நேற்று விஜில் சார்பில் சென்னையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவரும், முன்னாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியருமான அருன் ஷோரி கலந்துகொண்டு பேசினார். விஜில் அமைப்பின் கல்யாணராமன், தினமணி ஆசிரியர் வைத்யநாதன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.
கல்யாணராமன் - சரஸ்வதி ஆறு, சேதுசமுத்திரம் ஆகியவை தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவருபவர். தெற்காசியா என்பது இந்திய கலாசாரம் பரவியுள்ள பகுதி. இந்தப் பகுதியின் மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார். தினமணி ஆசிரியர் வைத்யநாதன் ஏன் பேசினார் என்று தெரியவில்லை. தமிழ்ல் பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில்தான் பேசுவேன் என்று அடம்பிடித்து, எதையோ சொன்னார்.
கடைசியாக அருன் ஷோரி பேசினார்.
அந்தப் பேச்சின் ஒலிப்பதிவை இங்கே கொடுத்துள்ளேன்.அருன் ஷோரியின் வாதம்:
* காங்கிரஸ் அரசு கையாலாகாத அரசு.
* ஷிவ்ராஜ் பாடிலுக்கும் மன்மோகன் சிங்குக்கும் கடல் வழியாகத் தாக்குதல் நடக்கும் என்று தெரியும். இதைப் பல இடங்களில் பேசியுள்ளனர். ஆனால் தற்காப்பு நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை.
* பாகிஸ்தான், இஸ்லாத்தால் ஒன்றுபட்ட தேசமல்ல. இந்திய எதிர்ப்பால் ஒன்றுபட்ட தேசம்.
* லஷ்கார்-ஈ-தோய்பா, வெளிப்படையாகவே பாகிஸ்தானில் இயங்கிவருகிறது. இஸ்லாமாபாதுக்குப் பக்கத்தில் 300 ஏக்கர் நிலத்தில் அதன் அலுவலகம் உள்ளது. “அரசமைப்புக்கு வெளியே உள்ளவர்கள்” இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம் என்று சொல்வது அபத்தம்.
* பாகிஸ்தானின் உள்நாட்டடுப் பிரச்னைகளால் காஷ்மீரில் வன்முறை குறைந்துள்ளது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? பாகிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்னைகளை அதிகரிக்குமாறு செய்யவேண்டும். பலூசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தரவேண்டும். ஆஃப்கன்ஸ்தான் - பஷ்டூன் பழங்குனியினருக்கு ஆதரவு தரவேண்டும். நரசிம்மராவ் பாராட்டப்படவேண்டியவர். அவர் வடக்குக் கூட்டணிப் படையினருக்குக் கொடுத்த ஆதரவால்தான் தாலிபன்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
* இந்தியாவைச் சுற்றி ஆறு “failed states” உள்ளன. (அதாவது பாகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான், பங்களாதேசம், நேபாளம், மையான்மார், இலங்கை?)
* பாகிஸ்தானைக்கூட இந்தியாவால் சமாளித்துவிட முடியும். ஆனால் சீனா இந்தியாவை நசுக்கப் பார்க்கிறது. சீனா இந்தியாவை “நண்டில் ஒரு கொடுக்கு” என்று வர்ணிக்கிறது. அமெரிக்கா என்ற நண்டின் கொடுக்குகள் - இந்தியா, தைவான், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்றவையாம்.
* சீனா மையான்மாருக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்து, அந்த நாட்டைத் தன் பிடியில் வைத்துள்ளது. பங்களாதேசத்துடன் ராணுவ ஒப்பந்தம் ஒன்றைச் செய்து, சிட்டகாங்கில் கப்பல் தளம் அமைக்கிறது. பாகிஸ்தானில் க்வத்தார் என்ற இடத்தில் கப்பல் தளத்தை அமைக்கிறது. திபெத்தில் ராணுவத்தைக் குழுமியுள்ளது. அருணாசலப் பிரதேசத்தைத் தனது என்கிறது. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அடுத்த நாள் முதலாக அந்த ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து ஷரத்துகளையும் மறுதலித்துள்ளது.
* மக்கள் தேசப்பற்று உள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். அந்த வாய்ப்பு அவர்களுக்கு இப்பொது கிடைக்க உள்ளது.
* தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்டதிட்டங்கள் வேண்டும். 1990களில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளனர். 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு இன்னமும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.