Wednesday, December 03, 2008

பிரபாத் பட்நாயக் - உலகப் பொருளாதாரச் சிக்கல்

நேற்று சென்னை, ராணி சீதை ஹாலில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரும், கேரளா திட்டக் குழுவின் துணைத் தலைவரும், உலகப் பொருளாதாரச் சிக்கல் குறித்து ஐ.நா உருவாக்கியுள்ள செயல்குழுவின் ஓர் உறுப்பினருமான டாக்டர் பிரபாத் பட்நாயக், உலகப் பொருளாதாரச் சிக்கல் குறித்து உரையாற்றினார்.

அந்த உரையின் ஒலிப்பதிவு இங்கே.

Indian School of Social Sciences, Asian College of Journalism, Media Foundation ஆகியவை சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தன.

பட்நாயக் மிக அருமையாகப் பேசக்கூடியவர். இந்தப் பேச்சை தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல ஏற்பாடு செய்திருந்தவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் வரவில்லை. தமிழில் சுருக்கமான விளக்கம் கொடுக்கப்பட்டபோது நான் கிளம்பிவிட்டேன். அதனால் இந்தப் பேச்சின் சாரம் முழுமையாக வெளியானதா என்று சொல்லமுடியாது. தொடர்ந்து கேள்வி-பதில்கள் இருந்தன. அதற்கும் நான் இருக்கவில்லை.

கேய்னீசியன் பொருளாதாரம், குமிழும் வெடித்தலும் தொடர்ந்து நடக்கும், சர்வதேச நிதியால் இழுத்துச் செல்லப்படும் முதலியல் வளர்ச்சி, இப்போதைய உலகப் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்வது எப்படி - புஷ் சொல்வது போல சும்மா இருப்பதா, அல்லது 20-25 நாடுகள் ஒருங்கிணைந்து, தங்களது நிதிப் பற்றாக்குறையை அதிகரித்து, செலவு செய்வதா? அப்படிச் செய்தால் போதுமா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு இடதுசாரிப் பொருளியல் வாதங்களை அழகாக எடுத்து வைத்தார்.

Tuesday, December 02, 2008

ஒபாமா, பராக்!



புத்தகத்தை இணையத்தில் வாங்க

அருன் ஷோரி - பயங்கரவாதம் பற்றி

நேற்று விஜில் சார்பில் சென்னையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவரும், முன்னாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியருமான அருன் ஷோரி கலந்துகொண்டு பேசினார். விஜில் அமைப்பின் கல்யாணராமன், தினமணி ஆசிரியர் வைத்யநாதன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.

கல்யாணராமன் - சரஸ்வதி ஆறு, சேதுசமுத்திரம் ஆகியவை தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவருபவர். தெற்காசியா என்பது இந்திய கலாசாரம் பரவியுள்ள பகுதி. இந்தப் பகுதியின் மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார். தினமணி ஆசிரியர் வைத்யநாதன் ஏன் பேசினார் என்று தெரியவில்லை. தமிழ்ல் பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில்தான் பேசுவேன் என்று அடம்பிடித்து, எதையோ சொன்னார்.

கடைசியாக அருன் ஷோரி பேசினார். அந்தப் பேச்சின் ஒலிப்பதிவை இங்கே கொடுத்துள்ளேன்.

அருன் ஷோரியின் வாதம்:

* காங்கிரஸ் அரசு கையாலாகாத அரசு.

* ஷிவ்ராஜ் பாடிலுக்கும் மன்மோகன் சிங்குக்கும் கடல் வழியாகத் தாக்குதல் நடக்கும் என்று தெரியும். இதைப் பல இடங்களில் பேசியுள்ளனர். ஆனால் தற்காப்பு நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை.

* பாகிஸ்தான், இஸ்லாத்தால் ஒன்றுபட்ட தேசமல்ல. இந்திய எதிர்ப்பால் ஒன்றுபட்ட தேசம்.

* லஷ்கார்-ஈ-தோய்பா, வெளிப்படையாகவே பாகிஸ்தானில் இயங்கிவருகிறது. இஸ்லாமாபாதுக்குப் பக்கத்தில் 300 ஏக்கர் நிலத்தில் அதன் அலுவலகம் உள்ளது. “அரசமைப்புக்கு வெளியே உள்ளவர்கள்” இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம் என்று சொல்வது அபத்தம்.

* பாகிஸ்தானின் உள்நாட்டடுப் பிரச்னைகளால் காஷ்மீரில் வன்முறை குறைந்துள்ளது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? பாகிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்னைகளை அதிகரிக்குமாறு செய்யவேண்டும். பலூசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தரவேண்டும். ஆஃப்கன்ஸ்தான் - பஷ்டூன் பழங்குனியினருக்கு ஆதரவு தரவேண்டும். நரசிம்மராவ் பாராட்டப்படவேண்டியவர். அவர் வடக்குக் கூட்டணிப் படையினருக்குக் கொடுத்த ஆதரவால்தான் தாலிபன்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

* இந்தியாவைச் சுற்றி ஆறு “failed states” உள்ளன. (அதாவது பாகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான், பங்களாதேசம், நேபாளம், மையான்மார், இலங்கை?)

* பாகிஸ்தானைக்கூட இந்தியாவால் சமாளித்துவிட முடியும். ஆனால் சீனா இந்தியாவை நசுக்கப் பார்க்கிறது. சீனா இந்தியாவை “நண்டில் ஒரு கொடுக்கு” என்று வர்ணிக்கிறது. அமெரிக்கா என்ற நண்டின் கொடுக்குகள் - இந்தியா, தைவான், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்றவையாம்.

* சீனா மையான்மாருக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்து, அந்த நாட்டைத் தன் பிடியில் வைத்துள்ளது. பங்களாதேசத்துடன் ராணுவ ஒப்பந்தம் ஒன்றைச் செய்து, சிட்டகாங்கில் கப்பல் தளம் அமைக்கிறது. பாகிஸ்தானில் க்வத்தார் என்ற இடத்தில் கப்பல் தளத்தை அமைக்கிறது. திபெத்தில் ராணுவத்தைக் குழுமியுள்ளது. அருணாசலப் பிரதேசத்தைத் தனது என்கிறது. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அடுத்த நாள் முதலாக அந்த ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து ஷரத்துகளையும் மறுதலித்துள்ளது.

* மக்கள் தேசப்பற்று உள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். அந்த வாய்ப்பு அவர்களுக்கு இப்பொது கிடைக்க உள்ளது.

* தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்டதிட்டங்கள் வேண்டும். 1990களில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளனர். 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு இன்னமும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.

Monday, December 01, 2008

மும்பை - 1: Audacity of Terror

இதுநாள் வரை நாம் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆட்பட்டுள்ளோம். நகர பயங்கரவாதத்தில் பெரும்பாலும் நாம் கண்டது, மறைவிடங்களில் வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டுகள். இவை RDX-ல் ஆனவை என்றால் கடும் சேதம் இருக்கும். உள்ளூர் வெடிமருந்து என்றால் சேதம் குறைவு. கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் என்றால் சேதம் அதிகம். உதாரணம்: மும்பை ரயில். கூட்டம் இல்லாத இடங்கள் என்றால் உயிர்ச்சேதம் குறைவு.

கலவரம் மிகுந்த பூமியான காஷ்மீர், அசோம், முன்னாள்களில் பஞ்சாப் ஆகிய இடங்களில்தான் கைகளில் துப்பாக்கியுடனும் கிரெனேடுகளுடனும் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுப்பார்கள். அழிவை ஏற்படுத்தியபின்னர், ஓடி ஒளிவார்கள், அல்லது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். இரு பக்கமும் சேதம். இடையில் மாட்டிய மக்கள் பலர் மடிவார்கள்.

28 டிசம்பர் 2005 அன்று, பெங்களூரு ஐ.ஐ.எஸ்சியில் நடந்த அறிவியல் மாநாட்டின்போது, நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து சுட்டதில் ஐஐடி டெல்லி பேராசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் லஷ்கர்-ஈ-தோய்பா - சிமி பெயர்கள் அடிபட்டன. அதற்கு சில மாதங்கள் முன்பு, 5 ஜூலை 2005 அன்று அயோத்தியின் சர்ச்சைக்குரிய ராமஜன்மபூமி தலத்துக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டனர்.

இதற்குமுன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அது 2001, நாடாளுமன்றத்தின் மீதான துப்பாக்கித் தாக்குதல். அது நாடாளுமன்றம் என்பதால் கடுமையான பாதுகாப்பு இருந்ததால், படையினரால், உறுப்பினர்கள் யாருக்கும் எந்த அபாயமும் இன்றிப் போரிட்டு எதிரிகளைக் கொல்ல முடிந்தது.

அந்த வகையில், 26-28 நவம்பர் 2008 தாக்குதல்கள் மிக பயங்கரமானவை. இவை படையெடுப்புக்குச் சமானம். கப்பல்கள், படகுகளில் சர்வ சாதாரணமாக வந்து, வழியில் தென்படும் அப்பாவிகளைக் கொன்று, ஹாலிவுட் சினிமாக்களில் காண்பிப்பதுபோல, வாயில் சுயிங்கம் மென்றபடி, சில இளைஞர்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி, குறிப்பிட்ட இலக்குகளைக் கைப்பற்றி, வரைமுறையின்றி சுட்டு, கிரெனேடுகளை வீசி, பிணைக்கைதிகளைத் துன்புறுத்தி, பின் கொன்றுள்ளனர்.

குண்டு வைத்துவிட்டு, ஓடி ஒளியவில்லை. பாதுகாப்புப் படையினருடன் போரிட்டுள்ளனர்.

இதை வெறும் பயங்கரவாதமாக மட்டுமே கருதாமல், போராகக் கருதிச் செயல்படவேண்டும்.

எதையெடுத்தாலும் பாகிஸ்தான் என்று குற்றம் சாட்டுகிறது இந்தியா என்பது பாகிஸ்தானின் வாதம். பாகிஸ்தானின் பங்கு என்ன, பாகிஸ்தான் என்ற ‘தோல்வியுற்ற தேச அமைப்பு’ இந்தியாவுக்கு என்னென்ன ஆபத்துகளைக் கொடுக்கும் என்பதை நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்.

(தொடரும்)

மும்பை தாக்குதல்: ஞாநியின் கட்டுரை

மும்பை தாக்குதல் தொடர்பாக ஞாநி எழுதிய ஆங்கிலக் கட்டுரை.

முழுவதுமாக உடன்படுகிறேன். கடைசிப் பத்தி மட்டும் இங்கே, தமிழாக்கத்தில்:
30 மணி நேரமாக தொலைக்காட்சி கவரேஜைப் பார்த்தபிறகு, கடும் கோபத்திலும் விரக்தியிலும் அனைத்து செய்தி சானல்களுக்கும் ஒரு தகவலை அனுப்பினேன். அவர்கள்தானே, தொடர்ந்து, எதைப்பற்றி வேண்டுமானாலும் எங்களுக்குத் தகவல் அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்? நான் அனுப்பிய தகவல் இதுதான்: “இதை நான் மிகுந்த வேதனையுடன் அனுப்புகிறேன். மத்திய ரயில்வே நிலையத்தின் படுகொலையை உங்களது சானலையும் சேர்த்து அனைத்து சானல்களும் காண்பிக்கவே இல்லை. அங்குதான் உண்மையான மும்பை மக்களும் இந்தியாவின் சாதாரணர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக நீங்கள் அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டும். ஐந்து நட்சத்திர மேட்டுக்குடியினர் மீதான உங்களது அதீதக் காதல், அருவருப்பைத் தருகிறது. அச்சு ஊடகங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.”

எந்த சானலுமே இதைக் கண்டுகொள்ளவில்லை. ஸ்ரீனிவாசன் ஜெயின் மட்டும் பதில் அனுப்பினார். “நீங்கள் சொல்வது சரிதான். இன்று சம நிலையைக் கொண்டுவர முயற்சிக்கிறோம்.”

இந்தக் கட்டுரையை எழுதும் விநாடிவரை, தாக்குதல் ஆரம்பித்து 66 மணி நேரத்துக்குப் பிறகும், ஒன்றும் நடக்கவில்லை.
[பின்குறிப்பு: இன்று மாலை கிளம்பி நாளை - 2 டிசம்பர் 2008 - அன்று மும்பை டிரைடெண்ட் ஹோட்டலில் நடக்க இருந்த ஒரு நாள் கான்ஃபரன்ஸ் ஒன்றில் கலந்துகொள்ள நானும் சத்யாவும் செல்வதாக இருந்தது. அந்தக் கூட்டம் ரத்தாகியுள்ளது என்பதை சொல்லத் தேவையில்லை. அதன்பின் 3 டிசம்பர் 2008 காலை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளம்பி பூனா செல்லவேண்டும்.

இரண்டு இடங்களையுமே தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். கூடவே தாஜ், இன்னும் சில இடங்கள். ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் என்ன ஆனது, யார் இறந்தார்கள், எத்தனை நேரம் தாக்குதல் நடந்தது. எதுவுமே தொலைக்காட்சிகளில் காணோம்:-( இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இல்லையில்லை, அருவருக்கத்தக்கது.]