Thursday, May 22, 2014

மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு - அப்டேட்

நண்பர்களே,

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் உள்ள சவால்கள் குறித்து உரையாட, ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றை 31-5-2014 அன்று கிழக்கு பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ளது குறித்து என் பதிவில் எழுதியிருந்தேன். மொத்தம் 50 பேர் மட்டுமே கலந்துகொள்வதாக முதலில் முடிவெடுத்திருந்தோம். இப்போது அதனைச் சற்றே நீட்டித்து 60 என்று ஆக்கியுள்ளோம். இதற்கும்மேல் போனால் கூட்டத்தை நிர்வகிப்பது கடினம் என்பதால்.

என் பதிவை அடுத்து, நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து எக்கச்சக்கமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. ஆனால் மேலே சொன்னதுபோல 60 பேரை மட்டுமே (எங்கள் அலுவலகத்தின் 5 பேரையும் சேர்த்து) அனுமதிக்க முடியும் என்பதால் அவர்களுக்கு மட்டும் தனி மடல் அனுப்புகிறோம்.  நிகழ்ச்சியின் அனைத்து அமர்வுகளும் கலந்துரையாடலும் ஒளிப்பதிவு செய்யப்படும்; இணையத்தில் சேர்க்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளால் பயன் இருப்பதுபோலத் தெரிந்தால், மீண்டும், சற்றே விரிவாக, 150 பேர் வரை கலந்துகொள்ளக்கூடியதாகக்கூட ஏற்பாடு செய்யலாம்.

நன்றி.

Tuesday, May 20, 2014

மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு

கிழக்கு பதிப்பகம், 31/5/2014 அன்று சென்னையில் ஒரு நாள் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது. நாங்கள் பல புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் மொழிபெயர்த்திருக்கிறோம். மேலும் பல புத்தகங்களை வரும் ஆண்டுகளில் மொழிபெயர்க்க உள்ளோம். எங்களுடன் பல மொழிபெயர்ப்பாளர்கள் வேலை செய்துவருகின்றனர்.

இந்த ஒரு நாள் கருத்தரங்கின் நோக்கம், எங்களுடைய மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும், மொழிபெயர்ப்பில் விருப்பம் உள்ள பிறரையும் ஒரே இடத்தில் குழும வைத்து மொழிபெயர்ப்பின் சவால்கள் குறித்துப் பேசவைப்பதும், அதன்மூலம் மேலும் கற்றுக்கொள்வதும் ஆகும்.

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மதிய உணவும் தேநீர் சிற்றுண்டியும் நாங்கள் தருகிறோம்.

கலந்துகொள்ள விரும்புபவர்கள் முன்கூட்டியே பதிந்துகொள்ளவேண்டும். கடைசி நேரத்தில் வருபவர்களுக்குக் கட்டாயமாக அனுமதி இருக்காது. (ஏனெனில் உணவு, காபி, டீ ஆகியவற்றை முன்கூட்டியே ஆர்டர் செய்யவேண்டும். மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் கூட்டம் இருக்க முடியும்.)

நீங்கள் கலந்துகொள்ள விரும்பினால், badri@nhm.in என்ற மின்னஞ்சலில் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் ஏற்கெனவே புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளீர்கள் என்றால் புத்தகங்கள் குறித்த தகவலை அனுப்பவும். மொழிபெயர்ப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆர்வம் இருப்பவர்களும் கலந்துகொள்ளலாம். ஆனால் இடம் இருப்பதற்கு ஏற்பவே அனுமதி.

கிழக்கு பதிப்பகத்துக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் மின்னஞ்சலில் அனுப்பிவிட்டோம். உங்களுக்கு மின்னஞ்சல் வரவில்லை என்றால், நீங்களும் கலந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்றால், எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Friday, May 16, 2014

புதிய இந்தியா

முதலில் இவரை பாஜகவின் பிற தலைவர்களே வரவிடாமல் செய்துவிடுவார்கள் என்றார்கள். நடக்கவில்லை.

தேசிய ஜனநாயக முன்னணியின் பிற கட்சிகள் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்கள். நிதீஷ் குமார் விலகவும் செய்தார். ஆனால் இறுதியில் ஓரளவுக்கு நல்ல கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில்கூட ஒரு கூட்டணி உருவானது.

கட்டாயமாக தே.ஜ.முன்னணிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்றார்கள். (நானும்கூட கொஞ்சம் குறைவாகக் கிடைக்கும், ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப்பின் பிற கட்சிகள் வந்து சேர்ந்துகொள்ளும் என்றுதான் நினைத்திருந்தேன்.) தேவையே இல்லை என்றானது.

பாஜகவுக்கே 272+ கிடைத்தது!

மோதி ஊதிப் பெருக்கிய வெறும் பலூன் என்றார்கள். கருத்துக்கணிப்புகள் பொய் என்றார்கள். கார்ப்பரேட் சதி என்றார்கள். அனைத்தையும் மோதி உடைத்தெறிந்திருக்கிறார்.

மோதி செய்துள்ளது ஒன்றல்ல, பல சாதனைகள்.

1. உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ஒவ்வொரு தடையையும் உடைத்துக்கொண்டு மோதி முன்னுக்கு வந்தார். எதிர்த்த அத்வானி, சுஷ்மா போன்றவர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முன்னுக்கு வந்தார். பாஜகவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தன்னை ஏற்றுக்கொள்ள வைத்தார். அதன் பின்னரே பிரசாரத்தில் இறங்கினார்.

2. இந்தியா இதுவரை கண்டிராத மாபெரும் தேர்தல் பிரசாரத்தை முன்வைத்தார். அதன் பின்னான உழைப்பு அபாரமானது. ஒரு பக்கம் பொதுக்கூட்டங்கள். இன்னொரு பக்கம் இணையம் வழியாக அவற்றின் நேரலை ஒளிப்பதிவு. இதில் அவர் தொலைக்காட்சி நிலையங்களை முற்றிலுமாகத் தேவையற்றவையாக ஆக்கினார். ஆனால், இவருடைய பேச்சுகளைக் காண்பிப்பதால் தங்கள் ரேட்டிங் உயர்கிறது என்பதால் தொலைக்காட்சிகளே இவருடைய பேச்சுகளைக் காண்பிக்கத் தொடங்கின. இவரைப் படுமோசமாகத் தாக்கிய தொலைக்காட்சிகளே வரிசையில் நின்று இவரைப் பேட்டி காண விரும்பின.

3. பொதுமக்களுடன் உணர்வுபூர்வமான ஓர் இணைப்பைக் கொண்டுவந்தார். எனக்கு இவருடைய உரைகள் போதுமானவையாகத் தோன்றவில்லை. என்ன செய்யப்போகிறோம் என்பதை இவர் இன்னமும் ஆழமாகச் சொல்லியிருக்கலாம் என்பதுதான் என் கருத்து. ஆனால் அவர் மிக எளிய மக்களிடம் நேரடியாகப் பேச அதெல்லாம் தேவையில்லை என்று முடிவு செய்தார் போலும். அவருடைய உத்திதான் இறுதியில் வென்றது.

4. உத்தரப் பிரதேசத்தில் மிகச் சிறப்பான தேர்தல் பணியின்மூலம் 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார். இது ஒன்றுதான் பாஜகவை 272+ என்ற எண்ணிக்கைக்குக் கொண்டுபோனது.

5. இனி கூட்டணி ஆட்சிதான் என்று குதூகலித்த அனைவரையும் முற்றிலுமாகத் தோற்கடித்திருக்கிறார்.

6. காங்கிரஸ் இனி மீண்டுவருவது மிகக் கடினம் என்று ஆக்கியிருக்கிறார். காங்கிரஸின் ஐடியாலஜி என்ன? ஒரு குடும்ப ஆட்சி என்பது இனியும் சாத்தியமா? இதுபோன்ற கேள்விகளையெல்லாம் கேட்கவைத்திருக்கிறார்.

7. இறுதியாக பிரசாரத்தின் முக்கியமான புள்ளி வளர்ச்சியே என்பதன்மூலம் தேசியக் கதையாடலை மாற்றியிருக்கிறார். வளர்ச்சி என்றால் என்ன என்பதில் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இனி வளர்ச்சி ஒன்றை மட்டும்தான் அனைத்துக் கட்சிகளும் பேசமுடியும் என்று ஆக்கியிருக்கிறார்.

பேச்சுகள் முடிந்துவிட்டன. இனி செயல்.

Sunday, May 04, 2014

உத்தமர்சீலி கிராமப் பயணம்

சமயபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிக் பள்ளியில் "வெளிக்காற்று உள்ளே வரட்டும்" என்ற ஒரு வார முகாம் ஒவ்வோர் ஆண்டும் நடந்துவருகிறது. எழுத்தாளர்கள் ஞாநியும் தமிழ்ச்செல்வனும் ஆலோசகர்களாக இருந்து உருவாக்கியுள்ள நிகழ்வு இது.

பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 200 பேரைத் தேர்ந்தெடுத்து, ஆண்டு முழுதும் அவர்களுக்கென்று பிரத்யேகமான நிகழ்வுகளை நடத்துகிறார்கள். பின்னர் ஆண்டிறுதியில், மே மாதத்தில் ஒரு வார முகாம் நடைபெறுகிறது. இதில் பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள் ஆகியோர் மாணவர்களிடம் வந்து பேசுகின்றனர். யோகா பயிற்சி கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் சேர்ந்து ஒரு நாடகம் போடுகிறார்கள். இத்துடன் மாணவர்கள் ஒருநாள் அருகில் இருக்கும் கிராமம் ஒன்றுக்குச் சென்றுவருகிறார்கள்.

இம்முறை இந்த கிராமப் பயணத்தை மேலும் செறிவானதாக ஆக்கலாம் என்று அது தொடர்பான ஒரு திட்டத்தை நான் பள்ளி முதல்வர் துளசிதாசனிடம் அளித்தேன். ஏற்கெனவே கிண்டி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் சேர்ந்து இரு கிராமங்களில் இதுபோன்ற பயிற்சியைச் செய்திருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் ஒரு வார கால முகாம்கள். இதுவோ ஒரே ஒரு நாள்.

பேராசிரியர் ரெங்கசாமி, மதுரை சமூக அறிவியல் கழகத்தில் டீனாக இருந்து ஓய்வுபெற்றவர். அவர்தான் பங்களிப்பு முறையின் அடிப்படையில் கிராமங்களை அறிந்துகொள்வது குறித்த என்.எஸ்.எஸ் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழி காட்டியவர். ஒருநாள் நிகழ்ச்சி என்றால் அதனை எப்படிச் செயல்படுத்தலாம் என்று யோசித்து அதற்கு ஒரு வழிமுறையை உருவாக்கினார். அவருடன் மதுரை சமூக அறிவியல் கழகத்தில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் நாராயண் ராஜாவும் கலந்துகொண்டார். எங்கள் மூவருக்கும் உதவியாக திருப்பூரைச் சேர்ந்த சேகர் (இவர் மென்பொருளாளர்; மிகவும் சுவாரசியமானவர்; பிறகு இவரைப் பற்றி எழுதுகிறேன்) சேர்ந்துகொண்டார்.

திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர்சீலி என்ற கிராமத்தை பள்ளி நிர்வாகத்தினர் தேர்ந்தெடுத்திருந்தனர். ரெங்கசாமியும் பள்ளி நிர்வாகத்தினரும் கிராமத்துக்கு முன்னதாகச் சென்று பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சிலருடன் பேசி, மாணவர்களின் வருகை குறித்தும் நோக்கங்கள் குறித்தும் விளக்கியிருந்தனர். எனவே கிராம நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்பு எங்களுக்கு இருந்தது.


அந்த நாளை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டோம். முதல் பகுதியில் எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள், கிராமம் முழுதும் பரவி, குறிப்பிட்ட துறை சார்ந்த பல படங்களைப் பிடித்துக்கொண்டு, கிராம மக்களிடம் அதுகுறித்த தகவல்களைக் கேட்டுக் குறித்துக்கொள்வார்கள். இரண்டாவது பகுதியில் கிராம நிர்வாகத்தினரும் பொதுமக்களும் குழுமியிருக்க, ஒவ்வொரு படமாகப் பெரிய திரையில் காட்டப்படும்போது, கிராம மக்கள் அது குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். மாணவர்களும் விவாதத்தில் கலந்துகொள்வார்கள். கேள்விகளைக் கேட்பார்கள். மூன்றாவது பகுதியில், பள்ளிக்கு மீண்டும் வந்து மாணவர்கள் தங்களுக்குள் விவாதத்தைத் தொடர்வார்கள்.


கிராம நிர்வாகம், கல்வி, விவசாயம், பிற தொழில்கள், சமுதாய அமைப்பு, சுகாதாரம், வழிபாட்டுத் தலங்கள் போன்ற துறைகளை எடுத்துக்கொண்டோம். காலை ஒன்பது மணி முதல் மூன்று மணி நேரத்துக்கு மாணவர்கள் கிராம மக்களிடம் பேசிப் படங்களை எடுத்துக்கொண்டனர். சுமார் 750 குடும்பங்கள் அந்த கிராமத்தில் வசிக்கின்றன.

அடுத்து சமுதாய நலக் கூடத்தில் சுமார் 200 மாணவர்களும் சுமார் இருபது கிராமத்தினரும் பங்கேற்றனர். தவிர, ஆசிரியர்கள், நாங்கள் சிலர் இருந்தோம். மின்வெட்டு இருக்கும் என்பதால் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்திருந்தோம். பெரிய திரையில் படங்களை ப்ரொஜெக்ட் செய்ய வசதியான ஏற்பாடுகளைக் கையோடு கொண்டுவந்திருந்தோம். ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு படமாக வரவர, கிராமத்தவர்கள் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். பேராசிரியர் ரெங்கசாமி, இந்தப் பகுதியை மிகத் திறமையாகக் கையாண்டு, கிராமத்தவர்களிடமிருந்து தகவல்களைக் கறந்தார். அப்பகுதியின் விவசாயம் குறித்து, நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து, பள்ளிக்கூடம் குறித்து, கல்வி பற்றியும் பெண்கள் பற்றியும் சாதிகள் பற்றியும் பல தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எல்லாமே முழுமையான தகவல்கள் என்று சொல்ல முடியாது. மறைக்கவேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டன. சர்ச்சைக்குரியவை பூசி மெழுகப்பட்டன.


அனைவரும் பெருமாள் கோவில் சென்று, பள்ளிக்கூடத்திலிருந்து தயார்செய்து கொண்டுவரப்பட்ட மதிய உணவு உண்டபின் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினோம்.


சிறிது ஓய்வுக்குப்பின், மாலை 5 மணிக்கு மாணவர்கள் கலந்துகொள்ளும் அமர்வு தொடங்கியது. நான் இதனை முன்னின்று நடத்தினேன். கிராம ஆட்சிமுறை, நிர்வாகச் சிக்கல்கள், சாதிப் பூசல்கள், தீண்டாமை, பெண்களின் நிலை, கல்வி, மது போன்ற தலைப்புகளில், தாங்கள் பார்த்த, கேட்ட, புரிந்துகொண்ட தகவல்களை மாணவர்கள் முன்வைத்துப் பேசினர். விவாதம் மிக ஆழமாக இருந்தது. பொதுவாக பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் இவை குறித்து விவாதிக்கும்போது மிகக் குறைவான மாணவர்களே வாய் திறந்து பேசுவார்கள். பல நேரம் கமுக்கமாக வாயே திறக்காமல் இருந்துவிடுவார்கள். ஆனால் இங்கே மாணவர்கள் பேசத் தயங்கவேயில்லை. குறைந்தது 50 பேருக்கு மேல் பேசியிருப்பார்கள். மேலும் அவர்களின் பேச்சுத் திறனும் விவாதிக்கும் திறனும் மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் தமிழிலேயே உரையாடினோம்.


எந்தக் கிராமத்தைப் பற்றியும் ஒரு நாளில் முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் பள்ளியில் படிப்பதற்கும் நேரில் இருப்பதற்குமான வித்தியாசம் என்ன என்பதை மாணவர்களுக்குக் காட்ட முடிந்தது. உண்மையில் பல முகங்களைக் காட்ட முடிந்தது. ஒரே விஷயத்தை எப்படி மக்கள் பல கோணங்களில் புரிந்துகொண்டு, பல விதங்களில் பேசுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட முடிந்தது. சாதிச் பிரச்னை, தீண்டாமை, இரட்டைக் குவளை முறை (இந்த கிராமத்தில் உள்ளது), கிராம நிர்வாகத்துக்கு என்று வரும் பணம் மடைமாற்றப்படுவது, ஊழல், பெண்களின் நிலை, ஆண்-பெண் நாள்கூலியில் உள்ள வித்தியாசங்கள், மதுவின் அதீதத் தாக்கம், அதனால் வரும் அழிவு என்று பலவும் மாணவர்களைக் கோபப்படுத்தியது. அதே நேரம் இவற்றுக்கெல்லாம் உடனடித் தீர்வுகள் என்று எவையும் இல்லை, தீர்வுகள் நீண்டகாலத் தன்மை கொண்டவை என்பதைப் பற்றியும் ஓரளவுக்கு விவாதித்தோம். 

மணி இரவு எட்டு ஆகிவிட்டது. இதற்குமேல் உணவளிப்போர் இரவு உணவு அளித்துவிட்டு வீடுகளுக்குப் போகவேண்டும் என்பதால் முதல்வர் துளசிதாசன் தலையிட்டு நிகழ்ச்சியை நிறுத்தவேண்டியதாயிற்று. இல்லாவிட்டால் இன்னமும் இரண்டு, மூன்று மணி நேரங்கள் பேசியிருப்போம்.

இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் என்ன என்று எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆனால் ஏதோ ஓரளவில் மாணவர்களை நிஜ உலகம் குறித்து சென்சிடைஸ் செய்ய முடிகிறது என்று நினைக்கிறேன். தாம் வாழவேண்டிய சமூகத்தை எப்படி மாற்றவேண்டும் என்பது குறித்து அவர்கள் சிந்திப்பதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்க உதவும் என்று நினைக்கிறேன்.