Friday, February 13, 2015

வாக்கு மாற்றம்

சமீபத்தில் நடந்த தில்லி தேர்தலில் காங்கிரஸுடைய வாக்குகள் பெருமளவு ஆம் ஆத்மி கட்சிக்கு மாறியதையே நான் முக்கியமானதாகப் பார்க்கிறேன். இனியும் காங்கிரஸால் பாஜகவை எதிர்க்க முடியாது என்பதை நன்கு புரிந்துகொண்ட மக்கள் ஒட்டுமொத்தமாகத் தங்கள் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு மாற்றியுள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய ஆறு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி தன் அடித்தளத்தை வலுவாகக் கட்டினால், அங்கு இப்போது காங்கிரஸுக்கு இருக்கும் வாக்குகள் பெருமளவு ஆம் ஆத்மிக்கு மாறிவிடும். அடுத்த தேர்தலில் இல்லாவிட்டாலும் 10-15 வருடம் கழித்து ஆம் ஆத்மி இவற்றில் ஏதேனும் சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கக்கூடும். ஆம் ஆத்மியின் வளர்ச்சி, காங்கிரஸின் வீழ்ச்சியாக மட்டுமே இருக்கும்.

ஆனால் பிஹார், உத்தரப் பிரதேசம் இரண்டிலும் ஆம் ஆத்மிக்கு உடனடியாகப் பிரகாசமான சூழல் இல்லை. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் இல்லவே இல்லை. வலுவான வேறு சில ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன.

தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர ஆம் ஆத்மிக்கு வேறு எங்கும் உடனடியாக இடம் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. யாருடைய வாக்குகளாவது மொத்தமாக நகர்ந்தால்தான் ஆம் ஆத்மி போன்ற புதுக்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸிலிருந்து நகரும் வாக்குகளைப் பெற சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் போட்டியிடும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது என்றாலும் பாஜக எதிர்ப்பு வாக்குகளால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பால் அல்ல. தேவ கவுடாவின் கட்சி தளர்ந்துபோயிருக்கிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகள் ஆம் ஆத்மியை நோக்கி நகர நிறைய வாய்ப்பிருக்கிறது.

ஆம் ஆத்மிக்கு இடதுசாரிகள், மமதா பானர்ஜி, நிதிஷ் குமார் போன்ற பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்கள்தான் ஆம் ஆத்மியால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படப்போகிறார்கள். இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் எல்லோருமே ஆம் ஆத்மி கட்சியால் ஈர்க்கப்படுவார்கள். ஆம் ஆத்மி, மமதாவுடனோ நிதிஷுடனோ கூட்டணி வைக்காது.

சொல்லப்போனால், ஆம் ஆத்மி கட்சி, யாருடனும் கூட்டு வைத்துக்கொள்ளாது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆட்சியை அமைத்தாகவேண்டும், எப்படியாவது எம்.எல்.ஏ, எம்.பி ஆகிவிடவேண்டும் என்று பதறும் கட்சிகள்தான் கூட்டணி வேண்டும், தொகுதிப் பங்கீடு வேண்டும் என்று அலைவார்கள். ஆம் ஆத்மி தனித்து நின்று தோல்வி அடைந்துகொண்டே இருந்தாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிக வாக்காளர்களைக் கவர முடியும்.

பிராந்தியக் கட்சிகள் சில மாநிலங்களில் தொடர்ந்து பதவியில் இருப்பார்கள், ஆனால் பலவீனமாகிக்கொண்டே போவார்கள். இந்தக் கட்சிகள் சிலவற்றுக்கு அடுத்த “வாரிசு” பற்றிய தெளிவின்மையே உள்ளது. அஇஅதிமுகவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு யார்? பிஜு ஜனதா தளக் கட்சியில் நவீன் பட்நாயக்குக்குப் பிறகு யார்? திரினாமுல் கட்சியில் மமதா பானர்ஜிக்குப் பிறகு யார்? இந்தக் கட்சிகள் எல்லாம் சட்டென்று உருக்குலைந்து போகக்கூடியவை.

எங்கு வாரிசுகள் இருக்கிறார்களோ, அவர்களும் சிறப்பான செயல்பாடுகளைத் தருவதாக இல்லை. தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள வாரிசுக் கட்சிகளில் இந்தப் பிரச்னைகளை நாம் பார்க்க முடியும்.

எனவே அடுத்த இருபது ஆண்டுகளில் இந்திய அரசியலில் பாஜகவும் ஆம் ஆத்மியும் மட்டுமே பெரும் சக்திகளாக இருப்பார்கள். பிற சக்திகள் மிகவும் பலவீனமாக ஆகிவிடுவார்கள்.