Saturday, March 31, 2007

உணவு, விவசாயம், நெருக்கடி - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி

(7) தண்ணீர்

இந்தியாவில் இருக்கும் நீர்வளங்களைப் பராமரிக்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இந்த நீர்வளங்களை விவசாயம், குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைகள், மின் உற்பத்தி ஆகியவற்றுக்குப் பயன்படுத்துவது அரசின் கடமை. தொடக்கத்தில் மின் உற்பத்திக்காகவும் பாசனத்துக்காகவும் பெரும் அணைகள் கட்டப்பட்டன. பெரும் அணைகள் நல்லதா கெட்டதா என்ற விவாதம் தொடர்கிறது. நதிகள் திசை திருப்பப்பட்டன. இதனால் நீர்வளம் இல்லாத பகுதிகளுக்கு நீர் சென்றாலும் நாளடைவில் ஒவ்வொரு பகுதி மக்களும் அதிகமாக நீரை எதிர்பார்க்க, மாநிலங்களுக்கிடையே, ஒரே மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கிடையே என்று பிரச்னை நிலவுகிறது.

தண்ணீரை யாருமே கவனமாகச் செலவழிக்காததால் இன்று விவசாயம், குடிநீர் தேவை என்று அனைத்தும் கடுமையான தொல்லைக்கு ஆளாகியுள்ளது. நீர் இலவசமாகக் கிடைக்கிறது என்பதால் வீணாக்கப்படுகிறது. ஆனால் நீருக்குக் காசு என்றால் இது உலக வங்கியின் நரித்திட்டம் என்று திட்ட நாலாயிரம் பேர் வருகிறார்கள். எது இலவசமாகக் கொடுக்கப்படுகிறதோ அது வீணாக்கப்படுகிறது. வீடுகளுக்குக் கொடுக்கப்படும் தண்ணீர், விவசாயப் பாசனத்துக்கான தண்ணீர் - எதெல்லாம் குறைவாக உள்ளதோ, எதற்கு அடிதடி நடக்கிறதோ, அதற்கு ஒரு விலை இருக்கவேண்டும். அந்த விலை எவ்வளவு குறைவாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.

அடுத்து என்ன, சுவாசிக்கும் காற்றுக்கு விலை வைக்க வேண்டுமா என்று கேட்டால், இப்பொழுதைக்குத் தேவையில்லை என்று சொல்லலாம். அவ்வளவு பற்றாக்குறை கிடையாது அங்கே.

நகரங்களில் வீடுகளுக்குக் கிடைக்கும் தண்ணீர் வீணாவதைத் தடுப்பது, விவசாயப் பகுதிகளுக்குத் தேவையான நீரை ஏரிகள், குளங்கள், கம்மாய்களில் சேர்த்து வைப்பது, நிலத்தடி நீர் அழிந்துவிடாமல், குறைந்துவிடாமல் காப்பது - இவை தொடர்பாக மத்திய அரசு சீரிய கொள்கை ஒன்றை வகுத்து, அதை அனைவரையும் ஏற்கச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் விவசாய நிலங்கள் இருந்தாலும், நல்ல விதை இருந்தாலும், மழை இல்லாத காலங்களில் தேவையான உணவை விளைவிக்க முடியாது.

(8) விதைகள், மரபியல் மாற்றங்கள்

மான்சாந்தோ போன்ற நிறுவனங்கள் மரபியல் மாற்றிய விதைகளை (Transgenic Seeds - Genetically Modifed Seeds - GM) உருவாக்கியுள்ளன. இயற்கையிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆனால் மாறுபட்ட இயல்புகளைக் கொண்ட தாவர வகைகளிடையே ஒட்டு ஏற்பட்டு புதுரகச் செடிகள் உருவாகி வந்துள்ளன. இதையே மனிதர்கள் கண்டறிந்து பல்வேறு ரகச் செடிகளை 'ஒட்டி' (அதாவது ஒன்றின் மகரந்தத்தை மற்றதன் பூவுடன் சேரச் செய்து) தமக்குத் தேவையான ரகங்களை உருவாக்கிவந்துள்ளனர். ஆனால் செயற்கை மரபியல் மாற்று என்பது விதைகளின் டி.என்.ஏவை மாற்றுவதன்மூலம் நடைபெறுகிறது. இத்தகைய மாற்றத்தால் விளைந்த பயிரை உட்கொள்வதால் அல்லது அணிவதால் மனிதனுக்கு எந்தவகையில் நன்மை, தீமை ஏற்படும் என்பது முற்றிலுமாகக் கண்டறியப்படாத ஒன்று.

ஆனாலும் சிலவகைத் தாவரங்களைத் தாக்கும் நோய்களைத் தடுக்க, விளைச்சலைப் பெருக்க, மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துகிறார்கள். பல நாடுகளில் மரபியல் மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மரபியல் மாற்றப்பட்ட பருத்தியைத் தடை செய்ததில்லை.

இந்தியாவின் விவசாயிகள் தற்கொலையில் மரபியல் மாற்றப்பட்ட பருத்தி பெரும்பங்கு வகிக்கிறது. இயற்கை பருத்தி விதைகள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் மான்சாந்தோ போன்ற நிறுவனங்கள் பல கோடி டாலர்கள் செலவுசெய்த ஆராய்ச்சியின் விளைவாகக் கிடைக்கும் விதைகளை மிக அதிகமான விலைக்கு விற்கிறார்கள். அதன்மூலமாவது தங்கள் வாழ்க்கை வளம்பெறாதா என்று ஏங்கும் ஏழை விவசாயிகள் காசை அள்ளிக்கொடுத்து வாங்கினாலும் தண்ணீர் சரியாகக் கிடைக்காத காரணத்தாலும், GM விதைகள் எதிர்பார்த்த அளவுக்கு பூச்சிகளைத் தடுக்காத காரணத்தாலும் கடனில் மூழ்கி, வழிதெரியாது தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

GM விதைகள் தேவையா, அவை இல்லாமலேயே விளைச்சலைப் பெருக்க முடியாதா என்பதி நியாயமான கேள்வி. விளைச்சல் குறைந்திருப்பது ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளை வகைதொகையின்றிப் பயன்படுத்தியிருப்பதால்தான் என்பது உண்மையானால் முதலில் அதைச் சரிசெய்யத்தான் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். GM விதைகள் மக்களை எப்படி பாதிக்கும் என்பதை முழுவதுமாக அறிவதற்கு முன்னால் அவற்றை இந்தியாவில் பயிரிடுவதைத் தடுக்கவேண்டும். ஆனால் இந்திய அரசு இந்த விஷயத்தில் கவனமாகவோ அக்கறையுடனோ நடந்துகொள்ளவில்லை.

பாரம்பரிய விவசாயத்தில், விவசாயிகள் சற்றே மாற்றுபட்ட வகைகள் பல்லாயிரக்கணக்காணவற்றைப் பயன்படுத்தி வந்தனர். நெல் என்றால் சில ஆயிரம் வகைகள் இருக்கும். வாழை என்றால் பல ஆயிரம் வகைகள் இருக்கும். Seed diversity. ஆனால் இப்பொழுது அனைவரும் 'high yield' என்று அதிக லாபம் தரும் ஒரே வகையை, அதுவும் அதிக விலைக்கு விற்கும் விதைகளை வாங்கிப் பயன்படுத்த, பிற விதைகள் அழிந்துபோகின்றன. அந்தத் தாவரங்களின் நற்குணங்களும் அழிந்துபோகின்றன. மீண்டும் அவை நமக்குத் திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ.

மான்சாந்தோ நிறுவனம் டெர்மினேட்டர் விதைகள் என்ற புதிய வகை விதைகளையும் அறிமுகப்படுத்த விழைகிறது. இயல்பான விவசாயத்தில், ஒரு விவசாயி பயிரிட்டபிறகு, விளைச்சலின்போது அடுத்த முறை பயிரிடத் தேவையான விதை நெல்லை விளைச்சலிலிருந்தே சேமித்து எடுத்து வைத்துக்கொள்வார். ஆனால் மான்சாந்தோ, கார்கில் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொருமுறையும் விவசாயி தங்களிடமிருந்தே விதைகளை வாங்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இதனை சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவது கடினம். (Piracy-யைத் தடுப்பதுபோலவே!) அங்குதான் டெர்மினேட்டர் நுட்பம் அவர்களுக்கு உதவும். இதுவும் மரபியல் மாற்றல் முறைதான். டெர்மினேட்டர் நுட்பம் புகுத்தப்பட்ட விதைகள் செடியாக வளரும்; காயோ கனியோ தானியமோ முளைக்கும். ஆனால் அதிலிருந்து கிடைக்கும் விதைகள் மேற்கொண்டு ஒரு செடியை வளரவைக்கும் திறனற்றவை!

ஆக, விவசாயிகள் நினைத்தாலும் விளைச்சலில் இருந்து அடுத்த போகம் விதைக்கத் தேவையான விதைகளைச் சேமிக்க முடியாது. மீண்டும் கார்கில், மான்சாந்தோவுக்குப் பணம் அழ வேண்டியதுதான்!

விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு என்று தேவை உள்ளது. இந்தியாவில் அரசு ஆராய்ச்சி மையங்கள், விவசாயப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை இதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் கார்கில், மான்சாந்தோ போன்ற மாபெரும் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இந்திய விவசாயிகளுக்கு ஏற்புடையதல்ல. உணவில் தன்னிறைவு அடையாத நமக்கு இது பெரும் நாசத்தை விளைவிக்கும்.

எனவே இந்தியாவைப் பொறுத்தமட்டில், மரபியல் மாற்றிய விதைகள், டெர்மினேட்டர் விதைகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

(9) பிற பயிர்கள்

ஒர் ஏக்கரில் விளையும் உணவு விளைச்சலை அதிகப்படுத்தினால் தானாகவே பல்வேறு பிற பொருள்களை விளைவிக்க அதிகப்படியான இடங்கள் கிடைக்கும். பணப்பயிர்கள், பயோ டீசலுக்குத் தேவையான புங்கை, காட்டாமணக்கு ஆகியவற்றைப் பயிரிடலாம்.

அமெரிக்கா, தான் விளைவிக்கும் மக்காச் சோளத்தை எரிபொருளாக மாற்ற இருப்பதை கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ எதிர்த்திருக்கிறார். இதனால் உலகில் பலர் பட்டினி கிடப்பார்கள் என்கிறார். உலகில் உள்ளவர்கள் வயிறார உணவு சாப்பிட அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கோதுமையும் சோளமும் விளைவிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நேற்றைய எகனாமிக் டைம்ஸ், உலகின் கோதுமை உற்பத்தி இந்த ஆண்டு குறைந்துள்ளது என்றும் இந்தியா ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளின் விளைச்சலை எதிர்பார்த்துக் கையேந்தவேண்டியுள்ளது என்றும் எழுதியுள்ளது திகிலைத் தருகிறது.

இந்த நிலைக்கு நம்மை நாமே கொண்டுவந்துள்ளோம்.

(தொடரும்)

உணவு, விவசாயம், நெருக்கடி - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி.

(4) குறைந்தபட்சக் கொள்முதல் விலை

இந்திய விவசாயம் இப்பொழுது கடும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. விவசாயத்தில் வளர்ச்சி வெகு குறைவாக உள்ளது. ரசாயன உரங்களை மிக அதிகமாகப் பயன்படுத்தியதாலும் தண்ணீர் பற்றாக்குறையாலும் மண் மாசுபட்டு விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. பல விவசாயிகள் உணவுப் பயிர்களைவிடுத்து பணப்பயிர்களுக்கு மாறியுள்ளனர்.

பணப்பயிரிலும் பருத்தியில் பிரச்னை. பருத்தியைத் தாக்கும் புழு ஒன்றைத் தடுக்க, மான்சாந்தோ நிறுவனம், மரபணு மாற்றிய பருத்தி விதையை அறிமுகம் செய்தது. அந்தப் பருத்தியை வாங்கி நட்ட பல சிறு விவசாயிகள் (ஆந்திரா, மஹாராஷ்டிரா - முக்கியமாக விதர்பா பகுதி), சரியான தண்ணீர் கிடைக்காத காரணத்தாலும் எதிர்பாராத வகையில் பருத்தி சரியாக விளையாததாலும் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பருத்தியும் பூச்சிகளைத் தடுத்து நிறுத்துவதில்லை என்று பல ஏழை விவசாயிகள் சொல்கின்றனர். ஆனால் தண்ணீர் அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் இந்தப் பருத்தி அதிக உற்பத்தியத் தருகிறது என்று பணக்கார விவசாயிகள் சொல்கிறார்கள்.

மொத்தத்தில் விதர்பா பகுதியில் பல நூறு ஏழை பருத்தி விவசாயிகள் கடன் தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த விவசாயிகள் அனைவரும் பருத்திக்கு முன்னர் உணவு தானியங்களைப் பயிர் செய்து வந்தவர்கள் என்பது முக்கியமானது.

உணவுப் பயிர்களுக்கு அரசு கொடுக்கும் கொள்முதல் விலை மிகவும் குறைவானது. வளர்ச்சிபெற்ற நாடுகளில் பயிரை விளைவிக்காமல் இருக்க (அதன்மூலம் பொதுச்சந்தையில் உணவு தானியத்தின் விலை அதிக விளைச்சலால் அதளபாதாளத்துக்கு வீழ்ந்துவிடாமல் இருக்க) கிடைக்கும் மானியம் எக்கச்சக்கம். ஆனால் இந்தியாவில் அரசு கொடுக்கும் மானியம் ரசாயன உரங்கள் வாங்குவதற்கு மட்டுமே. சில மாநிலங்கள் இலவச மின்சாரம் அளிக்கிறது.

ரசாயன உர மானியம், இலவச மின்சாரம் ஆகியவற்றுக்குப் பதிலாக அதிகக் கொள்முதல் விலையை அரசு கொடுத்தாலே போதுமானது. இதன்மூலம் subsistence farming என்ற நிலை வெகுவாக மாற வாய்ப்புகள் உள்ளது. ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். இப்பொழுது அரசு நிர்ணயித்திருக்கும் விலை கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோவுக்கு) ரூ. 850. 2001-ல் இதுவே ரூ. 610 ஆக இருந்தது. (நெல்லுக்கு இதைவிடக் குறைவுதான்!). சென்ற ஆண்டு குவிண்டாலுக்கு ரூ. 750 தான் இருந்தது. ஆனால் விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கும்போது நிறைய வருமானம் பெற்றனர். இப்பொழுதுகூட வெளிச் சந்தையில் ரூ. 1000 முதல் ரூ. 1400 வரை குவிண்டாலுக்குக் கிடைக்கிறது!

இந்தக் குறைந்தபட்சக் கொள்முதல் விலையை தடாலடியாக 50% ஏற்றுகிறது (ரூ. 1150) என்று வைத்துக்கொள்ளுங்கள். மொத்த கோதுமை விளைச்சல் சுமார் 75 மில்லியன் டன்கள். அரசு இதிலிருந்து சுமார் 15 மில்லியன் டன்களைக் கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது.

அப்படியானால் அரசு அதிகமாகச் செய்யும் செலவு = ரூ. 4,500 கோடி

இதேபோல நெல் கொள்முதலுக்கும் 50% விலையை நேரடியாக உயர்த்தலாம். அரசுகள் செய்யும் வீண் செலவைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் மேற்கொண்டு ரூ. 10,000 கோடி என்பது ஒன்றுமே கிடையாது.

விவசாயிகளுக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதால் மின்சாரத்துக்கான மானியத்தை நிறுத்தலாம். வெளிச் சந்தை விலையும் அதிகமாகும்.

இதனால் ரேஷன் கடையில் பொருள் வாங்குபவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு ரூ. 2 அல்லது 3 ஒரு கிலோ என்று தானியங்களை விற்கலாம். அதே சமயம் விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை கிடைக்கும். தானியங்களைப் பயிர் செய்வது உபயோகமானது, அதிக வருமானம் தரக்கூடியது என்று பல விவசாயிகளும் பணப்பயிர்களை விட்டுவிட்டு மீண்டும் தானிய உற்பத்திக்கு வருவார்கள்.

(5) ஆர்கானிக் ஃபார்மிங் - இயற்கை விவசாயம்

இந்தியாவின் 1970களின் பசுமைப் புரட்சிக்கு மெக்சிகோவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒட்டுரக விதைகள், ரசாயன உரம், எக்கச்சக்கமான தண்ணீர் ஆகியவை காரணமாகக் காட்டப்பட்டன. இவை உணவு வளர்ச்சியை அதிகப்படுத்தினாலும் இப்பொழுது கடும் நெருக்கடிக்கு விவசாயிகளையும் பொதுமக்களையும் ஆளாக்கியிருக்கின்றன. தண்ணீர் வளங்கள் குறைவு. ரசாயன உரம் மண்ணைப் பாழ்படுத்திவிட்டது. பூச்சிமருந்துகளை மீறி கெட்ட பூச்சிகள் வளர்ந்து பயிர்களை அழிக்கின்றன. அதனால் அரசு ஆதரவு ஏதுமின்றி பல விவசாயிகள் ஆர்கானிக் ஃபார்மிங் - இயற்கை வேளாண்மை என்ற பாரம்பரிய வேளான்முறைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

ரசாயன உரங்கள் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உப பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதனால் எக்கச்சக்கமாக விலையேறியுள்ளன. மேலும் இதன் நச்சுத்தன்மை உலகில் அனைவரும் அறிந்ததே. ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் ஒரேயடியாக ஒழிக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நான் பேசிய சில விவசாய வல்லுனர்கள் 'முடியும்' என்கிறார்கள். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே, பாரம்பரிய முறைப்படியான விவசாயம்மூலமாக விளைபொருள்களை அதிகமாக்கமுடியும் - sustained farming is possible என்கிறார்கள்.

அப்படியானால் நாம் அதை நோக்கித்தான் போகவேண்டும்.

இதன்மூலம் விவசாயிகள் செய்யும் செலவு குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் கையில் தங்கும் பணம் அதிகமாக இருக்கும்.

(6) நிலச் சீர்திருத்தம்

நிலச் சீர்திருத்தம் என்றாலே அதிகம் இருப்பவர்களிடமிருந்து பிரித்து துண்டு துண்டாக்கி ஏழைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால் துண்டு துண்டான நிலங்களின் வரப்புகளுக்கு என்று போகும் இடம் அதிகம். ஒவ்வொருவருக்கும் பாசன வசதி செய்து தரவேண்டிய நிலைமை. ஆளாளுக்கு ஆழ்குழாய்க் கிணறுகள் (இது மிக மோசமாகத் தண்ணீர் ஆதாரத்தைப் பாதிக்கும் என்று இப்பொழுது மக்கள் அறிந்துள்ளனர் என்றபோதிலும்...) தோண்டவேண்டும்.

இதற்குபதில் கூட்டுறவு முறையைக் கொண்டுவருதல் அவசியம். பெரு நிலக்கிழார்களிடமிருந்து நிலங்களை அரசு திரும்பிப் பெறுதல் அவசியம். ஆனால் அவ்வாறு பெற்ற நிலத்தை ஆளுக்கு 2 ஏக்கர் என்று துண்டாக்கித் தராமல் 20-30 ஏக்கர்களாகவே வைத்திருந்து 10 குடும்பங்களுக்கு என்று சேர்த்துத் தரவேண்டும். அந்தப் பத்து குடும்பங்களும் சேர்ந்தே விளைவிப்பத்தை மேற்கொள்ளவேண்டும் என்று செய்யவேண்டும். நிலத்தை அரசே வைத்துக்கொண்டு, உழுவதற்கான முழு உரிமையையும் அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலை முழுமையாக அனுபவிக்கும் உரிமையையும் மக்களுக்குக் கொடுக்கவேண்டும். அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கும் உரிமை அதில் உழுபவர்களுக்கு இருக்கக்கூடாது. அவர்கள் அந்த நிலத்தில் உழும், அனுபவிக்கும் உரிமையை பிறருக்கு மாற்றி எழுதித்தருமாறு (ஒரு விலையைப் பெற்றுக்கொண்டு) வேண்டுமானால் கொடுக்கலாம். இதன்மூலம் நிலம் துண்டு துண்டாகாமல் தடுக்கலாம்.

(இது புதிதாக நிலம் துண்டாக்கப்படுவதைத் தடுக்கவே. பழைய, துண்டாகிய சிறு நிலங்களை ஏதாவது வழியில் சேர்த்து - economies of scale - கொண்டுவரவேண்டும்.)

இதன்மூலம் விளைச்சலைப் பெருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மக்களுக்கு இடையேயான உறவுகள், சண்டைகள், சச்சரவுகள், அவற்றைத் தீர்க்கும் முறைகள், விளைச்சல் குறைவாக இருக்கும்போது எவ்வாறு அதைப் பகிர்ந்துகொள்வது போன்ற பல விஷயங்கள் பிரச்னைக்குரியதாக இருக்கும். இதை எவ்வாறு எதிர்கொள்வது என்று நான் யோசிக்கவில்லை.

(தொடரும்)

உணவு, விவசாயம், நெருக்கடி - 1

SEZ, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தல், தண்ணீர், விவசாயிகள் தற்கொலை... போன்ற பல பிரச்னைகளை நம் நாடு தினம்தினம் சந்தித்துவருகிறது.

(1) ஒரு தனி மனிதன் உட்கொள்ளவேண்டிய உணவில் பெரும்பகுதி, அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற உணவு தானியமாக உள்ளது. அத்துடன் சமச்சீரான சத்துக்காக பருப்பு, பால், காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், முட்டை போன்ற பிறவும் சேர்க்கப்படவேண்டும். ஓர் ஆண்டுக்கு சராசரியாக உணவு தானியமாகவே ஒரு மனிதன் உண்ணவேண்டியது 200 கிலோ என்கிறார்கள். சில நிபுணர்கள் இதற்கும் மேல் இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இப்பொழுதைக்கு 200 கிலோ என்றே வைத்துக்கொள்வோம்.

ஓர் ஆண்டுக்கு, ஒரு மனிதனுக்குத் தேவை குறைந்தது 200 கிலோ உணவு தானியங்கள்.

(2) இந்தியாவின் மக்கள்தொகை 108 கோடியைத் தாண்டிவிட்டது. மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இப்படியே 2050-ல், இந்திய மக்கள்தொகை 160 கோடியைத் தாண்டும் என்றும் அதற்குப்பிறகு மீண்டும் கீழே இறங்குமமென்றும் சொல்கிறார்கள்!

இப்பொழுதுள்ள நிலையிலேயே இந்தியாவுக்குத் தேவையான உணவு தானியங்கள், ஆண்டுக்கு 108 * 200 கோடி கிலோ = 216 மில்லியன் மெட்ரிக் டன்.

இந்த உணவு தானியம் என்பது கடைசியில் மனிதர்கள் உட்கொள்ள வேண்டியது. விளைச்சலிலிருந்து 10 முதல் 15 சதவிகிதம் தானியம் வீணாகிப்போகும் என்று விவசாய நிபுணர்கள் கணிக்கிறார்கள். சேமித்து வைக்கும்போது எலி தின்பதிலிருந்து, புழுத்துப்போவதிலிருந்து, வழியில் கொட்டி நாசமாகிப்போவதிலிருந்து, தண்ணீர், தீ ஆகியவற்றால் அழிந்துபோவது என்று பல பிரச்னைகள். இந்த சதவிகிதத்தைக் குறைக்க முடியும். ஆனாலும் குறைந்தது 10% உணவு தானியம் வீணாகும் என்று வைப்போம்.

இப்பொழுது, ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்பு மிருகங்கள் தின்பதற்குத் தேவையான தானியங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம்! அப்படிப் பார்த்தால் நமக்குத் தேவையான விளைச்சல் இப்பொழுதைக்கு, குறைந்தபட்சம் 250-270 மெட்ரிக் டன்கள்.

இப்படியான விளைச்சல் இருந்தாலும்கூட கடைசி 25% மக்களுக்கு உணவு முழுமையாகச் செல்ல அரசு இலவசங்களையும் மானியங்களையும் அளிக்க வேண்டும்.

(3) சரி, இந்தியாவில் கடந்த சில வருடங்களில் விளைச்சல் எப்படி உள்ளது? இந்தத் தகவல் இந்திய அரசின் விவசாய அமைச்சகத்தின் இணையத்தளத்திலிருந்து எடுத்து படமாக வரையப்பட்டுள்ளது. இங்கு தானியம் என்பது அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், பார்லி, தினை, பருப்புகள் (துவரை, கடலை) ஆகிய அனைத்தையும் சேர்த்தது!


கடந்த 6-7 ஆண்டுகளில் விளைச்சல் 200 மில்லியன் டன்களைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 1990-ல் 170 மில்லியன் டன் என்று இருந்துள்ளது. ஆனால் 'பசுமைப் புரட்சி' என்று சொல்லப்பட்ட 1970-களிலும் இந்தியாவின் தானிய உற்பத்தி 170 மில்லியன் டன்களாகவே இருந்தது.

இன்றைய நிலையில் இந்தியாவின் உணவு உற்பத்தி இந்தியர்களின் தேவையைவிடக் குறைவாகவே உள்ளது.

(தொடரும்)

அறுபத்து மூவர் 2007

இன்று தமிழகம் முழுவதுமான கடையடைப்பு. ஆனாலும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலின் அறுபத்து மூவர் உற்சவத்தில் கூட்டம் பொங்கி வழிந்தது. தெற்கு மாட வீதியில் எடுத்த படம் இது:

Crowd during 63-var


எல்லா வருடங்களைப் போலத்தான் இந்த வருடமும். இந்தக் காளி வாகனம் புதுமையாக இருந்தது. சென்ற வருடங்களில் இதைப் பார்த்த ஞாபகம் இல்லை.

Brilliant Kali


நேற்று தேர் புறப்பாடு இருந்தது.

Temple Ther (car)


2005-ம் ஆண்டு பதிவு
அறுபத்து மூவர் விழா பற்றி ஹரி கிருஷ்ணன்

Tuesday, March 27, 2007

சில்லறை வர்த்தகம்

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் என்ற பெயரில் காய்கறிகள், மளிகை சாமான்கள் விற்பனை செய்யும் சங்கிலிக் கடைகளை சென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்ல் தொடங்கியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரிடையே கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் ஆரம்பம் முதற்கொண்டே ரிலையன்ஸை எதிர்த்தார். அடுத்து அஇஅதிமுக, விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளும் எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளன. திமுக இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் சொல்லவில்லை. இடதுசாரிகள், புரட்சிகரக் கூட்டமைப்புகள், கோயம்பேடு வணிகர் சங்கங்கள், சில்லறை வணிகர்கள் கூட்டமைப்புகள் ஆகியவை ரிலையன்ஸும் பிற பெரு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் நுழைவதை எதிர்க்கின்றன.

சில உண்ணாவிரதங்கள், நாள் முழுவதுமான கடையடைப்புகள் இதுவரை நடந்துள்ளன.

-*-

ரிலையன்ஸ் நிறுவனம், 'ரிலையன்ஸ் ஃபிரெஷ்' என்ற பெயரில் அக்டோபர் 2006-ல், ஹைதராபாதில் 11 கடைகளுடன் முதலில் ஆரம்பித்தனர். ஆனால் இதற்குச் சில மாதங்கள் முன்னதாகவே வேறு ரூபத்தில் வெள்ளோட்டம் விட்டனர். மஹாராஷ்டிரத்தில் சஹகாரி பண்டார் என்ற பெயரில் இயங்கி வந்த கூட்டுறவு விற்பனைக் கடைகள் பொலிவிழந்து திண்டாடிக் கொண்டிருந்தன. 1968-ல் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்த சுமார் 23 சில்லறை விற்பனைக் கடைகளை, மே 2006 முதல் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் நடத்த ஆரம்பித்தது. முழுமையாக வாங்கிவிடவில்லை; ஆனால் இந்தக் கடைகளுக்கான பொருள் கொள்முதல், விற்பனை ஆகியவற்றை ரிலையன்ஸ் கவனித்துக் கொள்கிறது.

இதற்கு அடுத்துதான் ஹைதராபாதில் சொந்தமாகக் கடைகள் தோன்றின. பின் நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொண்டு கடைகளை ஆரம்பித்துள்ளனர். டிசம்பர் 2006-ல், ரிலையன்ஸ் ரீடெய்ல், குஜராத்தின் ஆதானி ரீடெய்ல் என்ற நிறுவனத்தை சுமார் ரூ. 100 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அத்துடன் குஜராத் முழுவதுமாக 54 சில்லறை விற்பனைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை ரிலையன்ஸ் ரீடெய்லுக்குக் கிடைத்தன.

சில்லறை விற்பனை இந்தியாவில் வெகு காலமாகச் சின்னச் சின்ன நிறுவனங்களாகவே இருந்துள்ளது. தனித்தனிக் கடைகள் (Mom & Pop stores) - அண்ணாச்சி கடை, நாடார் கடை என்று தமிழகத்தில் அறியப்படுபவை - தெருவில் பல இடங்களில் உள்ளன. இங்கு பெரும்பாலும் மளிகை சாமான்கள் (அரிசி, பருப்பு, எண்ணெய், வெல்லம், வற்றல் மிளகாய், சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்...), பிஸ்கட், பிரெட் முதலான பல FMCG உணவுகள் கிடைக்கின்றன. காய்கறிகள், பழங்கள் ஆகியவை கொத்தவால் சாவடி, கோயம்பேடு மார்க்கெட் போன்ற இடங்களில் மொத்த விற்பனைக்கும், தெருவில் பல இடங்களில் சில்லறை விற்பனைக்கும் கிடைக்கின்றன.

ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாகவே இந்தத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் என்ற பெயர் கொண்ட கடைகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தோன்ற ஆரம்பித்தன. பழைய தாளில் மடித்துக்கொடுக்கப்பட்ட சீனியும் ரவாவும் பாலிதீன் பாக்கெட்களில் அடைக்கப்பட்டுக் கிடைத்தன. வாசலில் நின்றுகொண்டு கேட்டுவாங்கி அக்கவுண்ட் வைத்ததுபோய் உள்ளே நுழைந்து சிறு பிளாஸ்டிக் கூடையில் வேண்டிய சாமான்களை அள்ளி எடுத்துக்கொண்டு வந்து, பில் போட்டு வாங்கிச் செல்வது நடந்துகொண்டுதான் இருந்தது.

அடுத்து ஓரளவுக்குப் பெரிய நிறுவனங்கள் 1990களில் இந்தத் துறையில் நுழைந்தன. நீல்கிரீஸ், சுபிக்ஷா, புட்வேர்ல்ட் (ஸ்பென்சர்ஸ் டெய்லி), திரிநேத்ரா போன்ற பல தொடர் சங்கிலிக் கடைகள் மளிகை சாமான், காய்கறி, மருந்து ஆகியவற்றை சில்லறை விற்பனை செய்துவருகின்றன.

-*-

ரிலையன்ஸுக்கு என்று ஸ்பெஷலாக யாரும் தனி அனுமதி கொடுத்துவிடவில்லை. ஏற்கெனவே பல நிறுவனங்கள் செய்துவரும் ஆர்கனைஸ்ட் ரீடெய்லைத்தான் அவர்கள் செய்ய வருகிறார்கள். ஆனால் பிரம்மாண்டமாகச் செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். அதையும் கடந்த இரண்டு வருடங்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று மறைமுகமாக எதையும் செய்துவிடவில்லை. ரிலையன்ஸ் மொபைல் துறையில் நுழைந்ததிலாவது சில 'தில்லுமுல்லுகள்' இருந்தன. ஆனால் ரீடெய்ல் துறையில் நியாயமாக, நேரடியாகத்தான் நுழைந்துள்ளனர்.

ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதைத் தடை செய்வது சாத்தியமில்லாதது. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் நடக்கிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் துறைக்கு வந்தால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்? நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு லாபம்தான். அதே நேரம் பல சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மைதான்.

ரிலையன்ஸ் ரீடெய்லை எதிர்ப்பவர்கள் வால்மார்ட், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஆகியவற்றையும் சேர்த்துக் குழப்புகிறார்கள். இவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.

-*-

ரிலையன்ஸின் சில்லறை வியாபாரத்தை எதிர்ப்பவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: "இன்று வாடிக்கையாளருக்கு விலை குறைவாகக் கிடைப்பதாகத் தோன்றினாலும், நாளைக்கு விலை ஏறும். சிறு வியாபாரிகள் நசிந்தபிறகு, வியாபாரம் அனைத்துமே நான்கைந்து பெருமுதலைகளிடம் மட்டுமே இருக்கும். அப்பொழுது அவர்கள் வைத்ததுதான் சட்டம். விவசாயிகளுக்கும் சரியாகப் பணம் போகாது; நுகர்வோருக்கும் விலை அதிகமாக இருக்கும்."

இது ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம். இந்த ஒலிகோபொலி (Oligopoly) என்பது சரியாக இயங்கும் சந்தையில் சாத்தியமில்லாதது. இந்தியச் சந்தை விரிவாக விரிவாக, இதுபோன்ற பிரச்னைகள் குறைந்துகொண்டே வரும். இப்பொழுதேகூட எடுத்துக்கொள்ளுங்கள்... எந்தத் துறையில் இன்று இந்தியாவில் இதுபோன்ற ஒலிகோபொலி நிலவி வருகிறது?

கஷ்டப்பட்டுத் தேடினாலும் சிமெண்டைத் தவிர வேறு எந்த உதாரணமும் கிடைக்காது. பட்ஜெட்டுக்குப் பிறகு சிமெண்ட் நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து விலையை உயர்த்தின. அதற்கு அவர்கள் காட்டும் காரணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. சிமெண்ட், சர்க்கரை போன்றவை சுழற்சிப் பொருள்கள். தொடர்ந்து சில வருடங்கள் நல்ல லாபம் சம்பாதிக்கும். அப்பொழுது உற்பத்தியைக் கூட்டுவார்கள். அதனால் சரக்கு ஏராளமாக இருக்கும். அதனால் விலை குறையத் தொடங்கும். அதைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் நஷ்டத்துக்குப் போகும். பிறகு இதுவே மீண்டும் தொடரும்.

இப்பொழுது சர்க்கரைக்கு இறங்குமுகம். சிமெண்டுக்கு ஏறுமுகம். கட்டுமானத்துறை எக்கச்சக்கமாக வளர்ச்சி காணும் நேரம் இது. சிமெண்ட் நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடமாகத்தான் லாபம் காணும் நிலையில் உள்ளனர்.

பிற எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் போட்டி என்பது விலையைக் குறைத்துக்கொண்டேதான் வந்துள்ளது. தொலைத்தொடர்பு, கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் என்று எல்லாமே இந்த வகையைச் சேர்ந்தவை. இந்தத் துறைகளில் நான்கு, ஐந்து பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் உள்ளன.

மேலும் இதுபோன்ற தொழில்துறைகள் அல்லாத விளைபொருள் விற்பனையில் ஒலிகோபொலி செயல்படவே முடியாது. ஏனெனில் இங்கு தொழிலில் நுழைவதற்கான தடுப்பு (entry barrier) பெரிய அளவில் கிடையாது.

மேலும் எதிர்ப்பாளர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: "சிறு சில்லறை வியாபாரிகளது தொழில் நசித்துவிடும். அவர்கள் தெருவுக்கு வந்துவிடுவார்கள். இதை நம்பி வேலை செய்யும் பல லட்சம் (அல்லது கோடி) மக்கள் வாழ்வு நாசமாகிவிடும்."

இதை ஓரளவுக்குத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். பவர்லூம் வந்தவுடன் கையால் நூல் நூற்பவர்கள் செய்துவந்த தொழில் நசிவுற்றது. பல குடிசைத்தொழில்கள் இயந்திரமயமாக்கலின்போது அடிவாங்கின. ஆனால் இயந்திரமயமாக்கல் அவசியம் என்பதை மார்க்சிஸ்டுகளும்கூட ஏற்றுக்கொள்கின்றனர். (அதன்வழியேதான் புத்தொளிபெற்ற தொழிலாளர் வர்க்கம் உருவாகி, நாளை ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள்.)

முதல் கேள்வி - விவசாயிகள் பாதிக்கப்படுவார்களா? இல்லை என்றே தோன்றுகிறது. விவசாயத்தில் நிறைய முதலீடு வேண்டும். விளைபொருள்களைச் சேர்த்துவைக்க குளிர்பதனச் சாலைகள் வேண்டும். விவசாயிக்கு, விற்ற பொருள்களுக்கு உடனடியாகப் பணம் வேண்டும். இதெல்லாம் ரிலையன்ஸ் போன்றவர்கள் சில்லறை வியாபாரத்தில் வருவதால் ஏற்படும் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் ஈ-சவுபால் போன்ற வழியாக விவசாயிகளுக்கு நல்ல வருமானம் வருகிறது.

பொருள்களை அரசிடம் விற்கும்போதுதான் எப்பொழுது பணம் கைக்கு வரும் என்று திண்டாடவேண்டியுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு நெல் விற்கும் விவசாயிகளிடம் கேட்டு இதனை உறுதி செய்துகொள்ளலாம். அதேபோல தமிழக அரசு பட்ஜெட்டில் குளிர்பதனக் கிடங்குகளுக்கு என்று பெயரளவில் ஏதோ பணத்தைக் காட்டுகிறதேதவிர, நிஜத்தில் நடப்பது ஒன்றும் கிடையாது.

ஏற்கெனவே சில்லறை வணிகத்தில் ஈடுபடும் பலர் தொழிலில் நசிக்கக்கூடும். ஒரு ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடைக்கு அருகில் இருக்கும் பத்து பெட்டிக்கடைகள் அடிவாங்கலாம். இதை எதிர்கொள்வது எளிதல்ல. பெட்டிக்கடைகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பெரிய நிறுவனத்தின் ஃபிராஞ்சைஸி ஆகலாம்.

சில துறைகளில் மாற்றங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அந்த மாற்றங்களை எதிர்ப்பதைவிட மாற்றங்களுக்குத் தக்கவாறு மாறிக்கொள்வதுதான் தேவை.

வாடிக்கையாளரைப் பொருத்தவரை பிரச்னைகள் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். பெரு நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் விலைகளில் ஏற்றம் இருக்காது. சேவையில் சிறப்பான, விரும்பத்தக்க மாற்றம் இருக்கும்.

-*-

அந்நிய முதலீடு தேவையா, கூடாதா? சில்லறை விற்பனையிலோ, வேறு எந்தத் துறையிலோ அந்நிய முதலீட்டை எதிர்க்கக்கூடாது என்பதே என் கருத்து. ஆனால் தேவையான safeguards இருக்குமாறு செய்யவேண்டும். வால்மார்ட் அனைவரும் வெறுக்கும் ஒரு நிறுவனமாக இன்று உள்ளது! அமெரிக்காவிலேயே பல செனட்டர்கள் வால்மார்ட்டின் கொள்கைகளை, செயல்பாட்டை எதிர்க்கிறார்கள். அமெரிக்காவில் வால்மார்ட் அடிமட்ட ஊதியம் கொடுக்கிறார்கள்; அதிக நேரம் வேலை வாங்குகிறார்கள்; பொருள்களைக் கொள்முதல் செய்யும் நாடுகளில் வேலை செய்யும் ஊழியர்கள் மிகக் கொடுமையான நிலையில் நடத்தப்படுகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

வால்மார்ட் இந்தியாவுக்கு வந்தால் அதே முறையைக் கையாள்வார்களா இல்லையா என்பதை அரசுதான் எதிர்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்ச ஊதியம், சரியான வேலை நேரம், வேலைக்கேற்ற வசதிகள் ஆகியவற்றைச் செய்துதருமாறு வற்புறுத்தவும், தவறிழைக்கும் நிறுவனங்களைத் தண்டிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு.

ஆனால் அதற்காக வளரும் துறை ஒன்றில் அந்நிய முதலீடு தேவையில்லை என்று சொல்லக்கூடாது.