Monday, April 30, 2012

ஆழம் மே 2012 இதழ்

கடைகளில் நாளை முதல் கிடைக்கத் தொடங்கும். இப்போது இணையத்தில் முழு பி.டி.எஃப் கோப்பாக.

ஆழம் மே 2012 மாத இதழ்

இம்மாதம் கல்வி உரிமைச் சட்டத்தை விரிவாக எடுத்துக்கொண்டு அலசியுள்ளோம். அத்துடன் பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகள். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள்.

ஆழம் முந்தைய இதழ்கள் பி.டி.எஃப்

ஆழம் இதழுக்கு ஓராண்டு அல்லது இரண்டாண்டுச் சந்தா கட்ட

மாநிலங்கள் அவையில் தெண்டுல்கர்

மாநிலங்கள் அவையின் 250 உறுப்பினர்களில் 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் பொதுவாக கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை, இதழியல் ஆகிய துறைகளில் நிபுணர்களாக இருப்பார்கள். இது தொடர்ந்து நடந்துவரும் ஒரு நிகழ்வுதான். நாம் பொதுவாக கவனிப்பவர்கள், சினிமாக்காரர்களாகவோ அல்லது ஆளும் கட்சிக்குச் சாதகமான பத்திரிகைக்காரர்களாகவோ இருப்பவர்களைத்தான்.

உதாரணத்துக்கு, சோ ராமசாமி, பாஜக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர். அவர் நியமன எம்பிக்கள் பற்றி நிறையவே எழுதியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பி ஆனவர்களைவிட நியமன எம்பிக்களுக்குக் குறைவான நேரமே பேசுவதற்கு ஒதுக்கப்படும். சம்பளம், பிற வசதிகள், மக்களுக்குச் செலவிடுவதற்கான நிதி ஆகியவை ஒரே மாதிரிதான் இருக்கும். அவர்களுக்கும் பிற மாநிலங்கள் அவை உறுப்பினர்கள்போல ஒரே வாக்குதான். எழுந்து நின்று பேசத்தான் நேரம் குறைவு.

ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டோ, நியமிக்கப்பட்டோ செல்வது பெருமைக்குரிய ஒரு விஷயமே. அப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்போது, அதுவும் கட்சிச் சார்பற்று ஒரு நியமன உறுப்பினராகச் செல்ல வாய்ப்பு தரப்படும்போது எந்தத் தனி நபரும் இதனை மறுத்துள்ளதாகத் தெரியவில்லை.

தெண்டுல்கர் நியமிக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தியாவில் மிகப் பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவு அவருக்கு இருக்கிறது. ஆனால் பலர் தெண்டுல்கரைக் கடுமையாகத் தாக்குகிறார்கள். அவர் இதனை ஏற்றுக்கொண்டது சரியல்ல என்கிறார்கள். இது மூடத்தனம். அரசியல் அமைப்புச் சட்டம் புரியாதவர்கள் பேசுவது. இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டதன்மூலம் சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் கட்சியில் ஒன்றும் சேர்ந்துவிடவில்லை; சோனியா காந்தியை ஆதரிக்கவும் இல்லை. தன் மீதுள்ள ஊழல் புகார்களை மறைக்கும்பொருட்டு காங்கிரஸ் செய்த சதிவேலை என்கிறார்கள். இருக்கட்டுமே? அதற்காக இந்தப் பெருமைக்குரிய கௌரவப் பதவியை தெண்டுல்கர் ஏற்கக்கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எனக்கு இப்போதைய காங்கிரஸ் ஆட்சியைத் துளிக்கூடப் பிடிக்கவில்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் படுமோசமாக மண்ணைக் கவ்வவேண்டும், பாஜக ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இப்போதைய காங்கிரஸ் அரசு, என்னை மாநிலங்கள் அவைக்கு நியமித்தால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.

பலர் ட்விட்டரில் தெண்டுல்கரை unfollow செய்வதாகச் சொல்கிறார்கள். என்னவோ இதனால் தெண்டுல்கருக்கு ஏதோ குறைத்துவிட்டாற்போல! ஒழியட்டும்.

“தெண்டுல்கருக்கு அரசியல், பொருளாதார, சமூக விஷயங்கள் பற்றி என்ன தெரியும்? அவர் இந்த விவாதங்களில் எப்படிப் பங்குகொள்வார்?” என்று சிலர் கேட்கின்றனர். இந்த முக்கியமான விவாதங்களில் கனிமொழி, அபிஷேக் மனு சிங்வி போன்ற சிறப்பான அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்ளட்டும். இந்தியா பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாடவேண்டுமா, கூடாதா என்று விவாதம் வந்தால் தெண்டுல்கர் அதில் கலந்துகொள்ளலாம். அல்லது பிசிசிஐ என்ற குப்பை அமைப்பைக் கலைத்துவிட்டு, புதியதாக ஓர் அமைப்பை உருவாக்கலாமா, வேண்டாமா என்று ஒரு விவாதம் வந்தால் தெண்டுல்கர் அதில் கலந்துகொள்ளட்டும். அது போதும்!

வேறு சிலரோ, விளையாடப் போனதுபோக மாநிலங்கள் அவைக்குச் செல்ல இவருக்கு நேரம் இருக்குமா என்று கவலைப்படுகிறார்கள். உண்மையில், ஊழல் தவிர ஒரு வேலையும் இல்லாமல் வெட்டியாக இருக்கும் பல உறுப்பினர்களே நிறைய அமர்வுகளுக்குச் செல்வதில்லை. சென்றாலும் கொட்டாவி விட்டுக்கொண்டு தூங்கி வழிகிறார்கள். வாயைத் திறந்து உருப்படியாக ஒன்றும் பேசுவதில்லை. சச்சின் தெண்டுல்கர் வந்தால் குறைந்தபட்சம் சுற்றி இருக்கும் பிற உறுப்பினர்களுக்காவது மகிழ்ச்சியாக இருக்கும். அது போதாதா?

Wednesday, April 25, 2012

சிங்வி + ட்விட்டர் + அந்தரங்கம்

சென்ற பதிவில் அபிஷேக் மனு சிங்வி பற்றி நான் எழுதியதற்கும் ‘கருத்து கந்தசாமி’களின் திடீர் கருத்துகளுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்டிருந்தார். எனவே இந்தப் பதிவு.

1. பிற ஸ்டிங் ஆபரேஷன்களுக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. நித்தியானந்தா விஷயத்தில் லெனின் கருப்பன் என்கிற தர்மானந்தா திட்டம் போட்டு, விடியோ கேமராவைக் கொண்டுபோய் ரகசியமாகப் பொருத்தி, படம் எடுத்திருக்கிறார். அந்தரங்கத்தை மீறவேண்டும் என்று அவர் முன்பாகவே திட்டமிட்டிருக்கிறார். ஆனால் சிங்வி விடியோவைக் கவனமாகப் பார்த்தால் அது ஏற்கெனவே சிங்வியால் அல்லது சிங்வியின் அனுமதியுடன் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு செக்யூரிட்டி கேமரா என்று தெரிகிறது. அந்த அறைக்குள் வருகிற, போகிற, இருக்கிற அனைவரையும் படம் எடுக்க என்றே அந்த கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை எளிதில் கணித்துவிடலாம்..

2. பலான மேட்டர் நடக்கும், அதனைப் படம் பிடித்து உலகுக்குக் காட்டி, சம்பந்தப்பட்டவர்களை அவமானப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் படம் எடுக்கப்படவில்லை. ஏனெனில் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் எங்குமே காட்டப்படுவதில்லை. சிங்வி போல் தோற்றம் அளிப்பவர் சட்டையைக் கழற்றுவது மட்டும்தான் தெரிகிறது. அவருடைய இடுப்புக்குக்கீழ் எதுவுமே தெரிவதில்லை. மீதம் எல்லாமே சஜெஸ்டிவ்தான்.

3. அந்தரங்கம் எங்கு மீறப்பட்டுள்ளது என்பதற்குமுன் சட்டம் எங்கு மீறப்பட்டுள்ளது என்று பார்ப்போம். இப்படி ஒரு செக்யூரிட்டி விடியோ கட்டாயம் இருக்கும் என்று அந்த டிரைவர் நபருக்குத் தெரிந்திருக்கிறது. அந்த அறைக்குள் ஏகப்பட்ட விஷயம் நடக்கும் என்று அந்த நபருக்குத் தெரிந்திருக்கிறது. அவர் செய்த காரியம், பிறருடைய சொத்து ஒன்றைத் திருடியது

4. நிறைய விடியோ கோப்புகள் திருடப்பட்டு (பிரதி எடுக்கப்பட்டு), அதிலிருந்து குறிப்பிட்ட பகுதி வெட்டப்பட்டிருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்பது டிரைவருக்குத் தெரிந்திருக்கிறது. அதை வைத்துக்கொண்டு சிங்வியை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்று அவர் முடிவு செய்திருக்கிறார். இதுவும் குற்றம். எனவே திருட்டு, பணம் கேட்டு மிரட்டுதல் ஆகியவை தொடர்பாக டிரைவர்மீது வழக்கு பதிவுசெய்வது நியாயம். சிங்வி போன்ற மிகத் திறமையான வக்கீல்கள் அதனைச் செய்வார்கள் என்று நம்புவோம்.

5. சம்பந்தப்பட்ட சிடியில் பேச்சுவார்த்தை ஒன்றும் இல்லை, வெறும் செயல் மட்டும்தான் என்றால் அந்த சிடியை வெளியிட்டவர்மீதுதான் நம் கோபம் திரும்பவேண்டும். அந்தரங்கத்தை மீறிய செயல் இது. இதனை நாம் கடுமையாகக் கண்டிக்கவேண்டும்.

6. ஆனால் இருவருக்கும் இடையில் நடந்த செயலைவிட பேச்சுவார்த்தைதான் முக்கியத்துவம் பெறுகிறது. சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர் கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்து வந்து கொடுத்துவிட்டு, இதே பேச்சைப் பேசி, அந்த சிடி வெளியானால் யாரும் அந்தரங்கம் அது இது என்று பேசமாட்டார்கள். மனோஜ் பிரபாகர் ஸ்டிங் ஆபரேஷன் அல்லது சென்ற ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான ஸ்டிங் ஆபரேஷன் ஆகியவற்றிலும் அந்தரங்கம் மீறப்பட்டது. ஆனால் அதில் செக்ஸ் இல்லை என்பதால் யாருமே அதுபற்றி வாயைத் திறக்கவில்லை. அமர் சிங் சிடி, ஷாந்தி பூஷண் சிடி ஆகியவற்றிலும் யாரும் அந்தரங்கம் பற்றிப் பேசவில்லை.

7. சிங்வியைப் பார்க்க வந்த பெண் வழக்கறிஞர் ஆரஞ்சுப் பழங்களைக் கொடுத்துவிட்டு ஜட்ஜ் வேலை எப்போது செட்டிலாகும் என்று பேசி, அந்த சிடி வெளியாகியிருந்தால் மைய நீரோட்ட ஊடகங்கள் அதனை வெளியிட்டிருக்குமா? வெறும் ஸ்பெகுலேஷன்தான் என்றாலும் இன்றைய ஊடகங்களின் தன்மையைப் பார்க்கும்போது அவர்கள் எதனை ஊதிப் பெருக்குவார்கள், எதனை மூடி மறைப்பார்கள் என்பது தெளிவு. சிங்வி எளிதாகத் தப்பியிருப்பார்.

8. Media Crooks தளத்தில் எழுதப்பட்டுள்ள ஓர் அருமையான கட்டுரையில் சொல்வதுபோல அந்த சிடியைக் காண்பிப்பதைத்தான் தில்லி உயர் நீதிமன்றம் தடை செய்தது. அதில் உள்ள பிரச்னைக்குரிய விஷயத்தை (செக்ஸை அல்ல, ஜட்ஜ் பதவியை விலை பேசுவதை) வெளியே சொல்வதில் தடை ஏதும் இருக்கவில்லை. ஆனாலும் அதைப் பற்றி எந்த மைய நீரோட்ட ஊடகமும் பேசவில்லை. குறைந்தபட்சம் அது உண்மையா இல்லையா என்று சம்பந்தப்பட்ட நபரைக் கூப்பிட்டுக் குடைந்து எடுக்கவில்லை.

9. இணையத்தில் அந்த சிடியை வெளியிட்டது நியாயம் இல்லைதான். ஆனால், முதன்மை ஊடகங்கள் என்ன செய்திருக்கவேண்டுமோ அதனைச் செய்யாத நிலையில் இணையம் வழியாக வெளியிடப்பட்ட அந்த விடியோதான் சிங்வியைக் கீழே இறக்கியது. இப்போதும் கூட மைய நீரோட்ட ஊடகங்கள் அவருடைய அந்தரங்கம் மீறப்பட்டதைப் பற்றிப் பேசுகின்றனவே ஒழிய உயர்நிலையில் இருப்போர் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பற்றியோ, நீதிபதி பதவிகள் பணத்துக்காகவும் உடலுக்காகவும் விற்கப்படுவது குறித்தோ பேசுவதில்லை என்பதுதான் பெரும் சோகம்.

Tuesday, April 24, 2012

அபிஷேக் மனு சிங்வி

அபிஷேக் மனு சிங்வி தில்லியின் டாப் நாட்ச் வக்கீல். எப்போதும் முகத்தில் சிரிப்பு இருக்கும். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர். நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் குளறுபடிகளைச் சமாளிக்க தொலைக்காட்சி சானல்களுக்குப் பேட்டி அளித்தபடி இருப்பார். தன் வாதத் திறமையால் 1=0 என்று எப்போதும் நிரூபித்தபடியே இருப்பார்.

சென்ற வாரம் இவர் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு குறுந்தகடு பல ஊடக நிறுவனங்களுக்குச் சென்றதாக ட்விட்டரில் முதலில் தகவல் கசிந்தது. உடனடியாக தில்லி உயர் நீதிமன்றம் சென்ற சிங்வி, அந்த சிடியை எந்த ஊடகமும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை வாங்கினார். அடுத்து, இந்த சிடியை மறைமுகமாக வெளியே கசியவிட்டவர் சிங்வியின் டிரைவர் என்பது தெரியவந்தது. அடுத்த இரு நாள்களுக்குள் சிங்விக்கும் டிரைவருக்கும் ஏதோ டீல் வொர்க் அவுட் ஆக, டிரைவர் நீதிமன்றம் சென்று தான் தவறான வழியில் சிடியைப் பெற்றதாகவும் அதில் சில மார்பிங் வேலைகளைச் செய்ததாகவும், இப்போது தனக்கும் சிங்விக்கும் இடையிலான பிரச்னை தீர்ந்துவிட்டது என்பதால் அந்த சிடியைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் சொன்னார்.

ஏதாவது அவல் என்றால் மெல்லக் காத்திருக்கும் அனைத்து ஊடகங்களும் மௌனம் காத்தன. நீதிமன்ற ஆணை வருவதற்கு முன்பாகவே சிடி கையில் கிடைத்த சில தொலைக்காட்சி நிலையங்களும் அமைதியாகவே இருந்தன.

இந்த விஷயம் நடந்துகொண்டிருக்கும்போது இது குறித்து கிசுகிசுக்கள் தொடர்ந்து நடந்தது ட்விட்டரில் மட்டும்தான். அந்த சிடி, தனி நபர்கள் பலருக்கும் கிடைத்து, அவர்கள் நீதிமன்ற ஆணை பற்றிய கவலையின்றி, அனானிமஸாக விடியோவை யூட்யூப் மூலம் கசியவிட்டனர். அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டிலீட் செய்ய முயன்றும் அவை மீண்டும் மீண்டும் முளைத்தபடியே இருந்தன.

நேற்று இந்த விடியோவை மிக எளிதாக யூட்யூபில் பார்க்க முடிந்தது. நேற்றுதான் அபிஷேக் மனு சிங்வி தன் கட்சிப் பதவியையும் மாநிலங்கள் அவையின் ஒரு நிலைக்குழுவின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதே நேரம் தன்மீது எந்தத் தவறும் இல்லை என்றும் வாதிட்டார்.

***

அந்த சிடியில் என்ன இருந்தது, அதில் காணப்படும் நபர் மனு சிங்விதானா, அது மார்ஃபிங் செய்யப்பட்ட விடியோவா போன்ற கேள்விகள் ஒரு பக்கம். இரு நபர்கள் தனி அறைக்குள், மனம் ஒப்பிச் செய்யும் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தப் பிறருக்கு உரிமை உள்ளதா, அது அவர்களுடைய அந்தரங்கத்தைப் பாதிக்காதா போன்ற கேள்விகள் மறு பக்கம். இடையில் இன்னொரு விஷயம் உள்ளது. அந்த சிடியில் பேசப்படும் ஒரு விஷயம்தான் அது. அதுதான் இந்த சிடியை முக்கியமானதாக்குகிறது. அந்த விஷயம் காரணமாகத்தான் சிங்வி பதவி விலகவேண்டியிருக்கிறது.

அந்த சிடியில் ஒரு பெண் வழக்கறிஞரும் சிங்வி போல் தோற்றம் அளிக்கும் ஒருவரும் சிறிது நேரம் பேசுகிறார்கள். பின்னர் சில காரியங்களைச் செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அந்தப் பெண்ணை நீதிபதி ஆக்குவது பற்றிப் பேசுகிறார்கள்.

அதிகார அடுக்கில் உயரத்தில் இருக்கும் ஒருவர், தன் ஆசைக்கு இணங்கும் ஒரு பெண்ணை நீதிபதி ஆக்க வாக்களிக்கிறார் என்றால் நீதித்துறை பற்றிய பொதுமக்கள் கருத்து என்னவாக இருக்கும்? நீதித்துறையும் ஊழல்மயமானதே என்ற எண்ணம் நமக்கு இருந்துவருவதுதான். இந்த விடியோவில் இதற்கான தெளிவான ஒரு சாட்சியம் கிடைக்கிறது. சிங்வி அல்லது அவர் போன்றவர்கள் இதற்கு முந்தைய நீதிபதி நியமனங்களில் எவ்வாறு ஈடுபட்டனர் என்பதை ஆழமாக விசாரிக்கவேண்டிய நேரம் இது.

எல்லாவிதமான ஸ்டிங் விடியோக்களுமே யாரோ ஒருவருடைய அந்தரங்கத்தை ஊடுருவி எடுக்கப்படுவதுதான். எது ஏற்புடையது, எது ஏற்புடையதன்று என்பது அந்த விடியோவில் காணப்படும் விஷயத்தைப் பொருத்தது. நித்யானந்தா விவகாரத்தில் மாய்ந்து மாய்ந்து விடியோவை வெளியிட்டுப் பேசிய ஊடகங்கள், ‘தம்மைப் போல ஒருவர்’ என்ற காரணத்தால் சிங்வியைக் காக்க முற்பட்டார்கள்.

இறுதியில் மைய நீரோட்ட ஊடகங்களை மீறி ட்விட்டரில் தொடர்ந்து நடந்த கேம்பெய்ன் காரணமாகவே சிங்வி பதவி விலக நேர்ந்துள்ளது. அதன்பிறகுதான் எதிர்க்கட்சிகளே இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கச் சம்மதிக்கிறார்கள். அதன்பிறகுதான் மைய நீரோட்ட ஊடகங்கள் இதுபற்றிப் பேச ஆரம்பிக்கிறார்கள்.

இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல, இனியும்கூட ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியா நெட்வொர்க்குகள் இந்திய அரசியலில் மிக முக்கியப் பங்கை ஆற்றப்போகின்றன. மைய நீரோட்ட ஊடகங்கள் எல்லாம் இனி இரண்டாம் பட்சம்தான்.

Saturday, April 21, 2012

சத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் கடத்தல்


இன்று மாலை 4.30 மணி அளவில் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியராக இருக்கும் அலெக்ஸ் பால் மேனனை மாவோயிஸ்டுகள் கடத்தியுள்ளனர்.

தகவல் இங்கே

தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவருக்கு 32 வயதுதான் ஆகிறது. நானும் நாகராஜனும் சென்ற ஆண்டு இவரை ராய்பூரில் சந்தித்தோம். நாகராஜனின் நண்பர்.

அலெக்ஸுடன் சத்தீஸ்கர், வளர்ச்சி, மாவோயிசம் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசியதைப் பின்னர் பதிவாக எழுதுகிறேன்.

Tuesday, April 17, 2012

மற்றொரு பொறியியல் மாணவி தற்கொலை

காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், கிண்டி (அண்ணா பல்கலைக்கழகம்) மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார். சில வாரங்களுக்குமுன் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி எழுதியிருந்தேன். இடையில் ஐஐடி சென்னையில் படிக்கும் ஒரு மாணவன்வேறு தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தார்.

இன்றைய தற்கொலையின்பின் படிப்பில் தோல்வி என்பதாகத் தெரிகிறது. காலை பரீட்சைக்குப் பிறகு நேராக ஹாஸ்டல் சென்ற மாணவி சல்வார் துப்பட்டாவால் தூக்கிட்டுக்கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்த மாணவி சிவில் எஞ்சினியரிங் துறையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழ் வழிக் கல்வியில்தான் படித்துக்கொண்டிருந்திருக்கிறார். ஆனாலும் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

[தமிழ் வழி பொறியியல் வகுப்புகள்மீது எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. சரியான பாடப்புத்தகங்கள் உள்ளனவா, அதனைக் கற்பிக்கக்கூடிய தமிழ் தெரிந்த ஆசிரியர்கள் இருக்கின்றனரா போன்ற கேள்விகளை ஏற்கெனவே நான் ஒரு பதிவில் எழுப்பியிருந்தேன்.]

சென்ற ஆண்டு இதே கல்லூரியில் ஒரு மாணவி, ‘ஆங்கிலம் தெரியவில்லை, கற்றுக்கொடு’ என்று சக மாணவர்களிடம் கேட்டிருக்கிறார். அவர்கள் பதிலுக்குக் கேலி செய்துள்ளனர். அதனைத் தாங்கமுடியாமல் அவர் வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டுவிட்டாராம்.

பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் உடனடியாகத் தங்களைக் கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டிய நேரம் இது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை டார்ச்சர் செய்வதை விட்டுவிட்டு அவர்களுக்கு ஆதரவு தரவேண்டிய நேரம் இது.

Monday, April 16, 2012

கல்வி உரிமைச் சட்டம் - கபில் சிபல்

தினமணியில் வெளியான செய்தி:
25 சதவீத மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிப்பதற்குத் தேவையான நிதியை யார் அளிக்க வேண்டும் என்று கேட்டபோது, “ரூ. 6 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை அரசின் பங்களிப்பு இருக்கும்” என்றார் சிபல். 

எனினும், இந்தத் தொகை இலவசக் கல்வி அளிப்பதற்குப் போதுமானதல்ல என்பதை ஒப்புக் கொண்ட அவர், 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மாணவர்களுக்கு இலவச சீருடையையும், புத்தகங்களையும் அரசு வழங்கும் என்றார்.

பள்ளிகள் தங்களுடைய நிதி ஆதாரங்கள் மூலம், இலவசக் கல்வியளிக்கலாம். சமூகத் திட்டங்களுக்கு நிதி தர வேண்டிய பொறுப்பு பல பெரிய நிறுவனங்களுக்கு இருப்பதால், அவற்றிடமிருந்தும் நிதியைத் திரட்ட முடியும். அதனால் பெற்றோர்கள் மீது இந்தச் சுமை ஏற்றப்படாது என்றார் கபில் சிபல்.
கபில் சிபல் போன்ற முட்டாள்கள் அமைச்சர்களாக இருப்பது பெரும் சோகம். அரசு அளிக்கும் பணம் போதாது என்பதை ஒப்புக்கொள்கிறார் திருவாளர் அமைச்சர். ஒரு பள்ளி என்ன செய்யும்? தெருத் தெருவாகப் போய் நிதி திரட்டுமா? அதற்கான சாத்தியமே இல்லை. மாறாக, தலைக்கு இவ்வளவு என்று பிற மாணவர்கள் மீதுதான் கட்டணத்தைச் சுமத்தும். அதுதான் அந்தப் பள்ளிக்கு எளிதான செய்கை. பெற்றோர்கள்மீது இந்தச் சுமை ஏற்றப்படாது என்று எதை ஆதாரமாக வைத்து இவர் சொல்கிறார்? என் முந்தைய பதிவில் கட்டணம் எப்படி உயரவேண்டியிருக்கும் என்று கணக்கு காட்டியுள்ளேன். 

முதலில் அரசு தன் முரட்டுத்தனத்தை விடுத்து, அந்தந்தக் கல்விக்கூடங்கள் என்ன கட்டணம் வைத்துள்ளனவோ அதனைக் கொடுக்குமாறு ஒப்புக்கொள்ளவேண்டும். இப்போது அரசு செய்வது வழிப்பறிக் கொள்ளை. தன் கடமையை அடுத்தவர் கடமையாக மாற்றிவிட்டு, என் இந்தக் கல்விக் கூடங்கள் இலவசக் கல்வி அளிக்கக்கூடாது என்று நீட்டி முழக்குகிறார் சிபல்.

கல்வி உரிமைச் சட்டம் - ராமதாஸ்

(கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக தமிழ்நாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து ஒரு கமெண்டரி அளிக்கலாம் என்று உள்ளேன். இன்றுமுதல் தொடரும்.)

தினமணியில் ராமதாஸ் சொன்னதாக வெளியாகியுள்ள செய்தி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

கல்விபெறும் உரிமைச் சட்டத்தை எப்படியும் முடக்கிவிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் முயற்சிக்கும். இதனை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே முடிந்து விட்டன. இதனைக் காரணம் காட்டி ஏழை மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவதை தவிர்க்க தனியார் பள்ளிகள் முயலும்.

எனவே, தனியார் பள்ளிகளில் இதுவரை செய்யப்பட்டுள்ள மாணவர் சேர்க்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும்.
 ரியாலிடிசெக் இந்தியா தளத்தில் தெளிவாக விளக்கியிருப்பதுபோல, இது “ஏழைகளுக்கான” இட ஒதுக்கீடு இல்லை. “பின்தங்கிய மற்றும் ஏழைகளுக்கான” இட ஒதுக்கீடு. இதில் யாருக்கு எத்தனை சதவிகிதம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதன்படி, பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தோர் ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் சம்பளம் பெற்றாலும் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி கிடைக்கலாம். ஆனால் முற்படுத்தப்பட்டோர் (உ.ம்: பார்ப்பனர்கள்) ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய் என்றாலும் கட்டணம் கட்டித்தான் படிக்கவேண்டும். (அப்படித்தான் இருக்கிறது சட்டத்தின் லட்சணம்.)

இதுவரையிலான உயர் கல்வி இட ஒதுக்கீட்டில் இடத்துக்கு மட்டும்தான் ஒதுக்கீடு இருந்தது. அனைவரும் ஒரே கட்டணத்தைத்தான் கட்டவேண்டும். (அட்டவணை சாதியினர் கட்டணத்தை தமிழக அரசு கட்டுகிறது. முதல்முறை கல்லூரிக்குப் போவோர் கட்டணத்தையும் தமிழக அரசுதான் கட்டுகிறது என்று நினைக்கிறேன்.) ஆனால் பள்ளிக் கல்வியில் சில மாற்றங்கள் இருக்கும்போலத் தெரிகிறது. அப்படி ஆனால் இது மிகப்பெரும் துரதிர்ஷ்டம். இது குறித்து ஒரு தெளிவை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.

பள்ளிகள் வேண்டுமென்றே ஏமாற்றும் என்கிறார் ராமதாஸ். அது அவ்வளவு எளிதல்ல. பள்ளிகள் தம் இருப்புக்கு அரசின் கருணையை நம்பியுள்ளன. அரசு உதவி பெறாத பள்ளிகளும்தாம்! எனவே துளிக்கூடப் பிடிக்கவில்லை என்றாலும் பள்ளிகள் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்.

அடுத்து, சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே இந்தப் பள்ளிகளை நடத்தவேண்டும் என்கிறார் ராமதாஸ். அரசால் இந்தப் பள்ளிகளை நடத்தமுடியாது என்பதால்தான் தன் வேலையை இவர்களிடம் அவுட்சோர்ஸ் செய்யத் தீர்மானித்துள்ளது அரசு.

Sunday, April 15, 2012

கல்வி உரிமைச் சட்டம்

மத்திய அரசு Right of Children to Free and Compulsory Education Act 2009 (RTE) என்பதனை 2009-ல் சட்டமாக இயற்றியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும் தமக்கெனத் தனி விதிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. தமிழகம் 2010-ல் விதிகளை உருவாக்கினாலும் 2011-ல்தான் அதனை அரசிதழில் வெளியிட்டது. இடையில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து சில குழுக்கள் உச்ச நீதிமன்றம் சென்றன. சென்ற வாரம்தான் உச்ச நீதிமன்றம் இதில் 2-1 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்தது.

அதன்படி, அரசின் சட்டம் செல்லும்... ஒரே ஓர் இடத்தைத் தவிர. அரசின் நிதியுதவி பெறாத சிறுபான்மைப் பள்ளிகளில் தவிர.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக யாரும் உடனடியாக நீதிமன்றம் செல்வார்கள் என்று நான் கருதவில்லை. எனவே, இந்தச் சட்டம் எங்கெல்லாம் செல்லுபடியாகும் என்று பார்ப்போம்.

1. சிறுபான்மையினர் நடத்தும் அனைத்து தனியார் பள்ளிகள் - அப்பள்ளிகள் அரசிடமிருந்து நிதியுதவி பெறுகின்றன என்றால்.
2. சிறுபான்மையினர் அல்லாதோர் நடத்தும் தனியார் பள்ளிகள் (அரசிடம் நிதியுதவி பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி)

உதாரணமாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி மேல்நிலைப் பள்ளி ஒரு கிறிஸ்தவ சிறுபான்மைப் பள்ளி. ஆனால் அரசிடம் நிதியுதவி பெறும் பள்ளி. (அரசின் நிதிமூலம்தான் ஆசிரியர்களுக்கான சம்பளம் தரப்படுகிறது.) இந்தப் பள்ளியில் RTE செல்லும். ஆனால், நம் இப்போதைய முதல்வர் ஜெயலலிதா கல்வி கற்ற சர்ச் பார்க் பள்ளிக்கு இந்தச் சட்டம் செல்லாது. அதுவும் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிதான். ஆனால் அரசின் நிதியுதவியைப் பெறவில்லை.

மாறாக, பத்மா சேஷாத்ரி பள்ளிகள், பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளி (என் மகள் படிக்கும் பள்ளி), வித்யா மந்திர் போன்ற பள்ளிகள் எவையும் அரசின் நிதி உதவியைப் பெறுவதில்லை என்றாலும் RTE இங்கெல்லாம் செல்லுபடியாகும்.

ஒருசில பள்ளிகள் சிறுபான்மைப் பள்ளிகளா என்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. உதாரணம்: சென்னையில் பஞ்சாபி சமூகத்தினரால் நடத்தப்படும் கில் ஆதர்ஷ், மலையாளி சமூகத்தினரால் நடத்தப்படும் ஆசான் மெமோரியல் போன்றவை. இவை மொழிச் சிறுபான்மையினர் பள்ளிகள் என்றால் இங்கும் RTE செல்லுபடியாகாது.

ராமகிருஷ்ண மடத்தின் பள்ளிகள், ஆரிய சமாஜத்தினர் நடத்தும் டி.ஏ.வி பள்ளிகள் ஆகியவை சிறுபான்மையில் சேரா.

கல்வி உரிமைச் சட்டம் என்பதை வெறுமனே தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்பதாகக் குறுக்கக்கூடாது. ஆனால் அதுதான் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. அது தாண்டி அந்தச் சட்டத்தில் வேறு பலவும் உள்ளன. இச்சட்டம், அரசின் பிற சட்டங்களைப் போலவே முழுமையாகச் சிந்தித்து, ஓட்டைகள் எல்லாவற்றையும் அடைத்து, அழகான முறையில் உருவாக்கப்பட்டதல்லதான். ஆனால் இந்த ஓட்டைகளையெல்லாம் தாண்டி, அதன் அடிப்படையைப் புரிந்துகொள்வது நல்லது.

முதலில் அரசு மக்களுக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் எட்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி, அதுவும் அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில். அருகில் என்றால் என்ன என்பதையும் சட்டம் தெளிவாக்குகிறது. 1-5 வகுப்பு என்றால், மக்கள் இருப்பதற்கு 1 கிமீ தூரத்துக்கு உள்ளாக. 6-8 என்றால் 3 கிமீ தூரத்துக்கு உள்ளாக. அப்படி ஒரு பள்ளி இல்லை என்றால் மக்கள் நீதிமன்றம் சென்று அரசின்மீது வழக்கு தொடுக்கலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் எம்மாதிரியான வசதிகள் இருக்கவேண்டும், அதற்குக் குறைந்தபட்சம் எவ்வளவு பரப்பளவு வேண்டும், அதில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதிகள் என்னென்ன என்று பலவற்றை இந்தச் சட்டம் நிர்ணயிக்கிறது. இந்த வரைமுறைக்குள் வராத பள்ளிகளுக்கான அனுமதியை ஓர் அரசு நீக்கலாம்.

அடுத்து, தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குள் வரும் அனைத்துத் தனியார் பள்ளிகளும் தம் ஆரம்ப வகுப்பில் 25% இடங்களை அரசு தீர்மானிக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும். இந்தக் குழந்தைகள் எந்த பொருளாதார மட்டத்தில், எந்தச் சமூக மட்டத்தில் இருப்பார்கள் என்பதற்கான விதிகளை ஒவ்வொரு மாநிலமும் தமக்கென வரையறுத்துக்கொள்ளலாம். பல பத்திரிகைகள் எழுதுவதுபோல, இம்மக்கள் எல்லாம் “ஏழைகள்” அல்லர். குறிப்பிட்ட பலர் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும், பிறர் மட்டும் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்திலிருந்தும் இருப்பார்கள் என்று தெரிகிறது. தமிழகத்தில் யாருக்கு எத்தனை சதவிகிதம் என்பது தொடர்பான ஆவணம் எதையும் நான் இதுவரை பார்க்கவில்லை.

இட ஒதுக்கீடு மட்டுமல்ல, அது தவிர, அவர்களுக்கான கட்டணத்தை அரசே கொடுக்கும். அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் இத்தனை என்று ஏற்கெனவே செலவு செய்துவரும் கட்டணம் அல்லது அந்தக் கல்விக் கூடத்தின் கட்டணம் இரண்டில் எது குறைவோ அதுதான் ஒரு குழந்தைக்கு என்று செலுத்தப்படும். இந்தக் கட்டணத்தை அரசே ஆண்டுக்கு இரு முறை (செப்டெம்பர், ஜனவரி) நேரடியாக பள்ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தும். எந்தப் பள்ளியும் இந்தச் சிறார்களை இரண்டாம் பட்சமாக நடத்தக்கூடாது என்று விதி தெளிவாகச் சொல்கிறது.

இது ஏழைகளுக்கு/பிற்படுத்தப்பட்டோருக்கு மாபெரும் வாய்ப்பு என்று சிலரும், இதனால் பெரும் குழப்பம் ஏற்படப்போகிறது என்று சிலரும் சொல்கிறார்கள். இரண்டிலும் உண்மை உள்ளது.

முதலில், சிறுபான்மைப் பள்ளிகளுக்கான விலக்கு என்பதை மத்திய அரசு கொண்டுவரவில்லை. அவர்களுடைய சட்டம் அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்குவதாகத்தான் இருந்தது. ஆனால், அப்பள்ளிகள்தாம் உச்ச நீதிமன்றம் சென்று விலக்கு கேட்டு வழக்கில் வென்றுள்ளன. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பின்மூலம் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு ஒருவித சிறப்புச் சலுகை கிடைத்துள்ளதாகவே கருதவேண்டும். டி.ஏ.வி கோபாலபுரம் அல்லது சர்ச் பார்க் கோபாலபுரம் பள்ளியில் தன் மகளைச் சேர்க்க விரும்பும் ஓர் உயர் வகுப்புப் பெற்றோர், ‘கண்ட கண்ட’ குழந்தைகளுடன் தன் குழந்தை வளரக்கூடாது என்று நினைப்பாரேயானால் இனி டி.ஏ.வி பள்ளியைக் கருத்தில் கொள்ளமாட்டார். மாறாக சர்ச் பார்க் போன்ற கிறிஸ்தவப் பள்ளிகளை மட்டுமே கருத்தில் கொள்வார்.

கல்வி வசதிகளை அளிப்பதில் டி.ஏ.வி போன்ற பள்ளிகள் உடனடியாக அதிகக் கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் பெறப்போகும் கட்டணம் குறையும். உதாரணமாக, டி.ஏ.வி ஆண்டுக் கட்டணம் ரூ. 25,000 என்றும் ஆண்டுக்கு 200 புதிய மாணவர்களை எடுத்துக்கொள்வார்கள் என்றும் வைத்துக்கொண்டால் வரும் ஆண்டில் 150 மாணவர்களைத்தான் அப்படி எடுத்துக்கொள்ளலாம். மீதம் 50 மாணவர்கள் அரசின் ஒட ஒதுக்கீட்டில் வருபவர்கள். அவர்களுக்காக அரசு ஆண்டுக்கு ரூ. 8,000 மட்டுமே தரும். எனவே வருமான இழப்பு என்பது 50*(25,000 - 8,000) = ரூ. 8.5 லட்சம். இந்தப் பள்ளி நியாயமாக ‘லாப நோக்கு’ இல்லாமல் நடக்கிறது என்றால், இந்தப் பணத்தை எங்கிருந்தாவது பெற்றாகவேண்டும். அதனை மீண்டும் பிற 150 மாணவர்கள்மீதுதான் போடவேண்டியிருக்கும். அப்படியானால் அவர்கள் அனைவரும் ஆளுக்கு ஆண்டுக்கு ரூ. 5,666 அதிகம் தரவேண்டியிருக்கும். அதாவது 25,000 ரூபாய் என்பதற்கு பதிலாக 30,666 ரூபாய் தரவேண்டியிருக்கும். சர்ச் பார்க் போன்ற பள்ளிகளுக்கு அந்தக் கவலை ஏதும் கிடையாது.

அரசு அதிகாரிகளிடமிருந்து டி.ஏ.வி போன்ற பள்ளிகள் இன்ஸ்பெக்‌ஷன் என்ற வகையில் வீண் தொல்லைகளுக்கு ஆளாவார்கள். சர்ச் பார்க் போன்ற பள்ளிகளுக்கு இந்தத் தொல்லை இருக்காது.

தம்மை மைனாரிட்டி பள்ளிகளுடன் ஒப்பிட்டுக்கொள்ளாமல் பார்த்தால், தனியார் பள்ளிகளுக்குக் கீழ்க்கண்ட பிரச்னைகள் உள்ளன:

1. ஆண்டு வருமானத்தில் வரும் குறைபாடு. அதனை எப்படிச் சரிக்கட்டுவது என்ற தெளிவின்மை.
2. மாணவர்கள் சேர்க்கை விஷயத்தில் அரசின் தலையீடு.
3. இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களைப் பிற மாணவர்களோடு சேர்த்துப் படிக்க வைப்பதில் இருக்கும் பிரச்னைகள். இதனை மிகப் பெரியதாகப் பல பள்ளிகளும் பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால் என் கருத்தில், இங்குள்ள பிரச்னை என்பது நம் கல்வித்துறையில் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளான ஆங்கில மீடியம் மற்றும் கல்வியை ஆசிரியர்கள் தாம் கற்றுத்தராமல் பெற்றோர்களுக்கு அவுட்சோர்ஸ் செய்வது ஆகியவையே.

இதில் கடைசி விஷயத்தை மட்டும் பார்ப்போம். இன்று அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுமே ஆங்கில மீடியத்தில் கல்வி கற்பிப்பவை. அதுதான் சிறப்பான கல்வி என்று அவர்களும் சொல்லி நம் மக்களும் நம்பி, அதையே பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். ஆங்கில மீடியத்தில் இன்று படிக்கும் பெரும்பாலான தமிழ்க் குழந்தைகளுக்கு ஒன்றுமே புரிவதில்லை. எங்கெல்லாம் பெற்றோர்களே நல்ல ஆங்கிலம் பேசக்கூடிய நிலையில் இருக்கிறார்களோ அந்தக் குழந்தைகள் மட்டுமே ஆங்கிலக் கல்வியின் உண்மையான பயனை அடைகிறார்கள். மீது எல்லோருமே அரைகுறைக் கல்விதான் பெறுகிறார்கள்.

அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வி இருந்துவருகிறது. அதில் சேர உள்ள பல பிள்ளைகள் இப்போது தனியார் கல்விக்கூடங்களில் ஆங்கில வழிக் கல்விக்குச் செல்வார்கள். அவர்கள் அனைவரது வாழ்க்கையும் மொத்தமாகப் பாழாகப் போகிறது என்பதில் எனக்குத் துளிக்கூடச் சந்தேகம் இல்லை.

அடுத்து, கல்வியைப் பெற்றோர்களுக்கு அவுட்சோர்சிங் செய்வது. இன்று என் பெண் படிக்கும் பள்ளி முதற்கொண்டு எனக்குத் தெரிந்த அனைத்து “உயர்தர” கல்வி நிறுவனமும் சார்ட், ப்ராஜெக்ட், கட்டுரை எழுதுவது என்று பலவற்றையும் பலவந்தமாகக் குழந்தைகள்மீது திணிக்கிறார்கள். அவை அனைத்தையும் இந்தக் குழந்தைகளால் தாமாகவே செய்யமுடியாது என்று அனைவருக்குமே தெரியும். கொஞ்சம்கூடக் கூசாமல், இவற்றையெல்லாம் செய்து தருவது பெற்றோர்கள்தாம். இணையத்தில் படங்களைத் தேடி, அவற்றை வண்ணத்தாளில் அச்சிட்டு, கீழே விளக்கங்களை (ஆங்கிலத்தில்) எழுதித் தருவது பெற்றோர்கள்தாம். கட்டுரைகளை எழுதித் தருவது பெற்றோர்கள்தாம். அவற்றைப் பார்த்து காப்பியடித்து எழுதிச் செல்வது மட்டும்தான் பிள்ளைகள்.

அது தவிர வீட்டுப்பாடம் செய்வதற்கும் பெற்றோர்களின் உதவி தேவைப்படுகிறது. இவற்றில் ஈடுபட முடியாத பெற்றோர், டியூஷன் வைக்கவேண்டியிருக்கும். அப்படி டியூஷன் வைத்தும், தனிப்பட்ட கவனம் செலுத்தப்படாததால் சிறு பிள்ளைகள் தடுமாறுவார்கள். அதன் விளைவாக விரக்தி அடையும் ஆசிரியர்கள், வகுப்பில் இப்பிள்ளைகள்மீது கோபத்தை வெளிக்காட்டுவார்கள்.

இப்பிள்ளைகள் தம்மீது வேண்டுமென்றே திணிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் இந்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் ஏற்பட்டால், இப்பிள்ளைகள் என்ன பாடு படுவார்களோ என்று அச்சமாக உள்ளது.

***

அனைவருக்கும் தரமான கல்வி என்ற நோக்கம் சரியானதாக இருந்தாலும், அதிகம் யோசிக்காமல் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தினால் அடுத்த சில வருடங்களில் குழப்பமும் வேதனையும்தான் மிஞ்சும் என்பது என் கருத்து.

Thursday, April 05, 2012

ஆழம் - கடந்த மூன்று இதழ்கள் முழு pdf

ஆழம் இதழ் - பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத இதழ்களின் முழு பிடிஎஃப் கோப்பு கீழே தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

முதல் இரண்டும் சோதனை இதழ்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏப்ரல் மாத இதழிலிருந்துதான் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பிக்கிறது.

ஆழம் பிப்ரவரி 2012
ஆழம் மார்ச் 2012
ஆழம் ஏப்ரல் 2012

Note: Clicking on the above link in Chrome browser or Safari browser in a PC or Mac does not display the Tamil characters properly. Right click and save the file and open it in PDF viewer software such as Adobe Acrobat etc. to view the files. You do not need to have any fonts.

Display in iPad etc. may not work, if you click on the file directly. Here again, try to download the file and then open it in appropriate PDF viewer.

The problem is not with the way the PDF files have been made but the manner in which the above software are trying to render these PDF files. We are trying to understand how to make this work in the above mentioned software.

I am told, this can't be viewed in Ubuntu as well, but works in Android.

In this case, please wait for Unicode version, which will be uploaded over the next couple of days.

இந்த இதழ்களை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள். படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள். இதழ் எப்படி இருந்தால் உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லுங்கள். 

ஆழம் ஏப்ரல் 2012 இதழில்


1. அதிமுக அரசு: 300 நாள்கள் 30 விஷயங்கள். முந்நூறு நாள்களை நிறைவு செய்திருக்கும் அதிமுக அரசின் செயல்பாடுகள், ஒரு பார்வை. அருட்செல்வன்

ஈழப் பக்கங்கள்

2. ஐ.நா தீர்மானம் போதுமானதா? தீபச்செல்வன்
3. ஐ.நா தீர்மானம், இந்தியாவுக்கு அவமானம். அரவிந்தன் நீலகண்டன்
4. ஐ.நா தீர்மானம், ஈழத் தமிழர்களின் காலை வாரிய ‘கம்யூனிச நாடுகள்’. கலையரசன்
5. தனி ஈழம் தீர்வல்ல. சென்னையில் சி.பி.எம் 30 ஜூலை 2011 அன்று நடத்திய இலங்கைத் தமிழர் சம உரிமை மாநில சுயாட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். கி.ரமேஷ்

பெட்டிச் செய்திகளாக: ஐ.நா தீர்மானம், ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்து இலங்கை பேசியது, சானல் 4 ஆவணப்படங்கள்.

தமிழகம்


6. சங்கரன்கோவில், சில தரிசனங்கள். ஆர். முத்துக்குமார்
7. வளர்ந்த நாடாகுமா தமிழகம்? விஷன் 2023. பத்ரி சேஷாத்ரி
8. கூடங்குளம்: முற்றும் ஆனால் தொடரும், செல்லமுத்து குப்புசாமி
9. கூடங்குளம் இயங்கவேண்டும். சங்கர்
10. திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால்... பேராசிரியர் மா. நன்னனுடன் க.குணசேகரன் நேர்முகம்
11. ஒரு கோடிக்குப் பின்னால், (விஜய் டிவியின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியின் வரலாறு) ச.ந.கண்ணன்

இந்தியா

தொழில்

12. பட்ஜெட் 2012: திக்குத் தெரியாமல் திணறும் அரசு. நாராயணன்
13. பருத்தி பாலிடிக்ஸ். துருவன்
14. வறுமைக்கோடு: சரியும் தவறும். எஸ்.எல்.வி. மூர்த்தி
15. வோடஃபோன் vs இந்திய அரசு. வெற்றி யாருக்கு? நரசிம்மன்
16. மருத்துவ உலகில் அதிரடி. கட்டாய லைசென்ஸ். இம்மானுவேல் பிரபு (தொடர்புள்ள சில பெட்டிச் செய்திகள்)
17. பறக்கத் தடுமாறும் விமானங்கள், பல்லவன்

அரசியல், சமூகம்

18. அகிலேஷ் யாதவ்: மாற்றத்தின் பேரூற்று, சி. சரவண கார்த்திகேயன்
19. மாயாவதி, யானையும் தலித் அரசியலும், இளம்பரிதி
20. நார்வே குழந்தைகளின் எதிர்காலம் என்ன? சிறில் அலெக்ஸ்
21. ஒலிம்பிக்ஸைப் புறக்கணிக்கவேண்டும். எஸ்.பி.சொக்கலிங்கம்
பிற
22. உள்ளும் புறமும் (உலக, இந்திய நடப்புகள், சிறு சிறு செய்திகளாக)
23. IPL கொண்டாட்ட வெளி
24. நகைச்சுவை: ‘ஐயையோ தாத்தா!’, வாசுதேவ் சிவகுமார்
25. நூல் அறிமுகம்: உயிர்த்தெழும் சரஸ்வதி நதி, மிஷல் தனினோ எழுதியுள்ள The Lost River, On the trail of the Sarasvati என்ற நூலின் தமிழாக்கமான ‘சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு’ பற்றி. பி.ஆர்.மகாதேவன்
26. ஆஃப்கனிஸ்தானில் அமெரிக்க ராணுவம், 16 பேரைக் கொன்றவன், சத்யா

இந்தியாவில் இதழைப் பெற ஆண்டுச் சந்தாவை இணையம் வழியாகக் கட்டலாம். ஓராண்டு | ஈராண்டுகள்

(வெளிநாடுகளில் அச்சு இதழைப் பெற என்ன அஞ்சல் செலவாகும் என்பது தெரிந்தவுடன் அதற்கான இணைப்பையும் தந்துவிடுகிறேன்.)

Wednesday, April 04, 2012

ஆழம் - கிழக்கிலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை

கிழக்கு பதிப்பகத்திலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை இந்த மாதத்திலிருந்து வெளியாகிறது. அடுத்த இரண்டு நாள்களில் பல கடைகளில் கிடைக்கும். இதற்குமுன் பிப்ரவரி, மார்ச் இதழ்கள் இரண்டைச் செய்திருந்தோம். அவற்றை வெள்ளோட்டமாகச் சிலருக்கு மட்டும் அனுப்பிவைத்திருந்தோம். இந்த ஏப்ரல் இதழ் விற்பனைக்குக் கடைகளில் கிடைக்கும்.


இதழ் 80 பக்கங்கள் கொண்டது. முழுதும் வண்ணத்தில், வழ வழ தாளில்.

இதில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் இணையத்தில் வெளியாகும். அந்தத் தளத்தை விரைவில் கொடுக்கிறேன். தனித் தனிக் கட்டுரைகளாக இணையத்தில் இலவசமாகப் படிக்கலாம். அல்லது முழு பிடிஎஃப் கோப்பாக இறக்கிக்கொண்டு உங்கள் கணினியிலும் படிக்கலாம்.

ஆழம் என்பது அரசியல், சமூக, பொருளாதார நடப்பு நிகழ்வுகள் குறித்த இதழ். சினிமா, விளையாட்டு, இலக்கியம் போன்றவை குறைவாகத்தான் இருக்கும்.

ஆழம் என்ற பெயர் ஏன்? இன்றைய தமிழ் செய்தித்தாள்களிலும் வார/மாத இதழ்களிலும் செய்திகளை அலசும் ஆழம் போதவில்லை என்பது எங்கள் கருத்து. அதனைக் கொண்டுவரும் ஒரு முயற்சிதான் இது. செய்திதான் கனமாக இருக்கவேண்டுமே தவிர, அது எழுதப்பட்டிருக்கும் மொழி இலகுவாக இருக்கவேண்டும் என்பது நோக்கம். அதனை அடைகிறோமா இல்லையா என்பதைச் சொல்லவேண்டியது நீங்கள்தான்.

 
இணைய வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறோம். செய்து முடித்து கடந்த மூன்று மாத இதழ்களும் ஏற்றப்பட்டதும் தகவல் சொல்கிறேன்.

அச்சு இதழை உடனே வாங்க விரும்புபவர்கள் சென்னை, தி.நகரில் உள்ள கிழக்கு ஷோரூமுக்குச் செல்லலாம். முகவரி:

கிழக்கு பதிப்பக ஷோரூம்
பி.எம்.ஜி காம்ப்லெக்ஸ் (ரத்னா பவன் ஹோட்டலுக்கு எதிரில், தி.நகர் பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில்)
தெற்கு உஸ்மான் சாலை
தி. நகர்
போன்: 4286-8126