Sunday, October 20, 2013

நீ நல்லவன் கிடையாது!

நேற்று திருச்சியில் ஒரு கூட்டத்தில் பேசினேன். இந்தியாவின் வளர்ச்சிக்கான பொருளாதார மாதிரிகள் - என்பதுதான் தலைப்பு. சுமார் 25 பேர்தான் இருந்தார்கள். (என்ன பேசினேன் என்பது பற்றிப் பின்னர் பதிவிடுகிறேன்.) பேச்சு சற்று தாமதமாகத் தொடங்கியது. அந்த நேரத்தில் சிலர் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

என் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் "நீங்கள் ஏன் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். "ஏனெனில் இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட்டுகள் மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன்" என்றேன். அவர் பூம்புகாரில் இறால் பண்ணை குறித்து தன் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார். அதன் இறுதியில் கார்ப்பரேட்டுகள் என்றாலே தீயவர்கள் என்றார். நான் அதனை மறுத்துப் பேச ஆரம்பித்தேன். கார்ப்பரேட் என்றாலே தீயவர்கள் என்ற எண்ணம் தவறானது என்றேன். நானே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைத்தான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் என்றேன்.

அவர் உடனே "நீங்கள் நல்லவர் இல்லை" என்றார்.

நான் அதிர்ச்சியுடன் "எப்படிச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாதே?" என்றேன்.

"நரேந்திர மோடியை ஆதரிப்பவர் நல்லவனாக இருக்க முடியாது" என்றார். தொடர்ந்து, என் எழுத்துகள் எல்லாம் ஏழைகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை, கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் எல்லாமே திட்டமிட்டு ஏழைகளுக்கு எதிரானவையாக உருவாக்கப்படுகின்றன என்று பேசத் தொடங்கினார்.

இந்தத் தர்க்கத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வாயடைத்துப் போய்விட்டேன் என்பதுதான் உண்மை.

அதன்பின் மேடைக்குச் சென்று என் பேச்சை முடித்துவிட்டு, கேள்விகள் இருக்கின்றனவா என்று கேட்டேன். அந்த நண்பர் என் உரை முழுதையும் கேட்டுக்கொண்டிருந்தார், ஆனால் கேள்வி எதையும் கேட்கவில்லை. அவர் அருகில் அமர்ந்திருந்த இன்னொருவர், "நீங்கள் (ஜகதீஷ்) பகவதியின் பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள். அவர் மோடியை ஆதரிக்கிறார். அப்படியானால் நீங்கள் பாஜகவை ஆதரிக்கிறீர்களா?" என்றார்.

பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் எனக்குப் பிடித்தமான அளவு வலப்பக்கத்தில் இல்லை; சொல்லப்போனால் ஆர்.எஸ்.எஸ், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஆகியோரின் கருத்துகள் எனக்கு ஏற்புடையவை அல்ல; ஆனால் பகவதியின் கருத்துகளை ஆதரிக்கிறேன், மோதி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன் என்றேன்.

இது பாஜகவின் இன்னொரு முகம் என்று சொல்லிவிட்டு அவர் எழுந்துசென்றுவிட்டார்.

லிபரல் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து, கட்சி சார்பின்றி தமிழகம் முழுக்கச் சென்று மக்களிடம் உரையாட நல்ல உந்துசக்தி ஏற்பட்டுள்ளது.

Friday, October 18, 2013

சிறுநீரகக் கோளாறு, டயாலிசிஸ் தொடர்பாக

நேற்று மருத்துவர் புரூனோவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். விவாதத்தின் சுருக்கத்தைக் கீழே தருகிறேன். என் புரிதலில் தவறுகள் இருந்தால் புரூனோ அவற்றைச் சரி செய்துவிடுவார் என நம்புகிறேன்.

நாங்கள் முக்கியமாகச் சந்தித்தது, டயாலிசிஸ் பற்றிப் பேச. ஞாநி தனக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றும் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். இந்தியா முழுவதிலும் சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் தேவைப்படுவோர் சுமார் 1.5 லட்சம் பேர் என்றும் எழுதியிருந்தார். அதே நிலைத்தகவலில் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஒரு டயாலிசிஸ் மையம் அமைக்கப்படும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகச் சொல்லியிருந்தார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 6,000 பேர் இந்நிலையில் உள்ளதாக புரூனோ சொன்னார். இனி வருவதெல்லாம் தமிழகம் தொடர்பானது மட்டுமே.

* இந்த 6,000 பேரில் சுமார் 1,000 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்துகொள்கின்றனராம். கேடாவேர் டிரான்ஸ்பிளாண்டேஷன் என்ற முறையில் ‘மூளை இறந்த’ மனிதர்களின் உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து மாற்றிவைப்பதன்மூலம் சுமார் 600 பேருக்கு ஓராண்டில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தமுடிகிறதாம். இன்னொரு 1,000 பேர் தொடர்ந்து டயாலிசிஸ் செய்துகொள்ள முடிவெடுப்பவர்கள். மீதமுள்ள 4,000 பேர் மாற்று சிகிச்சைகள் என்ற பேரிலும் சிகிச்சைகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமலும் தங்கள் உயிருக்கு ஆபத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.

* க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் உள்ளவர்கள், டயாலிசிஸ் செய்துகொண்டால்தான் வாழ்க்கையைத் தொடர முடியும். வாரத்துக்கு இருமுறை செய்துகொள்ளவேண்டும். மாதம் 8 முறை. ஒரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ள ரூ. 1,000 ஆகிறது. எனவே ஒரு மாதச் செலவு என்பது கிட்டத்தட்ட ரூ. 10,000 ஆகிவிடும். டயாலிசிஸ் என்பது தாற்காலிகமே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் ஒரே வழி.

* சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு, சிறுநீரகம் தானம் செய்வோர் வேண்டும். அது மூளை இறந்தோரிடமிருந்து கிடைக்கலாம்; உறவினர்களிடமிருந்து கிடைக்கலாம் அல்லது ‘திருட்டு வழிகளில்’ சிறுநீரகத்தை விலைக்கு வாங்குவதிலிருந்து கிடைக்கலாம். இதில் மூன்றாவது வழிமுறையை தமிழக அரசு கடுமையான சட்டங்கள்மூலம் தடுத்திருக்கிறது. ஆனால் மூளை இறந்தோரிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவது அதிகரித்தால்தான், தேவைப்படும் அனைவருக்கும் மாற்றுச் சிறுநீரகம் பொருத்த முடியும்.

* ஸ்பெயின், அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகளில் மூளை இறந்தோரிடமிருந்து பெறுவது மிக அதிகம் - ஒவ்வொரு மில்லியன் மக்கள் தொகைக்கும் சுமார் 25-35 பேரிடமிருந்து உறுப்புகள் பெறப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 0.05-க்கும் குறைவான அளவிலேயே உறுப்பு தானம் கிடைக்கிறது.

* அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை. க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான கருவிகள் இல்லை. இருக்கும் கருவிகள், தாற்காலிகமாக சிறுநீரகம் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவம் செய்யவே பயனாகின்றன.

* மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்தினால், மாதத்துக்கு 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியும். இந்த அமைப்பை ஏற்படுத்த ஒருமுறை செலவாக ரூ. 55 லட்சம் ஆகும். அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புச் செலவு, சம்பளம் என்று சுமார் ரூ. 20 லட்சம் தேவை.

* இப்போதைக்கு தமிழகத்தில் 4,000 பேருக்கு டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றால், இதில் ஒரு ஆயிரம் பேருக்காவது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக டயாலிசிஸ் செய்யவேண்டும் என்றால் மொத்தம் 100 டயாலிசிஸ் இயந்திரங்கள் தேவை.

* அரசு இப்போதைக்கு இதில் முதலீடு செய்யும் என்று சொல்ல முடியாது. எனவே தனியார்கள் சேர்ந்து இந்த இயந்திரங்களை வாங்கிக்கொடுத்தால் அரசு மருத்துவமனையில் அவற்றைப் பொருத்திக்கொள்ள அரசு இடம் கொடுக்கும்.

* ஆனால், இதனை இயக்குவதற்கான பணியாளர்கள், இந்த இயந்திரத்தைப் பராமரிக்கத் தேவையான செலவு ஆகியவற்றையும் தனியார்தான் செய்யவேண்டும். (என்னென்ன தேவை, எவ்வளவு செலவாகும் என்று அனைத்தையும் புரூனோ அனுப்பியுள்ளார்.)

மாதம் சுமார் ரூ. 10,000 செலவழித்து டயாலிசிஸ் செய்துகொள்வது என்பது மேல் நடுத்தர மக்களுக்கு மட்டுமே சாத்தியம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது இன்றைய தேதியில் தேவையான அனைவருக்கும் சாத்தியமில்லாததாக உள்ளது. அரசிடமிருந்து டயாலிசிஸ் இலவசமாகச் செய்வதற்கான தீர்வு உடனடியாகச் சாத்தியமில்லை.

எனவே நாம் என்ன செய்யலாம்?
  1. ஓர் அறக்கட்டளை தொடங்கி, பணம் வசூலிக்கலாம்.
  2. இந்த அறக்கட்டளை, தமிழக அரசுடன் ஒரு MoU போட்டுக்கொள்ளவேண்டும். அதன்படி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை இந்த அறக்கட்டளை ஏற்படுத்தும்.
  3. இடத்தை தமிழக அரசு தரும்.
  4. இயந்திரங்களை இயக்க டெக்னீஷியன்களை அறக்கட்டளையே வேலைக்கு எடுக்கும்.
  5. டயாலிசிஸ் தேவைப்படுவோர் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  6. ஆண்டுச் செலவுகளுக்கான பணத்தையும் அறக்கட்டளை தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
இது தொடர்பாக உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.

Friday, October 11, 2013

இந்திய விவசாயம்

விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றின்போது விவசாயம் குறித்து சிறிய விவாதம் நடைபெற்றது. இந்திய விவசாயத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறையவேண்டும் என்ற என் கருத்தை நான் முன்வைத்தேன். அதிலும் முக்கியமாக திறன்மிக்க விவசாயம் செய்யவேண்டுமானால் குறைந்தபட்ச நில அளவு என்று ஒன்று இருக்கவேண்டும்; அதற்குக் கீழான அளவில் உள்ள விவசாய நிலங்கள் பயனற்றவை; அவை ஒன்று சேர்க்கப்படவேண்டும் என்றும் சொன்னேன். விவசாயத்தில் ஈடுபடும் கூலியாள்கள் பலரும் வேறு திறன்களைப் பெற்றுக்கொண்டு உற்பத்தி, சேவை ஆகிய துறைகளுக்கு நகரும்போதுதான், இந்தியாவில் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்; நாட்டில் ஏழைமை குறையும் என்பது என் வாதம்.

விவசாயத்தில் தொடர்ந்து முதலீடு செய்யக்கூடிய அளவுக்கு விவசாயம் என்பது லாபகரமானதாக இருக்கவேண்டும். இன்று நான் விவசாயத்தில் இறங்கச் சாத்தியமே இல்லை. விவசாய நிலத்தின் விலை அதிகமானதாக உள்ளது. பூர்விகச் சொத்தாக எனக்கு நிலம் இருந்தாலொழிய விவசாய நிலத்தை அதிக விலைக்கு வாங்கி அதில் நெல்லோ, கரும்போ, கடலையோ, சோளமோ நடுவது அறிவுக்கு உகந்ததாகத் தெரியவில்லை. அந்தப் பணத்தை வங்கியில் போட்டுவைத்திருந்தால் அதிக வருமானம் கிடைக்கும்.

இன்று விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோரும் இந்தத் தொல்லை தம் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று காடு கழனியை விற்று அவர்களுக்கு நல்ல படிப்பைச் சம்பாதித்துத் தர முனைகின்றனர். விளைபொருள்களை வாங்குவோரிடம் இருக்கும் நாசூக்கான வியாபாரத் திறன், விற்போரிடம் இருப்பதுபோலத் தெரியவில்லை. முக்கியமான தானியங்களுக்கு அரசுதான் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கிறது. இதனால் அரசிடம் எப்போதும் கையேந்திப் பிச்சை எடுக்கும் நிலையிலேயே விவசாயிகள் இருக்கவேண்டியுள்ளது. பயிர் இழப்புக் காப்பீட்டில் உள்ள குழப்பங்கள், விவசாயக் கூலி வேலைக்குத் தரமான ஆட்கள் எளிதாகக் கிடைக்காமை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஏற்படுத்தியுள்ள குழப்பங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்துதல் குறித்த தெளிவின்மை, பருவ மழையையே பெரிதும் நம்பியிருத்தல், நீர் வளத் திட்டங்களில் அரசுகள் அதிகம் ஈடுபடாமை, அண்டை மாநிலங்களுடன் நீர் பகிர்மானத்தின் சச்சரவு, மின்சாரம் சரியாகக் கிடைக்காமை, குளிர்பதனக் கிடங்குகள் இல்லாமை என்று விவசாயத் துறையில் எக்கச்சக்க சிக்கல்கள்.

எனவேதான் இத்துறையை நம்பி அதிகம் பேர் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதைப் பற்றிப் பேசினாலே நம்மை விரோதியாகப் பார்க்கிறார்கள். என்னவோ நாட்டில் விவசாயம் பிரமாதமாக இருப்பதுபோலவும் நான்தான் ஒரு கொலைகாரன்போல வந்து குழப்பம் செய்து அப்பாவிகளை சேவைத்துறையை நோக்கிக் கவர்ந்து செல்வதுபோலவும் நினைக்கிறார்கள்.

பொருள் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், உபயோகமான சேவையையும் பொருள்களையும் உலகத்தரத்தில் உற்பத்தி செய்வதன்மூலம் மட்டுமே நம் நாட்டின் உற்பத்தியை (ஜிடிபி) அமெரிக்க டாலர் கணக்கில் அதிகரிக்க முடியும். அப்போதுதான் பெர் கேபிடா ஜிடிபி அதிகரிக்கும். தனி நபர்களின் உண்மையான சம்பளம் அதிகரிக்கும். அப்போதுதான் பொது மக்களால் விவசாயப் பொருளுக்கு அதிக விலை கொடுக்க முடியும். அப்போதுதான் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். குறைந்த பேர் விவசாயத்தில் ஈடுபட்டு, அதிக லாபம் பெறும்போது, தானாகவே அதிக முதலீட்டை அவர்களால் விவசாயத்தில் மேற்கொள்ள முடியும்.

நீயா நானா விவாதத்தின்போது பலரும், இந்தியாவால் விவசாயப் பொருள்களைத்தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் எனவே விவசாயத்தில்தான் இந்தியா அதிக அளவு முதலீட்டைச் செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள். இதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. ‘இந்தியா முதலீடு செய்யவேண்டும்’ என்றால் என்ன பொருள்? இந்திய விவசாயிகளால் கட்டாயம் எந்த முதலீட்டையும் செய்ய முடியாது. அவர்களில் பெரும்பாலானோர் அன்றாடங்காய்ச்சிகளாகவே இருக்கிறார்கள். அரசு, அரசுப் பணத்தை எடுத்து விவசாயிகள் கையில் கொடுத்து முதலீடு செய்துகொள் என்று சொல்ல முடியாது. கூடாது. விவசாயிகள் வங்கிகளில் கடன் கேட்டால், நியாயமாகப் பார்த்தால் வங்கிகள் கொடுக்கவே கூடாது. எந்தவொரு கஷ்ட ஜீவிதருக்கும் கடன் கொடுப்பது விழலுக்கு இறைத்த நீர்போல. அரசியல் அழுத்தம் காரணமாகவே விவசாயக் கடன்கள் கொடுக்கப்படுகின்றன; பல நேரங்களில் அரசியல் காரணங்களுக்காக தள்ளுபடியும் செய்யப்படுகின்றன.

உண்மையில் இந்தியா, உணவுப் பொருள்கள் பலவற்றையும் எண்ணெய் வித்துகள் போன்றவற்றையும் இறக்குமதிதான் செய்கிறது! எனவே, நான் ஏற்கெனவே கூறியதுபோல, இப்போது இருக்கும் நிலையில் இந்திய விவசாயத்தில் வளர்ச்சி காண்பது என்பது அரிதானது. எனவேதான் பொருள் உற்பத்தியை நோக்கி இந்தியா வேகமாகச் செல்லவேண்டும். அதைவிட வேகமாக சேவைப் பெருக்கத்தை நோக்கிச் செல்லவேண்டும். மென்பொருள் துறையில் அனைத்துவிதச் சாத்தியங்களையும் இந்தியா கவனிக்கவேண்டும். இது ஒன்று மட்டுமே இந்தியாவின் ஏழைமையைக் குறைக்கும் வல்லமை கொண்டது.

Wednesday, October 09, 2013

இயல்பியல் நோபெல் பரிசு

இந்த ஆண்டு, இயல்பியலுக்கான நோபெல் பரிசு பீட்டர் ஹிக்ஸ், ஃப்ரான்சுவா எங்க்லேர் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது. ஹிக்ஸ் என்பவர் பெயர் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்ற ஆண்டு ஹிக்ஸ் போஸான் என்ற துகள் கண்டறியப்பட்டு, ‘கடவுள் துகள்’ என்று வெகுஜன ஊடகங்களில் அனைவராலும் உளறித் தள்ளப்பட்டது. போஸான் என்ற பெயர் காரணமாக, சத்யேந்திரநாத் போஸ் பற்றியும் கொஞ்சம் மக்கள் தெரிந்துகொண்டனர்.

இவ்வுலகம் எப்படி உருவானது, எவற்றால் இவ்வுலகம் நிரம்பியுள்ளது என்பது குறித்த எளிமையான கேள்விகளுக்கு நம்மிடையே ஓரளவுக்குத்தான் விடை உள்ளது. அந்த விடையின் ஒரு பகுதி, பல்வேறு அடிப்படைத் துகள்கள். இவை எவற்றையும் நம் கண்களால் காண முடியாது. சோதனைச் சாலையில் சில சோதனைகளை உருவாக்கி அவற்றில்தான் இவை இருப்பதை உறுதி செய்யமுடியும்.

மிக எளிதான “எலெக்ட்ரான் - புரோட்டான் - நியூட்ரான்” கொண்ட அணுக்கள் என்பதிலிருந்து நாம் மிகவும் முன்னே வந்துள்ளோம். பல்வேறு துகள்கள், அவற்றை உள்ளடக்கிய கோட்பாடுகள், அவற்றைக் கண்டுபிடிக்கச் செய்யப்பட்ட பரிசோதனைகள், இவற்றின் பின்னணியில் இருந்த ஆராய்ச்சியாளர்கள் என அனைவரையும் பற்றித் தெரிந்துகொள்ள Robert Oerter எழுதியுள்ள “The Theory of Almost Everything: The Standard Model, the Unsung Triumph of Modern Physics” என்ற புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன். இந்தப் புத்தகம் எழுதப்பட்டபோது ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.