Monday, February 28, 2005

பட்ஜெட்டுக்கு முன்னால்...

பிசினஸ் லைன் mentor பகுதியில் பட்ஜெட்டின் வரும் சில சொற்றொடர்களுக்கான பொருள்கள் நன்கு விளக்கப்பட்டுள்ளது. விரும்புபவர்கள் படிக்க: B-day clues to beat the Monday blues

மற்றுமொரு கட்டுரை சுதான்ஷு ரானடேயுடையது. கிராம வேலைவாய்ப்புகளுக்கு வரும் பணத்தை நேரடியாக ஏழைகள் கையில் பணமாகக் கொண்டுசேர்ப்பது சிறந்தது என்று சொல்கிறது. இதனால் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தலாம் என்கிறது.

NREG மசோதா - குறிப்புகள் 1

தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004 பற்றிய விவாதங்களில் ஈடுபட வேண்டுமென்றால் அந்தச் சட்ட வரைவு பற்றிய சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கே: சட்டத்தை யார் இயற்றுவது?
ப: மத்திய அரசு

கே: சட்டத்தை யார் அமல்படுத்துவது?
ப: மாநில அரசுகள், பஞ்சாயத்துகள்

கே: சட்டம் இயற்றுவதற்கு முன்னால் மத்திய அரசு, மாநில அரசுகளையும், பஞ்சாயத்துகளையும் கலந்தாலோசித்தார்களா?
ப: அப்படி நடந்ததாகத் தெரியவில்லை.

கே: மேற்படி மசோதா சட்டமானால், மாநில அரசுகள், பஞ்சாயத்துகளுக்கு ஏதேனும் செலவுகள் உண்டா? இல்லை மத்திய அரசே எல்லாப் பணத்தையும் கொடுத்துவிடுமா?
ப: பஞ்சாயத்துகள் மீது எந்தச் செலவும் கிடையாது. பொதுவாக மாநில அரசுக்கும் எந்தச் செலவும் கிடையாது, மத்திய அரசு கொடுத்துவிடும். ஆனால்... இந்தத் திட்டத்தின் படி மாநில அரசால் வேலை எதையும் கண்டுபிடித்து அதை மக்களுக்குக் கொடுக்க முடியாமல் போனால் மாநில அரசுதான் unemployment benefits ஐக் கொடுக்க வேண்டும்.

கே: புரியவில்லையே? விளக்க முடியுமா?
ப: சரி. தமிழகத்தில் பூஞ்சோலை கிராமத்தில் 60 பேர் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தமக்கு வேலை வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் பூஞ்சோலை கிராமத்தில் இந்த 60 பேர்களும் செய்யக்கூடிய மாதிரி வேலை ஒன்றுமே இல்லை. தமிழக அரசும், பூஞ்சோலை பஞ்சாயத்தும் என்ன தேடியும் ஒரு நல்ல project அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் இப்பொழுது பழி தமிழக அரசின் தலையின் மீது விழுகிறது. முதல் மாசம் ஒப்புக்கொண்ட தினசரி ஊதியத்தில் கால்பங்கை தமிழக அரசு திட்டத்தில் பதிவு செய்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அடுத்த மாதத்திலிருந்து அரைப் பங்கு கொடுக்க வேண்டும்.

கே: தமிழக அரசு இம்மாதிரி பணத்தைச் செலவு செய்ய விரும்பாதே? வேறு ஏதாவது குளறுபடிகள் செய்து இதிலிருந்து தப்பிக்கத்தானே பார்க்கும்?
ப: ஆம். மிகவும் எளிதாகச் செய்யக்கூடியது... குழியை முதலில் வெட்டச் சொல்ல வேண்டும். பிறகு அதை மூடச் சொல்ல வேண்டும். மீண்டும் குழியை வெட்டு. மூடி. வெட்டு. மூடு. அதை புராஜெக்ட் என்று சொல்லிவிட்டால் பணம் மத்திய அரசிடமிருந்து வரும். இல்லாவிட்டால் மாநில அரசின் கஜானாவில் கைவைக்க வேண்டும்.

கே: wait wait wait! முதலில் இந்த மசோதா யாருக்காக? என்னதான் சொல்கிறார்கள் என்று விளக்கமாகச் சொல்லுங்கள். ஆங்கிலத்தில் 38 பக்கங்கள் படிக்க போரடிக்கிறது...
ப: சரி. அடிப்படையில் நல்ல எண்ணம்தான்.

யாருக்காக? வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள். அவர்களாக விரும்பி வந்து உடலுழைப்பைத் தருகிறேன் என்று சொன்னால், அவர்களுக்கு வருடத்தில் 100 நாள்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை தரப்படும்.
என்ன வேலை? உடலுழைப்பு மட்டும் சார்ந்தது. முடிந்தவரையில் எந்த இயந்திரக் கருவிகளையும் பயன்படுத்தக்கூடாது. அதாவது குழி தோண்ட வேண்டுமென்றால் கடப்பாரைதான். மண் அள்ளிக்கொட்ட வேண்டுமென்றால் தலையில் சுமந்து எடுத்துக்கொண்டுதான் போய்க் கொட்டவேண்டும். மரத்தை வெட்ட வேண்டுமென்றால் power saw கிடையாது. கோடாலிதான் போட வேண்டும்.
யார் வேலைகள் பற்றிய திட்டங்களைத் தீர்மானிப்பார்கள்? பஞ்சாயத்துகள்.
புதிய வேலைகளை ஆரம்பிக்க என்ன் குறைந்த பட்ச தேவை? குறைந்தது 50 விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும். இவர்களுக்கு ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் எந்தத் திட்டத்திலும் வேலை கொடுக்க முடியாது இருக்க வேண்டும்.
என்ன சம்பளம்? நாள் ஒன்றுக்கு மாநில அரசுகளால் குறைந்த பட்ச ஊதியம் என்ன என்று தீர்மானிக்கப்பட்ட இப்பொழுதைய கணக்கான ரூ. 54 (எட்டு மணிநேர வேலைக்கு)
இதில் சேர வயது வரம்பு உண்டா? பால்? வேறு ஏதாவது கட்டுப்பாடுகள்? 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். உச்சபட்ச வரம்பு எதுவும் இல்லை. (90 வயதுக்காரர் வந்தால் சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டும். 'மாட்டேன், போ' என்று சொல்ல முடியாது.) ஆண், பெண் இருவருக்கும் ஒரே ஊதியம்தான். இப்பொழுது தனியார் துறை நடைமுறையில் இருப்பது போல வித்தியாசம் கிடையாது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது என்று சொல்கிறார்கள். அதாவது மொத்தம் மூன்று பேர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு இடங்கள்தான் இருக்கின்றன என்று வைத்துக்கோள்வோம். அப்படியென்றால் ஒரு குடும்பத்திலிருந்து விண்ணப்பித்த இருவரில் ஒருவருக்கு மட்டும்தான் முதலில் வேலை கிடைக்கும். இரண்டு இடங்கள் காலியாக இருந்தால் இருவருக்கும்.

கே: இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு புதிதாக ஏதாவது தொழில் கற்றுக்கொடுக்க முடியுமா?
ப: முடியாது. இது வேலை கொடுக்கும் திட்டம். கல்வி, கற்பித்தல் கொடுக்கும் திட்டம் அல்லவாம். அதனால் புதிதாக பணம் சம்பாதிக்கக்கூடிய வகையில் எந்தத் திட்டமும் கற்றுக்கொடுக்கப்பட மாட்டாது.

கே: ஐயா! நான் கிராமத்தில் இருக்கிறேன். 12வது வரை படித்துவிட்டேன். எனக்கும் வேலை கிடையாது. நான் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து உடலுழைப்பு இல்லாத பிற மூளை சார்ந்த வேலை ஏதேனும் செய்யமுடியுமா?
ப: முடியாது! Unskilled ஆசாமிகளுக்கான திட்டம் என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள். எனவே நீ என்ன படித்திருந்தாலும் எடு கடப்பாரையை. தோண்டு குழியை. இல்லாவிட்டால் உன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டேன்.

கே: எனக்கு உடல் ஊனம்... எனக்கு வேலை கிடைக்குமா?
ப: உண்டு. ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது (என்று பேசிக்கொள்கிறார்கள்). ஆனால் ஒன்று. நீங்களும் கடப்பாரையைத் தூக்க வேண்டும். என்ன... மற்றவர்கள் இரண்டு அடி ஆழம் வெட்டினால் நீங்கள் சற்று குறைந்து வெட்டினால் போதும் என்று சொல்லலாம்.

கே: எனக்கு வயதாகி விட்டது. என்னால் அதிக வேலை செய்ய முடியாது. எனக்கு வேலை கிடைக்குமா?
ப: சட்ட வரைவின்படி உங்களை யாரும் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்று சொல்லமுடியாது. அதே நேரம் கடப்பாரையை தூக்கிக் கொத்த முடியவில்லையென்றால் உங்களை வேலையை விட்டு நீக்கமுடியுமா என்று எந்த ஷரத்தும் இந்த சட்ட வரைவில் இல்லை.

கே: கடப்பாரை இல்லாமல், உடலை அதிகம் வருத்தாமல் ஏதேனும் வேலை - உருப்படியாக என்னாலும் செய்ய முடியும் - எனக்குக் கிடைக்குமா? வயதாகி விட்டதே... உடம்பு முடியாது.
ப: கிடையாது. இந்தத் திட்டம் உடல் உழைப்பை மட்டுமே பிரதானமாக வைத்துச் செய்யப்படுவது. இஷ்டம் இருந்தால் வாருங்கள்.

கே: எனக்கு தச்சு வேலை, கொத்து வேலை என்று சில வேலைகள் தெரியும். என் திறமைக்கேற்ற வேலைகள் உண்டா?
ப: என்னென்ன வேலைகள் (இந்த வரிசையில் இருக்கலாம் என்று தில்லியிலே நாங்கள் முடிவு செய்தாகி விட்டது) என்று சொல்கிறோம். பாருங்கள்:
  1. நீர்நிலைகளைப் பராமரிப்பது, தண்ணீர் சேமிப்பு
  2. மரம் வெட்டுதல், மரம் நடுதல்
  3. வாய்க்கால், கண்மாய் வெட்டுதல், பராமரித்தல்
  4. தனியார் வயல்கள் SC/ST உடையதாக இருந்தால் அந்த வயல்களுக்கான நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தரலாம்.
  5. தூர்வாருதல்
  6. பொறம்போக்கு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது
  7. வெள்ளக்கட்டுப்பாடு, நீர் வடிகால் அமைப்பது
  8. கிராமச்சாலைகள் அமைப்பது
  9. மத்திய அரசு அவ்வப்போது மேற்படிப் பட்டியலுடன் சேர்க்கும் திட்டங்கள்.

இவ்வளவுதான். அதாவது ஒரு பஞ்சாயத்து தன் வசதிக்கு என ஒரு கட்டடம் கட்ட விரும்பினாலும் அது இப்போதைக்கு முடியாது. (மேலே எங்கும் வரவில்லை. மத்திய அரசு ஓகே சொன்னால்... ஒருவேளை...)

ஆக எல்லாமே விவசாயம் ஒன்றை மட்டுமே குறிவைத்துச் செய்யப்படுவது.

கே: எங்கள் பூஞ்சோலை கிராமத்தில் மேற்படி விஷயங்கள் அனைத்தையும் செய்துவிட்டோம். இப்பொழுது மழை இல்லை. எனவே எங்களுக்கு விவசாய வேலைகள் இல்லை. வேறு ஏதாவது செய்யலாமா?
ப: முடியாது. உங்கள் ஊரைச் சுற்றி ஐந்து கி.மீ தொலைவில் உள்ள பிற திட்டங்களில் வேலை செய்யுங்கள் (அங்கும் கடப்பாரைதான்!).

=======

ஓரளவுக்கு இந்தப் பதிவு (என்னுடைய slantஐ விலக்கிப் பார்த்தாலும்) இந்தத் திட்டம் பற்றி விளக்கியிருக்கும். இன்னமும் பல குழப்பங்கள் உள்ளன. அதைப்பற்றி வரும் பதிவுகளில் சேர்க்கிறேன்.

Sunday, February 27, 2005

தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004

தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004 பற்றி தானம் அறக்கட்டளை (மதுரை) - பொதுச்செலவுகள் வட்டமேசை (சென்னை) இரண்டும் இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கு சனிக்கிழமை அன்று மதுரையில் நடந்தது.

[மேற்படி சட்டத்தின் வரைவு நகல் இங்கு கிடைக்கிறது.]

நானும் கருத்தரங்குக்குச் சென்றிருந்தேன். அந்தக் கருத்தரங்கில் பலரும் பேசியதை அப்படியே ஆடியோவில் பதிவு செய்திருக்கிறேன். அதில் சிலவற்றை நேரம் கிடைக்கும்போது சுத்தம் செய்து வகை மாற்றி இங்கு சேர்க்கிறேன்.

கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள்: பொதுச்செலவுகள் வட்டமேசையின் உறுப்பினர்கள் பலர். இவர்கள் அனைவரும் முன்னாள் IAS. அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள். துறைச் செயலர்களாக இருந்தவர்கள். அடுத்து தானம் அறக்கட்டளையின் அலுவலர்கள். இவர்கள் நேரடியாக கிராமங்களில் பணியாற்றும் தொண்டூழியர்கள். அடுத்து பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள். அடுத்து அரசுப் பணியில் இருக்கும் அலுவலர்கள். விவசாயக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள். அதன் பிறகு நான்.

காலையில் முதலாவதாக மூன்று பேச்சுகள்:

* தானம் அறக்கட்டளையின் குருநாதன் மசோதாவின் வரைவு நகல் பற்றிப் பேசியது [Windows Media Audio, 16kbps encoded, 17.52 minutes, 2.14 MB file]
* பொதுச்செலவுகள் வட்டமேசையின் கே.வெங்கடராமன் பேசியது [WMA 16kbps, 29.01 min, 3.48 MB]
* கீதா கிருஷ்ணனின் உரையை A.M.சுவாமிநாதன் தமிழில் விளக்கியது [WMA 16kbps, 9.43 min, 1.17 MB]

இதைத் தொடர்ந்து வந்திருந்தவர்கள் அனைவரும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் உரையாடினோம். முதல் குழு கருத்தளவில் இந்த மசோதா எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விவாதித்தது. இரண்டாவது குழு - நான் இருந்த குழு - இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், செயல்பாட்டில் என்ன பிரச்னைகள் இருக்கும், எப்படிச் செயல்படுத்துவது என்பதைப் பற்றிக் கலந்தாலோசித்தது. (என் குழுவின் கலந்துரையாடலை ரெகார்ட் செய்துள்ளேன். அதிலிருந்து சில பகுதிகளை பின்னர் வெளியிடுகிறேன்.)

மதிய உணவுக்குப் பின்னர் இரு குழுக்களும் என்ன முடிவுக்கு வந்தனர் என்பதைப் பற்றி குழுத்தலைவர்கள் பேசினர். (இந்தப் பேச்சு சரியாக அமையவில்லை. ஆனால் இரண்டு குழுவினரும் உருப்படியாக சில பரிந்துரைகளை எழுதியுள்ளனர். இந்த எழுத்து மூலமான பரிந்துரைகள் சரியான முறையில் எழுதப்பட்டு அரசுக்கு, பாராளுமன்றத்தின் சப்-கமிட்டிக்கு அனுப்பப்படும். அந்தப் பரிந்துரைகள் தயாரானதும் PERT இணையத்தளத்தில் போடப்படும்.

மூன்றாவது அமர்வில் பக்கத்து கிராமங்களிலிருந்து வந்திருந்த பல பொதுமக்களும் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மசோதாவின் சில முக்கியமான ஷரத்துக்கள் தமிழாக்கமாகக் கொடுக்கப்பட்டது. Open house அமர்வாக இருந்தது. ஆளாளுக்கு 2-3 நிமிடம் பேச அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் இந்த வரைவு மசோதாவினை முழுமையாக வரவேற்றனர். ஆனால் அரசு அலுவலர்கள் மீதான அவநம்பிக்கை நிறையவே வெளிவந்தது. பஞ்சாயத்துத் தலைவர்கள் அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர். அரசு அலுவலர்கள் சிலர் நடைமுறைப் பிரச்னைகள் சிலவற்றை விளக்கினர். இப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது தவறல்ல. நேரடியாகக் கலந்து பேச ஒரு வாய்ப்பு என்று அனைவரும் சந்தோஷப்படவேண்டும்.

எனக்கு இந்த மசோதாவின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே - குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உள்ளது என்பதற்காக மட்டுமே - அவசர அவசரமாக வரையப்பட்ட மசோதா. குழப்பங்கள் நிறைந்தது. செயல்படுத்துவது கடினம் என்று தோன்றுகிறது. ஆகும் செலவுகளோ எக்கச்சக்கம். இந்தச் செலவுக்குத் தக்க பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை.

இப்படிக் கட்டாயமாக இவர்களை ஏதோ ஒரு வேலை செய்யவைப்பதற்கு பதில் பஞ்ச காலங்களில் இவர்களுக்கு இலவசமாக உணவு கொடுக்கலாம் என்பதே என் கருத்து. அதைப்பற்றி முந்தைய பதிவு ஒன்றில் எழுதியுள்ளேன். கிராமப்புற வருமானத்தைப் பெருக்க இந்தத்திட்டம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்றே நான் நினைக்கிறேன்.

நான் ஏற்கெனவே கிராம வருமானத்தைப் பற்றி எழுத ஆரம்பித்த தொடரில் என் கருத்தை வெளியிடுகிறேன். அது சிறிது தடைப்பட்டதன் காரணம் இந்த கருத்தரங்கு முடிந்து விடட்டும் என்பதே.

அடுத்த சில பதிவுகளில் மிகுதி ஒலித்துண்டுகளையும் சேர்த்து விடுகிறேன். மேற்கொண்டு விவாதத்துக்கு வசதியாக பொறுமையாக வரைவு மசோதாவினையும் படித்துவிடுதல் நலம். அதன் முக்கியமான விவரங்களை குருநாதனின் பேச்சு விளக்கியிருக்கும். இல்லாவிட்டால் நாளை குருநாதன் பேச்சை முன்வைத்து ஒரு பதிவைச் சேர்க்கிறேன்.

மக்கள் தொகையும், மாறும் உலகமும்

ஜோஸஃப் ஷாமி என்னும் ஐ.நா வல்லுனர் ஒருவரது பேச்சு ITconversations.com என்னும் இணையத்தளத்தில் கிடைத்தது. இங்கு பல அருமையான பேச்சுக்கள் கிடைக்கின்றன. அவசியம் உருவிக் கேளுங்கள்.

அந்தப் பேச்சிலிருந்து சில புள்ளிவிவரங்கள்:

20ஆம் நூற்றாண்டில்தான் மக்கள் தொகை மாற்றங்களில் பல விசேஷங்கள் நடந்தேறியுள்ளன. அதாவது:
  • உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட நான்கு மடங்கு ஆகியுள்ளது. 1900-ல் 1.6 பில்லியனாக இருந்தது 2000 தொடக்கத்தில் 6.1 பில்லியன் என்றாகியுள்ளது.
  • வருடாந்திர மக்கள் தொகை அதிகரிப்பு மிக அதிகமாக இருந்தது 1969-ல். 2%. அதற்கு முன்னும் குறைவாக இருந்தது. அதற்குப் பின்னும் குறையத் தொடங்கியுள்ளது.
  • 1987-ல் மக்கள் தொகை மிக அதிகமாக - 87 மில்லியன் - அதிகரித்தது. வேறெந்த வருடத்திலும் இந்த அளவு அதிகரித்ததில்லை.
  • மிகக் குறைந்த காலத்தில் மக்கள் தொகை இரண்டு மடங்கானது. 1960-லிருந்து 1999-ல் மக்கள் தொகை 3 பில்லியனிலிருந்து 6 பில்லியன் ஆனது.
  • மிகக்குறைந்த கால அளவில் ஒரு பில்லியன் மக்கள் தொகை அதிகரிப்பு ஏற்பட்டது: 1987-1999 காலத்தில் மக்கள் தொகை 5 பில்லியனிலிருந்து 6 பில்லியன் ஆனது.

இது இப்படியிருக்க, பல நாடுகளில் மக்கள்தொகை குறையத் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 61 நாடுகளில் fertility rate - அதாவது அந்த நாட்டில் சராசரியாக ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை - குறைந்து கொண்டே வருவதே இதற்குக் காரணம். ஒரு காலத்தில் 6 ஆக (அதாவது சராசரியாக ஒரு பெண் ஆறு குழந்தைகள் பெற்றுக் கொண்டிருந்தார்) இருந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து 2, 1.8 என்று ஆகியுள்ளது. Replacement fertility rate (RFR) - அதாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் உள்ள மக்கள் தொகை அதே அளவில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் சராசரியாக ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணிக்கை - 2.1+ ஆகும். இஸ்லாமிய நாடுகளான இரான், ட்யூனிசியா அகியவற்றில் இப்பொழுதைய RFR 2. மெக்சிகோ 2. அமெரிக்கா 2. சீனா 1.8.

இந்த நாடுகளில் பிற நாடுகளிலிருந்து யாரும் வராது போனால் (migration), மக்கள் தொகை இப்பொழுதிருப்பதை விடக் குறைந்து கொண்டே போகும்.

அமெரிக்காவில் மக்கள் தொகை அந்நியர் நாடு புகுவதனால் மட்டுமே அதிகரிக்கப் போகிறது.

உலகில் மக்கள் தொகை அதிகமாக உயர்ந்து வரும் ஆறு நாடுகள்: இந்தியா, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா, பங்களாதேஷ், இந்தோனேசியா. இதில் சீனா, பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் ஏற்படும் மொத்த மக்கள் தொகைப் பெருக்கத்தை விட இந்திய மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக உள்ளது! ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள 25 நாடுகள் சேர்ந்து 2003-ல் அதிகரித்த மக்கள் தொகையை அதே வருடத்தின் முதல் ஆறு நாள்களில் இந்தியா தாண்டிவிட்டதாம்!

1950-ல் பாகிஸ்தானின் மக்கள் தொகை 50 மில்லியனுக்கும் குறைவாக இருந்தது. இப்பொழுது 150 மில்லியன். 2050-ல் பாகிஸ்தான் உலகிலேயே நான்காவது மக்கள் தொகை மிகுந்த நாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. [1. இந்தியா 2. சீனா 3. அமெரிக்கா]

சில விசித்திரமான தகவல்கள்:

* 1950-ல் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை, ஐரோப்பாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்காக இருந்தது. இப்பொழுது இரண்டு கண்டங்களிலும் கிட்டத்தட்ட சம அளவு. 2050-லோ... ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை ஐரோப்பாவின் மக்கள் தொகையை விட மூன்று மடங்காக இருக்கும்!

* பாகிஸ்தான் - ரஷ்யா: மேலே சொன்னது போன்றே.

* மொராக்கோவின் மக்கள் தொகை ஸ்பெயின் தொகயைத் தாண்டும். பிலிப்பைன்ஸ் ஜப்பானைத் தாண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேலைத் தாண்டும்.

Support Ratio என்றொரு எண்ணிக்கை உண்டு. வயதானவர்களை வயது குறைந்தவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள் (support) என்பதனால் இதனை 'தாங்கல் விகிதம்' என்று வைத்துக்கொள்வோம். ஒரு நாட்டில் 15-64 வயதுள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதன் விகிதமே தாங்கல் விகிதம். அதாவது 15-64 வயதுள்ளவர்கள் உழைத்து அதனை வைத்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தாங்குகின்றனர் என்றாகிறது. (15க்குக் கீழ்ப்பட்டவர்களை கவனித்துக் கொள்வது முதலீடு:-)

2050-ல் உலகில் மூன்றில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பாராம். சில நாடுகளை கவனிப்போம். சீனாவில் இப்பொழுதைய தாங்கல் விகிதம் 10. 65 வயதுக்கு மேல் இருப்பவர் ஒவ்வொருவருக்கும், 15-64-ல் 10 பேர் உள்ளனர். ஆனால் 2050-ல் இந்த விகிதம் 2.7 ஆகக் குறைந்து விடும்!

ஃப்ரான்ஸ் இப்பொழுது 4, 2050-ல் 2.1.
ஜெர்மனி இப்பொழுது 4, 2050-ல் 1.8.
கனடா இப்பொழுது 5, 2050-ல் 2.4.
அமெரிக்கா இப்பொழுது 5.5, 2050-ல் 2.7.

ஏன் இப்படி ஆகிறது? Mortality - சாவு குறைந்துள்ளது. மருத்துவ வசதிகள், குறைவான போர்கள் ஆகியவற்றால் மக்கள் நெடுங்காலம் வாழ்கிறார்கள் (life expectancy). சராசரி வாழும் காலம் 1900க்கு முன் 30 ஆக இருந்தது இப்பொழுது 60க்கு மேல். பல நாடுகளில் இது 70க்கும், 80க்கும் சென்றுள்ளது.

இதன் விளைவு என்ன? எங்கெல்லாம் சமூகப் பாதுகாப்பு முறை அமலில் உள்ளதோ (அதாவது முதியோர்களை அரசு ஓய்வூதியம் கொடுத்து ஒழுங்காக கவனித்துக் கொள்கிறதோ), அங்கெல்லாம் அரசு கீழுள்ள ஏதாவது ஒன்றையோ, அனைத்தையுமோ செய்தாக வேண்டும்.

1. ஓய்வு பெறும் வயதை அதிகரித்தல்
2. ஓய்வூதியத் தொகையைக் குறைத்தல்
3. இப்பொழுது வேலை செய்பவர்களிடமிருந்து பெறும் சோஷியல் செக்யூரிட்டி வரியை அதிகமாக்குதல்

தாங்கல் விகிதத்தை இப்பொழுதிருப்பதைப் போலவே 2050-லும் வைத்திருக்க வேண்டுமானால் சீனா ஓய்வு பெறும் வயதை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்? 78.7! ஆனால் இது சராசரி வாழும் காலத்தை விட அதிகம்! அதாவது சீனா தன் நாட்டு மக்களை சாகும் வரை உழைத்துக் கொண்டே இருங்கள் என்று சொல்ல வேண்டும்!

பிற நாடுகள் ஓய்வு பெறும் வயதை எப்படி அதிகரிக்க வேண்டும்? ஃப்ரான்ஸ் 74.6, ஜெர்மனி, இத்தாலி 76, கனடா 75, அமெரிக்கா 74!

===

வளர்ந்த நாடுகள் பிரச்னை வேறு, வளரும் நாடுகள் பிரச்னையோ வேறு. எக்கச்சக்கமாக மக்கள் தொகை பெருகும் நாடுகளில் உள்ள அரசுகள் அடிபப்டைக் கட்டுமானம் சரியாக இல்லாததால் தடுமாறுகிறார்கள்.

மக்கள் தொகை குறையும் நாடுகளுக்கு மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் கூட்டம் கூட்டமாக மக்களை அனுப்பினால் சமூக மாற்றங்கள் பல இருக்கும். இத்தாலியில் 2050-ல் பாதிப்பேர் இந்திய வம்சாவளியினர் என்றால் நினைத்துப் பாருங்களேன்?

ராகுல் காந்தி இரண்டு நாடுகளையும் சேர்த்து ஆளலாம்.

Tuesday, February 22, 2005

அனுமன் கடற்கரைக் கூட்டம்

சென்ற சனிக்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் ஹரி கிருஷ்ணன் எழுதிய அனுமன்: வார்ப்பும் வனப்பும் புத்தகம் பற்றிய சிறு கலந்துரையாடல் நடைபெற்றது.

சரியாக மாலை 4.55க்கு நான் போய் காந்தி சிலை பின்னால் உட்கார்ந்தேன். முதலில் வந்து சேர்ந்தவர் மதுரபாரதி. பின் எஸ்.கே. அடுத்த சில நிமிடங்களில் ஹரி கிருஷ்ணன் மனைவியுடன் வந்தார். பின் ஒருவர் பின் ஒருவராக பலரும் வந்தனர். வந்த பிறர் அனைவரையும் இங்கு ஒருமுறை குறிப்பிட்டு விடுகிறேன்.

இரா.முருகன், தேசிகன், அருள் செல்வன், இகாரஸ் பிரகாஷ், பா.ராகவன், டோண்டு ராகவன், சோம. வள்ளியப்பன், மதுமிதா, கிருஷாங்கினி, நாகராஜன், இலந்தை இராமசாமி, ஷங்கர், நாகரத்தினம் கிருஷ்ணா, வாஞ்சிநாதன்.

இரா.முருகன்பா.ராகவன் அனுமன் புத்தகத்தைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன் முருகனைப் பேச அழைத்தார். இரா.முருகன் சற்று மெதுவாக, தயங்கித் தயங்கிப் பேசினார். [Windows Media Audio, 16.04 min, 2.39MB] ஹரியின் மொழி பழமைக்கும் பழையதாகவும், புதுமைக்கும் புதியதாகவும், நம்மைக் கையைப் பிடித்துக் கொண்டு நட்புடன் கூட்டிப் போகிறது என்றார். ஆங்காங்கு புத்தகத்திலிருந்து தான் எழுதி வந்த சிலவற்றைப் படிக்க சிரமப்பட்டார். இருட்டு கவியத் தொடங்கியிருந்தது. கடற்கரையில் கூட்டம் என்றதும் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைப் பற்றிச் சொன்னார்.

உண்மையில் சுற்றிலும் சற்று சத்தம் இருக்கத்தான் செய்தது. அலைகளும் காற்றும் எழுப்பும் உஷ் உஷ் ஒருபுறம். நாங்கள் வந்து உட்கார்ந்த பிறகு ஆரம்பித்த சின்ன சைஸ் merry-go-ride எழுப்பிய ஓயாத இசை. பச்சிளம் குழந்தைகள் கைகளில் சுண்டல் பாத்திரத்துடன் வந்து அவ்வப்போது சுண்டல் வேண்டுமா என்று கேட்ட வண்ணம் இருந்தனர். அப்படி முதலில் வந்த ஒரு சுண்டல் பாலகனைப் பார்த்து இரா.முருகன் கலங்கி விட்டார். "அப்படியே அவனை மடியில் உட்கார வைக்க வேண்டும் போல இருக்கிறது, பாவம் இத்தனை சின்ன வயசில் சுண்டல் விற்க வேண்டிய நிலைமை" என்றார்.

மதுரபாரதி ஹரிக்கு சால்வை போர்த்துகிறார்


முருகன் பேசி முடித்ததும் மதுரபாரதி தன் பையிலிருந்து ஒரு சால்வையை எடுத்து ஹரிக்குப் போர்த்தினார். சால்வை போர்த்தும் formal கூட்டமல்ல என்றாலும் தனக்கு செய்யத்தோன்றியது என்பதால் செய்தேன் என்றார்.

மதுரபாரதிமதுரபாரதி நல்ல கணீரென்ற குரலில் பேசினார். [22.32 min, 3.35 MB] மதுரபாரதி குறிப்பாக ஹரியைப் பற்றிப் பேசினார். ஹரியின் பால்ய கால நண்பர். இவர்கள் இருவருடனும் இன்னுமொரு நண்பர் வீரராகவன். மூவரும் சேர்ந்து தமிழ் இலக்கியங்களைப் படிப்பது, கவியரங்கங்களில் பங்கேற்பது என்று நேரத்தைச் செலவு செய்வார்களாம். மதுரபாரதியும் வீரராகவனும் கம்பனைப் பற்றி நிறையப் பேசுவார்களாம், ஆனால் ஹரி அவ்வளவாகப் பேசாமல் கேட்டுக்கொண்டு மட்டும் இருப்பாராம். கடைசியில் அனுமன் புத்தகத்தை எழுதியது ஹரி. இதைச் சொல்ல பள்ளிக்கூடத்தில் எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கும் மாணவன் பரிட்சையில் வெறும் 37 மார்க்குகள் வாங்குவான், அதைக் கேட்டுப் படித்த மாணவன் 80 மதிப்பெண்கள் வாங்கிச் சென்றுவிடுவான் என்னும் உதாரணத்தைச் சொன்னார்.

ஆடியோ ரெகார்டிங்க் செய்யும்போதும் சற்றே சொதப்பி விட்டது. நான் டிஜிட்டல் ரெகார்டர் கையில் வைத்திருந்தேன். ஷங்கர் கையில் ஓர் அனலாக் டேப் ரெகார்டர் கொண்டுவந்திருந்தான். என் டிஜிட்டல் ரெகார்டர் பாதியில் பேட்டரி தீர்ந்து போனதால் இரா.முருகன், மதுரபாரதி பேச்சினை ரெகார்ட் செய்ததை சேமிக்கவில்லை.

பின் வேறு பேட்டரி மாற்றி ஹரி-முருகன் கலந்துரையாடலைப் பதிவு செய்தேன். அதனால் முதலிரண்டு ஒலித்துண்டிலும் நிறைய வெளிச்சத்தம் கேட்கும். தயவுசெய்து சகித்துக்கொள்ளவும்!

முருகன், மதுரபாரதி பேசியதும் முருகன் சில கேள்விகளைக் கேட்க அதற்கு ஹரி பதில் சொன்னார். [30.19 min, 4.50 MB] அதனைத் தொடர்ந்து இலந்தை இராமசாமி ஹரியை வாழ்த்திப் பேசினார். [6.14 min, 955 KB] [இந்த கடைசி இரண்டு ஒலித்துண்டுகளும் வெளிச்சத்தம் மிகக்குறைவாக, கேட்கக் கூடியதாக இருக்கும்.]

அதன் பின்னர் பேச்சு informal-ஆக பல விஷயங்களையும் தொட்டது. எனவே ஒலிப்பதிவை நிறுத்தி விட்டேன்.

கூட்டத்தின் ஒரு பகுதி இதோ:

அனுமன்: வார்ப்பும் வனப்பும், கலந்துரையாடலுக்கு கடற்கரைக்கு வந்திருந்த கூட்டம்


நான் சிறிது நேரம் பதிப்பகத் தொழில் பற்றியும், நாங்கள் மேற்கொண்டு என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப் பற்றியும் பேசினேன். வேறு பலரும் புத்தகங்கள் பற்றி, எழுத்தாளர்கள் பற்றி, தங்களைப் பற்றி என்று நிறையப் பேசினார்கள். சுமார் 8 மணியளவில் சுண்டல், நேந்திரங்காய் வறுவல் சாப்பிட்டுவிட்டு மெதுவாகக் கலைந்து சென்றோம்.

யோசித்துப் பார்க்கையில் மீண்டும், தொடர்ச்சியாகவே கடற்கரையில் கூட்டம் நடத்தலாம் என்று தோன்றுகிறது. இன்னமும் சற்று முன்னதாகவே தொடங்க வேண்டும் - வெயில் இருக்கும்போதே. டிஜிட்டல் ரெகார்டரில் பேட்டரி சரியாக இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

Saturday, February 19, 2005

செக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்

ஸானா பிரிஸ்கிகொல்கொத்தா செக்ஸ் தொழிலாளர்களின் குழந்தைகள் பற்றி ஸானா பிரிஸ்கி என்ற அமெரிக்கப் பெண் ஓர் ஆவணப்படம் எடுத்துள்ளார். "Born into Brothels" என்று பெயர். இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஆவணப்படங்களில் இதுவும் ஒன்று. ஸானாவின் பேட்டி இன்று பிபிசி தொலைக்காட்சியில் வெளியானது.

ஸானா முதலில் கொல்கொத்தா வந்தது செக்ஸ் தொழிலாளர்களைப் பற்றி சில புகைப்படங்கள் எடுக்க. பின் அங்குள்ள குழந்தைகளுடன் பழக ஆரம்பித்திருக்கிறார். அவர்களுக்கு தன் கையில் இருந்த கேமராவின் மீதான ஆர்வத்தைக் கண்டு அவர்களிடம் தன் கேமராவைக் கொடுத்து போட்டோக்கள் எடுக்க வைத்துள்ளார். பின் அந்தப் படங்களை ஓர் exhibition-ஆக வைத்துள்ளார். படமெடுப்பதால் அந்தக் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் கண்டு, இவர்களை வைத்து ஓர் ஆவணப்படம் செய்ய வேண்டி, அமெரிக்கா போய் ஒரு விடியோ கேமராவைத் தூக்கிக் கொண்டு மீண்டும் கொல்கொத்தா வந்துவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக செக்ஸ் தொழிலாளர்கள் குழந்தைகளுக்காக ஓர் அறக்கட்டளை அமைத்து (Kids with Cameras) இந்தக் குழந்தைகளுக்கு கலைகள் கற்பிப்பது, கல்வியின் பால் இழுத்து வருவது ஆகியவற்றைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம். 2006-ல் ஒரு பள்ளிக்கூடமும் கட்டப்படும் என்று சொன்னார்.

கூகிளில் தேடும்போது இந்தப் படம் பற்றி சில விமர்சனங்கள் கிடைத்தன. [ஒன்று | இரண்டு | மூன்று]

அனுமன்: வார்ப்பும் வனப்பும்

அனுமன்: வார்ப்பும் வனப்பும்இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஹரி கிருஷ்ணன் எழுதிய "அனுமன்: வார்ப்பும் வனப்பும்" என்ற நூலுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது சாதாரணமாக இலக்கிய விழா என்று அறிவிக்கப்பட்டு மேடையில் நான்கு பேர் பேசி, கைதட்டி, கலைந்து செல்லும் கூட்டமல்ல.

Informal-ஆக கடற்கரை மணலில் அமர்ந்து இந்தப் புத்தகத்தை ரசித்துப் படித்த இருவர் - மதுரபாரதி, இரா.முருகன் - பேசுவதைக் கேட்கவும், அதைத் தொடர்ந்து, வந்துள்ளோர் அனைவரும் தத்தம் கருத்தையும் சொல்லிக் கலந்துரையாடவும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 5.00 மணி அளவில் கடற்கரை காந்தி சிலையருகே கூடுவோம். பின் கூட்டம் குறைவாக உள்ள இடமாகப் பார்த்து கடற்கரை மணலில் அமர்ந்து பேசுவோம்.

நாளை இந்த வலைப்பதிவில் படங்களும், முடிந்தால் முழு ஆடியோவும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். இதுவரை காற்று வீசும் கடற்கரையில் டிஜிட்டல் ஆடியோ ரெகார்டரைப் பயன்படுத்தியது கிடையாது. அதனால் ரெகார்டிங் தரம் எப்படியிருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

RSS சுதர்சன் சந்திப்பு

நேற்று மாலை RSS சரசங்கசாலக் K.S.சுதர்சன் சென்னை ம்யூசிக் அகாடெமியில் பேசினார். கிட்டத்தட்ட 1000 பேர் (அழைப்பின் பேரில்) வந்திருந்தனர்.

நானும் ஓரளவுக்குத் திறந்த மனத்துடன் சென்றிருந்தேன்.

மொத்தத்தில் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் நல்லதாக சொல்லக்கூடியதாக இருந்தன. அவை:

1. கூட்டம் சரியாக மாலை 6.30க்கு சொன்னது சொன்னபடி ஆரம்பித்தது. சரியாக 8.30க்கு - ஒரு நிமிடம் கூட தாமதம் இல்லாமல் - முடிந்தது.
2. கடைசியாகப் பாடிய "ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்திஹி" வரிகள்.

சுதர்சன் ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியதன் தலைப்பு "The fundamental transformation that is taking place in Bharath and around the world and the role of RSS in it."

இந்தப் பேச்சை சுருக்கமாகச் சொல்வதென்றால்

* முதலில் ஆன்மிக மம்போ ஜம்போ ("மேற்கில் உடல், மனம், புத்தி என்று மூன்றைத்தான் சொல்கிறார்கள். இந்திய ஆன்மிக வழியில் ஆன்மா என்று நான்காவது உள்ளது." "மேற்கத்திய நாகரிகங்கள் உயர்ந்த நிலைக்குச் சென்றிருந்தாலும் கீழே வீழும்போது மீண்டும் எழுந்திருக்க முடிவதில்லை. ஆனால் இந்தியா கடந்த 5000 வருடங்களில் மூன்று முறை அதல பாதாளத்தில் விழுந்தும் மீண்டும் எழுந்து நிற்கிறது. காரணம் இந்திய நாகரிகத்தின் பலம் அதன் வேர்களில் உள்ளது.")

* அடுத்து வரலாற்று மம்போ ஜம்போ ("மஹாபாரதம் 5128 (அந்த மாதிரி ஏதோ நம்பர் சொன்னார்) வருடத்துக்கு முன்னால் நடந்தது. புத்தர் வந்தார், பின் ஷங்கரர் 2500 ஆண்டுகள் முன்னால் வந்தார்..., பின் முஸ்லிம்கள் படையெடுத்தனர், பின் வெள்ளைக்காரர்கள்... பின் ஆகஸ்ட் 15, 1947 இந்தியாவின் கறுப்பு தினம், அன்றுதான் பாரதம் இரண்டாகத் துண்டாடப்பட்டது...." என்றெல்லாம் வரலாற்றை விளக்கியதோடு மட்டுமில்லாமல் "இந்தியர்கள் உலகெங்கிலும் தங்கள் கொள்கைகளைப் பரப்பியிருந்தனர். சவுதி அரேபியே என்பது அரவஸ்தான் என்று அங்குள்ள "இந்தியர்களால்" அழைக்கப்பட்டது - குதிரைகள் இருப்பதால். பின் அரேபியா என்றானது" போன்ற கதைகளையும் சொன்னார்.)

* அடுத்து அரசியல் மம்போ ஜம்போ ("Javaharlal Nehru confided that he was the last Englishman to rule India", "இந்தியா விடுதலைக்குப் பின் அழிவதற்கு முதல் காரணம் ஜவஹர்லால் நேஹ்ரு" etc. இன்றைய இந்தியாவின் வில்லன்கள் கம்யூனிஸ்டுகள், லாலு பிரசாத் யாதவ் (இவரை மட்டும் பெயர் குறிப்பிட்டுச் சொன்னார்), மாவோயிஸ்டுகள். இந்தியாவின் ஹீரோக்கள் சாவர்கார், காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ஹெக்டேவார், குருஜி...)

* அடுத்து சமூக மம்போ ஜம்போ ("ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. யாரும் குடும்பத்துக்கு ஒன்றிரண்டு பிள்ளைகள் போதும் என்பதைக் கேட்காதீர்கள். ஹிந்துக் குடும்பம் ஒவ்வொன்றும் மூன்றுக்கும் அதிகமாக பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், சமீபத்தில் பெண்கள் மட்டும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் இதைத்தான் நான் அவர்களுக்குச் சொன்னேன்." (அரங்கம் முழுவதும் கைதட்டல்))

* எதையெடுத்தாலும் மேல்நாட்டு சதி என்றார். காஞ்சி சங்கராச்சாரியா மீதான பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே அந்நிய நாட்டு சதி. ஆங்கிலப் பத்திரிகைகள் RSS பற்றி மோசமாக எழுதுவதற்குக் காரணம் - அவர்களுக்கு அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் பணம் கொடுக்கின்றன. தெஹெல்காவில் வந்திருந்த அமெரிக்க கிறித்துவ மத போதகர்களின் ஜோஷுவா-1, ஜோஷுவா-2 திட்டங்களைப் பற்றி தீவிர விளக்கம் கொடுத்தார். முஸ்லிம்களை விட கிறித்துவர்களையே அதிகம் திட்டினார். ஜார்ஜ் புஷ் குடிகாரனாக இருந்தவரை மதபோதகர் பில்லி கிரஹாம் காப்பாற்றியதால் இன்று born again christian புஷ் அமெரிக்க கிறித்தவ மத போதகர்களுக்கு $80 பில்லியன் வரி விலக்கும், $2 பில்லியன் மான்யமும் அளித்திருப்பதாகச் சொன்னார். CIA ஆதரவுடன் அவர்களும் இந்தியாவை மதம் மாற்றப்போவதாக தெஹெல்காவில் வந்த கட்டுரையை அப்படியே வரி விடாமல் ஒப்பித்தார். போப்பையும் விட்டுவைக்கவில்லை.

* பாஜக மீதும் குற்றச்சாட்டு. இப்பொழுது மீண்டும் சரியான பாதைக்கு வருவதைப் போலத் தோன்றுகிறது என்றார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த இல.கணேசன் போன்ற பாஜக பெரியவர்கள் தம் இருக்கைகளில் நெளிந்தார்களா என்று தெரியவில்லை.

பெண்கள் மீதான gratuitous comments அதிகமாக இல்லை. ஒரே இடம்... புத்த மதம் ஏன் அழிந்தது என்றால் அவர்கள் பெண்களையும் பிக்குணிகளாக சேர்த்துக்கொண்டதுதான்... என்பது மட்டுமே. சிலர் ஷங்கரரை "பிரச்சன்ன பவுத்தர்" என்றார்கள் என்றார். அது உண்மை. ஆனால் அது அவரை கேவலப்படுத்துவதற்காக சொன்னது, பெருமைப்படுத்த அன்று.)

தவிர்த்து தனியாகப் பார்க்கும்போது அவர் சொன்ன "ஜனக மஹாராஜா - அஷ்டாவக்ரன்" பற்றிய கதை நன்றாக இருந்தது.

இந்தக் கூட்டம் எனக்கு திகிலூட்டக் கூடியதாக இருந்ததற்குக் காரணம் - இந்தியாவில் RSS-ல் உள்ள பலரும் இவற்றை அப்படியே நம்புவதுதான். இப்பொழுது மொத்தமாக இந்தியா முழுவதும் 50,000 ஷாகாக்கள் உள்ளனவாம்.

Friday, February 18, 2005

WTO, globalization, subsidy, patents, pharma - 1

சென்ற வாரம் சனிக்கிழமை (14 பிப்ரவரி) சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய ஒருநாள் கருத்தரங்கில் சிறிது நேரம் செலவு செய்தேன். அன்று மாலைதான் அசோகமித்திரன்-50 விழா. அதனால் நிறைய நேரம் அங்கு இருக்க முடியவில்லை.

பேரா.குமாரசாமிபேரா.குமாரசாமி என்பவர் உலக வர்த்தக நிறுவனம் பற்றி மிக நன்றாகப் பேசினார். உலக வர்த்தக நிறுவனம் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், பல்வேறு சிறுசிறு தகவல்கள் நான் இதுவரை கேட்டறியாதவை. கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் பேசியிருப்பார். அவர் பேசியதிலிருந்து சிறிது சிறிதாக இங்கு (பல மாற்றங்களையும் செய்திருக்கிறேன்) தருகிறேன்.

உலகமயம், தாராளமயம் என்றால் என்ன?

ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் தொழில், விவசாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது விதிக்கும் வரியே tariff அல்லது இறக்குமதி வரி. உதாரணத்துக்கு இந்தியாவில் உருவாக்கப்படும் சிமெண்ட் ஒரு மூட்டைக்கு ரூ. 100 என்று வைத்துக்கொள்வோம். ஜெர்மனியில் தயாரிக்கப்படும் சிமெண்ட் மூட்டைக்கு ரூ. 75தான் ஆகிறது (இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் போக்குவரத்துச் செலவுகளையும் சேர்த்து...). தரத்திலும் ஜெர்மன் சிமெண்ட் இந்திய சிமெண்டை விட உயர்வு என்றே வைத்துக்கொள்வோம். இந்திய அரசு இறக்குமதி வரியை விதிக்காவிட்டால் என்ன ஆகும்? இந்திய நுகர்வோர் அனைவரும் தரம் அதிகமான, விலை குறைவான ஜெர்மன் சிமெண்டை மட்டுமே வாங்குவர். இந்திய சிமெண்ட் ஆலைகள் உற்பத்தித் திறனை இழந்து, நசிந்து போகும். தொழிலாளர்கள் வேலையின்றித் திண்டாடுவர்...

ஏன் ஜெர்மன் தொழிற்சாலைகளால் குறைந்த காசுக்கே சிமெண்டை உருவாக்க முடிகிறது? பல காரணங்கள் உண்டு: அதிக அளவு மூலதனம், சமீபத்தைய உயர்ந்த தொழில்நுட்பம், பிரம்மாண்டமான உற்பத்தித் திறன், அதனால் ஏற்படும் economies of scale... அதாவது எக்கச்சக்கமாக உற்பத்தி செய்வதால் ஒரு மூட்டைக்கு குறைந்த செலவாகிறது. இதுபோன்று பல காரணங்கள்.

இந்நிலையில் இந்திய அரசு என்ன செய்யும்? ஜெர்மன் சிமெண்டை அப்படியே உள்ளே விட்டால் இந்திய சிமெண்ட் துறை முற்றிலுமாக ஒழிந்துபோகும் என்பதால் ஜெர்மன் சிமெண்ட் மீது டாரிஃப் விதிப்பார்கள். ஒரு மூட்டைக்கு ரூ. 40 என்று வைப்போம். இப்பொழுது இந்தியாவில் ஜெர்மன் சிமெண்ட் ரூ. 115க்கும் (ரூ. 75 + ரூ. 40), இந்திய சிமெண்ட் ரூ. 100க்கும் கிடைக்கும். விலை குறைவு காரணமாக இந்திய சிமெண்ட் விலைபோகும்.

இப்படிச் செய்வது இந்திய நுகர்வோருக்கு எதிரானதாக இருந்தாலும், நீண்ட காலத் தொலைநோக்குப் பார்வையில் இது சரியான செயல்தான். ஆனால் நாளடைவில் இந்த டாரிஃப் குறைக்கப்படலாம், அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படலாம் என்றும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இந்திய சிமெண்ட் துறை உலக அளவுக்கு முன்னேற வேண்டும், உலகத் தரத்தில் உள்ள சிமெண்டை பிற நாடுகளில் கிடைக்கும் குறைந்த விலைக்கே தந்தாக வேண்டும் என்றும் ஓர் அரசு எதிர்பார்ப்பதில் தவறில்லை.

இவ்வாறு ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் தொழில்கள் நசியாமல் இருக்க டாரிஃப் முறையை அமல்படுத்தியுள்ளனர். 1948-ல் இருபத்தி ஐந்து நாடுகள் ஒன்று சேர்ந்து GATT என்ற அமைப்பை உருவாக்கின. GATT என்பது General Agreement on Tariff and Trade. இந்த அமைப்பில் அமெரிக்க, பல ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுடன், அப்பொழுதுதான் விடுதலை பெற்றிருந்த இந்தியாவும் அடக்கம்.

டாரிஃப் என்பது வெளிப்படையாக விதிக்கப்படும் ஒரு வரி. ஆனால் இதைப்போலவே ஒரு நாட்டின் தொழிலைப் பாதுகாக்க வேறு சில முறைகளும் புழக்கத்தில் உள்ளன. அதில் ஒன்றுதான் கோட்டா அல்லது ஒதுக்கீடு. அதாவது ஒரு நாட்டிலிருந்து இந்த அளவுக்குத்தான் பருத்தி ஆடைகள் இறக்குமதி செய்யப்படலாம் என்று முன்னதாகவே ஒவ்வொரு நாடும் முடிவு செய்துகொண்டு அதன்படி நடக்கும். இதன்படி (உதாரணத்துக்கு - உண்மை நிலவரமில்லை) இந்தியா, பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளும் பருத்தி ஆடைகளை ஏற்றுமதி செய்யக்கூடியனவாக இருந்தாலும் அமெரிக்கா இந்தியாவிடமிருந்து $100 மில்லியனுக்கு மேல் வாங்காது. அதே போல பங்களாதேஷிடமிருந்து $75 மில்லியனுக்கு மேல் வாங்காது. மற்றொரு முறை - உரிமம் பெற்றவர்களிடமிருந்துதான் இறக்குமதியை அனுமதிப்பது. இந்த உரிமம் வழங்குவதை சரியாகக் கையாளுவதன் மூலம் ஒரு நாட்டின் அரசு தாராள வர்த்தகத்தைத் தடுக்கும். உதாரணத்துக்கு இந்தியா தன் நாட்டுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்ய வேண்டுமானால் தன்னிடம் முன் உரிமம் வாங்கியிருப்பவர்களால் மட்டும்தான் செய்யமுடியும் என்று தீர்மானிக்கலாம். அதன்பின் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு உரிமம் தராமல் கொரியா உற்பத்தியாளர்களுக்கு மட்டும் தரலாம். அல்லது இன்னொரு நாட்டுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்படி நடக்கலாம். உதாரணத்துக்கு கொரியா இந்தியாவிலிருந்து வாழைப்பழங்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கிறது என்றால், அதற்கு பதிலாக கொரியாவிலிருந்து செல்பேசிகளை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி தருவது.

இப்படிப்பட்ட டாரிஃப், டாரிஃப் அல்லாத தடைகள் (மேலே சொன்னவை) ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி, பின் முற்றிலுமாக ஒழித்து, நாடுகளுக்கு இடையே தாராளமான தடையில்லா வர்த்தகம் (free trade) நடத்த ஏற்பாடு செய்வதுதான் GATT அமைப்பின் குறிக்கோள்.

இதற்கென GATT அமைப்பின் அமைச்சர்கள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். (Round of talks என்று சொல்வார்கள்.)

இந்தத் தடையில்லா வர்த்தகம் பற்றி இருவேறு எண்ணங்கள் உண்டு. அது நீங்கள் வளர்ந்த நாட்டைச் சேர்ந்தவரா, அல்லது வளரும் நாட்டைச் சேர்ந்தவரா என்பதைப் பொறுத்தது. வளர்ந்த நாடு, தன் நாட்டின் வியாபார நிறுவனங்களுக்கு பரந்த சந்தையை எதிர்பார்க்கிறது. வளர்ந்த நாடுகளில் மக்கள்தொகை அப்படியே உள்ளது, அல்லது குறைய ஆரம்பித்து விட்டது. ஆனால் உற்பத்தித் திறனோ அதிக அளவில் உள்ளது. கையில் தேவையான அளவு மூலதனமும் உள்ளது. தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் உள்ளனர். இந்தக் காரணங்களால் குறைந்த விலையில் அதிகமான பொருள்களை உற்பத்தி செய்ய முடிகிறது. எனவே இந்தப் பொருள்களுக்கான சந்தையாக வளரும் நாடுகளை எதிர்பார்க்கிறார்கள். வளரும் நாடுகளில் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ளது.

வளரும் நாடுகளோ, தங்களது சந்தையைக் காக்க முயற்சி செய்கின்றனர். மூலதனம் குறைவு, நுட்பத்தேர்ச்சித் திறன் குறைவு ஆகிய காரணங்களால் எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து வாங்கிவிட்டால் நாளை உள்நாட்டில் உற்பத்தித் திறனே இல்லாது அழிந்துபோய்விடும். எனவே வளரும் நாடுகள் எப்பொழுதுமே தமது சந்தையை வெளியாருக்குக் கொடுப்பதை தயக்கத்துடனேயே செய்கிறார்கள்.

வளர்ந்த நாடுகள் - முக்கியமாக அமெரிக்கா - வளரும் நாடுகளை பலமுறை மிரட்டியே சந்தைகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள். மிகச்சிறிய நாடாக இருந்தால் மிரட்டினால் செல்லுபடியாகும். உதாரணத்துக்கு ஓர் ஏழை நாடு - ஆப்பிரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அங்கு பணக்கஷ்டம். அந்த நாட்டுக்கு பண உதவி செய்வதாகவும், அதற்கு பதிலாக அவர்கள் தன் நாட்டின் வர்த்தகத்தில் அமெரிக்க கம்பெனிகளுக்கு தங்கு தடையின்றி அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வற்புறுத்துகிறது. அந்த ஆப்பிரிக்க நாடும் ஏற்றுக்கொள்கிறது. அவ்வளவுதான். சில வருடங்களில் அந்த ஆப்பிரிக்க நாட்டின் எல்லாப் பொருள்களும் - உடுக்கும் உடை, குழந்தைகளுக்குக் கொடுக்கும் பால் பவுடர், பூசிக்கொள்ளும் நகச்சாயம், போட்டுக்கொள்ளும் டயாபடீஸ் ஊசி - என்று எல்லாமே அமெரிக்காவிலிருந்து வந்தது என்றாகி விடுகிறது. ஏனெனில் உள்ளூர் கம்பெனிகளால் போட்டியிட முடியவில்லை.

நாளை டாலர் சர்ரென்று ஏறுகிறது. எதையுமே ஆப்பிரிக்க நாட்டில் உள்ளவர்களால் வாங்க முடியவில்லை. உடனே இந்த ஏழை நாட்டில் லாபம் வராதென்று அமெரிக்க நிறுவனங்கள் கடையைக் கட்டி, வேறு ஒரு நாட்டை நோக்கிச் செல்கிறார்கள். விளைவு? பால் பவுடர், நகச்சாயம், மருந்துகள் என்று எதுவுமே கிடையாது. உள்ளூர் உற்பத்தி மொத்தமாக அழிந்து விட்டது.

எனவே வளரும் நாடுகள் தன்னிறைவு அடைவது, தம் சந்தையைப் பாதுகாப்பது என்று பேசுவது நியாயம்தானே? ஆனால் வளர்ந்த நாடுகளுக்கு இது கோபத்தை வரவ்ழைக்கிறது. இடையில் உள்ள நாடுகளுக்கு?

இடையில் என்றால் சில துறைகளில் நல்ல வளர்ச்சி, சில துறைகளில் படுமோசம். இந்தியாவை எடுத்துக்கொள்வோம். தடையற்ற வர்த்தகம் என்று சில இடங்களில் பேசியாக வேண்டும். இந்தியாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து கிடைக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள் வேண்டும். ஆனால் பல இடங்களில் - முக்கியமாக விவசாயத்தில் - தடைகள் தேவை. இல்லாவிட்டால் இந்திய விவசாயத் துறையின் பாடு திண்டாட்டம். எனவே இந்தியாவின் நிலை (சீனாவின் நிலையும்) சற்றே மாறுபட்டது. சில இடங்களில் தடை வேண்டும். சில இடங்களில் தடை கூடாது. அமெரிக்காவின் நிலையோ வேறு மாதிரியானதாக இருக்கும். எங்கெல்லாம் இந்தியா தடையை எதிர்பார்க்கிறதோ அந்த இடங்கள் அமெரிக்காவுக்கு ஏற்புடையதாக இருக்காது. சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா தன் நாட்டுக்கு தாய்லாந்து, இந்தியா ஆகிய இடங்களிலிருந்து வரும் இறால் இறக்குமதியின் மீது டாரிஃப் விதித்தது. அதற்குக் காரணம் அமெரிக்காவின் இறால் பிடிக்கும் மீனவர்கள் கொடுத்த புகார்தான். அதற்கு சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க இரும்பு கம்பெனிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இரும்பு எஃகு மீது இறக்குமதி வரி விதித்தது.

அமெரிக்கா ஒன்றும் முற்றுமுழுதான தாராள, தடையற்ற வர்த்தகத்தைப் பேணுவதில்லை. தன் நாட்டு நிறுவனங்களுக்கு ஏதேனும் தொல்லை என்றால் உடனடியாக அவற்றைக் காக்கும் விதமாக வரி விதிப்பதில் அமெரிக்கா சிறிதும் அஞ்சுவதில்லை. சொல்லப்போனால் அமெரிக்க சட்டங்களும் WTO விதிமுறைகளும் ஒத்துப்போகாவிட்டால் அமெரிக்க சட்டங்களே பொருந்தும் என்று அமெரிக்கா ஒரு சட்டமே இயற்றியுள்ளது! ஆனால் WTO பிற நாடுகள் இவ்வாறு செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறது.

ஆகா... நாம் WTO எங்கிருந்து வந்தது என்று பார்க்கவில்லையே? அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Wednesday, February 16, 2005

பாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது

கன்னடத்தில் எஸ்.எல்.பைரப்பா எழுதிய 'பர்வா' என்ற நூலை தமிழில் 'பருவம்' என்று மொழிமாற்றியதற்கு பாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது கிடைத்துள்ளது. [பிற விருதுகள் பட்டியல்]

பாவண்ணன் பெங்களூரில் வசிப்பவர். இணையத்தில், திண்ணையில் பாவண்ணனின் கட்டுரைகள் (முக்கியமாக "எனக்குப் பிடித்த கதைகள்" வரிசை என்னை மிகவும் கவர்ந்தது) பலவும் கிடைக்கின்றன. பொறுமையாக உட்கார்ந்து படியுங்கள்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்த போது கேட்டது: "சார், நீங்க கன்னடத்துலயும் எழுதுவீங்களா?". இல்லை என்றார். எழுதுவது தமிழில் மட்டும்தானாம்.

பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அம்மாநிலத்தின் மொழியை எந்த அளவு கற்கிறார்கள் என்று தெரியவில்லை. இரா.முருகன், சுகுமாரன் ஆகியோர் மலையாள இலக்கியங்கள், சினிமாக்கள், நிகழ்வுகள் பற்றி அவ்வப்போது கதைக்கிறார்கள். பாவண்ணன் ஒருவர் மட்டும்தான் கன்னட இலக்கியங்களைப் பற்றிப் பேசுகிறார். (இதெல்லாம் இணையத்தில். அச்சுப் பத்திரிகைகளில் ஒருவேளை பலரும் இதைச் செய்யலாம். ஆனால் எனக்குக் காணக் கிடைப்பதில்லை.) ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார் என்று அவரது சிறுகதை/குறுநாவல் தொகுப்புகளில் போட்டிருந்தது. ஆனால் அவர் இணையத்தில் காணப்படும் தனது எழுத்துகளில் அதிகமாக மலையாளப் படைப்புலகத்தைப் பற்றியோ, சினிமாக்களைப் பற்றியோ எழுதுவது கிடையாது.

தெலுங்கு நிகழ்வுகளைப் பற்றி யாருமே எழுதுவது கிடையாது. ஹைதராபாதில் வசிக்கும், இலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் யாருமே இல்லையா? ஹிந்தி, மராத்தி, இன்ன பிற மொழிகள்? பெங்காலி? நிச்சயம் கொல்கொத்தாவில் இலக்கிய ஆர்வமுள்ள பல தமிழர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒரு தமிழராவது தமிழில் ஒரு வலைப்பதிவு அமைத்து தத்தம் மாநில மொழிகளில் என்ன நடக்கிறது - எழுத்தில், சினிமாவில் - என்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

மூன்று மொழிகள் (ஆங்கிலம் சேர்த்து) அறிந்தவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள். ஆச்சரியப்பட வைப்பவர்கள். அதிலும் நன்கு எழுதப் படிக்கக் கூடியவர்கள் பொறாமைப்பட வைப்பவர்கள்.

Tuesday, February 15, 2005

பாலசந்தரின் சிந்துபைரவி

சிந்துபைரவிநேற்று கோவை P.S.G கலை, அறிவியல் கல்லூரியில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இயக்குனர் பாலசந்தரின் சிந்துபைரவி படத்தின் திரைக்கதை புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.

பாலசந்தரின் கவிதாலயா நிறுவனமும், P.S.G கலை, அறிவியல் கல்லூரியும் செய்துகொண்ட ஓர் industry-institution initiative ஒப்பந்தம் காரணமாக அக்கல்லூரியில் ஒரு ஸ்டுடியோ, ரூ. 2 கோடி அளவில் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் Mass Communication, Visual Communication, Electronic Communication மாணவர்கள் இந்த ஸ்டுடியோவைப் பயன்படுத்தி படங்களை இயக்கலாம், post-production வேலைகளைச் செய்யலாம். கவிதாலயா நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கும். அதனைத் தொடர்ந்து 14-16 பிப்ரவரி 2005-ல் P.S.G கல்லூரியில் பாலசந்தரது படங்கள் காண்பிக்கப்படும் திரை விழாவும், சிந்துபைரவி திரைக்கதை வெளியிடல் விழாவும், பாலசந்தருடனும், பிற சினிமா கலைஞர்களுடனும் மாணவர்கள் நேருக்கு நேர் கலந்து பேசவும், கருத்தரங்குகளும் ஏற்பாடி செய்யப்பட்டிருந்தன. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சுதாங்கன் ஆகியோர் பாலசந்தர் படங்கள் பற்றி (இன்று) ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்கின்றனராம்.

கே.பாலசந்தர்நான் நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். வைரமுத்து வெளியிட, விவேக் பெற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட 400 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். பாலசந்தர் மூன்று நாள்கள் கோவையிலேதான் இருக்கிறார். இன்று மாலை 7.00-9.00 மணிக்கு விஜயா பதிப்பகம் புத்தகக் கடையில் சிந்துபைரவி புத்தகம் வாங்குபவர்களுக்கு கையெழுத்திட்டுத் தருகிறார்.

இயக்குனர் வஸந்த், விவேக், வைரமுத்து ஆகியோர் பாலசந்தர் பற்றிப் பேசினர். வஸந்த் தான் பாலசந்தரிடம் துணை இயக்குனராகச் சேர்ந்தது முதற்கொண்டு, அவரிடம் கற்றுக்கொண்டவற்றைப் பற்றிப் பேசினார். பாலசந்தர் முத்திரை பற்றியும், எப்படி சில விஷயங்களை அற்புதமாக படங்களில் கையாண்டிருக்கிறார் என்பதற்கு நிறைய உதாரணங்களைக் கொடுத்தார். அவர் எழுதிவைத்திருந்ததை வாங்கி பின்னர் இங்கே போடுகிறேன்.

விவேக், வஸந்த்விவேக் பேசத் தொடங்கியதும் சிரிப்பலை பரவியது. விவேக் தன் பேச்சுக்களுக்கு நிறையவே உழைக்கிறார் என்று தெரிய வந்தது. ஒரு நோட்டுப்புத்தகத்தில் நிறைய எழுதிக்கொண்டு வந்திருந்தார். விவேக்கும் பாலசந்தரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவராம். பேச்சு நடந்த நேரத்தில் நிறையவே சிரித்தேன். ஆனால் இப்பொழுது ஞாபகத்தில் எதுவுமில்லை. கே.பி என்ற இனிஷியல்களை வைத்து நிறைய வார்த்தை விளையாட்டுகளை விளையாடினார். சில எடுத்துக்காட்டுகள்:

காவாசாகி பஜாஜ் (K.B) விளம்பரம் ஒன்றில் ஒரு பைக் சிறுத்தையாக மாறுவது போல நம்ம கே.பி படமெடுக்கறப்ப சிறுத்தையா மாறிடுவார்.

ரஜினியையும், கமலையும் சேர்த்து இனிமேல் நடிக்க வைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. இந்தக் கொம்பனால் மட்டும்தான் முடிந்தது - அதுதான் கொம்பன் பாலசந்தர் - கே.பி

நடுநடுவே காதலர் தினத்தை வைத்துக்கொண்டு கல்லூரி மாணவர்களை நிறையவே கலாய்த்தார். பசங்களை வேண்டும்போதெல்லாம் கைதட்ட வைத்தார், விசிலடிக்க வைத்தார்.

வைரமுத்துவைரமுத்து சிம்மக்குரலில் பேசத்தொடங்கினார். எப்படி தன் பாடல்கள் பாலசந்தர் போன்றவரது படங்களுக்கென்றால் எப்பொழுதும் இருப்பதைவிட சிறப்பாக வருகிறது என்றார். இதையே கவிஞர் கண்ணதாசனும் கூடச் சொல்லியிருப்பதாகச் சொன்னார். பாலசந்தர் தன் சில பாடல்களில் சில மாற்றங்களைச் சொன்னதனால் சிறப்பு கூடியது என்பதை (ஏதோ ஒரு பாடலில்) "வெக்கத்தால் செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு" என்ற வரிகளை உதாரணம் காட்டிச் சொன்னார். முதலில் எழுதியது "செவ்வந்திப் பூவு செவப்பாச்சு" என்ற வரிகளாம். பாலசந்தர் இந்த வரிகளில் வைரமுத்து என்ன சொல்ல வருகிறார் என்று கேட்க, வைரமுத்து அதற்கு "வெட்கப் படுவதால் இந்தப் பெண் உடல் சிவப்பாகிறது" என்று சொல்ல, பாலசந்தர் ஒரு 'ம்'ஐச் சேர்க்க முடியுமா என்று கேட்டாராம். அந்த 'ம்'ஐப் 'பூவு'க்குப் பக்கத்தில் சேர்த்ததால் "செவ்வந்திப் பூவும்" என்று அவள் உடல் சிவக்கும்போது தலையில் வைத்திருந்த மஞ்சள் நிற செவ்வந்திப் பூவும், சிவந்து காணப்பட்டது என்ற பொருள் வந்ததாம். (படம் 'அச்சமில்லை, அச்சமில்லை' என்று நினைக்கிறேன்.) ... சினிமா எனக்கு அப்பாற்பட்டது, அதனால் இந்த விளக்கம் கொஞ்சம் என் தலைக்கு மேல் போய்விட்டது. (நான் சொன்ன வரிகளில் தவறும் இருக்கலாம்.)

தான் எழுதிய பாடல்களில் மூன்று பாடல்களைத்தான் தான் முழுவதும் விரும்பியமாதிரி இயக்குனர்கள் படமாக ஆக்கியுள்ளார்கள் என்று ஒரு பட்டியல் கொடுத்தார். அவையாவன:

படம்: அலைகள் ஓய்வதில்லை, இயக்குனர்: பாரதி ராஜா, பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
படம்: பம்பாய், இயக்குனர்: மணிரத்னம், பாடல்: உயிரே
படம்: புன்னகை மன்னன், இயக்குனர்: பாலசந்தர், பாடல்: என்ன சத்தம் இந்த நேரம்

பிறகு "என்ன சத்தம் இந்த நேரம்" பாடலைப் படமாக்கியதைப் பற்றி வியந்து பேசினார்.

மூடநம்பிக்கைகள் மிகுந்திருந்த சினிமா உலகத்தில் படமெடுப்பவர்கள் தனது முதல் படத்தில் "மீண்டும் வெற்றி", "நான் வெல்வேன்", "திருமால் பெருமை" போன்று படங்களுக்குப் பெயர் வைத்தது போலல்லாமல் தனது முதல் படத்துக்கு தைரியமாக "நீர்க்குமிழி" என்று பெயர் வைத்தவர் என்று பாராட்டினார்.

மிகவும் நேரமாகிவிட்டதால் மேடையிலிருந்து எஸ்கேப் ஆக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் இரவு சேரன் எக்ஸ்பிரஸைப் பிடிக்க முடியாது.

கடைசியாகப் பேசிய பாலசந்தர், தான் இதுவரை எடுத்துள்ள 100 சொச்சம் படங்களை விட, சிந்துபைரவி திரைக்கதை நூலாக வருவதில் எக்கச்சக்கப் பெருமைப் படுவதாக சொன்னாராம். அவருக்கு இது முதல் புத்தகம். இனி, மேலும் பலவும் வரும்.

அசோகமித்திரன் - 50

சனிக்கிழமை (12/2/2005) அன்று அசோகமித்திரனின் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியைப் பாராட்டி ஒரு விழா நடந்தது.

இதுபோன்று ஒரு விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது பிரபஞ்சன், கவிதா, முரளிதரன் ஆகியோர். கடவு இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். முரளிதரன் இந்திய டுடே தமிழ் இதழில் வேலை செய்பவர். அவர் பேட்டியெடுத்த போதுதான் அசோகமித்திரனிடம் "உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளதா" என்று கேட்டிருக்கிறார். அதைப்பற்றி நேற்று பேசும்போது அசோகமித்திரன் தான் உண்மையிலேயே ஓர் அங்கீகாரத்தைத் தேடி ஆதங்கமாக எதையும் குறிப்பிடவில்லை என்றும் அவற்றைத் தான் விரும்புபவனில்லை என்றும் குறிப்பிட்டார்.

பிரபஞ்சன்பிரபஞ்சன் ஆரம்பித்து வைத்த காரியத்தை நிறைவாக முடித்த திருப்தி நிச்சயம் எங்களுக்கு உண்டு. கிட்டத்தட்ட நிகழ்ச்சியில் யார் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்பது கடவு இலக்கிய அமைப்பின் மூலம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. சுந்தர ராமசாமி, ஆ.இரா.வேங்கடாசலபதி, ஞானக்கூத்தன், பால் சக்கரியா ஆகியோர் கலந்துகொள்வதைப் பற்றியும் முன்னரே முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

தமிழ் இலக்கியச்சூழலில் யார் மனதையும் புண்படுத்தாத வண்ணம் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தோம். அனைவருக்கும் அனுப்பினோம். அல்லது அப்படி நடந்ததாகவே நினைத்தும் கொண்டோம். ஆனால் கடைசிவரை பலருக்கு அழைப்பிதழ் சென்றே சேரவில்லை என்பது புரிந்தது. கடந்த சில தினங்களாக யாரிடமிருந்தாவது தொலைபேசி அழைப்பு வந்தால் அது பொதுவாக "எனக்கு இன்னமும் அழைப்பிதழ் வந்து சேரவில்லையே" என்பது பற்றித்தான். அதைத் தொடர்ந்து யாரிடமிருந்தாவது தொலைபேசி அழைப்பு வந்தவுடனே நாங்களே கேட்கும் முதல் கேள்வியும் "என்ன சார், அழைப்பிதழ் வந்ததா" என்பதுமாகத்தான்.

அசோகமித்திரன் என்ற கலைஞனுக்கு ஒரு வாழ்த்து நிகழ்ச்சி நடக்கையில் "அழைப்பிதழாவது, மண்ணாவது, அந்தக் கலைஞன் எனக்கும் சொந்தம், அவரது எழுத்து என்னையும் பாதித்துள்ளது, நீ கூப்பிடா விட்டாலும் நான் வருவேன்" என்று பலர் வந்து கலந்து கொண்டனர். ஃபில்ம் சேம்பர் ஆடிட்டோரியம் நிறைந்து இருந்தது.

பெரிய திரையில் அம்ஷன் குமாரின் அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஆவணப்படத்தில் சா.கந்தசாமி அசோகமித்திரனின் கதைகளில் தஞ்சாவூர் மண்ணின் மணம் பற்றிப் பேசும்போது திடீரென்று ஒலிச்சத்தம் நின்றுபோனது. அலறியடித்துக்கொண்டு வீடியோ இணைப்பையும் ஸ்பீக்கரையும் தட்டிக் கொட்ட, இரண்டு நிமிடங்களில் ஆடியோ மீண்டும் வந்து தர்மசங்கடத்தைத் தவிர்த்தது.

எஸ்.வைதீஸ்வரன்பில்ம் சேம்பர் ஆடிட்டோரியத்தில் மேடையில் போட நாற்காலிகள் கிடையாது. நாம்தான் வெளியிலிருந்து கொண்டுவர வேண்டுமாம்! (வேறு யாராவது இங்கு நிகழ்ச்சி ஏதேனும் நடத்த முனைந்தால் இதை மனதில் வைத்திருக்கவும்!). எங்கள் அலுவலகத்தில் வைத்திருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் சரியாக ஏழு. மீதம் உள்ளவை கணினி முன் அமர ஏதுவான சக்கரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இருக்கைகள். மேடையில் அமர வேண்டியவர்கள் ஏழு பேர். நல்ல வேளை. நிகழ்ச்சி தொடங்குமுன் நாற்காலிகளைக் கொண்டுவந்து விட்டோம். இந்த நாற்காலிகள் மேடையில் அமர்வதற்கு மிகவும் வசதியான இருக்கைகள் அல்ல. வந்திருந்த அனைவரும் பொறுமையாக அமர்ந்திருந்தனர். அவர்களிடம் இதற்கென தனியாக மன்னிப்பு கேட்க வேண்டும்!

நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவனாதலால், எப்பொழுதும்போல அரைக் கால்சட்டை அணிந்திருப்பதை விடுத்து முழுக் கால்சட்டை அணிந்திருந்தேன்.

ஆவணப்படம் முடிந்தவுடன் டீ, காபி, சமோசாவுக்கென ஒரு சிறு இடைவேளை விடலாம் என்று நினைத்திருக்க, விருந்தினர்கள் அதற்குள்ளாக மேடையேறி விட்டனர். அதனால் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் வெளியே செல்ல விரும்பாமல் சற்று தயக்கத்துடன் உள்ளேயே உட்கார்ந்திருந்தனர். சிறிது தூண்டுதலுக்குப் பிறகு வெளியே வந்து ருசிபார்த்தனர். சாதாரணமாக இலக்கியக் கூட்டங்களில் வழங்கும் நீர்த்துப்போன காப்பி அல்ல:-) பிரமாதமான காப்பி. (டீயை நான் ருசி பார்க்கவில்லை). சமோசாவும் மிக நன்றாக இருந்தது என்றுதான் நினைக்கிறேன்.

எஸ்.வைதீஸ்வரன் கூடியிருந்தவர்களை வரவேற்றார். அத்துடன் அசோகமித்திரனுடனான தன் நட்பு, அவரது எழுத்துகள் பற்றிய தன் எண்ணங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார். அடுத்து பிரபஞ்சன் மிகச் சுருக்கமான தலைமையுரை ஆற்றி, பேச வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளர்களைப் பேச அழைத்தார்.

சுந்தர ராமசாமிமுதலில் சுந்தர ராமசாமி. நீண்ட தன் பேச்சில் பல இடங்களில் அரங்கமெங்கும் சிரிப்பலைகளைப் பரவ விட்டார். அசோகமித்திரனின் எழுத்துகளை ஏன் திராவிட இயக்கத்தினரும், முற்போக்கு எழுத்தாளர்களான இடதுசாரி எழுத்தாளர்களும் புறக்கணிக்கின்றனர் என்று கேட்டார். திராவிட இயக்கத்தவரது புறக்கணிப்பையாவது புரிந்து கொள்ளலாம் - அதற்கு இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஏன் இடதுசாரிகள் புறக்கணிக்கின்றனர் என்பது தனக்கு விளங்கவில்லை என்றார். "அசோகமித்திரனின் எழுத்துகளில் மனிதநேயம், மனிதன் இந்த சமூகத்தில் இடைவிடாது படும் துக்கம் ஆகியவை இழைந்தோடுவதைப் பற்றிப் பேசினார். அசோகமித்திரனின் எழுத்துகளில் வன்முறை என்பது அறவே இருக்காது. ஒரு கத்தி கூட வந்தது கிடையாது. ஓரிடத்தில் அருவாள் மனை வருகிறது - காய்கறி நறுக்க. மற்றோரிடத்தில் கத்தரிக்கோல் வருகிறது - துணி வெட்ட. அவ்வளவுதான்." என்றார்

அசோகமித்திரனின் நடை பற்றியும் எழுத்துகளில் ஒளிந்திருக்கும் craft பற்றியும் சற்று விளக்கினார். உரத்துப் பேசாத, அலங்கார ஆடம்பரங்கள் இல்லாத நடை. திரைச்சீலையை சற்றே - வெகு சற்றே - விலக்கி, சீலைக்குப் பின்னால் இருப்பவர்கள் நடைமுறையை சிறிதும் பாதிக்காத வகையில் பார்த்து, அதை வார்த்தைகளில் வடிப்பதில் சமர்த்தர் என்றார். வரிக்கு வரி கேள்விகள் கேட்கும், அதன்மூலம் பல்வேறு சாத்தியங்களை வெளிக்கொணரும் அசோகமித்திரனின் நடையை சுந்தர ராமசாமி அப்படியே ஒரு உதாரணத்தை முன்வைத்து பேசிக்காட்டினார்.

ஆ.இரா.வேங்கடாசலபதிசிலருக்கு சுந்தர ராமசாமி பேசியது தவறாகக் கூடத் தோன்றியது (பார்க்க: பிரகாஷின் பதிவு) என்று கேள்விப்பட்டேன். சிலர் உடனேயே நிறுத்தியிருக்கலாம், இவ்வளவு தூரம் இழுத்தடித்திருக்க வேண்டியதில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் அரங்கில் பலர் விழுந்து விழுந்து சிரித்தனர்.

சுந்தர ராமசாமி, நவீனத் தமிழ் எழுத்துகளை பாடமாக வைப்பதாக அரசு யோசித்தால், அந்தத் துறைக்கு சரியான இயக்குனர் அசோகமித்திரனாகத்தான் இருக்க முடியும் என்றும், அனைவரும் அசோகமித்திரனை தவறாமல் படிக்க வேண்டும் என்றும் பேசி முடித்தார்.

வெங்கடாசலபதி பேசும்போது திராவிட இயக்கச் சார்பில் இருந்தாலும் தான் அசோகமித்திரனைப் புறக்கணிக்கவில்லை என்றார். மேலும் அசோகமித்திரன் மிகவும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் என்றும், சில நாள்கள் முன்னர் ராமச்சந்திர குஹாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் இருவரும் தீவிரமாக அசோகமித்திரனின் எழுத்துகளைப் பற்றிப் பேசியதையும், தொடர்ந்து யார் மூலமாக குஹா அசோகமித்திரனைப் பற்றிக் கேள்விப்பட்டார் என்றதற்கு குஹா, ஷ்யாம் பெனகல் மூலம் என்றும் பதில் சொன்னாராம். அசோகமித்திரனின் பாதிப்பு எப்படி அடுத்த தலைமுறைக்கு வந்திருக்கிறது என்று பார்க்கும்போது கிட்டத்தட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருமே தமது முதல் சிறுகதைத் தொகுதிகளுக்கு அசோகமித்திரனிடமிருந்து முன்னுரை வாங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஞானக்கூத்தன்ஞானக்கூத்தன் அசோகமித்திரனின் கட்டுரைகளைப் பற்றிப் பேசினார். படைப்புலகில் புனைவுகளுக்கு எந்த அளவுக்கு அசோகமித்திரன் நேரம் செலுத்தினாரோ, அதே அளவுக்கு பிறர் எழுதியதைப் படிப்பதிலும் செலுத்தினார் என்றார். அசோகமித்திரன் தனது கட்டுரைகளில் கிட்டத்தட்ட 160 தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் எழுதியுள்ளார் என்றும், அதைத் தவிர பிறமொழி எழுத்தாளர்கள் (ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன்) பலரைப் பற்றியும் அவர் எழுதியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொன்னார். அவர் எழுதியதை வைத்துப் பார்க்கையில், அசோகமித்திரன் தோராயமாக 1,50,000 பக்கங்கள் படித்திருக்க வேண்டும் என்று தான் கணக்கிடுவதாக ஞானக்கூத்தன் சொன்னார்.

அசோகமித்திரன் சினிமா பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் பழைய காலம் முதல் ரஜினி-கமல் வரை அசோகமித்திரன் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அதைப்போலவே உலக சினிமாக்கள் பற்றி எண்ணற்ற கட்டுரைகள் எழுதியுள்ளார். பல உலக சினிமாக் கலைஞர்களைப் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் தமிழ் மக்களுக்கு சரியான அறிமுகத்தைக் கொடுத்தவர் அசோகமித்திரன் என்றார்.

நகுலனின் கவிதை (முலை, துவாரம் போன்ற சொற்களைக் கொண்டு அமைத்தது) ஒன்றை விமர்சித்து, அதே கவிதையை, அதே பொருள் அமையுமாறு, மேற்படி சொற்களை விலக்கி அசோகமித்திரன் எழுதியதை விவரித்த ஞானக்கூத்தன் அசோகமித்திரனின் படைப்புலகத்தில் வன்முறை இல்லாததைப் போலவே, காமம் இல்லாததைப் போலவே ஷாக் வேல்யூ சொற்களும் கிடையாது. ஆனால் வலிமையில் சற்றும் குறைந்தது அல்ல என்று முடித்தார்.

பால் சக்கரியாபால் சக்கரியாவின் உரை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. தான் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் அசோகமித்திரனைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரது தண்ணீர் கதையின் ஆங்கில வடிவத்தைப் படித்ததாகவும், ஆங்கில வடிவத்திலேயே கட்டிப்போடும் விதத்தில் அமைந்திருந்த அந்தக் கதை மூல வடிவத்தில் எப்படி இருந்திருக்கும் என்று வியந்து போனதாகவும் குறிப்பிட்டார்.

ராஜஸ்தானில் நீம்ரானா கோட்டையில் நடைபெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் மாநாட்டில் (பிப்ரவரி 2002) கலந்துகொண்டபோது தான் அசோகமித்திரனை முதலில் சந்தித்ததாகவும், இப்படி மெலிந்த தேகம் கொண்ட இவர் இந்த மாநாடு முடியும்வரைக் கூட தாங்குவாரா என்று தான் பயந்துபோனதாகவும் தேவைப்படும்போதெல்லாம் தான் அசோகமித்திரனுக்குக் கைத்தாங்கலாக இருந்து அவரைக் கவனித்துக்கொண்டதாகவும், ஆனால் அசோகமித்திரன் அந்தக் கூட்டத்தில் பேசத்தொடங்கியதும் அதைக் கண்டு தான் பிரமித்துப்போனதாகவும் சொன்னார். "Then I realised.... don't underestimate a frail looking Tamil writer!"

தண்ணீர் ஆங்கிலப் புத்தகத்திலிருந்து தன்னை அசரவைத்த சில வரிகளைப் படித்தார்.

அசோகமித்திரனின் Sand and other stories என்னும் மூன்று குறுநாவல்களின் ஆங்கில மொழியாக்கத்துக்கு பால் சக்கரியா முன்னுரை எழுதியுள்ளார்.

ஏற்புரையில் அசோகமித்திரன் படைப்பு பற்றிய தன் எண்ணங்களைச் சொன்னார். தன் எழுத்துகளில் வன்முறை என்பது துளியும் இல்லை என்பதை சுந்தர ராமசாமி சரியாக அவதானித்துள்ளார் என்றார். அதேபோல ஆண்-பெண் இடையேயான உடலுறவு சார்ந்த எந்த விஷயத்தைப் பற்றியும் தான் எழுதியதில்லை. அதை எழுதத் தோன்றியதில்லை என்றார். தன் எழுத்துகளை பிறர் படிக்க வேண்டும் என்று தான் என்றுமே வற்புறுத்தியதில்லை என்றும் அவ்வாறு பிறரை வற்புறுத்துவது கூட ஒருவகையில் வன்முறைதான் என்றும் சொன்னார். கணையாழி நடத்தியபோது பக்கங்கள் மீதியிருக்கும்போதெல்லாம் அதை நிரப்ப எழுதியவைதான் இப்பொழுது வெளியான கட்டுரைத் தொகுப்புகளில் உள்ளவற்றும் பலவும் என்றார். பத்திரிகை நடத்துபவர்களுக்குத்தான் இது புரியும் என்றார்.

தனக்கு அங்கீகாரம் இல்லை என்றோ, அது தேவை என்றோ, விருதுகள், பட்டங்கள் ஆகியவை வேண்டுமென்றோ தான் என்றுமே ஆசைப்பட்டதில்லை என்றார். இதற்கிடையில் அசோகமித்திரனுடன் ஜெமினி ஸ்டுடியோவில் சமையலறையில் வேலை செய்த மணியன் என்பவர் மேடையேறி பொன்னாடை போர்த்தி, பை நிறைய பட்சணங்கள் கொடுத்தார். விருது தேவையில்லையே தவிர பட்சணங்கள் என்றால் அதை மறுக்க மாட்டேன் என்று சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்!


அசோகமித்திரன், ஜெமினி மெஸ் மணியன், பை நிறைய பட்சணம். பின்னால் நிழல் போல பிரபஞ்சன். பட்சணம் அசோகமித்திரனிடம் பத்திரமாகப் போய்ச்சேர்ந்ததா அல்லது பிரகாஷ் அதை தானே லவட்டிக்கொண்டு சென்றாரா என்பது தெரியவில்லை.

விருட்சம் அழகியசிங்கர் நன்றியுரையுடன் விழா இனிதே முடிந்தது.

அதைத் தொடர்ந்து முக்கியஸ்தர்களை அவரவர் வீடுகளுக்கு, தங்குமிடங்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டியிருந்தது.

இந்த நிகழ்ச்சி முழுதும் (2.5 மணிநேரங்கள்) விடியோ எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு டிவிடிகள் அல்லது மூன்று விசிடிகள். அசோகமித்திரன் கட்டுரைத் தொகுதிகளை வாங்கும் நல்ல மனிதர்களுக்கு இலவசமாக இந்நிகழ்ச்சி விடியோ தரப்படும்;-) அசோகமித்திரன் கட்டுரைத் தொகுதிகளை 10% தள்ளுபடியில் வாங்க காமதேனு.காம். சென்னைக்குள் டெலிவரி சார்ஜஸ் கிடையாது.

Saturday, February 12, 2005

குமுதத்தில் ஜெயமோகன்

அடுத்த வாரம் முதல் குமுதத்தில் ஜெயமோகன் ஒரு தொடர் எழுதவிருப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.

ஏற்கெனவே எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிவரும் கதாவிலாசம் என்னும் தொடர் விகடனில் வந்துகொண்டிருக்கிறது. அதில் இந்த வாரம் அசோகமித்திரன் பற்றி. அசோகமித்திரனின் புகழ்பெற்ற நாவலான கரைந்த நிழல்கள், அற்புதமான சிறுகதையான புலிக்கலைஞன் இரண்டும் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

இந்தத் தொடர் தமிழக எழுத்தாளர்களைப் பற்றியது.

Thursday, February 10, 2005

குட்கா மட்கா

சில மாதங்களாகவே குட்கா சமாச்சாரம் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளது.

குட்கா என்பது பாக்குடன் சில மசாலா சமாச்சாரங்கள் கலந்த தூள். அத்துடன் புகையிலையும் கலந்துள்ளது. போதை வஸ்து. கிட்டத்தட்ட சிகரெட் பிடிப்பவர்களுக்கு அந்த நிகோடின் தேவை எப்படியோ, அதைப்போன்றே குட்கா வஸ்து உபயோகிப்பவர்களுக்கு அதன் தேவை எப்பொழுதும் இருந்தபடியே இருக்கும்.

பான் மசாலா என்றும் அழைக்கப்படும் இந்தப் பொருள்.

பெட்டிக்கடைகளில் முன் பாக்கெட் பாக்கெட்டாக கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்த வஸ்து. இதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருப்பது மாணிக்சந்த் குட்கா.

சில வருடங்களுக்கு முன்னர் பல்வேறு மாநிலங்கள் (தமிழகம், மஹாராஷ்டிரம் போன்றவை) இந்த குட்கா சமாச்சரத்தை தத்தம் மாநிலங்களில் விற்பதைத் தடை செய்தனர். ஆனால் குட்கா கோஷ்டியினர் உச்ச நீதிமன்றம் சென்று இந்தத் தடையை எதிர்த்து வெற்றியும் பெற்றனர். இந்த வழக்கின் தீர்ப்புப்படி உச்ச நீதிமன்றம் குட்காவை ஓர் உணவுப்பொருள் என்றும், உணவுப்பொருளைத் தடை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும், எனவே மாநில அரசுகளால் இந்தப் பொருளின் விற்பனையைத் தடை செய்ய முடியாதென்றும் சொன்னது. அதை ஏற்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழகத்தில் குட்கா விற்பனைத் தடையை நீக்கியது.

இந்தத் தடை அமலில் இருக்கும்போது கூட வெளியே தோரணம் கட்டித் தொங்கவிடாமல் உள்ளுக்குள்ளாக விற்பனை ஜரூராக நடந்த வண்ணமே இருந்தது. காகிதப் பொட்டலத்தில் கட்டி பாக்கெட் பாக்கெட்டாக விற்றுக்கொண்டுதான் இருந்தார்கள். இப்பொழுது தடை உடைந்ததும் மீண்டும் வெளியே விற்பனையாகிறது இந்தப் பொருள். சில கடைகளில் "18 வயது நிரம்பாதவர்களுக்கு புகையிலைப் பொருளை விற்பது குற்றம்" என்று மட்டும் எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுவர்கள் யாரும் இந்த வஸ்துவை உபயோகிப்பது போலத் தெரியவில்லை. உபயோகிப்பவர்கள் அனைவருமே பெரியவர்கள்தான் என்று தோன்றுகிறது.

சரி, அது கிடக்கட்டும், விஷயம் அதுவல்ல இப்பொழுது.

ரசிக்லால் மாணிக்சந்த் தாரிவால் என்பவர் இந்தியாவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். மேபாக் என்னும் விலை உயர்ந்த கார் இந்தியாவில் சமீபகாலத்தில் விற்பனைக்கு வந்தபோது அதில் முதலாவதை வாங்கி தன் மகளுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தவர்.

ரசிக்லால் மாணிக்சந்த் தாரிவாலுக்கும் அவரது தொழில் பார்ட்னர் ஜக்தீஷ் ஜோஷி என்பவருக்கும் இடையில் பல வருடங்களுக்கு முன்னர் தொழில்முறையில் ஏதோ பிரச்னை. மும்பையில் இதுபோன்ற பெரும் பணக்காரர்களுக்கிடையே ஏதேனும் பிரச்னை என்றால் நேராக நீதிமன்றங்கள் மூலமோ, அல்லது டிரிப்யூனல் மூலமோ தீர்த்துக் கொள்ள மாட்டார்கள் போல. ஏதாவது கறுப்புப் பணம் பிரச்னையாகக் கூட இருக்கலாம். அதனால் நியாய வழியில் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளாமல் தாதா தாவூத் இப்ராஹிமை மத்தியஸ்தத்துக்குக் கூப்பிட்டு இருக்கின்றனர்.

தாவூத் இப்ராஹிமும் பிரச்னையைத் தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு விலையாக இப்படி சூப்பர் லாபம் கொழிக்கும் குட்கா தொழிலை தன் கூட்டாளி ஒருவனுக்கும் சொல்லிக்கொடுத்து அவனுக்கு குட்கா தொழிற்சாலை வைக்க உதவ வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். சாத்தானிடம் போய் தலையைக் கொடுத்தால்? சொன்னபடி செய்ய வேண்டியதுதான். பிரச்னை முடிந்ததும் இரண்டு பார்ட்னர்களும் பிரிந்தனர். ஜோஷி 'கோவா குட்கா' என்று மற்றுமொரு குட்கா கம்பெனி வைத்தார். அத்துடன் ஜோஷியும் தாரிவாலும் சேர்ந்து திருவாளர் தாவூத் இப்ராஹிமின் தம்பிக்கு கராச்சியில் குட்கா கம்பெனி வைத்துக் கொடுத்தனர். இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் மஹாராஷ்டிரா காவல்துறையினர்.

மும்பையில் உள்ள ஒரு நீதிமன்றம் தாரிவால், ஜோஷி இருவரையும் காவல்துறை முன் வரவேண்டும் என்று வாரண்ட் அனுப்பியது. இதைத் தெரிந்து கொண்ட இருவரும் நேராக துபாய் போய் உட்கார்ந்து கொண்டார்கள். (அதுதான் தாவூதின் தேசமாயிற்றே!) மஹாராஷ்டிரா காவல்துறை இண்டெர்போலைத் தொடர்பு கொள்ள, அவர்கள் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். தாரிவாலைக் கேட்டால் அவர் தான் வெளிநாட்டில் இல்லாவிட்டால் தன் என்.ஆர்.ஐ ஸ்டேடஸ் போய்விடும் என்கிறார். தனக்கும் தாதாக்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்கிறார்.

இதற்கிடையில் ஒவ்வொரு வருடமும் பாலிவுட் ஹிந்திப் படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஃபில்ம்ஃபேர் விருதுகள் என்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. அதுவும் இந்த வருடம் இந்த விருதுகள் தொடங்கிய ஐம்பதாவது வருடம்! கடந்த சில வருடங்களாக மாணிக்சந்த் குட்கா இந்த விருதுகளை ஸ்பான்சர் செய்து வந்தது. இந்த வருடம் இதுதான் சாக்கு என்று மாணிக்சந்த் ஸ்பான்சர்ஷிப்புக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

ஃபில்ம்ஃபேர் பத்திரிகை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையை உள்ளடக்கிய பென்னெட் அண்ட் கோல்மேன் குழுமத்தைச் சேர்ந்தது. அத்துடன் இந்த பத்திரிகையில் சிறுபான்மைப் பங்காளி பிபிசி! ஷிவ்சேனா முதற்கொண்டு மும்பையில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இம்முறை விருதுகள் நிகழ்ச்சிக்கு மாணிக்சந்த் ஸ்பான்சர்ஷிப் விலக்கிக்கொள்ளப்பட்டது என்று அறிவித்திருக்கிறார்கள்.

Tuesday, February 08, 2005

அசோகமித்திரன் 50

கடவு இலக்கிய அமைப்பு - கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும்

அசோகமித்திரன் 50

அசோகமித்திரனின் படைப்புலக வாழ்க்கை தனது ஐம்பதாண்டுகளைத் தொடுகிறது. சிறுகதை, நாவல், கட்டுரை என மூன்று பிரிவுகளில் தொடர்ந்தும் தீவிரமாகவும் செயல்பட்டுவரும் அசோகமித்திரனின் பங்களிப்பை நினைவு கூர்ந்து, மீள்பார்வை பார்க்கவேண்டிய தருணம் இது.

12.02.2005 சனிக்கிழமை மாலை 6.30க்கு சென்னை அண்ணாசாலை பிலிம்சேம்பர் அரங்கில் நடைபெறவுள்ள அசோகமித்திரன் - 50 விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். அவரது சிறுகதைகள் குறித்து சுந்தர ராமசாமியும் கட்டுரைகள் பற்றி ஞானக்கூத்தனும் நாவல்கள் பற்றி ஆ.இரா. வேங்கடாசலபதியும் உரையாற்றுகிறார்கள். மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா பங்கேற்று, மொழிபெயர்ப்பில் அசோகமித்திரன் அளிக்கும் வாசிப்பு அனுபவங்கள் குறித்துப் பேசுகிறார்.

நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

நிகழ்ச்சி நிரல்
மாலை 6.15 - தேநீர்
மாலை 6.30 : அசோகமித்திரன் குறித்து அம்ஷன் குமார் இயக்கிய குறும்படம் திரையீடு
மாலை 7.00 நிகழ்ச்சித் தொடக்கம்
வரவேற்புரை : எஸ். வைத்தீஸ்வரன்
தலைமை : பிரபஞ்சன்
பங்குபெறுவோர் : சுந்தர ராமசாமி, பால் சக்கரியா, ஞானக்கூத்தன், ஆ.இரா. வேங்கடாசலபதி
நிறைவுரை : விருட்சம் அழகியசிங்கர்.

விழா அரங்கில் அசோகமித்திரனின் அனைத்து நூல்களும் விற்பனைக்குக் கிடைக்கும்.

Monday, February 07, 2005

அமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்

இம்மாத (பிப்ரவரி 2005) அமுதசுரபி இதழில் வலைப்பதிவுகளின் தாக்கம் மிக அதிகம். தமிழ் வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்களே கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

ஐயப்பன் தகவல் தொழில்நுட்பப் பெரும்புள்ளிகள், ஆஹா யாஹூ என்று இரண்டு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஐயப்பா: அதெப்படிப்பா பிரணாய் ராயைப் புடிச்சு, நாராயண மூர்த்தி, ராமலிங்க ராஜு, அஸீம் பிரேம்ஜி, ஷிவ் நாடார் கோஷ்டியோட சேர்த்தே? அதுவுமில்லாம விட்டா கரன் தாப்பரையும் இந்த கோஷ்டில சேர்த்திடுவேன்னு பயமுறுத்தறே?

க்ருபா ஷங்கர் செல்லும் இடமெல்லாம் தொடர்பு என்ற தலைப்பில் GSM, CDMA தொழில்நுட்பங்களை விளக்குகிறேன் பேர்வழி என்று சற்றே சொதப்பியுள்ளார். போகட்டும் விட்டு விடுங்கள், சின்னப் பையன். புதிதாக கேமரா செல்பேசி வாங்கிய குஷியில் இருப்பதால் மன்னித்துவிடுவோம்!

இகாரஸ் பிரகாஷ் வலை விரிக்கும் வலை என்று இணையத்தில் நடக்கும் மோசடிகள், ஸ்பாம்கள், வைரஸ்கள் பற்றிய ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

மாலன் ஒரு பெரும் பாய்ச்சல் என்ற தலைப்பில் செல்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்திச் சேவை பற்றியும், சமீபத்தில் சிங்கப்பூர் தமிழ் இணைய மாநாட்டில் வெளியான சில தமிழ் இணையப் புதுமைகள் பற்றியும் எழுதியுள்ளார்.

பத்ரி சேஷாத்ரி அகலப்பாட்டை உலகை நோக்கி என்ற தலைப்பில் இந்தியாவில் அகலப்பாட்டை எதிர்காலம் பற்றி எழுதியிருக்கிறார்.

ஆசிரியர் அண்ணாகண்ணன் ஓர் அருமையான சிறுவர் பாடல் (எட்டை வைத்துக்கொண்டு என்னெவெல்லாம் செய்யலாம் என்ற கணிதப்பாடல்), கவிஞர் உமா மகேஸ்வரி பற்றிய அறிமுகக் கட்டுரை இரண்டையும் எழுதியுள்ளார்.

மற்றும் இரு இணைய நண்பர்கள் தமது புனைப்பெயர்களில் எழுதியுள்ளதால் அவர்களை இங்கே குறிப்பிடப் போவதில்லை. தம் பெயர்கள் நேரடியாக வெளியே வருவதில் அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம்.

பவித்ரா சீனிவாசன் தமிழில் வெளியாகியுள்ள சில தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதியுள்ளார்.

தனக்கென தனி வலைப்பதிவை வைத்துக்கொள்ளாத, தோழியர் வலைப்பதிவில் தொடர்ச்சியாக எழுதும் ஜெயந்தி சங்கர் எழுதிய பேஜர் என்ற ஒரு கதை வெளியாகியுள்ளது. அருமையான கரு. இன்னமும் நன்றாகக் கதை வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சட்டென்று முடிந்தது போல இருந்தது. [Correction: ஜெயந்தி சங்கரின் வலைப்பதிவு]

அனந்த், கனடா (இவர் மரபிலக்கியம், சந்த வசந்தம் குழுக்களில் பங்கு பெறும் பேராசிரியர் அனந்தா?) ஒரு கவிதை எழுதியுள்ளார்.

மற்ற படைப்புகளை எழுதியவர்களை இணைய வெளியில் நான் பார்த்தது கிடையாது.

இது ஒரு பெரும் பாய்ச்சல்தான்!

சமுதாய பண்பலை வானொலிகள்

சென்ற வருடம் மத்திய அரசு குறைந்த சக்தி பண்பலை வானொலி அலைவரிசைகளை கல்வி நிலையங்களுக்கு சமுதாய வானொலிகளுக்காக அளிக்க முன்வந்தது. அதையொட்டி இந்தியா முழுவதுமாக கிட்டத்தட்ட 50 கல்வி நிலையங்கள் விண்ணப்பித்திருந்தனவாம். அதில் பத்து நிலையங்களுக்கு முதலில் அனுமதி கிடைத்ததாகவும், அதில் அண்ணா பல்கலைக்கழகம் (காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், கிண்டி) முதலாவதாக பிப்ரவரி 2004-ல் வானொலி நிலையத்தை அமைத்ததாகவும், இந்த மாதத்துடன் ஒரு வருடம் நிறைவுபெறுவதாகவும் தினமணியில் செய்தி வந்திருந்தது.

தினமும் ஒரு மணிநேரம் மட்டும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வந்த இந்த நிலையம் இப்பொழுது கிட்டத்தட்ட 1,000 மணிநேரங்கள் நிகழ்ச்சிகளைக் கைவசம் வைத்துள்ளது என்று படித்தேன்.

சமுதாய வானொலி நிலையங்கள் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் ஆரத்தில் கேட்கக் கிடைக்குமாம். நான் இதுவரை இவர்கள் உருவாக்கிய நிகழ்ச்சியைக் கேட்டதில்லை. இம்மாதிரி ஒரு வானொலி நிலையம் இருப்பது என் வீட்டில் (கோபாலபுரத்தில்) ட்யூன் செய்யும்போது வந்ததில்லை. (கிண்டியிலிருந்து பத்து கிலோமீட்டருக்குள்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்!)

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி உருவாக்க இருக்கும் சமுதாய வானொலி நிலையத்துக்கு ஒரு பேட்டி தர சென்றிருந்தேன். இந்த நிலையம் என் வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகத்தான் உள்ளது. இன்னமும் நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பு ஆரம்பிக்கவில்லை.

நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களிடம் தமது நிகழ்ச்சிகளை ஒலியோடை வடிவில் இணையத்தில் போடச் சொன்னேன். செய்வார்களா என்று தெரியவில்லை. எனது நிகழ்ச்சியை wav வடிவத்தில் எடுத்து வந்துள்ளேன். நிகழ்ச்சி ஒலிபரப்பானதும் இங்கே wma வடிவில் சேர்க்கிறேன் (25 நிமிட நிகழ்ச்சி கிட்டத்தட்ட 1 MB வருகிறது).

சமுதாய வானொலிகள் "எப்பொழுதும் சினிமா மட்டுமே" என்ற ரேடியோ மிர்ச்சி, சூர்யன் எஃப்.எம் நிலையங்களுக்கு நல்ல மாறுதலாக இருக்க முடியும். நிறையக் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் இருக்கலாம். நல்ல விவாதங்கள் இருக்கலாம். இவ்வாறு உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள் காப்புரிமை என்று சிக்கல்கள் எதிலும் மாட்டாமல் பொதுக்களனுக்கு வரும். குறுந்தகடுகள் வழியாகவோ, இணையம் வழியாகவோ நாடு முழுவதும் பரவ முடியும்.

ஆனால் கல்வி நிலையங்கள் அரசுகளுக்கு எப்பொழுதுமே பயந்திருப்பதால் தீவிரமான அரசியல் சார்ந்த, அல்லது அரசியல்வாதிகளையோ, அரசு இயந்திரங்களையோ குறை சொல்லக்கூடிய வகையில் எந்த நிகழ்ச்சிகளும் இருக்க வாய்ப்பில்லை.

அதே சமயம் சமுதாய வானொலி நிலையம் அமைக்கக்கூடிய வகையில் எந்தவொரு கல்வி நிலையமும் கிராமப்புறங்களில் கிடையாது. எனவே இன்றைய நிலையில் பாதிக்கப்படுபவர்கள் மீண்டும் கிராமப்புற மக்களே. மத்திய அரசு இதுவரை சுய உதவிக் குழுக்கள், தொண்டார்வ நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற பிற லாபநோக்கில்லாத நிறுவனங்களுக்கு சமுதாய வானொலி அமைக்கும் உரிமையை மறுத்துள்ளது.

விளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்

இன்று காலை ஜெயா டிவி காலைமலர் நிகழ்ச்சியின்போது தேவிதார் இ.ஆ.ப என்னும் தமிழக விளையாட்டு ஆணையச் செயலர் பேட்டி பார்த்தேன். அதில் தமிழக அரசு தமிழ் நாட்டில் பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுப்பினை அதிகரிக்கவும், தரத்தை உயர்த்தவும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் பற்றிப் பேசினார்.

தங்கள் இணையத்தளத்தின் முகவரியையும் கொடுத்தார்: www.sportsinfotn.com

தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 42,000 பள்ளிகளையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடுத்த School Mail என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும், இதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கூடமும் தத்தம் பகுதிகளில் என்னென்ன விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றும் விளக்கினார்.

Sunday, February 06, 2005

கிராம முன்னேற்றம் - 3

தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல்

இந்த வாரம் சற்று தாமதமாக வருகிறது இந்தப் பகுதி. பகுதி 1 | பகுதி 2

கிராம வருமானத்தைப் பெருக்குவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் அனைவர்க்கும் கிடைக்க வேண்டிய அடிப்படையான சத்துணவு (nutritious meal). இது கிராமங்களுக்கு மட்டுமான தேவையல்ல. இந்தியா முழுமைக்குமான தேவை. இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி மக்கள் (200 மில்லியன்) உணவுப் பற்றாக்குறையால், அல்லது உணவே கிடைக்காமல் இருக்கிறார்கள். மீதிப் பேரில் இன்னமும் 30 கோடிப் பேர்களுக்கு சரியான போஷாக்கு பல நேரங்களில் கிடைப்பதில்லை.

[உலகம் முழுவதிலுமாக 85 கோடி மக்கள் சரியான போஷாக்கு உணவு இல்லாமல் திண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டும் 20 கோடி மக்கள் சரியான உணவு இல்லாமல் இருக்கிறார்கள் - இதுபோன்ற தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் Food and Agriculture Organization இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. 1999 வருடத்தைய தகவல். 2004-ல் அதிக மாற்றங்கள் இருக்காது.]

சரியான போஷாக்கு இல்லாத, உணவு இல்லாத மக்களால் உற்பத்தியைப் பெருக்க முடியாது. தனது நிலையை உயர்த்த முடியாது. எனவே கிராம வருமானத்தை முன்னேற்றுவதற்கு மிக முக்கியமான முன்னோடி அனைவருக்கும் போஷாக்கு உணவு தருவது. அதே சமயம் சிலர், உணவுத்தேவையைப் போக்கிவிட்டால் சோம்பேறிகளைத்தான் நாம் உருவாக்குவோம் என்று குற்றம் சொல்லலாம். அது தவறான கருத்து என்பது என் எண்ணம். எந்த மனிதனுமே வெறும் சோற்றைத் தின்று அது போதும் என்று மர நிழலில் படுத்திருக்க விரும்ப மாட்டான். பழைய ஹிந்துத் துறவிகள்தான் அப்படி இருக்க விரும்பினார்கள். அதுவும் வெறும் 0.1%க்கும் குறைவானவர்களே. இன்றைய ஹிந்துத் துறவி கூட உண்டு கொழுத்து, அதற்கு மேலும் தன் ஆசையை வளர்த்து வைத்திருக்கிறார்.

20 கோடி வாய்களுக்கு சத்தான உணவு வருடம் முழுவதும் தர எத்தனை செலவாகும்? அதைச் செய்ய எம்மாதிரியான அடிப்படைக் கட்டுமானம் தேவை? மூன்று வேளைகளுக்குமாக சமையல் செய்து போட முடியாது. ஆனால் நாளுக்கு ஒருதடவை வேண்டிய அளவு கஞ்சி/கூழ் போன்று சத்தான உணவைக் கொடுக்க முடியும். ஒவ்வோர் ஊரிலும் இதற்கென சமுதாயக் கூடங்களை அமைத்து பஞ்சாயத்து/ஊராட்சி/நகரமன்றம் வழியாக அடிப்படையான உணவை தேவை என்று கேட்கும் அனைவருக்கும் வழங்கலாம். மத்திய அரசு தன் கொள்முதல் பண்டக சாலைகளில் இருக்கும் உணவு தானியங்களை இதற்கென செலவழிக்கலாம். அரிசியோ, கோதுமையோ நொய்யாக, அத்துடன் அந்தந்தப் பகுதிகளில் விளையும் கம்பு, கேழ்வரகு ஆகியவை மாவாக. அத்துடன் சோயா, நிலக்கடலை போன்ற புரதச்சத்து மிகுந்தவை மாவாக. இவற்றை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து மாவாக மூட்டைகளில் அடைத்து ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி விடலாம்.

இந்த மாவைக் கொதிக்க வைத்த நீரில் கரைத்து, கஞ்சியாக்கு, அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் காய்கறிகள், மாமிசத் துண்டுகளுடனும், வாசனைக்கு சிறிது தாளித்தல்களுடனும், உப்புடனும் சேர்த்தால் வயிற்றுப் பசிக்கும், தேவையான குறைந்த அளவு போஷாக்குக்கும் உணவு தயார். ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய அளவு - அது யாராக இருந்தாலும் சரி, எந்த அடையாளச் சீட்டும் இல்லாமல் - கொடுக்க வேண்டும்.

நிச்சயமாக இதிலும் ஊழல் இருக்கும். ஆனால் அதைக் காரணம் காட்டி இம்மாதிரியான ஒரு திட்டம் நடக்காமல் இருக்கக் கூடாது. என்ன செலவாகும்? ஒருவருக்கு ஒரு நாளைக்கான செலவு ரூ. 4 தான் என்று மேலோட்டமாகத் தோன்றுகிறது. எல்லாப் பொருட்களுமே இந்தியாவில் கிடைக்கிறது. மொத்தமாக வாங்கப்போவது மத்திய அரசு. செயல்படுத்துவது மாநில அரசுகள் வழியாக பஞ்சாயத்துகள்/ஊராட்சி/நகராட்சி.

எனவே வருடச் செலவு = (20 கோடி * 365 * 4) = ஏறத்தாழ ரூ. 30,000 கோடிகள்.

இந்த முழுப்பணத்தையும் மத்திய அரசு மான்யமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசின் மொத்தச் செலவில் இது பெரிய அளவுதான். ஆனால் மிகவும் அவசியமானது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி செய்பவர்களுக்கு அரசு முழு வரிவிலக்கு அளிக்கலாம். சுதந்தர தினம், குடியரசு தினம் போன்ற நாள்களில் சிறுவர்களை கூப்பன்கள் வாங்கச் சொல்லலாம். கிடைக்கும் பணம் நேரடியாக அரசுக் கணக்குக்குப் போகும்.

தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்ற நிலை இந்தியாவில் இருக்காது. உழைக்கவோ, படிக்கவோ, மேற்கொண்டு தன் நிலையை முன்னேற்றவோ ஒருவர் தன் முழு கவனத்தையும் செலுத்தலாம்.

இதிலும் நிச்சயம் அரசியல் வரும். தாதாக்கள் வருவார்கள். யாருக்கு உணவு தருவது, தரக்கூடாது என்று அதிகாரம் செலுத்துவார்கள். திருட்டு நடக்கும். கொள்ளை நடக்கும். சாதிச் சண்டைகள் வரும். எதில்தான் இவை இல்லை? ஆனால் 70% சரியாக நடந்தாலும் கூட 14 கோடி மக்களுக்காவது உருப்படியான உணவு போய்ச்சேருமல்லவா?

நாளடைவில் கிராம வருமானத்தைப் பெருக்கும்போது இந்தத் திட்டத்திலிருந்து பலரும் வெளியேறி சொந்தமாகவே உணவைத் தேடிக்கொள்வார்கள். அப்பொழுது அரசின் செலவு வெகுவாகக் குறையும். உலகின் பசியில் வாடும் மக்களின் நான்கு பேரில் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார் என்ற பழிச்சொல் போகும்.

மேலும் பல நன்மைகள் உண்டு. உற்பத்தியான, கொள்முதல் ஆன தானியங்கள் புழுத்துப் போகாமல் செலவாகும். பஞ்ச காலங்களில் அரசு திடீரென்று செயல்பட வேண்டிய நிலைமை இருக்காது. ஒரு கட்டுமானம் ஏற்கெனவே பசியைப் போக்கும் வழியை அறிந்திருக்கும். (மேலை நாடுகளில் soup kitchen என்பது பற்றி கூகிளில் தேடி அறிந்து கொள்ளுங்கள்.) மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளூராட்சிகள் ஆகியவை ஒன்று சேர்ந்து ஒழுங்காக உழைக்கக் கற்றுக்கொள்ளலாம். முன்காலங்களில் அரசன் அன்ன சத்திரம் அமைத்தான் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா? அதைப் போன்றுதான் இதுவும்.

பசி பயம் போன மக்கள் நிச்சயமாக உழைக்கத் தயாராக இருப்பார்கள். படிக்கத் தயாராக இருப்பார்கள். கற்கத் தயாராக இருப்பார்கள்.

அடுத்த வாரம் தொடர்வேன்.

Friday, February 04, 2005

மூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்

இன்று மதியம் ஆல் இண்டியா ரேடியோ செய்தியில், மத்திய அரசு வட கிழக்கு இந்தியாவில் மூங்கில் பூக்களால் ஏற்படும் பிரச்னையைக் கட்டுப்படுத்த ரூ. 105 கோடிகள் செலவிட இருப்பதாகச் சொன்னார்கள்.

ஒன்றுமே புரியவில்லை. மூங்கில் பூக்கும்போது, அதைத் தின்ன வரும் எலிகள் எக்கச்சக்கமாகப் பெருகிப் போகும் என்றும், அப்படிப் பெருகிய எலிகள், மூங்கில் பூக்கள் தீர்ந்ததும் நெல் வயல்களில் புகுந்து அழித்து அதன் தொடர்ச்சியாகப் பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்றும், அப்படி 1950களில் மிசோரத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தைத் தொடர்ந்து, அதை உள்ளூர் அரசு சரியாகக் கையாளாததால் ஆயுதப் புரட்சி வெடித்து மிசோ நேஷனல் ஃபிரண்ட் என்ற இந்திய எதிர்ப்புக் குழு உருவானது என்றும் செய்தியில் கேட்டேன்.

இப்பொழுது கூகிள் தேடியில் நிறைய விஷயங்கள் கிடைத்தன. சில சுட்டிகள்:

When The Bamboo Flowers!
India braces for fall-out from flowering bamboos
Northeast’s Money Grass and Opportunity for Peace

ஏற்கெனவே நட்ட மூங்கில்கள் பூப்பதின் உச்சத்தை இப்பொழுது அடையத் தொடங்கியிருக்கும். இம்முறை அரசுகள் இதை கவனமாகக் கையாண்டு பஞ்சங்கள் ஏதும் வராது பார்த்துக் கொள்ளும் என்று வேண்டுவோம்!

நம் நாட்டைப் பற்றி நாம் அறியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன பாருங்கள்!

சிந்துபைரவி

கே.பாலசந்தர்கே.பாலசந்தரின் சூப்பர் ஹிட் திரைப்படம் சிந்துபைரவி. இப்பொழுது இதன் திரைக்கதை, வசனம் புத்தகமாக வரப்போகிறது.

சில நாள்களுக்கு முன் பாலசந்தருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது நல்ல படங்கள் எதுவுமே புத்தகமாக வரவில்லையே என்றோம். அவற்றை கிழக்கு பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளியிட ஒப்புக்கொண்டார்.

பிப்ரவரி 14-16 மூன்று நாள்களும் கே.பாலசந்தரைப் பாராட்டி கோயம்புத்தூரில் விழாவும், கருத்தரங்கமும் நடைபெறுகிறது. கோவை பி.எஸ்.ஜி கலைக்கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியின்போது ஒரு புத்தகமாவது வரவேண்டும் என்று முடிவு செய்தோம். முதலாவது புத்தகம் 'சிந்துபைரவி'தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. 14-ம் தேதியன்று நடிகர் விவேக் இந்தப் புத்தகத்தை வெளியிட கவிஞர் வைரமுத்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார்.

விழா பற்றிய முழு விவரங்களையும் நாளை தருகிறேன்.

சிந்துபைரவியில் சிவக்குமார், சுஹாசினி


சினிமாவின் வெவ்வேறு காட்சிகள் (scene) என்று தொடங்கி, அவற்றுக்கு one-liner எழுதி, அதை விரிவாக்கி திரைக்கதையாகவும், வசனங்களாகவும் மாற்றி எழுதியபின்னர், இப்பொழுது படித்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. சிந்துபைரவி மாபெரும் இலக்கியம் என்று சொல்லமுடியாது. ஆனால் கட்டுக்கோப்பான கதை. ஒரு காட்சியிலிருந்து மற்றொரு காட்சிக்கு வெட்டிச் செல்லும்போது பாலசந்தரின் மேதைமை வெளிப்படுகிறது. வசனங்கள் ஆழமானவை, அழுத்தமானவை. இந்தப் படத்தில் எந்தப் பாத்திரமுமே தேவையற்றவர்கள் என்று சொல்ல முடியாது.

கதை உங்கள் அனைவருக்கும் ஏற்கெனவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். செவ்வியல் இசையை ரசிக்க அவ்விசைப்பாடலின் மொழி தெரிந்திருக்க வேண்டுமா? மக்களுக்குப் போய்ச்சேரும் மொழியில் பாடல்களை எழுத வேண்டுமா? மக்கள் மொழியில் பாடல்களைப் பாடாமல் வேற்று மொழியில் மட்டும் பாடல்களைப் பாடலாமா? இதுபோன்ற சில கேள்விகள், அதையொட்டிய சில விவாதங்கள். இதன் ஊடாக, இசையில் பேரறிவு படைத்த தனி மனிதன் ஒருவனின் ஒழுக்கம் சார்ந்த கோட்பாடுகள், அந்தக் கோட்பாடுகளை அவனே உடைப்பது. தன் மனைவியிடமான அவனது உறவு, மற்றொரு பெண்ணிடமான உறவு. இந்தப் பிரச்னைகளின் தீர்வு.

ஜேகேபி, சிந்து, பைரவிஜேகேபி, சிந்து, பைரவி மூவரையும் மட்டும் வைத்து மேற்படிக் கதையை ஒரு சிறந்த சிறுகதையாக எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

இப்பொழுதெல்லாம் வெகு சில சினிமாப் படங்களே நல்ல கதைகளை முன்வைத்துச் செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது. படம் எடுக்க ஆரம்பித்ததும், "அண்ணே, இப்படியொரு சீன் வச்சுக்கலாண்ணே" என்று ஜால்ராக்கள் சொன்னதும் அப்படி ஒரு சீன் உள்ளே வருகிறது. தனியாக காமெடி டிராக் வைக்கிறார்கள். பின் எடிட்டரிடம் கொடுத்து ஒரு வழி செய்து வெட்டி ஒட்டுகிறார்கள். தனியாக பாடல்கள் - பல நேரங்களில் படத்துக்கு முன்னதாகவே எடுத்து முடித்துவிடுகிறார்கள் - எடுத்து, மற்றுமொரு ஒட்டுவேலை. இந்தப் பாடல்களிலும் 'ஸ்பெஷல் அப்பியரன்ஸ்' காண்பிக்க மும்பை நடிகைகள் இறக்குமதி.

இதற்கெல்லாம் ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியை கதைக்கென செலவிட்டு, உருப்படியான கதையைத் தேர்ந்தெடுத்து, அதை சரியான திரைக்கதையாக்கி, பின் வசனம் எழுதி, அதன்பின் ஷூட்டிங் ஸ்கிரிப்ட் எழுதிப் படமெடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கோடிக்கணக்கில் பணம் செலவு செய்பவர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா?

Thursday, February 03, 2005

Mr. and Mrs. ஐன்ஸ்டீன்

"ஹார்வர்ட் முதல் உசிலம்பட்டி வரையில்" என்ற தலைப்பில் இன்றைய தினமணி நடுப்பக்கக் கட்டுரை ஒன்றில் ஆசிரியர் உ. நிர்மலா ராணி இவ்வாறு எழுதுகிறார்:
ஐன்ஸ்டீனுக்கு பின்னே திருமதி ஐன்ஸ்டீன்: சர்வதேச அரங்கிலும் இதே நிலைதான்! காலம் - இடம் - பொதுத்தொடர்பு என்ற தத்துவத்திற்காக நோபெல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த ஆய்வுக் கட்டுரையில் பெரும் பங்கு அவருடைய மனைவியைச் சார்ந்தது என்பதும் அந்தக் காலத்தில் பெண்ணின் பெயரில் அனுப்பப்படும் கட்டுரைகள் ஒதுக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தால் ஐன்ஸ்டீன் பெயரில் அனுப்பப்பட்டு பரிசும் பெற்றன என்பதும் சில வருடங்களுக்கு முன்புதான் பத்திரிகைகள் வாயிலாகத் தெரிய வந்தது.
இது எந்த அளவுக்கு உண்மை? இங்கு மற்றுமொரு மறைமுகக் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. தன் மனைவியின் ஆராய்ச்சியை தனதென்று சொல்லி ஐன்ஸ்டீன் பேரும், புகழும், பரிசும் பெற்றுவிட்டார் என்பதே அது. கட்டுரையாளர் ஆதாரம் எதையும் சுட்டாமல், "தெரிய வந்தது" என்று பொத்தாம்பொதுவாக இப்படி எழுதியிருக்கக் கூடாது. இந்தக் கேள்வியை இயற்பியல்.ஆர்க் தளத்தில் வைக்கிறேன். வெங்கட்டும், பிறரும் பதில் சொல்லட்டும்.

கோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்

நடப்பு கோவா சட்டமன்றத்தில் இனியும் வேறு கட்சி/தரப்பு மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என்றால், அங்கு நிலையான ஆட்சி கிடையாது; சட்டமன்றத்தைக் கலைத்து கவர்னர் ஆட்சியைக் கொண்டுவரவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.

என்?

மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர். இதில் திடீரென்று நான்கு பாஜக எம்.எல்.ஏக்கள் (காங்கிரஸ் தூண்டுதலால்) தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். (இவர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியிருக்க முடியாது. தாவியிருந்தால் கட்சித் தாவல் தடைச்சட்டம் இவர்கள் மீது பாய்ந்து இவர்கள் பதவி இழந்திருப்பார்கள்!) எனவே இப்பொழுதைய எண்ணிக்கை 36 பேர். இதில் தற்போது பாஜக உறுப்பினர்கள் 17, பாஜக ஆதரவு உறுப்பினர் ஒருவர். ஆக பாஜக ஆதரவாளர்கள் 18 பேர். அதில் ஒருவர் தற்போதைய சபாநாயகர்.

இந்தத் தரப்புக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளின் எண்ணிக்கை 18.

பொதுவாக கமிட்டி சேர்மன், போர்டு சேர்மன் ஆகியோருக்கு casting vote என்று மேலதிக வாக்கு ஒன்று உண்டு. மொத்தம் ஆறு பேர் உள்ள ஒரு கமிட்டியில் 3-3 என்று வாக்குகள் பிரிந்திருந்தால் சேர்மன் தனது 'சேர்மன் வாக்கை' செலுத்தி (இவர் ஏற்கெனவே உறுப்பினராக தனது வாக்கைச் செலுத்தித்தான் 3-3 என்றாக்கியிருந்தார்), தான் விரும்பியபடி தீர்மானத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ நடந்து கொள்ளலாம். ஆக, சேர்மனுக்கு இரண்டு வாக்குகள். அப்படித்தான் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்தலில் ஜக்மோகன் தால்மியா சில 'தில்லாலங்கடி' வேலைகளைச் செய்து தன் ஆளான ரண்பீர் சிங் மகேந்திராவை வெற்றிபெறச் செய்தார்.

ஆனால் சட்டமன்றத்தில் ஓர் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவற்றுக்கு சபாநாயகர் எடுத்த எடுப்பிலேயே வாக்களிக்க முடியாது. அதுபோன்ற தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடந்து, அந்த வாக்கெடுப்பில் எந்தப் பக்கம் என்று தீர்மானிக்க முடியாது என்ற நிலை வந்தால்தான் (tie) சபாநாயகர் வாக்களிக்க முடியும்.

எனவே நேற்றைய கோவா வாக்கெடுப்பின் போது பாஜக பக்கம் 17 வாக்குகள்தான். எதிர்ப்பக்கத்திலோ 18 வாக்குகள். நியாயமாக வாக்கெடுப்பு நடந்திருந்தால் பாஜகவுக்கு கல்தா. இதனால்தான் சபாநாயகர் விஷ்வாஸ் சாதர்கர், காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை உறுப்பினர் பிலிப் நெரி ரோத்ரிகேவை சபையை விட்டு வெளியேறச் செய்து, அதையடுத்து நடந்த அமளியின்போது குரல் வாக்கெடுப்பின் மூலம் 'பாஜக வெற்றி' என்று அறிவித்துவிட்டார்.

ஆனால் கவர்னர் பாஜக அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்துவிட்டார். இப்பொழுது காங்கிரஸ் பதவிக்கு வந்துள்ளது. ஆனால் பிரச்னை இத்தோடு முடிவடையாது.

இப்பொழுது பாஜகவுக்கு ஆதரவளிக்கும் UGDP எம்.எல்.ஏ சல்தானா அப்படியே இனியும் செய்வார் என்று வைத்துக்கொள்வோம். பாஜகவைச் சேர்ந்த சபாநாயகர் உடனடியாகத் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். புது அரசு பதவிக்கு வந்ததும் சட்டமன்றத்தைக் கூட்டி தனது ஆள் ஒருவரை உடனடியாக சபாநாயகர் பதவிக்குத் தேர்வு செய்யவேண்டியிருக்கும். அப்பொழுது காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 ஆகக் குறைந்துவிடும். எதிராக 18 பேர் - பாஜக 17, UGDP 1. பாஜக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் நேற்று என்ன நடந்ததோ அதே மீண்டும் நடக்கும். காங்கிரஸ் அரசு கவிழும். (ஆனால் உண்மையில் கவர்னர் எந்தப் பக்கம் சாய்கிறாரோ அதுதான் நடக்கும்.)

மீண்டும் திரிசங்கு சொர்க்கம்.

இதைத் தடுக்க என்ன செய்யலாம்? உடனடியாக, காலியான நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் அதைச் செய்வது தேர்தல் கமிஷன். தேர்தல் கமிஷனை அவசரப்படுத்த முடியாது. அவர்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ, எப்பொழுது முடிகிறதோ (ஆறு மாதங்களுக்குள்), அப்பொழுதுதான் தேர்தலை நடத்துவார்கள்.

UGDP கட்சி காங்கிரஸ் ஆதரவுக்குத் தாண்டிவிட்டது. அதன் எம்.எல்.ஏ சல்தானாவோ பாஜக ஆதரவு. இப்பொழுது அவரைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சி செய்யும். அதில் வெற்றியும் அடையலாம். அப்படியானால், காங்கிரஸ் ஆட்சியை உடைப்பதில் முழு வெற்றி அடைந்துவிட்டது என்று பெருமைப்படலாம்.

அப்படி நடக்காவிட்டால் நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும் வரையில் கவர்னரும், காங்கிரசும் சேர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி செய்வார்கள். அதன்பின் தேர்தல் முடிவுகள் விட்ட வழி!

இந்நிகழ்வை ஜனநாயகப் படுகொலை என்றெல்லாம் பாஜக வர்ணித்திருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. இதெல்லாம் இந்திய அரசியலில், முக்கியமாக கோவா அரசியலில் வெகு சகஜம். பாஜகவும் இதுபோன்ற விஷயங்களில் சந்தோஷமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறது. இந்தச் சிரிப்பு நாடகத்தின் அடுத்த அங்கம் மிக விரைவில் அரங்கேற இருக்கிறது.

Wednesday, February 02, 2005

நேபாள் குடியாட்சிக்கு ஆபத்து

நேபாளில் மன்னராட்சி. இன்றும் கூட இப்படிச் சக்திவாய்ந்த மன்னராட்சியுடன் ஒரு நாடு இருப்பது anachronism. பிரிட்டன் முதல் ஜப்பான் வரையான மன்னராட்சி பெயரளவுக்குத்தான். நாட்டை ஆளும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கே.

நேபாளிலோ, அரசியல் நிர்ணயச் சட்டம் மன்னர் குடும்பத்துக்கு ஏகப்பட்ட அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. இப்பொழுது மன்னராக உள்ளவர் அரசர் ஞானேந்திரா, எங்கிருந்தோ வந்தவர். இவர் இதற்கு முன் இருந்த அரசர் பிரேந்திராவின் தம்பி. பிரேந்திராவையும் அவரது குடும்பத்தில் உள்ள பிறரையும், சற்றே மனம் பிறழ்ந்த, தன்னிலையில் இல்லாத மகன் திபேந்திரா சுட்டுக் கொன்று விட்டார். தன்னையும் சுட்டுக்கொண்டு செத்தார்.

அதனால் 2001-ல் அரச பதவிக்கு வந்த ஞானேந்திரா நேற்று, ஆட்சியில் இருந்த பிரதமர் ஷேர் பஹாதூர் தூபா அமைச்சரவையைக் கலைத்து, நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்து, தனக்கு இஷ்டமான ஓர் அமைச்சரவையை உருவாக்கியுள்ளார்.

நேபாளில் மாவோயிஸ்டுகள் பல காலமாகவே அரசுத் தரப்பினரோடு சண்டையிட்டு வருகின்றனர். நடுநடுவே சண்டை நிறுத்தம் இருக்கும். பின் மீண்டும் சண்டை தொடரும். பேச்சுவார்த்தையால் மட்டுமே இந்தச் சண்டையை நிறுத்த முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் மாவோயிஸ்டுகள் அரச பதவியை முற்றிலுமாக எதிர்ப்பவர்கள். எனவே இப்பொழுதைய அவசர நிலைப் பிரகடனத்தால் சண்டை வலுக்குமே தவிரக் குறையாது. அரசரின் செயலை எதிர்த்து மாவோயிஸ்டுகள் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஏதாவது வெறிச்செயல்கள் நடந்து, நாட்டின் ராணுவம் அப்பாவிகள் சிலரை சுட்டுத்தள்ளலாம். இதனால் மாவோயிஸ்டுகள் இன்ன்னமும் வேகத்துடன் அரசை எதிர்ப்பார்கள். முடிவில்லாத யுத்தம் தொடரும்.

இந்நேரத்தில் இந்தியா, நேபாளில் நடந்திருப்பதைக் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த அளவுக்கு வலுவான அறிவிப்பு இதற்கு முன்னர் இந்திய அரசிடமிருந்து வந்தது கிடையாது. அடுத்து மியான்மார் அரசின் நடவடிக்கைகளைப் பற்றியும் இந்தியா வெளிப்படையாகவே விமரிசிக்க வேண்டும். [மியான்மார் பற்றிய என் முந்தைய பதிவு.] உலக நாடுகள் பலவுமே நேபாள் அரசரது செயலைக் கண்டித்துள்ளன.

இதற்கிடையில் டாக்காவில் நடைபெற இருந்த சார்க் உச்சி மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அதற்கு நேபாளின் நிகழ்வுகள் ஒரு காரணம் என்றும், பங்களாதேஷின் சட்டம் ஒழுங்கு மற்றொரு காரணம் என்றும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் கருத்து தெரிவித்திருந்தது பங்களாதேஷைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களாதேஷ் பற்றிய இந்தியாவின் கருத்து தேவையற்றது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. தெற்காசிய நாடுகளின் சட்டம் ஒழுங்கு எப்பொழுதும் பிரச்னைதான். அதற்காக ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டுக்கு செல்லாமல் இருப்பதில்லை.

தமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு

பாலவேலக்கார் வில்பனய்க்கு - மாத்ருபூமி 2-2-2005, இன்றைய மாத்ருபூமி தினப்பத்திரிகையில் முதல் பக்கச் செய்தி, தமிழாக்கம்: இரா.முருகன்

குழந்தை வேலைக்காரர்கள் விற்பனைக்கு

ஒல்லூர் (திருச்சூர் மாவட்டம்)

குழந்தைகள் விற்பனைக்கு. விருப்பமான வேலை செய்ய வைத்துக்கொள்ளலாம். கூலி மாதம் ரூ எழுநூற்றைம்பது மட்டும். ஏஜண்டுக்கு ரூபாய் ஐநூறு கமிஷன்.

தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல், செவ்வாய்க்கிழமை (நேற்று) இது காணக் கிடைத்தது. வழியருகே நிறுத்திய ஒரு க்வாலிஸ் காரில் சுமார் பதினைந்து சிறுவர் சிறுமியர் இப்படி விற்பதற்காகக் காட்சிப் படுத்தப்பட்டார்கள்.

சேலத்துக்காரர்களான இவர்களில் 11 வயதுள்ள சிறுவனும், 9 வயதுள்ள சிறுமியும் உண்டு. ஏஜண்டுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியில்லாமல், குழந்தைகள் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூட்டிப்போகப்பட்டார்கள்.

சேலம் நெடுஞ்செழியன் என்பது ஏஜண்ட் பெயர். செயிண்ட் மெரீஸ் தேவாலய மடத்தின் அருகில் நெரிசல் மிகுந்த சாலையில் குழந்தைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.

குறைந்தது ஓர் ஆண்டாவது குழந்தைகளை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை உண்டு. குழந்தைகளை அழைத்துப் போகும்போது கமிஷன் கொடுக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை குழந்தைகளை 'வாங்கிய' வீடுகளுக்கு ஏஜண்டுகள் போவார்கள். அப்போது குழந்தைகளுடைய ஆறு மாதச் சம்பளத்தை மொத்தமாகத் தரவேண்டும். உடன்படிக்கை எல்லாம் வாய்மொழியாகத்தான். திருச்சூரில் மட்டுமில்லை, மற்ற கேரள மாவட்டங்களிலும் இப்படிக் குழந்தைகளை விற்பனை செய்வதுண்டு.

ஒரு வருட ஒப்பந்தம் முடிந்தால் வீட்டுக்காரர்கள் தங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ இக்குழந்தைகளை ஏஜண்ட் மூலம் மறுபடி விற்கலாம். குழந்தைகள் அந்த ஒரு வருடத்தில் செய்த வேலை, உழைப்புத் திறனை வைத்து அவர்களுக்கு அடுத்த கூலி நிர்ணயிக்கப்படும்.

சின்னக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது, நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வது என்பது போன்ற வேலைகளுக்காக இக்குழந்தைகள் பணியாளர்களாக அமர்த்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவையாவது இப்படிக் குழந்தைகளைப் பகிரங்கமாக விற்பது நடைபெறுகிறது என்று ஏஜண்ட் சொன்னான். (நம் நிருபர்) வேலைக்குக் குழந்தை வேண்டும் என்று நடித்து அவனை அணுகியபோது இதைச் சொன்னான். குழந்தைகள் சேலம் பகுதியிலிருந்து புகைவண்டியிலோ, பேருந்திலோ கொண்டுவரப்பட்ட பிறகு இப்படி வேன்களில் சந்தைப்படுத்தப்படுவார்கள்.

கூடுதல் விலைபோகும் இடத்தில் வேனை நிறுத்திவைப்பார்கள். ஒல்லூரில் ஒருவரே மூன்று குழந்தைகளை வாங்கிப்போனார். ஒரு வருடம் வேலை செய்த குழந்தைகளை அவர்கள் வேலை செய்த வீடுகளிலிருந்து கூட்டி வந்து வேறு வீட்டுக்காரருக்குக் கைமாற்றுவதும் இந்த வேளையில் நடக்கும்.

குழந்தைகளைப் பார்த்துவிட்டுத் திரும்பி நடக்கும்போது, பின்னாலேயே வந்த ஏஜண்ட் நெடுஞ்செழியன் சொன்னான், "சார், 650 ரூ கொடுத்தாலும் போதும்; பிள்ளையைக் கூட்டிட்டுப் போங்க".

நன்றி: மாத்ருபூமி 2.2.2005

Tuesday, February 01, 2005

அப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்

தொலைக்காட்சி வருவதற்கு முன்னர் பெரும்பாலும் வானொலி கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தங்களது ஆட்டம் பற்றிய அறிவுக்காகவும், குரல் வளத்துக்காகவுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வானொலியில் கிரிக்கெட் வர்ணனை தருபவர்கள் இருவகைப்படுவர். ஒருவர் ஆட்ட வர்ணனையாளர். மற்றவர் வர்ணனைக்கு வளம் சேர்க்கும் நிபுணர். இருவரும் ஒருசேர அமர்ந்திருந்து தங்களுக்குள்ளாக ஒரு உரையாடலை நடத்திக்கொண்டிருப்பர். இடையிடையே பந்துகள் வீசப்படும்போது வர்ணனையாளர் பந்தை விவரிப்பார். மட்டையடியை விவரிப்பார். பந்து தடுக்கப்படுவதை விவரிப்பார். அப்பொழுது நிபுணர் வாய்பொத்தி அமைதியாக இருப்பார். பந்தின், அடியின், தடுத்தலின் விவரம் முடிந்தவுடன் வர்ணனையாளர் நிபுணரைப் பேச்சுக்கு இழுப்பார். அந்தப் பந்தில் உருப்படியாக ஏதாவது நடந்திருந்தால் கேள்வி அதுபற்றியதாக இருக்கும். இல்லாவிட்டால் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் உரையாடல் தொடரும்.

இந்த உரையாடல் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். கிரிக்கெட் பற்றி இருக்கவேண்டுமென்று கூடக் கிடையாது. பிபிசி கிரிக்கெட் வர்ணனையில் ஹென்றி புளோஃபெல்ட் கேக் சாப்பிடுவதிலிருந்து, புத்தகம் படிப்பதிலிருந்து, கூட்டத்தில் இருப்பவர்களின் காதுத் தோடுகள் வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார். நிபுணர் ஒரு தேர்ச்சிபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்/கோச் என்றால் பேச்சு பெரும்பாலும் அவர்களைப் பற்றியதாக இருக்கும். நிபுணரின் வாயைத் தோண்டித் துருவி சுவையான விஷயங்களை வெளிக்கொணர்பவரே சிறந்த வர்ணனையாளர்.

அப்துல் ஜப்பார்தொலைக்காட்சி வந்ததும் கிரிக்கெட் வர்ணனை முற்றிலுமாக அழிந்துபோனது. நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை மட்டுமே வைத்து தொலைக்காட்சி வர்ணனை நடந்தது. படங்களே எல்லாவற்றையும் விவரிப்பதால், தொலைக்காட்சி வர்ணனையாளர் எப்பொழுதாவது ஓரிரு வார்த்தைகள் சொன்னால் போதும் என்றானது.

இன்றும்கூட BBC Test Match Special வானொலி வர்ணனை மிகவும் பிரசித்தி பெற்றது. (ஆனால் முன்போல் இல்லாது சற்றே தரத்தில் குறைந்துள்ளது. நிறைய செய்தித்தாள் நிருபர்களை வைத்து ஒப்பேற்றப் பார்க்கிறார்கள். நான்கு பேர்கள் போதும். ஆனால் அதை விடுத்து தேவையின்றி கூட்டம் சேர்க்கிறார்கள்.)

இந்திய வானொலி தரத்துக்குப் பேர் போனதல்ல. ஆங்கில/ஹிந்தி கிரிக்கெட் வர்ணனை மிகச்சிறப்பு வாய்ந்தது என்று சொல்ல முடியாது.

ஆனால் சென்னை கிரிக்கெட் ஆட்டத்துக்காக சென்னை வானொலி தயாரிக்கும் தமிழ் கிரிக்கெட் வர்ணனை நல்ல தரம் வாய்ந்ததாகவே இருந்தது. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, கூத்தபிரான் போன்றோர் தமது வர்ணனையில் கணீரென்ற குரலையும், நல்ல கிரிக்கெட் அறிவையும், அதற்கு மேல் தீவிர ஆர்வத்தையும் கொண்டுவந்தனர். இவர்கள் அனைவருமே கிரிக்கெட் நிபுணர்கள் என்ற பிரிவில் வரமாட்டார்கள். வர்ணனையாளர்கள் என்ற பிரிவில் வருவார்கள். ஆனால் ஒருவர் வர்ணனை செய்யும்போது அடுத்தவர் நிபுணர் இருக்கையில் அமர்ந்திருப்பார். (பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடிய தமிழர்களுக்கு உருப்படியாகத் தமிழில் பேசவராது என்பதனால் சரியான கிரிக்கெட் நிபுணர் யாருமே தமிழ் வர்ணனைக்குக் கிடைத்ததில்லை.)

அப்துல் ஜப்பார் 'வாலாஜா சாலை முனையிலிருந்து பந்துவீச்சாளர் தனது ஓட்டத்தைத் தொடங்குகிறார்' எனும்போது கண்ணில் அந்தக் காட்சி தெரியும். 'அளவு சற்றுக் குறைவாக விழுந்த பந்து' எனும்போது பந்து ஆடுகளத்தின் நடுவில் குத்தி நம் கண் முன்னே எழுந்து வரும். 'பின்காலில் சென்று வெட்டி ஆடுகிறார்' எனும்போது கைகள் தானாக 'cut' செய்யும். 'கவர் திசைக்கும், பாயிண்ட் திசைக்கும் இடையே பந்து பறந்து செல்கிறது' ... பந்து செல்லும். 'பந்துத் தடுப்பாளர் பாய்ந்து தடுக்கிறார்' ... தடுப்பார். 'வேகமாக ஓடிச்சென்று இரண்டு ஓட்டங்களைப் பெறுகிறார்கள்'... 'அணியின் எண்ணிக்கை 63ஆக உயர்கிறது' ... 'அடுத்த பந்து...'

கிரிக்கெட் போன்ற ஓர் ஆட்டத்தில் நுட்பமான பல விஷயங்கள் உண்டு. பிற ஆட்டங்களிலும் உண்டு. பொதுமக்களுக்கு நுண்ணிய விஷயங்கள் தெரிந்திருக்காது. அளவு குறைந்து வரும் பந்தை ஏன் பின்னங்காலில் சென்று ஆட வேண்டும்? முன்னங்காலில் வந்து ஆடினால்? வர்ணனையாளர் உதவியில்லையென்றால் பலருக்கு என்ன நடக்கிறது என்றே புரியாது.

வானொலி வர்ணனை போய், தொலைக்காட்சி வந்ததும் இன்று பலரும் கிரிக்கெட் பார்க்கிறார்கள். ரன்கள் பெறும்போதெல்லாம் கைதட்டுகிறார்கள். அது விளிம்பில் பட்டு ஸ்லிப் மேல் அசிங்கமாக எகிறி எல்லைக்கோட்டைக் கடந்தாலும் சரி, விஷ்வநாத் கடைசி விநாடியில் தட்டிய 'லேட் கட்' ஆக இருந்தாலும் சரி. ஆட்டம் மட்டும் புரிவதில்லை.

நேற்று அப்துல் ஜப்பாரைச் சந்தித்தபோது கடந்த சென்னை ஆட்டத்தின்போது தமிழில் வர்ணனை இல்லாததைப் பற்றி வருத்தம் தெரிவித்தார். தனக்கு வாய்ப்பு போய்விட்டதே என்பதால் அல்ல, தமிழில் வர்ணனை இல்லாது போய்விட்டதே என்பதால் என்றார். இனி சிறு சிறு நகரங்களில் இருக்கும் தமிழன் கிரிக்கெட்டை எப்படிப் புரிந்து கொள்ளப்போகிறான் என்ற ஆதங்கம் அதில் வெளிப்பட்டது. எனக்கு இதுபற்றி மிகப்பெரும் வருத்தம்தான்.

தமிழில் 24 மணிநேரமும் விளையாட்டுகள் (கிரிக்கெட் மட்டுமல்ல) பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு பண்பலை வானொலி நிலையம் வருவது சாத்தியமானதுதான். பிரிட்டனில் டாக் ஸ்போர்ட் என்றொரு வானொலி உள்ளது. அதைப்போல. டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, தடகளப் போட்டிகள் (ஒலிம்பிக்ஸ், தேசியப் போட்டிகள்) என்று பல்வேறு ஆட்டங்களைப் பற்றிய நேர்முக வர்ணனைகள், செய்திகள், நேர்முகங்கள், பழைய விளையாட்டுகளின் தொகுப்புகள் என்று பலவும் இருக்குமாறு செய்யலாம்.

அதற்கும் காலம் வரும்.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004

மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் இணையத்தளத்திலிருந்து: தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004, PDF கோப்பாக.

பிப்ரவரி 10-இலிருந்து 20-க்குள் ஏதோ ஒரு நாள் மதுரையில் மேற்படி மசோதாவின் மீதான ஒருநாள் கருத்தரங்கு நடக்க உள்ளது. இதை நடத்துவது Public Expenditure Round Table (PERT) (அ) பொதுச்செலவுகள் வட்ட மேசை என்னும் அறக்கட்டளை.

இந்தக் கருத்தரங்கு பற்றிய முழு விவரங்கள் எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் இதுபற்றி இங்கு அறிவிக்கிறேன். பொதுச்செலவுகள் வட்ட மேசையின் இணையத்தளம் (ஆங்கிலத்தில்) தயாராகிக் கொண்டிருக்கிறது. தயாரானதும் அதன் தள முகவரியையும் அறிவிக்கிறேன்.

வலைவலம் - 1

தினமும் தமிழ்மணம் புண்ணியத்தில் தமிழ் வலைப்பதிவுகளில் புதிதாகக் கிடைக்கும் பதிவுகள் செய்தியோடையாக எனது ஃபயர்ஃபாக்ஸ் உலாவிக்கு வந்துவிடுகிறது. உங்களில் பலரும் அவ்வாறே படிப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படியும் சில உங்கள் கண்களில் படாமல் போய்விடலாம். எனவே நான் கூர்ந்து படித்த சிலவற்றை உங்கள் முன் - இந்த வாரம் மட்டும் - வைக்கிறேன்.

நாரயணனின் போர்களின் கோரமுகங்கள் பற்றிய இரண்டு சினிமாக்களின் அறிமுகம்.

மதியின் ஃபைண்டிங் நீமோ படத்தில் நீமோவை வரைந்த டான் லீ நுரையீரல் புற்று நோயால் இறந்தது பற்றிய செய்தி. Finding Nemo, நானும் என் மகளும் வாரத்துக்கு ஒரு முறையாவது பார்க்கும் படம். செய்தி வருத்தத்தைத் தருகிறது.

ஆச்சிமகனின் கண்களைக் குருடாக்கும் லேசர் விளக்குகள் மலிவு விலையில் என்னும் பதிவு. எனக்கு இதில் சந்தேகம் உள்ளது. இது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதது என்றுதான் நினைக்கிறேன். லேசர் நிபுணர் வெங்கட் பதிவில் இதுபற்றிக் கேட்டிருக்கிறேன்.

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு

ஸ்வதேஷி ஜாகரன் மஞ்ச் எனப்படும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம், 12 பிப்ரவரி 2005, சனிக்கிழமை அன்று சென்னையில் ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இடம்: டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை, அறிவியல் பெண்கள் கல்லூரி, 11-13, துர்காபாய் தேஷ்முக் சாலை, அடையார், சென்னை (ஆந்திர மகிள சபா எதிரில்). நேரம்: காலை 9.30 முதல் மாலை 4.30 வரையில்.

காலையில் இரண்டு முக்கியமான பேச்சுகள் உள்ளன.

1. உலக வர்த்தக அமைப்பும், உலகமயமாதலும், காப்புரிமையும் - ஒரு பார்வை : குமாரசுவாமி.
2. இந்தியச் சூழலில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் - முரளிதரன்

இதைத்தவிர சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், கலந்துரையாடலும் நடைபெறும்.

கலந்துகொள்வதற்குக் கட்டணம் ரூ. 50. மதிய உணவும், இடையிடையே காபி, டீயும் வழங்கப்படும்.

கலந்துகொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள: ரவி வானமாமலை - 98415-91518, ஸ்ரீதர் - 94441-90977