Friday, April 24, 2015

வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து

விக்கிபீடியா 'Hate Crime' என்பதை இவ்வாறு வரையறுக்கிறது:
In both crime and law, hate crime is a usually violent, prejudice motivated crime that occurs when a perpetrator targets a victim because of his or her perceived membership in a certain social group. Examples of such groups include but are not limited to: ethnicity, gender identity, language, nationality, physical appearance, religion, or sexual orientation.
எந்தவித நேரடி முன்விரோதமும் இல்லாத நிலையில், சம்பந்தமே இல்லாத ஒருவர்மீது இனம், மொழி, பால், தேசம், பாலுறவு விருப்பம், தோற்றம் ஆகியவை காரணமாக வெறுப்பினால் உந்தப்பட்டுத் தாக்குதல் நடத்துவதுதான் ‘வெறுப்புக் குற்றம்’ எனப்படுகிறது.

பொதுவாக இம்மாதிரியான குற்றங்கள் நடக்கும்போது அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் அறிவுஜீவிகளும் குறைந்தது வாய் வார்த்தையாலாவது கண்டிப்பார்கள். தமிழகத்தின் என்ன நடந்தது? பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டித்ததுடன் நேராகச் சென்று தாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள். காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் நேரில் சென்று பார்த்ததுடன் மாநிலத் தலைவரின் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.

தினம் ஒரு அறிக்கை விடும், ராமானுஜர் சீரியல் எழுதும் திமுக தலைவர் கருணாநிதியோ, அறிக்கைத் திலகம் பாமக ராமதாஸோ வாயைத் திறக்கவில்லை.  இடதுசாரிக் கட்சிகள், ம்ஹூம், ஒரு வார்த்தை இல்லை. ஆளும் அஇஅதிமுகவிடமிருந்து ஒரு சத்தம் இல்லை. அதிகாரபூர்வ எதிர்க்கட்சி தேமுதிகவிடமிருந்து ஒரு முனகல் இல்லை. நடைப்பயண நாயகன் மதிமுக வைகோ, புதுப்புயல் தமாக வாசன், தலித்துகளின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் ஆகியோரிடமிருந்து ஒரு குரல் இல்லை. இந்தக் கட்சிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்கூட வாய் திறக்கவில்லை.

திராவிடர் கழகத்தின் வீரமணி, தங்கள் அமைப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, தாங்கள் இதுபோன்ற தாக்குதல்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.

பத்திரிகையாளர் ஞாநி சொல்கிறார்: “இதுபோன்ற செயல்களை பெரியாருடன் தொடர்புபடுத்தவே கூடாது. அவர் அமைப்புரீதியான மாற்றங்களை வன்முறையற்ற வழியில் செயல்படுத்தவே விரும்பினார். இந்த நபர்கள் தங்களைப் பெரியாரியர்கள் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது. உரிமைகளை மீறும் இந்தச் செயல்கள் பகுத்தறிவின் வரையறைக்குள் வரமாட்டா.”

இம்மாதிரி பெரியாரியர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவே முடியாது. இம்மாதிரியான தாக்குதல்களில் தங்கள் பங்கு என்ன என்பதை பெரியாரியர்கள் விளக்கியே ஆகவேண்டும். இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பரப்பி வந்திருக்கும் வெறுப்பு விதைதானே இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது? ஸ்வராஜ்யா இதழில் நான் எழுதியுள்ள கட்டுரையில் 2006-ல் நடந்த சில செயல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

சரி, மனித உரிமை அமைப்புகள் என்று சில உள்ளனவே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். அப்படி ஒன்றும் கருத்து சொல்லக்கூடிய செயலாக இது அவர்களுக்குத் தெரியவில்லை போல.அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் போன்றவர்கள் பொதுவான மனித உரிமைகளுக்காக மிகவும் போராடுபவர்கள். அவர்களுக்கு இதுகுறித்துச் சொல்ல ஏதுமில்லை.

தனிப்பட்ட முறையில் நீ கண்டித்தாயா, நீ கண்டித்தாயா என்று கேட்பது எனக்கு ஏற்புடையது அல்ல. ஆனால் இதற்காக என்று இருக்கும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்கூட இதுகுறித்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர் நிலை என்ன, பார்ப்பன வெறுப்பு என்பது எப்படிப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை நன்கு விளக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நான் எழுதிய கட்டுரை ஒன்று மிகக் கடுமையான எதிர்வினைகளைப் பெற்றது. இல்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்குகிறேன் என்றார்கள். இன்று என்ன நடந்துள்ளது என்று பாருங்கள்.

சமூக வலைத்தளங்களில் பல தனி நபர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் unequivocal-ஆகக் கண்டிக்காமல், கூடவே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பல விஷயங்களைப் பற்றிப் பேசியதையும் பார்க்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தின் உண்மையான அவலம் அவர்கள்கூட இல்லை. இந்த விஷயத்தை எள்ளி நகையாடிய சிலர்தான். அவற்றைப் பார்ப்போம்.

1. ஆந்திராவில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூப்பாடு போடாத சிலர் இப்போது இரண்டு பேருடைய நூல் அறுந்ததற்குக் கொதிப்பது ஏன்?

இவை இரண்டும் ஒப்பிடப்படக்கூடிய செயல்களே அல்ல. நூல் அறுந்தது சாதாரண விஷயம்தான். உயிர் போகவில்லைதான். ஆனால் என்னவிதமான ஒப்பீடு? இரண்டும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதுதானே? இதைக் கண்டிப்பதற்கு அதைக் கண்டித்து வாங்கிவந்த சான்றிதழைக் காண்பிக்கவேண்டுமா? இருவரும் தமிழர்கள்தானே? ஒரு பக்கம் சுட்டது ஆந்திர போலீஸ். இன்னொரு பக்கம் தாக்கியது தமிழர்கள். தாக்கப்பட்டவர்கள் வெறும் பார்ப்பனர்கள். பிரச்னை அதுதானா?

2. நூலைதானே அறுத்தார்கள்? அதற்கு ஏன் இந்தப் பொங்கல்?

பிரமாதம். புடைவையைத்தானே பறித்தார்கள்? சட்டையைத்தானே கிழித்தார்கள்? லேசாக மேலேதானே கையை வைத்தார்கள்? கொஞ்சமாகக் கீழேதானே தள்ளினார்கள்? ஒரு தட்டுதானே தட்டினார்கள்? வெறும் இரண்டு பேரைத்தானே தாக்கினார்கள்? அடடா, அடடா!

3. அடக்குமுறையின் வெளிப்பாடுதான் பூணூல். அதனை அவர்களாகவே நீக்கியிருக்கவேண்டும். இல்லை என்பதால் இந்தச் செயலில் ஈடுபடவேண்டியிருந்தது.

இதனை இந்தப் பதிவில் எதிர்கொள்ளப்போவதில்லை. தனியாக எழுத உள்ளேன். எந்தச் சட்ட வரையறைக்குள்ளும் அடங்காத ஒரு எதிர்பார்ப்பு இது. பிறர் எம்மாதிரியான மதச் சடங்குகளைச் செய்யவேண்டும் என்று எவ்விதத்திலும் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. அவரவர் விரும்பிய வகையில் சட்டத்துக்கு உட்பட்டு மத வழிபாடு செய்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

4. பொதுமக்கள் கூடும் இடங்களில் திறந்த மார்புடன் இருக்கும் இவர்களை சட்டை போடச் சொல்லவேண்டும்.

தமிழகத்தில் நான் பார்த்தவரை வயலில் விவசாயம் செய்வோர் முதல் வீடுகளில், தெருக்களில், பல பொது இடங்களில் வெறும் துண்டுடனோ, அதுகூட இல்லாமலோ திறந்த மார்புடன் கீழாடை மட்டும் அணிந்துகொண்டு அனைத்து சாதி ஆண்களும் செல்கிறார்கள். இதனை ஆபாசம் என்றும் பெண்களுக்கு எதிரானது என்றும் சொல்பவர்கள் சட்டம் கொண்டுவந்து மாற்ற முயலுங்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக, மாநிலத்தின் அனைத்து ஆண்களும் தெருவில் இறங்கும்போது இதனைச் செய்யவேண்டியிருக்கும்.

***

தமிழகத்தில் பொதுவெறுப்பின் அடிப்படையில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திப்பது தலித்துகள்தான். சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தலித்துகளைத் தாக்குகின்றனர். தலித் மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்ததற்காக கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தின் ஒரு பள்ளியில் “தாளாளர் சாலமன் ஜெபா, அவரது மனைவியும் தலைமையாசிரியருமான ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் ஹெலன் அருள் எமிமாள், மேரி சுஜித்ரா, ஏஞ்சலின் ஸ்டெபி, ஜேக்கப், ஆக்னஸ், சரோஜா” ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இவை அனைத்துமே ஹேட் கிரைம் என்பதன்கீழ் வரும். சென்னையில் இரு பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்.

Sunday, April 12, 2015

நம்பிக்கை

இன்று காலை, அரிமா சங்கம் நுங்கம்பாக்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 75 பெண்களுக்கு செவிலியர் பயிற்சி அளிக்கிறார்கள். ஓராண்டுக்கான இந்தப் பயிற்சியை முடித்ததும் அந்தப் பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குமுன் இதே பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் உரையாடிவிட்டு நான் எழுதிய பதிவு இதோ.
 

இந்தப் பெண்கள் அனைவரும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து வருபவர்கள். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அரசுப் பள்ளிக்கூடங்களில் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். மேற்கொண்டு படிக்கவைக்க பெற்றோர்களிடம் வசதி இல்லை அல்லது விருப்பம் இல்லை. (இதே குடும்பங்கள் சிலவற்றில் ஆண் பிள்ளைகள் படிக்கவைக்கப்படுகிறார்கள்.) 18 வயதில் திருமணம் என்ற விஷச் சுழலுக்குள் தள்ளப்படும் நிலையில்தான் இந்தப் பெண்கள் இருக்கிறார்கள்.

சுமார் 80 பெண்களுக்கு ஓராண்டுப் பயிற்சி (உறைவிடம், உணவு சேர்த்து) அளிக்க சுமார் 20 லட்ச ரூபாய் ஆகிறது. இம்முறை இதற்கான பணச் செலவு அனைத்தையும் ஹூயிண்டாய் கார் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அரிமா சங்கத்தைச் சேர்ந்த கஸ்தூரிரங்கன் இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்திவருகிறார். ராமகிருஷ்ணா மடம், தங்கவைத்தல், பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்தல், பிறகு வேலைக்கு ஏற்பாடு செய்தல் ஆகியவற்றைச் செய்கிறது. இந்த மாணவிகள் அனைவருக்கும் பயிற்சி முடிவதற்கு முன்பாகவே வேலை கையில் உள்ளது. சென்னையில் மருத்துவமனைகளுக்கு மேலும் நர்ஸ்கள் தேவையாக இருக்கிறார்கள்.

இந்தப் பெண்கள் ஒருவிதத்தில் அதிர்ஷ்டம் செய்தவர்கள். வெளியிலிருந்து ஏற்படும் இந்த இடையீடு இல்லாவிட்டால் இவர்கள் வாழ்க்கை சிக்கலானதாகவே இருக்கும். இதுபோல் பல லட்சம் பெண்கள் இருக்கிறார்கள். இந்தத் தலையீடுகளால் நாம் சில பத்து பெண்களை மட்டுமே காக்கிறோம்.

இப்பெண்கள் படித்த பள்ளிகளில் வேண்டிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கிடையாது. பத்தாம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் நடத்த ஒரே ஒரு ஆசிரியர் ஒரு வகுப்புக்கு. ஆனால் +1/+2 வகுப்புகளை அப்படி நடத்திவிட முடியாதே. அரசு வேண்டிய அளவு பட்ஜெட்டை ஒதுக்குவதில்லை. ஒப்பந்த ஊதியத்தில் வேலை செய்யப் பகுதிநேர ஆசிரியர்களும் கிடையாது. ராமகிருஷ்ணா மடம், சுமார் 80 ஆசிரியர்களை நியமித்து சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பள்ளிக்கு வெளியே 3 மணி நேரம் பாடம் நடத்த ரூ. 150 (மணிக்கு ரூ. 50!) என்று தருகிறதாம். இந்த 80 ஆசிரியர்களால் எத்தனை கிராமங்களில் சென்று பாடம் நடத்த முடியும்? படிப்பில் ஆசை இருந்தாலும் ஒன்றுமே புரியாதபோது எப்படிப் படிப்பில் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைப்பது என்று இந்த மாணவிகள் கேட்டார்கள்.

வேலை செய்துகொண்டே பணத்தைச் சேமிப்பதன் தேவை, மேற்கொண்டு தொலைநிலைக் கல்வி மூலம் படித்தல், புதிய திறன்களைக் கற்றல், தங்கள் வாழ்க்கைமீதான தங்கள் உரிமையை குடும்பத்தவருக்கு விட்டுக்கொடுக்காமல் இருத்தல் ஆகியவை குறித்து மாணவிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதன்பின் தனியான உரையாடலின்போது அரசியல் குறித்து நிறையப் பேசினோம். தங்கள் நிலை தங்கள் பிள்ளைகளுக்குப் பிற்காலத்தில் வரக்கூடாது என்பதுதான் இவர்களின் கோரிக்கையாக இருந்தது. தீவிர அரசியல் நிலைப்பாடும் செயல்பாடும் இருந்தால்தான் இவர்கள் தங்கள் நிலையை மாற்ற முடியும் என்பது குறித்து இவர்களிடம் நிறையப் பேசினேன். பெருகியுள்ள மதுக்கடைகள், குடும்பங்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுதல், சிறுவயதில் திருமணம் செய்துகொள்வதற்கு இந்தப் பெண்களின்மீது சுமத்தப்படும் அழுத்தம் போன்ற பலவற்றைக் குறித்து உரையாடினோம்.

இனியும் தொடர்ந்து உரையாடுவோம்.

Thursday, April 09, 2015

ஜெயமோகனின் ‘பிரயாகை’

ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் எழுதிவருகிறார். இந்த மீளுருவாக்கம் பல நாவல் தொகுதிகளாக வெளிவரப்போகிறது. இந்த வரிசையில் அவர் எழுதிய முதல் நான்கு நாவல்கள் - முதற்கனல்,  மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் - நற்றிணை வாயிலாக வெளியாயின. இப்போது ஐந்தாவது நாவல் ‘பிரயாகை’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாக உள்ளது. ஏற்கெனவே வெளியான நான்கு நாவல்களும்கூட இனி கிழக்கு பதிப்பகத்தின் மறுபதிப்புகளாக வெளியாகும்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் இரு வடிவங்களில் வெளியாகின்றன. ஒன்று, வண்ணப்படங்களுடன் கூடிய கெட்டி அட்டை செம்பதிப்பு. இரண்டாவது படங்கள் ஏதுமின்றி சாதா பைண்டிங் பதிப்பு. பிரயாகையின் கெட்டி அட்டை செம்பதிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 1088 ராயல் சைஸ் பக்கங்கள் + 92 வண்ணப் பக்கங்கள். விலை ரூ. 1,500/-


இந்த நாவலின் மையச்சரடு திரௌபதி. புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:
ஒரு சிறு வஞ்சத்திலிருந்து மாபெரும் வஞ்சங்கள் முளைத்தெழுவதை, அவை ஒன்றிலிருந்து ஒன்றெனப் படர்ந்து பெரும் மானுடத்துயரம் நோக்கிக் கொண்டுசெல்வதைச் சித்திரிக்கும் நாவல் இது. மகாபாரதத்தில் திரௌபதியின் பிறப்பு ஓர் உச்சம். எரிதழலில் பிறந்த கன்னி அவள் என்கிறார் வியாசர். சிறுமைக்கு ஆளான துருபதனின் வஞ்சமே திரௌபதியாக முளைத்தது. அது சிறுமைப்படுத்தப்பட்ட துரோணரின் வஞ்சத்தின் விளைவு. வஞ்சம் என்பது ஒரு விதை. காடாகும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டது.

பிரயாகை என்பது நதிச்சந்திப்பு. ஐந்து நதிகள் இணையும் பெருநதியான கங்கைக்கு நிகராக இந்நாவலில் திரௌபதி நிறைந்திருக்கிறாள். பேரழகும் பெருங்கருணையுமாகப் பிறந்த பேரழிவின் தெய்வம் அவள். இது அவளுடைய பிறப்பின் வளர்ச்சியின் கதை. ஐங்குழல் கொற்றவையாக அவள் ஆகி நிற்கும் முழுமையில் முடிவடைகிறது.
இந்தச் செம்பதிப்பை முன்பதிவு செய்வதற்கான சுட்டி.

Wednesday, April 08, 2015

ஊழல் சாம்ராஜ்ஜியம்

தற்போது நடந்துகொண்டிருக்கும் அஇஅதிமுக ஆட்சியை தமிழக ஊழல் வரலாற்றின் உச்சம் என்று சொல்லலாம். ஊழல் பற்றி என் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் அதனைப் பெரும்பாலும் “ஜெயலலிதா vs கருணாநிதி” என்று சுருக்கி, “ஏன் திமுக மட்டும் ஊழல் செய்யவில்லையா?” என்று கேட்பார்கள். இவ்விருவரையும் விட்டால் வேறு கதி இல்லை என்பதால், ஊழலை நகர்த்திவிட்டு பிற காரணங்களுக்காக திமுகவா அல்லது அதிமுகவா என்று தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்திலேயே மக்கள் உள்ளனர்.

நான் இப்போது பேச வருவது தேர்தல் பற்றியே அல்ல. அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது பற்றியல்ல. இப்போதைய ஆட்சியில் நடக்கும் ஊழல் குறித்து மட்டுமே. இதனால் முந்தைய ஆட்சியில் ஊழலே இல்லை என்றோ இனி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் நடக்காது என்றோ நான் சொல்லவில்லை என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.

ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி 2011-ல் ஆரம்பித்ததும், ஊழல் மிகவும் தெளிவாக, திட்டமிட்ட வகையில், கட்டுக்கோப்பாக நடக்கிறது. எனக்குத் தெரிந்த சில உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். புதிய பள்ளிகூடங்களுக்கான அனுமதி, பழைய பள்ளிகளுக்கான அனுமதி நீட்டிப்பு ஆகியவற்றுக்கு மிகத் தெளிவாக ரேட் கார்ட் போடப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. புதிய தனியார் பள்ளி (சமச்சீர்) தொடங்கி 1-8 வகுப்பு வரை நடத்த அனுமதி பெறவேண்டுமானால் ரூ. 6 லட்சம் கல்வி அமைச்சருக்குத் தரவேண்டும். இதனை கல்வி அமைச்சரின் தனிச் செயலர் பெற்றுக்கொள்வார். 9-10 வகுப்புகளுக்கு நீட்டிக்க, மேலும் ரூ. 4 லட்சம். 11-12 வகுப்புகளுக்கு இன்னுமொரு ரூ. 4 லட்சம். பள்ளிகளின் அனுமதி நீட்டிப்புக்குத் தலா ரூ. 2 லட்சம். சிபிஎஸ்இ பள்ளி தொடங்க, மாநில அரசிடமிருந்து நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் பெற 35 லட்ச ரூபாய். என் நண்பர்கள் பலர் பள்ளிகளை நடத்திவருகின்றனர். இந்தத் தகவல் அவர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது.

நீங்கள் புதிய பள்ளிக்கூடம் ஆரம்பித்து, இந்தப் பணத்தைத் தரவில்லை என்றால், எவ்வகையிலும் உங்கள் பள்ளிக்கு அனுமதி தரப்படாது. இந்தப் பணம் தவிர்த்து, உள்ளூர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு 50,000 முதல் 60,000 வரை செலவாகும். அது தவிர, பஞ்சாயத்து அல்லது முனிசிபாலிட்டி அதிகாரிகளுக்குத் தனியாகக் கப்பம் தரவேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களைப் பெறுபவர்கள் மொத்த ஒப்பந்த அளவில் குறிப்பிட்ட சதவிகிதம் லஞ்சம் தரவேண்டும். இந்தப் பணத்தை துறையில் பொறியாளர் பெற்று, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தருவார். நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டதுபோல், பொது நூலகத்துறையிடமிருந்து நூலக ஆணை பெற விரும்புவோர், ஆர்டர் தொகையில் 20% முன் லஞ்சமாகக் கொடுத்தே ஆகவேண்டும்.

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் தலா 20-25 லட்ச ரூபாய் பெறப்படுகிறது. இது உயர் கல்வி அமைச்சர் வாயிலாகத் தொகுக்கப்பட்டு, மேல்நோக்கிச் செல்கிறது.

எல்லாத் துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதில் கணிசமாகப் பணம் பெறப்படுகிறது. இது சார்ந்த தகவல்கள் விவசாயத் துறைப் பொறியாளர் முத்துக்குமாரசுவாமி தற்கொலை வழக்கில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

முத்துக்குமாரசுவாமிபோல நேர்மையாகப் பணியாற்றும் ஓர் அதிகாரியின் நிலை தமிழகத்தில் இதுதானா? ஒன்று அவர் லஞ்சம் வசூலித்துத் தரவேண்டும்; அல்லது அப்படிச் செய்யாவிட்டால் அவரது நேர்மையால் பொறுக்கிகள் இழக்கும் பணத்தை அவர் தனது சொந்தக் காசிலிருந்து தரவேண்டும் என்ற நிலைக்கு நாம் சென்றிருப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆளும் கட்சியினரின் உந்துதலில், சாதாரண மக்களிடமிருந்து ஒப்பந்தக்காரர்களிடமிருந்தும் அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள். இது தமிழக அரசில் வேலை செய்யும் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இந்த அரசு ஊழியர்களில் ஒரு சிறு சதவிகிதத்தினராவது நடக்கும் அட்டூழியங்களைக் கண்டு மனம் புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை (1) ஏன் தடுக்கவேண்டும் (2) எப்படித் தடுப்பது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். முத்துக்குமாரசுவாமியின் தற்கொலை ஒரு டிப்பிங் பாயிண்ட். இந்த நேர்மையான அரசு ஊழியர்கள் என்ன செய்யவேண்டும்?

முதலில், நாட்டு மக்கள் அனைவரும் நன்கு தெரிந்துகொள்ளும் அளவுக்கு அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலை ரகசியமான முறையில் வெளியே அம்பலப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யும்போது தங்களுக்குப் பிரச்னை ஏற்படாதவாறு கவனமாகச் செய்யுங்கள். பத்திரிகை நண்பர்களிடம் உங்கள் தகவல்களைத் தாருங்கள். ஏதேனும் ஒரு பத்திகையாவது இவற்றை வெளிப்படுத்தும். இல்லாவிட்டால் இணையம் இருக்கவே இருக்கிறது. தமிழகத்துக்கு என்று நாமே விக்கிலீக்ஸ் போன்றதோர் இணையத்தளத்தை உருவாக்குவோம்.

இந்தத் தகவல்கள் வெளியாகும்போது அரசு ஏதேனும் செய்துதான் ஆகவேண்டும். ஜெயலலிதா குற்ரவாளியாக கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் ஓர் அதிகாரி தற்கொலை செய்துகொண்டிருப்பதால்தான், இன்று சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் சரியான நேரம். இன்னும் பிறர்மீதும் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருவோம். இனி யார் அரசு அமைத்தாலும், ஊழல் செய்வதற்கு இடம் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். அதற்கு முதல் கட்டமாக, தற்போது நடந்துவரும் அட்டூழியங்களை வெளிப்படுத்துவோம்.

Monday, April 06, 2015

மின்வணிகம்

எங்கள் அலுவலகத்தில் சென்ற வாரம் சேல்ஸ் மீட்டிங் நடந்தது. விற்பனை அணியில் மொத்தம் 16 பேர். நான்கு பேர் சென்னைக்காரர்கள். மீதம் 12 பேர் தமிழகத்தின் வெவ்வேறு நகரத்தில் இருப்பவர்கள் - கடலூர், வேலூர், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, இப்படி நகரம் அல்லது அதை ஒட்டி இருக்கும் பகுதியாக இருக்கும். அவர்கள் மின்வணிகத் தளம்மூலம் பொருள்களை வாங்குகிறார்களா என்று ஒரு சின்ன ‘கருத்துக் கணிப்பு’ நடத்தினேன்.
  • அனைவரும் மொபைல் மூலம்தான் (3ஜி அல்லது 2ஜி) இணைய இணைப்பு பெறுகிறார்கள். வீட்டில் டி.எஸ்.எல் அல்லது ஃபைபர் இணைப்பு இல்லை.
  • 16 பேரில் 9 பேர் மட்டுமே இணையம் மூலம் பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். மீதி 7 பேர் இதுவரை வாங்கியதில்லை.
  • இணையம் மூலம் பொருள்களை வாங்குபவர்கள் கணினி அல்லது மொபைல் இரண்டையும் பயன்படுத்திப் பொருள்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.
  • வாங்கியுள்ள அனைவருமே (9 பேருமே) COD முறைமூலம் மட்டுமே பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். ஒருவர்கூட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட்பேங்கிங் ஆகிய முறைகளைப் பயன்படுத்தவில்லை.
  • அவர்கள் பொருள்களை வாங்கப் பயன்படுத்தியுள்ள தளங்கள்: flipkart.com, snapdeal.com, zovi.com, jabong.com ஆகியவை. இதுவரை ஒருவரும் amazon.com தளத்தில் ஒன்றையும் வாங்கவில்லை.
  • வாங்கியுள்ள பொருள்கள்: பென்-டிரைவ், மொபைல் போன், ஷூ, துணி ஆகியவை. (புத்தகங்களை ஒருவர்கூட வாங்கவில்லை:-)
  • வாங்குவதற்கான முக்கியக் காரணங்கள்: விலை மலிவு (ஆஃபர்), மொபைல் போன்றவற்றில் கிடைக்கும் ரேஞ்ச் (கடைகளில் காணக் கிடைக்காத பொருள்களும் இணையத்தில் கிடைக்கின்றன).
  • பிரச்னைகள்: COD முறையில் வாங்கும்போது பொருள்களைக் கொடுக்க வருபவர் பேக்கேஜைத் திறந்து பார்க்க அனுமதிப்பதில்லை. பணம் வாங்கிக்கொண்டு, டப்பாவைக் கொடுத்துவிட்டு உடனடியாக ஓடுவிடுகிறார். ஒருமுறை முற்றிலும் உடைந்த பொருள் ஒன்று உள்ளே இருந்தது... ஷூ அளவு சரியாக இல்லை. மாற்றுவதற்குபதில் பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டேன்... இப்படி.
அடுத்து அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் விரிவான சில கருத்துக் கணிப்புகளைச் செய்யலாம் என்றிருக்கிறேன். மின்வணிகம், செல்ஃபோன் பயன்பாடு, இணையப் பயன்பாடு, ஸ்மார்ட்ஃபோன் குறுஞ்செயலிகள் பயன்பாடு... இப்படி.

Wednesday, April 01, 2015

மைக்ரோஃபைனான்ஸ்

வினவு தளத்தில் குற்றவாளிக் கூண்டில் பத்ரி சேஷாத்ரி என்று ஒரு பதிவு எழுதியிருந்தனர். அவர்களது குற்றச்சாட்டுகள் இரண்டு:


(1) வங்கதேசத்தில் குறுங்கடன் என்ற முறையை அறிமுகப்படுத்திப் பெரிதாக்கிய கிராமீன் வங்கியின் தந்தை முகமது யூனுஸ் என்பவரை நான் பாராட்டி எழுதியது, பேசியது... இப்போது யூனுஸ் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே மக்களின் பணத்தைத் திருடும் ஒரு குற்றவாளியை நான் ஆதரித்துள்ளேன்.

(2) குறுங்கடன் என்னும் திட்டத்தை ஆதரிப்பது. அதற்காக ஒரு வலைப்பதிவையே உருவாக்கியிருப்பது. இந்தத் திட்டம் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுவது.

===

சுமார் பத்தாண்டுகளுக்குமுன் மைக்ரோஃபைனான்ஸ் பற்றி அறிந்துகொள்ள முற்பட்டபோதுதான் முகமது யூனுஸ் பெயரை நான் கேள்விப்பட்டேன். அதனையடுத்து அவரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். வங்கதேசத்துக்குப் பலமுறை நேரில் சென்றுள்ளேன். அங்கே நிலவும் ஏழைமை எனக்குத் தெரியும். இந்தியாவைவிட மோசமான நிலையில் இருக்கும் நாடு. அத்துடன் அந்நாட்டில் நிலவும் பெண் விரோதப் பார்வையும் சேர்ந்துகொண்டிருப்பதால், அங்குள்ள பெண்களின் நிலை இந்தியாவில் இருப்பதைவிட மோசம். அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர் யூனுஸ்.

அவர்மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில உண்மை இருக்கலாம். அவை பரிசீலிக்கப்படவேண்டியவை. அவர் அரசியலில் ஈடுபட விரும்பியபோது தற்போதைய பிரதமரான ஷேக் ஹசீனா அவரை எப்படியெல்லாம் ‘டேமேஜ்’ செய்யமுடியுமோ அப்படியெல்லாம் செய்தார். கிராமீன் வங்கியிருந்து யூனுஸ் தூக்கி எறியப்பட்டார். யூனுஸ் மீதான குற்றச்சாட்டுகளை வங்கதேச அரசியலின் அடிப்படையிலும் ஹசீனா-யூனுஸ் உரசலின் அடிப்படையிலுமே பரிசீலிக்கவேண்டும்.

ஆனால் யூனுஸ்மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் உருவாக்கிய குறுங்கடன் திட்டத்தை எவ்வகையிலும் நீர்த்துப்போகச் செய்யாது என்பதே உண்மை.

குறுங்கடன் தொடர்பான என் வலைப்பதிவுகளை நான் 2009-லேயே நிறுத்திவிட்டேன். அந்த வலைப்பதிவை நடத்தத் தேவையான நேரம் என்னிடம் இல்லை. நான் தற்போது குறுங்கடன் கம்பெனி ஒன்றில் இயக்குனராக இருக்கிறேன். அந்நிறுவனத்தில் எனக்குப் பங்குகள் இல்லை. இண்டிபெண்டண்ட் டைரக்டர். அவ்வளவே. அதனால் இந்தியாவில் குறுங்கடன் தொடர்பாக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஓரளவு நன்கு அறிவேன்.

குறுங்கடன் குறித்து வினவு பதிவில் எழுதப்படுவது அத்துறை பற்றித் துளியும் அறியாதவர்களுடைய கற்பனையே.

குறுங்கடன் வட்டி விகிதம் அதிகமானதுதான். ஆனால் கந்துவட்டியைவிட மிக மிகக் குறைவானது. ஓரளவு வசதி படைத்தவர்கள் வாங்கும் பெர்சனல் லோன் வட்டி விகிதத்தைவிடச் சற்றே அதிகமானது. அவ்வளவுதான்.
குறுங்கடன், கந்துவட்டியைப் போல பாஸ்போர்ட், ரேஷன் கார்ட், லைசென்ஸ் என்று எதையும் பிடுங்கி வைத்துக்கொள்ளாது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும். கடனைத் திரும்பக் கொடுக்காதவர்களை ஆள் வைத்து மிரட்ட முடியாது. இதனை ரிசர்வ் வங்கி மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறது. திரும்பக் கிடைக்காத பணம் வாராக்கடனாகத்தான் கருதப்படவேண்டும். அதற்கு ஏற்ப ஒவ்வொரு நிறுவனமும் புரொவிஷன் ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

எந்தத் தொழில் செய்யவேண்டும் என்றாலும் அதற்கான முதலீடு மூன்று வகையில் வரவேண்டியிருக்கும். (1) பங்கு முதலீடு, (2) கடன், (3) தொழிலிருந்தே கிடைக்கும் லாபம் (internal accruals). மிகச் சிறிய தொழிலாக இருக்கும் பட்சத்தில் சொந்தப் பணமும் உறவினர், நண்பர்கள் பணமும்தான் பங்கு முதலீடாக வரும். கடன் பெறுவதற்கு சிறு நிறுவனங்களுக்கு இன்று வழியே இல்லை. எந்த வங்கியும் கை விரித்துவிடும். அப்பளம் இட்டு விற்க, கூடை முடைந்து விற்க, இஸ்திரிப் பெட்டியும் வண்டியும் வாங்கித் தொழில் நடத்த, தெருவில் தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை நடத்த, பூ வாங்கித் தொடுத்து விற்க, காய்கறி, இளநீர் விற்க, ஜூஸ் கடை நடத்த என்று இன்று லட்சோபலட்சம் மக்களுக்கான வாழ்க்கை ஆதாரத்தை நடைமுறைப்படுத்த கடன் தேவை. இந்தக் கடனை பாரம்பரியமாக அதிக வட்டியில் கந்துவட்டிக்காரர்கள் கொடுத்துவந்தனர். இவர்கள் ஆண்டுக்கு 36% முதல் 120% வரை வசூலிக்கக்கூடியவர்கள். உலகின் பல பாகங்களில், உதாரணமாக தென்னமெரிக்காவில், 70%-க்குமேல் வட்டி வசூலிக்கும் குறுங்கடன் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் Non Banking Finance Corporation - Microfinance (NBFC-MF) என்று பதிந்துகொண்டிருக்கும் நிறுவனங்களால் அப்படிச் செய்ய முடியாது. 30%-க்கும் கீழாகத்தான் வட்டி வசூலிக்க முடியும். அதிலும் மேற்கொண்டு பல கட்டுப்பாடுகள் உள்ளன. உங்கள் நிறுவனம் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்திலிருந்து 10%-க்குமேல் இருக்க முடியாது. இன்று நீங்கள் பெறும் கடன் 16% வட்டியிலானது என்றால், நீங்கள் 26% வட்டிதான் வசூலிக்க முடியும்.

யூனுஸின் கிராமீன் நிறுவனம், வங்கி என்னும் அந்தஸ்து கொண்டது. அதனால் அது வைப்பு நிதிகளைப் பெற முடியும். சேமிப்புக் கணக்கை மக்களுக்குத் தர முடியும். அந்தப் பணத்தையெல்லாம்கூடக் கடனாக வெளி ஆட்களுக்குத் தரலாம். இதனால் வங்கிகளுக்கு cost of funds குறைவாக உள்ளது. ஆனால் NBFC-MF நிறுவனங்களால் வைப்பு நிதிகளைப் பெற முடியாது. அவர்கள் முதலில் ஒரு குறிப்பிட்ட ஈக்விடியுடன் நிறுவனத்தை ஆரம்பிக்கவேண்டும். பின்னர் அவர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கவேண்டும். அவர்கள் வாங்கும் கடனுக்குப் பிணை இருக்கலாம். ஆனால் அவர்கள் கொடுக்கும் கடனுக்குப் பிணை கிடையாது! இப்போது இந்தியாவில் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு வங்கிகள் கொடுக்கும் கடன் 15-16% வட்டியில் கிடைக்கிறது. அதற்குமேல் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களுக்குச் செலவு இருக்கிறது. அந்தச் செலவைச் சரிக்கட்டி லாபம் சம்பாதிக்கவேண்டிய அளவுக்கு அவர்கள் வட்டி விகிதத்தை வைக்கவேண்டியிருக்கிறது. அதனால்தான் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனக் கடன்களின் வட்டி 26-27% என்று இருக்கிறது.

இந்தியாவின் பணவீக்கம் காரணமாக இங்கே ரிசர்வ் வங்கியின் ரெபோ ரேட் (7.5%) அதிகமாக இருக்கிறது. அதனால் வங்கிகளின் பிரைம் லெண்டிங் ரேட் (பி.எல்.ஆர்) அதிகமாக இருக்கிறது. ரெபோ ரேட் 3-4% என்று வந்துவிட்டால், மைக்ரோஃபைனான்ஸ் வட்டி விகிதம் 20%-க்கும் கீழாகப் போகும். இங்கு பிரச்னை பொருளாதாரத்தைச் சார்ந்தது. ஏழைகளை ஏமாற்றிச் சுரண்டவேண்டும் என்ற எண்ணத்தால் வருவதல்ல இந்த வட்டி விகிதம்.

கலெக்டிவ் ரெஸ்பான்சிபிலிடி என்ற வகையில் ஐந்தைந்து பேர்களை - பெண்களை - குழுக்களாக ஆக்கி, அந்தக் குழுவில் உள்ளவர்கள் அனைவருக்கும் கடன் தரப்படுகிறது. அனைவரையும் வட்டியையும் முதலையும் கட்டவைக்கவேண்டியது குழுவின் கடமை. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளின்படி ஒருவருக்கு ரூ. 15,000/-க்குமேல் கடன் கொடுக்க முடியாது. மேலும் ஒருவர் அதிகபட்சம் மூன்று  குறுங்கடன்களை மட்டுமே ஒரே நேரத்தில் வாங்கியிருக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக சிபில் போன்ற டேட்டாபேஸில் ஒருவர் வாங்கிய கடனை ஒழுங்காகக் கட்டுகிறாரா இல்லையா என்ற தகவல் போய் உட்கார்ந்துகொள்கிறது. அந்த அடிப்படையில் ஒழுங்காகக் கடனைக் கட்டுபவர் என்பவருக்குத்தான் கடன் தரப்படுகிறது.

இந்தக் கடனை வாங்கும் மக்களில் பலரும் தொழிலை அபிவிருத்தி செய்வதைவிட, கல்யாணம், மருத்துவம், கல்வி போன்றவற்றுக்குச் செலவழித்துவிடுகிறார்கள். பின்னர் தங்கள் பிற வருமானத்தைக் கொண்டு கடனை அடைக்கிறார்கள். அதே நேரம் மிகப் பலர், தங்கள் தொழிலை மேற்கொண்டு வளர்க்க இந்தக் கடனைப் பயன்படுத்துகிறார்கள்.

வங்கிகள் இம்மக்களைக் கண்டுகொள்வதே இல்லை. இவர்களுக்குப் பெரும்பாலும் வங்கியில் கணக்குகூடக் கிடையாது. (இப்போது ஜன் தன் யோஜனா மூலம் ஒருவேளை கணக்குகள் கிட்டலாம்.) இப்படிப்பட்ட மக்கள் வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் குறுங்கடன் நிறுவனங்களைப் பற்றி நொள்ளை சொல்ல வினவு வரிந்துகட்டிக்கொண்டு வருவதேன்?

அவர்களுடைய சித்தாந்தப்படி, முதலாளித்துவ சமூகத்தில் முதலாளித்துவ அமைப்பு எக்காலத்திலும் ஏழைகளுக்கு நன்மை செய்துவிட முடியாது. குறுங்கடன் நிறுவனங்கள் இதற்கு மாறானதாக இருக்கின்றன. அதனால்தான் அதில் என்ன குளறுபடிகள் உள்ளன என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்வையிடுகிறார்கள்.

பிரச்னைகள் இல்லாமல் இல்லை. எஸ்கேஎஸ் மைக்ரோஃபைனான்ஸ் என்ற நிறுவனம், பங்குச்சந்தையில் பட்டியல் செய்யப்பட்டு, அதன் பங்கு விலைகள் விண்ணை நோக்கிப் பறந்தன. இதனால் உண்மையில் ஒட்டுமொத்த மைக்ரோஃபைனான்ஸ் துறைக்கே பிரச்னைதான் ஏற்பட்டது. ஆந்திராவில் கடன்களை வசூல் செய்வதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அரசியல்வாதிகள் களத்தில் இறங்கினர். ஆந்திரா தனியான ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆந்திராவை மட்டுமே மையமாக வைத்து இயங்கிவந்த மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்கள் திவாலாயின. அதன்பின் ரிசர்வ் வங்கி தலையிட்டு சில பொதுவான கட்டுப்பாடுகளை விதித்தது. கட்டுப்பாடுகள் வரவர, இந்தத் தொழிலில் ஒருவித ஒழுங்கு ஏற்பட்டுள்ளது.

மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களை நடத்துவதில் கட்டாயம் லாபம் உள்ளது. அதனால்தான் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குகிறார்கள். அதனால்தான் வங்கிகள் இந்நிறுவனங்களுக்குக் கடன் தருகிறார்கள். இந்த நிறுவனங்கள் பல ஆயிரம் பேர்களை வேலைக்கு வைத்துக்கொள்கின்றன. அதற்கெல்லாம் மேலாக பல லட்சம், பல கோடி மக்களுக்குத் தேவையான கிரெடிட்டை வழங்குகின்றன. அவர்களுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகின்றன.

வினவின் செம்புரட்சியால் இப்படி ஏதேனும் நடைபெறுமா என்பதை நான் அறியேன்.

3டி பிரிண்டிங்

நான் படித்தது மெக்கானிகல் எஞ்சினியரிங். இளநிலைப் படிப்பின்போது பட்டறையில் filing செய்திருக்கிறோம். ரம்பத்தை வைத்து ராவி, ராவி, ‘ப’ வடிவ இரும்பு சானலைத் தேய்த்துப் பட்டையாக்கவேண்டும். பிறகு லேத், மில்லிங் மெஷின் இரண்டையும் பயன்படுத்தியிருக்கிறோம். இவை உலோகங்களை வெட்டுகருவிகள் (cutting tools) கொண்டு வெட்டும் இயந்திரங்கள். உலோகங்களை உருக்கி வார்ப்பதையும் செய்திருக்கிறோம். வெல்டிங் செய்துள்ளோம்.

பின்னர் ஒரு கோடையில் சிஎன்சி மெஷினில் புரோகிராம் செய்து பிளாஸ்டிக்கை வெட்டி உருவங்களை உருவாக்கியிருக்கிறேன். முதுநிலைப் படிப்பின்போது ஐபிஎம் நிறுவனத்துக்காகச் சில ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டியிருந்தது. அப்போது எனக்கு வேண்டிய சில பாகங்களை நானே உருவாக்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட ஊசிபோல் மெலிதான டிரில் பிட்டுகளைக் கொண்டு மிக நுணுக்கமான டிரில்லிங் வேலைகளைச் செய்திருக்கிறேன்.

என் ஆராய்ச்சி ‘ஃபார்மிங்’ என்ற துறையில் அமைந்திருந்தது. இறுதிப் பொருள் என்னவோ அதன் வடிவில் அச்சுகளை உருவாக்கி, உலோகச் சில்லுகள்மீது அதிவேகத்தில் அடித்தால், நீங்கள் விரும்பும் பொருள் உங்களுக்குக் கிடைத்துவிடும். உதாரணமாக நீங்கள் காப்பி குடிக்கும் எவர்சில்வர் டம்ப்ளர், டவரா ஆகியவற்றைச் செய்யவேண்டும் என்றால், எவர்சில்வர் சில்லுகளின்மீது டவரா அல்லது டம்ப்ளர் வடிவ அச்சை வைத்து ஓங்கி அடித்தால் போதும். நன்றாக டிசைன் செய்யப்பட்ட அச்சு என்றால் ஓரங்களை டிரிம் செய்யவேண்டிய அவசியம்கூட இருக்காது. இந்த ‘ஃபார்மிங்’ வேலையை உலோகத்தைச் சூடாக்கிச் செய்யலாம் அல்லது அறை வெப்பநிலையிலேயே செய்யலாம். இரண்டிலும் சாதக பாதகங்கள் உள்ளன.

மரத்தில் வேலை செய்வதானால் வெட்டுதல், கடைதல், சுரண்டுதல் ஆகிய வழிமுறைகள் மட்டுமே சாத்தியம். அதன்பின் தனித்தனியாகச் செய்யப்பட்ட மர பாகங்களை ஒன்றிணைத்தால் நாம் விரும்பும் இறுதிப்பொருள் கிடைத்துவிடும். பிளாஸ்டிக் அல்லது உலோகத்தை வெட்டலாம், இணைக்கலாம், உருக்கி வார்க்கலாம். காம்போசிட்டுகளை சில எளிதான வடிவங்களில் இளக்கி அமைக்கலாம். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அனைத்து பொறியியல் பொருள்களும் இம்மாதிரி ஏதோ ஒரு முறையில் உருவாக்கப்பட்டவையே.

3டி பிரிண்டிங் இதுவரை நான் மேலே சொல்லாத ஒரு புது முறை. நான் ஆராய்ச்சி மாணவனாக இருக்கும்போது என் ஆசிரியர் இது குறித்து என்னிடம் பேசியிருக்கிறார். 1980களிலேயே இத்துறையில் ஆராய்ச்சிகள் தொடங்கியிருந்தன. ஒருவித ரெசின் திரவத்தில் லேசர் ஒளிக் கற்றைகளை வெவ்வேறு அடர்த்தியில் பாய்ச்சும்போது லேசர் ஒளி பட்ட இடம் மட்டும் திடப்பொருளாக மாற்றம் அடையும் என்றும் அதனைக் கொண்டு எந்த முப்பரிமாண வடிவத்தையும் உருவாக்கிவிடலாம் என்று அவர் எனக்குச் சொல்லியிருந்தார். ஆனால் இதனால் தொழில்ரீதியில் எதையும் உருவாக்க இயலாது என்றே நான் எண்ணியிருந்தேன்.

இன்று ஆராய்ச்சிகள் எங்கேயோ போய்விட்டன. பலவகை பிளாஸ்டிக், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு மிக நுணுக்கமான, சிக்கலான முப்பரிமாணப் பொருள்களை அடுக்கு அடுக்காக அச்சிட்டு உருவாக்கலாம். வேறு எந்த முறையிலும் உருவாக்க முடியாத பொருள்களைக்கூட இந்த முறையில் உருவாக்க இயலும். இதற்குத்தான் முப்பரிமாண அச்சுருவாக்கம் (3டி பிரிண்டிங்) என்று பெயர்.

உங்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்பதற்காக இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன். கொதிக்கும் கலன் ஒன்றில் ஓர் உலோகம் திரவ வடிவில் கொதித்துக்கொண்டிருக்கிறது. நமக்கு காப்பி டவரா ஒன்றை உருவாக்கவேண்டும். கொதிக்கும் உலோகத்தை அடுக்கு அடுக்காக, இழை இழையாக மாக்கோலம் இடுவதுபோல ஒரு கருவி ஒட்டி எடுத்துவந்து இடும். இட்ட சில நொடிகளில் உலோக திரவம் காய்ந்துவிடும். உடனே அதற்குமேல் அடுத்த இழை உலோகக் கோலம் போடப்படும். கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பார்க்கும்போதே காப்பி டவரா மேலெழுந்துவரும்.


இதனை பிளாஸ்டிக்கில் இன்னும் எளிதாகச் செய்யலாம்.

இன்னொரு முறை நான் முன்னமே சொன்னதுபோன்றது. வேதியியல் முறையிலானது. ஒரு ரெசினை எடுத்துக்கொண்டு (என்றால் கொழகொழவென்று இருக்கும் ஒரு வேதிப்பொருள் - ரப்பர் பால் போல) ஆக்சிஜனேற்றம் முறையில் திரவத்தை திடப்பொருளாக மாற்ற முடியும். ஆக்சிஜனை எங்கு செலுத்துவது என்பதைக் கட்டுப்படுத்த முடியும். இதன்மூலம் சிறிது சிறிதாக திரவத்துக்கு நடுவிலிருந்து திடப் பொருளாக ஒரு மிகச் சிக்கலான வடிவத்தை நாம் கட்டியெழுப்பிவிட முடியும்.

இம்மாதிரி உருவாக்கப்படும் பொருள்களின் வலு எம்மாதிரியாக இருக்கும்? வலு சற்றே குறைவானவையாகத்தான் இருக்கும். ஆனால் நாம் தினசரி பயன்படுத்தும் பல பொருள்கள் வலுவானவை அல்ல. அவை எளிதில் உடைந்துவிடலாம் என்றாலும் நாம் அவற்றின்மீது கடுமையான பளுவை ஏற்றிவைக்கப்போவதில்லை. அவை அழகுக்காக, அலங்காரத்துக்காக உருவாக்கப்படுபவை. உலோக 3டி பிரிண்டிங்கில் வலு அதிகமான பொருள்களை உருவாக்கலாம்.

3டி பிரிண்டிங் இன்று பல்கலைக்கழக ஆராய்ச்சி என்பதைத் தாண்டி வந்துவிட்டது. 3டி பிரிண்டர் கருவிகளை இன்று நாமே வாங்கிப் பயன்படுத்தலாம். சில தளங்கள்மூலம் நமக்கு வேண்டிய பொருள்களை நாமே டிசைன் செய்து 3டி பிரிண்டிங் கம்பெனிகளுக்கு அனுப்பி உருவாக்கிப் பெற்றுக்கொள்ளலாம். ஓப்பன் சோர்ஸ் முறையில் யார் யாரோ செய்துவைத்திருக்கும் டிசைகளை நாம் எடுத்து, அவற்றில் சில மாறுதல்களைச் செய்து பிரிண்ட் செய்து வீட்டில் பயன்படுத்திக்கொள்ளலாம். (வலைப்பதிவுக்கான டெம்ப்ளேட்டுகளை இறக்கிப் பயன்படுத்திக்கொள்வதுபோல.) புதிய கருவிகளை, பயன்பாட்டுப் பொருள்களை டிசைன் செய்வதும் உருவாக்குவதும் எளிதாக இருக்கும்.

அடுத்த கட்டம் இந்த 3டி பிரிண்டர்களின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிப்பது. இவற்றைக் கொண்டு மிக மிகச் சிறிய பொருள்கள்முதல் சில மீட்டர்கள் பெரிய சிலைகளை உருவாக்குவதுவரையாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள எண்ணற்ற அற்புதங்களாக கல், உலோக, மரச் சிற்பங்களை 3டியில் வருடி, அவற்றின் வடிவத்தைச் சேமித்து வைத்து, அப்படியே அச்சு அசலாக பிளாஸ்டிக்கிலும் உலோகத்திலும் உருவாக்கி உலகெங்கும் விற்பனை செய்யலாம். நாம் செய்யாவிட்டால் சீனர்கள் எப்படியும் செய்துவிடுவார்கள்.

இன்று மெக்கானிகள் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் துறையை உடனடியாக அறிமுகப்படுத்தவேண்டும். அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் ஒரு 3டி பிரிண்டர் கருவியையாவது வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். மாணவர்களுக்குக் கற்றுத் தருவதோடு அதனைப் பயன்படுத்தி சுற்றியுள்ள தொழில் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் சில பொருள்களை உருவாக்கித் தருவதன்மூலம் போட்ட பணத்தை எளிதில் எடுத்துவிடலாம்.

இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர், கீழ்க்கண்ட TED வீடியோக்களைக் காணப் பரிந்துரைக்கிறேன்.
  1. A primer on 3D printing, Lisa Harouni
  2. 3D printing - this century's most disruptive innovation? David F. Flanders
  3. What’s next in 3D printing, Avi Reichental
  4. What if 3D printing was 100x faster? Joseph DeSimone