Wednesday, May 31, 2006

பொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு

நேற்று முதல்வர் கருணாநிதி பொது நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்களுக்கான பிரதிகளின் எண்ணிக்கை 1,000-ஆக உயர்த்தப்படும் என்று சட்டசபையில் பேசும்போது சொன்னார்.

ஒரு நாளைக்கு ஏகப்பட்ட அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கையில் மேலே என்ன சொன்னார் என்பதைப் பிறரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் கீழே சில புள்ளிவிவரங்களைக் கொடுத்துள்ளேன்.

----

தமிழக அரசின் பொது நூலகத்துறை தமிழ் நூல்களை வருடாவருடம் வாங்கி அவற்றை தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களில் பொதுமக்களுக்காக வைத்து வருகிறது.

தமிழகத்தில் இருக்கும் நூலகங்கள்

மாநில மைய நூலகம், சென்னை - 1
மாவட்ட மைய நூலகங்கள், மாவட்டத் தலைநகரங்கள் - 29
கிளை நூலகங்கள் - 1,568
கிராம நூலகங்கள் - 1,492
பகுதி நேர நூலகங்கள் - 649
நடமாடும் நூலகங்கள் - 12

மொத்தம் = 3,751

2004-05 வருடத்தில் உறுப்பினர்கள்: 34,92,326. இவர்கள் அனைவரும் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இருப்பவர்கள்.

நூலகத்துறைக்கு மூன்று வழிகளில் வருமானம் வருகிறது.
1. உறுப்பினர்கள் கட்டும் கட்டணம்
2. ராஜா ராம்மோகன் ராய் நூலக அமைப்பு (மத்திய அரசின் கீழ் இயங்குவது) வருடாவருடம் கொடுக்கும் நிதியுதவி
3. நூலக மீ-வரி (Library Cess). உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் வசூலிக்கும் சொத்துவரியின்மீதாக அதிகமாக வசூலிக்கப்படும் Cess.

நூலகத்துறைக்கு ஆகும் செலவு
1. கட்டட வாடகை, கட்டட மராமத்து, ஊழியர் சம்பளம், பிற அலுவலகச் செலவுகள்
2. புதிதாக ஆண்டுதோறும் வாங்கும் புத்தகங்களுக்கான செலவு

கடந்த நான்கு ஆண்டுகளில் ராஜா ராம்மோகன் ராய் நூலக அமைப்பு தமிழகத்துக்குக் கொடுத்திருக்கும் தொகை: 2001-02: ரூ. 1 கோடி; 2002-03: ரூ. 1.5 கோடி; 2003-04: ரூ. 1.5 கோடி; 2004-05: ரூ. 2 கோடி.

கடந்த ஆண்டுக்கு முன் நூலக மீ-வரியாக வசூலிக்கப்பட்ட தொகை: 2001-02: ரூ. 16.31 கோடி; 2002-03: ரூ. 22.48 கோடி; 2003-04: ரூ. 38.28 கோடி.

மீ-வரியாகக் கிடைக்கும் பணம் அடுத்த ஆண்டுச் செலவுக்காகும் என்று வைத்துக்கொண்டாலும் 2004-05-ம் ஆண்டு நூலகத்துக்கு எனக் கிடைத்த பணம் ரூ. 40.28 கோடி + உறுப்பினர் கட்டணம். உறுப்பினர் கட்டணத்தைச் சரியாகக் கணிக்க முடியாது. சாதாரண உறுப்பினர்கள் வருடத்துக்கு ரூ. 100 கட்டுகிறார்கள். ஆனால் மாணவர்கள் கட்டணம் அதைவிடக் குறைவு. எத்தனை பேர் மாணவர்கள் என்று சரியாகத் தெரியவில்லை. உறுப்பினர் கட்டணம் எப்படியும் மிகக் குறைந்த அளவில் பார்த்தாலும் ஆளுக்கு ரூ. 10 என்று வைத்துக்கொண்டாலும் ரூ. 3.5 கோடி வருகிறது.

ஆக கடந்த ஆண்டுக்கான மொத்த வருமானம் எப்படியும் ரூ. 45 கோடி.

ஆனால் 2004-05-ம் ஆண்டுக்காக பொது நூலகங்களுக்கு எனச் செய்யும் செலவு என்று எவ்வளவு விதித்தார்கள் தெரியுமா? ரூ. 15.03 கோடிகள். அதற்கு மேல் 130 உயர்நிலைப் பள்ளிகள், 75 மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி நூலகங்களுக்காகச் செலவழித்த தொகை ரூ. 37.5 லட்சம்.

சரி, இந்த ரூ. 15.03 கோடியை எப்படிச் செலவழித்தார்கள்?

3,994 தமிழ் புத்தகங்கள் - ஒவ்வொன்றும் 600 அல்லது 400 பிரதிகள் வாங்க: ரூ. 8.53 கோடி
2,411 ஆங்கிலப் புத்தகங்கள் - ஒவ்வொன்றும் 30 பிரதிகள் (என்று நினைக்கிறேன்) வாங்க: ரூ. 2.44 கோடி

மீதமுள்ள ரூ. 4.06 கோடி, ஊழியர் சம்பளம், பிற செலவுகள் என்று கழிந்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் இந்த மாதிரிதான் நடந்துள்ளது. அதாவது பொதுமக்கள் நூலகத்துக்கு எனக் கட்டும் மீ-வரியில் ஒரு பகுதிதான் - சுமார் 33% அல்லது அதற்கும் குறைவுதான் நூலகங்களுக்கு எனச் செலவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தமிழ் புத்தகத்திலும் அது ரூ. 150-ஐ விடக்குறைவாக இருக்கும் பட்சத்தில் 600 பிரதிகளும் ரூ. 150க்கு மேலுள்ள புத்தகங்கள் என்றால் 400 பிரதிகளும் வாங்கினார்கள்.

முதல்வர் கருணாநிதியின் அறிக்கையை வைத்துப் பார்த்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திலும் 1,000 பிரதிகள் எடுத்தால் தமிழ் புத்தகங்களுக்கு ஆகும் செலவு ரூ. 17 கோடி வரை ஆகும். இது நிச்சயமாக வரவேற்க வேண்டிய செய்தி. இது கேட்காமல் கிடைத்த ஒன்று எனும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. ஒரு பதிப்பாளராக என் நன்றி.

ஆனால் ஒரு வாசகனாக நான் இன்னமும் அதிகமாக எதிர்பார்க்கிறேன். 2006-07 நூலகத்துக்கு என மக்கள் கொடுக்கும் பணம் கிட்டத்தட்ட ரூ. 50 கோடியை நோக்கிச் செல்லும். எப்படியும் செலவுகள் ரூ. 25-30 கோடிக்குள்தான் வரும். மீதம் ரூ. 20 கோடியை வேறு செலவுகளுக்கு என்று எடுத்துக் கொள்ளாமல் அந்தப் பணத்தில் புது நூலகங்களைக் கட்டுங்கள். வருடத்துக்கு 500 புது கிளை நூலகங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஐந்தாண்டுகளில் 2,500 நூலகங்களைக் கட்டிவிடலாம். இப்படிக் கட்டப்படும் நூலகங்கள் சிற்றூர்களுக்கும் கிராமங்களுக்கும் பெருத்த நன்மையைக் கொடுக்கும். அத்துடன் ஒவ்வொரு அரசுப் பள்ள்ளிகளிலும் கார்பொரேஷன், முனிசிபாலிட்டி, பஞ்சாயத் பள்ளிகளிலும் நல்ல நூலகங்களை அமைக்க வேண்டும்.

இதற்காக தமிழக அரசு கஷ்டப்பட்டு பணம் சேர்க்க வேண்டியதில்லை. வருடா வருடம் பெறும் Library Cess ஒன்றே போதும்! அந்தப் பணத்தை நூலகங்களுக்கு மட்டும் செலவு செய்யவேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.

Tuesday, May 30, 2006

இட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்

1. இரண்டு பொதுநல வழக்குகள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நிதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஒன்று தன்னம்பிக்கை நூலான 'You Can Win' என்னும் புத்தகத்தை (மேக்மில்லன் பதிப்பகம்) எழுதிய ஷிவ் கேரா தொடங்கிய வழக்கு. இவர் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான 93வது சட்டத்திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது என்று வழக்கு தொடர்ந்துள்ளார். அஷோக் குமார் தாகுர் என்பவர் பிற்படுத்தப்பட்டோர் சதவிகிதம் என்று பல்வேறு அரசு ஏஜென்சிகள் கொடுக்கும் தகவல் ஒன்றோடொன்று முரண்படுகிறது என்கிறார்.

விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச், 93வது சட்டத் திருத்தத்தை முடக்க முடியாது என்று சொல்லி, மத்திய மாநில அரசுகளை ஆறு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் தில்லியில் வேலை நிறுத்தம் செய்துவரும் டாக்டர்களை மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தி ஹிந்து செய்தி

2. மத்திய அரசு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் வழிமுறையை உருவாக்க மூன்று குழுக்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் ஜூலை 31க்குள் தங்களது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன் அரசு 13 பேர் அடங்கிய மேற்பார்வைக் குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்தக் குழு ஆகஸ்ட் 31க்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். இந்தக் குழு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதைக் கண்காணிக்கும்.

தி ஹிந்து செய்தி

தொடக்கக் கல்வி ஏற்றத்தாழ்வுகள்

இன்றைய 'தி ஹிந்து'வில் Schooled in inequality - Mary E. John

நான் இதைப்பற்றி என் முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

ஐஐடி கான்பூர் கடிதம்

ஐஐடி கான்பூர் ஆசிரியர்கள் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் எழுதிய கடிதம். அதன் மீதான என் விமரிசனம். (ஆங்கிலத்தில்)

Saturday, May 27, 2006

வினாயகா மிஷன் தகிடுதத்தம்

வினாயகா மிஷன் சேலத்தில் பொறியியல், மற்றும் பிற கல்லூரிகளை நடத்தி வருகிறது. சென்னையிலும்கூட அறுபடை வீடு என்ற பெயரில் ஒரு பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கொன்றில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் இந்த நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார்கள்.

நான் என் ஆங்கிலப் பதிவில் AICTE விவகாரம் பற்றி எழுதியதைப் படித்துவிட்டு ஜம்மு காஷ்மீரிலிருந்து ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு சில விவரங்களை கொடுத்தார்.

வினாயகா மிஷன் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் ஜம்முவில் தொலைதூரக் கல்வி வகுப்புகள் நடத்தி அங்குள்ள மாணவர்களுக்கு பொறியியல் பட்டம் கொடுப்பதாகச் சொல்லியுள்ளனராம்.

அதாவது பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அத்துடன் வினாயகா மிஷன் வகுப்புகளில் தங்கள் பாலிடெக்னிக் படிப்பின்போதே படிக்கலாமாம். நேரடி வகுப்புகள் கிடையாது. பிராக்டிகல்ஸ் கிடையாது. மூன்று வருடப் பாடத்தை 1 - 1.5 வருடத்துக்குள் எழுதலாமாம். கடைசியில் டிகிரி சான்றிதழ் என்று ஒன்றைக் கொடுக்கிறார்கள். இதைச் செயல்படுத்தும் அதிகாரம் இவர்களுக்கு நிச்சயம் கிடையாது - AICTE க்கு இதுபற்றிய தகவல்கள் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஜம்முவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த வகுப்புகளில் படிக்கிறார்களாம்.

வினாயகா மிஷன் கல்லூரிகள் பற்றி உங்களிடம் தகவல் ஏதும் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும்.

வினாயகா மிஷன் கல்லூரிகள் சில:
Vinayaka Mission's Kirupananda Variyar Arts and Science College, Salem
Vinayaka Mission's Kirupananda Variyar Engineering College, Salem
Vinayaka Mission's Sankarachariyar Dental College, Salem
Vinayaka Mission's Homoeopathic Medical College, Salem
Vinayaka Mission's Annapoorna College of Nursing, Salem
Vinayaka Mission's College of Pharmacy, Salem
Vinayaka Mission's College of Physiotherapy, Salem
Vinayaka Mission's Institute of Management, Salem
Vinayaka Mission's Kirupananda Variyar Sundara Swamigal Polytechnic College, Salem
Aarupadai Veedu Institute of Technology, Chennai

வினாயகா மிஷன் மீதான AICTE கருத்து:
1. As regards the Vinayaka Mission and Research Foundation, the AICTE said the deemed university had "misused the grant of the status to the maximum by violating all provisions."

வினாயகா மிஷன் மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து:
Citing the "blatant" and "glaring example" of Vinayaka Mission Research Foundation's management of its Arupadaiveedu Institute of Technology, the Bench said the interpretation by the deemed universities that the AICTE should be kept out completely could lead to such a situation.

என் ஆங்கிலப் பதிவு

Friday, May 26, 2006

பரிவட்டம் - Quit while you are ahead!

கருணாநிதி தமிழகத்தின் சமூக நீதிக் காவலர்தான். ஆனால் எப்பொழுது தனது அலம்பல்களை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் உணரவேண்டும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை கருணாநிதி அரசு ஆணையாகக் கொண்டுவந்தபோது மிகச்சிலரே அதனை எதிர்த்திருப்பார்கள். உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் - அல்லது அந்தச் சாதியின் உட்பிரிவுகள் சில - மட்டுமே அர்ச்சகர்களாக இருக்கும் பெரும்பான்மைக் கோயில்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான ஒரு நிகழ்வு.

அதற்கடுத்து பழனிவேல்ராஜன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்த கருணாநிதி "இனி வி.ஐ.பி.க்களுக்கு ஆலயங்களில் இந்தப் பட்டு, பரிவட்டங்கள் கட்டுகின்ற மரியாதை கூடாது என்பதை - பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்கள் நினைவாக நாம் தடுத்து நிறுத்துவோம். அவைகளை இனி அனுமதிக்கமாட்டோம் என்பதை ஒரு உறுதியாக, பழனிவேல்ராஜன் அவர்கள் பெயரால் எடுத்துக்கொள்வோம்" என்றார்.

பழனிவேல்ராஜன் நினைவாக எவ்வளவோ செய்யலாம். ஒரு பள்ளிக்கூடம் கட்டலாம். கொஞ்சம் சாலைகள் அமைக்கலாம். தண்ணீர் வசதிகள் செய்து தரலாம். இல்லை, சமூக நீதியைத்தான் நிலைநாட்ட வேண்டுமென்றால் பழனிவேல்ராஜன் நினைவாக பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு உள்ளாட்சித் தேர்தல்களை சுமுகமாக நடத்தலாம்.

பரிவட்டம்?

தான் சொன்னதை ஓர் அரசாணையாகச் சொன்னாரா அல்லது சும்மா, ஏதாவது ஒன்றைச் சொல்லித்தான் வைப்போமே என்று மேடைப்பேச்சு வாக்குறுதியாகச் சொன்னாரா தெரியவில்லை.

வி.ஐ.பி என்று இவர் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.

பொதுவாக உபயகாரர்களுக்கு எதிர்மரியாதையாகப் பரிவட்டம் கட்டித்தான் நான் பார்த்திருக்கிறேன். வைணவக் கோயில்களில், மண்டகப்படிக்காரருக்கு மாலை அணிவித்து, உற்சவரின் பட்டுத்துணியை தலையில் கட்டி, மேள நாகசுரம் முழங்க, சடாரியைத் தலையிலும் தோள்களிலும் சார்த்தி, பழம், பூ பிரசாதங்கள் தருவது வழக்கம். இந்த உபயதாரர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். கடவுளுக்குத் தான் செய்யும் (ஒருசில) மரியாதைகளுக்குப் பிரதியாக உபயதாரர் பெறுவதுதான் பரிவட்டம். இதில் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது.

இதில் என்ன பிரச்னையைக் கண்டார் சுயமரியாதைக்காரர் கருணாநிதி?

கருணாநிதி தன் பெயரில் அர்ச்சனை செய்து ஒரு நாள் பிரசாதம் தருவதாகக் கட்டளை எழுதிவைத்தால் அவருக்கும் உண்டு பரிவட்ட மரியாதை.

எதில் கைவைக்க வேண்டும், எதில் தள்ளியிருக்க வேண்டும் என்று 83 வயதாகும் முதியவருக்கு இன்னமும் தெரியவில்லை.

இப்படி அபத்தமானவற்றை அவர் சொல்லும்போது வாய்பொத்தி நிற்கும் காங்கிரஸ்காரர்கள் நிலைதான் அய்யோ பாவம். எத்தனை முறை பரிவட்ட மரியாதையைப் பெற்றிருப்பர் மூப்பனாரும் அவரது மகன் வாசனும் மற்ற பிற காங்கிரஸ்காரர்களும்?

அடுத்து என்ன? இனி கோயில்களில் இடமிருந்து வலமாகத்தான் பிரதட்சிணம் செய்யவேண்டும் என்று அரசாணையா?

Honourable Chief Minister! Quit while you are ahead!

Thursday, May 25, 2006

பீஹாரில் கொஞ்சம் முன்னேற்றம்

நிதீஷ் குமார் ஆட்சியில் கொஞ்சமாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம்.

என்ன புதிதாக நடக்கிறது என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளில் தகவல் கொடுத்துள்ளனர்.

* இப்பொழுதெல்லாம் அமைச்சர்கள் அலுவலகத்துக்கு வருகிறார்களாம். அதனால் தலைமைச் செயலகம் குப்பை கூளங்களின்று உள்ளதாம்.

* அமைச்சர்கள் ஒவ்வொரு வாரமும் கூடி கேபினட் மீட்டிங் நடத்துகிறார்களாம். முன்னெல்லாம் - லாலு/ராப்ரி காலத்தில் - மாதம் ஒரு முறை கூடி அரை மணி நேரம் பேசினாலே அதிகமாம்.

* இந்த வருடத்தில்தான் முதன்முதலாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம். கடந்த வருடங்களில் vote-on-account தாக்கல் செய்து பட்ஜெட் போடும்போது ஆறு மாத காலம் செலவாகியிருக்கும்.

* சின்னச் சின்ன குற்றங்கள் குறைந்துள்ளனவாம். ஆனால் பெரிய குற்றங்கள் இன்னமும் தொடர்கின்றன. ("We do not have state-sponsored crime," says a businessman.)

முழுச் செய்தியையும் படியுங்கள்.

இட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி

பிசினஸ் ஸ்டாண்டர்ட், இட ஒதுக்கீட்டுக்கு ஆகும் செலவு ரூ. 10,000 கோடி என்று காட்டுகிறது. "செலவு" என்பதைவிட "முதலீடு" என்று சொல்லியிருக்க வேண்டும்.

இங்கும்கூட non-recurring - ஒருமுறை மட்டுமே செய்யவேண்டிய செலவாகக் காண்பிக்கப்படுவது ரூ. 7,800 கோடி. வருடா வருடம் அதிகமாகச் செய்யவேண்டிய முதலீடு ரூ. 2,200 கோடி. இந்த முதலீட்டால் அனைத்து மத்திய அரசின் கீழுள்ள உயர் கல்வி நிலையங்களிலும் 54% அதிக இடங்களை ஏற்படுத்தலாமாம்.

பல உயர் கல்வி நிலையங்கள் அதிக இடங்களை உருவாக்கத் தயாராக உள்ளன. அதே நேரம் மேலும் சில தங்களால் அவ்வளவு எளிதாகப் புதிய இடங்களை உருவாக்க முடியாது என்கின்றனர். அடுத்த ஒரு வருடத்தில் இதை எப்படிச் சரிக்கட்டுவது என்று திட்டங்களை உருவாக்க வேண்டும்.

பொதுப்போட்டிக்கான இடங்கள் குறையப்போவதில்லை. அதிகமாக்கப்படும் இடங்கள் SC/ST பிரிவினருக்கும் OBC பிரிவினருக்கும் போகும்.

இனியாவது போராடும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடலாம். இன்னமும் ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. அது creamy layer தொடர்பானது. நான் முன்னமே சொன்னதுபோல இதற்கென சரியான வரையரை இல்லாவிட்டால் அதனால் பாதிக்கப்படப்போவது பிற்படுத்தப்பட்டோர்தான். எனவே இது தொடர்பான விவாதங்களும் அவசியம்.

Tuesday, May 23, 2006

'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு

இட ஒதுக்கீடு தொடர்பாக ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கின்றன. அவற்றை முறையாகத் தொகுத்து வழங்குவது அவசியமாகிறது.

தி எகனாமிக் டைம்ஸ் செய்தியிலிருந்து ஒரு சிறு துண்டை எனது முந்தைய பதிவில் எடுத்து எழுதியிருந்தேன். செய்தி எப்படி வழங்கப்படுகிறது என்பதைத்தான் அதில் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது செய்தியையும் அது எவ்வளவு மோசமானது என்பதையும் பார்ப்போம்.

நேற்றைய தி ஹிந்துவில் விரிவான செய்தி வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பலரும் சொல்வது - பிற்படுத்தப்பட்டோரின் நலன் நிஜமாகவே பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல தொடக்கக் கல்வி தாருங்கள், உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதுதான். உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்னும் விவாதத்தை சற்றே பின்னுக்குத் தள்ளுவோம். முதலில் நல்ல தொடக்கக் கல்வியை எல்லோருக்கும் வழங்கவேண்டும் என்பதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோமே என்று ஒரு சந்தோஷம்.

ஆனால் நிலைமை என்ன?

அர்ஜுன் சிங் தலைமையிலான மனிதவளத்துறை அமைச்சகம் "கல்வி ஓர் அடிப்படை உரிமை" என்ற பெயரில் ஒரு மசோதாவை உருவாக்கி வருகிறது. தி ஹிந்துவிலிருந்து:
The Union Human Resource Development Ministry has dropped its move to impose 25 per cent reservation for children from the weaker sections in unaided schools at the elementary level.

Though such reservation had been included in all the draft legislation drawn up by the Ministry to operationalise the Fundamental Right to Education, it finds no mention in the current draft under consideration.
தொடக்கக்கல்வி எனும்போது மெரிட் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடக்கக்கல்வி அளவில் நுழைவுத்தேர்வு, நேர்முகம் என்று எதுவும் கூடாது என்று உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது. அப்படியும் பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்கள் பொதுவாக ஆங்கில மீடியம் தனியார் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே இந்த "சிறப்புப் பள்ளிகள்" கேட்கும் கட்டணத்தைக் கட்டத் தயாராகத்தான் உள்ளார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவழியாக ஒதுக்கப்படுகிறார்கள்.

அப்படி இருக்கையில், அர்ஜுன் சிங் அமைச்சகம் ஏன் தனியார் தொடக்கப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை சத்தமின்றி நீக்கியுள்ளனர்? தொடக்கப் பள்ளிகளில் சாதிக்க முடியாததை உயர் கல்வி நிலையங்களில் எப்படி சாதிக்கப்போகிறார்கள்?

சில மாதங்களுக்கு முன்னர் மனிதவள அமைச்சகத்தின் கீழுள்ள CBSE முட்டாள்தனமான முடிவு ஒன்றை எடுத்தது. (அதைப்பற்றி என் ஆங்கில வலைப்பதிவில் முழுவதுமாக எழுதியுள்ளேன்.) CBSE பள்ளிகளில் ஒற்றைப் பெண்குழந்தைகள் இனி கல்விக்கட்டணத்தைச் செலுத்தவேண்டாம் என்பதுதான் அந்த முடிவு. இந்தப் பெண்குழந்தைகள் எப்படிப்பட்ட பொருளாதாரப் பின்னணியிலிருந்து வந்தாலும் அது கணக்கில்லை. இதனால் ஏற்படும் பண இழப்பை அந்தந்தத் தனியார் பள்ளிகளே ஈடுசெய்யவேண்டும். இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டு முடிவில் CBSE அவசர அவசரமாக தனது முடிவைப் பின்வாங்கியது.

ஆனால் அந்தப் பின்வாங்குதலுக்கும் இப்பொழுது 25% இட ஒதுக்கீட்டை தனியார் தொடக்கப் பள்ளிகள்மீது விதிக்காததற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? உள்ளது.

கல்வி உரிமை மசோதாவின் முதல் வடிவத்தை உருவாக்கிய பாஜக அரசு 6 வயது முதல் 14 வரையுள்ள குழந்தைகளின் படிப்பை அனைத்துப் பள்ளிகளும் முற்றிலும் இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்றனர். ஆனால் இது ஏழைக் குழந்தைகளுக்கு மட்டும் என்றும் அதிகபட்சம் 20% குழந்தைகளுக்கு மட்டும்தான் என்றும் சொல்லியிருந்தனர். இதனை காங்கிரஸ் அரசு 25% என்று மாற்றி, ஏழைக் குழந்தைகள் என்பதை முதலில் "disadvantaged groups" என்றும் பின்னர் "weaker sections" என்றும் மாற்றியுள்ளனர். பின் CBSE வழக்கில் எடுத்த நிலையின்படி மேற்படி இலவசக் கல்வி தனியார் பள்ளிகளுக்குக் கிடையாது என்றும் அரசு மான்யம் பெறும் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும்தான் என்றும் இப்பொழுது முடிவு செய்துள்ளனர்.

இந்தக் குழப்பத்துக்குக் காரணம் இரண்டு விஷயங்களை ஒன்றாகச் சேர்ப்பது. இலவசக் கல்வி என்பது ஒரு விஷயம். தனியார் பள்ளிகளில் பிற்படுத்தப்பட்ட - disadvantaged, weaker section - மாணவர்களுக்கு இடங்கள் ஏற்படுத்தித் தருவது வேறு விஷயம். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்த மனிதவள அமைச்சகம், பின் ஏதோ ஒரு வழக்கின் முடிவின் அடிப்படையில் இரண்டையும் கைவிட்டுவிட்டது. வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை.

இலவசக் கல்வி என்பதைத் தனியார் பள்ளிகள் மீது திணிப்பது என்பது அந்தப் பள்ளிகளின் செயல்பாட்டை பாதிக்கும் விதமான ஆணை. அதற்கு நியாயமான எதிர்ப்பு வந்தது. அந்த எதிர்ப்பையும் ஒரு சிறுபான்மைக் கல்வி நிலையம்தான் முன்னெடுத்துச் சென்றது. ஆனால் தொடக்கப் பள்ளிகளில் 25% பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எந்தத் தனியார் பள்ளியின் நிதிநிலையையும் பாதிக்காது. சொல்லப்போனால் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பே இருக்காது - apartheid மனத்தை உடைய உயர் சாதியினரைத் தவிர! அவர்கள் மட்டும்தான் தம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் "கீழ் சாதியினர்" குழந்தைகளும் படிக்கிறார்களே என்று வெறியாட்டம் ஆடலாம். தமது பிள்ளைகள் "கெட்ட பழக்கங்களைக்" கற்றுக்கொள்வார்களோ என்று பயப்படலாம்! "அதுதான் அவர்களுக்கென்று கார்பொரேஷன்/பஞ்சாயத்து பள்ளிகள் உள்ளனவே? ஏன் கான்வெண்ட் படிப்பு அவர்களுக்குத் தேவை" என்று எண்ணலாம்.

இந்த எண்ணங்களைத்தான் மனிதவள அமைச்சகம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

அடுத்து இலவசக் கல்வி. இலவசக் கல்வி என்று வரும்போது அதை கல்வி வவுச்சர் மூலம் கொடுக்கலாம். யாருக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்குவது என்பதை பொருளாதார நிலைப்படி தேர்ந்தெடுத்து - இங்கு ஜாதி அவ்வளவு முக்கியமில்லை - அவர்கள் எந்தக் கல்வி நிலையத்தில் படித்தாலும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி மான்யம் வழங்கலாம்.

இப்பொழுது மனித வள அமைச்சகம் எடுத்திருக்கும் முடிவால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெகுவாக பாதிக்கப்படுவர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் அவசரமாகப் போராடவேண்டிய மசோதா இதுதான். உயர்கல்வி நிலையங்கள் மீதான மசோதா மீது ஒரு கண்ணை வைத்திருக்கும் அதே நேரத்தில் தொடக்கக் கல்வியினை விட்டுவிடக்கூடாது.

இட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்

செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் இட ஒதுக்கீடு தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவே இருந்து வருகின்றன. ஒரு balanced coverage கிடையாது. குழலியின் பதிவு இங்கே.

இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக நேற்று The Economic Times பத்திரிகையில் ஒரு செய்தி கண்ணில் பட்டது. ஊர்மி கோஸ்வாமி தில்லியிலிருந்து எழுதுவதாக வந்த செய்தி இவ்வாறு தொடங்குகிறது: (URL கிடைக்கவில்லை)
PRIVATE schools and parents worried about their children studying along side children belonging to weaker sections can breathe easy. The government proposes to let them off the reservation hook. The model Right to Education Bill proposes that private schools that receive no funds from the government will not be required to take children from weaker sections. The Model Bill will form the basis of states' legislation to enable the fundamental right of education.
இந்தச் செய்தி என்ன சொல்ல வருகின்றது என்று விட்டுவிடுவோம். ஆனால் செய்தி சொல்லப்பட்ட விதம்... தனியார் பள்ளிகளும் அதில் படிக்கும் உயர்சாதியினரும் apartheid - வன்மத்துடன் பிரித்து வைப்பது - என்பதைக் கையாளுவதை வரவேற்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. "They can breathe easy" - அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாமாம்... இனி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளைத் தங்கள் பள்ளிகளில் அனுமதித்தே தீரவேண்டும் என்று அரசு வற்புறுத்தாது என்று நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விடலாமாம். அதனை ஓடோடிவந்து தன் வாசகர்களுக்கு சந்தோஷத்துடன் தருகிறார் எகனாமிக் டைம்ஸ் நிருபர்.

ஆங்கில செய்தித்தாள்கள் அனைத்துமே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களை மட்டும் பெரிதாகச் சித்திரிக்கின்றன. தி ஹிந்துவின் கவரேஜ் பிற செய்தித்தாள்களுடன் ஒப்பிடும்போது தேவலாம். நேற்றும் இன்றுமாக இரண்டு பாகங்களில் சதீஷ் தேஷ்பாண்டே, யோகேந்திர யாதவ் எழுதிய பெரிய கட்டுரை இங்கே: ஒன்று | இரண்டு.

தனிப்பட்ட இட ஒதுக்கீடு என்று இல்லாமல் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனியாக normalization மூலமாக நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் கொடுக்க வழி சொல்கிறார்கள். இதை முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இருவருமே ஏற்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் குறிப்பிடும் வழியை ஏற்காவிட்டாலும்கூட இவர்கள் கொடுக்கும் புள்ளிவிவரங்களை ஏற்கலாம். அதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர் எந்த அளவுக்கு பின்னடைவில் உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்!

முதல் பகுதியைப் படித்துவிட்டு இரண்டாம் பகுதி வெளியாகும் முன்னதாகவே Letters to the Editor-க்கு அவசர அவசரமாகக் கடிதம் எழுதியுள்ளனர் பலர். அதில் இத்தனை வருடங்களாக SC/STக்கு இட ஒதுக்கீடு கொடுத்தும்கூட அந்தக் குழுவில் உள்ள மிகச்சிலரே கல்லூரிப்படிப்பை முடித்துள்ளனர். எனவே இட ஒதுக்கீடு என்பதே பயனற்றது என்பதுதான் இவர்களுடைய வாதம். "அய்யா, இட ஒதுக்கீடு இல்லையென்றால் அவர்கள் இந்த நிலையைக்கூட எட்டியிருக்க மாட்டார்கள்" என்று அவர்களிடம் சொன்னாலும்கூட அவர்கள் புரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள்.

Knowledge Commission உறுப்பினர்கள் இருவர் - ஆந்த்ரே பெத்தெல், பானு பிரதாப் மேஹ்தா ஆகியோர் கமிஷனிலிருந்து விலகியுள்ளதாக ரவி ஸ்ரீனிவாஸ் தகவல் கொடுக்கிறார். இருவரும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து விலகியுள்ளதாகச் சொல்கின்றனர். முதலில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட இவர்கள் அறிவுக் குழுவிலிருந்து விலக வேண்டியதில்லை. அறிவுக் குழுவின் வேலை என்ன, அதில் இந்த உறுப்பினர்களின் வேலை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை எந்த விதத்தில் இந்த அறிவுஜீவிகளின் வேலையை பாதிக்கப்போகிறது என்று நினைத்து இவர்கள் பதவி விலகியுள்ளனர்?

எண்ணிக்கையிலான இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக அர்த்தமுள்ள affirmative action முறையைப் பின்பற்றவேண்டும் என்கிறார்களாம் இவர்கள். ஆனால் அப்படிப்பட்ட affirmative action முறை என்ன என்று இவர்கள் சரியாக விளக்கவில்லை. இவர்கள் என்ன வழி சொல்லப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

Sunday, May 21, 2006

Viva Le Nepal

நம் கண்ணுக்கு முன்னால் ஒரு மாபெரும் புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. நம் வாழ்நாளில் ஒரு நாட்டில் முடியாட்சி மாறி குடியாட்சி மலர்ந்துகொண்டிருக்கிறது.

பரம்பரை பரம்பரையாக வரும் முடியாட்சியை மாற்றி குடியாட்சியாக்க பல நாடுகளில் பலவிதமான புரட்சிப் போராட்டங்கள் நடந்துள்ளன. இங்கிலாந்தில் சர்வாதிகார முடியாட்சி மாறி இன்று ராஜாவோ ராணியோ வெறும் டம்மியாக உள்ளனர். இந்த நிகழ்வு ஒரு நாளிலோ சில வருடங்களுக்குள்ளாகவோ நடந்துவிடவில்லை. பல நூறு வருடங்கள் பிடித்தது. இன்று டோனி பிளேரிடம் கேட்டு அனுமதி பெற்றபின்னர்தான் எலிசபெத் மஹாராணி வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் போகமுடியும். 1993 முதல் பிரிட்டன் அரசர்/அரசி தம் வருமானத்துக்கு வரி கட்டவேண்டும். இன்னும் சில வருடங்களில் பிரிட்டன் அரச குடும்பம் தமக்கு இந்தத் தங்கக் கூண்டு வேண்டாம் என்று உதறிவிட்டுப் போனாலும் ஆச்சரியமில்லை.

பிரான்சிலோ அரசாட்சியை ஒழிக்க மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தவேண்டியிருந்தது. ராஜா ராணியின் தலைகளை கில்லட்டினில் வெட்ட வேண்டியிருந்தது. ஆனால் அதற்கடுத்தும் இரண்டு தடவைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களையே ராஜாக்களாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர். பலத்த போராட்டங்களுக்குப் பிறகுதான் குடியாட்சி வந்தது.

ஐக்கிய அமெரிக்க நாடு (USA) இங்கிலாந்தின் காலனி ஆதிகத்திலிருந்து விடுபட்டபோது ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் முடியாட்சியாக ஆகியிருக்கலாம். ஆனால் குடியாட்சியின் பலமான அடிவேர் அங்கு பரவியிருந்ததால் விடுதலைக்குச் சில வருடங்கள் கழித்து குடியாட்சிக்கான பலமான அரசியலமைப்புச் சட்டம் அங்கு உருவாக்கப்பட்டது.

ரஷ்யாவில் நடந்த மாபெரும் புரட்சியில் ஜார் அரச வம்சமே அழிக்கப்பட்டு கம்யூனிசம் முதன்முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஐரோப்பாவில் முடியாட்சி அழிக்கப்பட்டபோதெல்லாம் குடியாட்சிதான் மலர்ந்தது என்று சொல்லிவிட முடியாது. ஜெர்மனியில் முடியாட்சியை சதியால் முறியடித்த ஹிட்லர் தானே ஒரு சர்வாதிகாரியானார். இத்தாலியில் பிரதம மந்திரியாக இருந்த முசோலினியின் கையில்தான் நிஜமான அதிகாரம் இருந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஐரோப்பாவில் முழுமையாக மக்களாட்சியே நிலவியது என்று சொல்லலாம். சில இடங்களில் அரச குடும்பத்தினரை விட்டுவைத்திருந்தாலும் அவர்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் முழுமையான மக்களாட்சியாக இல்லாமல் சில சர்வாதிகாரிகளின் ஆட்சியாகவும் இருந்தது. ஆனால் பரம்பரை அரசர்களின் ஆட்சி என்பது ஐரோப்பாவில் காணாமல் போனது. (மோனாகோ, லீச்டென்ஸ்டைன் போன்ற சில சிற்றூர்களைத் தவிர)

ஆசியாவில் தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் பரம்பரை அரசர்கள் உண்டு; பிரிட்டனைப் போலவே இந்த நாடுகளிலும் நாடாளுமன்றத்துக்குத்தான் முழு அதிகாரமும்.

உலகில் ஓரளவுக்குப் பெரிய நாடுகள் என்று பார்த்தால் மத்தியக் கிழக்கு எண்ணெய் வள நாடுகள் சிலவும் நேபாளும்தான் பரம்பரை முடியாட்சியிலேயே ஒட்டிக்கிடந்தன. நேபாளில் நாடாளுமன்றம் என்ற ஒன்று இருந்தாலும் அரசருக்கு சர்வாதிகாரமும். அவர் நினைத்தால் காரணங்கள் ஏதும் சொல்லாது நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம். அப்படிச் செய்துள்ளார் தற்போதைய மன்னர் ஞானேந்திரா. ராணுவமும் அவர் சொன்ன பேச்சை இதுநாள் வரை கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மக்கள் போராட்டத்தின் முடிவில் முடியாட்சி மண்ணைக் கவ்வியுள்ளது.

உலகின் பல நாடுகளைப் போலவே நேபாளத்தை ஆண்டவர்கள் பிரிட்டிஷ்காரர்களுடன் போராடவேண்டியிருந்தது. கடைசியாக 1923-ல் தாங்கள் ஆண்டுவந்த பல பகுதிகளை இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு இப்பொழுது இருக்கும் பகுதியை மட்டும் வைத்துக்கொள்ள பிரிட்டனிடம் அனுமதி பெற்றது நேபாள். பிற நாடுகளைப் போலவே நேபாளிலும் மக்கள் குடியாட்சிக்கான போராட்டங்களில் இறங்கினர். 1989 வரை ஒரு கட்சி நாடாளுமன்றமும் சர்வ வல்லமை பொருந்திய அரசரும் இருந்தனர். 1989 போராட்டங்களுக்குப் பிறகு பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் அரசர் சில அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்குவார் என்றும் முடிவானது.

ஆனால் 1990கள் முழுக்கவே நேபாள் நாடாளுமன்றம் ஸ்திரமாக இருந்ததில்லை. ஆட்சி மாற்றங்கள், உறுப்பினர்கள் கட்சி மாறுவது போன்ற பலவும் நடந்துள்ளன. இடையில் மாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டத்தையும் ஆரம்பித்தனர்.

2001-ல் பட்டத்து இளவரசர் தீபேந்திரா தன் காதலியைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடைக்காத காரணத்தால் மெஷின் துப்பாக்கியால் தன் குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களையும் சுட்டுத் தள்ளிவிட்டு தானும் செத்தார். மன்னர் பீரேந்திரா, அவரது வாரிசுகள் அனைவருடனும் சேர்ந்து இறந்ததால், அவரது சகோதரர் ஞானேந்திரா அரசரானார். ஞானேந்திரா 2005-ல் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அவசர நிலையைப் பிரகடனம் செய்தார்.

ஆனால் மக்கள் விடாது போராடினர்.

தான் கலைத்த நாடாளுமன்றத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிவந்தது ஞானேந்திராவுக்கு. நாடாளுமன்றம் என்ன செய்யும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். நாடாளுமன்றம் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் Constituent Assembly-ஐத் தேர்ந்தெடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நாடாளுமன்றம் மிகவும் முன்னே சென்று அரசரது அதிகாரத்தை முழுவதுமாக வெட்டிவிட்டது. ராணுவத்தின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. நாட்டை இந்து நாடு என்பதிலிருந்து மதச்சார்பற்ற நாடு என்று மொழிந்துள்ளது. அரசரால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டுத் தூதர்கள், அரசு அதிகாரிகளைப் பதவியிறக்கியுள்ளது.

இன்னமும் வேலை முடிந்துவிடவில்லை. நேபாள் ராணுவமும் இந்திய ராணுவம் போல நடந்துகொள்ளவேண்டும். பாகிஸ்தான் ராணுவம்போல நடந்துகொண்டால் நிலையான குடியாட்சி அமையமுடியாது. ராஜாவின் முழு அதிகாரங்களையும் ஒட்டுமொத்தமாக ஒழிக்க சில வருடங்கள் ஆகும். அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவேண்டும். அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக நல்லதொரு அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அதன்படி இன்னமும் நான்கைந்து தேர்தல்களாவது நடந்து நிலையான ஆட்சியும் சுபிட்சமும் வரவேண்டும்.

இந்திய அரசும் சீன அரசும் இந்தக் குழப்பத்தில் மீன்பிடிக்க முனையக்கூடாது. மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை விடுத்து தேர்தல் பாதைக்குத் திரும்ப வேண்டும்.

இப்போதைக்கு, நேபாளில் மன்னராட்சி இத்துடன் முடிந்தது என்று சந்தோஷப்படலாம்.

சவுதி அரேபியா, அமீரகம், குவைத் ஆகியவை இந்தப் பாதைக்கு வர இன்னமும் 20-30 வருடங்கள் ஆகலாம்.

Friday, May 19, 2006

சென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்?

மெட்ரோ ரயிலா, இல்லை மோனோ ரயிலா என்ற கேள்வி ஜெயலலிதா காலத்தில் எழுந்தது. இப்பொழுது ஜெயலலிதா அகன்றதும் மோனோ ரயில் இழுத்து மூடப்படும் என்று தெரிகிறது. அரசியலுக்கு அப்பால் தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை வடிவமைத்து உருவாக்கிய ஸ்ரீதரனும் சென்னை மோனோ ரயில் திட்டம் சரியானதல்ல என்று சொல்லியிருக்கிறார். எனவே தில்லி முறையில் மெட்ரோ ரயில்தான் சென்னைக்கும் தீர்வாக அமையும் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

இன்று மஹாராஷ்டிரா அரசு மும்பை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த ரிலையன்ஸ் எனெர்ஜி நிறுவனத்தைப் பங்காளியாக சேர்த்துக்கொண்டுள்ளது. 146.5 கிலோமீட்டர் பாதை, கட்டுமானம் ஆகியவற்றை உருவாக்க ரூ. 19,500 கோடிகள் ஆகும் என்றும் டிசம்பர் 2009 முதல் பயணிகள் இந்தப் பாதையைப் பயன்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

சென்னையும் உடனடியாக இதே வழியில் இறங்கினால் 2010-ல் உபயோகத்துக்கு வரலாம். கருணாநிதி அரசு இதுபோன்ற திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த விழையவேண்டும்.

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு தொடர்பாக என்னை நானே கேட்டுக்கொண்ட சில கேள்விகளும் எனக்குத் தோன்றிய சில பதில்களும். இந்தக் கேள்விகளுக்கான சில பதில்கள் நிச்சயமாக முழுமையாக இல்லை. என் நிலை வேறுபடும்போது, அல்லது புரிதல் அதிகமாகும்போது அவற்றைப் பற்றி எழுதுகிறேன்.

1. அரசினால் நடத்தப்படும் உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அவசியமா?

பதில்: ஆம். சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்ய இட ஒதுக்கீடு அவசியம். அரசினால் ஏற்படுத்தப்பட்டு, கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்குவதாக அறியப்படும் கல்விச்சாலைகளில் அனைத்து சமூக மக்களும் படிப்பதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவது மிக அவசியம். இதன்மூலம் மட்டும்தான் social capital வளர்ச்சி அடையும். இந்த social capital இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் தொகைக்கு நிகரான அளவு இல்லை. இதற்குக் காரணம் பல சமூக மக்களுக்கு உயர் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் இடங்கள் கிடைப்பதில்லை. இதனால் தனிப்பட்ட சில சமூகங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கெடுதல். நாம் நினைத்த அளவு வேகமாக நம்மால் முன்னேற முடியாது. பிறபடுத்தப்பட்டோரின் நலம் என்பது அவரவர்களுடைய கவலை மட்டுமல்ல, நாட்டின் மொத்தக் கவலை.

2. மெரிட் மூலம் ஒரு கல்விக்கூடத்துக்கு மாணவர்களைச் சேர்க்காமல் இட ஒதுக்கீட்டினால் மாணவர்களைச் சேர்ப்பது சரியா?

பதில்: ஒரு கல்விக்கூடத்தில் குறிப்பிட்ட இடங்கள்தான் (2000 என்று வைத்துக்கொள்வோம்) உள்ளன என்ற நிலையில் அந்த இடங்களை ஒரு நுழைவுத்தேர்வின்மூலம் தீர்மானித்து அந்தத் தேர்வில் முதல் 2000 இடங்களில் இருப்போர் மட்டுமே அந்தக் கல்விக்கூடத்துக்குள் நுழைய முடியும் என்று தீர்மானிப்பதே சரியான செயல் என்று சிலர் வாதிக்கிறார்கள். இதனால் 2001 முதல் 10,000 வரையிலான இடத்தில் இருப்பவர்கள் தகுதியற்றவர்கள் என்று ஆகிவிடாது. தேர்வு நடந்த நாளன்று இருக்கும் மனநிலை, தேர்வுச்சூழல் உருவாக்கும் பதற்றம் ஆகிய பல காரணங்களால் சிலர் ஓரிரு தவறுகளை அதிகமாகச் செய்வதும், சிலர் குருட்டாம்போக்கில் சில கேள்விகளுக்கு பதில் கொடுக்க அதனால் அதிக மதிப்பெண்களைப் பெறுவதும் நிகழ்வதுதான். இந்த "மெரிட்" எனப்படும் முறை மட்டும்தான் ஒரு கல்விக்கூடத்தில் மாணவர்களைச் சேர்க்க சரியான முறையா?

இல்லை. ஒரு படிப்பைப் படிக்க விரும்பும் aptitude, அந்தப் படிப்பைத் திறம்படப் படித்து முடிக்கத் தேவையான குறைந்தபட்சத் திறமை - இந்த இரண்டே போதும். அப்படிப்பட்ட நிலையில் மேலிருந்து கீழாகத்தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு கல்வி நிலையம் நினைக்கவேண்டியதில்லை. பிற காரணங்கள் இருக்கலாம்; இருக்க வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்துவது மிக முக்கியமான ஒரு காரணம். வெறும் படிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாது, விளையாட்டுத் திறன், செயலாற்றும் திறன் கொண்ட மாணவர்களைச் சேர்ப்பது, (ஆண்-பெண்) பால் சமன்பாடு , சமூகச் சமன்பாடு, கிராம-நகரச் சமன்பாடு, பொருளாதாரப் பின்னணிச் சமன்பாடு, மதச் சமன்பாடு போன்ற பலவற்றை ஒரு கல்வி நிலையம் விரும்பி வரவேற்றுச் செயல்படுத்தவேண்டும். இதன்மூலமாகத்தான் பல கருத்துகள் ஒரே இடத்தில் பரவி, socially well rounded மாணவர்களை உருவாக்க முடியும்.

அனைத்து மக்களும் எல்லா நலன்களையும் பெறவேண்டும் என்ற கருத்து அரசுக்கு இருக்கவேண்டும்.

3. இட ஒதுக்கீட்டினால் தரம் குறையாதா?

பதில்: இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் வரும்போதெல்லாம் தரம் குறையும் என்றொரு சாக்கு சொல்லப்படுகிறது. தரம் என்பதை ஒரு பாடத்திட்டத்தின் மீதான தேர்வு நிர்ணயிக்கும் என்று எடுத்துக்கொண்டாலும்கூட இட ஒதுக்கீட்டினால் உள்ளே வந்த மாணவர்களும் அதே தேர்வை எழுதித்தான் வெற்றி பெறுகின்றனர். இட ஒதுக்கீடு என்பது தேர்வு முறையிலோ கற்பித்தல் முறையிலோ மாற்றத்தைக் கொண்டுவருவதில்லை. கொண்டுவரக்கூடாது.

இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும்போது பலரும் மருத்துவர்களை உதாரணம் காட்டிப் பேசுகிறார்கள். "உனக்கு உடம்புக்கு வந்தால் நீ இட ஒதுக்கீட்டில் வந்த டாக்டரிடம் போவாயா, அல்லது மிகச்சிறந்த மருத்துவரிடம் போவாயா" என்று கேட்கிறார்கள். யாருக்கு உடம்புக்கு வந்தாலும் உடனே ஏதோ ஒரு டாக்டரிடம் போகிறார்கள். அந்த டாக்டரைத் தேர்வு செய்யும்போது அவர் அகில இந்தியாவிலும் சிறந்த டாக்டரா என்று யாரும் பார்ப்பதில்லை. அந்த டாக்டர் நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறாரா? எவ்வளவு கட்டணம் வசூலிப்பார் - நம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா? நாம் போகும் நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருப்பாரா? இவற்றை மட்டும்தான் நாம் பார்க்கிறோம். மருத்துவர்களை அழைத்து அவர்கள் எத்தனை மார்க்குகள் வாங்கினர், நுழைவுத்தேர்வில் எந்த இடத்தில் இருந்தனர் என்றெல்லாம் பார்ப்பதில்லை.

இட ஒதுக்கீட்டு முறையில் டாக்டரானவர் மோசமான டாக்டர் என்றும், சிறந்த டாக்டர் நிச்சயமாக பொதுப்போட்டியில் வந்தவரென்றும் ஒருவர் நினைக்கிறார் என்றால் அது அவரது மோசமான மனநிலையைக் காண்பிக்கிறது. இட ஒதுக்கீட்டின் நோக்கம் குறைந்த தகுதியில் ஒருவரை நாட்டில் கட்டவிழ்த்துவிடுவது அல்ல. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றிபெறும் ஏழு லட்சம் மாணவர்களின் ஒரு லட்சம் மாணவர்களை மருத்துவப் படிப்பு படிக்க வைக்க முடியும். ஆனால் 2,000 இடங்கள்தான் உள்ளன என்றால் இந்த ஒரு லட்சத்தில் எந்த 2,000 பேரையும் மருத்துவர்களாக்கலாம். அதனால் எந்தக் குறையும் ஏற்படாது.

4. இட ஒதுக்கீடு சலுகையா அல்லது உரிமையா?

பதில்: மிலிடண்ட் சமூக நீதிக்காரர்கள் இட ஒதுக்கீட்டை உரிமை என்கிறார்கள். இது எனக்கு ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு என்பது சலுகைதான். ஆனால் இந்தச் சலுகை இப்பொழுதைக்கு அவசியம். நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனி மனிதர்களுக்கு என்று சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தனி மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படுபவனதான் உரிமைகள். ஒரு குறிப்பிட்ட சமுதாயம், தொழில்துறை, நிலப்பகுதி ஆகியோருக்கு மட்டும் வழங்கப்படுவது சலுகைதான். உரிமை அல்ல.

ஆனால் சலுகை என்பதாலேயே அது இருக்கக்கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதால் அவர்களுக்குக் கொடுத்த கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. சலுகையாக. அதையே அவர்கள் உரிமை கொண்டாடினால் என்ன ஆகும்? சலுகை என்பது தாற்காலிகமானது. அது எவ்வளவு வருடங்கள், எவ்வளவு தலைமுறைகள் என்பதை வெவ்வேறு காலகட்டத்தில் முடிவு செய்யவேண்டும்.

சலுகைகள் கொடுக்கப்படும்போதே எந்நிலையில் சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனால் ஒரு காலத்தில் சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டியது அவசியம்.

5. இட ஒதுக்கீடு என்பது தனி மனிதர்களின் உரிமையை பாதிக்கிறதா?

பதில்: இட ஒதுக்கீடு தனி மனிதர்களின் உரிமையை பாதிப்பதில்லை. ஆனால் சிலரது விருப்பங்களை பாதிக்கிறது. அவர்களது கனவுகளை பாதிக்கிறது. ஆனால் ஓர் அரசால் எல்லாத் தனி மனிதர்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யமுடியாது. எனவே தத்தம் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ள தனி மனிதர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டும். இன்று பல முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

அரசின்மீது ஒரு குற்றத்தை இந்த மாணவர்கள் நியாயமாகச் சுமத்தலாம். சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பெருத்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் வேண்டிய அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளையும் பிற கல்லூரிகளையும் கட்டியுள்ளன. இந்தியா அவ்வாறு செய்யவில்லை. தனியாரையும் ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால் இந்தக் குறைகளை மட்டுமே காரணம் காட்டி இட ஒதுக்கீட்டின் நியாயத்தை மறுக்க முடியாது.

இந்திய அரசு தானும் உயர்கல்விக்கூடங்களை அதிகமாக ஏற்படுத்தவேண்டும்; தனியாரையும் தரமான உயர்கல்விக்கூடங்களைக் கட்ட ஊக்குவிக்கவேண்டும்.

6. அரசு உதவிபெறாத தனியார் கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமா?

பதில்: செய்யவேண்டும். தவறில்லை. இத்தகைய இட ஒதுக்கீட்டினால் இந்தத் தனியார் கல்விக்கூடங்கள் தம் வருமானத்தை இழக்கப்போவதில்லை. யாரை மாணவர்களாகச் சேர்த்தாலும் குறிப்பிட்ட கட்டணத்தை அவர்கள் கட்டினால் கல்விக்கூடத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் இட ஒதுக்கீட்டில் இடங்கள் நிரப்பப்படவில்லை என்றால் அந்த இடங்களை பிற மாணவர்களைக்கொண்டு நிரப்பலாம் என்ற உரிமையை இந்தக் கல்விக்கூடங்களுக்குத் தரவேண்டும்.

7. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமா?

பதில்: இதற்கு 'unconditional ஆம்' என்ற பதிலைச் சொல்லமுடியாது. கல்விக்கூடங்களில் அல்லது அரசு நிறுவனங்களில் செய்வது போலல்லாமல் தனியார் நிறுவனங்கள் வேலை தடைபடுவதுபோல எதையும் சட்டமாகக் கொண்டுவரக்கூடாது. அவ்வாறு செய்வது தனியார் நிறுவனங்களின் உரிமையை மீறுவதாகும். தனியார் நிறுவனங்கள் discrimination செய்யக்கூடாது என்பதைச் சட்டமாக்கலாம். அதாவது தகுதி படைத்த பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை கொடுக்கமாட்டேன் என்று சொல்வது குற்றமாக்கப்படவேண்டும். ஆனால் வேலைக்குச் சேர்பவர்களில் இத்தனை சதவிகிதம் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்று திணிக்கக் கூடாது.

இட ஒதுக்கீடு என்பது தகுதிக்குறைவை ஏற்படுத்தும், அதனால் தனியார் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற எண்ணத்தால் நான் இதனைச் சொல்லவில்லை. ஆனால் அசீம் பிரேம்ஜி, கபில் சிபால் ஆகியோர் பேச்சுகளில் இந்தத் தொனிதான் உள்ளது.

லாப நோக்குள்ள நிறுவனங்கள் அனைத்துமே தமது லாபத்தை அதிகப்படுத்த, (சட்டத்தின் வழியில்) என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்வார்கள். இன்றைய சந்தைப்பொருளாதாரச் சூழ்நிலையில் நிறுவனங்களுக்கு வேகம் முக்கியம். கண்ணில்படும் தகுதியான முதல் ஆளை வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலையை உடனடியாகச் செய்துமுடிக்கவே அவர்கள் விரும்புவார்கள். நான் இதற்குமுன் வேலைசெய்த நிறுவனத்திலும் சரி, இப்பொழுது வேலை செய்யும் நிறுவனத்திலும் சரி, வேலைக்கு ஆள் வேண்டுமென்றால் அலுவலகத்தில் உள்ள பிறரிடம் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று கேட்போம். அதற்கடுத்து ஏதாவது மனிதவள நிறுவனத்திடம் தகுதிபடைத்தவர்களை அனுப்பச் சொல்லிக் கேட்போம். இந்த இரண்டு முறையிலுமே சாதி, மதம் என்று எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. நமது எதிர்பார்ப்புக்கு அருகில் வரும் முதல் ஆளைத் தேர்ந்தெடுப்போம். அவ்வளவே.

எல்லா சமூகத்தினருக்கும் தேவையான படிப்புப் பின்னணி இருக்கும்போது வேலை பார்க்கும் இடத்திலும் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பலாம். அவ்வாறு நடக்காமல் சிலரை வேண்டுமென்றே ஒதுக்குகிறார்கள் என்று தெரியவந்தால் அதனைச் சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தகுந்தவாறு சட்டங்கள் கொண்டுவரலாம்.

அத்துடன் சமூக நீதிக்கு என்று அதிகமாகத் துணைபுரிய தனியார் நிறுவனங்கள் வந்தால் அவற்றை ஊக்குவிக்க அரசு முனையலாம்.

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை சட்டபூர்வமாகத் திணிக்க முயல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

8. பிற்படுத்தப்பட்டோருள் Creamy layer என்று முடிவுசெய்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது எனலாமா?

பதில்: சமூகத்தின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகையை தமக்குள்ளாக எவ்வாறு பிரித்துக்கொள்வது என்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இதனை வேண்டுவதை பிற்படுத்தப்பட்டோர் தவறாக எடுத்துக்கொள்ள நேரிடலாம்.

ஒருமுறை இட ஒதுக்கீட்டைப் பெற்றால் போதுமா, அல்லது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள்வரை அது தொடர்ந்தபின்னர் அந்தக் குடும்பம் creamy layer என்ற வரையறைக்குள் வருமா? Creamy layer-இல் ஒருவர் உள்ளார் என்பதைக் கண்காணிக்க National database ஒன்றை உருவாக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களிடமிருந்து வந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் creamy layer என்று இல்லாவிட்டால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பிற பிற்படுத்தப்பட்டோர்தான்.

9. இட ஒதுக்கீடு 50%க்கு உட்பட்டுதான் இருக்கவேண்டுமா? அதற்கு மேலே ஏன் செல்லக்கூடாது?

பதில்: இட ஒதுக்கீடு என்பதை ஏற்றுக்கொண்டபிறகு ஏன் 50%-ல் நிற்கவேண்டும்? 60%? 70%?

ஒரு சிலர் ஒவ்வொரு சமூகத்தினரும் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று பார்த்து அதற்கேற்றவாறு அவரவர்களுக்கு இத்தனை என்று ஒதுக்கிவிடலாமே என்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. இது BC, MBC, SC, ST என்று மட்டும் நிற்காமல் மேற்கொண்டு பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டே போக வழி செய்யும். ஏனெனில் ஒவ்வொரு சமூகத்திலும் அதிலுள்ள உட்பிரிவுகள் தங்களுக்கான இடங்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று நினைப்பார்கள். அதன் வெளிப்பாடுதான் தமிழகத்தில் MBC உருவானது.

50% என்பது ஓர் arbitrary position. இது 60% ஆக இருந்திருக்கலாம், அல்லது 45% ஆகவும் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவாக வைத்திருப்பதன் நோக்கம் பொதுப்போட்டிக்கான களம் எப்பொழுதும் இருக்கும், அது முடிவில் 100% ஆகும் என்பதை முன்வைக்கவே. 50%க்கு மேலாக இட ஒதுக்கீடு என்றால் கண்ணில் இட ஒதுக்கீடு மட்டும்தான் தெரியும். அது இட ஒதுக்கீட்டை முழுமையான ஒரு தீர்வாகவும் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கும் ஒரு தீர்வாகவும் காட்டும்.

அது அப்படிப்பட்ட தீர்வு என்று எனக்குத் தோன்றவில்லை.

10. முற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வேண்டுமா?

பதில்: தேவையில்லை. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை சார்ந்ததல்ல. இன்றைய சந்தைப் பொருளாதாரச் சூழ்நிலையில் படிப்புக்குக் கடன் கொடுக்க பல வங்கிகள் முன்வருகின்றன. நல்ல கல்விக்கூடத்தில் இடம் கிடைக்கும் என்றால் அதற்கு ஆகும் செலவை இன்று ஒருவரால் கடனாகப் பெற முடியும்.

இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதிகளுக்கு இடையேயான சமன்பாட்டைக் கொண்டுவருவதுதானே ஒழிய, பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதல்ல. புதிதாக ஏற்படும் வேலை வாய்ப்புகளும் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையும் ஏழைகளின் நிலையை நிச்சயமாக மேலே தூக்கும்.

======

பிற பதிவுகள்:

சுந்தரமூர்த்தி: முதல் தலைமுறையில் படித்து வந்த OBC நண்பர்கள் கவனத்திற்கு
அருள் செல்வன்: இட ஒதுக்கீடு - இன்று
ரவி ஸ்ரீனிவாஸ்: இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா? | இட ஒதுக்கீடு - 2

Wednesday, May 17, 2006

மேலவையின் தேவை?

ஒவ்வோர் ஆட்சி மாற்றத்தின்போதும் மேலவை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் வருகிறது. எம்ஜிஆர் மேலவையை இழுத்து மூடியதிலிருந்து என்னவெல்லாம் நடந்துள்ளன என்று தினமணி விவரிக்கிறது. கருணாநிதியின் கடந்த இரண்டு ஆட்சியிலும் மேலவையைக் கொண்டுவரச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆனால் இம்முறை மேலவையை உருவாக்கத் தேவையான் அரசியல் வலு திமுகவுக்கு மாநிலத்திலும் உண்டு, மத்தியிலும் உண்டு.

அப்படி உருவாக்கப்படும் மேலவை என்ன சாதிக்கும்? அதற்கு என்று தனியாக என்ன சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்படும்?

நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால், மாநிலங்களவையால் மக்களவை கொண்டுவரும் மசோதாக்களைத் திருப்பி அனுப்ப முடியும். அதை மக்களவை ஏற்காவிட்டால், இரு அவைகளையும் ஒன்றாக அமர்த்தி வாக்கெடுப்பு நடத்தி தான் விரும்பியதை சாதிக்கமுடியும். மேலும் நிதி தொடர்பான சட்டங்களை மாநிலங்களவையால் தடுக்க முடியாது. மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது சட்டமாகிவிடும்.

மாநிலங்கள் அவையில் இருப்பது அதிக பட்சமாக 250 உறுப்பினர்கள். மக்களவையில் இருப்பதோ 545 இடங்கள். அதனால் இரு அவைகளும் சேர்ந்து அமரும்போது மக்களவை நினைப்பதுதான் நடந்தேறும். இப்படிப்பட்ட நிலையில் மாநிலங்களவை என்று ஒன்று தேவையா என்றுகூடக் கேட்கலாம். தேர்தலில் நிற்க விரும்பாத ஆனால் பதவி வகிக்க ஆசைப்படுபவர்கள்; கட்சிக்கு விசுவாசமாக நடந்துகொள்ளும் சில அனுதாபிகள்; தேர்தலில் தோற்ற ஆனால் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டே ஆகவேண்டியவர்கள் போன்றவர்களுக்காக மட்டும்தான் மாநிலங்களவை பயன்படுகிறது. நியமன உறுப்பினர்களால் மாநிலங்கள் அவையில் நிறைய நல்ல விவாதங்கள் நடக்கும் என்பதும் கட்டுக்கதைதான். முதலில் நியமன உறுப்பினர்கள் ஏதாவது பேசுகிறார்களா என்பதே சந்தேகம். அடுத்து இவர்களை இரண்டாம் பட்சமாகத்தான் கருதுகிறார்கள். அதாவது தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும் பேசும் வாய்ப்பு நியமன உறுப்பினர்களுக்குக் கிடையாது. இதைப்பற்றி துக்ளக்கில் சோ எழுதியுள்ளார்.

ஆனால் ஒருவகையில் மாநிலங்களவை வண்டிக்கு பிரேக் போலச் செயல்படும் என்ற நம்பிக்கையில் அனுமதிக்கலாம் என்று தோன்றுகிறது.

அதைப்போலவே சட்டமன்ற மேலவையும் தேவைப்படும் நேரங்களில் சட்டப்பேரவைக்கு பிரேக் போலச் செயல்படுமா?

தற்போதைக்கு 28 மாநிலங்களில் ஐந்தே ஐந்து மாநிலங்களில்தான் மேலவை உள்ளது (உத்தர பிரதேசம், பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர்). மேலவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பேரவையில் உள்ளதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்க முடியாது. எனவே தமிழ்நாட்டுக்கு 78 உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.

மேலவைக்கு உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்பதையும் மேலவைக்குக் கிடைக்கும் சிறப்பு அதிகாரங்கள் என்னென்ன என்பதையும் வைத்துக்கொண்டுதான் மேலவை அவசியமா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.

மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது குறித்து சில யோசனைகள்:

1. இங்காவது 50% பெண்களாக இருக்க வேண்டும் என்று முன்னதாகவே முடிவு செய்யலாம்.
2. பொதுவாக ஊனமுற்றோர் சட்டப்பேரவைத் தேர்தலில் அவ்வளவாகப் போட்டியிடுவதில்லை. ஊரெல்லாம் சுற்றி தேர்தல் கூட்டங்களில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. எனவே ஊனமுற்றோருக்கு என்று 5% இடங்களை ஒதுக்கலாம்.
3. பட்டதாரிகளுக்கு என்று தனியாக constituency இருந்தது - முந்தைய மேலவையில். இது சற்றே அபத்தமான ஒரு பிரிவாக இப்போது தோன்றுகிறது. எனவே இதை அறவே ஒழித்துவிடலாம். இதற்கு பதில் சில தொழில் பிரிவுகளுக்கு என்று இடங்களை ஒதுக்கலாம். உதாரணமாக
     (அ) விவசாயத் தொழில் புரிவோர்
     (ஆ) முறைசாராத் தொழிலாளர்கள்
     (இ) சொந்தமாக சிறுதொழில், நடுத்தரத் தொழில் புரிவோர் - அதாவது வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள்
     (ஈ) ஆசிரியர்கள்
     (உ) வேறு ஏதாவது?
இப்படி ஒரு குழுவுக்கு இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 10 இடங்களை இதற்காக ஒதுக்கலாம்.
4. நியமன உறுப்பினர்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கும் சில சமுதாயப் பிரிவுகளிலிருந்து - ஆனால் தனித்தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஷெட்யூல்ட் பிரிவுகளில் இல்லாதவர்களாக இருக்கலாம். உதாரணமாக மத, இனச் சிறுபான்மையினர் (1) சீக்கியர்கள் (2) ஜைனர்கள் (3) புத்த மதத்தினர் (4) யூதர்கள் (இருந்தால்) (5) பார்சி (6) ஆங்கிலோ இந்தியர் - என ஆறு பேர்கள் இருக்கலாம்.
5. கலைகளுக்கு என்று தனியாக இருக்கவேண்டுமா என்று தெரியவில்லை. பாடகர்கள், நாட்டியக்காரர்கள் என்றால் அது கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று மட்டும்தான் என்றில்லாமல் பிற கலைஞர்களாகவும் இருக்கவேண்டும். இந்த constituency-ஐ ஒரேயடியாக மறந்துவிட்டாலும் குற்றமில்லை என்று தோன்றுகிறது.
6. பத்திரிகைக்காரர்கள் என்று சிலரை உறுப்பினராக்கவேண்டுமா? தேவையில்லை என்று தோன்றுகிறது.
7. பஞ்சாயத்துகள் மூலமாக மூன்றில் ஒரு பங்காவது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆனால் இது எப்படி நடக்க வேண்டும் என்று முழுமையான யோசனைகள் என்னிடம் இல்லை.

மேலவைக்கு எந்த மாதிரியான அதிகாரங்கள் கொடுக்கப்படலாம் என்பது பற்றி சில யோசனைகள்:

1. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக்கு உள்ள அதே அதிகாரங்கள் - நிதிக் கோரிக்கைகள் தவிர்த்து பிறவற்றை மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்பும் அதிகாரம், புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்யும் அதிகாரம் ஆகியவை
2. அதற்கு மேலாக, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு மசோதாவும் மேலவையில் 2/3 என்ற கணக்கில் வெற்றிபெறாவிட்டால் நிறைவேறாது என்பதுபோன்ற ஒரு கட்டுப்படுத்தும் அதிகாரம்
3. எந்த (மத, இன) சிறுபான்மைக் குழுவையும் பாதிக்கும் எந்தவொரு சட்டமாக இருந்தாலும் மேலவையில் 2/3 பெரும்பான்மை வாக்குகள் இல்லாவிட்டால் சட்டமாகாது என்ற அதிகாரம்

மற்றொன்று. இப்பொழுது மேலவை ஏற்படுத்தப்பட்டுவிட்டால் பின் அது எந்தத் தருணத்திலும் இழுத்துமூடப்படாது என்ற நிலையும் ஏற்படவேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஏற்படுத்துவதும் நீக்குவதுமாக இருந்தால் அதைவிட அபத்தம் வேறெதுவுமில்லை.

இன்னமும் சிலவற்றை யோசிக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறப்பு அதிகாரங்கள் இல்லாவிட்டால் மேலவை என்று ஒன்று இருப்பது அவசியமே அல்ல என்பது என் கருத்து. ஆனால் எந்த சட்டப் பேரவையாவது தனது அதிகாரங்களைக் குறுக்கிக்கொண்டு மற்றொரு அவையை உருவாக்குமா என்பது தெரியவில்லை. பார்க்கலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்

என் பதிவிலிருந்து தேடி எடுத்து, இதற்கு இணைப்பு கொடுத்து, அதன்மூலம் இதை மீண்டும் என் நினைவுக்குக் கொண்டுவந்த பாஸ்டன் பாலாஜிக்கு நன்றி.

தேர்தலுக்கு முன்பே இவற்றை மீள்பதிவாகச் செய்திருக்கலாம். ஞாபகத்துக்கு வரவில்லை.

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - ஒன்று | இரண்டு | மூன்று

Monday, May 15, 2006

வாக்களிக்காதவர்களுக்கு "அர்ச்சனை"

பொதுவாக, குடியாட்சி முறையில் தேர்தலில் நின்று தோற்றால், 'மக்களின் முடிவை மதிக்கிறோம்' என்றுதான் நாகரிகம் மிகுந்தவர்கள் சொல்வார்கள். தாம் ஏன் தோற்றோம், அல்லது ஜெயித்திருந்தாலும் ஏன் தாம் எதிர்பார்த்த அளவு இடங்கள் கிடைக்கவில்லை என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, எப்படி அடுத்த தேர்தலில் சிறப்பாக வெற்றி பெறுவது என்று முயற்சி செய்வார்கள்.

ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் வித்தியாசமானவர்கள். தனக்கு வாக்களிக்கவில்லை என்றால், அல்லது தான் எதிர்பார்த்த பெரும்பான்மை இல்லையென்றால், அதற்குக் காரணமாக இருக்கும் குடிமகன் முட்டாளாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள்.

சென்ற தேர்தலில் கருணாநிதி தோற்றபோது தனக்கு வாக்களிக்காதவர்களை "சோற்றாலடித்த பிண்டங்கள்" என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். இப்பொழுது ஜெயித்தபின்னும் தாங்கள் எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தமிழக மக்களை ஒரு வாங்கு வாங்கியுள்ளார்.
தமிழர்களுக்கு தங்களது இனம் குறித்த தெளிவு இல்லை. கடந்த ஆட்சியாளர்கள் தமிழ் இனத்துக்கு எதிராகச் செய்த செயல்களை எல்லாம் திமுக கூட்டணித் தலைவர்கள் சுட்டிக்காட்டிப் பிரசாரம் செய்தனர்.

முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராஜா உள்பட முக்கியத் தலைவர்கள் கடந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகள் குறித்து விளக்கிப் பிரசாரம் செய்தனர். இதன் பிறகும் கடந்த ஆட்சியாளர்களுக்கு நல்ல ஆதரவு அளித்துள்ள நிலையைப் பார்க்கும்போது தமிழர்களுக்குத் தெளிவு இல்லை என்பது புரிகிறது. தமிழர்களுக்கு தமிழர் என்ற எண்ணம் இல்லை. திராவிடர் என்ற எண்ணம் இருந்தால் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்து இருக்க மாட்டார்கள் என்றார் அன்பழகன்.
Bravo! இன உணர்வு, பரம்பரைப் பகை ஆகிய விஷயங்கள் தவிர்த்து வேறு ஏதேனும் இந்தத் தேர்தல் முடிவுகளுக்குக் காரணமாக இருக்குமா? கடந்த ஆட்சியாளர்கள் என்ன இனம்? குரங்கினம்? ஆரிய இனம்? கடந்த ஆட்சியாளர்களோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டவர்கள் என்ன இனம்? ஜெயலலிதாவை விட்டுவிடுவோம். வைகோ, திருமாவளவன் ஆகியோர் என்ன இனம்? கேப்டன் விஜயகாந்த் என்ன இனம்?

இந்தத் தேர்தலும் சரி, இனி வரப்போகும் தேர்தல்களும் சரி, இனங்களுக்கு இடையேயான தேர்தல் இல்லை. இனியும் திமுக இந்த பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருக்க முடியாது. பார்ப்பனர்களை ஒட்டுமொத்தமாக அழித்து ஒழித்துவிட்டாலும் (அல்லது ஒரு வண்டியில் ஏற்றி மத்திய ஆசியாவுக்கு அனுப்பிவிட்டாலும்) தமிழகத்தில் ஏழெட்டுக் கட்சிகள் இருக்கும். அதில் யாரும் திராவிட/தமிழ் இனத்துக்குத் தனிச்சொந்தம் கொண்டாட முடியாது. எனவே வாக்குகள் சிதறும். அப்பொழுது இன உணர்வைத் தவிர வேறு காரணங்களும் இருக்கும் என்று பேராசிரியர் யோசிக்க வேண்டியிருக்கும்.

பேராசிரியருக்கு தான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தோம் என்ற எண்ணம் கோபத்தை வரவழைத்துள்ளது போலும். அவர் சிறுமையான எண்ணங்களை விடுத்து தமிழக நிதி நிலையைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சீக்கிரத்தில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Saturday, May 13, 2006

முதல் கையெழுத்து[கள்]

எந்த உத்தரவில் முதல் கையெழுத்து என்று சிலர் கேலி செய்தனர். மூன்று உத்தரவுகளில். இன்று பதவியேற்றதும் நேரு அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் கீழ்க்கண்ட உத்தரவுகளில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார்.

1. அடுத்த மாதம் முதல் கிலோ அரிசி 2 ரூபாய், ரேஷன் கடைகளில். இதற்காக அதிகம் ஆகும் செலவு ஆண்டொன்றுக்கு ரூ. 500 கோடி என்று மீண்டும் சொல்கிறார் கலைஞர். இந்த வருடம் முடிந்து அடுத்த வருட வரவு செலவுக் கணக்கைக் காட்டும்போது மொத்த மான்யச் செலவு என்ன என்று பார்ப்போம்.

2. விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட கடன் ரத்து. திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி சிறிய, நடுத்தர விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட கூட்டுறவுக் கடன்களை - கிட்டத்தட்ட ரூ. 6,400 கோடி - முழுவதுமாக ரத்து செய்துள்ளார் கருணாநிதி.

3. காமராஜர் பிறந்த ஜூலை மாதம் முதல் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் இரண்டுமுறை முட்டை வழங்க உத்தரவு. இதனால் எவ்வளவு ஆண்டுக்கு அதிக செலவாகும் என்று தெரியவில்லை.
என்னுடைய கணிப்பு: சத்துணவுத் திட்டத்தில் வாங்கப்படும் முட்டைகள் வாரம் ஒன்றுக்கு: 75 லட்சம். இப்பொழுது இன்னமும் 75 லட்சம் அதிகமாக வாங்கப்படும். முட்டை விலை மேலும் கீழுமாகப் போனாலும் அரசு ஈடுபட்டால் ஒரு குறிப்பிட்ட விலை கொடுத்துத்தான் வாங்குவார்கள். நான்கு வருடங்களுக்கு முன் கொள்முதல் விலை ரூ. 1.15 முட்டைக்கு என்று இருந்தது. இப்பொழுது சரியாக என்ன விலை என்று தெரியவில்லை. ரூ. 1.30 என்று வைத்துக்கொள்வோம். 75 லட்சம் * 52 வாரங்கள் * ரூ. 1.30 = ரூ. 50.7 கோடி. எனவே அதிகம் இல்லை.

தேர்தல் அறிக்கையில் மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.

தொடர்ந்து கண்காணிப்போம்.

K.M.விஜயன் நீதிபதியாக நியமிக்கப்படுவாரா?

'வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை' என்ற பெயரில் ஒரு போஸ்டர் தெருவில் ஒட்டப்பட்டுள்ளது. பெரியார், வி.பி.சிங் படங்கள், வெள்ளைத் தாளில் கறுப்பு எழுத்தில்.

அதில் VOICE எனப்படும் [தொண்டு] நிறுவனத்தை நடத்தி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பல பொதுநல வழக்குகளை நடத்தும் K.M.விஜயன் நீதிபதியாக நியமிக்கப்படக்கூடாது என்று எழுதியிருந்தது.

K.M.விஜயன் என் மதிப்புக்குரியவர். ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில் (1991-1996) விஜயன்மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது. அதுவும்கூட இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு ஒன்றில் ஈடுபட்டதால்தான் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது விஜயன் [சென்னை உயர்நீதிமன்ற?] நீதிபதியாக நியமிக்கப்படலாம் என்று விஷயம் கசிந்துள்ளதால்தான் இந்த தெரு போஸ்டர் கேம்பெய்ன் நடக்கிறது.

விஜயனது பெயர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்துள்ளது. அப்படிப்பட்டவர் நீதிபதியாக இருந்தால், அவர் ஒருபக்கச் சார்புடையவராக இருப்பார், அதனால் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று பலர் கருதுவது நியாயம்தான். ஆனால் இந்த ஒரு விஷயத்துக்காக அவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று கேட்கலாமா? இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வந்தால் அது விஜயனுக்கு அனுப்பப்படாமல் இருக்க தலைமை நீதிபதி முடிவு செய்யலாம். அல்லது வாதி/பிரதிவாதிகூட தங்களுக்கு நீதிபதி விஜயன்மீது நம்பிக்கை இல்லை, வேறு நீதிபதிக்கு மாற்றல் வேண்டும் என்று விண்ணப்பிக்கலாம்.

ஆனாலும் என் கருத்து: பொது வாழ்க்கையில் ஒருசில கொள்கைகளைக் கடுமையாக முன்வைத்து அதற்காகப் போராடுகிறவர்கள் நீதிபதி பதவி கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏனெனில் Justice must not only be done, but must be seen to be done.

ஜெயலலிதாவின் கண்ணியமற்ற பேச்சு

தமிழகத்தைத்தவிர வேறெங்கும் இது நடக்காது. கருணாநிதி முதல்வராகப் பதவியேற்கும் விழாவுக்கு நேராகப் போகாவிட்டாலும் பரவாயில்லை. தான் சட்டமன்றத்துக்குப் போகாவிட்டாலும்கூடப் பரவாயில்லை. ஆனால் கீழ்க்கண்ட பேச்சு அநாகரிகமானது.
சட்டப் பேரவைக்கு நான் வரவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள். ஆனால் 1989-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நான் தாக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது யார் அவமானப்படுத்தினார்களோ தாக்கினார்களோ அவர்களெல்லாம் தற்போது [அமைச்சர்களாக] வந்திருக்கிறார்கள். அடிப்படை நாகரிகம், பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிக் கும்பல்.
இப்படி நாட்டின் அரசியலை தனிப்பட்ட அரசியலாக்கி, 17 வருடங்களாக அதையே மனத்தில் வைத்துக்கொண்டு காழ்ப்பை உமிழ்கிறார். "காட்டுமிராண்டிக் கும்பல்" என்று அநாகரிகமாகப் பேசுகிறார்.

ஜெயா டிவியில் மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஜெயலலிதா. தான் முதல்வராக இருக்கும்போதே திமுக உறுப்பினர்கள் தன்னைப் பார்த்து தகாத வார்த்தைகளைப் பேசினர் என்றும் இப்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பதால் என்ன நடக்குமோ என்று தன் கட்சிக்காரர்கள் அஞ்சுவதாகவும் சொன்னார். இப்படி அவதூறு பேசுவது சரியல்ல. இது தமிழகத்துக்கு நல்லதல்ல. திமுகவும் இதையே மனத்தில் வைத்து அரசியல் செய்யும்.

எதிர்க்கட்சிகளை வழிநடத்தவேண்டிய ஜெயலலிதா சட்டமன்றத்துக்குப் போகப் போவதில்லை. வைகோ, திருமாவளவன் ஆகியோர் சட்டமன்றத்துக்குப் போகும் வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. இதனால் அஇஅதிமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள், 69 இடங்களை வைத்திருந்தாலும் அதனால் எந்தப் பலனையும் பெறப்போவதில்லை. பன்னீர்செல்வம் மீண்டும் மீண்டும் "புரட்சித் தலைவி, தங்கத்தாரகை" என்று புகழ்பாட, திமுக உறுப்பினர்கள் பதிலுக்கு கேலி செய்ய, அஇஅதிமுக வெளிநடப்பு செய்ய (அல்லது தூக்கி எறியப்பட), சட்டமன்றம் கேலிக்கூத்தாக முடியும்.

இந்தமுறை சட்டமன்ற விவாதங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்ததாக நினைத்தேன். சிறுபான்மை அரசு. வெளியிலிருந்து ஆதரவு தரும் சில கட்சிகள். எதிர்க்க நல்ல வலுவான கட்சி. அதனால் அரசின் எந்தவொரு முடிவையும் வாக்கெடுப்பை நோக்கிக் கொண்டுசெல்லலாம். அதன்மீது விவாதம் தேவை என்று அரசை நெருக்கலாம். கம்யூனிஸ்டுகள் தங்களுக்கு ஏற்பில்லாத எந்த முடிவையும் எதிர்க்கத் தயங்காதவர்கள். காங்கிரசும் பாமகவும் வெளியிலிருந்து ஆதரவு தருவதால் தங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்லமுடியாது.

ஜெயலலிதா நியாயமாகப் பார்க்கப்போனால் புது அமைச்சரவையை வரவேற்று, அவர்களது செயல்களைக் கண்கொத்திப் பாம்பு போலக் கண்காணிப்போம் என்று சொல்லியிருக்கவேண்டும். அதற்கு பதிலாக அவர்களைத் திட்டியிருப்பது கண்டிக்கத்தகுந்த செயல்.

அதைவிட அவர் வைத்திருக்கும் ஆசை - இந்த அரசு ஒரு வருடத்துக்குள் கவிழ்ந்துவிடும் என்று எதிர்பார்ப்பது - அபத்தம்.

Thursday, May 11, 2006

தமிழகத்தில் புதிய ஆட்சி

திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி, ஐந்தாவது முறையாக, பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் (ஐ), பாமக இரண்டும் சேருமா என்பது அடுத்த கேள்வி. திமுக வட்டாரத்தில் இதற்கு ஆதரவு இருக்கும். பாமக ஆனால் சேர விரும்பாது என்று தோன்றுகிறது. காங்கிரஸ் சேர ஆசைப்படும். தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ரேடியோவில் பேசியபோது வழவழ என்று எதையோ சொன்னார். ஆனால் திமுக - சோனியா காந்தி பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது என்பதைப் பொருத்தே இது தீர்மானிக்கப்படும்.

பாண்டிச்சேரியில் காங்கிரசுக்கு திமுகவின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே பாண்டிச்சேரி, தமிழகம் இரண்டிலும் திமுக+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்று இப்பொழுதைக்குத் தோன்றுகிறது.

கருணாநிதிக்கு வாழ்த்துகள். கஜானாவைக் காலி செய்யாமல் நல்லாட்சி தருமாறு வேண்டிக்கொள்வோம்.

சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.

1. அரிசி கிலோ இரண்டு ரூபாய். இது உடனடியாக செயல்படுத்தப்படும், ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் இதன் விளைவுகள் என்ன என்று நாம் பார்க்கவேண்டும். இதைத் தொடர்ச்சியாக நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகமே.

2. இலவச கலர் டிவி. ஒப்புக்கு இது நடந்தேறும். கிட்டத்தட்ட 90 லட்சம் குடும்பங்கள் கலர் டிவி இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஞாநி ரேடியோவில் பேசும்போது சொன்னார். ஒரு லட்சம் கலர் டிவிக்களாகவது அடுத்த ஐந்தாண்டுகளில் வழங்கப்படலாம். அத்துடன் நிறுத்திக்கொண்டால் நல்லது!

3. டாஸ்மாக் கடைகள். இதை யாரும் பெரிய தேர்தல் விஷயமாக ஆக்கவில்லை. ஆனால் பாமக இதைப் பற்றி பேசியுள்ளது. கருணாநிதிதான் முதலில் மதுவிலக்கை விலக்கியவர். இப்பொழுது லாபம் கொழிக்கும் டாஸ்மாக்கை என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும். இழுத்து மூடி
      (அ) மதுவிலக்கைக் கொண்டுவருவாரா?
      (ஆ) மீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் ஒப்படைக்கப்படுமா?
      (இ) இல்லை; டாஸ்மாக் வருமானம்தான் கலர் டிவிக்களாக மாறப்போகிறதா?

4. நிலச்சீர்திருத்தம் - தரிசு நிலங்கள் ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி. இதை கம்யூனிஸ்டுகள் வரவேற்கிறார்கள். இது எந்த அளவுக்குச் செயல்படுத்தப்படும் என்று கவனமாகப் பார்க்கவேண்டும். தொண்டு நிறுவனங்கள் ஏதாவது social audit செய்து என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இன்னமும் நிறைய வாக்குறுதிகள் உள்ளன. அவற்றைப் பற்றி வரும் நாள்களில் கவனிப்போம்.

Friday, May 05, 2006

அரிசி அரசியலும் கோதுமை அரசியலும்

கிலோ அரிசி ரூ. 2.

தமிழக அரசு நேரடியாக தமிழக விவசாயிகளிடமிருந்து அரிசி/நெல் கொள்முதல் செய்தால் மான்யம் குறையுமே என்று neo கேட்டிருந்தார். நெல் பயிரிட்டு தமிழக அரசுக்கு விற்பவர்களிடம் சில விஷயங்களைக் கேட்டறிந்தேன். இப்பொழுது தமிழக அரசு கொள்முதல் செய்யும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ. 400 முதல் ரூ. 650 கொடுக்கிறது. பொதுவாக ரூ. 450 என்ற விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். தரம் குறைந்த நெல்லாக இருந்தால்தான் ரூ. 400 குவிண்டாலுக்கு.

ஒரு கிலோ நெல்லிலிருந்து சுமார் அரை கிலோ அரிசி கிடைக்கும். நெல்லை அரிசியாகக் ஆகும் செலவைக் கணக்கிடாமலேயே பார்த்தால் கிலோ அரிசி ரூ. 9 என்ற கணக்கில்தான் பொதுவாக தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து வாங்குகிறது என்று வைத்துக்கொள்ளலாம். மிகக்குறைந்த விலையாக ரூ. 8 ஆகிறது. இத்துடன் பிற செலவுகளைச் சேருங்கள் - நெல்லை அரைக்கும் செலவு; அரிசியை ஓரளவுக்காவது சுத்தம் செய்ய ஆகும் செலவு; சேர்த்து வைக்கும் இடத்துக்கு ஆகும் செலவு; அரசின் overheads - இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் மத்திய அரசு வழங்கும் ரூ. 9.15ஐ விட அதிகமாகத்தான் ஆகிறது - இப்பொழுதைய கணக்குப்படி.

இது ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம், மத்திய அரசே கோதுமை கொள்முதலில் பிரச்னையைச் சந்தித்து வருகிறது. மத்திய அரசு ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. 650 என்று கணக்கு வைத்து, பின்னர் அதை ரூ. 700 ஆக்கியுள்ளனர். ஆனால் அரசுக்கு கோதுமை விற்க ஆளில்லை. ஏனெனில் தனியார் நிறுவனங்கள் - கார்கில், ரிலையன்ஸ், ஐடிசி ஆகியவை குவிண்டாலுக்கு ரூ. 870 வரை வைத்து வாங்கியுள்ளனர். அந்த நேரத்தில் சந்தை விலை கிட்டத்தட்ட ரூ. 1,000 வரை போயுள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு என மத்திய அரசு வைத்திருக்கும் இலக்கில் மே மாதம் கடைசி வரையில் 90.1 லட்சம் டன்கள் கோதுமைதான் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டில் மாநிலங்களுக்குக் கொடுக்கவிருக்கும் மான்ய கோதுமையின் அளவு குறைக்கப்படும் என்று தெரியவருகிறது.

இதே நிலைமை வெகு சீக்கிரம் அரிசிக்கும் ஆகும். இன்று நல்ல சாப்பாட்டு அரிசி - பொன்னி - கிலோ ரூ. 20-22 என்று விற்கிறது. இது பெரும்பாலும் ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் விளையும் அரிசி ஆகும். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை காரணமாக குறுகிய கால குண்டு அரிசி - இட்லி அரிசி - நெல்தான் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சாப்பாட்டு அரிசி ரூ. 12-லிருந்து 22 வரை விற்கிறது.

நல்ல நெல் உற்பத்தியாளர்கள் நிச்சயமாக மத்திய/மாநில அரசுகளுக்கு நிச்சயமாக விற்கமாட்டார்கள்.

நாளை மத்திய அரசும் APL ரேஷன் கார்டுகளுக்கு மான்யத்தில் அரிசியே கொடுக்கப்போவதில்லை என்று சொல்லக்கூடிய நிலைமை வரப்போகிறது. மாநில அரசுகளும் இதை கவனத்தில் கொண்டு வருட வருமானம் ரூ. 60,000-க்கு மேல் இருக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கடையில் அரிசி கொடுக்கப்போவதில்லை என்று சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒரு குடும்பம் மாதத்துக்கு 20 கிலோ அரிசி வாங்குகிறது என்றால் கிலோ ரூ.15 என்ற கணக்கில் ஆகும் செலவு ரூ. 300தான்! ஆனால் அந்தக் குடும்பம் செலவு செய்யும் பிற விஷயங்கள் - முக்கியமாகக் கல்வி, பிரயாணம் ஆகியவை இதற்கும் மேலே. இன்று தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தம் பிள்ளைகளைச் சேர்க்க ஆசைப்படும் கீழ் மத்தியதரக் குடும்பத்தினர் ஒவ்வொரு பிள்ளைக்கும் மாதம் ரூ. 700-800 வரை செலவு செய்கிறார்கள். இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் இதற்கு மட்டுமே மாதம் ஆகும் செலவு ரூ. 1,500க்கும் மேல். அதை மனத்தில் கொண்டு நல்ல உயர்தரமான கல்வியை இலவசமாகக் கொடுக்க அரசியல் கட்சிகள் முனையவேண்டும்.

அதேபோல சாலைகளை நன்றாக அமைப்பது, நகரப் போக்குவரத்தை மேம்படுத்த மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் ஆகியவற்றின்மூலம் போக்குவரத்துச் செலவுகளை வெகுவாகக் குறைக்கலாம். பெட்ரோல் விலை கடுமையாக ஏறிக்கொண்டிருக்கும் இந்த நாள்களில் இதைப்பற்றி எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையும் பேசவே இல்லை.

Tuesday, May 02, 2006

அஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்

அஇஅதிமுக, திமுக இரண்டும் தத்தம் தொலைக்காட்சிகளில் நிறைய விளம்பரங்களைக் காண்பித்து வருகின்றனர்.

வாக்கு சேகரிப்பதில் இது ஏற்கெனவே பழக்கப்பட்ட ஓர் உத்தி. ஆனால் திமுகவின் விளம்பரங்கள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. அது சொல்லும் கருத்து நமக்கு ஏற்புடையதா, இல்லையா என்பதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. ஆனால் நறுக்கென்று ஒரு செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கிறதா, அதன்மூலம் மக்கள் மனத்தைக் கவர்கிறதா என்பதுதான் கேள்வி.

திமுக விளம்பரங்களின் அமைப்பு இவ்வாறு உள்ளது:
  1. முதலில் மக்கள் மனத்தில் இருக்கும் ஓர் ஆதங்கம் - மக்கள் வாயிலாகவே வெளிப்படுகிறது. இது திமுகவின் தேர்தல் அறிக்கையை ஒட்டி - "அரிசி விலைக்குறைப்பு", "இலவச கலர் டிவி", "கேஸ் அடுப்பு" ஆகியவற்றை மக்கள் கேட்பதாக உள்ளது.
  2. அடுத்த காட்சியில் "திமுகவுக்கு ஓட்டு போடுங்க, நீங்க நினைக்கறது நடக்கும்" என்பதாக ஒருவர் சொல்வது போல் உள்ளது. இந்த இரு காட்சிகளுக்கும் இடையே உதய சூரியன் சின்னம் முழுத்திரையில் கண நேரத்துக்கு விரிவாகக் காட்சியளிக்கிறது.
  3. மூன்றாவது காட்சியில் நம்பிக்கை - "கலைஞர் சொல்றதைத்தான் செய்வாரு, செய்றதைத்தான் சொல்வாரு" என்று ஒரு சிறு பெண் சொல்வதாக வருகிறது.
மொத்தத்தில் 15 விநாடிகளுக்குள் அடங்குவதாக உள்ளன இந்த விளம்பரங்கள்.

ஆனால் அஇஅதிமுக விளம்பரங்கள் ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்குள் வருவதாக இல்லை. ஒரு விளம்பரத்தில் அம்மா ஆட்சியின் சாதனைகள் என்று பல விஷயங்கள் வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு மேல் செல்லும் இந்த விளம்பரத்தைப் பாதியில் பார்ப்பவர்களுக்கு இது என்ன விளம்பரம் என்று தெரியாது. கடைசியில் ஜெயலலிதா ஆட்சிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் ஒலித்துண்டு ஒலிக்கிறது. மற்றுமொரு விளம்பரத்தில் மாபெரும் அண்ணா படத்துக்கு முன்னால் எம்.ஜி.ஆர் நின்று ஏதோ சொல்கிறார். என்ன சொல்கிறார் என்பது ஆடியோவில் தெளிவாகக் கேட்கவில்லை. மற்றுமொரு விளம்பரத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அழுகிறார். "அம்மா"வைப் புகழ்கிறார் ஆனால் அதையும் ஒரேயடியாக அழுதுகொண்டே புகழ்வதால் அவர் சந்தோஷப்படுகிறாரா, வருத்தப்படுகிறாரா என்றே தெரியவில்லை.

மொத்தத்தில் அஇஅதிமுக நல்ல professionalகளை வேலைக்கு எடுத்துக்கொள்வது நல்லது.

இதற்கிடையில் ராஜ் டிவியில் (மட்டும்) விஜயகாந்த் கட்சியின் விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டது. இதுவும் படுமோசமாக எடிட் செய்யப்பட்டு, என்ன message என்பதே தெரியாத வண்ணம் இருந்தது. விஜயகாந்த் ஊழலுக்கு எதிரி என்பதுபோலச் சென்றது இந்த விளம்பரம்.

தொலைக்காட்சி மீடியாவை முழுவதுமாகப் புரிந்துகொண்டிருப்பது திமுக மட்டும்தானோ என்று தோன்றுகிறது.

Monday, May 01, 2006

மாறன் conflict of interest - தொடர்ச்சி

சென்ற பதிவின் தொடர்ச்சி.

இட்லிவடை மூலமாக இந்தியா டுடே செய்தி படிக்கக் கிடைத்தது. அதில் வைகோ மாறன்(கள்) மீது வைக்கும் குற்றச்சாட்டு (இதைக் 'குற்றச்சாட்டு' என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ சொல்லவருகிறார்.) ஒன்று காணக்கிடைத்தது.
"ஏர்செல் நிறுவனம் ரூ. 4,800 கோடிக்கு மலேசியாவை சேர்ந்த மேக்சிம் (sic) என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த மேக்சிம் (sic) நிறுவனத்துடன் சன் டிவி 'ஆஸ்ட்ரோ' என்கிற பெயரில் ஒப்பந்தம் செய்துள்ளது" என்று குற்றம் சாட்டுகிறார் வைகோ.
இந்தியா டுடே கவனக்குறைவாக மேக்சிஸ் (Maxis) என்ற பெயரை அப்படி எழுதினார்களா இல்லை வைகோவே அப்படித்தான் சொன்னாரா என்று தெரியவில்லை.

சில தகவல்கள்:

1. மலேசியாவின் முன்னணி மொபைல்போன் நிறுவனம் மேக்சிஸ் - Maxis Communications. இந்த நிறுவனம் மலேசியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய பங்குகள் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரும் தமிழருமான ஆனந்த கிருஷ்ணன் என்பவரது வசம் உள்ளது. (பெட்ரோனாஸ் டவரைக் கட்டியவர்)

2. அதேபோல மலேசியாவின் (தற்போதைக்கு) ஒரே செயற்கைக்கோள் வழி DTH சேவையை அளிக்கும் நிறுவனம் "ஆஸ்ட்ரோ" எனும் பிராண்டில் செயல்படும் MEASAT Broadcast Network Systems. இந்த நிறுவனமும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இந்த நிறுவனத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவர் ஆனந்த கிருஷ்ணன்தான்.

3. மலேசியாவில் ஆஸ்ட்ரோ மூலம் சன் டிவி ஒளிபரப்பாகிறது. சன் டிவி ஏற்கெனவே ஆஸ்ட்ரோவுடன் ஒரு joint venture வைத்துள்ளது. அதன்மூலம் தமிழில் நிகழ்ச்சிகள் தயாரித்து உலகெங்கும் வழங்குவதாகச் சொல்லியுள்ளனர். மேலும் சன் டிவி குழுமம் சமீபத்தில் South Asia FM என்ற பெயரில் பல ஊர்களுக்கான பண்பலை வானொலி உரிமங்களைப் பெற்றுள்ளது. இப்பொழுதுவரை South Asia FM என்பது சன் டிவி குழுமத்தில் 100% சப்ஸிடரி நிறுவனம். ஆனால் பிற நிறுவனங்களுக்கு 26% வரை பங்குகளை விற்பதாகச் சொல்கிறார்கள், அதில் மலேசியாவின் ஆஸ்ட்ரோ முன்னணியில் இருக்கிறதாம்.

4. சமீபத்தில் மேக்சிஸ் தமிழ்நாட்டின் செல்போன் நிறுவனமான சிவசங்கரனின் ஏர்செல்லை (அப்போலோ ஹாஸ்பிடல் குழுமத்தின் ரெட்டி குடும்பத்தாருடன்) இணைந்து வாங்கியது. அதுவரை ஏர்செல்லை வாங்க அல்லது அதில் முதலீடு செய்ய மூன்று முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சிகளில் கடைசியாக ஹட்ச் நிறுவனம் ஏர்செல்லை வாங்குவதை தொலைத்தொடர்பு அமைச்சகம் சில காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளவில்லை.

5. பின்னர் டாடா, பிர்லா இருவருக்கும் இடையே ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பங்குகள் தொடர்பாக மோதல் எழுந்தது. அப்பொழுது டாடாவின் பங்குகளை வாங்க மேக்சிஸ் முயற்சி செய்தது. ஆனால் கடைசியில் டாடா தன் பங்குகளை பிர்லாவிடமே விற்கவேண்டி வந்தது. (Because of existing shareholder agreements - matching rights)

6. அதன்பின் டாடா - மர்டாக் TSky திட்டத்தில் மாறன்(கள்) குறுக்குவழியாக உள்ளே நுழைய விரும்புவதாகவும், அதற்காக ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் வதந்தி/செய்தி.

இப்பொழுது வைகோவின் இந்தக் 'குற்றச்சாட்டு'. தயாநிதி மாறன் இதுதான் தவறாகச் செய்தார் என்று எதையும் வைகோ சொல்லவில்லை. ஆனால் by implication - இதைப் பார், அதைப் பார், ஏதோ நடந்துள்ளது... என்று சொல்ல வருகிறார். நியாயமற்றது என்றே தோன்றுகிறது.

வைகோ இப்படியான அவதூறுகளைப் பரப்பக்கூடாது. சரியாக நிரூபிக்கக்கூடிய சாட்சியங்கள் இருந்தாலொழிய தன்னிஷ்டத்துக்குப் பேசக்கூடாது.

ஆனால் அதே சமயம் பிரதமர் மன்மோகன் சிங், தயாநிதி மாறன் அமைச்சகம் கடந்த இரண்டு வருடங்களில் என்ன செய்துள்ளது என்பதைக் கண்காணிக்கவேண்டும். சந்தேகப்படும்படி ஏதேனும் இருந்தால் தயாநிதி மாறனின் அமைச்சரவையை மாற்றுவதில் தவறேதும் இல்லை.

Narmada: the cost of delaying rehabilitation

கடந்த இரண்டு வாரங்களில் பல விஷயங்களை சரியாகக் கவனிக்க முடியவில்லை. முக்கியமாக AICTE, சென்னை உயர்நீதிமன்ற விவகாரம். ஆனால் camelpost என்பவர் என் பல பதிவுகளிலும் அவ்வப்போது ஒரே விஷயத்தையே ஏழெட்டுமுறை பின்னூட்டம் அளித்துவிடுகிறார். அதில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை reject செய்கிறேன்.

நர்மதா அணை விஷயத்தில் நான் அதிகமாக எழுதவில்லை. தி ஹிந்துவில் ஏற்கெனவே ராமஸ்வாமி ஐயர் எழுதி வெளியான இரண்டு கட்டுரைகளைச் சுட்டியிருந்தேன். இன்று மற்றொரு கட்டுரை அவரிடமிருந்து. அவசியம் படிக்கவேண்டியது.

தயாநிதி மாறன் & conflict of interest

தயாநிதி மாறன் தகவல் தொடர்பு அமைச்சராக அறிவிக்கப்பட்ட சமயத்தில் - 24 மே 2004 அன்று நான் என் பதிவில் இப்படி எழுதியிருந்தேன்.
மிக முக்கியமான துறையான தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொடர்பு அமைச்சரவை கத்துக்குட்டி தயாநிதி மாறனிடம் கொடுக்கப்பட்டுள்ளது - அதுவும் கேபினெட் அந்தஸ்தில். இதுவும் மிக முக்கியமான துறை. அதிலும் convergence போன்ற விஷயங்கள் இந்த ஐந்தாண்டுகளில்தான் நிகழப்போகிறது. வீட்டிற்கான நேரடி செயற்கைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH), அதன்மூலமே இணையத் தொடர்பு ஆகியவையெல்லாம் ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன (எ.கா: DirecTV, Echostar's DishTV). அதைப்போலவே கேபிள் இணைப்பு வழியாக இணையம், தொலைபேசி இணைப்பு ஆகியவை பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ளது (எ.கா: NTL). மொத்தத்தில் ஒரு குழாய் அல்லது செயற்கைக்கோள் டிஷ் மூலம் ஒரு வீட்டிற்கு தொலைபேசி வசதி, இணைய வசதி, தொலைக்காட்சி சானெல்கள் என் எல்லாமும் குவிந்து வருவதே convergence ஆகும். இந்நிலையில் சன் டிவி மற்றும் சுமங்கலி கேபிள் விஷனின் முதலாளி கேபினெட் அமைச்சராக இருப்பது - conflict of interest ஆகுமல்லவா? அதுவும் முன்பின் அனுபவமில்லாத ஒருவர்?

இதுபோன்ற உயர்தர விழுமியங்கள் எதுவும் நம் நாட்டின் அரசியலில் கிடையாதுதான். ஆனாலும் எவ்வளவு காலத்திற்கு நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவது?