Saturday, January 28, 2012

எக்ஸைல் விமர்சனக் கூட்டம்

4 பிப்ரவரி 2012, சனிக்கிழமை மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 வரை, சாரு நிவேதிதா எழுதியுள்ள எக்ஸைல் பற்றிய விமர்சனக் கூட்டம் தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடக்க உள்ளது.

எழுத்தாளர் ஞாநி சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கிறார்.

நாவல் பற்றிய தங்கள் கருத்துகளை வாசகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து பேசலாம்.

அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

Friday, January 27, 2012

புதுக்கோட்டை பயணம் - 3

மெய்நிகர் உலகில் இன்னும் நாம் திருமெய்யத்திலிருந்தே கிளம்பியபாடில்லை. ஆனால் மெய்யுலகிலோ, இன்னும் சில நிமிடங்களில் (காலை 5.30 மணி) நார்த்தாமலைக்குக் கிளம்பவேண்டும். காலை சூரிய உதயத்தின்போது நார்த்தாமலை விஜயாலய சோழீசுவரத்தில் இருக்கவேண்டும் என்பது திட்டம். காலை முழுதும் நார்த்தாமலை, கடம்பர் மலை. மதியம் சித்தன்னவாசல். இன்று இவை மட்டும்தான்.

இப்போது திருமெய்யத்துக்கு வருவோம். இரு கோவில்களில் சிவனுக்கான கோவில்தான் முதலில் குடையப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் பேரா. சுவாமிநாதன். விண்ணவர் கோவில் அடுத்ததுதான். குகை கிழக்கு நோக்கிய வாசலைக் கொண்டிருந்தாலும் அர்தமண்டபத்தில் ஏறினால் சிவனின் கருவறை தெற்கு நோக்கியுள்ளது. வாசலில் இரு துவாரபாலகர்கள்.

பல்லவ வாயிற்காப்போன்கள் போல் முகத்தில் அந்த அளவுக்கு அழகு இல்லை, என்றாலும் சிற்ப நேர்த்தி வெகு நன்றாகவே உள்ளது. வலதுபுறம் உள்ள வாயிற்காப்போன் ஒரு பெரும் தடியின்மீது கையை ஊன்றியபடி இருக்கிறான். சிவ துவாரபாலகர் அடையாளம் இது. அவனுடைய உருவ அளவையும் வலிமையையும் பறைசாற்றும் வகையில் அந்தத் தடியில் மூன்று சுற்றுக்களில் ஒரு மலைப்பாம்பு காட்டப்படுகிறது என்று விளக்கினார் மதியழகன். தமிழ்ப் பேராசிரியர். புதுக்கோட்டை பற்றி நன்கு அறிந்தவர். சிற்பங்களில் காணப்படும் யாளிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார். இதுவரையில் 28 வெவ்வேறு யாளிகளைப் பற்றி எழுதி வைத்திருப்பதாகவும் 50 ஆனவுடன் ஒரு புத்தகம் எழுதப்போவதாகவும் சொன்னார்.

பிற்காலத்தில் இந்த மலைப்பாம்பு ஒரு யானையைக் கவ்வுவதுபோலக் காண்பிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் காணலாம். ஆக, வாயிற்காப்போன் வைத்துள்ள தடி எவ்வளவு பெரியது? மலைப்பாம்பைப் போல பல மடங்கு. மலைப்பாம்பு எவ்வளவு பெரியது? ஒரு யானையையே கவ்வி விழுங்கும் அளவுக்குப் பெரியது. அப்படியானால் அந்த வாயிற்காப்போனின் உருவ அளவு?

இடது வாயிற்காப்போன், கையில் ஆயுதம் ஏதும் இன்றி, விஸ்மய முத்திரையைக் காட்டியபடி உள்ளான். இருவரது தலைக்கவசங்களும் மாறுபட்ட வடிவுடையதாக உள்ளன.

கருவறை உள்ளே உள்ள ஆவுடையுடன் சேர்த்த சிவலிங்கம் அந்த மலையிலிருந்தே குடைந்து உருவாக்கப்பட்டது. ஆவுடையும் வட்ட வடிவானது.

லிங்கத்துக்கு நேர் எதிராக லிங்கோத்பவ மூர்த்தியைப் பார்க்கலாம். நல்ல பெரிய சிற்பம். பொதுவாக நீங்கள் சிவத் தலங்களில் பார்க்கும் லிங்கோத்பவரிலிருந்து மாறுபட்டது.

லிங்கோத்பவர் உருவம், சிவனின் அடியையும் முடியையும் தேடி விஷ்ணுவும் பிரம்மாவும் சென்ற காட்சியை விளக்குவது. யார் பெரியவர் என்று பிரமனும் விஷ்ணுவும் விவாதித்துக்கொண்டு சிவனிடம் செல்ல, அவர் யார் முதலில் தன் அடியை அல்லது முடியைக் கண்டறிகிறாரோ அவர்தான் பெரியவர் என்று சொல்ல, விஷ்ணு பன்று உருவமாகித் தரையைத் தோண்டிக்கொண்டு செல்ல, பிரமன் அன்ன உருவில் வானில் பறந்துசெல்ல, இறுதியில் இருவருமே தோற்கின்றனர்; சிவனே பெரியவன் என்பதை உணர்கின்றனர் என்பதாகச் செல்லும் கதை. இதில் லிங்க வடிவுக்குள் சிவனின் உருவம் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் முடியின் உச்சியும் காலில் அடியும் காட்டப்பட்டிருகாது. அதே நேரம் மேல் இடது ஒரத்தில் அன்னப் பறவை, கீழ் வலது, இடது அல்லது நடுவில் ஒரு வராக உருவம் காட்டப்பட்டிருக்கும். சில இடங்களில் இதைத் தாண்டி இரு பக்கமும் பிரமனும் விஷ்ணுவும் காட்டப்பட்டிருப்பார்கள்.

ஆனால் இங்கே உள்ள லிங்கோத்பவரில் சிவனின் ஜடாமுடி நன்கு தெரியும். கால்கள் தெரியாது. சிவனின் ஆடையலங்காரம் மிக மிக அழகாக இருப்பதைக் காணலாம். லிங்கோத்பவர்களிலேயே மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பம் இது. ஆனால் ஆகம வரையறைகள் வருவதற்குமுன் (கதைகள் உருவாவதற்குமுன்) செய்யப்பட்டதாக இது இருக்கவேண்டும் என்கிறார் சுவாமிநாதன். அதனால்தான் அன்னமும் வராகமும் காணப்படுவதில்லை. பல்லவர்களின் கலையில் கைலாசநாதர் கோவிலிலிருந்துதான் லிங்கோத்பவரை நீங்கள் காணமுடியும்.

(தொடரும்)

Thursday, January 26, 2012

புதுக்கோட்டை பயணம் - 2

முதல் நாள் பயணம்: திருமெய்யம் (திருமயம்), ஆவுடையார்கோவில், இரும்பாநாடு

(இந்தப் பயணத்தில் நான் படம் ஏதும் எடுக்கப்போவதில்லை. எனவே வெறும் எழுத்து மட்டும்தான்.)

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் காலை புதுக்கோட்டை வந்து சேர்ந்தோம். குளித்து, காலை உணவு முடித்தபின், 8.30-க்குக் கிளம்பி திருமெய்யம் செல்வதாக ஏற்பாடு. ஆனால் அது நடக்காது என்பது தெரியும். சுமார் 40 பேர் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் தயாராகுவது எளிதல்ல. தங்குமிடத்திலிருந்து அனைவரும் கிளம்பி பப்ளிக் ஆபீஸ் எனப்படும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்கு வரும்போது மணி 9.30. அங்கே நகரின் சில முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர். இந்தப் பயணத்தின்போது எங்கள் வசதிக்கென ஒரு பேருந்தை அளித்திருக்கும் சுதர்சன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் வந்திருந்தார்.

முன்னாள் மன்னர் மார்த்தாண்ட வர்மா (Grand Commander, Indian Empire!) சிலைக்குமுன் நின்று அறிமுக உரையாடல்களை நடத்திக்கொண்டிருக்கும்போது புதுக்கோட்டையில் இருக்கும் பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி சானல் நண்பர்கள் என பலரும் வந்திருந்தனர். அனைவரும் படம் எடுக்க, வீடியோ எடுக்க கொஞ்சம் நேரம் செலவானது.

நாங்கள் இந்தப் பயணத்துக்காக என்று உருவாக்கியிருந்த கையேட்டை (ஆங்கிலத்தில் உள்ளது) அனைவருக்கும் அளித்தோம். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே அனைவரும் சொன்னார்கள். உண்மைதான். ஆனால் இது வெறும் கையேடுதான். விரைவில் ஒரு புத்தகமே தயாராகும்.

இறுதியாக திருமெய்யம் கிளம்பியபோது மணி 10.30.

திருமெய்யம் ஒரு குன்று. அந்தக் குன்றின்மேல் பிற்கலத்தில் கட்டப்பட்ட ஒரு கோட்டை உள்ளது. அந்தக் கோட்டையை கெட்டபொம்முவின் தம்பி ஊமைத்துரை ஓரிரவில் கட்டிமுடித்ததாக நம்பவே முடியாத ஒரு புனைகதை இந்தப் பகுதிகளில் உண்டாம். அதன் காரணமாக, ஊமையன் கோட்டை என்று இந்தக் கோட்டை அழைக்கப்படுவதுண்டு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டிருக்கலாம். அதன் காரணமாக இருவான அந்தப் பெயர், பின்னர் புதுக் கதையாகத் திரிந்திருக்கவேண்டும்.

அந்தக் குன்றின் கீழ்ப்புறம்தான் இரண்டு குடைவரைக் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யார் கட்டுவித்தது என்று தெரியவில்லை. பாண்டிய மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி இது. அவர்கள் கீழ் ஆட்சி செய்த முத்தரையர்கள் காலத்தில் எட்டாம் நூற்றாண்டில் இந்தக் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இரு குடைவரைக் கோவில்களையும் பிற்காலத்தில் விஜயநகர, நாயக்க மன்னர்கள், ஆளுநர்கள் விரிவாக்கிக் கட்டியுள்ளனர்.

திருமெய்யம் விண்ணவர் (விஷ்ணு) கோவிலில் காணப்படும் அனந்தசயன மூர்த்தி மிகப் பிரமாதமானது. ‘அனலால் அலறும் அரக்கர்கள்’ என்று குடவாயில் பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரே எங்களுடன் வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு வேறு வேலை என்பதால் வரமுடியவில்லை. அனந்தசயனப் பெருமாள் தமிழகத்தில் பல பகுதிகளில் இருப்பதோடு இந்தியாவின் பல பகுதிகளிலும் காணப்படுகிறார்.

இந்து சிலையமைப்பைப் பொருத்து, சயனமூர்த்தி, யோக, போக, வீர சயனமூர்த்தி என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறார். யோகமூர்த்தியை வழிபடுவது முக்தியைக் கொடுக்கும்; போகமூர்த்தியை வழிபடுவது செல்வத்தைக் கொடுக்கும். வீரமூர்த்தியை வழிபடுவது வீரத்தைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.

திருமயம் சயனமூர்த்தி போக சயனமூர்த்தி. மாபெரும் புடைப்புச் சிற்பம். 70 எம்.எம் சினிமாத் திரை போல ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை ஒரு வளைந்த வட்டத்தில் புடைப்புச் சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை கவின் கலைக் கல்லூரி விரிவுரையாளர் சிவராமகிருஷ்ணன் சுட்டிக் காட்டினார். மாமல்லபுரம் முதற்கொண்டு பல இடங்களில் காணப்படும் சயனமூர்த்தி இப்படிக் கிடையாது. ஏனெனில் அவை சிறு கட்டத்துக்குள் வருபவை. ஆனால் இங்குள்ள விரிந்து பரந்த சிற்பத்தை இப்படித்தான் செதுக்கவேண்டும்!

நித்திரையில் விண்ணவர் படுத்திருக்கிறார். வலது கரம் நாகத் தலையை ஒட்டி நீண்டுள்ளது. இடது கரம் கடக முத்திரையைக் காட்டியுள்ளது. வலது கால் நீண்டிருக்க, இடது கால் சற்றே மேலெழும்பி உள்ளது. கண்கள் பாதி மூடியுள்ளன. திருமகள், நிலமகள் இருவரும் இருக்கவேண்டும். திருமகள் தோள்புறத்திலும் நிலமகள் கால்புறத்திலும் (போக சயனமூர்த்தி என்றால் இதுதான் ஆகம முறை). ஆனால் திருமகளைக் காண முடிவதில்லை. காலடியில் நிலமகள் அமர்ந்திருக்கிறாள்.

மார்க்கண்டேயர், பிருகு என்ற இரு மகரிஷிகளும் காலடியில் உட்கார்ந்திருக்கவேண்டும். ஒரு ரிஷி கண்ணுக்குத் தென்படுகிறார். மற்றொருவர் காணவில்லை. உத்சவ மூர்த்தி அவரை மறைத்திருக்கவேண்டும்.

கருடன் தலைமாட்டில் நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு நேர்மேலே சூரியன். மறுகோடியில் சந்திரன்.

நாபிக்கமலத்திலிருந்து பிரமன். அவருக்கு இரு புறமும், தும்புரு, நாரதர், சனத்குமாரர்கள் நால்வர், ஆயுதபுருஷர்கள் ஐவர், சப்தரிஷிகள் எழுவர், அஷ்ட திக்பாலர்கள் எண்மர் என நிறைந்திருக்கவேண்டும். அவர்கள் அனைவரையும் மேலே காண்பீர்கள். ஐந்து ஆயுதபுருஷர்கள் பறக்கும் கோலத்தில் இருப்பார்கள். விஷ்ணுவின் ஆயுதங்கள் சங்கு, சக்கரம், வாள், வில், கதை. (மாமல்லபுரத்தில் இரு ஆயுத புருஷர்களை மட்டுமே காணலாம்.) இந்த ஐந்து ஆயுத புருஷர்களும் யாரை நோக்கிச் செல்கிறார்கள்?

விண்ணவரின் கால்புறத்தில் இரு அரக்கர்கள். மது, கைடபன். இவர்கள் விஷ்ணுவின் காது அழுக்கிலிருந்து உருவானவர்கள் என்கிறது தேவி மகாத்மியம். பூமியை எடுத்துகொண்டு போக வந்தவர்கள். விஷ்ணுவைத் தாக்க வருகிறார்கள். அவர்களை நோக்கித்தான் ஆயுத புருஷர்கள் நகர்வதாக சிற்பி வடித்துள்ளார்.

இதற்கிடையில் ஒரு டிராமா. யாரடா இவர்கள், எம் தலைவனைத் தாக்குவதற்கு வந்துள்ளார்கள் என்று கொதித்தெழும் ஆதிசேஷன் தன் வாயிலிருந்து அனல் விஷத்தைக் கக்குகிறான். அது பறந்து சென்று மது, கைடபர்களைத் தாக்க அதில் ஒருவன் தகிப்பைத் தாங்கமுடியாமல் தலையைச் சாய்த்து, முதுகின்மீது கைகொண்டு மறைத்துத் தப்ப முயல்கிறான்.

மாமல்லபுரத்தில் மது கைடபர்களின் கோலத்தைக் காணலாம். ஆனால் அனலைக் காண முடியாது. இங்கே திருமெய்யத்தில் அனல் ஜுவாலைகளையும் சிற்பத்தில் வடித்துள்ளனர். ஆனால் ஜுவாலையில் தீக்கங்குகளின் திசை பின்னோக்கி இருக்கவேண்டும். இங்கோ சிற்பத்தில் முன்னோக்கிச் செல்கிறது. இதற்கு குடவாயில் பாலசுப்ரமணியனின் விளக்கம் வித்தியாசமானது! அனலைக் கக்கியபிறகு கடும் உஷ்ணக் காற்றையும் அனுப்புகிறானாம் ஆதிசேஷன். அந்தக் காற்று முன்னோக்கிச் செல்வதால் தீக்கங்குகளும் முன்னோக்கிப் போகின்றனவாம்.

இந்தப் பெரிய நாடகம் நம் கண்முன் பனோரமிக் காட்சியாக விரிவடைகிறது.


நமக்கு நெருக்கடி தருபவர்கள் ஏதோ கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் பட்டரும், உத்சவர் பெயர் என்ன என்று ஆர்வமாகக் கேட்கும் பிற பக்தர்களும். ஆனால் கோவில் ஒன்றும் நம் சொத்து அல்லவே? எனவே நாம் ஓர் ஓரமாக நின்று இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பட்டர், கீழே குழுமி நிற்பவர்கள் சித்திரகுப்தனும் தர்மராஜாவும் என்கிறார். முப்பது முப்பத்தொன்னு தேவர்கள், நாப்பது நாப்பத்தொன்னு ரிஷிகள் என்று ஏதேதோ சொல்கிறார். எந்த ஆகமம், எந்த சோர்ஸ் என்றெல்லாம் அவரிடம் கேட்க முடியாது. அவர் கோவில், அவர் கதை. துளசி, தீர்த்தம், சடாரி ஆக ஆக, பஸ் கிளம்பிவிடும் என்று பரபரவென்று ஓடுகிறார்கள் மக்கள்.

நாம் மட்டும் இன்னமும் இருக்கிறோம். அடுத்து சிவனைப் பார்க்கவேண்டும். இரு கோவிலும் சேர்ந்து இருந்த வரலாறையும் பிரிந்த கதையையும் தெரிந்துகொள்ளவேண்டும். இடையில் எழுப்பப்பட்ட சுவர், அழிந்த இசைக் கல்வெட்டு இரண்டையும் பார்க்கவேண்டுமே.

(தொடரும்)

Tuesday, January 24, 2012

மொழிபெயர்ப்புகள்

இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் சில குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புப் புத்தகங்களைக் கொண்டுவந்திருந்தது என்பது என் கருத்து. ஆனால் பொதுவாக நம் வாசகர்கள் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அவ்வளவு காதலுடன் பார்ப்பதில்லை. அதற்குச் சில காரணங்கள் உண்டு.

பொதுவாக இந்தப் புத்தகங்கள் ஆங்கிலத்திலேயே 250 பக்கங்களுக்குமேல்தான் இருக்கும். தமிழில் நியாயமாக மொழிபெயர்த்தால் 350 தாண்டிவிடும். அதற்கேற்ப விலை இருக்கும்.

மொழிபெயர்ப்புகள் மிக அரிதாகத்தான் சரளமான நடையில்தான் உள்ளன. எக்கச்சக்கப் பணம் கொடுத்து திராபை மொழிபெயர்ப்புகளை ஏன் வாங்கி உடம்பைக் கெடுத்துக்கொள்வானேன் என்று பலர் இவற்றை வாங்குவதே இல்லை.

சில புத்தகங்கள் தவிர்த்து, ஒரிஜினல் எழுத்தாளர்கள் பற்றி தமிழ் வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பதில்லை. எனவே ‘பிராண்ட் புல்’ (சுஜாதா, சாண்டில்யன், கல்கி...) கிடையாது.

ஆனால், சில பதிப்பகங்கள் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புத் தளத்தில் இயங்கிவருகின்றன. அவற்றை அறிமுகம் செய்யவே இந்தப் பதிவு.

1. காலச்சுவடு: சமீப காலங்களில் காலச்சுவடு மிகத் தீவிரமாக மொழிபெயர்ப்பு உரிமங்களை வாங்குவதில் இறங்கியுள்ளது. திருவனந்தபுரம், தில்லி, பிராங்ஃபர்ட் என்று எங்கெல்லாம் மொழிபெயர்ப்பு உரிமங்கள் விற்பனை நடைபெறுகிறதோ அங்கு காலச்சுவடு கண்ணனைக் காணலாம். கார்டன் வெய்ஸின் ‘தி கேஜ்’, அருந்ததி ராய், பஷாரத் பீர் எழுதியவை என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

2. சந்தியா பதிப்பகம்: சமீப காலப் புத்தகங்கள் இல்லாமல், காப்புரிமம் காலாவதியான பல பழைய புத்தகங்களை மொழிபெயர்த்துக் கொண்டுவருகின்றனர். யுவான் சுவாங் பயணம், முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள் போன்ற சிலவற்றைச் சொல்லலாம்.

இடதுசாரிச் சிந்தனை கொண்ட பதிப்பகங்கள் பல காலமாகவே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றி வருகின்றன.

3. பாரதி புத்தகாலயம்: நேருவின் கண்டுணர்ந்த இந்தியா, உலக வரலாறு, லாப்பியர்/கால்லின்ஸின் நள்ளிரவில் சுதந்தரம் போன்ற சில முக்கியமான நூல்கள், பல கம்யூனிஸ்ட் நூல்கள், பல குழந்தைப் புத்தகங்கள் என்று மிக முக்கியமான பணி.

4. அலைகள்: நான்கு வேதங்கள், பல்வேறு கம்யூனிசப் புத்தகங்கள்.

5. விடியல்: கம்யூனிசப் புத்தகங்கள்

6. என்.சி.பி.எச்: நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் வரலாறு, டி.டி.கோசாம்பியின் இந்திய வரலாறு என்று பல புத்தகங்கள் என்.சி.பி.எச் வாயிலாக வெளியாகியுள்ளன. இந்த ஆண்டும் நிறையப் புத்தகங்களைப் பார்த்தேன்.

7. விகடன் பிரசுரம்: கடந்த மூன்று வருடங்களாக விகடன் பல முக்கியமான புத்தகங்களை தமிழாக்கம் செய்துவருகிறது. மால்கம் கிளாட்வெல்லின் மூன்று புத்தகங்கள், குருசரண் தாஸின் புத்தகங்கள், ரேஷ்மி பன்சாலின் புத்தகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பியர்சன், சேஜ் ஆகிய ஆங்கிலப் பதிப்பகங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு பல முக்கியமான புத்தகங்களை தமிழுக்கு இவர்கள் கொண்டுவருகிறார்கள்.

8. கண்ணதாசன் பதிப்பகம்: அனைவருக்கும் நன்கு தெரிந்த அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் மட்டுமல்ல, பதினைந்து ஆண்டுகளாக சுய முன்னேற்ற நூல்கள் பலவற்றைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் இவர்கள். கோப்மேயர், நெப்போலியன் ஹில் என்று தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட மொழியாக்கங்களை இவர்கள் செய்துள்ளனர். அகதா கிறிஸ்டி, ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் போன்ற கொலைக்கதை புத்தகங்களும் இவர்கள் வாயிலாக வெளியாகியுள்ளன. பல ஓஷோ புத்தகங்களும் இவர்களுடைய மொழிபெயர்ப்பின் வழியாக வெளியானவைதாம்.

9. மஞ்சுள்: தமிழுக்குக் கண்ணதாசன் பதிப்பகம்போல ஹிந்திக்கு இவர்கள். சுயமுன்னேற்றப் புத்தகங்களை ஹிந்திக்குக் கொண்டுவந்துள்ள இவர்கள், சமீபகாலமாக பல புத்தகங்களை தமிழாக்கம் செய்தும் வருகின்றனர். இவற்றை கிழக்கு பதிப்பகம் விநியோகிக்கிறது.

10. கிழக்கு பதிப்பகம்: கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 80 புத்தகங்கள்வரை நாங்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்துள்ளோம். இவை வாழ்க்கை வரலாறு, சுய முன்னேற்றம், வரலாறு, சமகால அரசியல் ஆகிய தளங்களில் உள்ளன. ஜெஃப்ரி ஆர்ச்சர் புத்தகங்கள் இரண்டையும் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் கொண்டுவந்துள்ளோம். பியர்சன், சேஜ், பெங்குவின், ஹார்ப்பர் கால்லின்ஸ், ரேண்டம் ஹவுஸ் ஆகியோரின் பல புத்தகங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளோம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு புத்தகம் என்றால் ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’ என்பதைச் சொல்வேன். விரிவாகச் சொல்லவேண்டும் என்றால் பல புத்தகங்கள் உள்ளன. வேறு ஓரிடத்தில் அவற்றைப் பார்ப்போம்.

***

யாருடைய பெயராவது விட்டுப் போயுள்ளது என்றால் அதற்கு உள்காரணம் எதுவும் கிடையாது. என் கண்ணில் பட்ட, என் மனத்தைக் கவர்ந்த பதிப்பகங்களை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள முக்கியமான பதிப்பகம் ஏதாவது விட்டுப்போயிருந்தால் அதனைக் குறிப்பிடுங்கள். சேர்த்துக்கொள்கிறேன்.

Monday, January 23, 2012

ஊருணி நீர் நிறைந்தற்றே - 2

ஞாயிறு காலை டிர்க் வால்த்தர், சாந்தா ஷீலா நாயர் ஆகியோருடன் மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள பட்டிகாடு (இப்படித்தான் அங்கு எழுதியிருந்தது) என்ற கிராமம் சென்று அங்கு கட்டப்பட்டிருக்கும் ஊருணியைப் பார்க்கச் சென்றேன். இதன் விரிவான ஒளிப்பதிவை (சுமார் 30 நிமிடங்கள்) கீழே கொடுத்துள்ளேன். விரும்பியவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

சாதாரண ஊர்க்குளம். இதைப்போல ஒரு லட்சம் குளங்கள் தமிழகம் எங்கும் இருக்கும். பல பயனின்றி அழிந்துபோயிருக்கும். ஆனால், இந்த ஊருணிகள் கட்டப்பட்டபோது, மிகத் தெளிவான ஒரு முறை இருந்திருக்கிறது.
  1. ஊருணியின் வடிவமைப்பு. அதாவது அதன் ஆழம், அதன் நீள, அகலங்கள். இது சில கணிப்புகளை உள்ளடக்கியது. அந்தப் பகுதியின் மழை எவ்வளவு, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்த் தேவை எவ்வளவு? இதைக் கொண்டுதான் இந்த வடிவமைப்பு இருக்கும்.
  2. ஊருணியில் ஓரிடத்தில் ஒரு கிணறு இருக்கும். மழை குறைவாக இருக்கும்போது ஊருணி முழுவதும் வற்றிவிட்டாலும் அந்தக் கிணறிலிருந்து நீர் கிடைக்கும். அவ்வப்போது ஊருணி வற்றவேண்டும். அப்போதுதான் அதில் படர்ந்திருக்கும் பாசிகளை நீக்கிச் சுத்தம் செய்ய முடியும்.
  3. நீர்ப் பிடிப்புப் பகுதி. ஊருணி என்பது ஊறும் நிலத்தடி நீரைக் கொண்டதல்ல. அது வான் மழை நீரைக் கொண்டது. அதாவது ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்:-) ஒரு பெரும் நிலப்பரப்பில் பொழியும் மழை நீரைச் சேமித்து ஊருணிக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதற்கு ஏற்றார்போல ஊருணி இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மழை நீர் ஓடிவந்து சேரும் பாதைகளை உருவாக்கவேண்டும்.
  4. இந்த மழை நீர்ச் சேகரிப்புப் பகுதியில் அசுத்தங்கள், முக்கியமாக மனிதர்களும் கால்நடைகளும் மலம், சிறுநீர் கழிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  5. இந்த மழைநீர் அப்படியே ஊருணிக்குள் செல்லாமல் ஒரு வடிகட்டி வழியாகச் செல்லவேண்டும். இந்த வடிகட்டியில் பல நிலைகள் இருக்கும். நாம் சிறு வகுப்பில் படிக்கும் முறைதான். பெரிய கற்கள், சிறிய கற்கள், பெரிய மணற்துகள், நன்கு சலிக்கப்பட்ட சிறிய மணற்துகள். இதையெல்லாம் தாண்டி நீர் உள்ளே வந்தால் பெரும்பாலான அழுக்குகள் நீக்கப்பட்டுவிடும்.
  6. மனித உடலுக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் பரவாமல் இருக்க ஊருணியின் அமைப்பே உதவும். ஊருணியின் ஒரு முனையிலிருந்து நீர் உள்ளே வருகிறது. மறுமுனையிலிருந்து நீர் வெளியே எடுக்கப்படுகிறது. இடப்பட்ட தூரத்தைக் கடப்பதற்குள் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் இறந்துவிடுகின்றன.
  7. ஊருணியில் யாரும் கால் வைக்கமாட்டார்கள். குளிக்க, துவைக்கமாட்டார்கள். ஆடு மாடுகள் செல்லாதவாறு பார்த்துக்கொள்வார்கள். முன்காலங்களில் எப்படி இதனைச் செய்தார்களோ, ஆனால் இப்போது நான் பார்த்த இடத்தில் நல்ல சுற்றுச் சுவர் எழுப்பி, பூட்டு கொண்டு பூட்டிவைத்துள்ளனர்.
  8. அருகில் இருக்கும் மரங்களில் வசிக்கும் பறவைகள், விலங்குகள் ஊருணி நீரில் அசுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. பெரும்பாலும் வடிகட்டிகள் வழியாக நீர் வெளியே வரும்போது இவற்றின் தாக்கம் ஏதும் இருக்காது.
  9. மழைக் காலங்களில் பிடிக்கப்படும் நீர் ஆண்டுமுழுவதற்கும் குடிக்கவும் உணவு சமைக்கவும் பயனாகிறது. இந்த நீரை பிற காரியங்களுக்கு - குளிக்க, துவைக்க, வீடு கழுவ, மாடு கழுவ - பயன்படுத்துவதில்லை. அதற்கு பிற குளங்களைப் பயன்படுத்துவார்கள்.
  10. வெளியே எடுக்கப்படும் நீர் இரண்டு வடிகட்டிகள் தாண்டி வருகிறது. இக்காலத்தில் பம்ப் போட்டு நீரை அடிக்கிறார்கள்.
பட்டிகாடு ஊருணி நீரை தொடர்ந்து சோதனை செய்துபார்த்ததில் அதனை அப்படியே காய்ச்சாமல், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் என்றெல்லாம் எதுவும் செய்யாமல் குடிக்கும் தரத்தில்தான் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

சில படங்கள்:

பூட்டிய கதவுக்குப் பின் ஊருணி
கொஞ்சம் பாசி படர்ந்துள்ளது
டிர்க் வால்த்தர், தன் ஒரு மகளுடன்
அருகில் உள்ள வானிலை அளக்கும் கருவிகள்,
துரதிர்ஷ்டவசமாக,
இப்போது பயன்பாட்டில் இல்லை
வண்டியில் வந்து குடிநீர் எடுத்துச் செல்கிறார்கள்
அருகில் ஒரு அம்மன் கோவில், ஆலமரம்
ஊருணி எப்படி இயங்குகிறது என்ற விளக்கப்படம்
அருகில் வாலிபால் விளையாடும் இளைஞர்கள்

ஒளிப்பதிவு (சுமார் 30 நிமிடங்கள்)


Saturday, January 21, 2012

புதுக்கோட்டை பயணம் - 1

தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் சார்பாக ஒவ்வோர் ஆண்டும் ஒரு பாரம்பரியப் பகுதிக்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து, அங்குள்ள சின்னங்களை, அவற்றின் வரலாறை, கலையைப் படிப்பது, புரிந்துகொள்ள முயற்சிப்பது எங்கள் வழக்கம்.

2010-ல் மாமல்லபுரத்தில் மூன்று நாள்கள் தங்கினோம். 2011-ல் எல்லோரா, அஜந்தாவுக்கு ஒரு வாரம். இப்போது 2012 ஜனவரியில் புதுக்கோட்டைக்குச் செல்கிறோம். இதற்கென கடந்த இரண்டு மாதங்களாக, படிப்பது, கூடுவது, பகிர்வது நடந்துவருகிறது. சுமார் 30 பேர் செல்கிறோம்.

கடந்த இருமுறையும் செய்த பயணங்கள் பற்றி என் பதிவில் நான் விரிவாக எதுவும் எழுதவில்லை. இம்முறை நிகழ்வின்போதே தொடர் பதிவுகளாக எழுதிவிட முடிவு செய்துள்ளேன். தொடக்கத்தில் சில அறிமுகப் பதிவுகளும்.

இந்த புதுக்கோட்டைப் பயணத்தின்போது நாங்கள் செல்லவிருக்கும் இடங்கள்:

1. நார்த்தாமலை, கடம்பர் மலை, ஆளுருட்டி மலை, சுற்றியுள்ள இடங்கள்
2. சித்தன்னவாசல் (அறிவர்கோவில், ஏழடிப்பட்டம்), பனங்குடி
3. குடுமியான்மலை
4. கொடும்பாளூர் (மூவர் கோவில், ஐவர் கோவில், முசுகுந்தேசுவரர் கோவில்)
5. விசலூர், செட்டிப்பட்டி
6. குன்றாண்டார் கோவில், மலையடிப்பட்டி, காளியாப்பட்டி
7. திருமயம், மலையக்கோவில், கண்ணனூர்
8. ஆவுடையார்கோவில், திருப்புன்னைவாயில், திருக்கட்டளை
9. புதுக்கோட்டை நகரம்

சமண, இந்துக் கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், சமணர் படுக்கைகள், முதுமக்கள் தாழிகளைக் கொண்ட பெருங்கற்கால (மெகாலித்திக்) புதைகுழிகள்.

***

இப்பகுதிகளுக்கு சங்ககாலத்துக்கு முன்பிருந்தே தொடர்ச்சியான ஒரு வரலாறு உள்ளது. பல்லவ, சோழ அரசர்களுக்குக்கீழ் இருந்த இருக்குவேளிர்களும் முத்தரையர்களும் ஆட்சி செய்த பகுதி. பாண்டியர்களின் கட்டுப்பாடும் இருந்துள்ளது. பல்லவக் கலையின் தொடர்பு இருக்கும் அதே நேரம், அதிலிருந்து சற்று விலகி, முற்காலச் சோழர் கலைக்கான முன்மாதிரியாகவும் உள்ளது. (பிற்கால) சோழ சாம்ராஜியம், பாண்டிய, ஹொய்சாள அரசுகளுக்குப்பிறகு, மாலிக் காஃபூரின் தாக்குதல் இப்பகுதியிலும் இருந்தது. அதன்பின் விஜயநகர, நாயக்க, மராத்தா கட்டுப்பாடு. பின் தொண்டைமான்கள்.

தமிழகத்தின் பிற பகுதிகள் போலன்றி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வளமையாக இருந்த பகுதி இது. ஏனெனில் புதுக்கோட்டை சமஸ்தானம் தனியான ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் ஆட்சியுடன் நட்பு கொண்ட ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஒரே ராஜ குடும்பம் (தொண்டைமான்கள்) சுமார் 270 வருடம் தொடர்ந்து ஆட்சி நடத்தியது. அதன்பின் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. இந்த மன்னர்களுக்கு நல்ல திவான்கள் கிடைத்த காரணத்தால் ஆட்சிமுறை நல்லபடியாக நடந்துள்ளது.

அடுத்த சில பகுதிகளில் பல விஷயங்களை விரிவாகப் பார்க்கலாம்.

Friday, January 20, 2012

ஊருணி நீர் நிறைந்தற்றே...

இன்று மதியம், தமிழகத்தின் நீர்ப் பிரச்னையையும் கிராம ஊருணிகளையும் பற்றி இருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் டிர்க் வால்த்தர் என்னும் ஜெர்மன் நீர்ப் பொறியாளர். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்த் துறையில் வேலை செய்தவர். இப்போது தில்லி சென்றுவிட்டார். இன்னொருவர் தமிழக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் (ஓய்வுபெற்ற இ.ஆ.ப).

குடிக்க நீர் இல்லை என்று தமிழகத்தின் பல கிராமங்களில் மக்கள் திண்டாடுகின்றனர். அரசுதான் தங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று எப்போதும்போல கையை அகல விரித்துக் கேட்கின்றனர். ஆனால் உண்மையில் சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நீர் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் பின்னர் அது முற்றிலுமாக அழிந்துபோயுள்ளது என்றும் சொன்னார் வால்த்தர்.

சென்ற வாரம் தி ஹிந்து செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி, தமிழகத்தில் சுமார் 70,000 நீர் நிலைகள் உள்ளன என்றும் அதில் கிட்டத்தட்ட 48,000, கிராம ஊருணிகள் (அதாவது சிறியவை, கிராமப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை) என்றும் தெரிவிக்கிறது. (சுட்டி கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் சேர்க்கிறேன்.) அவை பெரும்பாலும் சரியான பராமரிப்பு இன்றி வீணான நிலையில் இருக்கின்றன.

அவற்றை எப்படி பாரம்பரிய அறிவும் நவீன அறிவியலும் கொண்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது என்பதில்தான் வால்த்தர் வேலை செய்தார். தமிழக அரசு அதற்கான நிதியுதவியை அளித்தது. அந்தந்தப் பகுதி மக்களைக் கொண்டு, அந்தந்த ஊர்ப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஊருணிகளை மீண்டும் செம்மைப்படுத்தி, அதில் கிடைக்கும் நீரை எப்படி ஆண்டு முழுதும் பகிர்ந்து பயன்படுத்துவது என்று சில இடங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளார். அவற்றில் ஓரிடத்துக்கு இந்த வாரத்துக்குள் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.

அறிவியலால் அழிவு மட்டும்தான் சாத்தியம் என்பதாகப் பல அறிவுஜீவிகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மனித சமுதாயம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் அறிவியலின் உதவிகொண்டு தீர்க்கமுடியும் என்று தீர்க்கமாக நான் நம்புகிறேன். நம் முன்னோர்களும் இதே அறிவியலின் துணை கொண்டு மிகச் சிறப்பான பொறியியல் அமைப்புகளைக் கட்டியிருக்கிறார்கள். அதனைக்கூட புரிந்துகொள்ள சக்தியற்றவர்களாக நம் கிராமத்து மக்கள் மூளை மழுங்கிப் போயுள்ளனர். அந்த மூளையைக் கூர் தீட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.

(சில மாதங்களுக்குமுன் வேம்பார் சென்றிருந்தபோது அருகில் இருக்கும் தங்கம்மாள்புரம் என்ற கிராம மக்கள், PAD என்ற தொண்டு நிறுவனத்தோடு இணைந்து எப்படி தங்கள் ஊரின் நீர் நிலையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்பதுபற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.)

சில மாதங்களுக்குமுன் நான் இலங்கையில் அனுராதபுரம் சென்றிருந்தபோது அங்கே கண்ட ஒரு குளத்தின் அமைப்பு கீழே படங்களாக. (சுமார் 11-12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று ஞாபகம்.)



இந்த மாதிரியே தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆனதாக வேறு ஒரு ஜெர்மன் ஆராய்ச்சியாளர் தன்னிடம் சொன்னதாக வால்த்தர் என்னிடம் சொன்னார். சில நூறு ஆண்டுகளுக்குமுன், தமிழகத்திலிருந்து (நீர் நிர்வாகம் போன்றவற்றுக்கான) பொறியியல் மாதிரிகள் ஆப்பிரிக்க, கீழை ஆசிய நாடுகளுக்கெல்லாம் சென்றதாக அந்த ஜெர்மன் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளாராம். (அதற்கான தரவுகளை எனக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்.) இதே மாதிரியைத்தான் இப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் வால்த்தர் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் நீர் நேராக குளத்தில் சேமிக்கப்படாது. மாறாக சில மணற்சல்லடைகள் வழியாக வடிகட்டப்பட்டு பின், அந்த நீர்தான் குளத்தில் சேமிக்கப்படும். அதிலிருந்து நேராக நீர் வெளியே எடுக்கப்படாது. மாறாக இரட்டை வடிகட்டிகள் தாண்டி கை அடி பம்ப் மூலமாகப் பிடிக்கப்படும். வடிகட்டிகள் எல்லாமே இயற்கை வடிகட்டிகள். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எல்லாம் கிடையாது. மின்சாரம் தேவையில்லை. நீர் நிலையில் அசுத்தம் கலக்காமல் பாதுகாக்கவேண்டும். நீர் நிலையின் ஆழம் எவ்வளவு இருக்கவேண்டும், சுற்று மதில் எதனால் அமைக்கப்படவேண்டும் ஆகியவற்றுக்கு சில கால்குலேஷன்களைச் செய்யவேண்டும். பொதுவாக நம் முன்னோர்கள் கட்டியுள்ள ஊருணிகளுக்கு உள்ளாக கிணறு ஒன்றை அமைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் அதையும் அமைக்கவேண்டும்.

மேலோட்டமாகப் பார்த்தால் மிக எளிதாகத் தோன்றும் இதில் மேற்கொண்டு நிறைய அறிவியல் பின்னணி உள்ளது. ஆனால் இப்போதைக்கு இது போதும்.

இந்த முறைப்படி, மக்களின் நேரடி ஈடுபாட்டுடன் உள்ளூர்க் குடிநீர் நிர்வாகத்தை அந்தந்தப் பகுதி மக்களே எடுத்துக்கொள்ளுமாறு செய்ய மாநில திட்டக் குழு உந்துதல் தரும் என்று சாந்தா ஷீலா நாயர் தெரிவித்தார்.