நிலத்தடி நீரில் உள்ள பூச்சிமருந்து (pesticides) அளவே இதற்குக் காரணமாம்.
கோலா நிறுவனங்கள் இந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக எதிர்த்தன. இந்தியாவில் தாங்கள் தயாரிக்கும் பானங்கள் உலகத்தில் வேறு எங்கும் தயாரிக்கும் பானங்களைப் போலவே அதே உயர்ந்த தரத்தில் உள்ளன என்றனர். பாராளுமன்றம் ஒரு கூட்டுப் பாராளுமன்றக் குழுவை (JPC) அமைத்து இந்த விவகாரத்தை ஆராயச் சொன்னது.
இதே நேரத்தில் இரண்டு கோலாக்களும் விளம்பரங்களால் மக்களை மசிய வைக்க முயன்றன. கோகா கோலாவின் அச்சு விளம்பரங்களில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் முக்கிய அதிகாரிகளே முன்னிலைப் படுத்தப்பட்டார்கள். அவர்கள் நம்மிடம், தாமும், தம் குடும்ப உறுப்பினர்களும் முழு நம்பிக்கையோடு கோகோ கோலா பானங்களை அருந்துவதாகவும், பொதுமக்களும் அதனால் சிறிதும் கவலைப்படாது இந்த பானங்களை அருந்தலாம் என்றும் சொன்னார்கள். முழுப்பக்க விளம்பரங்களில் இருவரும் இணைந்தும், தனித்தனியாகவும், கேள்வி-பதில் முறையில் தங்கள் பொருட்களில் ஒரு குறையும் இல்லை என்று சாதித்தார்கள். பின்னர் ஆமீர் கான் சின்னத்திரை விளம்பரங்களில் ஒரு பெங்காலியாகத் தோன்றி நாலைந்து கோகா கோலாக்களைக் குடித்து விட்டு, அவற்றில் 'கட்-பட்' எதுவும் இல்லை என்று உறுதி கூறினார்.
இந்த ஓரத்தில், பெப்ஸியின் பிராண்ட் காவலர்கள் ஷாருக் கானும், சச்சின் டெண்டுல்கரும் 'pepsi is not safe' என்று வார்த்தைகளை வைத்து விளையாட்டுக் காண்பித்து நம்மை மயக்கினார்கள்.

கோலா நிறுவனங்களும், காட்பரியும் இவ்வாறு பிரபலங்களைக் கொண்டுவந்து தங்கள் பொருட்கள் சாப்பிட/குடிக்கத் தகுதியானவை என்று நிரூபிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. நாளை மீண்டும் ஒருவர் வாங்கும் காட்பரி சாக்லேட்டில் புழுவோ, அல்லது வேறேதோ குறைபாடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பிரபலங்கள் பொய் சொன்னார்கள் என்று இவர்கள் மீது நேரடி வழக்குத் தொடுக்க முடியுமா? முடியும் என்றே நினைக்கிறேன். இவர்கள் விளம்பரங்களில் நடிக்கும் ஒரு நடிகராகப் பணியாற்றவில்லை. தங்கள் முகத்தையும், மற்ற துறைகளில் சம்பாதித்த பெருமையையும் பணயம் வைக்கிறார்கள்.
மேலும் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் பொதுமக்களை கேள்வி-பதில் என்று முழுப்பக்க விளம்பரங்களைக் காட்டிக் குழப்பிவிடுவோம், பிரபலங்களைக் காட்டி seduce செய்துவிடுவோம், முட்டாள் மக்களும் சில நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு முன்போலவே 'கோலாக்களை வாங்கிக் குடிப்போம், சாக்லேட்டைத் தின்போம்' என்று நடந்துகொள்வர் என்றே எதிர்பார்ப்பது போல் இருக்கிறது.
இது இப்படி இருக்க, அமெரிக்காவில் GM நிறுவனம் தன் கார்களில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறது என்று தெரியவந்தால் அத்தனை கார்களையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் லட்சக்கணக்கான டயர்களை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. பொதுவில் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் இந்த நாடுகளில் அமைந்திருக்கும் பொதுநல அமைப்புகளும், வலுவான சிவில் சொஸைட்டி அமைப்பும், நீதிமன்றங்களில் இந்த நிறுவனங்களை இழுத்து கடைசிப் பைசா வரை வசூல் செய்துவிடும் வழக்கறிஞர்களும் இருப்பதே காரணம். இதெல்லாம் இந்தியாவில் இல்லாததால்தான் மேற்படி நிறுவனங்கள் இப்படிக் கூத்தடிக்கின்றனர்.
No comments:
Post a Comment