Sunday, October 07, 2007

நீதித்துறையின் அதிகார வரம்பு என்ன?

கனிமொழி (எம்.பி), ரவிக்குமார் (எம்.எல்.ஏ), வேறு சிலர் சேர்ந்து "நாம்" என்ற ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளனர் (போலும்). அந்த அமைப்பின் சார்பில் இன்று சென்னையில் (இமேஜ் ஆடிட்டோரியம்) 'Limits of Judicial Authority' என்ற தலைப்பில் விவாதம் (A discussion in the background of recent judicial contempt proceedings) நடந்தது.

நிகழ்ச்சிக்கு திமுகவின் மத்திய அமைச்சர் A.ராஜா தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினர் பிரிந்தா காரத் (எம்.பி), ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி A.K.ராஜன், தி ஹிந்துவின் என்.ராம், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மனோஜ் மிட்டா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இந்த நிகழ்வை ஒலிப்பதிவு செய்துள்ளேன். ஆனால் வலையேற்ற பத்து நாள்களுக்கு மேல் ஆகலாம்.

கலந்துகொண்டவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் "recent judicial contempt proceedings" என்றால் என்ன என்பதைச் சரியாக விளக்கவில்லை. பிரிந்தா காரத் தில்லி 'மிட்-டே' வழக்கு பற்றி ஒரு வார்த்தை பேசினார். மற்றபடி அக்டோபர் 1 தமிழ்நாடு பந்த் பற்றியும், பொதுவாக நீதித்துறை எப்படி பிற துறைகள்மீது தனது ஆக்கிரமிப்பை அதிகமாக்கியுள்ளது என்பது பற்றியும் பேசினார். மனோஜ் மிட்டா முழுக்க முழுக்க மிட்-டே வழக்கு பற்றி மட்டுமே பேசினார். ராம் இரண்டையும் எடுத்துக்கொண்டார். ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன், நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளையும் சுட்டாமல், எந்தெந்த வழக்குகளின்போது நீதித்துறை கொஞ்சம் கொஞ்சமாக எக்சிக்யூட்டிவின் நிர்வாக அதிகாரத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்தது என்று கோடிட்டுக் காட்டினார்.

நிறைய உபயோகம் இருந்தாலும் இந்தக் கூட்டம் சற்றே குழப்பமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது போல இருந்தது. 5.00 மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்த கூட்டம் 5.45க்குப் பிறகுதான் தொடங்கியது. திமுக அமைச்சர்கள், பிரமுகர்கள் பலரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். நிறைய திமுக தொண்டர்கள் வண்டிகளில் அழைத்துவரப்பட்டிருந்தனர். ஆனால் அமைச்சர் ராஜா தவிர அனைவரும் ஆங்கிலத்தில் பேசினர்.

பல்வேறு காரணங்களுக்காக பொதுக்கூட்டங்கள் ஆங்கிலத்தில் நடைபெற வேண்டியிருக்கும். (பிரிந்தா காரத், மனோஜ் மிட்டா ஆங்கிலத்தில்தான் பேசியிருக்க முடியும். ராம், ஏ.கே.ராஜன் ஆகியோர் மேடையில் தமிழில் பேசிப் பழக்கமில்லாதவர்கள்.) கூட்டத்தில் பலர் ஆங்கிலத்தில் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என்று தெரிந்தது.

இதுபோன்ற முக்கியமான விஷயங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க, முழுக்க முழுக்க தமிழில் (பிற மாநிலங்களில் அந்தந்த மொழிகளில்) நடக்கும் விவாதக் கூட்டங்கள் தேவை. "நாம்" என்னும் அமைப்பின் பின்னணி, நோக்கம் ஆகியவை எத்தகையதாக இருப்பினும் நீதித்துறை பற்றிய விவாதம் பொதுமக்களிடையே நடந்தாக வேண்டும்.

-*-

அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்களின் மெத்தனம், ஊழல் ஆகிய காரணங்களால், பெரும்பான்மை மத்திய தர மக்கள், மாதச் சம்பளக்காரர்கள் நீதித்துறையின்மீது பெருமதிப்பு வைக்க ஆரம்பித்தனர்.

நெருக்கடி நிலையின்போது தரம் தாழ்ந்திருந்த/காயடிக்கப்பட்ட நீதித்துறை, அடுத்த சில பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நாயகன் என்ற நிலைக்கு உயர்ந்து, இன்றோ சர்வாதிகாரத் தன்மையை எட்டப் பார்க்கிறது. பல வழக்குகளில் நீதித்துறை தரும் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. அதையும் விடக் கொடுமை, அவ்வப்போது பல நீதிபதிகள் உதிர்க்கும் கருத்துகள். கொஞ்சம் கொஞ்சமாக நீதித்துறை, நிர்வாகக் கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாகவும் மாறத்தொடங்கியுள்ளது. இதற்கு மோசமாக இயங்கும் அரசாங்கமும் ஒரு காரணம் என்றாலும், நீதித்துறை தன்னிச்சையாக கமிட்டிகளை நியமித்து, மத்திய மாநில அரசுகளுக்குத் தொல்லை கொடுப்பதில் தொடங்கி, பள்ளியில் குழந்தைகளை அனுமதிக்க இன்னின்ன வரைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பது வரை நடந்துகொள்வது அனுமதிக்க முடியாத ஒன்று.

அடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என்ற அபத்தம்.

அரசியல் கட்சிகள், மக்களின் கருத்தைக் கேட்டறிந்து, நீதித்துறையின் வரம்பு என்ன என்பதை நிர்ணயித்து அதை நீதித்துறை மீறாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்யவேண்டும். அத்துடன், நீதித்துறை மீதான அவமதிப்பு என்றால் என்ன, நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் செய்யும் குற்றங்களை, தவறுகளை, ஊழல்களை யார் தண்டிப்பது ஆகியவற்றையும் சட்டமாக்கவேண்டும்.

அதற்கு, மேலும் பல விவாதங்கள் தேவை.

பதிப்புத் தொழில் பற்றி பாரதியார்

350 years after the first Tamil book was published, entrepreneurs who will take up publishing as a business have not yet emerged. Tamil authors continue to remain in a difficult situation. Publishers should read new manuscripts and decide whether they are worthwhile, to figure out whether such manuscripts have a market. They should acquire manuscripts from the authors by paying them an advance or by some other arrangement and invest money to publish them and earn profits. It is quite surprising that our entrepreneurs have not taken sufficient interest in publishing.

Books are of course being published now. And a vast number of people of course buy and read them. If the book trade is carried out in a systematic manner, people will have better books to choose from. Right now, only the books that are published by those who can afford to do so, are available to the public. There is no doubt at all that good profits will accrue from book publishing, if it is pursued with enterprise.

-- Subramanya Bharathi, Circa 1907.

Quoted by AR Venkatachalapathy, in a conference organized in New Delhi by NBT to discuss the future of Independent Publishing in India. 3rd October 2007.

மூலம், தமிழில் இருந்ததா, ஆங்கிலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.

சீனி.விசுவநாதன் கலெக்ஷனில் தேடிப் பார்க்க வேண்டும்.

Friday, October 05, 2007

மியான்மார் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவின் நிலை

கடந்த சில தினங்களாக நமது அண்டை நாடான மியான்மாரில் (பர்மாவில்) புத்த பிக்குக்கள் ஆளும் ராணுவத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குடியாட்சி வரவேண்டும் என்று போராடும் ஆங் சான் சூ சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களும் புத்த புக்குக்களுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கிப் போராடினர். ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்து சிலரைக் கொன்றுள்ளது. பலரைச் சிறைபிடித்துள்ளது.

உலக நாடுகள் பல மியான்மார் அரசைக் கண்டித்துள்ளன. இந்தியா அப்படி எதையும் வெளிப்படையாகச் செய்யவில்லை.

அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் தலையிடப்போவதில்லை என்று இந்தியா சும்மா இருக்க முடியாது.

மியான்மாரைச் சுற்றியுள்ள சில நாடுகளைப் பார்ப்போம். தாய்லாந்தில் ராணுவம் ஆட்சியைப் பிடித்து அங்கு அரைகுறை ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. பங்களாதேசத்தில் உருப்படியான குடியாட்சி அழிந்துபோக அங்குள்ள கட்சிகளின் தலைவர்கள் காலிதா ஜியாவும் ஷேக் ஹசீனாவும் பாடுபட்டு, இப்பொழுது அங்கும் கேர்டேக்கர் ஆட்சியை நடத்திவருவது திரைமறைவில் இருக்கும் ராணுவமே. சீனாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அங்கு நடப்பது ஒரு கட்சியின் ஆட்சி. அவர்களுக்கும் குடியாட்சி முறைக்கும் சம்பந்தமே இல்லை. நேபாளம் மன்னராட்சியிலிருந்து குடியாட்சி முறைக்கான டிரான்சிஷன் நிலையில் உள்ளது.

இந்தியா ஒன்றுதான் மியான்மாரை அடுத்துள்ள ஒரே குடியாட்சி நாடு - இப்பொழுதைக்கு.

இப்பொழுதைய மியான்மார் ராணுவ ஆட்சிக்கு முழு ஆதரவு தருவது சீனா. மியான்மாரின் ராணுவ ஆட்சியைக் குறைகூறினால், மியான்மார் முழுவதுமாக சீனாவின் பக்கம் சென்றுவிடும் என்று இந்தியா பயப்படுகிறது. மியான்மாரின் எண்ணெய் வளங்கள், பிற கனிம வளங்களுக்கு ஆசைப்பட்டு இந்தியா இவ்வாறு எண்ணுகிறது. அதேபோல சீனா, மியான்மாருடன் முழுவதுமாக ஒப்பந்தம் செய்துகொண்டால் இந்தியாவின் எல்லையை ஒட்டி கடல் முழுவதும் சீனாவின் ஆதிக்கம் இருக்கும் என்றும் இந்தியா பயப்படுகிறது.

ஆனால் ராணுவ ஆட்சி மியான்மாரின் என்றுமே இருக்கும் என்று சொல்லமுடியாது. அனைத்து நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சர்வாதிகாரம் ஒழிந்து குடியாட்சி முறை வந்துதான் தீரும். மியான்மாரின் அந்தத் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

தார்மீக முறைப்படியும் இந்தியா மியான்மாரின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தரவேண்டும். அதற்காக இந்தியா உடனடியாக மியான்மார் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கவேண்டும், உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கடுமையான வார்த்தைகளில் ராணுவ ஆட்சிக்கும் அடக்குமுறைக்கும் தனது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும். சூ சியை உடனடியாக விடுவிக்குமாறு குரல் கொடுக்கவேண்டும். பிரணாப் முகர்ஜி சொல்வதுபோல மென்மையான பேச்சினால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது.

நமது அண்டை நாடுகளில் நடக்கும் பிரச்னைகளில் நாம் மூக்கை நுழைக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் தார்மீக நியாயத்தை எடுத்துக் கூறும் வண்ணம் பளிச்சென்று பேசுவதில் தவறில்லை. இதனால் சில வாய்ப்புகள் பறிபோனாலும் அதைப்பற்றிக் கவலைப்படக்கூடாது. அடுத்த நாட்டு மக்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, எனக்குக் கொஞ்சம் பெட்ரோல் கிடைக்கிறது என்று நடந்துகொள்பவர்கள் கேவலமானவர்கள். இந்திய அரசு அப்படி நடந்துகொள்ளக்கூடாது.

[மியான்மார் பற்றிய எனது முந்தைய பதிவு.]

Tuesday, October 02, 2007

हे राम



நெருப்பு இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

மத உணர்வுகளைப் புண்படுத்துவது

சேது சமுத்திரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி இந்துக் கடவுள் ராமர் பற்றிப் பேசியது பிரச்னையை எழுப்பியுள்ளது. ராமர் உண்மையில் வாழ்ந்தார்; சமுத்திரத்தின்மீது பாலம் ஒன்றை எழுப்பினார் என்று பல இந்துக்கள் நம்புகின்றனர். அதைக் கேலி செய்யும் விதமாக அல்லது இதுபோன்ற நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் விதமாக யாராவது பேசினால் உடனே தலையை வெட்டுவோம், பஸ்ஸைக் கொளுத்துவோம் என்று முரட்டுத்தனமாக பலர் நடந்துகொள்கிறார்கள்.

1. மத உணர்வுகளைப் புண்படுத்துவது என்றால் என்ன?

(அ) ஒவ்வொரு மதமும் தனக்கென சில நம்பிக்கைகளை வைத்துள்ளன. அந்த நம்பிக்கைகளை யாராவது கேள்விக்கு உட்படுத்தினால் அந்த மத நம்பிக்கையாளர்களுக்குக் கடும் கோபம் வருகிறது.
(ஆ) ஒரு மதம் புனிதமாக நினைக்கும் சிலவற்றை சிலர் கேலி செய்யும்போது அந்த மதத்தவருக்குக் கோபம் வருகிறது.
(இ) ஒரு மதத்தவரின் புனிதச் சின்னங்களை, கோயில்களை, சிலைகளை அசுத்தம் செய்வதால், தாக்குவதால் கோபம் வருகிறது.

உதாரணம்: தமிழக முதல்வர் செய்தது (அ) மற்றும் (ஆ). ராமன் என்னும் கடவுள் இருந்தாரா இல்லையா என்ற கேள்வியை எழுப்பி, இல்லை என்பது தனது கருத்து என்றும் அதனால் ராம சேது என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அறிவியல்பூர்வமாக அது வெறும் மணல்திட்டு என்றும் கருணாநிதி பேசியிருந்தால் பிரச்னையை ஊதிப் பெரிதாக்க முடிந்திருக்காது. ஆனால் அரசியல் மேடைகளில் அடுத்தவரைக் குத்திக் காட்டிப் பேசுவது சர்வசாதாரணமானது. எனவே "ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான்?" என்று பேசும்போது பிரச்னை பெரிதாகிறது.

டென்மார்க் முகமது கார்ட்டூன் பிரச்னையை எடுத்துக்கொள்வோம். முகமது நபியை கார்ட்டூனாக உருவமாகவோ வரைவது ஏற்புடையதல்ல என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால் டென்மார்க் பத்திரிகை ஒன்று தன் வாசகர்களை முகமது நபியை கார்ட்டூனாகச் சித்திரிக்குமாறு அழைத்தது. அப்படி வரையப்பட்ட பல கார்ட்டூன்கள் வேண்டுமென்றே மோசமாகச் சித்திரிக்கப்பட்டவை. முஸ்லிம்கள் கோபம் கொள்ளவேண்டும் என்றே வரையப்பட்டவை.

2. யார் யாரெல்லாம் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள்?

(அ) அறிவியல், மருத்துவக் கண்டுபிடிப்புகள் அனைத்துமே மதங்களின் அடிப்படைகளைத் தவறு என்று அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இதனால் மத உணர்வாளர்கள் ஒரு காலத்தில் கடுமையாக அவதியுற்றனர். இப்பொழுது வேறு வழியில்லை என்று அறிவியலை, மருத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனாலும் பல இடங்களில் அறிவியல் அறிஞர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டனர் என்று மதவாதிகள் சண்டைக்கு வருகின்றனர்.
(ஆ) சமூக அறிவியல் அறிஞர்கள், சிந்தனைவாதிகள், அரசியல்வாதிகள் பலரும் மதங்களின் மோசமான பின்தங்கிய நோக்கைச் சாடுகின்றனர். கருத்து ரீதியில் மதங்களின் தவறான கருத்துகளை எதிர்கொள்வது அவசியம். இங்கு மத உணர்வுகளைப் புண்படுத்துவது அவசியமாகிவிடுகிறது. எல்லா மதங்களும் பெண்களை நடத்துவது; இந்து மதத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் போன்ற பலவற்றை எதிர்த்துப் போராடுவது அவசியமாகிறது.
(இ) மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் முன்னிலை வகிப்பவர்கள் பிற மதங்களின் அடிவருடிகள்தாம்! முஸ்லிம்கள் பலரும் ஒவ்வொரு நாளும் கிறித்துவ, இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். இந்துக்கள் பலரும் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். டென்மார்க் கார்ட்டூன் நிகழ்வின்போது சந்தோஷமாக அந்த கார்ட்டூன்களை மீண்டும் பரப்பியவர்கள் கிறித்துவ, இந்து அடிப்படைவாதிகள்.
(ஈ) நாத்திகர்கள். இவர்கள் அறிவியல் சார்ந்த நாத்திகவாதிகளாக இருக்கலாம்; அல்லது பெரியார் வழிவந்த 'நம்பிக்கை' சார்ந்த நாத்திகவாதிகளாகவும் இருக்கலாம்.

3. அடிப்படை உரிமை (பேச்சுரிமை) Vs மத உணர்வுகளைப் புண்படுத்துதல்.

இந்தியா போன்ற நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின்படிக் கிடைத்த பேச்சுரிமையைக் கொண்டு பிறரது மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசலாமா?

மத உணர்வுகளைக் கேலி செய்யும் விதமாகப் பேசுவது தவறில்லை என்பது என் வாதம். மதங்கள் முட்டாள்தனமான கருத்துக்களால் நிறைந்தவையாகவே எனக்குப் படுகிறது. இந்துமதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மூன்றுமே இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கருத்துகள் அந்தந்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்லாது அந்த மதத்தவர் இணைந்து வாழும் சமூகத்தையும் துன்பத்துக்குள்ளாக்குகிறது. (உதாரணம்: போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது, குழந்தை மணம், கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருத்தல், சதி... இப்படி எத்தனையோ.)

ஒரு மதத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனை முறையைத் தாண்டி, சுயமாகச் சிந்தித்து, தனிச் சிந்தனை வழியில் வருபவர்கள் மதங்களில் காணப்படும் மூடக் கருத்துகளை கேலி செய்தே தீரவேண்டும். அதனால்தான் சமூகத்தை பாதிக்கும் பல அவமானகரமான குற்றங்கள் நாளடைவிலாவது தடுக்கப்படும்.

தமிழக முதல்வர் ராமரைப் பற்றிப் பேசுவதற்கு முழு உரிமை அவருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். அவர் அப்படிப் பேசுவது பிடிக்கவில்லை என்றால் குடியாட்சி முறைக்குள்ளாக அவருக்கு எதிராக என்ன செய்ய முடியுமோ அதை அவரது எதிரிகள் செய்துகொள்ளலாம். ஆனால் அவரது கழுத்தை வெட்டினால் எடைக்கு எடை தங்கம் என்றெல்லாம் அறிவிப்பு செய்யும் அபத்தமானவர்களை சட்டம் உடனடியாகப் பிடித்து தண்டிக்கவேண்டும். ஆனால் இதுபோன்ற சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைவருக்கும் பொருந்துமாறு இருக்கவேண்டும். தஸ்லிமா நஸ்ரினைக் கொலை செய்யச் சொல்லித் தூண்டிய ஹைதராபாத் எம்.எல்.ஏ, டென்மார்க் கார்ட்டூனிஸ்டைத் தண்டிக்கச் சொன்ன உத்தர பிரதேச எம்.எல்.ஏ என்று அனைவரையும் உள்ளே தள்ளவேண்டும்.

புனிதமாகக் கருதப்படும் கருத்துகளைத் தாக்கலாம். ஆனால் புனித இடங்கள், மனிதர்கள் ஆகியோரைத் தாக்குவதை வரவேற்கக்கூடாது. இதுவும்கூட மதம், புனிதம் ஆகிய காரணங்களால் அல்ல. உயிர், உடைமை ஆகியவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டிய கடமை அரசுகளிடம் உண்டு.

4. அரசியலாக்கப்படும் மதம், மதத்தால் இயக்கப்படும் அரசியல்

மதமும் அரசியலும் இருக்கும்வரை ஒன்றோடு ஒன்று இணைந்தே செல்லும். மதத்துக்கு அரசியலின் ஆதரவு தேவை. அரசியல்வாதிகளுக்கு மதவாதிகளின் செல்வாக்கால் கிடைக்கும் வாக்குகள் தேவை. அதனால்தான் பாஜக ராமசேது விவகாரத்தைப் பெரிதாக்க நினைக்கிறது. அதில் கிடைக்கும் வாக்குகளால், சரிந்து கிடக்கும் தன் நிலையை முன்னுக்குக் கொண்டுவர விரும்புகிறது.

கருணாநிதி ராமர் பற்றி எதுவுமே சொல்லாவிட்டாலும்கூட பாஜக இதைப் பெரிய விஷயமாக மாற்றவே விரும்பும். ஆனால் கருணாநிதியின் பேச்சு காங்கிரஸை இக்கட்டில் மாட்டிவிட்டுள்ளது. கருணாநிதிக்கு பாஜக பற்றி எந்தக் கவலையுமில்லை. தமிழகத்தில் இப்பொழுதைக்கு பாஜக ஒரு பொருட்டே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு வட மாநிலங்களில் ராமரும் பாஜகவும் தலைவலிகள்.

கருணாநிதி மத அடிப்படைவாதத்தை ஒழிக்க காங்கிரஸுக்கு உதவ விரும்பினால் சிலவற்றைச் சொல்லாமல் விடுவது நலம்.

====

அறிவியல் ரீதியில் என் கருத்து...

ராமர் என்று ஒருவர் இருந்தாரா என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. காலத்தால் பிற்பட்டவர்களாகக் கருதப்படும் இயேசு இருந்ததற்கான ஆதாரங்களையே பல அறிஞர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

ராமசேது என்ற கடல்மீது கல்லையும் மண்ணையும் போட்டு பல ஆயிரம் வானரங்கள் நடந்து செல்ல, பாலம் கட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. புஷ்பக விமானம், பத்து தலை அரக்கன், மாயாவிகள், சஞ்சீவி மலை, நாகாஸ்திரம், பிரம்மாஸ்திரம் என்று அனைத்துமே கற்பனை. இன்றைய தேதியில் இதுபோன்று ஏதும் முற்காலத்தில் இருந்திருப்பதற்கான/நடந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் முற்றிலும் இல்லை.

அறிவியல் கூறும் உண்மைகள் மட்டுமே இன்று ஏற்கக்கூடியன.

இலங்கையைச் சேர்ந்த செரான் தெரணியகல என்ற அகழ்வாராய்ச்சி நிபுணர் சென்னையில் கொடுத்த பேச்சில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாக் நீரிணைப்பில் கடந்த 7,00,000 ஆண்டுகளில் 17 முறை மண் திட்டாகவே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கடைசியாக இது நடந்தது கிட்டத்தட்ட 7,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். [ Search for a common past, S.Muthiah]

அப்படி முழுதும் மணலால் தொடர்பிருந்த ஒரு கால கட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளை கடல்மீது பாலம் கட்டியதாகக் கற்பனை செய்துகொள்ளும் வளம் மனிதனிடம் உண்டு. ஹோமரின் இலியட் போல வால்மீகியின் ராமாயணமும் அற்புதமான சம்பவங்கள் நிறைந்த அருமையான காவியம். [அவ்வளவே!]

எனவே, மத உணர்வுகள் என்னும் பூச்சாண்டியைத் தூக்கி மூட்டை கட்டி வைத்துவிட்டு, இந்தத் திட்டத்தால் பொருளாதார ரீதியில், சூழலியல் ரீதியில் என்ன நன்மை, தீமை என்பதை ஆராய்ந்து அதன்படி நடப்பதே நல்லது.