Friday, June 01, 2012

சாயிநாத்தின் பொருளாதாரப் பொங்கல் - 1

ஏழைப் பங்காளன் இதழாளர் சாயிநாத்துடைய பேனாவுக்கு அவ்வளவு சக்தி. அவர் சாட்டையைச் சொடுக்கினால் மாண்டேக் சிங் அலுவாலியாகூட அலறுவார்.

இடதுசாரிக் கதையாடலை முன்னெடுத்துச் செல்வதில் சாயிநாத்தின் கட்டுரைகளுக்கு முக்கிய இடமுண்டு. வினவு உடனே அந்தக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துப் போடுவதிலிருந்தே இதனை நீங்கள் உணரலாம். அதேபோல தொலைக்காட்சியில் உரையாடும் இடதுசாரிகள், சாயிநாத் கட்டுரையின் சாரத்தை மேற்கோள் காட்டும்போது நீங்கள் அந்த வாதத்தை எதிர்கொள்ளத் திணறுவீர்கள். சாயிநாத்தே சொல்லிவிட்டார், அதுவும் தி ஹிந்துவிலேயே வந்துவிட்டது. பிறகென்ன?

சாயிநாத்தின் சமீபத்தில் தி ஹிந்துவில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்திய அரசு முதலாளிகளுக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய பட்ஜெட்டில் “ரெவின்யூ ஃபோர்கான்” (வேண்டாமென்று விடப்பட்ட வருமானம்) என்று கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரத்தைத்தான் அவர் எடுத்துக் கொடுத்துள்ளார். எனவே சாயிநாத்தைக் குற்றம் சொல்ல முடியாது. இந்த எண்ணை முன்வைத்து சாயிநாத்தின் வாதம் இப்படியாக உள்ளது.
என்னவோ தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாயைக் கொடுப்பதற்குப் போய் மூக்கால் அழுகிறீர்களே, உங்களுக்குத் தெரியுமா பெரும் பணமுதலைகள் எவ்வளவு பெறுகிறார்கள் என்று? 25 லட்சம் கோடி ரூபாய். இப்போது முகத்தை எங்கே வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
இதைப் படிக்கும் பலரும் நடுங்கிப் போய்விடுவார்கள். உண்மையா? முதலாளிகள் இப்படி அள்ளி எடுத்துக்கொண்டு போகிறார்களா? அடப்பாவிகளா! நாசமாப் போக! ஏழைகள் வயிற்றில் அடித்துவிட்டு, இப்படி அநியாயம் பண்ணுகிறீர்களே...

கொஞ்சம் தகவலை ஆராய்வோம். ஏழு வருடங்களுக்கு 25 லட்சம் கோடி ரூபாய். ஒரு பக்கம் ஓராண்டு எண்ணை வைத்துக்கொள்கிறார். மற்றொரு பக்கம் ஏழாண்டு எண்ணை வைத்துக்கொள்கிறார். ஆப்பிள், ஆரஞ்ச். எனவே ஓராண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம். 2011-12 ஆண்டில் சாயிநாத் கொடுத்துள்ள புள்ளிவிவரத்தின்படி,

    கார்பொரேட் வருமான வரிக்குக் கொடுத்த விலக்கு 51,292 கோடி ரூபாய்
    ஆயத்தீர்வை விலக்கு: 2,12,167 கோடி ரூபாய்
    சுங்கவரி விலக்கு: 2,23,653 கோடி ரூபாய்
    மொத்தம்: 4,87,112 கோடி ரூபாய்

கவனியுங்கள், இதில் மிகப் பெரும் பகுதி மறைமுக வரிகளில் கொடுக்கப்பட்டுள்ள விலக்கு. மொத்த விலக்கில் வெறும் 10% மட்டுமே நேரடி வரியில் விலக்கு.

இதை எப்படிப் புரிந்துகொள்வது? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலாவதாக சுங்க வரி (கஸ்டம்ஸ்).

முதலில் அரசு அனைத்துத் துறைகளுக்கும் சுங்க வரியை விதிக்கிறது. அதிலிருந்து எவ்வளவு வருமானம் வரும் என்று ஊகிக்கிறது. பிறகு, சில இறக்குமதிகளுக்கு மட்டும் சுங்கவரியை விலக்கிக்கொண்டால் தன் வருமானம் எவ்வளவு குறையும் என்று பார்க்கிறது. அந்தக் குறைச்சலைத்தான் ‘ரெவின்யூ ஃபோர்கான்’ என்று மதிப்பிடுகிறது.

சரி ஐயா, எதற்கெல்லாம் இந்த பட்ஜெட்டில் சுங்க வரியை விலக்கிக்கொண்டுள்ளனர் என்று பார்த்தேன்.
No change is proposed in peak rate of customs duty of 10 per cent on non-agricultural goods. Import of equipment for fertilizer projects are being fully exempted from basic customs duty of 5 per cent for 3 years. Basic customs duty is also being lowered for a number of equipment used in agriculture and related areas.

In the realm of infrastructure, customs relief is being given to power, coal and railways sectors. While steam coal gets full customs duty exemption for 2 years (with the concessional counter-veiling duty of 1 per cent), natural gas, LNG and certain uranium fuel get full duty exemption this year. Different levels of duty concessions are being provided to help mining, railways, roads, civil aviation, manufacturing, health and nutrition and environment. So as to help modernization of the textile industry, a number of equipment are being fully exempted from basic customs duty, and lower customs duty is being proposed for some other items used by the textile industry.
அதாவது எங்கெல்லாம் சுங்க வரியை விலக்கிக்கொள்கிறார்கள்?
    * உரத் தயாரிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் எந்திரங்களுக்கு
    * விவசாயத்துக்கும் தொடர்பான துறைகளுக்கும் தேவையான கருவிகளை இறக்குமதி செய்ய
    * மின்சார உற்பத்திக்கான இயந்திரங்கள்
    * கரியைத் தோண்டி எடுக்கும் இயந்திரங்கள்
    * ரயில்வே துறைக்குத் தேவையான இயந்திரங்கள்
    * இயற்கை எரிவாயு, யுரேனியம் எரிபொருள்
    * மொத்தத்தில் சுரங்கம், ரயில்வே, சாலைகள், விமானப் போக்குவரத்துத் துறை, உற்பத்தித் துறை, மருத்துவத் துறை, சுற்றுச் சூழல் துறை ஆகியவற்றுக்குத் தேவையான எந்திர இறக்குமதிகளில்.
    * நெசவுத் தொழில் துறையின் வளர்ச்சிக்காக அந்தத் துறைக்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்வதில்.
    * கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி, பொதுவான பிற பொருள்களை விடக் குறைவு

சரி, இதனால் யாருக்கு நன்மை? உரத் தயாரிப்பு மெஷினுக்கு இறக்குமதி வரியை நீக்கினால் அதனால் நேரடி லாபம் யாருக்கு? உரத்தைப் பயன்படுத்தும் விவசாயிக்கு விலை குறையும். சொல்லப்போனால் இதனால் பலன் பெறப்போவது அரசுதான். எனெனில் அரசுதான் அந்த உரத்துக்கு மானியம் கொடுக்கிறது. விவசாயி கொடுக்கும் காசு குறைவுதான். சுங்க வரி விதித்து அரசு தன் வருமானத்தைப் பெருக்கிக்கொண்டால், உர நிறுவனம் உரத்தின் விலையை அதிகரிக்கும். அதிகரித்த அந்த விலைக்கு ஏற்ற மானிய அதிகரிப்பையும் அரசு கொடுத்தாகவேண்டும்.

இப்படியே ஒவ்வொரு துறையையும் எடுத்துக்கொள்ளலாம். மின்சாரம் தயாரிக்கத் தேவையான எந்திரங்கள். ஏற்கெனவே மின்சாரத்துக்கு விலை ஏற்றினால் மக்கள் குதிக்கிறார்கள். உங்கள் ஊரில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம் வாங்கப்போகும் இயந்திரத்தின் விலை சுங்கவரியால் அதிகமானால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? அந்த விலை ஏற்றத்தை உங்கள் தலையில் கட்டப்போகிறார்கள்.

நெசவு இயந்திரங்களை இறக்குமதி செய்யும் சுங்க வரியை அதிகரித்தால் என்ன ஆகும்? கோவை பகுதியில் வேலை வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கும். ஏற்கெனவே மின்சாரம் குறைவாலும் NREGA போன்ற பல பிரச்னைகளாலும் நெசவுத் தொழில் மிகப் பிரமாதமாக இருக்கிறது. சாயிநாத்தை நிதி அமைச்சராக்கினால், ‘ஏத்துடா வரியை!’ என்பார். கடைசியில் சாயிநாத்தின் நெருங்கிய நண்பர்களான விதர்பா பருத்தி விவசாயிகளும் சேர்ந்தே பூச்சி மருந்தைக் குடிக்கவேண்டி வரும்.

இப்படியே சுங்க வரி விலக்கு ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அந்த வரியை ஏற்றினால் நிச்சயமாக அரசின் வருமானம் அதிகரிக்கும். ஆனால் அது நேராக கட்டுமானத்தைப் பாதிக்கும் அல்லது மிக முக்கியமான துறைகளான விவசாயம், நெசவு, உடல் நலம் ஆகியவற்றைப் பாதிக்கும். அதனால் மொத்த இந்திய மக்களை - ஏழைகளையும் சேர்த்து - பாதிக்கும்.

கச்சா எண்ணெயைப் பற்றி நாம் சொல்லவே வேண்டியதில்லை. இன்னும் குறையுங்கள் என்றுதான் சொல்கிறோம். அப்போதுதான் நம் கையில் கிடைக்கும் பெட்ரோலின் விலை குறையும்.

இந்த ஆண்டு தங்கத்தின்மீது சுங்க வரி விதிக்கப்படுவதாக இருந்தது. அதனை நான் தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன். ஆனால் தங்க வியாபாரிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து அதனை எதிர்த்தனர். கடை அடைத்துப் போராடினர். சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினர். சுங்க வரி வாபஸ் பெறப்பட்டது. இது தவறு. தாலிக்குத் தங்கம் விலை அதிகரித்தாலும் தங்கத்தின்மீதான சுங்க வரியை நீக்கியிருக்கக்கூடாது. நான் நிதி அமைச்சராக இருந்தால் கட்டாயமாக இதை நீக்கியிருக்க மாட்டேன்.

இதைத் தவிர, உபயோகமான எதன்மீதாவது சுங்க வரி நீக்கப்பட்டு அம்பானி, டாடா பணத்தில் கொழிக்கிறார்கள் என்று சாயிநாத் காட்டுவாரா?

அடுத்து எக்சைஸ் எனப்படும் ஆயத்தீர்வை.

சுங்கத்துக்கு இணையானது ஆயத்தீர்வை. இந்தியாவில் உற்பத்தி ஆகும் பொருள்களுக்கு உற்பத்தி ஆகும் இடத்திலேயே விதிக்கப்படும் வரி ஆயத்தீர்வை. இதில் எந்தெந்தப் பொருள்களுக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டது?

* ஆறு உயிர் காக்கும் மருந்துகள், தடுப்புசிகள் ஆயத்தீர்வை நீக்கம்.
* அயோடின் மீதான ஆயத்தீர்வை 6%-லிருந்து 2.5% குறைப்பு.
* LED விளக்குகளுக்கு குறைவான ஆயத்தீர்வை
* மின்சார வண்டிகள் அல்லது ஹைப்ரிட் வண்டிகளுக்குக் குறைக்கப்படுகிறது
* பிராண்டட் வெள்ளி நகைகளுக்கு நீக்கப்படுகிறது.
* பிராண்ட் இல்லாத தெருவோரத் தங்க நகைகளுக்கு ஆயத்தீர்வை சேர்க்கப்பட்டு, போராட்டத்துக்குப் பின் கைவிடப்பட்டது.
* (ஆயத்தீர்வை மொத்தமாக 10%-லிருந்து 12%-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் வைக்கவும்!)

வேறு எதற்கெல்லாம் ஆயத்தீர்வை விலக்கு? ஒரு சில பகுதிகளில் எந்தத் தொழில்துறையைத் தொடங்கினாலும் அதற்கு ஆயத்தீர்வை விலக்கு உண்டு என்று அறிவிப்பார்கள். பொதுவாக ஒரு மாநில அரசு மத்திய அரசைக் கெஞ்சி இதைச் செய்துகொள்ளும். உதாரணம் உத்தராகண்ட் மாநிலம். புதிதாக உருவான அந்த மாநிலத்தில் தொழில் துறையே இல்லை. எனவே மாநில அரசு கேட்டுக்கொண்டு மத்திய அரசு இதனைச் செய்கிறது. இதேபோலத்தான் ஹிமாசலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் போன்றவை. ஒரு கட்டத்தில் உத்தரப் பிரதேச நொய்டா பகுதிக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அங்கு பல தொழில் அமைப்புகள் சென்றன. அதேபோலத்தான் உத்தராகண்ட். ஆனால் தமிழகத்திலோ ஆந்திரத்திலோ குஜராத்திலோ இதுபோன்ற பிளாங்கெட் விலக்கு கிடையாது. பாண்டிச்சேரியில் சில தொழில்துறைகளுக்கு இருக்கலாம். பொதுவாக இதுபோன்ற விலக்குகள் காலக்கெடுவுடன் கூடியவை. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் தொழில் துறைகள் வளர்ந்துவிடும். அதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதனை இடதுசாரிகள் ஏற்க மறுத்தால் நேராக அந்த மாநில அரசுடன் போராடி, இப்படியெல்லாம் கேட்காதீர்கள் என்று சொல்லுங்கள். ஊருக்குள்ளேயே உங்களை விடமாட்டார்கள்!

ஆக, சுங்கமோ, ஆயத்தீர்வையோ, பொதுமக்களுக்கு நன்மை என்பதால் மட்டும்தான் விலக்கு அளிக்கப்படுகிறது. சாயிநாத் சொல்வதுபோல பெரு வியாபாரிகள் கொள்ளை அடிப்பதற்காக அல்ல.

அடுத்து கடைசியாக மொத்த விலக்கில் வெறும் 10% மட்டுமே இருக்கும் கார்பொரேட் இன்கம் டாக்ஸ் விஷயத்துக்கு வருகிறேன். அது தனிப் பதிவாக.

சாயிநாத்தும் பிற இடதுசாரிகள் அனைவரும் கெப்பல்ஸ் (கோயபல்ஸ் என்றி தமிழகத்தில் அழைக்கப்படுவார்) விதியைப் பயன்படுத்தி ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பதன்மூலம் மக்களைக் குழப்புகிறார்கள்.

இது தொடர்பாக சுவாமிநாதன் ஐயரின் கட்டுரை கட்டாயமாகப் படிக்கப்படவேண்டியது.

மீதம் அடுத்த பதிவில்.

டயல் ஃபார் புக்ஸ் - தமிழ்ப் புத்தகங்களை வாங்க

டயல் ஃபார் புக்ஸ் என்ற பெயரில் நாங்கள் தமிழ்ப் புத்தகங்களை விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இருந்த இடத்திலிருந்தே இணையம் மூலம் நீங்கள் புத்தகங்களை வாங்கலாம். அல்லது ஃபோனில் (94459-01234 / 9445 979797) பேசி வாங்கலாம். அல்லது இப்போது தியாகராய நகரில் நாங்கள் தொடங்கியிருக்கும் கடைக்கு (G-5, நாராயணா அபார்ட்மெண்ட், 23, ராமேஸ்வரம் ரோடு, தி.நகர், சென்னை 17) நேராக வந்து வாங்கலாம். தி.நகர் கடை தொடங்கி சரியாக ஒரு மாதம் ஆகியுள்ளது. முதல் மாதமே மிகச் சிறப்பான விற்பனை நடந்துள்ளது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பிட்ட சில இலக்குகளை நாங்கள் எட்டிவிட்டால் மேலும் பல இடங்களில் புத்தகக் கடைகளைத் திறக்க உள்ளோம்.

டயல் ஃபார் புக்ஸ் - இணையம்/தொலைபேசி/செங்கல் கடையில் கீழ்க்கண்ட தமிழ்ப் பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கும். வாங்கிப் பயன் பெறுங்கள்.
  1.  அகல் வெளியீடு
  2.  அடையாளம்
  3.  அமர் சித்திர கதை
  4.  அம்ருதா
  5.  அருணோதயம்
  6.  அல்லையன்ஸ்
  7.  அறிவு பதிப்பகம்
  8.  ஆப்பிள் புக்ஸ்
  9.  உயிர்மை
  10.  எதிர் வெளியீடு
  11.  எல்.கே.எம் பப்ளிகேஷன்
  12.  என்.சி.பி.எச்
  13.  கடலங்குடி
  14.  கண்ணதாசன் பதிப்பகம்
  15.  க்ரியா
  16.  கவிதா
  17.  காலச்சுவடு
  18.  கிழக்கு பதிப்பகம்
  19.  குமரன் பதிப்பகம்
  20.  சக்தி புக்ஸ்
  21.  சந்தியா பதிப்பகம்
  22.  சவுக்கு வெளியீடு
  23.  சிக்ஸ்த் சென்ஸ்
  24.  சொல்வனம்
  25.  ஞாநபானு பதிப்பகம்
  26.  தமிழினி
  27.  திருமகள் நிலையம்
  28.  நர்மதா
  29.  நலம் வெளியிடு
  30.  நற்றிணை
  31.  நாகரத்தினா புக்ஸ்
  32.  ப்ராடிஜி புத்தகங்கள்
  33.  பாரி நிலையம்
  34.  பாவை பப்ளிகேஷன்ஸ்
  35.  மஞ்சுல்
  36.  மருதா பதிப்பகம்
  37.  லிப்கோ
  38.  வம்சி
  39.  வரம் வெளியீடு
  40.  வாசல்
  41.  வானதி
  42.  விகடன் பிரசுரம்
  43.  விடியல்
  44.  வைரமுத்து புத்தகங்கள்

Thursday, May 31, 2012

இந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு திட்டம்

சமீபத்தில் நான் லண்டன் மாநகரம் சென்றிருந்தேன். பெரும்பாலும் தரையடி ரயில் வண்டிகளைப் பயன்படுத்தியே ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்றோம். தொலை நகரங்களுக்கும் (உ.ம்: லண்டன் கிங்ஸ் கிராஸ் => கேம்பிரிட்ஜ்) ரயிலிலேயே சென்றோம்.

ஹீத்ரூ விமான நிலையத்தில் இறங்கியதும் ரயில் அட்டை (ஆய்ஸ்டர் கார்ட்) ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டோம். அதைக்கொண்டு அங்கிருந்த எட்டு நாள்களும் உள்ளூர் ரயில், பேருந்து என எதிலும் வேண்டிய அளவு பயணம் செய்ய முடிந்தது. ஓரிரு நாள்கள் கழித்து என் மகள் ரயில்வே மேப்பை வைத்துக்கொண்டு எங்கு இறங்கி எந்த வரிசைக்கு மாற்றிச் சென்றால் சேரவேண்டிய இடத்துக்குப் போகலாம் என்பதை நன்கு அறிந்துகொண்டுவிட்டாள். அவ்வளவு எளிது, இந்தச் சேவையைப் பயன்படுத்துவது.

அவ்வப்போது நெரிசல் இருந்தாலும், பொதுவாக தரையடி ரயில்களில் பயணம் செய்வது மிகவும் வசதியானதாகவே உள்ளது.

தொலைதூர ரயில் பயணத்துக்கு சீட்டு வாங்குவது எளிது. ரயிலில் இடம் கிடைப்பதும் எளிது.

ரயில்வே நிலையங்களும் சரி, ரயில்களும் சரி, நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன.

லண்டனின் தரையடி ரயில் சேவை இன்றோ நேற்றோ உருவானதல்ல. 1863-ல் உருவாகத்தொடங்கியது.

***

இந்திய ரயில்வேயையும் பிரிட்டிஷ்காரர்கள்தான் தொடங்கிவைத்தனர். இன்று பல லட்சம் பேர் இந்திய  ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆனால் இந்திய ரயில்களின் தரம் உயரவே இல்லை. தொலைதூர ரயில் சேவையை மட்டுமே பிரதானமாகச் செய்துவந்தாலும் இந்திய ரயில்வே சில நகரங்களில் உள்ளூர் சேவையைச் செய்கிறது. கொல்கத்தா தரையடி மெட்ரோ, சென்னை, மும்பை நகரங்களில் தரைக்குமேலான ரயில் சேவை ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம்.

இந்தியாவில் ரயில் சேவையை சட்டப்படி இந்திய ரயில்வே மட்டும்தான் தரமுடியும். தில்லி மெட்ரோ சேவையைக் கொண்டுவரும்போதுதான் நாடாளுமன்றத்தில் சட்ட மாறுதல் கொண்டுவரப்பட்டு, தில்லி மெட்ரோ கார்பொரேஷன் தனியாக, தானாக ரயில் தண்டவாளங்களை அமைத்து சேவையைத் தரலாம் என்று அனுமதி தரப்பட்டது. அதேபோல ஒவ்வொரு நகரம் மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டுவர முடிவு செய்யும்போதும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரவேண்டும். அப்படித்தான் சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே மத்திய அரசின் தனியான ஒரு துறை. தொலைபேசிச் சேவையை ஒரு காலத்தில் வழங்கிய தொலைதொடர்புத் துறை போன்றது. இதற்கென தனி பட்ஜெட் ஆண்டாண்டு போடப்படும். இந்தத் துறை மமதா பானர்ஜி போன்றவர்கள் கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மாட்டி சிக்கித் தவிக்கிறது. ரயில்கள் தேவைக்கேற்றவாறு அதிகரிக்கா. மாறாக அரசியல் காரணங்களுக்காக ஓடும். தென்னகத்துக்கு 100 ரயில்கள் அதிகம் வேண்டும் என்றால் அது நடக்காது. பட்ஜெட்டில் 10 ரயில்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலே அதிகம்.

இந்திய ரயில்களில் உள்ள திறந்த கக்கூஸ் காரணமாக ரயில் நிலையங்களும் ரயில் பாதைகளும் அசிங்கத்தின் உச்சமாக உள்ளன. சுகாதாரம் பற்றிய கவலையே யாருக்கும் இல்லை.

அதிவேக ரயில் பாதை, விபத்துகள் இல்லாத ரயில் பயணம், வேண்டிய அளவு இடங்கள், ரிசர்வேஷனுக்கு அடிபிடிச் சண்டை இல்லாதது, ஒழுங்காக இயங்கும் இணைய டிக்கெட் முன்பதிவு, கஸ்டமர் சேவை, உயர்தர ரயில் நிலையங்கள் என்று நமக்கு எத்தனையோ தேவைகள் உள்ளன. ஆனால் இன்றைய நிலையில் இது எதுவும் நடக்கப்போவதில்லை.

அதைவிட மோசம், இன்றைய நிலையில் ரயில்வே தொடர்ந்து லாபம் சம்பாதிக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. லாலு பிரசாத் யாதவ் எக்கச்சக்க லாபம் காட்டினார். ஆனால் அதெல்லாம் கண் துடைப்பு என்றும் சொல்கிறார்கள். இப்போது கட்டணத்தை ஏற்றுவதை மமதா தடுத்துள்ளார். அமைச்சரை மாற்றியுள்ளார். தொலைத்தொடர்புத் துறைபோல ரயில்வேயும் போண்டி ஆக நேரிடலாம்.

ரயில்வேயால் மக்களுக்கு நிஜமாகவே நல்லது நடக்கவேண்டும் என்றால் கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்தாகவேண்டும்.

1. ரயில்வே சொத்துகள் அனைத்தையும் ஒரு கம்பெனிக்கு மாற்றவேண்டும். அந்த கம்பெனியின் 100% பங்குகள் ஆரம்பத்தில் மத்திய அரசிடம் இருக்கும். இந்த கம்பெனிக்கு மேனேஜிங் டைரக்டர், இயக்குனர்கள், சேர்மன் எல்லாம் இருப்பர். ரயில்வே அமைச்சரை பெட்ரோலியம் அமைச்சர், தொலைத்தொடர்பு அமைச்சர் போல ஆக்கிவிடவேண்டும். வருட பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதெல்லாம் தேவையில்லை.

2. இந்த மெகா இந்திய ரயில்வே லிமிடெட் கம்பெனியைப் பல கம்பெனிகளாகப் பிரிக்கவேண்டும்.
    (அ) இந்திய ரயில் டிராக் லிமிடெட்: இது நாடு முழுவதும் உள்ள ரயில் பாதைகளைப் பராமரிக்கும். புதிய ரயில் பாதைகளைப் போடும். இந்தப் பாதைகளைப் பயன்படுத்தும் ரயில்கள் அனைத்தும் இந்திய ரயில் டிராக் லிமிடெடுக்குக் கட்டணம் கட்டும்.
    (ஆ) இந்திய ரயில் டிராஃபிக் கண்ட்ரோல் அத்தாரிடி: இது ஒரு கம்பெனியாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் போல ரயில் டிராக்கில் எந்த வண்டி எங்கே உள்ளது என்று சிக்னல் நிர்வாகத்தைச் சரியாகச் செய்யவேண்டும். இதன் பராமரிப்புக்கான பணமும் ரயில் வண்டிகள் கட்டணமாகக் கொடுத்துவிடும்.
    (இ) ரயில் சேவை கம்பெனிகள்: மொத்த இந்தியாவைப் பல வட்டங்களாகப் பிரித்து (தொலைத்தொடர்பு வட்டங்கள்போல) ஒரு வட்டத்துக்கு ஒரு கம்பெனி என்று உடைக்கவேண்டும். இப்போதைக்கு அனைத்துமே 100% அரசு நிறுவனங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதில் உள்ளூர்ச் சேவை ரயில்கள், மாநிலச் சேவை ரயில்கள், மாநிலங்களுக்கு இடையிலான தொலைதூரச் சேவை ரயில்கள் ஆகியவற்றுக்குத் தனித்தனிக் கம்பெனிகள் இருக்கும். உதாரணமாக, சென்னை உள்ளூர்ச் சேவை மின்சார ரயில்கள் அனைத்தையும் தனியாகப் பிரித்து ஒரு தனி கம்பெனியின்கீழ் இயக்கவேண்டும். அதாவது தாம்பரம்-பீச், செண்ட்ரல்-திருவள்ளூர், பீச்-வேளச்சேரி ஆகிய லைன்களில் ஓடும் ரயில்களைப் பிரித்து ஒரு கம்பெனியாக்கி, அதனை சென்னை மெட்ரோ ரயில் கார்பொரேஷனுக்கு விற்றுவிடலாம். மெட்ரோ ரயில் தன் புதிய தடத்தை ஏற்கெனவே இருக்கும் உள்ளூர்த் தடங்களுடன் சேர்த்து, ஒரே டிக்கெட்டில் இவை அனைத்திலும் பயணம் செய்யுமாறு செய்யலாம். அதேபோல தமிழ்நாடு முழுமைக்கும் ரயில் சேவையை தமிழ்நாடு ரயில் சேவை கார்பொரேஷன் செய்யும். தமிழ்நாட்டிலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தில்லி போன்ற தொலைதூர இடங்களுக்குச் செல்லும் ரயில்களை தனி ஒரு நிறுவனம் (அல்லது நிறுவனங்கள்) செலுத்தும்.
    (ஈ) ரயில்வே நிலையங்களைத் தனித்தனி கம்பெனிகளாக மாற்றிவிடலாம். விமான நிலையங்கள் போல.

அடுத்தகட்டமாக, சில இடங்களில் தனியாரை அனுமதிக்கலாம். (பிறகு முழுமையுமே தனியார்மயம் ஆக்கிவிடலாம்.) முதலில் சில நகர ரயில் நிலையங்களை தனியார்மயம் ஆக்கலாம். அடுத்து தொலைதூர ரயில் சேவைக்காக தனியாரையும் அனுமதிக்கலாம். நகர  மெட்ரோ சேவையை அரசு தன்னிடமே வைத்துக்கொள்ள முடிவு செய்யலாம்.

இதனால் இந்திய ரயில்வேக்குத் தேவையான அளவு முதலீடு வரும். தனியார்மயத்தின் அடுத்த கட்டம் அந்நிய முதலீடு. ஆரம்பத்தில் 26% என்று தொடங்கலாம்.

இதுவெல்லாம் நடந்தால்தான் உலகத்தரம் வாய்ந்த ரயில்வே சேவை நமக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் அடுத்த ஐம்பதாண்டுகள் கழித்தும் இதே நிலையில் பின்தங்கியேதான் இருப்போம்.

ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று சென்றிருந்தேன். நிகழ்ச்சியின் நோக்கம், ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்ற ஆங்கிலேயர், சென்னை பல்லாவரம் அருகே கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்து 149 ஆண்டுகள் முடிவடைந்து, 150-வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாட.

சென்னை பல்லாவரம் மலையடிவாரத்தில் தோண்டிய இடமெல்லாம் கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. விதவிதமான கற்கோடரிகள். இவை ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தவை அல்ல. லட்சக்கணக்காண ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. 2 லட்சம் ஆண்டுகள் முதல் 25 லட்சம் ஆண்டுகள் வரை இருக்கலாம். பழைய கற்காலம் (பாலியோலித்திக்) என்று சொல்லப்படும் இந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஹோமினின் இனங்கள் பூமியில் வாழ்ந்தன.

இன்று நாம் ஹோமோ சாப்பியன் என்று சொல்லும் மனித இனத்துக்கு முந்தைய ஹோமோ எரக்டஸ், ஹோமோ நியாண்டர்தாலன்ஸ், அதற்கும் முந்தைய ஆஸ்ட்ரலோபிதிசீன் போன்ற இனங்கள்கூடக் கற்கருவிகளைச் செய்து பயன்படுத்தின என்று சொல்கிறார்கள். இந்தக் கருவிகள் உலகின் பல பாகங்களில் கிடைக்கின்றன.

சமீபத்தில் நான் பிரிட்டிஷ் மியூசியம் சென்றிருந்தபோது உலகின் பல பாகங்களில் கிடைத்துள்ள கற்கருவிகளைப் பார்த்தேன். என்ன அற்புதமான கற்கோடரிகள்! இவை சில ஆயிரம் ஆண்டுகள் முதல் பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவை. விதவிதமான கற்கள். கருங்கல், ஜேட், ஃப்ளிண்ட் என வகைவகையான கற்கள். சிலவற்றைத் தட்டித் தட்டிச் செதுக்கினால் கருவி வரும், சிலவற்றை சாண்ட்பேப்பர் போல எதையோ கொண்டு இழைத்தால்தான் கோடரியைச் செய்யமுடியும்.

ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் பல்லாவரத்தில் கண்டெடுத்த கற்கருவிகளைக் கண்டு அதிசயித்து, இந்த இடத்தில் ஒரு தொழிற்சாலையே இருந்திருக்கவேண்டும் என்றார். Madras Stone Tools Factory என்றே இந்த இடத்தை அழைத்தார்.

இன்றைய தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைத்துள்ளது. இன்னும் தோண்டினால் இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களில் கிடைக்கும். பெரிய கற்காலப் புதைகுழிகள் ஏகப்பட்ட இடங்களில் உள்ளது. பாறை ஓவியங்கள் இன்னும் பலப்பல இடங்களில்.

நேற்றைய கூட்டத்தில் ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் பற்றியும் மாந்தனின் பரவல் பற்றிய தன் சில கருத்துகளையும் ஒரிஸ்ஸா பாலு பேசினார். நல்ல பிரசண்டேஷன் என்றாலும் கொஞ்சம் நீண்டுவிட்டது. அதில் சொல்லப்பட்ட அனைத்தும் வந்தவர்களைச் சென்றடைந்ததா என்று தெரியவில்லை. பாலு ஒரு தொழில்முறை ஆராய்ச்சியாளர் அல்ல என்றாலும் தன் பேரார்வம் காரணமாகத் தன் சொந்தச் செலவில் பல இடங்களுக்கும் சென்று சொந்த முயற்சியில் ஆராய்ச்சி செய்யும் ஆர்வலர். கடல் பற்றிய ஆராய்ச்சியே அவருடைய முதன்மைக் களன். இந்தியாவிலிருந்து, அதுவும் குறிப்பாகத் தமிழகத்திலிருந்து உலகம் முழுமைக்கும் மக்கள் சென்றிருக்கக்கூடும் என்ற கருத்தை பாலு முன்வைக்கிறார். வட ஆப்பிரிக்காவிலிருந்துதான் மக்கள் பல இடங்களுக்கும் சென்றிருக்கக்கூடும், அதுவும் கால் நடையாக நடந்து என்ற கோட்பாட்டுக்கு எதிரான, மாற்றான ஒரு கோட்பாடு இது. கடல் ஆமைகள் செல்லும் பாதை, பாய்மரக் கப்பல்கள் செல்லும் பாதை ஆகியவற்றை முன்வைக்கும் பாலுவின் கோட்பாட்டுக்கு ஃபூட் கண்டுபிடித்த கற்கருவிகள் ஒரு நல்ல வலுவான சாட்சியம். பாலுவின் கோட்பாடு சுவாரசியமானது; மேற்கொண்டு ஆராயப்படவேண்டிய ஒன்று.

அதே நேரம் நேற்று இறுதியாகப் பேசிய ஒரு பேராசிரியர், கூட்ட நோக்கம் என்று நான் நினைத்திருந்ததற்கு மாறாக முற்றிலும் அரசியல் தளத்திலேயே பேசினார். தமிழர்களின் பெருமை வெளியே தெரியாமல் இருப்பதற்காகப் பலர் சேர்ந்து சதி செய்கின்றனர் என்பதில் ஆரம்பித்து, தமிழர்களுக்கு என்று தனி நாடு இல்லாமல் இருப்பதுதான் பிரச்னை என்று விரிந்து, திராவிடம், ஆரியம், சமஸ்கிருதம், மாந்தவியல், மொழியியல், அரசியல் என்று மிகவும் விரிந்து பரந்ததாக இருந்த அவரது பேச்சில் ஸ்காலர்ஷிப் மட்டும்தான் குறைவாக இருந்தது.

தமிழ் என்ற மொழியின் அடையாளம் மிகவும் சமீபத்தியது. குரங்கு, குரங்கு-மனிதன், மனிதன் என்ற பரிணாம வளர்ச்சியில் மொழி மிகவும் தாமதமாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயுதங்களை, கருவிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவது அதற்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. தமிழன் என்ற அடையாளத்தை 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதன்மீது ஏற்றி, தமிழனே உலகின் ஆதிமனிதன் என்று சொல்லி என்ன பெருமையை நாம் அடையப் போகிறோம்?

தமிழ்நாட்டில் வரலாறு படிக்கும் ஆர்வம் குறைவாக உள்ளது. வரலாற்று ஆராய்ச்சிகளும் குறைவே. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்று பார்த்தால் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மறுபக்கம், பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் உள்ளூரின் தொல்காலம் பற்றிச் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீர நடுகல் சிலைகள் உள்ளன. பெருங்கற்காலப் புதைகுழிகள் உள்ளன. கற்கருவிகள் தோண்டத் தோண்டக் கிடைக்கின்றன. இதுபற்றி நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தருவது ஒன்றுமே இல்லை. அவற்றைச் சரி செய்ய நாம் பல முயற்சிகளை எடுக்கவேண்டும்.

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பல விஷயங்களை யூகமாகத்தான் நாம் சொல்லமுடியும். உலக அரங்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அந்த யூகங்கள் இருக்கவேண்டும். அந்த அளவுக்குத் தரமான அகடெமிக் ஸ்காலர்ஷிப்பை நாம் உருவாக்கவேண்டும்.

அரசியல் பேச்சாளர்களை அல்ல.

Saturday, May 26, 2012

இந்தப் பதிவு ஐபேடில்...

நீங்கள் காணும் இந்தப் பதிவு ஆப்பிள் ஐபேடில் எழுதப்பட்டது. உலாவியில் நேரடியாக தமிழில் எழுத்துக்களை உள்ளிட்டு எழுதப்பட்டது.

Tuesday, May 22, 2012

குடியரசுத் தலைவர் பூர்ணோ சாங்மா?

பிரணாப் முகர்ஜியைக் குடியரசுத் தலைவர் ஆக்குவதே நல்லது என்று கொஞ்சம் விளையாட்டுத்தனமாக எழுதியிருந்தேன். இப்போது சீரியஸான பதிவு.

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் யாரைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தலாம் என்பதில் ஒரே குழப்பம். தானாக யாரை நிறுத்தினாலும் அது செல்லுபடியாகாது என்று பாஜகவுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. எனவே மீண்டும் அப்துல் கலாமுக்கு ஆதரவு தரலாம் என்று நினைத்து, அது பற்றிப் பேசி, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

காங்கிரஸின் கதை வேறு. அவர்கள் பிரதிபா பாடில் போல ஜிங்சக் ஆசாமி யாராவது கிடைப்பார்களா என்று பார்க்கிறார்கள்போல. வேறு யாரையாவது குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டால் நாளை ஏதேனும் பிரச்னை வருமோ என்று பயப்படுகிறார்கள்.

இந்நிலையில் நவீன் பட்நாயக்கும் ஜெயலலிதாவும் சமயோசிதமாக யோசித்து பூர்ணோ சாங்மா பேரை முன்மொழிந்துள்ளனர். சாங்மா மக்களவை சபாநாயகராக இருந்தபோதே அனைவரையும் கவர்ந்தவர். நன்கு பேசக்கூடியவர். எனக்கு மேகாலயா அரசியல் பற்றி எதுவும் தெரியாது; ஆனால் சாங்மா பற்றி மோசமான செய்தி ஏதும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். எனவே நேர்மையானவராக இருக்கவேண்டும். குடியரசுத் தலைவர் பதவி பெரும்பாலும் ஏதோவிதத்தில் ‘டோக்கனிசம்’தான். ஒரு முஸ்லிம், ஒரு தென்னாட்டவர், ஒரு சீக்கியர், ஒரு பெண் என்றவகையில்தான் அடையாளங்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட அடையாள அரசியலில் வடகிழக்கு, டிரைபல் போன்ற அடையாளங்கள் தாமாகவே முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரதிபா பாடில் போல வெற்று அடையாளமாக இல்லாமல், சாங்மாவை தைரியமாக வெளிநாட்டுக்கு அனுப்பலாம். கலாம் போல உணர்ச்சிவசப்பட்டு ஐ.நாவில் உரை ஆற்றமாட்டார் என்றாலும் அழகாக, ஆணித்தரமாகப் பேசி உலகத் தலைவர்களைக் கவரக் கூடியவர்.

எல்லாம் சரி, இவர் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறதா? காங்கிரஸ் இவருக்கு வாக்களிக்காது. தேசியவாத காங்கிரஸ் தன் சொந்தக் கட்சிக்காரரான இவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதனால் என்ன? அதுவே இவருடைய பலமாக இருக்கலாம்.

சோனியா பிரதமர் ஆவதை வலுவாக எதிர்த்தவர் என்றவகையில் பாஜக, இறுதியில் இவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யலாம். இடதுசாரிகளின் பார்வையிலும் இவர் ஏற்கத்தக்கவராக இருப்பார். இந்த இரு கட்சிகளும் முடிவு செய்துவிட்டால், பல மாநிலக் கட்சிகள் இவருக்கு ஆதரவைத் தரும். சமாஜ்வாதி எதிர்த்தால், பகுஜன் சமாஜின் ஆதரவு இருக்கும். அப்படியானால் குறுகிய வித்தியாசத்தில் இவர் வென்றுவிடுவார். அது காங்கிரஸுக்கு நல்லதல்ல என்ற ஒரே காரணத்தாலேயே பாஜக இவருக்கு ஆதரவு தரவேண்டும். ஆனால் அக்கட்சி கொஞ்சம் வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதே நலம். முதலில் இடதுசாரிகள் தம் ஆதரவைத் தெரிவிக்கும்வரை பொறுமையாக இருந்துவிட்டு, பிறகு ஆதரவைத் தெரிவிப்பதே பாஜகவைப் பொருத்தமட்டில் சரியான கேம்பிளான்.

Thursday, May 17, 2012

டயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்

நியூ ஹொரைஸன் மீடியா தொடங்கியுள்ள ‘டயல் ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடை தி.நகரில் கடந்த 15 நாள்களாக இயங்கிவருகிறது. இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாக விற்ற 10 புத்தகங்கள் என்ற பட்டியலைக் கேட்டேன். அவை கீழே:

கிமு கிபி - மதன்
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - ‘நீயா நானா’ கோபிநாத்
கீரைகள் - நலம் வெளியீடு
விரத பூஜா விதானம் - லிஃப்கோ
சுபாஷ் - மர்மங்களின் பரமபிதா - மருதன்
சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், சந்தியா பதிப்பகம்
நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது, சிக்ஸ்த் சென்ஸ்
கூண்டு, கார்டன் வெய்ஸ், காலச்சுவடு (இலங்கைப் போர் பற்றிய புத்தகம்)
பொன்னியின் செல்வன், கல்கி
அர்த்தமுள்ள இந்துமதம், கண்ணதாசன்

***

கிமு கிபி புத்தகம் பற்றி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் ஒரு கேள்வி வந்தது. அதிலிருந்தே இந்தப் புத்தகம் மிக அதிகமாக விற்கத் தொடங்கியுள்ளது. ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம் தொடர்ந்து அதிகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் ஒன்று. லிஃப்கோவின் ‘விரத பூஜா விதானம்’ அதிகமாக விற்பதற்குக் காரணம் கடை இருக்கும் இடத்தில் முன்பு லிஃப்கோவின் ஷோரூம் இருந்தது. லிஃப்கோ வாசகர்கள் தொடர்ந்து அங்கு வந்து அனைத்து லிஃப்கோ புத்தகங்களையும் வாங்குகிறார்கள். காலச்சுவடு வெளியீடான ‘கூண்டு’ அதிகம் விற்பதில் பெரும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பொன்னியின் செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம் போன்றவை எவர்கிரீன் புத்தகங்கள். நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.