கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம், வரும் திங்கள் கிழமை, 30 மார்ச் 2009 அன்று மாலை 6.00 மணிக்கு நடக்க உள்ளது.
மறக்காமல் உங்களது நாட்குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு வந்துவிடுங்கள்.
அ.கி.வெங்கட சுப்ரமணியன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர். தமிழகர் அரசின் பல துறைகளில் செயலராக இருந்துள்ளார். ஓய்வுக்குப்பின், உந்துநர் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்திவருகிறார். அதன் சார்பாக குடிமக்கள் முரசு என்ற தமிழ் மாத இதழை நடத்திவருகிறார். கிராமங்கள் பலவற்றில் மக்கள் மன்றங்கள் என்ற அமைப்புகளை ஏற்படுத்தி, கிராம மக்களுக்கு குடியாட்சி முறையின் அடிப்படைகளைத் தெரியப்படுத்தி, எப்படி அவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடலாம் என்று தெளிவுறுத்தி வருகிறார்.
உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படவேண்டும் என்பது இவரது வாதம். மாநிலங்கள் போராடி தங்களுக்கான உரிமைகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுவிடுகின்றன. ஆனால் தமக்குக் கீழுள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு எந்தவிதமான உரிமைகளையும் மாநில அரசுகள் தருவதில்லை. முக்கியமாக தமிழக அரசு. இதில் திமுக, அஇஅதிமுக ஆகிய இரு அரசியல் கட்சிகளுமே ஒருமித்த கருத்துடையவை.
ஆனாலும், பஞ்சாயத்துத் தலைவர்களும் உறுப்பினர்களும் மனது வைத்தால் தங்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெறப் போராடலாம், ஓரளவுக்கு வெற்றியும் பெறலாம். பஞ்சாயத்துத் தேர்தலில் கட்சிச் சார்பற்ற முறையில் போட்டியிடவேண்டும் என்பதும் இவர் கொள்கை.
தேர்தலில் வாக்களிப்பது இவருக்குப் பிடித்த மற்றொரு விஷயம். நகர்ப்புற மக்கள் தேர்தலில் வாக்களிப்பதில்லை, ஆனால் ‘இந்த அரசியல் கட்சிகளே மோசமப்பா’ என்ற சினிகல் மனோபாவத்துட்ன புலம்புபவர்கள் என்று புள்ளிவிவரங்களுடன் அலசுகிறார் இவர். குறைந்தபட்சம் 49 ஓ பிரிவிலாவது வாக்குச்சாவடிக்குச் சென்று கையெழுத்திட்டு யாருக்கும் வாக்களிக்காமல் வாருங்கள் என்கிறார். [வெங்கட சுப்ரமணியன் பற்றி நான் எழுதிய சில பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று]
பேசவாருங்கள் என்று நான் அழைத்ததும் அவர் தேர்தல் பற்றியும், 49 ஓ பற்றியும் பேசட்டுமா என்றுதான் கேட்டார். நான்தான் பேச்சைக் கேட்கவரும் அனைவரும் எப்படியும் தேர்தலில் வாக்களிக்கக்கூடியவர்களே என்றும், அதற்குப் பதில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசுங்கள் என்றும் சொன்னேன்.
தமிழர்களிடையே கட்சிகள் பற்றி பெரும் பயம் உள்ளது. ‘வூட்டுக்கு ஆட்டோ வந்திரும்பா’ என்று தேவையில்லாமல் பயப்படுகிறார்கள். கட்சிகளில் தில்லுமுல்லுகளை, பொறுக்கித்தனங்களை, நம்மைச் சிறுமைப்படுத்துகிற விஷயங்களைப் பற்றி பயமின்றிப் பேசுவோர் குறைவாக உள்ளனர்.
முன்னர்தான் நம்மிடம் தகவல்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தோம். இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் எல்லாம் தேவைப்பட்டது. இப்போது சிறு மாற்றம். சில தகவல்களையாவது நாம் கேட்டால் மத்திய, மாநில அரசுகள் தந்தாகவேண்டும். சென்ற வாரம் வேறு ஒரு (நேர்மையான) ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவர் செய்த சிலவற்றை பொதுக்களத்துக்குக் கொண்டுவந்து புத்தகங்களாகப் பிரசுரிக்கலாம் என்று நினைத்திருப்பதாகச் சொன்னார்.
வெங்கடசுப்ரமணியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மிகவும் திறம்படப் பயன்படுத்துபவர். அரசுச் செயலராக இருந்ததால் எந்தத் துறை என்ன செய்யும், என்ன செய்யாது என்று நன்கு அறிந்தவர். அவர் கல்வி, சேது சமுத்திரம் ஆகியவை தொடர்பாக த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்திக் கேட்ட சிலவற்றை கட்டுரைகளாகக் குடிமக்கள் அரசு பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். மேலும் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் மன்றத்தையும்கூட இதுபோல் த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்கள் பெற உதவி செய்துள்ளார்.
எனக்கும் த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்தி பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் சரியான வழிமுறை தெரியவில்லை. வெறும் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி அனுப்புவது பெரிய விஷயமில்லை. எந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் என்பது முக்கியம். வெங்கட சுப்ரமணியன் சொல்வதும் இதைத்தான். சிலர் ‘ஆயிரம் கேள்விகள் கேட்டுட்டேன் சார்’ என்று பெருமையாகச் சொல்கிறார்களாம். ஆயிரம் கேள்விகள் கேட்பதில் பெருமையில்லை. சரியான கேள்விகளைக் கேட்பதன்மூலம், சரியான தகவல்களைப் பெறுவதன்மூலம் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு நம்மைத் தயார் செய்துகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை நடத்திக்கொள்ள இவை உதவுகின்றன.
இந்த வழிமுறைகளை தனது அனுபவத்தின் வாயிலாக நம்மோடு பகிர்ந்துகொள்ள வருகிறார் அ.கி.வெங்கட சுப்ரமணியன். மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: திங்கள், 30 மார்ச் 2009, மாலை 6.00 மணி, கிழக்கு மொட்டைமாடியில், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.
***
அ.கி.வெங்கட சுப்ரமணியன் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இரு புத்தகங்களாக கிழக்கு வெளியிட்டுள்ளது.
1. கட்சி, ஆட்சி, மீட்சி
2. மக்களாகிய நாம்
பொறுப்பின்மை, மேம்போக்கு- இன்றைய தலைமுறையினர்
10 hours ago