Saturday, September 20, 2008

மின்சார ஸ்கூட்டர்

இன்று காலை, நான் வாங்கியிருந்த மின்சார வண்டி கைக்குக் கிடைத்தது. ரெஜிஸ்டிரேஷன் முடிந்துள்ளது. நம்பர் இன்னும் வரவேண்டும்.

Front view of the electric bike - Ultra Motor Velociti

சாலையில் ஓட்டும்போது பிரச்னை ஏதும் தெரியவில்லை. எனது ரெகுலர் பயணம் என்பது கோபாலபுரம், மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம் என்று இருக்கும். லாயிட்ஸ் சாலை, டி.டி.கே சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சல்லைவன் கார்டன்ஸ் சாலை, லஸ் சர்ச் சாலையைக் குறுக்காக வெட்டி, எழுத்தாளர் சுஜாதா வீடு வழியாக, சாயிபாபா கோவிலை நெருங்கி, அலர்மேல்மங்காபுரம் பி.எஸ்.சீனியர் செகண்டரி ஸ்கூல். அங்கிருந்து மீண்டும் லஸ் சர்ச் சாலை வந்து, ஆழ்வார்பேட்டை சிக்னலில் வலதுபுறம் திரும்பி எல்டாம்ஸ் சாலை அலுவலகம். அல்லது லஸ் சர்ச் சாலை வராமல் சி.பி.ராமசாமி சாலை வந்து, அங்கிருந்து டி.டி.கே சாலை வந்து, அங்கிருந்து இடதுபுறம் எல்டாம்ஸ் சாலையின் திரும்பலாம். அலுவலகத்திலிருந்து டி.டி.கே சாலை, லாயிட்ஸ் சாலை, வீடு.

இங்கு எங்குமே மணிக்கு 40 கி.மீ. வேகத்தைத் தாண்டமுடியாது. இதற்கு மின்சார வண்டி போதும். அல்ட்ரா மோட்டார் நிறுவனத்தின் 500 வாட் மோட்டார் சக்தி கொண்ட வண்டி. இதற்கு ரெஜிஸ்டிரேஷன் தேவை. வண்டியை ஓட்ட லைசன்ஸ் தேவை. இதைவிடக் குறைந்த சக்தி கொண்ட மோட்டார் உள்ள மின் வண்டிகளும் உண்டு. அவற்றை ஓட்ட லைசன்ஸ் தேவையில்லை; ரெஜிஸ்டிரேஷனும் தேவையில்லை. ஆனால் மணிக்கு 30 கி.மீ.ஐத் தாண்ட கொஞ்சம் கஷ்டப்படும்.

Side view of the electric bike - Ultra Motor Velociti

இந்த வண்டி 40-ஐத் தொடுகிறது. சத்தமே இல்லை. அதிக பளு இருந்தால் இழுக்க சற்றே கஷ்டப்படலாம். ஆனால் அந்தத் தேவை எனக்கு இல்லை என்று நினைக்கிறேன். 80-110 கிலோ வரை இழுக்கமுடிகிறது. அதற்குமேலும் இழுத்தால் வேகம் குறையும்.

இந்த வண்டியின் விலை ரூ. 32,000 + 12.5% வாட் (சுமார் 4,000) + சுமார் 6,000 (ரெஜிஸ்டிரேஷன், ரோட் டாக்ஸ், இன்ஷூரன்ஸ்). இந்த வண்டிகள் சுற்றுப்புறச் சுழலுக்கு நன்மை செய்வதால் வாட் வரியை 4% அல்லது 0% என்றாக்கலாம் என்று நினைக்கிறேன். அதேபோல எக்சைஸ் வரிகள் இருந்தால் குறைக்கலாம். ஆனால் அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அரசுக்குத் தோன்றாது.

ஒரு யூனிட் மின்சாரத்தில் முழுதாக சார்ஜ் ஆகிறது என்கிறார்கள். சார்ஜ் செய்ய 6-8 மணி நேரம் ஆகும். அதில் 50 கிலோமீட்டர் ஓடும் என்கிறார்கள். ஓட்டிப் பார்த்தால்தான் சொல்லமுடியும். அது உண்மை என்றால், வீட்டில் சார்ஜ் செய்தால் ஒரு யூனிட் சுமார் ரூ. 2.50 என்று ஆகிறது. அப்படியென்றால் ஒரு கிலோமீட்டர் ஓட்ட வெறும் 5 பைசாதான் செலவு. மாற்றாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 50-55 கிலோமீட்டர் தரும் மோட்டார் பைக்கில், கிலோமீட்டர் ஒன்றுக்கு ரூ. 1 ஆகிறது. எனது பழைய (2000-வது ஆண்டு) கைனெடிக் ஸ்கூட்டர், லிட்டருக்கு 25-30 கி.மீ. கொடுத்தாலே பெரிசு. அதாவது கிலோமீட்டருக்கு ரூ. 2க்கும் மேலே!

நான் வாங்கியது, சூடி மோட்டார், பிளாட் எண் 3, KPTJ Nest, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை 600 041, தொலைபேசி எண் 2451-2752.

ஒரு மாதத்துக்குப் பிறகுதான் உண்மை நிலவரம் என்ன என்று சொல்லமுடியும். ஆனாலும் சூழலுக்குக் கேடில்லை; பெட்ரோல் தேவையில்லை என்ற ஜிலுஜிலுப்பே இப்போதைக்குப் போதும்.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

இன்று சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2008, மாலை 5.30 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தின் மொட்டை மாடியில் நடக்க உள்ள கூட்டத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கலந்துகொண்டு பேசுகிறார்.

வெவ்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்பைச் செய்துவரும் பலரையும் அழைத்து, தங்களுக்குப் பிடித்தமான எதைப்பற்றியும் பேசவைக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். முதன்மை நோக்கம் எங்களது அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் இதிலிருந்து பயனடையவேண்டும் என்பது. இவற்றுள் சில கலந்துரையாடல்களை சனிக்கிழமை மாலை வைத்து, அதில் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு செய்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை பொதுவான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். முதலாவது இன்று (இரண்டாம் சனிக்கிழமை இல்லை என்றாலும்) நடக்கும் கூட்டம்.

அடுத்த மாதங்களில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்பதை விரைவில் வெளியிடுவோம்.

இது தவிர வார நாள்களிலேயே எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் சில விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். சென்ற வாரம் ப்ராடிஜி தமிழ் எடிட்டர் சுஜாதா, “விலங்கினங்களில் காணக்கிடைக்கும் சில ருசிகரமான தன்மைகள்” என்பது பற்றிப் பேசினார். நான் “லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடரால் உலகம் அழியப் போகிறதா?” என்பது பற்றிப் பேசினேன். இனி வரும் வாரங்களிலும் இப்படித் தொடர்ந்து சில பேச்சுகள் நடக்கும். அவை பற்றி அவ்வப்போது தகவல் தருகிறேன்.

===

கிழக்கு மொட்டைமாடியை அடைய மூன்று தளங்களின் மாடிப்படிகளில் ஏறவேண்டும். லிஃப்ட் கிடையாது. முதியவர்கள், மாடிப்படி ஏறக் கஷ்டப்படுபவர்கள் இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

Friday, September 19, 2008

கறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961

HBO, ஸ்டார் மூவீஸ் ஆகியவற்றில் பயங்கர அடாசுப் படங்களாகப் போடும்போது TV5Monde (ஃபிரெஞ்சு டிவி) போவேன். இல்லாமல் இருந்தால்கூடப் போகலாம். இரவு மிக நல்ல படங்கள், ஆங்கில சப்-டைட்டில்களுடன் போடுவார்கள். அப்படி நேற்று பார்த்த படம்தான் “NUIT NOIRE, 17 OCTOBRE 1961” - அதாவது “கறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961”.

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடிமைப்படுத்தி வைத்தாற்போலே, பிரெஞ்சுக்காரர்கள் அல்ஜீரியா 1830-ல் கைப்பற்றி, தொடர்ந்து காலனியாக வைத்திருந்தனர். அல்ஜீரியர்களுக்கு தேசிய எண்ணம் தோன்றி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் வலுவடைந்தது. 1950-களில் FLN (Front de Libération Nationale) என்ற அமைப்பின் (ஆங்கிலத்தில் National Liberation Front - NLF என்று வரும்) கெரில்லாக்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

பெரும்பான்மை தேசியப் போராட்டங்களுக்குள்ளும் உட்-போராட்டங்கள் இருந்தவாறே இருக்கும். இந்திய தேசியப் போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் ஆட்சி அகன்று இந்தியக் குடியாட்சி ஏற்பட்டால் அதனால் முஸ்லிம்கள் நலன்கள் பாதிக்கப்படும் என்று முஸ்லிம் லீகும் முகமது அலி ஜின்னாவும் நினைத்தனர். அதன் விளைவாக உருவானதுதான் இந்தியப் பிரிவினையும் பாகிஸ்தானும். அம்பேத்கர் தலித் நலன்கள் பாதிக்கப்படும் என்று நினைத்தார். பெரியார் பார்ப்பனரல்லாத திராவிடர்கள் நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தார். சமஸ்தானங்களின் ராஜாக்கள் தங்களது நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தனர். வட கிழக்கு மாநிலப் பழங்குடியினரிடம் யாருமே கருத்தே கேட்கவில்லை. ஒருமித்த தேசியம் என்று எதுவுமே கிடையாது.

அல்ஜீரியாவிலும் அப்படியே. பெரும்பான்மை அல்ஜீரியர்கள் முஸ்லிம்கள். ஆனால் அங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே ஐரோப்பாவிலிருந்து வந்து குடியமர்ந்த கத்தோலிக்கர்கள் இருந்தனர். யூதர்கள் பலர் இருந்தனர்.

பிரான்ஸ் படைகள், ஆட்சியாளர்கள், மேற்படி கத்தோலிக்கர்களையும் யூதர்களையும் தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு, அல்ஜீரிய பெரும்பான்மை முஸ்லிம்களைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். இந்த சிறுபான்மையினரும், பிரான்ஸ் கட்டுக்குள் அல்ஜீரியா இருந்தால்தான் தங்களுக்கு நல்லது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் 1961-62 கட்டத்தில் பிரான்ஸ் அரசுக்கும் NLF-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. அல்ஜீரியாவில் நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பில் அல்ஜீரியா விடுதலையாகவேண்டும் என்று முடிவாகி, விரைவில் அல்ஜீரியா விடுதலையும் பெற்றது.

***

இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் - அக்டோபர் 1961-ல் பாரிஸில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மட்டும் சொல்கிறது.

அல்ஜீரியர்கள் பலர் பிரான்ஸுக்குக் குடிபெயர்ந்து அங்கே அடிமட்ட வேலைகளைச் செய்துவந்தனர். இன்றும்கூட அல்ஜீரிய, டூனிசிய, மொராக்கோ, எகிப்திய நாட்டு வெளுத்த-கறுத்த (அதாவது முழுமையாகக் கறுப்பானவர்கள் அல்ல, சற்றே வெளுப்புடன்கூடிய வட ஆப்பிரிக்க நாட்டு மக்கள்) அகதிகள் அல்லது பிரான்ஸ் வந்து அந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் பிரான்ஸில் இருப்பதைப் பார்க்கலாம். சென்ற ஆண்டு பிரான்ஸில் நடந்த தெரு வன்முறை இந்தச் சமூகத்தின் பயங்களாலும் அவலங்களாலுமே நடைபெற்றது.

பிரான்ஸில் இருந்த NLF ஆதரவாளர்கள், பிரெஞ்சு அரசாங்கப் பிரமுகர்களையும் போலீஸையும் அவ்வப்போது குறிவைத்துத் தாக்கிக் கொன்றுவந்தது. ஆனால் அதைவிட நூறு, ஆயிரம் மடங்கு வெறியுடன் போலீஸ் வட ஆப்பிரிக்க முஸ்லிம் குடியேறிகளைத் தொல்லை கொடுத்து, ஜெயிலுக்குக் கொண்டுசென்று, கொடுமைப்படுத்தி அழித்தது. இந்தக் கட்டத்தில் 17 அக்டோபர் 1961 அன்று ஆயுதம் ஏந்தாத அமைதிப் போராட்டம் ஒன்றை NLF ஏற்பாடு செய்திருந்தது.

பாரிஸின் பல்வேறு புற நகர்களிலிருந்து ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்கள், அல்ஜீரிய விடுதலையைக் கேட்டும் அவர்களது தலைவரான பென் பெல்லாவை ஜெயிலிருந்து விடுவிக்கும்படியும் கோஷம் போட்டுக்கொண்டே பாரிஸ் நகரில் கூடவேண்டும். பாரிஸ் நகரில் தெருக்களில் நடக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு கூட்டம் நடந்தால், பாரிஸ் மக்களின் ஆதரவு அல்ஜீரியர்களுக்குக் கிடைத்து, அல்ஜிரிய விடுதலை சீக்கிரமாக நடக்க நேரிடலாம் என்பதால் பாரிஸ் போலீஸ் தலைவர் மாரிஸ் பாபோன் என்பவர் இந்த ஊர்வலத்தை உடைக்க முடிவுசெய்கிறார். ஊர்வலத்தைத் தடைசெய்ய ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. ஆனால், தடையையும் மீறி ஊர்வலம் நடத்த அல்ஜீரியர்கள் முடிவுசெய்கிறார்கள்.

அப்படி ஊர்வலம் நடக்கும் பட்சத்தில் அந்த இரவு கறுப்பு இரவாக ஆகட்டும் என்று முடிவு செய்கிறார் மாரிஸ் பாபோன்.

முதலில் 5,000 அல்ஜீரியர்கள்தான் கூடப்போகிறார்கள் என்ற கருத்தில் குறைவான காவல்படையைத்தான் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் கடைசியில் கிட்டத்தட்ட 20,000 பேர் ஊர்வலத்துக்கு வருவார்கள் என்று தெரிந்ததும் காவல்படையினர் பீதியடைகிறார்கள். வெள்ளைக்காரக் காவல்படையினரின் உள்ளார்ந்த முஸ்லிம்/கறுப்பினத்தவர் மீதான வெறுப்பும், உள்துறையால் வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட பொய்த்தகவலும் (ஊர்வலத்தில் அல்ஜீரியர்கள் வன்முறையால் மூன்று போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்) சேர்ந்து, காவல்துறையினர் மிகக் கடுமையாக அல்ஜீரியர்களைத் தாக்கி, துப்பாக்கியால் சுட்டு, தடியால் மண்டையை உடைத்து, காயத்துடன் இருக்கும் பலரை செய்ன் ஆற்றில் தூக்கிப்போடுகின்றனர்.

பிரெஞ்ச் வரலாற்றிலேயே மிகக் கொடுமையான இந்த நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட அமைதியான அல்ஜீரியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2001 வரை இந்தக் கொலைகள் நிகழ்ந்ததை பிரெஞ்சு அரசு மறுத்துவந்தது. 2001-ல்தான் இந்தக் கொலைகளை ஏற்றுக்கொண்டது.

***

இந்தப் படத்தை நான் ஒரு சினிமாவாகவே பார்க்கவில்லை. 2005-ல் வெளியான, 90 நிமிடப் படம் அலெய்ன் டாஸ்மா என்பவரால் இயக்கப்பட்ட இந்தப் படம் நிஜமான வாழ்வைப் பார்ப்பதாகவே இருந்தது.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் நியாயமான மக்கள் போராட்டங்கள் ஆட்சியாளர்களால் எப்படி ஒடுக்கப்படுகிறது என்பதை அவ்வளவு தத்ரூபமாக இயக்குனர் காட்டியுள்ளார்.

இந்தியாவில் எத்தனை ஆயிரம் முறை இதுபோன்ற மோதல்கள் நடந்திருக்கக்கூடும்? வன்முறை என்பது ஓர் அரசு இயந்திரத்துக்கு எவ்வளவு சர்வசாதாரணமாக கைகூடுகிறது? போலீஸ் உடை, எவ்வளவு எளிதாக எந்தப் பாதுகாப்பும் இல்லாத எதிராளியின் மண்டையை உடைக்க உறுதிகொடுக்கிறது? சக மனிதர்களை வெறுப்பது எவ்வளவு எளிதாக நம்மால் முடிகிறது?

***

இந்தியாவில் அதிகார வர்க்கத்தால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை இப்படித் தத்ரூபமாக தொலைக்காட்சிப் படங்களாக மாற்றமுடியுமா? இந்து-முஸ்லிம் கலவரங்கள், டெல்லி சீக்கியப் படுகொலை போன்றவற்றை இப்படிப் படங்களாக எடுத்து, மக்கள் பார்க்குமாறு செய்தால் வெறுப்பு அடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

Wednesday, September 17, 2008

பட்டியல்

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு
பெங்களூரு குண்டுவெடிப்பு
அஹமதாபாத் குண்டுவெடிப்பு
டெல்லி குண்டுவெடிப்பு

அமர்நாத் பிரச்னை
கந்தமால் வன்முறை
மங்களூர் வன்முறை

உத்தப்புரம்

முஷரஃப் பதவி விலகல்
ஆசிஃப் அலி சர்தாரி பதவி ஏற்பு

123 ஒப்பந்தம்
ரஷ்யா-ஜார்ஜியா போர்
ஒபாமா
அமெரிக்க நிதி நிலவரம், இந்தியா எந்தவகையில் பாதிக்கப்படும்?

ஐஐடி, ஐஐஎம் இட ஒதுக்கீடு வழக்கு, தீர்ப்பு

லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடர்

Tuesday, September 16, 2008

புது டிசைன்

பா.ராகவன் மிகவும் கஷ்டப்பட்டு செய்த காரணத்தாலும் என்னை மிகவும் தொல்லைசெய்து மாற்றச் சொன்னதாலும், என்னுடைய பதிவின் டிசைனை மாற்றுகிறேன்.

VKRV ராவ்

சில வருடங்களுக்குமுன், எனது வலைப்பதிவில் விஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் என்பவரைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று தி ஹிந்து புத்தக விமரிசனப் பகுதியில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரைத் தொகுப்புக்கான விமரிசனம் வந்திருந்தது. அதைப் படித்ததும் நான் எழுதியிருந்த பதிவு ஞாபகம் வந்தது.

பதிவைப் படிக்க விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்.

தி ஹிந்து ரிவ்யூவில் “festschrift” என்ற வார்த்தைக்குப் பொருள் தேடுபவர்களுக்காக இங்கே: “A volume of learned articles or essays by colleagues and admirers, serving as a tribute or memorial especially to a scholar.” (from: thefreedictionary.com)

Monday, September 08, 2008

தேவன் 95-வது பிறந்த நாள்

இன்று தேவன் அறக்கட்டளை சார்பாக தேவனின் 95-வது பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. முழு விவரம் இங்கே. இதை சாக்காகக் கொண்டு, தேவனின் ஐந்து பெரும் நாவல்களை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளியிடலாம் என்று முடிவுசெய்தோம். 95+5 = 100!

துப்பறியும் சாம்பு, தேவன் எழுதிய பல சிறு கதைகளின் தொகுப்பு. தேவனின் சில நாவல்கள் சற்றே சிறியவை. 250-280 பக்கங்கள் அல்லது குறைவு. அவற்றை முதலில் வெளியிட்டிருந்தோம். ராஜத்தின் மனோரதம் (224 பக்கங்கள்), கோமதியின் காதலன் (248), ஸ்ரீமான் சுதர்சனம் (288) ஆகியவையே இவை.

இப்போது வெளிவரும் புத்தகங்கள்: கல்யாணி (256 பக்கங்கள்), மிஸ்டர் வேதாந்தம் (672), ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (552), சி.ஐ.டி. சந்துரு (584), லக்ஷ்மி கடாட்சம் (880). எல்லாமே டெமி 1/8 அளவு.

500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் முன்னர் 2 அல்லது மூன்று தொகுதிகளாக அல்லயன்ஸ் மூலம் வந்திருந்தன. இந்த மறுபதிப்பில், இவை ஒவ்வொன்றையும் ஒரே புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம்.

ஒரு கல்கியோ, ஒரு சாண்டில்யனோ தமிழ் வாசகர்களுக்குத் தெரிந்த அளவுக்கு தேவன் தெரியாதது அல்லது படிக்கப்படாதது துரதிர்ஷ்டமே. தேவன் ஆர்தர் ஹெய்லியைப் போன்ற எழுத்தாளர். ஹெய்லியின் 1965 வெளியீடான ஹோட்டல் முதல் அவருடைய அடுத்தடுத்த புத்தகங்கள் அந்தந்த தொழில்துறையைப் பற்றி அறிந்துகொள்ளப் பெரிதும் உதவின.

ஹோட்டல் (1965) - தங்கும் விடுதிகள் பற்றி
ஏர்போர்ட் (1968) - விமான நிலையம் பற்றி
வீல்ஸ் (1971) - தானியங்கி வண்டிகள் துறை பற்றி
தி மனிசேஞ்சர்ஸ் (1975) - வங்கித் துறை பற்றி
ஓவர்லோட் (1979) - மின் உற்பத்தி நிறுவனங்கள் பற்றி
ஸ்ட்ராங் மெடிசின் (1984) - மருந்து உற்பத்தித் துறை பற்றி

இவைதான் நான் படித்தவை. தி ஈவினிங் நியூஸ் (1990) - செய்தி வாசிப்பாளர்களைப் பற்றி, டிடெக்டிவ் (1997) - துப்புத் துலக்குதல் துறை பற்றி என்ற இரண்டையும் நான் இன்னும் படிக்கவில்லை.

ஓவர்லோட்தான் நான் முதலில் படித்த ஹெய்லியின் புத்தகம். அப்போது நான் ஐஐடி மாணவனாக இருந்தேன். ஹாஸ்டல் நூலகத்தில் எடுத்துப் படித்தது. ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலேஸ், சிட்னி ஷெல்டன் என்ற கட்டத்திலிருந்து ஒரு கட்டம் தாண்டி, பல்வேறு தொழில்துறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஹெய்லியின் நாயகர்கள் உதவினார்கள்.

தேவனின் கதைகளில் நான் முதலில் படித்தது மிஸ்டர் வேதாந்தம். இரண்டு தொகுதிகளையும் (அல்லயன்ஸ்) என் பள்ளி நண்பன் எம்.எஸ்.ஸ்ரீனிவாசன் வீட்டிலிருந்து எடுத்துவந்தேன். பதினைந்து ஆண்டுகளுக்குமுன் நான் இரவல் வாங்கிய அந்தப் புத்தகத்தை இதுவரை திருப்பித் தரவில்லை! அட்டை கிழிந்துபோனாலும் புத்தகங்கள் இன்னும் உயிருடன் வீட்டில் இருக்கின்றன. இப்போது எங்களது பதிப்பிலிருந்தே ஒரு பிரதியை அவனுக்குத் தரவேண்டும்!

தேவனின் களம் ஹெய்லியின் களத்தைப் போல் அவ்வளவு பெரிதானதல்ல. அவ்வளவு ஆழமானதும், முழு விவரங்களை உள்ளடக்கியதும் அல்ல. ஆனாலும் கீழ்க்கண்ட நாவல்கள் அந்தந்தத் துறைகளைப் பற்றிய விரிவான விவரங்களைக் கொடுத்துவிடும்.

மிஸ்டர் வேதாந்தம் (எழுத்துத் துறை)
ஸ்ரீமான் சுதர்சனம் (ஆஃபீஸ் கிளர்க்)
ராஜத்தின் மனோரதம் (வீடு கட்டுதல்)
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (நீதிமன்ற வழக்கு விவகாரம்)
சி.ஐ.டி. சந்துரு (துப்பறிதல்)

இத்தனைக்கும் தேவன் இவற்றை 1940களிலும் 1950களிலும் எழுதியிருந்தார். அவர் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால், ஹெய்லியைப் போன்றே விவரமாக மேற்கண்ட துறைகளை, அல்லது அதற்கும் மேற்பட்ட துறைகளையோ தொட்டு எழுதியிருக்கலாம்.

Sunday, September 07, 2008

ஐஐடி சென்னையில் கலந்துரையாடல்


©The Hindu

நேற்று ஐஐடி சென்னையில், முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. “தொழில்முனைதல்: சிந்தனையிலிருந்து செயல்பாட்டை நோக்கி” என்ற தலைப்பில் நாள் முழுவதற்குமான நிகழ்ச்சிகள். மைண்ட்-ட்ரீ கன்சல்டிங் இணை-நிறுவனர் சுப்ரதோ பாக்ச்சி அருமையான காட்சி உரை ஒன்றை நிகழ்த்தினார். ஒருவர் எப்படி, எப்போது தொழில்முனைவராக ஆகிறார்? பயோகான் நிறுவனத்தின் கிரன் மஜும்தார் ஷா, ஏர் டெக்கானை உருவாக்கிய கோபிநாத், கஃபே காஃபீ டே நிறுவனர் சித்தார்த்தா ஆகியோரை உதாரணங்களாகக் காட்டி தொழில்முனைவரது குணாதிசயங்களைப் படம் பிடித்துக் காட்டினார் பாக்ச்சி.

அற்புதமான கண்டுபிடிப்பாளரான எடிசன், ஒரு தொழில்முனைவர் கிடையாது. அவரைத் துரத்தியபிறகுதான் ஜி.ஈ என்ற கம்பெனியை ஒழுங்காகக் கட்டமுடிந்தது என்று எடுத்துக்காட்டாக பாக்ச்சி சொன்னது பின்னர் கேள்வி-பதில் நேரத்தில் சூடான விவாதத்தை உருவாக்கியது. பாக்ச்சி பல நேரங்களில் மாணவர்களுக்கு எரிச்சலூட்டக்கூடிய வகையில் “வெட்டு ஒன்று, துண்டு இரண்டு” என்பதாகப் பதில் சொன்னார். பார்வையாளர்கள் பலருக்கும் எரிச்சல் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் அவர் பேச்சின் நியாயம் எனக்குப் புரிந்தது. பார்வையாளர் ஒருவர், கையில் மொபைல் ஃபோனை எடுத்து குறுஞ்செய்தியை அனுப்ப (அல்லது பார்க்க?) ஆரம்பித்ததும் பாக்ச்சி கடும் கோபம் அடைந்தார். “நான் எனது குடும்பத்தையும் நிறுவனத்தையும் விட்டுவிட்டு, எனது வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு நாளை உங்களுடன் கழிக்கவந்திருக்கிறேன். அதற்காகவாவது மரியாதை செலுத்துங்கள்” என்றார். மிக நியாயமான வார்த்தைகள்.

ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது செல்பேசியை அணைத்துவைப்பது என்ற அடிப்படையான நாகரிகம் தெரியாமலேயே வளர்ந்துள்ள ஒரு தலைமுறை நம்முடையது.

எனக்கு பாக்ச்சியின் பேச்சு நிறைய சாளரங்களைத் திறந்துவிட்டது. அவரது புத்தகமான High Performance Entrepreneur என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை வாங்கிப் படிக்கவில்லை. இன்று முதல் வேலையே அதை வாங்குவதுதான்.

அடுத்து, நான்கு முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தோம். இந்த நிகழ்ச்சியை ஐஐடி சென்னை முதல் பேட்ச் மாணவரான ஸ்ரீனி நாகேஷ்வர் (Srini Nageshwar) மட்டுறுத்தி வழி நடத்தினார். இவர் அமெரிக்காவில் எச்.பி (HP) நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். 3.5” ஃப்ளாப்பி உருவாக்குவதில் பங்களித்தவர். எச்.பியின் முதல் பெர்சனல் கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் ஈடுபட்ட குழுவில் இருந்தவர். ஐ-ஒமேகா என்ற வெளியிலிருந்து இணைக்கப்படும் தகவல்களை அழுத்திச் சேகரிக்கும் கருவி வடிவமைப்பில் ஈடுபட்டவர். பல ஆண்டுப் பணிகளுக்குப் பிறகு வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் சும்மா இருக்கமுடியவில்லை.

அமெரிக்க மருத்துவர்களிடம் விலையுயர்ந்த கருவிகள் உள்ளன. ஆனால் அதுபோன்ற கருவிகள் இந்திய மருத்துவர்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை உயர்ந்தனவாக உள்ளன. இந்திய மருத்துவர்களிடம் பெரும்பாலும் இருப்பது மூன்றே மூன்று கருவிகள்தாம். ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவி, வெப்ப நிலையை அளக்கும் தெர்மாமீட்டர் (அதுகூட ஏதாவது ஒரு மருந்து நிறுவனம் இலவசமாகத் தருவது என்றார்). எனவே கணிதத்தையும் மின்னணுக் கருவி உருவாக்குதலையும் இணைத்து இந்திய மருத்துவர்கள் (வளரும் நாடுகளின் மருத்துவர்கள்) வாங்கக்கூடிய விலையிலான கருவிகளை உருவாக்குவதற்கு என்று DyAnsys Inc. என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

மற்ற நால்வரில் நான் ஒருவன், மிகவும் இளையவன். 1991 பேட்ச். அடுத்தது சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் & ஃபார்மசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சுப்ரமணியன் (1987 பேட்ச்). பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை சீஃப் ஜெனரல் மேனேஜர் ஜே.சந்திரசேகரன் (1970கள் பேட்ச்). ஷங்கர் சுவாமி (1960கள் பேட்ச்) நான்காமவர். இவர் ஒரு பேட்டரி (தொழில்துறைக்கான மின்கலங்கள்) உருவாக்கும் தொழிற்சாலையை நடத்துகிறார். மற்றொரு பக்கம் எலெக்ட்ரிக் கிட்டார்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையையும் நடத்துகிறார்.

சுமார் 1.5 மணி நேரம் மாணவர்கள் கேள்வி கேட்க, நாங்கள் நால்வரும், ஸ்ரீனியும், சில கேள்விகளுக்கு சுப்ரதோ பாக்ச்சியும் பதில் சொன்னோம்.

அடுத்து மதிய உணவு.

சில கேள்விகளையும் அதற்கான பதில்களையும் அடுத்த பதிவு ஒன்றில் எழுதுகிறேன்.

தி ஹிந்து செய்தி

Friday, September 05, 2008

கேண்டீட் - Candide - தமிழில்

வோல்ட்டேரின் கேண்டீட் நாவலில், பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் இவ்வாறு சொல்வதாக வரும்:
“எனக்கு பாவமன்னிப்பு வழங்கும் ஒரு கிரே பாதிரியார், என்னை விரைவில் மயக்கிவிட்டார். அதன் விளைவு கொடுமையானதாக இருந்தது. ஜமீந்தார் உங்களை உதைத்துத் துரத்தியபிறகு நானும் கோட்டையைவிட்டு வெளியேறவேண்டியதாகிவிட்டது. ஒரு நல்ல மருத்துவன் என்மீது கருணை காட்டியிருக்காவிட்டால் நான் இறந்துபோயிருப்பேன்.

“நன்றியுணர்ச்சி காரணமாக, நான் சில காலம் இந்த மருத்துவனின் வைப்பாட்டியாக இருந்தேன். அவனது மனைவி, என்மீதுள்ள பொறாமை காரணமாக என்னை தினம் தினம் அடித்துத் துன்புறுத்துவாள். அவளைத் தாங்கவே முடியாது. மருத்துவன் ஒரு குரூபி. நான், பாவம், காதலிக்காத ஒருவனுக்காக தினம் தினம் அடி வாங்கிக்கொண்டிருந்தேன். மோசமான இயல்புடைய ஒருத்தி, ஒரு மருத்துவனுக்கு வாழ்க்கைப்படுவது எவ்வளவு அபாயமானது தெரியுமா? அவளது நடத்தையைப் பொறுக்கமுடியாத மருத்துவன், ஒரு நாள், அவளது ஜலதோஷத்துக்கு மிகவும் வீரியமான மருந்தைக் கொடுத்தான். அவள் இரண்டே மணி நேரத்தில் வலிப்பு வந்து செத்துப்போனாள்.

“மனைவியின் உறவினர்கள் மருத்துவன்மீது வழக்கு தொடுத்தனர். அவன் ஓடிப்போய்விட்டான். ஆனால் என்னை ஜெயிலில் போட்டனர். நான் நிரபராதி என்பது எடுபடவில்லை. எனது அழகு எடுபட்டது. நீதிபதி என்னை விடுவித்தார். ஆனால் மருத்துவனுக்கு பதில் அவருக்கு நான் வைப்பாட்டி ஆகவேண்டும் என்ற ஒப்புதலுடன். சில நாள்களுக்குப்பிறகு வேறு ஒருத்தி என்னிடத்துக்கு வந்தாள். நான் நடுத்தெருவுக்கு வந்தேன். இந்தக் கேடுகெட்ட விபசாரத் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலை.

“இந்தத் தொழிலால் நீங்கள், ஆண்கள் இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்களே, இதனால் எங்களைப் போன்ற பெண்களுக்கு எவ்வளவு வேதனை தெரியுமா? எனது தொழிலை நான் வெனீஸ் நகரத்தில் இப்போது நடத்துகிறேன். தினம் தினம், ஒரு கிழ வியாபாரி, ஒரு சாமியார், ஒரு பாதிரியார், ஒரு போலிஸ்காரன் ஆகியோரை விருப்பம் இல்லாவிட்டாலும் தடவவேண்டும்; திட்டல், அடி என்று அனுபவிக்கவேண்டும்; ஒரு மேல்துணியை இரவல் வாங்கிக்கொண்டு சென்று, பிடிக்காத ஒருவன் அதைத் தூக்கிப் பார்க்க அனுமதிக்கவேண்டும்; ஒருவனிடமிருந்து சம்பாதித்த பணம் இன்னொருவனால் களவாடப்படுவதையும், நீதித்துறை அலுவலர்களால் மிரட்டிப் பணம் பறிக்கப்படுவதையும் அனுமதிக்கவேண்டும். வாழ்க்கையில் முடிவாக மூப்பு, மருத்துவமனை, கடைசியாகச் சாக்கடை. இதைச் சிந்தித்தால் உலகிலேயே நான்தான் மிகச் சோகமானவள் என்று நீங்கள் முடிவுசெய்வீர்கள்.”
என்ன வலிமையான மொழி!

வோல்ட்டேர் (Voltaire) பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர், தத்துவவாதி. இவரது இயற்பெயர் ஃப்ரான்சுவா-மரி அரூவே (François-Marie Arouet). பிறந்தது: 21 நவம்பர் 1694, இறந்தது: 30 மே 1778. மனித உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை ஆகியவற்றை இவர் தீவிரமாக முன்வைத்தார். ‘நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனாலும் அவ்வாறு சொல்லும் உனது உரிமையை, என் உயிர் போனாலும் காப்பேன்’ என்பது இவரது கொள்கை. பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிகள்மூலம் மன்னராட்சியை அழித்து மக்களாட்சி மலர்வதற்கு வோல்ட்டேரின் கருத்துகள் முக்கியமான காரணங்களாக இருந்தன.

அவரது எழுத்தில் மிளிரும் அங்கதம், எள்ளல் வகையிலான கேலி, 250 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. கேண்டீட் நாவலை (Candide, ou l'Optimisme) இவர் 1759-ல் பதிப்பித்தார். இந்த நாவலின்மூலம், மனிதர்கள் தேசியவாதம் என்ற போர்வையில் அண்டை நாட்டவர்கள்மீது நடத்தும் அசுரத் தாக்குதல்களைக் கடுமையாக கேலி செய்தார். மனிதர்கள் சக மனிதர்களை ஏமாற்றுவது, பொய் சொல்வது, திருடுவது, வஞ்சிப்பது என அனைத்தையும் தோலுரித்தார். லெய்பினிட்ஸ் என்ற ஜெர்மானிய தத்துவவாதியின் ‘இந்த பிரபஞ்சம் என்பது மிகச் சிறந்த ஒன்றாகப் படைக்கப்பட்டிருகிறது. எல்லாம் மிகச் சிறந்ததே’ என்ற கொள்கையை நாவல் முழுவதிலும் கடுமையாக விமரிசித்தார்.

இந்த நாவல் முழுவதிலுமே மதம், மத அறிஞர்கள், பாதிரியார்கள், அரசன், அரசு, ராணுவம், தத்துவவாதிகள் என அனைவரையும் ஒட்டுமொத்தமாக எள்ளி நகையாடினார். வறட்டுத் தத்துவத்துக்கு பதிலாக, உடலுழைப்பின்மூலம் மனிதன் பெறும் மகிழ்ச்சியே முதன்மையானது என்பதையும், அனைத்துவித வேற்றுமைகளையும் புறக்கணித்துவிட்டு, சக மனிதனை நேசிப்பதுதான் மிக அவசியம் என்பதையும் இந்த நாவலில் மிக அருமையாக முன்வைக்கிறார் வோல்ட்டேர்.

பிரெஞ்சு இலக்கியத்திலேயே மிக அதிகமாகக் கல்லூரிப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இதுதான்.

கேண்டீட் நாவலை பெயர் தெரியாத பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இந்தத் தமிழாக்கத்தை நான் Project Gutenburg-ல் இருந்த ஆங்கில மொழிபெயர்ப்பின்வாயிலாகச் செய்தேன்.

இந்த மாத கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது.

எப்படிப் பாடம் சொல்லிக்கொடுக்கவேண்டும்?

பவணந்தி முனிவர், நன்னூலில் குறிப்பிடுகிறார்:

ஈதல் இயல்பே இயம்பும் காலைக்
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப

===

ஒரு கட்டத்தில் ஆசிரியன் ஆக விரும்பியிருந்தேன்.

இனியும் பிற்காலத்தில் ஆகக்கூடும்:-)

இன்று ஆசிரியர் தினம்.

எப்படிப் பாடம் கற்கவேண்டும்?

பவணந்தி முனிவர், நன்னூலில் குறிப்பிடுகிறார்:

கோடல் மரபே கூறும் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து
இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவன் அன்னஆர் வத்த னாகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவிவா யாக வெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போதல் என்மனார் புலவர்

Thursday, September 04, 2008

NHM Writer மாற்றங்கள்

NHM Writer என்னும் மென்பொருளை எங்களது நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழைப் பொருத்தமட்டில், பல உள்ளீட்டு முறைகள், பல எழுத்துக் குறியீடுகள் ஆகியவற்றுக்கான ஆதரவு இந்த மென்பொருளில் இருந்தது.

1. இந்த மென்பொருளை சற்றே விரிவாக்கி, அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதும் வகையில் செய்துள்ளோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி, வங்காளம், மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (சமஸ்கிருதமும்) ஆகிய மொழிகளில் இப்போது எழுதலாம். இப்போதைக்கு phonetic மற்றும் தட்டச்சுக்கு வாகான inscript ஆகிய உள்ளீட்டு முறைகளைப் பயன்படுத்தமுடியும்.

2. டிரெண்ட் மைக்ரோ என்ற வைரஸ்கொல்லி மென்பொருள் இருந்தால் NHM Writer இயங்கமுடியாத நிலை இருந்தது. அதை இப்போது சரிசெய்துள்ளோம்.

3. கடந்த இரண்டு நாள்களாக இணையத்தை உலுக்கி எடுத்துள்ள கூகிளின் Chrome என்ற உலாவியில் phonetic முறையில் தமிழில் எழுதுவது (அதேபோல பிற இந்திய மொழிகளில் எழுதுவது) முடியாததாக இருந்தது. இதே பிரச்னை ஆப்பிள் நிறுவனத்தின் Safari என்ற உலாவியிலும் இருந்தது. ஆனால் தமிழர்கள் விண்டோஸ் இயக்குதளத்தில் அந்த உலாவியை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை போலும். இன்று வெளியிடப்படும் build-ல் NHM Writer கொண்டு Safari, Chrome ஆகிய உலாவிகளிலும் எழுதமுடியும்.

4. மேலும் சில சிறு முன்னேற்றங்கள்: Alt விசைக்கு பதிலாக சிலர் F2, F3 ஆகிய விசைகளைப் பயன்படுத்தி தமிழில் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அது செய்யப்பட்டுள்ளது. ஒருவித ஸ்பெஷல் “Undo” பயன்பாடு தரப்பட்டுள்ளது. சில பிழைகள் களையப்பட்டுள்ளன.

இந்த மென்பொருளை இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Wednesday, September 03, 2008

அன்னை சத்யா நகர்

நேற்று பைரவன் என்பவரைச் சந்தித்தேன். மும்பையில் ஹிந்துஸ்தான் யூனிலீவரில் பணியாற்றி, இப்போது ஓய்வுபெற்ற நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னையில் வசிக்கிறார். மூத்த குடிமக்களை ஒருங்கிணைத்து, சமூக சேவையில் ஆர்வத்துடன் இயங்கிவருகிறார்.

வில்லிங்டன் அறக்கட்டளை என்பது சென்னையில் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் சமூக சேவை அளித்துவருகிறது. அதன் பொருளாதார ஆதரவில், பைரவன் விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதி ஒன்றின் நிலையை மாற்ற முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஜாஃபர்கான்பேட்டை, அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு விளிம்புநிலை மக்கள் குடியிருப்பு “அன்னை சத்யா நகர்”. இந்த இடம் திறந்த கழிவுநீர்த் தேக்கம், குப்பை கூளங்கள், நீர் ஆதாரம் இன்மை, கழிப்பிட வசதி இல்லாமை ஆகியவற்றால் அல்லல்படும் ஓர் இடம். இதேபோல சென்னையில் ஆயிரக்கணக்கான இடங்கள் உள்ளன.

இந்த இடத்தை மாதிரியாக எடுத்துக்கொண்டு, பைரவன், வில்லிங்டன் அறக்கட்டளை உதவியுடன் பல விஷயங்களைச் செய்துள்ளார்.

* இட்டுக்கு வீடு கழிப்பிடம் அமைத்துக்கொடுத்தல்
* குப்பை கூளங்கள் அதற்கான இடத்தில் மட்டுமே போடுதல்
* கழிவுநீர் தேங்காமல் இருக்க வேண்டியவற்றைச் செய்தல்
* நிலத்தடி நீரைச் சேகரிக்க வசதிகளைச் செய்தல்

இதன் காரணமாக அந்தப் பகுதி முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது என்கிறார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் என்னை அங்கே அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். சில படங்களைப் பிடித்துவருகிறேன்.

கூடவே, அங்குள்ள மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில்லை என்று அறிந்திருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டபோது மாணவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் புரியாததும், புரியாததில் தேர்வு எழுத பயமாக இருப்பதும் காரணம் என்று சொல்லியிருக்கின்றனர். அதனைச் சரி செய்ய, தன்னார்வலர்களைப் பிடித்துவந்து இங்குள்ள மாணவர்களுக்கு இந்தப் பாடங்களில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். விளைவாக இன்று மாணவர்கள் பயமின்றி பள்ளிகளுக்குச் செல்கிறார்களாம். மக்களைப் பீடிக்கும் வியாதிகள் பெருமளவு குறைந்திருப்பதாகச் சொல்கிறார்.

அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் சென்னை வலைப்பதிவர்கள் சென்று பார்த்து, மாற்றங்களைப் பற்றி எழுதலாமே?

பேரரசர் அசோகரின் ஆணை

இன்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி B.S.ராகவனுடன் நிறையப் பேசிக்கொண்டிருந்தேன். முக்கியமாக, தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக. ராகவன், மேற்கு வங்கத்தில் மின்சார ஆணையராக இருந்தவர். தாமோதர் பள்ளத்தாக்கு (நீர் மின்சார) நிறுவனம் முதற்கொண்டு பல மின் உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக இருந்தவர். மத்திய அரசின் “சக்தி பாதுகாப்பு” தொடர்பான குழுவின் உறுப்பினராக இருந்தவர். இன்று பேசியதை வைத்து ஏழெட்டு பதிவுகள் எழுதலாம். பார்ப்போம்.

பேசும்போது, பேரரசர் அசோகரின் கல்வெட்டு ஒன்றில் இருந்த நிர்வாகவியல் கருத்து ஒன்றைச் சொன்னார். முதன்மை அலுவலர் என்பவர் அறைக்குள் அடைபட்டவாறு இருக்கக்கூடாது. அவர் சாமானிய அலுவலருக்கும் வாடிக்கையாளருக்கும் அகப்படுமாறு இருக்கவேண்டும் என்றார். எந்தக் கட்டத்திலும் தகவல்கள் தன்னை வந்து அடையுமாறும், மக்கள் நலத்துக்காக எப்போது வேண்டுமானாலும் தன்னை அணுகலாம் என்று அசோகர் தனது கல்வெட்டில் சுமார் 2300 ஆண்டுகளுக்குமுன் சொல்லியிருக்கிறார். அது இதற்குமுன் நான் கேள்விப்படாதது. உடனே கூகிளில் தேடிப்பார்த்தேன். இதோ கீழே:

பேரரசர் அசோகரின் கல்வெட்டு எண் 6

கடவுளுக்குப் பிரியமான அரசர் பியாதாசி (பிரியதர்சி) இவ்வாறு சொல்கிறார்: இதற்குமுன் அரச அலுவல்களைச் சரியாகக் கவனிக்கமுடியாமலும் அரசரால் சரியான நேரத்தில் தகவல்கள் பெறமுடியாமலும் இருந்தது. அதனால் இந்த ஆணையைப் பிறப்பிக்கிறேன். இனி எந்த நேரத்திலும் - நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கயறையில் இருந்தாலும், தேரில் இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், பூங்காவில் இருந்தாலும், வேறெங்கு இருந்தாலும் - அலுவலர்கள்மூலம் எனக்கு மக்களது பிரச்னைகள் தொடர்பான தகவல்களை அனுப்பவேண்டும். அதன்மூலம் உடனடியாக மக்களது பிரச்னைகளை என்னால் கவனிக்கமுடியும்.

கொடைகள் அல்லது பொது அறிவுப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தையாகப் பிறப்பித்திருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர அலுவல்கள் ஆகியவை தொடர்பாக மன்றத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவை தொடர்பான தகவல்கள் உடனடியாக என்னிடம் வந்துசேரவேண்டும். இது என்னுடைய ஆணை.

வேலையைச் செய்வதிலும் அதற்காக அதிகமான முயற்சியை மேற்கொள்வதிலும் நான் எப்போதுமே “இது போதும்” என்று திருப்தி அடைவதில்லை. அனைவரது நலத்தையுமே நான் என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் செவ்வனே செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும்; வேலைகளை உடனுக்குடன் முடிக்கவேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதுமில்லை. அதற்காக நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே நான் அனைவருக்கும் பட்டிருக்கும் கடனை அடைப்பதற்கு ஒப்பாகும். அவர்களுக்கு இம்மையில் மகிழ்ச்சியும் மறுமையில் சொர்க்கமும் கிடைப்பதாக!

இந்த தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், எழுதப்படுகிறது. ஆனால், இதைச் செயல்படுத்த அதிகம் உழைக்கவேண்டும்.

[The Edicts of King Asoka, An English rendering by Ven. S. Dhammika, The Wheel Publication No. 386/387, ISBN 955-24-0104-6]

பிள்ளையார்

மைலாப்பூரில் எருக்கம்பூ மாலை, அருகம்புல் சகிதமாக களிமண் பிள்ளையாரை கூட்டம் கூட்டமாக மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். சுற்றுப் பகுதிகளில் அந்த அளவுக்குக் கூட்டம் இல்லை என்றாலும் கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டு வாசலில் உள்ள கிருஷ்ணர் கோயில் அருகே களிமண் பிள்ளையார் விற்பனைக்குக் கிடைக்கிறார். அங்கும் எருக்கம்பூ, அருகம்புல், கலர் பேப்பர் குடை.

தமிழ் ஸ்மார்த்த பிராமணர்கள் கோலாகலமாக பூரண கொழுக்கட்டையுடன் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாட, வைஷ்ணவ பிராமணர்கள், “பரவாயில்லை, விஷ்வக்சேனர்தானே” என்று சொல்லி தாங்களும் கொண்டாடலாமோ என்னவோ.

எங்கள் அவ்வை சண்முகம் சாலையில் (லாயிட்ஸ் ரோட்) சில திடீர் பிள்ளையார் கோயில்கள் தெருவோரத்தில் முளைத்துள்ளன. அவற்றில் காலையிலிருந்தே ஸ்பீக்கர் வைத்து பாட்டுச் சத்தம். பாட்டுகள் பெரும்பாலும் “அம்மன் பாடல்கள்”தான். வேப்பிலை, தாலிப்பிச்சை போன்ற தமிழ் சினிமா செண்டிமெண்ட் பாடல்கள். ஆடி மாத அம்மன் உற்சவத்திலிருந்து அப்படியே தொடரும் கொண்டாட்டம் இது என்று நினைக்கிறேன்.


ஆடி மாதம் சென்னையின் பல்வேறு அடிமட்ட மக்கள் குடியிருப்புகளில் இந்த அம்மன் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதில் மேல்மட்ட மக்களின் பங்களிப்பு வெகு குறைவாக அல்லது இல்லாததாக இருக்கிறது என்பது என் கருத்து. ஒவ்வொரு சிறு ‘குடிசைக் குடியிருப்பிலும்' வண்ணச் சரவிளக்குகளாலான அம்மன் மூங்கில் உருவம் ஆளுயரத்துக்கும் அதற்கு மேலுமாக இருக்கும். தீமிதி, கஞ்சி காய்ச்சல் உண்டு. நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், முண்டக்கண்ணி அம்மன் (முண்டகக் கண்) போன்ற பெயருடைய பல வெகுமக்கள் தெய்வங்களுக்கான படையல். ஆடி வெள்ளி அபாரமான கூட்டத்துடன் இந்த விழாக்கள் நடக்கும்.

இதற்கு மாற்றாக பிள்ளையார் உயர்சாதிக் கடவுளாக மட்டுமே இருந்துள்ளார் என்பது என் கருத்து. ஆனால் இப்போது கால மாற்றத்தில் பிள்ளையார் வெகு மக்கள் கடவுளாகவும் மாறத் தொடங்கியுள்ளார். இது முழுமையாக இன்னமும் நடந்தேறவில்லை என்றாலும் அதற்கான அடித்தளம் வெகுவாக அமைக்கப்பட்டுவிட்டது.

மஹாராஷ்டிரத்தில் திலகர் தொடங்கிவைத்த கணேஷ் சதுர்த்திப் பெருவிழா சுதந்தரப் போராட்ட காலத்தில் இந்தியா முழுதும் பரவவில்லை என்றாலும் இன்றைய நவீன இந்துக் கட்டமைப்புக்கு ராமரும் விநாயகருமே முன்னிலை வகிக்கப்போகிறர்கள் என்று தோன்றுகிறது.