நாகராஜன், நான், சத்யா ஆகியோர் கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தில் உட்கார்ந்து இதைப் பற்றிப் பேசினோம். எல்காட்டின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் இப்போது சிறுசேமிப்புத் துறையில் இருப்பவருமான உமாஷங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களுடனும் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உமாஷங்கர், தொழில்நுட்பத்தில், முக்கியமாக லினக்ஸ், டேடாபேஸ் போன்றவற்றில் நல்ல அனுபவம் உள்ளவர். மக்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடியை எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு வழி இருந்தால் நன்றாக இருக்கும், அதுவும் மொபைல் போன் மூலமாகக் கண்டுபிடிக்க முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பேச்சு வந்தது. அதை ஒட்டி, அவர் சில தொழில்நுட்ப ஆலோசனைகளைச் சொன்னார். நாகராஜன் புரோகிராமிங்கைச் செய்துமுடித்தார்.
தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 4 கோடிக்கும் மேற்பட்ட ரெகார்டுகள். அந்த அளவுக்குத் தகவல்களை நிர்வகிக்கும் திறனுள்ள சர்வர் கணினிகள் எங்களிடம் கிடையாது. உமாஷங்கரின் உதவியுடன் சில அரசு நிறுவனங்கள்மூலம் இதைச் செய்யலாமா என்று பார்த்தோம். நேரம் இல்லாததால் சரியாகச் செய்யமுடியவில்லை. எஸ்.எம்.எஸ் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் ஒன்றுடன் பேசி, அவர்களது கேட்வேயுடன் இணைக்கவேண்டியிருந்தது. சில நிறுவனங்கள் அதற்கு ஏகப்பட்ட பணம் கேட்டார்கள்.
கடைசியாக, சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இதனைச் செயல்படுத்தலாம் என்று முடிவுசெய்தோம். அந்த அளவுக்கு மட்டுமான தகவல்கள் என்றால் எங்கள் வழங்கிக் கணினியிலேயே செயல்படுத்தலாம். 35 லட்சம் ரெகார்டுகள்தான்.
நீங்கள் சென்னையின் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளாக இருந்தால் (தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை), உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால், உங்களுடைய வாக்குச் சாவடி எது என்று தெரியாவிட்டால், அதனைக் கண்டுபிடிக்க நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்:
BOOTH <வாக்காளர் அடையாள அட்டை எண்> |
என்பதை 575758 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். உங்களது வாக்குச் சாவடி முகவரி, உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வந்துவிடும்.
மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப, உங்கள் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கும். அந்தக் கட்டணம் உங்களது நெட்வொர்க் மற்றும் பிளானைப் பொருத்தது. (10 பைசாவிலிருந்து 3 ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.)
இந்தச் சேவை, எங்களைப் பொருத்தமட்டில் இலவசமாக, வாக்காளர்கள் வசதி கருதிச் செய்யப்படுகிறது. அனைவரும், முக்கியமாக புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அனைவரும், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த வசதியைச் செய்துதந்துள்ளோம்.
வரும் நாள்களில் (அடுத்த தேர்தலுக்கு முன்) சரியான ஆதரவு இருந்தால், தமிழகத்தில் 4+ கோடி வாக்காளர்களுக்கும் இதே வசதியைச் செய்துகொடுக்கலாம். அல்லது இதைத் தேர்தல் ஆணையமே செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்தது.