

சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் நாங்கள் பெருமையுடன் வழங்க உள்ள புத்தகங்கள் இவை. சென்ற ஆண்டு இவை இருக்கவில்லை. இந்த முயற்சி ஆரம்பித்தது மார்ச் 2010-ல்தான்.
அமர சித்திரக் கதைகள் (அமர் சித்ர கதா), ஆனந்த் பாய் என்பவர் வழிகாட்டுதலில் இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட வரலாறு, புராண, இதிகாச, காப்பிய படக்கதைகள் மட்டுமல்ல, நிஜ மனிதர்களைப் பற்றியும் உருவாக்கப்பட்ட படக்கதைகள். பஞ்ச தந்திரம், தெனாலி ராமன், பீர்பால் படக்கதைகளும் உண்டு.
பின்னர் இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு பிரைவேட் ஈக்விடி குழுமம், அமர சித்திரக் கதைகளை மட்டும் தனியாக வாங்கிக்கொண்டது. இந்தியாவில் மிக அதிகமாகப் படிக்கப்பட்ட புத்தக பிராண்ட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அமர சித்திரக் கதைகள் என்று சொல்லிவிடலாம்.
பெரும்பாலும் ஆங்கிலத்திலும், சில புத்தகங்கள் மட்டும் பிற மொழிகளிலுமாக இவை கிடைக்கின்றன. காமிக்ஸ் விரும்பிகள், இரு வண்ணத்தில் தமிழில் சுமார் 70-80 வெளியானதாகச் சொல்கிறார்கள். ஆங்காங்கு தேடினால் எங்கேனும் கிடைக்கலாம். முழு வண்ணத்திலேயே 15 புத்தகங்கள் வரை தமிழில் அமர சித்திரக் கதைகள் நிறுவனத்தாலேயே வெளியாகியிருந்தன. அவையும் இப்போது அச்சில் இல்லை. அதில் எழுத்துகள் கையாலேயே எழுதப்பட்டிருக்கும். கணினியுகத்துக்கு முந்தைய காலகட்டம் அது.
மார்ச் 2010 முதல், அமர சித்திரக் கதைகள் நிறுவனத்துடன் நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனம் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி, அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் தமிழில் இணைந்து கொண்டுவரப்போகிறோம். அவை அமர சித்திரக் கதைகள் பிராண்டிலேயே வெளியாகும்.
இதுவரையில் 24 புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளோம். அனைத்தும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். மேலும் சில புத்தகங்களில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த சென்னை புத்தகக் கண்காட்சி 2012-ன்போது நிச்சயம் 100 புத்தகங்களாவது இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
இந்தப் புத்தகங்களில் நாங்கள் வெளியிட்ட முதல் எட்டை நான்தான் தமிழாக்கம் செய்தேன்! அதில் எனக்கு மிகுந்த திருப்தி. அடுத்தவற்றை எல்லாம் ப்ராடிஜி எடிட்டர் சுஜாதா மொழியாக்கம் செய்ய, அவற்றை நான்தான் எடிட் செய்கிறேன். என் பிற அனைத்து வேலைகளையும்விட எனக்கு மிகுந்த சந்தோஷம் தருபது இந்த வேலைதான்.
நான் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்ததே காமிக்ஸ் வழியாகத்தான். முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று தொடங்கி, பின்னர் அம்புலிமாமா, ரத்னபாலா வந்து, பெரிய எழுத்து மந்திரவாதக் கதைகளைப் படித்து அங்கிருந்து விகடன், குமுதம் படிக்க ஆரம்பித்தேன் நான். அதேபோல இன்று என் மகளுக்குப் புத்தகம் படிக்கப் பழக்கிவைப்பதில் மிகுந்த சிரமப்பட்டு, ஆங்கில அமர சித்திரக் கதைகளிடம் தஞ்சம் புகுந்தேன். இப்போது அவள் அமர சித்திரக் கதைகள் தாண்டி, ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறாள்.
புத்தக வாசிப்பு குறைந்துவருகிறது என்று குறைப்படுவோர் பலர். தொலைக்காட்சியின் ஆதிக்கம்தான் எங்கும் என்று முறையிடுவோர் பலர். வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதைத் தெரிந்துவைத்துள்ள பலரும் எப்படித் தங்கள் குழந்தைகளுக்குப் படிப்பின் சுவையை ஊட்டுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் பதற்றமும் அடைகிறார்கள். என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். இதற்கான ஒரு விடை: அமர சித்திரக் கதைகள். கண்ணை மூடிக்கொண்டு இந்தப் புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
விலையும் மலிவுதான். 32 பக்கங்கள் கொண்ட (கிரவுன் 1/4) ஒவ்வொரு முழுவண்ணப் புத்தகமும் வெறும் ரூ. 35 மட்டுமே!
இதுவரை வந்துள்ள அனைத்து அமர சித்திரக் கதைகள் (தமிழ்) புத்தகங்களை வாங்க
இதற்குமுன் நான் அமர சித்திரக் கதைகள் பற்றி எழுதிய பதிவுகள் ஒன்று | இரண்டு

நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தபின் தமிழுக்குக் கிடைத்துள்ள சாகித்ய அகாதெமி விருதுகளை 
இந்தியாவின் கதை என்ன அற்புதமான கதை! இந்தியா என்றொரு தேசம் சாத்தியமே இல்லை என்று அனைவரும் ஆரூடம் கூறியபின், எப்படி அத்தனை எதிர்மறைக் கருத்துகளையும் தாண்டி இந்தியா என்ற தேசம் சாத்தியமாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது குஹாவின் எழுத்து.



