Tuesday, November 29, 2005

கிரிக்கெட்டுக்காக ஒரு புதிய பதிவு

கிரிக்கெட் பற்றி நிறைய பதிவுகளை இங்கே எழுதுவதைத் தவிர்க்க, அதற்கென ஒரு தனிப் பதிவைத் தொடங்கியுள்ளேன். http://kirikket.blogspot.com/

கடந்த சில கிரிக்கெட் பதிவுகளை அங்கும் இட்டுள்ளேன்.

Monday, November 28, 2005

பிரையன் லாரா

உலகில் மிக அதிக ரன்கள் பெற்ற லாராவுக்கு வாழ்த்துகள். ஆலன் பார்டரின் மொத்த எண்ணிக்கையை லாரா தாண்டியுள்ளார். ஆனாலும் நடக்கும் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடலாம்.

டெண்டுல்கர்தான் முதலில் இந்தச் சாதனையைச் செய்வார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கடந்த சில டெஸ்ட்களில் டெண்டுல்கர் ரன்கள் குறைவாகப் பெறுவதும் லாரா மிக அதிகமாகப் பெறுவதும் வாடிக்கையாக இருந்தது.

லாராவுக்கும் டெண்டுல்கருக்கும் இனி எவ்வளவு டெஸ்ட்கள் பாக்கி இருக்கும் என்று தெரியவில்லை. டெண்டுல்கரால் இனி டெஸ்ட் மேட்ச்களில் எவ்வளவு ரன்கள் பெற முடியும் என்றும் தெரியவில்லை.

மற்றொரு புறம் இன்ஸமாம்-உல்-ஹக், ரிக்கி பாண்டிங், மாத்தியூ ஹெய்டன் ஆகியோர் சதங்களின் எண்ணிக்கையிலும் மொத்த ரன்களிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். பாண்டிங் தன் இளம் வயது காரணமாக லாரா, டெண்டுல்கர் சாதனைகளை முறியடிக்கக்கூடியவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

இலங்கை அழிவை நோக்கி...

எதிர்பார்த்தவை அப்படியே நடக்கின்றன. இன்றைய மாவீரர் தின உரையில் பிரபாகரன் விடுதலைப் புலிகளின் நிலையை விளக்கிக் கூறியுள்ளார். (ஆங்கில வடிவம் இங்கே. தமிழ் வடிவம் இங்கே.)

25-11-2005 அன்று மஹிந்தா ராஜபக்ஷே தான் பதவியேற்ற பின்னரான பேச்சில் தன் அரசின் நிலையை விளக்கினார். [இந்தப் பேச்சின் முழு வடிவத்தை இலங்கை அரசின் அதிகாரபூர்வ தளங்களில் தேடி அலைந்ததுதான் மிச்சம். இலங்கை ஜனாதிபதியின் அதிகாரபூர்வ தளத்தில் இன்னமும் சந்திரிகா குமரதுங்க சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். (ஞாயிறு 27-11-2005, 22:45 IST)] அந்தப் பேச்சில் ராஜபக்ஷே சொன்ன முக்கியமான சில விஷயங்கள்:

* தமிழர் தாயகம் என்று எதுவும் இல்லை. அதாவது தமிழர் பகுதிகள் என்று பாரம்பரியமாக அறியப்பட்ட இடங்களை மஹிந்தா அரசு ஏற்காது. இலங்கை முழுவதும் இலங்கையின் அனைத்து மக்களுக்குமானது.

* சந்திரிகா அரசால் கொண்டுவரப்பட்ட P-TOMS எனப்படும் கூட்டு சுனாமி நிவாரணக் கட்டமைப்பு கலைக்கப்படுகிறது. (இதன் மூடுவிழா ஏற்கெனவே இலங்கை உச்ச நீதிமன்றத்தால் செய்யப்பட்டுவிட்டது.) அதற்குப்பதில் ஜய லங்கா சுனாமி மறுசீரமைப்புத் திட்டம் என்பதை மஹிந்தா முன்வைக்கிறார். அதாவது சுனாமி மறுசீரமைப்புப் பணியில் விடுதலைப் புலிகளுக்கு எந்த இடமுமில்லை என்பதுதான் இதன் சாரம்.

* விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகச் சொல்கிறார் மஹிந்தா. ஆனால் இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு ஒருங்கிணைந்த, சமஷ்டி முறை அல்லாத இலங்கைக்குள்ளாக இருக்க வேண்டும்.

இதற்கான பதிலாக பிரபாகரன் மாவீரர் தினத்தன்று கூறியது:

* ஒட்டுமொத்தமாக சிங்கள மக்களைச் சாடுகிறார். அவர்கள் மஹாவம்ச கருத்துருவாக்கத்திலிருந்து மீளவில்லை, இலங்கை புத்த பகவான் தமக்களித்த கொடை என்று மஹாவம்சத்தில் சொல்லியிருப்பதை சிங்கள பவுத்தர்கள் நம்புவதாகவும், இதன் காரணமாகவே தமிழர் தாயகத்தில் தனி இனமாக ஒரு மக்கள் இருப்பதையும் அவர்களுக்குத் தன்னாட்சி விருப்பங்கள் இருப்பதையும் சிங்களவர்கள் புரிந்துகொள்வதில்லை என்றும் சொல்கிறார் பிரபாகரன்.

* இந்தியா, பிற சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் மட்டுமே தாம் இலங்கை அரசுடன் பேசியதாகவும் பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்பதாகவும் சொல்கிறார்.

* ரணில் விக்ரமசிங்க அரசு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆர்வம் செலுத்தவில்லை, விடுதலைப் புலிகளை ஏமாற்றி, இயக்கத்தைப் பிளவுபடுத்தி ஆயுதங்களைப் பிடுங்கிக் கொள்ள முயற்சி செய்தது என்கிறார். சந்திரிகாவும் ஏமாற்றுவதையே தொடர்ந்தார் என்கிறார்.

* சுனாமிக்கு சற்றுமுன்னர் "எமது தேச விடுதலைப் போராட்டத்தைக் காலதாமதமின்றி முன்னெடுக்கத் தீர்மானித்தோம்" என்கிறார். அதாவது போரை மீண்டும் தொடங்க எண்ணிய நேரத்தில் சுனாமி தலைப்பட்டது. தொடர்ந்து சந்திரிகா ஏற்படுத்திய P-TOMS குழப்பத்தில் போய் முடிந்தது.

* சமீபத்தில் நடந்த தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள் என்கிறார். (ஆனால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அச்சுறுத்தல் குறைவாக இருந்த கிழக்குப் பகுதியில் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்காவுக்கு வாக்களித்தனர் என்பது அனைவருக்கும் தெரிகிறது.)

* சிங்கள புத்த இனவாதிகளின் வாக்குகளால் ஜெயித்த மஹிந்தா "தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ [...] புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது" என்கிறார்.

* கடைசியாக ultimatum.
பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை.

ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும்.

எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.
பிரபாகரனே சொல்வது போல மஹிந்தாவுக்கும் பிரபாகரனுக்குமான இடைவெளி மிகப்பெரிது. இந்த இடைவெளி அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கத்தான் செய்யும். குறையப்போவதில்லை. அதையடுத்து, பிரபாகரன் தீர்மானிக்கும் நேரத்தில், "தன்னாட்சியை நிறுவும் சுதந்திரப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்"; அதாவது சண்டை மீளும்.

அனைத்துமே ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட முறையில் நினைத்தது போலவே நடக்கிறது. இலங்கை மிக வேகமாக அழிவை நோக்கி முன்னேறுகிறது.

Sunday, November 27, 2005

Political Discourse in Tamil Nadu

இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் கூட 'வளர்ச்சி' பற்றி மக்கள் சிந்திக்கும் நேரம் வந்திருக்கும்போது தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக மக்களுக்கு உபயோகமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதை விடுத்து வெட்டிப்பேச்சு பேசுவதில் சிறந்து விளங்குவதைப் பார்க்கமுடிகிறது.

அஇஅதிமுக, திமுக இரண்டும் தமிழ்நாட்டை எப்படி அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வோம் என்று இதுவரையில் நமக்குச் சொல்லவில்லை. தற்போது நடக்கும் எதிர்பாராத இயற்கை அழிவுகளை அரசியலாக்கி வரும் தேர்தலில் வாக்குகள் பெறுவதில் மட்டுமே திமுக கவனத்தைச் செலுத்துகிறது. அஇஅதிமுகவோ இந்த அழிவுகளே ஒரு வரப்பிரசாதம் போல நடுவண் அரசிடம் 3,000-4,000 கோடி ரூபாய்களை வாங்கி அதைப் பொதுமக்களிடம் கொடுத்து 'நான்தான் உங்கள் காப்பாளன்' என்று காட்டிக்கொள்ள விரும்புகிறது.

இந்த அரசியல் கூடத் தேவலாம் என்பது போலக் கூத்தடிக்கிறார்கள் பாமக, திருமாவளவன் கோஷ்டியினர். ராமதாஸ் கூட அவ்வளவாக திருவாய் மலர்வதில்லை. திருமாவளவன் நிகழ்த்தும் கூத்து தாங்க முடிவதில்லை. தலித்துகளுக்குச் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கும்பட்சத்தில் ஒரு 'சண்டியராக', தமிழ் பண்பாட்டுக் காவலராகத் தாண்டவமாடும் காட்சி சகிக்கவில்லை.

இன்று தமிழகத்தில் முக்கியமாகச் செய்யப்படவேண்டியவை - கிராமப்புறக் கல்வி, வரும் வருடங்களில் தண்ணீர்ப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது, வரும் வருடங்களில் விவசாயத்தை எப்படிக் கவனிப்பது, ஏழைமையை எப்படி குறைப்பது, தமிழகம் முழுவதுமே - முக்கியமாகத் தென் மாவட்டங்களில் - தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையை எப்படி நிறுத்துவது, பெருக்கும் சென்னை ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த சாடிலைட் நகரங்களை உருவாக்குவது, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களை தொழில்கள் உருவாவதற்கு மாற்று நகரங்களாக முன்வைப்பது, குற்றங்களைக் குறைப்பது, அடிப்படைக் கட்டுமானங்களைப் படிப்படியாக அதிகரிப்பது, அண்டை மாநிலங்களோடு சுமுக உறவை வளர்ப்பது - இப்படி எத்தனையோ இருக்க, இது எதைப்பற்றியுமே யாருமே பேசுவதில்லை.

ஒருவிதத்தில் பாமகவாவது பொறியியல்-மருத்துவக் கல்வி பற்றி ஒரு குழுவை அமைத்து விவாதம் ஒன்றை ஏற்படுத்தி அதன் பரிசீலனைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். (ஆனால் ஓர் இணையத்தளத்தை உருவாக்கி அதில் இந்தப் பரிசீலனைகளை வைத்தால் பொதுமக்களுக்குக் கருத்து சொல்ல வாய்ப்பு இருந்திருக்கும். செய்யவில்லை.) பிற கட்சிகள் இதுபோன்று எதையும் செய்யவில்லை.

தமிழகத்தின் அரசியல் வருங்காலம் பயத்தை ஏற்படுத்துகிறது.

குறும்படங்கள் பற்றி...

மொத்தம் பார்த்த 6 படங்களை மூன்று குழுக்களாகப் பிரிப்பேன். உமேஷ் குல்கர்னி இயக்கிய கிர்னி, ரிக் பாசுவின் Pre Mortem இரண்டும் - டாப் கிளாஸ். அடுத்து ரிக் பாசுவின் 00:00, முத்துக்குமாரின் பர்த்டே. அடுத்து அஜிதாவின் The Solitary Sandpiper, மாமல்லனின் இடைவெளி.

கடைசி இரண்டிலும் கதை எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஒருவேளை பிறருக்குப் புரிந்திருக்கலாம்.

முதலில் கிர்னி. இந்தப் படம்தான் கடைசியாகக் காண்பிக்கப்பட்டது. ஆனால் மனதை விட்டு இப்பொழுதும் நீங்கவில்லை. பூனா அல்லது மும்பையில் (இடம் சரியாகப் புரியவில்லை) உள்ள ஓர் ஏழைக்குடும்பம். உதிர்ந்து கொட்டவிருக்கும் அடுக்ககத்தில் வசிக்கும் அந்தக் குடும்பத்துக்கு சம்பாதிக்கும் தந்தை இல்லை. தாய் தன் ஒற்றை மகன், வயதான தந்தை (அல்லது மாமனார்) ஆகியோரைக் காக்கவேண்டும். வேலை ஏதும் கிடைக்காத நிலையில் வீட்டில் மாவரைக்கும் இயந்திரம் ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். பள்ளிக்கூடம் போகும் சின்னப்பையன் மனதை அந்த மாவரைக்கும் இயந்திரத்தின் (கிர்னி) சத்தம் எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. சின்னப்பையனின் காதுகளின் கிர்னியின் சத்தம் எப்பொழுதும் ரீங்கரிக்கிறது.
தாய்க்கு மாவரைக்க உதவி செய்வதில், மாவுப் பாத்திரங்களை அதற்குரியவர் வீடுகளுக்குக் கொண்டு கொடுப்பதில், அவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதில் ஈடுபடுகிறான் சின்னப்பையன். தன் வயதொத்த பையன்களுடன் விளையாட முடிவதில்லை. பள்ளியில் பாடம் நடக்கையில் பையனால் அதைக் கவனிக்க முடிவதில்லை. தூங்கி வழிகிறான். வீட்டுப்பாடம் செய்யாததனால் பள்ளியில் தண்டனைக்கு ஆளாகிறான். பிற சிறுவர்களின் கேலிக்கு ஆளாகிறான். அவனது புத்தகங்கள், நோட்டுகளில் மாவு படிந்திருப்பதை வைத்து அவற்றைத் தூக்கிப்போட்டு விளையாடும் பிற பையன்களின் சேட்டைகள் சின்னப்பையனின் மனதை வெகுவாகப் பாதிக்கின்றன.

அன்றுதான் தாய் அந்த மாவு இயந்திரத்தின் கடைசி இன்ஸ்டால்மெண்டைக் கட்ட வங்கி சென்றிருக்கிறார். வீடு திரும்பிய பையன் வெறி பிடித்தவன் போல அந்த கிர்னியை நொறுக்கி தான் வசிக்கும் மாடியிலிருந்து கீழே தள்ளி முடிக்கிறான். அதே நேரம் அந்த மாவு இயந்திரத்தைத் தன் முழுச் சொந்தமாக்கிக்கொண்ட பெருமை முகம் கொள்ளாமல் தாய் வீட்டுக்குள் நுழைகிறாள். உள்ளே கண்ணில் கண்ணீருடன் பையன் சுவரோடு சேர்ந்து நின்று கொண்டிருக்கிறான்.

25 நிமிடங்களுக்குள் இந்தப் படத்தில் தாய், மகன் இருவரது முகங்களும் எத்தனை எத்தனை கதைகளைச் சொல்லிவிடுகின்றன? ஓர் ஓரத்தில் வயதான, படுக்கையோடே கிடக்கும் அசையாத கிழவர் மாறாத ஏழைமைக்கு ஒரு குறியீடு போலக் காட்சியளிக்கிறார்.

ரிக் பாசுவின் Pre Mortem இன்றைய நவீன இந்தியாவைப் பற்றிய கதை. படு வேகமாக நடக்கும் இந்தக் கதையில் பல விஷயங்கள் தொடப்படுகின்றன. கால் செண்டரில் பாப் என்ற பெயரை வைத்துக்கொண்டு டெக்சாஸ் வாடர் வொர்க்ஸ் கஸ்டமர் சர்வீசுக்காக அழைப்புகளை ஏற்பவன். அவனது 'வாடர்' உச்சரிப்பைச் சரி செய்யும் மேலதிகாரி. சதா வேலை வெலையென்று இருக்கும் கம்ப்யூட்டர் நிபுணன். அவனது இயந்திரமயமான வாழ்க்கையை வெறுக்கும் பொறுமையில்லாத மனைவி, ஒரு வீடியோப் படத்தை வைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போகிறாள். கால் செண்டர் ஆசாமி இரட்டை வாழ்க்கை, தனிமை ஆகியவற்றால் உந்தப்பட்டு மனம் குலைந்து நவீன இயேசு கிறிஸ்துவாக தன்னைச் சிலுவையில் அறைந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்வதோடு அதனை வெப்கேம் வழியாக உலகெங்கும் காண்பிக்கப்போவதாகவும் அறிவிக்கிறான். அதனைப் பற்றி பத்திரிகையில் எழுத விரும்பும் ஒரு பெண் இதழாளர் - முதலில் நியூஸ் என்ற காரணத்துக்காக மட்டுமே அதனைப் பின்தொடர்ந்தாலும் பின் அந்தத் தற்கொலையைத் தடுக்க விரும்புகிறாள். கடைசியாக சில திருப்பங்களுடன் தற்கொலை தடுக்கப்படுகிறது.

மேற்சொன்ன இரண்டு படங்களும் படமாக்கப்பட்ட விதம் அற்புதமாக இருந்தது. திரைக்கதையின் அடர்த்தி, எடிடிங்கின் தரம், சினிமடோகிராபியின் தரம், நடிப்பு, லொகேஷன், கலை - எல்லாமே வியக்கத்தக்க வகையில் இருந்தன.

பிற படங்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.

Saturday, November 26, 2005

தமிழக வெள்ளம், பொருள்/உயிர்ச்சேதம்

கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளம், அதன் தொடர்ச்சியாக பொருள், உடைமைகள் நாசம், பயிர்கள் நாசம் என்று தமிழகம் தவித்துக்கொண்டிருக்கிறது.

இம்முறை சென்னையில் அதிக மழை இல்லை. ஆனால் தென் தமிழகத்திலும் காவிரிப் படுகையிலும் நிறைய மழை. மீண்டும் கொள்ளிடம் உடைத்துக்கொள்ளுமோ என்ற பயம் - கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை. பல சிற்றாறுகளில் காட்டு வெள்ளம். நேற்று நடந்த இரண்டு பஸ் அசம்பாவிதங்களில் 150 பேருக்கு மேல் பலி என்பது வருத்தத்தைத் தருகிறது. இந்தக் காட்டு மழையில், சிறு வாய்க்கால்கள் உடையலாம் என்ற நிலையில் அந்த பஸ்கள் அந்தப் பாதை வழியாகச் சென்றிருக்க வேண்டுமா?

இரண்டு இடங்களிலுமே ஓட்டுனர்களின் கவனக்குறைவால், எச்சரிக்கைகளையும் மீறி வண்டியை எடுத்துச் சென்றதால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் ஒன்று தனியார் வண்டி, மற்றொன்று அரசுப் பேருந்து.

இங்கு சன் நியூஸ் தொலைக்காட்சியின் கவரேஜைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மனுஷ்ய புத்திரன் தன் வலைப்பதிவில், சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தார்.

இந்த உளவியல் வன்முறை தொடர்ந்து வருகிறது. மழையின் தீவிரம் அதிகம்தான், மழையால் பாதிப்புகளும் அதிகம்தான். ஆனால் சன் நியூஸ் எல்லாவற்றையும் இருநூறு மடங்கு உயர்த்திச் சொல்லி, அடுத்து உலகமே அழிந்துவிடப் போகிறதோ, பிரளயம் வந்துவிட்டதோ என்ற மாதிரியெல்லாம் செய்தி படிக்கிறார்கள். அத்துடன் தமிழக அரசு உஷாராக இருந்தால் இந்த அழிவையெல்லாம் தடுத்திருக்கலாம் என்பது போலச் செய்திகள். இதைவிட அநியாயம் வேறொன்றும் இருக்க முடியாது. என்ன செய்து மேலிருந்து கொட்டும் மழையைத் தடுப்பது? இந்த வரலாறு காணாத மழையில் மக்கள் அனைவருக்கும் பாதிப்பு. எல்லாவற்றுக்கும் அரசை மட்டுமே கைகாட்டுவது நியாயமில்லை.

அரசு நிவாரணம் என்று சென்னையில் நடக்கும் கூத்தில் பொதுமக்களை மட்டும்தான் குற்றம் சாட்டமுடியும். சென்னை மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுக்கு ரூ. 2,000, 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணை என்று அரசு கொடுக்க உத்தரவிட்டது. இதை வாங்கச் சென்றபோதுதான் வியாசர்பாடியில் கூட்ட நெருக்கடியில் சிலர் இறந்தனர். வெள்ளமே இல்லாத பகுதிகளிலும் (எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும்) பலரும் போராடி தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வேண்டும் என்று சண்டையிடுகின்றனர். இதற்காக இரண்டு நாள்களுக்கு முன்னர் பலர் கூட்டமாகச் சென்று ராதாகிருஷ்ணன் சாலையில் சோழா ஹோட்டல் முன் அமர்ந்து தர்ணா. அதைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்துக்குள் புகுந்து ரகளை செய்ய முயற்சி செய்ய, அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டிருக்கின்றனர். பின் காவல்துறை அவர்களிடம் நயமாகக் கெஞ்சி அடையாறு எங்கேயோ சென்று அங்குள்ள அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும் என்று சொல்ல, மக்கள் அனைவரும் அடையாறு சென்றிருக்கின்றனர்.

அடையாறில் உள்ள அலுவலகத்தில் அனைவரையும் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்பச் சொல்ல, எழுத்தறிவில்லா மக்கள் (ஆமாம்!) அதைச் செய்யத் தெரியாமல் வாசலில் இதற்காகவே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் ஆளுக்கு ரூ. 10 கொடுத்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பியுள்ளனர். ஆனால் படிவங்களைப் பெற அதிகாரிகள் நேரடியாக வருவார்களாம். அதனால் கூட்டம் மீண்டும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

அவர்களை இடைமறித்த ஓர் இடைத்தரகர் ஆளுக்குக் கிடைக்கும் ரூ. 2,000 பணத்தில் ரூ. 500ஐ வெட்டினால் பணம் கிடைக்கத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியுள்ளார்.

இப்படி ஒவ்வோர் ஊரிலும் நிவாரணப் பணம் தேவையற்றவர்களுக்குப் போய்ச் சேருகிறது. அது தமக்கு வந்தே ஆகவேண்டும் என்பது போல மக்களும் வெட்கமில்லாமல் போராட முனைகிறார்கள். அந்தப் பணத்தில் ஒரு பங்கு இடைத்தரகர்களுக்குப் போய்ச்சேருகிறது.

Thursday, November 24, 2005

குறும்படங்கள் திரையிடல் - சனிக்கிழமை

குறும்பட, 'நல்ல சினிமா' ரசிகர்களுக்கு...

நீங்கள் சென்னையில் இருந்தால் உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் திரையரங்கில் (ஜெமினி மேம்பாலத்துக்கு அருகில், ராணி சீதை ஹாலுக்கு அருகில்) வரும் சனிக்கிழமை, 26 நவம்பர் 2005 அன்று ஆறு குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

மாலை 3.30 மணிக்கு ஒரு காட்சி. மாலை 6.30 மணிக்கு இரண்டாவது காட்சி.

காட்சி நேரத்துக்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவாவது செல்வது நல்ல இடத்தைத் தேடிப்பிடித்து நண்பர்களுடன் கூடி உட்கார்ந்து கொள்ள உதவும்.

திரையிடப்பட இருக்கும் படங்கள்:

படம் 1: கிர்னி, மராத்தி, 22 நிமிடங்கள், இயக்குனர்: உமேஷ் குல்கர்னி (FTII பூனா)
படம் 2: பர்த்டே, தமிழ், 22.40 நிமிடங்கள், இயக்குனர்: கே.முத்துக்குமார் (VIS.COM ஐஐடி மும்பை)
படம் 3: The Solitary Sandpiper, ஆங்கிலம், 22 நிமிடங்கள், இயக்குனர்: அஜிதா சுசித்ரா வீரா (FTII பூனா)
படம் 4: Distance, தமிழ்/ஆங்கிலம், 27 நிமிடங்கள், இயக்குனர்: மாமல்லன்
படம் 5: Pre Mortem, ஆங்கிலம், 22 நிமிடங்கள், இயக்குனர்: ரிக் பாசு (FTII பூனா)
படம் 6: 00:00, ஆங்கிலம், 11 நிமிடங்கள், இயக்குனர்: ரிக் பாசு (FTII பூனா)

மாலை 6.30 காட்சிக்கு வந்தால் சிறப்பு விருந்தினர் P.C.ஸ்ரீராமையும் பார்க்கலாம்.

அனுமதி இலவசம் என்கிறார்கள் அமைப்பாளர்கள். அத்தனை படங்களும் அற்புதமானவை என்றும் கேள்விப்படுகிறேன். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். (நான் 6.30 காட்சிக்குச் செல்லவிருக்கிறேன்.)

பூக்குட்டி - சுஜாதாவின் சிறுவர் நூல்

தேசிகன் பதிவிலிருந்து: பூக்குட்டி !

சுஜாதா விகடனில் குழந்தைகளுக்காக எழுதிய தொடரை புத்தக வடிவில் அவரே வெளியிடுகிறார்.

தேசிகன் வலைப்பதிவு வழியாகப் புத்தகம் வாங்குபவர்களுக்கு (ரூ. 90), சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் கிடைக்கும்.

சிறுவர் நூல்கள் நிறையக் கொண்டுவரவேண்டும் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்.

எனக்கும் ஆசைதான். பார்ப்போம்...

Wednesday, November 23, 2005

மீத்ரோகின் ஆவணங்கள்

இதைப்பற்றி நான் ஏற்கெனவே எழுதிய பதிவை ஒருமுறை படியுங்கள். அப்பொழுது புத்தகம் என் கைக்கு வந்திருக்கவில்லை. இப்பொழுது இரண்டு தொகுதிகளும் என் கையில் உள்ளன. இரண்டாம் தொகுதியை முதலில் படிக்க ஆரம்பித்தேன். முதலில் இந்தியா பற்றிய பகுதி, அடுத்து ஆசிய கண்டத்தின் பிற நாடுகள் பற்றி, பின் அங்கும் இங்குமாக சில பகுதிகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் முதல் தொகுதி வந்து சேர்ந்தது. உடனடியாக அதைப் படிக்க ஆரம்பித்துள்ளேன்!

நாளை நாடாளுமன்றத்தில் இந்த விஷயத்தின் மீது விவாதம் நடக்க உள்ளது. சண்டை போட, பாஜகவுக்குப் பல விஷயங்கள் கையில் உள்ளன. மீத்ரோகின், வோல்க்கர், உச்ச நீதிமன்றத்தின் பீஹார் சட்டசபைக் கலைப்பு மீதான இடைக்காலத் தீர்ப்பு, பீஹாரில் காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்வி - இப்படிப் பல பல.

காங்கிரஸ் கட்சி எல்லாவற்றைப் பற்றியும் பேச விரும்புகிறார்களாம், மீத்ரோகின் ஆவணங்கள் தவிர. மீத்ரோகின் ஆவணங்கள் புதினம் போல எழுதப்படிருப்பதால் அதையெல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்பது சோனியா காந்தி/மன்மோகன் சிங்கின் வாதமாம். இது முழு அபத்தம்.

முதலில் மீத்ரோகின் ஆவணங்கள் புதினமாக எழுதப்படவில்லை! காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாருமே இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். (சொல்லப்போனால் பாஜகவினர் யாராவது படித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே!)

அதே சமயம் மீத்ரோகின் ஆவணங்கள் முழுமையான உண்மை என்று யாரும் சொல்லவும் முடியாது.

வாசிலி மீத்ரோகின் என்பவர் கேஜிபியில் பணியாற்றியவர். முதலில் களப்பணியில் இருந்தவர், சில காரணங்களால் ஆவணக் காப்பாளராக - தண்டனையாக - மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு கேஜிபி உளவாளிகள், அலுவலர்கள் அனுப்பும் தகவல் அறிக்கைகளைச் சேமித்து வைப்பது அவரது வேலை. தன் கடைசி 12 வருடங்களில் அந்த ஆவணங்களிலிருந்து பலவற்றை நேரம் கிடைக்கும்போது நகலெடுத்து வீட்டில் சேர்த்து வைத்திருக்கிறார். பின் சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா + பிற நாடுகளானபோது பக்கத்து நாட்டு பிரிட்டிஷ் தூதரகத்துக்கு வந்து தஞ்சம் கோரியுள்ளார். பிரிட்டன் உளவுத்துறையினர் மீத்ரோகின் வீட்டில் இருந்த ஆவணங்களை பத்திரமாக பிரிட்டனுக்குக் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர்.

1992-லிருந்து பிரிட்டனின் உளவுத்துறையினர் இந்த ஆவணங்களைத் தோண்டித் துருவியுள்ளனர். அதன்மூலம் தமது நாட்டிலுள்ள சில ரஷ்ய/சோவியத் உளவாளிகளைக் கண்டுபிடித்தனர். (அதில் ஒருவர் 87 வயதான பாட்டி. அது தனிக்கதை!) 1995-ல் பிரிட்டனின் MI6, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமகால வரலாறு பேராசிரியரான கிறிஸ்டோபர் ஆண்டிரூவை அழைத்து இந்த ஆவணங்களை வைத்து ஒரு புத்தகம் எழுதக் கேட்டனர். (ஏன்? இந்தப் புத்தகங்கள் வெளியாவதில் MI6க்கு என்ன லாபம்?) 1999-ல் மீத்ரோகின் ஆவணங்கள் முதல் தொகுதி வெளியானது. அதில் அமெரிக்கா, ஐரோப்பா பற்றிய விஷயங்கள் வெளியாகியிருந்தன. இது பல ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

பின்னர் இப்பொழுது இரண்டாவது தொகுதி வெளியாகியுள்ளது. இந்தத் தொகுதியில் அமெரிக்கா, ஐரோப்பா தவிர்த்த பிற நாடுகளில் கேஜிபி என்னென்ன செய்தனர் என்று வெளியாகியுள்ளது.

சில விஷயங்கள் முக்கியமானவை:
  1. கிறிஸ்டோபர் ஆண்டிரூ தனக்குக் காண்பிக்கப்பட்டதை மட்டும் வைத்து எழுதியுள்ளார்.
  2. அவர் எழுதியுள்ளதை பிரிட்டனின் சீக்ரெட் சர்வீஸ் தணிக்கை செய்து, தங்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் அனுமதித்துள்ளனர்.
ஆக, இதனைக் காரணம் காட்டியே இந்தப் புத்தகத்தை முழுமையான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள யாருமே மறுக்கலாம்.

அதைப்போலவே மற்றொரு விஷயம்... கேஜிபியினர் பல்வேறு நபர்களுக்கும் தனித்தனியாக எழுத்துக்குறியீடுகளை வைத்து அழைத்துள்ளனர். (இந்திரா காந்தி = VANO) இதனால் மீத்ரோகின் ஆவணங்களில் சங்கேதக் குறியீடுகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருமே கேஜிபி உளவாளிகள் என்று முடிவு செய்யக்கூடாது. ஆண்டிரூவும் இதையேதான் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

காங்கிரஸைப் பொருத்தவரை இந்தப் புத்தகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்:
  1. இந்திரா காந்தி சோவியத் யூனியன் தூதரகத்திலிருந்து தன் கட்சிக்காகப் பணம் பெற்றார்.
    The Prime Minister [Indira Gandhi] is unlikely to have paid close attention to the dubious origins of some of the funds which went into Congress's coffers. This was a matter she left largely to her principal fundraiser, Lalit Narayan Mishra, who - though she doubtless did not realize it - also accepted Soviet money. On at least one occasion a secret gift of 2 million rupees from the Politburo to Congress (R) was personally delivered after midnight by the head of Line PR in New Delhi, Leonid Shebarshin. Another million rupees were given on the same occasion to a newspaper which supported Mrs. Gandhi. Short and obese with several chins, Mishra looked the part of the corrupt politician he increasingly became. Indira Gandhi, despite her own frugal lifestyle, depended on the money he collected from a variety of sources to finance Congress (R). (பக்கங்கள் 322-323)
  2. காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த பலர் கேஜிபி ஏஜெண்டுகளாக இருந்தனர். ஓர் அமைச்சர் தான் கொடுக்கவிருக்கும் தகவலுக்காக $50,000 கேட்டதாகவும் அதற்கு அப்பொழுதைய கேஜிபி தலைவர் ஆன்டிரோபோவ் (பின்னாள் சோவியத் யூனியன் தலைவர்) அத்தனை பணம் கொடுக்கமுடியாது என்றும், எக்கச்சக்கமான தகவல்கள் அவ்ர்களுக்கு வந்துகொண்டே இருக்கிறது என்றும் சொன்னதாகவும் ஒரு குறிப்பு வருகிறது.
  3. இந்தியாவில் அமெரிக்கத் தூதராக இருந்த பேட்ரிக் மொய்னிஹான் எழுதிய A Dangerous Place, பக்கம் 41ல் வரும் தகவலாக,
    Both times the money was given [by CIA] to the Congress Party which had asked for it. Once it was given to Mrs Gandhi herself, who was then a party official.

    Still, as we were no longer giving any money to her, it was understandable that she should wonder to whom we were giving it. It is not a practice to be encouraged.
இந்தக் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. இது மேற்கொண்டு விசாரிக்கப்படவேண்டும் என்று பாஜக கேட்பதில் நியாயமுள்ளது. காங்கிரஸ் இதைத் தட்டிக்கழிக்கக் கூடாது.

காங்கிரஸைத் தவிர CPI கட்சி தொடர்ச்சியாக சோவியத் பொலிட்புரோ கொடுக்கும் பணத்தை நிறையப் பெற்றதாக இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆனால் இதில் பெரிய விஷயம் ஒன்றுமில்லை. உலகத்தில் அத்தனை நாடுகளிலும் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சோவியத் யூனியன் அப்பொழுது பணம் கொடுத்து வந்தது. இது வேறுவிதமான பிரச்னை. இந்தியாவில் சட்டபூர்வமாக இயங்கும் ஓர் அரசியல் கட்சி வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்து ரகசியமாகப் பணம் பெறுவது சட்டப்படி குற்றமா என்பது ஒரு விஷயம். அப்படிப்பட்ட ஒரு கட்சியை மக்கள் நம்பலாமா; அவர்களுக்கு மீண்டும் வாக்களிக்கலாமா என்று கேள்வி கேட்பது வேறு விஷயம்.

ஆனால் இந்த விவகாரத்தை "ஏதோ புனைகதைப் புத்தகம்" என்று சோனியா காந்தி சொல்வது போல அலட்சியமாக ஒதுக்கிவிடக் கூடாது. அதே சமயம் இந்தப் புத்தகத்தை மட்டுமே முன்வைத்து மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மை என்றும் முடிவுகட்டிவிடக் கூடாது.

The Mitrokhin Archives II - The KGB and the World, Christopher Andrew and Vasili Mitrokhin, Allen Lane (Penguin), 2005 - UK Edition

The Sword and the Shield - The Mitrokhin Archive and the Secret History of the KGB, Christopher Andrew and Vasili Mitrokhin, Basic Books, 1999 (Paperback Edition 2001) - US Edition

மும்பை தொடர் குண்டுவெடிப்புகள்

12 மார்ச் 1993, வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. விளைவாக 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயமுற்றனர்.

இது நியூ யார்க், பாலி, மாட்ரிட், லண்டன், சமீபத்திய தில்லி தொடர் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முற்பட்டது. மேற்குறிப்பிட்ட இடங்களில் நடந்த தாக்குதல்/குண்டுவெடிப்புகளின் பின்னணியிலிருந்து வெகுவாக வித்தியாசமானதும் கூட.

தொடர் குண்டுவெடிப்புகள் உயிருக்கும் உடைமைக்கும் பெருத்த நாசத்தை ஏற்படுத்தவேண்டுமானால் அதற்கு எக்கச்சக்க திட்டமிடுதலும் செயல்படுத்துதலும் தேவை. உலகில் சில தீவிரவாத இயக்கங்களிடம்தான் இதற்கான திறமை உள்ளது. அதே நேரம் போரில் ஈடுபடாத அமைதியான ஒரு நகரில் இதையெல்லாம் செய்யவேண்டுமென்றால் உள்ளூர் தொடர்புகள் வேண்டும். வெளிநாட்டு (எதிரி நாட்டு) ஆதரவும் வேண்டும்.

டிசம்பர் 6, 1992-ல் அயோத்தியில் சங் பரிவார் குண்டர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா முழுதும் பல இடங்களில் கலவரங்கள். மும்பையில் டிசம்பர் 1992, ஜனவரி 1993 என இரண்டு மாதங்களில் சிவ சேனை ஆதரவில் கலவரங்கள். காவல் துறையினர் பலரும் மறுபக்கம் பார்த்திருக்க கொலைவெறி தாண்டவமாடியது. கோத்ரா அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இல்லையென்றாலும் அரசு இயந்திரம் முன்னேற்பாடுடன் செயல்படவில்லை. விளைவு: 250 ஹிந்துக்களும், 500க்கு மேற்பட்ட முஸ்லிம்களும் மும்பையில் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். பல முஸ்லிம்களின் உடைமைகள் சூரையாடப்பட்டன. தொழில்கள் நசிந்தன.

அப்படி நசிந்த தொழில்களில் சில மும்பை நிழலுலக தாதாக்களான டைகர் மேமோன், தாவூத் இப்ராஹிம், அபு சாலேம் போன்றவர்களுடையதும்தான்.

அந்த நேரத்தில் தாவூத் இப்ராஹிம் துபாயில் வசித்து வந்தார். அதுவரையில் கடத்தல்காரனாகவும் தாதாவாகவும் மட்டுமே தன்னைப் பார்த்து வந்த தாவூதுக்கு இப்பொழுது தன்னை ஒரு முஸ்லிமாகப் பார்க்கத் தோன்றியது. கடத்தல் மன்னர்கள் பலரும் முஸ்லிம்கள்தான். தாவூதின் வலது கையான சோட்டா ராஜன், இப்பொழுது அரசியலில் குதித்திருக்கும் அருண் காவ்லி போன்ற சிலரே அந்த நேரத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இந்துக்கள்.

முஸ்லிம் தாதாக்களுக்கு தூபம் போட்டது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பிப்ரவரி 1993-ல் துபாயில் நடைபெற்ற தாதாக்கள் கூட்டத்தில் மும்பை இந்துக்களைப் பழிவாங்கவும் இந்திய அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தமக்கு என்ன ஆகும், தம் சகோதர முஸ்லிம்களுக்கு என்ன ஆகும் போன்ற விஷயங்களைப் பற்றி அந்த தாதாக்கள் அப்போது கவலைப்படவில்லை.

ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து, திரி, இன்னபிற வெடிகுண்டுகள் செய்யத் தேவையான பொருள்கள், ஜெலாடின் குச்சிகள், கிரெனேடுகள், எ.கே.56 ரக துப்பாக்கிகள் என்று பலவற்றையும் ஐ.எஸ்.ஐ தயாரித்து மும்பைக்கு அனுப்பியது. அதனைப் பத்திரமாகத் தரையிறக்கிப் பாதுகாப்பது டைகர் மேமோனின் வேலை. மும்பை சுங்கத்துறையில் ஏகப்பட்ட ஆள்களைத் தன் கையில் வைத்திருந்த மேமோனுக்கு அது அவ்வளவு பெரிய விஷயமில்லை.

அடுத்து பல இடங்களிலும் குண்டு வைக்கவும் கலவரங்களை ஏற்படுத்தவும் ஆள்கள் தேவை. மேமோனின் ஆள்கள்தான் பெரும்பாலானவர்கள். பிற தாதாக்கள் சிலரைக் கொடுத்துள்ளனர். 12 மார்ச் 1993 அன்று முஸ்லிம்கள் அல்லாத பகுதிகளாகப் பார்த்து ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளை உருவாக்கி வைத்தனர், மேமோனின் ஆள்கள். இதற்குத் தேவையான பயிற்சியை எடுத்துக்கொள்ள ஓர் அணி முன்னமேயே துபாய் வழியாக பாகிஸ்தான் சென்று அங்கு காடுகளில் ஐ.எஸ்.ஐ கமாண்டோக்களிடம் பயிற்சி பெற்றது.

தொடர் குண்டுவெடிப்புகள் பல இடங்களில் நாசம் விளைவிக்க டைகர் தன் குடும்பத்துடன் முதல் நாளே துபாய்க்கு எஸ்கேப் ஆகிவிடுகிறார். மும்பை காவல்துறை கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சுகளை அவிழ்த்து குண்டுகளை வைத்த ஒவ்வொருவராகப் பிடிக்கிறது.

டைகர் மேமோன் ஈடுபட்டுள்ளார் என்று இரண்டு நாள்களுக்குள்ளேயே தெரிந்து விடுகிறது. குண்டுகள் வைத்து வெடிக்காமல் போன ஸ்கூட்டர், வெடித்து நாசமாகிப் போன கார் ஆகியவை மேமோனின் உறவினர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட வண்டிகள். மிகுந்த வேட்டைக்குப் பிறகு டைகர் மேமோனின் தம்பி யாகூப் மேமோன் நேபாளில் மாட்டுகிறார். பின் மேமோன் குடும்பத்தவர் அனைவரும் - டைகர் தவிர - சரணடைகிறார்கள். தாவூதுக்கு வலை வீசுகிறது இந்தியா. ஆனால் பாகிஸ்தான் டைகர் மேமோனையும் தாவூத் இப்ராஹிமையும் பத்திரமாகப் பாதுகாக்கிறார்கள். கேட்டால் அப்படி யாருமே பாகிஸ்தானில் இல்லை என்று பதில் வேறு.

இதற்கிடையில் அபு சாலேம் போர்ச்சுகல் போகிறார். கடந்த வாரம் அவரையும் போராடி அங்கிருந்து இங்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள்.

இடையில் யார் யாரோ பெரிய ஆசாமிகளெல்ல்லாம் மாட்டினார்கள். சஞ்சய் தத் எனும் சினிமா நடிகர். (சமீபத்தில் மரணமடைந்த காங்கிரஸ் எம்.பி சுனில் தத்தின் மகன்; சுனில் தத்தின் இடத்தில் இப்பொழுது தேர்தலில் ஜெயித்திருக்கும் பிரியா தத்தின் சகோதரர்.) ஹனீஃப் காடாவாலா, சமீர் ஹிங்கோரா எனும் சினிமா தயாரிப்பாளர்கள்.

ஜெயிலிலிருந்து பெயிலில் வெளியே வந்த சிலரை திடீரென தேசபக்தரான இந்து தாதா சோட்டா ராஜன் போட்டுத்தள்ளினார். இதனால் வெகுண்ட தாவூதின் மற்றொரு கையான சோட்டா ஷகீல் ராஜனை தாய்லாந்தில் கொலை செய்ய முயற்சி செய்தார். அதில் மூன்று புல்லெட்டுகள் துளைத்தும் தப்பித்த ராஜன் தாய்லாந்து ஆஸ்பத்திரியில் இருந்து காவல்துறை கண்ணுக்கு மண்ணைத் தூவி, இப்பொழுது ஐரோப்பாவில் எங்கோ இருப்பதாகக் கேள்வி. தனக்கு மட்டும் இந்திய அரசு உதவி செய்தால் தாவூத் இப்ராஹிமைத் தன்னால் ஒழித்துக்கட்டமுடியும் என்று ராஜன் அவ்வப்போது ஊடகங்களுக்குப் பேட்டி தந்த வண்ணம் இருக்கிறார்.

நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. தீவிரவாதிகள் சிலருடன் அவர்களது சொந்தக்காரர்கள், ஒரு பாவமும் செய்யாத சில அப்பாவிகள் என்று பலரும் சேர்ந்தே மாட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் எப்பொழுது கிடைக்குமோ தெரியாது.

மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றி அருமையான ஓர் ஆவணத்தை எழுதியுள்ளார் மிட் டே பத்திரிக்கையாளரான ஹுசைன் ஸைதி (Hussain Zaidi).

Black Friday: The True Story of the Bombay Bomb Blasts, S. Hussain Zaidi, 2002, Penguin, 304 pages, Rs. 325 (Fabmall)

ஒரு தீவிரவாதச் செயல் எப்படித் திட்டமிடப்பட்டது, யார் யாரெல்லாம் பங்கெடுத்தார்கள், யார் யாரெல்லாம் துணைபுரிந்தார்கள், துப்பு துலக்கியது யார், எப்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், 2002-ல் புத்தகம் அச்சாகும்போது அந்த வழக்கின் நிலை என்ன என்ற பலவும் மிக எளிமையான, புரியக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சினிமாவும் எடுக்கப்பட்டது. ஆனால் தடா வழக்கில் சிறையில் இருக்கும் பலரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்தப் படம் திரையிடப்படக்கூடாது என்றும் திரையிட்டால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும் வாதாடினார்கள். விளைவாக படம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 22, 2005

அன்புள்ள நிதீஷ் குமார்

22 நவம்பர் 2005


அன்புள்ள நிதீஷ் குமார்,

பீஹாரின் அடுத்த முதல்வராகப் போகிறீர்கள். வாழ்த்துகள்.

உங்களது மாநிலம்தான் இந்தியாவிலேயே படு மோசமானது என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அதற்கு யார் காரணம் என்று இப்பொழுது தோண்டுவது முக்கியமல்ல.

உங்கள் மாநிலத்தில் படிப்பறிவு (2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி) வெறும் 47% தான்! இந்தியாவிலேயே உங்கள் மாநிலத்தில்தான் படிப்பறிவு இவ்வளவு கீழாக உள்ளது. இன்னமும் மோசமாக, ஏழு மாவட்டங்களில் படிப்பறிவு 35% அளவே உள்ளது! மாவட்டம் மாவட்டமாக பள்ளிக்கூடங்களைக் கட்டி இலவசக் கல்விக்கு ஏற்பாடு செய்யுங்கள். தமிழகம் போன்ற மாநிலங்களில் நடப்பது போல இலவச பாடப் புத்தகங்கள், மதிய உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதனால் நாளைக்கு உங்களுக்கு ஓட்டுகள் அதிகமாகக் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் பத்து வருடங்கள் கழித்து பீஹார் கொஞ்சமாவது உருப்படியாகலாம்.

உங்கள் மாநிலத்தில் மொத்தமாக 83 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 881.3 பேர்கள். உத்தர பிரதேச மாநிலத்தில் உங்கள் மாநிலத்தை விட மக்கள் தொகை அதிகம் (166.2 மில்லியன்). ஆனால் அங்கும் கூட இடவசதிகளும் அதிகம். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 689.6 பேர்கள் மட்டும்தான். மேற்கு வங்கம் ஓரிடத்தில்தான் உங்கள் மாநிலத்தைவிட மக்கள் தொகை நெருக்கம் அதிகம் (சதுர கிலோமீட்டருக்கு 903.5 பேர்கள்). எனவே குடிநீர் வசதி, அடிப்படைச் சுகாதார வசதி ஆகிய அனைத்தையும் வழங்க மிகவும் சிரமப்படுவீர்கள். ஆனாலும் செய்துதான் ஆகவேண்டும். கடந்த 30 வருடங்களாக எந்த வளர்ச்சியையுமே காணாத மாநிலம் உங்களுடையது.

கடந்த பத்தாண்டுகளில் எந்த வளர்ச்சி இருக்கிறதோ இல்லையோ, மக்கள் தொகை வளர்ச்சியில் இந்தியாவிலே முதலிடத்தில் இருக்கிறீர்கள்! சில குட்டி வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் ஆகியவை தவிர்த்துப் பார்த்தால் 1991-2001 சமயத்தில் உங்கள் மாநிலத்தின் தொகை 28.4% அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி 11.2%; கேரளாவின் மக்கள் தொகை வளர்ச்சி 9.4%. இதைக் கட்டுப்படுத்தினால்தான் உங்களால் ஓரளவுக்காவது அடிப்படை வசதிகளைச் செய்து தர முடியும். குடும்பத்துக்கு ஒரு குழந்தை, தவறினால் இரண்டு (கிராமப்புறங்களில்) என்று கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளுங்கள். இதற்கு பெண்களுக்கு அடிப்படைக் கல்வி அவசியம். எனவே முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் மணமான பெண்களுக்குக் கல்வி புகட்டுங்கள்.

உங்கள் மாநிலத்தில் சாலை வசதிகள் வெகு குறைவு. முக்கியமான சில ஊர்களைத் தவிர பிற இடங்களில் சரியான மருத்துவமனை வசதி இல்லை. NHAI சாலைகள் அமைக்கும் பணி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சரியாக நடந்தாலும் உங்கள் மாநிலத்தில் மட்டும்தான் படு மோசமாக உள்ளது. இதில் நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடித்த சத்யேந்திர துபேயை மாஃபியாவினர் கொன்றுவிட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமல்ல, மாநில நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள் அனைத்தும் அவசியம். அதற்கென மாநில அளவில் நிதி ஒதுக்கி, முடிந்த அளவு ஊழலைக் குறைத்து, சாலைகளைப் போடுங்கள்.

உங்கள் மாநிலத்தில் மூன்று ஆயுதம் தாங்கிய கும்பல்கள் உள்ளன. அவை அமைதியைக் குலைக்கின்றன. பெருநிலக்காரர்களின் சொந்தக் கூலிப்படையான ரன்வீர் சேனா, நக்சலைட்டுகளான CPI (ML), இது தவிர பல்வேறு விதமான லோக்கல் மாஃபியாக்கள். சென்ற வாரத்தில்தான் CPI (ML) தீவிரவாதிகள் ஜெயிலில் புகுந்து தம் தோழர்களை விடுவித்ததோடு மட்டுமல்லாமல் தம் எதிரிகளான ரன்வீர் சேனா ஆசாமிகளைக் கடத்திக்கொண்டு போனார்கள். இரு கோஷ்டிகளும் பழிக்குப் பழி என்று குதிக்கிறார்கள். இவர்களை எப்படி அடக்கப்போகிறீர்கள்? இதில் முதலில் அடக்கவேண்டியது ரன்வீர் சேனாவைத்தான் என்று நான் நினைக்கிறேன். அதனால் நக்சலைட்டுகளை விட்டுவிடுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களது கோபத்துக்கு அடிப்படைக் காரணங்கள் உண்டு. சிறிதாவது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால் அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் அவர்களுக்கு ஆதரவு குறையும்.

மாஃபியாக்களை ஒழிப்பது சுலபமல்ல. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தக் கும்பலைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். பிள்ளைகளைக் கடத்திப் பணம் பறிக்கும் கோஷ்டிகளைக் கண்ட இடத்திலே சுட உத்தரவு கொடுங்கள்.

இந்தியாவிலே உள்ள பெரிய மாநிலங்களில் உங்கள் மாநிலத்தில்தான் பொறியியல் கல்லூரிகள் மிகக்குறைவு. மொத்தமாகவே 11 பொறியியல் கல்லூரிகள்தான் உள்ளன! அதில் ஐந்து பாட்னாவில் மட்டும். 11-ல் ஒன்று பால்வளத்துறை பற்றியது. 83 மில்லியன் மக்கள்தொகை கொண்ட உங்கள் மாநிலத்துக்கு இந்த எண்ணிக்கை மிகக் குறைவு என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். புதிதாகப் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க உங்கள் மாநில அரசுக்கு நிதி கையிருப்பு போதாது. எனவே தனியார் கல்லூரிகளை ஊக்குவியுங்கள். அத்துடன் அடுத்த ஐந்து வருடங்களில் வெளி மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குங்கள்.

உங்கள் மாநிலத்தில் மாட்டுத்தீவனத்தில் ஊழல்கள் நடந்துகொண்டிருந்தபோது பிற மாநிலங்களில் கணினி, இணையம் என்று என்னென்னவோ நடந்துவிட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு சிற்றூரிலும்கூட இன்று இணைய வசதி உள்ளது. மொபைல் தொலைபேசி கேட்போருக்கெல்லாம் கிடைக்கிறது. உங்களால் என்ன செய்யமுடியுமோ அதனைச் செய்யுங்கள். ஆனால் இதையெல்லாவற்றையும்விட முக்கியமான ஒரு விஷயம் உள்ளது.

உங்கள் மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே மிகக்குறைவான தனிநபர் வருமானம் உள்ளது. இந்தியாவின் சராசரி வருமானத்தில் பாதிக்குக் குறைவாகவே பீஹாரில் உள்ள மக்களுக்குக் கிடைக்கிறது. இதனை ஒரு வருடத்திலோ, ஐந்து வருடத்திலோ சரிக்கட்ட முடியாது. இருபது வருடங்களாவது பிடிக்கும். உங்கள் மாநிலத்தில் நிறைய தொழிற்சாலைகள் வேண்டும். ஆனால் அதில் வேலை செய்ய ஆள்கள் கிடைக்க மாட்டார்கள். தனியார் யாரும் வந்து தொழிற்சாலைகளை நிறுவ மாட்டார்கள். எனவே கல்வியிலிருந்து ஆரம்பியுங்கள்.

நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்றும் சொந்தக்காரர்களுக்கு என்று சொத்து சேர்ப்பதில் ஈடுபடாதவர் என்றும் இன்று தொலைக்காட்சியில் காட்டினார்கள். உங்களது பெற்றோர்கள், சகோதரர்கள் சாதாரண வீட்டில் வசிப்பதைக் காட்டினார்கள். நீங்கள் நடுவண் அரசில் ரயில்வே மந்திரியாக இருந்திருக்கிறீர்கள். அப்பொழுதே ஊழல் வழியில் சொத்து சேர்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கும். செய்யவில்லை போல. உங்களது மந்திரி சபையில் இருக்கப்போகும் பிற மந்திரிகள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது. ஊழலை முடிந்தவரை குறைத்து பொதுமக்களுக்கு வசதிகள் கிடைக்குமாறு செய்யுங்கள்.

நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் என் வாழ்த்துகள்.

இப்படிக்கு,
பத்ரி சேஷாத்ரி

Monday, November 21, 2005

ஹைதராபாத், பெங்களூர் கிரிக்கெட் ஆட்டங்கள்

சென்னையில் இப்பொழுது மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். மழை கடுமையாக உள்ளது. நேற்றிரவு முதற்கொண்டே தெருவில் தண்ணீர் தேங்குமளவுக்கு மழை. இன்று சில பள்ளிகளுக்கு விடுமுறை.

நாளை இந்தியா - தென்னாப்பிரிக்கா மூன்றாவது கிரிக்கெட் ஒருநாள் போட்டி இருக்குமா என்பது சந்தேகமே.

முதல் இரண்டு ஆட்டங்கள் நடந்தபோதும் நான் ஊர்சுற்றும் வேலையில் இருந்துவிட்டேன். அதனால் இரண்டையும் சேர்த்து சுருக்கமாக இங்கே.

இலங்கையை 6-1 என்ற கணக்கில் ஜெயித்த இந்திய அணியும் தொடர்ந்து 19 ஒருநாள் போட்டிகளில் தோற்காமல் இருந்த தென்னாப்பிரிக்க அணியும் மோதும் ஆட்டம். இந்த ஆட்டத்தில் இந்தியா கவனமாக ஆடவேண்டும் என்ற நிலை. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை வீச்சாளர்களை விட திறமை வாய்ந்தவர்கள். தென்னாப்பிரிக்க தடுப்பாளர்கள் உலகிலேயே மிகச்சிறந்த பந்து தடுப்பாளர்கள்.

இந்தியாவின் முன்னணி மட்டையாளர்கள் அனைவருமே ரன்கள் பெற்றிருந்தாலும் புதுப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் கவனம் இருக்கவேண்டும். டாஸில் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணித்தலைவர் க்ராம் ஸ்மித் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். ஷான் போலாக், மகாயா ந்டினி இருவருமே எடுத்த எடுப்பிலேயே இந்திய வீரர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். ஐந்து ரன்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுகள் போயின. திராவிட் - நின்று விளையாட வேண்டியவர் - சற்றும் எதிர்பாராத விதமாக இறங்கி வந்து பந்தைத் தடுக்கு முயற்சி செய்து பந்தை முழுவதுமாக விட்டு ஸ்டம்பை இழந்தார். 'சூப்பர் சப்' கம்பீர் உள்ளே வந்து அதிகம் ரன் அடிக்காமல் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆக 12வது ஓவரில் இந்தியா 35-5.

யுவராஜ் சிங்கும் இர்ஃபான் பதானும் ஜோடி சேர்ந்து மேற்கொண்டு விக்கெட் இழக்கமால் ரன்கள் சேர்த்தனர். ரன்கள் வேகமாக வரவில்லை. ஆனால் இந்தியர்களுக்கு வேறு வழியில்லை. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பதான் ஆஃப் ஸ்பின்னர் போத்தாவின் பந்துவீச்சில் அவுட்டானபோது 46 ரன்கள் பெற்றிருந்தார். பதான் இந்தியாவின் முக்கியமான ஆல்ரவுண்டராக வருவார்.

யுவராஜும் தோனியும் சேர்ந்து சிறிது வேகமாக ரன்கள் சேர்த்தனர். தோனி தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்து தடுப்பால் ரன் அவுட் ஆனார். பந்துத் தடுப்பாளர்களை ஏமாற்றிவிட்டு ஒரு ரன் பெறுவது, பந்துகளை அவுட்ஃபீல்டில் அடித்துவிட்டு வேகமாக ஓடு இரண்டு ரன்கள் பெறுவது - இரண்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சுலபமானதல்ல. ஒருவர் விடாமல் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பாளர்கள் வேகமாக ஓடு பந்துகளை அழகாகத் தடுக்கிறார்கள். அதே கையுடன் பந்தைப் பொறுக்கி, விக்கெட் கீப்பருக்கு எறிகிறார்கள். பலமுறையும் ஸ்டம்பை நேராகக் குறிவைத்தே அடித்துத் தாக்குகிறார்கள். தோனிக்குப் பிறகு அகர்கர் யுவராஜுடன் ஜோடி சேர்ந்து ரன்கள் பெற்றார். இப்பொழுது ரன்கள் பெறும் வேகம் இன்னமும் அதிகமானது. ஆனாலும் 220ஐ இந்தியா எட்டுமா என்பதே சந்தேகமாக இருந்தது.

அகர்கர் அவுட்டானதும் ஹர்பஜன் வந்தார். இப்பொழுது யுவராஜ் வேகமாக அடித்து ரன்கள் சேர்த்தார். தன் சதத்தை எட்டுவதற்கு சற்று முன்னரே நொண்ட ஆரம்பித்தார். திராவிடுக்கு இதுபோன்ற தொல்லைகள் எப்பொழுதுமே உண்டு. உடலிலிருந்து வியர்வை அதிகமாக வெளியேறுவதாலும் தசைப்பிடிப்பு (cramps) அதிகமாவதாலும் வெகுநேரம் பேட்டிங் செய்யும்போது கஷ்டப்படுவார். ஆனால் யுவராஜ் போன்ற இளைஞர்கள் இந்த மாதிரி கஷ்டப்படுவது ஏனென்று புரியவில்லை. ஆனாலும் கொஞ்சம் சுதாரித்து சதத்தைப் பெற்றார். உடனேயே ரன் அவுட். 122 பந்துகளில் 103 ரன்கள் (10x4, 3x6). தென்னாப்பிரிக்காவின் ஆஃப் ஸ்பின்னர் ஜான் போத்தாவை மிகவும் எளிதாக விளையாடினார். வேகம் குறைவாகப் பந்துவீசும் லாங்கவெல்ட், நெல் ஆகியோரையும் பிரச்னையின்றி விளையாடினார்.

ஹர்பஜன் கடைசி ஓவர்களில் ந்டினியையும் நெல்லையும் அடித்து விளாசினார். கடைசி மூன்று ஓவர்களில் 16, 10, 12 என்று ரன்கள் வந்தன. ஹர்பஜன் 17 பந்துகளில் 37* (4x4, 2x6). ஒருவழியாக இந்தியாவின் எண்ணிக்கை ஐம்பது ஓவர்களில் 249/9 என்றானது.

காலையில் 35/5 என்று இருந்தபோது ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று இருந்த நிலை மதியம் கணிசமாகவே மாறியிருந்தது. ஆனாலும் இந்த ஸ்கோர் போதுமானதில்லைதான்.

தென்னாப்பிரிக்காவின் ஸ்மித் ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆவேசமாக விளையாடினார். எப்படியாவது பந்துவீச்சாளர்களை கதிகலங்கச் செய்யவேண்டும் என்று இருந்தது அவரது ஆட்டம். பதான் அவருக்குப் பந்து வீச நிறையத் தடுமாறினார். நல்ல வேளையாக மறுமுனையில் அகர்கர் இரண்டு விக்கெட்டுகளை விரைவாகப் பெற்றார். டி வில்லியர்ஸ் எல்.பி.டபிள்யூ. ஆண்டாங் ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே செல்லும் பந்தை ஓங்கி வெட்டி அடித்தார். அதை ஸ்லிப்பில் நின்ற திராவிட் நன்றாகப் பிடித்தார். ஸ்மித், நன்றாக விளையாடிக் கொண்டிருந்தவர், ஆர்.பி.சிங்கின் பந்தை ஸ்டம்பை நோக்கி இழுத்து அவுட்டானார்.

இந்தியா காலையில் சூப்பர் சப் கம்பீரை பேட்டிங் செய்யக் கொண்டுவந்ததால் முரளி கார்த்திக்கினால் பந்து வீச முடியவில்லை. பதானும் மிகவும் மோசமாகப் பந்து வீசியதால் இந்தியா சேவாக், டெண்டுல்கர் ஆகியோரை நம்ப வேண்டியிருந்தது. ஆர்.பி.சிங் மிக நன்றாக வீசினார். ஹர்பஜனும் கடந்த ஒரு மாதமாக வீசிக்கொண்டிருப்பதைப் பல ரன்கள் எதையும் தராமல் அற்புதமாக வீசினார். ஜாக் கால்லிஸ், ஆஷ்வெல் பிரின்ஸ் இருவருமே மெதுவாக ரன்கள் சேர்த்தனர். அடுத்தடுத்து பிரின்ஸ், பவுஷர் இருவரும் அவுட்டானாலும் கால்லிஸ், கெம்ப் இருவரும் ஜோடி சேர்ந்து 49வது ஓவரில் இந்திய எண்ணிகையைத் தாண்டினர்.

இந்தியாவின் பேட்டிங் சுதாரித்துக்கொண்டாலும் பவுலிங் ஓரிரு மாற்று குறைவாகவே இருந்தது. அதனால் முதல் சுற்றில் வெற்றி தென்னாப்பிரிக்காவுக்கு.

இரண்டாவது ஆட்டத்தின் நிலைமை தலைகீழ். பெங்களூரில் திராவிட் டாஸ் ஜெயித்து முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இது பகல்-இரவு ஆட்டம். இரண்டாவது இன்னிங்ஸில் பனி காரணமாக பந்துவீச்சாளர்கள் சிரமப்பட நேரிடும் என்பதால் டாஸ் ஜெயிப்பவர் முதலில் பந்துவீசுவார் என்பதே முன்னரே தீர்மானிக்கப்பட்டது.

இம்முறை பதான் எடுத்த எடுப்பிலேயே ஃபார்முக்கு வந்துவிட்டார். அடுத்தடுத்து தன் முதல் நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். முதல் ஓவரில் டி வில்லியர்ஸ் கால்திசையில் வந்த பந்தை ஸ்கொயர் லெக்கில் நின்ற ஹர்பஜன் சிங் கையில் கேட்சாக அடித்தார். பதானின் மூன்றாவது ஓவரில் ஸ்டம்புக்கு நேராக வந்த பந்தை கால் திசையில் தட்டி ஆட முயன்று பந்தைக் கோட்டை விட்டதில் ஸ்மித் எல்.பி.டபிள்யூ. பதானின் நான்காவது ஓவரில் எங்கோ ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியில் சென்ற பந்தை ஜாக் கால்லிஸ் துரத்திச் சென்று தோனியிடம் கேட்ச் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா 20/3.

இந்தியாவின் பிற பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்காவின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தனர். ரன்கள் எங்கிருந்து வரும் என்றே தெரியவில்லை. அகர்கர், பதான் இருவருமே ரன் அடிக்கும் பந்துகளை வீசவேயில்லை. ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சு சற்று சுமார்தான். எனவே திராவிட் ஸ்பின்னர்களை அழைத்தார். ஹர்பஜன் சிங் - இந்த சீசனின் இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளர் இவர்தான்! - இங்கும் ரன்கள் தரவில்லை. ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருந்ததால் கார்த்திக் 10-4-16-0 என்ற அளவில் பந்துவீசியிருந்தார். இது போதுமே திராவிடுக்கு... மிச்ச ஓவர்களை சேவாக், யுவராஜ் ஆகியோரை வைத்து வீசவைத்தார். விக்கெட்டுகளும் சரமாரியாக விழுந்தன.

ஆண்ட்ரூ ஹால், ஆஷ்வெல் பிரின்ஸ் ஆகிய இருவரும்தான் 30ஐத் தாண்டினர். சேவாக், ஹர்பஜன் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர். யுவராஜ் சிங்குக்குக் கூட ஒரு விக்கெட் கிடைத்தது. கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் அகர்கர் ஒரு விக்கெட்டைப் பெற்றார். தென்னாப்பிரிக்காவால் ஐம்பது ஓவர்களில் 169/9 என்ற ஸ்கோரை மட்டுமே எடுக்க முடிந்தது.

உணவு இடைவேளைக்குப் பின் தென்னாப்பிரிக்கா மிக அற்புதமாகப் பந்துவீச்சைத் தொடங்கியது. சேவாகின் மோசமான ஃபார்மை மனதில் வைத்து கம்பீர் (சூப்பர் சப்), டெண்டுல்கரை தொடக்க ஆட்டக்காரர்களாக அனுப்பினார் திராவிட். முதல் மூன்று ஓவர்களில் ஒரு ரன்னும் இல்லை. அதில் கம்பீர் அவுட்டாகியிருக்க வேண்டும். ஒரு நிச்சயமான எல்.பி.டபிள்யூவை நடுவர் ஜெயப்பிரகாஷ் கொடுக்கவில்லை.

நான்காவது ஓவரில்தான் சில ரன்கள் கிடைத்தன. அதில் ஒன்று வானளாவ தர்ட்மேனில் கம்பீர் அடித்த நான்கு. எட்டு ஓவர்களில் இந்தியா 13/0. இது ஒன்றும் மோசமில்லை. பதினைந்து ஓவர்கள் அமைதியாக விளையாடினால் பின்னர் ரன்கள் தானாகக் கிடைக்கும். ஆனால் டெண்டுல்கர் போலாக்கை மிட் ஆன் மேல் அடிக்கப்போய் மட்டை திரும்பியதால் சரியாக அடிகக் முடியாமல் ராபின் பீட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து திராவிட் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வந்தது இர்ஃபான் பதான். நிச்சயமாக பிஞ்ச் ஹிட்டராக இல்லை.

பதான் அமைதியாக விளையாட, மறுபுறம் கம்பீர் எல்லாப் பந்துகளையும் அடிக்கப்போனார். நிறைய பந்துகள் மட்டையில் மாட்டின. சில மாட்டவில்லை. ரன்கள் வந்துகொண்டிருந்தன.

போலாக், ந்டினி ஆகியோரின் மாற்றுப் பந்துவீச்சாளர்கள் அவ்வளவு சரியாக வீசவில்லை. ஆண்ட்ரே நெல் வாய் ஓயாமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கம்பீர் விடவில்லை. ஒரு முறை கம்பீர் நெல்லின் பந்தை அடிக்க, அது விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் தலைக்கு மேலாக எல்லைக்கோட்டுக்குச் சென்றது. நெல் கம்பீரிடம் அதைப்பற்றிப் பேச, கம்பீர் பதிலுக்குப் பேச, நடுவர்கள் இடையிடவேண்டியிருந்தது. இதனால் கம்பீருக்கு எந்த பாதிப்பும் இல்லை. நெல்லின் பந்துவீச்சுதான் மோசமாகப் போனது.

சிறிது சிறிதாக இந்தியாவின் ரன் ரேட் அதிகரித்தது. ஆனால் கம்பீரும் பதானும் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பாளர்களைச் சரியாக எடைபோடவில்லை. பதான் பந்தை கவர் திசைக்குத் தள்ளிவிட்டு ஒரு ரன் எடுக்கப்போனார். ஓடிவந்த ஆண்டாங் பந்தை விக்கெட் கீப்பர் பவுஷரிடம் கொடுக்க கம்பீர் ரன் அவுட் ஆனார்.

நான்காவதாக உள்ளே வந்தவர் சேவாக். இவர் வரும்போது நெல்லும் போத்தாவும்தான் பந்து வீசிக்கொண்டிருந்தனர். இந்தப் பந்துகளை எதிர்கொள்வதில் சேவாகுக்கு எந்த சிரமமும் இல்லை. எளிதாக ரன்கள் பெற்றார். மீண்டும் ஒரு ரன் அவுட் வந்துதான் இந்த ஜோடியைப் பிரித்தது. சேவாக் பந்தை கால்திசையில் தட்டிவிட்டு ஓட, ஆண்டாங் மீண்டும் பந்தை எடுத்து ஸ்டம்பைத் தட்டி பதானை ரன் அவுட்டாக்கினார். பதானின் நெல்லின் பந்தில் நேராக லாங் ஆஃப் மீது அடித்த சிக்ஸ் நினைவில் நிற்கும்!

அடுத்து திராவிட் உள்ளே வந்தார். கொஞ்சம் off-colour. ஆனால் சேவாக் முழு ஃபார்மில்.

ஆண்டாங் பந்தில் திராவிட் ரிடர்ன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஓர் ஓவர் கழிந்து அடுத்த ஆண்டாங் ஓவரில் சேவாகும் யுவராஜ் சிங்கும் மூன்று பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை முடித்துவிட்டனர். சேவாக் 62 பந்துகளில் 77* (11x4).

முதல் ஆட்டத்தில் யுவராஜுக்கும், இரண்டாவது ஆட்டத்தில் பதானுக்கும் ஆட்ட நாயகன் விருதுகள். மூன்றாவது ஆட்டத்தின் நாயகன் மழைதான்!

முதல் ஆட்டம் ஸ்கோர்கார்ட் | இரண்டாம் ஆட்டம் ஸ்கோர்கார்ட்

Friday, November 18, 2005

பெங்களூர் புத்தகக் கண்காட்சி

கடந்த இரு தினங்களும் பெங்களூரில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்.

சென்னையை விட நல்ல அரங்கு வடிவமைப்பு. பேலஸ் மைதானத்தில் செய்யப்பட்டுள்ளது. கரடுமுரடான தரைக்கு அரையடிக்கு மேலாக சமதளமான மேடை. அந்த மேடைக்கு மேலாக உலோகத் தகடுகளாலான மேற்கூரை. அதற்குக் கீழாக துணிகளால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. நல்ல இரும்புக் குழாய்களாலான தாங்கு தூண்கள். 10'x10' அளவிலான ஸ்டால்கள். ஒவ்வொரு ஸ்டாலுக்கும் இடையே ப்ளைவுட்டால் ஆன தடுப்பு. அமைப்பாளர்களே ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் புத்தகத் தட்டுகள். தரையெங்கும் கார்ப்பெட். புழுதி வெளியிலிருந்து வராது.

கண்காட்சி அரங்குக்கு வெளியே உணவு வசதிகள், கழிப்பறை வசதி. தண்ணீர் பிரச்னை இல்லை.

பல மொழிகளிலும் புத்தகம் வெளியிடுபவர்கள் வந்திருந்தனர். ஆனால் ஆங்கிலம்தான் அதிகமாகக் கண்ணுக்குப் பட்டது. கிட்டத்தட்ட 70% ஆங்கிலப் புத்தகங்களை விற்பவர்கள் என்று அனுமானிக்கிறேன். கன்னடப் புத்தக விற்பனையாளர்களை விடத் தமிழ்ப் புத்தக விற்பனையாளர்கள் அதிகமாகக் காட்சியளித்தது ஆச்சரியத்தை வரவழைத்தது. மலையாளத்தில் டிசி புக்ஸ் மட்டும்தான் கண்ணில் பட்டார்கள். தெலுகு புத்தக விற்பனையாளர்கள் நான்கைந்து பேர்கள் இருக்கலாம் என நினைக்கிறேன். சில ஹிந்தி புத்தக விற்பனையாளர்கள் உண்டு.

தமிழ்ப் புத்தகங்கள் கன்னடப் புத்தகங்களை விட அதிகமாக விற்பனையாவதாகக் கேள்விப்பட்டேன். கன்னடப் பதிப்பாளர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும். கன்னடப் பதிப்பாளர்களுக்கு ஸ்டால் வாடகையில் நிறைய சலுகைகளைத் தரலாம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் பதிப்பாளர்கள்/விற்பனையாளர்களுக்கு பிறமொழி விற்பனையாளர்களின் ஸ்டால் கட்டணத்தில் பாதிதான் கட்டணம் என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி ஏதும் பெங்களூர் கண்காட்சியில் இருப்பதாகத் தெரியவில்லை. உறுப்பினர், அல்லாதோர் என்று எல்லொருக்கும் 10x10 ஸ்டாலுக்கு ரூ. 9,000 கட்டணம் என்று நினைக்கிறேன்.

எது எப்படி இருந்தாலும், கூட்டம் வருவது வெகு குறைவுதான். என் கணிப்பின்படி சென்னையில் வரும் கூட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கு கூட பெங்களூர் கண்காட்சிக்கு வருவதில்லை. இது எல்லா விற்பனையாளர்களுக்குமே பிரச்னைதான். சரியான விளம்பரங்கள் செய்யப்படவில்லையோ என்னவோ.

-*-

அடுத்த மாதம் ஹைதராபாதில் (1-10 டிசம்பர்) இதைப்போன்றே ஒரு கண்காட்சி நடக்க உள்ளது. அங்கு ஸ்டால் போடாவிட்டாலும் சென்று பார்த்துவிட்டாவடு வருவேன்.

-*-

இம்முறை காந்தி பற்றி சில புத்தகங்கள் வாங்கினேன். (தேர்ந்தெடுத்த எழுத்துகள் - ஆங்கிலத்தில்). இந்திய விடுதலை வரலாறு பற்றி. சுபாஷ் சந்திர போஸ் பற்றி. புத்தகங்களுக்கு உள்ளே என்ன உள்ளது என்று எழுதாவிட்டாலும் பதிப்பாளர், விலை விவரங்களை பின்னர் தெரிவிக்கிறேன்.

உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவை பல புத்தகங்களை வெளியிடுகின்றன. இவை ஒரு ஸ்டாலில் கிடைக்கின்றன. அங்கு கிடைத்த ஓர் உபயோகமான புத்தகம் பற்றி எழுத ஆசை.

பழைய புத்தகங்கள் சில - வாங்க விரும்பி வாங்காமல் இருந்தவை (பில் கேட்ஸ், லீ அயகோக்கா சுயசரிதைகள்) - குறைந்த விலைக்குக் கிடைத்தன. நல்ல தாளில் (அமிலமில்லாத் தாள்), கெட்டி அட்டையுடன். அவற்றையும் வாங்கினேன்.

-*-

(கிழக்கு பதிப்பகம் ஸ்டால் எண் 188-ல் உள்ளது.)

Monday, November 14, 2005

சேலத்தில் வெடிகுண்டு நாசவேலை?

சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் கென்யா நாட்டு மாணவர்கள் சிலர் வசிக்கும் வீட்டில் ஓரளவுக்குச் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் மனித உயிருக்கு நாசமில்லை; ஆனால் அந்த வீட்டின் முக்கால்வாசிப் பகுதி உடைந்து தூளாகியுள்ளது.

கடந்த மாதத்தில் தமிழகத்தில் இரண்டு வீடுகள் வெடிவிபத்தினால் நாசமடைந்துள்ளன. ஒன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து. மற்றொன்று மாம்பலத்தில் தீபாவளி வெடிகளைச் சட்டவிரோதமாகச் சேர்த்து வைத்திருந்த கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஏற்பட்டது. இரண்டுமே கவனக்குறைவினால் ஏற்பட்டது, சதிவேலை இல்லை.

ஆனால் சேலம் விவகாரம் நிச்சயமாக நாசவேலையாகத்தான் தோன்றுகிறது. வெளிநாட்டு மாணவர்கள் தங்கியுள்ள இடம் என்பதால் ஒருவேளை அந்த நாட்டில் நிகழும் அரசியல்/பிற விவகாரங்களின் தொடர்ச்சியாகவும் இது இருக்கலாம். அல்லது வேறு என்ன விவகாரமாக இருக்குமோ, தெரியவில்லை.

(செய்தியை சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்த்தேன்.)

கருத்துச் சுதந்தரம்

ரவி ஸ்ரீனிவாஸ் தனது பதிவில் 'கருத்து' என்று புதிய அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் அதில் இந்திய வரைபடம் தவறாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் மத்திய அமைச்சர் ஒருவரது மகன் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனம் இப்படித் தவறான வரைபடத்தை வெளியிடலாமா என்று கேட்டிருந்தார்.

மேற்படி இணையத்தளத்தில் யார் என்ன என்ற தகவல் முழுவதாகக் கிடைக்கவில்லை, ஆனால் இன்று தி ஹிந்துவில் வந்த செய்தியில் மேற்படி விவாத மேடை முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள், நன்கு அறியப்பட்ட கவிஞர் கனிமொழியும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் இணைந்து உருவாக்கியுள்ள மேடை என்று தெரிய வந்தது.

வரைபடம் பற்றி எனக்கு அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை. சிறு பிழை, சரி செய்து கொள்ளலாம்.

ஆனால் மற்றபடி இந்தக் "கருத்துச் சுதந்திர" இணைய விவாத மேடையில் என்ன புதுமை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. யார் வேண்டுமானாலும் இணைய விவாத மேடைகளை அமைக்கலாம். Forumhub எனப்படும் மன்ற மையம் மிகவும் பிரசித்தமானது. யாஹூ குழுமங்கள் பலவும் - மரத்தடி, ராயர் காபி கிளப், தமிழ் உலகம், அகத்தியம், இன்ன பல - பல வருடங்களாகவே நடந்து வருகின்றன. முத்தமிழ் மன்றம் என்ற ஒரு விவாத மேடை உள்ளது.

இன்னமும் எத்தனை எத்தனையோ எனக்குத் தெரியாத விவாத மேடைகள் இருக்கலாம். Soc.culture.tamil பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழ் சார்ந்த விஷயங்களுக்கான விவாத மேடையாக இருந்து வந்திருக்கிறது. இவையனைத்திலும் கருத்துச் சுதந்தரம் இருந்து வந்துள்ளது. சிலவற்றில் மட்டுறுத்தல் இருந்துள்ளது, சில மட்டற்ற மேடையாக இருந்துள்ளன.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம், கனிமொழி ஆரம்பித்திருக்கும் விவாத மேடையில் என்ன விசேஷம்? நான் பார்த்த அளவில் ஒன்றுமில்லை. தொழில்நுட்ப அளவில் வெகு சாதாரணம். அபத்தமான சில பதிவுகளே அங்கு காணப்படுகின்றன. மேடையைத் தொடங்கியுள்ளவர்கள் தாங்களாக ஒன்றுமே எழுதவில்லை - இதுவரையில். கருத்துகள் அனைத்துக்கும் எழுதியவர்களே பொறுப்பு என்கிறார்கள்.
"குறிப்பு: தனிப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் எத்தகைய கருத்துக்கும் விமர்சனத்துக்கும் இந்த கருத்து மேடை - இயக்கம் பொறுப்பல்ல. எழுதுபவர்கள் தனிப்பட்ட சுதந்திரமான கருத்தை சுதந்திரமாக அவர்கள் சொந்த பொறுப்பிலே வெளியிடுகிறார்கள்."
ஆனால் இந்திய IT Act, 2000 படி இந்த வாதம் செல்லுபடியாகாது. பிரச்னை ஒன்று ஏற்படுமானால், விவாத மேடையை அமைத்துக்கொடுத்தவர்களும் மானநஷ்ட, இன்னபிற குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். விவாத மேடையில் சட்டத்துக்குப் புறம்பானவற்றைப் பற்றிப் பேசுவது (உ.ம்: நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை, பயங்கரவாதம் etc.), சிலர் ஒன்றுசேர்ந்து சட்டவிரோதச் செயல்களைச் செய்வது பற்றி ஆலோசிப்பது (உ.ம்: பஸ்களை எரிப்பது பற்றியோ, ஒருவரைக் கொலை செய்வது பற்றியோ, ஒரு வங்கியைக் கொள்ளையடிப்பது பற்றியோ), வேண்டுமென்றே ஒருவரை அவமானப்படுத்துவது (defamation) போன்ற பலவும் IT Act, 2000 படி குற்றமாகும்.

அதுவும் இந்தக் குற்றங்கள் நடந்தால் விவாத மேடை நிறுவனர்கள் அதைத் தடுக்க முயற்சி செய்யாமலிருந்தால் விவாத மேடை நிறுவனர்கள் தவறு இழைத்தவர்கள் ஆவார்கள். IT Act, 2000, செக்ஷன் 85 படி:
Offences by Companies

(1) Where a person committing a contravention of any of the provisions of this Act or of any rule, direction or order made thereunder is a company, every person who, at the time the contravention was committed, was in charge of, and was responsible to, the company for the conduct of business of the company as well as the company, shall be guilty of the contravention and shall be liable to be proceeded against and punished accordingly:

Provided that nothing contained in this sub-section shall render any such person liable to punishment if he proves that the contravention took place without his knowledge or that he exercised all due diligence to prevent such contravention.

(2) Notwithstanding anything contained in sub-section (1), where a contravention of any of the provisions of this Act or of any rule, direction or order made thereunder has been committed by a company and it is proved that the contravention has taken place with the consent or connivance of, or is attributable to any neglect on the part of, any director, manager, secretary or other officer of the company, such director, manager, secretary or other officer shall also be deemed to be guilty of the contravention and shall be liable to be proceeded against and punished accordingly.

Explanation - For the purposes of this section
(i) "company" means any body corporate and includes a firm or other association of individuals; and
(ii) "director", in relation to a firm, means a partner in the firm
தி ஹிந்து செய்தியின்படி விழாவின்போது பேசிய எழுத்தாளர் சுஜாதா "முழுமையான கருத்துச் சுதந்தரம் இருக்க முடியாது என்றும் விவாதங்களை, தேவைக்கேற்றவாறு தணிக்கை செய்வது அவசியம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

என் கணிப்பில் இந்த விவாத மேடைக்கோ, இதைப்போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பிற விவாத மேடைகளுக்கோ அவசியமே இல்லை. இவை எவையுமே உபயோகமாக எதையும் சாதிக்கப்போவதில்லை. வலைப்பதிவுகள் இந்த விவாத மேடைகளை விட உயர்தரமான தொழில்நுட்பத்தை உடையவை. அதற்கும் மேலாக வலைப்பதிவுகள் விவாத மேடைகளை விட வலுவான சமூக அமைப்பு கொண்டவை. அதனால் நாளடைவில் விவாத மேடைகள் காணாமல் போய்விடும். தணிக்கையற்ற விவாத மேடைகளை நடத்த முடியாது. இது விவாத மேடைகளின் அமைப்பாளர்களுக்குக் கடுமையான அழுத்தத்தைத் தரும். வருமானம் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை என்ற நிலையில் இதுபோன்ற விவாத மேடைகளை அமைத்துத் தருவது பிரயோசனமில்லாத செயல் என்று அவர்களே இதைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

ஆனால் வலைப்பதிவுகளைப் பொருத்தவரையில் அதைச் சரியாகப் பராமரிப்பது வலைப்பதிவுகளை நடத்துபவர்களின் வேலையாகும். எனவே இங்கு ஒவ்வொருவரும் தனக்குத் தானே மானநஷ்டம், இன்னபிற வழக்குகளின் இக்கட்டை நேர்கொள்கிறார்கள்.

[IT Act India 2000, அது இந்தியர்களின் வலைப்பதிவுகளை எவ்வாறு பாதிக்கிறது ஆகியவை பற்றித் தெரிந்துகொள்ள வலைப்பதிவர்கள் அவசியமாகப் படிக்க வேண்டிய ஒரு தளம் இது.]

Sunday, November 13, 2005

பரோடா கிரிக்கெட் ஆட்டம்

இந்தியா எதிர்பார்த்தது போலவே 6-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இலங்கை இந்த ஆட்டத்துக்கு வரும்போதே துவண்டுபோன நிலையில்தான் வந்தது. முரளிதரன் காயங்கள் காரணமாக விளையாடவில்லை. ஜெயசூர்யாவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வந்ததால் அவரையும் அணியில் சேர்க்கவில்லை. இனி நடக்கப்போகும் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அணியின் பந்துவீச்சில் நம்பிக்கையானவர்கள் என்று யாருமே இல்லை. வயதாகும் சமிந்தா வாஸ் சில விக்கெட்டுகளை எடுத்தாலும் நிறைய ரன்கள் தருகிறார். பெர்னாண்டோ, மஹரூஃப், சோய்ஸா ஆகிய யாரிடமும் இந்தியர்களுக்குப் பயமில்லை. சந்தனா, தின்ல்ஷன் போன்ற சுழல்பந்து வீச்சாளர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அதே நேரம் இலங்கை பேட்டிங்கிலும் நிறைய பலவீனங்கள். சங்கக்காரவைத் தவிர அனைவரும் ஒரு மாற்று குறைவாகவே விளையாடுகின்றனர். அட்டபட்டு, ஜெயவர்தனே - இரண்டு பெரும் தூண்கள் - இருவருமே மோசமாக விளையாடி வருகின்றனர். தில்ஷன், ஆர்னால்ட் இருவரும் நன்றாக விளையாடினாலும் தனித்து இந்தியாவைத் தோற்கடிக்கக்கூடிய திறன் படைத்தவர்கள் இல்லை.

இந்திய அணியைப் பார்த்தால் அனைத்து மட்டையாளர்களும் ஒரு முறையாவது ரன்களைக் குவித்துள்ளனர். ஒருவர் தோற்றாலும் பின்னால் விளையாட வரும் யாராவது ரன்னைப் பெறுவார் என்ற நம்பிக்கை அதிகம். எதிர்பார்க்காத இடங்களிலிருந்து கூட (பதான்) ரன்கள் வருகின்றன. பந்துவீச்சிலும் எதிர்பார்த்த அனைவருமே மிக நன்றாக வீசுகின்றனர். கார்த்திக் நிறைய ரன்களைக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை எடுக்கிறார். ஹர்பஜன் சிங் இந்தத் தொடரிலேயே மிகக் குறைவாக ரன்களைக் கொடுக்கிறார். ஆர்.பி.சிங் போன்ற புதுமுகங்கள் அசத்துகிறார்கள்.

பந்துத் தடுப்புக்குப் பெயர்போன இலங்கை இப்பொழுது படுமோசம். வானளாவ அடிக்கப்படும் கேட்ச்களைப் பிடிப்பார்களா என்பது சந்தேகமே. ஒரு ரன் அவுட்டையாவது நேராக ஸ்டம்பை அடித்து வீழ்த்துவதன்மூலம் பெறுவார்களா என்பதும் சந்தேகமே. மாற்றாக, இந்தியா கேட்ச்களைப் பிடிப்பதிலும், ரன் அவுட்களை நிகழ்த்துவதிலும், பந்துகளைத் தடுத்து ரன்களைக் குறைப்பதிலும் நிறைய முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளார்கள்.

அதற்கு மேல் அணித்தலைமை. திராவிட் காண்பிக்கும் தன்னம்பிக்கை அட்டப்பட்டுவிடம் இல்லை. பவர்பிளேயை எப்படிப் பயன்படுத்துவது என்று அட்டபட்டுவுக்குப் புரியவில்லை. திராவிடுக்கோ தொட்டதனைத்தும் பொன்.

இப்படிப்பட்ட நிலையில் இந்தியா ஏழாவது ஆட்டத்தையும் ஜெயிக்கும் என்று எதிர்பார்ப்பதில் ஐயமில்லை.

டாஸில் வென்ற அட்டபட்டு என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தார் என்றுதான் சொல்லவேண்டும். இந்தியா டாஸில் ஜெயித்தால் முதலில் பந்துவீசும் என்று திராவிட் சொன்னார். அட்டபட்டு டாஸில் ஜெயித்ததும் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். திராவிடுக்கு வருத்தம் இல்லை.

இம்முறை பதான், அகர்கர் இருவரும் மிக நன்றாகப் பந்து வீசினார்கள். ரன்கள் கொடுக்கவில்லை. ஆளுக்கு ஒரு விக்கெட்டை எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து பந்து வீச வந்த - அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ள - ஆர்.பி.சிங் பிரமாதமாகப் பந்து வீசினார். தன் ஸ்பெல்லில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். இலங்கையின் முதல் ஐந்து விக்கெட்டுகள் மற்றொரு முறை எளிதாக வீழ்ந்தன. அட்டப்பட்டுவும் ஆர்னால்டும் நன்றாக விளையாடி கடைசியில் நிறைய ரன்கள் சேர்த்தனர். ஆனால் பதான் மீண்டும் வந்து கடைசியில் இருவரையும் அவுட்டாக்கினார். 244 போதாது. 280 கூடப் போதாது.

இந்தியா கடந்த சில ஆட்டங்களில் விளையாடியது போலவே இந்த ஆட்டத்திலும் விளையாடியது. சேவாக் கிடைத்த பந்துகளில் அடித்து நொறுக்கினார். 24 பந்துகளில் 35. அவர் அவுட்டானதும் பதான் தன் சொந்த ஊரில் விளையாட (முதல் மேட்சைப் போலவே மூன்றாவது இடத்தில்) வந்தார். வந்தது முதற்கொண்டே தன் ஊர்க்காரர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே வந்தார். தன் விக்கெட்டை இழக்க பயப்படவேயில்லை. 23 பந்துகளில் 35. பதான் அவுட்டானதும், அதுவரையில் அமைதியாக இருந்த டெண்டுல்கர் அடித்து விளையாடினார். 48 பந்துகளில் 39. தோனியும் காயிஃபும் விளையாட அணி சேர்ந்த போது இந்தியாவுக்குத் தேவை 130 ரன்கள். ஆனால் எக்கச்சக்க ஓவர்கள் பாக்கி (35 ஓவர்கள்). தேவை ஓவருக்கு 3.7 ரன்கள்தான். இருவரும் மிகவும் அமைதியாக, எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் ரன்கள் பெற்றனர்.

தோனி இதுபோல விளையாடுவது இது இரண்டாவது முறை. காயிஃப் அவுட்டாகும்போது இந்தியாவுக்குத் தேவை 100 ரன்களுக்கும் குறைவு. இன்னமும் 28 ஓவர்கள் இருந்தன. அடுத்து திராவிட் வந்தார். அவர் யுவராஜ் சிங்கை அனுப்பியிருக்கக் கூடும். ஆனால் ஒருவேளை சிறிய பயம் இருந்திருக்கலாம்.

திராவிடும் தோனியும் எளிதாக, வேண்டிய ரன்களை வேகமாகவே எடுத்தனர். தோனி 40 ரன்களைத் தாண்டியவுடன் இரண்டு கியர்கள் மேலே சென்று ஆறு, நான்கு என்று கொண்டாடினார். சீக்கிரமே அரை சதத்தைத் தாண்டினார். 73 பந்துகளில் 80 ரன்கள். இந்தியா 240ஐத் தொட்டுவிட்டது. ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடிக்க நினைத்தவர் எல்லைக்கோட்டுக்கருகில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். உள்ளே வந்த யுவராஜ் சிங்குக்கு ஒரு பந்தைக்குடச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. திராவிட் நான்கு ரன்களை அடித்து ஆட்டத்தை முடித்தார். இந்தியாவின் வெற்றி 40வது ஓவரிலேயே வந்துவிட்டது.

இலங்கை அவ்வளவு மோசமான அணியில்லை. ஆனால் இந்தியாவின் விளையாட்டு யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்த நிலையை கடந்த ஏழு ஆட்டங்களிலுமே எட்டியிருந்தது.

இது உண்மையா இல்லையா என்பது அடுத்த வாரம் முதல் தொடங்க இருக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டிகளின்போது தெரிய வரும்.

ஸ்கோர்கார்ட்
வீடியோ ஸ்கோர்கார்ட்

Friday, November 11, 2005

ராஜ்கோட் கிரிக்கெட் ஆட்டம்

இந்தியா தொடர்ந்து அணியில் மாற்றங்களைச் செய்தது. இம்முறை திராவிட் விளையாடவில்லை. சேவாக் அணித்தலைவர். வேணுகோபால ராவுக்கு பதில் காயிஃப் உள்ளே வந்தார். சேவாக் டாஸில் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். ராஜ்கோட் ஆடுகளம் நிறைய ரன்கள் பெற வசதியானது, முதலில் ஆடும் அணி குறைந்தது 270-280 ரன்களாவது பெறும் என்று கருத்து நிலவியது.

இந்தியா பதான், ஸ்ரீசந்த், ஆர்.பி.சிங் ஆகியோருடன் பந்து வீச்சைத் தொடங்கியது. பதான், ஸ்ரீசந்த் இருவருமே பந்து வீச்சைக் கட்டுக்குள் கொண்டுவரத் தடுமாறினார்கள். இதனால் இலங்கை அணி ரன்கள் பெறுவது கடினமாக இல்லை. முதல் பத்து ஓவர்களில் இலங்கை 55/1 என்ற கணக்கில் இருந்தது. கிடைத்த ஒரு விக்கெட் ஜெயசூரியாவுடையது. வலது கைப் பந்து வீச்சாளர் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வரப் பந்து வீசினால் ஜெயசூரியா தடுமாறுகிறார் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் ஸ்ரீசந்த் தொடக்கம் முதற்கொண்டே இதனைச் செய்யவில்லை. கடைசியில் ரவுண்ட் தி விக்கெட் வந்து பந்து வீசிய உடனேயே விக்கெட் விழுந்தது. அகலம் குறைவான பந்தை வெட்டியாட முயற்சி செய்து, முடியாமல் உள்விளிம்பில் பட்டு தோனியின் வலது புறத்தில் கேட்ச் சென்றது. அதை அழகாகக் கீழே விழுந்து பிடித்தார் தோனி. 11வது ஓவரில் பதான் வீசிய பந்தை புல் செய்ய முயற்சி செய்த சங்கக்கார அதன் உயரத்தைக் கணிக்காமல் தூக்கி அடித்தார். மிட் ஆனிலிருந்து ஓடி வந்த டெண்டுல்கர் மிட் விக்கெட்டில் கேட்ச் பிடித்தார். அடுத்த ஓவரிலேயே - ஆர்.பி.சிங்கின் முதல் ஓவர் - நல்ல அளவில் சட்டென்று எழும்பி வந்த ஒரு பந்தில் உபுல் தரங்கா தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 57/3.

அதன்பிறகு இலங்கை ஆட்டத்திலிருந்து முற்றிலுமாக விலக வேண்டி வந்தது. கார்த்திக் வீசிய முதல் பந்திலேயே (17வது ஓவர்) ஜெயவர்தனே முன்காலில் வந்து தடுத்தாட முயன்றார். ஆனால் பந்து ஸ்பின் ஆகி அவரை ஏமாற்றியது. தோனி அழகான ஸ்டம்பிங்கைச் செய்தார். அதற்கடுத்த ஓவரில் ஆர்.பி.சிங் கேப்டன் அட்டபட்டுவை மிட் ஆனில் நின்றிருந்த சேவாகிடம் பிடி கொடுக்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார். 83/5.

அஹமதாபாதில் இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற தில்ஷன் - ஆர்னால்ட் ஜோடி இங்கும் ரன்களைப் பெற்றன. இந்த நேரத்தில்தான் இந்தியாவின் தடுப்பு வீரர்கள் அற்புதமாக இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர். காயிஃபிடம் தட்டிவிட்டு தில்ஷன் ஒரு ரன் வேகமாக எடுக்கப் போனார். காயிஃப் கவர் திசையில் வேகமாக ஓடிவந்து பந்தை எடுத்து தோனியிடம் எறிய, அவர் ஆர்னால்டை ரன் அவுட் ஆக்கினார். வாஸ் கார்த்திக்கிடம் பவுல்ட் ஆனார். அடுத்து யுவராஜ் சிங் நேரடியாக ஸ்டம்பை எறிந்து தில்ஷனை ரன் அவுட்டாக்கினார். தில்ஷன் ஒருவர்தான் 50க்கு மேல் ரன்களைப் பெற்றிருந்தார்.

ஆர்.பி.சிங் தனது இரண்டாவது ஸ்பெல்லில் மஹரூஃபையும் சந்தனாவையும் அவுட்டாக்கினார். 42.5 ஓவர்களில் இலங்கை 196க்கு ஆல் அவுட் ஆனது. இதற்கு இந்தியாவின் பந்து வீச்சு, குறிப்பாக ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சு, ஹர்பஜனின் ரன்கள் கொடுக்காத கிடுக்கிப்பிடி, இந்தியாவின் அற்புதமான ஃபீல்டிங் அத்தனையும் துணைபுரிந்தது. இலங்கை அணியின் மோசமான ஃபார்மும் ஒரு காரணம்தான்.

டெண்டுல்கரும் கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கினர். கம்பீர்தான் மனதைக் கவர்ந்தார். வேகமாக ரன்கள் சேர்த்தார். ஆனால் பெர்னாண்டோவின் மெதுவான பந்தைச் சரியாகக் கணிக்காமல் உள்விளிம்பில் பட்டு பவுல்ட் ஆனார். அதே போன்ற ஒரு மெதுவான பந்தால்தான் டெண்டுல்கரும் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆடுகளம் எந்த விதத்திலும் பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவாக இல்லை. சந்தனா நல்ல லெக் ஸ்பின்னர் ஒன்றின் மூலம் சேவாகை ஏமாற்றி கவரில் நின்ற தில்ஷன் மூலமாக அவுட்டாக்கினார்.

அதைத் தொடர்ந்து உள்ளே வந்த யுவராஜ் சிங் காயிஃபுடன் ஜோடி சேர்ந்து அற்புதமாக விளையாடினார். சுழல்பந்து, வேகப்பந்து என்று எதையும் பொருட்படுத்தாமல் ரன்கள் பெற்றார். இறுதியில் நிறைய சிக்ஸ் மழையும் இருந்தது. காயிஃப் ஒரு பக்கம் நின்று விக்கெட்டுகள் விழாமல் கவனித்துக்கொள்ள, யுவராஜ் தடையின்றி ஆடினார். தனது அரை சதத்தை 48வது பந்தில் பெற்றார். (6x4, 2x6). 67 பந்துகளில் 79 ரன்களைப் பெற்று இந்தியாவுக்கு எளிதான ஒரு வெற்றியைத் தேடித்தந்தார் யுவராஜ் சிங். காயிஃப் 71 பந்துகளில் 38 ரன்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆர்.பி.சிங் ஆட்ட நாயகன் என்று அறிவிக்கப்பட்டார். எனக்கு இவரது பந்து வீச்சு மிகவும் பிடித்திருக்கிறது. பதானைப் போல side-on-action அல்ல இவருடையது. Front-on-action. இதனால் ஸ்விங் குறைவுதான் என்றாலும் இவரால் பந்தை நன்கு எழும்ப வைக்க முடிகிறது. ஸ்ரீசந்தை விட வேகம் குறைவாக இருந்தாலும் பந்து அதிகமாக எழும்புவதாலும், நல்ல control இருப்பதாலும் இவருக்கே விக்கெட்டுகளும் அதிகம் கிடைக்கும், ரன்களும் குறைவாகக் கொடுப்பார். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஸ்ரீசந்துக்கு டெஸ்ட் வாய்ப்புகள் இப்பொழுதைக்குக் கிடைக்காது.

யுவராஜ் பேட்டிங் ஃபார்முக்குத் திரும்ப வந்திருப்பது நல்ல விஷயம். சேவாக்தான் இந்தத் தொடரிலேயே அதிகமாக ஒன்றும் செய்யாதவர். டெண்டுல்கரும் எனக்கு ஏமாற்றத்தையே தந்தார். நாளைய ஆட்டத்தில் யாரை இந்தியா நிறுத்தி வைக்கப்போகிறது என்பது கஷ்டமான விஷயம்தான். திராவிட் விளையாடுவார் என்று நினைக்கிறேன். சேவாக், டெண்டுல்கர் இருவரும் விளையாட வேண்டும். காயிஃப், யுவராஜ் இருவருக்கும் வாய்ப்புகள் தரவேண்டும். தோனி விக்கெட் கீப்பிங் செய்வதால் தேவைப்படுவார். ஹர்பஜன், பதான், ஆர்.பி.சிங், அகர்கார், கார்த்திக் ஐவரும் + சுரேஷ் ரெய்னா சூப்பர் சப்.

பார்க்கலாம்.

ஸ்கோர்கார்ட்

வீடியோ ஸ்கோர்கார்ட்

சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன?

(நான் ஆங்கிலத்தில் எழுதிய பதிவின் சுருக்கமான தமிழ் வடிவம்)

இரண்டு நாள்களுக்கு முன்னர் வெளியான செய்தியின்படி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தான் சன் டிவி குழுமத்தில் வைத்திருந்த 20% பங்கை விற்றுவிட்டார் என்றும் அதிலிருந்து கிடைத்த பணத்திலிருந்து ரூ. 10 கோடியை கருணாநிதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் என்றும் கருணாநிதி அதிலிருந்து ரூ. 5 கோடிக்கு ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தி தமிழ் வளர்ச்சிக்கும் பணத்தேவை உள்ளவர்களுக்கு தர்மமாகவும் தர முடிவு செய்துள்ளார் என்றும் தெரிய வந்தது.

கருணாநிதி ஏற்கெனவே தனது புத்தக ராயல்டியை வைத்து திமுக அறக்கட்டளை மூலமாக மக்களுக்கு உதவி செய்கிறார். அத்துடன் தான் கடைசியாக திரைக்கதை வசனம் எழுதிய இரண்டு படங்களின் பணத்தை தமிழக முதல்வர் சுனாமி நிதிக்காகவும் வழங்கியுள்ளார். எல்லாமே நல்ல செயல்கள். பாராட்டப்பட வேண்டியவை.

இந்தப் பதிவில் நான் சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன என்ற என் யூகத்தை முன்வைக்கிறேன்.

சன் டிவி குழுமம் தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகை, செய்தித்தாள், கேபிள் தொலைக்காட்சிச் சேவை ஆகியவற்றை வழங்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இணையாக இந்தியாவில் உள்ள - பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட - நிறுவனம் ஜீ டெலிஃபில்ம்ஸ் (Zee Telefilms). இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருப்பதால் இதனது ஆண்டு வருமானம், நிகர லாபம், பங்கின் விலை, எனவே நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Capitalization) ஆகியவை என்ன என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.

நிறுவனங்களைப் பொருத்தவரையில் P/E விகிதம் என்று ஓர் எண் உண்டு. ஒரு நிறுவனத்தின் சந்தை விலை பங்குக்கு எவ்வளவு, ஒரு பங்குக்கான லாபம் எவ்வளவு என்று கண்டறிந்து அவற்றுக்கிடையேயான விகிதமே P/E = Price/Earning.

ஜீ டெலிஃபில்ம்ஸை எடுத்துக்கொண்டால் அதன் 2004-05 நிதியாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ. 1,360 கோடி. நிகர லாபம் ரூ. 310 கோடி. மொத்தப் பங்குகள் 41.25 கோடி. எனவே ஒரு பங்கு ஈட்டிய லாபம் ரூ. 7.6. ஒரு பங்கின் விலை (31 மார்ச் 2005-ல்) = ரூ. 139 (குத்துமதிப்பாக). எனவே P/E = 139/7.6 = 18.3

இன்றைய தேதியில் ஜீயின் பங்குகள் ரூ. 150ஐத் தாண்டியுள்ளன. ஆனால் நிகழும் நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களின் ஜீயின் நிகர லாபம் சற்றே குறைந்துள்ளது. இன்ரைய தேதியில் P/E கிட்டத்தட்ட 20ஐத் தொடும். சன் டிவி குழுமத்துக்கும் P/E 20 என்றே வைத்துக்கொள்ளலாம்.

அதே போல சென்ற நிதியாண்டின் கணக்கை வைத்து ஜீயின் லாப விகிதம் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்போம். மொத்த வருமானம் ரூ. 1,360 கோடி, லாபம் ரூ. 310 கோடி என்றால் லாப விகிதம் = 310/1360 = 22%

அடுத்து சன் டிவி குழுமத்தின் ஆண்டு லாபம் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்போம். 2002-03 நிதியாண்டுக் கணக்குப்படி சன் குழுமத்தின் மொத்த வருமானம் ரூ. 224.43 கோடி. 2004-05 நிதியாண்டில் அவர்களது ஏழு சானல்களின் வருமானம் மட்டுமே ரூ. 546 கோடிகள் என்று கணிக்கிறார்கள். நடப்பு நிதியாண்டில் இந்த வருமானம் இன்னமும் மேலே செல்லும். மற்ற சானல்கள், ரேடியோ, செய்தித்தாள், குங்குமம், SCV என்று எல்லாவற்றையும் கணக்கில் எடுத்தால் ஒரு யூகமாக சன் குழுமத்தின் ஆண்டு வருமானம் நடப்பு நிதியாண்டில் ரூ. 700 கோடியையாவது எட்டும் என்று கருதலாம்.

அடுத்து லாப விகிதம். சன் டிவி செயல்படும் இடங்களில் ஜீ டெலிஃபில்ம்ஸ் அளவுக்கு செலவுகள் இருக்காது. மேலும் ஹிந்தித் தொலைக்காட்சி சானல்கள் போடும் சண்டைகள் போல இங்கு கிடையாது. எனவே சன் குழுமத்தின் லாப விகிதம் 28%ஆவது இருக்கும் என்று யூகிக்கலாம். சன்னின் குறைந்த பட்ச லாபம் நடப்பு நிதியாண்டில் ரூ. 150 கோடியாவது இருக்கும். அப்படியானால் சன் குழுமத்தின் சந்தை மதிப்பு குறைந்தது ரூ. 3,000 கோடி.

இதில் தயாளு அம்மாளின் 20% பங்கு என்றால் அதற்கான மதிப்பு ரூ. 600 கோடியாவது இருக்க வேண்டும்.

ஆனால் சன் குழுமத்தில் பங்குதாரராகச் சேரும்போது சில கால் ஆப்ஷன்களை, புட் ஆப்ஷன்களை பங்குதாரர் ஒப்பந்தத்தில் வைத்திருந்திருக்கலாம். (இதுபற்றிய சில தகவல்களை தமிழ் நிதி தளத்தில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.) அதாவது ஏற்கெனவே இருக்கும் பங்குதாரர்கள் விலகுவதாக இருந்தால் பங்கினை யாருக்கு விற்கலாம், எந்த விலைக்கு விற்கலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்திருக்கலாம். அதனால் உண்மையில் எந்த விலைக்கு தயாளு அம்மாள் விற்பனை செய்தார் என்பது நமக்குத் தெரியாது.

நாளையே சன் டிவி குழுமம் பங்குச்சந்தைக்கு வருகிறதென்றான் அதன் சந்தை மதிப்பு கட்டாயமாக ரூ. 3,000 கோடிக்கு மேல்தான் செல்லும் என்பது மட்டும் நிச்சயம்!

Thursday, November 10, 2005

கே.ஆர்.நாராயணன் பற்றிய நினைவுகள்

இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் 11 பேரில் (ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் இருவரைத் தவிர) ஒன்பது பேர் அரசியல்வாதிகள்தான். காங்கிரஸ்காரர்களும் கூட.

இந்த காங்கிரஸ்காரர்களுள் முதல் சிலர் சுதந்தரப் போராட்டத்தில் அல்லது தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள். பின்னால் வந்த சிலர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆதரவாளர்களாக இருந்ததால் மட்டுமே குடியரசுத் தலைவர் பதவியைப் பெற்றவர்கள்.

கே.ஆர்.நாராயணன் இவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார். தொழில்முறை அரசியல்வாதி இல்லை இவர். படிப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறையில் வெகு காலம் பணியாற்றிய சிவில் சர்வண்ட். பல நாடுகளில் இந்தியத் தூதராக இருந்தவர். வெளியுறவுச் செயலராக இருந்தவர். இவரது மனைவி பர்மிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அப்பொழுதைய பிரதமர் நேருவிடம் விசேஷ அனுமதி பெற்றுத்தான் Ma Trint Trint என்பவரை மணம் செய்து கொண்டார் (அவர் பின்னர் தன் பெயரை உஷா என்று மாற்றிக்கொண்டார்) என்றும் இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

Indian Foreign Service-இலிருந்து ஓய்வு பெற்றதும் ஜே.என்.யு துணைவேந்தராக இருந்திருக்கிறார். பின் சில காலம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக. அதையடுத்து அரசியலுக்கு வந்து மூன்று முறை கேரளாவின் ஒட்டப்பாளம் என்ற இடத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறார்.

எனக்கு நினைவு தெரிந்து நான் அவரைக் கவனிக்க ஆரம்பித்தது குடியரசு துணைத்தலைவர் பதவிக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். அப்பொழுது துணைத்தலைவராக இருப்பவர் அடுத்த பதவிக்காலத்தில் தலைவர் பதவிக்குச் செல்வது வாடிக்கையாக இருந்தது. எனவே இவர்தான் அடுத்த ஜனாதிபதி என்று தீர்மானம் செய்திருந்தோம். இவர் குடியரசுத் தலைவர் பதவிக்காக நிற்கும்போது இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் டி.என்.சேஷன். சேஷன் 1991-96 தேர்தல் கமிஷனராக இருந்து மிகப் பெரிய பெயர் பெற்றிருந்தார். எனவே இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல் சுவாரசியமாக இருந்தது.

ஆனால் கே.ஆர்.நாராயணனுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு அவருக்கு இருந்தது. பிற அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தன. சேஷனுக்கு சிவ சேனா மட்டும்தான் வெளிப்படையான ஆதரவு கொடுத்திருந்தது. அதுவுமில்லாமல் சேஷன் கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளின் வெறுப்பையும் சம்பாதித்திருந்தார். நாராயணன் ஒரு non-controversial ஆள் என்பதால் அவரது வெற்றி உறுதியாகியது.

அந்தச் சமயத்தில் ஜனதா தள அரசு ஆட்சியில் இருந்தது. தேவே கவுடா பிரதமர் பதவியிலிருந்து விலகி ஐ.கே.குஜரால் பிரதமராகியிருந்த நேரம் அது. அடுத்த சில வருடங்களுக்கு மைனாரிடி அரசுகள்தான் வாடிக்கை என்று தெரிந்துபோனது. அன்றிலிருந்து இன்றுவரை கூட்டணி அரசுகள்தான் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் சேஷன் குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன நடந்திருக்கும்? சர்வாதிகாரம்தான். ஏதாவது செய்து குட்டையைக் குழப்பியிருப்பார். நல்ல வேளை!

நாராயணன் அதே சமயம் ரப்பர் ஸ்டாம்பாக இல்லை. இன்று வெளியான எல்லா அஞ்சலிக் கட்டுரைகளிலுமே நாராயணன், குஜ்ரால் அரசு உத்தர பிரதேச மாநில அரசைக் கலைக்க விரும்பியதையும், வாஜ்பாய் அரசு பிஹார் மாநில அரசைக் கலைக்க விரும்பியதையும் தடுத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளன. அப்துல் கலாம் இதைக் கவனிப்பது நல்லது.

நாராயணன்தான் முதல் முதலில் தேர்தலில் வாக்களித்த இந்தியக் குடியரசுத் தலைவர். அதை அப்துல் கலாமும் தொடர்கிறார். இனி வரும் குடியரசுத் தலைவர்களும் தொடர்வார்கள் என்றே நம்புவோம்.

நாராயணன் குடியரசு துணைத்தலைவராக இருந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது. தொடர்ந்து நாடெங்கும் கலவரங்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புகள். அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் தொடர்ந்து குஜராத் கலவரங்களும் நிகழ்ந்தன. அப்பொழுது நாராயணன் பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதி ராணுவத்தை உடனே வரவழைக்கச் சொன்னதாகவும் அதற்கு மத்திய அரசு உடனடியாக பதில் எதுவும் சொல்லவில்லை என்றும் பின்னர் நாராயணன் தெரிவித்தார். அந்தக் கடிதத்தை வெளியிட மத்திய அரசும், ராஷ்டிரபதி பவனும் மறுத்துள்ளன. இப்பொழுது நாராயணன் இறந்துவிட்டார். அந்தக் கடிதம் ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படலாம். அதை இனியாவது வெளியிட வாய்ப்புகள் உண்டா என்று பார்க்கவேண்டும்.

நாராயணன் தலித் பின்னணியில் வந்தவர், என்றாலும் அதனை அழுத்திக்கூற விரும்பவில்லை. தலித் என்பதால்தான் அவருக்கு முக்கியமான பதவிகள் கிடைத்தன என்று யாரும் சொல்லிவிடக் கூடாதே என்பதால். அம்பேத்காருக்குப் பிறகு அரசியல் அளவிலும் அறிவுத்தளத்திலும் மிக அதிக சாதனைகளைச் செய்தவர் இவர்.

இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரக் கல்வி பயின்றவர். 1954இல் டில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பாடம் நடத்தியிருக்கிறார். ஆனால் பொருளாதாரம் பற்றி இவர் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை.

இவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் முக்கியமானது. தி ஹிந்து, விக்கிபீடியா இரண்டிலிருந்து ஒட்டவைத்துச் சொல்கிறேன். இவர் திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலத்தின் முதலாவதாக வந்திருக்கிறார். அப்படி வரும் மாணவருக்கு அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை உடனடியாக வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. ஆனால் திருவாங்கூர் திவான் சர். சி.பி.ராமசாமி அய்யரை ஒருமுறை இவர் பார்க்கப்போனபோது கதர் ஜிப்பாவும் கையில் ஒரு பளபளா கடிகாரமும் அணிந்து சென்றிருக்கிறார். ஒரு தலித் சில்க் ஜிப்பாவும் (கதரை சில்க் என்று நினைத்து) தங்கக் கடிகாரமும் அணிவதா என்ற கடுப்பில் திவான் நாராயணனுக்கு வேலை இல்லை என்று சொல்லிவிட்டாராம்! இதனால், தனது எம்.ஏ சான்றிதழைக் கூட வாங்கப்போவதில்லை என்று கோபத்துடன் நாராயணன் சென்னை வந்து தி ஹிந்து நாளிதழில் இதழாளராகச் சேர்ந்திருக்கிறார். அதன்பின் மும்பை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சில காலம் வேலை செய்து, பிறகு ஜே.ஆர்.டி டாடா ஸ்காலர்ஷிப்பில் லண்டன் சென்று பொருளாதாரம் படித்திருக்கிறார்.

இவர் குடியரசுத் தலைவரான பிறகு திருவாங்கூர் பல்கலைக்கழகம் இவரது சான்றிதழை இவருக்குக் கொடுக்க விரும்பியதும், அப்பொழுதுதான் அதைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

ஏழைமை, சாதியம் ஆகியவற்றைத் தாண்டி இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த நாராயணனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

விக்கிபீடியா
தி ஹிந்து அஞ்சலி

Wednesday, November 09, 2005

நிலமெல்லாம் ரத்தம் முன்பதிவு

நிலமெல்லாம் ரத்தம்/Israel-Palentine/இஸ்ரேல்-பால்ஸ்தீன்


மேலே உள்ள சுட்டியைத் தொடர்ந்து இணையம் மூலமாகவும் ஆர்டர் செய்யலாம்.

இக்பால் (2005, ஹிந்தி)

கிரிக்கெட் பற்றி லகானுக்கு அடுத்து வந்திருக்கும் இந்திய சினிமா. நாகேஷ் குகுனூரின் நெறியாள்கையில் வந்த படம் என்பதால் மோசமாக இருக்காது என்று தோன்றியது. படத்தை வெளியிடுவதற்கு முன்னான ரீடிஃப் செவ்வி ஒன்றில் நாகேஷ், "You don't mess with cricket in India" என்று கூடச் சொல்லியிருந்தார்.

ஆனால், பிற இந்தியப் படங்களைப் போலவே இது ஒரு சாதாரண ரொமாண்டிக் படம். உணர்வுகளுக்குத்தான் முக்கியத்துவம். அறிவார்த்தமாக, நிகழ்வுகளும் நிலைமைகளும் சரியாக இருக்கின்றனவா என்று பார்க்கத் தேவையில்லை. சினிமாவில் நாயகனின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் நடந்தாக வேண்டும்... நிஜ வாழ்வில் அவை நடப்பது மிகவும் கடினம், நடக்கவே முடியாது என்றாலும் கூட.

இக்பால் (ஷ்ரேயாஸ் தல்படே) காது கேளாத, வாய் பேசாத இளைஞர். இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் போலவே இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட வேண்டும் என்ற கனவுகளைச் சுமந்து வருபவன். கிராமத்தில் தானாகவே வேகப்பந்து வீசப் பழகுகிறான். ஆனால் ஒரு பயிற்சியாளர் இல்லாவிட்டால் முன்னேற முடியாது என்ற அளவுக்காவது அவரது தங்கைக்குக் தோன்றுகிறது. தங்கை கதீஜாவும் (ஷ்வேதா பிரசாத்) அம்மாவும் இக்பாலின் கனவுக்கு ஆதரவானவர்கள். ஒரு வில்லன் வேண்டுமே? அப்பா. அவர், இக்பால் தன்னுடன் வயலில் வேலை செய்யவேண்டும் என்று நினைக்கிறார்.

இக்பாலின் வேலை மாடுகளை மேய்ப்பது. எருமைகள் மேயும்போது, குச்சிகளை ஸ்டம்பாக நட்டு எங்கேயோ கிடைத்த கிரிக்கெட் பந்தை வைத்து வேகமாகப் பந்து வீசி குச்சிகளைச் சாய்ப்பான். கதீஜா இது போதாது என்று அருகில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடெமியின் பயிற்சியாளரை சம்மதிக்க வைத்து இக்பாலுக்கு அங்கு இடம் வாங்கித் தருகிறாள். ஆனால் கதீஜாவும் கூட உதவிக்கு இருக்க வேண்டும். பயிற்சியாளர் பேசுவதை இக்பாலால் புரிந்து கொள்ள முடியாது. இக்பாலுக்கும் பேச முடியாது. பயிற்சியில் மற்றுமொரு வில்லன் - கமல். இக்பாலைப் பிடிக்காத ஒரு பணக்கார இளைஞன். பயிற்சியின்போது இக்பாலின் பந்துகளை முதலில் அடித்து விளாசுகிறான். இக்பால் ஸ்ட்ம்பை நோக்கி மட்டுமே பந்து வீசத் தெரிந்தவன். கதீஜாவையும் கேலி செய்கின்றான். கதீஜா சைகை மொழியில் சொன்னதை வைத்து இக்பால் வில்லன் கமல் முகத்தில் பந்தை வீசிக் காயப்படுத்துகிறான்.

ஆனால் கமலின் தந்தைதான் அந்த கிரிக்கெட் ஆகடெமி நடத்துவதற்கான பணத்தைத் தருபவர். அதனால் இக்பால் வெளியேற்றப்படுகிறான். கதீஜா தான் சைகை மொழியில் "pace" என்னும் சொல்லுக்கு பதில் "face" என்னும் சொல்லைப் பயன்படுத்தியதால் இக்பால் தவறாக முகத்தை நோக்கிப் பந்துவீசியதாகச் சொல்லி மன்னிப்பு கேட்டாலும் இக்பாலை இனியும் அங்கு சேர்த்துக்கொள்ள முடியாது என்று கோச் முடிவெடுக்கிறார். அவரது கைகள் திருகப்பட்டிருக்கின்றன.

பயிற்சியாளர் கிடைத்ததும் வந்த சந்தோஷம் இந்த நிகழ்ச்சியால் முற்றிலுமாக வடிந்து விடுகிறது. கனவுகள் முறிந்ததால் தோல்வியில் துவளும் இக்பால் கோபத்தில் தான் அதுவரையில் சேர்த்துவைத்திருக்கும் கிரிக்கெட் இதழ்களை நெருப்பில் கொளுத்துகிறான். அப்படிக் கொளுத்தும்போது ஓர் இதழில் கண்ணில் படுகிறது ஒரு புகைப்படம். அது மோஹித்தின் புகைப்படம். மோஹித் (நசீருத்தீன் ஷா) அந்த கிராமத்தில் இருக்கும் குடிகாரர். அவர் ஒரு காலத்தில் இதழ்களில் படம் வருமாறு விளையாடிய கிரிக்கெட் வீரரா? இக்பாலுக்கு மீண்டும் நம்பிக்கை.

மோஹி்த்தைத் துரத்தத் துரத்தி, அவரை மீண்டும் கிரிக்கெட் விளையாட்டுக்கு, தனக்குப் பயிற்சியளிக்க அழைத்து வருகிறான் இக்பால். மோஹித் இக்பாலுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க, கதீஜா மோஹித்துக்கு சைகை மொழிப் பயிற்சி அளிக்கிறாள். இக்பாலின் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்து விடுகிறது. தன் பையன் கிரிக்கெட் விளையாடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார் அவர். அவனுடைய புது ஷூவை நெருப்பில் போடுகிறார். ஆனாலும் அவருக்குத் தெரியாமல் பயிற்சி தொடருகிறது. ஹைதராபாத் ரஞ்சி அணிக்கான தேர்வுக்கு மோஹித் இக்பாலை அழைத்துக் கொண்டு செல்கிறார். இக்பாலின் தாயும் தங்கையும், தந்தையிடம் பொய் சொல்லிவிட்டு தேர்வு நடக்கும் இடத்துக்குச் செல்கின்றனர்.

மோஹித் கெஞ்சி, காலில் விழுந்து மதிய உணவு இடைவேளையின்போது இக்பால் பந்து விசுவதை அணித்தேர்வாளர்கள் பார்க்குமாறு ஏற்பாடு செய்கிறார். ஹைதராபாத் அணிக்கு கமல் தேர்வு செய்யப்படுகிறார். தேர்வுக்குழுவில் குருஜி (கிரீஷ் கர்னாட்) என்பவர் இருக்கிறார். இவருக்கும் மோஹித்துக்கும் முன்பே பழக்கம். மோஹித்தை அணியில் சேர்க்காமல் பணம் வாங்கிக்கொண்டு வேறு ஒருவரை அணியில் சேர்த்திருப்பார் குருஜி. இக்பாலுக்கு ஹைதராபாத் அணியில் இடமில்லை என்கிறார் குருஜி. ஆனால் மற்றொரு ரஞ்சி அணியான (ஆனால் சற்றே மோசமான அணியான) ஆந்திராவுக்காக விளையாட விருப்பமா என்று ஆந்திரா செலக்டர் ஒருவர் கேட்கிறார். சந்தோஷம்!

இக்பாலின் தந்தைக்கு விஷயம் தெரிந்து விடுகிறது. அதனால் இக்பால் வீடு திரும்புவதில்லை. மோஹித்துடன் ஆந்திரா ரஞ்சி அணிக்கு விளையாட ஊர் ஊராகச் சுற்றுகிறார். ஹீரோ வில்லன்களைப் புரட்டுப்புரட்டி அடிப்பதைப் போல இக்பால் ஆட்டத்துக்கு ஆட்டம் விக்கெட்டுகளாகப் பெற்றுத் தள்ளுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் இக்பாலின் பெயர்தான். நேராக ரஞ்சி இறுதி ஆட்டத்துக்குப் போய்ச் சேருகிறார்கள். அங்கு யாரைச் சந்திக்கிறார்கள்? ஹைதராபாதை.

ஹைதராபாதை முதல் இன்னிங்ஸில் சின்னாபின்னம் செய்கிறான் இக்பால். ஆனால் குருஜி அவனைச் சந்தித்து இரண்டாவது இன்னிங்ஸில் கமலை நிறைய ரன்கள் பெறவைத்தால் கமல் நிச்சயமாக இந்திய அணிக்குச் செல்வார். ஏனெனில் இப்பொழுது இந்திய அணிக்குத் தேவை பேட்ஸ்மேன்தான் என்கிறார். இப்படி ஆட்டத்தை 'fix' செய்தால் இக்பாலுக்கு ரூ. 25 லட்சம் உண்டு என்கிறார். கடைசி நாள் ஆட்டம், இக்பால் கமலுக்கு லட்டு லட்டாக ஆஃப் சைடில் பந்து வீசுகிறார். பந்தெல்லாம் கவர் திசையில் நான்காகப் பறக்கின்றன. கேப்டன் இக்பாலை மாற்றி வேறு யாரையாவது கொண்டுவர முயன்றாலும் இக்பால் சண்டை போட்டு பந்தைப் பிடுங்கிக்கொண்டு பந்துவீசி மீண்டும் கமலுக்கு ரன்களைத் தருகிறார். உணவு இடைவேளை.

சில நாள்களுக்கு முன்னர் ஒரு Sports Marketing ஆசாமி இக்பாலைச் சந்தித்து தான் அவருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தனக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரையும் தெரியும் என்பதாகவும் சொல்கிறார். அதை நினைவில் வைத்துக்கொண்டு இக்பால் அவரைச் சந்தித்து (இத்தனையும் உணவு இடைவேளைக்குள்!) கபில் தேவை ஆட்டம் நடக்கும் இடத்துக்கு அழைத்து வரச்செய்யுமாறும் சொல்கிறான் (என்று நினைக்கிறேன்).

உணவு இடைவேளைக்குப் பிறகு கமலுக்கு கொஞ்சம் ரன்களைக் கொடுத்துவிட்டு மற்றுமொரு பந்தை வீச (எந்த மாதிரியான பந்து என்று கணிக்க முடியவில்லை), அது வானளாவிய கேட்சாகப் போகிறது; பிடிக்கப்படுகிறது; கமல் அவுட். அதைப் பார்வையிட சரியான நேரத்தில் கபில் தேவ் அங்கே. கபில் தேவ்தான் இந்திய அணியில் செலக்டராம். அவர் மோஹித், இக்பாலிடம் வந்து இந்திய அணிக்கு இப்பொழுதைய தேவை ஒரு பந்து வீச்சாளர்தான், இக்பாலுக்கு வாய்ப்பு உள்ளது என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். குருஜி கபில் தேவை வந்து அழைத்து கமலுக்கு வாய்ப்பு கேட்கும்போது, கபில்தேவ் அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு செல்கிறார்.

இக்பாலின் அப்பா மனம் திருந்தி கடைசியில் இறுதி ஆட்டத்தைப் பார்க்க நேராக வந்திருக்கிறார்.

இக்பால் இந்திய கிரிக்கெட் சட்டையில் களமிறங்கும்போது வானைப்பிளக்கும் கரகோஷம், சத்தம். இக்பாலால்தான் அந்தச் சத்தத்தைக் கேட்க முடியாது.

ஆனால் உணர முடியும்.

சுபம். அத்துடன் படம் முடிகிறது.

சராசரி இந்தியப் படத்தின் மோசமான கதையைப் போலல்லாமல் இருந்தாலும் அடிப்படையில் அதே உணர்வுகள்தான். மாட்டின் பாலைக் கறந்துகொண்டே வானளாவக் கட்டடம் கட்டும் ரஜினிகாந்தின் அண்ணாமலைதான் குகுனூரின் இக்பாலும்.

இக்பால் ஒரு முழு ஆட்டத்திலும் விளையாடாமல் நேராக ரஞ்சி ஆட்டத்தில் போய் விளையாடுவதாகச் சொல்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. இதுதான் நம் அனைவரின் கனவும்கூட. ஆனால் நிஜத்தில்? ஒரு டெண்டுல்கர் எந்த அளவுக்கு எத்தனை ஆயிரம் ஆட்டங்களில் விளையாடிப் பழகியபின் ரஞ்சி ஆட்டம் ஆடச்சென்றார்? இக்பாலுக்கு பந்தை வேகமாக ஸ்டம்பை நோக்கி வீசுவது மட்டும்தான் தெரியும். ஸ்விங், சீம்? ஒருமுறை கூட கோச் மோஹித் இதைப்பற்றியெல்லாம் சொல்லித்தருவதாகத் தெரியவில்லை.

எப்படி இக்பால் கேப்டனிடம் தனக்குத் தேவையான பந்துத் தடுப்பு வியூகத்தை அமைக்கச் சொல்லிக் கேட்பார்? மோஹித் எப்படி அவ்வளவு சீக்கிரமாக சைகைமொழியைக் கற்றார்? சரி, ஆந்திரா அணித்தலைவர் எப்படிக் கற்றார்?

காது கேளாதவரால் கிரிக்கெட் விளையாடுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பந்து வீசுவதைத் தவிர பேட்டிங் செய்யும்போது நடுவர் சொல்வது கேட்காது, பந்து தன்னை நெருங்கும் சத்தம் கேட்காது. பந்து மட்டையில் படுவது கேட்காது. மறுபக்கத்தில் இருக்கும் மட்டையாளர் ரன்கள் எடுக்கக் கூப்பிடும் குரல் கேட்காது. ஃபீல்டிங்கில் இருக்கும்போது பந்து தன்னை நோக்கி வருகிறது என்று பிறர் கத்துவது கேட்காது.

கிரிக்கெட் என்றால் ஒரு பந்து வீச்சாளர் வந்து சடசடவென்று பந்துகளை வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது போதும் என்று நினைக்கவைக்கிறது இந்தப் படம். குருஜி இக்பாலுக்கு எப்படி லஞ்சம் கொடுப்பதை விளக்குகிறார் சைகை மொழியில், இக்பால் எப்படி தானாகவே ஓர் ஆட்டோவைப் பிடித்து வெளியே சென்று Sports Marketing ஆசாமியைத் தேடிப்பிடித்து கபில் தேவை அழைத்து வரச்செய்கிறார் என்பது எனக்குப் புரியாத புதிர். வெறும் ரஞ்சி ஆட்டத்தில் விளையாடுபவர்களுக்கு எல்லாம் விளம்பர காண்டிராக்ட்கள் கிடைக்காது. தோனிக்கே இப்பொழுது ஒருநாள் போட்டிகளில் இரண்டு சூப்பர் சதங்களுக்குப் பிறகுதான் endorsement வாய்ப்புகள் வருகின்றன.

ரஞ்சி இறுதி ஆட்டம் என்றால் பொதுவாகவே செலக்டர்கள் அங்கு உட்கார்ந்திருப்பார்கள்.

மேட்ச் பிக்சிங் கொஞ்சம் அபத்தமாக இருக்கிறது. மறுபக்கம் பந்து வீசுபவர்கள், விக்கெட்டை எடுத்தால் என்ன ஆகும்? பிற ஆட்டங்களில் கூட இக்பால் 20 விக்கெட்டுகளை எடுப்பதில்லையே? சில ஆட்டங்களில் மொத்தமாகவே இக்பால் 3 விக்கெட்டுகள் எடுப்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. 25 லட்சம் கொடுத்து ரஞ்சி ஆட்டத்தை பிக்ஸ் செய்வது பைத்தியக்காரத்தனமாக உள்ளது. இக்பாலின் சொந்த கோச் ரஞ்சி ஆட்டத்தின் போது அணிக்கே (அணிக்கு தனி கோச் இருந்தும் கூட) ஐடியா சொல்லித்தருவது, டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது போன்ற பல எக்ஸ்ட்ரா ஊத்தல்களும் உண்டு.

கதையின் பல்வேறு ஓட்டைகளை - முக்கியமாக கிரிக்கெட் தொடர்பான ஓட்டைகளை - மறந்துவிட்டுப் பார்த்தால், படம் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. நடிப்பில் அனைவருமே டாப் கிளாஸ். ஷ்ரேயாஸ் நல்ல ஆக்ஷனுடன் பந்து வீசுகிறார். 'கிரிக்கெட் விளையாடத் தெரிந்த, சரியாகப் பந்து வீசத் தெரிந்தவராகப் பார்த்துத்தான் தேர்ந்தெடுத்தேன்' என்கிறார் நாகேஷ் குகுனூர். Casting பொருத்தவரை 100/100. கேமரா சுமார்தான். இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

காட்சிப்படுத்துதலில் கிரிக்கெட் ஆட்டங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.

படத்தில் பல காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கின்றன. ஷ்ரேயாஸ் கிரிக்கெட் இதழ்களை வைத்துக்கொண்டு கனவு காண்பது, கோபத்தில் அதை எரிப்பது, முகத்தில் ஒருவித புரியாமை கலந்த innocence, தன்னைச் சுற்றிப் பிறர் தன்னைப் பற்றிப் பேசும்போது முகத்தில் காண்பிக்கும் ஒருவித பயம் கலந்த ஆர்வம் இவற்றையெல்லாம் நாகேஷ் மிக நன்றாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

மற்றபடி இந்தியர்களின் வெட்டிக்கனவுகளுக்குத் தீனிபோடும் ஒரு படம். அவ்வளவே.

IMDB database
படத்தின் அதிகாரபூர்வ தளம்

Tuesday, November 08, 2005

தமிழ் திறமூல மென்பொருள்கள் அறிமுகம்

Panacea Dreamweavers Software Private Limited என்னும் நிறுவனம் இன்று சில தமிழ் திறமூல மென்பொருள்களையும் இலவச மென்பொருள்களையும், சென்னையில், இன்று (நவம்பர் 8, 2005) குவாலிடி இன் சபரி, தி.நகரில், இரவு 7.30-8.30 மணி அளவில் நடக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.

முக்கிய விருந்தினர் சிபிஐ (எம்) பொதுச்செயலர் பிரகாஷ் கரத். கலந்து கொள்ளும் பிறர் எம்.ஆனந்தகிருஷ்ணன், தி ஹிந்து என்.ராம், வசந்தி தேவி (மனோன்மனியம் சுந்தரனார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர்), சிபிஐ (எம்) கட்சியின் டி.கே.ரங்கராஜன்.

போய்ப் பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன்.

Monday, November 07, 2005

அஹமதாபாத் ஆட்டம்

இந்தியா தோற்றது. கடைசியாக இலங்கைக்கு ஒரு வெற்றி. ஆனால் இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பக்கத்திலிருந்து பல நல்ல விஷயங்களை என்னால் கவனிக்க முடிந்தது. ஒரு மாறுதலுக்கு அவற்றைப் பற்றி மட்டும்தான் எழுதப்போகிறேன்.

சுருக்கமாக ஆட்டத்தைப் பற்றி. இந்தியா அணியில் மூன்று மாறுதல்களைச் செய்திருந்தது. டெண்டுல்கருக்கு பதிலாக கவுதம் கம்பீர். ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக முரளி கார்த்திக். இர்ஃபான் பதானுக்கு பதிலாக ஆர்.பி.சிங். ஸ்ரீசந்த், சுரேஷ் ரெய்னா அணியில். ஜே.பி.யாதவ் சூப்பர் சப். இலங்கை அணியில் கல்யாணப் பையன் ஜெயவர்தனே மீண்டும்.

இலங்கை டாஸில் வென்று முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இரவு நேரம் பனி அடர்ந்திருக்கும் என்றும் அதனால் இரண்டாம் இன்னிங்ஸில் பந்து வீசுவது கஷ்டமாக இருக்கும் என்றும் கடந்த இரண்டு ஆட்டங்களிலுமே டாஸ் ஜெயிக்கும் அணி பந்து வீசுவது வாடிக்கை. அதைத்தான் இலங்கையும் செய்தது. கம்பீர் பிரமாதமாக ஆரம்பித்தார். கடைசியில் கம்பீர், திராவிட் தவிர யாரும் ரன்கள் பெறவில்லை. இவர்கள் இருவரும் சதமடித்தனர். 285 ரன்களை 50 ஓவர்களில் பெற்றனர். இலங்கை அணிக்காக திலகரத்னே தில்ஷன், ரஸ்ஸல் ஆர்னால்ட் இருவரும் ஆறாவது விக்கெட்டுக்கு அமைதியாக விளையாடி ஆட்டத்தை ஜெயித்துக் கொடுத்தனர்.

எனக்கு இன்றைய இந்தியர்கள் ஆட்டத்தில் பல விஷயங்கள் பிடித்திருந்தன. முதலில் கவுதம் கம்பீரின் ஆட்டம். வெகு காலம் கழித்து ஒருநாள் ஆட்டம் ஆடுகிறார். பயமின்றி விளையாடினார். ஒருமுறை ஹூக் செய்யப்போய் சங்கக்காரவிடம் கேட்ச் கொடுத்தார். விடுபட்டது. அதைத்தவிர வேறெந்தத் தவறுகளும் செய்யவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களை இறங்கி வந்து அடித்தார். டிரைவ், புல், ஹூக், கட் என்று எல்லா ஷாட்களையும் நன்றாகவே விளையாடினார். பந்துக்கு ஒரு ரன்னை விட அதிகமாக அடித்துக்கொண்டிருந்தார்.

அடுத்து திராவிடின் ஆட்டம். நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. நேற்று கடைசிவரை இருந்து மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், கால் நரம்பு இழுத்துக்கொண்டாலும் விடாது ரன்கள் பெற்றார். அவரது முதல் ஸ்டிரெய்ட் டிரைவ், கடைசி புல் (இதன் மூலம் சதத்தைப் பெற்றார்), இரண்டுமே அற்புதம். இந்திய அணியின் பந்துவீச்சின் போது இவர் பங்கேற்கவில்லை. சேவாகை தலைமையேற்க வைத்தார்.

அடுத்து சேவாகின் தலைமை. இந்தியா தோற்றாலும், சேவாக் திறமையாகவே பந்துவீச்சில் மாற்றங்களையும் தடுப்பு வியூகங்களையும் அமைத்தார். அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார் - நடுவர்களுடன் கூட. மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். இந்தியாவின் எதிர்கால கேப்டன் இவர்தான். பந்து வீச்சாளர்களின் அனுபவக் குறைவால் இந்திய அணி தோற்க நேர்ந்தது வேறு விஷயம்.

அடுத்து இந்தியாவின் இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள். ஸ்ரீசந்த், ஆர்.பி.சிங். என்னை மிகவும் கவர்ந்தவர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங். நல்ல வேகம். அத்துடன் நல்ல அணுகுமுறையும் கூட. குட் லென்த், அளவு குறைந்த பந்து இரண்டையும் நன்றாக வீசினார். பந்து நன்றாக எழும்பி வருகிறது. தொடக்கத்தில் ஜெயசூரியா, சங்கக்கார இருவரையுமே தடுமாற வைத்தார். சங்கக்கார விக்கெட் இவருக்குக் கிடைத்திருக்க வேண்டியது. சரியான ஸ்லிப் ஃபீல்டர் இல்லாத காரணத்தால் கம்பீர் கேட்சை விட்டார். ஸ்ரீசந்த், மோசமில்லை. ஆனால் அவ்வப்போது நான்குகளைக் கொடுத்து விடுகிறார். இருவருமே குறைவாகத்தான் ஸ்விங்கைப் பயன்படுத்துகிறார்கள்.

ஏமாற்றம்: முரளி கார்த்திக் இன்னமும் சிறப்பாகப் பந்து வீசியிருக்கலாம். ஹர்பஜன் சிங் இல்லாதது இந்தியாவின் வெற்றியைப் பாதித்தது.

அடுத்து ஃபீல்டிங். இந்தியாவின் பந்துத் தடுப்பு அற்புதமாக இருந்தது. கடந்த பதினைந்து வருடங்களாக இந்தியா விளையாடும் எண்ணற்ற ஆட்டங்களைப் பார்த்திருக்கிறேன். நேற்று போல ஒருநாள் ஆட்டத்தின் இந்தியா இதுவரை ஃபீல்டிங் செய்ததில்லை. சுரேஷ் ரெய்னா ஃபீல்டிங்கை யுவராஜ், காயிஃபை விட ஒருபடி மேலே எடுத்துச் சென்றார். வேணுகோபால ராவ் ஸ்லிப்பின் இரண்டு அற்புதமான கேட்ச்களைப் பிடித்தார். வேணுகோபால ராவ், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் மூவரும் கவர் - பாயிண்ட் திசையில் இணைந்து அற்புதமாகத் தடுத்து விளையாடினர். திராவிட் ஸ்லிப்பில், காயிஃப் அணிக்குள் என்றால் இந்திய அணியின் தடுப்பு ஒன்றின் மூலமாகவே 30 ரன்கள் சேமிக்கலாம். நேற்று தோனி கூட ஓடிச்சென்று எல்லைக்கோட்டுக்கு அருகே ஒரு பந்தைத் தடுத்தார்! கம்பீர் மோசமில்லை.

நேற்றைய ஆட்டத்தில் கார்த்திக்கு பதில் ஹர்பஜன் விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும் என்பது என் கணிப்பு.

இப்பொழுது இலங்கையைப் பற்றி. இலங்கை மோசமான அணி இல்லை. நேற்று இந்தியா சற்றே அனுபவக் குறைவுடைய அணியைக் களமிறக்கியதாலும் திராவிடால் அணியை வழிநடத்த முடியாததாலும் இலங்கையின் வாய்ப்புகள் அதிகமாயின. தில்ஷன் நன்றாகவே விளையாடினார். ஆட்ட நாயகர் விருதுக்கு முற்றிலும் தகுதியானவர். ஆனால் சங்கக்கார, அட்டபட்டு, ஆர்னால்ட், தரங்கா என அனைவரும் அவருக்கு உதவியாக ரன்கள் சேர்த்தனர்.

காலையில் பந்துவீச்சில் முதலில் சோய்ஸாவும், பின்னர் மஹரூஃபும் அவ்வப்போது விக்கெட்டுகளைப் பெற்ற வண்ணம் இருந்தனர். தோனி பூஜ்யத்துக்கு அவுட்டாவது நடப்பதுதான். முதல் பந்து, ஸ்விங் ஆகி வந்தது. ஆனால் யுவராஜ் சிங்கின் ஃபார்ம் கவலையைத் தருகிறது. வேணுகோபால ராவ், சுரேஷ் ரெய்னா இருவருக்கும் இன்னமும் சிறிது கவனம் தேவை.

அடுத்த ஆட்டம் சுவாரசியமாக இருக்கும்.

ஸ்கோர்கார்ட்

மியூசிக் அகாடெமி தேர்தல்

கடந்த சில வருடங்களாக சென்னை மியூசிக் அகாடெமி அறக்கட்டளைக்குத் தேர்தல் நடக்காமல் நீதிமன்றத்தில் பிரச்னை இருந்து வந்தது. கடைசியாக மியூசிக் அகாடெமி தலைவராக இருந்த T.T.வாசு சில மாதங்களுக்கு முன்னர் காலமானார்.

மியூசிக் அகாடெமிக்கு என்ன பிரச்னை என்பது பற்றிய முழு விவரம் இதுவரையில் எனக்கு எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பிரச்னையின் உச்சகட்டம் சென்ற வருடம் ஏற்பட்டது. 2004 மியூசிக் சீசனில் மியூசிக் அகாடெமியில் கச்சேரிகள் ஏதும் நடைபெறாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின் தாற்காலிகமாக அந்த உத்தரவை மாற்றி கடைசி நேரத்தில் கச்சேரிகள் நடக்கலாம் என்று அறிவித்தது. அதற்குப் பின்னர் அடுத்த வருடம் (அதாவது 2005 டிசம்பருக்குள்) தேர்தல்கள் நடத்தவேண்டும் என்றும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் தேர்தல் நடக்கும் என்றும் அறிவித்தது.

தேர்தல் பற்றிய எந்தத் தகவலையும் நான் எங்கும் பார்க்கமுடியவில்லை.

திடீரென்று இரண்டு நாள்களுக்கு முன்னர் மியூசிக் அகாடெமியைச் சுற்றியுள்ள தெருக்களில் (அதாவது நான் வசிக்கும் பகுதியில்) சில சுவரொட்டிகள் தென்பட்டன. "அரிமா வைரசேகர்" (என்று நினைக்கிறேன்) என்ற பெயரில் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார். அந்தச் சுவரொட்டியில் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு தலைவர் பதவிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் வேறு எந்தச் சுவரொட்டிகளும் காணப்படவில்லை. நல்லி செட்டியார் யாரை எதிர்த்துப் போட்டியிடுகிறார் என்ற தகவல் என் கண்ணுக்குப் படவில்லை. நேற்று காலை (தேர்தல் நாள்) தினமணி நாளிதழில் முதல் பக்கத்தில் கால்பக்க விளம்பரம் - நல்லி குப்புசாமி செட்டியாரிடமிருந்து. ஆனால் 'தி ஹிந்து'வில் விளம்பரம் எதுவும் இல்லை. சரி, எதிராக நிற்பவர் ஏதோ ஊர் பேர் தெரியாதவர், எனவே நல்லி நிச்சயம் ஜெயித்துவிடுவார் என்று நினைத்தேன்.

இன்று காலை செய்தித்தாளைப் பார்த்தால்... நல்லி தோற்றிருந்தார். ஜெயித்தது தி ஹிந்து இணை நிர்வாக இயக்குனர் N.முரளி.

Friday, November 04, 2005

பூனா கிரிக்கெட் ஆட்டம்

இதுவரை நடந்த நான்கு ஆட்டங்களிலும் மிக சுவாரசியமானது நேற்று பூனாவில் நடந்த ஆட்டம்தான். இங்குதான் இலங்கை அணிக்கும் ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆட்டம் கடைசி ஓவர் வரை செல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

முதலில் டாஸ். நேற்று திராவிட் டாஸில் ஜெயித்ததும் பந்து வீசத் தீர்மானித்தார். தன் அணியின் பேட்டிங் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் கேப்டன் மட்டுமே இதைச் செய்வார். கங்குலி இதைச் செய்திருக்க மாட்டார். பூனா, மொஹாலி அல்ல. இங்கு பந்து வீச்சாளர்களுக்கு என்று பிரமாதமான ஆதரவு ஏதும் கிடையாது. காலை நேரம் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகலாம். அவ்வளவே. அதையும் எதிரணியினரால் எதிர்கொள்ளமுடியும். எதிரணி முதலில் பேட்டிங் செய்து 275 ரன்கள் பெற்றால், தொடர்ந்து ஆடும் அணி திண்டாட வேண்டியிருக்கும். ஆனால் திராவிட் தன் அணியின் இளம் மட்டையாளர்கள் மீது பயங்கர நம்பிக்கை வைத்திருந்தார், அதனால் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார்.

சென்ற ஆட்டத்தில் முரளி கார்த்திக் சரியாகப் பந்துவீசாததால் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த்தை விளையாடக் கொண்டுவந்திருந்தார். சூப்பர் சப்ஸ்டிட்யூட்டாக சுரேஷ் ரெய்னா - இவர் ஓர் ஆல்ரவுண்டர். ஆனாலும் பவுலிங்கை விட, பேட்டிங்தான் இவரது வலுவான அம்சம். திராவிட் இவரை சூப்பர் சப்பாக நியமித்திருந்தது, தான் டாஸ் வென்றால் நிச்சயம் பந்துவீசப் போகிறோம் என்பதை வெகு முன்னதாகவே முடிவு செய்துவிட்டிருந்தார் என்பதைக் காண்பித்தது.

இலங்கையின் மஹிலா ஜெயவர்தனேயின் திருமணம் நேற்று நடந்தது! அதனால் அவரால் விளையாட முடியவில்லை. இது அவரது சொந்த விஷயம்... ஆனாலும் சரியானதில்லை. இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தின் தேதிகள் தெரியும். திருமணத்தை முன்னோ, பின்னோ வைத்துக்கொண்டிருக்கலாம். இது முக்கியமான ஆட்டமும் கூட. இதில் வென்றால், போட்டித்தொடரை ஜெயிக்க வாய்ப்புள்ளது. தோற்றாலோ, இத்துடன் தொடரும் போய்விடும்! எப்படி அணியின் நிர்வாகம் ஜெயவர்தனேயை அனுமதித்தார்கள் என்று புரியவில்லை. ஜெயவர்தனேக்கு பதில் உபுல் தரங்கா அணிக்கு வந்திருந்தார். சந்தனாவுக்கு பதில் நுவான் சோய்ஸா.

திராவிட், பதான் பந்து வீச்சுக்கு மூன்று ஸ்லிப்கள் வைத்திருந்தார். அல்லது இரண்டு ஸ்லிப்கள், ஒரு கல்லி. இதெல்லாம் சும்மா, எதிரணிக்கு பயங்காட்ட. சங்கக்கார, ஜெயசூரியா இருவரும் வழக்கம் போல அதிரடியாகவே ரன்கள் பெற ஆரம்பித்தனர். பதான் தொடக்கத்தில் சிறப்பாக எதையும் செய்யவில்லை, ஆனால் அகர்கர் எடுத்த எடுப்பிலேயே நன்றாக வீச ஆரம்பித்தார். சென்ற ஆட்டத்தில் ஜெயசூரியாவை எப்படி அவுட்டாக்கினாரோ அதே மாதிரி இடது கை ஆட்டக்காரர்களுக்கு வீசுவது என்று முடிவு செய்திருந்தார். ஆஃப் ஸ்டம்பில் விழுந்து மிடில் ஸ்டம்பை நோக்கி உள்ளே வளைந்து வருமாறு பந்து. சங்கக்கார, ஜெயசூரியா இருவருமே இதுபோன்ற பந்துகளை புல் செய்து விளையாட ஆசைப்படுபவர்கள். பந்தின் திசையைக் கணிக்கத் தவறினால் எல்.பி.டபிள்யூ நிச்சயம். பந்தை முழுவதுமாக விட்டால் நேராகவோ, உள்விளிம்பில் பட்டோ பவுல்ட் ஆகலாம். அதுதான் நடந்தது.

முதலில் சங்கக்கார, பின் ஜெயசூரியா என்று அணியின் நான்காவது, ஆறாவது ஓவர்களில் எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதில் ஜெயசூரியா விக்கெட் மிகவும் முக்கியம். ஏனெனில் அவர் அவுட்டாவதற்கு நான்கு பந்துகள் முன்பு திராவிட் ஸ்லிப்பில் கேட்ச் விட்டார். அடுத்த பந்தில் ஜெயசூரியா ஒரு நான்கை அடித்தார். அடுத்து ஒரு இரண்டு. நிலைமை மோசமாகாமல் அடுத்த இரண்டு பந்துகளிலேயே எல்.பி.டபிள்யூ.

இலங்கை அணித்தலைவர் அட்டபட்டு மிகவும் மோசமான ஃபார்மில் இருப்பதால் தான் விளையாட வரவில்லை. புதியவர் தரங்கா, திலகரத்ன தில்ஷன் இருவரும் அணியை சற்றே தூக்கி நிறுத்த முனைந்தனர். இதைத்தான் சரியான நேரம் என்று கருதி திராவிட் பதானுக்கு பதில் ஸ்ரீசந்தைப் பந்து வீச அழைத்தார். அவரும் முதல் மூன்று ஓவர்கள் மிகவும் நன்றாக வீசினார். தன் இரண்டாவது ஓவரில் ஒரு பவுன்சர் போட, அதை தரங்கா தூக்கி அடித்து ஃபைன் லெக்கில் நின்ற அகர்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதைத்தொடர்ந்து அட்டபட்டு விளையாட வந்தார்.

அட்டபட்டு, தில்ஷன் இருவருமே நன்றாக விளையாடினார்கள். தில்ஷன் முதலில் மிகவும் தடுமாறினார். ஆனால் பின்னர் வேகமாக ரன்களைப் பெறத்தொடங்கினார். 21 ஓவர்கள் வரை திராவிட் ஹர்பஜன் சிங்கைப் பந்து வீச்சுக்குக் கொண்டுவரவில்லை. மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், மிதவேகப்பந்து வீச்சாளர் ஜெய் பிரகாஷ் யாதவ் ஆகியோரே பந்து வீசினர். சென்ற ஆட்டங்களில் மிகவும் துல்லியமாகப் பந்துவீசிய யாதவ் நேற்று அவ்வளவு துல்லியமாக வீசவில்லை. இதனால் தில்ஷன் ரன்கள் பெறுவது எளிதாக இருந்தது. அட்டபட்டுவும் தன் பங்குக்கு ரன்களை சேர்த்தார்.

ஹர்பஜன் தொடர்ச்சியாகத் தன் பத்து ஓவர்களையும் வீசினார். தன் தூஸ்ரா மூலம் தில்ஷனை அவுட் செய்தார். தன் 10 ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே கொடுத்தார். 40 ஓவர்கள் முடிந்தபோது இலங்கை 198/4 என்ற கணக்கில் இருந்தது. அட்டபட்டு 68இலும், ஆர்னால்ட் 14இலும் இருந்தனர். அடுத்த பத்து ஓவர்களில் 70-80 ரன்கள் பெற்றிருக்கலாம். ஆனால் பதானும், மிக முக்கியமாக அகர்கரும் அற்புதமாகப் பந்து வீசினர்.

பதான் திரும்பி வந்த முதல் ஓவரிலேயே (43வது ஓவர்), ஒரு யார்க்கர் வீசி ஆர்னால்டை பவுல்ட் செய்தார். அகர்கர் தான் திரும்பி வந்த முதல் ஓவரிலேயே (46வது ஓவர்) மஹரூஃபை ஒரு ஸ்லோ புல் டாஸ் மூலம் பவுல்ட் செய்தார். அதற்கு அடுத்த ஓவரில் சேவாக் அட்டபட்டுவை அவுட்டாக்கினார். தவறே செய்யாமல் சென்று கொண்டிருந்த அட்டபட்டு ஓங்கி அடித்த ஒரு பந்தை சேவாக் வலது கையை வீசிப் பிடித்தார். இது 'மாட்டும், இல்லாவிட்டால் விரலை உடைக்கும்' போன்ற அடி. பந்து நடுக்கையில் மாட்டியிராவிட்டால் விரலை உடைத்திருக்கும். முழு அதிர்ஷ்டம். இப்படி சடசடவென மூன்று விக்கெட்டுகள் விழுந்தன. அடுத்த ஓவரில் முரளி ஒரு நான்கைப் பெற்றபின் அகர்கரின் யார்க்கரில் பவுல்ட் ஆனார். ஐம்பதாவது ஓவரில் தன் பவுலிங்கின் ஃபாலோ த்ரூவில் சோய்ஸாவை ரன் அவுட் செய்த அகர்கர், அதற்கடுத்த பந்திலேயே வாஸை விக்கெட் கீப்பர் தோனி வழியாக கேட்ச் பிடிக்கவைத்து அவுட்டாக்கி தன் ஐந்தாவது விக்கெட்டைப் பெற்றார். 9.5-1-44-5. அத்துடன் ஒரு ரன் அவுட், ஒரு கேட்ச். இலங்கை 261 ஆல் அவுட், அட்டபட்டு 87, தில்ஷன் 52, ஆர்னால்ட் 32.

-*-

262 எடுப்பது இந்த இந்திய அணிக்குச் சாத்தியமானதுதான் என்று நினைத்தோம். ஆனால் முதல் மூன்று ஓவர்களில் வாஸ், ஃபெர்னாண்டோ இருவருமே மிகவும் நன்றாகப் பந்து வீசினார்கள். முதல் இரண்டு ஓவர்களும் மெய்டன். மூன்றாவது ஓவரில் ஒரு நோ பால், அவ்வளவே. சேவாக், டெண்டுல்கர் இருவருக்குமே டைமிங் சரியாக வரவில்லை.

நான்காவது ஓவரில் டெண்டுல்கர் எப்படியாவது ரன்களைப் பெற வேண்டும் என்று ஆக்ரோஷமாக விளையாடினார். முதல் பந்து சற்றே அளவு குறைவாக வந்தது, அதை கவர் திசையில் அடித்து நான்கு ரன்களைப் பெற்றார். ஆனால் அடுத்து இறங்கி வந்து அடிக்கப்போய் ஒரு பந்து விளிம்பில் பட்டு தர்ட்மேன் திசையில் சிக்ஸ் ஆனது! மோசமான ஷாட். அடுத்த ஓவரில் சேவாக் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இரண்டுமே நல்ல ஷாட்கள். ஆனால் அதே ஓவரில் மற்றுமொரு வானளாவிய ஷாட் அடித்தார். முதலில் சிக்ஸ் போல இருந்தது, ஆனால் பந்து லாங் ஆனில் எல்லைக்கோட்டுக்கு உள்ளேயே விழுந்தது. முரளிதரன் ஓடிவந்து அதைப் பிடித்தார், ஆனால் பந்து விரலில் பட்டு நழுவியது. சேவாகுக்கு அதிர்ஷ்டம்.

அதற்கடுத்த ஓவர் டெண்டுல்கர் எவ்வளவோ முயற்சி செய்தும் ஃபெர்னாண்டோவிடம் ரன்களைப் பெற முடியவில்லை. டைமிங் சரியாக வரவில்லை. டெண்டுல்கர் முகத்தில் ஒரு பதற்றம். இறங்கி இறங்கி வந்து அடிக்க வந்தார். ஆனால் மட்டையில் மாட்டவில்லை. தொடர்ந்த அடுத்த ஓவரில் வாஸ் பந்தை இறங்கி அடிக்கப்போய், முடியாமல், பவுல்ட் ஆனார். அந்தப் பந்து மிடில் ஸ்டம்பில் விழுந்து வீசிய கோணத்தில் வெளியே போகாமல் லேசாக இன்ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்ப் மேல் பாகத்தில் விழுந்து ஸ்டம்பை உருளச் செய்தது.

திராவிட் நான்காவது மேட்சில் நான்காவதாக வேறொருவரை மூன்றாம் இடத்துக்கு அனுப்பினார். கடந்த மூன்று மேட்ச்களிலும் அவ்வளவாக நன்றாக விளையாடாத யுவராஜ் சிங். இவர் வந்தவுடனேயே ஃபெர்னாண்டோவின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இரண்டுமே பாயிண்ட் திசையில். ஆனால் அடுத்த நுவான் சோய்ஸா ஓவரில் சற்றே மேலாக பாயிண்ட் திசையில் அடித்து தில்ஷனால் கேட்ச் பிடிக்கப்பட்டார். இந்த முறை மூன்றாம் இடத்துக்கான சோதனை வெற்றி பெறவில்லை. திராவிட் உள்ளே வந்தார்.

முன்னெல்லாம் திராவிட் பேட்டிங் செய்ய வந்தால் ஒரு இருபது பந்துகளையாவது வீணாக்குவார். முதல் இருபது பந்துகளில் 3-4 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க மாட்டார். ஆனால் இப்பொழுது வந்த முதல் பந்து முதற்கொண்டே ரன்கள் பெறுகிறார். மஹரூஃப் வீசிய முதல் ஓவரில் திராவிட், சேவாக் இருவருமே அடித்து 15 ரன்களைப் பெற்றனர். அடுத்த ஓவரில் சோய்ஸாவின் பந்தில் சேவாக் விக்கெட் கீப்பர் சங்கக்காரவிடம் கேட்ச் கொடுத்தார். இதுவும் நழுவ விடப்பட்டது. ஆக சேவாகுக்கு இரண்டு "எக்ஸ்ட்ரா" கிச்சான்கள். அடுத்த பந்திலேயே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஒரு நான்கு. இதற்குப் பிறகு திராவிட், சேவாக் இருவருமே மிக நன்றாக விளையாடி பந்துக்கு ஒரு ரன் விதம் ரன்கள் பெற்றனர். இந்திய அணியின் ரன்ரேட் வேகமாக ஏறத்தொடங்கியது.

அட்டபட்டு அடுத்தடுத்து பவர்பிளே-2, பவர்பிளே-3 இரண்டையும் எடுத்தார். 19 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்தியா 110/2 என்ற கணக்கில் இருந்தது. திராவிட் உள்ளே வந்தபோது அணியின் எண்ணிக்கை 34/2, 8.1 ஓவர்களில். அடுத்த 11 ஓவர்களில் 76 ரன்கள் = 6.9 ரன்கள், ஓவருக்கு.

முரளிக்கு பவர்பிளே நடக்கும்போது பந்துவீச விருப்பமில்லையாம். இலங்கை அணி வலுவான நிலையில் இருந்தால் இதையெல்லாம் செய்யலாம். ஆனால் இப்பொழுது வேறு வழியில்லை. 20 ஓவர்கள் விட்டுவிட்டால் இந்தியா நல்ல நிலையில் இருக்கும். மேலும் சேவாக், திராவிட் இருவருமே முரளியை அவ்வளவு சரியாக விளையாடுவதில்லை. எனவே முரளி வந்து கொஞ்சம் ரன்கள் கொடுத்தாலும் இருவரையும் அவுட்டாக்கியிருந்தால் இலங்கைக்கு நல்ல வாய்ப்பு இருந்திருக்கும். இருபதாவது ஓவரில்தான் முரளியை அழைத்தார் அட்டபட்டு. தன் முதல் ஓவரிலேயே ஒரு தூஸ்ரா மூலம் சேவாகை அவுட்டாக்கினார் முரளி. சேவாக், இரண்டு வாய்ப்புகளுடன், 48 ரன்கள் பெற்றிருந்தார்.

அடுத்து தோனி வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வேணுகோபால ராவ் வந்தார். இவர் முரளியை நன்றாக விளையாடுவார் என்பதால் இருக்கலாம். தோனியைத் தக்க வைத்துக்கொண்டதும் பின்னால் உபயோகமாக இருந்தது. வேணுகோபால ராவ் நன்றாகவே விளையாடினார். ஜெய்ப்பூர் ஆட்டத்தில் விளையாடியதை விட, இங்கு திராவிடின் அரவணைப்பில் அருமையாக விளையாடினார். முரளியை முற்றிலுமாக மழுங்கடித்தார். மஹரூஃபின் ஓர் ஓவரில் ஒரு ஆறும், அடுத்த அவரது ஓவரில் மூன்று நான்குகளும் அடித்தார்.

திராவிட் வேகப்பந்து வீச்சாளர்களையும் சரி, முரளியையும் சரி, கால் திசையிலேயே அடித்து ரன்கள் பெற்றார். மிட்விக்கெட் திசையில் அவர் அடித்த மூன்று பவுண்டரிகளும் அற்புதமானவை. ஒரு பிரமாதமான ஸ்டிரெயிட் டிரைவ். தனது 51வது பந்தில் தன் அரை சதத்தைக் கடந்தார்.

அடுத்து சில ஓவர்களில் நிலைமை முழுவதுமாக மாறியது. முதலில் வேணுகோபால ராவ் ஒரு தூஸ்ராவை ஸ்டியர் செய்யப்போய் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். மூன்று ஓவர்கள் கழித்து திராவிட் ஃபெர்னாண்டோவ புல் செய்யப்போய் ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே பதான் ரன்கள் ஏதும் பெறாமல் முரளியின் ஆஃப் பிரேக்கில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். திடீரென இந்தியா 35வது ஓவரில் 180/6.

ஜெய்ப்பூர் நாயகன் மஹேந்திர சிங் தோனியும், இதுவரை இந்தத் தொடரில் பேட்டிங் செய்திராத சுரேஷ் ரெய்னாவும் விளையாடுகிறார்கள். இன்னமும் 82 ரன்கள் வேண்டும். 92 பந்துகள் உள்ளன.

தோனி ஜெய்ப்பூரில் விளையாடியது மாதிரி இங்கு விளையாடவில்லை. மிகவும் நிதானமாக ஒவ்வொரு ரன்களாக சேர்த்தார். ரிஸ்க் எதையும் எடுக்கவில்லை. ரெய்னா தோனியை விட வேகமாக ரன்களை சேர்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக தேவையான ரன்ரேட் அதிகரித்தது. ஆனால் இரண்டு இளைஞர்களும் சிறிதும் பயப்படவில்லை. பழைய இந்தியாவாக இருந்தால் பதற்றத்தாலேயே அனைவரும் அவுட்டாகி ஆட்டத்தை 40 ஓவர்களில் தோற்றிருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியர்களைப் போல விளையாடினார்கள் இருவரும். 40 ஓவர்கள் முடியும்போது இந்தியா 207/6. 42வது ஓவர் முடியும்போது 215/6. அடுத்த 48 பந்துகளில் 47 ரன்கள் தேவை.

43வது ஓவரில் இங்கும் அங்கும் தட்டிவிட்டு வேக வேகமாக ரன்களைப் பெற்றனர் இருவரும். முதல் ஐந்து பந்துகளில் 1, 1, 3, 2, 1. கடைசி பந்தில் தோனி தன் முதல் பவுண்டரியைப் பெற்றார். 43வது ஓவர் முடியும்போது இந்தியா 227/6. 44வது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தன, ரெய்னாவுக்கு 10 ரன்கள் அதில். இந்தியா 238/6. அட்டபட்டுவுக்கு இலங்கை தோற்பது உறுதியாகி விட்டது. முரளிதரனைக் கொண்டுவந்தார். ஆனால் சிறிதும் ரிஸ்க் எடுக்காமல் ரெய்னாவும் தோனியும் அந்த ஓவரில் 8 ரன்களைப் பெற்றனர். (2,1,1,1,2,1). இப்பொழுது வெற்றி பெற வெறும் 16 ரன்களே பாக்கி.

இப்பொழுதுதான் தோனி தனது கவனமான ஆட்டத்தை மாற்றி அதிரடி ஆட்டத்துக்குத் தாவினார். ஆர்னால்ட் வீசிய ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 2, 2 ரன்கள். அடுத்த பந்தில் முதன்முறையாக தோனி லாங் ஆன் மேலாக அடித்து ஆறு ரன்களைப் பெற்றார். இப்பொழுது ஆறு ரன்கள்தான் பாக்கி. அதே மாதிரியான பந்து, அதே மாதிரியான ஷாட், லாங் ஆன் மேல் இதுவும் சிக்ஸ். நான்கே பந்துகளில் 16 ரன்கள், இந்தியாவுக்கு வெற்றி.

அகர்கர் ஆட்ட நாயகன்.

இந்த இன்னிங்ஸில் திராவிட், வேணுகோபால ராவ், தோனி, ரெய்னா நால்வருமே நன்றாக பேட்டிங் செய்தனர். 48 ரன்கள் பெற்றிருந்தாலும் சேவாகின் பேட்டிங் திருப்திகரமாக இல்லை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது தோனியின் பயமின்மை, ஆட்டத்தின் நிலைக்குத் தகுந்தாற்போல தன் பேட்டிங்கை மாற்றிக்கொண்டது. ரெய்னா - நிச்சயமாக இவருக்கு வாய்ப்புகள் தரவேண்டும். இது நல்லதொரு நியூக்ளியஸ். இதை இப்படியே வலுவாக்கி உலகக்கோப்பை வரை கொண்டுசெல்லவேண்டும்.

இந்தத் தொடரில் இதுவரை திருப்திகரமாக விளையாடாதவர்கள் என்றால் சேவாக், யுவராஜ் சிங். ஜெய் பிரகாஷ் யாதவ் - ஆல் ரவுண்டர் என்றாலும் இதுவரையில் மனதைக் கவரும் வண்ணம் ஒன்றும் செய்யவில்லை. அடுத்த ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவை உள்ளே கொண்டுவரலாம். ஜெய் பிரகாஷ் யாதவை சூப்பர் சப் என்று நியமிக்கலாம். அடுத்த ஆட்டத்தில் வேணுகோபால ராவை 3-ம் எண் உள்ள இடத்தில் கொண்டுவரலாம்.

ஸ்கோர்கார்ட்