Thursday, July 31, 2008

தமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்

லயோலா கல்லூரியில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு தமிழ்வழியில் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தப் படிப்பைத் தொடங்கிவைத்த அமைச்சர் பொன்முடி, “ஆங்கிலம் தொடர்புக்கான ஒரு மொழியாக இருக்கலாமேதவிர, தமிழ்தான் பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தச் செய்தி தி ஹிந்துவில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. தினமணி, தினமலரில் தேடிப்பார்த்தேன். இணையத்தில் கிடைக்கவில்லை.

லயோலா கல்லூரி போன்ற பெயர்பெற்ற கல்லூரிகள் பல வகுப்புகளை தமிழில் நடத்துவதன்மூலம் நல்ல பயிற்றுவிக்கும் முறைகளை ஏற்படுத்தலாம்.

பொன்முடி மேற்கொண்டு இவ்வாறு கூறியுள்ளார்:
The Minister took a dig at the modern-day boys and girls for their preference to converse in improper English rather than in proper Tamil. Mr. Ponmudy said the reason for his advocacy of Tamil was simple: effective expression was possible only in one’s mother tongue. The exactness of expression was a vital function of the print and electronic media.
சரியான தமிழில் பேசுவதற்குபதில், அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதை மாணவர்கள் ஏன் விரும்புகிறார்கள்? உளவியல்ரீதியில் இதனை ஆராயவேண்டும். ஆனால் பொன்முடியின் “ஒருவரது தாய்மொழியில்தான் ஒருவரால் கருத்துக்களைத் திறம்பட வெளிப்படுத்தமுடியும்” என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. பல மொழிகளில் தேர்ச்சிபெற்றவர்களால் அவரவரது தேர்ச்சிக்குத் தக்கவாறு பிற மொழிகளிலும் கருத்துக்களை மிக நன்றாக வெளிப்படுத்தமுடியும். ஆனாலும், தாய்மொழியில் எழுதுவதும் பேசுவதும், பிறமொழிகளில் எழுதுவதையும் பேசுவதையும்விட எளிது என்று ஒப்புக்கொள்வேன்.

Wednesday, July 30, 2008

ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1

பூமி தன்னை நோக்கி அனைத்துப் பொருள்களையும் இழுக்கும் சக்தி கொண்டது. அத்தகைய இழுக்கும் விசையைத்தான் புவி ஈர்ப்பு விசை என்கிறோம். சொல்லப்போனால் எடையுள்ள எல்லாப் பொருள்களுமே தன்னை நோக்கி பிற பொருள்களை இழுக்கும். எடை அதிகமானால் இழுவிசையும் அதிகமாக இருக்கும். அதைப் போன்றே தனக்கு வெகு அருகில் உள்ள பொருளை அதிக விசையுடன் இழுக்கும். தூரத்தில் உள்ள பொருளை குறைந்த விசையுடன் இழுக்கும்.

பூமி மிகக் கனமான ஒரு பொருள். அது தன் மீதுள்ள அனைத்துப் பொருள்களையும் தன்னை நோக்கி இழுக்கிறது. அதனால்தான் வானில் தூக்கி எறியப்படும் அனைத்துப் பொருள்களும் மீண்டும் கீழே விழுகின்றன. பூமி, சந்திரனையும் தன்னை நோக்கி இழுக்கிறது. ஆனால் அது ஏன் பூமியின்மீது விழாமல், பூமியைச் சுற்றிவருகிறது? கவனமாகப் பார்த்தால் சுற்றுவதும் விழுவதற்கு ஒப்பானதே! இதை நியூட்டன் புரிந்துகொண்டதும் அவருக்கு வான்வெளியில் உள்ள பொருள்கள் ஒன்றை ஒன்று ஏன் சுற்றுகின்றன என்று தெளிவாகிவிட்டது.

ஒரு கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் உயரே தூக்கிப் பிடித்து, கையை விட்டுவிடுங்கள். பொத்தென்று நேராகக் கீழே விழுகிறது. அடியில் உள்ள படத்தில் இருப்பதைப் போல.

அடுத்து, அதே கல்லை எடுத்துக்கொண்டு கொஞ்சம் பக்கவாட்டில் விசை கொடுத்துத் தள்ளிவிடுங்கள். இப்போது நேராகக் கீழே விழாமல், சறறு தள்ளி, ஒரு வளைந்த பாதையில் விழுகிறது.

சந்திரனும்கூட இப்படிப்பட்ட ஒரு கல்தான். யாரோ அதைப் பக்கவாட்டில் பிடித்துத் தள்ளிவிட்டார்கள். அதுவும் நல்ல வேகமாக. இப்போது அது விழுகிறது, ஆனால் தள்ளி விழும்போது பூமியின் மேல் விழாமல், சற்று தள்ளிப்போய் விழுகிறது. அங்கும் இதே நிலை. ஒவ்வொரு கட்டத்திலும் அது பூமியை நோக்கி விழவேண்டும், ஆனால் விழும்போது சற்றே தள்ளி இருக்கிறது. எனவே பூமியைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.

ஆக, சந்திரன் பூமியைச் சுற்றுவதும், கல் பூமியின் மேல்பரப்பில் விழுவதும் ஒன்றுதான். இதைச் செய்வது பூமியின் ஈர்ப்பு விசை.

பூமியின் மேல் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் பூமி இழுப்பதைப் போல, சந்திரனும் இழுக்கிறது. ஆனால் நாம் பறந்து சந்திரனை அடைவதில்லை. அதற்குக் காரணம், சந்திரனின் இழு விசையைவிட, பூமியின் இழுவிசை அதிகம். ஏனெனில் பூமியின் எடை சந்திரனின் எடையைவிட அதிகம். மேலும் நாம் பூமிக்கு அருகிலும் சந்திரனுக்கு வெகு தொலைவிலும் உள்ளோம்.

அதேபோலத்தான் சூரியனும் நம்மை இழுக்கிறது. சூரியன் பூமியைவிட அதிக எடைகொண்டதாக இருந்தபோதிலும், வெகு தொலைவில் இருப்பதால், பூமியைவிட வலுவாக நம்மை சூரியனால் இழுக்கமுடிவதில்லை. நல்ல வேளை! இல்லாவிட்டால் நாம் பறந்துசென்று சூரியனில் விழுந்து எரிந்து சாம்பலாகியிருப்போம்.

***

இப்படி பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்துப் பொருள்களையும் பூமி பிடித்து இழுப்பதால்தான் நாம் மிதக்காமல் இருக்கிறோம். தரையில் கால் பதித்து நடக்கிறோம். நம்மால் இந்த இழுவிசையை எதிர்த்து மேலே போகமுடிவதில்லை.

ஆனால் சில உயிரினங்கள் சர்வசாதாரணமாக இந்தக் காரியத்தைச் செய்கின்றன.

1. பறவைகள், பறக்கும் பூச்சிகள். இவை வெகு சாதாரணமாகக் காற்றில் மிதக்கின்றன. பூமி இவற்றைப் பிடித்து இழுத்தாலும் இவை விழுவதில்லை. எப்படி முடிகிறது இவற்றால்?

2. சிறு பூச்சிகள் (எறும்பு, கரப்பு, கொசு, ஈ, சிலந்தி) சுவர்மீது ஜாலியாக நிற்கின்றன. அவை கீழே விழுவதில்லை. நிற்பதோடு இல்லாமல் ஊர்ந்து மேலும் கீழும் செல்கின்றன. எப்படி? அவற்றை ஈர்ப்பு விசை தாக்குவதில்லையா?

3. பல்லி போன்றவை மேலும் சில ஜாலங்களைப் புரிகின்றன. அந்தரத்தில் கூரைமீது தலைகீழாக அவை நடக்கின்றன. தாம் விரும்பினால் மட்டுமே அவை கீழே குதிக்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது?

சென்ற வாரம் என் மகளுக்கு உதித்த சந்தேகம் இது. அதன் விளைவாக இந்தப் பதிவுகள்.

அடுத்த சில பதிவுகளில், எப்படி இந்தச் சில உயிர்கள் புவி ஈர்ப்பு விசையை எதிர்கொள்கின்றன என்று பார்ப்போம்.

தமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா?

இன்று தி ஹிந்துவில் வந்த செய்தி: It’s Tamil medium, yet learning proves a challenge

தமிழில் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் இடைவெளி இருப்பதால் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் தமிழில் இருக்கும் அறிவியல், கணிதப் பாடங்களைப் படிக்கத் தடுமாறுகிறார்கள் என்கிறது செய்தி. கூடவே ஆங்கிலத்தில் இந்த diglossia இல்லாதிருப்பதால் இந்த அளவுக்குப் பிரச்னைகள் இருப்பதில்லை என்கிறது.

இது முழுத் தவறான வாதம்.

ஆங்கிலத்தில் ஒரு இழவும் புரிந்துகொள்ளாமல்தான் மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழில் பேச்சு வழக்கில் “புவி ஈர்ப்பு சக்தி” என்பதை நாம் பயன்படுத்துவதில்லை என்கிறார் ஒரு மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர். எதைச் சொல்லி அழ? (“புவி ஈர்ப்பு விசை”) இதில் எது கஷ்டம்? புவியா, ஈர்ப்பா, சக்தி அல்லது விசையா? அனைத்தும் தினசரிப்புழக்கத்தில் உள்ளவைதானே? புவியியல் என்பதுதானே பள்ளிக்கூடப் பாடத்தின் பெயர். “பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ்” என்று அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்றா இந்த ஆசிரியர் விரும்புகிறார்? சரி, Gravity என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படிப் புரிந்துகொள்வது? அப்படியே தெள்ளத் தெளிவாகவா இது புரிகிறது? இதன் வேர் வார்த்தை என்ன என்று ஆங்கிலத்தில் பேசும் எத்தனை பேருக்குத் தெரியும்? இதில் ஈர்ப்பு என்ற பொருள் எங்கிருந்து வருகிறது? பூமி என்பது (அல்லது பிற கோள் அல்லது பெரும் பொருள்) எங்கே உள்ளது? இழுவிசை அல்லது சக்தி எங்கே உள்ளது?

மற்றுமொரு ஆசிரியர் சொல்கிறார்: “Children find it hard not only while learning subjects such as science. Even in Tamil itself, they have to constantly learn very complex terms. Without any choice, they resort to memorising without any understanding.”

ஆசிரியர்கள் விளக்கிச் சொல்லும்போதுதானே கடினமான சொற்களின் பொருள் புரியும். பொருள் விளங்குமாறு சொல்லத் தெரியாது, மொழியையே குற்றம் சொல்கிறாரே இந்த ஆசிரியர்?

அடிப்படைப் பிரச்னை அதுவல்ல. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்கள் படிக்கச் சகிக்காமல் கேவலமாக உள்ளன. மகா மோசமான மொழியில் படிக்கும் எந்த மாணவனுக்கும் ஒரு இழவும் மண்டையில் ஏறுவதில்லை. அத்துடன், நம் ஆசிரியர்கள் கற்பிக்கும் திறன் பிரமாதமாக வேறு உள்ளதா? அதில் நமது பரீட்சை முறையையும் சேர்ப்போம். இவையனைத்தும் சேர்ந்த கலவையில் சிறு குழந்தைகள் திக்குமுக்காடிப் போகின்றன.

மாற்றம், புத்தகங்களிலிருந்தும் கற்பிக்கும் முறையிலிருந்தும் ஆரம்பிக்கப்படவேண்டும்.

அதற்கு இணைய வஸ்தாதுகள் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, நல்ல, எளிமையான தமிழில், அறிவியலையும் கணிதத்தையும் எழுதவேண்டும். வரலாற்றையும் பிற பாடங்களையும்கூடத்தான்.

வெகுஜன இதழ் மொழியில் (ஆனால் தேவையில்லாத ஆங்கிலச் சொற்களை விலக்கி), மாணவர்கள் விரும்பிப் படிக்கும் மொழியில் புத்தகங்கள் கிடைத்தால் அதுவே நல்ல மாற்றமாக அமையும்.

Tuesday, July 29, 2008

காந்தியும் கல்விச் செலவும்

காந்தி இங்கிலாந்துக்குச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற மொத்தம் செலவு செய்தது ரூ. 13,000. அதாவது அன்றைய நாணய மாற்று விகிதத்தில் 1000 பவுண்டுகள். இதில் பயணச் செலவு, கல்விக் கட்டணம், உடை, உணவு, தங்குமிடச் செலவு, கொஞ்சம் டம்பச் செலவுகள் (டான்ஸ் ஆடக் கற்றுக்கொண்டது, தங்கியிருக்கும் வீட்டின் பெண்களை சாப்பிட அழைத்துச் சென்றது என்ற வகையில்).

இத்தனைக்கும் பனியாவான காந்தி, தான் செய்த செலவு ஒவ்வொன்றுக்கும் கணக்கெழுதி, எப்படியெல்லாம் செலவைக் குறைப்பது என்று திட்டமிட்டு, தங்குமிடத்தைச் சரியாகத் தேர்வு செய்து, மேலும் பல சிக்கனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்.

காந்தியின் குடும்ப நண்பர் ஒருவர் பாரிஸ்டர் படிப்புக்கு 400 பவுண்டுகள் ஆகும் என்று சொல்லியிருந்தார். ஆனால் செலவு அதைப்போல இரண்டரை மடங்கு ஆனது.

இதென்ன பெரிய விஷயம்? வேலை பார்க்க ஆரம்பித்தால் கட்டு கட்டாகப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிவிடாதா என்று நீங்கள் கேட்கலாம். சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது ஓர் இளைஞன் பக்கத்தில் இருந்தவரிடம் தான் விமான பைலட் வேலைக்குப் பயிற்சி மேற்கொண்டிருப்பதாகவும் ஓர் ஆண்டுப் படிப்புக்கு ரூ. 25 லட்சம் ஆகும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அப்படிச் செலவு செய்யும் பணத்தை இரண்டே வருடங்களுக்குள் திரும்பப் பெற்றுவிடமுடியும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான்.

அதைப்போல காந்தியும் ஓரிரு ஆண்டுகளில் ரூ. 13,000 சம்பாதித்துவிடமாட்டாரா என்ன?

ஆனால் உண்மை வேறுமாதிரியாக இருந்தது. மும்பையில் ஆறு மாதங்கள் தங்கி வழக்கு ஏதும் கிடைக்குமா என்று பார்த்திருக்கிறார். கமிஷன் கொடுக்காமல் வழக்கு கிடைக்காது என்று தெரியவந்ததும், காந்தி அதனை விரும்பவில்லை. ராஜ்கோட் திரும்பிவிட்டார். தன் தந்தையைப் போன்று ஆண்டுக்கு ரூ. 300 வருமானம் கிடைத்தாலே போதும் என்று முடிவெடுத்தார். ஆண்டுக்கு ரூ. 300 என்றால், செலவு செய்த ரூ. 13,000-ஐத் திரும்பப் பெற 40 ஆண்டுகளுக்கு மேலாகும்!

சில மாதங்கள் கழித்து காந்திக்கு தென்னாப்பிரிக்கா செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வேலையும் போக வர டிக்கெட் செலவுபோக, ஆண்டுக்கு 105 பவுண்ட் என்ற கணக்கில் இருந்தது. அப்படியே என்றாலும் பாரிஸ்டர் படிப்புக்குச் செலவழித்த தொகையைத் திரும்பப் பெற பத்தாண்டுகளாவது ஆகும்!

ஆக, என்ன தைரியத்தில் பணம் செலவு செய்து காந்தி இங்கிலாந்து படிக்கப் போனார்? எப்படி காந்தியின் அண்ணன் லக்ஷ்மிதாஸ் அவ்வளவு பணத்தைத் தயார் செய்தார்? காந்தியின் குடும்பம் கஷ்டப்படும் குடும்பமல்ல. காந்தியின் தந்தையும் பாட்டனாரும் சிறு சமஸ்தானத்தின் பிரதம மந்திரியாக இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்ததாகத் தெரியவில்லை.

***

கல்விக்குச் செலவு செய்வதற்கு நடுத்தர வர்க்க மக்கள் கொஞ்சம்கூட அஞ்சுவதில்லை. கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை வெகுவாக அதிகமாக்கிவிட்டன. தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என்றில்லை, அரசின் பொறியியல் கல்லூரிகள் முதல் கலை அறிவியல் கல்லூரிகள்வரை கல்விக்கட்டணம் அதிகமாகத் தோன்றுகிறது. சாதாரண தொடக்கக் கல்விக்கே பல பள்ளிகளில் தடாலடிக் கட்டணம் நிலவுகிறது. அப்படியெல்லாம் படித்தால்தான் மக்கள் பெரும் அறிஞர்களாக வருவார்கள் என்று பெற்றோரும் நினைத்துக்கொள்கின்றனர்.

நான் 12-ம் வகுப்பு வரை படித்தது அரசு உதவி பெற்ற தனியார் பள்ளிகளில். ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டுக் கட்டணம் ரூ. 15 என்று ஞாபகம். 6-12 படித்தது ஆங்கில மீடியத்தில். அதற்காக மாதம் ரூ. 20 என்ற அளவில் அபராதக் கட்டணம் மாதிரி ஒன்று இருந்ததும் ஞாபகம் உள்ளது. அப்படியும் ஆண்டுக்கு ரூ. 400க்குள்தான் இருக்கும்.

நான் ஐஐடியில் படித்தபோது ஆண்டுக் கட்டணம் ரூ. 200. (ஆம், வெறும் இருநூறுதான்!) ஹாஸ்டல் தங்குமிடத்துக்கு ஆண்டுக் கட்டணம் வெறும் ரூ. 100! தனி அறை வேறு. சாப்பாட்டுக்கு முதல் ஆண்டில் மாதத்துக்கு ரூ. 275 வரை ஆனது. பின் நான்காம் ஆண்டு வரும்போது ரூ. 450 வரை உயர்ந்துவிட்டது. இது மிகவும் குறைவான கட்டணம்தான். இந்த அளவுக்கு சப்சிடி கொடுத்திருக்கவேண்டுமா என்று கேட்கலாம். அதுவும் அந்தக் கட்டத்தில்தான் பெருமளவு ஐஐடி மாணவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர்.

எனக்கு கல்விக்கென அதிகமாகச் செலவானது அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்குச் செல்லும் முன்னேற்பாடுகளின்போதுதான். 1989-1990 சமயம். இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்துக்கு விழுந்துகொண்டிருந்த நேரம். மாதா மாதம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இறங்கிக்கொண்டிருந்தது. GRE எழுதும்போது டாலர் 8 ரூபாயாக இருந்தது என்று ஞாபகம். அது மளமளவென்று ஏறி TOEFL, GRE-Subject Test ஆகியவற்றை நெருங்கும்போது 12, 14, 15, 16 என்று ஆகிவிட்டது.

ஆனால் இதிலும் பல பணம் சேமிக்கும் யோசனைகளை சீனியர்கள் கற்றுக்கொடுத்தனர். எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் GRE-Subject Test தேவையில்லை. சிலவற்றுக்கு மட்டும்தான் தேவை. சில, GRE-General Test போதும் என்று சொல்லிவிடும். பரீட்சை எழுதும்போதே நாம் சொல்லும் மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பரீட்சை நடத்தும் ETS ஸ்கோரை அனுப்பிவிடும். எனவே முதலில் General Test எழுதும்போது அந்த ஸ்கோர் எந்தப் பல்கலைக்கழகங்களுக்குப் போகவேண்டுமோ அவற்றை மட்டும் குறிப்பிட்டால் போதும். அடுத்து Subject Test எழுதும்போது, இரண்டு ஸ்கோரையும் சேர்த்தே அனுப்புவார்கள். அப்போது மேலும் மூன்று பல்கலைக்கழகங்கள் பெயரை - இம்முறை சப்ஜெக்ட் ஸ்கோரையும் எதிர்பார்க்கும் இடங்களை - குறிப்பிடவேண்டும்.

TOEFL ஸ்கோர் நேரடியாக எந்த இடங்களுக்குச் சென்றதோ, அவற்றைத் தவிர மீதி இடங்களுக்கு ஃபோடோகாப்பி எடுத்து அனுப்பித்து தப்பித்துக்கொண்டேன். அதற்கென தனிச் செலவு ஏதுமில்லை.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பக் கட்டணம் சேர்த்து அனுப்பவேண்டும். 25 முதல் 60 டாலர் வரை இருக்கும். அதிலிருந்து தப்ப, “ஐயா, எனது தந்தையின் ஆண்டு வருமானம் xxxx டாலர்கள்தான். ஆகவே தயைகூர்ந்து கட்டணத்தைத் தள்ளுபடி செய்து, எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்” என்று ஒரு அழுகைக் கடிதத்தை அனுப்பவேண்டும். ஆனால் ஒரு ரிஸ்க் உண்டு. சிலர் விண்ணப்பத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிடுவார்கள்.

இந்த வழியைப் பின்பற்றி, ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு நான் விண்ணப்பித்திருந்தேன் (எம்.ஐ.டி, கார்னல், அர்பானா ஷாம்பெய்ன், ஒஹாயோ, ஆர்.பி.ஐ.).

இவற்றில் எம்.ஐ.டி தவிர நான்கு இடங்களிலும் கிடைத்தது. அதுவும் ஏழாவது செமஸ்டர் லீவிலேயே. அப்போதே கார்னலைத் தேர்ந்தெடுத்து, இத்தாகா செல்ல விமான டிக்கெட் வாங்கிவிட்டேன். ஆகஸ்டில் இத்தாகாவில் இருக்கவேண்டும். பிப்ரவரியிலேயே டிக்கெட் வாங்கிவிட்டதால் கணிசமான சேமிப்பு. அதற்குப் பிறகு ரூபாய் மேலும் கடுமையாகச் சரிந்தது.

அடுத்து உடைகள், சூட்கேஸ்கள், கையில் கொஞ்சம் பணம் (அன்றைய தேதியில் கையில் $ 500தான் அதிகமாக எடுத்துச் செல்லமுடியும்) என்று எடுத்துக்கொண்டு செல்லவேண்டுமே.

இந்தக் கட்டத்துக்குள்ளாகவே என் தந்தை அவரது பி.எஃப்பின் ஒரு பகுதியை மூடி, பணம் எடுக்கவேண்டியதாயிற்று. கல்விக் கடன் என்பது எந்த அளவுக்கு இருந்தது என்று தெரியாது. இருந்தாலும் அதை எடுக்க என் தந்தை ஒப்புக்கொண்டிருக்கமாட்டார். கடன் வாங்குவது பாவம் என்பது அவரது கொள்கை.

ஆனால் உண்மையில் இந்த அளவுக்கு பணம் பற்றி கஷ்டப்பட்டிருக்கத் தேவையில்லை. கார்னல் வந்து ஆறு மாதங்களுக்குள்ளாக உதவித்தொகை சேமிப்பிலிருந்து அந்தப் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டேன். எனவே தைரியமாகக் கடன் வாங்கியிருக்கலாம்.

***

இன்று நடுத்தர வர்க்கத்து மக்களால் மட்டுமே கல்விக்கடன் பெறமுடியும் என்று தோன்றுகிறது. இந்த வர்க்கத்துப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் படிப்புக்காக குழந்தை பிறந்த அன்றிலிருந்தே சேமிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆனால், அடித்தளத்து மக்களால் கல்விக் கடன் பெறுவது சாத்தியமா என்று தோன்றவில்லை. நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வங்கிகளில், நிலம் அல்லது வீடு எதையாவது அடமானத்துக்குக் கேட்கிறார்கள் என்றார். மேலும் இன்று சாதாரண பொறியியல் கல்லூரி என்றால் படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் ஒருவரால் கடன் பெறமுடியும்?

இணையத்தில் அவ்வப்போது ஏழை மாணவர்கள் சிலரது படிப்புக்குப் பணம் சேர்த்துக் கொடுப்பதைப் பார்க்கிறோம். வேறு பலர், வெளியே விஷயம் தெரியாமல் இதுபோன்ற உதவிகளைச் செய்யக்கூடும்.

இதைப் பற்றி யோசிக்கும்போது kiva.org என்ற தளம் ஞாபகத்துக்கு வந்தது. இது குறுங்கடன் வழங்குவதற்கான ஒரு பிளாட்ஃபார்ம். இங்கே கடன் கேட்பவர்கள், கடன் தருபவர்கள் என இருவரும் வந்து சேர்கிறார்கள். கடன் தருபவர்கள் யாருக்குத் தரலாம் என்று தாங்களே முடிவுசெய்யலாம்.

அதைப்போன்றே கல்வி உதவிக்காக என்று ஒரு தளத்தை உருவாக்கலாம். அதில் உதவி தேவைப்படுபவர்கள் தங்களைப் பதிந்துகொள்ளலாம். தாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம் என்பதற்கு சில அறியப்பட்ட பதிவர்களை சாட்சிகளாக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு கல்விக்கு என பண உதவி செய்ய விரும்புபவர்கள் இரண்டு விதங்களில் உதவிகளைச் செய்யலாம். (1) பணத்தை வட்டியில்லாக் கடனாகக் கொடுப்பவர்கள்; (2) பணத்தை இலவசமாகக் கொடுப்பவர்கள்.

இதில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிக்கூடம், பாலிடெக்னிக் என எங்கு படிப்பவராயினும் இணைந்து உதவியைக் கோரலாம். Kiva.org போன்றே, தளம் நடத்துபவர்கள், உதவி பெற்றவர்களின் முன்னேற்றத்தைப் பதிவு செய்யலாம்.

சாத்தியமா?

Monday, July 28, 2008

சுப்ரமண்யபுரம்

எந்தக் கதையாக இருந்தாலும் முதலில் தவறுகள் ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும். பிற படங்கள் குப்பை என்பதால் மட்டுமே சுப்ரமண்யபுரத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடக்கூடாது.

தொழில்நுட்ப ரீதியில் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பல இடங்களில் கேமரா கிரெய்னியாக வருகிறது. (முரட்டுக்காளை படக் காட்சிகளைச் சொல்லவில்லை.)

கதைக்கு வருவோம்.

பொதுவாக ரிமாண்டில் (judicial custody) இருக்கும்போது “கைதிகள்” அவர்கள் கொண்டுவந்த உடையை அணியலாம். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் ஜெயில் உடையை மட்டும்தான் அணியவேண்டும். இது சினிமாவில் சரியாக வந்துள்ளது. பல படங்களில் இதை சொதப்பிவிடுவார்கள். ஆனால் பெயில் விஷயம் ஆரம்பிக்கும்போது சொதப்புகிறார் இயக்குனர்.

எந்தக் குற்றங்களுக்கெல்லாம் பெயில் கொடுக்கலாம்? எதற்கு பெயில் கொடுக்கமாட்டார்கள்? கொலைக்குற்றம், அதுவும் திட்டமிட்டுக் கொலை செய்தது (murder, not involuntary manslaughter) என்பது பிணை கொடுக்கக்கூடாத ஒரு குற்றம். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்னும் பட்சத்தில் செஷன்ஸ் கோர்ட் பொதுவாக பெயில் வழங்காது. ஒரு உயர் நீதிமன்றம்தான் பிணை வழங்கும். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மேஜிஸ்டிரேட் முன்னால் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளனர் குற்றவாளிகள். எனவே நிச்சயமாக இதற்கு மதுரையில் பெயில் கொடுத்திருக்கமாட்டார்கள். (1980களில் மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை கிடையாது என்பதை நினைவில் வைக்கவும்.)

ஆனால் அழகுவும் பரமனும் பெயிலில் வருகிறார்கள்.

அடுத்து பெயில் கொடுக்கும்போதும் ஒரு காவல் நிலையக் கட்டுப்பாட்டுக்குள் வந்து தினசரியோ அல்லது வாராவாரமோ அல்லது மாதாமதமோ கையெழுத்திடவேண்டும். இவர்கள் செய்த குற்றத்துக்கு உயர் நீதிமன்றமே பெயில் கொடுத்தாலும், ஒரு காவல் நிலையத்துக்கு தினசரி வந்து கையெழுத்திட்டுச் செல்லுமாறு சொல்லியிருக்கும். ஆனால் அப்படி ஏதும் படத்தில் நடப்பதில்லை. பெயிலின் கட்டுப்பாடுகளை மீறினால், பெயிலை கேன்சல் செய்து, உடனே உள்ளே தள்ளி, மேற்கொண்டு பெயில் தராமல் செய்துவிடுவார்கள்.

ஆனால் இங்கே குற்றவாளிகள் சர்வசாதாரணமாகத் தெருவில் உலாவுகிறார்கள். முனி என்பவனைப் போட்டுத் தள்ளுகிறார்கள். முனியின் ஆட்கள் அழகுவையும் காசியையும் துரத்தி பயமுறுத்துகிறார்கள் ஆனால் போலீஸுக்கு அழகு, பரமன் எங்கே என்று தெரியவில்லை. தொடர்ந்து அழகு, பரமன், காசி மூவரும் சேர்ந்து முனியின் ஆட்கள் மூன்று பேரைப் போட்டுத் தள்ளுகிறார்கள். இங்கு செத்த பிணங்களைப் பார்க்க போலீஸ் வருகிறது. ஆனால் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்காமல் திகைக்கிறது போலீஸ்.

அரசியல்வாதி வீடுபுகுந்து ரகளை செய்துவிட்டுப் போனபின்னரும், யார் செய்திருப்பார்கள் என்று தெரிந்தபோதிலும் தன் வீட்டுக்கு மட்டும் காபந்து கேட்கிறார் அரசியல்வாதி (சேது?). ஆனால் அவரது தம்பியும் (உயிர் ஆபததில் இருப்பவர்) அண்ணனும் எந்தக் கவலையும் இன்றி உலாவுகின்றனர்.

பழனிச்சாமி கொலையில் அழகுவும் பரமனும் மட்டும்தான் ஈடுபட்டுள்ளனர் என்று அலிபை தயாரித்து காவல்துறையை நம்பவைக்கலாம். ஆனால் பழனிச்சாமியின் குடும்பம், அடிப்பொடிகள் ஆகியோர் நம்புவார்களா? கட்சி மேலிடம் அதை நம்பி, அடுத்து நேராக சேதுவை கட்சித் தலைவராக்குமா?

அந்த ஊரில் மருந்துக்கும்கூட எதிர்க்கட்சியே காணோமே? அறிக்கைகள் விடமாட்டார்களா? கொலைகள் நடக்கும்போது பொதுமக்கள் மிரளமாட்டார்களா? அவர்கள் பாட்டுக்கு நகர்ந்து வழிவிட்டு அடுத்தவேளை ஆட்டுக் குழம்பு வைக்கப் போய்விடுகிறார்கள்.

எல்லாக் கொலைகளுக்கும் சேர்த்து, கடைசியாக காசு வாங்கிய காசிக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. ஆனால் அவன் சிறையை விட்டு வெளியே வரும்போது யார் அவனை போட்டுத் தள்ள முயற்சி செய்கிறார்கள்? கால் நொண்டி கடைசியாக மூச்சுமுட்டவைத்துக் கொலை செய்கிறான். ஆனால் முக்கியமான போலீஸ் விசாரணைக்கு காசி தேவை என்ற நிலையில் ஒரு காவலர்கூடவா வாசலில் இருக்கமாட்டார்?

1980களில் சென்னைக்கு வெளியே ஆட்டோக்கள் இருந்து நான் பார்த்ததில்லை. சுப்ரமண்யபுர கொலைகார ஆட்டோ சற்றே உறுத்துகிறது. இஷ்டத்துக்கு மூன்று பெயர் தெரியாத, முகம் தெரியாத ஆட்கள் முனியைக் கொலைசெய்ய சவ ஊர்வலத்துக்கு நடுவில் வருவதைக் கண்டுகொள்ளாத கூட்டம் உறுத்துகிறது. காலேஜ் பெண் “infatuation” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உறுத்துகிறது. கதாநாயகி “gift” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உறுத்துகிறது.

படம் கடைசியில் ரொம்பவே இழுத்துக்கொண்டு சென்றதோ என்றும் தோன்றுகிறது.

இருந்தாலும், படம் தேறிவிட்டது. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டாலும் சத்யம், ஐநாக்ஸ் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது படத்துக்கு அனைத்துவித மக்களிடமும் உள்ள ஆதரவைக் காண்பிக்கிறது. பல தியேட்டர்களில் தசாவதாரத்தை எடுத்துவிட்டு இந்தப் படத்தைப் போட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

அரசியல்வாதியின் வஞ்சகத்துக்கு பலியாகும் இளைஞர்கள்; ஏன் என்றே தெரியாமல் வன்முறையில் இறங்கி வாழ்க்கையைத் தொலைக்கும் இளைஞர்கள்; வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு, “நாம சந்தோஷமாத்தானடா இருந்தோம்” என்று சொல்லும் இளைஞர்கள்; தெருவில் மங்கையர் கடைக்கண் பார்வைக்காக சைக்கிளில் சில கிலோமீட்டர்கள் சென்று வழிந்துவிட்டு, மீண்டும் எங்கோ தெருவோரக் கடையில் உட்கார்ந்து சிகெரெட் பிடித்துச் சீரழியும் இளைஞர்கள் பலரை 35 வயதுக்கு மேற்பட்ட நாம் பல இடங்களில் பார்த்திருப்போம், அல்லது அவர்களாகவே இருந்திருப்போம். அவர்களது தொலைந்த வாழ்க்கையைத் திரையில் பார்க்கும் deja-vu-தான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம்.

Sunday, July 27, 2008

நான் வெஜிட்டேரியன்

ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ள “Mohandas” படித்துக்கொண்டிருக்கிறேன். அது எழுப்பும் நினைவுகளை அவ்வப்போதே எழுதிவைத்துவிட எண்ணம்.

மோகன்தாஸ் காந்தி ராஜ்கோட்டில் இருக்கும்போது மாமிசம் சாப்பிடுகிறார். மேஹ்தாப் என்ற முஸ்லிம் நண்பர் அறிமுகப்படுத்துகிறார். இதே நண்பர்தான் மது, விபசாரம் ஆகியவற்றையும் காந்திக்கு அறிமுகப்படுத்துகிறார். மாமிசம் சாப்பிட்டால் உடல் வலுவாகும், ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டுத் துரத்த உதவும் என்பது காந்தியின் எண்ணம்.

ஆனால் காந்தி இங்கிலாந்துக்குச் செல்ல முற்படும்போது தாய் புத்லிபாயிடம் சில சத்தியங்களைச் செய்துகொடுக்கிறார். (1) மாமிசம் சாப்பிடமாட்டேன் (2) மது குடிக்கமாட்டேன் (3) பிற பெண்களைத் தொடமாட்டேன். இதற்குள்ளாக காந்திக்கு கஸ்தூர் என்பவருடன் திருமணமாகி ஹரிலால் என்ற குழந்தையும் பிறந்துவிட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இங்கிலாந்து சென்று லண்டனில் வசிக்கும்போது தாவர உணவு மட்டும் சாப்பிட்டால் பிழைக்கமுடியாது என்றுதான் அனைத்து இந்திய நண்பர்களும் சொல்கின்றனர். எப்படியோ சில நாள்கள், பிரெட், ஓட்ஸ் கஞ்சி என்று சாப்பிட்டுப் பிழைக்கும் காந்தி, தாவர உணவை மட்டுமே சமைக்கும், பரிமாறும் ஓர் உணவகத்தைக் கண்டுபிடிக்கிறார். தாவர உணவு மட்டுமே சாப்பிடுவோர் சேர்ந்து லண்டன் வெஜிட்டேரியன் சொசைட்டி என்ற அமைப்பை நடத்தி வருவதைக் கண்டுபிடிக்கிறார். அவர்கள் “வெஜிட்டேரியன்” என்ற பத்திரிகை நடத்துவதையும் கண்டுபிடிக்கிறார். காந்தி அந்த அமைப்பில் சேர்கிறார். அவர்களது பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதுகிறார். கூட்டங்களில் பேசுகிறார். லண்டனில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட தாவர உணவகங்களைக் கண்டுபிடிக்கிறார்.

***

நான் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தேன். உணவுப் பழக்கவழக்கங்களில் கடுமையான கட்டுப்பாட்டைப் பராமரிக்கும் குடும்பம். வீட்டில் வெங்காயம், பூண்டு சேர்க்கமாட்டார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் வெங்காயம் என்பதை வீட்டில் சேர்த்துக்கொள்ளாவிட்டாலும், பள்ளிக்கூடத்தில் ஸ்டாஃப் மீட்டிங் நடக்கும்போது தரும் வெங்காய பஜ்ஜி, போண்டாக்களை என் தந்தை அப்படியே எடுத்துக்கொண்டுவந்து எனக்குத் தருவார்.

பழக்கவழக்கத்தால் தாவர உணவை மட்டுமே சாப்பிடுபவனாக நான் வளர்ந்தேன். நடுவில் மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் எனக்கு முட்டை கொடுக்க என் தாய் முற்பட்டார். பச்சை முட்டையை உடைத்து பாலில் கலந்து கொடுத்தால் எனக்கு வாந்திதான் வந்தது. ஒரு கட்டத்தில் அதனைக் கைவிட்டுவிட்டனர்.

ஐஐடி படிக்கும்போது கோதாவரி ஹாஸ்டலில் நான் முட்டை ஆம்லெட் சாப்பிடப் பழகினேன். பிற தாவர உண்ணிகள், மீன், கோழி, ஆடு என்று பரிணாம வளர்ச்சி காண முற்பட்டபோது எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் வரவில்லை.

மேற்படிப்புக்கு கார்னல் பல்கலைக்கழகம் வந்தபோது, காந்திபோல் கஷ்டப்படுவோம் என்ற பயம் இருக்கவில்லை. மூன்று பேர் சேர்ந்து சமைத்துச் சாப்பிட்டோம். அரிசி, பருப்பு, காய்கறிகள் என அனைத்தும் இத்தாகாவில் கிடைத்தது. சாம்பார் பொடி, ரசப் பொடி வேண்டிய அளவு கொண்டுவந்திருந்தோம். ஆனாலும் என்றாவது வெளியே போய் உணவகங்களில் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்?

பிட்ஸா என்ற உணவுப்பண்டம் புதியதாகத் தென்பட்டது. மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு நாங்கள் ஒரு கடைக்குச் சென்று பிட்ஸா சாப்பிடுவது என்று முடிவுசெய்தோம். சீனியர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். ஆனால் வெட்கம். போய் ஆர்டர் செய்யும்போது மேலே என்ன டாப்பிங் வேண்டும் என்று கேட்டார்கள். கடையில் இருந்த பணிப்பெண்களுக்கு வெஜிட்டேரியன் என்றால் என்னவென்று புரியவில்லை. கடைசியாக பெப்பர் என்று பொருள் என்று நினைத்துக்கொண்டு பெப்பரோனி பிட்ஸா ஆர்டர் செய்து சாப்பிட்டோம். ருசி சகிக்கவில்லை. கஷ்டப்பட்டு கடித்து முழுங்கினோம்.

பிட்ஸா என்பது வேஸ்ட் என்று முடிவுசெய்து, சில நாள்கள் அதன் பக்கம் போகவில்லை. பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் மற்றுமொரு கடையில் பிட்ஸா. இந்தமுறையும் பெப்பரோனி. இப்போதும் டேஸ்ட் பிடிக்கவில்லை. ஆறு மாதம் கழித்து சீனியர் “பால்” (இவன் பெயர் அனந்தராமன். பால் என்று பெயர்வந்தது வேறு கதை) என்பவனிடம் கேட்க அவன் போட்டு உடைத்தான்!

பெப்பரோனி என்றால் மாடு, பன்றி மாமிசம் கலந்த கலவை. மிச்சம் மீதி மாமிசத் துண்டுகளை அரைத்து பிழிந்து குழாய் போன்றாக்கி, அதை துண்டு துண்டுகளாக நறுக்கி, பிட்ஸா மேல் போட்டு வைத்திருப்பார்கள்.

அதன்பின் பாலின் ஆலோசனையின்பேரில் பிட்ஸா ஹட்டிலிருந்து ஹாலோபென்யோ மிளகாய், பைனாப்பிள் கலவை பிட்ஸா சாப்பிடத் தொடங்கினோம். (இன்றுவரை எனக்குப் பிடித்த காம்பினேஷன் இதுதான்.)

அதன்பின், சாப்பிடும் இடங்களில் கவனமாக பலவற்றைத் தவிர்த்து, தாவர உணவாக மட்டுமே பார்த்து சாப்பிடத் தொடங்கினேன். ஒருமுறை வாஷிங்டன் டிசி சென்று செனேட், வெள்ளை மாளிகை ஆகியவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுவரும் ஒரு பயணம். அதில் சத்யாவும் என்னுடன் வந்திருந்தான். எல்லாம் முடிந்து திரும்பிவரும்போது கொலைப்பசி.

எங்கோ மெக்டானல்ஸ் கடை ஒன்றில் பஸ்ஸை நிறுத்தினார்கள். அப்போதெல்லாம் (1991) வெஜிட்டேரியன் என்ற ஒன்று மெக்டானல்ஸில் இல்லாத காலகட்டம். எனக்கு அது தெரியாது. பேசாமல் பிரெஞ்ச் ஃப்ரையுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் பசிக்கு அது போதாது. ஹாம்பர்கர் என்றால் என்ன என்று தெரியும். பக்கத்தில் சீஸ்பர்கர் என்று போட்டிருந்தார்கள். ஹாம்பர்கரில் ஹாம் என்றால் சீஸ்பர்கரில் சீஸ் என்று எளிமையான சூத்திரத்தைக் கடைப்பிடித்து வாங்கி உடனடியாகச் சாப்பிட்டு முடித்துவிட்டேன். சாப்பிடும்வரை சத்யா சிரித்துக்கொண்டே இருந்தான். முடித்தபிறகு “நீ இப்போது என்ன சாப்பிட்டாய் என்று தெரியுமா?” என்று கேட்டான். “சீஸ் வைத்திருந்த பன்” என்றேன். “இல்லை, அதுவும் ஹாம்பர்கர்தான். கூட ரெண்டு ஸ்லைஸ் சீஸ் வைத்திருப்பார்கள்” என்றான். அதற்குள் வயிற்றில் ஜீரணம் ஆகிவிட்டது.

விஷயம் தெரிந்ததும் உடனடியாக எல்லாம் வாந்தி வரவில்லை. சரி, ஒழியட்டும் என்று விட்டுவிடுவேன். ஆனால் ஊன் உணவைத் தேடிச் சென்றதில்லை.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக பர்கர் கிங் தொடங்கி ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனங்கள் அனைத்தும் வெஜிட்டேரியன் சாய்ஸ் ஒன்றாவது கொடுக்க ஆரம்பித்தன. பிட்ஸாவிலும் வெஜிட்டேரியன் வகை ஒன்றாவது (இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது வெறும் சீஸ் பிட்ஸா) இருக்கும். சாலட் என்பது கொஞ்சம் கொஞ்சமாக கண்ணுக்குத் தென்பட ஆரம்பித்தது. சப்வேயின் அரையடி, ஓரடி சாண்ட்விச்கள் வயிற்றை நிரப்ப ஆரம்பித்தன. பேகல், டோனட்ஸ் போன்ற அற்புதமான உணவுகள் தெரியவந்தன. மெக்சிகன் உணவகங்கள், கொரிய, எத்தியோப்பிய, இத்தாலிய, தாய் உணவகங்கள் என எங்கும் வெஜிட்டேரியன் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் 1960-1980-களில் அமெரிக்காவில் தாவர உண்ணிகள் நிலை இவ்வளவு எளிதாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

காந்தியின் உறுதியான மன நிலை இல்லாதவர்கள் சீக்கிரமே மாமிச உணவு உண்ணப் பழகியிருப்பார்கள்.

***

மாமிச உணவு உண்பது பாவம், தவறு என்ற கொள்கை எனக்குக் கிடையாது. மதம் தொடர்பான அல்லது கொல்லாமை போன்ற எண்ணங்களால் உந்தப்பட்டு நான் தாவர உணவைப் பின்பற்றுவதில்லை. அப்படியே பழகிவிட்டேன். அப்படியே தொடர்வது என்ற நிலையை எடுத்துள்ளேன்.

மாமிச உணவு உண்பவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதில் எந்தப் பிரச்னையும் எனக்கு இருந்ததில்லை. அதேபோல உணவகங்களில் எது எந்த எண்ணெயில் பொறித்தது என்றெல்லாம் சோதித்துப் பார்க்கவேண்டும், கேள்வி கேட்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியதில்லை. ஒரே உணவகத்தில் சைவ/அசைவ சமையல் நடந்தால் எனக்குத் தெரிந்த சிலர் அங்கே உண்ணமாட்டார்கள். எனக்கு அப்படியான எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை.

சமீபத்தில் ஓர் உணவுச்சாலையில் காய்கறி பிரியாணி கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, நடுவில் ஒரு சிறிய சிக்கன் துண்டு அகப்பட்டது. அப்படியே நகர்த்தி வைத்துவிட்டுச் சாப்பிட்டோம்.

***

தாவர உணவு உண்பதிலும் ஒரு கடுமையான தீவிரவாதத்தை யாரும் முன்வைக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் உணவுப் பழக்கம், சாதியோடு சேர்ந்து ஒட்டிப்போய் பிராமணர்களையும் பிள்ளைமார்களையும் மட்டும் தனித்துக் காண்பித்துவந்தது. ஆனால் இன்றோ, பிற சாதிகளில் உள்ள பலரும் தங்களது விருப்பத் தேர்வாகவே தாவர உணவைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அதே நேரம் பிராமணர்கள் பலரும் தங்களது விருப்பத் தேர்வாக நீந்துவன, ஊர்வன, பறப்பன என அனைத்தையும் உண்ண ஆரம்பித்துள்ளனர்.

ஆனாலும் இன்று சில இடங்களில், ஓர் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் யார் குடியிருக்கலாம், கூடாது என்பதை சாதியை முன்வைத்துத் தீர்மானிக்கின்றனர்.

இது எவ்வளவு அபத்தம்!

நம்ம பதிவு ஆக்சஸ்

கூகில் அனலிடிக்ஸ் போட்டது ஏப்ரல் 2006-ல. அப்ப தொடங்கி இப்ப வரைக்கும், என்னோட வலைப்பதிவுக்குக் கிடைத்திருக்கற “விசிட்ஸ்” - பக்க எண்ணிக்கை அல்ல, வருகை மட்டும்: வெறும் 163,745 மட்டுமே. இதற்காக எந்த பார்ட்டியும் கிடையாது.

விலையனூர் ராமச்சந்திரனுடன் சந்திப்பு

யுனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா, சாண்டியாகோவில் உளவியல் மற்றும் நரம்பியல் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ள ராமச்சந்திரன் தற்போது சென்னையில் உள்ளார். அவரது நண்பர்கள் சிலர், இந்தியவியல் (Indology) பற்றிப் பேச, ஒரு பிரத்யேக சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ராமச்சந்திரன், மூளை, மனிதன், தன்னையறிதல், பொய் அவயங்கள் (phantom limbs), நியூரான்களின் இயக்கம் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசினார். இவை பற்றி அவர் ஏற்கெனவே பல பேச்சுகளைக் கொடுத்துள்ளார். அவற்றின் யூடியூப், பிபிசி ஒலிப்பதிவுகள், TED வீடியோ பதிவு ஆகியவை இணையத்தில் எக்கச்சக்கமாகக் கிடைக்கும்.

மூளையில் உள்ள 100 பில்லியன்களுக்கும் மேலான நரம்பணுக்கள் (neurons) உள்ளன. இவை கண், காது, மூக்கு, மேல்தோல் ஆகியவை உணரும் புற உலக சிக்னல்களை சேமித்து மூளையின் சில பாகங்களுக்கு அளிக்கின்றன. மூளை இந்த சிக்னல்களை ஆய்ந்து சில கருத்துகளை உருவாக்கிக்கொள்கிறது. இந்தக் கருத்துகளுக்கு இணங்க உடலின் சில பகுதிகளை சில வகைகளில் இயங்கவைக்கிறது.

சிலருக்கு ஏற்படும் விபத்துக்களால் அவர்களது பாகங்களை வெட்டவேண்டியிருக்கும். ஒருவருக்கு அவரது கையை வெட்டவேண்டியிருக்கும் என்று வைத்துக்கொள்வோம். கையே இல்லாதுபோனாலும் அவரது மூளையின் ஒரு பகுதி அந்த இடத்தில் கை இருப்பதாக நினைத்துக்கொள்கிறது. அதுவும் அந்தக் கை வளைந்து திருகியநிலையில் அவரது மூளையில் வலி என்ற உணர்ச்சி பதிவாகி இருக்கும்போது அந்தக் கை வெட்டப்பட்டிருந்தால் அவரது மூளையில் வலியும் சேர்ந்து பதிவாகி, கை இருப்பது போலவும், அந்தக் கை திருகிய நிலையில் இருப்பது போலவும், அந்த இடம் கடுமையாக வலிப்பது போலவுமான நினைவு இருந்தபடியே உள்ளது.

இப்படி ஒரு நோயாளி ராமச்சந்திரனிடம் வந்திருக்கிறார். உளவியல் மருத்துவர்களால் குணமாக்கமுடியாத இந்த நோயை ராமச்சந்திரன் ஒரு கண்ணாடியை வைத்து குணமாக்கியதைச் செய்து காட்டினார். இடடுகை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வலது கைக்கு முன் கண்ணாடியை வைத்து, கண்களால் இடது கை இருக்கும் இடத்தைப் பார்த்து வலது கையைத் திருப்பவதன், நகர்த்துவதன்மூலம் இடது கை நகர்வதைப் போன்ற தோற்றத்தை கண்ணுக்கும், அதன் வழியாக மூளைக்கும் அனுப்பி, திருகிய “பொய்க்கை”யை நேராக்கி, வலியை நிவர்த்தி செய்ததாக விளக்கினார் ராமச்சந்திரன். இவரது Phantoms in the Brain பிரசித்தி பெற்ற ஒரு புத்தகம்.

மனித உடலில் ஒரு சிறு பாகத்தில் குண்டூசி குத்தும்போது, அதுபற்றிய சிக்னல்கள் கண் பார்வை வழியாகவும் செல்கிறது; தோல் வழியாகவும் செல்கிறது. “வலி” என்ற உணர்ச்சி ஏற்படுகிறது. கையைச் சடாரென இழுக்க உதவுகிறது. அதேபோல பக்கத்தில் நிற்கும் ஒருவரது கையில் குண்டூசியால் குத்தும்போதும் நமது கண்கள் அதைப் பார்க்கும்போது வலியை உணர்ந்து பக்கத்தில் இருப்பவருடன் “empathaise" செய்யமுடிகிறது. பரிவு காட்ட முடிகிறது. ஆனால் தோல் உணர்ச்சி என்பது இல்லாததால் உடனடியாகக் கையை இழுக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கிறது.

“பார்வை என்பது மூளையை அது அடைக்கப்பட்டிருக்கும் உடலுக்கு வெளியே எடுத்துச் சென்று பிற உயிர்களுடன் ஒன்றானதாக ஆக்குகிறது. இது கீழைத்தேய மெய்யியல் சிந்தனைகளுடன் ஒத்துவருவது” என்றார் ராமச்சந்திரன். சிலர் வள்ளலாரின் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற பாடலை நினைவுகூர்ந்தனர்.

சிரிப்பு என்றால் என்ன என்று ஒரு கேள்வி எழுந்தது. சிரிப்பு என்பது வலிக்கு ஒத்த உறவுடையது என்று தான் கருதுவதாகச் சொன்னார் ராமச்சந்திரன். “ஒருவர் நடந்துவரும்போது வாழைப்பழத்தோல் வழுக்கிக் கீழே விழுகிறார். தலை அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது. பக்கத்தில் நிற்கும் சக மனிதன் உடனடியாகப் பரிவு காட்டி, கீழே விழுந்தவரைத் தூக்கி நிறுத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். இங்கே வலியை இவனும் உணர்கிறான். ஆனால் அதே ஆள், கீழே விழுந்து அடிபடவில்லை என்றால் உடனே கெக்-கெக்-கெக் என்று சிரிக்கிறான். அதாவது கீழே விழுந்தவருக்கு அடி இல்லை, அதனால் பதறவேண்டிய அவசியம் இல்லை, பதற்றத்தைத் தணித்துக்கொள் என்பதற்கான நெர்வஸ் ரியாக்‌ஷன்தான் சிரிப்பு” என்றார் ராமச்சந்திரன்.

ESP, பார்வையான் ஸ்பூனை வளைப்பது, ஆன்ம சக்தியை வைத்து பொருள்களை உருவாக்குவது (materialisation) போன்றவை பற்றிப் பேச்சு வந்தது. அவையெல்லாம் “புருடாக்கள்” என்பது தன் எண்ணம் என்றார். எந்த சோதனைக்களத்திலும் இந்த வாய்ச்சவடால் வீரர்கள் தங்களது சோதனைகளைச் செய்துகாட்ட ஒப்புக்கொள்வதில்லை. அறிவியல் என்பது சோதனைகளை மீண்டும், மீண்டும் செய்துகாட்ட விரும்புவது. ஆனால் இந்தத் திறமைகள் இருப்பதாகச் சொல்பவர்கள் இவற்றைச் செயல்படுத்திக் காட்டுவதில்லை. தங்களை ஏற்கெனவே நம்புவோர்களிடம்மட்டுமே “காட்டுகிறார்கள்”.

ஆனால் near-death experience, deja-vu போன்றவை அறிவியல்பூர்வமாக விளக்கக்கூடியவையே என்றார். தன்னுடைய நோயாளி ஒருவரைப்பற்றிச் சொன்னார். அவருக்கு மூளையின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் அடிபட்டு, கொஞ்சம் பழுதாகிவிட்டது. தனது தாயின் குரலைக் கேட்டால் அவரால் அது தன் தாய் என்று சரியாகச் சொல்லிவிடமுடியும். ஆனால் தாய் முன்னர் வந்து நின்றால், “இந்த அம்மா, என் தாயைப் போல இருக்கிறார்கள், ஆனால் தாயில்லை, வேறு யாரோ ஓர் ஏமாற்றுக்காரி” என்றாராம். சில ஏற்கெனவே பார்த்த பொருள்களை ஓரளவுக்கு ஞாபகம் வைத்திருக்கும் மூளைப் பகுதி, அதே நேரம், “recall” என்ற சக்தியை ஒரு மாதிரியாக இழந்துவிடுகிறது. பார்க்கும் பொருள் எங்கேயோ பார்த்ததுபோலத் தோறுகிறது. ஆனால் அதன் உறவு, எப்போது, எதற்காகப் பார்த்தோம் என்ற தகவல் எல்லாம் போய்விடுகிறது. இதன் காரணமாகவே சிலர் “இதை என் முன் ஜன்மத்தில் பார்த்தேன்” என்று கதை விடுகிறார்கள்.

Near-death experience - சாவதைப் போன்ற ஒரு நிகழ்வில், (பஸ் மோதுகிறது; உயிர் போகவில்லை, ஆனால் போவதுபோன்ற நிலைமை), மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து நினைவு தப்பி, பல விஷயங்கள் மூளையில் குழம்பிவிடுகின்றன. மீண்டும் போராட்டத்துக்குப் பிறகு நினைவு வரும்போது “எமன் உலகுக்கே சென்று திரும்பிவந்தது” போன்ற சிந்தனை இருக்கும். பல விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றும்.

(என் தந்தைக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்தமுடித்த மறுநாள் தீவிர ஐ.சி.யுவில் வெண்டிலேட்டரில் இருந்தார். அந்த நாள் அவரது நினைவில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அடுத்த நாளிலிருந்து அவர் கணக்கு வைத்திருந்தார். எப்போது பார்க்கப் போகும்போதும் தான் மருத்துவமனைக்கு வந்து இத்தனை நாள்கள் ஆகியுள்ளன என்று ஒரு நாள் குறைத்தே சொல்வார். செவ்வாய் அன்று, “இன்று திங்கள்தானே” என்று சொல்லி நர்ஸ்களிடம் சண்டை போடுவார். அவர்களும் கிழவரிடம் எதற்கு சண்டை என்று விட்டுவிடுவார்கள். வீட்டுக்கு வந்தும் அவருக்கு எப்படி ஒரு நாள் காணாமல் போனது என்று ஒரே குழப்பம். பின் அவருக்கு விளக்கமாக இதனைச் சொல்லிப் புரியவைத்தேன்.)

***

மூளையிலிருந்து இந்தியவியல், இந்திய மொழிகளின் வரிவடிவங்கள், இந்திய கலாசாரம், சிற்பம், ஓவியம், இந்தியர்கள் ஏன் தங்களது கலைகளை, வரலாற்றை, இதிஹாசத்தை காப்பாற்றி வைக்கமாட்டேன் என்கிறார்கள் என்பது பற்றிப் பேச்சு வந்தது.

தன்னை ஒரு “லெஃப்ட் ஆஃப் தெ செண்டர்” (இடது பக்கம் சாய்பவர்) என்று சொல்லிக்கொண்ட ராமச்சந்திரன், ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றைப் பற்றிப் பேசினால் ஹிந்துத்வா என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பதாலேயே இடதுசாரி அறிவுஜீவிகள் இந்த இதிஹாசங்களின் வரலாற்றுத் தன்மையையே கேள்விக்கு உள்ளாக்கிவிடுகிறார்கள் என்றார்.

டிராய், அலெக்சாண்ட்ரியா அகழ்வாராய்ச்சி பற்றிய பேச்சுகளைத் தொடர்ந்து, துவாரகா, சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி, பூம்புகார், லெமூரியா ஆகியவற்றைப் பற்றியும் பேச்சு வந்தது. சேதுக்கால்வாய் பற்றியும் பேச்சு வந்தது. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, இன்னபிற தமிழக அகழ்வாராய்ச்சிகள் பற்றியும் அவை எவ்வளவு மோசமாக உள்ள தலங்கள் (ஒரு பெயர்ப்பலகைகூடக் கிடையாது) என்பது பற்றிப் பேச்சு வந்தது.

மவுரியன் பிராமி, தமிழ் பிராமி வரி வடிவம், தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவு (ஃபின்லாந்து மொழிக்கும் உள்ள உறவு) ஆகியவை பற்றி மேலோட்டமான பேச்சு இருந்தது.

ஒரு கட்டத்தில் அனைவருக்கும் கிளம்பிச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டதால் கூட்டம் திடீரெனக் கலைந்து அவரவர் கிளம்பிவிட்டனர்.

Saturday, July 26, 2008

சல்மாவின் நாவல் Man Asian Literary Prize 2008-ல்

ஆண்டுதோறும் ஆங்கிலத்தில் எழுதும் நாவல்கள் புக்கர் பரிசு என்னும் விருதுக்குத் தகுதியாகும். சென்ற ஆண்டுமுதல் ஆசிய எழுத்தாளர்களுக்கு என்று தனியான ஒரு பரிசு புக்கர் பரிசை ஸ்பான்சர் செய்யும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. 2007-ல் ஒரு சீனர் அதை வென்றார்.

இந்தப் பரிசுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவலோ அல்லது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படும் நாவலோ விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிக்கப்படும்போது இந்தப் புத்தகம் அச்சுக்கு வந்திருக்ககூடாது. அதாவது அச்சாவதற்கு முன்னரே - மேனுஸ்க்ரிப்டாக இருக்கும்போதே - விண்ணப்பிக்கவேண்டும். (இது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் எங்களது சில நாவல்களைப் பதிந்துவைத்திருக்கலாம்.)

இந்த ஆண்டுக்கான நீண்ட பட்டியலில் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை”யின் ஆங்கில வடிவம் “Midnight Tales” இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து 11 நாவல்கள் இடம்பெறுகின்றன.

  1. Tulsi Badrinath ("Melting Love")
  2. Anjum Hasan ("Neti, Neti")
  3. Daisy Hasan ("The To-Let House")
  4. Siddharth Dhanvant Shanghvi ("Lost Flamingoes of Bombay")
  5. Amit Varma ("My Friend, Sancho")
  6. Sarayu Srivatsa ("The Last Pretence")
  7. Kavery Nambisan ("The Story that Must Not be Told")
  8. Sumana Roy ("Love in the Chicken's Neck")
  9. Vaibhav Saini ("On the Edge of Pandemonium")
  10. Rupa Krishnan ("Something Wicked This Way Comes")
  11. Salma ("Midnight Tales")

Wednesday, July 23, 2008

மன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல

மன்மோகன் சிங் இயல்பில் சாதுவான சுபாவம் கொண்டவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். ஒரு கூட்டத்துக்கு நடுவில் அவரைப் பேசவிட்டால் சீக்கிரமே கூட்டம் கலைந்துவிடும், அல்லது மக்கள் தூங்கிவிடுவார்கள்.

நேற்றும் அதற்கு விதிவிலக்காக அவர் பேசவில்லை. அவர் பேசத் தொடங்கியதுமே சில பிஜேபி கடைசி பெஞ்ச் கனவான்கள் அவைத்தலைவர் இடத்துக்கு வந்து “மன்மோகன் சிங்கே, பதவி விலகு” என்று பாட்டுப் பாடினார்கள். மன்மோகன் சிங் தன் உரையைத் தொடர முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. சிங் என்றால் சிங்கம் போல கர்ஜனை செய்வார் என்றெல்லாம் இல்லை. முயல் போல, பேச்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். “உரை வெப்சைட்டில் உள்ளது, அவைத்தலைவரிடம் கொடுத்துவிட்டேன், எனவே வாக்களிக்கப் போகலாம்” என்று உட்கார்ந்துவிட்டார். வாக்கெடுப்பில் ஜெயித்துவிட்டார்.

பேச்சுக்கலை எல்லோருக்கும் வராது. மன்மோகன் சிங்குக்கு இந்த வயதில் இனி அது வரப்போவதில்லை. ஒரு வாஜ்பாயியோ, ஒரு அத்வானியோ, அல்லது காங்கிரஸ் தரப்பில் ஒரு பி.சிதம்பரமோ, பிரணாப் முகர்ஜியோ பேசும் அளவுக்கு மன்மோகன் சிங்கால் முடியாது. தேவையும் இல்லை.

அப்படிப் பேச்சு வராத மன்மோகன் சிங் நேற்று கோபத்தின் உச்சக்கட்டத்தில் அத்வானியை கேலி செய்துள்ளார். ஜோதிடனை மாற்று என்கிறார். நாடாளுமன்றத் தாக்குதலின்போது அத்வானி தூங்கிக்கொண்டிருந்தார் என்கிறார். ஜின்னா விவகாரத்தில் அத்வானியை கேலி செய்கிறார். அத்வானியைத் திட்டுவதற்கு தன் அறிக்கையில் இவ்வளவு இடத்தை மன்மோகன் சிங் வீணாக்கியிருக்கவேண்டாம்.

அத்வானி ஓர் அரசியல்வாதி. மூத்த அரசியல்வாதி; ஆனாலும் அரசியலில் உழன்று வந்தவர். அரசியலில் அடுத்தவரைத் திட்டி, கேலி செய்து, மானம் போகவைப்பது அவசியம் என்று கருதப்படுகிறது. எதிராளி சறுக்கும்போது அங்கு போய் கோல் போட்டு பாயிண்ட்களை ஏற்றுவது அவசியம் என்று கருதப்படுகிறது. அபிமன்யு கையில் ஆயுதமே இல்லாது இருந்தாலும் கௌரவர்கள்போல அவன்மீது அம்பெய்வது நியாயம் என்கிறது.

இங்கு பேச்சுதான் பிரதானம். செயல் அல்ல. அழகான நான்கு கவிதைகளைத் தட்டி, அடுக்குமொழியில் நெருப்பைக் கக்கும் பேச்சு போதும். மயக்கிவிடலாம். செயல் என்று வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.

மன்மோகன் சிங் தயவுசெய்து அந்த நிலைக்கு இறங்கக்கூடாது. அத்வானி உங்களை “லாயக்கற்றவன்” என்று திட்டினால், “சரி, போகட்டும்” என்று விட்டுவிட்டுப் போங்கள். ம.க.இ.க ஆசாமிகள் “மாமா வேலை பார்ப்பவன்” என்பதில் தொடங்கி, “அமெரிக்கக் கைக்கூலி” என்று முடித்து என்னென்னவோ திட்டிவிட்டார்கள். வெகுஜனப் பத்திரிகை பத்திகளிலேயே “மதிகெட்ட மாமன்னன்” என்ற பட்டம் வாங்கியாயிற்று. (தமிழ் தெரியாதது ஒரு நல்ல விஷயம்!)

மன்மோகன் சிங் இரண்டு விரல்களையும் விரித்து “V” என்று வெற்றியைக் காண்பிப்பது பார்க்க சகிக்கவில்லை. வேண்டாம். அதெல்லாம் எம்.ஜி.ஆர் தொடங்கி விஜயகாந்த் வரையிலானவர்களுக்கும் பிற வெத்துவேட்டு அரசியல்வாதிகளுக்கும் போதும்.

***

காங்கிரஸ், பிஜேபி, சமாஜவாதி, பஹுஜன் சமாஜ் ஆகிய நான்கு பேர்களுமே நிறைய தில்லுமுல்லுகளில் ஈடுபட்டிருந்தனர் என்று நினைக்கிறேன். பிறரை தங்கள் பக்கம் இழுத்து வாக்களிக்க வைப்பது, குறைந்தபட்சம் வாக்களிக்காமல் ஜூட் விடுவது. அதற்கு எவ்வளவோ ஆசைகள் காட்டப்பட்டிருக்கலாம். ஆனால் பணம் கொடுப்பது என்பது நேரடிக் குற்றமாகிறது. பணம் கொடுத்து கேள்வி கேட்கவைப்பது என்பதே குற்றம் என்று முடிவாகி அந்தக் காரியத்தைச் செய்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால் பணம் கொடுத்த விவகாரத்தில் உண்மை என்று ஏதும் வெளியே வராது என்றே தோன்றுகிறது. ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சொல்வார். பெயர்கள் வெளிப்படும். ஆனால் ஒரு முடிவுக்கும் வரமுடியாது. இதனால் இந்தியக் குடியாட்சி முறையே கேவலமாகிவிட்டது என்று நான் சொல்லமாட்டேன். இது மாற்றம் நிகழும் ஒரு கட்டம். அத்தனை அசிங்கங்களையும் நாம் பார்த்தாகவேண்டிய கட்டம்.

***

இப்போது நடந்த வாக்கெடுப்பில் இரு பக்கமும் சிலர் கட்சி மாறி வாக்களித்திருக்கின்றனர். சிலர் வாக்களிக்காமல் இருந்திருக்கின்றனர். இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்கவேண்டும்.

இதற்கு அடிப்படை கொறடா எனப்படும் whip. தேர்தலில் ஜெயித்தபிறகு கட்சித் தலைமைக்கு அடிமையாக இருக்குமாறு செய்ய இந்தக் கொறடா ஆணை பயன்படுத்தப்படுகிறது. கொறடாவை மீறி வாக்களித்தவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். தனது எம்.பி பதவியை இழக்க நேரிடும்.

மூன்றில் ஒரு பங்கு என்று ஒரு குழுவாகப் பிரிந்து அவைத்தலைவரிடம் பேசி தாங்கள் தனி அணி என்று அவர்கள் சொன்னால்மட்டுமே பதவியை இழப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

என் கருத்தில், இந்த கொறடா மிரட்டல் முற்றிலுமாக நீக்கப்படவேண்டும். ஒரு கட்சியின் ஆதரவில் நின்று ஜெயித்தபிறகு, கட்சி மாறினால் என்ன செய்வது? கட்சிக்கு விசுவாசமாக நடக்காவிட்டால் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சிக்கு விசுவாசமாகத்தான் நடக்கவேண்டும் என்று நமது அரசியலமைப்புச் சட்டம் சொல்வதில்லை. இதனால் நிறைய “குதிரைப் பேரங்கள்” நடக்கலாம்; ஆட்சி நிலைத்தன்மை உடையதாக இருக்காது என்று சிலர் கருதலாம்.

ஆனால் கட்சியை ஓரிருவரும் அவரது குடும்பங்களும் கைப்பற்றிக்கொண்டு தங்களது சொந்தச் சொத்தாக நடத்துவதை இது குறைக்கும். ஆட்சி கவிழாமலேயே சில தீர்மானங்கள்மட்டும் தோல்வியுறலாம். அதுவும் நல்லதற்கே.

***

அத்வானி நேற்றைய வாக்கெடுப்பின் முடிவில் முகம் பேயறைந்ததுபோலக் காணப்பட்டார். பேச்சிலும் நிறையத் தவறுகள். நன்கு பேசத் தெரிந்தால் மட்டும் போதாது. சத்தியத்தின் பலம் பின்னால் இருக்கவேண்டும். கடைசியாக நடந்த “பண நாடகம்” வேறு அசிங்கமாக இருந்தது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை விட்டுவிட்டு உடனடியாக மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று அத்வானியும் பிஜேபியும் கேட்டது அபத்தமாக இருந்தது.

மன்மோகன் சிங்கைத் தாக்குவது அத்வானிக்கு எளிது. ஆனால் அழகல்ல. அணு ஒப்பந்தத்தை பிஜேபி ஆதரித்திருக்கவேண்டும். ஆனால் விலைவாசி முதற்கொண்டு வேறு சில விஷயங்களில் அரசை நன்றாக எதிர்த்திருக்கலாம். அரசுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்திருக்கலாம். ஆனால் பிஜேபி அதைச் செய்யவில்லை. இப்போது சோர்ந்து கிடந்த காங்கிரஸுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளார் அத்வானி.

அரசைத் தோற்கடிக்க என்று பிஜேபி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், இடதுசாரிகளும் மாயாவதியும் பிஜேபியுடன் எந்த விதத்திலும் கூட்டு சேரப்போவதில்லை. ஆட்சி கவிழ்ந்திருந்தால் இடதுசாரிகளும் மாயாவதியும் தாங்கள்தான் இதனைச் சாதித்தோம் என்று சொல்வார்கள். கவிழாவிட்டால் பிஜேபி தோற்றதாகத்தான் சொல்லப்படும். ஆக, எந்த முடிவானாலும் பிஜேபிக்கு லாபமில்லை. யோசிக்காமல் நடந்துகொண்டது பிஜேபி. அதன் பலனை அனுபவிக்கிறது.

Tuesday, July 22, 2008

கிரிக்கெட்: பேச்சிலும் beach-இலும்!

சென்ற வெள்ளியன்று மெட்ராஸ் புக் கிளப் ஆதரவில் “IPL and its impact on the future of cricket in India” என்ற தலைப்பில், தாஜ் கன்னிமரா ஹோட்டலில் பேசினேன்.

நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக கூட்டம் வந்திருந்தது. மெட்ராஸ் புக் கிளப் உறுப்பினர்கள்தான். சுமார் 40-50 பேர் இருந்திருப்பார்கள். பெரும்பாலும் வயதானவர்கள். சில நடுத்தர வயதினர். 35-க்குக்கீழ் இரண்டு பேர்தான் கண்ணில் பட்டனர்.

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் எப்படி பாதிக்கப்படும் என்பது பற்றிய எனது கருத்துக்களைப் பேசினேன். வணிகரீதியாக, சமூகரீதியாக, கிரிக்கெட் விளையாட்டின் தன்மையில், விளையாட்டு வீரர்களின் உடல்நலத்தில், கிரிக்கெட் நிர்வாகத்தில், சர்வதேச கிரிக்கெட் உறவில், கிரிக்கெட் விதிகளில் எந்தவிதமான பாதிப்புகள் இருக்கும் என்று பேசினேன்.

சரியாக மாலை 7.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. முடிந்தபோது 8.15 இருக்கும். எனது பேச்சுக்குப் பிறகு சில நல்ல கேள்விகள் கேட்கப்பட்டன.

மொத்தத்தில் நானே எதிர்பார்க்காத அளவு, வந்திருந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பேச்சைக் கேட்டனர்.

இதற்குமுன் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு இரண்டு முறை கிரிக்கெட் பற்றிப் பேசியுள்ளேன். கோகலே சாஸ்திரி ஹாலில், “சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகள்” என்பது பற்றிப் பேசினேன். ஆரம்பிக்கும்போது, 5 பேர் இருந்தனர். முடிக்கும்போது கிட்டத்தட்ட 10 பேர் இருந்தனர். சென்ற ஆண்டு “தெரு கிரிக்கெட்” என்பது பற்றி ஸ்ரீ பார்வதி ஹாலில் பேசினேன். அதில் 15 பேர் அளவுக்கு வந்திருந்தனர்!

இந்த முறையும் மெட்ராஸ் தினப் பேச்சுகளில் பேச உள்ளேன். ஆனால் நல்லவேளையாக கிரிக்கெட்பற்றி இல்லை. எதைப்பற்றி என்று பின்னர் சொல்கிறேன்.

***

கடற்கரைக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதில் இப்போது எங்கள் அலுவலகத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே என்னிடம் இருக்கும் இரண்டு நல்ல மட்டைகள் (ஒன்று வுட்வோர்ம், இன்னொன்று எம்.ஆர்.எஃப்) சீப் டென்னிஸ் பந்துகளை அடிக்கப் பயனாகிறது. சனிக்கிழமை நான்கு ஸ்டம்ப்களையும் வாங்கிவிட்டனர்.

கடற்கரையில் சில இடங்களில் யாரோ புண்ணியவான்கள் தரையிலிருந்து மணலை விலக்கி, கெட்டியான ஆடுகளத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். யார் முதலில் போய் இடத்தைப் பிடிக்கிறார்களோ, ஆடுகளம் அவர்களுக்குச் சொந்தம்.

ஓவர்-ஆர்ம் வீசுதல் கிடையாது. மாங்காயடி chucking-தான். நல்ல வலுவுள்ள ஆள்கள் அடித்தால் எதிர்காற்றையும் மீறி பந்து சிக்ஸுக்குப் போகிறது. (ஆனால் எல்லைக்கோடு சிறியதுதான்.)

இப்போது எங்கள் முதன்மை அலுவலகத்தில் இருப்பவர்களை சேகரித்தாலே இரண்டு கிரிக்கெட் அணிகளை உருவாக்கிவிடலாம். கிரிக்கெட் பந்து, கால், கை காப்புகள், நல்ல ஆடுகளம் என்று எடுத்துக்கொண்டு, நன்றாகப் பயிற்சி செய்தால் Blue Star லீகின் அடிமட்டத்தில் விளையாடலாம்.

ஆனால் என்னையும் சேர்த்து பாதிப் பேருக்கு ஓடுவதில் சிரமம் இருக்கும்.

இப்போதைக்கு பீச் கிரிக்கெட்டே சிறந்தது. வாரம் ஒருமுறை - சனிக்கிழமை - தொடர்ந்து விளையாடினால் கொஞ்சம் ஃபிட்னெஸ் உருப்படியாகலாம். பிறகு தீவிரமான கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றி யோசிக்கலாம்.

ஆனால் கிரவுண்ட் ஒன்றைத் தேடவேண்டும்.

***

நாகப்பட்டினத்தில் நான் படித்த தேசிய மேல் நிலைப் பள்ளிக்கு உருப்படியான விளையாட்டு மைதானம் கிடையாது. ஆனால் போட்டிப் பள்ளிகளான சி.எஸ்.ஐ மேல் நிலைப் பள்ளி, அந்தோணியார் மேல் நிலைப் பள்ளி ஆகியவை மிகப் பெரியவை. உள்ளுக்குள்ளேயே கிரிக்கெட், கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி என்று சகலமும் விளையாடமுடியும். எங்களுக்குப் பொறாமையாக இருக்கும்.

ஆரம்பத்தில் எங்களுக்கு கிடிக்கெட் விளையாட அவுரித்திடல் என்ற திடல் கிடைத்தது. பெரியாஸ்பத்திரிக்கு எதிராகப் பரந்து விரிந்திருக்கும் மாபெரும் திடல். அங்கு ஒரே நேரத்தில் நிஜமாகவே பத்து கிரிக்கெட் மேட்ச்களை நடத்தலாம். எப்போதாவது எம்.ஜி.ஆர் அல்லது இந்திரா காந்தி வந்தால் சுற்றுப்புறப் பள்ளிகளிலிருந்தெல்லாம் குழந்தைகளை அழைத்துவந்து இங்குதான் வதை செய்வார்கள்.

அந்த இடத்தில்தான் நாங்கள் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். 1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்ற காரணத்தால் புரூடென்ஷியல் கிரிக்கெட் கிளப் என்ற பிரம்மாண்டமான பெயரில் கிரிக்கெட் அணி ஒன்றை உருவாக்கினோம். பசங்களோ பெருமாள் வடக்கு மடவிளாகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கென்று சொந்தமாக கிரிக்கெட் பேட் இருந்ததாகக்கூட ஞாபகம் இல்லை. சட்டையப்பர் கோயில் தெருப்பக்கம் இருந்த பசங்களோடு மேட்ச் ஆடிய ஞாபகம் உள்ளது. தோற்றுத்தான் போனோம். நாங்கள் அந்தப் பெயரில் ஆடிய ஆட்டங்களில் மொத்தமாகவே ஓரிரு முறைதான் ஜெயித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். கார்க் பந்து கொண்டுதான் ஆட்டம் நடக்கும்.

திடீரென நகராட்சி அந்த மைதானத்தைப் பிடுங்கி அங்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்தது. அதன் பிறகு அந்தோணியார் பள்ளிக்கூட கிரவுண்டில் அவ்வப்போது விளையாடியிருக்கிறோம். நீலாயதாட்சியம்மன் கோயிலில் கொஞ்சம் விளையாடலாம்.

பஸ் ஸ்டாண்ட் வந்தபிறகு, உருப்படியான கிரிக்கெட் மேட்ச் என்றால் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில்மட்டும்தான் விளையாடமுடியும் என்றானது.

பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் தேசிய மேல் நிலைப் பள்ளிக்காக ஆடும்போது (11-வது படிக்கும்போது), பாலிடெக்னிக் கிரவுண்டில் சி.எஸ்.ஐயிடம் கடுமையாகத் தோல்வி கண்டது ஞாபகம் உள்ளது. எங்களுக்கு பிராக்டீஸே கிடையாது. நான் விக்கெட் கீப்பிங் செய்தேன். டாஸில் வென்ற சி.எஸ்.ஐ பேட்டிங் என்றனர். எங்களது அணியில் ஒருவர்கூட மேட்டில் விழுமாறு பந்து வீசவில்லை. அங்கும் இங்குமாகச் சென்று என் கழுத்தை அறுத்தது. கடைசியாக வெட்கம் பிடுங்கித்தின்ன ஏகப்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனோம்.

இன்று நாகப்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாட பையன்கள் எங்கே செல்கின்றனர் என்று தெரியவில்லை.

Monday, July 21, 2008

சிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்

லூயிஸ் கரோல் (என்னும் புனைபெயரில் எழுதிய சார்ல்ஸ் டாட்சன்) இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒன்று “அற்புத உலகத்தில் ஆலிஸின் சாகசப் பயணம்”. இரண்டாவது “காணும் கண்ணாடிக்கு உள்ளாக”.

காணும் கண்ணாடியில் எல்லாம் இடம் வலமாக மாறித் தெரியும். ஆனால் இந்த உலகத்தில் புகும் ஆலீஸ் மேலும் பல விசித்திரங்களைப் பார்ப்பாள். அதில் காலம் பின்னோக்கிச் செல்லும் (சில இடங்களில் மட்டும்). அதாவது கேக்கை முதலில் கொடுத்துவிட்டு, பிறகு வெட்டவேண்டும். சிகப்பு ராணிக்கு கையில் வலிக்கும், பிறகு ரத்தம் வரும், பிறகுதான் ஊசி குத்தும். இங்குதான் ஆலீஸ் ஜாபர்வோக்கி என்னும் அற்புத உளறல் பாட்டைப் படிப்பாள். ட்வீடில்டம், ட்வீடில்டீயுடன் உரையாடுவாள். ஹம்ப்டி டம்ப்டியுடன் விவாதிப்பாள்.

சதுரங்கக் களத்தில் எதிரெதிர் அணிகளில் சிகப்பும் வெள்ளையுமான வண்ணங்கள் கொண்ட அணிகள். (கறுப்புக்கு பதில் சிகப்பு.) அந்தச் சிகப்பு ராணியுடன்தான் ஆலீஸ் உரையாடுவாள். ஒரு கட்டத்தில், ஒரு மரத்தடியின்கீழ் இருக்கும் சிகப்பு ராணி வெகு வேகமாகப் பறக்கத் தொடங்குவாள். அவளைப் பற்றிக்கொண்டு ஆலீஸும் செல்வாள். வேகம், வேகம், வேகம், வேகம். இன்னும் வேகம். காதுகளில் காற்று விஷ்ஷென்று ஓசையிட, மூச்சு முட்ட, பறந்துமுடித்து அவர்கள் கீழே இறங்கும்போது அதே மரத்தடியின்கீழே இருப்பார்கள்.

அதிர்ச்சியுற்ற ஆலீஸ் கேட்பாள்: “அதெப்படி, இவ்வளவு வேகமாகச் சென்றும் கிளம்பிய அதே இடத்திலேயே இருக்கிறோம்? எப்படித்தான் முன்னோக்கிச் செல்வது?”

சிகப்பு ராணி சொல்வாள்: “அதே இடத்திலேயே இருப்பதற்கே இவ்வளவு வேகமாகச் செல்லவேண்டும். முன்னோக்கிச் செல்லவேண்டுமானால், இதைவிட இரண்டு மடங்கு வேகம் தேவை!”

பரிணாம வளர்ச்சியிலும் அதே இடத்திலேயே இருக்க (அதே நன்மையைப் பெற), ஓர் உயிரினம் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் மற்ற உயிரினங்கள் முன்னேறிச் சென்றுவிடும். இருக்கும் இடத்திலேயே இருப்பது என்பது பின்தங்கிவிடுவதாகும்.

இதைத் தலைப்பாகக் கொண்டு “The Red Queen: Sex and the Evolution of Human Nature” என்ற அற்புதமான புத்தகத்தை எழுதியுள்ளார் மேட் ரிட்லி.

பரிணாம வளர்ச்சியின்போது, பல உயிரினங்கள் ஏன் பாலுறவைத் தேர்ந்தெடுத்தன? பல உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உடலுறவு ஏன் தேவை? அப்படி இல்லாமலேயே இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் இருக்கின்றனவே? எது சிறந்தது? உடலுறவுமூலம் இனப்பெருக்கம் செய்தலா, உறவே இல்லாமல் தானே இரண்டாகப் பிளப்பதன்மூலம் (அல்லது அதுபோன்ற சில செயல்பாடுகளின்மூலம்) இனப்பெருக்கம் செய்தலா?

பால் வேறுபாடு தோன்றி, பாலினப்பெருக்கம் ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம் உயிரினங்களைத் தாக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவே என்கிறார் ரிட்லி. அ-பால் இனப்பெருக்கத்தில் ஒவ்வொரு குழந்தையும் தாயை (தந்தையை) போன்றது. அச்சாக அதே மரபணுவைக் கொண்டது. இப்படிப்பட்ட உயிரினத்தை ஒட்டுண்ணி ஒன்று தாக்கி வெற்றிகண்டால், அந்த உயிரினத்தின் உறுப்பினர்களால் எளிதில் ஒட்டுண்ணியை எதிர்த்து தப்பிக்கமுடியாது. ஆனால் பாலினப்பெருக்கத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தன்மை வாய்ந்த மரபணு டி.என்.ஏ கிடைத்துவிடுகிறது. இரண்டு சீட்டுக்கட்டுகளைக் குலுக்கிப்போட்டு கலைத்து அவற்றில், இதிலிருந்து ஒன்றும் அதிலிருந்து ஒன்றுமாக எடுத்து (ஆனால் ஒரு ஹார்ட் 7, ஒரு கிளப் 3 என்றுதான் இருக்கமுடியும், அதன் பின்னுள்ள பேட்டர்ன்தான் மாறியிருக்கும்) ஒரு புது பேட்டர்னை உருவாக்குவதுதான் பாலினப்பெருக்கத்தின் நோக்கம்.

இப்படி மாறும் டி.என்.ஏக்கள் இருக்கும் இடத்தில் ஒட்டுண்ணிகள் அவற்றைத் தாக்க புதுப்புது யுத்திகளை உருவாக்கவேண்டியுள்ளது. அவற்றில் எப்போதும் இந்த ஒட்டுண்ணிகளால் வெற்றிபெறமுடிவதில்லை.

எவ்வளவு பால்கள் இருக்கலாம். பொதுவாக நம் கண்ணில் படும் உயிரினங்களில் இரண்டு பால்கள்தான் உள்ளன. சில உயிரினங்கள் இருபாலினத்தவை. அதாவது அவை ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே நேரத்தில் உள்ளன. மண்புழு போன்றவை இப்படித்தான். ஒரே மண்புழுவே ஆணாக விந்துகளையும், பின் மற்றொரு நேரம் பெண்ணாக முட்டைகளையும் உருவாக்கும். இரண்டு தனித்தனி பாலுறுப்புகள் இவற்றுக்கு உண்டு. ஆண் உறுப்புடன் மற்றொரு புழுவின் பெண்ணுறுப்புடனும், பின்னர் பெண் உறுப்புடன் மற்றொரு புழுவின் ஆணுறுப்புடனும் உறவு கொள்ளும். இவற்றுக்கு ஹெர்மாஃப்ராடைட் என்று பெயர். சில உயிரினங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட பால்களும் உண்டாம். ஆனால் மொத்தத்தில் பரிணாம வளர்ச்சியில் பால்கள் இரண்டு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பிறக்கும் குழந்தை எந்தப் பால் என்று எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? பல உயிரினங்களில் செக்ஸ் குரோமோசோம்கள் இதனைத் தீர்மானிக்கின்றன. மனிதர்களில் XX குரோமோசோம் என்றால் பெண். XY என்றால் ஆண். விந்தும் முட்டையும் இணையும்போதே இது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் எல்லா உயிரினங்களிலும் இப்படியில்லை. சில உயிரினங்கள் ஒரு பாலாக இருந்து, சூழலுக்குத் தக்கவாறு மற்றொரு பாலாக மாறுகின்றன. வேறு சில உயிரினங்களில் முட்டை எந்த வெப்பத்தில் பொறிகிறது என்பதிலிருந்து பிறக்கும் குழந்தையின் பால் தீர்மானிக்கப்படுகிறது. ஹாப்லோடிப்லாய்ட் என்ற வம்சத்தில் வரும் உயிரினங்களில் (எறும்பு, தேனீ போன்றவை) முட்டை, விந்துடன் சேர்ந்தால் பெண், சேராவிட்டால் ஆண். அதாவது பெண்ணுக்கு ஆணைவிட இரண்டுமடங்கு குரோமோசோம்கள்.

ஆனாலும் ஓர் உயிரினத்தில் பெண்ணாகவே வேண்டும், அல்லது ஆணாகவே வேண்டும் என்று சிலர் முடிவெடுக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் பெண்ணும் ஆணும் இருந்தாகவேண்டும். இல்லாவிட்டால் அதை நோக்கி சமூகம் உந்தித் தள்ளப்படும். குறுகிய காலகட்டத்தில் ஒரு பாலுக்கு “மவுஸ்” இருந்தாலும் (உதாரணத்துக்கு இப்போது இந்தியாவில் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் ஆர்வம்) நெடும் காலகட்டத்தில் இது சமத்தன்மையை அடைந்துவிடும்.

ரிட்லி, அடுத்து பல உயிரினங்களில் ஆண்கள் ஏன் சிறப்பு உடலமைப்புகளைப் பெற்றுள்ளனர் என்பதை விளக்குகிறார். அதாவது மயிலின் தோகை, சேவலின் கொண்டை போன்றவை. இத்தனைக்கும் இந்த உடலமைப்புகளின் காரணமாக அந்த உறுப்பினரின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஆனாலும் எதிர் பாலினத்தைக் கவர இப்படியான சிறப்பு உறுப்புகள் அல்லது இருக்கும் உறுப்பின் தன்மை மாறி “மேலும் மேலும் அழகாக” உருமாறுகிறது. இந்த விவாதத்தில் நம் வாசகர்களுக்கு மிகவும் முக்கியமான மனிதப் பெண்களின் உருவத் தோற்றம் பற்றியும் வருகிறது. மனித ஆண் ஏன் 35-22-35 என்ற மனிதப் பெண் தோற்றத்தை விரும்புகிறான்? பெருத்த மார்பகம், குறுகிய இடை, அகலமான கீழ்ப்பக்கம் ஏன் முக்கியம் என்று மனித ஆணின் மூளையில் பதிந்துள்ளது? (விடை பின்னர் மற்றொரு சமயம்!)

ரிட்லி அடுத்ததாக, ஆண் ஏன் எப்போதும் பல பெண்களுடன் (மனித இனத்தில் மட்டுமல்ல, பிற இனங்களிலும்) பாலுறவை நாடுகிறான்; பெண் ஏன் முடிந்தவரை ஓர் ஆணுடன் மட்டுமே உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்ற கேள்வியை ஆராய்கிறார். (பல ஆராய்ச்சியாளர்களும் பரிணாம வளர்ச்சிக் கொள்கைமூலம் இதனை நன்றாகவே விளக்கியுள்ளனர்.) இரு பால்களுக்குமே இப்படி நடந்துகொள்வதில்தான் அவரவரது மரபணுக்களை அடுத்த சந்ததிக்கு அனுப்புவதில் அதிக வெற்றியைப் பெறமுடிகிறது.

ஆண், பெண் என்ற இரண்டு பால்கள் பிரிந்துவிட்டன என்றால் இரண்டின் உருவங்களும் அவற்றின் உடல் பாகங்களும் அவரவரது வேலைகளுக்கு ஏற்ப மாறவேண்டும். அப்படியானால் மனிதப் பெண்களின் மூளையும் மனித ஆண்களின் மூளையும் எப்படி வளர்ந்துள்ளன என்பதை ரிட்லி அடுத்து விளக்குகிறார். ஒருபால் உறவின்மீது (homosexuality) ஏன் ஆண்களுக்கு ஆர்வம் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு கொஞ்சம் பதில் கிடைக்கிறது.

கடைசியாக, எப்படி பிற உயிரினங்கள் தங்களது உடலின் பாகங்களை தங்களது எதிர்-பாலை ஈர்க்கப் பயன்படுத்திகின்றனவோ, அதைப்போல மனித இனத்தில் மூளையையும் அதன் சக்தியையும் எதிர்-பாலை ஈர்க்கப் பயன்படுத்துகிறோம் என்று விளக்குகிறார் ரிட்லி. சொல்லப்போனால் மனித மூளையின் வளர்ச்சியே செக்ஸ் என்பதற்காகத்தான் என்பது இவரது வாதம். இந்த உலகில் பிற உயிரினங்களை எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்தவேண்டுமானால் மனித மூளை இந்த அளவுக்குப் பெரிதாக வளர்ந்திருக்கவேண்டியதில்லை. ஆனால் ஓர் ஆண் பிற ஆண்களுடன் போட்டிபோட்டு, ஒரு பெண்ணை அடைய; ஒரு பெண் பிற பெண்களுடன் போட்டிபோட்டு தன் ஆணைத் தக்கவைத்துக்கொள்ள மூளை பெரிதாக வளரவேண்டியதாயிற்று என்கிறார்.

ஆக, மனித மூளை வளர்ச்சி என்பதே “அதற்காக” மட்டும்தானா? :-)

The Red Queen, Sex and the Evolution of Human Nature, Matt Ridley, Penguin.

(புத்தகம் இரவல் கொடுத்த டாக்டர் ஷாலினிக்கு நன்றி.)

அணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...

நர்சரி பள்ளியில் பிள்ளைகள் செய்யும் அட்டகாசம், அரசுக் கல்லூரியில் ரவுடிப் பசங்கள் செய்யும் அட்டகாசம். இரண்டையும் ஒன்றாகக் குழைத்து வார்த்ததுபோலத்தான் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் நடந்துகொள்வது வழக்கம்.

இன்று முக்கியமான அலுவல். காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு தொடரவேண்டுமா, கூடாதா என்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதற்கு முன்னதான விவாதங்கள். பிரணாப் முகர்ஜி, அரசை ஆதரித்து, இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை விளக்கிப் பேசினார். அவை அமைதியாக இருந்தது. பொறுக்கித்தனங்கள் பிற்பாடு ஆரம்பித்தன என்றாலும் பெரும்பாலும் எந்த இடையூறும் இன்றி முகர்ஜி பேசினார். ஆங்கிலத்தில் அங்கும் இங்கும் தடுமாறல்கள். வங்காள மொழி உச்சரிப்பினால் சிறிது குழறல். வயதான குரலானதால் கொஞ்சம் தடுமாற்றம். மற்றபடி, அற்புதமாக இருந்தது அவரது பிரசெண்டேஷன்.

இந்த அரசு நாளைய வாக்கெடுப்பில் தோற்காது என்று நான் கருதுகிறேன். அப்படியே தோற்றாலும் பிரணாப் முகர்ஜியின் இந்தப் பேச்சு வெகு நாள்கள் மனத்தில் நிற்கும்.

அமெரிக்கா, IAEA ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களை முகர்ஜி வெகுமக்களுக்குப் புரியும் வண்ணம் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றுடன் ஒப்பிட்டார். பாஸ்போர்ட், விசா வாங்குவதென்றால் உடனடியாக அந்த நாட்டுக்குப் போகிறோம் என்று முடிவெடுத்துவிடவில்லை. ஆனால் பாஸ்போர்ட்டே இல்லை என்றால் விசா எடுக்கமுடியாது. விசா இல்லையென்றால், விரும்பினாலும் அந்த நாட்டுக்குப் போகமுடியாது. IAEA-உடன் ஓர் ஒப்பந்தம் இல்லையென்றால் (India Specific Safeguards Agreement), அணு எரிபொருள் தர எந்த நாடும் ஒப்புக்கொள்ளாது. எனவே இது பாஸ்போர்ட் போன்றது. அதன் பிறகு, NSG, இந்தியாவுக்கு எரிபொருள் தருவதை ஒப்புக்கொள்ளவேண்டும். அதன்பின், எந்தவொரு NSG நாட்டுடனும் இந்தியா தனியான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

அமெரிக்காவின் அடிமையாக இந்தியா மாறிவிடும் (மாறிவிட்டது) என்று கேரளத்தின் ஃபேவரைட் தமிழ் எழுத்துக்காரன் கலா கௌமுதியில் எழுதியாகிவிட்டது. கெப்பல்ஸ்தான் ஞாபகத்துக்கு வருகிறார். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால்... அது உண்மை என்று மக்கள் நம்பத் தொடங்குவார்கள்.

***

இந்த வாக்கெடுப்பைப் பொருத்தமட்டில், சிபு சோரன் போன்ற சிறைப்பறவைகளையெல்லாம் தூசு தட்டி எடுத்து அவர்களுக்கு ஆரத்தி காண்பித்து மந்திரி பதவி கொடுக்கவேண்டுமா என்று கேள்வி கேட்கப்படுகிறது.

அடுத்து, இந்த அணு ஒப்பந்தம் என்ன அவ்வளவு முக்கியமா? ஏன் இதற்காக அரசையே ஆட்டம் காண வைக்கிறார்கள் என்ற அடுத்த கேள்வி.

இந்த ஒப்பந்தம் அவ்வளவு முக்கியம்தான். ஏனென்றால் கடந்த மூன்று வருடங்களாக இதனை நெகோஷியேட் செய்து வந்துள்ளனர். இப்போது முடிக்காவிட்டால் இனி எப்பொது மீண்டும் தொடர்ந்து முடிக்கமுடியும் என்பதில் கேள்விகள் உண்டு. அந்தப் பக்கமும் ஆட்சி மாறும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஆயிரத்தெட்டு முக்கியமான விஷயங்கள் உண்டு. எனவே முன்னுரிமைகள் மாறிக்கொண்டே இருக்கும்.

இப்போது ஒப்பந்தம் செய்துமுடித்தாலும் எரிபொருள் கிடைக்க எவ்வளவு வருடங்கள், மின்சாரம் கிடைக்க எவ்வளவு வருடங்கள் என்ற கேள்விகள் எல்லாம் அபத்தமானவை. அணு மின்சாரத்தைப் பொருத்தமட்டில் 2030-க்கான திட்டத்தை இன்றிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். தள்ளிப்போடுவோம், தள்ளிப்போடுவோம் என்றால் நாளைய சமூகம்தான் பாதிக்கப்படும்.

தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டே, சாலைகள் முதல் ரயில்கள்வரை, கல்விமுதல் மின்சாரம்வரை திண்டாடிக்கொண்டிருக்கிறோம். என்றோ செய்திருக்கவேண்டிய மெட்ரோ ரயில் திட்டங்களை இன்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் சென்னையில் வேலையை ஆரம்பித்தபாடில்லை.

அடுத்து, 25 கோடி, சிபு சோர(ன்) ஒப்பந்தங்கள். இரண்டு பக்கங்களிலும் பணம், பதவிகள் கைமாறுவதாகச் செய்திகள் சொல்கின்றன. இந்தியக் குடியாட்சி முறையில் அசிங்கம் நடப்பது இது முதல் முறையல்ல. கடைசி முறையும் அல்ல. கோடிகளைக் கொடுத்து வாக்குகள் பெற்றால் அது குற்றம். ஆனால் அமைச்சர் பதவி ஆசை காட்டினால் அது குடியாட்சி முறைக்குள், சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. கோடி கொடுத்ததற்கான ஆதாரம் இருந்தால் சிலர் ஜெயிலுக்குப் போகவேண்டிவரலாம்.

இந்தியக் குடியாட்சி முறையில் எக்சிகியூட்டிவ் அதிகாரம் நாடாளுமன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட கேபினெட் கையில் இருக்கும்வரையில், ஆட்சியைக் கவிழ்க்கும் பல செயல்பாடுகள் நடக்கும். அப்போது ஆசை காட்டி, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதும் நடக்கும். அந்த “ஆசை காட்டுதல்” சட்டத்துக்குப் புறம்பானதாக இருப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

Saturday, July 19, 2008

மாநகராட்சிப் பள்ளிகளில் கணினி

நாகராஜன், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினியில் தமிழில் எழுதச் சொல்லித் தந்த அனுபவத்தைப் பற்றி எழுதியுள்ளார். அதற்கான ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் இப்படி எழுதுகிறார்:
Some weeks ago ELCOT had advertised that it would supply cheap laptop to students in tamil nadu. Should they not provide good desktops to schools first and should they not go for Linux as the Kerala govt. had done. If they can go for tender and get color TVs at cheap rates, why not do the same for all govt. schools in tamil nadu.
இதுதான் சரியான தீர்வு. அதே சமயம் “condemned கம்ப்யூட்டர்களையும்” கூட உருப்படியாகப் பயன்படுத்தமுடியும்.

இன்று பெரும்பான்மைப் பள்ளிக்கூடங்களுக்கு 128 MB நினைவகம் உள்ள கணினிகள்கூடப் போதுமானவை. அதில் லினக்ஸ் நன்கு இயங்கும். இன்று கிடைக்கும் எந்த லினக்ஸ் விநியோகத்தையும் எடுத்துக்கொண்டு, தேவையற்ற பலவற்றை நீக்கிவிட்டு, கே.டி.ஈ டெஸ்க்டாப் சூழல், ஓர் எடிட்டர், ஓப்பன் ஆஃபீஸ், ஃபயர்ஃபாக்ஸ், ஒரு மெசஞ்சர் (யாஹூ!, எம்.எஸ்.என், கூகிள்டாக் ஆகியவற்றுடன் பேசக்கூடியது), பிடிஎஃப் கோப்புகளைப் பார்வையிட ஒரு செயலி, ரியல் பிளேயர் அல்லது வி.எல்.சி மீடியா பிளேயர் ஆகியவற்றை மட்டும் வைத்துக்கொண்டால் போதும்.

(யூனிகோட்) தமிழ் படிக்க, எழுதத் தேவையான செயலிகள் இருந்தால் போதும்.

இவற்றை இயக்க “condemned கம்ப்யூட்டர்களே” போதுமானவை.

ஆனால் இந்தக் கணினியுடன் இணைய இணைப்பு அவசியம். உருப்படியான மின்சாரம் இல்லாத நம் நாட்டில், கூட ஒரு UPS தேவை.

ஆனால் இந்தக் கணினிகளை நம் ஆசிரியர்கள் தாங்கள் மட்டுமே பயன்படுத்தி, மற்றபடி பூட்டிவைக்காமல், மாணவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அதைச் செய்வார்களா என்பது பெரும் கேள்வி.

Friday, July 18, 2008

டிஜிட்டல் பிளவு

எங்களது அலுவலகத்தைச் சேர்ந்த நாகராஜன் எழுதி அனுப்பியது.

--பத்ரி

***

இன்று காலையில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான தமிழ்க்கணினி பயிற்சி பட்டறை மாநகராட்சி சமூக அரங்கில் நடைபெற்றது. இதை கணித்தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கணினியில் எவ்வாறு தமிழ் படிக்கலாம், எழுதலாம் போன்ற அடிப்படை விஷயங்களைப் பற்றி செயல்முறை விளக்கங்களோடு பகிர்ந்துகொள்ள என்னை அழைத்திருந்தார்கள்.

ஆடியன்ஸ் பெரும்பாலும் மாநகராட்சி ஆசிரியைகள். ஆண்கள் மிகவும் குறைவு.

இதற்குமுன் வேறு சில கல்லூரி பட்டறைகளில் நான் இது தொடர்பாக பேசியிருந்தாலும், இந்த முறை நான் அதிக ஈடுபாட்டுடன் பேச ஆரம்பித்தேன். பெரும்பாலும் அரசுப் பள்ளிகளிலேயே நான் படித்திருந்ததால் என்னை அறியாமலேயே ஒரு emotional attachment இருந்தது.

முதலில் ரோமன் எழுத்து முறை கொண்ட (ஆங்கிலம் போன்ற) மொழிகளுக்கும், மற்ற (தமிழ் போன்ற) மொழிகளுக்கும் கணினியின் பார்வையில் உள்ள வித்தியாசங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டேன். பின்னர் கணினியில் ஆங்கிலம் எவ்வாறு ஒழுங்காகத் தெரிகிறது? ஏன் ஆங்கிலத்தில் உள்ளிடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை? போன்ற விஷயங்களுக்கு வந்தோம். சிறிது font, encoding, 8-bit, 16-bit, ansi, unicode, keyboard driver போன்ற விஷயங்கள் மேயப்பட்டன.

தமிழ் போன்ற மொழிகளுக்கு எழுத்துகளை உள்ளிட தனியாக ஒரு மென்பொருள் ஏன் தேவை என்பது அவர்களுக்குத் தானாகவே புரிந்துவிட்டது. அது மட்டுமில்லாமல், Windows xp நிறுவப்பட்ட கணினிகளில் தமிழ் தெரிவதற்கு சில பகீரதப் பிரயத்தனங்களை செய்ய வேண்டியுள்ளது, CD எல்லாம் கேட்கிறது! போன்ற சிரமங்களை சிலர் ஏற்கெனவே அனுபவங்களின் மூலம் அறிந்திருந்தனர்.

ஆதலால் முதல் 40 நிமிடங்களில், என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து விட்டது.

இப்போது தீர்வுகளைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.

இதுநாள்வரை இந்த பிரச்சனைகளுக்கு என்னென்னெ மென்பொருள்கள் வந்தன? ஒவ்வொன்றும் என்னென்ன தீர்வுகள் தந்தன? எதையெல்லாம் தரவில்லை? என்று சொல்லிவிட்டு இதற்கு மேல் தியரி பேசினால் ஒன்று விரட்டியடித்து விடுவார்கள், முடியவில்லை என்றால் ஓடிப்போய்விடுவார்கள் என்பதால் செயல்முறை விளக்கத்திற்கு தாவலாம் என அறிவித்தேன்.

முதலில் NHM Writer.

வந்தவர்கள் அனைவருக்கும் NHM மென்பொருள்கள் கொண்ட CD மற்றும் வேறு சில CDகளையும் இலவசமாக கொடுப்பதற்கு கணித்தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட CD ஒன்றையே எடுத்து எனது மடிக்கணினியில் நுழைத்தேன்.

Setup file எங்குள்ளது என்பதில் இருந்து ஆரம்பித்து, installation எவ்வாறு செய்வது, regional language options நிறுவப்படாமல் இருந்தால் NHM Writer அதைத் தானாகவே சரி செய்து ஒரு தடவை restart செய்ய சொல்வது போன்ற சம்பிரதாயங்கள் அவர்கள் முன்னேயே திரையில் நடந்தேறின.

இம்முறை System tray, icon, mouse right button, click, keypreview, OnScreen Keyboard, Toggle key போன்ற விஷயங்கள் மேயப்பட்டன.

இப்போது தட்டச்சுவது எப்படி என்ற கட்டத்திற்கு வந்தோம்.

எனக்கு phonetic முறை பழக்கமென்பதால் toggle key-யாக Alt+2 அடித்து தட்டச்சிட ஆரம்பித்தேன். “அம்மா”.

“ஆமாம்.. தமிழ் வந்துடுச்சு”. “Alt key எங்கே இருக்கு”.

சிலர் என்னை நோக்கி முன்னேறினர்.

தாய்மொழியில் அம்மா எனத் தட்டச்சிட அன்னைகளுக்கு அத்தனை ஆர்வம்.

நான்கைந்து ஆசிரியைகள் முயற்சி செய்தனர்.

ஒருவருக்கு மட்டும் Altஐயும் 2ஐயும் ஒன்றாக சேர்த்து ஒரு முறை மட்டும் சேர்த்து அடிப்பது சிரமமாக இருந்தது.

பின்னர் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டனர்.

மீண்டும் கொஞ்சம் தியரி பேச ஆரம்பித்தேன்.

Alt+2ஐ விட Alt+1 நன்று என்றேன்.

தமிழ்99 முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் ஆரோக்கியமானது. NHM Writer'ன் keypreviewவும் OnScreen Keyboard'ம் உங்களுக்கு உதவும் என்றேன். அதுபோக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட CDயில் சிந்தாநதி எழுதிய “தமிழ்99 கையேடு” இருக்கிறது என்பதையும் தெரிவித்தேன்.

இத்துடன் முடித்து கொள்ளலாம் என எண்ணியபோது ஆண்டோ பீட்டர் NHM Converter பற்றியும் சிறிது பேசச் சொன்னார்.

இது இவர்களைக் குழப்புமே என்று தயங்கியவாரே NHM Converter பற்றியும் ஐந்து நிமிடங்கள் செய்முறை விளக்கம் நடந்தது.

எல்லாம் ஓரளவு இனிதே முடிந்தது என்று கூறி எனது Sessionஐ முடித்துக் கொண்டவாறு அறிவித்தேன்.

அப்போது பங்கேற்பாளர்கள் திசையில் இருந்து ஒரு குரல். அதை ஆமோதித்தவாரே மேலும் சிலர்.

“எங்க பள்ளிகளில் இருப்பதெல்லாம் மத்தவங்க பயன்படுத்தின Condemned கம்ப்யூட்டருங்க சார்..”

“xp எல்லாம் கிடையாது சார். Windows 98 தான்”

“ரொம்போ ஸ்லோவா இருக்கும்”

கடைசியாக... ஒரு ஆசிரியை கேட்டார்.

“சார்.. கம்ப்யூட்டரும் தருவீங்களா சார்.”

Monday, July 14, 2008

ஆசிரியர் - மாணவர் உறவு

என் உறவினர் பையன் ஒருவன் சென்ற ஆண்டு சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். ரூ. 5 லட்சம் பணம் கொடுத்து. கல்லூரி ஆசிரியர் ஒருவர் வகுப்பில் நிறையத் தொல்லை கொடுக்கிறாராம். எதற்கெடுத்தாலும் இவனை வகுப்பில் திட்டுகிறாராம். எனவே கல்லூரிக்கு இனிப் போகமாட்டேன் என்று முடிவு எடுத்துவிட்டான். போனால் வேறு கல்லூரி, இல்லாவிட்டால் கிடையாது என்பது அவன் கருத்து.

பெற்றோர்களும் கல்லூரியில் இருந்து டிசி வாங்கிக்கொண்டு, வேறு ஒரு கல்லூரியில் சேர்க்கும் முடிவை ஏற்றுக்கொண்டுவிட்டனர். அந்த ரூ. 5 லட்சத்தைக் கேட்டு வாங்கப்போகிறார்களா என்று தெரியவில்லை.

***

கல்லூரி ஆசிரியர்களால் ஒரு மாணவனை முன்னேற்றுவது வேண்டுமானால் கடினம். ஆனால் ஒரு மாணவனின் வாழ்க்கையை முற்றிலும் நாசமாக்கிவிடமுடியும்.

நான் ஐஐடி சென்னையில் நான்காம் ஆண்டு, ஏழாம் செமஸ்டர் படித்த சமயம். வெப்பவியல் தொடர்பான ஒரு பாடம் இருந்தது. அந்தப் பாடத்தை எடுத்த ஆசிரியருக்கு, அவரது பாடம் ஏழாவது செமஸ்டரில் இருக்கிறது என்ற பெரும் குறை. ஏனெனில் ஏழாவது செமஸ்டர் வரும்போது எல்லா மாணவர்களும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்திருப்பார்கள். GRE/TOEFL முடித்திருப்பார்கள். ப்ராஜெக்ட் வேலைகள் நடந்துகொண்டிருக்கும். CAT பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் வகுப்பில் பாடத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டார்கள். ஆறு செமஸ்டர் வரையிலான GPA-வை வைத்துக்கொண்டுதான் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களைத் தேர்வு செய்யும். ஏழாவது செமஸ்டர் பாடங்களில் பாஸ் செய்தால் போதும்.

இதுதான் அந்த ஆசிரியரது குறையே. தான் எடுக்கும் பாடத்தை மாணவர்கள் கவனத்துடன் படிக்கப்போவதில்லை என்ற நிலை இருந்தால் ஓர் ஆசிரியருக்குக் கோபம் வருவது இயல்பே. ஆனால் அதை அவர் எதிர்கொண்டவிதம் சரியாக இல்லை.

தான்தான் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியர், தன்னால்தான் மாணவர்களைச் சரியாக எடைபோடமுடியும், தனது பரீட்சைகளில் மார்க் வாங்குவதுதான் மிகக் கஷ்டமானது என்றும் இந்த ஆசிரியர் நினைத்திருந்தார்.

வகுப்பில் முதல் நாள். நேராக உள்ளே வந்தார். முதல் கேள்வி, “யார் இந்த வகுப்பில் முதல் மாணவன்?” என்பது. நான் எழுந்து நின்றேன். “உன்னால் இந்த வகுப்பில் முதல் மதிப்பெண் பெறமுடியாது. என் வகுப்பில் நிஜமாகவே திறமையுள்ள மாணவர்களால் மட்டுமே முதல் மதிப்பெண் பெறமுடியும். உட்கார்” என்றார். அன்று மட்டுமல்ல. அடுத்தடுத்து பல வகுப்புகளிலும் ஏதாவது என்னைச் சீண்டிக்கொண்டே இருப்பார்.

நான் அவரோடு போராடிப் பார்ப்பதாக முடிவெடுத்திருக்கலாம். “வருவது வரட்டும் மவனே. உன் பரீட்சையில் கிழித்துக் குதறி முதல் மதிப்பெண் வாங்கிவிடுகிறேன்” என்று நான் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் நான் மற்றுமொரு திசையில் சென்றேன். ஐஐடி படிப்பில் முதன்முறையாக வகுப்பை பங்க் அடிக்க ஆரம்பித்தேன். வகுப்புக்கு வந்தால்தானே இவரது பார்வையில் படவேண்டும்? 1st Quiz, Midsem, 2nd Quiz, Final என்று நான்கு பரீட்சைகள், வாரா வார அசைன்மெண்ட் என எல்லாவற்றிலும் ஏனோ தானோவென்று எழுதி ஒருவழியாக “B” கிரேட் கிடைத்தது.

அந்த ஆசிரியருக்கு சந்தோஷம். “பார்த்தாயா, நான் சொன்னது நடந்துவிட்டது! நீ வகுப்பில் முதல் கிடையாது, இரண்டாவதுகூடக் கிடையாது. 15ஓ, 20ஓ” என்றார். எனக்கோ, இதைப்பற்றிக் கவலையில்லை. ஏழாவது செமஸ்டர் முடிவடைவதற்கு முன்னரே, இந்த கிரேட் கிடைப்பதற்கு முன்னரே, யுனிவெர்சிடி ஆஃப் இல்லினாய், அர்பானா ஷாம்பெய்ன் மற்றும் கார்னல் யுனிவெர்சிட்டி இரண்டிலும் இடம் கிடைத்திருந்தது. “நீ போடா வெண்ணெய், உன் பாடமும் நீயும். எவனுக்கு வேணும் ஹீட் டிரான்ஸ்ஃபரும் பவர் பிளாண்ட் எஞ்சினியரிங்கும்” என்றுதான் எனக்குத் தோன்றியது.

***

முதல் ஆண்டில் இயல்பியல் என்றால் எனக்கு நடுக்கம். ஏதோ ஒரு மாதிரி JEE-யில் ஒப்பேற்றி ஐஐடிக்குள் நுழைந்திருந்தேன். முதல் நாளே மற்ற பசங்கள் எல்லாம் ரெஸ்னிக் அண்ட் ஹாலிடே என்றார்கள். அப்படி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதே கிடையாது. முதல் செமஸ்டர், பிஸிக்ஸ், மேத்ஸ் இரண்டிலும் தர்ம அடி. ஃபெயிலாகாமல் தப்பித்தது பெரும் புண்ணியம்.

இயல்பியலுக்கு, சற்றே காலை விந்தி விந்தி நடக்கும் ஓர் ஆசிரியர் இருந்தார். அவருக்கு ஏதோ பிரச்னை என்று மற்ற பசங்கள் பேசிக்கொண்டார்கள். அவரது பையனுக்கு JEE-யில் இடம் கிடைக்கவில்லை என்றும் அதனால் கடும் கோபத்தில் இருந்த அவர் உள்ளே வந்த பையன்கள் அனைவரையும் ரவுண்டு கட்டி அடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் என்றும் சொன்னார்கள். “I want to strip you naked and make you run around the OAT” என்று பலராம் நாயுடு உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பையன்களைத் திட்டுவது அவரது வழக்கம். (OAT என்றால் ஓப்பன் ஏர் தியேட்டர்.) இன்னும் நிறையத் திட்டுவார். யாராவது தப்பாக பதில் சொல்லி மாட்டிக்கொண்டால் காலி.

ஆனால் பிசிக்ஸ் வகுப்பில் ஒரு வசதி. முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் பிசிக்ஸ் பாடத்தை எடுப்பதால் சுமார் 100 பேருக்கு மேல் ஒரு வகுப்பில் இருந்தார்கள் என்று ஞாபகம். அதனால் அப்படியே கண்ணுக்குத் தெரியாமல் பதுங்கிவிடலாம். பின் பெஞ்சில் உட்கார்ந்துகொள்ளலாம். தூங்கவும் செய்யலாம். நாம் தூங்குவது அவருக்குத் தெரிந்துவிட்டால் சாக்பீஸைத் தூக்கி மேலே எறிவார். ஆனால் வந்து பிடிக்கமுடியாது. கால் ஊனம் ஒரு காரணம்.

அவர் ஒரு டெரர். அப்போதே பலர் பிசிக்ஸிலிருந்து எஸ்கேப் ஆகலாம் என்று முடிவு செய்தார்கள். என்னதான் இருந்தாலும் மூன்று செமஸ்டர்கள் மட்டும்தான் கழுத்தறுப்பு. பிறகு உங்களது எஞ்சினியரிங் என்னவோ அந்த பாடங்கள் மட்டுமே.

ஆனால் அதுதான் முதல் செமஸ்டர். நான் தீவிரமாக ஒரு முடிவை எடுக்கவேண்டியிருந்தது. நமது பின்னணிக்கு, தொடர்ந்து ஐஐடியில் படிக்கலாமா, இல்லை ஓடிவிடலாமா என்பதுதான் அது. சரி, ஒரு கை பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். முதலில் ரெஸ்னிக் அண்ட் ஹாலிடேயில் தொடங்கினேன். நூலகத்துக்குச் சென்று கிடைத்த பிஸிக்ஸ், மேத்ஸ் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். நல்ல நூலகம். நிறைய அற்புதமான புத்தகங்கள் கிடைத்தன. முதல் செமஸ்டரில் “C” கிரேடில் ஆரம்பித்து, இரண்டாவதில் “B”, மூன்றாவதில் “A” என்று முன்னேறினேன்.
பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் இந்த அளவுக்கு மோசம் கிடையாது. யூஸ்லெஸ், வேஸ்ட் என்றெல்லாம் சொல்வார்களேதவிர, ஒரு குரூர எண்ணத்தோடு மாணவர்களை டார்ச்சர் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கமாட்டார்கள்.

அந்த பிஸிக்ஸ் வாத்தியாரின் மிரட்டல்தனத்தால் நான் நிறையவே பயனடைந்தேன். மூன்றாவது செமஸ்டர் வரும்போது மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் முதலாவதாக இருந்தேன். கடைசிவரை அப்படியே தொடர்ந்தேன். ஆனால், அந்தக் காரணத்தால்தான் வெப்பவியல் ஆசிரியரின் வம்படியில் மாட்டினேன்.

***

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்காது. மாணவர்களைத் துன்புறுத்துவது நடக்காத காரியம். மேல் முறையீடு செய்ய தனி அலுவலகம் இருக்கும். தைரியமாக புகார் கொடுக்கலாம். (ஆனால் சில நேரங்களில் பொய்ப் புகாரும் கொடுக்கப்படலாம். கார்னலில் நான் டீச்சிங் அசிஸ்டெண்டாக இருந்தபோது என்மீது ஒரு பொய் புகார் கொடுக்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.)

ஆனால் இந்தியாவில், அதுவும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இதெல்லாம் நடப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது. அரைகுறை ஆசிரியர்கள் தங்களது டென்ஷனை மாணவர்கள்மீது சுமத்த அரிய வாய்ப்பு. பணம் கொடுத்து சேரும் மாணவர்களும் ஏதோ டிகிரியை வாங்கிவிட்டு வெளியேறுவோம், ஏன் வீண் வம்பு என்றே நினைப்பார்கள்.

ஆனால், தங்களது நடத்தையின் விளைவுகளை ஆசிரியர்கள் கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். சுமார் மாணவனை நல்ல மாணவனாகவும், நல்ல மாணவனை மோசமான மாணவனாகவும் ஆக்கும் திறமை ஆசிரியர்களுக்கு உண்டு. முதல் காரியத்தைச் செய்யாவிட்டாலும், இரண்டாவதைச் செய்யாமல் விட்டார்களானால் நல்லது.

Sunday, July 13, 2008

பாபா ஆம்டே (ஆம்தே)

(Baba Amte, Anita Kainthla, Viva Books, 2005, Rs. 195)

முரளிதர் ஆம்டே கடந்த சில மாதங்களுக்குமுன் காலமானார். இவரைப் பற்றி அவ்வப்போது செய்தித்தாளில் படித்திருக்கிறேன். நர்மதா அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் நர்மதா பச்சாவோ ஆந்தோலன் என்ற அமைப்பில் மேதா பட்கருடன் சேர்ந்து இவர் கலந்துகொண்டிருக்கிறார்.

சமீபத்தில் மேற்கண்ட புத்தகத்தை எழுதிய ஆசிரியரைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன்.

***

முரளி ஆம்டே மஹாராஷ்டிர பிராமண குடும்பத்தில் 26 டிசம்பர் 1914-ல் பிறந்தவர். நல்ல வசதியான பின்னணி. வக்கீலுக்குப் படித்து, வார்தாவில் அந்தத் தொழிலில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் மஹாத்மா காந்தியுடன் தொடர்பு ஏற்பட்டு, காந்தியவாதியாக மாறினார்.

சுதந்தரத்துக்குப் பிறகு, வாரோரா நகராட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நகராட்சி “எடுப்பு கக்கூஸ்” சுத்திகரிப்பு ஊழியர்கள் சம்பளம் உயர்த்தச் சொல்லிக் கேட்டனர். முரளி ஆம்டே நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். அவர்கள், கக்கூஸ் சுத்திகரிப்பது என்பது மிகவும் கடுமையான வேலை, யாராலும் இதனைச் செய்யமுடியாது என்றனர். “ஏன்? நான் செய்து காட்டுகிறேன்” என்று இறங்கினார் ஆம்டே. முதல் நாள், முதல் கக்கூஸை சுத்தம் செய்வதற்குள் உயிர் போய்விட்டது. அப்போதுதான் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் எந்த மோசமான நிலையில் வேலையில் ஈடுபடுகின்றனர் என்பதைப் புரிந்துகொண்டார். அடுத்த 9 மாதங்கள், நாளைக்கு 40 கக்கூஸ் சுத்தம் செய்யும் வேலையை, பிற சுத்திகரிப்புத் தொழிலாளர்களுடன் சேர்ந்து செய்தார்.

ஆம்டே, சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் யூனியனின் தலைவராகவும் இருந்தார். எனவே “தீண்டத்தகாதவர்கள்” வீடுகளுக்குப் போய்வந்தார். இதனால் அவரது பெற்றோரும் கிராமத்தவரும் அவரிடம் இருந்து விலகியே இருந்தனர்.

ஆம்டே, இந்தியாவில் நிலவிவந்த கடுமையான சாதிப் பிரிவினைகளை எதிர்க்கத் தொடங்கியது அப்போதுதான். தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு டீக்கடைக்கு வருவார். அவர்களுக்கு தனி டீ கிளாஸ் கொடுக்கப்பட்டால் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்பார். இந்து மதத்தின் மீதான நம்பிக்கை அவருக்குப் போக ஆரம்பித்ததும் அப்போதாகத்தான் இருக்கவேண்டும். அப்போது நாத்திகராக மாறிய ஆம்டே தன் உயிர் போகும் வரையில் நாத்திகராகவே இருந்திருக்கிறார்.

இந்து மதத்திலிருந்து விலகினாலும், இந்து என்ற பெயர்கொண்ட பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார். அதுவும் சுவாரசியமான கதை. ஒரு மாதிரியான சாமியாராக, தாடி மீசையுடன், கதராடையுடன் அவர் அலைந்துகொண்டிருந்தார். திருமணமே செய்துகொள்ளமாட்டேன் என்ற உறுதியில் இருந்தார். ஆனால் உறவினர் திருமணம் ஒன்றில் இந்து என்ற தூரத்து உறவுப் பெண்ணைப் பார்த்தார். வயது மிகவும் குறைந்த பெண் அவர். இருந்தாலும் இருவருக்குள்ளும் ஈர்ப்பு ஏற்பட்டது. காதல் கடிதங்களைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர். பெற்றோர்களின் எதிர்ப்பைமீறி அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்தது.

கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை பிறந்தபிறகுதான் ஆம்டேக்கு அதிர்ச்சியூட்டும் அனுபவம் ஒன்று ஏற்பட்டது.

***

ஒரு நாள் கொட்டும் மழையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆம்டே, தெருவில் ஒரு தொழுநோய் ரோகியைக் கண்டார். கை, கால் விரல்கள், மூக்கு, காது ஆகியவை இல்லாத, உடல் அழுகி நாற்றம் எடுக்கும், விரைவில் உயிர் பிரியப்போகும் ஒரு மாமிச மூட்டையாகத் தெருவில் கிடந்த ஓர் உருவத்தை நடைபாதையில் கண்டார். முதலில் அருவெறுப்பு. கிட்டத்தட்ட வாந்தியே வர, அங்கிருந்து ஓடி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

அன்று இரவு முழுதும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. சக மனிதன், நோயால் திண்டாடும் ஒருவன், என் தனக்கு அருவெறுப்பைத் தரவேண்டும் என்று யோசித்துக்கொண்டே இருந்தார். அடுத்த நாள், வீட்டிலிருந்து ஒரு போர்வையைக் கொண்டுபோய் அந்த சாகும் உருவத்தின்மீது போர்த்தி, அதன் பக்கத்திலேயே இருந்தார். உடலின் புண்களைத் துடைத்து மருந்திட்டு பார்த்துக்கொண்டார். இரண்டு மூன்று நாள்களில் அந்தத் தொழுநோயாளி இறந்துபோனார். ஆனால் தொழுநோயாளிகளுக்கு ஒரு வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற புத்துணர்ச்சி ஆம்டேக்குள் பிறந்தது.

தொழுநோயாளிகளுக்கு மருந்துகொடுக்க டாக்டர்கள், நர்ஸ்கள் யாருக்கும் விரும்ப்பம் இல்லை. அது தொற்றுநோய் என்று பயந்தனர். (உண்மையில் தொற்றுநோய்களுக்குள்ளாக, மிகக் குறைவாக அடுத்தவரைப் பிடித்துக்கொள்ளக்கூடிய நோய் இது.) எனவே தானே தொழுநோய்க்கு மருத்துவம் செய்யும் படிப்பைப் படிக்க முடிவுசெய்தார். இவரது பின்னணியோ சட்டப்படிப்பு. ஆனால் அப்போது ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தார். அவரது சிபாரிசில், ஆம்டே கொல்கத்தாவில் இருந்த Tropical School of Medicine-ல் 1949-ல் சேர்ந்தார். அங்கு தொழுநோய்க்கான அடிப்படை சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்டார்.

1951-ல் மத்தியப் பிரதேச அரசு, தொழுநோயாளிகள் காப்பகம் ஒன்றைக் கட்ட ஆம்டேக்கு 50 ஏக்கர் நிலத்தை அளித்தது. சரியான காட்டு நிலம். பாறைகள். காட்டு விலங்குகள். தண்ணீர் கிடையாது. அந்த இடத்துக்கு தன் மனைவி, சிறு குழந்தை, சில தொழுநோயாளிகள், ஒரு நொண்டிப் பசு, 4 நாய்கள், கையில் ரூ. 14 ஆகியவற்றுடன் ஆம்டே சென்று சேர்ந்தார். அந்த இடத்துக்கு ஆனந்தவனம் என்று பெயரிட்டார்.

முதலில் தொழுநோயாளிகள் உதவியுடன் கிணறு தோண்டினார். குடில்கள் அமைத்துக்கொண்டார். அவர்கள் கொண்டுசென்ற நான்கு நாய்களையும் சிறுத்தைகள் பிடித்துச் சென்று தின்றுவிட்டன. மாடு தப்பித்தது. சில நல்ல உள்ளங்கள் அவர்களுக்கு மேலும் சில மாடுகளை தானமாக அளித்தன. அந்த மாடுகளின் பாலை விற்று பணம் சேர்த்து அதில் பிழைக்க அவர்கள் எண்ணினர். ஆனால் தொழு நோயாளிகள் கை பட்ட பாலாக இருக்குமோ என்ற பயத்தில் பக்கத்தில் உள்ள கிராமவாசிகள் பாலை வாங்கவில்லை. பின் அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டுவந்து காண்பித்து, ஆம்டேயின் மனைவிதான் பால் கறக்கிறார் என்று சொன்னபிறகுதான் பாலை விற்கமுடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக தொழுநோயாளிகள் உதவியுடன் சுற்றுப்புறத்தில் காய்கறிகள் பயிரிடுதல், தானியங்கள் பயிரிடுதல் ஆரம்பித்தது. விரைவில் அவர்கள் அந்தக் காட்டை பசுமை பொங்கும் நிலமாக மாற்றிவிட்டனர். மேலும் பல தொழுநோயாளிகள் அங்கு வர ஆரம்பித்தனர். வெளிநாட்டு நிதி உதவியுடன் அங்கே தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை கட்டப்பட்டது.

ஆனந்தவனத்தில் தொழுநோய் குணமாக ஆரம்பித்தது. ஆனால் குணமான தொழுநோயாளிகளும் சமூகத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தனித்தே இருக்கவேண்டி இருந்தது. எனவே தொழுநோயாளிகள், குணமானவர்கள், பிறர் என அனைவரும் அங்கேயே வசிக்குமாறு அவர்கள் அனைவருக்கும் வசிக்குமிடங்கள் கட்டப்பட்டன. அனைவரும் தத்தம் சக்திக்கு ஏற்ப உழைக்குமாறு தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. விவசாயம், பொருள் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டு, உழைப்பில் நோயை மறந்து தொழு நோயாளிகள் மகிழ்ச்சியுடன் இருக்கத் தொடங்கினர்.

தொழுநோயை எதிர்கொள்ள சுற்று வட்டாரத்தில் பல இடங்களில் 1950களில் கிளினிக்குகள் பலவற்றை ஆம்டே கட்டத்தொடங்கினார். 1970களில் தொழுநோயை எதிர்கொள்ள நல்ல மருந்துகள் வர ஆரம்பித்தன. அந்தக் கட்டத்தில் ஆம்டேயின் இரு மகன்களும் டாக்டர் படிப்பை முடிந்தனர். அவர்கள் இருவரும் இரண்டு டாக்டருக்குப் படித்த பெண்களை மணம் செய்துகொண்டனர். ஆம்டேக்கு மஹாராஷ்டிர அரசும் பல ஏக்கர் நிலங்களைக் கொடுத்தது. அதில் மேலும் சில இடங்களில் ஆனந்தவனம் போல தொழுநோய் ஒழிப்பில் ஈடுபடும் இல்லங்களைக் கட்ட ஆம்டே முற்பட்டார்.

ஆனால் சில இடங்களில் உள்ளூர் கிராமவாசிகளுக்கும் ஆம்டேக்கும் பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.

ஒரு கட்டத்தில் ஆம்டே மத்தியப் பிரதேச பழங்குடியினர் நல்வாழ்வில் ஈடுபட ஆரம்பித்தார். பழங்குடியினருக்காக மருத்துவமனை கட்டுதல், அவர்களுக்குக் கல்வி கற்பித்தல், நல்ல விவசாய முறைகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் ஆம்டேயின் மகன் பிரகாஷ் ஆம்டே ஈடுபட்டுவருகிறார்.

***

1990களின் ஆரம்பத்தில் பாபா ஆம்டே நர்மதா பச்சாவோ ஆந்தோலனில் ஈடுபடத் தொடங்கினார். நர்மதா அணை கட்டப்பட்டால் பல லட்சம் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள், சுற்றுச் சூழலுக்கும் பெரும் கேடு ஏற்படும் என்பது அணை எதிர்ப்பாளர்களின் கருத்து. ஆனால் அந்தப் போராட்டத்தில் இருக்கும்போது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து மும்பையில் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்து பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். காந்தி நோவாகாளியில் செய்ததுபோல, ஆம்டே தன் மனைவியுடன் மும்பை சென்று மத ஒற்றுமை பற்றிப் பேசினார். சில மாதங்கள் அங்கே தங்கியிருந்தார்.

ஆனால் காந்திக்குக் கிடைத்த வெற்றி, ஆதரவு, ஆம்டேக்குக் கிடைக்கவில்லை. மற்றொரு பக்கம், நர்மதா அணை கட்டப்படுவதிலும் ஆம்டேக்குத் தோல்வியே கிடைத்தது. அவரையும் மேதா பட்கரையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து ஜெயிலில் எறிந்தபிறகு அணைப் பகுதியில் நீர் நிரப்பப்பட்டது.

கரடுமுரடான நிலப்பரப்பில் வண்டிகளில் பயணம் செய்தது, ஓயாமல் ஓடியாடி உழைத்தது ஆகிய காரணங்களால், ஆம்டேக்கு 1970களிலேயே முதுகெலும்பில் இரண்டு மூன்று துண்டுகளை எடுக்கவேண்டியிருந்தது. அதனால் இடுப்பிலும் முதுகிலும் பிரேஸ் அணிந்தே அவர் இயங்கிவந்தார். அவரால் உட்கார முடியாது. நிற்கலாம் அல்லது படுக்கலாம். தனது கடைசி 40 வருடங்கள் முழுக்க முழுக்க இப்படியே இயங்கினார் அவர்.

2007-ல் லூகேமியா என்ற ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆம்டே பிப்ரவரி 9, 2008-ல் ஆனந்தவனத்தில் உயிர் நீத்தார்.

ராமோன் மாக்சேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் முதற்கொண்டு பல விருதுகளை வாங்கியுள்ளார் இவர்.

Saturday, July 12, 2008

IAEA Safeguards ஒப்பந்தம்

இன்று தி ஹிந்துவில் வந்திருக்கும் சித்தார்த் வரதராஜன் கட்டுரை சுவாரசியமாக உள்ளது. இந்தியா-IAEA ஒப்பந்தம், பொதுவாக இடதுசாரிகள் நினைத்ததைவிட இந்தியாவுக்கு சாதகம் அதிகம் இருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது.

இடதுசாரிகள் தொடர்ந்து எதையோ பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். “அய்யோ, நாம் கஷ்டப்பட்டு காசு கொடுத்து வாங்கிய வெளிநாட்டு ரியாக்டர்கள் என்னாவது?” என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். யாஹூ! செய்தியிலிருந்து:
'As a result of operationalising the Indo-US nuclear deal, India will place its costly imported reactors under perpetual IAEA safeguards and risk their permanent shutdown in case it fails to toe the US line on foreign policy issues,' the Left parties said.
முதலில் இந்த India Specific Safeguards Agreement-ன் சில ஷரத்துகளை எளிமையாகப் புரிந்துகொள்வோம்.

1. முன்னரே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கை (NPT) பிரகாரம், இரண்டுவிதமான நாடுகள் இருக்கின்றன என்று பார்த்தோம். அணு ஆயுத நாடுகள், அணு ஆயுதம் இல்லாத நாடுகள். அத்துடன் இந்தியா போன்ற திரிசங்கு சொர்க்க நாடுகளும் (NPT-ஐ ஏற்றுக்கொள்ளாத, ஆனால் அணு ஆயுதம் உள்ள நாடுகள்) உள்ளன என்றும் பார்த்தோம்.

IAEA, அணு ஆயுத நாடுகளைப் பொருத்தமட்டில் ரொம்ப ஆட்டம் போடாது. “நீங்க என்ன வேணா செஞ்சுக்கங்க, உங்க வழில நான் வரமாட்டேன்” என்று சொல்லிவிடும். ஆனால், அணு ஆயுதம் இல்லாத நாடுகளில் புகுந்து ரகளை செய்யும். அணு ஆயுதம் இல்லாத நாடுகளில், ஒவ்வொரு அணு உலையையும் கண்காணிக்கும். உள்ளே வரும் யுரேனியம், வெளியே போகும் யுரேனியம் என்று எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக்கொள்ளச் சொல்லும். அதில் எதுவும் வேறு நாடுகளுக்குப் போகிறதா, அப்படிச் செல்லும் நாடுகள் அணு ஆயுத நாடுகளா, இல்லையா, ஏன் அங்கு யுரேனியம் செல்கிறது என்றெல்லாம் தோண்டித் துருவும்.

ஆனால் India Specific Agreement-ல், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுத்துள்ளது. இந்தியா அணு ஆயுத நாடு என்று ஒருவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதைவிடச் சிறப்பான ஒப்பந்தம் நமக்குக் கிடைக்காது.

2. இந்தியா தான் விரும்பி கைகாண்பிக்கும் அணு உலைகளை மட்டுமே IAEA கண்காணிக்கும். அந்த அணு உலைகள், இந்தியா பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதால் உருவான அணு உலைகளாக மட்டுமே இருக்கும். ஒன்று இந்த அணு உலைகளே அந்நிய நாட்டிலிருந்து ஒப்பந்தம்மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கும். இரண்டு, நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் அணு உலைகளுக்கு அந்நிய நாட்டிலிருந்து யுரேனியம் பெற்றால், அந்த அணு உலைகளாக இருக்கும்.

நம் அணு உலைகள், நம் யுரேனியம் என்றால் IAEA கண்டுகொள்ளாது. கண்காணிப்பு ஏதும் இல்லை.

பிறர் நமக்கு அணு உலைகளைத் தரும்போது, அதற்கு கட்டாயமாகக் கண்காணிப்பு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதுபோலவே, பிறர் நமக்கு யுரேனியம் தரும்போது அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வோம் என்பதையும் அதிலிருந்து ஒரு துளிகூட அணு ஆயுதம் செய்வதற்குப் போகக்கூடாது என்பதையும் அந்த நாடுகள் எதிர்பார்க்கலாம் அல்லவா?

3. அடுத்து, ஒரு நாடு யுரேனியம் தந்துகொண்டே இருக்கும்போது, திடீரென நிறுத்திவிட்டால் என்ன செய்வது?

அது இந்தியாவின் பிரச்னை. தாராப்பூருக்கு யுரேனியம் தந்துகொண்டிருந்த அமெரிக்கா, போக்ரான் - 1 அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, நிறுத்திவிட்டது. (இதில் ஏன் நமக்குக் கோபம் வரவேண்டும்?) அதேபோல நாளையும் நடந்தால் என்ன ஆவது என்று இடதுசாரிகள் கேட்கிறார்கள்.

இது நிச்சயம் நாளை நடக்கலாம். திடீரென நமக்கு யுரேனியம் சப்ளை செய்யும் ஒரு நாடு, எவ்வளவோ காரணங்களுக்காக யுரேனியத்தை நிறுத்தலாம். நாம் காசு கொடுக்கவில்லை என்பதற்காக, நாம் அவர்களது விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக, நாம் அவர்களது நாட்டின் குடியரசுத் தலைவரை பன்றி என்று திட்டியதற்காக, அல்லது நம் நாட்டில் ஹிட்லர் போன்ற ஒரு சர்வாதிகாரி ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார், உலகெங்கும் அணு குண்டுகளைப் போடக்கூடும் என்பதற்காக... இப்படி எத்தனையோ காரணங்களுக்காக நம்மிடம் ஒப்பந்தம் போடும் ஒரு நாடு சப்ளையை நிறுத்தலாம்.

சும்மா, காரணமே இல்லாமல்கூட ஒரு சப்ளையர், சப்ளையை நிறுத்தலாம். அதற்கு என்ன செய்வது? அந்தமாதிரி நிகழ்வு நமது மின்சார உற்பத்தியை பாதிக்காதவகையில், மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டியது நமது கடமை.

4. நமது ரியாக்டர்கள் எல்லாம் IAEA கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பது உண்மையல்ல. நாம் குறிப்பிடும் ரியாக்டர்கள் மட்டுமே. அப்படியே IAEA கட்டுப்பாட்டுக்குள் வந்தால் என்னதான் குறை? என்னவோ இந்த ஒரு காரணத்துக்காக இடதுசாரிகளுக்குக் கோபம் வருவதுபோலச் சொல்வது பெரும் ஜோக். ஏதோ இந்தக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் சீனாவும் ரஷ்யாவும் நமக்கு யுரேனியம் வழங்க வரிசையில் நிற்பதுபோல இவர்கள் சொல்கிறார்கள்.

5. அமெரிக்கா, அணு உலைகளைக் கொடுக்கும்போது, நமது அயலுறவுக் கொள்கைகளையும் கட்டுப்படுத்தும் என்று கரடி விடுகிறார்கள் இடதுசாரிகள். அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வோம். IAEA ஒப்பந்தத்தை முடிப்போம். NSG உடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம். அடுத்து நாம் அமெரிக்காவிடம் உலைகள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே? ரஷ்யாவிடம் வாங்கிக்கொள்ளலாமே?

தனது அயலுறவுக் கொள்கைகளை ஏற்காதவர்களுக்கு அணு உலை கிடையாது என்று சொல்ல அமெரிக்காவுக்கு நிச்சயம் உரிமை உண்டு. ஆனால் அப்படியென்றால் அவர்களுடைய அணு உலையை வாங்க நமக்கு விருப்பம் இல்லை என்று சொல்ல நமக்கும் உரிமை உண்டு! ஆனால் IAEA ஒப்பந்தம் ஆகியவை நிறைவேறாவிட்டால் ரஷ்யாவிடம் அணு உலை வாங்குவதிலும் நமக்கு சிக்கல்கள் ஏற்படும். இது தெளிவு.

***

மொத்தத்தில் அமெரிக்க-இந்திய அணு ஒப்பந்தத்தைப் பொருத்தமட்டில் மன்மோகன் அரசு மிக நன்றாக உழைத்துள்ளது. மற்றவரது அரைவேக்காட்டு எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் நாட்டு நலனை மட்டுமே முன்வைத்து இதனைச் செய்துள்ளது.

இனி, மிச்சமிருக்கும் சில மாதங்களில் அரசைக் காப்பாற்றி, ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, மக்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அடுத்த தேர்தலில் ஜெயிப்பது கஷ்டம்தான். அதற்கான காரணங்கள் வேறாக இருக்கும். ஆனால் மீண்டும் காங்கிரஸ் ஜெயித்தால் சந்தோஷப்படுவேன்.

Friday, July 11, 2008

ஆங்கிலத் தாக்கம்

எங்கோ பிரிட்டனில் பிறந்து, பிரான்ஸ், அமெரிக்கா என்று சுற்றிக்கொண்டிருந்தார் இவர். கொரியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தார். அதனால் அங்கு சென்று கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.

ஆனால் இவருக்கு இந்தியாவில் வாழ விருப்பம். யோகா கற்றுக்கொள்வது, இந்திய தத்துவமரபில் ஈடுபடுவது இவரது விருப்பங்கள். ஆனால் இந்தியாவுக்கு வந்தால் எப்படிப் பொருள் ஈட்டுவது? இந்தியாவில் யாரும் இவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டிய தேவையில்லையே?

ஆனால் சென்னையில் ஹுண்டாய் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கொரியர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் கொள்ளை விருப்பம். எனவே கொரியாவிலிருந்து நேராக சென்னை வந்துவிட்டார் இந்த பிரிட்டிஷ்காரர். சென்னை கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து இன்று சந்தோஷமாக சென்னையில் வாழ்க்கை நடத்துகிறார் இவர்!

***

Veta என்னும் பேச்சுவழக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் அமைப்பு வெகுவேகமாக வளரும் ஒரு நிறுவனம். இன்று இந்தியா முழுவதிலும் பல இடங்களில் ஆங்கிலத்தில் பேச வகுப்புகளை நடத்துகிறார்கள். இப்போது சிங்கப்பூரிலும் இந்த வகுப்புகளை ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் உலகெங்கிலும் தொடங்கப்போவதாகச் சொல்கிறார்கள். சீனாவுக்கும் செல்ல இருக்கிறார்கள்.

சீனாவில் பலர் போட்டிபோட்டுக்கொண்டு ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள். பல ஆங்கிலப் பயிற்சிப் பள்ளிகள் தோன்றியுள்ளன.

ஜப்பான் முதற்கொண்டு ஆசியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலம் கற்பதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

***

சென்ற வாரம், கர்நாடக உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தின் பல பள்ளிகள் ஆங்கில-வழிக் கல்வி பயிற்றுவிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அம்மாநிலத்தில் பல பள்ளிகள், கன்னட மீடியத்தில் பாடம் நடத்துவதாகச் சொல்லி அரசிடம் அனுமதி பெற்றன. ஆனால் பெற்றோர்களின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் சத்தமே போடாமல் ஆங்கில மீடியத்துக்கு மாறிவிட்டன.

விஷயம் கேள்விப்பட்ட மாநில அரசு, கன்னட மீடியத்துக்கு மாறாவிட்டால் பள்ளிகளின் உரிமையை ரத்துசெய்துவிடுவதாக அறிவித்தது. வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்ல, இந்த ரவுண்டில் பள்ளிகளின் ஆங்கில மீடிய உரிமையின் பக்கம் நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எப்படியும் அடுத்து உச்ச நீதிமன்றத்துக்குப் போகும்.

***

சென்ற வாரம் உயர்கல்விக்கான பாடப்புத்தகங்களைப் பதிப்பிக்கும் நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பயமூட்டும் ஒரு தகவல் கிடைத்தது. தமிழகத்தில் 70% மேலான (கலை, அறிவியல், நிர்வாகவியல்) கல்லூரிகளில் பாடங்கள் ஒன்று தமிழில் நடைபெறுகின்றன, அல்லது ஆங்கில மீடியமாக இருந்தாலும் பரீட்சையில் எழுதும்போது மாணவர்கள் தமிழிலேயே எழுதுகிறார்கள்.

பயம் அதைப்பற்றியல்ல. இந்த மாணவர்களுக்கு தமிழில் பாடப்புத்தகங்களே கிடையாது என்பதுதான் பயமூட்டும் விஷயம். பல்கலைக்கழகங்கள் பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதில்லை. எப்போதோ தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிப்பித்த சில புத்தகங்களும் இன்று அச்சில் இல்லை. தனியார் பாடப்புத்தக பதிப்பகங்களோ ஆங்கிலத்தில்மட்டுமே புத்தகங்கள் போடுகின்றனர்.

அப்படியென்றால் தமிழ் மாணவர்கள் எதைப் படிக்கிறார்கள்? எப்படி பரீட்சை எழுதுகிறார்கள்? எதைப் புரிந்துகொள்கிறார்கள்? எப்படி பட்டம் வாங்கியதும் வெளியே வந்து உருப்படுகிறார்கள்?

இந்த விஷயம் உண்மைதானா என்பதை அறிய சமீபத்தில் தமிழகக் கல்லூரிகளுடன் பரிச்சயம்கொண்ட சிலரைக் கேட்டேன். அவர்கள் உண்மைதான் என்கிறார்கள்.

தமிழ், தமிழ் என்று நாளுக்கு முந்நூறுமுறை மூச்சுவிடும் கட்சிகள் பதவியில் இருக்கும் தமிழகத்துக்கு இதுதான் கதியா? பொருளாதாரம், சமூகவியல், சூழலியல், இலக்கியக் கோட்பாடுகள், இயல்பியல், வேதியியல், கணிதம், புள்ளிவிவரவியல், விலங்கியல், தாவரவியல், மரபியல், நிர்வாகவியல் என எதற்கும் இளநிலை, முதுநிலைப் பாடங்களுக்கு தமிழில் உருப்படியான பாடப்புத்தகங்கள் இல்லை என்றால் மாணவர்களின் படிப்பு என்னாவது?

பேசாமல் அனைவரும் ஆங்கிலம் கற்று, அதிலேயே பாடங்களைப் படித்துவிடலாமா?

***

ஆங்கிலம்தான் இந்தியாவின், தமிழகத்தின் எதிர்கால மொழியா?

Thursday, July 10, 2008

மீனவனும் மனைவியும்

(From Grimms' Fairy Tales, The Fisherman and his wife, retold by Badri)

ஒரு மீனவன் கடலோரம் உள்ள சிறு குடிசை ஒன்றில் தன் மனைவியுடன் வசித்துவந்தான். ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்ற அவனது வலையில் மாபெரும் மீன் ஒன்று மாட்டியது. அந்த மீன், “என்னை விட்டுவிடு. நான் ஓர் இளவரசன். ஒரு சாபத்தால் இப்படி மீனாக ஆகியுள்ளேன்” என்றது. “அய்யோ, பேசும் மீன் எனக்கு வேண்டாம்” என்று சொல்லி, அந்த மீனைக் கடலில் விட்டுவிட்டான் அவன்.

வீட்டுக்கு வந்த மீனவன் தான் மீன் பிடித்த கதையைத் தன் மனைவியிடம் சொன்னான். அவளோ, “இப்படி ஒரு அதிர்ஷ்டம் கையில் கிடைக்கும்போது பயன் ஏதும் அடையாமல் வந்திருக்கிறாயே? போ, போய் அந்த மீனிடம் கேட்டு நமக்கென நல்ல ஓட்டுவீடு ஒன்றைப் பெற்றுக்கொண்டு வா” என்றாள்.

மீனவனுக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை. இருந்தாலும் மனைவியின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் கடலுக்குப் போனான். கடல் அமைதியாக மஞ்சளும் பச்சையுமாக இருந்தது. கடலோரத்தில் நின்று இவ்வாறு பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

மீன் வெளியே வந்தது. “உன் மனைவிக்கு என்ன வேண்டும்” என்றது. “உன்னை நான் விடுவிக்கும்போது உன்னிடம் ஏதாவது கேட்டிருக்கவேண்டுமாம்! அவளுக்கு இப்போதிருக்கும் குடிசை வீட்டில் வாழப் பிடிக்கவில்லையாம். ஓட்டுவீடு ஒன்று வேண்டுமாம்” என்றான் மீனவன். “அவ்வளவுதானே? நீ வீட்டுக்குப் போ. அவள் இப்போது ஓட்டு வீட்டில்தான் இருக்கிறாள்” என்றது மீன்.

வீடு திரும்பிய மீனவன், தனது குடிசை இருந்த இடத்தில் அழகான ஓட்டு வீடு இருப்பதைப் பார்த்தான். வாசலில் இருந்த அவன் மனைவி, “பார், இந்த வீடு எவ்வளவு அழகாக இருக்கிறது. சுவர்கள் எல்லாம் சுண்ணாம்பு பூசப்பட்டு, வெள்ளையடித்துள்ளது. சமையலறை, படுக்கயறை, வெராந்தா என நிறைய அறைகள் உள்ளன. ஒரு சின்ன தோட்டம்கூட உள்ளது. அதில் எவ்வளவு பூக்களும் பழங்களும்! அங்கே பார்த்தாயா? எவ்வளவு கோழிகளும் வாத்துகளும்!” என்றாள். “அப்பாடா, இனி எந்தக் கவலையும் இன்றி நாம் வாழலாம்” என்றான் மீனவன். “குறைந்தது முயற்சியாவது செய்யலாம்” என்றாள் மனைவி.

ஓரிரு வாரங்கள் கழித்து மனைவி மீண்டும் நச்சரிக்க ஆரம்பித்தாள். “இந்த வீடு போதவில்லை. அறைகள் எல்லாம் சிறியதாக இருக்கின்றன. ஒரு பெரிய கல் கோட்டையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். போ, போய் அந்த மீனிடம் நமக்கு ஒரு கோட்டையைக் கட்டித்தருமாறு கேள்” என்றாள். “நான் அந்த மீனிடம் போகமாட்டேன். அது கோபப்படலாம். இந்த ஓட்டு வீடே வசதியாகத்தானே இருக்கிறது?” என்றான் மீனவன். “உளறாதே! மீன் நிச்சயம் செய்துதரும். போய் முயற்சி செய்” என்று கடுப்படித்தாள் மனைவி.

மிகவும் வருத்தத்துடன் மீனவன் கடற்கரைக்குப் போனான். கடல் அமைதியாக இருந்தாலும் நீலமும் இருண்மையுமாக இருந்தது. கடலோரத்தில் நின்று இவ்வாறு பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

மீன் வெளியே வந்தது. “உன் மனைவிக்கு இப்போது என்ன வேண்டும்” என்றது. “என் மனைவி கல் கோட்டையில் வசிக்கவேண்டுமாம்!” என்றான் மீனவன். “போ, திரும்பிப் போ. அவள் இப்போது கோட்டையின் வாசலில் நின்றுகொண்டிருக்கிறாள்” என்றது மீன்.

வீடு இருந்த இடத்தில் ஒரு பெரும் கோட்டை இருந்தது. அதன் வாயிலில் அவன் மனைவி நின்றுகொண்டிருந்தாள். “பார்த்தாயா? எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது! கோட்டைக்குள் ஏகப்பட்ட வேலைக்காரர்கள். தங்கத்தால் ஆன நாற்காலிகள், மேஜைகள். மாபெரும் தோட்டம். எங்கும் ஆடுகள், மாடுகள், முயல்கள், மான்கள். குதிரை லாயம், மாட்டுத் தொழுவம்” என்று சந்தோஷமாகச் சொன்னாள் அவள். “சரி, இனியாவது நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வோமா?” என்றான் மீனவன். “பார்க்கலாம்” என்றாள் மனைவி.

அடுத்த நாள் காலை, மீனவனைக் குத்தி எழுப்பினாள் மனைவி. “எழுந்திரு கணவா! நீ இந்தத் தீவின் அரசன் ஆகவேண்டும்” என்றாள் அவள். “நான் எதற்காக அரசன் ஆகவேண்டும்? எனக்கு இஷ்டம் இல்லை” என்றான் அவன். “நீ விரும்பாவிட்டால் நான் ஆகிறேன்” என்றாள் அவள். “மீன் உன்னை எப்படி ராஜாவாக ஆக்கமுடியும்?” என்றான் அவன். “மறுவார்த்தை பேசாதே! முயற்சி செய்துபார். போய் மீனிடம் என்னை அரசனாக்கும்படிக் கேள்” என்றாள் அவள்.

சோகம் தாளாமல் மீனவன் கடற்கரைக்குப் போனான். கடல் நுரைத்துப் பொங்கி ஆரவாரத்துடன் கருமையாக இருந்தது. கடலோரத்தில் நின்று இவ்வாறு பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

மீன் வெளியே வந்தது. “உன் மனைவிக்கு இப்போது என்ன வேண்டும்” என்றது. “அவள் அரசனாக வேண்டுமாம்” என்றான் மீனவன். “போ! அவள் இப்போது அரசன்!” என்றது மீன்.

மீனவன் வீடு திரும்பினான். அங்கே ஒரு மாபெரும் அரண்மனை இருந்தது. நிறைய சிப்பாய்கள் இருந்தனர். அவனது மனைவி தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தாள். அவள் தலையில் தங்கக் கிரீடம் இருந்தது. அவளது இரு பக்கத்திலும் ஆறு ஆறு பெண்கள் காத்துக்கிடந்தனர். “மனைவியே, நீ இப்போது அரசனா?” என்றான் மீனவன். “ஆம்” என்றாள் அவள். “நல்லது. இனி நம் காலம் முடியும்வரை உனக்கு வேறெதுவும் வேண்டாம், அல்லவா?” என்றான் அவன். “அதெப்படி? எனக்கு அரசனாக இருப்பது அதற்குள்ளாக போரடித்துவிட்டது. நான் பேரரசனாகவேண்டும்” என்றாள் அவள். “நீ எதற்கு பேரரசனாகவேண்டும்? மேலும் மீனால் உன்னை நிச்சயமாக பேரரசன் ஆக்கமுடியாது. அப்படியே முடிந்தாலும் எனக்கு போய்க் கேட்க விருப்பம் இல்லை” என்றான் அவன். “எதிர்த்துப் பேசாதே! நான் அரசன், நீ என் அடிமை. உடனடியாக மீனிடம் சென்று என்னைப் பேரரசனாக்கச் சொல்” என்றாள் அவள்.

“இது நிச்சயம் பிரச்னையைத்தான் கொடுக்கப்போகிறது” என்று புலம்பிக்கொண்டே மீனவன் கடலுக்குச் சென்றான். கடல் கறுத்து, குழம்பி, சீற்றத்துடன் காற்று சுழன்றடிக்க, அலைகள் எழும்பிக் குதித்தவண்ணம் இருக்க, மீனவன் பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

மீன் வெளியே வந்தது. “உன் மனைவிக்கு இப்போது என்ன வேண்டுமாம், சொல்” என்றது. “அவள் பேரரசன் ஆகவேண்டுமாம்” என்றான் மீனவன். “போ, அவள் இப்போதே பேரரசன்” என்று சொல்லி மறைந்தது மீன்.

மீனவன் வீட்டுக்குப் போனான். மாபெரும் அரியாசனத்தில் அவனது மனைவி உட்கார்ந்திருந்தாள். அவளது தலையில் முன் இருந்ததைவிடப் பெரிய கிரீடம் இருந்தது. இரு பக்கங்களிலும் ஏகப்பட்ட மெய்க்காப்பாளர்கள் இருந்தனர். பல அரசர்களும் ஜமீந்தார்களும் குற்றேவல் செய்யக் காத்திருந்தனர். “மனைவியே, நீ இப்போது பேரரசனா?” என்றான் அவன். “ஆம்” என்றாள் அவள். “அற்புதம். இனி உனக்கு வேறென்ன வேண்டும்?” என்றான் அவன். “ஏன் இல்லை? ஏன் பேரரசனோடு நிற்கவேண்டும். நான் அடுத்து போப் ஆகவேண்டும்!” என்றாள் அவள். “உளறாதே, மீன் உன்னை எப்படி போப் ஆக்கமுடியும்?” என்றான் அவன். “ஏன் முடியாது? என்னைப் பேரரசனாக்கமுடியும் என்றால் போப்பாகவும் ஆக்கமுடியும். நிற்காதே, போ. கேள்” என்றாள் அவள்.

எனவே அவன் கடலுக்கு மீண்டும் போனான். அவன் கரையை அடையும்போது கடும் புயல் அடித்துக்கொண்டிருந்தது. அலைகள் ஆளுயரத்துக்கு எழும்பி எழும்பி அடித்தன. எங்கும் சிவந்த வானம் தென்பட்டது. இதைக் கண்டதும் மீனவனுக்கு பயமாக இருந்தது. நடுங்கிக்கொண்டே அவன் பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

மீன் வெளியே வந்தது. “இப்போது என்ன ஆசை உன் மனைவிக்கு” என்றது. “என் மனைவி போப் ஆக விரும்புகிறாள்” என்றான் மீனவன். “வீட்டுக்குப் போ, அவள் இப்போது போப்” என்றது மீன்.

வீடு திரும்பிய மீனவன், தன் மனைவி மிகப்பெரிய ஆசனத்தில் வீற்றிருப்பதைப் பார்த்தான். அவளது தலையில் மூன்று கிரீடங்கள் இருந்தன. தேவாலயங்களின் முழு அதிகாரமும் அவளது கைக்குள் இருந்தன. அவளது இரு பக்கங்களிலும் பல ஒளிவிளக்குகள் இருந்தன. “மனைவியே, நீ இப்போது போப்பா?” என்று கேட்டான் மீனவன். “ஆம்” என்றால் அவள். “அப்படியென்றால் உனக்கு இனி வேறெதுவும் தேவையில்லைதானே?” என்றான் அவன். “பார்க்கலாம். யோசித்துச் சொல்கிறேன்” என்றாள் அவள்.

மறுநாள் காலை தூங்கி எழுந்த அவள், ஜன்னல் வழியாகப் பார்த்தாள். சூரியன் ஏற்கெனவே உதித்திருந்தது. “ஹ்ம்ம்ம். இந்த சூரியன் உதிப்பதை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை” என்று அவளுக்குத் தோன்றியது. பாதி தூக்கத்தில் இருந்த கணவனை உதைத்து எழுப்பினாள். “போ, போய் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நான் தலைவனாகவேண்டும் என்று மீனிடம் சொல்” என்று அவனிடம் சொன்னாள். “அடப்பாவி, போப்பாக இருப்பது போதவில்லையா உனக்கு?” என்றான் அவன். “இல்லை. சூரியனையும் சந்திரனையும் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பது என்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. மீனிடம் உடனடியாகப் போ” என்றாள்.

பயந்து நடுங்கிக்கொண்டே கடலை நோக்கிச் சென்றான் மீனவன். கடும் புயல் அடித்துக்கொண்டிருந்திருந்தது. மரங்கள் வேரோடு பெயர்ந்தன. மலைகள் உடைந்து சிதறின. கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. இடியும் மின்னலும் நடுங்கவைத்தன. வெள்ளை நுரை பொங்கும் கரும் அலைகள் சுழன்று அடித்துக்கொண்டிருந்தன. மெதுவாக ஊர்ந்தவாறே மீனவன் கடலோரத்துக்குச் சென்று பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

“இப்போது என்னவாக விரும்புகிறாள் உன் மனைவி” என்று கேட்டது மீன். “சூரியனுக்கும் சந்திரனுக்கும் தலைவனாக விரும்புகிறாள்” என்றான் மீனவன். “அவ்வளவுதானே? உன் பழைய குடிசை வீட்டுக்கே போ” என்றது மீன்.

கடல் மீண்டும் அமைதியானது. மீனவன் தன் வீட்டுக்குச் சென்றான். அது பழையபடி சின்னஞ்சிறு குடிசையாக இருந்தது. அதன்பின் தன் வாழ்நாள் முழுதும் அந்த இடத்திலேயே அவர்கள் கழித்தனர்.

Tuesday, July 08, 2008

அணுவின்றி அவனே கிடையாது

(சும்மா, பொருள்முதல்வாதி வைத்த தலைப்புன்னு வெச்சுக்கங்க...)

மன்மோகன் சிங், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு பயங்கர தடுமாற்றத்தில் உள்ளது. அவர்கள் பதவியேற்ற தினத்திலிருந்தே குழப்பம். அப்போதே சமாஜவாதி கட்சியுடன் உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதைப்பற்றி நான் அப்போதே எழுதியிருந்தேன். ஆனால் அப்படிச் செய்யாமல் இடதுசாரிகளின் “வெளியிலிருந்து ஆதரவு” என்பதை ஏற்றுக்கொண்டு நான்கு வருடங்கள் அல்லாடினார்கள்.

பிரகாஷ் காரத், மாமூல் வாங்கும் பேட்டை ரவுடி கணக்காக சும்மா சும்மா வந்து மிரட்டுவார். அவருக்கு (லால்) சலாம் போடவேண்டிய வேலை பிரதமருக்கு. “அட, போய்யா, நீயும் உன் ஆதரவும்” என்று அப்போதே சொல்லியிருக்கவேண்டும்.

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்படிக்கையில் ஆயிரம் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் கேபினெட்டைப் பொருத்தமட்டில் இரண்டே இரண்டுதான்: (1) முன்னேறி உடன்படிக்கையில் கையெழுத்திடுவோம் (2) தூக்கிக் கடாசிவிட்டு அடுத்த தேர்தலில் ஜெயிக்கும் வழியைப் பார்ப்போம்.

இரண்டும் இல்லாமல் வழவழா கொழகொழாவென்று இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் மனத்தை மாற்றமுடியும் என்று காங்கிரஸ் ஏன் நினைத்ததோ தெரியவில்லை.

இன்று காலம் கடந்துவிட்டது. சமாஜவாதி துணை இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தத் தேவையில்லை. ஆனால் அது நடப்பதற்குமுன் ஆட்சி கவிழாமல் காப்பாற்றத் தேவை. அது இப்போது கிடைத்துவிட்டது. இனி இடதுசாரிகளின் துணை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஆனாலும் நேஷனல் ஜோக்கர்களான கம்யூனிஸ்டுகள் 10-ம் தேதி, 7-ம் தேதி, 23-ம் தேதி என்று மாற்றி மாற்றி கெடு வைக்கிறார்கள்.

பாஜக ஒரு வெட்கம் கெட்ட கட்சி. எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சி கொண்டுவரும் அத்தனை தீர்மானங்களையும் எதிர்க்கவேண்டும் என்பதில்லை. பிரிட்டன் நாடாளுமன்றம் எப்படி நடக்கிறது என்று கொஞ்சம் எட்டிப்பார்த்தால் நல்லது. அணு ஒப்பந்தத்தை பாஜக எதிர்க்கவில்லை. ஆனால் வேறு மாதிரி மாற்றுவோம் என்கிறார்கள். அதுவும் தங்களின் ஆட்சியின்போது தாங்கள்தான் செய்ததாக இருக்கவேண்டும் என்ற எண்ணம்வேறு. இவர்களது “தேசப் பற்று” தாங்கமுடியவில்லை.

***

இந்த விஷயத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு எனது வந்தனங்கள். தனது கருத்தைத் தெளிவாக அவர் சொல்கிறார். முன்னாள் ஜனாதிபதிகள் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் என்று சிலர் நினைப்பது தவறு. தேசத்தின் நலனுக்கு எது தேவை என்பதை வெளிப்படையாகச் சொல்வதில் தவறில்லை. சமூக, பொருளாதார விஷயங்களில் எப்படியோ, ஆனால் தொழில்நுட்பம் தொடர்பான அவரது கருத்துகளுக்கு எப்போதும் கனம் அதிகமாக இருக்கும்.

இந்தியாவுக்கு யுரேனியம் தேவை என்பது தெளிவு. தோரியம் ரியாக்டர்கள் வெகு தொலைவில் உள்ளன. கச்சா எண்ணெய் விலை எகிறிக் குதிக்கத்தான் செய்யும். எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் அணு மின்சாரம் மிக மிக அவசியம்.

விரைவில் நாட்டில் மெட்ரோ ரயில்கள் பல நகரங்களிலும் ஓடும். மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், ரேவா கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் கிடைக்கும். (நான் ஒரு மின்சார இருசக்கர வாகனம், ஒரு மிதிவண்டி ஆகியவற்றில் முதலீடு செய்யப்போகிறேன்.) இவற்றுக்கான மின் தேவையையும் புதைபடிவ எரிபொருள் அன்றி, அணு சக்திமூலம் பெறமுடியும் என்றால் அதனால் நாட்டுக்குப் பல நன்மைகள். ஆயில் ஷாக் குறையும். காற்றின் தூய்மை அதிகரிக்கும். பசுமைக் குடில் வாயுத் தொல்லை பெருமளவு குறையும். மிக மிகக் குறைவான கதிர்வீச்சு எரிபொருள் மிச்சத்தை எதிர்கொள்ள தொழில்நுட்பங்கள் உருவாகும். இது எதிர்கொள்ளக்கூடிய சவாலே.

***

ஒரு நண்பர், ஞாநியின் ஆர்குட் விவாதத் தளத்திலிருந்து கேள்வி ஒன்றை எடுத்துக் கேட்டிருக்கிறார்.
This following is gnani's response:

"badri's responses still do not answer the core issues i have raised. i dont differentiate between UN, IAEA and american government. The Iraq war for non existent weapons was unleashed by BUsh and Co only with UN sanction. IAEA, UN etc are dummies and puppets of the US government today. There is no equality in our deal with US while they respect their congress and senate, our PM is not giving similar status to our parliament. And the core claim of nuclear power being necessary for our energy needs itself is bogus. even after 30 years, it cannot supply even 10 percent of our electricity needs while thousands of crores will be spent on an unsafe technology."

what do you say here ?
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் சரிசமமான ஒப்பந்தம் கிடையாதுதான். நாம் கையேந்தும் நிலையிலும் அவர்கள் கொடுக்கும் நிலையிலும் உள்ளனர். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால் பிற நாடுகள் (Nuclear Supplies Group) நமக்கு சிறு துரும்பும் கொடுக்கமாட்டா. எனவே நாம் சற்றே அடங்கிப்போய் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

அடுத்ததாக இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்க செனேட்டுக்கு இருப்பதுபோல இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த “மரியாதையும்” கிடையாது என்கிறார் ஞாநி. இதில் அமெரிக்காவைக் குற்றம் சொல்லமுடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், இந்தியா எந்த வெளிநாட்டுடனும் ஒப்பந்தம் செய்துகொள்ள, நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோரவேண்டியதில்லை. கேபினெட் முடிவுசெய்தால் போதும். இது, அணு ஒப்பந்தம் தொடர்பான விஷயமில்லை. ஆஸ்திரேலியாவிடமிருந்து யுரேனியம் வாங்குவதற்கு மட்டுமல்ல, பபுவா நியூ கினியிடமிருந்து கோதுமை வாங்கினாலும்சரி, கஸக்ஸ்தானிடமிருந்து சிட்டுக்குருவி லேகியம் வாங்கினாலும்சரி, அப்படித்தான். எனவே அதை மாற்றவேண்டும் என்றால் அதற்கு வேறு எங்காவது போகவேண்டும். (அதற்குப் பெயர் Constitutional Amendment.)

பாதுகாப்பற்ற தொழில்நுட்பம், 10% மின்சாரம்கூடக் கிடைக்காது, அணு மின்சாரம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே தேவையில்லை போன்றவற்றுக்கு பதில் சொல்வது கடினம். ஒருவரது நம்பிக்கைகளை ஓரளவுக்குத்தான் விவாதங்களின்மூலம் மாற்றமுடியும்.

***

புஷ் என்ற ஈராக் கொலைகாரன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருக்கிறார் என்பதனாலேயே அமெரிக்க நாட்டுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் எல்லாம் மோசமானவை என்றாகிவிடாது.

இந்த ஒப்பந்தத்தைச் செய்வதன்மூலம் நாம் அமெரிக்காவின் அடிமைகள் ஆகிவிடுவோம் என்பதும் கேலிக்கூத்தான ஒரு வாதம்.