Wednesday, September 09, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

மார்க்கெட்டிங் மாயாஜாலம் புத்தக ஆசிரியரும் பல நிர்வாகவியல் கல்லூரிகளில் பாடம் நடத்துபவருமான சதீஷ் கிருஷ்ணமூர்த்தியுடன் கிழக்கு பதிப்பகத்தின் சத்யநாராயண் உரையாடுகிறார்.

பாட்காஸ்ட்

வாரா வாரம் ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸில் ஞாயிறு மதியம் 12.00 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் வரும் வாரம் (13 செப்டெம்பர் 2009) மிக சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்று காத்திருக்கிறது.

சீனா: விலகும் திரை என்ற பல்லவி அய்யரின் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ராமன் ராஜா, மாவோவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய மருதன் ஆகியோருடன் சித்ரா உரையாடுகிறார். கூடவே சீன நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும், சீனாவுக்குத் தொடர்ச்சியாகச் சென்று வரும் பிரசன்னா என்பவரும் போன் மூலம் கலந்துகொள்கிறார்.

மேலே உள்ள பாட்காஸ்டுடன் தொடர்புள்ள புத்தகங்கள்:

       

நீங்க தமிழா?

சென்ற வாரம் நானும் சத்யாவும் திருநெல்வேலி சென்றிருந்தோம். திருநெல்வேலியில் கிழக்கு பதிப்பக ஷோரூம் திறக்கும் விழா. ரயில் நிலையத்திலிருந்து நேராக ஹோட்டல் சென்றோம். தொலைக்காட்சியில் ஒவ்வொரு சானலாக மாற்றி, லோக் சபா என்ற அருமையான சானலில் வந்து நின்றோம்.

சரோஜ் பாண்டே என்ற மத்தியப் பிரதேச பாஜக (பெண்) எம்.பியுடன் ஒரு பேட்டி நடந்துகொண்டிருந்தது. பேட்டி இந்தியில். நான் ஷேவிங் செய்துகொண்டிருக்கும்போது ஹோட்டல் பையன் அறைக்குள் நுழைந்தான். எதோ புரியாத பாஷை டிவியில் ஓடிக்கொண்டிருந்ததால் சத்யாவிடம் ‘இது என்ன பாஷை?’ என்று விசாரித்தான். சத்யா ‘இந்தி’ என்று பதில் சொன்னான்.

சிறிது நேரம் கழித்து நான் வெளியே வந்து டீ குடித்துவிட்டு கம்ப்யூட்டரைக் குடைந்துகொண்டிருந்தேன். அதே பையன் திரும்பி வந்தான். அப்போதும் லோக் சபா சானல்தான் ஓடிக்கொண்டிருந்தது. பையன் என்னுடன் பேச ஆரம்பித்தான்.

‘தமிளு தெரியுமா?’

‘ஏம்ப்பா, நல்லா தெரியுமே?’

‘இல்ல, ஒங்களைப் பாத்தா தமிளு மாதிரி தெரியல...’

‘அப்படின்னா என்னப்பா அர்த்தம்? பார்த்தாலே தமிழ்னு எப்படிப்பா சொல்லமுடியும்?’

‘சுத்தி உள்ள ஆளுங்களப் பாருங்களேன்? உங்களப் பாத்தா வேற ஆளுங்க மாதிரி இருக்கீங்க. தமிளங்க வேற மாதிரி இருப்பாங்க.’

பையன் சொல்லவந்தது தோல் நிறத்தை என்று நினைக்கிறேன். ஆனால் தமிழகத்தில், தென் தமிழகத்திலும் சேர்த்து, வெளுத்த தோல் முதல் கறுத்த தோல் வரையிலும், இடைப்பட்ட பல்வேறு ஷேட்களிலும் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

பையனுக்கு நம்பிக்கை பிறக்கவே இல்லை. அடுத்த அறையில் எங்கள் சேல்ஸ் மேனேஜர் மணிவண்ணன், ரீஜனல் சேல்ஸ் மேனேஜர் சசி ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் சென்று, ‘சார் அவங்க, அவங்களா இல்ல வேறயா’ என்று விசாரித்திருக்கிறான். (நாங்கள் நிஜமாகவே தமிழர்கள்தானா என்பதுதான் அந்தப் பையனுடைய கேள்வி என்று நான் நினைக்கிறேன்.) மணிவண்ணன் முற்றிலுமாகக் குழம்பிப்போய் விட்டார்.

கடைசிவரை அந்தப் பையன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித முகபாவத்துடன் சிரித்தபடியே இருந்தான்.

அடுத்தமுறை திருநெல்வேலி போகும்போது அவனிடம் ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்று பாடி, நான் தமிழன்தான் என்று நிரூபிக்கவேண்டும்.

Tuesday, September 08, 2009

சிகரம் நோக்கி...

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் இடையே 4 செப்டெம்பர் 2009 அன்று, ‘சிகரம் நோக்கி...’ என்ற தலைப்பில் நான் பேசியதன் ஒலி வடிவம் இங்கே.

Wednesday, September 02, 2009

அஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்

கிழக்கு பதிப்பக எழுத்தாளர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் ஆபீசர், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர், குடியாட்சிமீது அக்கறை கொண்டவர், ஒரு நல்ல மனிதர், வேங்கட சுப்ரமணியன், தனது 69-வது வயதில், நேற்று (1 செப்டம்பர் 2009) மாரடைப்பால் இறந்தார்.

எல்லா சாவுகளுமே அதிர்ச்சி தரக்கூடியவை. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் இது தாங்கமுடியாத இழப்பு. அனைத்துக்கும் மேலாக, இந்தியாவில் குடியாட்சி முறை சீர்மையுடன் நடக்கவேண்டும், லஞ்சம் அழியவேண்டும், மக்கள் வளத்துடன் வாழவேண்டும் என்று விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த இழப்பு ஈடுசெய்யவே முடியாதது.

இந்திய ஆட்சிப் பணியில் இருந்த வெகு சிலரே, ஓய்வுபெற்றபின், வேங்கட சுப்ரமணியன் அளவுக்கு பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் வேங்கட சுப்ரமணியன் grassroots அளவில் அமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார். ஆங்கிலத்துக்கு பதிலாக தமிழில் எழுதுவது, தமிழ் மூலம் பெருவாரியான கிராம மக்களைச் சென்றடைவது, கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றில் தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். ‘குடிமக்கள் முரசு’ என்ற மாதப் பத்திரிகையை அவர் நடத்திவந்தார்.

திருக்குறளில் நல்ல பரிச்சயம் கொண்டிருந்த இவர், அற்புதமான தமிழில் எழுதக்கூடியவர், பேசக்கூடியவர். தினமணியில் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கட்டுரைகள் எழுதிவந்தார். அவ்வாறு தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளைத்தான் கிழக்கு பதிப்பகம் இரு தொகுதிகளாக [கட்சி ஆட்சி மீட்சி | மக்களாகிய நாம்] கொண்டுவந்தது. அவர் தானாகவே வெளியிட்ட இரு புத்தகங்களை அடுத்து மறு வெளியீடு செய்யவேண்டும் என்று பேசி, முதலில் ‘தட்டிக்கேட்க தகவல்கள்’ என்ற புத்தகத்தையும் அடுத்து, ‘மன்னரா, மனுதாரரா’ என்ற புத்தகத்தையும் கொண்டுவருவது என்று சொல்லியிருந்தேன்.

குடிமக்கள் முரசு பத்திரிகையுடன் இலவச இணைப்பாக வந்த சில நெடுங்கட்டுரைகளைப் புத்தகமாகத் திரட்டிக் கொண்டுவரும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். முனைவர் வா.செ.குழந்தைசாமி இட ஒதுக்கீடு பற்றி எழுதியதை ஆங்கிலத்தில் மொழிமாற்றி சிறு வெளியிடாகக் கொண்டுவருவது பற்றி வேங்கட சுப்ரமணியன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த ஆங்கில மேனுஸ்க்ரிப்டை இரு வாரங்களுக்கு முன்னர்தான் அனுப்பியிருந்தார். அந்த வேலையை ஆரம்பிக்கவேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் கலந்துகொண்டு வேங்கட் சுப்ரமணியன் அற்புதமாகப் பேசினார். (அதன் ஒலிப்பதிவைத் தேடி எடுத்து, வலையில் ஏற்றுகிறேன்.)

வேங்கட சுப்ரமணியனிடம் பேசி பல பாட்காஸ்ட்கள் செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் காலம் கடந்துவிட்டது.

அவர் குடிமக்கள் மையம் (Citizens' Centre) என்று பல கிராமங்களில் தொடங்கி, கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை தலைமைப் பண்புகளைப் பயிற்சியின்மூலம் அளிக்க ஏற்பாடுகளைச் செய்துவந்தார். அந்தப் பணி, அவரது நினைவாக விடாது தொடரும் என்று நம்புகிறேன்.

தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி நிறைய வருத்தம் கொண்டிருந்த அவர், அவற்றை எப்படிக் களையலாம் என்பது தொடர்பாகப் பல கருத்துகளைக் கொண்டிருந்தார். அந்தக் கருத்துகளை பயமின்றி எழுதியும் வந்தார். தமிழர்கள் தேவையின்றி அச்சப்படுகிறார்கள் என்றும் அவர் நினைத்தார். பயமில்லாத மனிதர்களே ஒரு குடியாட்சியில் நல்ல குடிமகன்களாக இருக்கமுடியும் என்பது அவரது கருத்து. நான் எந்தக் காரணத்துக்காகவும் அச்சப்பட மாட்டேன்; பயமின்றி என் கருத்துக்களை வெளியிடுவேன் என்று இந்த நாளில் மனத்துக்குள்ளாக உறுதி கூறிக்கொள்கிறேன்.

ஒரு நல்ல நண்பரை இழந்த வருத்தத்தை எப்படி ஆக்கப்பூர்வமாக மாற்றுவது என்று யோசிக்கிறேன். அவரது கருத்துக்களை எப்படி முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன்.

கல்லூரி மாணவர்களுடன்...

கடந்த இரு மாதங்களாக வேலைப் பளு காரணமாக பள்ளிகள், கல்லூரிகளில் சென்று பேசுவது தடைப்பட்டது. வரும் சில நாள்களில் கீழ்க்கண்ட இடங்களில் பேசுகிறேன்:

1. வெள்ளிக்கிழமை (4-9-2009) அன்று திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கலை அறிவியல் கல்லூரியின் இளைஞர் நலத் துறை மாணவர்களிடம் ‘சிகரம் நோக்கி...’ என்ற தலைப்பில் பேசுகிறேன்.

2. திங்கள்கிழமை (7-9-2009) மதுரை இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயன்சஸ் கல்லூரியில் ஒரு தினம் முழுதும் அங்குள்ள மாணவர்களுடன் கழிக்கிறேன். தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மாணவர்கள் எப்படிப் பயன்பெறலாம்; தகவல் தொழில்நுட்பம் கொண்டு ஒரு சமூகம் எப்படி முன்னேறலாம் ஆகியவை பற்றி காலை, மாலை இரு வேளைகளிலும் பேசுகிறேன். அத்துடன் செயல்வழிப் பயிற்சியும் இருக்கும்.

3. செவ்வாய்க் கிழமை (8-9-2009) சென்னை ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில், New Media Journalism பற்றிப் பேசுகிறேன். சென்ற ஆண்டும் இதே தலைப்பில் பேசியிருந்தேன். இப்போது வேறு புது மாணவர்களிடம் பேசவேண்டும். இந்தக் கல்லூரி மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள். கூர்ந்து கவனிப்பது, தீர்க்கமான கேள்விகள் கேட்பது என்று ஆர்வத்தோடு பங்கு பெறுவார்கள்.

(இதில் சிலவற்றை ஒலிப்பதிவும், சிலவற்றை ஒளிப்பதிவும் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன்.)