Thursday, September 27, 2007

பபாஸி தேர்தல்

இன்று மாலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (Booksellers and Publishers Association of South India - BAPASI) ஆண்டுப் பொதுக்கூட்டமும், அடுத்த ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவர்கள், பொருளாளர், செயலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.

(தகவலுக்காக மட்டும்!)

Thursday, September 20, 2007

அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்காணச் செய்யும்


நேற்று (19 செப்டெம்பர் 2007) இந்திய சமூக விஞ்ஞானக் கழகம், மேக்சேசே விருதுபெற்ற பி.சாயிநாத்தைப் பாராட்ட விழா ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்ட சாயிநாத், "அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்காணச் செய்யும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

முழுப் பேச்சையும் (ஆங்கிலம்) இத்துடன் ஒலிப்பதிவாக இணைத்துள்ளேன்.

1992-லிருந்து தொடங்கி இன்றுவரையிலான 15 வருடங்களில் இந்தியாவின் மேல்மட்டத்துக்கும் அடிமட்டத்துக்கும் இடையே ஏற்றத்தாழ்வுகள் முன்னெப்போதும் இல்லாதவகையில் அதிகரித்திருப்பதாகச் சொன்னார்.
ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதற்குக் காரணமாக ஆறு விஷயங்களை அவர் முன்வைத்தார். அவை:
  1. ஏழைகளுக்கு மிகவும் அத்தியாவசியமான துறைகளிலிருந்து (தண்ணீர் வழங்குதல், கழிவுநீர் அகற்றல், கல்வி, அடிப்படைச் சுகாதாரம்) அரசு பின்வாங்குவது.
  2. வளர்ச்சிப் பணிகள், நலப் பணிகளுக்கான பட்ஜெட் வெகுவாகக் குறைக்கப்படுதல்.
  3. கிட்டத்தட்ட ("அறிவிலிருந்து ஆன்மா வரை!") அனைத்தையுமே தனியார்மயமாக்குவது.
  4. பணமே செலுத்தமுடியாத மக்கள்மீது பயனர் கட்டணத்தை விதிப்பது.
  5. ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் மான்யத்தை நீக்குவது.
  6. நிறுவனங்களின் அதிகாரம் வரைமுறையின்றி அதிகமாவது.
ஏற்றத்தாழ்வு என்றால் என்ன என்பதை ஏகப்பட்ட புள்ளிவிவரங்களோடு விளக்கினார். எந்த வகையில், கடந்த 15 வருடங்களில் கீழ்மட்ட 40% மக்கள் அடைந்திருக்கும் துன்பம் அதிகமாயுள்ளது என்று நேரடி அனுபவங்கள் மூலம் விளக்கினார்.

கடைசியில், நீரோ மன்னன் ரோம் நகரத்தின் உயர்மட்டத்தினர், அறிவுஜீவிகள் போன்றோருக்கு ஒரு விருந்து வைத்தபோது ஒளிப்பந்தத்துக்காக சிறைகளில் உள்ளவர்களை எரியவைத்ததைச் சுட்டிக்காட்டி, நீரோவைவிடவும் மோசமான மன்னர்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் நீரோவின் விருந்துக்குச் சென்ற அறிவுஜீவிகளின் மனநிலை - சுற்றிலும் கைதிகள் எரியும்போது, தாங்கள் மட்டும் சற்றும் கவலைப்படாது விருந்து உண்ணுவது - எப்படியிருந்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி, இன்று நம்மைச் சுற்றிலும் ஏழை விவசாயக் குடும்பங்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும்போது அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாது இருக்கும் நமது மனநிலையை அத்துடன் ஒப்பிட்டு பேச்சை முடித்தார்.

எப்படி நமது மனநிலையை மாற்றிக்கொள்வது என்ற கேள்வி (கேள்வி-பதில் நேரத்தில்) எழுந்தது. மேலே சொன்ன அந்த ஆறு விஷயங்களையும் கடுமையாக எதிர்ப்பதன்மூலம் நமது மனநிலையை மாற்றலாம் என்பதைப் பதிலாகச் சொன்னார்.

முழு ஒலிப்பதிவு (சுமார் 1.30 மணி, 46.4 MB, MP3) | Other formats

தி ஹிந்து செய்தி

Tuesday, September 18, 2007

முஸ்லிம், கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு

தமிழக அரசு ஓர் அவசரச்சட்டத்தை இயற்றி, கிறித்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தலா 3.5% தனி இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்துள்ளது. இது கல்வியிடங்களுக்கும் மாநில அரசு வேலைகளுக்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டில் இதுவரை 69% இடங்கள் வெவ்வேறு சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் (BC): 30%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC): 20%
அட்டவணைப் பிரிவினர் (SC): 18%
பழங்குடியினர் (ST): 1%
மீதமுள்ள 31% இடங்கள் பொதுப்பட்டியல் எனப்படும். இதில் அனைவரும் போட்டியிடலாம்.

இனி, இட ஒதுக்கீடு இப்படி ஆகும்.
கிறித்துவர்கள் (C): 3.5%
முஸ்லிம்கள் (M): 3.5%
ஹிந்து பிற்படுத்தப்பட்டோர் (BC): 23%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இதில் சில கிறித்துவ, முஸ்லிம்கள் இருக்கலாம்) (MBC): 20%
அட்டவணைப் பிரிவினர் (SC): 18%
பழங்குடியினர் (ST): 1%
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள், கிறித்துவர்களின் எண்ணிக்கை, கீழ்க்கண்டவாறு:
தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை: 62,405,679
முஸ்லிம்கள்: 3,470,647 (5.6%)
கிறித்துவர்கள்: 3,785,060 (6.1%)
இந்த அறிவிப்பை எதிர்பார்த்ததுபோல கிறித்துவ, முஸ்லிம் அமைப்பினர் வரவேற்றுள்ளனர். ஹிந்து முன்னணியின் ராமகோபாலன் நீதிமன்றம் செல்வதாகக் கூறியுள்ளார்.

ஒருவிதத்தில் இந்த இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், கிறித்துவர்களுக்கு எதிராகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் பிறபடுத்தப்பட்டோருக்கான 30% இடங்களில் 3.5%க்கும் மேற்பட்ட இடங்களை கிறித்துவர்கள் பெற்றுவந்தனர் என்பது என் யூகம். (தவறாகவும் இருக்கலாம்.)

பாமகவின் ராமதாஸ் 100% இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது ஒவ்வொரு சாதி/உட்பிரிவுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப இடங்களைப் பிரித்துக் கொடுக்கவேண்டுமாம். ஐயங்கார்கள் என்றால் வடகலைக்கு இத்தனை, தென்கலைக்கு இத்தனை என்றும் செட்டியார்களில் ஒவ்வொரு பிரிவுக்கும் இத்தனை இத்தனை என்றும் போகவேண்டுமா என்று அவர் சொல்லவில்லை.

இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்துபவர்கள், இட ஒதுக்கீடு எந்த அளவு வரை செல்லவேண்டும் என்பதை கவனமாக யோசிக்கவேண்டும்.

Monday, September 17, 2007

சென்னையில் பி.சாயிநாத் - புதன், 19 செப்டெம்பர் 2007

ராமோன் மேக்சேசே விருது பெற்ற 'தி ஹிந்து' பத்திரிகையின் கிராமிய ஆசிரியர் பி.சாயிநாத், புதன்கிழமை, 19, செப்டெம்பர் 2007 அன்று சென்னையில் Indian School of Social Sciences ஏற்பாடு செய்துள்ள ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அங்கு "India: When rising inequalities threaten democracy" என்ற தலைப்பில் பேசுகிறார்.

இடம்: ரஷ்ய கலாசார மையம், ஆழ்வார்பேட்டை
நேரம்: மாலை 6.00 மணி

ரிலையன்ஸ் ஃபிரெஷ் - சில்லறை வணிகம்

சில்லறை வணிகத்தில் பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பைப் பற்றி என் ஆங்கிலப் பதிவில் எழுதியிருந்தேன்.

முக்கியமாக மேற்கு வங்கத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் பெரும் வணிகர்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். 'சட்டம் ஒழுங்கை' பற்றிக் கவலைப்படாமல் கடை புகுந்து அடித்து நொறுக்கவும் தயாராக உள்ளனர். செய்தும் காட்டிவிட்டனர். மமதா பானெர்ஜியின் திரினாமுல் காங்கிரஸும் அடிதடியில் இறங்கத் தயாராகவே உள்ளனர்.

ஆனால் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜீ இவ்வாறு சொல்கிறார்:
We should not and cannot stop big retailers. It is my opinion but, unfortunately, I am running a coalition government. And that is my problem.
விஷயம் என்னவென்றால் எதிர்ப்பு அனைத்தும் ரிலையன்ஸுக்குத்தான். ஸ்பென்ஸர்ஸ், பாண்டலூன் போன்றவர்கள் கொல்காதாவில் கடைகளைத் திறந்துள்ளனர். ஆனால் இதைப்பற்றி ஒன்றும் பேசாத ஃபார்வர்ட் பிளாக் போன்றவர்கள் ரிலையன்ஸ் உள்ளே வருவதை மட்டும் பெரிய விஷயமாக ஆக்குகிறார்கள்.

இதற்கிடையில் பாரதீய ஜன ஷக்தியின் உமா பாரதி இந்தோரில் ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடை ஒன்றில் புகுந்து ரகளை செய்து அதனைப் பூட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் லக்னோவில் ரிலையன்ஸ் கடைகள்மீதும் பிற கடைகள்மீதும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி பன்வாரி லால் காஞ்சல் என்பவர் தலைமையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

-*-

இதுதான் நம் குடியாட்சி முறையின் அழகு. சட்டம் ஒழுங்கு என்பதை முதலில் கேலி செய்பவர்கள் நம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம். இன்றைக்கு என்ன செய்தால் நம் இருப்பை வெளிக்காட்டிக்கொள்ளலாமோ அதனைச் செய்யவேண்டும். அது நியாயமானதா இல்லையா என்பதைப் பற்றிய அக்கறையில்லை.

நாளைக்கு வேறு பிரச்னை.

பாவம் ரிலையன்ஸ். பாவம் பொதுமக்கள்.

சென்னையின் மரங்கள்

பேராசிரியர் கே.என்.ராவ் எழுதிய "Trees and Tree Tales: Some Common Trees of Chennai" என்ற ஆங்கிலப் புத்தகத்தை நியூ ஹொரைசன் மீடியாவின் ஆங்கிலப் பதிப்பான Oxygen Books வெளியிடுகிறது.

ராவ், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.

சென்னையில் காணக்கிடைக்கும் தாவரங்களைப் பல்வேறு வகையாகப் பிரித்து, அவற்றுடைய தாவரவியல் பெயர், பொதுவாக மக்கள் அழைக்கும் பெயர் ஆகியவற்றுடன், அந்தத் தாவரங்களைப் பற்றிய சில கதைகளையும் ஆசிரியர் விளக்குகிறார்.

புத்தகத்தில் 48 பக்கங்கள் முழுவதும் ஆர்ட் பேப்பரிலான தாவரங்களின் வண்ணப்படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிரத்யேகமாக சென்னையைச் சுற்றிவந்து அங்குள்ள தாவரங்களைப் படமாக எடுத்தவை.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா 20 செப்டெம்பர் 2007 அன்று ஆழ்வார்பேட்டை ஸ்ரீபார்வதி ஹாலில் (கிழக்கு பதிப்பகம் அலுவலகத்துக்கு எதிராக) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் - MIDS விவாதம்

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக MIDS-ல் நடந்த விவாதத்துக்கு என்னால் செல்லமுடியவில்லை. அங்கு நடந்த விவாதத்தில் என்.ராம் பேசியதன் வீடியோ பதிவு இங்கே. மீதமும் இந்தத் தளத்தில் வெளியாகும் என்கிறார்கள்.

Indian School of Social Sciences ஆதரவில் முனைவர் ஜெயராமன் பேசியதன் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. இந்த வாரத்திற்குள் அதனை வலையேற்றிவிடுகிறேன்.

Sunday, September 16, 2007

காந்திக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாறு

ராமச்சந்திர குஹாவின் மேக்னம் ஆபஸ் 'India After Gandhi'. இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காகவே தான் பிறந்திருப்பதாக அவர் நினைக்கிறார்.

சுதந்தர இந்தியாவின் சமகால வரலாற்றை சுமார் 700 பக்கங்கள், எக்கச்சக்கப் பின்குறிப்புகள் என்று எழுதியுள்ளார். சோர்வடையாமல் படிக்கத்தூண்டும் எழுத்து நடை.

கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்திருக்கும் அனைத்தையும் எளிதாக ஒரு புத்தகத்தில் சொல்லிவிடமுடியாது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்தையும் தொட்டுவிடுகிறார்.

அவரது சில அவதானிப்புகள் புத்தகத்துக்கு மேலும் வலிமை சேர்க்கின்றன.

இந்தியா என்ற நாடே ஒருவித அபத்தமான பரிசோதனை என்றும் எவ்வளவு விரைவில் இந்த நாடு துண்டாகிப் போகும், அல்லது குடியாட்சி முறையிலிருந்து நழுவி ராணுவத்தின் கையில் விழும் என்றும் பல மேலை நாட்டு சமூக விஞ்ஞானிகள் பேசிவந்தனர்.

ஆனால் இந்தியா எவ்வாறு தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டது?

முதல் காரணம் இந்தியாவின் தேர்தல் ஆணையம். இந்தியா போன்ற மாபெரும் தேசத்தில் தேர்தலை முடிந்தவரை நடுநிலையாக நடத்தி முதல் 15 ஆண்டுகளில் சாதனை படைத்தது இந்த அமைப்பு. பின்னர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த எமர்ஜென்சி கொடுமைக்குப் பிறகு இப்பொழுது தேர்தல் ஆணையம் மீண்டும் தன் இடத்தை வலுவாக்கிக்கொண்டுள்ளது.

அடுத்ததாக மொழிவாரி மாகாணங்கள் பிரிவினை. அந்தக் காலகட்டத்தில் நேரு மொழிவாரி மாகாணத்தைக் கடுமையாக எதிர்த்தாலும், பின்னர் பெரும்பான்மை முடிவை ஏற்றுக்கொண்டார். இதனால் ஒவ்வொரு மொழிக்குழுவினருக்கும் தனி வெளி கிடைத்தது. இல்லாவிட்டால் ஒவ்வொரு மாகாணத்திலும் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கும்.

கடைசியாக சமீப காலங்களில் மத்தியில் நிலையான ஒரு கட்சி ஆட்சி அமைய முடியாத காரணத்தால் ஏற்பட்டிருக்கும் கூட்டாட்சி (Federalism) முறை, பிரிவினை சக்திகளைக் கட்டுப்படுத்தி, நாட்டின் ஒருமைப்பாட்டை வலுவாக்கியுள்ளது.

இந்தியா உதிர்ந்துபோகாமல் இருக்க மேற்கண்டவையே காரணங்கள் என்கிறார் குஹா.

இத்துடன் மேலும் சிலவற்றையும் சொல்லலாம். ராணுவம் உள்ளாட்சியில் ஈடுபடாமல் இருந்தது; வலுவான அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது; எமெர்ஜென்சி காலகட்டத்தில் நாடு முழுதும் ஏற்பட்ட வலுவான எதிர்ப்பும், தொடர்ந்த இந்திராவின் தோல்வியும்.

குஹா பொருளாதாரம் தொடர்பாக அதிகம் பேசவில்லை. திட்டக்குழு, பஞ்சம், பசுமைப் புரட்சி ஆகியவற்றைப் பற்றிப் பேசினாலும் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் புரட்சி பற்றி தீவிரமாக ஒன்றையும் சொல்லவில்லை.

இந்தியா எதிர்கொண்டிருக்கும் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் பிரச்னை, மாவோயிஸ்டுகள் தொல்லை ஆகியவற்றைப் பற்றி சொல்லும்போது வடகிழக்கு பற்றி நல்ல அறிமுகத்தைத் தருகிறார்.

-*-

இப்பொழுது நடக்கும் பத்தாண்டில்தான் இந்தியா தன்னம்பிக்கையோடு உலகை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. ஏழைமை, மதக் கலவரங்கள், தீவிரவாதம் (மாவோயிஸப் போராளிகள், அந்நிய சக்திகள் ஆகியவை சேர்த்து), பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைத் தகராறு ஆகியவை முக்கியமான பிரச்னைகள். இதில் மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்தவேண்டியது அனைத்து மக்களுக்கும் போய்ச்சேரவேண்டிய அடிப்படை வசதிகள் - கல்வியோடு சேர்த்து. இதைச் செய்துகாட்டினாலே பிற பிரச்னைகளை வெகுவாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் இப்பொழுதுதான் அவற்றை எதிர்கொள்ளமுடியும், தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியும் அந்த வளர்ச்சி கொடுத்துள்ள தன்னம்பிக்கையுமே இதற்குக் காரணங்கள்.

கடந்த ஆறு பத்தாண்டுகளில் பொதுமக்கள் புலம்புவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தனர். இனியாவது புலம்புவதை விடுத்து மாற்றத்தை ஏற்படுத்தும் கருவிகளாக மக்கள் மாறவேண்டும். அதற்கு சமகாலத்தைய வரலாற்றை அறிவது அவசியமாகிறது. அந்த வகையில் குஹாவின் புத்தகம் அனைவராலும் படிக்கப்படவேண்டியது.

Saturday, September 15, 2007

நூலக வரி - RTI தகவல்

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பிரயோகித்து மதிமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி என்பவர் கோவை மாநகராட்சி எவ்வளவு நூலக வரி வசூலித்தது, எவ்வளவு நூலகங்கள் கோவையில் கடந்த பத்து வருடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன என்று கண்டுபிடித்துள்ளார். [தகவல் நரசிம்மன் வழியாக]

தகவலின் சாரம்: கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாநகராட்சி ரூ. 30 கோடி நூலக வரியாக வசூலித்து நூலக ஆணைத்துறைக்குக் கொடுத்துள்ளது. ஆனால் புதிதாக வெறும் 3 நூலகங்களே கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாநகராட்சி எல்லைக்குள் கட்டப்பட்டுள்ளது.

இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். புதிய நூலகங்களை ஏற்படுத்துவதும் என்னென்ன புத்தகங்களை வாங்குவது என்பதைத் தீர்மானிப்பதும் மாநில அரசின் கைக்குள் உள்ளது. வெறுமனே பணத்தை வசூலித்து மாநில அரசிடம் கொடுப்பது மட்டும்தான் உள்ளாட்சி அமைப்புகள் செய்யவேண்டிய வேலை. அதையும் சில அமைப்புகள் சரியாகச் செய்வதில்லை.

கேரளத்தில் ஒவ்வொரு உள்ளாட்சிக்கும் உட்பட்ட பகுதியில் நூலகங்கள் தாங்களாகவே புத்தகங்களை வாங்குகின்றன. மாநில அரசு இந்த நூலகங்களுக்கு மான்யம் ஏதவது தரவேண்டுமானால் தந்துவிடுகிறது. உள்ளாட்சி வரிகள் ஏதேனும் இருந்தால் அது நேரடியாக நூலகங்களுக்குச் சென்றுவிடும். அதைத்தவிர நூலகங்கள் தனி நபர்களிடம் நன்கொடை பெறலாம். நூலகத்தைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கலாம். தனது வருமானத்தைக் கொண்டு வேண்டிய அளவு புத்தகங்களைப் பெறலாம்.

தமிழக நூலக நடைமுறை ஒட்டுமொத்தமாக மோசம் என்று சொல்லிவிட முடியாது. மையப்படுத்துதல் vs அ-மையப்படுத்துதல் என்பதில் இரண்டிலுமே சில பிரச்னைகள் உண்டு. நூலக ஆணைக்குழு சில முக்கியமான நகரங்களில் மட்டும் நூலகங்களுக்குத் தனியாக இயங்கும் தன்னாட்சி உரிமையைக் கொடுத்துப் பார்க்கலாம்.

Thursday, September 13, 2007

சேலம் கோட்டம் - தேவையில்லாத அரசியல்

சில மாதங்களாகவே நடந்துவரும் சேலம் ரயில்வே கோட்ட விவகாரம் நேற்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் சமயம், இல்லை என்று தோள் தட்டியிருக்கிறார்கள் மறத் தமிழர்கள்.

ரயில்வே கோட்டங்கள் (டிவிஷன்) மாநில எல்லைகளுக்கு உட்பட்டவை அல்ல. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே என்பது தமிழகம், கேரளா மாநிலங்களை முழுமையாகவும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. தெற்கு ரயில்வேயில் மொத்தமாக ஐந்து கோட்டங்கள் இருந்தன:
தமிழகம்: சென்னை, மதுரை, திருச்சி
கேரளம்: திருவனந்தபுரம், பாலக்காடு

இப்பொழுது, சேலம் என்ற புதிய கோட்டத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலக்காடு கோட்டத்தின் பல பகுதிகளைப் பிரித்து அவற்றை சேலம் கோட்டத்தில் கொண்டுவருகின்றனர்.

இது கேரளத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. தென் மாநிலங்களில் கேரளம் ஒன்றில்தான் எந்த ரயில்வே தலைமையிடம் எதுவும் கிடையாது. இப்பொழுது பாலக்காடு கோட்டத்தில் பெரும்பான்மைப் பகுதி சேலம் கோட்டத்துக்குச் சென்றுவிட்டால் ரயில்வே வட்டாரத்தில் கேரளத்தின் மதிப்பு கீழே இறங்கிவிடும், வேலைகள் அந்த மாநிலத்தை விட்டுச் சென்றுவிடும் என்று கேரள மக்களுக்கு பயம் ஏற்பட்டது; பயத்தை அந்த மாநில அரசியல்வாதிகள் தூண்டிவிட்டனர்.

அதன் விளைவாக சேலம் கோட்டம் ஆரம்பிப்பது தாமதப்பட்டது. ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுடன் தமிழக, கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி மதுரை கோட்டத்தில் சில பகுதிகள் பாலக்காட்டுடன் இணைக்கப்படும் என்று முடிவானது.

இது ஒரு பெரிய விஷயமே இல்லை. பாலக்காடு கோட்டமோ, மதுரைக் கோட்டமோ, சேலம் கோட்டமோ, எல்லாமே சென்னையில் உள்ள தெற்கு ரயில்வேயில் தலைமைக்குக் கீழேதான் இயங்குகின்றன.

தமிழகத்துக்கு ஒரு புதிய ரயில்வே கோட்டம் வருகிறது என்பதால் தமிழர்கள் புளகாங்கிதம் அடையவேண்டியதில்லை. இதனால் சேலம் பகுதியில் கொஞ்சம் (சில நூறு) வேலை வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கலாம். அவ்வளவே. தெற்கு ரயில்வேயில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்.

கேரள அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கியதைக்கூட ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறையும் என்கிற பயம் ஒன்று. மரியாதை (பிரெஸ்டீஜ்) குறையும் என்கிற பயம் இரண்டு. அவர்கள் கோவை பகுதியை பாலக்காடு கோட்டத்தில் சேர்க்க விரும்பினர். பேச்சுவார்த்தையில் கோவை சேலம் கோட்டத்தில் சேர்க்கப்பட்டது. பதிலுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு (சுமார் 79 கிமீ) பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. இது மிகச்சாதாரண விஷயம்.

தமிழகம், கேரளம் நிலம், நீர் என்று பல பிரச்னைகள் உள்ளன. முல்லைப் பெரியாறு முதற்கொண்டு. சிறு சிறு விஷயங்களைப் பெரிது பண்ணாமல் நடந்துகொள்ளலாம். சில இடங்களில் விட்டுக்கொடுப்பதால், பிற இடங்களில் தமிழகத்துக்குச் சாதகமான நிலைமை ஏற்படும்.

Wednesday, September 12, 2007

ஆதவன் நாவல்கள் ஆங்கிலத்தில்

ஆதவன் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர். மிகக் குறைந்த காலமே வாழ்ந்தவர். பல சிறுகதைகள், குழந்தைகளுக்காகக் கொஞ்சம், சில குறுநாவல்கள், இரண்டு நாவல்கள் எழுதியிருந்தார்.

அவரது நாவல்கள் 'என் பெயர் ராமசேஷன்', 'காகித மலர்கள்' இரண்டையும் போன்று எனக்குத் தெரிந்து தமிழில் வேறு யாரும் எழுதவில்லை. இந்த இரண்டு நாவல்களும் தற்போது உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளன. அவரது பிற படைப்புகள் - சிறுகதைத் தொகுதி, குறுநாவல் தொகுதி - இரண்டும் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளன.

இப்பொழுது அவரது இரண்டு நாவல்களும் ஆங்கிலத்தில் Indian Writing என்ற பதிப்பின் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

I, Ramesehan
Paper Flowers

ஆதவனை நேரடியாகத் தமிழில் படிக்க முடியாத பிற மொழி பேசும் நண்பர்களுக்கு வாங்கிப் பரிசளியுங்கள்!

Tuesday, September 11, 2007

ஆ நீளன் சூரல் வடியில் தளிரும் பூவும்

சென்ற வாரம் எங்களது மலையாளம் பதிப்பின் சார்பாக இரண்டு மலையாளக் கவிதைப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

தமிழ், ஆங்கிலத்தை அடுத்து மலையாளத்தில் புலரி பிரசிதீகரணம் (പുലരി പ്രസിദ്ധീകരണം) என்ற பெயரில் ஒரு பதிப்பைத் தொடங்கியிருக்கிறோம். இதுவரையில் எட்டு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மாதா மாதம் புதிய புத்தகங்கள் வெளியாகும்.

கோழிக்கோட்டில் நடைபெற்ற விழாவில் எம்.டி.வாசுதேவன் நாயர் தலைமை வகித்துப் பேசினார்.

தமிழகத்தில் பதிப்புத் தொழிலை எடுத்துக்கொண்டால் சென்னைதான் எல்லாமே. பிற நகரங்களில் வலுவான பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் இல்லை. ஆனால் கேரளத்தில் கோட்டயம், திருவனந்தபுரம், கொச்சி, கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய ஆறு நகரங்களிலும் பதிப்பகங்கள் பரவியுள்ளன. இங்கெல்லாம் தொடர்ச்சியாகப் புத்தக வெளியீடுகள் நடைபெறுகின்றன. எங்கள் நிகழ்ச்சி நடந்த அடுத்த நாள் தமிழ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரனை அழைத்து சில மலையாளக் கவிதைப் புத்தகங்களை வெளியிட்டனர். (தமிழ்ப் புத்தக வெளியீட்டுக்கு பிற மாநில எழுத்தாளர்களை நாம் அழைக்கிறோமா?)

கோழிக்கோட்டில் நிகழ்ச்சியை கவனிக்க சூர்யா டிவி தவிர அனைத்து முக்கியமான தொலைக்காட்சி சானல்களும் - மனோரமா, ஏசியாநெட், கைரளி என்று - கேமராக்களை அனுப்பியிருந்தன. அடுத்த நாள் சூர்யா தவிர அனைத்து சானல்களிலும் நிகழ்ச்சியின் சிறு துண்டு காட்டப்பட்டது. அதேபோல 'தி ஹிந்து' பத்திரிகை தவிர, இண்டியன் எக்ஸ்பிரஸ், அனைத்து மலையாளப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருந்தனர். சன் குழுமத்துக்கு இலக்கியம் என்பது சுட்டுப்போட்டாலும் பிடிக்காது / புரியாது என்பது நன்கு புரிந்தது. அதேபோல மலையாள எழுத்து கலாசாரம் என்பது தமிழ் எழுத்துகளைப் போலவே 'தி ஹிந்து' பத்திரிகைக்கு உவப்பானதல்ல என்றும் புரிந்தது. (ஆனால் யுவன் சந்திரசேகர் பங்கேற்கும் நிகழ்ச்சி பற்றி 'தி ஹிந்து'வில் செய்தி வந்திருந்தது ஆச்சரியம்தான்!)

வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டம் வந்திருந்தது. வாசுதேவன் நாயர் நம்மூரில் ரஜினிகாந்த் மாதிரி. அவர் பேச்சைக் கேட்பதற்கென்றே கூட்டம் வந்திருந்தது. தமிழ்நாட்டு இலக்கியவாதி கேரள எழுத்துக்காரனுக்கு அவனது ஊரில் கிடைக்கும் மரியாதையைக் கண்டால் பொறாமையால் மனம் வெதும்பிச் சாவான்!

கவிஞர் ஜெயதேவன் குழந்தைகள் பள்ளிக்கூட வாத்தியார் (Lower Primary). நீளமான பிரம்பின் நுனியில் தளிரும் பூவும் (ஆ நீளன் சூரல் வடியில் தளிரும் பூவும்) என்ற புத்தகத்தின் தலைப்பே கவிதை. பள்ளிக் குழந்தைகளைப் பற்றிய கவிதைகளின் தொகுப்பு. மற்றொன்று குறச்சுகூடி ஹரிதாபமாய ஓரிடம்... என்ற கவிதைத் தொகுப்பு.

வெளியே அவரிடம் பாடம் கற்ற/கற்கும் சில குழந்தைகள் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தன.

நான் ஜெயதேவனிடம், இந்தக் குழந்தைகளுக்கு உங்களது கவிதைகள் புரியுமா என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, அவர்களுக்கு நன்றாகப் புரியும் என்று சொன்னார்.

அரங்கின் உள்ளே விமரிசகர்கள் கவிதைகளைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

Thursday, September 06, 2007

மொழிபெயர்ப்புகள்

கில்லி வழியாக ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பு என்ற பதிவைப் பார்க்க நேரிட்டது.

ஒரு பதிப்பாளராக மொழிபெயர்ப்பு பற்றி சில விஷயங்களை எழுத நினைத்திருந்தேன்.

இதுவரையில் மூன்று விதமான மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டிருக்கிறோம். மலையாளத்திலிருந்து தமிழுக்கு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு நாவல்களை மொழிபெயர்க்க விரும்பி ஆரம்பித்த திட்டம் பாதியிலேயே அல்லாடுகிறது. நான்கு புத்தகங்கள் கொண்டுவந்திருப்போம். ஆனால் பல தொல்லைகள். மொழியாக்கத்தில் உள்ள சிக்கல்கள், எடிடிங்கில் உள்ளவர்களுக்கு மூல மொழி தெரியாதிருப்பதனால் ஏற்படும் குழப்பங்கள், மொழியாக்கப் புத்தகங்கள் வெளியிடுவது முதன்மை வேலை கிடையாது என்பதால் அது பின்னுக்குத் தள்ளப்படுதல் போன்றவற்றால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் அதைப்பற்றி அதிகம் பேசப்போவதில்லை.

-*-

ஆங்கிலத்திலிருந்து சில அ-புதினங்களைத் தமிழாக்கியுள்ளோம். ஆனால் இவை எதிலும் இதுவரையில் மனத்திருப்தி ஏற்பட்டதில்லை. படிக்கும்போது சரளமாக தமிழில் படிக்கும் ஓர் எண்ணத்தை இவை ஏற்படுத்துவதில்லை. ஆனால், அ-புதினங்கள் என்பதால் நிறைய சுதந்தரம் உண்டு, பத்திகளை மாற்றி எழுதுவதில். இனி வரும் நாள்களில் சில முக்கியமான ஆங்கில அ-புதினங்களை தமிழாக்கம் செய்து வெளியிடப்போகிறோம். ஆங்கிலப் புதினங்களை இப்பொழுதைக்குத் தொட மனம் அஞ்சுகிறது. அதற்குத் தேவையான திறமை, உழைப்பு, எடிடிங் நேர்த்தி ஆகியவற்றைப் பெற இன்னமும் காலம் பிடிக்கும்.

ஆனால் தமிழ் -> ஆங்கிலம் மொழிமாற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். Indian Writing என்ற பதிப்பில் இதுவரை 12 புத்தகங்கள் வந்துள்ளன. அவற்றில் 11 தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. மொழிமாற்றத்தில் பல இடங்கள் இன்னமும் உறுத்தலாகவே உள்ளன.

ஆங்கில மொழிமாற்றத்தில் சில கலாசாரம் சார்ந்த தமிழ் சொற்களை அப்படியே விடுவதா (உறவு முறைப் பெயர்கள், வேறு சில), அல்லது அவற்றை மாற்றுவதா என்ற கேள்வி உள்ளது.

ஒரு பத்தியை அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றுவதா, அல்லது கிட்டத்தட்ட அதே பொருள் பட, அதே கருத்து தொனிக்க, அதே நடை மாறாமல், ஆனால் ஆங்கிலத்தில் சரளமாகப் படிக்குமாறு ஆங்கில இலக்கண வழு ஏதும் இன்றி மாற்றுவதா? இரண்டாவதுதான் எனக்கு ஏற்புடையது. பலர் இதனை ஏற்காமல் இருக்கலாம்.

மூலப்பிரதி எழுத்தாளர், மொழிமாற்றுபவர், எடிட்டர் ஆகியோருக்கிடையேயான உறவு முக்கியம்.

-*-

இன்று ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் பல மொழிமாற்றங்களில் குறைகள் நிறைய உள்ளன. இதனை கறாரான விமரிசனம் மூலம் மட்டுமே மாற்ற இயலாது. நல்ல பல மொழிமாற்றங்களைக் கொண்டுவந்து தருவதன்மூலம் மட்டுமே இதனைச் செய்யமுடியும்.

"இதுதான் சிறந்த மொழிமாற்றம். இதனைப் படித்தால், கிட்டத்தட்ட மூலப்பிரதியைப் படிக்கும் அனுபவம் கிடைக்கும். ஆனால் அது மோசமான மொழிமாற்றம். அதனைப் படிப்பதற்கு பதில் வேறு எதையாவது செய்யலாம்" என்று உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினால் படிப்பவர் அதனைப் புரிந்துகொண்டு நல்ல மொழிமாற்றங்களை ஆதரிப்பார். எல்லாமே குறை, எல்லாமே குற்றம் என்றால் மட்டும் போதாது.

அடுத்து மொழிமாற்றுவோர் என்ற இனம்... அழியும் நிலையில் உள்ளது. மொழிமாற்றுவோர் இரண்டு மொழிகளிலும் நல்ல திறமை பெற்றிருக்கவேண்டும். இரண்டு மொழிகளிலும் அடிப்படை இலக்கணத்தை நன்கு அறிந்திருக்கவேண்டும். இரண்டு மொழிகளிலும் நிறையப் படிக்கவேண்டும். இலக்கு மொழியில் தொடர்ச்சியாக எழுதவேண்டும். இவை இல்லாவிட்டால் மொழியாக்கம் நன்றாக இருக்காது. அகராதிகளை மட்டும் வைத்துக்கொண்டு மொழிபெயர்ப்பது சாத்தியமே இல்லாத விஷயம்.

இன்று பள்ளிகளில் கற்பிக்கும் தமிழ் மிகவும் மோசமாக உள்ளது. அடிப்படை உரைநடைத் தமிழை ஒழுங்காகக் கற்பிப்பது இல்லை. தமிழ் உரைநடை இலக்கணத்தை ஒழுங்காகச் சொல்லித் தருவதில்லை. ஆனால் ஆங்கிலம் கற்பித்தல் அந்த அளவுக்கு மோசமாக இல்லை. பல பள்ளிகளில் தமிழ் பாடமே இல்லாத காரணத்தால் இருமொழி அறிவுடையோர் (bilinguals) காணக் கிடைப்பதில்லை. (தமிழ் vs ஆங்கில வலைப்பதிவுகளைப் பார்த்தாலே தெரியும் - தமிழ் வலைப்பதிவுகளில் எவ்வளவு மோசமாகத் தமிழ் எழுதப்படுகிறது என்று.)

கல்லூரியில் BA/MA தமிழ் இலக்கியம் படிப்போருக்கு ஆங்கில அறிவு கிடையாது. BA/MA ஆங்கில இலக்கியம் படிப்போர் தமிழைக் கண்ணாலேயே காண்பது கிடையாது. ஃபார்மல் பட்டப்படிப்பு இல்லாமல், வீட்டிலேயே உட்கார்ந்து தானாகவே படித்து இரண்டு மொழிகளையும் நன்கு புரிந்துகொண்டு மொழிமாற்றம் செய்பவர்கள் அபூர்வமானவர்கள்.

இதுபோன்ற பிரச்னைகள் பல இருந்தாலும், நல்ல மொழிமாற்றத்தை நோக்கி நாம் செல்லவேண்டும். இன்று ஆங்கிலம் -> தமிழ் மொழிமாற்றம் மூலமாகத்தான் அறிவு சார்ந்த நூல்கள் பலவும் தமிழ் மக்களுக்கு வந்துசேரவேண்டிய நிலை உள்ளது.

Wednesday, September 05, 2007

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்


நேற்று ரஷ்ய கலாசார மையத்தில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

கார்த்தி சிதம்பரம் தொகுத்து வழங்க, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியவர்கள் அரசியல் பின்னணி இல்லாதவர்கள். மூவர் இந்திய அணு ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள்: பிளேசிட் ரோட்ரிகே, பாலசுப்ரமணியன், எல்.வி.கிருஷ்ணன். நான்காமவர் அறிவியல் கட்டுரைகள் எழுதும் இதழியலாளர் ராமதுரை.

கடைசியில் மக்கள் நிறையக் கேள்விகளைக் கேட்டனர். அதற்கு இந்த நால்வரும் கொடுத்த பதில்களையும் சேர்த்தே ஒலிப்பதிவாகத் தொகுத்துள்ளேன்.

கலந்துரையாடல்

கூட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் 'கூட்டத்துக்குச் சேர்க்கப்பட்ட ஆள்கள்' - வண்டியில் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட அப்பாவிகள். கொஞ்சம் பேர் கார்த்தி சிதம்பரத்துக்காக முன் வரிசையில் வந்து அமர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள். எனக்குப் பின்வரிசையில் ஏதோ கல்லூரியிலிருந்து வந்திருந்த 15-20 மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது ஆசிரியர் இந்த விவகாரம் பற்றி கேள்விகள் கேட்பார் என்று தோன்றியது. விஷயம் என்ன என்று தெரிந்துகொள்ள வந்திருந்த பொதுமக்கள் சுமார் 70 பேர் இருந்திருப்பார்கள். மிச்சம் பத்திரிகையாளர்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் செல்கிறது மேற்கண்ட இந்த ஒலிப்பதிவு.

இன்று இடதுசாரிச் சிந்தனையாளர் ஒருவரின் (Dr. T.Jayaraman, BARC) பேச்சு LLB கட்டடத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. அதிலும் ஆஜர் ஆகி, பேச்சை, கேள்வி-பதில்களை ஒலிப்பதிவு செய்வேன்.

Tuesday, September 04, 2007

சுயநல மரபணு

ரிச்சர்ட் டாக்கின்ஸ் 1976-ல் வெளியிட்ட புத்தகம் The Selfish Gene - சுயநலம் கொண்ட மரபணு, நான் சமீபத்தில் படித்த புத்தகம்.

பரிணாம வளர்ச்சிக் கொள்கையை சார்ல்ஸ் டார்வின், வாலேஸ் ஆகியோர் வெளியிட்டபின்பு, உயிரிகளை ஆராய்ந்து அவை எப்படித் தோன்றியிருக்கும், எப்படி ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்திருக்கக்கூடும் ஆகியவை பற்றி நன்கு தெளிவான சிந்தனைகள் இன்று அறிஞர்களிடையே நிலவுகிறது. இந்தச் சிந்தனைகள் மதங்களின் அடிப்படையை ஆட்டிப்படைக்கின்றன.

உலகம் எப்படித் தோன்றியது? உயிர்கள் எப்படித் தோன்றின? உயிர்களின் உச்சமான மனிதன் எப்படித் தோன்றினான்? இந்த மனிதனை உருவாக்கிய 'கடவுள்' இந்த மனிதர்களிடம் என்ன எதிர்பார்க்கிறான்? இந்த கேள்விகளுக்கு ஆதிகாலம் தொட்டே மனிதர்கள் விடைகாண முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் உயிர்கள் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பதற்கான அறிவியல் பூர்வமான விடை கடவுளின் இருப்பையே கேள்வி கேட்க வைத்துள்ளது.

[டாக்கின்ஸின் இந்தப் புத்தகம் கடவுளை நேரடியாக வம்புக்கு இழுக்கவில்லை. அவரது மற்றொரு புத்தகம் 'The God Delusion' அதனைச் செய்கிறது.]

பூமிப் பரப்பில் இருந்த வேதித் திரவத்தில் (primeval soup) திடீரென தன்னைத்தானே நகலாக்கும் ஒரு வேதிப்பொருள் உருவானது. அது தன்னைச் சுற்றி இருக்கும் வேதித் திரவத்திலிருந்து தன் நகல்களாகப் பலவற்றை உருவாக்கியது. நாளடைவில் இதேபோன்று தன்னைத்தானே நகலாக்கும் பல வேதிப்பொருள்கள் உருவாயின. இவை ஒன்றோடு ஒன்று போட்டி போட, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து ஒரு செல் உயிரினங்களாகவும், அங்கிருந்து பல செல் உயிரினங்களாக - தாவரங்களாக, விலங்குகளாக - மாற்றமடைந்து, இன்று நாம் உலகில் காணும் பல்வேறு உயிரினங்களும் தோன்றின என்பது தியரி.

பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது டார்வின் Natural Selection - இயற்கைத் தேர்வு என்பதைப் பற்றிச் சொல்லியிருந்தார். ஏகப்பட்ட உயிரினங்களில் பல முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன. இடையிடையே பல புதிய உயிரினங்கள் தோன்றியுள்ளன. பல ஆரம்ப காலம் முதற்கொண்டு இன்றுவரை உயிர்வாழ்ந்து வருகின்றன. எந்தெந்த உயிரினம் வாழும், எது அழியும் என்று யார் முடிவு செய்கிறார்கள்? இயற்கை என்கிறார் டார்வின்.

ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உள்ளாகவே சில இயல்புகளை அதிகமாகக் கொண்ட தனி உயிர்கள் (individuals) உயிர்தப்ப நேரிடுகிறது. இதனால் நாளடைவில் அந்த உயிர்கள் உருவாக்கும் குழந்தைகளே அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றன.

டாக்கின்ஸின் அடிப்படைக் கொள்கை இதுதான். ஓர் உயிர் - விலங்கோ, தாவரமோ - வெறும் கருவிதான். அந்த உயிர் பல மரபணுக்கள் (genes) இணைந்த டி.என்.ஏவால் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த மரபணுக்கள் ஒவ்வொன்றும் தங்களது நகல்களை எப்படியாவது தோற்றுவித்து அவை இந்த உலகில் தொடர்வதை விரும்புகின்றன. தன்னை முன்னிறுத்துவது, பிறர் அழிந்தாலும் பரவாயில்லை, தான் நகலாக்கம் பெறவேண்டும் என்று அவை நினைக்கின்றன. ஆனால் அதே சமயம் தமக்கு அதனால் ஆதாயம் என்றால் அவை பிற மரபணுக்களுடன் ஒத்துழைக்கத் தயங்குவதில்லை. சில மரபணுக்களுடன் ஒத்துழைத்து அவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்குவதே ஓர் உடல். தாவர/விலங்கு உடலை டாக்கின்ஸ் survival machine என்கிறார். மரபணுக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இந்த இயந்திரங்களைத் தயாரிக்கின்றன.

ஆனால் ஒரு மரபணுவின் அடிப்படை நோக்கம் தான் மட்டும் எப்படியாவது காலம் காலமாகத் தொடரவேண்டும் என்பது மட்டும்தான். தொடர்வது என்றால் தன்னை அப்படியே நகலாக்கி அந்த நகலைப் பரப்புவது. பெரும்பாலான உயிர்களில், பால் இனப்பெருக்கம் வாயிலாக மரபணுக்கள் மாறி மாறிக் கூட்டுச்சேரும் நிலை ஏற்படுகிறது.

மரபணுக்கள் சுயநலத்தோடு செயல்படுகின்றன என்றால் அவை சிந்தித்து அவ்வாறு செயலாற்றுகின்றன என்று பொருள் கிடையாது. அப்படியாக நடந்துகொள்வது அவற்றின் குணத்தில் எழுதப்பட்ட ஒன்று.

0

ஆராய்ச்சியாளர்களுக்கென எழுதப்பட்டதல்ல இந்தப் புத்தகம். பாபுலர் சயன்ஸ் என்னும் வகையைச் சார்ந்தது. ஆனாலும் படித்துப் புரிந்துகொள்ள நிறைய நேரம் தேவைப்படுகிறது.

டார்வினின் கொள்கை, கேம் தியரி எனப்படும் கணிதம் ஆகியவற்றைக் கொண்டு இன்று உலகின் நாம் காணும் பல புதிர்களை டாக்கின்ஸ் அழகாக விளக்குகிறார்.

படிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டம் என்றாலும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்களில் இது ஒன்று.

Saturday, September 01, 2007

அணு மின்சாரம் தேவையா?

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நடக்கும் விவாதத்தில் ஞாநி விகடன் இதழில் இரண்டாம் பாகமாக சிலவற்றை எழுதியுள்ளார். முதல் பாகத்தில் ஒப்பந்தம் பற்றி அவர் எழுதியிருந்ததை விமரிசித்து நான் ஏற்கெனவே எழுதியது இங்கே.

அணு மின்சாரம் தேவையா என்ற கேள்வி நியாயமானது. உலகில் அதிக அளவு (மெகாவாட் அளவில்) அணு மின்சாரம் தயாரிக்கும் நாடு அமெரிக்கா. தனது மொத்தத் தயாரிப்பில் அதிக விழுக்காடு அணு மின்சாரமாகத் தயாரிக்கும் நாடு ஃபிரான்ஸ். இரண்டு நாடுகளிலும் அணு மின்சாரம் தயாரிப்புக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

அணுப் பிளவு என்பதே அபயாகரமானது என்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் இல்லை. அணுக்கழிவுகளை எவ்வளவு கவனமாகக் கையாள்வது, எங்கு கொண்டுபோய் கொட்டுவது, கதிர்வீச்சு எந்த வகையில் மக்களை, பிற உயிர்களை, பயிர்களைப் பாதிக்காது இருக்கும் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது அவசியம்.

இதற்கான பதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அணு விஞ்ஞானிகளிடமிருந்து வரவேண்டும்.

ஞாநி எழுப்பியிருக்கும் சில கேள்விகளை இங்கு எதிர்கொள்கிறேன்.

1. முறைசாரா மின்சக்தி - சூரிய ஒளி, காற்றாலை - போன்றவை இருக்க, அதுவும் செலவு குறைவாக இருக்க, ஏன் பணத்தை அணு மின்சாரத்திலே போடுகிறீர்கள்?

காற்றாலை மின்சாரம் தயாரித்தல் இன்று இந்தியாவில் முற்றிலுமாக தனியார்மயமாக்கப்பட்டு நடந்துவருகிறது. காற்றாலைகளை நிர்மாணிக்க இந்திய அரசு மான்யம் கொடுக்கிறது. ஆனாலும் ஒரு காற்றாலை டர்பைனிலிருந்து உருவாகும் மின்சாரம் அதிகபட்சம் 5 மெகாவாட்டைத்தான் நெருங்கமுடியும். பொதுவாக இவை 1.5 மெகாவாட் உற்பத்தி செய்யும் டர்பைன்களாக இருக்கும். பல டர்பைன்களைக் கொண்ட ஒரு மின் நிலையத்தில் 200-300 மெகாவாட் உற்பத்தி செய்தால் அதிகம். அதற்குத் தேவையான நிலப்பரப்பு மிக அதிகம். மேலும் நாள் முழுதும் ஆண்டு முழுதும் இந்த அளவு மின்சாரம் கட்டாயமாகக் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. காற்று வீசுவதைப் பொறுத்து நாளுக்கு நாள் மின்சாரம் மாறுபடும்.

சூரிய ஒளி மின்சாரம் இன்னமும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. அதை உருவாக்க ஆகும் செலவு அதிகம். ஆனால் வீடுகள் ஒவ்வொன்றும் சூரிய ஒளி மின்சாரத்தில் முதலீடு செய்து தங்களுக்கான மின் செலவைக் குறைக்கலாம். இதுவரையில் உலகில் எங்குமே சூரிய ஒளியைப் பயன்படுத்தி பல நூறு மெகாவாட் அளவில் மின்சாரம் எடுக்கும் உற்பத்திச் சாலைகள் கிடையாது.

நீர் மின்சாரம் எடுக்க வேண்டுமானால் பெரிய அணைகளைக் கட்டவேண்டும். அணைகள் கட்டுவதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இடம் பெயர வேண்டியிருக்கும். பெரிய அணை கட்டாமல் சில நூறு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பது சாத்தியமே இல்லை. தடுப்பணை சிலவற்றைக் கட்டுவதன்மூலம் சில பத்து மெகாவாட்கள் பெறுவதே கஷ்டம்.

இன்றைய நிலையில் அனல் மின்சாரம் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் சில ஆயிரம் மெகாவாட் தயாரிக்கக்கூடிய திறனைப் பெற்றுள்ளது. அதுவும் ஒவ்வொரு நாளும் வேண்டிய அளவு தயாரிக்கக்கூடிய திறனுடன். அதற்கு அடுத்த நிலையில் இருப்பது அணு மின்சாரம் மட்டுமே.

அனல் மின்சாரம் தயாரிப்பதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருமளவு அனல் மின்சாரம் தயாரிப்பதால் வருபவையே. எங்கெல்லாம் ஃபாசில் எரிபொருள்களைப் பயன்படுத்தினாலும் அங்கு கார்பன் டயாக்ஸைட் வருவதைத் தடுக்கவே முடியாது.

* மின்சாரம் அதிக அளவு இல்லாவிட்டால் வளர்ச்சி கிடையாது.
* மின்சாரம் அதிக அளவு தயாரிக்கவேண்டும் என்றால் அது காற்றாலை, சூரிய ஒளியால் முடியாது.
* அனல், அணு மின்சாரம் இரண்டால் மட்டுமே முடியும். ஓரளவுக்கு, சில இடங்களில் மட்டும் நீர் மின்சாரத்தால் முடியும்.
* நீர் மின்சாரம் என்றால் அணை, அதனால் மக்கள் இடப்பெயர்வு இருக்கும். (நர்மதா அணை). அனல் மின்சாரம் என்றால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு, கிரீன்ஹவுஸ் வாயுக்கள், ஓஸோன் லேயர் பாதிப்பு. அணு மின்சாரம் என்றால் கதிர்வீச்சு அபாயம், அணுக்கழிவை நீக்கும் அபாயம் ஆகியவை உண்டு.

இந்த நிலையில் நாம் எதையாவது செய்தாகவேண்டியுள்ளதே?

அணு மின்சாரத்தின் சில பயன்களைப் பார்ப்போம். இப்பொழுதைய தொழில்நுட்பத்தில் ஓர் அணு உலை 1000 மெகாவாட் மின்சாரத்தைக் கொடுக்கிறது. ஒரு சிறிய நிலப்பரப்பில் நான்கு அணு உலைகளை வைத்து எளிதாக 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். அதே அளவு மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் கரியைக் கணக்கில் எடுத்தால் கரி அனல் மின்சார நிலையத்துக்கு மாபெரும் இடம் தேவைப்படும். (சாசன் - மத்தியப் பிரதேசம் - Ultra Mega Power Project.) அணு மின்சாரம் தயாரிப்பில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேறாது.

அணு மின்சாரம் தயாரிப்பில் என்ன பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.

எதைச் செய்தாலும் பிரச்னைகள் சில இருக்கும் என்ற நிலையில் பிரச்னைகளைக் குறைத்து, பாதிப்புகளை வெகுவாகக் கட்டுப்படுத்தவேண்டும் என்றால் அணு மின்சாரம் மிக அவசியம். நமக்குத் தேவையான கரியும் பெட்ரோலியப் பொருள்களும் (நாஃப்தா) வேண்டிய அளவு கிடைத்துக்கொண்டே இருக்கப்போவதில்லை.

2. செலவு. அணு மின்சாரம் உருவாக்கத் தேவையான செலவு அதிகம்.

இன்றைய நிலையில் இது உண்மையே. ஆனால் சரியான தொழில்நுட்பத்தை வெளிநாடுகளிலிருந்து பெறுவதன்மூலம் அணு மின்சாரத்தின் யூனிட் செலவைக் குறைக்கமுடியும். அதே நேரம் பிற வழிகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் விலை அதிகமாகிக்கொண்டே வரும் - முக்கியமாக அனல் மின்சாரம்.

இதற்கான செலவை அரசு முற்றிலுமாகச் செய்யவேண்டியதில்லை. இன்று அணுத் தொழில்நுட்பத்தை அரசே கையகப்படுத்தி வைத்துள்ளது.

தனியாரைக் கொண்டுவருவதன்மூலம் அரசு செய்யும் செலவைக் குறைக்கலாம்.

Nuclear Power Corporation என்பது மத்திய அரசின் நிறுவனம். இதன்மூலமாக மத்திய அரசு சில அணு உலைகளை நிர்மாணிக்கலாம்.

அடுத்து டாடா பவர், ரிலையன்ஸ் எனெர்ஜி ஆகியவற்றை அணு மின்சாரத் துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம்.

மூன்றாவதாக அமெரிக்க, ஃபிரான்ஸ் நிறுவனங்களை நேரடியாக இந்தியாவில் அணு மின்சாரம் தயாரிக்க அனுமதித்து சரியான (கவனிக்க: சரியான) Power Purchase ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். (உடனே என்ரான் என்று யாரும் சொல்லாதீர்கள். அந்தப் பிரச்னையே வேறு.)

நமது இறுதித் தேவை மின்சாரம். அதற்கு அரசே முதலீடு செய்யவேண்டும் என்பதில்லை.

3. இவ்வளவு பெரிய ஒப்பந்தம் போட்டாலும் அணு மின்சாரத்தின் அளவு 3%த்திலிருந்து 6%க்குப் போகும். இது தேவையா?

அடுத்த பத்தாண்டுகளிலேயே அணு மின்சாரத்தில் அளவு இதற்குமேலும் அதிகரிக்கலாம். ஆனால் அதற்குப் பலவிதங்களிலும் இடையூறுகள் இருக்கும் என்று அரசு அனுமாணிக்கிறது. ஆனால் மின்சாரம் என்று வரும்போது அடுத்த பத்தாண்டுகளை மட்டும் பார்த்தால் போதாது. அடுத்த ஐம்பதாண்டுகளைப் பார்க்கவேண்டும்.

2020 - 6%
2030 - 10%
2040 - 15%
2050 - 25%
2060 - 35%

என்ற கணக்கில் செல்லவேண்டியிருக்கலாம். மூன்றிலிருந்து ஆறுக்குப் போகாமல் நாற்பதுக்கு வரமுடியாது. அடுத்த முப்பது ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் அணு மின்சாரம் 25-40% இருக்கும் என்றே நினைக்கிறேன்.

4. ஞாநி சொல்கிறார்: "தொழில்நுட்பம், அணு உலைக்கான எரிபொருள், தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிப்பதற்கான சுதந்திரம் இவற்றுக்காக அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் போட்டாக வேண்டியிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த இரண்டும் நம்மிடமே உள்ளன. அமெரிக்காவிடம் கையேந்தத் தேவை இல்லை என்பதுதான் உண்மை."

இது ஏற்றுக்கொள்ளமுடியாதது. தன்னிடம் எரிபொருளும் தொழில்நுட்பமும் இருந்தும் அமெரிக்காவுடன் யாராவது ஒப்பந்தம் செய்வார்களா?

இந்தக் குழப்பத்துக்குக் காரணம் யுரேனியம் என்ற சொல் ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தப்படுவதுதான்.

(அ) யுரேனியம் தாது - யுரேனியம் டயாக்ஸைட் என்ற உருவத்தில் கிடைப்பது.
(ஆ) யுரேனியம் தனிமம் - மேற்கண்ட தாதுவிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட யுரேனியம் தனிமம்
(இ) அணு உலையில் பயன்படுத்தக்கூடிய யுரேனியம் ஐசோடோப் - U 235 எனப்படுவது. இது ஒரு கிலோ யுரேனியம் தனிமத்தில் வெறும் 7 கிராம் மட்டுமே. மீதியெல்லாம் யுரேனியம் 238தான். இந்த யுரேனியம் 235ஐப் பிரித்தெடுக்கத்தான் செண்ட்ரிஃப்யூஜ் எனப்படும் கருவி தேவை. இந்தியாகூட இந்தக் கருவியை வெளிநாட்டு டிசைனிலிருந்து திருடியதாகச் சொல்லப்படுகிறது.

யுரேனியம் 235-ஐப் பிரித்தெடுப்பது அவ்வளவு எளிதான செயலல்ல.

உலகில் யுரேனிய தாதுவை அதிக அளவில் வெட்டியெடுக்கும் தலை பத்து நாடுகளில் இந்தியா காணவே காணோம்.

அடுத்து fast breeder reactor - வேக ஈனுலை. யுரேனியம் 238ஐப் போட்டு புளுட்டோனியம் 239ஐப் பெறும் விஷயம். இதில் இந்தியா ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளதே தவிர இன்றுவரை தைரியமாக இந்த FBR-களை வைத்துக்கொண்டு இதோ 1000 மெகாவாட் மின்சாரம் என்று சொல்லத்தக்க வகையில் ஒன்றுமே நடைபெறவில்லை. அப்படி நடக்கிறது என்றால் அந்நிய நாட்டிடம் போய் 'எனக்கு ஒரு கிலோ யுரேனியம் தாங்க' என்று நாம் ஏன் நிற்கிறோம்?

அதேபோலத்தான் தோரியமும். தோரியத்தை வைத்து லட்சம் மெகாவாட் மின்சாரம் என்றெல்லாம் இன்று யாராவது சொன்னால் அதைவிடப் பெரிய ஜோக் ஏதும் கிடையாது. இந்த ஆராய்ச்சிகள் முடிவடையப் பல காலம் பிடிக்கும். அதற்கும் ஏகப்பட்ட பணம் தேவை. அந்தப் பணத்தையும் முதலிட அரசைத் தடுக்கும் பல கட்சிகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

நமது FBR மற்றும் தோரிய ஆராய்ச்சிகள் இன்றுவரை உருப்படியாக மின்சாரத்தைத் தயாரிக்கும் எந்த உலையையும் நமக்குத் தரவில்லை என்பதை இந்திய அணு விஞ்ஞானிகளே ஒப்புக்கொள்வர்.

அதனால் இது நாளை நடக்கவே நடக்காது என்பதில்லை. நடந்தால் நமக்கு நல்லது.

-*-

முதலில் ஞாநி சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லவேண்டும்.

1. இந்தியா அணுசக்தியில் மின்சாரம் உருவாக்கவேண்டுமா, வேண்டாமா? வேண்டாம் என்றால் FBR, தோரியம், நம்மிடம் யுரேனியம் கொட்டிக்கிடக்கிறது என்பதெல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள்.

என் பதில்: அணு மின்சாரத்தை விட்டால் வேறு கதியில்லை நமக்கு.

2. அணு மின்சாரம் தேவை என்றாகிவிட்டால், அதை நம்மாலேயே தயாரித்துக்கொள்ள முடியாதா?

என் பதில்: இன்றைய நிலையில் - முடியாது. நமக்கு எரிபொருளும் வேண்டும். தொழில்நுட்பமும் வேண்டும். முதலீடும் வேண்டும். நிறைய வெளியிலிருந்து வரவேண்டும்.

3. அமெரிக்காவுடன் இந்த ஒப்பந்தம் தேவையா?

என் பதில்: இரண்டு வழிகள் உள்ளன.

(அ) இந்தியா அணுகுண்டு தயாரிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்து, தன்னிடம் உள்ள குண்டுகளை எல்லாம் அழித்து, IAEA-வுடன் ஜப்பான், தென் கொரியா போன்று ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளலாம். (பாகிஸ்தான், சீனா குண்டு வைத்திருக்குமே என்று கவலைப்படக்கூடாது.) அது நடந்தால் அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தமெல்லாம் தேவையில்லை. NSG-யுடன் நேரடியாக ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, தொடர்ந்து கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு, அணு உலைகளை வைத்துக்கொண்டு மின்சாரம் மட்டும்தான் தயாரிப்போம் என்று நியாயமாக நடந்துகொள்ளலாம்.

(ஆ) ஆனால் நாம் ஜப்பான், தென்கொரியா போல நடந்துகொள்ள விரும்பவில்லை. அடிப்படையில் அணுகுண்டை வைத்திருக்க விரும்புகிறோம். சீனாவும் பாகிஸ்தானும் அணுகுண்டை வைத்துக்கொண்டு நமக்குத் தொல்லைதரும் என்று நம்புகிறோம். எனவே NPT-யில் கையெழுத்திட நாம் விரும்பவில்லை. அதே சமயம் நமக்கு யுரேனியம், தொழில்நுட்பம் ஆகியவை வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் செய்துகொள்வது அவசியமாகிறது.

இந்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் பார்வையில் பார்த்தோமானால் பலருக்கும் அமெரிக்காமீது கோபம்தான். இன்று தி ஹிந்துவில் வில்லியம் பாட்டர், ஜயந்த தர்மபாலா எழுதியுள்ள கட்டுரையைப் பாருங்கள்.

-*-

என் முடிவான கருத்து, இப்பொழுது போடப்பட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் எந்தவகையிலும் இந்தியாவின் நலனுக்கு எதிரானதல்ல என்பதே.