Thursday, May 31, 2012

இந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு திட்டம்

சமீபத்தில் நான் லண்டன் மாநகரம் சென்றிருந்தேன். பெரும்பாலும் தரையடி ரயில் வண்டிகளைப் பயன்படுத்தியே ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்றோம். தொலை நகரங்களுக்கும் (உ.ம்: லண்டன் கிங்ஸ் கிராஸ் => கேம்பிரிட்ஜ்) ரயிலிலேயே சென்றோம்.

ஹீத்ரூ விமான நிலையத்தில் இறங்கியதும் ரயில் அட்டை (ஆய்ஸ்டர் கார்ட்) ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டோம். அதைக்கொண்டு அங்கிருந்த எட்டு நாள்களும் உள்ளூர் ரயில், பேருந்து என எதிலும் வேண்டிய அளவு பயணம் செய்ய முடிந்தது. ஓரிரு நாள்கள் கழித்து என் மகள் ரயில்வே மேப்பை வைத்துக்கொண்டு எங்கு இறங்கி எந்த வரிசைக்கு மாற்றிச் சென்றால் சேரவேண்டிய இடத்துக்குப் போகலாம் என்பதை நன்கு அறிந்துகொண்டுவிட்டாள். அவ்வளவு எளிது, இந்தச் சேவையைப் பயன்படுத்துவது.

அவ்வப்போது நெரிசல் இருந்தாலும், பொதுவாக தரையடி ரயில்களில் பயணம் செய்வது மிகவும் வசதியானதாகவே உள்ளது.

தொலைதூர ரயில் பயணத்துக்கு சீட்டு வாங்குவது எளிது. ரயிலில் இடம் கிடைப்பதும் எளிது.

ரயில்வே நிலையங்களும் சரி, ரயில்களும் சரி, நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன.

லண்டனின் தரையடி ரயில் சேவை இன்றோ நேற்றோ உருவானதல்ல. 1863-ல் உருவாகத்தொடங்கியது.

***

இந்திய ரயில்வேயையும் பிரிட்டிஷ்காரர்கள்தான் தொடங்கிவைத்தனர். இன்று பல லட்சம் பேர் இந்திய  ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆனால் இந்திய ரயில்களின் தரம் உயரவே இல்லை. தொலைதூர ரயில் சேவையை மட்டுமே பிரதானமாகச் செய்துவந்தாலும் இந்திய ரயில்வே சில நகரங்களில் உள்ளூர் சேவையைச் செய்கிறது. கொல்கத்தா தரையடி மெட்ரோ, சென்னை, மும்பை நகரங்களில் தரைக்குமேலான ரயில் சேவை ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம்.

இந்தியாவில் ரயில் சேவையை சட்டப்படி இந்திய ரயில்வே மட்டும்தான் தரமுடியும். தில்லி மெட்ரோ சேவையைக் கொண்டுவரும்போதுதான் நாடாளுமன்றத்தில் சட்ட மாறுதல் கொண்டுவரப்பட்டு, தில்லி மெட்ரோ கார்பொரேஷன் தனியாக, தானாக ரயில் தண்டவாளங்களை அமைத்து சேவையைத் தரலாம் என்று அனுமதி தரப்பட்டது. அதேபோல ஒவ்வொரு நகரம் மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டுவர முடிவு செய்யும்போதும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரவேண்டும். அப்படித்தான் சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே மத்திய அரசின் தனியான ஒரு துறை. தொலைபேசிச் சேவையை ஒரு காலத்தில் வழங்கிய தொலைதொடர்புத் துறை போன்றது. இதற்கென தனி பட்ஜெட் ஆண்டாண்டு போடப்படும். இந்தத் துறை மமதா பானர்ஜி போன்றவர்கள் கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மாட்டி சிக்கித் தவிக்கிறது. ரயில்கள் தேவைக்கேற்றவாறு அதிகரிக்கா. மாறாக அரசியல் காரணங்களுக்காக ஓடும். தென்னகத்துக்கு 100 ரயில்கள் அதிகம் வேண்டும் என்றால் அது நடக்காது. பட்ஜெட்டில் 10 ரயில்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலே அதிகம்.

இந்திய ரயில்களில் உள்ள திறந்த கக்கூஸ் காரணமாக ரயில் நிலையங்களும் ரயில் பாதைகளும் அசிங்கத்தின் உச்சமாக உள்ளன. சுகாதாரம் பற்றிய கவலையே யாருக்கும் இல்லை.

அதிவேக ரயில் பாதை, விபத்துகள் இல்லாத ரயில் பயணம், வேண்டிய அளவு இடங்கள், ரிசர்வேஷனுக்கு அடிபிடிச் சண்டை இல்லாதது, ஒழுங்காக இயங்கும் இணைய டிக்கெட் முன்பதிவு, கஸ்டமர் சேவை, உயர்தர ரயில் நிலையங்கள் என்று நமக்கு எத்தனையோ தேவைகள் உள்ளன. ஆனால் இன்றைய நிலையில் இது எதுவும் நடக்கப்போவதில்லை.

அதைவிட மோசம், இன்றைய நிலையில் ரயில்வே தொடர்ந்து லாபம் சம்பாதிக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. லாலு பிரசாத் யாதவ் எக்கச்சக்க லாபம் காட்டினார். ஆனால் அதெல்லாம் கண் துடைப்பு என்றும் சொல்கிறார்கள். இப்போது கட்டணத்தை ஏற்றுவதை மமதா தடுத்துள்ளார். அமைச்சரை மாற்றியுள்ளார். தொலைத்தொடர்புத் துறைபோல ரயில்வேயும் போண்டி ஆக நேரிடலாம்.

ரயில்வேயால் மக்களுக்கு நிஜமாகவே நல்லது நடக்கவேண்டும் என்றால் கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்தாகவேண்டும்.

1. ரயில்வே சொத்துகள் அனைத்தையும் ஒரு கம்பெனிக்கு மாற்றவேண்டும். அந்த கம்பெனியின் 100% பங்குகள் ஆரம்பத்தில் மத்திய அரசிடம் இருக்கும். இந்த கம்பெனிக்கு மேனேஜிங் டைரக்டர், இயக்குனர்கள், சேர்மன் எல்லாம் இருப்பர். ரயில்வே அமைச்சரை பெட்ரோலியம் அமைச்சர், தொலைத்தொடர்பு அமைச்சர் போல ஆக்கிவிடவேண்டும். வருட பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதெல்லாம் தேவையில்லை.

2. இந்த மெகா இந்திய ரயில்வே லிமிடெட் கம்பெனியைப் பல கம்பெனிகளாகப் பிரிக்கவேண்டும்.
    (அ) இந்திய ரயில் டிராக் லிமிடெட்: இது நாடு முழுவதும் உள்ள ரயில் பாதைகளைப் பராமரிக்கும். புதிய ரயில் பாதைகளைப் போடும். இந்தப் பாதைகளைப் பயன்படுத்தும் ரயில்கள் அனைத்தும் இந்திய ரயில் டிராக் லிமிடெடுக்குக் கட்டணம் கட்டும்.
    (ஆ) இந்திய ரயில் டிராஃபிக் கண்ட்ரோல் அத்தாரிடி: இது ஒரு கம்பெனியாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் போல ரயில் டிராக்கில் எந்த வண்டி எங்கே உள்ளது என்று சிக்னல் நிர்வாகத்தைச் சரியாகச் செய்யவேண்டும். இதன் பராமரிப்புக்கான பணமும் ரயில் வண்டிகள் கட்டணமாகக் கொடுத்துவிடும்.
    (இ) ரயில் சேவை கம்பெனிகள்: மொத்த இந்தியாவைப் பல வட்டங்களாகப் பிரித்து (தொலைத்தொடர்பு வட்டங்கள்போல) ஒரு வட்டத்துக்கு ஒரு கம்பெனி என்று உடைக்கவேண்டும். இப்போதைக்கு அனைத்துமே 100% அரசு நிறுவனங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதில் உள்ளூர்ச் சேவை ரயில்கள், மாநிலச் சேவை ரயில்கள், மாநிலங்களுக்கு இடையிலான தொலைதூரச் சேவை ரயில்கள் ஆகியவற்றுக்குத் தனித்தனிக் கம்பெனிகள் இருக்கும். உதாரணமாக, சென்னை உள்ளூர்ச் சேவை மின்சார ரயில்கள் அனைத்தையும் தனியாகப் பிரித்து ஒரு தனி கம்பெனியின்கீழ் இயக்கவேண்டும். அதாவது தாம்பரம்-பீச், செண்ட்ரல்-திருவள்ளூர், பீச்-வேளச்சேரி ஆகிய லைன்களில் ஓடும் ரயில்களைப் பிரித்து ஒரு கம்பெனியாக்கி, அதனை சென்னை மெட்ரோ ரயில் கார்பொரேஷனுக்கு விற்றுவிடலாம். மெட்ரோ ரயில் தன் புதிய தடத்தை ஏற்கெனவே இருக்கும் உள்ளூர்த் தடங்களுடன் சேர்த்து, ஒரே டிக்கெட்டில் இவை அனைத்திலும் பயணம் செய்யுமாறு செய்யலாம். அதேபோல தமிழ்நாடு முழுமைக்கும் ரயில் சேவையை தமிழ்நாடு ரயில் சேவை கார்பொரேஷன் செய்யும். தமிழ்நாட்டிலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தில்லி போன்ற தொலைதூர இடங்களுக்குச் செல்லும் ரயில்களை தனி ஒரு நிறுவனம் (அல்லது நிறுவனங்கள்) செலுத்தும்.
    (ஈ) ரயில்வே நிலையங்களைத் தனித்தனி கம்பெனிகளாக மாற்றிவிடலாம். விமான நிலையங்கள் போல.

அடுத்தகட்டமாக, சில இடங்களில் தனியாரை அனுமதிக்கலாம். (பிறகு முழுமையுமே தனியார்மயம் ஆக்கிவிடலாம்.) முதலில் சில நகர ரயில் நிலையங்களை தனியார்மயம் ஆக்கலாம். அடுத்து தொலைதூர ரயில் சேவைக்காக தனியாரையும் அனுமதிக்கலாம். நகர  மெட்ரோ சேவையை அரசு தன்னிடமே வைத்துக்கொள்ள முடிவு செய்யலாம்.

இதனால் இந்திய ரயில்வேக்குத் தேவையான அளவு முதலீடு வரும். தனியார்மயத்தின் அடுத்த கட்டம் அந்நிய முதலீடு. ஆரம்பத்தில் 26% என்று தொடங்கலாம்.

இதுவெல்லாம் நடந்தால்தான் உலகத்தரம் வாய்ந்த ரயில்வே சேவை நமக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் அடுத்த ஐம்பதாண்டுகள் கழித்தும் இதே நிலையில் பின்தங்கியேதான் இருப்போம்.

ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று சென்றிருந்தேன். நிகழ்ச்சியின் நோக்கம், ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்ற ஆங்கிலேயர், சென்னை பல்லாவரம் அருகே கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்து 149 ஆண்டுகள் முடிவடைந்து, 150-வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாட.

சென்னை பல்லாவரம் மலையடிவாரத்தில் தோண்டிய இடமெல்லாம் கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. விதவிதமான கற்கோடரிகள். இவை ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தவை அல்ல. லட்சக்கணக்காண ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. 2 லட்சம் ஆண்டுகள் முதல் 25 லட்சம் ஆண்டுகள் வரை இருக்கலாம். பழைய கற்காலம் (பாலியோலித்திக்) என்று சொல்லப்படும் இந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஹோமினின் இனங்கள் பூமியில் வாழ்ந்தன.

இன்று நாம் ஹோமோ சாப்பியன் என்று சொல்லும் மனித இனத்துக்கு முந்தைய ஹோமோ எரக்டஸ், ஹோமோ நியாண்டர்தாலன்ஸ், அதற்கும் முந்தைய ஆஸ்ட்ரலோபிதிசீன் போன்ற இனங்கள்கூடக் கற்கருவிகளைச் செய்து பயன்படுத்தின என்று சொல்கிறார்கள். இந்தக் கருவிகள் உலகின் பல பாகங்களில் கிடைக்கின்றன.

சமீபத்தில் நான் பிரிட்டிஷ் மியூசியம் சென்றிருந்தபோது உலகின் பல பாகங்களில் கிடைத்துள்ள கற்கருவிகளைப் பார்த்தேன். என்ன அற்புதமான கற்கோடரிகள்! இவை சில ஆயிரம் ஆண்டுகள் முதல் பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவை. விதவிதமான கற்கள். கருங்கல், ஜேட், ஃப்ளிண்ட் என வகைவகையான கற்கள். சிலவற்றைத் தட்டித் தட்டிச் செதுக்கினால் கருவி வரும், சிலவற்றை சாண்ட்பேப்பர் போல எதையோ கொண்டு இழைத்தால்தான் கோடரியைச் செய்யமுடியும்.

ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் பல்லாவரத்தில் கண்டெடுத்த கற்கருவிகளைக் கண்டு அதிசயித்து, இந்த இடத்தில் ஒரு தொழிற்சாலையே இருந்திருக்கவேண்டும் என்றார். Madras Stone Tools Factory என்றே இந்த இடத்தை அழைத்தார்.

இன்றைய தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைத்துள்ளது. இன்னும் தோண்டினால் இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களில் கிடைக்கும். பெரிய கற்காலப் புதைகுழிகள் ஏகப்பட்ட இடங்களில் உள்ளது. பாறை ஓவியங்கள் இன்னும் பலப்பல இடங்களில்.

நேற்றைய கூட்டத்தில் ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் பற்றியும் மாந்தனின் பரவல் பற்றிய தன் சில கருத்துகளையும் ஒரிஸ்ஸா பாலு பேசினார். நல்ல பிரசண்டேஷன் என்றாலும் கொஞ்சம் நீண்டுவிட்டது. அதில் சொல்லப்பட்ட அனைத்தும் வந்தவர்களைச் சென்றடைந்ததா என்று தெரியவில்லை. பாலு ஒரு தொழில்முறை ஆராய்ச்சியாளர் அல்ல என்றாலும் தன் பேரார்வம் காரணமாகத் தன் சொந்தச் செலவில் பல இடங்களுக்கும் சென்று சொந்த முயற்சியில் ஆராய்ச்சி செய்யும் ஆர்வலர். கடல் பற்றிய ஆராய்ச்சியே அவருடைய முதன்மைக் களன். இந்தியாவிலிருந்து, அதுவும் குறிப்பாகத் தமிழகத்திலிருந்து உலகம் முழுமைக்கும் மக்கள் சென்றிருக்கக்கூடும் என்ற கருத்தை பாலு முன்வைக்கிறார். வட ஆப்பிரிக்காவிலிருந்துதான் மக்கள் பல இடங்களுக்கும் சென்றிருக்கக்கூடும், அதுவும் கால் நடையாக நடந்து என்ற கோட்பாட்டுக்கு எதிரான, மாற்றான ஒரு கோட்பாடு இது. கடல் ஆமைகள் செல்லும் பாதை, பாய்மரக் கப்பல்கள் செல்லும் பாதை ஆகியவற்றை முன்வைக்கும் பாலுவின் கோட்பாட்டுக்கு ஃபூட் கண்டுபிடித்த கற்கருவிகள் ஒரு நல்ல வலுவான சாட்சியம். பாலுவின் கோட்பாடு சுவாரசியமானது; மேற்கொண்டு ஆராயப்படவேண்டிய ஒன்று.

அதே நேரம் நேற்று இறுதியாகப் பேசிய ஒரு பேராசிரியர், கூட்ட நோக்கம் என்று நான் நினைத்திருந்ததற்கு மாறாக முற்றிலும் அரசியல் தளத்திலேயே பேசினார். தமிழர்களின் பெருமை வெளியே தெரியாமல் இருப்பதற்காகப் பலர் சேர்ந்து சதி செய்கின்றனர் என்பதில் ஆரம்பித்து, தமிழர்களுக்கு என்று தனி நாடு இல்லாமல் இருப்பதுதான் பிரச்னை என்று விரிந்து, திராவிடம், ஆரியம், சமஸ்கிருதம், மாந்தவியல், மொழியியல், அரசியல் என்று மிகவும் விரிந்து பரந்ததாக இருந்த அவரது பேச்சில் ஸ்காலர்ஷிப் மட்டும்தான் குறைவாக இருந்தது.

தமிழ் என்ற மொழியின் அடையாளம் மிகவும் சமீபத்தியது. குரங்கு, குரங்கு-மனிதன், மனிதன் என்ற பரிணாம வளர்ச்சியில் மொழி மிகவும் தாமதமாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயுதங்களை, கருவிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவது அதற்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. தமிழன் என்ற அடையாளத்தை 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதன்மீது ஏற்றி, தமிழனே உலகின் ஆதிமனிதன் என்று சொல்லி என்ன பெருமையை நாம் அடையப் போகிறோம்?

தமிழ்நாட்டில் வரலாறு படிக்கும் ஆர்வம் குறைவாக உள்ளது. வரலாற்று ஆராய்ச்சிகளும் குறைவே. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்று பார்த்தால் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மறுபக்கம், பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் உள்ளூரின் தொல்காலம் பற்றிச் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீர நடுகல் சிலைகள் உள்ளன. பெருங்கற்காலப் புதைகுழிகள் உள்ளன. கற்கருவிகள் தோண்டத் தோண்டக் கிடைக்கின்றன. இதுபற்றி நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தருவது ஒன்றுமே இல்லை. அவற்றைச் சரி செய்ய நாம் பல முயற்சிகளை எடுக்கவேண்டும்.

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பல விஷயங்களை யூகமாகத்தான் நாம் சொல்லமுடியும். உலக அரங்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அந்த யூகங்கள் இருக்கவேண்டும். அந்த அளவுக்குத் தரமான அகடெமிக் ஸ்காலர்ஷிப்பை நாம் உருவாக்கவேண்டும்.

அரசியல் பேச்சாளர்களை அல்ல.

Saturday, May 26, 2012

இந்தப் பதிவு ஐபேடில்...

நீங்கள் காணும் இந்தப் பதிவு ஆப்பிள் ஐபேடில் எழுதப்பட்டது. உலாவியில் நேரடியாக தமிழில் எழுத்துக்களை உள்ளிட்டு எழுதப்பட்டது.

Tuesday, May 22, 2012

குடியரசுத் தலைவர் பூர்ணோ சாங்மா?

பிரணாப் முகர்ஜியைக் குடியரசுத் தலைவர் ஆக்குவதே நல்லது என்று கொஞ்சம் விளையாட்டுத்தனமாக எழுதியிருந்தேன். இப்போது சீரியஸான பதிவு.

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் யாரைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தலாம் என்பதில் ஒரே குழப்பம். தானாக யாரை நிறுத்தினாலும் அது செல்லுபடியாகாது என்று பாஜகவுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. எனவே மீண்டும் அப்துல் கலாமுக்கு ஆதரவு தரலாம் என்று நினைத்து, அது பற்றிப் பேசி, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

காங்கிரஸின் கதை வேறு. அவர்கள் பிரதிபா பாடில் போல ஜிங்சக் ஆசாமி யாராவது கிடைப்பார்களா என்று பார்க்கிறார்கள்போல. வேறு யாரையாவது குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டால் நாளை ஏதேனும் பிரச்னை வருமோ என்று பயப்படுகிறார்கள்.

இந்நிலையில் நவீன் பட்நாயக்கும் ஜெயலலிதாவும் சமயோசிதமாக யோசித்து பூர்ணோ சாங்மா பேரை முன்மொழிந்துள்ளனர். சாங்மா மக்களவை சபாநாயகராக இருந்தபோதே அனைவரையும் கவர்ந்தவர். நன்கு பேசக்கூடியவர். எனக்கு மேகாலயா அரசியல் பற்றி எதுவும் தெரியாது; ஆனால் சாங்மா பற்றி மோசமான செய்தி ஏதும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். எனவே நேர்மையானவராக இருக்கவேண்டும். குடியரசுத் தலைவர் பதவி பெரும்பாலும் ஏதோவிதத்தில் ‘டோக்கனிசம்’தான். ஒரு முஸ்லிம், ஒரு தென்னாட்டவர், ஒரு சீக்கியர், ஒரு பெண் என்றவகையில்தான் அடையாளங்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட அடையாள அரசியலில் வடகிழக்கு, டிரைபல் போன்ற அடையாளங்கள் தாமாகவே முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரதிபா பாடில் போல வெற்று அடையாளமாக இல்லாமல், சாங்மாவை தைரியமாக வெளிநாட்டுக்கு அனுப்பலாம். கலாம் போல உணர்ச்சிவசப்பட்டு ஐ.நாவில் உரை ஆற்றமாட்டார் என்றாலும் அழகாக, ஆணித்தரமாகப் பேசி உலகத் தலைவர்களைக் கவரக் கூடியவர்.

எல்லாம் சரி, இவர் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறதா? காங்கிரஸ் இவருக்கு வாக்களிக்காது. தேசியவாத காங்கிரஸ் தன் சொந்தக் கட்சிக்காரரான இவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதனால் என்ன? அதுவே இவருடைய பலமாக இருக்கலாம்.

சோனியா பிரதமர் ஆவதை வலுவாக எதிர்த்தவர் என்றவகையில் பாஜக, இறுதியில் இவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யலாம். இடதுசாரிகளின் பார்வையிலும் இவர் ஏற்கத்தக்கவராக இருப்பார். இந்த இரு கட்சிகளும் முடிவு செய்துவிட்டால், பல மாநிலக் கட்சிகள் இவருக்கு ஆதரவைத் தரும். சமாஜ்வாதி எதிர்த்தால், பகுஜன் சமாஜின் ஆதரவு இருக்கும். அப்படியானால் குறுகிய வித்தியாசத்தில் இவர் வென்றுவிடுவார். அது காங்கிரஸுக்கு நல்லதல்ல என்ற ஒரே காரணத்தாலேயே பாஜக இவருக்கு ஆதரவு தரவேண்டும். ஆனால் அக்கட்சி கொஞ்சம் வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதே நலம். முதலில் இடதுசாரிகள் தம் ஆதரவைத் தெரிவிக்கும்வரை பொறுமையாக இருந்துவிட்டு, பிறகு ஆதரவைத் தெரிவிப்பதே பாஜகவைப் பொருத்தமட்டில் சரியான கேம்பிளான்.

Thursday, May 17, 2012

டயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்

நியூ ஹொரைஸன் மீடியா தொடங்கியுள்ள ‘டயல் ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடை தி.நகரில் கடந்த 15 நாள்களாக இயங்கிவருகிறது. இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாக விற்ற 10 புத்தகங்கள் என்ற பட்டியலைக் கேட்டேன். அவை கீழே:

கிமு கிபி - மதன்
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - ‘நீயா நானா’ கோபிநாத்
கீரைகள் - நலம் வெளியீடு
விரத பூஜா விதானம் - லிஃப்கோ
சுபாஷ் - மர்மங்களின் பரமபிதா - மருதன்
சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், சந்தியா பதிப்பகம்
நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது, சிக்ஸ்த் சென்ஸ்
கூண்டு, கார்டன் வெய்ஸ், காலச்சுவடு (இலங்கைப் போர் பற்றிய புத்தகம்)
பொன்னியின் செல்வன், கல்கி
அர்த்தமுள்ள இந்துமதம், கண்ணதாசன்

***

கிமு கிபி புத்தகம் பற்றி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் ஒரு கேள்வி வந்தது. அதிலிருந்தே இந்தப் புத்தகம் மிக அதிகமாக விற்கத் தொடங்கியுள்ளது. ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம் தொடர்ந்து அதிகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் ஒன்று. லிஃப்கோவின் ‘விரத பூஜா விதானம்’ அதிகமாக விற்பதற்குக் காரணம் கடை இருக்கும் இடத்தில் முன்பு லிஃப்கோவின் ஷோரூம் இருந்தது. லிஃப்கோ வாசகர்கள் தொடர்ந்து அங்கு வந்து அனைத்து லிஃப்கோ புத்தகங்களையும் வாங்குகிறார்கள். காலச்சுவடு வெளியீடான ‘கூண்டு’ அதிகம் விற்பதில் பெரும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பொன்னியின் செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம் போன்றவை எவர்கிரீன் புத்தகங்கள். நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.

ரூபாய், டாலர், பவுண்ட், யூரோ

கடந்த சில தினங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கிக்கொண்டே போயிருகிறது. அதேபோல யூரோவுக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு ஏறிக்கொண்டே போயிருக்கிறது.

இரண்டு நாடுகளிலும் இதனால் சற்றே கலக்கம்.

இதென்னடா, ஏறினாலும் பிரச்னை, இறங்கினாலும் பிரச்னை?

இந்தியாவைப் பொருத்தமட்டில் இறக்குமதிகள் அதிகம். அதுவும் கச்சா எண்ணெய் இறக்குமதி. டாலர் மதிப்பு அதிகரித்தால், அதனால் நம் நாடு நேரடியாக பாதிக்கப்படும். திடீரென டாலர் மதிப்பு ஏறுவது ஏன்? இந்தியப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் அமெரிக்கப் பொருளாதாரம் அதி உயர்வாகப் போவதாகத் தெரியவில்லையே?

உலகின் நிலையான கரன்சிகள் என்றால் அவை டாலர், பவுண்ட், யூரோ, (ஒரு காலத்தில் யென்). ஐரோப்பியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பு உருவாவதற்குமுன், ஜெர்மனியின் மார்க் நாணயம் அப்படிப்பட்ட ஒன்றாக இருந்தது. ஒன்றியம் உருவானதும், அந்த இடத்தை யூரோ பிடித்துக்கொண்டது. இவற்றைத்தான் உலக நாடுகள் நாணய மாற்றாகப் பயன்படுத்துகின்றன. இதில் டாலர்தான் மிக முக்கியமான கரன்சி. இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செல்லவேண்டும் என்றால் நாம் டாலரை வாங்கிச் சென்று அங்கே இலங்கை ரூபாயாக மாற்றிக்கொள்கிறோம். இப்படி பல நாடுகளுக்கு இணைப்பு கரன்சியாக இருப்பதால், அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி டாலர் வலுவாக உள்ளது. யூரோ வெகு விரைவாக முன்னேறி ஒரு கட்டத்தில் டாலரை விஞ்சி உலகின் முக்கியமான மாற்று கரன்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நடக்கும் குழப்படிகளால் யூரோ கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கிரேக்க நாடு போண்டியாகும் நிலையில் உள்ளது. அதனை ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவர்கள் கை தூக்கிவிட்டு கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அதற்கு விலையாக அந்நாடு தன் செலவுகளைக் கடுமையாகக் குறைக்கவேண்டும் என்கின்றனர். அதற்கு ஒப்புக்கொண்டுதான் அந்நாட்டின் முந்தைய அரசு கடனைப் பெற்றுக்கொண்டது. ஆனால் அங்கே தேர்தல் நடந்து தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் செலவுக் குறைப்பை ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் அதனை ஏற்காவிட்டால் கடன் கொடுப்பவர்கள் மேற்கொண்டு கொடுக்கமாட்டார்கள்.

இதனால் யூரோவின் மதிப்பு வீழ்கிறது. தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல் முதல் பல்வேறு நாடுகளில் பொருளாதாரப் பிரச்னை பூதாகாரமாக விரிந்துகொண்டிருக்கிறது. வரிசையாக இந்த நாடுகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி கடன்களை வாங்கவேண்டிய நிலை வரப்போகிறது. இதெல்லாம் வரும் இரண்டாண்டுகளில் நிகழும். யூரோ மேலும் மேலும் விழப்போகிறது.

இதனால் கையில் யூரோ வைத்திருக்கும் ஆட்கள் எல்லாம் அந்த நாணயத்தைக் குப்பையில் கொட்டிவிட்டு, மாற்றாக எதையோ வாங்கிவைக்க விரும்புகிறார்கள். அப்படி எதனை வாங்கி வைப்பது? டாலரையும் பவுண்டையும்தான்! ஆக, அவர்கள் விரும்பி ஒன்றும் இந்த நாணயங்களை ரிசர்வாக வைக்கவில்லை. யூரோவின் அழிவினால் தங்கள் சேமிப்பு போய்விடக்கூடாதே என்பதனால். அப்படியானால் டாலர், பவுண்ட் ஆகியவற்றுக்கு கிராக்கி அதிகமாகும். அதனால் அவற்றின் மதிப்பு கூடும். எனவே இந்த இரண்டு கரன்சிகளுக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு விழும். இதனை இப்போதைக்குத் தடுக்க முடியாது.

யூரோ யூனியன் பொருளாதாரக் குழப்பங்களால் உலகின் அனைத்துப் பங்குச் சந்தைகளிலுமே கரடி மனோபாவமே உள்ளது. உள்ள பங்குகளையெல்லாம் விற்றுத் தள்ளிவிட்டு, பணமாக (அதையும் டாலர், பவுண்டாக) வைத்துக்கொள்ளலாம் என்று பெரும் நிதி நிறுவனங்கள் முடிவு செய்தால் இந்தியப் பங்குச் சந்தையில் அதகளம் ஏற்படும். (ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.) அந்நிய நிதி நிறுவனங்கள் தம் கையில் உள்ள இந்தியப் பங்குகளை டாலராக மாற்றும்போது அதனாலும் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர்மீது கிராக்கி அதிகரிக்கிறது. டாலர் அதிகரிக்க, ரூபாய் விழுகிறது.

இந்த ஒரு விஷயத்தில் பிரணாப் முகர்ஜியை அல்லது இந்திய அரசை முதன்மை வில்லனாகச் சித்திரிக்க முடியாது. பிரணாப் சொல்வதுபோல விஷயம் மிகவும் சிக்கலானது. நாம் பதற்றம் அடையக்கூடாது. என்னதான் இந்திய அரசு சொதப்பினாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவு மோசமில்லை. ஆனால் உலகப் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாக இந்தியா இருப்பதால் டாலர், யூரோ, பவுண்ட் போன்றவற்றின் ஆட்டங்கள் இந்திய ரூபாயைப் பாதித்து அதனால் இந்தியர்களை பாதிக்கும்.

இந்தப் பிரச்னைகளை ஓரளவுக்குச் சமாளிக்க ஒரு மாற்று வழி உள்ளது. ஆழம் மே இதழில் நரேன் எழுதியுள்ள கட்டுரையில் BRICS நாடுகள் தமக்கென ஒரு வங்கியை ஏற்படுத்திக்கொண்டு தம் சொந்தக் கரன்சியில் தமக்கு இடையேயான வியாபாரத்தைச் செய்வது பற்றி வருகிறது. வளரும் நாடுகளுக்கு, டாலர், யூரோ, பவுண்ட் தவிர ஒரு மாற்றுக் கரன்சி தேவை. அது சீனாவின் ரென்மின்பியாகவோ ரஷ்யாவின் ரூபிளாகவோ இருப்பதில் தப்பில்லை.

Tuesday, May 15, 2012

2ஜி வழக்கு அப்டேட்

2ஜி வழக்கில் வெகு நாள்கள் திகார் சிறையில் இருந்த ஆ. இராசா பெயில் கேட்டு, இப்போது அவருக்கு பெயில் வழங்கப்பட்டுள்ளது, இப்போது இந்த வழக்கு தொடர்பாக யாருமே சிறையில் இல்லை, அனைவரும் பெயிலில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இது முன்னதாகவே நடந்திருக்கவேண்டும். இதுபோன்ற பொருளாதார வழக்குகளில் மீண்டும் குற்றம் இழைக்க வாய்ப்பு இல்லை; சாட்சிகளைக் கலைப்பதும் எளிதல்ல.

இதே 2ஜி-யின் ஒருவித தொடர்ச்சியாக ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் இப்போதைய உள்துறை அமைச்சரும் முன்னால் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மீது ஒரு விவகாரம் வெடித்துள்ளது. அதைப்பற்றி இன்று ட்விட்டரில் சிலவற்றை எழுதினேன். விவரமாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.

மொத்தத்தில் ஒரு சில சுயநலக்காரர்களால் தொலைத்தொடர்புக் கொள்கை சீரழிக்கப்பட்டுவிட்டது. இப்போது நான் விடுமுறைக்காக வந்திருக்கும் பிரிட்டனிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கம்பியிழை பிராட்பேண்ட் வேகம் பல மெகாபைட் அளவில் உள்ளது. கம்பியில்லா வயர்லெஸ் முறையில் 3ஜி, 4ஜி என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். நாம் கட்டை மாட்டு வண்டியில் தொங்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு தரமான மின்சாரம் வழங்குவது கடினம். நல்ல சாலைகள் வழங்குவது கடினம். குடிநீர் வழங்குவது கடினம். ஆனால் இணைய இணைப்பை வழங்குவது எளிது. போன் வசதி செய்து தருவது எளிது. எது முக்கியம் என்றால் அனைத்துமேதான். ஆனால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்யாமல் ஸ்பெக்டரத்தை ஏலம் விட்டே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள் இந்தியர்கள். இதன் பின்விளைவுகளை மக்கள் கொஞ்சம்கூட உணரவில்லை. ஆ.இராசாவையோ கனிமொழியையோ எதிர்ப்பவர்கள் எதற்காக அவர்களை எதிர்க்கவேண்டும் என்றுகூடத் தெரியாமல் இருக்கிறார்கள். 2ஜி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகள் மிகச் சரி. அதனால்தான் இந்தியா சட்டென முன்னேறியது. ஆனால் 3ஜி, 4ஜி, கம்பிவழி பிராட்பேண்ட் ஆகிய கொள்கைகளில் தடுமாறி நிற்கிறோம்.

ஒரு தொழில் நிறுவனம் நியாயமாக லாபத்தை அடைவதில் தவறே இல்லை; அநியாயமாக லாபம் பெறுவதைத்தான் தடுக்கவேண்டும். லஞ்சம் தருவதை, ஏமாற்றுவதைத் தடுக்கவேண்டும். அமைச்சர்கள் கொள்கை முடிவுகளை எடுக்கப் பணம் லஞ்சமாகக் கேட்பதைத் தடுக்கவேண்டும். இதை மட்டும்தான் நாம் சரியாகச் செய்யவேண்டும்.

Saturday, May 12, 2012

சுருங்கும் தொழில்துறை - இந்தியாவுக்கு ஆபத்து

நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் வியாழன், வெள்ளி அன்று வீழ்ந்த சந்தைக் குறியீட்டு எண்களைப் பார்த்திருப்பீர்கள். அதன் முக்கியக் காரணம், இந்தியாவின் தொழில் உற்பத்தி சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்திருப்பதே.


(படம்: தி ஹிந்து. தொடர்புள்ள கட்டுரை இங்கே)
வளரும் நாடான இந்தியாவில் இதுபோன்ற உற்பத்திக் குறைவு இருக்கவே கூடாது. பின் எதனால் இப்படி ஏற்பட்டது?

தொழில்துறை முதலாளிகள் ஏன் உற்பத்தி செய்கிறார்கள்? தாம் உற்பத்தி செய்த பொருள்களைப் பிறரிடம் விற்று லாபம் சம்பாதிக்க. லாபம் சம்பாதிக்க முடியவில்லை என்றால் அவர்கள் உற்பத்தியைக் குறைத்துவிடுவார்கள். அல்லது தாற்காலிகமாக நிறுத்திவைப்பார்கள். அதேபோல டிமாண்ட் இல்லை என்றாலும் அவர்கள் உற்பத்தியைக் குறைப்பார்கள். வாங்குவதற்கு ஆளே இல்லை என்றால் பொருள்களை உற்பத்தி செய்து என்ன பயன்?

சென்ற ஆண்டு இந்தியாவில் உற்பத்தி குறைந்ததற்குக் காரணம் என்ன?

உலக நாடுகளில் தேக்க நிலை அதிகரித்தது ஒரு காரணம் என்பார் பிரணாப் முகர்ஜி. அது அவ்வளவு முக்கியக் காரணம் இல்லை. அதைவிட முக்கியமான காரணம், உள்நாட்டில் பொருள்களை விற்பதால் கிடைக்கும் லாபம் மிகக் குறைவு என்பதுதான். இந்திய உற்பத்தியில் பெருமளவு, இந்தியாவிலேயேதான் விற்பனை ஆகி, நுகரப்படுகிறது. ஏற்றுமதி குறைவுதான். சீனாவிலோ, உள்நாட்டு நுகர்வுடன் ஒப்பிடும்போது, ஏற்றுமதி மிக அதிகம். அதனால் global recession காரணமாக இந்தியாவைவிட சீனாதான் அதிகம் பாதிக்கப்படும்.

உள்நாட்டில் நுகவு குறையக் காரணம் என்ன?

கடந்த இரு ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வந்தது. அனைத்துத் தொழில் நிறுவனங்களுமே கடனை நம்பித்தான் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. கடனுக்கான வட்டி அதிகமாக ஆக, லாபம் குறைகிறது; அல்லது அறவே இல்லாமல் போய்விடுகிறது. மேலும், சில துறைகளில் நுகர்வோர் கடன் இருந்தால்தான் விற்பனையே நடக்கும். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவற்றின் விற்பனையில் கடன் பெரும் பங்கு வகிக்கிறது. கடனுக்கான வட்டி அதிகரித்தால் பொருள்களை வாங்குவோர் நான்கு முறை யோசித்துவிட்டு, குறைந்த விலை கொண்ட பொருள்களை வாங்குகிறார்கள் அல்லது வாங்காமலேயே போய்விடுகிறார்கள். கடனில் வீடு வாங்கியிருப்போரும் இந்தச் சுமையை வெகுவாக உணர்ந்திருப்பர்.

ஆனால் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை ஏன் அதிகரித்தபடியே இருந்தது? அதற்குத் தெரியாதா இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி இதனால் பாதிக்கப்படும் என்று?

நன்றாகத் தெரியும். ஆனால் ரிசர்வ் வங்கியின் அடிப்படை நோக்கம், எப்படியாவது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்பதே. வட்டி விகிதத்தை அதிகப்படுத்தினால், பணப்புழக்கம் குறையும். அதிக வட்டி கிடைக்கிறதே என்று பணத்தைச் செலவழிக்காமல் வங்கியில் போட்டுவைக்கப் பலர் முனைவார்கள். தொழில் நிறுவனங்களும்கூட தங்களிடம் இருக்கும் ரிசர்வ் பணத்தை மேலும் மேலும் தொழிலில் முதலீடு செய்யாமல் அப்படியே ரொக்கமாகவே வைத்து அதிக வட்டியைச் சம்பாதிக்கப் பார்ப்பார்கள். அப்படிச் செய்தால் தொழிலில் முதலீடு செய்வதைவிட அதிக லாபம் கிடைக்கலாம். இப்போது இந்தியாவின் பெரு நிறுவனங்கள் அனைத்தையும் பாருங்கள். அவர்களின் கையிருப்பு ரொக்கம் கடந்த இரு ஆண்டுகளில் மிக அதிகமாக ஆகியிருப்பதை இந்தச் செய்தி காட்டுகிறது.

மாறாக, கடனுக்கான வட்டி குறைந்தால், பணத்தைக் கடனாக வாங்கிச் செலவழிக்கப் பலர் நினைப்பார்கள். அப்போதுதான் டிமாண்ட் அதிகமாகும், விற்பனை அதிகமாகும், தொழில் துறை அதிக உற்பத்தியைச் செய்யும். அவர்களுக்குக் கிடைக்கும் கடனுக்கான வட்டியும் குறைவாக இருக்கும், எனவே தொழில்துறை லாபம் அதிகரிக்கும். தொழில்துறை லாபம் அதிகரித்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும், மாத வருமானம் கிடைக்கும்.

அப்படியானால் வட்டி விகிதத்தைக் குறைவாக வைத்து தொழில்துறையை வளரச் செய்வதுதானே நல்லது? பணவீக்கம் கொஞ்சம் அதிகமாகப் போனால் என்ன குறை என்கிறீர்களா? வளரும் ஒரு நாட்டுக்கு ஓரளவுக்குப் பணவீக்கம் இருக்கலாம். மிக அதிகமாக ஆனாலும் பிரச்னைதான். முக்கியமாக ஏழைகளைப் பெருமளவிலும் நடுத்தர வர்க்கத்தை ஓரளவும் பணவீக்கம் பாதிக்கும். எனவே அதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். கையை மீறிப் போய்விட்டால் hyper-inflation என்ற பிரச்னை வரும். ரிசர்வ் வங்கி பெரும் எண்ணிக்கையில் புதுப் பணத்தை அச்சிடவேண்டும். குறைந்த மதிப்பு நோட்டுகளை நீக்கவேண்டும்.

பணவீக்கம் பல காரணங்களால் அதிகரிக்கிறது. பணப்புழக்கம் அதிகரிப்பதால் மட்டுமல்ல. உற்பத்தி குறைவால். பெட்ரோல் விலை அதிகரிப்பதால். அரசின் செயல்திறன் குறைவாக இருப்பதால். அரசு நிறையப் பணத்தை மானியம் என்ற பெயரில் நிறைய மக்களுக்குக் கொடுத்தால்.

பணவீக்கம் என்பதை விலையேற்றம் என்று வைத்துப் பாருங்கள். சென்ற ஆண்டு ஒரு ரூபாய் விற்ற ஒரு வாழைப்பழம், இந்த ஆண்டு ரூ. 1.25 ஆகிறது என்றால் பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டது என்பதைக் காண்பிக்கிறது. எதனால் எல்லாம் இப்படி ஆகலாம்? சென்ற ஆண்டு விளைந்த வாழைப்பழங்களைவிட இந்த ஆண்டு குறைந்த அளவே வாழைப்பழங்கள் விளைந்துள்ளன என்றால் சந்தையில் விலை ஏறும். இந்தியாவில் விவசாயப் பொருள் உற்பத்தி, அதன் தேவைக்கு ஏற்ப அதிகரிப்பதில்லை. இதைத் தனியாக விவாதிக்கவேண்டும். இங்கு இடமில்லை.

அடுத்து, எல்லாப் பொருள்களுமே ஓரிடத்தில் விளைவிக்கப்பட்டு இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. உற்பத்திச் செலவு அதிகம் ஆகாவிட்டாலும்கூட போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும்போது பொருளின் அடக்க விலையை அதிகரிக்கவேண்டியுள்ளது. பெட்ரோல் விலை அதிகரிக்கக் காரணம், சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பதுதான்; உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமே சம்பாதிக்கின்றன என்று நம் அரசு கூசாமல் பொய் சொல்லும். உண்மையில் இந்தக் கச்சா எண்ணெய் விலையை எடுத்துக்கொண்டாலும் அரசின் அதீத வரிகள்தாம் நம் கைக்குக் கிடைக்கும் பெட்ரோல் விலையை அதிகரிக்கின்றன. ஆனால் எந்த அரசுமே (மத்திய + மாநில) அந்த வரிகளைக் குறைக்க விரும்புவதில்லை.

வரிகளைக் குறைப்பதால் வருமானம் குறையும் என்று தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் பல இடங்களில் வரிகளைக் குறைப்பதன்மூலம் வருமானத்தை வெகுவாக அதிகரிக்க முடியும். இரண்டு காரணங்களுக்காக. ஒன்று compliance அதிகரிக்கும். இரண்டு, பயன்பாடு அதிகரிக்கும். மூன்றாவதாக, அரசே செயற்கையாக உருவாக்கி வைத்திருக்கும் சில மானியங்களை வெட்டலாம். வீடு, நிலம் வாங்கி விற்கும்போது செலுத்தப்படும் ஸ்டாம்ப் டியூட்டி சதவிகிதத்தைக் குறைக்கும்போதெல்லாம் அரசுக்குக் கிடைக்கும் வரி அளவு அதிகரிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். காரணம், இந்த விகிதம் குறையும்போது கருப்புப் பணம் குறைகிறது. கச்சா எண்ணெய் மீதான வரி விகிதத்தைக் குறைப்பதால் சில மாதங்களுக்கு அரசின் வரி வருமானம் குறைந்தாலும் வெகு விரைவிலேயே பயன்பாடு அதிகமாவதாலும் பொருளாதாரம் வளர்வதாலும் மொத்த அரசு வருமானம் உயரத்தான் செய்யும்.

அடுத்து, வரிகளைக் கூட்டி, பின் டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு மானியங்களைக் கொடுக்கிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோலும் ஒரு லிட்டர் டீசலும் கிட்டத்தட்ட ஒரே காசுதான் இருக்கவேண்டும். ஆனாலு இந்தியாவில் இரண்டுக்கும் இடையேயான விலை வித்தியாசம் சுமார் 30-40% இருக்கும். ஏனெனில் விவசாயத் துறை டீசலைப் பயன்படுத்துகிறது என்றும் அவர்களுக்கு நல்லது செய்வதற்காக விலை குறைவாக வைக்கிறோம் என்றும் சொல்வார்கள். அதேபோல வரிகளை ஏற்றிவிட்டு, பிறகு வீடுகளுக்குத் தரப்படும் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க அரசு மானியம் தருவதாகச் சொல்வார்கள். வரிகளைக் குறைத்து, மானியத்தை அறவே நீக்கிவிடலாம். விவசாய டீசலுக்குக் குறைந்த விலை தேவை என்பதற்காக நாட்டில் ஜென்செட் வைத்திருப்பவர்கள், லாரி ஓட்டுபவர்கள் என்று அனைவருக்கும் மானியம் தரவேண்டிய அவசியம் இல்லை. பிரிட்டனில் இருப்பதுபோல கலர் டீசல் முறையைக் கொண்டுவரலாம். அல்லது விவசாயிகளுக்கு நேரடி மானியமாக, பணமாகத் தந்துவிடலாம்.

அடுத்து, பயனற்ற கொள்கை முடிவுகளால் ஏழை மக்களிடம் போய்ச் சேரும் பணம், பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கிறது. உதாரணம்: மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டம். ஊழல் தலைவிரித்தாடும் இந்தத் திட்டத்தில் இங்கு மண்ணை வெட்டி அங்கு மண்ணைக் கொட்டினால் பணம். பிறகு அதே மண் அங்கிருந்து வெட்டி இங்கே கொட்டப்படும். பல இடங்களில் இந்தச் செயலைக் கூடச் செய்யவேண்டாம். திட்ட மேற்பார்வையாளருக்கு வெட்டவேண்டியதை வெட்டினால், கைக்குப் பணம் கிடைத்துவிடும். இந்த மாபெரும் அரசு மோசடியால் மிகக் குறைவான அளவுக்கே உருப்படியான கட்டுமானங்கள் உருவாகியுள்ளன. ஏனெனில் திட்டத்தின் அடிப்படையே தவறு. இந்தத் திட்டத்தில் உடல் உழைப்பு மட்டும்தான் இருக்கலாம். இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படலாகாது.

நாம் இன்னும் 18-ம் நூற்றாண்டில் இருக்கிறோம் என்பதற்கு இதுவே முக்கியமான சான்று. இன்று எந்த உருப்படியான கட்டுமானத்தையும் இயந்திரங்கள் இல்லாமல் செய்ய முடியாது. விவசாயம் உட்பட. ஆனால் நாம் இன்னும், ஏழை மக்கள் உடலை வருத்தி வெயிலில் நிற்கவேண்டும் என்றும் அப்போதுதான் அவர்களுக்கு தினப்படி 100 ரூபாய் தருவோம் என்றும் சொல்கிறோம். இயந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று அவர்களுக்குச் சொல்லித்தர மாட்டோம். அவர்கள் நாள் முழுதும் நேரத்தை வீணடித்து ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பதற்கு நூறு ரூபாய். அதுவும் நூறு நாட்களுக்கு மட்டுமே.

கல்வியில் மானியம், சுகாதாரத்துக்கு மானியம் என்றால் அதில் பொருள் இருக்கிறது. உணவுப் பொருள்களை விலை குறைத்துத் தருவதில்கூடப் பொருள் இருக்கிறது. ஆனால் இப்படி பணத்தைச் சும்மா தூக்கித் தருவதில் இருக்கும் பிரச்னையை அரசு புரிந்துகொள்ளவில்லை. இது மக்களிடையே உழைக்கும் எண்ணத்தையே தருவதில்லை. கைக்கு எளிதில் (உழைக்காமல்) பணம் வருவது, தண்டச் செலவினங்களையே அதிகரிக்கும். இதுவும் தேவையற்ற பணவீக்கத்துக்கு ஒரு காரணம். UPA அரசின் MGNREGA திட்டம் நிச்சயமாக பணவீக்கத்துக்கு ஒரு காரணம். விவசாய உற்பத்தியைப் பாதிப்பதற்கும் இது ஒரு காரணம். விவசாயக் கூலிகள் கிடைக்காத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளில் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

காலாகாலமாக ஏழைகள் விவசாயக் கூலிகளாகவே இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இருக்கும் ஒரு சமநிலையை 100 நாள் வேலைத் திட்டம் குலைத்துவிட்டது. விவசாயிகளை அரசு முன்கூட்டியே தயார்ப்படுத்தவில்லை. விவசாயிகள் இடையே structural மாற்றம் தேவை. இயந்திரங்களை அதிகம் பயன்படுத்தவேண்டியிருக்கும் பெரிய நிலங்கள் தேவை. ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் சின்னச் சின்ன நிலமெல்லாம் இனிச் செல்லுபடியாகாது. விவசாயக் கூலிகளை வைத்துக்கொண்டு விவசாயம் பார்ப்பது உருப்படாது என்று நினைக்கும் பலரும் தத்தம் நிலங்களை விற்றுவிட்டு நகரங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இருக்கும் விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தில் லாபகரமாக ஈடுபடவேண்டும் என்றால் பல மாற்றங்கள் தேவை. அரசின் உதவி தேவை. தடையற்ற மின்சாரம், தேவையான அளவு நீர், உரங்கள் ஆகியன இல்லாமல் அதிக உற்பத்தி சாத்தியம் இல்லை. அதிக உற்பத்தி இல்லையென்றால், விலை ஏறத்தான் செய்யும். APMC சட்டங்களைப் பயன்படுத்தி, விவசாயப் பொருள்களின் விலையைக் கீழாகவே வைத்திருக்க வெகு காலத்துக்கு முடியாது.

அரசின் மறைமுக வரிக் கொள்கையும் பொருள்களின் விலை ஏற்றத்துக்குக் காரணம். ஆயத்தீர்வை (மத்திய அரசு), விற்பனை வரி (மாநில அரசு) ஆகியவை அதிகரிக்க அதிகரிக்க பணவீக்கம் அதிகமாகத்தான் செய்யும். வருமானம் இல்லாமல் தாங்கள் என்ன செய்வது என்று அரசுகள் கேட்கலாம். பொருளாதார வளர்ச்சியின்பால் வரும் வருமானத்தையே அரசுகள் நம்பியிருக்கவேண்டும். பொருளாதார வீழ்ச்சியைக் கொண்டுவரும் வருமானங்களை ஓர் அரசு விரும்பக்கூடாது. விற்பனை வரி அதிகரிப்பு போன்றவை அப்படிப்பட்ட கேடான வரிகளே. ஆயத்தீர்வை சதவிகிதத்தை அதிகரித்தால் வரும் வருமான அதிகரிப்பைவிட, மோட்டார் வாகனங்கள் இரு மடங்கு விற்பனை அதிகரிப்பதால் வரும் வருமான அதிகரிப்பு மிக அதிகம்.

ஆக இந்தச் செயல்களையெல்லாம் ஓர் அரசு செய்யாத காரணத்தால், பணவீக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கியின்மீது விழுந்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறுகிய கால பணவீக்கக் கட்டுப்பாட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கும் மேலாக வட்டி விகிதத்தை அதிகரித்ததன் பயனை இன்று நாம் ஒருவித recession மூலமாகச் சந்திக்க உள்ளோம். நல்ல வேளையாக, சேவைத் துறை ஓரளவுக்கு நன்றாகச் செயல்படுவதால் நாடே ஒட்டுமொத்த recession-இல் போகவில்லை. ஆனால் இந்தியா போன்ற பெரிய நாட்டில் பொருள் உற்பத்தித் துறை சரியாக இல்லையென்றால், ஏற்கெனவே விவசாயத் துறை தடுமாற்றத்தில் உள்ளது என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு பார்க்கும்போது சேவைத்துறையை மட்டும் வைத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை அடைந்துவிட முடியாது.

***

இப்போது நடந்துள்ள கடுமையான வீழ்ச்சிக்கு முழுக்காரணம் இப்போது ஆட்சி நடத்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே. இந்தப் பழி அனைத்தும் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா ஆகிய நால்வரையே முக்கியமாகச் சாரும்.

மன்மோகன் சிங் செயலற்றவர் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவருடைய பொருளாதாரச் செயல்பாடுகள்மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அது இப்போது போய்விட்டது. முகர்ஜிக்கு நவீன பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய திறமை இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்திரா காந்தி காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர். அப்போது ஒரு குரங்குகூட நிதியமைச்சராக இருந்திருக்க முடியும். சென்ற ஐ.மு.கூ அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர், சோனியாவிடம் நிதித் துறையைக் கேட்டுப் பெற்றார் என்கின்றன செய்திகள். ப.சிதம்பரமே மீண்டும் நிதியமைச்சராக ஆவார் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருந்தது. ஆனால் யார் நிதியமைச்சராக இருந்திருந்தாலுமே, சோனியா காந்தியின் National Advisory Council முடிவு செய்யும் கேலிக்கூத்தான திட்டங்களுக்கு ஏதோ வகையில் பணம் சேகரித்துத் தருபவர்களாகவே இருக்கவேண்டிய நிலை. சோனியா காந்தியின் திட்டங்கள் எந்தவிதத்தில் நாட்டுக்கு உபயோகமானவை என்று யாரும் நாடாளுமன்றத்தில் விவாதித்ததாகவே தெரியவில்லை. அது MGNREGA ஆக இருக்கட்டும், RTE ஆக இருக்கட்டும், எங்கிருந்தோ முளைத்து, எங்கோ வரைவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின்முன் வைக்கப்பட்டு, சட்டம் ஆகிவிடுகிறது.

அந்தச் சட்டத்தின் நிறைகுறைகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து விவாதம் செய்யத் தெரியாத மூடர்களாக இருக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

அதனால் இந்த மோசமான நிலைமையை வந்து சேர்ந்திருக்கிறோம். பிற விஷயங்களைப் போல அல்ல பொருளாதாரத் திட்டங்கள். நாட்டின் வளர்ச்சியை, முன்னேற்றப் பாதையை எந்தக் காரணத்துக்காகவாவது விட்டுக்கொடுத்துவிட்டோம் என்றால் அடுத்த இரண்டு பத்தாண்டுகளுக்கு மீண்டும் இருளில் மூழ்கிவிடுவோம். இப்போதுதான் சற்றே மீண்டுவந்துள்ளோம். நடுத்தர மக்களது வாழ்வு மட்டுமல்ல, கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வும் இதில் அடங்கியுள்ளது.

எனவே உடனடி மாற்றம் தேவை. சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸைத் தூக்கி எறிவதிலிருந்து நாம் ஆரம்பிக்கவேண்டும்.

Saturday, May 05, 2012

யார் அடுத்த குடியரசுத் தலைவர்?

அடுத்த குடியரசுத் தலைவர் பற்றிய என் கருத்தை, நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தார்.

குடியரசுத் தலைவர் பதவி அரசியல்ரீதியில் அவ்வளவு ஒன்றும் முக்கியமானதல்ல. யாராக இருந்தாலும் பெரிய தாக்கம் ஏதும் இருக்காது. அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவியை தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துக்கொண்டார். நாடு முழுதும் சுற்றினார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேசினார். அவரால் பல லட்சக்கணக்காக மாணவர்கள் ஊக்கம் கொண்டனர். அதே நேரம் சில ஃப்ரிஞ்ச் ஆசாமிகள் அவரை ‘அரசவைக் கோமாளி’ என்றே அழைத்தனர். சில அரசியல் நோக்கர்கள், கலாம் மிகவும் ஆபத்தானவர் என்று கருதினர். முக்கியமாக அவருடைய அணு ஆயுத ஆதரவு, அணு மின் நிலைய ஆதரவு ஆகியவையும் குஜராத் கலவரங்களுக்கு எதிராக அவர் ஏதும் சொல்லாததும் அவர்களுடைய கோபத்துக்குக் காரணம்.

சில வலதுசாரிகள், கலாமால்தான் சோனியா பதவிக்கு வரமுடியவில்லை என்று பெருமையுடன் சொல்கின்றனர். சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு வருவதில் எனக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை. இப்போது இருக்கும் மன்மோகன் சிங் ஆட்சியைவிட அது எந்தவிதத்திலும் மோசமாக இருக்க முடியாது. இனி வரப்போகும் ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆட்சியைவிடவும்தான்.

அடுத்து வந்த பிரதிபா பாடில், ஒரு அய்யோ பாவம். தன் நீண்ட, நெடிய குடும்பத்தை அழைத்துக்கொண்டு பல நாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்தார். கலாம் போகும் இடங்களிலெல்லாம் என்ன பேசுகிறார் என்பதைத் தன் இணையத் தளத்தில் போட்டு வைத்திருப்பார். கலாமின் கவிதைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அந்தப் பேச்சுகள் பெரும்பாலும் கவனத்துடன் எழுதப்பட்டதாக இருக்கும். மிகவும் ஆழமாக இல்லாவிட்டாலும்கூட கேட்போரை நன்கு கவரும். பாடில் அதையெல்லாம் செய்தாகவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்.

நம் நாட்டின் குடியரசுத் தலைவர்கள் வித்தியாசமானவர்கள். வெவ்வேறு காரணங்களுக்காகப் பதவிக்கு வந்தவர்கள். ராஜேந்திர பிரசாத் ஒரு வழக்கறிஞர். காந்தியைப் பின்பற்றி தேசியப் போராட்டத்தில் இறங்கியவர். அரசியல் அவருக்கு அத்துப்படி. தனக்குப் போட்டியாக பிரசாத் இருந்துவிடக்கூடாதே என்பதற்காக நேருவால் கட்டம் கட்டி குடியரசுத் தலைவராக அனுப்பப்பட்டவர் என்கிறார்கள். ராதாகிருஷ்ணன் அரசியல்வாதி கிடையாது. ஆனால் மிக்கப் படித்தவர். தத்துவவாதி. இதுவரையிலான அனைத்துக் குடியரசுத் தலைவர்களிலுமே மிகச் சிறந்த அறிவாளி அவராகத்தான் இருக்கவேண்டும். அசலான புத்தகங்களை எழுதியுள்ளார். ஜாகிர் ஹுசேன் கல்வியாளர். பொருளாதாரத்தின் முனைவர் பட்டம் பெற்றவர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர்.

அடுத்து குடியரசுத் தலைவர் ஆனவர் விவி கிரி. முழு நேர அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியில் பிளவு நீறுபூத்த நெருப்பாக இருந்தது. காமராஜ் தலைமையிலான சிண்டிகேட் நீலம் சஞ்சீவ ரெட்டியை நிறுத்த, இந்திரா காந்தி ‘மனச்சாட்சியின்படி வாக்களியுங்கள்’ என்று கட்சிக்காரர்களைத் தூண்ட, கிரிக்குக் கிடைத்தன வாக்குகள். அதன்பின் இந்திரா காந்தி மிகப் பெரும் அதிகாரத்தைத் தன் கைக்குள் கொண்டுவந்தார். ஊர் பேர் தெரியாத அஸ்ஸாமிய காங்கிரஸ்காரரான ஃபக்ருதீன் அலி அகமதுவை குடியரசுத் தலைவர் ஆக்கினார். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படுவதில் தன் பங்கை ஆற்றினார் அவர்.

பின் இந்திரா காந்தியால் பழிவாங்கப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி, நெருக்கடி நிலைக்குப் பிறகான ஜனதா ஆட்சிக்காலத்தில் குடியரசுத் தலைவர் ஆனார். அடுத்த மூன்று குடியரசுத் தலைவர்களும் காங்கிரஸின் மூத்த தலைவர்களே. கியானி ஜெயில் சிங், ஆர்.வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா ஆகியோர் காங்கிரஸ் சார்பாக மாநில முதல்வர்களாக அல்லது மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள். காங்கிரஸின் வாக்கு வலிமை காரணமாக எந்தவித எதிர்ப்பும் இன்றி குடியரசுத் தலைவர் ஆனவர்கள்.

அடுத்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஒரு மாற்றம். அரசு அதிகாரியான இவர் ஓய்வுக்குப் பின் குடியரசுத் துணைத் தலைவராகவும் பின் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

காங்கிரஸின் வலிமை முற்றிலுமாகக் குன்றிய நிலையில் பாஜகவிடம் தேவையான வலிமை இல்லாத காரணத்தால் பெரும்பாலானோருக்கு ஏற்புடையவராக அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு மீண்டும் காங்கிரஸ் அரசியல்வாதி பிரதிபா பாடில்.

மேலே உள்ள முழுப் பட்டியலிலிருந்து பார்த்தால், குடியரசுத் தலைவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் அரசியல்வாதிகளாக, இந்திரா/ராஜிவ்/சோனியா ஆதர்வு நிலைப்பாட்டை எடுப்பவர்களாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தனிப்பட்ட முறையில் சாதனையாளர்களாக இருக்கவேண்டும். தனிப்பட்ட சாதனையாளர்கள் என்ற வரிசையில் ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசேன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் என்ற நால்வர் மட்டுமே வருகிறார்கள். இவர்களுக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என்றாலும் இவர்கள் பெரும்பாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.

அந்த ஸ்டேச்சரில் இன்று இந்தியாவில் வேறு யாருமே இல்லை. அதனால்தான் மீண்டும் அப்துல் கலாம் என்ற பெயர் முன்வைக்கப்பட்டது. அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டது. மேலும் எதிர்ப்பு இருந்தால் அவர் போட்டியில் இருப்பாரா என்பது சந்தேகம். அத்துடன் அவரது விருப்பமே மாணவர்களைச் சந்தித்துப் பேசுவது. இன்றும்கூட அவர் அதனைச் செய்துவருகிறார். அவருடைய சந்திப்புகளில் கூட்டம் அலைமோதுகிறது. மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவது அவருடைய விருப்பத்தை வெகுவாகப் பாதிக்கும். அதற்கு அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை. எனவே கலாமை விட்டுவிடுவோம்.

பாஜக யாரைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அவரை ஜெயிக்கவைக்கத் தேவையான வாக்குகளைத் தன்னிடத்தே கொள்ளவில்லை. அதேபோலத்தான் காங்கிரஸும். ஆனால் பொதுவாக காங்கிரஸ் குறிப்பிடும் ஒரு கேண்டிடேட் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

காங்கிரஸின் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆவதை நான் ஆதரிக்கிறேன். இரண்டு காரணங்களுக்காக. முதலாவது: நேர்மையான ஆளாகத் தெரிகிறார். பண்பாளர். பெரும்பாலான எதிர்க்கட்சியினர்கூட இவரை ஏற்றுக்கொள்வார்கள்.

இரண்டாவது காரணம் முக்கியமானது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் குட்டிச்சுவர் ஆக்கியதில் முக்கியப் பங்கு முகர்ஜியுடையது. எனவே இவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கி அனுப்பிவிட்டால் மத்திய அமைச்சரவையில் அந்த இடம் காலியாகிவிடும். புதிதாக வரப்போகும் நிதியமைச்சர் சில நல்ல காரியங்களைச் செய்யலாமே என்று ஓர் ஆதங்கம்தான்.

Friday, May 04, 2012

சென்னை தி.நகரில் புதிய புத்தகக் கடை

நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனத்தின் சார்பாக வரிசையாகப் பல புத்தகக் கடைகளைத் திறக்க முடிவெடுத்துள்ளோம். அதன் ஆரம்பக் கட்டமாக தி.நகரில் ரங்கநாதன் தெருவை ஒட்டி ராமேஸ்வரம் சாலையில் ஒரு புத்தகக் கடையைத் திறந்துள்ளோம். (முகவரி: G-5, நாராயணா அபார்ட்மெண்ட், 23, ராமேஸ்வரம் ரோடு, தி.நகர், சென்னை 17, போன் 94459-01234 / 9445 97 97 97)


இது ஏற்கெனவே லிஃப்கோ புத்தக ஷோரூம் இருந்த இடம்தான். அந்த இடத்தை அவர்களிடமிருந்து பெற்று இந்தப் புத்தகக் கடையை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இங்கே கிழக்கு பதிப்பக புத்தகங்கள், லிஃப்கோ புத்தகங்கள் மட்டுமின்றி, தமிழின் அனைத்து முன்னணிப் பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கும். காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, அடையாளம், வம்சி புக்ஸ், காவியா, வானதி, விகடன், திருமகள் நிலையம், அருணோதயம், சிக்ஸ்த் சென்ஸ், கண்ணதாசன், கவிதா, கலைஞன்... என தமிழின் அனைத்துப் புத்தகப் பதிப்பாளர்கள்களின் புத்தகங்களையும் இங்கே பெறலாம்.

சனி, ஞாயிறு, அனைத்து விடுமுறை தினங்களிலும் கடை திறந்திருக்கும். ஏசி வசதி உள்ளது. கிரெடிட் கார்ட் வசதி உள்ளது. மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன், தி.நகர் பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றுக்கு மிக அருகில் உள்ள இடம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

வரும் நாள்களில் வேறு பல இடங்களிலும் கடைகளைத் திறக்க உள்ளோம்.

சில மாதங்களுக்குமுன்பு டயல் ஃபார் புக்ஸ் என்ற ஒரு சேவையைத் தொடங்கியிருந்தோம். இணைய வசதி உள்ளவர்கள் இணையத்தில் புத்தகங்களை வாங்குவது எளிது. இல்லாதவர்கள் கடைகளுக்கே நேராகப் போய் வாங்கலாம். ஆனால் கடைகள் நம் அருகில் இல்லை என்றால்? நாம் போகும் கடையில் நமக்கு வேண்டிய புத்தகம் இல்லை என்றால்? இணைய வசதி இருந்தாலும் நம்பி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் நம் பணமெல்லாம் களவு போய்விடுமா? இப்படிப் பலர் இருக்கிறார்கள் என்பதால்தான் இந்தத் தொலைபேசிச் சேவையை ஆரம்பித்தோம். அது வேகமாக வளர்ந்துவருகிறது. எனவேதான் புத்தக ரீடெய்ல் அனைத்தையும் அந்த ஒரு பிராண்டின்கீழ்க் கொண்டுவருவது என்று முடிவெடுத்துள்ளோம். கடைகள் அனைத்துக்கும் டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடைகள் என்றுதான் பெயர் இருக்கும். இணையக் கடைக்கும் அதே பெயர்தான் விரைவில் வரும். இணையக் கடை, நிஜ உலகக் கடைகள் அனைத்தையும் இணைக்கும் பாலமாக தொலைபேசி இருக்கும்.

94459-01234 அல்லது 9445 97 97 97 என்ற எண்களை அழைத்தால் அனைத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களின் புத்தகங்கள் பற்றிய விவரம், அவை கிடைப்பது பற்றிய விவரம், விலை போன்ற அனைத்துத் தகவல்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

***

நியூ ஹொரைஸன் மீடியா ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இப்போது நடப்பது ஒன்பதாவது ஆண்டு. புத்தகக் கடைகள்மீது எங்களுக்கு ஆரம்பத்திலேயே ஆர்வம் இருந்தது. தயங்கித் தயங்கி ராயப்பேட்டையில் ஒரு கடையை ஆரம்பித்தோம். சரியாகச் செய்யவில்லை. சொதப்பிவிட்டோம்.

கிழக்கு ஷோரூம் என்பது வேறு, புத்தகக் கடை என்பது வேறு. இந்த வித்தியாசத்தை இன்று நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். இப்போது நாங்கள் உருவாக்க இருக்கும் சங்கிலிக் கடைகள் தமிழ்ப் புத்தக விற்பனையில் குறிப்பிட்ட சாதனை படைக்கும் என்று நம்புகிறோம். வாடிக்கையாளரை மகிழ்விக்கும் வகையில் இதன் சேவை இருக்கும்.

ராமேஸ்வரம் சாலையில் உள்ள கடைக்குச் சென்று பாருங்கள். அல்லது 94459-01234 / 9445 97 97 97 எண்களை அழைத்துப் பாருங்கள். அல்லது இணையத்தில் புத்தகத்தை ஆர்டர் செய்து பாருங்கள். (இணையக் கடையின் பெயர் விரைவில் டயல் ஃபார் புக்ஸ் என்று மாற உள்ளது.)  உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகின்றனவா என்று feedback தாருங்கள்.

Tuesday, May 01, 2012

நரேந்திர மோதி பிரதமரானால்...

தெண்டுல்கர் பற்றிய பதிவில், காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டு பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று எழுதியிருந்தேன். அதனைக் கவனித்த ஞாநி ஃபேஸ்புக்கில் எழுத, அவருடன் ஓர் உரையாடல் அங்கே நடைபெற்றது.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் நான் காங்கிரஸ் + திமுக கூட்டணியை ஆதரித்தேன். மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்களித்தேன். அடுத்த 2009 தேர்தலில் ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் நிலையையும் திமுகவின் நிலையையும் எதிர்த்து தயாநிதி மாறனுக்கு வாக்களிக்கவில்லை.

நடப்பு நாடாளுமன்றக் காலகட்டத்தில் காங்கிரஸ் அரசு திக்குத் தெரியாமல் தடுமாறி இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் பல குழப்பங்களைச் செய்து வருகிறது. இதனை மாற்றக்கூடிய வல்லமை பாஜகவுக்கு மட்டுமே உண்டு என்று இப்போது நினைக்கிறேன். இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவது இந்தியப் பொருளாதாரத்துக்குக் கடும் ஆபத்து என்று நம்புகிறேன். காங்கிரஸும் அல்லாமல் இடதுசாரிகளும் அல்லாமல் ஒருவர் இன்று ஆட்சிக்கு வரமுடியும் என்றால் அது பாஜக தலைமையிலான கூட்டணி மட்டும்தான். பாஜக வென்றால் அது ஆட்சிக்கு வந்தும் பொருளாதாரத்தைச் சீரழிக்கக்கூடும். அப்போது வேறு வழியின்றி, அடுத்த ஐந்தாண்டுகள் பொறுத்து, மீண்டும் காங்கிரஸா என்று யோசிக்கவேண்டியிருக்கும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோதி பிரதமரானால், அதை நான் விரும்புவேனா என்று கேட்டார். பொருளாதார அரசியல் முக்கியமா, கலாசார அரசியல் முக்கியமா என்று வினவினார். எனக்கு பொருளாதார அரசியல்தான் முதன்மை. கலாசார அரசியல் அடுத்ததுதான். பெரும்பான்மைக் குழுவில் ஓர் அங்கம் வகிக்கும் காரணத்தால் நான் அப்படி நினைக்கக்கூடும். ஒரு முஸ்லிம் எப்படி நரேந்திர மோதியைப் பார்ப்பார் என்று நான் சொல்ல முடியாது. பாஜக தொண்டர்கள்போல, மோதி ஒரு அப்பழுக்கற்ற தெய்வம் என்று நான் சொல்லமாட்டேன். கோத்ரா விவகாரம் அவர்மீதான நீங்காப் பழி. அப்படிப் பார்த்தால் பாஜக கட்சியின் வாஜ்பாயி முதற்கொண்டு அனைவர்மீதும் ஏதோ ஒருவிதத்தில் மதவாதம் என்ற குற்றக்கறை படிந்தே உள்ளது. பாஜகவால் மதவாதத்தைத் தாண்டி வெளியே வருவதும் முடியாத காரியம் என்றே தோன்றுகிறது. அந்த மதவாதம் வன்முறையைத் தூண்டாமல் இருக்குமா என்பதுதான் கேள்வியே.

இந்தியாவில் இப்போது நடைமுறையில் இருக்கும் கூட்டணி ஆட்சி முறை, பாஜகவின் கலாசாரக் காவலர்களைக் கட்டுப்படுத்தி வைத்து, சீரிய பொருளாதாரத் திட்டங்களுக்கு மட்டும் துணை போகும் என்றே இந்தக் கட்டத்தில் நான் நம்ப விரும்புகிறேன். நரேந்திர மோதி குஜராத்தில் செயல்படுத்தியிருக்கும் பல பொருளாதாரத் திட்டங்கள் தொலைநோக்கு கொண்டவையாக உள்ளன. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது அவரைத் தலைவராகக் கொண்ட ஓர் ஆட்சியை ஆதரிப்பதாக உள்ளேன்.