம். ‘Too Big to Fail’ - அதாவது இந்த நிதி நிறுவனங்கள் மிகப் பெரியதாகிவிட்டன; எனவே வீழ்ச்சி அடைய வாய்ப்பே இல்லை என்ற இறுமாப்புடன் வலம் வந்துகொண்டிருந்தவர்களுக்கு மரண அடி கிடைத்தது 2008-ல். எந்தப் பெரிய அளவை அடைந்தாலும் வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. அதுவும் எக்கச்சக்கமான லாபத்தைத் தேடி ரிஸ்க்கியான வியாபாரங்களிலும் நிதிப் பேரங்களிலும் ஈடுபடும் நிறுவனங்களால்... என்ற உண்மையை முகத்தில் அடித்தாற்போல நமக்குப் புரியவைக்கிறது இந்தப் புத்தகம்.

Friday, September 10, 2010

பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல்

(31 ஆகஸ்ட் 2010 அன்று எழுதியது)

என்னவோ, பாகிஸ்தானுக்கு நேரமே சரியில்லை. ஒருபக்கம், ஆட்டம் காணும் அரசியல் நிலைமை. குடியாட்சி அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கும் நாட்டில் எப்போது வேண்டுமானாலும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு, யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்று சொல்லக்கூடும்.

மறுபக்கம், நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு கிடையாது. கஜானாவில் பணமும் கிடையாது. எப்படி அடுத்த மாதம் நாட்டை நடத்துவது என்றும் யாரிடம் கையேந்தலாம் என்றும் நாட்டின் பிரதமர் யோசித்துக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம், நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள். தாலிபன், அல் காயிதா இருவரும் பாகிஸ்தானைத் தங்கள் முகாமாக வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். தீவிரவாதிகளை நசுக்க முற்பட்டால், நாடெங்கும் தற்கொலைக் குண்டுவெடிப்பு. நசுக்காவிட்டால் அமெரிக்காவின் அச்சுறுத்தல்.

இவை போதாது என்று சென்ற மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வீடிழந்து, உணவும், இருப்பிடமும், குடிக்க நீரும் இன்றித் திண்டாடுகின்றனர். நாடு மீண்டும் பழைய நிலைக்கு வர ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இவ்வளவு பிரச்னைக்கு நடுவில் கிரிக்கெட் ஆட்டம் ஒரு கேடா என்று நீங்கள் கேட்கலாம். ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் அதனால் யாரும் கவலைப்படப்போவதில்லை. ஆனால் நிலைமை இங்கே முற்றிலும் வேறு.

கிரிக்கெட்மீது சூதாட்டம் நிகழ்வதும், அது தொடர்பாக ஆட்டக்காரர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு ஆட்டத்தின் முடிவுகள் மாற்றப்படுவது பற்றியும் நமக்கு ஓரளவுக்குத் தெரியும்.

பல நேரங்களில் ஓர் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை, ஒரு சில வீரர்களால் மட்டுமே தீர்மானித்துவிட முடியாது. ஆனால் ஆட்டத்தின் சில நிகழ்வுகளை ஒரு அணியின் தலைவரால் தீர்மானிக்கமுடியும். உதாரணமாக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் ஓர் அணியில் யார் முதலில் பந்துவீசப் போகிறார் என்பதை அணித்தலைவர்தான் தீர்மானிக்கிறார். யாருமே எதிர்பாராதவகையில் ஆட்டத்தின் முதல் ஓவரை வீச ஒரு ஸ்பின்னரைக்கூட கேப்டன் அழைக்கலாம்.

அணித்தலைவரும் பந்துவீச்சாளரும் உள்கை என்றால் மேலும் பல விஷயங்களைச் செய்யலாம். தான் வீசும் ஓவரின் மூன்றாவது பந்தை நோபால் அல்லது வைட் ஆக வீசுலாம்.

இதனால் யாருக்கு என்ன லாபம்? இதனால் ஆட்டத்தின் போக்கு பெரிய அளவில் மாறப்போவதில்லை. ஆனால் சூதாட்டப் பணத்தின் போக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம்.

இதற்குப் பெயர்தான் ஸ்பாட் ஃபிக்ஸிங் என்று பெயர். சூதாட்ட அமைப்புகள் (சட்டபூர்வமானவை, சட்டபூர்வமற்றவை என இரண்டுமே) ஒரு நிகழ்வு நடப்பதற்கு இன்ன odds என்று சொல்லும். அதாவது, மூன்றாவது ஓவரில் முதல் பந்து நோபாலாக இருப்பதற்கு 1-க்கு 3 என்று சொன்னால், நீங்கள் 1 ரூபாய் கட்டினால், அந்த நிகழ்வு நடந்தால், உங்களுக்கு சூதாட்ட நிறுவனம் 3 ரூபாய் கொடுக்கும். எனவே முன்னதாக அணித்தலைவரிடமும் பந்துவீச்சாளர்கள் சிலரிடமும் பேசி வைத்துக்கொண்டால், அவர்கள் கொடுக்கும் சிக்னலுக்கு ஏற்ப நீங்கள் பெட் கட்டலாம். பணத்தை அள்ளலாம். அதில் கொஞ்சத்தை விளையாட்டு வீரர்களுக்கும் வெட்டலாம்.

சமீபத்தில் லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்டின்போது, நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்ற ஒரு பத்திரிகை பொறி வைத்து, பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் பணம் வாங்கிக்கொண்டு இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டனர் என்பதைக் கண்டுபிடித்து வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்திய, தென் ஆப்பிரிக்க, பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள்மீது இதுபோன்ற குற்றங்கள் சாட்டப்பட்டன. இதில் இந்திய, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகங்கள் உடனடியாக தங்கள் கட்டமைப்பைச் சுத்தம் செய்வதில் இறங்கி அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளனர். அசாருதீன் போன்ற பெருமைமிக்க ஆட்டக்காரர்கள் கிரிக்கெட்டிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். (இன்று அவரே காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது கடும் சோகம்!)

ஆனால் பாகிஸ்தானில் மட்டும் இந்த நிலை மாறவேயில்லை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அந்த கிரிக்கெட் அணி வீரர்கள்மீது சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை பணம் பெற்றுக்கொண்டு மாற்றுவது போன்ற குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

மக்களின் குணத்தில் மாறுதல் வந்தால்தான் நாட்டின் குணத்தில் மாறுதல் வரும்.

பாகிஸ்தான் மக்கள் இன்று தங்களைத் தாங்களே ஆழமாகக் கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டிய அவமானகரமான நிலையில் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் இயற்கைப் பேரழிவு

(23 ஆகஸ்ட் 2010 அன்று எழுதியது)

முன்பெல்லாம் சினிமா தியேட்டரில் படம் ஆரம்பிப்பதற்குமுன் நியூஸ் ரீல் போடுவார்கள். அது எப்போதுமே ‘பிகாரில் வெள்ளம்’ என்றுதான் ஆரம்பிக்கும் என்பது என் நினைவு.

இந்த ஆண்டு பிகாரில் ஒரே வறட்சி. மாநிலம் முழுவதுமே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார் மாநில முதல்வர் நிதீஷ் குமார்.

ஆனால் சேர்த்துவைத்ததுபோல பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம். ‘மெதுவாகக் கட்டவிழும் ட்சுனாமி’ என்று இதனைக் குறிப்பிடுகிறார் ஐ.நா சபைத் தலைவர் பான் கி மூன். கடுமையான மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் 1.2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் என்கிறார்கள். பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம். பல லட்சம் ஆடு மாடுகள் பலி. மனிதர்கள் சில ஆயிரம் இறந்திருக்கலாம்.

இன்னும் ஐந்து முதல் எட்டு ஆண்டுகள், கிட்டத்தட்ட 15 பில்லியன் டாலர் செலவழித்தால்தான் பாகிஸ்தான் மீண்டும் தான் இருந்த நிலைமைக்கு வரும் என்கிறார்கள். இப்போது உடனடி நிவாரணத்துக்கே 500 மில்லியன் டாலர் வேண்டும். ஆனால் கொடுக்கத்தான் ஆள் இல்லை.

இந்த நிலையில், பக்கத்து நாடான இந்தியா 5 மில்லியன் டாலர் கொடுக்க முன்வந்தது. ஆனால் பாகிஸ்தான் அதனை வாங்க மறுத்தது!

ஆமாம். நீங்கள் நேரடியாகக் கொடுத்தால் நாங்கள் வாங்கமாட்டோம்; வேண்டுமானால் ஐ.நா சபையிடம் கொடுங்கள், அவர்கள் எங்களிடம் கொடுக்கட்டும் என்றது.

சரி, அதற்கும் நாங்கள் தயார் என்று இந்தியா சொன்னது. ஆனால் அதற்குள்ளாக அமெரிக்கா உள்பட்ட பிற நாடுகள் பாகிஸ்தானை வற்புறுத்தின. இந்தியாவுடன் பிரச்னைகள் இருக்கலாம், ஆனால் அதற்காக வெள்ள நிவாரணத்துக்கு என்று கொடுக்கப்பட்ட பணத்தைப் பெற்றுகொள்வதுதான் சரியான மனப்பான்மை என்றன அந்த நாடுகள்.

வேறு வழியின்றி பாகிஸ்தான் இப்போது அந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் நல்லெண்ணம் காரணமாக தாங்கள் அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி தெரிவித்துள்ளார்.

*

பாகிஸ்தானின் நிலைமை இன்று படுமோசம்.

மாறி மாறி வரும் ராணுவ ஆட்சி, குடியாட்சிக்கு இடையே நாட்டில் உள்ள மக்களுக்கு தங்களது உரிமைகள் என்ன என்பதே தெரியவில்லை. அரசியல் அமைப்புச் சட்டம் என்பது அங்கு அமலில் இல்லாத நேரமே அதிகம். ராணுவம் ஆட்சியில் இல்லாவிட்டாலும், அவர்கள் கையில்தான் பெருமளவு அதிகாரம்.

மற்றொரு பக்கம், அவர்கள் தூண்டிவிட்ட தாலிபனே அவர்களைப் பதம் பார்க்கின்றது. ஏன், எதற்கு என்று தெரியாமலேயே அந்த நாட்டு மக்கள்மீது கொலைவெறி வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆஃப்கனிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் கோலோச்சிவரும் அல் காயிதா, தாலிபன் தீவிரவாதிகள்மீது பாகிஸ்தான் ராணுவம் தன் விருப்பத்துக்கு மாறாக, அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது.

நாட்டின் பொருளாதாரம் கடுமையாகச் சீரழிந்துள்ளது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு படு மோசமாக உள்ளது. பிற நாடுகளிடம் கையேந்தினால்தான் அடுத்த மாதம் பெட்ரோல் வாங்கக் காசிருக்கும் என்ற நிலை.

இதுபோன்ற மோசமான சூழலில் இப்போது நிகழ்ந்திருக்கும் இயற்கைப் பேரழிவு, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாட்டைப் புதைகுழியில் தள்ள இதைவிட வேறு வழி கிடையாது.

*

பாகிஸ்தான் நம்மைப் பகை நாடு என்று கருதினாலும் நாம் பாகிஸ்தானை பகைவனாகக் கருதக்கூடாது. பகைவனே ஆனாலும் ‘பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு’ நமக்கு வேண்டும்.

இருவரும் ஒரே நேரத்தில் சுதந்தரம் அடைந்தோம். ஆனால் இரு நாடுகளும் வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தன. இந்தியா மதச் சார்பற்ற, ஜனநாயக வழிமுறையைப் பின்பற்றியது. பாகிஸ்தான் இஸ்லாமிய மதவழியில், அதிகாரம் ஒரு முனையில் குவிந்திருக்கும் வழியைப் பின்பற்றியது. அதன் விளைவாக, தன் சில கொள்கைகளைச் சாதிக்க, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதில் தவறு ஏதும் இல்லை என்ற எண்ணம் அந்த நாட்டில் பரவியது. பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பூதத்தை மீண்டும் பாட்டிலில் அடைப்பது கடினம்.

1991-ல் இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்த காலகட்டத்தில் இந்தியா சோசலிசத்தைத் துறந்து சந்தைப் பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுத்தது. அத்துடன், ஓரளவுக்கு வலுவாக இருக்கும் அரச அமைப்புகள் வழிகாட்ட, வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

பாகிஸ்தானில் வலுவான அதிகாரக் கட்டமைப்புகள் இல்லை. ஜனநாயக முறைமைகள் இல்லை. தீவிரவாதத்துடன், இப்போது இயற்கைப் பேரழிவும் சேர்ந்துள்ளது.
இந்த நிலையில் அந்த நாடு எப்படி மீண்டு வரப்போகிறது என்று பார்க்கவேண்டும். கடவுளிடம் வேண்டுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

தேவை: உலகில் புதிய அரசியல் சிந்தனை

(5 ஆகஸ்ட் 2010 அன்று எழுதியது)

இந்திய அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்து வளர்ந்துள்ளோம் நாம். சுதந்தரம் பெற்ற காலத்தில் அப்பழுக்கில்லாதவர்களாக, சுயநலம் அற்றவர்களாக இருந்த அரசியல்வாதிகள் நாளடைவில் மாறத் தொடங்கினர். ஊழல், லஞ்சம், கயமை, சொந்தக்காரர்களும் தானும் அநியாய வழியில் சொத்து சேர்ப்பதை ஊக்குவிப்பது, கொள்கைப் பிடிப்பில்லாத அரசியல், நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் சாக்கடை ஆக்குவது, கட்சித் தாவல், கொலைகளிலும்கூட ஈடுபடுவது என்று மானத்தையே காற்றில் பறக்கவிட்டவர்களைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம்.

இந்திய அரசியல்வாதிகளுக்கு மாறாக வளர்ந்த ஒரு நாட்டின் அரசியல்வாதிகளைப் பார்ப்போம். அதற்குமுன் அமெரிக்கா என்ற நாட்டையே பார்ப்போம். அமெரிக்காதான் இந்திய மத்தியதர வர்க்கத்தின் ஆதர்ச நாடாக இருந்தது. மேல்படிப்பு படிக்க அமெரிக்கா செல்லவேண்டும்; கம்ப்யூட்டர் வேலையா? அமெரிக்கா செல்லவேண்டும்; அங்கு சென்று கிரீன் கார்ட் வாங்கி, இறுதியில் அமெரிக்கப் பிரஜையாகி, பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். இதுதான் இந்திய இளைஞர்களின் கனவாக இருந்தது; இன்றும்கூட இருக்கிறது. ஆனால் இன்றோ அமெரிக்க இளைஞர்கள், தங்கள் பெற்றோரின் வாழ்க்கையைவிட தங்களது வாழ்க்கை மோசமாக இருக்கப்போகிறது என்ற எண்ணத்துக்கு வந்துள்ளனர்.

இப்போது அமெரிக்க அரசியல்வாதிக்கு வருவோம். அமெரிக்க அரசியல்வாதி இந்திய அரசியல்வாதியைப் போல ஊழல் பேர்வழி கிடையாது. அங்கும் சில கெட்டவர்கள் இருக்கலாம். ஆனால் இங்குபோல அங்கு மலைமுழுங்கி மகாதேவன்கள் கிடையாது. தம் கண்முன்னே தம் நாட்டு இளைஞர்கள் கனவுகளை இழப்பதைப் பார்க்கும் அந்த ஊர் அரசியல்வாதி என்ன செய்வார்?

அமெரிக்க அரசியல்வாதிகள் அனைவருமே வளம் வாய்ந்த பின்னணியில் பிறந்தவர்கள். தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல; அவர்களது சமூகமே வளமான சமூகமாக இருந்திருக்கும். அவர்கள் தனிப்பட்ட முறையில் கஷ்டப்பட்டிருந்தாலும் வாய்ப்புகளுக்குக் குறை இருந்திருக்காது. அவர்கள் பல்கலைக்கழகத்தை அடைந்த கணத்துக்கு மறு கணமே அவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும். படிப்பு, படிப்புக்கான கட்டணத்தை சம்பாதிக்கக்கூடிய பகுதிநேர வேலை, படித்தபின் மேற்கொண்டு சட்டம் போன்ற துறைகளில் மேல்படிப்புக்கான வாய்ப்பு, அல்லது அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர்கீழ் பணிபுரிய வாய்ப்பு, பின் அங்கிருந்து வேலை, ஏதேனும் தொகுதியில் நிற்க வாய்ப்பு என்று கிடைத்தபடியே இருந்திருக்கும்.

வாய்ப்புகள் எக்கச்சக்கமாகக் கிடைத்த சில தலைமுறைகளைச் சேர்ந்த தலைவர்களால், வாய்ப்புகள் இல்லாத ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்ட முடியும்?
இங்குதான் அவர்கள் மகாத்மா காந்தியை உற்று நோக்கவேண்டும். காந்தி வாழ்நாள் முழுவதும் வாய்ப்புகள் இல்லாத மக்களுக்குத் தலைவராக இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் அவர், கிட்டத்தட்ட அடிமைகளாக இருந்த இந்திய சமூகத்தின் தலைவராக இருந்தார். படிப்பறிவு இல்லாத ஒரு கூட்டத்தின் தலைவராக இருந்தார். மனத்தில் துளிக்கூட நம்பிக்கை இல்லாத கூட்டத்தின் தலைவராக இருந்தார். இந்தியா வந்தும் அதே நிலைதான். சுதந்தரமா, அதெப்படி சாத்தியம் என்று மக்கள் நினைக்கும் கட்டத்தில், படிப்பறிவற்ற, கூழ் மட்டுமே குடிக்கும் வறுமையில் உழன்ற, இடுப்பில் ஒரு துண்டுக்கு மேல் உடுத்த வழியற்ற ஒரு கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்தார். சாதித்தும் காட்டினார்.

அவர் எப்படிச் சாதித்தார் என்பதற்கான ப்ளூ பிரிண்ட், அவரது புத்தகமான ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ என்பதில் உள்ளது. முதல் தேவை, ஆதரவற்றவர்களுடன் சேர்ந்து அவர்களது வாழ்வை வாழ்வது. மாடமாளிகையில் இருந்தபடி சாதாரணர்களுக்கு வாழ்க்கையைப் பெற்றுத் தரமுடியாது. அடுத்த தேவை, எதிர்காலம் பற்றிய தெளிவான ஒரு சிந்தனை. இன்றைக்கு அமெரிக்கர்களின், ஐரோப்பியர்களின் முக்கியத் தேவை, ஆடம்பரங்களையும் கன்ஸ்யூமரிசத்தையும் ஒழித்து கடின உழைப்புடன் சேமிப்பை அதிகரிப்பது. தெளிவான பொருளாதாரச் சிந்தனையோடு கொஞ்சம் ஆன்மிகத் தெளிவும் சுயம் மீதான நம்பிக்கையும் அவர்களுக்குத் தேவை.

இதையெல்லாம் சொல்லும்போது, இந்தியர்களாகிய நாம், அறிவுச் செருக்குடன் உலகுக்கு அறிவுரை சொல்வதாக நினைக்கக்கூடாது. நம் நாட்டின் பிரச்னைகள் முற்றிலும் வேறானவை. நம் நாட்டில் எண்ணற்ற ஏழைகள் அடுத்த வேளை சோறுக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். படிப்பறிவின்மை, இன்றும் நம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. ஊழலும் லஞ்சமும் எங்கும் பரவியுள்ளன. விழுமியங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் பணத்தின்பின் அலைவதை நம் மக்கள் குறியாக வைத்துள்ளனர். இவற்றைப் போக்க நமக்கு வேறு மாதிரியான தலைவர்கள் தேவை. அதை நாம் உணரும் அதே நேரம், அமெரிக்காவின் தேவை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதே நம் நோக்கம்.

நாளைய உலகில் நாமும் நன்றாக இருக்கவேண்டும். அமெரிக்காவும் நன்றாக இருக்கவேண்டும்.

Saturday, September 04, 2010

இளம் மாணவர்களுடன் சந்திப்பு - 1

மாணவர்களிடம் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான ஆர்வத்தைத் தூண்டுவதற்காக சோதனை முயற்சியாக ஒன்றை ஆரம்பித்துள்ளேன். இவர்கள் அனைவரும் தக்கர் பாபா உறைவிட ஆரம்பப் பள்ளியில் படிக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருபவர்கள். தொடர்ந்து 45 நிமிடங்களுக்குமேல் அவர்களை கவனம் செலுத்தவைப்பது கடினமாக உள்ளது. இன்றைய தொடக்கத்துக்குப்பின், அடுத்த சந்திப்புகளில் பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன், ஆடியோ, வீடியோ ஆகியவை உதவியுடன் மாணவர்களிடம் உரையாடப்போகிறேன். தொடர்ந்து அந்தச் சந்திப்புகளின் காணொளியையும் தருகிறேன்.

Thursday, September 02, 2010

பூனை

பக்கத்து வீட்டில் நான்கு பூனைக் குட்டிகள் இருக்கின்றன. பொதுவாக தாய்ப் பூனை இரண்டு அல்லது மூன்று குட்டிகளைப் போடும். வெகுசில சமயங்களிலேயே இப்படி நான்கு.

காலை எழுந்தவுடன் பல் தேய்த்துக்கொண்டே பால்கனிக்கு வந்துவிட்டால், அடுத்தவீட்டு மொட்டைமாடியில் ஃபிரெஷ்ஷாக அந்த நான்கு குட்டிகளும் ஒன்றோடு ஒன்று சண்டைபோட்டுக்கொண்டிருக்கும். ஒரு குட்டி, உதிர்ந்திருக்கும் இலை ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்து, அதைக் கீழே எறிந்து, என்னவோ அது தன்மீது எறியப்பட்ட கிரனேட் என்று நினைத்துக்கொண்டு பக்கவாட்டில் சைடு ஜகா வாங்கும். அப்போது அதன் வால் சிலிர்த்துக்கொண்டு தூக்கியபடி நிற்கும். உடனே மற்ற மூன்றும் தங்கள் கவனத்தை இந்தப் பக்கம் திரும்பும்.

சில நிமிடங்களிலேயே இது பொய்யான விளையாட்டு என்று தெரிந்துகொண்டு அந்தக் குற்றவாளிமீது பாய்ந்து அதைக் கீழே தள்ளி, மோசமாகக் கடிப்பதுபோல ஒன்று தாக்கும். மற்ற இரண்டும் வேறு விளையாட்டுகளை விளையாடப் போய்விடும்.

எப்போதாவது தாய் அங்கு படுத்தபடி, வாலை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டிருக்கும். உடனே குட்டிகளுக்குக் கொண்டாட்டம். தன் பஞ்சு முன்னங்காலால் ஆடும் வாலைத் தட்டும்; சில நேரங்களில் இரு முன்னங்கால்களாலும் அம்மாவின் வாலைப் பிடித்துத் தூக்கி நறுக் என்று கடித்துவிடும். ம்ர்ர்ர்ர் என்று அம்மா ஒரு சத்தம் கொடுக்க, சப்தநாடியும் ஒடுங்கி, அமைதியே வடிவாகக் குட்டிகள் அடங்கிப்போகும்.

தாவித் தாவி ஒன்றை ஒன்று கீழே தள்ளி, அதன்மீது ஏறி, அடிப்பதும் கடிப்பதும் அவர்களது வேட்டைத் திறனை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு விளையாட்டு. ஆனால் பெரும்பாலும் இந்தப் பூனைக் குட்டிகள் யாரையும் வேட்டையாடுவது கிடையாது.

நாகபட்டினத்தில் எங்கள் வீட்டில் ஒரு சாதுப் பெண் பூனை இருந்தது. என் அம்மாவின் தோஸ்த். காலையில் அம்மா சீக்கிரம் எழுந்து வீட்டு வேலைகளை ஆரம்பித்துவிடும்போது இதுவும் கூடவெ கிளம்பிவிடும். அம்மா அந்தப் பூனையுடன் பேசிக்கொண்டே வேலை செய்வார். இதுவும் அவ்வப்போது ஏதாவது சத்தம் கொடுத்தபடி இருக்கும். ஒரு கட்டத்தில் எலிகளைப் பிடிக்கும் பழக்கம் நின்றுபோய், பல்லிகளைப் பிடிப்பதோடு நிறுத்திக்கொண்டது. சில மாதங்களுக்குப் பிறகு பல்லிகளைப் பிடிப்பதையும் நிறுத்திவிட்டது. மோர் சாதம் அல்லது பால் சாதம் மட்டும்தான்.

அவ்வப்போது குட்டிகளைப் போடும். ஆனால் கவனமாக, குட்டிகள் வளர்ந்தபின், அவற்றை எங்காவது கொண்டுபோய் அதுவே விட்டுவிடும். தன் வீட்டில் தன் சோற்றுக்குப் பாதகமாக வேறு போட்டிகள் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது. அப்படியும் மீறி ஒருமுறை அது போட்ட இரண்டு குட்டிகளை வேறு எங்கும் விடவில்லை. அந்த இரண்டு குட்டிகளும் எங்களுடன் (நான், என் தங்கை, இரண்டு பூனைக் குட்டிகள்) சேர்ந்து வளர்ந்தன. அந்த இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண், ஒன்று பெண். ஆண் சற்று குண்டாக, கொழு கொழுவென இருந்தது. பெண் சோனியாக இருந்தது. எனவே அவற்றுக்கு குண்டு, சோனி என்று பெயர்கள்.

ஒல்லி, கொஞ்சம் டேஞ்சரான பார்ட்டி. பிடித்தால் சரக்கென்று நகத்தால் கீறிக் கிழித்துவிடும். குண்டு பரம சாது. அதற்கு ஆண்களைப் பார்த்தால் பயம். குண்டான பெண்களைப் பார்த்தாலும் பயம். எங்கள் வீட்டில் என்னிடம் மட்டும்தான் கொஞ்சம் பயம் இல்லாமல் வரும். என் அப்பாவைப் பார்த்தால் கதறிக்கொண்டு ஓடிவிடும். அம்மா, தங்கை ஆகியோரிடம் பயம் இல்லை. வெளியிலிருந்து யாராவது வந்தால் தயங்கித் தயங்கித்தான் வந்து பார்க்கும். கொஞ்சம் பயம் என்றாலும் எங்காவது ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும்.

ஒரு கட்டத்தில் குண்டும் சோனியும் பெரியவர்களாக ஆகியும் எங்கள் வீட்டிலேயே தொடர்ந்து வசித்தன. இப்போது மூன்று பூனைகள். இதற்குள் தாய்ப் பூனைக்கு வயதாகி, பேசுவதை (அதாவது சத்தம் போடுவதை) முற்றிலுமாக நிறுத்தியிருந்தது. குட்டிகள் போடுவதையும்தான். அவ்வப்போது வரும், சாப்பிடும். எங்காவது காணாமல் போய்விடும். சோனியின் சேட்டைகள் அதிகமாகின. ஒருமுறை ஊரிலிருந்து வந்திருந்த என் மாமா ஒருவரைக் கீறிவிட்டது. அவர் சாக்குப் பைக்குள் அதை எடுத்துக்கொண்டுபோய் எங்கேயே விட்டுவிட்டுத் திரும்பினார். எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து, திரும்ப வந்துவிட்டது. இப்படியே இரண்டு மூன்று முறை அவர் செய்ய, அதுவே கடுப்பாகி, ‘நீயும் வேண்டாம், உன் வீடும் வேண்டாம்’ என்று முடிவுசெய்து வேறு எங்கோ ஓடிவிட்டது.

குண்டைப் பற்றி அந்தக் கவலை இல்லை. யாருக்கும் அதனால் எந்தப் பயமும் இல்லை. வெறும் தயிர் சோறு மட்டுமே தின்று, தன் இனத்துக்கே உரிய எந்த தாமஸ குணமும் இல்லாமல் வளர்ந்துவந்தது. சில நேரங்களில், பல்லி, கரப்பு, தட்டான் போன்றவற்றைப் பிடித்துவிடும். ஆனால் அவற்றைக் கொல்லக்கூடத் தெரியாமல் தட்டித் தட்டித் துரத்தி விட்டுவிடும்.

அது ஆணாகவும் பிறந்து, வீரம் இல்லாமல் இருந்ததே அதற்கு எமனாகப் போயிற்று. அந்தப் பகுதியில் சில முரட்டு ஆண் பூனைகள் இருந்தன. இந்தக் கடுவன் பூனைகள் அவ்வப்போது அந்தப் பகுதியில் இருக்கும் பெண் பூனைகளை சினையேற்றும், தங்களுக்குள் சண்டை போட்டுகொண்டு வீட்டுக் கொல்லைகளில் கர்ர்ர் புர்ர்ர் என்று உறுமும் அல்லது ஒருவித சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும். சில நேரங்களில் சிறு குழந்தைகள் அமானுஷ்யமாக அழுவதுபோன்றும் ஓலமிடும். குண்டுப் பூனை வளர்ந்து பெரிதாகிக் கொழுகொழுவென்று வெளியே செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் ஒன்றுசேர்ந்து குண்டனைத் தாக்க ஆரம்பித்தனர்.

நன்கு செமத்தியாக டின் கட்டி அடித்துக் கடித்துவிடுவார்கள். இதுவும் கதறிக்கொண்டு வீட்டுக்கு வந்துசேரும். அடுத்த சில நாள்கள் தன் காயங்களை நக்கி ஆற்றும். பின் மீண்டும் வெளியே சென்று உதை வாங்கிக்கொண்டு வரும். பகுத்தறிவற்ற அதற்கு சொன்னால் என்ன புரியப்போகிறது? ஒருமுறை நாங்கள் ஊருக்குப் போய்விட்டு சில நாள்கள் கழித்துத் திரும்பினோம். பிற ஆண் பூனைகள் எல்லாம் சேர்ந்து கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது என்றார்கள் அக்கம்பக்கத்தினர். கிணறில் விழுந்துள்ளதா என்று தேடிப் பார்த்தோம். காணவில்லை.

அந்தப் பூனையை வைத்து நான் சில சோதனைகளைச் செய்துள்ளேன். ஒரு உயரத்திலிருந்து தலைகீழாகத் திருப்பி அதனைப் போட்டாலும் தரையில் விழும்போது உடலை நாசூக்காத் திருப்பி, நான்கு கால்களால் மெத்தென்று கீழே விழும் திறன் பூனைகளுக்கு உண்டு. அதன் கால் நகங்களை அழுத்திப் பார்த்திருக்கிறேன். பாதத்தில் மெத்தென்று இருக்கும் இடத்தை அழுத்தும்போது அதன் நகப்பையிலிருந்து கூரான நகம் வெளியே எட்டிப் பார்க்கும். அந்த நகங்களை ஒருக்காலும் தன்னைக் காப்பதற்காகக்கூட குண்டுப் பூனை பயன்படுத்தியதில்லை. அதேபோல அதன் பல் வரிசைகளை வாயைத் திறந்து, வாய்க்குள் விரலைவிட்டு எல்லாம் பார்த்திருக்கிறேன். நான் என்ன செய்தாலும் கொஞ்சமும் பதறாமல் காட்டிக்கொண்டு கம் என்று இருக்கும் அந்தப் பூனை. சீரான பற்கள். கடைக் கோடியில் மட்டும், நீண்ட ஊசிபோன்ற பற்கள். அவற்றையும் அது தன் வாழ்நாளில் ஒழுங்காகப் பயன்படுத்தியதில்லை. தயிர் சாதம் சாப்பிட இந்தப் பற்கள் எதற்கு?

அந்தப் பூனையை மாதிரியாக வைத்து தரையில் சாக்பீஸால் படம் வரைந்து பழகியிருக்கிறேன். (இப்போது மறந்துவிட்டது.) கிட்டத்தட்ட பக்கத்தில் உள்ள படத்தைப்போல கொஞ்சம் கறுப்பாக, உடலெங்கும் வரி வரியாக இருக்கும் அந்தப் பூனை. அதன் பல்வேறு விளையாட்டுகளை அருகே இருந்து ரசித்திருக்கிறேன். பெரியாழ்வார் போல கவித்திறன் இருந்திருந்தால் பல பாடல்களை எழுதியிருந்திருப்பேன்.

இப்போது மீண்டும் அதே விளையாட்டுகளை (இண்டூ ஃபோர்) பார்க்க முடிகிறது. ஆனால் இப்போதும் கவித்திறன் கைகூடவில்லை.

Wednesday, September 01, 2010

வீடு - 2

சிங்கப்பூர் சென்றிருந்தபோது தேசிய நூலகத்தில் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். அந்த ஆவணப்படத்தைப் பார்த்தபின் எழுதியிருந்த வரிகள் சில.
யேமெனில் மண்ணால் செய்யப்பட்ட வீடுகள் இருக்கும் இடத்தில் இப்போது காங்கிரீட் வீடுகள் வருவதுபற்றிய படம். ‘காங்கிரீட் 100 ஆண்டுகள் வரைகூடத் தங்காது, ஆனால் மண் பல நூறு ஆண்டுகள் தாங்கும்’ என்று ஒரு வயதானவர் சொன்ன விவரம் மனத்தைவிட்டு அகலவில்லை.
முதலில் ஒரு பொறியியல் மாணவனாக, இந்தச் செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. களிமண் என்றால் நமக்குத் தோன்றும் எண்ணம், அது தரமற்றது என்பதுதான். ஆனால் சிமெண்ட் என்றால், அது உலகின் மிக உயரிய பொருள்; அழிவற்றது, நிரந்தரமானது.

ஆனால் உண்மை முற்றிலும் மாறானதாக உள்ளது. இந்தியா வந்தபின் இங்குள்ள பல அகழ்வாய்வு நிபுணர்கள் மற்றும் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டபோது அவர்களும் இதைத்தான் சொன்னார்கள். களிமண்ணால் கட்டினால் அந்தக் கட்டடம் பல நூறாண்டுகள், ஏன், ஆயிரம் ஆண்டுவரைகூட இருக்கும். இண்டாக்கின் (INTACH) சுரேஷ், தஞ்சாவூர் அருகே களிமண்ணால் கட்டிய ஒரு கட்டடத்தை இடிக்கமுடியாமல் அப்படியே விட்டுவைத்திருப்பதாகச் சொன்னார். அதேபோல சுதையால் (சுண்ணாம்புக் கலவை) கட்டப்படும் சிலைகள், கோபுரங்கள், வீடுகள் பல நூறு ஆண்டுகள் இருக்கக்கூடியவை. நாம் இன்றும் பார்க்கும் கோயில்கள் பலவற்றுக்கும் அடிப்பகுதி கல்லாலும் (கிரானைட்) மேல்பகுதி செங்கல்+சுதை கொண்டும் கட்டப்பட்டவையே. சில நூறு ஆண்டுகள் தாங்கியும் மிகக் குறைவான அழிவுடன் அப்படியே நிற்கின்றன.

ஆனால் சிமெண்ட் நூறு ஆண்டுகள் கூடத் தாங்காது; 60 ஆண்டுகளில் உதிர்ந்து வீணாகத்தொடங்கிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பின் என்ன காரணத்தால் இப்படி சிமெண்ட், காங்கிரீட் என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறோம்?

சிமெண்ட், முக்கியமாக இரும்புக் கம்பிகள் (முறுக்கேறிய இரும்புக் கம்பிகள் என்றால் இன்னும் சிறப்பு) செருகப்பட்ட சிமெண்ட், கட்டுமானத் துறையில் ஒரு சிறப்பான பொருள்தான். அதனால் இழுத்தல், அழுத்தல் என இரண்டு விசைகளையும் தாங்கிக்கொள்ள முடியும். முறுக்கேறிய கம்பிகள் என்றால் திருகல் விசைக்கும் நல்ல எதிர்ப்பைக் காண்பிக்கும். எனவே உயரமான, பல அடுக்கு கொண்ட கட்டடங்களைக் கட்ட இவை பொருத்தமானவையே. ஆனால் இந்தக் கட்டடங்கள் குறுகிய காலம் மட்டுமே தாங்கக் கூடியவை. சிமெண்ட் உதிர்ந்து பலமிழந்துபோகும்போது, கட்டடத்தின் ஆயுளும் முடிந்துவிடும். அப்போதுதான் பிரச்னையே ஆரம்பமாகும். இந்தக் கட்டடத்தை அழிப்பது பெரும்பாடு. மாபெரும் இயந்திரங்கள் கொண்டு இடிப்பதுதான் ஒரே வழி. அல்லது வெடி கொண்டு தகர்ப்பது. ஏனெனில் உறுதிக்குத் தேவையான இரும்புக் கம்பிகளே இப்போது அழிப்பதற்கும் தடையாக இருக்கும்.

எனவே சிறுசிறு கட்டடங்கள், அதுவும் முக்கியமாக, இரண்டு தளங்கள் மட்டுமே கொண்ட கட்டடங்கள் என்றால் அதைக் கட்ட சிமெண்டும் காங்க்ரீட்டும் தேவையே இல்லை. களிமண், செங்கல் கொண்டு கட்டி, நல்ல தரமான மேல்பூச்சுக்கு ஒரு வழி செய்துவிட்டால் அற்புதமான வீடு கிடைத்துவிடும். வாழும் காலத்தில் அழிவில்லாமல் இருக்கும். மேல் பூச்சுக்குக்கூட சிமெண்டைத் தவிர்த்து, சுதை (காரை) கொண்டு பூசி, இன்று கிடைக்கும் தரமான பெயிண்டுகளை மேலே அடித்துவிடலாம். அல்லது இந்த பெயிண்டுகளையும் விடுத்து, நல்ல சுண்ணாம்புப் பூச்சை மேலே அடித்து அழகான தாவர வண்ணங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

தரைத் தளத்தின் கூரையாக மச்சு வீடுகள் என்று முன்னால் சொல்லப்பட்டிருந்த அதே முறையில் சுதை கொண்டே ஓடுகளை ஒட்டலாம். அதில்கூட மேலும் சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டு காங்க்ரீட் இல்லாமல் செய்யமுடியும். இதுபற்றி மேலும் யோசிக்க சிவில் எஞ்சினியரிங் படிக்காத என்னால் முடியவில்லை. சிவில் எஞ்சினியரிங் துறை வல்லுனர்கள் இதுபற்றிச் சிந்திக்கலாம்.

செங்கற்கள் என்றால், இந்தோ சாரசெனிக் பாணிக் கட்டடங்கள் சென்னையில் பல காணக் கிடைக்கின்றன. அவற்றில் பயன்படுத்தப்பட்டதுபோல நல்ல தரமான, கெட்டியான, glazed செங்கற்களைப் பயன்படுத்தினால், மேல் பூச்சு என்பதே தேவை இல்லை என்று தோன்றுகிறது.

நம் நாட்டில் நல்ல தரமான கட்டுமானக் கலை இருந்துள்ளது. பின்னர் அவை திரிந்து, தரமற்ற கைவினைஞர்கள் கையில் மோசமான கட்டடங்களாக மாறியுள்ளது. அந்த நிலையில் மேற்கிலிருந்து வந்த சில தொழில்நுட்பங்கள்தான் நமக்கு முற்றுமுழுதான தீர்வு என்று எடுத்துக்கொண்டு, அதே மோசமான கைவினைஞர்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு மோசமான கட்டடங்களையும் அழகுணர்ச்சி சிறிதும் இல்லாத கட்டடங்களையும் நாம் இன்று எழுப்புகிறோம்.

எனவே இன்றைய தேவை, நம் சூழலுக்கு (வெப்பமண்டலச் சூழலுக்கு) தேவையானபடி கட்டுமானக் கலையில் சில மாற்றங்களைக் கொண்டுவருவது.

இதுபற்றி சிந்திக்கும் சிவில் எஞ்சினியர்கள் எங்கே இருக்கிறார்கள்?

(தொடரும்)