Friday, December 31, 2010

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாக இருக்கும் என் சிறு நூல். பக்கம்: 88, விலை ரூ. 40.



பா.ராகவனின் முன்னுரை

Monday, December 27, 2010

கிழக்கு இலக்கியம்

கிழக்கு பதிப்பகத்திலிருந்து இலக்கியப் புத்தகங்கள் வெளியாவது குறைவுதான். இந்த ஆண்டு வெளியான புத்தகங்கள் இவை:

இந்திரா பார்த்தசாரதியின் முழுச் சிறுகதைகளின் தொகுப்பு, இரு பாகங்களாக வெளியானது. ஒவ்வொன்றும் விலை ரூ. 300/- வெளியானவுடன் டாக் செண்டரில் வைத்த நிகழ்ச்சியில், இரு தொகுதிகளும் சேர்ந்து ரூ. 150/-க்கு அதிரடி விலையில் வழங்கப்பட்டது! கிட்டத்தட்ட 300 பிரதிகள் (இரு தொகுதிகளும் சேர்ந்து) அன்று விற்றது என்று நினைக்கிறேன். பின்னர் சிங்கப்பூரிலிருந்து ஒரு நண்பர் 50 பிரதிகள் வாங்கிச் சென்றார். முழுத் தொகுதிகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஒட்டுமொத்தமாக ஓர் எழுத்தாளரின் முழுப் பங்களிப்பை, அவரது எழுத்தில் உள்ள மாற்றத்தைக் காண முழுத்தொகுதி அவசியம். விலை எப்போதுமே சிக்கலானது. (கடந்த ஓராண்டில் காகித விலை 20%-க்கும் மேல் ஏறியுள்ளது என்பது இந்தத் தொழிலில் இருப்போருக்குத் தெரிந்த ஒன்று.) இந்தக் காரணத்தால்தான் இரு தொகுதிகளாக அச்சிட்டோம்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த இரு தொகுதிகளுக்கும் முக்கியமான இடம் இருக்கும்.

ஜெயமோகனின் மூன்று புத்தகங்களை இந்த ஆண்டு கொண்டுவருகிறோம். இரண்டு மீள்பதிப்புகள். ஏழாம் உலகம் (நான் கடவுள் சினிமாவுக்கான ஒரு இன்ஸ்பிரேஷன்) தமிழினி வெளியீடாக வந்து அச்சில் இல்லாமல் போனது. அதை ஆண்டின் இடையில் கொண்டுவந்திருந்தோம். விசும்பு என்ற அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு எனி இந்தியன் பதிப்பக வெளியிடாக வந்திருந்தது. அதுவும் இப்போது கிழக்கு மீள்பதிப்பாக வெளியாகிறது. இறுதியாக உலோகம், ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியாகி, பரபரப்புடன் பேசப்பட்டது. அதனை பல்ப் ஃபிக்‌ஷன் வெளியீடுபோல, கிரவுன் 1/8 அளவில், அட்டையில் தங்க முலாம் எல்லாம் பூசிக் கொண்டுவருகிறோம். விறுவிறுவெனச் செல்லும் சாகசக் கதை.

வெகு நாள்களாகக் கையில் இருந்த மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மருந்து என்ற புதினம் இந்த ஆண்டின் இடையில் வெளியானது. தமிழாக்கியவர், மலையாள மனோரமாவில் வேலை செய்யும் ராமன்.

பா. ராகவனின் இரு புதினங்கள் வெளியாகின்றன இம்முறை. இலக்கியப்பீடம் பரிசு பெற்ற அலகிலா விளையாட்டு ஒன்று, கல்கியில் தொடர்கதையாக வெளியான கொசு.

கதையாக அன்றி, அனுபவக் கட்டுரைகளாக, ஆனால் சிறுகதைக்கு உரிய சுவாரசியத்தை இழக்காமல் இருப்பது அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகள். அவரது இணையத்தளம், பல பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் என அனைத்தையும் தொகுத்து நாங்கள் கொண்டுவரும் புத்தகம் அமெரிக்க உளவாளி.

ஜே.எஸ். ராகவன் மாம்பலம் டைம்ஸில் தொடர்ந்து எழுதிவரும் தமாஷா வரிகளின் இந்த ஆண்டுத் தொகுப்பு, அன்புள்ள சண்டைக்கோழியே... என்று வெளியாகிறது. இதற்கு முந்தைய தமாஷா வரிகளின் தொகுப்புகள் இங்கே கிடைக்கின்றன.

சுஜாதா புத்தகங்கள் பற்றித் தனியாக எழுதிவிட்டேன். மேலும் இரு பதிவுகள் சுஜாதா புத்தகங்கள் தொடர்பில் வரும். வேறு சில இலக்கியப் புத்தகங்களை இந்த ஆண்டு கொண்டுவர முயற்சித்து, முடியாத நிலையில் உள்ளன. இவை வரும் மாதங்களில் வெளியாகும்.

Saturday, December 25, 2010

எந்திரன்

நேற்று எந்திரன் படம் ஒருவழியாகப் பார்த்தாயிற்று. எல்லோரும் மன்மதன் அம்பைக் குத்திக் கிழிக்கும்போது (நடுவில் ஏதோ நந்தலாலா என்று படம் வந்ததாமே?) விடாது எந்திரனைப் பற்றி எழுதியே தீருவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

முதலில் ஐஸ்வர்யா ராய்தான் ரோபாட் என்று நினைத்துவிட்டேன். ஆரம்பக் காட்சி முதல், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது ஏதோ தேசத்து பொம்மை மாதிரி வந்தார். அவரைப் பார்த்தால் இந்தியர் மாதிரியே தெரியவில்லை. முகத்தில் என்னென்னவோ செய்திருக்கிறார்கள் போல. ஆடல் பாடல் காட்சிகளில்கூட ரசிக்கமுடியவில்லை. சிட்டி கட்டிய கோட்டைக்குள் வசீகரன் நுழைந்துவிட்டான் என்று தெரிந்துகொள்ளும்போதும், பின்னர் மின்சாரம் இன்றி சிட்டியும் பிற ரோபாட்களும் விழுந்து தடுமாறும்போதும் ஒரு தேர்ந்த நடிகையாயிருந்தால் பின்னியிருப்பார். ஐஸ்வர்யா ராயின் நடிப்பைப் பார்த்தால் அழுகைதான் வருகிறது. அம்மணி ரிட்டயர் ஆகிவிடலாம்.

திரைக்கதை சொதப்பல்கள் நிறைய. ரோபாட்களைச் செய்ய வசீகரனுக்கு இரண்டே இரண்டு குப்பைப் பசங்கள்தான் உதவியாளர் என்றால் சிரிப்புதான் வருகிறது. அதிலும் ஒருத்தன் வெறும் நட் போல்ட் முடுக்குவானாம், இன்னொருத்தன் உடை மாற்றுவானாம். இதில் எல்லாம் கவனம் வேண்டியதில்லை, நாலு டான்ஸ் போட்டு கொஞ்சம் கிராபிக்ஸ் காட்டினால் மக்கள் வழிந்துகொண்டே பார்த்துவிடுவார்கள் என்ற அலட்சியம்தான் தெரிகிறது. கொஞ்சம் ஒரு நடை நடந்துபோய் ஒரு கார் ஃபேக்டரியில் பார்த்தாலே தெரியும் எத்தனை எஞ்சினியர்கள், சயண்டிஸ்டுகள் தேவை என்று. மருந்துக்கு பக்கத்து அறைகளில் நாற்பது, ஐம்பது பேர் எதையாவது செய்துகொண்டிருப்பதாகக் காட்டக்கூடாதா? அதைவிடக் கொடுமை டாக்டர் போராவின் ஆராய்ச்சிச் சாலை. அங்கே அந்த ஆளைத் தவிர வேறு ஒருவர்கூடக் கிடையாது. வெளிநாட்டு (ஜெர்மன் மொழி பேசும்) குண்டர்களுடன் உறவாடும்போது மட்டும் சில டஃப் ஆசாமிகள் தென்படுகிறார்கள். ஆனால் மற்ற நேரங்களில் அவர்களும் மிஸ்ஸிங்.

வசீகரன் - சனா உறவு புரியவேயில்லை. சொல்லப்போனால் அது காதல் மாதிரியே இல்லை. இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் இடிக்கிறது. சரி, விட்டுவிடுவோம். வசீகரன் தாடி ஏதோ ஜடாமுனிவர் மாதிரி சகிக்கவில்லை. எத்தனை ஆண்டுகள் முடி வளர்த்தால் அந்த அளவுக்கு தாடி வளரவேண்டும்?

மெர்சிடிஸ் பென்ஸ் கார்மீது ஏகப்பட்ட புல்லட்டுகள் அடித்தாலும் காருக்கு ஒன்றுமே ஆகமாட்டேன் என்கிறது. (சிட்டி முதலில் கார் ஓட்டும்போது டிராஃபிக் நெரிசலில் டிவைடரில் மோதி காரின் வலது முன்பக்கம் கொஞ்சம் நசுங்குகிறது - நிச்சயமாக எந்த காரும் நசுங்கும். ஆனால் அதன் தொடர் காட்சியிலேயே காரில் எந்த நசுங்கலும் காண்பதில்லை. இதுபோன்ற பல சொதப்பல்களும் உள்ளன.)

போலீஸ்காரர்கள், மிலிட்டரி என்று எல்லாமே முட்டாளதனமாக நடந்துகொள்கிறார்கள். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் என்று யாருமே சினிமாவில் காணக்கிடைப்பதில்லை. நாலு போலீஸ் அதிகாரிகள் மாதிரி இருப்பவர்கள், வசீகரன் சொல்கிறான் பேர்வழி என்று ஏகப்பட்ட ஆயுதங்களுடன் நடு ரோட்டில் குண்டுவெடித்து தூள் கிளப்புகிறார்கள். ஹெலிகாப்டர் வருகிறது. மக்களை எவாகுவேட் செய்வது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் குண்டு வீசுகிறது. சொல்லப்போனால், இந்தப் படத்தில், ஒரு நகரம், அதில் மக்கள் வசிக்கின்றனர் என்றெல்லாம் எந்த உணர்வும் வருவதில்லை. ஊர் சென்னை என்று ஒருமாதிரி ஊகிக்கமுடிகிறது ஆனால், சிந்த்தெடிக்காக வேறு என்னவெல்லாமோ காட்டிக் குழப்பி, முகமற்ற ஒரு நகரமாகச் செய்துவிடுகிறார்கள்.

சிட்டியால் தீயிலிருந்து காப்பாற்றப்படும் உடையில்லாத சின்னப் பெண்ணைத் தொலைக்காட்சிகள் அசிங்கமாக லைவ் ரிலே செய்வதாகவும், அதனால் அந்தப் பெண் ஓடிச் சென்று லாரியில் மோதி இறப்பதாகவும் காட்டி தமிழ்க் கற்பு சீன் ஒன்று வைத்து டைரக்டர் புளகாங்கிதம் அடையலாம். தியேட்டரில் என் பெண் உட்பட பல குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டனர். இதுபோன்ற காட்சிகள் எப்படி சென்சார் தாண்டி வருகிறது என்று புரியவில்லை. (இந்தியத் தொலைக்காட்சிகள் அந்த அளவுக்கு மோசமும் அல்ல!)

கடைசி கோர்ட் சீன் நல்ல காமெடி. அதாவது எந்தவித ஆதெண்டிசிடியும் தேவை இல்லை தமிழ் சினிமாப் படம் எடுக்க என்பதை அட்டகாசமாக நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

***

ஆனால் இதையெல்லாம் தாண்டி, அரங்கில் சிறு குழந்தைகள் குதித்துக் குதூகலித்தனர். சிட்டி அந்த இரண்டு அஸிஸ்டெண்டுகளையும் பலான இடங்களில் அடித்துத் தொகைப்பது, பின்னர் நெருப்பால் அடிப்பது, அந்த யூஸ்லெஸ் ஆசாமிகள் பேசும் அருவருப்பான வசனங்கள் போன்ற ஸ்லாப்ஸ்டிக் காமெடி எல்லோருக்கும் பிடிக்கிறது. சில இடங்களில் வசனம் நன்றாக இருந்தது. (சனா பிட் அடிக்க உதவ, பிரெக்னன்சி பற்றி ஆடியோ ரிலே முடித்து, உண்மை சொல்லி மாட்டியபிறகு, வெளியேறும்போது சிட்டி, இன்னும் மென்ஸ்ட்ருவேஷன், ஃபெர்டிலைசேஷன் எல்லாம் முடிக்கலையே எனச் சொல்ல, ‘அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க’ என்று டாக்டர்கள் போகிற போக்கில் சொல்வது.)

படத்தில் காட்சிக்குக் காட்சி ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தாலும் பல விஷயங்கள் மிக நன்றாக இருந்தன. உதாரணமாக, சிட்டி வடிவத்தில் ரஜினியின் கலக்கல் நடிப்பு. சிட்டி சனாவுக்கு உதவியாகச் செய்வதெல்லாம் (சமையல் உட்பட) பார்க்க ஜாலியாக இருக்கிறது. ரயிலில் நடக்கும் சண்டை கொஞ்சம் ஜவ்வு. மற்றபடி சுவாரசியம். சிட்டி-வசீகரன் சீண்டல்கள், முரண்பாடுகள்-கோபங்கள் நன்றாக வந்துள்ளன.

ஓர் இயந்திரம் மனிதனாக முயலும்போது ஏற்படும் அறச்சிக்கல்களை நிஜமாகவே ஒரு நாவலாகச் செய்தால் உலக இலக்கியங்களில் உன்னதமான இடத்தை அடையமுடியும். (ஒருவேளை அப்படிச் சில முயற்சிகள் இருக்கக்கூடும். நான் படித்ததில்லை.) சினிமாவிலும் இருக்கலாம்; நான் பார்த்ததில்லை. டெர்மினேட்டர் பார்த்துள்ளேன். ஐ, ரோபாட் படம் நான் பார்க்கவில்லை. வால்-ஈ ஓரளவுக்கு இதைத் தொடுகிறது. ஆனால் அனிமேஷன் வடிவில் இருந்ததாலும், மனித-இயந்திர உறவு இல்லை என்பதாலும் உயர்ந்த இடத்துக்குப் போகமுடியவில்லை.

கொஞ்சம் மெனக்கெட்டு உழைத்திருந்தால், மிக நல்ல கதையாக, உலகத் தரமான, அதே நேரம் இந்தியர்களையும் கவரக்கூடிய படமாக இருந்திருக்கலாம். ஆனால் அது தேவையில்லாமலேயே பெருமளவு தமிழர்களைக் கவர்ந்துள்ளது இந்தப் படம்.

Friday, December 24, 2010

மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் புத்தகங்களை மொழிபெயர்ப்பது எளிதல்ல. அவை இலக்கியப் புத்தகங்களாகட்டும், சமகால அரசியல், பொருளாதாரப் புத்தகங்களாகட்டும், ஏன், சாதாரண சுய முன்னேற்றப் புத்தகங்களாகட்டும். ஆங்கில வாக்கிய அமைப்புக்கும் தமிழ் வாக்கிய அமைப்புக்கும் தொடர்பே கிடையாது. எளிதான வாக்கியங்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் வளைத்து, மடித்து எழுதப்படும் வாக்கியங்கள், எண்ணற்ற மேற்கோள்கள், கலாசாரம் சார்ந்த idioms, துறை சார்ந்த குழூஉக்குறிகள் என்று தமிழாக்கம் செய்ய ரொம்பவே கஷ்டப்படுத்தும். இரு மொழிகளிலும் நல்ல ஞானம் தேவை. நிறையப் பொறுமை தேவை.

ஆங்கிலப் புத்தகங்கள் பெரும்பாலும் 400-500 பக்கங்கள் தாண்டி இருக்கும். குறைந்தபட்சம் 300 பக்கங்கள். தமிழாக்கம் செய்யும்போது, தமிழின் நீள நீளமான வார்த்தைகளும் inflexional முறையும் சேர்ந்து, ஒன்றரை மடங்கு விரிவாகும். சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்றால், ஒரு வரியைப் படித்தவுடனேயே தெரிந்துவிடும். மிகவும் அந்நியமாகத் தோன்றும்.

சென்ற ஆண்டு நாங்கள் கொண்டுவந்த சில புத்தகங்கள் மொழிபெயர்ப்பை சிறப்பாகச் செய்தன. முதலாவது ராமன் ராஜா மொழிபெயர்த்த, பல்லவி அய்யரின் சீனா பற்றிய புத்தகம்: சீனா: விலகும் திரை. இதைப் படித்த அனைவரும், ஏதோ தமிழில் எழுதப்பட்ட புத்தகத்தைப் படித்ததுபோலவே இருந்தது என்றார்கள். இரண்டாவது புத்தகம்: இலங்கை இறுதி யுத்தம். இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1, இதில் பெருமளவு வெற்றி கண்டது என்றாலும் இன்னும் சில இடங்களில் கொஞ்சம் தட்டிச் சரி செய்யவேண்டிய வேலைகள் உள்ளன. இந்த ஆண்டு வெளியாகும் பாகம் 2, இந்தப் பிரச்னைகளைக் கடந்துவிட்டது என்றே நினைக்கிறேன். சென்ற ஆண்டு வெளியான சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தகமும் திருப்தி தரக்கூடியதே.

இந்த ஆண்டு இன்னும் கொஞ்சம் அகலக்கால் வைத்துள்ளோம். முதலில் கொண்டுவந்தது அப்துல் கலாம், ஆசார்ய மஹாபிரக்ஞாவின் குடும்பமும் தேசமும், சுதா சேஷய்யன் மொழிபெயர்ப்பில் (ஆங்கில மூலம் The Family and the Nation, HarperCollins). இது மிகவும் கடினமான ஒரு துறை பற்றியது. இந்திய ஆன்மிகம் பற்றியது. எனவே அதற்கான மொழி தேவைப்பட்டது. அடுத்தது ராமன் ராஜா மொழிபெயர்ப்பில் வந்துள்ள இரண்டாவது புத்தகம். முதல் புத்தகம் போன்றே இதிலும் ராமன் ராஜா வெளுத்துக்கட்டியுள்ளார். போரஸ் முன்ஷி, 11 நிறுவனங்கள் பற்றி, எப்படி அவை புதுமை படைத்துள்ளன என்பது பற்றி எழுதிய புத்தகம் Making Breakthrough Innovations Happen (HarperCollins). தமிழில் திருப்புமுனை என்ற பெயரில் கொண்டுவந்துள்ளோம்.

பர்மிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஒருசில போராளிகளை இந்திய ராணுவ உளவுத்துறையின் ஒரு மோசக்கார மேஜர் எப்படி ஏமாற்றினார்; அதன் விளைவாக அந்தப் போராளிகள் இந்திய ஜெயிலில் எப்படி வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி அந்தப் போராளிகளின் வக்கீலான நந்திதா ஹக்சர் எழுதிய புத்தகம் Rogue Agent (Penguin). இதனை வஞ்சக உளவாளி என்ற புத்தகமாக குமரேசன் மொழிபெயர்த்துள்ளார். மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, இந்திய அரசின் Armed Forces Special Powers Act-ஐ எதிர்த்து, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அவரைப் பற்றி தீப்தி பிரியா மெஹரோத்ரா எழுதிய Burning Bright (Penguin) என்ற புத்தகத்தை ராம்கி மொழிபெயர்த்துள்ளார் - ஐரோம் ஷர்மிளா - மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று கொண்டுவருகிறோம்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூன்று புத்தகங்கள் இந்த வரிசையில் முக்கிய இடம் பெறுகின்றன. ஒன்று அவர் அதிபராவதற்குப் பல வருடங்கள் முன்பு எழுதப்பட்ட Dreams From My Father. இதற்கான மொழிமாற்ற உரிமை அவரிடமே இருந்தது. அவரது ஏஜெண்ட் மூலம் இதனைப் பெற்றோம். அடுத்த இரண்டு புத்தகங்களின் ஒன்று அவர் தன்னை அதிபர் பதவிக்கான பிரைமரி வேட்பாளராக முன்வைத்தபோது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Audacity of Hope). மற்றொன்று அவரது பிரெசிடென்ஷியல் கேம்பெய்ன்போது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Change We can Believe in). இந்த இரண்டு புத்தகங்களும் Random House வெளியீடு. கடைசி இரண்டு புத்தகங்களையும் தமிழாக்கி வெளியிடுவதன் பயன், அவற்றை யார் வாங்கப்போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. இருந்தும் செய்துதான் பார்ப்போமே என்று முடிவெடுத்தோம். அவை மிகவும் கடினமான மொழிபெயர்ப்புகள்கூட. அக்களூர் ரவி, நாகூர் ரூமி, அருண் மகாதேவன் ஆகியோர் மொழிபெயர்ப்பில் அவை முறையே என் கதை, நம்மால் முடியும், மாற்றம் என்றொரு மந்திரம் என்று வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகளுக்குமுன் Penguin வெளியீடாக வந்த A Wasted Death என்ற புத்தகம் பிரிட்டானியா நிறுவனத்தை ஒரு காலத்தில் நிர்வகித்த ராஜன் பிள்ளையின் வாழ்க்கை. ராஜன் பிள்ளையின் தம்பி ராஜ்மோகன் பிள்ளையால் எழுதப்பட்டது. அதன் ஆங்கில மறுபதிப்பை நாங்கள் பதிப்பித்தபோது கூடவே தமிழாக்கத்தையும் - நீதியின் கொலை - வெளியிட்டுள்ளோம். படு சுவாரசியமான, மிக வேகமாக நகரும் கதை இது. நிஜ வாழ்க்கையும்கூட. ஜெயிலில் மரணம் அடைந்த ராஜன் பிள்ளை ஒரு கட்டத்தில் இரு நாட்டுக் காவல் துறையால் தேடப்பட்டார். அவர் செய்த குற்றம்தான் என்ன? இன்று பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள பிரிட்டானியா என்ற நிறுவனம் எப்படி ஆரம்பித்தது?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த மூத்தவரான நாராயண மூர்த்தி, பல பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களிலும் இன்னபிற இடங்களிலும் அளித்த சொற்பொழிவுகளின் தொகுப்பை பெங்குவின் A Better India, A Better World என்ற பெயரில் நூலாக வெளியிட்டது. அதன் தமிழாக்கத்தை அக்களூர் ரவி செய்ய, அதனை புதிய கனவுகள், புதிய இந்தியா என்ற பெயரில் வெளியிடுகிறோம். உங்களில் பலர் இந்தப் புத்தகத்தை சீரியலாக புதிய தலைமுறை இதழில் படித்து வரக்கூடும். அந்தப் புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

கடைசி இரண்டு புத்தகங்களில் ஒன்று இந்தியா-சீனா ஒப்பீடு. சி.என்.என் - ஐ.பி.என் முதல் பல ஆங்கில, இந்தி சானல்களை நடத்தும் தொழில்முனைவர் மற்றும் மூத்த பத்திரிகையாளரான ராகவ் பஹல் எழுதிய Superpower? (Penguin) புத்தகம் சில மாதங்களுக்குமுன் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியானது. அந்தப் புத்தகத்தின் தமிழாக்கம் (சரவணன், மகாதேவன்) நீயா நானா? இந்திய சீன வல்லரசுப் போட்டி என்று வெளியாகிறது. இரு நாடுகளையும் நெருக்கமாக ஆராய்ந்து அலசி எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம்.

மற்றொன்று, குழந்தை வளர்ப்பு தொடர்பானது. உங்கள் குழந்தை சரியாகச் சாப்பிடுவதில்லையா? எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இருக்கிறார்களா? பெற்றோர்கள் சொன்னதைக் கேட்பதில்லையா? படிப்பில் ஆர்வம் செலுத்துவதில்லையா? ராண்டம் ஹவுஸ் இந்தியா, ஸ்டீவன் ருடால்ப் என்பவரைக் கொண்டு இந்தியக் குழந்தைகள், இந்தியப் பெற்றோர்கள் கண்ணோட்டத்தில் எழுதவைத்த புத்தகம் இது. 10 Laws of Learning என்பது. இது குழந்தை வளர்ப்பு அறிவியல் என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது (அருண் மகாதேவன்). பெற்றோருக்கு மிகவும் உபயோகமான புத்தகம் இது.

ஆக, இந்த ஆண்டு, பியர்சன் அல்லாமல், 12 புத்தகங்கள், கிழக்கு வெளியீடாக தமிழ் மொழிபெயர்ப்பில் வருகின்றன. இவற்றின் மொழிபெயர்ப்புத் தரத்தில் பல வேறுபாடுகள் இருக்கலாம். அவற்றைச் சரிசெய்து, ஒரே தரமான, உயர் தரமான மொழிபெயர்ப்பைக் கொண்டுவருவதில் முனைந்துள்ளோம். நிச்சயமாக வரும் ஆண்டுகளில் எங்கள் வேலைத்திறன் மேலும் முன்னேற்றமடையும் என்றே நம்புகிறோம். இந்தக் கட்டத்தில் மேலும் 20 புத்தகங்களுக்கான தமிழாக்க வேலைகள் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு அவை வெளியாகும்.

இரு போர்கள், ஒரு கண்டம், பல நாடுகள்

யோசித்துப் பார்த்தால் இரு உலகப்போர்களும் நடந்திருக்கவே கூடாது என்றுதான் தோன்றும். இன்றெல்லாம் எந்த நாடும் சில்லறை விஷயத்துக்கெல்லாம் முணுக் என்று கோபித்துக்கொள்வதில்லை. போர் என்றால் எக்கச்சக்க உயிரிழப்பு என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்துள்ளது. முடியாட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளும் வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் ஓர் ஆசாமி முடிவெடுத்தால் உடனே போர் என்பதெல்லாம் சாத்தியமல்ல.

அமெரிக்க மட்டும்தான் விதிவிலக்கு. கடந்த இரு பத்தாண்டுகளில் வலிந்து பிற நாடுகள்மீது போர் தொடுத்த ஒரே நாடு அமெரிக்காதான் (உள்நாட்டுப் போர்கள் தவிர்த்து). அதுவும் இந்தப் பத்தாண்டில் ஈராக், ஆஃப்கனிஸ்தான் மீதான போர்கள் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கவேண்டியவை. அமெரிக்க நாடாளுமன்றங்களும் தேசப்பற்று என்பதை மட்டுமே முன்வைத்து அதிபருக்கு போர் தொடுக்கத் தேவையான சகல உரிமைகளையும் கொடுத்துவிடுகின்றன.

முதல் உலகப்போர் தொடங்க தீவிரமான காரணங்கள் ஏதும் தேவை இருக்கவில்லை. அதற்கு முன்பாகவே ஏகப்பட்ட நெப்போலியன் போர்கள், அதற்கு முன் ஐரோப்பியக் கண்டம் முழுமையிலும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாக நடந்த போர்கள் ஆகியவற்றை விளக்க இது சரியான இடமல்ல.

இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் என்ற சர்வாதிகாரியின் ஒற்றைப் பரிமாண அணுகுமுறை, அதற்கான பிரிட்டனின் (பின்னர் ரஷ்யாவின்) எதிர்ப்பு என்பதாகக் கட்டம் கட்டலாம். ஆனால் முதலாம் உலகப்போரை ஒற்றை மனிதனின் வெறியாக மட்டும் சித்திரிக்கமுடியுமா என்பது சந்தேகமே.

முதல் உலகப்போரிலும்கூட ஜெர்மனியின் கைசர் (பேரரசர்) மீதுதான் குற்றம் சாட்டவேண்டியிருக்கும். தன்னைச் சுற்றியுள்ள பிரிட்டனும் பிரான்ஸும் ஏகப்பட்ட காலனி நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டே இருக்க, தனக்கு ஐரோப்பிய அளவில் மரியாதை இல்லையே என்பது அவருடைய குறையாக இருந்தது. ஒருவித தாழ்வு மனப்பான்மையில் இருந்த அவருக்குத் தன் படைகள்மீது அபார நம்பிக்கை இருந்தது. பிரிட்டனின் கடல்படை மிக மிக வலுவானதாக இருந்தது. அந்த அளவுக்குத் தன் கடல்படையை உருவாக்க விரும்பியிருந்தார் கைசர். ஆனால் அதைச் செய்துமுடிப்பதற்குள்ளாக போர் ஆரம்பித்திருந்தது. பிரிட்டனின் கடல்படையோ சண்டைகளில் தன்னை ஏற்கெனவே நிரூபித்திருந்தது. ஜெர்மனியின் கடல்படை அப்படிப்பட்டதல்ல.

போரின் காரணமாக ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசின் இளவரசர் ஆர்ச்டியூக் ஃபெர்டினாண்ட் ஒரு செர்பியனால் கொலை செய்யப்பட்டதைச் சொல்வார்கள். வரலாறு படித்த காலத்தில் இது எனக்குப் புதுமையாகவே இருந்தது. யாரோ ஒரு நாட்டின் ஓர் இளவரசனை ஒருவன் கொல்வதால் எப்படி இந்தப் பக்கம் 5 நாடுகள், அந்தப் பக்கம் 5 நாடுகள் சண்டைக்குக் கிளம்பின?

அந்தக் காலத்தில் நாடுகளுக்கு இடையே அபத்தமான ஒப்பந்தங்கள் இருந்தன. அதன்படி, யார் ஒருவர்மீது பகை நாடு போர் தொடுத்தாலும், மற்றவரும் தோழமை நாட்டுக்காகப் போரில் இறங்குவார். ஆஸ்திரியா-ஹங்கேரியப் பேரரசு, ஜெர்மனி இரண்டும் அப்படிப்பட்ட ஓர் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. செர்பியாவும் ரஷ்யாவும் அதேபோன்ற ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. ரஷ்யாவும் பிரான்ஸும் அதேபோல. அட, பிரிட்டனும் பிரான்ஸும் அதேபோல மற்றொரு ஒப்பந்தத்தில். ஜெர்மனி, துருக்கியுடன் கிட்டத்தட்ட அதேமாதிரியான ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.

ஆஸ்திரியா செர்பியாவை மிரட்ட, செர்பியா கொலைகாரனை ஒப்படைக்க மறுக்க, ஒரு நாள் காலை முகூர்த்தத்தில் ஆஸ்திரியா செர்பியாமீது போரை அறிவிக்க, உடனே ரஷ்யா ஆஸ்திரியாமீது போரை அறிவிக்க, உடனே ஜெர்மனி ரஷ்யாமீது போர் தொடுக்க, பிரான்ஸ் ஜெர்மனிமீது போர் தொடுக்க... அதகளம் ஆரம்பம். எல்லாம் ஆரம்பித்தது ஒரு ஆகஸ்ட் மாதத்தில். ஜெர்மனி ரஷ்யப் படைகளைப் புறமுதுகிட்டு ஓட வைத்து, பிரான்ஸைக் கதறவைத்து ஆட்டத்தையே முடித்துவிடும் என்றால், அதுதான் இல்லை. கொஞ்சம் தாமதித்து பிரிட்டன் களத்தில் குதித்தது. இதற்குள் பிரான்ஸில் வெகுதூரம் நுழைந்திருந்த ஜெர்மனியால் சப்ளை, லாஜிஸ்டிக்ஸ் விஷயங்களைச் சரியாகக் கவனிக்கமுடியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் பிரான்ஸில் அதிரடியாக வெகுதூரம் புகுந்திருந்த ஜெர்மானியப் படைவீரர்கள் அடுத்த பல மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்த இடத்தைப் பாதுகாக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் சிக்கி, கடைசியாக ஜெர்மனி தோற்றது.

இதனால் ஐரோப்பாவின் முகமே மாறியது. மீண்டும் சில ஆண்டுகளிலேயே இரண்டாம் உலகப்போர் ஆரம்பம் ஆவதற்குமான அடி அப்போதுதான் போடப்பட்டது.

***

மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நூல். கம்யூனிஸ்ட் வாசம் அதில் கொஞ்சம் ஜாஸ்தி என்பது என் கருத்து. ஆனால் அந்தச் சிக்கல் இருந்திருக்காது மருதனின் முதல் உலகப்போர் புத்தகத்துக்கு. வாசகர்கள் இந்தப் புத்தகம் எப்போது வரும் என்று வெகு நாள்களாகக் கேட்டுவந்தனர். இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அறிமுகமாகும் இந்தப் புத்தகம்.