Friday, May 11, 2007

ரவுடித்தனத்தின் எதிர்காலம்

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், கடந்த இரு பத்தாண்டுகளில் பொது வாழ்க்கையில் வன்முறை குறைந்துள்ளது என்றே நினைக்கிறேன்.

சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியாவில், நிலவுடைமைக் கிழார்கள்தான் தங்களுக்கென்றே அடியாள்களை வைத்திருந்த முதல் கூட்டத்தினர். கீழவெண்மணிப் படுகொலைகள் இந்த அடியாள்களால்தான் நிறைவேற்றி வைக்கப்பட்டன. கூலிக்காக ஜமீந்தாரின் ஏவல்களை சிரமேற்கொண்டு அடிதடிகள், அவ்வப்போது கொலைகள், ஆள்கடத்தல்கள் ஆகியவற்றைச் செய்யும் ரவுடிகள் பின் அரசியலுக்கு மாற்றம் கண்டனர்.

ஆரம்பகட்டத்தில் அரசியலிலும் இந்த ஜமீந்தார் அடியாள்கள்தாம், தம் எஜமானருக்காக (அல்லது அவர் கைகாட்டும் ஒருவருக்காக) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த வில்லத்தனங்கள் பெரும்பாலும் கிராமப்புற, சிறு நகர ரவுடித்தனங்களே. இவற்றைப் பல சினிமாக்களில் நாம் பார்த்திருப்போம்.

இந்த அடியாள்கள் இல்லாமலேயே பல 'சூடு ரத்தம்' கொண்ட இனமானச் சிங்கங்கள், ஏதாவது ஒன்று என்றால் அறுவாளையும் பிச்சுவா கத்தியையும் தடிக்கழிகளையும் எடுத்துக்கொண்டு பிற ஜாதி, மத மக்களைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்ற சம்பவங்களும் ஏராளம். ஆனால் இவை பொதுவாக பணத்துக்காக இல்லாமல், 'மானத்துக்காக'ச் செய்யப்படுபவை. ஆனால் பல நேரங்களில் இங்கும் பணம் கொடுத்து அடியாள்களையும் கூட அழைத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் உண்டு.

பெருநகர் ரவுடித்தனம், விளிம்புநிலை மக்கள் வாழும் சேரிகள் பக்கம் உருவானது. 'தாதா'க்கள் உருவாயினர். சிறு குற்றங்கள் - ஜேப்படி, திருட்டு, கள்ளக் கடத்தல் (contraband smuggling); கொஞ்சம் பெரிய குற்றங்கள் - காசு வாங்கிக்கொண்டு ஆள்களை அடித்தல், மாறு கால்/கை வாங்குதல், ஆசிட் ஊற்றுதல், கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், நில/வீடு அபகரிப்பு, கொள்ளையடித்தல், சாராயம் காய்ச்சுதல், கஞ்சா, ஹெராயின் கடத்துதல்-விற்றல், சதை வியாபாரம், அதற்காகப் பெண்களைக் கடத்துதல்; மாபெரும் குற்றங்கள் - கொலை, கூட்டமாகச் சேர்ந்து சென்று கொலைவெறியுடன் கண்மூடித்தனமாகத் தாக்குதல் (mob violence), பொதுச்சொத்துகளை நாசம் செய்தல் ஆகியவை. வேறு எந்தக் கண்ணியமான வேலை மூலமும் வருமானத்தைப் பெறமுடியாத நிலையில் பல இளைஞர்கள் (சில பெண்களும்) இந்தத் துறைக்குள் நுழைந்தனர்.

இந்த வன்முறையாளர்களை, சட்டத்துக்குப் புறம்பானவர்களை, அரசியல் விருப்பத்துடன் அழைத்துக்கொண்டது. அரசியல் கட்சிகளுக்குச் சில தேவைகள் இருந்தன (இருக்கின்றன).
  1. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி, போலி வாக்குகளை அடித்துத் தள்ளுவது
  2. பொதுமக்களை வாக்களிக்கவிடாமல் தடுத்து, விரட்டி அடிப்பது
  3. தேர்தலின்போது எதிர்க்கட்சியில் முக்கியமானவர்களைக் கடத்துவது
  4. எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி, வாக்கு சேகரிக்க முடியாமல் தடுப்பது
  5. எதிர்க்கட்சிக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் புகுந்து ரகளை செய்தல்
  6. கடைசி அஸ்திரமாக 'போட்டுத் தள்ளுவது'
பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே (கம்யூனிஸ்டுகள் நீங்கலாக) இந்த அரசியல் ரவுடிகளை நம்பினாலும், ஆளும் கட்சிக்குத்தான் இவர்களது உதவி அதிகமாக இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் காவல்துறையின் உதவி. காவல்துறை சுதந்தரமாகச் செயல்படாமல் ஆளும் கட்சியின் கைக்குள் இருந்ததால், ஆளும் கட்சி ஆதரவு ரவுடிகள் மட்டுமே அதிகச் செயல்திறனுடன் பணியாற்ற முடிந்தது.

ஆனால் சமீப காலமாக மைய தேர்தல் ஆணையம், மாநில காவல்துறையை நம்பாமல் துணை ராணுவத்தின் உதவியுடனும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியும் தேர்தலை நடத்துவதால் அரசியல் ரவுடிகளின் தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பிஹார், உத்தர பிரதேசம் போன்ற இடங்களிலேயே இந்த அரசியல் ரவுடிகளால் அதிகம் ஒன்றும் செய்ய முடிவதில்லை. எனவே தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலோடு அரசியல் ரவுடிகளின் தாக்கம் நின்றுவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில வருடங்களாக நீதிமன்றங்கள் நேரடியாகத் தலையிட்டு சிபிஐ விசாரணையை முடுக்கிவிடுகிறார்கள். இதனால் அரசியல் கொலைகள் யாரால் செய்யப்பட்டன என்பது தெரிந்து, அவர்களும் தண்டனை அனுபவிக்க நேரிடுகிறது. பிஹார் போன்ற இடங்களிலேயே இது நடக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில வருடங்களில் ஒருசில அரசியல் கொலைகள் நிகழ்ந்திருந்தாலும் இவை சீக்கிரமே நின்றுவிடும் என்றே தோன்றுகிறது.

முன்னெல்லாம் அரசியல் கட்சிகள் பத்திரிகைகள்மீது கோபப்பட்டு ஆசிட் வீச்சு, கல்லெறிதல், உள்ளே புகுந்து உடைத்தல் ஆகியவற்றை நிறையவே செய்துள்ளன. இப்பொழுது குறைவாகவே நடக்கிறது. விரைவில் இதுவும் நின்றுவிடும்.

கடந்த சில வருடங்களாக நிகழும் பொருளாதார வளர்ச்சியினால் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நியாயமாகச் சம்பாதிப்பதுடன், ஏமாற்றிச் சம்பாதிப்பது, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு சம்பாதிப்பது என்று பல வாய்ப்புகள் உள்ளன. வளர்ச்சிப் பணிகள் குறைவாக நடக்கும் காலத்தில் 'கமிஷன் பணம்' பார்ப்பது அரசியல்வாதிகளுக்கு எளிதான விஷயமல்ல. ஆனால் பல வளர்ச்சிப் பணிகள் இப்பொழுது நடைபெறுகின்றன. சாலைகள், மேம்பாலங்கள், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்கள், வேலைக்கு உணவு திட்டம் என்று பல கோடி, கோடி பணங்கள் புரளும்போது ஆங்காங்கே புல்லுக்கும் கொஞ்சம் பொசிந்துகொள்கிறார்கள்.

இம்மாதிரியாகச் சேர்க்கும் பணம் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி போன்றவற்றைவிட அதிகம். வேலையும் எளிது.

இந்தக் காரணங்களால் சீக்கிரமே வன்முறை குறைந்து, சட்டம் ஒழுங்கு அதிகமாகும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஊழல் குறையப்போவதில்லை. வேறு வடிவில் நிகழப்போகிறது. அத்தகைய ஊழல் பொதுமக்களின் உயிருக்கு நேரடியாக ஊறு விளைவிக்காது என்று தோன்றுகிறது. வன்முறையைவிட ஊழலை எதிர்கொள்வது எளிது என்று நினைக்கிறேன்.

ராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை

நேற்று மதியம் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிய நேர்முக கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க நேரிட்டது. தமிழ் வர்ணனை படுமோசம். முன் பின் கிரிக்கெட் தெரியாத யாரோ ஒருவரை - அல்லது தமிழில் கிரிக்கெட் வர்ணனை தெரியாத ஒருவரைக் கொண்டுவந்துள்ளனர். அவருக்கு தமிழில் கிரிக்கெட் கலைச்சொற்கள் எதுவுமே தெரியவில்லை. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி போன்றோர் பல வருடங்களாகச் சென்னை வானொலியில் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்து வந்துள்ளனர். ராமமுர்த்திக்கு வயதாகி குரல் நடுங்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அப்துல் ஜப்பார் (வயதானாலும்) இன்னமும் கம்பீரமான குரலைக் கொண்டிருக்கிறார்.

ராஜ் டிவி கிரிக்கெட் வர்ணனையாளருக்கு உதவும் விதமாக, சில கலைச்சொற்கள் இங்கே: (இவை புழக்கத்தில் உள்ள சொற்கள். புதிதாக நான் உருவாக்கியவை அல்ல.)

Ball - பந்து
Bowler - பந்து வீச்சாளர்
Bowling - பந்து வீசுதல்
Fast Bowler - வேகப்பந்து வீச்சாளர்
Medium Pacer - மித வேகப்பந்து வீச்சாளர்
Spin - சுழல்பந்து
Spinner - சுழற்பந்து வீச்சாளர்
Left hand - இடது கை
Right hand - வலது கை
Over the wicket - வீசும் கை விக்கெட்டுக்கு மேல் வர
Round the wicket - வீசும் கை விக்கெட்டைவிட்டு விலகி வர

Bat - மட்டை
Defended the ball - தடுத்து ஆடினார்
Played a stroke/shot - அடித்து ஆடினார்
Driving at the ball - செலுத்தி ஆடினார்
Cutting the ball - வெட்டி ஆடினார்
Pushed the ball - தட்டி விட்டார்
Sweep/Swept the ball - பெருக்கி அடித்தார்
Steered the ball - திசை கொடுத்துத் தட்டினார்
Lofted the ball - உயரத் தூக்கி அடித்தார்
(இவை போதா. பல அடிகளுக்கு தமிழில் புழக்கத்தில் நல்ல சொற்கள் இல்லை. கிளான்ஸ், ஃபிளிக், புல், ஹூக் என்று பல நுணுக்கமான அடிகளுக்குச் சொற்கள் இன்று இல்லாவிட்டால் பரவாயில்லை. நாளடைவில் உருவாக்கிக் கொள்ளலாம். இதேபோல பந்துவீச்சிலும் பல சொற்களுக்குச் சரியான தமிழாக்கம் எனக்குத் தட்டுப்பட்டதில்லை.)
Off-side - ஆஃப் திசை
On-side/leg-side - கால் திசை
Front foot - முன் கால்
Back foot - பின் கால்
Front foot defensive shot - முன்னாங்காலில் சென்று தடுத்தாடினார். (etc.)

Fielder - தடுப்பாளர் (பந்துத் தடுப்பாளர்)
(தடுப்பு வியூகத்தின் பல பெயர்களுக்கு தமிழாக்கம் கிடையாது. இவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாகப் பயன்படுத்துவதில் பெரிய தவறில்லை - இப்பொழுதைக்கு.)
Catch - கேட்ச்
catches the ball/caught the ball - பந்தைப் பிடிக்கிறார்/பிடித்தார்
Diving - பாய்ந்து விழுந்து (பிடித்தார்/தடுத்தார்)

Boundary - எல்லைக்கோடு - அல்லது நான்கு ரன்கள் (இடத்துக்குத் தகுந்தவாறு)
Six/Sixer - ஆறு ரன்கள்
Run(s) - ஓட்டம்(ங்கள்)/ரன்(கள்)

Glove(s) - கையுறை(கள்) / கைக்காப்பு(கள்)
Pad(s) - கால்காப்பு(கள்)
Helmet - தலைக்கவசம்

Umpire - நடுவர்

இன்னமும் கூட நிறைய இருக்கலாம். ஆனால் இவற்றை வைத்துக்கொண்டே ஓரளவுக்கு ஒப்பேற்றிவிடலாம். அடுத்த ஆட்ட வர்ணனை கொஞ்சமாவது உருப்படியாக இருக்கும் என்று நம்புவோம்.

Monday, May 07, 2007

கிரிக்கெட் தொலைக்காட்சியில் - தமிழிலும் தெலுங்கிலும்

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர் ராஜ் டிவியில் தமிழிலும் அவர்களுடைய நெட்வொர்க்கின் விசா டிவியில் தெலுங்கிலும் ஒளிபரப்பாகும். இந்தத் தொடரின் உரிமையாளர்களான நியோ ஸ்போர்ட்ஸ் ராஜ் டிவி நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹிந்தியல்லாத ஓர் இந்திய மொழியில் இப்படி தொலைக்காட்சி ஒளி/ஒலிபரப்பு வருவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன்.

எப்படி சன் டிவி இதை விட்டுக்கொடுத்தது என்று புரியவில்லை. கிரிக்கெட் இப்பொழுது இந்தியாவில் மோசமான ஆதரவில் உள்ளது என்றாலும் நூதனமான இந்த முயற்சி எந்த அளவுக்கு விளம்பரதாரர்களது ஆதரவைப் பெறும் என்று கண்டறிவதற்காவது சன் டிவி இதில் ஈடுபட்டிருக்கலாம்.

இதன்மூலம் பங்க்குசந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனமான ராஜ் டிவிக்கு எத்தனை லாபம் கிடைக்கும், அதன் பங்குவிலை எவ்வளவு ஏறும் என்பது சுவாரசியமான தகவலாக இருக்கும்.

Saturday, May 05, 2007

அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

இன்று 'தி ஹிந்து' நடுப்பக்கக் கட்டுரையில், ஹரீஷ் கரே குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி அலசியிருக்கிறார். ஹரீஷ் கரே காங்கிரஸ் மற்றும் சோனியா அபிமானி. அப்துல் கலாமை அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. (ஏனோ?) கீழ்க்கண்ட வாசகத்தைப் பாருங்கள்:
... NDA seems to have lost its enthusiasm for its proposal [of a second term for Kalam] but the friends of President Kalam have stepped up the campaign in his favour. Political parties are sullenly watching a Kalam second-term bid, which they think is being choreographed from Rashtrapati Bhavan.
கலாமே தான் இரண்டாவது முறை பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகத் தன் நண்பர்களை வைத்து ஊடகங்களில் புகுந்து விளையாடுகிறார் என்பது கரேயின் குற்றச்சாட்டு. ஆனால் அழகாக, அந்தப் பழியைப் பிற கட்சிகளின்மீது போட்டுவிடுகிறார்.

ராதாகிருஷ்ணன் முதற்கொண்டு கலாம் வரையில் ஒவ்வொரு குடியரசுத் தலைவரும் எப்படியாவது இரண்டாவது முறையும் பதவியில் இருந்துவிடுவது என்ற ஆசையில்தான் இருந்துள்ளனர் என்கிறார். இது எந்தவகையில் நியாயமான கருத்து என்று புரியவில்லை. பதவி ஆசை என்பது அரசியல்வாதிகள் அனைவருக்கும் இருக்கும். ஆனால் சில குடியரசுத் தலைவர்கள் - ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசேன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் - கட்சிகள், அரசியல் ஆகியவற்றுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள்.

கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுதப்படாத விதிமுறை (convention) எந்த நபருக்கும் இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் பதவியைக் கொடுக்கக்கூடாது என்பதே - என்கிறார் கரே. ஆனால் அவரது கட்டுரையிலேயே, இது விதிமுறை அல்ல, நிகழ்வுகள் அப்படியான ஒரு நிலையைக் கொண்டுவந்துவிட்டது என்று அறிகிறோம். இப்பொழுதைய நிலையை எடுத்துக்கொள்வோம். கலாம் வேண்டாம் என்று மறுத்தால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் கலாம் போட்டியில் நிற்க விரும்புவதாகச் சொன்னால் போதும். வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. ஆனால் அவர்கள் சென்ற தேர்தலின்போதும்தான் இவரை எதிர்த்து கேப்டன் லட்சுமி சேகாலை நிறுத்தினார்கள். எனவே இவர்களது எதிர்ப்பு மட்டும் போதாது. காங்கிரஸும் எதிர்க்கும் என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால் காங்கிரஸ், இடதுசாரியினருக்கு பெரும்பான்மையைவிடக் குறைவாகவே வாக்குகள் உள்ளன. UPA கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்தாலும் பெரும்பான்மையைவிடக் குறைவான வாக்குகளே உள்ளன.

மொத்த வாக்குகள்: 1,098,882
UPA வாக்குகள்: 390,000
இடதுசாரி வாக்குகள்: 110,000
NDA வாக்குகள்: 335,000
உத்தரப் பிரதேச வாக்குகள்: 83,824 (மே 11 அன்று யாருக்கு எவ்வளவு என்று தீர்வாகும்)
பிற: 180,058

உத்தரப் பிரதேசத்தில் முதல் மூன்று கட்சிகளாக பஹுஜன் சமாஜ் கட்சி, பாஜக, சமாஜ்வாதி கட்சி ஆகியவையே (இதே வரிசையில் அல்ல) வரப்போகின்றன என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்கின்றன. காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 10% இடங்கள் - சுமார் 40 - மட்டுமே கிடைக்கும். காங்கிரஸுடன் மட்டும் கூட்டு சேர்ந்து யாரும் ஆட்சி அமைக்க முடியாது. முலாயம் சிங்கும் மாயாவதியும் ஒருவரோடு ஒருவர் வெட்டுப்பழி/குத்துப்பழி. எனவே இவர்கள் இருவரில் யாரோ ஒருவர் பாஜக துணையுடன் ஆட்சி அமைக்கப்போகிறார். அப்படிப்பட்ட நிலையிலும்கூட எதிர்க்கட்சியாக இருக்கும் மூன்றாவது கட்சி (சமாஜ்வாதி அல்லது பஹுஜன் சமாஜ்) காங்கிரஸ்-இடதுசாரி குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை.

பாஜகவுக்கு தனது கட்சியின் பைரோன் சிங் ஷேகாவத்தை நிற்கவைக்கக்கூடிய பலம் கிடையாது. அவரது RSS பின்னணி, வாக்குகளை உடைத்துவிடும். பாஜக எப்படியும் இடதுசாரி/காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காது. எனவே கலாம் போட்டியில் இருக்கும் பட்சத்தில் பாஜக + தோழமைக் கட்சிகளின் வாக்குகள் மொத்தமாக கலாமுக்கே போய்ச்சேரும். சிவசேனைகூட இதில் பின்வாங்காது.

பிற கட்சிகளில் தெலுகு தேசம், அஇஅதிமுக, மதிமுக போன்றவை அப்படியே கலாமுக்குத்தான். தமிழகத்தில் திமுக கூட கலாமுக்கு ஆதரவாகத்தான் விழும். கலாமை எதிர்த்து வாக்களிப்பது (கலைஞர் பொன்விழாவுக்கு கலாம் வராதபட்சத்திலும்) தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

எனவே பிற வாக்குகளில் பெரும்பான்மை கிட்டத்தட்ட 150,000-க்கு மேல் கலாமுக்கே போகும். உத்தரப் பிரதேச முதலிரண்டு கட்சிகளும் கலாமுக்கே என்றாலும், மூன்றாவது கட்சியின் வாக்குகள் யாருக்கு என்பது முக்கியமாகிறது. அது காங்கிரஸ் வேட்பாளருக்குப் போவதற்கு சாத்தியங்கள் குறைவு. காங்கிரஸ் உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கட்சியோடும் சண்டையில் இருக்கிறது.

கலாமுக்கு எதிராக யாரை காங்கிரஸ்-இடதுசாரிகள் நிறுத்துவார்கள் என்பதும் முக்கியம். கலாமுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. (ஆனால் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை.)

காங்கிரஸ் அரசியல்வாதி யாரையாவது நிறுத்தினால் அவரால் பிற கட்சியினரின் வாக்குகளைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே. மன்மோகன் சிங்கையே நிறுத்தினால் ஒருவேளை நல்ல போட்டியைக் கொடுக்கமுடியும். ஆனால் அது நடக்காது என்று தோன்றுகிறது.

கலாமுடைய விருப்பம் என்னவென்று தெரியவில்லை. அவர் ஆணித்தரமாக எதையும் சொல்லவில்லை. அவர் போட்டியில் இருக்கும் பட்சத்தில் அவர் வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் நல்ல போட்டி இருக்கும்.

Thursday, May 03, 2007

மே சிந்தனைகள்

தொழில்புரட்சியை அடுத்து உருவான கம்யூனிசச் சிந்தனை, தொழிலாளர் என்பவர் பொதுவாக ஒரு தொழிற்சாலையில் (Factory) வேலை செய்பவர் என்றும் கச்சாப் பொருளுக்கும் உற்பத்தியாகும் இறுதிப் பொருளுக்கும் இடைப்பட்ட மதிப்புக் கூடுதலைக் கொடுப்பது அந்தத் தொழிலாளரின் உழைப்பு மட்டுமே என்றும் இந்த உழைப்பை உறிஞ்சிக் கொழுப்பது மூலதனத்தைக் கொண்டுவந்த முதலாளி(கள்) என்றும் சொன்னது.

தொழில்புரட்சிதான் இயந்திரமயமாக்கலைக் கொண்டுவந்தது. எந்த ஒரு பிரச்னை அல்லது தேவைக்கும் ஓர் இயந்திரம் அல்லது ஒரு நுகர்பொருள் தீர்வாகும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. அழுக்கான துணிகளைக் கைவலிக்கத் தோய்ப்பது பிரச்னை. அதைத் தீர்க்க உருவாக்கப்படுவது தோய்க்கும் இயந்திரம் (Washing Mechine). நாவிதர் துணையின்றி சவரம் செய்துகொள்வது தேவை. அந்தத் தேவையைத் தீர்த்துவைப்பது தூக்கியெறியக்கூடிய சவரக்கத்தி (Disposable Razor). காலையில் சமைக்காமல் சாப்பிட ஏதுவான பலகாரம் - தேவை. பாக்கெட்டில் அடைத்த தானிய உணவு (Cereals), தீர்வு.

பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று தோன்றியதுமே அடுத்து அதனைப் பெருமளவு உற்பத்தி செய்ய (Mass Production), தொழிற்சாலை வேண்டியிருந்தது. உற்பத்தி செய்த பொருள்களை மக்களுக்குக் கொண்டுசெல்ல விநியோக முறை, விளம்பர உத்திகள் ஆகியவை தேவைப்பட்டன. பெரு நிறுவனங்கள் (Corporations) உருவாயின. இவற்றை நடத்தத் தேவையான மூலதனத்தை - பங்கு மூலதனமாகவும் கடன்களாகவும் - வழங்க நிதி நிறுவனங்கள் உருவாயின.

இந்தச் சூழ்நிலையில், உற்பத்தியின் முக்கியமான அங்கமான தொழிலாளர்கள், எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும்கூட, முக்கியத்துவத்தில் பெரிதும் கீழே சென்றனர். அதிகமான வேலை நேரம் (நாளுக்கு 8 மணிநேரத்துக்கு மேல்), மோசமான பணியிடச் சூழல், உயிருக்கே ஆபத்தான வேலைகள், விடுமுறை என்பதே இல்லாத சூழல், காப்பீடு இல்லாத நிலை, எப்பொழுது வேண்டுமானாலும், எந்த இழப்பீடும் தரப்படாமல் வேலை போகலாம் என்ற நிலை, சம்பளம் குறைக்கப்படலாம் என்ற சூழல், தொழிலாளர் நலச் சட்டதிட்டங்கள் என்று ஏதும் இல்லாமை, அரசும் காவலர்களும் முதலாளிகளுக்கு ஆதரவாக மட்டுமே இருத்தல் - போன்றவற்றால் தொழிலாளர் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது.

1860களுக்குப் பிறகு அமெரிக்காவில் தடவண்டிப் பாதைகளை அமைத்தவர்கள், கச்சா எண்ணெய் தோண்டியவர்கள், இரும்பு-எஃகு நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் என்று அனைவருமே இப்படியான சூழலில்தான் வேலைசெய்தனர். ஒருநாள் கூட ஓய்வு இன்றி, (ஞாயிறு கூட ஓய்வு கிடையாது!) நாளுக்கு 12-14 மணிநேரமெல்லாம் வேலை செய்துள்ளனர். கார்னெகியின் இரும்புக் கம்பெனிகளில் லாபம் கொழிக்கும்போதுகூட தொழிலாளர்களின் சம்பளம் குறைந்துகொண்டே வந்துள்ளது.

இரும்பு, சிமெண்ட், ரசாயனத் தொழிற்சாலைகளில் பல வேதிப் பொருள்களும் உடலில் படுவதால், சுவாசிக்கப்படுவதால் உடல்நலம் குன்றி இறந்த தொழிலாளர்கள் எத்தனையோ பேர்.

தொழிலாளர்கள் சங்கம் (Union) அமைத்து, ஒன்றுகூடி, பல விஷயங்களுக்காகப் போராடவேண்டியிருந்தது.
  • எட்டு மணிநேர வேலை நாள்
  • வார விடுமுறை
  • உடல்நலக் குறைவு விடுமுறை, பண்டிகை விடுமுறைகள், பிற விடுமுறை
  • விடுமுறை நாள்களுக்கும் சம்பளம்
  • குறைந்தபட்ச சம்பளம்
  • தொழிலாளர் சங்கம் அமைக்கும் உரிமை
  • பணியிடங்களில் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்
  • தொழிலாளர் சங்கம் மூலம் சம்பளப் பேச்சுவார்த்தை (Collective negotiation)
  • லாபத்தில் பங்கு (Bonus)
  • வேலைக்கான இலக்கு (Target)
  • பணியிடத்தில் நிர்வாகத்தால் கண்ணியத்துடன் நடத்தப்படுதல்
  • ஓவர்டைம் நேரத்தில் அதிகச் சம்பளம்
  • ஓய்வூதியம்
  • தம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை
  • பிற வசதிகள்
இவை அனைத்தும் ஒரே நாளில் கேட்கப்படவில்லை. ஒரே நாளில் கிடைக்கவுமில்லை. போராடிப் போராடித்தான் இதில் பல விஷயங்கள் இன்று சர்வதேச, இந்தியத் தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ளன. இதற்குமேலும் தேவைகள் உள்ளன. ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பலவுமே இன்று தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

இன்று தொழிற்சாலை என்பதைத் தாண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் என்பதிலிருந்து பணியாளர் என்ற நிலை. அரசு அலுவலகங்களில், தனியார் சேவை அலுவலகங்களில், கடைகளில், உணவகங்களில் என்று எங்கு பார்த்தாலும் பணியாளர்கள்.

இதில் அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர்த்த பிற அரசு அலுவலகங்களுக்கு லாபம் என்ற நோக்கு கிடையாது. பொதுத்துறை நிறுவனங்கள் முற்றிலும் லாப நோக்கு உடையன அல்ல. ஆனால் அனைத்து தனியார் நிறுவனங்களும் லாப நோக்குடன் மட்டுமே நடத்தப்படுகின்றன.

தனியார் நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் நான்கு தனிப்பட்ட பங்காளிகள் உள்ளனர். முதலீட்டாளர்கள், மேல்மட்ட நிர்வாகிகள், பிற பணியாளர்கள், வாடிக்கையாளர்கள். இவர்கள் அனைவரது நோக்கங்களும் ஒரே கோணத்தில் இருப்பதில்லை. வாடிக்கையாளர் குறைந்த விலையில் சிறந்த சேவையை/பொருளை நாடுகிறார். ஆனால் இது முதலீட்டாளர்களது லாபத்தைப் பாதிக்கும். நிர்வாகிகள் முடிந்தவரை தங்களுக்கு நல்ல சம்பளமும் நிறுவனத்தை மேம்படுத்த நிறையப் பணமும் தேவை என்று எதிர்பார்ப்பார்கள். இதுவும் முதலீட்டாளர்களின் லாபத்தைப் பாதிக்கும். லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு பணியாளர்களுக்குக் குறைந்த சம்பளத்தையும் மோசமான பணியிடத்தையும் தந்தால் அது பொருளை/சேவையைப் பாதிக்கும். வாடிக்கையாளர் மனம் கோணுவார். வருமானம் குறையும்.

ஆனால் இந்த நான்கு பங்காளிகளுக்குள் எப்பொழுதுமே அதிகம் பாதிக்கப்படுவது பணியாளர்கள்தாம். தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வாடிக்கையாளர்கள் வேறு பொருளை/சேவையை நாடிப் போய்விடுவார்கள். மேல்மட்ட நிர்வாகிகள் பொதுவாகவே அதிகச் சம்பளம் வாங்குபவர்கள். இரண்டு மாதங்கள் விடுப்பில் போய் வேறு வேலைக்குச் சேர்ந்துவிடுவார்கள். சில தொழில்முனைவோரை விடுத்து, பொதுவாக முதலீட்டாளர்கள் கையில் நிறைய பசையுள்ளவர்கள்தாம். அதனால் நிறுவனத்தை இழுத்துமூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்.

ஊடகங்கள் - கம்யூனிச சார்பு ஊடகங்கள் தவிர்த்து - பொதுவாகவே பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதை மோசமான முறையில் காட்டுவார்கள்.

ஒரு நிறுவனம் இழுத்துமூடப்படுகிறது என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பணியாளர்கள் மட்டுமே. எனவே அதை உணர்ந்து வேலை நிறுத்தம்வரை பணியாளர்கள் செல்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் வலுவாகத்தான் இருக்கும்.

மொத்தத்தில் பணியாளர் நிலை உயரவேண்டும் என்றால் அவர்கள் முதலாளிகளாக ஆனால் மட்டுமே இது ஏற்படும். அதற்கு ஒவ்வொரு லாப நோக்குள்ள நிறுவனத்திலும் கீழ்நிலைப் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து 10% பங்குகளையாவது வைத்திருக்கவேண்டும். ஸ்டாக் ஆப்ஷன் முறை எல்லா நிறுவனங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும். மேலும் பணியாளர் பிரதிநிதி ஒருவராவது நிறுவனத்தின் போர்டில் (Board Of Directors) இயக்குனராக இருக்கவேண்டும்.

அப்பொழுதுதான் நிறுவனத்தின் லாபம், டிவிடெண்ட், மேல்மட்ட நிர்வாகிகளின் சம்பளம், அடிமட்டத் தொழிலாளியின் சம்பளம், பணியிட வசதிகள், வேலை நேரம், விடுமுறை, போனஸ் போன்ற பலவற்றிலும் பணியாளர்களது கருத்தும் கேட்கப்படும்.

கம்பெனியாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் இது சாத்தியமானது. ஆனால் சிறு நிறுவனங்கள், கம்பெனியாக நிறுவப்படாத நிறுவனங்கள், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றில் இதனைச் செய்வது கடினமாக இருக்கலாம்.

இருந்தும், பெரும் நிறுவனங்களிலாவது 10% பங்குகள் பணியாளர்களுக்கான அறக்கட்டளையில் இருப்பது அவசியம் என்றே நினைக்கிறேன்.

தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்.