Sunday, May 31, 2009

கல்வி, சீருடை, காலணி, புத்தகம், நோட்டுகள் இலவசம்

கல்விக்குக் கட்டணம் கிடையாது. சீருடை, காலணி, புத்தகங்கள், நோட்டுகள் இலவசம். தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கம்ப்யூட்டர், யோகா, ஆங்கிலத்தில் பேசுதல் ஆகியவை இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை. பெண்களுக்கு மட்டும்.


எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி இது. ஒரு காலத்தில் மிகவும் பெயர்பெற்றிருந்த பள்ளி. நாளடவில் தனியார் கல்விக்கூடங்கள் மீதான மோகம் அதிகமாக, அதிகமாக, இந்தப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் பின்னணியில் பெருத்த மாற்றம். விளைவாக இன்று இந்தப் பள்ளியை யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால்தான், இலவசம், இலவசம் என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள்.

அதே நேரம், பல ஏழைகளும்கூட, இந்தப் பள்ளியைவிடத் தரம் குறைந்த பல தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் ஆண்டுக்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை பணம் செலவழித்து, தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார்கள்.

கணபதி ஐயர் உயர்நிலைப் பள்ளி போன்ற பல அரசுப் பள்ளிகளுக்கும் ஒரு இமேஜ் மேக்-ஓவர் தேவை. இந்தப் பள்ளிகளும் தரமான கல்வியை வழங்குபவை, சொல்லப்போனால், பல தனியார் பள்ளிகளைவிடச் சிறந்தவை என்ற உண்மை பொதுமக்களுக்கு உரைக்குமாறு செய்திடல் வேண்டும். அதற்கு ‘இலவசம்’ என்ற போஸ்டர் தேவை இல்லை. அதற்குத் தேவை வேறு சில விஷயங்கள்.

அதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

Friday, May 29, 2009

அரஸ்(களின்) ஓவியக் கண்காட்சி

இன்று ஓவியர் அரஸ் அழைப்பின்பேரில் அவரது மகன்கள் (ஹர்ஷ், அரவிந்த்) வரைந்துள்ள ஓவியங்களைக் காண விஞ்யாசா ஆர்ட் கேலரிக்குச் சென்றிருந்தேன். அங்கே அரஸின் சில ஓவியங்களும் இருந்தன. இரு பையன்களும்கூட நன்றாகவே வரைந்திருந்தனர். சில படங்கள் மட்டும் இங்கே - அவசரமாக மொபைல் போனில் பிடித்தது. முதல் இரண்டு படங்கள் அரவிந்த் வரைந்தவை.

Mad rush to jump into the water

Clash of the titans

இந்த இரண்டு படங்கள் அரஸ் வரைந்தவை.

Flowing movement

Folksy movement

இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்

நேற்று, 28 மே 2009, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ் “இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்” (Influenza A(H1N1) Pandemic) என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து கலந்துரையாடலும் இருந்தது.

அதன் ஒலிவடிவம் இங்கே.
.

இனி காங்கிரஸும் கேட்கும்!

காலை நடையின்போது கண்ணில் பட்டது.

Congress wants a share in power in Tamil Nadu

Wednesday, May 27, 2009

வேலை தேடுதல்

சென்ற வாரம், பி.எஸ்சி வேதியியல் படிக்கும் ஒரு மாணவனைச் சந்தித்தேன். இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டு, மூன்றாம் ஆண்டு போகிறான். மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டேன். ஐ.ஏ.எஸ் படிக்க விருப்பம் என்றான். சரி, ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்று தெரியுமா என்று கெட்டேன். தெரியாது என்றான். ஆனால், மூன்றாம் ஆண்டு தேர்வுகள் முடிந்ததும், ஏதாவது கோச்சிங் வகுப்பில் சேர்ந்தால் போதும் என்று நினைப்பதாகச் சொன்னான்.

ஐ.ஏ.எஸ் பரீட்சைக்குத் தயார் செய்யும் அதே நேரம், வேலை எதிலாவது சேர முற்படுவாயா என்று கேட்டேன். ஆமாம், வேலை என்பது மிகவும் அவசியம் என்றான். அவனது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். சம்பாத்தியம் மிகவும் குறைவு. மிகவும் பின்தங்கிய வகுப்பிலிருந்து வருபவன். குடும்ப உறவுகள் என்று யாரும் அவனுக்கு வேலை வாங்கித் தரப்போவதில்லை. இப்போது அவன் படிப்பதற்கும் ஹாஸ்டலில் தங்குவதற்குமான செலவை அவனது கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொண்டுள்ளது.

அப்படியானால், ஐ.ஏ.எஸ் என்பதைவிட, வேலை என்பது முக்கியம் அல்லவா என்று கேட்டேன். ஆமாம் என்று ஒப்புக்கொண்டான். சரி, வேலை என்றால் எங்கெல்லாம் வேலை கிடைக்கும், எந்த மாதிரியான வேலை கிடைக்கும் என்று தெரியுமா என்றேன். தெரியாது என்றான். அவன்தான் கல்லூரியில் அவனது வகுப்பில் முதல் மாணவன். ஆனால் அது போதாதே வேலை கிடைக்க. அவனது கல்லூரியில் கேம்பஸ் நேர்முகம் நடக்கிறதா என்று கேட்டேன். ஐடி சரிவால், யாரும் வருவதில்லை என்றான்.

சரி, ஐடி வேலையை கண்டுகொள்ளாதே; ஆனால் வேதியியல் வேலைகள் ஏதேனும் கிடைக்குமே என்றேன். எந்த மாதிரியான வேதியியல் நிறுவனங்கள் புதுமுக பயிற்சி நிலை மாணவர்களை எடுத்துக்கொள்ளும் என்று தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்றான்.

நம் மாணவர்கள் வேலை பற்றி மிகவும் அசட்டையாக, கவனக்குறைவாக இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. முதல் வேலை என்பதை நாம்தான் தேடிப் பெறவேண்டும். அது தானாகக் கையில் கிடைக்காது. ஒரு வேலையில் எப்படியோ தட்டி முட்டிச் சேர்ந்துவிட்டால், அடுத்து அடுத்து என்று வேலைகள் கற்றுக்கொண்டு, நிறுவனங்கள் மாறி, ஒரு நல்ல நிலையை அடையலாம்.

கல்லூரிப் படிப்பின்போதே ஒரு மாணவன் மேற்படிப்பு, வேலை ஆகியவை தொடர்பாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றி சற்றே விரிவாக, சில பதிவுகளை எழுதலாம் என்றுள்ளேன். அதற்கான பீடிகை இந்தப் பதிவு.

Tuesday, May 26, 2009

கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்

சென்னையைச் சுற்றி கிழக்கு நடத்திவரும் புத்தகக் கண்காட்சிகளுக்கு தாற்காலிக விடுமுறை. நேற்றோடு பல்லாவரம், ஈக்காடுதாங்கல் கண்காட்சிகள் முடிவுற்றன. பாடி அதற்குமுன்னரே முடிவடைந்தது. அடுத்து புரசைவாக்கம், திருவேற்காடு ஆகிய இரண்டு இடங்களில் நடக்க உள்ளது. அதற்கான தகவலை ஜூன் நெருங்கும்போது தருகிறேன்.

அதைத் தவிர தமிழகம் முழுவதும் எங்களது விற்பனையாளர்களின் உதவியுடன் பல இடங்களில் கிழக்கு சிறப்பு புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அதுபற்றிய தகவல்கள் இங்கே:

1. ரத்னா ஏஜென்சீஸ், 56, நாடி அம்பாள் கோவில் தெரு, பட்டுக்கோட்டை, 25 மே 2009 - 24 ஜூன் 2009

2. தாஜ் ஏஜென்சீஸ், பஸ் ஸ்டாப் அருகில், திருத்துறைப்பூண்டி, 5 மே 2009 - 30 மே 2009

3. சக்சஸ் புக் செல்லர்ஸ், BMS மைதானம், பஸ் ஸ்டாண்டுக்கு அருகில், புதுக்கோட்டை, 6 மே 2009 - 28 மே 2009

4. காந்தளகம், 21, சிவசண்முகம் தெரு, கனரா வங்கிக்கு எதிரில், மேற்கு தாம்பரம், 14 மே 2009 - 14 ஜூன் 2009

5. KPM ஸ்டோர்ஸ், 3, தாம்பரம் சாலை, மேற்கு முகப்பேர், சென்னை 37, 20 ஏப்ரல் 2009 - 30 மே 2009

6. ஜனனி பிக் பாஸார், பழைய கற்பகம் சூப்பர் மார்க்கெட், SBI மெயின் பிராஞ்ச் அருகில், ஆஃபீசர்ஸ் லைன், வேலூர், 8 மே 2009 முதல்

7. இன்லாண்ட், கமெர்ஷியல் பில்டிங், புதுச்சேரி, 24 மே 2009 முதல்

8. AVM Book, மிஷன் தெரு, புதுச்சேரி, 1 மே 2009 முதல்

9. தினேஷ் புக் ஹவுஸ், பஸ் ஸ்டாண்ட், நாமக்கல், 2 ஏப்ரல் 2009 - 30 ஜூலை 2009

10. மல்லிகை புக் செண்டர், ரயில்வே சந்திப்பு எதிரில், மதுரை, 27 மே 2009 - 26 ஜூன் 2009

11. செந்தில் முருகன் ஏஜென்சீஸ், ராஜா ஸ்கூல் விளையாட்டு மைதானம், மதுரை ரோடு, ராமநாதபுரம், 26 ஏப்ரல் 2009 - 27 மே 2009

12. கிழக்கு ஷோரூம், புது எண் 17, ரெட்டியப்ப முதலி தெரு, ரங்கா கல்யாண மண்டபம் எதிரில், கொசப்பேட்டை, வேலூர், 26 மே 2009 முதல்.

பஞ்சாபில் என்ன நடக்கிறது?

கடந்த இரண்டு நாள்களாக பஞ்சாபில் - முக்கியமாக ஜலந்தரில் - மக்கள் தெருவுக்கு வந்து போராடுவதைப் பார்த்திருப்பீர்கள். தெருவில் போகும் வண்டிகளை அடித்து உடைத்து, டயர்களைக் கொளுத்தி, ரயில்களைக் கொளுத்தி, ஒரே நாசம்.

மதப் பொறுக்கித்தனம் உலகமயமாவதின் விளைவு இது. ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் ஒரு குறிப்பிட்ட சீக்கிய இனப்பிரிவின் குருத்வாராவில் பிரசங்கம் நடந்துகொண்டிருக்கும்போது ஆயுதம் தாங்கிய சிலர் உள்ளே நுழைந்து தாக்கி, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். விளைவாக இரு குருமார்களில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவர் நிலை கவலைக்கிடம்.

இந்தத் தகவலை முதலில் செய்தியில் கேட்டதும், ஏதோ ஆஸ்திரிய நியோ-நாஸிகள்தான் இந்தியர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனரோ என்று நினைத்தேன். ஆனால் அடிதடி, சகோதரர்களுக்கு இடையே என்று பின்னர் தெரிந்தது. கொன்றவனும் சீக்கியனே, கொல்லப்பட்டவனும் சீக்கியனே.

நாம் இங்கே தெரிந்துகொள்ளவேண்டியது - சீக்கியர்கள் என்பது ஒரு தனிப்பெரும் குழு அல்ல என்பதை. அவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன. சாதி வித்தியாசங்கள் உள்ளன. மதத் தத்துவ வித்தியாசங்கள் உள்ளன.

குரு நானக், இந்து மதத்திலும் இஸ்லாத்திலும் உள்ள பல கெட்ட விஷயங்களை ஒதுக்கிவிட்டு இரண்டிலும் உள்ள நல்ல விஷயங்களையும் ஒன்றுசேர்த்து, சீக்கிய மதத்தை உருவாக்க முனைந்தார். ஆனால் இன்றோ சீக்கிய மதம், இரண்டிலும் உள்ள கெட்ட விஷயங்களை மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளது.

சீக்கியர்களிடையே சாதி வித்தியாசம் இருக்கக்கூடாது என்று நானக்கும் அவரது வழி வந்த அனைத்து குருமார்களும் இதை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் உண்மையில் பஞ்சாபில் சீக்கியர்களிடையே சாதிகள் நல்ல வலுவாகவே உள்ளன. பூட்டாசிங் என்ற காங்கிரஸ்காரர் தலித் சீக்கியர் என்ற கோட்டாவுக்குள்தான் காங்கிரஸில் இடம் பெறுவார். அதென்ன ‘தலித் சீக்கியர்’ ? இந்தியாவில் இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம் என்று எல்லாமே சாதியில் சிக்கித் தவிக்கின்றன.

இஸ்லாத்தில் doctrinal விஷயங்களை முன்வைத்து சகோதரக் கொலைகள் நடப்பது வாடிக்கை. இன்றுவரை சுன்னி, ஷியா முஸ்லிம்கள் ஒருவரை அடித்துக்கொண்டு கொலை செய்துகொள்வதைப் பார்த்திருப்பீர்கள். பாகிஸ்தானில் ஈராக்கிலும் எப்போதும் இது நடப்பதைப் பார்க்கலாம். அதேபோன்ற நிலை் சீக்கியர்களிடையேயும் உள்ளது.

நிறுவனமயமாக்கப்பட்ட சீக்கிய மதத்தைக் கட்டுப்படுத்துவது அகால் தக்த் எனப்படும் குழு. பெரும்பாலும், இந்தக் குழுவுக்கும், அகாலி தளம் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். காங்கிரஸ் கட்சி இடையில் புகுந்து தன்னால் முடிந்த அளவு குழப்பத்தை விளைவிக்கப் பார்க்கும். இப்படித்தான் 1970-களின் இறுதியில் ஆரம்பித்த ஒரு பிரச்னை காலிஸ்தான் என்ற சீக்கியப் பிரிவினை வாதத்தை வளர்த்தது.

இந்து மதத்தில் எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு புது சாமியார் கிளம்புவார். ஒரு மடத்தை அமைப்பார். அவருக்கு சீடர்கள் கிடைப்பார்கள். ஆனால் அதே காரியம் சீக்கிய மதத்திலோ நடந்தால் அகால் தக்த் கோபம் அடையும். அது பெரும் வன்முறையில் போய் முடியும்.

1920-களில் நிரங்காரிகள் என்று ஓர் அமைப்பு உருவானது. 1978-ல் இந்த அமைப்பின் சில கிரந்தங்கள் - சமய நூல்கள் - தடை செய்யப்படவேண்டும் என்று மைய நீரோட்ட சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்தனர். சில அமைப்புகள் தெருப் போராட்டத்துக்கு அழைக்க, ஒரு பெரும் கூட்டம் அமிர்தசரஸில் உள்ள நிரங்காரிகளின் மடத்தைச் சுற்றி வளைத்தது. நிரங்காரிகள் உள்ளிருந்து துப்பாக்கியால் சுட, சீக்கியர்கள் பலர் இறந்தனர். அங்கு தொடங்கிய கலவரம்தான் பிந்த்ரன்வாலே உருவாக்கப்பட்டு, பாகிஸ்தான் இடையில் புகுந்து குழப்பி, ஆபரேஷன் புளூ ஸ்டார் நிகழ்ந்து, இந்திரா காந்தி படுகொலையிலும், டில்லி சீக்கியப் படுகொலைகளிலும் முடிந்தது.

2007-ல் டேரா சச்சா சவுதா என்ற அமைப்பின்மீது மைய நீரோட்ட சீக்கியர்கள் தாக்குதல் நடத்தினர். நல்ல வேளையாக இந்தக் கலவரம் 1978 போலச் செல்லவில்லை. டேரா சச்சா சவுதா காங்கிரஸுக்கு ஆதரவு தரும் அமைப்பு என்பதை மனத்தில் கொள்ளவும். ஆனால் 2007-ன் காங்கிரஸ், இந்திரா காந்தியின் காங்கிரஸ் போல நடந்துகொள்ளாமல், சற்று முதிர்ச்சியுடன் நடந்துகொண்டது. ஆனாலும் இன்றுவரை அகால் தக்தும், அகாலி தளமும், சச்சா சவுதா அமைப்பை அழித்துவிடவேண்டும் என்ற மனநிலையில்தான் உள்ளன. பெரும்பாலான ‘கீழ் சாதி’ மக்களோ, சச்சா சவுதா போன்ற அமைப்பையே நாடுகின்றனர். ‘மேல் சாதி’ பிடியில் இருக்கும் அகால் தக்தின் குருத்வாராக்களுக்கு அவர்கள் செல்வதில்லை.

இப்போது 2009-ல் நடக்கும் கலவரங்களும் இதேமாதிரியானவையே. டேரா சச்சா சவுதாவை அகால் தக்த் நேரடியாகத் தாக்கியது. டேரா சச்கண்ட் பல்லான், தலித் மக்களின் ஆதரவு பெற்ற அமைப்பு. ஆனால் அகால் தக்துக்கும், சில தீவிரவாத சீக்கியர்களுக்கும் இந்த அமைப்பைக் கண்டால் ஆகவில்லை. அதன் விளைவுதான் வியன்னாவில் நடந்த தாக்குதலும் கொலையும். அதன் விளைவுதான் பஞ்சாபின் தலித்கள் தெருவில் இறங்கிப் போராடுவதும்.

யார் சீக்கியனாக இருப்பது, யாரை சீக்கிய மதத்திலிருந்து விலக்கலாம் என்ற மிகுந்த ஆபத்தான ஆயுதம் அகால் தக்திடம் உள்ளது. எக்கச்சக்கமான சொத்துகள் அகால் தக்திடம் உள்ளன. அதனால் அகால் தக்த் அரசியலாக்கப்படுகிறது. அகால் தக்த் தலைமை ஜதேதார் யார் என்பதற்குக் கடும் போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டிகளின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியும் அகாலி தளமும் பலப்பரீட்சை செய்கின்றன.

இந்தியாவின் பிற பகுதிகளில் நடப்பதுபோலவே பஞ்சாபிலும் சாதி வெறி தலைவிரித்தாடுகிறது. அதனால்தான் எதிர் அமைப்புகள் தோன்றுகின்றன. அந்த அமைப்புகள் பெறும் ஆதரவைக் கண்டு அகால் தக்த் திகிலடைகிறது. இந்த அமைப்புகளை எப்படியெல்லாம் அழிப்பது என்ற யோசனையில் பல தீவிரவாத சீக்கியர்கள் இறங்குகின்றனர்.

அகால் தக்தை அழித்துவிட்டால், யாரும் ‘மைய நீரோட்டம்’ கிடையாது என்ற நிலை வந்துவிடும். யார் வேண்டுமானாலும் சீக்கியனாகலாம். யாரும் அந்த மதத்திலிருந்து ஒருவரை வெளியேற்றமுடியாது.

அகால் தக்த் என்ற அமைப்பின் அழிவில்தான் சீக்கியர்களின் எதிர்காலமும் இந்தியர்களின் எதிர்காலமும் வளமாக இருக்கும்.

Sunday, May 24, 2009

அரசியல் பேரங்கள்

நம் நாட்டில் அரசியல் பேரங்கள் பெரும்பாலும் அபத்தமாகவே நடைபெறுகின்றன. தேர்தலுக்கு முந்தைய pre-poll கூட்டணி, இடங்கள் தொடர்பான பேரங்கள் ஒருமாதிரியானவை. இங்கே hardball சண்டைகள் போடலாம். ஏனெனில் தேர்தல் நடந்தபின் பெரும்பாலும் தேர்தலுக்கு முந்தைய கட்டம் மறந்துவிடும்.

தேர்தல் முடிந்தபின் நடக்கும் பேரம் வேறு வகையானது. எதிராளியின் நிலை (இந்த இடத்தில் கூட்டணியின் முக்கியக் கட்சி) என்ன என்று தெரிந்து நடத்தும் பேரம் ஒருவகை. தன் காரியமே குறி என்று நடத்தும் பேரம் ஒருவகை. இந்த இரண்டாவது வகை பேரத்தில் எதிராளிக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்தால் அடுத்த ஐந்து வருடங்கள் சுமுகமாக இருக்காது.

கருணாநிதியின் பேரம், திமுகவின் தொண்டர்கள், தமிழ் இன உணர்வாளர்கள் போன்ற சில அதீத ஆசாமிகளைத் தவிர மற்ற எல்லோருக்கும் கசப்புணர்வையே ஏற்படுத்தியுள்ளது. சில தமிழ் உணர்வாளர்கள், “வேணுமய்யா, நல்லா வேணும். இந்த வடவன் கொண்டையைப் பிடிச்சு தலைவர் நல்லா ஆட்றாருல்ல, வேணும்” என்று கொக்கரிக்கிறார்கள். திமுக தொண்டனுக்கு இந்த அளவுக்கு யோசிக்க வேண்டியதில்லை. “கருணாநிதி, தி கலைஞர்” என்ன கேட்டாலும் எதிர்த்துப் பேச இவர்களுக்கு என்ன தைரியம் என்ற அளவில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

இன்று நாடு அதிகம் மாறிவருகிறது. அங்கே இங்கே ஊழலில் அள்ளிக்கொண்டாலும் performance என்ற விஷயம் அடிபடுகிறது. எந்தக் கட்சி அல்லது கூட்டணி என்ன சாதிக்கிறதோ அதை வைத்துத்தான் அவர்களுக்கு அடுத்த வாய்ப்பு தரப்படுகிறது. அதனால்தான் சில மாநிலங்களில் ஒரே கட்சி/கூட்டணி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. பல இடங்களில் தூக்கி எறியப்படுகிறது.

திமுக குடும்பத்தையே மந்திரியாக்குவதில்கூடப் பிரச்னை இல்லை. ஆனால் மந்திரி ஆவதே அந்தத் துறையில் கல்லா கட்டத்தான் என்றில்லாமல், தீவிரமாக நாட்டுக்கோ, தனது மாநிலத்துக்கோ என்ன செய்யமுடியும் என்று யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. தொலைத்தொடர்பு என்பது ஏறுமுகம் கொண்ட ஒரு துறை. அதற்கு யார் மந்திரியாக இருந்தாலும் பெரிய பிரச்னையில்லை. வேலைகள் நடந்தே தீரும். ஆனால் பல துறைகளில் சரியான ஆள் இல்லாவிட்டால் அதோகதிதான். உதாரணமாக, தரைவழிப் போக்குவரத்து. உள் கட்டமைப்புகளுக்கு எக்கச்சக்கமான பணம் செலவழிக்கவேண்டும். நீண்டகாலத் தொலைநோக்குடன் திட்டங்கள் தீட்டி வேலைகளைச் செய்யவேண்டும்.

இந்த வேலையை, ஒரு தமிழனால் செய்யமுடியாதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாகச் செய்யமுடியும். எந்தத் தமிழனால் என்பதில்தான் கேள்வியே.

காங்கிரஸ் மட்டும் சரியான அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக இல்லை. இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 கேபினெட் அமைச்சர்களில் நாலைந்து பேர் உபயோகமற்றவர்கள் என்றே நினைக்கிறேன்.

இந்த பேர விவகாரம் சட்டுப்புட்டென்று முடிந்தால் தேவலை. நாட்டில் பல பிரச்னைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. எந்தத் துறைக்கு யார் யார் அமைச்சர் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும். புதுமுகங்கள் யார் யார் என்று தெரிந்துகொள்ளவும் ஆசை.

பேரம் பேசுதல்

நான் பேசவருவது 'Art of Negotiations' பற்றி. இதை, பேரம் பேசுதல் என்று தமிழில் சொன்னால் நீர்த்துப்போகிறதோ என்று சந்தேகம்.

தொழில்முறை நெகோஷியேஷனில் பல ஆட்களைப் பார்த்திருக்கிறேன். சிலர் திகில் ஏற்றும் ஆசாமிகள். இந்தாள் மூஞ்சியில் மறுபடி முழிக்கவே கூடாது என்று தோன்றும். ஆனால் அதே ஆசாமியே, கருணையே வடிவாக, அன்பொழுக மீண்டும் நம்முடன் தொடர்புகொண்டு பேசுவார். பத்து நாள் முன்தான் நம்முடன் ஒரு டீல் போட்டிருப்பார். அதில் நம் துண்டு, கோமணம் என்று அனைத்தையும் உருவிக்கொண்டு போயிருப்பார். எப்படி, இந்த ஆளுக்கு மீண்டும் நம்மிடம் பேசும் தைரியம் வருகிறது என்று தோன்றும். ஆனால் அவர்களுக்கு இந்த எண்ணமே இருக்காது.

டெக்லான் மர்ஃபி என்ற ஒரு ஐரிஷ்காரர். கிரிக்கின்ஃபோவின் ஆரம்ப காலத்தில் கிரிக்கின்ஃபோவில் முதலீடு செய்திருந்த மைக்கல் வாட் என்பவரின் வலதுகரமாக இருந்தவர். தலையெல்லாம் செக்கச் செவேலென்று முடி இருக்கும். ஐரிஷ்காரர்களுக்கே உரித்தான முன்கோபம். சட்டென்று கொதித்துப் போவார். ஆனால் உண்மையில் இவர்தான் எதிராளி கோபம் கொள்ளுமாறு நடந்துகொள்வார். பேரம் பேசும்போது, எதிராளிக்கும் சற்றேனும் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று அவருக்குத் தோன்றியதே கிடையாது. ஆனால் தொழிலுக்கு அப்பாற்பட்டு நல்ல மனிதர். யாருடனாவது பேரம் பேசச் செல்லும்போது இவர் நம் பக்கம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றவைப்பவர்.

ஆனால் இவரால் எல்லாக் கட்டங்களிலும் உபயோகம் இல்லை. இரண்டு பேருக்குள் ஒரு டீல் நடக்கவேண்டும். இருவரும் டீல் நடக்காமல் எழுந்துபோகமுடியாது என்ற நிலை இருக்கும்போதுதான் இவருக்குப் பலன் இருக்கும். இல்லாவிட்டால் இவர் நடந்துகொள்ளும் விதத்தில் எதிராளி இவருடன் பேசவேண்டும் என்ற அவசியமே பல இடங்களில் இல்லாமல் போய்விடும்.

அந்த மாதிரி இடங்களில் வேறு சில ஸ்மூத் ஆபரேட்டர்கள் தேவை. இவர்கள் வழுக்கிச் செல்லும் வெண்ணெய்க் கட்டிகள் மாதிரி. பண விஷயத்தில் கெட்டியாக இருப்பார்கள். ஆனால் அதே நேரம் நீக்கு போக்காக நடந்துகொள்ளவும் தவறமாட்டார்கள். டீல் நடந்தாகவேண்டும். பேரம் படிந்தாகவேண்டும். கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் கவலை இல்லை. இங்கு ஒரு பைசா படியாது என்ற இடத்திலும்கூட தலையை நுழைத்து எதையாவது செய்துவிடுவார்கள். அப்படி இரண்டு பேரை எனக்கு நன்றாகத் தெரியும். ஒருவர் சென்னையில் இருக்கிறார். ஒருவர் டெல்லியில். ஆனால் இவர்களும் டேஞ்சரஸ் ஆசாமிகள்.

டீல் நடந்தாகவேண்டும் என்பதற்காக பொய் சொல்லத் தயங்காதவர்கள். அவர்கள் சொல்வதை ‘பொய்’ என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. உண்மையை மிகவும் எலாஸ்டிக்காக இழுத்து அதில் உண்மையின் சுவடே இல்லாமல் செய்துவிடுவது. இவர்களின் பலமே இவர்களது டெலிஃபோன் டைரக்டரி. எல்லாருடனும் எப்போதும் தொடர்பில் இருந்தபடியே இருப்பார்கள். உங்களை எந்த பார்ட்டியிலாவது பார்த்தால் போதும். உங்களால் எப்போதாவது ஏதாவது நன்மை கிடைக்கும் என்று அவர்களுக்குத் தோன்றினால், வலிய வந்து, பேசி, நட்பைப் பெருக்கிக்கொள்வார்கள்.

இவர்கள் செய்யும் நெகோஷியேஷனும் சுவாரசியமாக இருக்கும். எதிராளி முறைத்தால் இவர்கள் பணிவார்கள். எதிராளி சும்மா இருந்தால், இவர்கள் ஏறுவார்கள். ஆனால் கடைசியில் டீலை எப்படியாவது முடித்துவிடுவார்கள். டீல் முடிந்தால் சந்தோஷம்தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. எந்த ஒரு டீலிலும் அடுத்து செய்யவேண்டிய வேலைகள் என்று பல உள்ளன. அந்த வேலைகளைச் செய்யவேண்டியவர்களுக்குத்தான் தர்ம சங்கடம். அவர்கள் சார்பில், நம் நெகோஷியேட்டர்கள் அந்த அளவுக்கு சத்தியங்களை வாரி இறைத்திருப்பார்கள்.

நான் பார்த்த வெகு சிலர்தான் தொழில் நெகோஷியேஷனில் நியாயமாக நடந்துகொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள். வேறு சிலர் பரிதாபகரமானவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு சிரித்துப் பேசவும் தெரியாது. ஸ்மூத்தாக வேலையை முடிக்கவும் தெரியாது. ஆனால் அவர்கள் நாளடைவில் காணாமல் போய்விடுவார்கள்.

Friday, May 22, 2009

இயல்பியல் பேராசிரியர் அனந்தன்

நேற்று இயல்பியல் பேராசிரியர் அனந்தனைச் சந்தித்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு இப்போது 74 வயது ஆகிறது. சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். முற்றிலும் புதிய முறையில் இயல்பியல் புத்தகம் ஒன்றை எங்களுக்காக எழுதிக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் முதலில் இந்தப் புத்தகம் அடுத்த மூன்று/நான்கு மாதங்களில் வெளியாகும். பின்னர் தமிழாக்கம் வெளியாகும்.

சென்னையில் Physics Society என்று தொடர்ந்து 38 வருடங்கள் நடத்திவந்துள்ளார். இயல்பியலை சந்தோஷமாகக் கற்பது என்பதுதான் இந்தக் குழுவின் நோக்கம். சென்னையில் படித்த பலர் இவரைப் பற்றியும் இந்த சொசைட்டி பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம்.

இவர் 1951-ல் எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும், மேற்கொண்டு படிக்கவைக்க இவரது தந்தையால் முடியவில்லை. சில நாள் வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போதுதான் நிறைய அறிவியல் புத்தகங்களைப் படித்தாராம். பின்னர் அரசு வேலை ஒன்று கிடைத்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகள் திருச்சியில் ரெவின்யூ டிபார்ட்மெண்டில் வேலை செய்துள்ளார். அந்த ஏழு ஆண்டுகள்தான் தன் வாழ்க்கையிலேயே முற்றிலும் உபயோகமில்லாதவை என்று கருதுகிறார்.

1958-ல் திடீரென மேற்கொண்டு படிக்கவேண்டும் என்று முடிவுசெய்தார். ஆனால் உற்றார் உறவினர் அனைவரும் வேலையை விட்டுவிட்டு படிக்கப் போய், வீணாகிப் போகாதே என்று எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளை மீறினார். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்தக் கல்லூரியும் ஏழு ஆண்டுகள் படிப்பிலிருந்து விலகி இருந்த ஒருவருக்கு பி.யூ.சியில் இடம் தர விரும்பவில்லை. அப்போதெல்லாம் தொலைநிலைக் கல்வி கிடையாது. கடைசியில் திருப்பதியில் ஒரு கல்லூரியில் பி.யூ.சி படிக்க இடம் கிடைத்தது.

அனந்தன் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியுள்ளார். பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி அனுப்புவது வழக்கம். இவரது ஆர்வம் அறிவியல் படிக்கவேண்டும் என்பது. ஆனால் மேற்படிப்பில் அறிவியல் கிடைக்குமா என்று சந்தேகம். ரேடியோ அலைகள் தொடர்பான சிலவற்றை யோசித்துக்கொண்டிருந்த இவர், தன் வாழ்நாளில் எப்படியும் அறிவியல் ஆராய்ச்சியார் ஆகப்போவதில்லை என்று முடிவுசெய்து, குறைந்தபட்சம் தன் கருத்துகளை ஒரு கதையாகவாவது எழுதிவிடலாம் என்று முடிவுசெய்துள்ளார்.

ரேடியோ அலைகள் தொடர்பான தன் கருத்துகளை ஒரு கதைக்குள் புகுத்தி அதை ஆனந்தவிகடனுக்கு அனுப்ப, அது 1958-ல் அல்லது 1959-ல் விகடனில் பிரசுரமாகியுள்ளது. அதைப் படித்த பலரும் இவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். (விகடன் அலுவலகத்தில் கேட்டு இவரது முகவரியைப் பெற்றிருக்கவேண்டும்.) அப்போது இவர் திருப்பதியில் பி.யூ.சி படித்துவந்தார். அப்படி இவருக்குக் கடிதம் எழுதிய ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயல்பியல் பிரிவில் ஆராய்ச்சி மாணவராக இருந்த நாகராஜன் என்பவர். விரைவில் இருவருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து ஏற்பட்டது.

நாகராஜன் வேறொரு விஷயமாக ஆந்திரா சென்றிருந்தபோது அனந்தனைப் போய்ப் பார்த்துள்ளார். பி.எஸ்சி மேற்படிப்புக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தால், தான் இடம் வாங்கித் தருவதாகச் சொல்லியுள்ளார். அதேபோல அனந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, பின்னர் எம்.எஸ்சி இயல்பியல் படித்தார்.

பட்டப்படிப்பின்போது, வகுப்பில் நிறையக் கேள்விகள் கேட்பாராம். இதனால் ஆசிரியர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்தப் பையன் வகுப்பில் ரொம்பத் தொல்லை கொடுக்கிறான் என்று ஸ்டாஃப் ரூமில் பேச்சு வந்துள்ளது. அதைக் கேட்ட நாகராஜன், அனந்தனிடம், “ஏனப்பா இப்படித் தொல்லை கொடுக்கிறாய்?” என்று விசாரிக்க, அன்றுமுதல் வகுப்புகளில் கேள்வியே கேட்பதில்லை என்று அனந்தன் முடிவுசெய்துள்ளார்.

படித்து முடித்தபின், அனந்தன் ஆசிரியர் வேலை தேடி, பின் இயல்பியல் பாடம் நடத்தும் ஆசிரியரானார். கடனெழவே என்று பாடம் நடத்தாமல் மாணவர்கள் இயல்பியலைச் சந்தோஷமாக ரசித்துப் படிக்கவேண்டும் என்பதற்காக பாடங்களை மிகவும் சுவாரசியமாக்கினார். அத்துடன் problem solving என்பதை கவனமாக முன்வைத்தார். சும்மா, புத்தகத்தில் உள்ள விஷயங்களை உருப்போடுவதால் பிரயோஜனம் கிடையாது அல்லவா? ஆனால், நமது கல்லுரிக் கல்விமுறையில் எக்கச்சக்கக் குறைபாடுகள்.

அதனால்தான், தனியாக பிஸிக்ஸ் சொசைட்டி என்பதை உருவாக்கினார். புத்திசாலிப் பையன்கள்/பெண்கள் அங்கே குழும ஆரம்பித்தனர். ஆனால் அப்படி அங்கு வருபவர்கள் எல்லோரும் அறிவியலை நாடி ஓடாமல், எஞ்சினியரிங் படிக்கச் சென்றனர். பலர் ஐஐடி சென்றனர். ஆனாலும் இவர் மனந்தளராமல் ஒவ்வோர் ஆண்டும் இயல்பியலை சில பத்து மாணவர்களிடமாவது கொண்டுசேர்த்தார்.

இன்று வயதான நிலையில் அவரது மாணவர்கள் பலரும் அவரை புத்தகம் எழுதச் சொல்லி நெருக்கியுள்ளனர். அதனால் அவர் தன் முதல் புத்தகத்தை எழுதுகிறார். இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க உரையாடலாக இருக்கும். ஆசிரியர் ஒருவரிடம் மாணவர்கள் உரையாடுவதன்மூலம் இயக்கவியல் விளக்கப்படும். கேள்வி கேட்பது என்பதை மிக முக்கியமானதாக இந்தப் புத்தகம் முன்வைக்கும்.

இந்தப் புத்தகம் மூலமும், மேலும் சில புத்தகங்கள் மூலமும், கல்விக்கான புத்தகங்களில் நாங்கள் காலடி எடுத்துவைக்கிறோம்.

பேராசிரியர் அனந்தனிடம் எப்போது வேண்டுமானாலும் இயல்பியல் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். நேற்று வெகுநேரம் மில்லிகனின் Oil Drop சோதனை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மின்னணுவின் மின்னூட்டம் என்ன என்று கண்டறியும் சோதனை. இதைக் கண்டுபிடித்ததற்காக மில்லிகனுக்கு 1923-ல் நோபல் பரிசு கிடைத்தது.

மின்னணு பற்றி அறிவியல் வலைப்பதிவுக்காக ஒரு விரிவான பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். தாம்சன், மில்லிகன், ரூதர்ஃபோர்ட் என்று தொடரும் ஒரு பயணம். விரைவில் அந்தப் பதிவை வெளியிடுகிறேன்.

Thursday, May 21, 2009

ராஜீவ் காந்தி நினைவு நாள்

இன்று செய்தித்தாள்களில் வந்திருந்த விளம்பரங்களைப் பார்த்ததும்தான் ராஜீவ் காந்தி நினைவு நாள் ஞாபகம் வந்தது. இப்போதாவது ராஜீவ் காந்தியின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் என்று காந்தி குடும்பம் நினைக்குமா? ஈழத் தமிழர்களை எதிரிகளாகக் கருதாமல், அவர்கள் வாழ்வு வளம்பெற காந்தி குடும்பமும் காங்கிரஸும் வேலை செய்யுமா?

காங்கிரஸ் - திமுக

ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி பாராட்டப்படவேண்டியவர்கள்.

இம்முறை அமைச்சரவை உருவாக்குவதில் சென்ற முறை இருந்ததுபோலப் பிரச்னைகள் இருக்காது. சென்றமுறை கருணாநிதி காங்கிரஸ் கழுத்தில் கத்தி வைத்து இடங்களை வாங்கினார். கையெழுத்து போட்டுக் கொடு என்று மிரட்டினார். பிறகு தருவேன் என்று சொன்ன இடங்களைத் தரவில்லை என்று முறைத்தார். பிறகு சண்டை, சமாதானம் எல்லாம் பேசி கேட்ட இடங்கள் எல்லாம் கிடைத்தபின்தான் சந்தோஷம் அடைந்தார்.

இம்முறை அந்தக் கூத்து அத்தனையும் சோனியா, மன்மோகன் சிங் ஞாபகம் வைத்திருப்பார்கள். எனவே அவர்களும் பேரம் பேசுவார்கள். தொலைத்தொடர்பு கிடையாது. இரண்டு கேபினெட் மந்திரிகள்தான். பாலு, ராஜா கூடாது. இஷ்டம் இருந்தால் எடுத்துக்கொள், இல்லாவிட்டால் போ.

பொதுவாக இது பிற கட்சிகளுக்குப் பெரிய பிரச்னை இல்லை. திரிணமுல் காங்கிரஸுக்கு இதனால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் கருணாநிதிக்கு பெரிய சிக்கல். ஒரு மகன். ஒரு மகள். ஒரு பேரன். பேரன் சண்டை போட்டுக்கொண்டு போனாலும் மீண்டுவந்ததும் தொலைக்காட்சி மூலம் நிறைய ஆதரவு கொடுத்தவர். கட்சி ஜெயிக்க நிறைய பண மற்றும் இத்யாதி உதவிகளையும் செய்திருக்கலாம். காங்கிரஸ் இரண்டு கேபினட் மந்திரிகளைத்தான் கொடுப்போம் என்று சொன்னால் என்ன ஆவது? அழகிரிக்கு ஒரு கேபினட் மந்திரி பதவி கொடுத்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மதுரை பற்றி எரியும். தயாநிதிக்குக் கொடுத்தே ஆகவேண்டும்! இல்லாவிட்டால் சன் டிவி முறைத்துக்கொள்ளும். பெண் பாவம் இல்லையா?

கடைசியில் பெண்ணுக்கு மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட் கிடைக்கலாம். அவரும் போனால் போகிறது என்று அதை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனாலும் இந்த காங்கிரஸுக்கு இந்த அளவுக்கு அழிச்சாட்டியம் கூடாதுதான். வேண்டுமென்றால் அவர்கள் ராகுலுக்கு நான்கைந்து மந்திரி பதவிகள் கொடுத்துக்கொள்ளட்டுமே? பிரியங்காவுக்கும் கூட.

***

லாலு பிரசாத் யாதவ் மீதான மரியாதை அதிகரித்துள்ளது. தனது கட்சி தோற்றது தான் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காததால்தான் என்று ஒப்புக்கொள்கிறார். தனக்கு அமைச்சரவை கிடைக்காவிட்டால் ஒன்றும் பிரச்னை இல்லை என்கிறார். காங்கிரஸ் கொடுக்காவிட்டால் அதைத் தன்னால் புரிந்துகொள்ளமுடியும் என்கிறார். மக்களை ‘சோற்றால் அடித்த பிண்டம்’ என்று திட்டவில்லை. காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என்கிறார்.

நான் சோனியாவுக்கு ஒரு விண்ணப்பம் போடப்போகிறேன். லாலுவுக்கு ரயில்வே மினிஸ்ட்ரி இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது பார்த்துப் போட்டுக்கொடுங்களேன். மாட்டுத் தீவன டிபார்ட்மெண்ட் ஆக இருந்தாலும் பரவாயில்லை! எவ்வளவு நல்ல மனிதர். கருணாநிதி போன்று ஜெயித்தாலும் தோற்றாலும் மூக்கால் அழும் கேஸ்களுக்கு முன், லாலு தெய்வம் போன்றவர்.

***

காங்கிரஸ், தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கவேண்டும் என்பது என் கருத்து. திமுகவுக்குக் கொடுக்க மனமில்லாவிட்டால், பதிலுக்கு காங்கிரஸ், மத்தியில் திமுகவுக்கு ஒரு அமைச்சரவை இடம் கூடக் கொடுக்கக்கூடாது.

***

2004-ல் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை உருவாவது பற்றி நான் எழுதிய சில பதிவுகள்:

புது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு
புதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்
அமைச்சரவை மாற்றங்கள்

Wednesday, May 20, 2009

பன்றிக் காய்ச்சல்: கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்

அப்டேட்: மருத்துவர் புருனோவின் வேலை காரணமாக, இந்த நிகழ்ச்சி ஒரு நாள் தள்ளி, வியாழன், 28 மே 2009 அன்று நடைபெறும்.

27 மே 2009, புதன்கிழமை, 28 மே 2009, வியாழக்கிழமை, மாலை 6.00 மணிக்கு “பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல்” பற்றி மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ், கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் பேசுகிறார்.

கடந்த சில வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (Swine Fever) என்பது பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதர்களைத் தாக்கும் A (H1N1) வகை இன்ஃப்ளூயென்ஸா வைரஸ், மெக்சிகோ நாட்டில் பலரைப் பீடித்தது. அங்கிருந்து பரவி இன்று உலகில் பல நாடுகளில் 10,000 பேருக்கும்மேல் இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

நம் அரசும் பத்திரிகையில் நிறைய விளம்பரங்களைச் செய்கிறார்கள். தமிழகத்தில் இரண்டு பேரை இந்த வைரஸ் பீடித்துள்ளது என்கிறார்கள். இந்தக் காய்ச்சல் pandemic என்று சொல்லப்படக்கூடியது. இது சட்டென்று பரவி, நாட்டின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை செல்லக்கூடியது. பல நாடுகளுக்கும் செல்லக்கூடியது.

இதைக் கண்டு நாம் பயப்படவேண்டுமா? இந்த வைரஸ் எப்படி மனிதர்களை பாதிக்கிறது? இதனைத் தடுக்கமுடியுமா? ஏன் பரவுகிறது? நாம் என்ன தடுப்பு முயற்சிகளைக் கையாளவேண்டும்? தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும்? அரசு என்ன செய்யவேண்டும்?

இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கும் விடை சொல்லப்போகிறார் மருத்துவரும் பிரபல வலைப்பதிவருமான புருனோ.

தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

Tuesday, May 19, 2009

கலப்புப் பண்ணை

இன்று மக்கள் தொலைக்காட்சியில் விவசாயம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். கரூரில் ஒரு விவசாயியின் பண்ணையைப் படம் பிடித்துக் காட்டினர். இந்தப் விவசாய முறையை கலப்புப் பண்ணை (Mixed farming) என்று அழைத்தனர்.

இவர் நிலத்தில் புல் வளர்க்கிறார். கோகோ-2 ரகப் புல் என்றார். புல் பார்க்க கரும்புத் தோகை மாதிரி இருந்தது. அந்தப் புல்லை மாடுகளுக்குக் கொடுக்கிறார். மாடு கறக்கும் பால், அதிலிருந்து கிடைக்கும் தயிர், நெய், மாட்டின் சாணி, மூத்திரம் ஆகியவற்றைக் கலந்து பஞ்சகவ்யம் தயாரிக்கிறார்.

இந்தப் பஞ்சகவ்யத்தை கோழித் தீவனத்துடன் கலந்து கோழிக்குக் கொடுக்கிறார். கோழியின் கழிவில், ஒருவித ‘ஈ’ முட்டை இடுகிறது. அந்த முட்டைகள் புழுக்கள் ஆகின்றன. அந்தப் புழுக்களை உணவாகப் போட்டு, கலர் மீன்கள் வளர்க்கிறார்.

அவரது பண்ணையில் ஒரு குளம் உள்ளது. அந்தக் குளத்தில் மீன்கள் வளர்கின்றன. அந்தக் குளத்தில் ஒருவித பாசி வளர்க்கிறார். அதற்கு ஏதோ பெயர் சொன்னார். மனத்தில் வாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்தப் பாசியை கோழி, மாடுகள் தீவனத்துடன் கலக்கிறார்.

பிறகு, கோழி எச்சம், வைக்கோல், புல் கழிவுகள் ஆகியவற்றைச் சேர்த்து, அதில் காளான் விதைகளைக் கலந்து காளான் (Mushroom) வளர்க்கிறார். காளான் அறுவடை செய்து மீதமான கழிவுகளை உரமாகப் பயன்படுத்துகிறார்.

மீன் வளர்க்கும் குளம், தொட்டியில் உள்ள கழிவு நீரை, செடி, மரங்களுக்குப் பாய்ச்சுகிறார். தென்னை, அதற்கு அருகில் வாழை, அதற்கு அருகில் காய், பழச் செடிகளை வளர்க்கிறார்.

கோழி எச்சக் கழிவுகளில் மண்புழு வளர்க்கிறார். அந்த மண்புழுவின் கழிவு மீண்டும் உரமாகப் பயன்படுகிறது.

கோழி, மாடு, மீன் என அனைத்துமே நல்ல லாபம் தருவதாகச் சொல்கிறார். உதாரணமாக, காளான் பயிரிட ஆகும் செலவு 25 ரூபாய். காளானை அறுவடை செய்து விற்றால் அவருக்குக் கிடைப்பது 125 ரூபாய். இதற்கு ஆகும் காலம் வெறும் 15 நாள்கள்!

கவனியுங்கள்... இவர் ரசாயன உரமே பயன்படுத்துவதில்லை. எல்லாமே முற்றிலும் இயற்கை எருக்களைப் பயன்படுத்தும் இயற்கை விவசாயம் (Organic Farming). நடக்கும் ஒவ்வொரு செயலும் இயற்கையாக நடக்கும் உயிரியல் சுழற்சி. இந்த நிகழ்ச்சியை ஐந்தாம் வகுப்பு செல்லும் என் மகள் பார்த்துவிட்டு, ஏன் இவையெல்லாம் அவர்கள் பள்ளிப் பாடப் புத்தகத்தில் வருவதில்லை என்று கேட்டாள். உணவு உற்பத்தியுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சேர்ந்து மனத்துக்கு சந்தோஷமாக இருந்தது. இவர் தண்ணீரையும் அதிகமாகச் செலவுசெய்வதில்லை.

எப்போது தொலைக்காட்சியில் பார்த்தாலும் அழுது வடிந்தபடி இருக்கும் விவசாயிகள், “அரசுதான் தங்களுக்கு உதவவேண்டும்” என்று புலம்பும் விவசாயிகளுக்கு நடுவில், இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

விவசாயத்திலும் மூளையைப் பயன்படுத்தி, முதலீட்டை கவனமாகப் போட்டு, உழைப்பைச் சரியாக அளித்தால், அங்கும் நல்ல லாபம் பார்க்கலாம் என்று தெரிகிறது.

பன்றி வளர்க்கும் என் ஆசையுடன் இந்த மாதிரி கலப்புப் பண்ணை நடத்தும் ஆசையும் இப்போது சேர்ந்துகொண்டுள்ளது.

Monday, May 18, 2009

ஈக்காடுதாங்கல் கிழக்கு புத்தகக் கண்காட்சி

பல்லாவரம், பாடி கண்காட்சிகளுடன் இப்போது கிழக்கு பதிப்பகம், ஈக்காடுதாங்கலில் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.

இடம்:

ஸ்ரீ எம்.என்.பி கல்யாண மண்டபம்
புது எண் 41, பழைய எண் 145, ஜவாஹர்லால் நேரு மெயின் ரோடு
அம்பாள் நகர்
ஈக்காடுதாங்கல்
சென்னை 600 032

நாள்: மே 16 முதல்

நேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

கிழக்கு கண்காட்சிகள் நடந்த, நடக்கும் இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம், பாடி.

Wednesday, May 13, 2009

ஜெஃப்ரி ஆர்ச்சருடன் இரு தினங்கள்

11 மே 2009 அன்று நுங்கம்பாக்கம் லாண்ட்மார்க்கில் ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது Paths of Glory புத்தகத்தைப் பற்றிப் பேச வந்திருந்தார். கூட்டமான கூட்டம். 700 பேருக்கு மேல் அந்தப் புத்தகக் கடையில் அனைத்து மூலைகளிலும் உட்கார்ந்திருந்தனர். ஏசி திண்டாடிப் போய்விட்டது. காற்றாடிகள் போதவில்லை. மக்கள் வியர்வையில் புழுங்கினர்.

ஆர்ச்சரைப் பார்க்க வந்த கூட்டத்தில் பெரும்பாலானவை இளைஞர்கள்தான். கல்லூரியில் படிக்கும் ஆண்களும் பெண்களும். 20 வயதைத் தொடாத இளைஞர்கள் 50% மேல் இருந்தனர். தமிழ்ப் பதிப்பாளராக இதையெல்லாம் பார்க்கும்போது பொறாமையாக இருந்தது.

தமிழ் எழுத்தாளர் ஒருவரைப் பார்க்க இப்படி நூற்றுக்கணக்கில் கூட்டம் வரும் நாள் எந்நாளோ என்று நினைத்துக்கொண்டேன்.

ஆர்ச்சர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக சில காலம் இருந்திருக்கிறார். (மூன்று ஆண்டுகள் ஜெயிலிலும் இருந்திருக்கிறார் என்பது வேறு விஷயம்! அவர் ஜெயிலுக்குப் போன கதையே சுவாரசியமானது! ஆனால் மனிதர் கில்லாடி. ஜெயிலுக்கு போன அனுபவத்தை வைத்து மூன்று தொகுதி non-fiction புத்தகம் ஒன்றும் ஒரு நாவல் ஒன்றும் எழுதிவிட்டார்!) ஒரு தேர்ந்த அரசியல்வாதியான ஆர்ச்சருக்கு சென்னை மக்களை பேச்சால் வசியப்படுத்துவது எப்படி என்று நன்கு தெரிந்திருந்தது.

தனது பல புத்தகங்களையும் பற்றிப் பேசியவர், எதிர்பார்த்ததுபோல, Paths of Glory புத்தகத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். அதை எழுதக் காரணம் என்ன என்பதில் தொடங்கி, கதையின் முக்கியமான சில பகுதிகளைப் பற்றிப் பேசினார். பிறகு தான் அடுத்து எழுத இருக்கும் சிறுகதைத் தொகுதியின் 12 கதைகளில் இருந்து ஒரு கதையை மட்டும் சொன்னார். (அதை முன் வரிசையில் இருந்த யாரோ செல்பேசியில் பிடித்து யூட்யூபில் போட்டுவிட்டதாக குறைபட்டுக்கொண்டார் மறுநாள்.)

ஆர்ச்சரின் பலமே அவரது கதை சொல்லல். அவரது எழுத்தில்கூட அவர் நம் அருகே நின்று நமக்குக் கதை சொல்வது போலவே இருக்கும். அவருக்குக் கதைகளுக்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது என்று யாரோ கேட்ட கேள்விக்கு, Twelve Red Herrings தொகுப்பிலிருந்து ஒரு கதையைச் சொன்னார். அந்தக் கதை எப்படிக் கிடைத்தது என்ற கதையையும் சொன்னார்.

சுமார் 7.30-க்கு ஆரம்பித்த நிகழ்ச்சி, இரவு 11.00 மணி வரை சென்றதாம். பல கேள்விகளுக்கும் பதில் சொன்ன ஆர்ச்சர், வரிசையில் இருந்த அனைவருக்கும் கையெழுத்து போட்டுக்கொடுத்தார்.

அடுத்த நாள் (12 மே 2009), சில முக்கியஸ்தர்களுக்கு மட்டும் தாஜ் கோரமாண்டல் ஓட்டலில் ஆர்ச்சருடன் இரவு உணவு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நாள் இரவு பேசியதிலிருந்து மிகக் குறைவான மாற்றங்களே இருந்தன. ஆனாலும் மிக சுவாரசியமான புதுத் தகவல்கள் கிடைத்தன.

Not a penny more, not a penny less - புத்தகம் அவர் எழுதிய முதல் நாவல். அது ஹார்ட்பவுண்ட் 3,000 பிரதிகள் அடிக்கப்பட்டது. அதில் 117 பிரதிகள் இந்தியாவில் விற்றதாம்! அடுத்து பேப்பர்பேக்கில் 25,000 பிரதிகள் அடித்தார்களாம். முதல் மாதத்திலேயே விற்றுவிட்டது. உடனே தன் பதிப்பாளரிடம் சென்று கேட்டதில் அவர்கள் இந்தப் புத்தகத்தை மேற்க்ண்டு அச்சிடப்போவதில்லை என்றார்களாம். இவர் கெஞ்சிக்கேட்டுக்கொண்டதற்காக அடுத்து 25,000 பிரதிகள் அடித்தார்கள். மீண்டும் ஒரே மாதத்தில் தீர்ந்துவிட்டது. மீண்டும் கெஞ்சல், மீண்டும் 25,000 பிரதிகள். இப்படி ஒவ்வொரு மாதமும் கெஞ்சிக் கெஞ்சியே அவர்களை புதிதாகப் பிரதிகள் அடிக்கச் சொன்னாராம். இன்றுவரை 2.5 கோடி பிரதிகளுக்கு மேல் இந்தப் புத்தகம் விற்றுள்ளதாம்!

அடுத்து, இவர் எழுதிய கேன் அண்ட் ஏபல் புத்தகம் பற்றிச் சொன்னார். இவர் யார் என்றே தெரியாமல், அமெரிக்காவில் சைமன் அண்ட் ஷுஸ்டர் 3 மில்லியன் டாலர் கொடுத்து அமெரிக்க உரிமையை வாங்கினார்கள். புத்தகம் விலை $30. பெஸ்ட்செல்லர் பட்டியலில் முதல் 15-க்குள் வந்தால், புத்தகத்தின் விலை பாதியாகக் குறைக்கப்படும் - $15 என்று ஆகும். அப்பொது விற்பனை மேலும் அதிகரிக்குமாம். (இது என்ன கணக்கு என்று தெரியவில்லை!)

அங்குள்ள தொலைக்காட்சிகளில் இவர் முகம் காண்பித்து, கேன் அண்ட் ஏபல் என்ற பெயரைச் சொன்னால், புத்தகம் 15-க்குள் வர வாய்ப்பு உண்டு. இவரை கன்கார்ட் விமானத்தில் ஏற்றிக்கொண்டு வந்து நியூ யார்க்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உட்கார வைக்கிறார்கள். ஆறு நிமிட ஸ்லாட். அதில் முதல் இரண்டு நிமிடங்களில் ஜிம்மி கார்ட்டரின் சகோதரர் பில்லி கார்ட்டர் தான் உருவாக்கும் ஒரு பியர் பானத்தை அறிமுகம் செய்கிறார். அடுத்த இரண்டு நிமிடங்கள் மிக்கி மவுஸ் என்றார்... ஒருவேளை டிஸ்னி ஆசாமிகள் மிக்கி மவுஸ் பாத்திரத்தை அறிமுகம் செய்கிறார்களா என்ன என்று எனக்குப் புரியவில்லை. கடைசி இரண்டு நிமிடம் ஆர்ச்சர் வரவேண்டும்.

சைமன் அண்ட் ஷுஸ்டர் ஆசாமிகள், ஆர்ச்சரிடம் கெஞ்சிக் கூத்தாடி, இரண்டு நிமிடத்துக்குள் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ‘கேன் அண்ட் ஏபல்’ என்பதைச் சொல்லிவிடுமாறு கேட்டுகொள்கிறார்கள். ஆனால் ஆர்ச்சருக்கு முன் இருக்கும் இருவரும் மொத்தமாக 5 நிமிடங்களை எடுத்துக்கொள்ள, ஆர்ச்சர் தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு நிமிடத்தில் கன்கார்ட் விமானத்தைப் பற்றிப் புகழ, நேரம் போய்விடுகிறது. புத்தகப் பெயரைச் சொல்லமுடியவில்லை.

அடுத்து சிகாகோ தொலைக்காட்சி. அங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர் புத்தகத்தைப் பார்க்கிறார். உடனே உதவியாளர் ஒருவரிடம், “ஏன் இப்படி மதம் தொடர்பான புத்தகங்களைக் கொண்டுவந்து என்னைக் கழுத்தறுக்கிறீர்கள்” என்று கடுப்படுக்கிறார். அவர் புத்தகத்தைப் படிக்கவேயில்லை என்பது ஆச்சரியம் அல்ல. ஆனால் அவருக்கு இது ஒரு நாவல் என்பதுகூடத் தெரிந்திருக்கவில்லை. அதைவிட மோசம், அதே நிகழ்ச்சியில் எவரெஸ்ட்மீது ஏறிய சர் எட்மண்ட் ஹிலாரியின் பேட்டியும் நடக்க, ஆர்ச்சருக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை.

அடுத்து கடைசி வாய்ப்பு. சான் ஃபிரான்சிஸ்கோவில் தொலைக்காட்சியில். சைமன் அண்ட் ஷுஸ்டர் பதிப்பாளர்களுக்கு அழுகையே வந்துவிடும் போல் உள்ளது. “அய்யா, இங்காவது கேன் அண்ட் ஏபல் என்பதை உச்சரித்துவிடுங்கள்” என்று கெஞ்சுகிறார்கள். நிகழ்ச்சி நடத்துபவர் வருகிறார். எடுத்த எடுப்பிலேயே சொல்கிறார்: “நான் கடந்த இரு தினங்களாக ஒரு புத்தகத்தைப் படித்து வருகிறேன். கேன் அண்ட் ஏபல். என்னால் தூங்க முடியவில்லை. புத்தகத்தைக் கையில் எடுத்தால் வைக்கவே முடியவில்லை.”

அந்த வாரத்துக்குள் புத்தகம் பெஸ்ட்செல்லர் பட்டியலில் முதலாவது இடம். அதன்பின் ஆர்ச்சர் திரும்பிப் பார்க்கவேயில்லை!

அந்த மூன்றாவது நிகழ்ச்சியிலும் ஆர்ச்சர் வாயிலிருந்து புத்தகத்தின் பெயர் வரவில்லை. ஆனால் லாண்ட்மார்க்கிலும் சரி, தாஜ் கோரமாண்டலிலும் சரி, ஆர்ச்சரின் வாயில் Paths of Glory நொடிக்கு ஒருதரம் வராமல் இல்லை.

நிகழ்ச்சி முடிந்து, இரவு உணவு ஆரம்பிக்கிறது. நான் சூப்பை எடுத்துக்கொண்டு வந்து எஸ்.முத்தையாவின் அருகில் உட்காரும்போது ஆர்ச்சரின் உதவியாளரும் வெஸ்ட்லாண்டின் தலைமை நிர்வாகியும் என்னையும் பவித்ரா ஸ்ரீனிவாசனையும் அழைக்கிறார்கள். ஆர்ச்சர் அன்புடன் கைகொடுத்து, தமிழ் மொழிமாற்றம் பற்றிப் பேசுகிறார். அடுத்து எந்தப் புத்தகம் என்று விசாரிக்கிறார். தனது அனைத்துப் புத்தகங்களும் தமிழில் வரவேண்டும் என்று அவருக்கு ஆசை. அவருடன் சிறிது பேசிவிட்டு நகரும்போது, அவர் தன் பக்கத்தில் இருக்கும் சிடிபேங்கின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியிடம் சொல்கிறார்: “அவர்கள் என் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள். என் பதிப்பாளர் இந்திய மொழிகள் பலவற்றிலும் என் புத்தகங்களைக் கொண்டுவரப்போகிறார்.”

நான் மீண்டும் சாப்பாட்டு வரிசையில் சேர்ந்துகொள்கிறேன்.

விஐபி வாக்குச் சாவடி

நம் ஜனநாயகக் கடமை முடிந்தவுடன் அடுத்து பக்கத்துத் தெருவில் முதல்வர் வாக்களித்துவிட்டாரா என்று பார்க்கக் கிளம்பினேன். அவரது வாக்குச் சாவடி அவர் வீட்டுக்கு 25 அடி தள்ளி இருக்கும் சாரதா செகண்டரி ஸ்கூலின் பின்புறம். கிருஷ்ணர் கோயில் இருக்கும் அதே தெரு.

8.15-க்கு, இன்னும் அவர் வரவில்லை, வாக்களிக்கவில்லை என்று தெரிந்தது. எங்கும் செய்தியாளர்கள் கூட்டமாக இருந்தனர்.

Entrance to VIP polling booth - were Karunanidhi is expected to vote

கீழே பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்: “அங்க மக்கள் வேற, போராளிகள் வேற இல்லை. மக்கள்தான் போராளிகள்.” எதிரே நின்றுகொண்டிருந்த ஆண் பத்திரிகையாளர் பதிலுக்குக் கேட்டார்: “அப்ப ஏன் புலிகள் மக்களை துப்பாக்கி முனைல நிறுத்தி வெச்சிருக்காங்க?” வாக்குவாதம் தொடர்ந்தது. கடைசியில் ஆண் பத்திரிகையாளர், “என் விருப்பம் மக்கள் காப்பாற்றப்படணும்கிறதுதான்” என்றார்.

மொபைல் போனை காதில் மாட்டியிருந்த ஒரு பெண் பத்திரிகையாளர், சுவரை நோக்கித் திரும்பி, வெளிச் சத்தம் ஏதும் தனது பேச்சில் நுழைந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன், ஆங்கிலத்தில், “கோயம்புத்தூர் பக்கமெல்லாம் தீவிர ஈழப் போராட்ட ஆதரவாளர்கள் இருப்பதனால், திமுக கூட்டணிக்கு மிகவும் பிரச்னையாக இருக்கும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அது ஏதோ ஒரு சானலில் நேரடியாகப் போய்க்கொண்டிருந்தது.

ஆக, மக்கள் பேசுகிறார்களோ இல்லையோ, பத்திரிகையாளர்களுக்கு இன்று இலங்கைப் பிரச்னை தமிழகத் தேர்தலை எந்த அளவுக்கு பாதிக்கப்போகிறது என்பதுதான் முக்கியமானதாக இருந்தது.

வீடியோ கேமரா ஸ்டாண்டுகள் கருணாநிதிக்காகக் காத்திருந்தன. யாரோ ஒருவர், “9.00-9.30க்கு வந்துடுவார்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். தயாநிதி மாறனுக்கு ஒரு வாக்கு நிச்சயம் கிடைக்கும்.

Video cameras on vigil, expecting Karunanidhi

சற்றுத் தள்ளி, மீண்டும் லாயிட்ஸ் சாலையில் திரும்பினால் ஒரே OB Van மயம். குறைந்தது 10 வண்டிகள், டிஷ் ஆண்டெனா புடைசூழ நின்றுகொண்டிருந்தன.

OB Vans, guzzling diesel, with their dish antennae spread

ஜெயலலிதாவின் வாக்குச் சாவடி எப்படி இருக்கும் என்று நினைத்தேன். போகலாமா என்று யோசித்தேன். பசித்தது. சரவணபவனை நோக்கி நடையைக் கட்டினேன்.

நான் அளித்தேன் வாக்கு...

காலை 7.00 மணி, வாக்குச்சாவடி தொடங்கும்போது இருக்கவேண்டும் என்று கிளம்பிவிட்டேன். எப்போதும் வழக்கமாக வாக்களிக்கும் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூல் இம்முறை வாக்குச் சாவடி கிடையாது. அதற்கு பதில் 76-ம் வார்டைச் சேர்ந்தவர்கள் செல்லவேண்டியது ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் சன்னிதி, 2-ம் தெருவில் உள்ள உதவிப் பொறியாளர் அலுவலகம்.

Central Madras, Ward 76, Polling booth

76-ம் வார்டுக்கான வாக்குப்பதிவு நடக்கும் அறை வாசலுக்கு நான் செல்லும்போது ஏற்கெனவே எனக்கும் முன் 6 பேர் நின்றிருந்தனர். ஆனால் அலுவலர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்துடன் போராடிக்கொண்டிருந்தனர். “இத அழுத்துங்க சார்” என்றார் ஒரு பெண் அலுவலர். “அதைத்தாம்மா அழுத்தறேன்” என்றார் ஆண் அலுவலர் ஒருவர். சிறிது நேரம் அவர்கள் எதை எதையோ அழுத்த, வரிசையில் நின்றவர்கள் பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தனர். என் முன் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் - சாஃப்ட்வேர் ஆசாமி போல இருந்தார் - கத்த ஆரம்பித்தார்.

“எல்லாம் இவங்களால ஒரே inefficiency. நாடே இவங்களாலதான் வீணாகுது. ஏழு மணிக்கு எல்லாம் ரெடியா இருக்கவேண்டாமா? ரெண்டு மாசமா என்ன டிரெய்னிங் எடுத்தீங்க. எவனுக்கு ஓட்டு போட்டாலும் வேஸ்ட்தான்.”

“சார், ஏன் கோபப்படறீங்க? அவங்களே டென்ஷன்ல இருக்காங்க. கொஞ்ச நேரம் பொறுமையா இருங்களேன்?” என்றேன் நான்.

அவர் தனக்கு அவசர வேலைகள் பல இருப்பதாக அலுத்துக்கொண்டார். 7.15 ஆனது. அலுவலர்கள் பதற்றத்துடன் மெஷினை சரி செய்தனர். அவர்களிடமிருந்து பதிலுக்கு, கோபமாக ஒரு வார்த்தை கிடையாது.

இதற்குள் முன்னால் இருந்த கணவன் - மனைவி ஜோடி, திடீரென கிளம்பி வீட்டுக்குப் போக ஆரம்பித்தனர். மணி 7.17-தான்! அப்பா! ஜனநாயகக் கடமை ஆற்ற இன்னும் ஐந்து நிமிடங்கள் பொறுத்திருக்கக்கூடாதா?

கதர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் இருந்த பெரியவர், கையில் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டுவரவில்லை. “இங்கதான் என் பேரோட என் போட்டோ இருக்கே” என்றார். “உங்ககிட்ட ஓட்டுனர் லைசன்ஸ் இருக்கா சார்?” என்றேன். “பொம்பளைங்க கிட்ட அதெல்லாம் இருக்காதே” என்றார். எனக்குப் புரியவில்லை. பின், தன் மனைவியிடம் லைசன்ஸ் கிடையாது என்பதைச் சொல்கிறார் என்று தெரிந்துகொண்டேன். (இன்று பெண்களும் கார், பைக் ஓட்டுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாதா, என்ன?)

இதற்குள் வாக்கு இயந்திரம் சரியாகிவிட, முதலில் வரிசையில் நின்ற ஒருவர் வாக்களித்தார். இரண்டாவதாக இருந்தவர்தான் அலுவலர்களை வாய்க்கு வந்தபடி திட்டிய மாமனிதர். ஆனால் அவர் முறை வந்தபோது, அலுவலர்கள் இன்முகத்துடன் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். அந்த அளவுக்குப் பெருந்தன்மையைக் காட்டிய அவர்களிடம் கடுகடுவென்றே முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தார் இவர்.

என் முன் இருந்த அடையாள அட்டை இல்லாத பெரியவர், என்னை முன்னால் போகச்சொன்னார். “மனைவிய அனுப்பிருக்கேன், அட்டை கொண்டுவர” என்றார். நான் அவருக்கு முன் நகர ஆரம்பித்தபோது, அவரது மனைவி கையில் இரண்டு அட்டைகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்.

இதற்குள் மற்றொரு மிடில் கிளாஸ், அரசு ஊழியராக இருந்து ரிட்டயர் ஆன பெரியவர் அங்கு வந்தார். “எனக்கு இங்க வாக்கு இருக்கான்னு தெரியல” என்றார். நேராக உள்ளே போய் என்னென்னவோ தாள்களைக் காண்பித்தார். தான் சமீபத்தில்தான் லாயிட்ஸ் ரோடுக்கு (அவ்வை சண்முகம் சாலை) வீடு மாற்றல் செய்துகொண்டு வந்ததாகவும், தன் மகனுக்கும் மருமகளுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் வந்துவிட்டதாகவும் தனக்கும் தன் மனைவிக்கு மட்டும் வரவில்லை என்றும் சத்தமாகச் சொன்னார்.

வாக்குச் சாவடி அலுவலர்கள் இவருக்கு எந்த விதத்திலும் உதவ முடியாது. ஆனால் இவரோ அவர்களைப் பார்த்து கன்னாபின்னாவென்று சத்தம் போட ஆரம்பித்தார். அதற்குள் வாக்குச் சாவடிக்குள் இருக்கும் பூத் ஏஜெண்டுகள் அவரை பணிவுடன் இவரை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று உதவ முற்பட்டனர். என்னை முன்னால் அனுப்பிய பெரியவர் இப்போது மீண்டும் பின்னுக்குப் போகச் சொன்னார். அவரது மனைவி முதலில் உள்ளே சென்றார்.

அவர்களுடன் கூடவே ஒரு சிறு குழந்தை (பேத்தி) வந்திருந்தது. வாக்குச் சாவடி அலுவலர்கள் குழந்தை வாக்களிக்கும் இடத்துக்குப் போகக்கூடாது என்றனர். ஏதாவது பட்டனை அது தவறாக அழுத்தினால் பிரச்னை என்றனர். பாட்டியும் தாத்தாவும் வாக்களிக்க, குழந்தை மட்டும் வெளியே அனுப்பப்பட்டது.

அடுத்து என் முறை. என் வரிசை எண்ணை ஒரு பெண் அலுவலர் படிக்க, தள்ளி உட்கார்ந்துகொண்டிருந்த ஓர் ஆண் அலுவலர் அதைச் சரிபார்த்து பெயரை உரக்கச் சொல்ல, அடுத்து ஒரு பெண் அலுவலர் என் முகம் ஒட்டிய பக்கத்தில் என் முகத்தையும் பெயரையும் சரிபார்க்க, அடுத்து ஓர் ஆண் அலுவலர், என் அடையாள அட்டை எண்ணை ஒரு ரெஜிஸ்டரில் எழுதி, என்னைக் கையெழுத்திடச் சொல்லி, என் இடதுகை ஆள்காட்டி விரலில் மை இட்டார். நான் வாக்கு இயந்திரத்தை நெருங்கும் முன், மற்றொரு பெண் அலுவலர் தன்னிடமிருந்த கண்ட்ரோல் பட்டனை அழுத்த, நான் வாக்களிக்கும் பட்டனை அழுத்த... பீப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

முடிந்தது.

அலுவலர்களுக்கு நன்றி கூறி, வெளியே வந்தேன்.

பதிவர் கலந்துரையாடல்: Dr ருத்ரன், Dr ஷாலினி - Child Abuse

ருத்ரன், ஷாலினி கலந்துகொண்டு உரையாடியதன் முதல் பகுதி: ஷாலினியும் ருத்ரனும் பேசியது.

இதன் அடுத்த பகுதி கேள்வி-பதில் உரையாடலை இன்று பிற்பகுதியில் (வாக்களித்துவிட்டு வந்து) சேர்க்கிறேன். கீழே உள்ள சுட்டியிலிருந்து ஆடியோவை MP3 ஆக இறக்கிக்கொள்ளலாம்; அல்லது அங்கிருந்தே கேட்கவும் செய்யலாம்.

11.30 PM: கேள்வி-பதில் உரையாடல் பகுதியையும் சேர்த்துவிட்டேன்.

Good Touch Bad Touch. On Child Abuse. Drs Rudran and Shalini, 10th May 2009. A discussion - mostly in Tamil - organized by Tamil bloggers.

Good Touch Bad Touch. Tamil bloggers interact with Drs Rudran and Shalini, after the two psychiatrists finish their talks.

Monday, May 11, 2009

ஜெஃப்ரி ஆர்ச்சர் இன்று சென்னை லாண்ட்மார்க்கில்

இன்று (11 மே 2009) மாலை 7.00 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் லாண்ட்மார்க் புத்தகக் கடையில் ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது Paths of Glory புத்தகம் பற்றிப் பேசுகிறார். அப்போது தமிழ், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்ட அவரது புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படலாம். தமிழில் கிழக்கு பதிப்பகம் செய்து தந்துள்ள புத்தகங்கள் அச்சாகி கடைக்கு வந்திருக்கக்கூடும். தமிழ்ப் பிரதியில் ஜெஃப்ரி ஆர்ச்சரிடம் கையெழுத்து வாங்கும் வாய்ப்பு ஒருவேளை கிடைக்கலாம்!

முடிவில் ஒரு திருப்பம், ஒரு பைசா குறையாமல் ஒரு பைசா கூடாமல் - ஒவ்வொன்றும் விலை ரூ. 195/-

11.30 மணி அப்டேட்: “முடிவில் ஒரு திருப்பம்” அச்சாகி இன்று தில்லியிலிருந்து வந்துவிட்டது. எனவே புத்தகம் லாண்ட்மார்க்கில் கிடைக்கும். ஆர்ச்சரிடம் கையெழுத்து வாங்குபவர்கள் கட்டாயம் லாண்ட்மார்க் வந்துவிடுங்கள்!

தேர்தல் சுவரொட்டிகள் - திமுக

நேற்று படம் பிடிக்க விட்டுப்போயிருந்த அஇஅதிமுக சுவரொட்டியை இன்று காலை படம் எடுக்கச் சென்றால், ஒன்றுகூடக் காணோம். சுத்தமாகச் சுரண்டப்பட்டிருந்தன. இதற்கென்றே நேற்று இரவு திமுக அணியினர் ஆட்களை அனுப்பியிருக்கிறார்கள் என்று நன்றாகத் தெரிகிறது. அருகில் இருந்த பிற, கட்சி சார்பற்ற போஸ்டர்கள் (அன்னார் மறைந்துவிட்டார், தகனம் இந்த நாளில் இத்தனை மணிக்கு - என்றோ, மூலம் பவுத்திரம் என்றோ சொல்லும் சுவரொட்டிகள்) அப்படியே இருந்தன.

ஆனால், திமுக போஸ்டர்கள் வித்தியாசமான முறையில் ஏதாவது கண்ணில் தென்படும் என்றால் அதையும் காணோம். தயாநிதி மாறன், கைகூப்பி, முகமலர்ந்து சிரிக்கும் போஸ்டர் ஒன்றே போதும் வாக்குகளைச் சேகரிக்க என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும்!


DMK Poster 1: Dayanidhi Maran

DMK Poster 2: A slightly larger version

Sunday, May 10, 2009

தேர்தல் சுவரொட்டிகள் - அஇஅதிமுக

இன்று காலை நடந்துசெல்லும்போது அஇஅதிமுகவின் நான்கு சுவரொட்டிகளைப் பார்த்தேன். பின்னர் படம் எடுத்துக்கொள்ளலாம் என்று நடந்து சென்ற வழியில் மூன்றுதான் கண்ணில் பட்டன. மீண்டும் நான்காவதைப் பார்த்த இடத்துக்குச் சென்று படம் பிடிக்க சோம்பல் என்பதால் மூன்றுடன் விட்டுவிட்டேன். நாளைக் காலையில் நான்காவது அதே இடத்தில் இருந்தால் படம் பிடித்துக் கொண்டுவருகிறேன்.

திமுகவிடமிருந்தோ வேறு சில கட்சிகளிடமிருந்தோ அடுத்த ஓரிரு நாள்களில் இதைப் போன்ற போஸ்டர்கள் வரலாமோ?

AIADMK Poster 1: Rising prices

AIADMK Poster 2: Power cut

AIADMK Poster 3: Sri Lankan Tamil problem

Saturday, May 09, 2009

Child Abuse - கலந்துரையாடல்

மே 10, ஞாயிறு மாலை 4.30 மணி அளவில் வலைப்பதிவர்கள் சேர்ந்து நடத்தும் கலந்துரையாடல் ஒன்று கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் நடைபெறுகிறது. டாக்டர் ஷாலினி, டாக்டர் ருத்ரன் என்ற இரு உளவியல் மருத்துவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அனைவரும் வருக.

உங்கள் வாக்குச் சாவடி எங்கே உள்ளது?

சில நாள்களுக்கு முன் தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களை ஆராய்ந்துகொண்டிருந்தோம். இவை அனைத்தும் தமிழில் உள்ளன. ஆனால் யூனிகோடில் இல்லாமல் ஏதோ ஓர் என்கோடிங்கில் உள்ளன. கூகிளில் தேடி, உங்களது பெயர் எந்தத் தொகுதியில் உள்ளது; உங்களது பெயர் உள்ளதா, இல்லையா; உங்களது வாக்குச் சாவடி எங்கே உள்ளது என எதையுமே கண்டுபிடிக்க முடியாது. ஆக மொத்தத்தில், தகவல்கள் உள்ளன; ஆனால், நமக்குத் தேவையான வகையில் இல்லை.

நாகராஜன், நான், சத்யா ஆகியோர் கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தில் உட்கார்ந்து இதைப் பற்றிப் பேசினோம். எல்காட்டின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் இப்போது சிறுசேமிப்புத் துறையில் இருப்பவருமான உமாஷங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களுடனும் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உமாஷங்கர், தொழில்நுட்பத்தில், முக்கியமாக லினக்ஸ், டேடாபேஸ் போன்றவற்றில் நல்ல அனுபவம் உள்ளவர். மக்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடியை எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு வழி இருந்தால் நன்றாக இருக்கும், அதுவும் மொபைல் போன் மூலமாகக் கண்டுபிடிக்க முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பேச்சு வந்தது. அதை ஒட்டி, அவர் சில தொழில்நுட்ப ஆலோசனைகளைச் சொன்னார். நாகராஜன் புரோகிராமிங்கைச் செய்துமுடித்தார்.

தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 4 கோடிக்கும் மேற்பட்ட ரெகார்டுகள். அந்த அளவுக்குத் தகவல்களை நிர்வகிக்கும் திறனுள்ள சர்வர் கணினிகள் எங்களிடம் கிடையாது. உமாஷங்கரின் உதவியுடன் சில அரசு நிறுவனங்கள்மூலம் இதைச் செய்யலாமா என்று பார்த்தோம். நேரம் இல்லாததால் சரியாகச் செய்யமுடியவில்லை. எஸ்.எம்.எஸ் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் ஒன்றுடன் பேசி, அவர்களது கேட்வேயுடன் இணைக்கவேண்டியிருந்தது. சில நிறுவனங்கள் அதற்கு ஏகப்பட்ட பணம் கேட்டார்கள்.

கடைசியாக, சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இதனைச் செயல்படுத்தலாம் என்று முடிவுசெய்தோம். அந்த அளவுக்கு மட்டுமான தகவல்கள் என்றால் எங்கள் வழங்கிக் கணினியிலேயே செயல்படுத்தலாம். 35 லட்சம் ரெகார்டுகள்தான்.

நீங்கள் சென்னையின் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளாக இருந்தால் (தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை), உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால், உங்களுடைய வாக்குச் சாவடி எது என்று தெரியாவிட்டால், அதனைக் கண்டுபிடிக்க நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்:

BOOTH <வாக்காளர் அடையாள அட்டை எண்>

என்பதை 575758 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். உங்களது வாக்குச் சாவடி முகவரி, உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வந்துவிடும்.

மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப, உங்கள் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கும். அந்தக் கட்டணம் உங்களது நெட்வொர்க் மற்றும் பிளானைப் பொருத்தது. (10 பைசாவிலிருந்து 3 ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.)

இந்தச் சேவை, எங்களைப் பொருத்தமட்டில் இலவசமாக, வாக்காளர்கள் வசதி கருதிச் செய்யப்படுகிறது. அனைவரும், முக்கியமாக புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அனைவரும், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த வசதியைச் செய்துதந்துள்ளோம்.

வரும் நாள்களில் (அடுத்த தேர்தலுக்கு முன்) சரியான ஆதரவு இருந்தால், தமிழகத்தில் 4+ கோடி வாக்காளர்களுக்கும் இதே வசதியைச் செய்துகொடுக்கலாம். அல்லது இதைத் தேர்தல் ஆணையமே செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்தது.

தேர்தல் விளம்பரங்கள்

திமுகவின் தொலைக்காட்சி விளம்பரம் ‘கலைஞர் ஆட்சியில்’ எல்லாமே ‘ஜோரு ஜோருதான்’ என்கிறது. கிலோ அரிசி ஒரு ரூபாய், விவசாயக் கடன்கள் ரத்து என்று தங்களது சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு ‘நலத்திட்டங்கள் பல தந்த’ கலைஞரின் ‘நல்லாட்சி தொடர’, உதயசூரியனுக்கு வாக்களிக்கச் சொல்கிறது.

காங்கிரஸின் விளம்பரங்களும் கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று சொல்கின்றன. இன்னொரு காங்கிரஸ் சீரிஸ் விளம்பரங்களில் முஸ்லிம், இளைஞர், பெண்கள் என்று தனித்தனி வகைமாதிரிகள் தாங்கள் எல்லாம் காங்கிரஸுக்குத்தான் வாக்களிப்போம் என்கின்றனர்.

திமுக தொலைக்காட்சி விளம்பரங்கள் சன் குழும, கலைஞர் குழும தொலைக்கட்சிகளில் வருகின்றன. காங்கிரஸ் விளம்பரங்களை ஆங்கில செய்தி சானல்களிலும் சன் குழும சானல்களிலும் பார்த்தேன்.

திமுகவின் நலத்திட்டங்கள் விளம்பரத்தை தினமணியில் பார்க்கிறேன். காங்கிரஸ் விளம்பரங்களையும் அச்சுப் பத்திரிகைகளில் பார்த்தேன்.

தயாநிதி மாறன், 32 பக்க (ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் சைஸ்) பலவண்ணப் புத்தகமாக அச்சிட்டு, ‘உலகத் தலைவர்களுடன் நான்’ என்று போட்டோக்களாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார். செய்தித்தாள்களுக்கு இடையில் வைத்து வீட்டுக்கு அனுப்பியிருந்தார். பராக் ஒபாமா, கார்டன் பிரவுன், விளாதிமீர் புடின் ஆகியோருடன் தயாநிதி மாறன் இருக்கும் படங்கள் மட்டும்தான் ஆப்செண்ட்.

விஜயகாந்தின் படு அபத்தமான ‘முரசு முரசு முரசு’ விளம்பரம் சன் டிவியில் பார்த்தேன். முரசு முரசு என்று கத்தினாலே எல்லோரும் அவருக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார் போலும்!

சரி, அஇஅதிமுக விளம்பரம் எப்படி உள்ளது என்று பார்க்க ஜெயா போனால், அங்கு உடனடியாகக் கண்ணில் ஏதும் படவில்லை. அதற்குபதில், ஜெயலலிதாவின் ஒரு முழு தேர்தல் பிரசார உரையையே ஒளிபரப்பிவிட்டனர். ஜெயலலிதா வரிசையாக திமுக அமைச்சர்கள் பேரில் உள்ள ஊழல்களைப் பட்டியலிட்டார்.

தொடர்ந்து, இப்படிச் சொன்னார்: “என் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்குமா? நான் நடக்கத்தான் விடுவேனா? ஊழல் செய்யும் அமைச்சர்களை, ரவுடித்தனம் செய்யும் அமைச்சர்களை உடனடியாகத் துரத்திவிடுவேன்.”

குபுக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. அஇஅதிமுக ஆட்சியில் ஊழல் இருந்ததே இல்லை. உண்மைதான்!

ஆனால் ஸ்டாலின் போன்றோர் ஜெயலலிதாவின் பேச்சுத் திறமைக்கு அருகிலும் வரமுடியாது. பொழிந்து கட்டுகிறார். பொய்யாக இருந்தாலும். அண்ணல் அழகிரிக்கு தேர்தல் பிரசாரத்துக்கும் கட்டப் பஞ்சாயத்து மிரட்டலுக்கும் வித்தியாசம் தெரிவதே இல்லை. “அரிசி கொடுத்தோமுல்ல? வீடு கொடுத்தோமுல்ல? அப்புறம் என்ன மயித்துக்கு வேற எவனுக்காவது வோட்டுப் போடுவ? வொக்காளி, கொன்னுடுவேன்ல, ஆமா!” என்ற தொனியில்தான் அவரது வாக்குச் சேகரிப்பு அமைகிறது.

விளம்பரங்கள் பொய் என்று தெரிந்தாலும் மக்கள் ரசித்துப் பார்க்கும் அளவுக்கு வந்துவிட்டது. இதனால் வாக்குகள் விழுமா என்றுதான் தெரியவில்லை.

Thursday, May 07, 2009

பாடி கிழக்கு புத்தகக் கண்காட்சி

பல்லாவரத்துக்கு அடுத்து, கிழக்கு பதிப்பகம் பாடியில் புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. குறைந்தது 10 நாட்களுக்காவது இங்கு கண்காட்சி நடைபெறும். பல்லாவரத்தில் நடக்கும் கண்காட்சி, மே மாதம் முழுவதும் தொடரும். அதன் பிறகும் தொடரலாம்.

பாடி கண்காட்சி நடக்கும் இடம்:

பார்வதி ராமசாமி திருமணக் கூடம்,
டிவிஎஸ் லூகாஸ் அருகில்,
புதிய எண் 69, (பழைய எண் 6),
எம். டி. எச். ரோடு,
பாடி, சென்னை - 600 050

நாள்: மே 7-ம் தேதி முதல்.

நேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

இதுவரையில் கிழக்கு சிறப்புக் கண்காட்சிகள் நடந்த இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம்.

குடும்ப அரசியல் (Dynasty politics)

இன்று NDTV விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது “குடும்ப அரசியல் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்களா இல்லை கண்டுகொள்வதில்லையா”.

மூன்று ‘அரசியல் பிள்ளைகள்’ - ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப் தீக்ஷித், காலம் சென்ற ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், ஜஸ்வந்த் சிங்கின் மகன் மானவேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர். என்.ராம், ஷோபா டே என்ற இரு பத்திரிகையாளர்கள் (ஒன்றுக்கும் உதவாத) கருத்துகளைச் சொன்னார்கள்.

சந்தீப் தீக்ஷித் வெளிப்படையாகவே ஒன்றை ஒப்புக்கொண்டார். இன்றைய அரசியல் சூழலில் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு அரசியலில் நுழைவது எளிதாக உள்ளது.

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியலில் நுழையவே கூடாது என்று சொல்வது நியாயமல்ல. ஆனால் அதே சமயம், ஏன் சினிமாவில் இல்லையா, தொழில்துறையில் இல்லையா, அரசியலில் மட்டும் ஏன் இதனை எதிர்க்கவேண்டும் என்ற அபத்தமான கேள்வி எழுப்பப்பட்டது. அடுத்த அபத்தம், அமெரிக்காவிலும்தான் குடும்ப அரசியல் உண்டு என்று கஷ்டப்பட்டுத் தேடிய கென்னடி குடும்பம் உதாரணமானது. (கிளிண்டன் குடும்பம், புஷ் குடும்பம் என்றெல்லாம் டக்கென்று யாரும் யோசிக்கவில்லை.)

தொழில்துறையிலோ, சினிமாவிலோ போட்டிகள் சமதளத்தில் நடைபெறுகின்றன. முன்போல இப்போது இல்லை. பணம் இல்லாதவர்களாலும் இன்று பணத்தைச் சம்பாதிக்கமுடிகிறது. சினிமா குடும்பத்திலிருந்து வந்தால்தான் சினிமாவுக்குள் நுழையமுடியும் என்பது இப்போது இல்லை. எத்தனை சினிமாக்களை வேண்டுமானாலும் எடுக்கமுடியும். எத்தனை தொழில் நிறுவனங்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம், யாரும் தடுக்க முடியாது. ஆனால் இன்று கட்சிகளின் நடப்பது என்ன? ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கைக்குள்தான் உள்ளது. (பாஜக போன்ற ஓரிரு கட்சிகள் தவிர்த்து.)

சினிமாவிலோ, தொழில்துறையிலோ சொல்வதுபோல, இஷ்டம் இல்லை என்றால் வேறு கட்சியை நீயே ஆரம்பித்துக்கொள் என்று அரசியலில் சொல்லமுடியாது. சொல்லப்போனால், இப்படி ஒருவரோடு ஒருவர் முறைத்துக்கொண்டு நூறு கட்சிகளை உருவாக்கியதன் விளைவுதான் குழப்பமான அரசியல் நிலையை இன்று நாட்டில் உருவாக்கியுள்ளது.

சந்தீப் தீக்ஷித் ஒருவர்தான் உட்கட்சி ஜனநாயகம் பற்றிப் பேசினார்.

அமெரிக்க அரசியல் கட்சிகள் ‘பிரைமரி’ முறையை ஒழுங்காகப் பின்பற்றுகின்றன. அது நகராட்சி வார்ட் தேர்தலாகட்டும், குடியரசுத் தலைவர் தேர்தலாகட்டும். இந்தியாவில் இந்த முறை இல்லாதவரை, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் எத்தனைதான் தகுதியற்றவர்களாக இருந்தாலும் பதவிகளைக் கைப்பற்றுவார்கள். எப்போது கட்சி உறுப்பினர்களுக்கு தங்கள் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முழுமையான அதிகாரம் உள்ளதோ, எப்போது மேலிடம் என்ற ஒன்று தன்னிச்சையாக நடக்கமுடியாத நிலை வருமோ, அப்போதுதான் இந்திய ஜனநாயகம் ‘வயதுக்கு வரும்’.

பிரைமரிக்கு இணையான நிலை இந்தியக் கட்சிகளிடையே வந்துவிட்டால், குடும்ப அரசியல் பற்றி யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்.

Tuesday, May 05, 2009

தேவன் நினைவுப் பதக்கங்கள் - 2009

ஒவ்வோர் ஆண்டும், தேவன் அறக்கட்டளை ஒரு விழாவை நடத்தி அதில், நகைச்சுவைக்குப் பங்களிப்பவர்களுக்குப் பதக்கங்கள் கொடுத்து வருகிறது.

இந்த ஆண்டு, கார்ட்டூனிஸ்டுகள் இருவருக்குப் பாராட்டும் பதக்கமும் கொடுக்கப்பட்டன. தி ஹிந்துவின் கேஷவ், தினமணியின் மதி. இருவருக்கும் கோபுலு பதக்கங்கள் அணிவித்துப் பாராட்டிப் பேசினார்.

தேவன் அறக்கட்டளையின் சாருகேசி, கோபுலு, மதி, கேஷவ்


கோபுலு ஆனந்த விகடனில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இல்லஸ்ட்ரேஷன் வரைவதில் ஆரம்பித்து, ஜோக், அரசியல் கார்ட்டூன்கள் என்று வரைந்துள்ளார். ஆனால் கார்ட்டூன்கள் வரைவதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டதாகச் சொன்னார். பலமுறை அரசியல்வாதிகள் போன் செய்து நான் என்ன சிம்பன்ஸி மாதிரியா இருக்கேன் என்றெல்லாம் சண்டை போடுவார்களாம். ஒரு கட்டத்தில் பத்திரிகையை விட்டுவிட்டு, கோபுலு விளம்பரத் துறைக்குச் சென்றுவிட்டார். (கோபுலுவின் வாழ்க்கை வரலாறு கிழக்கு பதிப்பகம் வெளியீடாக: கோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை)

கேஷவ், விகடனில்தான் வேலையை ஆரம்பித்துள்ளார். இசைக்கலைஞர்களைப் படமாக வரைய ஆரம்பித்து, பின்னர் தி ஹிந்துவுக்கு கார்ட்டூனிஸ்டாகப் போனவர்.

மதியும் விகடன் மாணவர் நிருபர் திட்டத்தில் தேர்வாகி, பின் கார்ட்டூனிஸ்டாகி, நியூஸ் டுடே, துக்ளக், கல்கி வழியாக, தினமணி/ நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் என்று இப்போது தினமணியில் மட்டும் கார்ட்டூன்கள் போட்டு வருகிறார்.

கேஷவ் குறைவாகப் பேசினார். மதி எழுதி வந்து விரிவாகவே பேசினார். எப்படி அரசியல்வாதிகள் பஞ்சமே இல்லாமல் தனக்கு ஐடியாக்களை வாரி வழங்குகிறார்கள் என்பதை விவரித்தார். மதியின் அடடே கார்ட்டூன்களின் தொகுப்பு ஆறு தொகுதிகளாக கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது. [ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து | ஆறு]

தேவனின் புத்தகங்கள், கிழக்கு பதிப்பக வெளியீடாக
.