Tuesday, October 11, 2005

அசாம் பழங்குடிச் சண்டைகள்

Army deployed after Assam riots

ஆகஸ்ட் மாதம் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட துப்பாக்கி மொழி என்னும் புத்தகத்தை எடிட் செய்யும்போதுதான் அசாமின் பல பழங்குடிகளின் பெயர்களையும் அவர்களுக்கு இடையேயான சண்டைகளையும் பற்றி ஓரளவுக்கு நான் அறிந்துகொண்டேன்.

வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள பழங்குடியினருக்கு இடையேயான சண்டைகளை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை. பெரும்பான்மை அசாமியர்களுக்கும் பங்களாதேஷிலிருந்து குடியேறும் முஸ்லிம் வங்காளிகளுக்கும் இடையேயான பிரச்னை ஓரளவுக்கு எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியது.

ஆனால் கர்பி ஆங்க்லாங், திமாசா, ஹமார் பழங்குடியினர் காலம் காலமாக அசாமில் சில மாவட்டங்களில் வாழ்ந்து வருபவர்கள். அனைவரும் இன்னமும் தொடர்ச்சியாக தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது குழப்பத்தை விளைவிக்கிறது. பழங்குடியினருக்கு இடையேயான சண்டைகள் பெரும்பாலும் பாரம்பரிய நிலங்களைப் பிறர் கையகப்படுத்த முயற்சி செய்யும்போதும் விளைச்சல் குறையும்போதும் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். இந்தப் பழங்குடிகளின் மக்கள்தொகை ஓரளவுக்கு கட்டுக்குள்தான் இருக்கிறது. பெருமளவு அதிகரிக்கவில்லை. அவர்களது வாழ்க்கை முறையிலும் அதிக மாற்றங்கள் இல்லை. ஆனால் இந்தப் பழங்குடிகளுக்கு நிலையான தலைமை ஏதும் இருப்பது போலத் தெரியவில்லை. மாநில அரசாங்கமும் இந்தப் பழங்குடித் தலைவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதில்லை போலத் தெரிகிறது. இல்லாவிட்டால் பிரச்னை முற்றி ஆயுதத் தகராறு வருவதற்கு முன்னாலேயே பஞ்சாயத்து செய்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்கமுடியும்.

The Girl in the Cafe

(சினிமா விமரிசனம்!)

பிரிட்டன் நிதி அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் சர்வண்ட் லாரன்ஸ், வயதானவர், ஆங்கிலேயர். தனி ஆள். மணமாகாதவர், கூட வசிக்கும் இணை-உறவாளர் யாரும் கிடையாது. குழந்தைகள் யாரும் இல்லை. காதல் என்று ஒன்று வாழ்வில் இருந்ததில்லை. வேலை, வேலை, வேலை.

G8 எனப்படும் உலகின் மிக வளர்ந்த நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான், ரஷ்யா - இதில் ரஷ்யாவைச் சேர்க்கவேண்டுமா என்ற கேள்வி எழலாம், ஆனால் வரலாற்றுக் காரணங்களால் ரஷ்யா இதில் உள்ளது. G7 என்று ஒரு குழு உள்ளது. அதில் ரஷ்யா இல்லாத பிற 7 நாடுகளும் உண்டு.) ஒன்று சேர்ந்து ஒரு குழுவை நடத்துகின்றன. ஒவ்வோர் ஆண்டும் உலகப் பொருளாதாரம் தொடர்பாக ஒரு மாநாட்டையும், அரசியல் விஷயங்களுக்காக மற்றுமொரு மாநாட்டையும் நடத்துவார்கள்.

இந்த G8 பொருளாதார மாநாடு நடக்கும் இடங்களிலெல்லாம் சமீப காலங்களில் உலகமயமாக்கல்-எதிர்ப்புக் குழுக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி G8-க்கும், உலகமயமாதல், தாராளமயமாதல் போன்றவற்றுக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. G8 மாநாட்டின் ஒரு நோக்கம் - எவ்வாறு பணக்கார நாடுகள் (அதாவது G8 நாடுகள்) - உலகின் ஏழை நாடுகளில் உள்ள ஏழைமை, உணவுப்பஞ்சம், உயிர்ச்சாவு (எய்ட்ஸ், பட்டினிச் சாவுகள்) ஆகியவற்றைப் போக்க உதவி செய்யலாம் என்று கூடிப்பேசி ஏதாவது செய்ய முனைவது.

ஐ.நா சபை Millennium Development Goals - நடப்பு ஆயிரம் வருடங்களுக்கான கொள்கைகளாக சிலவற்றை முன்னுக்கு வைத்து, அதனை ஐ.நா சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன. 2015ம் வருடத்துக்குள்ளாக பட்டினிச் சாவை இப்பொழுதுள்ள எண்ணிக்கையிலிருந்து பாதியாகக் குறைப்பது, பட்டினியாக இருப்போரின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பது, பிரசவச் சாவைப் பாதியாகக் குறைப்பது, எய்ட்ஸ் பாதிப்பைக் குறைப்பது போன்ர பல. இவை பற்றிய முழு விவரங்களை விகிபீடியாவில் பார்க்கவும்.

சரி, லாரன்ஸுக்கு வருவோம். லாரன்ஸ் பிரிடிஷ் நிதி அமைச்சகத்தில் மில்லேனியம் வளர்ச்சி இலக்கை நிர்வகிப்பவர். G8 நாடுகள் கூடிப் பேசும்போது மில்லேனியம் வளர்ச்சி இலக்குக்கு என தாம் அனைவரும் என்ன செய்யவேண்டும் என்பதையும் ஒருமனதாக முடிவெடுப்பார்கள். வரப்போகும் G8 உச்சி மாநாட்டில் அதுபற்றிய விவாதம் நடக்க உள்ளது, ஆனால் பிரிட்டன் நினைப்பதை (அதாவது தான் நினைப்பதை) எல்லாம் பிற நாடுகள் அங்கீகரிக்கப்போவதில்லை, உதவிகள் குறைவாகவே கிடைக்கப்போகின்றன என்று லாரன்ஸ் நினைக்கிறார்.

வேலைக்கு இடையே ஒரு மதியம் பக்கத்தில் உள்ள கஃபேயில் சர்க்கரை அதிகம் போட்ட தேநீரை அருந்தும்போது இடம் கிடைக்காமல், ஓர் இளம்பெண் அமர்ந்திருக்கும் மேசையில் தானும் அமர இடம் கேட்கிறார் லாரன்ஸ். அந்தப் பெண்ணின் பெயர் ஜினா. (அவர் பேச்சை வைத்து அவர் ஒரு ஸ்காட்டிஷ்காரர் என்று தெரிகிறது. முதலில் இத்தாலியனோ என்று நினைக்கத் தோன்றியது.) சில நிமிடங்கள் பேசியபிறகு வாசலுக்குச் செல்லும்போது லாரன்ஸ் ஏதோ உந்துதலில் அந்தப் பெண்ணை ஒருநாள் மதிய உணவுக்கு அழைக்கிறார். அவரது வாழ்வில் முதல்முறை ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜினாவுடன் மதிய உணவு. அப்பொழுது நிதி அமைச்சர் அந்த உணவகத்துக்கு வருகிறார். ஜினாவுக்கு அப்பொழுதுதான் லாரன்ஸ் நிதி அமைச்சகத்தில் வேலை பார்க்கும் ஒரு "பவர்புல்" மனிதர் என்று தெரிய வருகிறது. அதே நாளில் லாரன்ஸ் மீண்டும் ஜினாவை இரவு உணவுக்கு அழைக்கிறார். பின் தொடர்ந்து தொலைபேசியில் பேசத் தொடங்குகிறார்கள். நிறைய சந்திக்கிறார்கள்.

லாரன்ஸின் தனிமை ஏக்கத்துக்கு ஒரு நல்ல மாற்று. சமூக உறவுகள் பற்றி அதிகம் தெரியாத, பிறரைச் சந்திக்கும்போது தடுமாறும் ஒருவராக லாரன்ஸ் சித்திரிக்கப்படுகிறார். ஜினாவின் பின்னணி பற்றி அவர் தெரிந்துகொள்வதில்லை. ஜினாவிடம் அவர் கேள்விகள் எதுவும் கேட்பதில்லை. இருவருக்குமே இந்த உறவின் மீதான முழுமையான எண்ணங்கள் பிறப்பதில்லை.

தான் G8 கூட்டத்துக்காக ரெய்க்காவிக் (ஐஸ்லாந்து தலைநகரம்) செல்ல இருப்பதாகச் சொல்கிறார் லாரன்ஸ். G8 என்றால் என்ன, மில்லேனியம் வளர்ச்சி இலக்குகள் என்னென்ன ஆகியவை பற்றி ஜினாவுக்கு லாரன்ஸ் சொல்கிறார். ஆப்பிரிக்காவில் பட்டினிச் சாவுகள், கொடிய வறுமை ஆகியவை பற்றியெல்லாம் விளக்குகிறார். ஆனால் அதே சமயம் G8 நாடுகள் அதிகம் ஒன்றும் செய்யப்போவதாகத் தான் நினைக்கவில்லை என்றும் சொல்கிறார். தான் எதிர்பார்ப்பதில் பாதி கிடைத்தால் கூடத் தான் சந்தோஷம் அடையக்கூடும் என்றும் சொல்கிறார். பின், தொலைபேசியில், விருப்பம் இருந்தால் தன்னுடன் ஜினா ரெய்க்காவிக் வரலாம் என்றும் சொல்கிறார். சிறிது தயக்கத்துக்குப் பிறகு ஜினா லாரன்ஸுடன் வர ஒப்புக்கொள்கிறார்.

விமான நிலையத்தில் ஜினா வருவதற்குத் தாமதமாகும்போது, வராமல் போய்விடுவாரோ என்று லாரன்ஸ் தவிக்கிறார். பின்னர் லாரன்ஸும் ஜினாவும் கடைசியாக விமானம் ஏறுகின்றனர். லாரன்ஸின் சக-ஊழியர்கள் ஏற்கெனவே ஜினாவை உணவகத்தில் பார்த்திருக்கின்றனர், ஆனாலும் ஜினா கூட வருவது அவர்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கிறது.

ரெய்க்காவிக் ஹோட்டலில் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் ஜினாவுக்குத் தனியறை கிடைக்குமா என்று கேட்டு வரவேற்புத் தொழிலாளரைத் தொந்தரவு செய்கிறார். கிடைக்காமல் போகவே ஜினாவிடம், தான் வேண்டுமென்றே செக்ஸுக்காக இப்படியெல்லாம் திட்டமிடவில்லை என்று மன்னிப்புக் கேட்கிறார்.

முதல் இரண்டு நாள்கள் நடக்கும் கூட்டங்களில் இருந்து சோர்வுடன் திரும்பி வருகிறார் லாரன்ஸ். பொருளாதார பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும் G8 நாடுகள் (முக்கியமாக அமெரிக்கா) ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பணம் கொடுக்க விரும்புவதில்லை. மான்யமா, கடனா, திறந்த வர்த்தகமா என்ற கேள்விகளைக் கேட்டு திறந்த வர்த்தகம் மூலம் ஏழை நாடுகள் அதிகப் பயன் அடைய முடியும், சீனாவைப் பாருங்கள் என்றெல்லாம் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பேசுவதாகக் காண்பிக்கப்படுகிறது.

அடுத்த நாள் ஜினா, லாரன்ஸ் இருவரும் காபி அருந்தும்போது அங்கு பிரிட்டன் நிதி அமைச்சர், கூட கெர்மன் சான்செலருடன் வருகிறார். பிரிட்டன் நிதி அமைச்சரை ஜினா யாரும் எதிர்பாராத வகையில் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுக்கிறார். பிரிட்டன், பிற G8 நாடுகள் நிஜமாகவே ஏழை நாடுகளுக்கு உதவ விரும்புகின்றனரா, அமைச்சர் பேசுவது வெட்டிப்பேச்சா அல்லது நிஜமாகவே சாவுகளைக் குறைக்க விரும்புகிறாரா என்று வரும் தீர்க்கமான, ஆனால் மேலோட்டமான கேள்விகள். அமைச்சர் சற்றே ஆடிப்போகிறார். பின் தனது வலது கையைக் கூப்பிட்டு அந்தப் பெண் யார், வெளியே கூடாரமிட்டு பிரச்னை செய்ய வந்திருக்கும் ஆசாமிகளின் உள்கையா என்று விசாரித்து அவளைத் துரத்திவிடுமாறு சொல்கிறார். அவரும் லாரன்ஸைக் கூப்பிட்டு வறுத்தெடுத்து, அந்தப் பெண் யார் என்று கேட்க, லாரன்ஸ் தனக்கு அவரது பின்னணி தெரியாது, தான் அவரைச் சந்தித்தது ஒரு கஃபேயில், அவ்வளவுதான் என்கிறார்.

ஆனால் ஜினாவை லண்டனுக்கு அனுப்புவதில்லை. (இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் ஜினா லாரன்ஸ் எதிர்பார்க்காமலேயே அவருடன் உடலுறவு கொள்கிறார்.) ஜினாவின் பின்னணி என்ன என்று லாரன்ஸ் கேள்வி கேட்கும்பொழுது ஜினா சர்வ சாதாரணமாக தான் லாரன்ஸைச் சந்திக்கும் முன்புதான் ஜெயிலிருந்து வெளியே வந்ததாகச் சொல்கிறார்.

அடுத்த நாள் பிரிட்டன் பிரதமர் கொடுக்கும் டின்னர். தான் "நல்லபடியாக" நடந்து கொள்வதாகச் சொன்னாலும், பிரதமர் கொடுத்த பேச்சை அடுத்து, அவரை இடைமறிக்கிறார் ஜினா. டின்னர் ஹாலில் நிசப்தம். தொடர்ந்து ஒரு பிரமாதமான அரசியல் பேச்சு. ("உங்களால் முடியும் எனும்போது இத்தனை அநியாயச் சாவுகளைத் தடுக்கப் பாருங்கள். பத்து வருடங்கள் கழித்து இன்னொரு தலைமுறை அரசியல்வாதிகள் இதைப்பற்றிப் பேசும்போது, பத்து வருடங்களுக்கு முன்னர் சாவுகளைத் தடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் தவறவிட்டவர்கள் என்று உங்களைச் சாடுவதற்கு விடாதீர்கள்.")

பேசி முடிந்ததும், ஜினா சத்தமின்றி வெளியேற்றப்பட்டு, விமானத்தில் ஏற்றப்பட்டு லண்டனுக்குக் கொண்டுசெல்லப்படுகிறார். நிதி அமைச்சர் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகிறார். லாரன்ஸ் தான் பதவி விலகத் தீர்மானித்திருப்பதாகச் சொல்கிறார். ஆனால் அன்று இரவு பிரிட்டன் நிதி அமைச்சர், பிரதமர் நிலைகளில் மாற்றம். பிற நாடுகள் முன்வைக்கும் சமரசத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக வாதாடி மில்லேனியம் இலக்குகளை நிறைவேற்ற G8 நாடுகளை சம்மதிக்க வைப்பதில் பெரும் முன்னேற்றம் அடைகிறார்கள்.

லாரன்ஸ் - ஜினா காதலுக்குக் கிடைத்த வெற்றி. படத்தின் tagline "Love can't change what's wrong in the world. But it's a start."

-*-

படத்தை நேர்த்தியாக எடுத்துள்ளனர். நடிப்பு நன்றாக உள்ளது. ஆனால் G8 பற்றியும் ஆப்பிரிக்க நாடுகளின் கஷ்டத்தைப் பற்றியும் விளக்கமாகத் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கலாம். சாதாரணப் பார்வையாளர்களால் G8 பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியுமா என்று தெரியவில்லை.

ஆனால் படத்தின் கதை மோசம். ஒரு சாதாரணப் பெண்ணின் பேச்சுகளால் பழுத்த அரசியல்வாதிகள் திடீரென்று மனம் மாறுவதாகவும், ஒரு நாடு பிற ஏழு நாடுகளை முற்றிலுமாக தன் வழிக்குக் கொண்டுவருவதாகவும் சொல்வது மோசமான ரொமாண்டிசிசம். G8 குழுவின் வரலாற்றைப் பார்த்தால் அதனால் ஏழை நாடுகளுக்கு என்றுமே நன்மை இருந்ததில்லை என்று புரிந்து கொள்ளலாம். கடைசியாக ஸ்காட்லாந்து க்ளெனிகில்ஸில் G8 உச்சி மாநாடு நடந்த நேரத்தில்தான் லண்டனில் குண்டுகள் வெடித்தன. இந்தப் படம் அதற்கு முன்னால் உருவானது. க்ளெனிகில்ஸ் மாநாட்டின் போது உலகின் ஏழைமையைக் குறைக்க இத்தனை பில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளோம், அத்தனை பில்லியன் டாலர்கள் கடன்களை ரத்து செய்கிறோம் என்றெல்லாம் பொய் சொல்லி, புரட்டுக் கணக்குகளைத்தான் சொல்கின்றனர் என்பதை ஜார்ஜ் மோன்பியாட் போன்றோரின் கட்டுரைகளின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

முக்கியமாக அமெரிக்கா தடையற்ற வர்த்தகம் என்ற நிலையில்தான் மான்யம்/கடன் வழங்குவோம் என்று சொல்லியே அமெரிக்க நிறுவனங்களின் நலனையே முன்வைக்கிறது. பல ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தகத்துக்கான சந்தைகளாக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க நாடுகளுக்கு பதிலுக்கு அமெரிக்காவுக்குக் கொடுக்க ஒன்றும் இருப்பதில்லை. இருக்கும் சில கணிம வளங்களும் G8 நாடுகளில் உள்ள முதலாளிகளின் கைகளுக்குப் போய்விடுகிறது. அதனால் எந்த நன்மையும் ஆப்பிரிக்க ஏழைகளுக்கு, உணவால் வாடுபவர்களுக்குப் போவதில்லை.

G8 நாடுகளின் தலைமையில் இருப்பவர்களுக்கு தத்தம் நாடுகளின் பிரச்னைகள்தான் முக்கியமே தவிர ஆப்பிரிக்க ஏழைமை முக்கியமல்ல. மற்றபடி அவர்கள் பேசுவதெல்லாம் பசப்பு வார்த்தைகள்தான். ஏதாவது கடன் பற்றி பேச்சு வந்தால் உடனே அந்தந்த நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகள்தான் பிரச்னை, அங்கெல்லாம் குடியாட்சி வரவேண்டும் என்று ஒரு பேச்சு வரும். குடியாட்சி தேவைதான். ஆனால் இதே G8 நாடுகள்தான் தனக்கு வேண்டிய இடங்களில் எல்லாம் சர்வாதிகாரிகளை முன்னுக்குக் கொண்டுவந்தவர்கள். பாகிஸ்தானில் குடியாட்சியைப் பற்றியோ, சவுதி அரேபியாவில் குடியாட்சியைப் பற்றியோ பேச மாட்டார்கள்.

பட்டினியில் வாடுபவனுக்கு உடனடியாக உணவு கொடுப்பது மட்டுமல்ல, அவர்களை அவர்களது வழியில், பிரச்னையின்றி வாழ வைப்பதற்கு G8 நாடுகள் - முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன் இரண்டும் - சண்டைக்காகச் செலவிடுவதில் ஒரு பகுதியைக் கொடுத்தால் கூடப்போதும். அப்படிக் கொடுக்க விருப்பமில்லை என்றால் கூடப் பரவாயில்லை, தாங்கள் நிறையச் செய்ய ஆசைப்படுவதாகப் பொய் சொல்லவேண்டியதில்லை.

இந்தப் படத்தின் தொழில்நுட்ப செய்நேர்த்தியைத் தவிர பிற அனைத்தும் எனக்கு ஏமாற்றத்தையே தந்தன. ஆனாலும் பார்க்கவேண்டிய படம் என்று சிபாரிசு செய்கிறேன். லாரன்ஸாக நடித்த Bill Nighy நிறைவாகச் செய்துள்ளார். ஜினாவாக நடித்த Kelly Macdonald தேவலாம். லாரன்ஸ் பாத்திரப் படைப்பு நன்றாக வந்துள்ளது. லாரன்ஸின் தடுமாற்றங்கள், subdued பாத்திரம், தன் கருத்துகளை அழுத்தமாக முன்வைக்கத் தெரியாத வலுவற்ற தன்மை ஆகியவை மிக நன்றாக வந்துள்ளன. தயங்கித் தயங்கிப் பேசுதல், தனது செயல்களை பிறார் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற ஆதங்கம் ஆகியவை நடிப்பில் நன்றாக வெளிப்படுகிறது.

ஜினாவின் பாத்திரப் படைப்பு இன்னமும் ஆழமாக இருந்திருக்கலாம். ஜினாவின் பின்னணி வருவதில்லை. யாரையோ கொலை செய்தார் என்பதற்காக அவர் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். ஏன், எதற்கு என்ற லாரன்ஸின் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் ஜினா பதில் தருகிறார். அவ்வளவுதான். தைரியமாக பல தலைவர்கள் இருக்கும் அவையில் ஆணித்தரமாகப் பேச எப்படி எவருக்குக் கூடியது என்பது சரியாக வரவில்லை. அவருடைய படிப்பு, பொருளாதார அறிவு குறைவு, அரசியல் ஈடுபாடுகள் என்று எதுவும் இல்லை என்றாலும் ஹாலிவுட் பாணியில் கடைசிப்பேச்சு எங்கிருந்து அவ்வளவு சரளமாக வருகிறது என்பதை டைரக்டர் விளக்குவதில்லை. ஒருவேளை ஜெயிலில் கற்றுக்கொண்டாரோ என்னவோ!

லாரன்ஸ் - ஜினா ஈர்ப்பு ஓரளவுக்கு நன்றாகவே கையாளப்பட்டிருக்கிறது. ஜினா நிச்சயம் லாரன்ஸை விரும்புகிறார் என்று தெரியவருகிறது. ஆனால் ரெய்க்காவிக் ஹோட்டலில் லாரன்ஸ் தூக்கம் வராமல் திண்டாடிக்கொண்டிருக்கும்போது தன் ஆடைகளைக் களைந்து அவருக்கு சிறிது "கேளிக்கை" அளித்து, அவரது டென்ஷனைக் குறைப்பது போல வருவது படு அபத்தம். பெண்களின் தலையாயக் கடமை என்ன என்று ஹாலிவுட் கொடுத்திருக்கும் ஃபார்முலா இந்தப் படத்திலும் புகுந்திருக்க வேண்டியதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெரிய குறை - ஒரு சாதாரணப் பேச்சு, உலகின் பெருந்தலைவர்களை உசுப்பி விட்டு உலகின் மிகக் கடுமையான பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வை ஒரே நாளில் கண்டுபிடிக்க வைக்கிறது - எனப்படும் அபத்தமான கற்பனாவாதம்.

If only wishes were horses...

1. IMDB Database
2. HBO Site

Wednesday, October 05, 2005

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

நேற்று அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து கிடையாது என்று சொல்லியிருக்கிறது. இதுபற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நியூஸ் இங்கே.

அலிகார் பல்கலைக்கழகம் மைய அரசினால் சட்டமியற்றிக் கொண்டுவரப்பட்டதாலும், சிறுபான்மை முஸ்லிம்களால் உருவாக்கப்படாததாலும் அதற்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கக் கூடாது என்று 1968-ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்திருந்ததாம். ஆனால் 1981-ல் இந்திரா காந்தி காலத்தில் மைய அரசு ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் அந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் சிறுபான்மை அந்தஸ்து உடையது என்று மாற்றியுள்ளது. அதை இப்பொழுது அலஹாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். ஆனால் கடந்த சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பார்க்கும்போது நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

இங்கு மிகவும் அடிப்படையான ஒரு கேள்வி எழுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிகிள் 30(1)-ன் கீழ் சிறுபான்மையினர் எவரும் தமக்கென கல்வி நிறுவனங்களைக் கட்டலாம். ஆனால் ஓர் அரசு இயந்திரம் பொதுப்பணத்தை வைத்துக்கொண்டு கட்டும் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தைத் தரமுடியுமா? அதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?

முடியாது என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார் அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி.

ஆனால் என் கணிப்பில் மைய அரசுக்கோ, மாநில அரசுகளுக்கோ இம்மாதிரி செய்வதற்கு அதிகாரம் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். சிறுபான்மையினர் வளர்ச்சிக்கென நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைப்போலவே சிறுபான்மையினர் நலனுக்கென சிறுபான்மையினர் இட ஒதுக்கீடுடன் சேர்த்து கல்வி நிறுவனங்களை அமைக்க அரசுகளுக்கு முழு உரிமை இருக்க வேண்டும்.

பிஹார் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி தனது தேர்தல் அறிக்கையில் அலிகார் முஸ்லிம் பல்கலை போலவே பிஹாரிலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அங்கு முஸ்லிம்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் அலஹாபாத் தீர்ப்பு மேற்படி வாக்குறுதியை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டைகளைப் போடும்.

எதிர்பார்த்தது போலவே பாஜகவின் முஸ்லிம் முகமூடி நக்வி இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணம் சிரிப்பை வரவழைக்கிறது. அதாவது இட ஒதுக்கீடு வழியாக ஒரு முஸ்லிம் கல்வி பெற்று வந்தார் என்றால் அவருக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டார்களாம். அதனால் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு எதிரானது என்கிறார். யாருடைய கல்விச் சான்றிதழிலும் "இவர் இட ஒதுக்கீட்டில் உள்ளே நுழைந்தவர்" என்று முத்திரை குத்தித் தருவதில்லை. மேலும், இட ஒதுக்கீட்டில் கல்வி நிலையங்களுக்கு உள்ளே வரும் மாணவர்கள் குறைந்த தகுதியுடன்தான் தேர்ச்சி பெறுகிறார்கள் என்ற கூற்று சரியானது என்று யாரும் நிரூபித்ததில்லை.

கல்வியைப் பொறுத்தமட்டில் கடந்த சில வருடங்களாகவே எதற்கெடுத்தாலும் வழக்குகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வது என்பது வாடிக்கையாகியுள்ளது. இது நல்லதல்ல.

இட ஒதுக்கீடு பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பான என் பதிவுகள்: ஒன்று | இரண்டு

Tuesday, October 04, 2005

சென்னை பார்க் ஹோட்டல் விவகாரம் + குஷ்பூ

"Let us get some things straight. As long as a person is an adult, and does not kill, maim, molest, rape, abuse, or spit on anyone, how he or she chooses to lead his or her life should be their business alone, strictly off-limits to anyone else. That includes the clothes they wear, the books they read, the music they listen to, the films they watch. It includes life choices such as finding a career, making friends, marrying, staying single, getting a divorce, having children or not. Some people are wise in what they do, some are foolish, some have good taste, some bad. But as long as it does not harm anyone else, no one can stop anyone from doing what they want. To argue that my children and I could be influenced adversely by someone else's conduct that I find distasteful, and therefore I must do everything to stamp it out, is only to expose what little faith I have in my own way of life, my values and conduct and in the way I have brought up my children." - நிருபமா சுப்ரமணியன், தி ஹிந்து கருத்துப் பத்தி

மேற்படி பத்தியை முழுமையாகப் படியுங்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அணியவேண்டிய ஆடைகள் பற்றிய விதிமுறைகள் என்னைப் பொறுத்தமட்டில் அபத்தமானவை. ஆனால் மொபைல் போன்கள் பற்றிய விதிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியவை. ஆடைகளுக்கான விதிமுறைகள் பெண்களைக் கட்டுபடுத்தத்தான் என்பதும் திண்ணம்.

பார்க் ஹோட்டலில் இளம் பெண்கள் மது அருந்துவது பற்றி இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசக் கொழுந்துகள் கண்டறிந்து புகைப்படத்துடன் எழுத அதனால் சென்னைக் காவல்துறை ஆணையர் கடுப்புடன் பார்க் ஹோட்டலை இழுத்துமூட உத்தரவிட்டார். நீதிமன்றம் வரை சென்றுள்ளது இந்த வழக்கு.

பார்க் ஹோட்டல் பிழைத்துக்கொண்டுவிடும். ஆனால் பாவம் குஷ்பூ. அவர் சொன்னது அவர் கருத்து, அது எனக்கு ஏற்புடையதல்ல என்று சிலர் சொல்லிவிட்டுப் போகலாமே? இல்லையாம். தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி விட்டாராம். அதனால் பாமக கட்சி அனுதாபிகள் ஊர் ஊராக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். இதை குஷ்பூ எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை. நீதிமன்றங்களும் அபத்தமாக இந்த வழக்குகளை எடுத்துக்கொண்டு குஷ்பூவை நேரில் ஆஜராகச் சொல்கின்றன. இதுபோன்ற frivolous வழக்குகளை ஒரேயடியாக டிஸ்மிஸ் செய்திருக்கவேண்டும்.

"தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசினார்" என்று ஒருவர் மீது குற்றம் சாட்ட முடியுமா? தமிழ்ப் பெண்களையோ, தமிழ் ஆண்களையோ, தமிழ் வக்கீல்களையோ, தமிழ் அரசியல்வாதிகளையோ - இழிவாகப் பேசக்கூடாதா? அதற்குக்கூட இந்த நாட்டில் உரிமையில்லையா? இப்பொழுது குஷ்பூ மீது போடப்படும் வழக்குகள் harassment வகையைச் சார்ந்தது. வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் சரி, உன்னை அலைக்கழித்துவிட்டேன் பார்! என்ற திமிர், மமதை. தங்கர் பச்சானைப் பற்றி வாய்க்கொழுப்புடன் பேசினாயா, இப்பொழுது திண்டாடு, என்ற குரூரம்.

தனி மனிதனை ஆதாரமில்லாமல் இழிவாகப் பேசினால், வார்த்தைகளைத் திரித்து தவறான அர்த்தம் கற்பித்தால், ஒரு மனிதனது கண்ணியத்தைக் குலைக்குமாறு பேசினால் அது defamation. இதுவே libel, slander போன்ற வார்த்தைகளாலும் அறியப்படும். இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடுக்க முடியும். இங்கும் இழிவாகப் பேசியவர் உள்ளர்த்தத்துடன், வேண்டுமென்றே எதிராளி மனரீதியாகவும், பணரீதியாகவும் பாதிக்கப்படவேண்டும் என்று பேசியிருந்தார் என்று நிரூபிக்கவேண்டும். ஆனால் போகிறபோக்கில் சொன்ன ஒரு சொல்லை - அது ஏற்புடையதோ, இல்லையோ - வைத்துக்கொண்டு அவரை அலைக்கழிக்க ஓர் அரசியல் கட்சி களத்தில் குதித்திருப்பது படு கேவலமான செய்கை.

இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு கட்சிகளும் இப்படிக் கேவலமான முறையில் நடந்து கொள்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.

கலாசார போலீஸ்காரர்கள் வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வினால் எனக்கு சந்தோஷமே.

காணாமல் போன கராத்தே தியாகராஜன்

கராத்தே தியாகராஜன் என்று பெயரிலேயே அடிதடியைத் தாங்கி நிற்கும் சென்னை நகரத் துணை மேயர் (அதிமுக), கடந்த பத்து தினங்களாகத் தலைமறைவாக இருக்கிறார். இதைப்பற்றி தமிழ்ப் பத்திரிகைகளும் சன் டிவி சானலும்தான் கவலைப்படுவது போலத் தெரிகிறது. தி ஹிந்து கண்டுகொள்ளவில்லை. (அல்லது கண்டுகொண்டிருந்து என் கண்ணில்தான் படவில்லையோ என்னவோ!)

திமுகவின் ஸ்டாலின் மேயர் பதவி செல்லாது என நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும், மிஸ்டர் கராத்தே முன்னுக்கு வந்தார். இவருடைய வேலை எப்படியாவது நகரசபைக் கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வது என்று தோன்றியது. கூட்டம் தொடங்கியவுடனேயே கருணாநிதியைப் பற்றி ஏதாவது விஷமமான ஸ்டேட்மெண்ட். உடனே அதற்காகவே காத்திருந்தது போல திமுக உறுப்பினர்கள் சத்தம் போடுவார்கள். "குண்டுகட்டாக" (இப்படித்தான் சன் டிவி சொல்கிறது), திமுக உறுப்பினர்கள் தூக்கி எறியப்படுவார்கள். "இது ஜனநாயகப் படுகொலை" என்று அவர்களும் சன் டிவி கேமராவுக்குச் சொல்வார்கள். கூட்டம் காலவரையரை இன்றி ஒத்திப் போடப்படும். அல்லது எல்லா மசோதாக்களும் நிறைவேற்றப்படும்.

இப்படி தன் தலைவியின் சொல்படி நடந்துகொண்டவர் தனியாக - மேலிடத்துக்குத் தெரியாமல் - என்ன செய்தாரோ என்னவோ. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டாம். தன்மீது குற்றச்சாட்டை சுமத்த கார்பொரேஷன் கமிஷனருக்கு எந்தவித அனுமதியும் இல்லை என்கிறார். இந்தப் பதவிக்கெல்லாம் கவர்னரிடம் அனுமதி பெற்றுத்தான் குற்றம் சுமத்தவேண்டுமா என்ன?

இப்பொழுது தலைமறைவாக இருக்கும் காரணம், காவல்துறையிடம் மாட்டினால் "அம்மாவை மகிழ்விக்க", இவரைப் பின்னிப் பெடலெடுத்து விடுவார்கள் என்பதாலும் இருக்கலாம். இல்லாவிட்டால் வழக்கமான, "இவரிடம் கஞ்சா இருந்தது" என்ற அரிய கண்டுபிடிப்பை முன்வைத்து இவரை நார்கோடிக்ஸ் வழக்கில் உள்ளே தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த முறை சென்னை நகரமன்றத் தேர்தலின்போதாவது நிறைய சுயேச்சைகளுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலாவது கட்சிகளை ஒழித்தால் நன்றாக இருக்கும்.