Thursday, January 11, 2007

சென்னை புத்தகக் காட்சி: நாள் 2

11/1/2007. இதுதான் 'officially' முதல் நாள். நல்ல கூட்டம். புது மக்கள் நிறைய இருந்தனர். மதியம் 2.00 மணி முதற்கொண்டே கூட்டம் உள்ளே வரத்தொடங்கியது.

ஆனால் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை நடந்து செல்வதில் பலரும் கஷ்டப்பட்டனர். நடுநடுவே இருந்த எமெர்ஜென்சி பாதை வழியே குறுக்காகச் செல்ல மக்கள் முற்பட்டனர். அவர்களைக் காவலர்களும் சில கடைக்காரர்களும் தடுத்தனர்.

Other news

* முதல்வர் ஒரு கோடி ரூபாய்க்கு காசோலையை அனுப்ப (நேற்று சொல்லி, இன்று பணம் தயார்!) காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.

* கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது "தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே கலைஞர் நிறைவேற்றிவிட்டார், இங்கு (முதல்நாள்) கொடுத்த வாக்குறுதிகள் எம்மாத்திரம்?" என்றார்.

* கழிப்பிட வசதிகள் சுமார். கிடையவே கிடையாது. எங்கோ பாழடைந்த கட்டடம் போன்று இருந்த ஓரிடத்தில் பெண்களுக்கான கழிவறை இருந்தது. அங்கு விளக்குகள் ஏதும் இல்லை. இந்தியாவில் ஆண்களுக்கு கழிப்பறையே தேவையில்லை. அவர்கள் ஆங்காங்கு ஒதுக்குப்புறமாகத் தங்கள் வேலைகளைச் செய்தனர். பெண்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டனர்.

நாளைக்குள் நிர்வாகத்தினர் ஏதாவது செய்வார்களா என்று பார்ப்போம்.

* திடீரென குமுதம் ஸ்டாலில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் பக்கம் வருபவர்களுக்கு ஒரு புத்தகம் இலவசம் என்று அறிவித்தனர். ஒரே கூட்டம். கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் வரிசையில் நின்றனர். இதனால் பிற கடைகளுக்கு பாதிப்பு ஏற்பட, பலரும் சத்தம்போட, அதன்பின் என்ன நடந்தது என்று தெரியாது.

இலவசம் என்பதற்காக...

Smile of the day:



பல்லோடு ஸ்மைல்.

Picture of the day:



தென்கச்சி சுவாமிநாதன் பேசுவதைக் கேட்கும் மக்கள்.

சென்னை புத்தகக் காட்சி: நாள் 1

10/1/2007. புது இடம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராக உள்ள செயிண்ட் ஜார்ஜ் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 30-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது.

தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

Announcements for the day:

* முதல்வர் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ. ஒரு கோடியை எழுத்தாளர்களுக்காக என்று நன்கொடையாகக் கொடுப்பதாக அறிவித்தார். இந்தப் பணத்தை வைப்புநிதியில் வைத்து இதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு ஆண்டுக்கு ஐந்து எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய்கள் பரிசாக அளிக்க வேண்டும். இந்த நிதியை நிர்வகிப்பது பபாஸி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்.

* நிரந்தரப் புத்தகக் கண்காட்சி ஒன்று அமைய அரசு 50% செலவை ஏற்கும். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இரண்டு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தை அரசு பதிப்பளர்களுக்கு வழங்கும். பபாஸி/பதிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து மீதிப் பணத்தை செலவழித்து இடத்தைக் கட்டிக்கொள்ளவேண்டும். எத்திராஜ் கல்லூரிக்கு அருகில் அல்லது சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் இடங்கள் உள்ளன. (என்னுடைய விருப்பம் எத்திராஜ் கல்லூரிக்கு அருகில் உள்ள இடம்...)

Awards for the day:

* சிறந்த எழுத்தாளர்: பிரபஞ்சன்
* சிறந்த குழந்தை எழுத்தாளர்: ரேவதி எனும் பெயரில் எழுதும்/எழுதிய ஹரிஹரன்
* சிறந்த பதிப்பகம்: பிரேமா பிரசுரம்
* சிறந்த புத்தகக் கடை: திருச்சி அகத்தியர் புத்தக நிலையம்

Other news

* முதல்வர் மின்சார காரில் அரங்கைச் சுற்றி வருவதாக இருந்தது. ஆனால் பத்திரிகை படம்பிடிப்போர் அடித்துப் பிடித்து காவலர்களைத் தள்ளி அமளி செய்ததில், முதல்வர் வாசலோடே கிளம்பிவிட்டார். இவ்வளவு அடாவடியான போட்டோகிராஃபர்களை நான் பார்த்ததே இல்லை.

* முதல்வர் வந்ததால் காவல்துறை அனுமதிச்சீட்டு இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. முதல்வர் சென்றபிறகே 6.30 மணி அளவில்தான் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். காயிதே மில்லத் கல்லூரியைவிட இந்த இடம் ஊருக்குத் தொலைவில் இருப்பதாலும் முதல் நாள் கூட்டம் சற்றே குறைவாக இருந்தது.

Smile of the day:



வாயெல்லாம் பல்லாக - அல்லது பல் இல்லாத ஈறாக.

Picture of the day:



Prodigy Books (ஸ்டால் எண் 205/206) அறையில் குழந்தைகள் வண்ணம் தீட்டுகின்றன.

Monday, January 08, 2007

குழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்

தமிழில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் வழவழப்பான வண்ணத்தாளில், தரமான விதத்தில், குறைவான விலையில் கிடைப்பதில்லை என்ற குறை இருந்துவந்துள்ளது.

அதனைப் போக்கும் விதத்தில், புத்தகங்கள் கொண்டுவரவேண்டும் என்று கடந்த சில மாதங்களாக வேலை செய்துவருகிறோம். இதற்கென நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் உருவாக்கியிருப்பதுதான் Prodigy Books.

தமிழில் மட்டுமன்றி, பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் இந்தப் பதிப்பு புத்தகங்களை உருவாக்கும். தமிழ், ஆங்கிலம் ஒவ்வொன்றிலும் 12 புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சியில் களமமிறங்கிறோம். ஸ்டால் எண்கள் 205, 206-ல் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.

குழந்தைகளுக்குக் கதையும் இருக்க வேண்டும், அதே சமயம், நீதிக் கதைகள் போன்று இல்லாமல், அறிவைப் புகட்டுவனவாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கதையின் கதாநாயகர்கள் - விக்கி எனும் சிறுவன், ரேவா என்னும் சிறுமி. இவர்கள் தனித்தனியாகவோ, சேர்ந்தோ, பிற விலங்குகள், பறவைகள், மனிதர்களுடன் உலகைச் சுற்றி உண்மைகளைக் கற்பார்கள்.

1. ஹாய் கம்ப்யூட்டர்! (குட்டிப் பசங்களுக்கு கம்ப்யூட்டர், சுட்டிப் பையன் விக்கியோட டூர் போலாம் வாங்க!)
2. மீனம்மா, மீனம்மா (ரேவாவை கடலுக்கு அடியில் அழைத்துப் போகிறது ஸ்நூ! அடேங்கப்பா! அங்க எவ்ளோ விதவிதமான மீன்கள்!!)
3. ஜப்பானை சுத்திப் பாக்கப் போறேன்! (குட்டி ரேவா ஜப்பானுக்கு ஜாலி ட்ரிப் போறாளாம். அங்க அவ ஃப்ரண்ட் மோடோ இருக்கான்! பெரிய சுமோ சாம்பியன்!)
4. hello நான் ரிசீவர் பேசறேன்! (விக்கியோட சேர்ந்து நாமும் டெலிபோனோட கதைய தெரிஞ்சுக்கலாமா?)
5. விக்கியைத் துரத்திய டைனோசர்! (டைனோசர் கிட்ட விக்கி மாட்டிகிட்டான். காப்பாத்த வாங்க!)
6. புல்புல் கொடுத்த பெட்ரோல்! (பெரிய பாலைவனத்துல குட்டி ரேவா. புல்புல்லோட ஒரு திக்திக் பயணம்!)
7. விண்வெளியில் விக்கி! (குறும்புக்கார விக்கி விண்வெளியை நோக்கி... கூடவே புஸ்புஸ்ஸும் துறுதுறு ஜோஜோவும்!)
8. எங்க போச்சு சூரியன்? (காணாமல் போன சூரியனை, தேடிச் செல்கிறான் விக்கி!)
9. விக்கி vs விக்கி (சைக்கிள், ஆட்டோ, கார், பஸ், லாரி... அப்பப்பா! ஒரு ஐஸ்க்ரீம்காக எவ்வளவு கலாட்டா!)
10. ரயிலே... ரயிலே... (ரயிலை கோட்டை விட்டுட்டான் விக்கி. அதனாலென்ன? இருக்கவே இருக்கு சுட்டி குதிரை பிளாக்கி!)
11. விமானத்தில் கலாட்டா! (விமானத்துல விக்கி, ரேவா! குறும்பு செய்ய குட்டி வாண்டுகள். அப்புறமென்ன? ஒரே ரகளைதான்!)
12. ஏலேலோ ஐலசா! (கட்டுமரத்துல போன ரேவா கப்பலில் திரும்பி வந்த கதை!)

இவை 16 அல்லது 24 பக்கங்களில் இருக்கும். தமிழில் ரூ. 25 அல்லது ரூ. 30 என்ற விலையிலும், ஆங்கிலத்தில் ரூ. 35 அல்லது ரூ. 40 என்ற விலையிலும் கிடைக்கின்றன.

அடுத்த மாதம் மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகும்.

பர்வேஸ் முஷரஃப், In the Line of Fire

நாளை (செவ்வாய்), 9 ஜனவரி 2007, மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டை ஹோட்டல் டே'ஸ் இன், டெக்கான் பிளாஸாவில் (Day's Inn, Deccan Plaza), பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய "In the Line of Fire, A Memoir" என்னும் புத்தகத்தின் தமிழாக்கம் "உடல் மண்ணுக்கு" வெளியிடப்படுகிறது. புத்தகத்தை நாகூர் ரூமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேச உள்ளோர்:

1. பி.எஸ்.ராகவன், Former Director (Political), Ministry of Home Affairs, Govt. of India
2. பி.ராமன், Former Additional Secretary, Cabinet Secretariat, Govt. of India
3. Col. R.ஹரிஹரன், Retd. Military Intelligence Officer

இவர்கள், பாகிஸ்தானும் இந்தியாவில் பயங்கரவாதமும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கார்கில் போர், மற்றும் பிற எல்லைப் பிரச்னைகள், இந்தியா-பாகிஸ்தான் அமைதி ஆகியவை பற்றி பேச உள்ளனர்.

வரவேற்பு: பத்ரி சேஷாத்ரி, நன்றியுரை: நாகூர் ரூமி

அரங்கில் அதிக இடங்கள் இல்லாததால், வரவிரும்புபவர்கள் முன்கூட்டியே வந்து இடங்களில் அமர்ந்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துப்பறியும் சாம்பு

இன்று (திங்கள்), 8 ஜனவரி 2007, மாலை 6.00 மணிக்கு மயிலாப்பூர் சிவசாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளி, ஆர்.கே.சுவாமி அரங்கத்தில், 'துப்பறியும் சாம்பு' செம்பதிப்பு, கிழக்கு பதிப்பகம் மற்றும் தேவன் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்:
6.00: கதை சொல்கிறார் சஞ்சய் சுப்ரமணியன்
6.15: வரவேற்புரை - சாருகேசி, தேவன் அறக்கட்டளை
6.30: நூலை வெளியிடுபவர்: ஓவியர் கோபுலு, பெற்றுக்கொள்பவர்: மதன், சிறப்புரை: மதன்
வாழ்த்துரை: பாக்கியம் ராமசாமி, கிரேஸி மோகன், சஞ்சய் சுப்ரமணியன்
7.30: காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின் துப்பறியும் சாம்பு நாடகத் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி வீடியோ
7.50: நன்றியுரை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்

அனைவரும் வருக.