சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியாவில், நிலவுடைமைக் கிழார்கள்தான் தங்களுக்கென்றே அடியாள்களை வைத்திருந்த முதல் கூட்டத்தினர். கீழவெண்மணிப் படுகொலைகள் இந்த அடியாள்களால்தான் நிறைவேற்றி வைக்கப்பட்டன. கூலிக்காக ஜமீந்தாரின் ஏவல்களை சிரமேற்கொண்டு அடிதடிகள், அவ்வப்போது கொலைகள், ஆள்கடத்தல்கள் ஆகியவற்றைச் செய்யும் ரவுடிகள் பின் அரசியலுக்கு மாற்றம் கண்டனர்.
ஆரம்பகட்டத்தில் அரசியலிலும் இந்த ஜமீந்தார் அடியாள்கள்தாம், தம் எஜமானருக்காக (அல்லது அவர் கைகாட்டும் ஒருவருக்காக) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த வில்லத்தனங்கள் பெரும்பாலும் கிராமப்புற, சிறு நகர ரவுடித்தனங்களே. இவற்றைப் பல சினிமாக்களில் நாம் பார்த்திருப்போம்.
இந்த அடியாள்கள் இல்லாமலேயே பல 'சூடு ரத்தம்' கொண்ட இனமானச் சிங்கங்கள், ஏதாவது ஒன்று என்றால் அறுவாளையும் பிச்சுவா கத்தியையும் தடிக்கழிகளையும் எடுத்துக்கொண்டு பிற ஜாதி, மத மக்களைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்ற சம்பவங்களும் ஏராளம். ஆனால் இவை பொதுவாக பணத்துக்காக இல்லாமல், 'மானத்துக்காக'ச் செய்யப்படுபவை. ஆனால் பல நேரங்களில் இங்கும் பணம் கொடுத்து அடியாள்களையும் கூட அழைத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் உண்டு.
பெருநகர் ரவுடித்தனம், விளிம்புநிலை மக்கள் வாழும் சேரிகள் பக்கம் உருவானது. 'தாதா'க்கள் உருவாயினர். சிறு குற்றங்கள் - ஜேப்படி, திருட்டு, கள்ளக் கடத்தல் (contraband smuggling); கொஞ்சம் பெரிய குற்றங்கள் - காசு வாங்கிக்கொண்டு ஆள்களை அடித்தல், மாறு கால்/கை வாங்குதல், ஆசிட் ஊற்றுதல், கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், நில/வீடு அபகரிப்பு, கொள்ளையடித்தல், சாராயம் காய்ச்சுதல், கஞ்சா, ஹெராயின் கடத்துதல்-விற்றல், சதை வியாபாரம், அதற்காகப் பெண்களைக் கடத்துதல்; மாபெரும் குற்றங்கள் - கொலை, கூட்டமாகச் சேர்ந்து சென்று கொலைவெறியுடன் கண்மூடித்தனமாகத் தாக்குதல் (mob violence), பொதுச்சொத்துகளை நாசம் செய்தல் ஆகியவை. வேறு எந்தக் கண்ணியமான வேலை மூலமும் வருமானத்தைப் பெறமுடியாத நிலையில் பல இளைஞர்கள் (சில பெண்களும்) இந்தத் துறைக்குள் நுழைந்தனர்.
இந்த வன்முறையாளர்களை, சட்டத்துக்குப் புறம்பானவர்களை, அரசியல் விருப்பத்துடன் அழைத்துக்கொண்டது. அரசியல் கட்சிகளுக்குச் சில தேவைகள் இருந்தன (இருக்கின்றன).
- வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி, போலி வாக்குகளை அடித்துத் தள்ளுவது
- பொதுமக்களை வாக்களிக்கவிடாமல் தடுத்து, விரட்டி அடிப்பது
- தேர்தலின்போது எதிர்க்கட்சியில் முக்கியமானவர்களைக் கடத்துவது
- எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி, வாக்கு சேகரிக்க முடியாமல் தடுப்பது
- எதிர்க்கட்சிக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் புகுந்து ரகளை செய்தல்
- கடைசி அஸ்திரமாக 'போட்டுத் தள்ளுவது'
ஆனால் சமீப காலமாக மைய தேர்தல் ஆணையம், மாநில காவல்துறையை நம்பாமல் துணை ராணுவத்தின் உதவியுடனும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியும் தேர்தலை நடத்துவதால் அரசியல் ரவுடிகளின் தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பிஹார், உத்தர பிரதேசம் போன்ற இடங்களிலேயே இந்த அரசியல் ரவுடிகளால் அதிகம் ஒன்றும் செய்ய முடிவதில்லை. எனவே தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலோடு அரசியல் ரவுடிகளின் தாக்கம் நின்றுவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில வருடங்களாக நீதிமன்றங்கள் நேரடியாகத் தலையிட்டு சிபிஐ விசாரணையை முடுக்கிவிடுகிறார்கள். இதனால் அரசியல் கொலைகள் யாரால் செய்யப்பட்டன என்பது தெரிந்து, அவர்களும் தண்டனை அனுபவிக்க நேரிடுகிறது. பிஹார் போன்ற இடங்களிலேயே இது நடக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில வருடங்களில் ஒருசில அரசியல் கொலைகள் நிகழ்ந்திருந்தாலும் இவை சீக்கிரமே நின்றுவிடும் என்றே தோன்றுகிறது.
முன்னெல்லாம் அரசியல் கட்சிகள் பத்திரிகைகள்மீது கோபப்பட்டு ஆசிட் வீச்சு, கல்லெறிதல், உள்ளே புகுந்து உடைத்தல் ஆகியவற்றை நிறையவே செய்துள்ளன. இப்பொழுது குறைவாகவே நடக்கிறது. விரைவில் இதுவும் நின்றுவிடும்.
கடந்த சில வருடங்களாக நிகழும் பொருளாதார வளர்ச்சியினால் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நியாயமாகச் சம்பாதிப்பதுடன், ஏமாற்றிச் சம்பாதிப்பது, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு சம்பாதிப்பது என்று பல வாய்ப்புகள் உள்ளன. வளர்ச்சிப் பணிகள் குறைவாக நடக்கும் காலத்தில் 'கமிஷன் பணம்' பார்ப்பது அரசியல்வாதிகளுக்கு எளிதான விஷயமல்ல. ஆனால் பல வளர்ச்சிப் பணிகள் இப்பொழுது நடைபெறுகின்றன. சாலைகள், மேம்பாலங்கள், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்கள், வேலைக்கு உணவு திட்டம் என்று பல கோடி, கோடி பணங்கள் புரளும்போது ஆங்காங்கே புல்லுக்கும் கொஞ்சம் பொசிந்துகொள்கிறார்கள்.
இம்மாதிரியாகச் சேர்க்கும் பணம் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி போன்றவற்றைவிட அதிகம். வேலையும் எளிது.
இந்தக் காரணங்களால் சீக்கிரமே வன்முறை குறைந்து, சட்டம் ஒழுங்கு அதிகமாகும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஊழல் குறையப்போவதில்லை. வேறு வடிவில் நிகழப்போகிறது. அத்தகைய ஊழல் பொதுமக்களின் உயிருக்கு நேரடியாக ஊறு விளைவிக்காது என்று தோன்றுகிறது. வன்முறையைவிட ஊழலை எதிர்கொள்வது எளிது என்று நினைக்கிறேன்.