Tuesday, December 26, 2006

சாகித்ய அகாதெமி விருது - 2006

தமிழில், 2006-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது, கவிஞர் மு.மேத்தாவுக்குக் கிடைத்துள்ளது.

(இது பின்னர் எழுதிச் சேர்க்கப்பட்டு, இந்தத் தேதியில் வருமாறு செய்யப்பட்டுள்ளது. எனது பதிவின் வசதிக்காக)

Tuesday, December 19, 2006

நியூ ஹொரைசன் மீடியா ஆங்கிலப் பதிப்பு

தமிழை அடுத்து ஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளியிடும் வேலையில் இறங்கியிருக்கிறோம். இதற்கென இரண்டு ஆங்கிலப் பதிப்புகள் (imprints) வரவுள்ளன.

ஓர் ஆங்கில இம்பிரிண்ட் முழுக்க முழுக்கப் புனைகதைகளுக்காக. இந்திய மொழிகளில் வெளியாகும் நாவல்கள், சிறுகதைகள், (ஓரளவுக்கு இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், சித்திரங்கள்) ஆகியவற்றை ஆங்கிலத்தில் கொண்டுவந்து இந்தியாவிலும் ஆங்கிலம் படிக்கும் பிற நாடுகளிலும் கிடைக்கச் செய்வது இந்தப் பதிப்பின் நோக்கம்.

முதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு. முதலாவதாக எடுத்துக்கொண்டிருப்பது அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ஆதவன் ஆகியோரது நாவல்கள் ஒன்றொன்று. இவை ஜனவரி மாதக் கடைசியில் வெளியாகும்.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குக் கொண்டுவரவேண்டிய நாவல்கள், சிறுகதைகள் என்று அவசியமாக நீங்கள் கருதும் புத்தகங்களைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் எனக்கு எழுதவும்.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றும்போது பல பிரச்னைகள் தெரியவந்தன. தமிழ் -> ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர்களும் நிறைய தேவைப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு ஒரு சிறு கருத்தரங்கை சென்ற வாரம் (13 டிசம்பர் 2006) ஏற்பாடு செய்திருந்தோம். இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் இருவரும் கலந்துகொண்டனர். சில மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும் கலந்துகொண்டனர்.


ஜெயகாந்தனும் இந்திரா பார்த்தசாரதியும்


மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.


கூட்டம்

மற்றொரு ஆங்கிலப் பதிப்பு கிழக்கு பதிப்பகம் போன்று ஆங்கிலத்தில் எளிமையான non-fiction புத்தகங்களை வெளியிடுவதற்காக. இவையும் கூடிய விரைவில் வெளியாகும்.

Saturday, December 16, 2006

ஒரிஸ்ஸா கோயிலில் தலித்கள்

எவ்வளவோ வருடங்கள் முன்னதாகவே தலித்கள் கோயிலுக்குள் நுழைய போராட்டங்கள் நடந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டத்தில் வகை செய்யப்பட்ட பின்னரும்கூட இப்பொழுது ஒரிஸ்ஸா மாநிலத்தில் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் - அதுவும் வெறும் 1,400 குடும்பங்கள் மட்டுமே உள்ள ஒரு கிராமத்தில் - பெரும் பிரச்னை எழுந்துள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள ஜகன்னாதர் கோயிலைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் தலித்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. நிச்சயம் பல கிராமங்களில் சட்டத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்பாடுகள் நடைமுறையில் இருக்கலாம். ஆனால் இப்பொழுது தலித்கள் வலுவான குழுவாகத் தங்களைக் கூட்டி, போராடத் தொடங்கியுள்ளனர்.

இந்தக் கோயிலில் சில தலித் பெண்களை நுழைய அனுமதிக்கவில்லை. இதையடுத்து தலித்கள் ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் போராடி கோயிலுக்குள் நுழைய அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் இது நீதிமன்றம் அளவுக்கே போயிருக்கக் கூடாது. தலித்கள் காவல்துறையில் புகார் செய்த உடனே காவல்துறையும் மாவட்ட நிர்வாகமுமே தலித்கள் கோயிலுக்குள் நுழைய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

இப்பொழுது உயர் நீதிமன்ற ஆணைக்குப் பிறகு கோயிலுக்குள் தலித்கள் நுழைந்ததால் கோயில் தீட்டாகிவிட்டது என்றும் பரிகாரம் செய்யவேண்டும் என்றும் உயர்சாதிக்காரர்கள் அடம் பிடிக்கிறார்கள்.

அப்படி ஏதாவது நடந்தாலும் நடக்காவிட்டாலும் தலித்கள் தினம் தினம் கோயிலுக்கு - பக்திக்காக இல்லாவிட்டாலும்கூட - போகவேண்டும். விருப்பமிருந்தால் பிறர் கோயிலுக்கு வரட்டும், இல்லாவிட்டால் ஒழியட்டும்.

தலித்கள் உள்ளே நுழைந்ததற்காக பரிகாரம் செய்ய கோயில் பூசாரிகள் முற்பட்டால் தலித்கள் வன்கொடுமைச் சட்டத்தின்படி (SC/ST (Prevention of Atrocities) Act, 1989) பூசாரிகளையும் கோயில் நிர்வாகத்தினரையும் தண்டிக்க முகாந்திரம் உண்டு.

இந்தச் சட்டத்தின் இரண்டு ஷரத்துகள் கவனிக்கப்படவேண்டியவை. யார் இந்த சட்டப்படி குற்றம் செய்கிறார் என்று சட்டம் இவ்வாறு சொல்கிறது:

3.1 (xiv) denies a member of a Scheduled Caste or a Scheduled Tribe any customary right of passage to a place of public resort or obstructs such member so as to prevent him from using or having access to a place of public resort to which other members of public or any section thereof have a right to use or access to

3.1 (x) intentionally insults or intimidates with intent to humiliate a member of a Scheduled Caste or a Scheduled Tribe in any place within public view

கோயிலுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது முதல் ஷரத்தின்படி குற்றம். உயர் நீதிமன்ற ஆணைக்குப்பின் அனுமதிக்கப்பட்டாலும் மேற்கொண்டு பரிகாரம் அது, இது என்று செய்தால் அது தலித்களை அவமதிப்பது என்ற வகையில் மேற்கோள் காட்டிய இரண்டாம் ஷரத்தின்படி குற்றம்.

ஒரிஸ்ஸா முதல்வர் நேரடியாகத் தலையிட்டு எந்தவிதமான எதிர்ப்பையும் அவரது நிர்வாகம் ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

Friday, December 15, 2006

பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர்

என் முந்தைய பதிவு: காஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம், பிப்ரவரி 05, 2006

காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தன் அதிகாரபூர்வ தரப்பை மாற்றிக்கொண்டுள்ளது. காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று தன் நாடு ஒருபோதும் சொன்னதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முஷாரஃப் NDTV-யில் காஷ்மீர் தொடர்பாக தான் நிறைய விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த நேரத்தில் இந்தியா உடனடியாக முஷாரஃப்புடன் தொடர்புகொண்டு, பேசி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும்.

முஷாரஃப் ஏற்கெனவே தன் திட்டத்தை விவரித்துள்ளார். பாகிஸ்தான் பக்கம் உள்ள நார்தர்ன் டெரிடரீஸ் பகுதியை இந்தியா மறந்துவிட வேண்டும். அதேபோல இந்தியா பகுதியில் உள்ள ஜம்மு, லடாக் பகுதியைத் தனி மாநிலமாகப் பிரித்து ஆர்டிகிள் 370 இல்லாத, பிற மாநிலங்களுக்கு ஒப்பான ஒரு பகுதியாக ஆக்கவேண்டும்.

மீதம் உள்ளது இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர், அக்ஸாய் சின் பகுதிகள்.

இதில் அக்ஸாய் சின், பாகிஸ்தான் ஏற்படுத்திய பிரச்னை என்றாலும்கூட, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னை அல்ல.

இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர் இரண்டுக்கும் அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் கொடுத்து இரண்டு பகுதிக்கும் இடையேயான போக்குவரத்தை அதிகப்படுத்தி ஒரு பத்தாண்டுக்குப் பிறகு என்ன நிலை என்று பார்க்கலாம்.

இரண்டு பக்கங்களிலும் என்னென்ன பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது?

* பாகிஸ்தான் பகுதியில் முஷாரஃப்புக்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டிய பிரச்னை குறைவாகவே இருப்பதால் அவர் ஓரளவுக்கு பிரச்னைகளை எதிர்கொண்டுவிடலாம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நன்றாகக் குறைய வாய்ப்பு உள்ளது.

தி ஹிந்து கட்டுரை

* இந்தியப் பகுதியில் பாஜக இதைக் கடுமையாக எதிர்க்கும். பாஜக, கம்யூனிஸ்டுகள் ஆதரவு இல்லாமல் எந்தவிதமான தீர்வும் வர முடியாது. மன்மோகன் சிங் உடனடியாக பாஜக, கம்யூனிஸ்ட் தலைமையுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும்.

* நேஷனல் கான்ஃபரன்ஸ், PDP இரண்டுமே இந்த முயற்சிக்கு கொஞ்சமாவது எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள். பின் வேறு வழியின்று ஏற்றுக்கொள்வார்கள்.

* ஹூரியத் அமைப்பு, பயங்கரவாதிகள் நிச்சயமாக எதிர்ப்பார்கள். பின்னவர்களை மிலிடரி வழியிலும் முன்னவர்களை ராஜரீக வழியிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

* ஜம்மு & காஷ்மீர் பொதுமக்கள் இந்த முயற்சியை வரவேற்பார்கள் என்றே நினைக்கிறேன்.

----

கிழக்கு பதிப்பகம் முஷாரஃப் எழுதியுள்ள 'In The Line of Fire' புத்தகத்தின் தமிழாக்கத்தை ஜனவரி மாதம் கொண்டுவருகிறது.

Thursday, December 07, 2006

சன் குழுமம் விரிவாக்கம்

சன் டிவி லிமிடெட் என்ற பெயரில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் சன் குழுமத்தின் தமிழ் மற்றும் மலையாளச் சானல்களை மட்டுமே உள்ளடக்கியது. தெலுங்கு, கன்னட சானல்கள் தனி நிறுவனங்களாக (Private) இருந்தன.

இப்பொழுது Udaya TV Pvt. Ltd., Gemini TV Pvt. Ltd. ஆகிய இரு நிறுவனங்களையும் Sun TV Ltd. என்னும் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தோடு இணைக்கப் போகிறார்கள்.

சன் டிவி லிமிடெட் லிஸ்ட் செய்யப்பட்டபோது 90% பங்குகள் மாறனிடத்திலும் 10% பங்குகள் (நிதிநிறுவனங்கள் சேர்த்து) பொதுமக்களிடமும் இருந்தன. ஜெமினி, உதயா நிறுவனங்களின் அனைத்துப் பங்குகளும் மாறன் + புரோமோட்டர்கள் கையில். ஜெமினி, உதயா நிறுவனங்களை இணைக்க, இவ்விரு நிறுவனங்களையும் சன் டிவியைப் போன்று 43% மதிப்புள்ளது என்று தீர்மானித்து பங்குகளை வழங்குகிறார்கள்.

நிறுவனங்கள் இணைந்தபிறகு சன் டிவி லிமிடெட் நிறுவனத்தில் புரோமோட்டர்கள் தவிர்த்து உள்ள பிறரது பங்கு 7%க்கு சற்று குறைவாக இருக்கும். மாறன் + புரோமோட்டர்கள் வசம் 93% பங்குகள் இருக்கும். புதிய நிறுவனத்தின் மார்க்கெட் கேபிடலைசேஷன் (இன்றைய பங்கு விலையை வைத்துப் பார்க்கும்போது) 13,840 கோடி ரூபாய்கள்.

Wednesday, November 29, 2006

சொர்ணம்மாள் விருதுகள்

மாஃபா எனும் மனிதவள நிறுவனத்தை நடத்தி வரும் பாண்டியராஜன், அவர் மனைவி லதா, உடன் பணியாற்றும் முஸ்தஃபா ஆகியோர் சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.

இந்த அறக்கட்டளை சென்னையில் ஒரு பள்ளியை நடத்துகிறது. பல மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழிகாட்டுகிறது. ஆண்டுதோறும் சென்னையைச் சேர்ந்த சிறந்த பத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 'எழுச்சி விருது' என்ற விருதினைக் கொடுக்கிறார்கள். அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பத்து மாணவர்களுக்கு 'இளம் சாதனையாளர் விருது' கொடுக்கிறார்கள்.

இளம் சாதனையாளர் விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக நான் இருந்தேன். விருது வழங்கும் விழா 25 நவம்பர் 2006, சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த விருதைப் பற்றி எந்த அளவுக்கு தமிழகம் முழுதும் தெரிந்திருந்தது என்று தெரியவில்லை. முந்நூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. கல்வித்துறை (எழுத்து, அறிவியல், கணிதம், பிற பாடங்கள்), விளையாட்டு, கலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சாதனை செய்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது அதிகபட்சம் 11-வதில் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதல் கட்டத்தில் விண்ணப்பங்களை சலித்து சுமார் 40 விண்ணப்பங்களை என்னிடம் கொடுத்திருந்தார்கள். அதிலிருந்து 10-ஐ நான் தேர்வு செய்ய வேண்டும்.

கல்வி, விளையாட்டு இரண்டு துறைகளிலும், துறைக்கு மூவர்; கலைத்துறையிலிருந்து நான்கு பேர் என்று தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன்.

சென்னையைச் சேர்ந்த பலருக்கு பல்வேறு துறைகளில் பரிமளிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பிற மாவட்டங்களில் இருந்து வரும் சிறுவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அதனால் பிற மாவட்ட மாணவர்களுக்கு எக்ஸ்ட்ரா வெயிட்டேஜ் கொடுப்பது என்று முடிவு செய்தேன். பெண்களுக்கு என்று தனி வெயிட்டேஜ் எதுவும் கொடுக்கவில்லை; ஆனால் கடைசித் தேர்வில் சொல்லிவைத்தாற்போல 5 ஆண், 5 பெண் என்று வந்தது.

உடல் குறைபாடு உள்ளோர்க்கு என்று தனியாகத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் விண்ணப்பங்களையும் சாதனைப்பட்டியலையும் பார்த்தபோது ஒரே ஒருவர்தான் அப்படிப்பட்ட பின்னணியில் விண்ணப்பித்திருந்தார். அவர் தன் சாதனையின் அடிப்படையிலே தானாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் 25 நவம்பர் அன்று நடந்த விழாவில் கவிஞர் கனிமொழியிடம் விருது பெற்றார்கள்.

-*-

ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் சொர்ணம்மாள் தினம் என்னும் இந்த விழாவில், நிறையக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பெரும்பாலும் சொர்ணம்மாள் அறக்கட்டளைப் பள்ளி மாணவர்களே கலை நிகழ்ச்சிகளைச் செய்தார்கள். ஆனால் ஒரு நிகழ்வு கூத்துப்பட்டறையின் ந.முத்துசாமி வடிவமைத்திருந்த 'துடும்பாட்டம்' ஆக இருந்தது.

துடும்பாட்டம் என்பது பலவித பறைகளைக் கொண்டு அடிக்கப்படும் ஒத்திசைவு ஆட்டம். மேட்டுப்பாளையத்துக்கு அருகே உள்ள ஓர் இடத்தில் தெலுங்கு பேசும் தலித் மக்களது பாரம்பரிய இசை ஆட்டம்.

சுமார் 8 பேர் என்று நினைக்கிறேன். அரை வட்டமாக நின்றுகொண்டு நான்கு விதமான வெவ்வேறு பறைகள், தப்பட்டைகளைக் கொண்டு அடித்தவாறும் அவ்வப்போது குதித்தவாறும் இருந்தனர். ஆட்டம் என்பது குறைவுதான். ஓசைதான் பிரதானம்.

-*-

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சுப்ரியா சாஹூ, ஐ.ஏ.எஸ் (இயக்குனர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்), வாசிமலை (தானம் அறக்கட்டளை), கவிஞர் கனிமொழி, டாக்டர் கலாநிதி ஆகியோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ்.

நிகழ்ச்சி பற்றிய பத்திரிகைச் செய்திகள்:
Young Achiever awards presented
சொர்ணம்மாள் அறக்கட்டளை 6-ம் ஆண்டு விழா

Tuesday, November 28, 2006

மாஞ்சா நூலில் சிக்கிய கழுகு

நேற்று காலை என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் சுற்றியிருந்த பட்டம் விடும் நூலில் ஒரு கழுகு மாட்டிக்கொண்டது.

ஞாயிறு அன்றே சில சிறுவர்கள் தெருவில் பட்டம் விட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். பட்டம் அறுந்து விட்டது. அது சாதாரண நூல் இல்லை, சிறு சிறு கண்ணாடித் துகள்கள் போட்டு உருவாக்கியிருக்கும் மாஞ்சா நூல் என்று பிற்பாடுதான் தெரிந்தது. கழுகு நல்ல பெரிய கழுகு. அது எப்படி வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்தது என்று தெரியவில்லை. அல்லது மேலிருந்தே நூலில் மாட்டிக்கொண்டு பறக்க முடியாமல் வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்திருக்கலாம்.

சாதாரணமாக அந்த வேப்ப மரத்தில் இரண்டு காக்கைகள்தான் உட்கார்ந்திருக்கும். அந்த இரண்டு காக்கைகளும் அதே வேப்பமரத்தில் கட்டியிருந்த கூட்டில் பிறந்தவை. எப்பொழுதும் அருகருகே உட்கார்ந்திருக்கும். பிற காக்கைகளைப் போல ஊர் சுற்றாது. அந்த மரத்தில் ஓடும் அணில்களைத் துரத்தும். பக்கத்து வீடுகளில் கிடைக்கும் உணவைச் சாப்பிடும். மீண்டும் மரத்தில் வந்து உட்காரும்.

ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் - கோடையில் - நிறைய கிளிகள் வரும். இப்பொழுது கிளிகள் கிடையாது.

கழுகு ஒருவேளை அணில் எதையாவது பிடிக்க வந்திருக்கலாம். ஆனால் தானே மாஞ்சா நூலில் மாட்டிக்கொண்டது. நூல் அதன் ஒருபக்க இறக்கையைச் சுற்றி அறுக்க ஆரம்பித்துவிட்டது. நிறைய ரத்த சேதம். அரை மயக்க நிலையில் கிடந்தது கழுகு.

கழுகைக் கண்டு பயந்தோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ பல காக்கைகள் அந்த இடத்தில் குழுமி சத்தம் போடத் தொடங்கின. சாதாரணமாக வேறு ஏதாவது ஒரு காக்கைக்குப் பிரச்னை என்றால்தான் பிற காக்கைகள் வந்து ஓலமிடும். ஆனால் கழுகைக் கண்டு ஏன் காக்கைகள் கூட்டம் கூடிச் சத்தம் போட்டன என்று தெரியவில்லை.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் பலரும் வந்து பார்த்தனர். எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தபோதுதான் மரத்தின் இலைகளுக்குப் பின்னே கழுகு ஒரு கிளையில் உட்கார்ந்திருந்தது தெரிய வந்தது.

தெருவில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் மரத்தில் ஏறி மயக்க நிலையில் இருந்த கழுகைக் கீழே கொண்டுவந்து ஒரு பெட்டியில் வைத்தனர். இன்னமும் உயிர் இருந்தது. ப்ளூ க்ராஸ் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டதில் அவர்கள் ப்ளூ க்ராஸ் வைல்ட்லைஃப் என்னும் பிரிவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். (வீட்டு மிருகங்களுக்குத் தனிப்பிரிவு, சுதந்தர மிருகங்களுக்குத் தனிப்பிரிவு.) இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு ஓர் ஆம்புலன்ஸ் வந்து கழுகை எடுத்துச் சென்றது.

கழுகு பிழைத்து விடும் என்று நினைக்கிறேன். அதனால் மீண்டும் பறக்க முடியுமா என்று தெரியவில்லை. ஓர் இறக்கையை அது இழக்க நேரிட்டாலும் நேரிடலாம். மீண்டும் போன் செய்து கழுகு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்!

நீங்கள் சென்னையில் இருந்தால், இதுபோன்று ஏதேனும் சுதந்தரமான பறவை/விலங்குக்குப் பிரச்னை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்:

Blue Cross Wildlife: 2220-0335

Friday, November 24, 2006

SC/ST கிரீமி லேயர் தொடர்பாக சட்டம் தேவையில்லை

நாகராஜ் வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கொடுத்த தீர்ப்பில் சொல்லப்பட்ட சில கருத்துகள் SC/ST பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் விலக்கு தேவைப்படும் என்று சொல்வதாகப் பலர் கருதினர். இதை அடுத்து பல அரசியல் கட்சிகளிடமிருந்தும் நீதிமன்றத்துக்கு எதிரான கண்டனங்களும் அவசரச் சட்டம் இயற்றவேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் மிலான் பானெர்ஜி, மேற்படி நாகராஜ் வழக்கின் தீர்ப்பில் SC/ST கிரீமி லேயர் பற்றி தீர்ப்பாக எதுவும் சொல்லவில்லை என்றும் ஏற்கெனவே ஒன்பது நீதிபதிகள் பெஞ்ச் கொடுத்த இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பில் SC/ST-க்கு கிரீமி லேயர் தேவையில்லை என்று சொல்லியிருந்ததால், ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அதற்கு மாற்றாக ஏதாவது சொல்லியிருந்தாலும் அது பொருந்தாது, என்றும் சொல்லியிருக்கிறார்.

இத்துடன் இந்த விவகாரம் இப்பொழுதைக்கு முற்றுப் பெறுகிறது.

இதைப்பற்றிய என் முந்தைய இரு பதிவுகள்:

SC/ST கிரீமி லேயர்
இட ஒதுக்கீடு - கிரீமி லேயர்

Wednesday, November 22, 2006

உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற கூட்டத்தின் ஒலித்துண்டுகளை சேர்த்துள்ளேன்.
  1. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி - ரெகார்ட் செய்யவில்லை
  2. மாலன், 13 MB, 28.28 min
  3. இரா.செழியன், 12 MB, 26.14 min (நிறைய எடிட் செய்துள்ளேன். நடுவில் நிறைய இடைவெளிகள். தண்ணீர் குடிப்பது, செய்தித்தாள் பக்கங்களைத் திருப்புவது, பேசியதையே திரும்பப் பேசுவது போன்றவற்றை வெட்டி விட்டேன்.)
  4. B.S.ராகவன், 8.15 MB, 17.48 min
  5. மாலன் தீர்மானம், 1.04 MB, 2.16 min

Monday, November 20, 2006

நுழைவுத் தேர்வின் எதிர்காலம்

தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடந்த ஆண்டு முயற்சி செய்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு அரசாணை அல்லது அவசரச் சட்டத்தை ரத்து செய்தது.

கருணாநிதி தலைமையில் புதிய அரசு பதவியேற்றதும் முனைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதனை விவாதித்த பின்னர், சென்ற வாரம் தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த அறிக்கையை முன்வைத்து நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்படும் என்று தெரிகிறது.

ஆனந்தகிருஷ்ணன் குழு பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைக் கேட்டிருந்தது. அவர்களுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலைக் கீழே தருகிறேன்.
Subject: Common Entrance Tests - Needed
Date: 10/August/2006

....

I believe the Common Entrance Tests (CET) must be continued for the sake of fairness and uniform evaluation of potential candidates. There are multiple educational boards and without a common test, it will be unfair to allocate seats to various students based only on their school marks.

However efforts should be undertaken to provide additional weightage for candidates from disadvantaged sections.

Tamil Nadu already follows reservation for SC/ST, BC and MBC categories. Across all these categories there still exist students who are disadvantaged such as rural - urban divide, economic background, social background etc.

For example, children supported by single mothers (widowed or destitute) should be given additional weightage. Girl children should be given additional weightage. Students from BPL families should be given additional weightage. Students from specific districts could be given additional weightage based on the prior performance of such districts. For example, districts such as Dharmapuri and Krishnagiri do not produce enough students who qualify for engineering or medical. So a push-up for them would help. Thus, a district index could be prepared and added to the weightage.

Similarly several such criteria could be selected and listed and public opinion sought. Based on the final findings additional points are allocated to students and added to their CET score and marks from the final examination.

In summary, I would suggest that CET be continued with, but additional points given to disadvantaged people based on criteria other than caste, and ensure that such reservations work within the existing quota for each category such as SC/ST/BC/MBC and open quota.

Badri Seshadri
Address

Thursday, November 16, 2006

தமிழக நூலகங்கள்

தேசிய நூலக வாரம் என்று ஏதோ ஒன்று கொண்டாடப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது 39வது ஆண்டாம். தமிழகத்தில் சென்னை கன்னிமரா நூலகத்தில் இது நடக்கிறது போலும்.

இந்த வாரம் நடக்கும் இந்த விழாவில் தினம் ஒரு பேச்சாளர் பேசுகிறார் என்று அறிகிறேன். இன்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன்.

செவ்வாய் அன்று விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக கிராமப்புறங்களில் மேலும் 262 நூலகங்கள் உருவாக்கப்பட உள்ளன என்றார். பல நூலகக் கட்டடங்கள் புதுப்பிக்கப் படுகின்றனவாம்.

நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்க அமைக்கப்படும் குழு விரைவில் முதல்வரால் அமைக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(இதுபோன்ற சிறு விஷயங்களில் ஒரு முதல்வர் ஈடுபடவேண்டுமா என்று புரியவில்லை. அமைச்சர் தங்கம் தென்னரசே இதைச் செய்யலாமே?)

செயலர் கணேசன் பேசும்போது சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார் - ஆனால் அதை அவர் குறிப்பிடத் தகுந்த இடம் இதுவா என்று புரியவில்லை.

விஷயம் 1: "The statistics that showed 5.27 crore persons visit the 3751 libraries in the State needed to be taken with a pinch of salt. Since most of these were repeat visits, the total number of visitors is probably a fifth of the number."

நூலகத் துறை என்பது உயர்கல்வித் துறையுடன் கூடவே வருகிறது. எனவே இந்தத் துறையின் செயலர் என்ன செய்ய வேண்டும்? புள்ளிவிவரங்கள் நமக்கு மிகவும் தேவையானவை. நாம் செய்யும் செலவு சரியாக அனைவரையும் போய்ச்சேருகிறதா என்பதைக் கண்காணிக்க இவை உதவும். பொது நூலகங்களை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க, தேவையான கணக்கெடுத்தல் முறையை நூலகங்கள் கொண்டுவரவேண்டும். ஒவ்வொரு பயனருக்கும் அடையாள அட்டை (உள்ளே வந்து சும்மா புத்தகத்தைப் புரட்ட வேண்டுமென்றாலும் அடையாள அட்டை வேண்டும் என்று வைக்க வேண்டும்) கொடுத்தால் அதுவே போதும்.

இதை வைத்து எத்தனை 'unique' வாசகர்கள் பொது நூலகங்களுக்கு வருகின்றனர் என்பதைக் கண்டறிந்துவிடலாம். அதைவிடுத்து guesswork செய்வது அவரது பதவிக்கு இழுக்கு.

விஷயம் 2: "There were more than 50 vacancies of librarians in government colleges, he said and urged the Government to take steps to improve facilities in libraries."

இதை தன் அமைச்சரிடம் அவர் நேரடியாகப் பேசவேண்டும். வெளியே நடக்கும் விழாவில், ஒரு துறையின் அமைச்சரும் செயலரும் பங்கெடுக்கும்போதா பேசுவது? இவர் என்னவோ நிர்வாகத்தின் வெளியே இருக்கும் ஒருவரைப் போல அல்லவா பேசுகிறார்?

-*-

நூலகத் துறைக்கு நிறையப் பணம் வருகிறது - ரியல் எஸ்டேட் வளர்ச்சியால் - என்று முன்னர் நான் எழுதியிருந்தேன். அந்தப் பணம் சரியான முறையில் இன்னமும் நூலகங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. அதை அமைச்சர் தங்கம் தென்னரசு போக்குவார் என்று எதிர்பார்ப்போம்!

மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்

உள்ளாட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் தேவை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிகூட இதைப் பற்றிப் பேசியதாக இரண்டு நாள்கள் முன்னர் வெளியான ஏதோ ஒரு செய்தியில் படித்ததுபோல ஞாபகம். ஆனால் நான் செய்தியைக் குறித்து வைத்துக்கொள்ள மறந்துவிட்டேன்.

ராமதாஸ், வெற்றிபெற்ற பாமக உறுப்பினர்களுக்கு பயிலரங்கம் நடத்தியுள்ளார். அந்தப் பயிலரங்கத்தில் ராமதாஸ் கூறிய சில கருத்துகள் முக்கியமானவை.

* உள்ளாட்சித் தலைவர்களை நேரடியாகத் தேர்தெடுப்பதற்கான சட்டத் திருத்தம் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட வேண்டும். (திமுக கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை ஏன் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தீர்கள், ராமதாஸ்? விவாதம் இல்லாது சில விஷயங்கள் நடைபெற்றால் விளைவுகள் மோசமாக ஆவது சகஜம்தானே?)

* அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களையே முழுமையாக போட்டியிட வைக்க வேண்டும். (இது கொஞ்சம் ஓவர் சார். 50% பெண்களுக்கு என்று இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம். அது போதும்.)

* அரசுக்கு சொந்தமான ஒரு தூசியைக்கூட வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. (வரவேற்கிறோம். பாமக உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொள்வது மட்டுமன்றி, தோழமைக் கட்சியோ, எதிர்க்கட்சியோ யாராவது இந்தத் தவறைச் செய்தால் அவர்களைக் காட்டிக்கொடுத்து சட்டப்படி நடவடிக்க எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.)

* உள்ளாட்சி மன்றங்களுக்கு கட்சி சார்பில் தேர்தல் நடத்தக் கூடாது. (ஏன் அய்யா அப்படிச் சொல்கிறீர்கள்? பல மிடில் கிளாஸ் 'படித்தவர்கள்' அப்படிச் சொல்கிறார்கள் ஏனோ ஆதங்கத்தால். கட்சிகள் நியாயமாகவும் ஒழுங்காகவும் இருந்தால் போதுமே. கட்சிச் சார்புடன் தேர்தல் நடப்பதில் தவறேதும் இல்லை.)

* தி ஹிந்துவில் இருந்து: "Disapproving of the way the local bodies' elections were held last month, Dr. Ramadoss said he had doubts whether the winners would serve the people, after having spent large sums of money." நேற்று B.S.ராகவன் பேசும்போது (அவரும் ராமதாஸ் கூட்டிய பயிலரங்கில் கலந்துகொண்டிருந்தார்) ராமதாஸ் "இப்பொழுது நடந்தது ஒரு தேர்தலா?" என்று ஆதங்கப்பட்டதாகச் சொன்னார். (சார், கொஞ்சம் சத்தமாக, வெளியே எல்லோரும் கேட்கும் வண்ணம் - முதல்வர் கருணாநிதி காதுபட - சொல்லுங்களேன்!)

ஆக, காங்கிரஸ் தவிர மீதி அனைவரும் இப்பொழுது உள்ளாட்சித் தேர்தலை முழுவதுமாக விமரிசித்து விட்டார்கள்.

தி ஹிந்து செய்தி | தினமணி செய்தி

Wednesday, November 15, 2006

உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம்

இது அவசரமான சுருக்கம். ஒலித்துண்டுகளை நாளை சேர்க்கிறேன்.

நான் சென்றபோது கூட்டம் தொடங்கியிருந்தது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பேசிக்கொண்டிருந்தார்; முடிக்கும் நேரம். "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?" என்று முடித்தார். முழுவதுமாகக் கேட்கவில்லை. ஆனால் என்ன சொல்லியிருந்திருப்பார் என்பது புரிந்தது. பின் மெதுவாகக் கைத்தடியை ஊன்றிக்கொண்டு வெளியேறிவிட்டார்.

[லட்சுமி கிருஷ்ணமூர்த்தி - வாசகர் வட்டம் என்ற அமைப்பை நிறுவி தமிழ் புத்தகங்கள் பதிப்பித்தவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மகள். இப்பொழுது 80 வயதுக்கு மேல் ஆகிறது.]

மாலன் அடுத்து பேசினார். பஞ்சாயத் ராஜ் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்ன சாதிக்க நினைத்தது என்பதை விளக்கமாகப் பேசிவிட்டு (Democracy, Decentralization, elimination of Discrimination, Development - 4Ds), எந்தவித விவாதமும் இல்லாமல் நகராட்சி, மாநகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் கூடாது என்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதிலிருந்தே பிரச்னை ஆரம்பமாகிவிட்டது என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் பணம் தண்ணீராகச் செலவு செய்யப்பட்டது, தேர்தலின்போது நடந்த வன்முறை, முறைகேடுகள் ஆகியவற்றைச் சாடினார்.

இரா.செழியன், வயது முதிர்ந்த காலத்திலும் உட்கார்ந்தவாறு பேசினார். வெவ்வேறு செய்தித்தாள்களிலிருந்து தேர்தல் வன்முறை தொடர்பாக வந்திருந்த செய்திகளைப் படித்தார். பின் எதிர்க்கட்சித் தலைவர்களது அறிக்கைகளிலிருந்து சில துண்டுகளைப் படித்தார். பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் திமுகவின் வன்முறையைச் சாடியிருப்பதைப் படித்தார்.

அத்துடன் மாநிலத் தேர்தல் ஆணையாளர், மாநில DGP, மாநகராட்சி காவல்துறை ஆணையர் ஆகியோர் ஒரு பிரச்னையும் இல்லை என்று அறிக்கை விட்டதையும் படித்தார். காவல்துறையைக் கடுமையாகச் சாடினார்.

ராகவன் மீண்டும் வந்து சில கருத்துகளை முன்வைத்தார். அவை

1. உள்ளாட்சித் தேர்தலும் மத்திய தேர்தல் ஆணையத்தின் பார்வையில்தான் நடக்க வேண்டும்
2. எங்காவது முறைகேடுகள் நடப்பதாகத் தகவல் வந்தால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்தப்படவேண்டும்.
3. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
4. வெளி மாநிலக் காவல்படை அல்லது பாராமிலிட்டரி படைகள் பயன்படுத்தப்பட வேண்டும். மாநிலக் காவல்படையை நம்புவதற்கில்லை.
5. வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிப்பாளர்கள் வரவேண்டும்.

மாலன் அடுத்து ஒரு தீர்மானத்தை முன்வைத்து, கூட்டம் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்று கேட்டார். தீர்மானம் பின்வருமாறு:
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நியாயமான முறையில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை, வன்முறை நடந்துள்ளது என்று பத்திரிகைகள் அனைத்தும் எழுதியுள்ளன. இந்தப் பத்திரிகைச் செய்திகளை முதன்நிலை அறிக்கையாக வைத்து தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்கப்பட வேண்டும். இந்த விசாரணைக் கமிஷன் மக்களிடம் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதை, கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆமோதித்தனர். அப்பொழுது பார்வையாளர் தரப்பில் முதல் வரிசையிலிருந்த இல.கணேசன் எழுந்து, விசாரணைக் கமிஷன் தீர்ப்பை முன்வைத்து தேர்தல் முறைகேடுகள் நடந்திருந்தால் சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சேர்த்துக்கொள்ளச் சொன்னார்.

பார்வையாளர்கள் பலதரப்பட்டனராக இருந்தனர். "மிடில் கிளாஸ் மைலாப்பூர் மாமாக்கள் கூட்டம்" என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மதிமுகவின் வைகோ, பாஜக இல.கணேசன் இருவரும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தனர். வைகோவின் தொண்டர்கள் பெரிய அளவில் இருந்தனர். வேறு சில அரசியல் தலைவர்களும் வந்திருந்தனர் என்று நினைக்கிறேன்.

-*-

மாநிலம் முழுவதும் நடந்த தேர்தல் மோசமானதா என்று தெரியவில்லை. ஆனால் மாநகராட்சித் தேர்தல் முழுப் பித்தலாட்டம் என்றே கருதுகிறேன். தேர்தலை ரத்து செய்துவிட்டு நியாயமான முறையில் மறுதேர்தல் என்ற ஒன்று நடைபெறாது என்றே கருதுகிறேன்.

மாநில தேர்தல் கமிஷனர் ஆளுங்கட்சியின் அடியாளாகவும், போலீஸ்துறை காந்தியின் குரங்குகள்போலவும் செயல்பட்டுள்ள நிலையில் மற்றொரு தேர்தல் நடந்தாலும் அதன்மீதும் யாரும் நம்பிக்கை வைக்க முடியாது. அதே சமயம், மாநிலத் தேர்தல் கமிஷனைக் கலைத்துவிட்டு மத்திய தேர்தல் கமிஷனின் தலைமையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் முடியாது - மாலன் சொன்னதுபோல அது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. (பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் மாநிலத் தேர்தல் கமிஷன் என்ற அமைப்புகளை உருவாக்கச் சொன்ன சட்டத் திருத்தம் தவறானது என்பது என் கருத்து. ஆனால் இப்பொழுதைய சட்டத்தை வைத்துப் பார்த்தால் மற்றொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவராமல் இதனைச் செய்ய முடியாது. மாநிலத் தேர்தல் கமிஷன்களை ரத்து செய்யுமாறு கொண்டுவரப்படும் எந்தச் சட்டத்தையும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சிகள் ஆதரிக்க மாட்டா!)

தேர்தலில் பணம் பாய்வதை இப்பொழுதைக்கு எந்த வழியிலும் கட்டுப்படுத்த முடியாது. எனவே அதைப்பற்றியோ, அல்லது மாநிலத் தேர்தல் ஆணையத்தை ஒழிப்பதைப் பற்றியோ பேசிப் பிரயோசனமில்லை.

எனவே இப்பொழுதைக்கு யதார்த்தமாக என்ன செய்யலாம் என்பதைப் பார்த்தால்:

1. மின்னணு வாக்குப் பதிவு... இதை அவசியமாக்க வேண்டும். அடுத்த ஒரு தேர்தல் வாக்குச்சீட்டில் இருக்கக் கூடாது.
2. மாநிலத் தேர்தல் ஆணையரது நியமனத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரலாம். இது ஒரு constitutional post. எனவே அனைத்துக் கட்சிகளும் ஏக மனதாக யாரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவரைத்தான் நியமிப்பது எனலாம். குறைந்தது எதிர்க்கட்சித் தலைவரது விருப்பம், குடியரசுத் தலைவரது விருப்பம் இரண்டும் தேவை எனலாம். அத்துடன் அவரது பதவிக் காலம் 6 வருடங்கள், 65 வயது வரை இருக்கலாம் என்று மாற்ற வேண்டும். (தற்போது 2 வருடம், 62 வயது வரை என்று உள்ளது.)
3. தேர்தல் கமிஷனரை நீக்கும் முறை மத்தியில் இருப்பது போல கடினமானதாக மாற்றப்பட வேண்டும்.
4. தேர்தலின்போது மாநில தேர்தல் கமிஷனருக்கு - மத்திய தேர்தல் கமிஷனுக்கு இருப்பது போல - முழுமையான அதிகாரம் இருக்குமாறு செய்ய வேண்டும்.

5. திமுக கொண்டுவந்த 'நகராட்சி/மாநகராட்சித் தலைவர் - நேரடித் தேர்தல் சட்டம் ரத்து' - அதனை வாபஸ் பெற வேண்டும்.

மேலே குறிப்பிட்டவற்றைச் செய்தாலே ஓரளவுக்கு தேர்தல் ஊழலைக் கட்டுப்படுத்தலாம்.

இது திமுகவுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு என்று பார்க்கவேண்டாம். இன்று திமுக செய்ததை நாளை அஇஅதிமுக இன்னமும் அதிகமாகச் செய்வார்கள். சென்ற முறை அஇஅதிமுக செய்ததைத்தான் இன்று திமுக பெரிய அளவில் செய்தார்கள்.

நமது உள்ளாட்சி ஜனநாயகம் வலுப்பெற வேண்டுமானால் இவை அனைத்தையும் உடனடியாகச் செய்யவேண்டும்.

இன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்

சில வாரங்களுக்கு முன்னர் மியூசிக் அகாடெமியில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி நடைபெறவிருந்த கூட்டம் நூதனமான முறையில் நடக்கவிடாமல் செய்யப்பட்டதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இன்று - 15 நவம்பர் 2006 - மாலை 6.30 மணி அளவில், சென்னை, மயிலாப்பூர், பாரதீய வித்யா பவனில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. B.S.ராகவன், இரா.செழியன், லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, மாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.

நான் அவசியம் செல்கிறேன். இந்தக் கூட்டத்தில் பேசுவதை ரெகார்ட் செய்ய உள்ளேன்.

Tuesday, November 14, 2006

பழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்

எழுத நினைத்து விட்டுப்போனவை சில. பிற்காலத்தில் உபயோகப்படும் என்பதால் சுருக்கமாக.

மதுரையில் செப்டம்பரில் நடந்த புத்தகக் கண்காட்சி வித்தியாசமான முயற்சி. இந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தைப் போல புத்தகக் கண்காட்சிகள் வேறெங்கும் நடைபெறுவதில்லை. கேரளாவில் அனைத்துப் பதிப்பாளர்களும் கலந்துகொள்வது போன்ற புத்தகக் கண்காட்சி ஏதும் கிடையாது. கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு நான்கைந்து இடங்களில் கண்காட்சிகள் நடந்தால் பெரிய விஷயம். பிற மாநிலங்களிலும் அப்படியே.

பல மாநிலங்களிலும் தலைநகரில் குறிப்பிடப்படும்படியான ஒரு கண்காட்சி இருக்கும். கொல்காதா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி... ஆனால் தலைநகருக்கு அடுத்த நிலையிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் பெரிதாக ஒன்றையும் நடத்தா. தமிழகத்திலோ பல நகரங்களில் உள்ளூர் ரோடரி, லயன்ஸ் கிளப், பிற சங்கங்கள் ஆகியவற்றின் முயற்சியால் புத்தகக் கண்காட்சி என்ற பெயரில் ஏதாவது ஒன்று நடைபெற்றுவிடும். நெய்வேலி, காரைக்குடி போன்ற இடங்களில் பெரிய தொழிற்சாலை, ஆராய்ச்சிச்சாலை ஆதரவில் புத்தகக் காட்சி நடைபெறும்.

தமிழகத்தில் சென்னையில் நடக்கும் கண்காட்சி மிக முக்கியமான ஒன்று. விற்பனையை வைத்துப் பார்த்தால் கொல்காதா, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது நிலையில் இருக்கும். (மும்பையில் பெரிதாக ஒன்றும் நடப்பதில்லை என்று அறிகிறேன்.) சென்னையில் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் (பபாஸி) நடத்தும் மாபெரும் நிகழ்ச்சி இந்தப் புத்தகக் கண்காட்சி; வரும் ஜனவரியில் 30-ம் வருடமாக நடக்க உள்ளது. ஆனால் சென்னையை அடுத்து சரியான முறையில் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் புத்தகக் காட்சிகள் நடப்பதில்லை.

மதுரையிலும் கோவையிலும் சென்ற ஆண்டு வரை புத்தகக் கண்காட்சி என்று ஒன்று நடந்ததே இல்லை. இந்த ஆண்டு கலெக்டர் உதயசந்திரன் தன் ஆர்வத்தால் மட்டுமே இந்தக் கண்காட்சி நடைபெறக் காரணமாக இருந்துள்ளார். பொதுவாக அதிக அளவு விலையுள்ள நுகர்பொருள்களை விற்கும் கண்காட்சியாக இருந்தால் Event Organization நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு களத்தில் இறங்கிவிடும். பார்க்கும் இடங்களிலெல்லாம் சாம்சுங், எல்ஜி, பெப்சி என்று போட்டி போட்டுக்கொண்டு ஸ்பான்சர்ஷிப் இருக்கும். கடைகளுக்கான வாடகை எக்கச்சக்கம். முழுவதும் குளிரூட்டப்பட்ட வளாகம். கூட்டமும் களைகட்டும்.

ஆனால் புத்தகக் கண்காட்சி நடத்துவது எளிதல்ல. பெரும்பான்மை பதிப்பாளர்கள் சின்னஞ்சிறு நிறுவனங்களை நடத்திவருகிறார்கள். செலவு செய்ய அஞ்சுபவர்கள். வருமானமும் குறைவு. ஆயிரக்கணக்கில் மக்கள் வந்தாலும் தமிழ்ப்புத்தகக் கடைகளில் சராசரியாகச் செய்யும் செலவு ரூ. 150 என்றுதான் இருக்கும். (ஆங்கிலத்தில் இந்தக் காசுக்கு ஒரு புத்தகம்கூடக் கிடைக்காது. தமிழில் தள்ளுபடி போக மூன்று புத்தகங்கள்வரை வாங்கலாம்!)

வாடகை குறைவாகத்தான் கிடைக்கும் என்பதால் Event Organizers-ஐ வைத்து நடத்தமுடியாது. தன்னார்வலர்களை வைத்துத்தான் நடத்த வேண்டும், அல்லது பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் சேர்ந்து நடத்தவேண்டும். மதுரை கலெக்டர், பபாஸியை வற்புறுத்தி மதுரை கண்காட்சியை நடத்த வைத்தார். கண்காட்சி வளாகத்தை வாங்கிக் கொடுப்பதிலிருந்து கண்காட்சிக்குத் தேவையான விளம்பரங்களை ஊர் முழுதும் செய்வது, கல்லூரிகளைத் திரட்டி கண்காட்சிக்கு வரவழைப்பது, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, குறும்படங்கள் காண்பிப்பது போன்ர பலவற்றையும் ஏற்றுக்கொண்டார். பபாஸி தாற்காலிக கட்டடத்தை எழுப்பி, பதிப்பாளர்களை வரவழைத்து, வாடகை வசூலித்து செலவு போக மீதத்தை வைத்துக்கொள்ளலாம்.

மதுரையில் முதன்முதலாக நடந்துள்ள புத்தகக் கண்காட்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்றுதான் சொல்வேன். தொடர்ச்சியாக அடுத்த சில வருடங்கள் நடந்தால் - அதுவும் இதே செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்களில் - பொதுமக்களின் ஈடுபாடும் அதிகரிக்கும். பபாஸி இப்பொழுதைக்கு வரும் ஆண்டுகளிலும் காட்சியைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்துள்ளது என்று நினைக்கிறேன். இப்பொழுதிருக்கும் கலெக்டர் தொடர்ந்தால் நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் அதிகமாக இருக்கும். வேறொருவர் பணிமாறினால் என்ன ஆகும் என்பதைச் சொல்ல முடியாது.

-*-

திருச்சியில் 20-வது வருடமாக, ரோட்டரி கிளப் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் உதவி ஏதும் கிடையாது. பபாஸியின் உதவியும் கிடையாது.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையைப் போல ரோட்டரி கிளப்பிடம் அதிகமாகத் தன்னார்வலர்களும் கிடையாது. இந்தக் குறைபாடுகளால் திருச்சி கண்காட்சி - நிறைய பொடென்ஷியல் இருந்தாலும் - சோபிப்பதில்லை. இந்த வருடம் அக்டோபரில் நடந்த கண்காட்சியில் மிகச் சில பதிப்பாளர்களே பங்குகொண்டனர். முதல் முறையாக செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் அரங்கு அமைத்திருந்தனர். இதற்கு முந்தைய வருடங்களில் தில்லை நகர் மக்கள் மன்றம் என்ற சிறிய இடத்தில் நடந்து வந்தது.

20 வருடங்களாக நடந்து வருவதால் திருச்சியில் அடுத்த சில வருடங்களிலும் இந்தக் கண்காட்சி தொடர்ந்து நடக்கும். ஆனால் கலெக்டர், பபாஸி ஆகியோரையும் சேர்த்து இழுக்காவிட்டால், பலன் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

பெங்களூரு புத்தகக் கண்காட்சி

நவம்பர் 18, 19 தேதிகளில் பெங்களூரில் இருக்கிறேன். சனி, ஞாயிறு இரண்டு நாள்களிலும் பெரும்பான்மை நேரம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் இருப்பேன். வலைப்பதிவு நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பிருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

[பெங்களூரு புத்தகக் கண்காட்சி 10-19 நவம்பர் 2006, பேலஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.]

Monday, November 13, 2006

சொந்த செலவில் சூனியம்!

எனக்கு இல்லைங்க. காங்கிரஸ் கூட்டணிக்குதான்.

சமீபத்தில் ஒரு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. பல தேர்தல் சாவடிகளில் மக்களை அனுமதிக்கவேயில்லை. சில இடங்களில் குண்டர்கள் துணையுடன் சக் சக்கென்று ஆளுங்கட்சிக் காரர்கள் வாக்குகளை ஒட்டுமொத்தமாகக் குத்திக் கலக்கினர். ஜனநாயக வாக்குரிமையை வேண்டிய வாக்காளர்கள் மிரட்டி அனுப்பப்பட்டனர்.

எதிர்க்கட்சிகள் அநியாயம், அக்கிரமம் என்று கதறின.

இப்பொழுது மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். மத்திய அரசு இதுபோன்ற அநியாயங்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்கிறார். அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையின்படி மாநில அரசை டிஸ்மிஸ் செய்வோம் என்கிறார்.

இல்லைங்க. தமிழ்நாட்டைப் பத்தி இல்லையாம். உத்தர பிரதேசத்தைப் பத்தி சொல்றாராம். அங்கயும் சென்னைல நடந்ததேதான் நடந்திருக்கு. ஆனா அங்க உதை வாங்கினது காங்கிரஸ்காரங்க. அதனால் மினிஸ்டருக்கு கோபம். தமிழ்நாட்டுல நம்ம மினிஸ்டரோட நண்பர்களுக்குத்தான நல்லது நடந்திருக்கு. அதனால் இங்க 'ஆட்சிக் கலைப்பு' மிரட்டல் வராது.

For the record: இதெல்லாம் வெத்து மிரட்டல். உத்தர பிரதேச ஆட்சியையோ அல்லது தமிழக ஆட்சியையோ உள்ளாட்சித் தேர்தல் குழப்படிகளை வைத்துக் கலைக்க முடியாது. உச்ச நீதிமன்றம் (bless them!) இதுபோன்ற abuse-களைத் தடுக்கும். அதனால் இந்த மிரட்டலையெல்லாம் ஏறக்கட்டி வைத்துவிட்டு தைரியமிருந்தால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாறுதலைக் கொண்டுவரட்டும் - மாநில தேர்தல் கமிஷன்களைக் கலைத்து இந்திய தேர்தல் கமிஷனிடம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் பணியைக் கொடுக்கலாம். அல்லது மாநில தேர்தல் கமிஷனர்களுக்கு நல்ல அதிகாரங்களைக் கொடுத்து நியாயமான முறையில் தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்ளலாம். முக்கியமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுவரவேண்டும்.

ஆதாரம்: தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்

Sunday, November 12, 2006

சட்டம் ஒழுங்கும் இந்தியர்களும்

இன்று தி ஹிந்து Open Page-ல் இந்தியர்களின் பொது இடங்களில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. கட்டுரையாளருடன் முழுதாக ஒத்துப்போகிறேன். முக்கியமாக ஒரு மேற்கோள்:
We Indians revel in breaking laid down rules and get very caustic and frustrated when prevented from doing so. Bring in any rule and within a very short time, ways would have been found to circumvent it. The same attitude can be seen all around us, whether it is driving, one way streets, red signals, railway gates, hunting, paying taxes or appearing in courts.
இவர் குறிப்பிட்ட விஷயங்களைவிட மோசமானது இப்பொழுது தில்லி முதல் சென்னை வரை நடந்துகொண்டிருக்கும் கட்டட ஊழல்.

சென்னையில் CMDA அனுமதி பெறாமல், அல்லது கட்டளையை மீறி பல மாடிக் கட்டடங்களை எழுப்புவது வாடிக்கையாகிவிட்டது. இதில் முன்னணியில் இருப்பது பெரிய பிராண்ட்களாக அறியப்பட்ட தி சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், GRT தங்க மாளிகை, இப்படி எத்தனை எத்தனை எத்தனையோ.

இதைத்தவிர, சர்வசாதாரணமாக CMDA அனுமதி கொடுத்த அளவுக்கு மேல் குறைந்தது ஒரு மாடியையாவது கட்டுவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்பதுபோலவே கட்டுமான நிறுவனங்கள் (புரோமோட்டர்கள்) நடந்துகொள்கிறார்கள்.

தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் சில மாடிகளை இடிப்பது இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து பிற கட்டடங்களும் இடிக்கப்படும் என்று நம்புவோம். ஆனால் விதிகளை, சட்டத்தை மீறிய கட்டடங்கள் தமிழகம் முழுவதும் சில லட்சங்களாவது இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓரிருவர் தவறு செய்தால் மாட்டிக்கொள்ளலாம் என்பதால், பெரும்பான்மையானவர்கள் ஒன்றுசேர்ந்து சட்டவிரோதத்தை மேற்கொள்கிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் தெருவில் திடீரென்று நடுவில் சென்று கடக்க ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வந்ததும் மக்களுக்கு தைரியம் வந்துவிடுகிறதல்லவா? அதைப்போல. அரசியல்வாதிகள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் கூட்டம் கூட்டமாக சட்டம் ஒழுங்கைக் காற்றில் பறக்க விடுவது இப்பொழுது அதிகரித்துள்ளது.

இதுதான் புது தில்லியில் இப்பொழுது நடந்து வருகிறது.

தில்லியில் பல பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக வணிக வளாகங்களாக மாற்றப்பட்டன. தில்லி மாநகராட்சி சட்டங்கள், மாஸ்டர் பிளான், பல்வேறு சுற்றுச் சூழல் சட்டங்கள் ஆகியவற்றுக்குப் புறம்பாக இவை நடைபெற்றன. ஒரு சிலருக்கு இந்தச் சட்டங்கள் பற்றித் தெரியாவிட்டாலும் பெரும்பாலானோர், அதிக வாடகைக்காக இந்தக் காரியத்தைச் செய்தனர். மக்கள் வசிப்பதற்கென்று சொல்லி திட்டத்தைக் கொடுத்து, அனுமதி பெற்று, அதன்பின் அங்கு வணிக நிறுவனத்தை நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.

இந்தக் கட்டடங்களில் கார் ஷோரூம் முதல் உணவகங்கள்வரை, அரசு அலுவலகங்கள் முதல் பல்வேறு தனியார் வணிக நிறுவனங்களின் அலுவலகங்கள், கடைகள் போன்ற பல இயங்கி வந்தன.

இதனை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் சிலர் தில்லி மாநகராட்சிக்கு பலமுறை புகார் கொடுத்தும் மாநகராட்சி புகார்களை அலட்சியப்படுத்தியது. லஞ்சப் பணம் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்று மாநகராட்சி ஊழியர்கள் விட்டிருக்கலாம். நிர்வாகச் சீர்குலைவுக்கு அடுத்த கட்டமாக மக்கள் நல அமைப்புகள் நீதிமன்றத்துக்குப் போகவேண்டி இருந்தது. தில்லி உயர் நீதிமன்றத்தை அடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

16 பிப்ரவரி 2006-ல் உச்ச நீதிமன்றம் இந்தப் பொதுநல வழக்கில் தீர்ப்பு ஒன்றைக் கொடுத்தது. அதன்படி, 30 நாள்களுக்குள் சட்டத்துக்குப் புறம்பாக வணிக நடவடிக்கைகளைச் செய்யும் நிறுவனங்கள் அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும். அவ்வாறு தாமாகவே செய்யாவிட்டால் தில்லி நகராட்சி அந்த வணிக இடங்களுக்கு சீல் வைக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 'வசிப்பவர் நலச் சங்கங்களின்' பிரதிநிதிகள் இந்த சீல் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பப்பட வேண்டும்.

நியாயமாக தில்லி அரசு என்ன செய்திருக்க வேண்டும்? மக்கள் பெருமளவில் தவறு செய்துள்ளனர்; அந்தத் தவறை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறு செய்யவேண்டியது நிர்வாகத்தின் பணி. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

எப்படி ஒரு மாதத்துக்குள் இந்த இடங்களில் உள்ள சட்டமீறிகளைத் துரத்துவது, இதனால் பலர் பாதிக்கப்படுவார்களே என்று தில்லி அரசு பயங்கொண்டது. இது நியாயமான பயம்தான் என்றாலும் இத்தனை வருடங்களாக சட்டத்தை மீறுபவர்களை ஊக்குவித்துவிட்டு இப்பொழுது என்ன செய்வது என்று தடுமாறுவது எந்த விதத்தில் நியாயம்?

29 மார்ச் 2006 முதல் சீல் வைப்பது தொடங்க வேண்டும். ஆனால் 24 மார்ச் 2006 அன்று வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உச்ச நீதிமன்றம் சீல் தொடங்கும் தினத்தை 30 ஜூன் 2006 வரை தள்ளி வைத்தது.

இந்த இடைவெளியை நியாயமான முறையில் பயன்படுத்திக்கொள்ள வணிகர்களும் தயாராக இல்லை; மக்கள் பிரதிநிதிகளும் தயாராக இல்லை. 28 மார்ச் 2006 அன்று தில்லி வளர்ச்சிக் குழுமம் (Delhi Development Authority - DDA) தில்லி மாஸ்டர் பிளானை மாற்றி அமைப்பதாக ஓர் ஆணையைக் கொண்டுவந்தது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கக் கேட்டுக்கொண்டது. உச்ச நீதிமன்றம் ஒரு மேற்பார்வைக் குழுவை நிறுவி மத்திய அரசை இந்த மேற்பார்வைக் குழுவிடம் முழு விவரங்களைச் சமர்பிக்கச் சொன்னது - 28 ஏப்ரல் 2006 அன்று.

மேற்பார்வைக் குழு அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டபின்னர் தன் அறிக்கையை 4 மே 2006 நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்தது. உச்ச நீதிமன்றம் அதைப் பற்றிய விவாதத்தைத் தொடங்குவதற்கு முன், 11 மே 2006 அன்று மத்திய அரசு தன் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

ஏன்?

ஏனெனில், நீதிமன்றம் வழியாக இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு பதில் தனக்கு இருக்கும் சட்டம் உருவாக்கும் அதிகாரத்தைக் கொண்டு மோசமான ஒரு சட்டத்தை உருவாக்கி மக்கள் சில சட்டங்களுக்குப் புறம்பாக நடந்துகொள்ளலாம் என்ற உரிமையைக் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. 12 மே 2006 அன்று மக்களவையிலும் 15 மே 2006 அன்று மாநிலங்கள் அவையிலும் Delhi Laws (Special Provision) Bill, 2006 தாக்கல் செய்யப்பட்டு, 19 மே 2006 அன்று குடியரசுத் தலைவர் அதில் கையெழுத்திட, அன்றே இது சட்டமானது.

மேற்படி சட்டத்தை ஆதரவாகக் கொண்டு, 20 மே 2006 அன்று மத்திய அரசு பிறப்பித்த கட்டளைப்படி, 1 ஜனவரி 2006க்குப் பிறகு தில்லியில் எந்தக் கட்டடத்தையாவது சீல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சொல்லியிருந்தால் அதை அடுத்த ஒரு வருடத்துக்குச் செயல்படுத்த வேண்டாம். ஏற்கெனவே ஏதேனும் கட்டடங்கள் சீல் செய்யப்பட்டிருந்தால் அதை நீக்கி மீண்டும் தன்னிஷ்டத்துக்கு மக்கள் நடந்து கொள்ளலாம். அடுத்த ஒரு வருடத்துக்கு!

அரசின் இந்தப் போக்கை எதிர்த்து 23 மே 2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

29 செப்டம்பர் 2006 அன்று கிடைத்த தீர்ப்பில், Delhi Laws (Special Provision) Act, 2006 சட்டப்படி செல்லுபடியாகுமா என்று சந்தேகம் உள்ளது என்றும் அதைத் தீர்மானிப்பதற்கு முன்னால் அந்தச் சட்டத்தின்படி யாரும் தப்பிக்க முடியாது என்றும், சீல் வைப்பது தொடரும் என்றும் முடிவானது. ஆனால் சீல் வைப்பது 31 அக்டோபருக்குப் பிறகு தொடங்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதற்குப் பின்னும் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி சீல் வைப்பதிலிருந்து நழுவ தில்லி நகராட்சி முயற்சி செய்தது. வணிகர்களும் பெரும் கூட்டமாக தகராறு செய்தனர். அரசியல் கட்சிகள் - பாஜக, காங்கிரஸ் - இரண்டும் வணிகர்களுக்கு ஆதரவு கொடுத்தது. பத்திரிகைகளைப் படிக்கும்போது என்னவோ நீதிமன்றம் கொடூரமாக நடந்துகொள்வது போல ஒருவருக்குத் தோன்றிவிடும். அரசு, தில்லி சட்டமன்றம், தில்லி மாநகராட்சி, வணிகர்கள் என்று அனைவருக்கும் எதிராகத் தீர்ப்பு சொல்லிய நீதிமன்றம் யாருக்கு ஆதரவாக இந்தத் தீர்ப்பைச் சொல்லியுள்ளது என்றே அனைவரும் சந்தேகம் கொள்வார்கள்.

ஆனால் வசிப்பவர் நலச் சங்கங்கள் ஒன்று சேர்ந்து, தங்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத்தான் இந்த வழக்கையே எழுப்பினர். அவர்களது உரிமைகளைத்தான் நீதிமன்றம் இப்பொழுது பாதுகாத்துள்ளது.

இங்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் வணிகர்கள் முதல் அரசு வரை அனைவருமே சட்டத்துக்குப் புறம்பாக பல விஷயங்கள் நடந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட சட்டம் பழமையானது, தவறானது, மாற்றப்பட வேண்டியது என்றுகூட இவர்கள் சொல்லவில்லை. சட்டம் தன் பாட்டுக்கு இருக்கட்டும், நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்வோம் என்ற வணிகர்களின் நடைமுறையும், அதற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் ஆதரவும்தான் நம்மை திகிலடையச் செய்கிறது.

இந்த சீல் வைப்பில் சிறு வணிகர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் நீதிமன்றம் நடந்துகொண்டுள்ளது. 200 சதுர அடிக்குள் இருக்கும் மளிகைக் கடைகள், பிற அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. பெரும் பெரும் கடைகளைத்தான் இப்பொழுது சீல் வைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

நவம்பர் 2006 சீல் வைப்பது துணை ராணுவ உதவியுடன் நடக்க ஆரம்பித்துள்ளது. இனியும் தப்பிக்க முடியாது என்ற நிலை வந்தபின்னர்தான் பலர் மீண்டும் தங்கள் இடங்களை வசிக்கும் இடங்களாக மாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர்.

-*-

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் இன்ன பிறர் இன்னமும் தெருவில் இறங்கி போராடவில்லை. தாங்கள் செய்தது முழுக்க முழுக்க நியாயம்தான் என்று இதுவரை சொல்லவில்லை.

ஒருவேளை நாளை இது நடந்தாலும் நடக்கலாம்.

-*-

இதற்கிடையில் இப்பொழுது ஒன்பதாம் அட்டவணை (நீதிமன்றங்களின் பார்வையிலிருந்து தப்பிக்கும் குறுக்கு வழி) தொடர்பான வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரையில் ஒன்பதாம் அட்டவணையில் Delhi Laws (Special Provision) Act, 2006-ஐ வைக்க முடிவு செய்யவில்லை என்று தெரிய வருகிறது. ஆனால் சொல்ல முடியாது... அடுத்து செய்தாலும் செய்யலாம்.

நாம்தான் சட்டத்தை மதிப்பவர்கள் கிடையாதே! மத்திய அரசு முதற்கொண்டு.

Tuesday, November 07, 2006

தமிழக நீதிமன்றங்களில் தமிழ்

தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக நீதிமன்றங்களில் தமிழிலேயே வழக்காடுதல் நடைபெற வேண்டும் என்று பேசியுள்ளாராம். இந்தப் பேச்சின் தமிழ் மேற்கோள் எனக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை. NDTV தளத்தில் கிடைத்த ஆங்கில ஆக்கம்:
"Let's strive to make Tamil the sole language in all court proceedings in Tamil Nadu," said Karunanidhi.
NDTV செய்தியில் கருணாநிதியின் கருத்தை பலரும் எதிர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில், முடிந்தவரை, எல்லாமே தமிழிலேயே நடைபெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தானே? கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் நடைமுறைகள் அத்தனையும் தமிழில் உடனடியாக வரவேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை. பொதுவாக "நீதிமன்றங்களில்" என்றுதான் சொல்லியுள்ளார்.

NDTV செய்தியில் உள்ளபடி, இப்பொழுதைக்கு அரசியல் அமைப்புச் சட்ட மாறுதல் இல்லாமல் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுதலைக் கொண்டுவரமுடியாது. எனக்கென்னவோ அது தேவையும் இல்லை என்று தோன்றுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தலைமை நீதிபதி எப்பொழுதுமே பிற மாநிலத்தவராகத்தான் இருப்பார். பிற மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழகத்துக்கு வேலைக்கு வரும்போது ஓரளவுக்காவது உடைந்த தமிழில் பேசுகிறார்கள். ஆனால் நீதித்துறை என்றால் எந்த மொழியில் நீதி வழங்குகிறார்களோ அந்த மொழியில் மிகப்பெரும் ஆளுமை தேவைப்படும். எனவே பிற மாநில நீதிபதிகள் தமிழகம் வரும்போது தமிழைக் கற்று அதில் புலமை பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

அதைப்போல உயர் நீதிமன்ற அளவில் பிற மாநிலங்களில் இருக்கும் பிரபல வழக்கறிஞர்கள் வந்து வழக்கை நடத்துகின்றனர். அரசுத் தரப்புக்காக வாதாடக்கூட ஹரீஷ் சால்வே, ராம் ஜேத்மலானி, அந்த்யார்ஜுனா, சோலி சொராப்ஜி என்று பெரும் பெரும் ஆள்கள் வருகிறார்கள். இவர்கள் தமிழில்தான் வாதாட வேண்டும் என்று தமிழக அரசு கேட்காது.

எனவே முதல்வரின் கூற்றை சரியான வழியில் பார்த்தால் நமக்குத் தோன்றுவது இதுதான்:

* மாநிலத்தில் உயர் நீதிமன்றம் தவிர்த்து பிற நீதிமன்றங்கள் அனைத்திலும் முழுக்க முழுக்க தமிழிலேயே வழக்காடுதல், நீதி வழங்குதல் ஆகியவை நடைபெற வேண்டும். இது நியாயமான கோரிக்கை. ஏனெனில் பொதுமக்களுக்குப் புரியாமல் வழக்கு நடப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதிலும் நீதித்துறை மொழி என்பது கடினமானது. ஒப்பந்தங்கள், சட்டங்கள் போன்றவை எழுதப்பட்டுள்ள விதமே புரிந்துகொள்ளக் கடினமானது. அதற்கு மேலாக வழக்காடுதலும் தீர்ப்பும் புரியாத மொழியில் இருந்தால் அதனால் மக்கள் மன உளைச்சலுக்குத்தான் ஆளாவார்கள்.

இப்பொழுது செஷன்ஸ், மாஜிஸ்டிரேட், முன்சீஃப் நீதிமன்றங்களில் தமிழ், ஆங்கிலம் என இரண்டும் கலந்துதான் நடைமுறை உள்ளது. தீர்ப்புகளில் சிலதான் தமிழில் வருகின்றன என்று நினைக்கிறேன். இந்தத் தீர்ப்புகள் அனைத்தும் தமிழிலும், வழக்காடுதல் முடிந்தவரை தமிழுலும் இருக்கவேண்டும்.

* உயர் நீதிமன்ற வழக்காடுதல் ஆங்கிலத்திலும், தீர்ப்புகள் வரும்போது அவை ஆங்கிலத்திலும், கூடவே தேவைப்பட்டால் தமிழ் மொழிபெயர்ப்பிலும் வழங்கப்படலாம். "தேவைப்பட்டால்" என்பதை வேண்டுமானால் மாற்றி "அவசியமாக" என்றும்கூடச் சொல்லலாம்.

அத்துடன் தமிழக முதல்வருக்கு நாம் வேறு சில யோசனைகளை முன்வைப்போம்.

1. தமிழக அரசின் அனைத்து இணையத்தளங்களையும் உருப்படியாகத் தமிழில் இருக்குமாறு செய்யலாம். இன்றும் முக்கால்வாசிக்கும் மேலான தளங்கள் ஆங்கிலத்தில்தாம் உள்ளன.

2. தமிழக அரசின் பல்வேறு நிர்வாகத் துறைகளும் வருடா வருடம் எழுதும் Policy Notes ஆங்கிலத்தில்தான் உள்ளது. தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழில் இல்லாவிட்டால் தமிழில் கட்டாயமாகக் கொண்டுவருவதற்கு வகை செய்யலாம்.

Monday, November 06, 2006

இந்தியாவில் அகதிகள்

இந்தியாவுக்கு வந்திருக்கும் நடிகையும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நல அமைப்பான UNHCR நல்லெண்ணத் தூதுவருமான ஏஞ்செலினா ஜோலீ இந்தியாவுக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்துள்ளார். [UNHCR Press Release | The Hindu News]

இந்தியா தன்னாட்டு மக்கள் நலனுக்கே நிறைய செய்யவேண்டிய நிலையிலும்கூட, வெளிநாட்டு அகதிகளை அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய அளவு செய்துள்ளதாக ஜோலீ கூறியுள்ளார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு நான்கு பெரும் இனக்குழுக்களாக அகதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். ஒன்று சீன ஆக்ரமிப்பிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த திபெத்தியர்கள். இந்தியா இன்றுவரை திபெத்திய அகதிகளுக்கு இடம் கொடுத்து வந்துள்ளது. எண்ணிக்கையில் இவர்கள் சில பத்தாயிரங்கள் இருப்பார்கள். பர்மா/மியான்மாரில் ராணுவம் ஆட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் பலர் இந்தியாவுக்குத் தப்பி வந்தனர். இவர்களும் கிட்டத்தட்ட 50,000க்கு மேல் இருப்பார்கள்.

1970-ல் வங்கதேச அகதிகள் லட்சக்கணக்கில் இந்தியாவுக்கு வந்தனர். இதுதான் இந்தியா சந்தித்த பெரும் நெருக்கடி என்று சொல்லலாம். அதையொட்டியே இந்தியா பாகிஸ்தானுடன் சண்டைக்குச் சென்றது. சண்டைக்குப் பிறகு வங்கதேசத்தவர் பலரும் புதிதாக உருவான வங்கதேசத்துக்குத் சென்றுவிட்டாலும் பலர் இந்தியாவில் தங்கிவிட்டனர். மேலும் பொதுவாகவே இன்றும்கூட வங்கதேசத்தவர் இந்தியாவுக்குள் ஊடுருவல் செய்வதாக இந்தியா புகார் செய்துவருகிறது. பாஜக, சிவசேனை போன்ற கட்சிகள் தில்லி, மும்பை போன்ற இடங்களில் வங்கதேச அகதிகள் இருப்பதாக பிரச்னை எழுப்பியுள்ளனர். இந்திய அரசு வங்கதேச அகதிகளை பிரச்னையாக மட்டுமே கருதுகிறது. அவர்கள் இன்றைய நிலையில் அரசியல் அகதிகள் அல்லர்; பொருளாதார அகதிகள் மட்டுமே. அசாம் பிரச்னை வலுத்ததற்கு வங்கதேச அகதிகள் பெரும் காரணம்.

நான்காவது பெரிய குழு என்றால் அது இலங்கையிலிருந்து தமிழகம் வந்த ஈழத்தமிழர்கள். தொடக்கத்தில் ஓரளவுக்கு இந்தியா இந்த அகதிகளுக்கு உதவிகள் செய்தாலும் இன்று தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் கொடுமையான வாழ்வு வாழவேண்டியுள்ளது.

இவர்கள் தனி கேம்ப்பில் அடைக்கப்படுகிறார்கள். அந்தப்பக்கம் ஏதாவது பெரிய மனிதர் - அப்துல் கலாம், மன்மோகன் சிங் ஆகியோர் - வரவேண்டி இருந்தால் அகதிகள் பாடு படு திண்டாட்டம். அகதிகளை எப்படியாவது - அவர்களது விருப்பத்துக்கு மாற்றாக - மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைப்பது என்று தீர்மானத்தில்தான் தமிழக அரசும் இதுவரை நடந்துகொண்டுள்ளது.

1951-ம் ஆண்டில் பல உலக நாடுகள் UNHCR convention ஒன்றில் கையெழுத்திட்டார்கள். இதன்படி பல உலக நாடுகள் அரசியல் அகதிகளுக்கு எவ்வகையான புகலிடம் தரவேண்டும், யாரை அரசியல் அகதிகள் என்று ஏற்றுக்கொள்வது போன்ற சில விஷயங்கள் முடிவு செய்யப்பட்டன. ஆனால் இந்தியா இன்றுவரை இதில் கையெழுத்திடவில்லை.

இந்தியா அகதிகளுக்கு என்று விசேஷமாக ஒன்றும் செய்வதில்லை. இந்தியாவில் ஏழைகள் பலர் இருக்கிறார்களே, அவர்கள்தான் முக்கியம் என்று கதையடித்துத் தப்ப முடியாது. இந்தியாவில் ஏழைகள் முக்கியம் என்று சொல்லி, விமான நிலையங்கள், ஆறு லேன் சாலைகள் போன்றவை கட்டப்படாமல் இல்லை. அகதிகள் பராமரிப்பு என்பது நாகரிகமான நாடுகள் செய்யவேண்டிய அடிப்படையான விஷயம்.

பர்மா, ஆஃப்கன், வங்கதேச, திபெத் அகதிகள் இந்தியாவில் சந்தோஷமாக இல்லை. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூடக் கிடையாது. ஆனால் இவர்கள் எல்லோரையும் விடப் பாவப்பட்டவர்கள் ஈழத்தமிழ் அகதிகள்.

உயிரைப் பணயம் வைத்து தோணியில் ஏறி வரும் மக்களுக்கு இந்தியா கொடுப்பது ஜெயில் தண்டனையைப் போன்ற ஒன்றுதான்.

ஏஞ்செலினா ஜோலி UNHCR அதிகாரிகளிடம் பேசி உண்மையைத் தெரிந்துகொள்ளட்டும். இந்திய மந்திரி ஆனந்த் ஷர்மாவும் வெட்கம் கெட்டு பாராட்டுகளைப் பெறுவதற்குப் பதில், தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளட்டும்.

===

அகதிகளுக்கு என்ன செய்யவேண்டும்?

1. அவர்கள் இந்தியா வந்த உடனேயே, அரசியல் காரணங்களுக்கான அகதி என்பதை உறுதி செய்துகொண்டு (பர்மா, இலங்கை அகதிகள் இன்றைய நிலையில் அரசியல் அகதிகள்தாம்!) அவர்கள் கண்ணியத்துடன் உயிர்வாழ சுகாதாரமான, வசதியான தாற்காலிக இடம் கொடுக்கப்பட வேண்டும். இந்த உதவித்தொகை, இடம் ஆகியவை 6 மாதங்கள் வரை கொடுக்கப்படலாம். அதற்குப்பின் அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ வழி காட்டவேண்டும்.

அப்படி அரசியல் அகதி இல்லை, பொருளாதார அகதி என்றால், மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடலாம்.

2. அனுமதிக்கப்பட்ட அகதிகளுக்கு 'diplomatic papers' - ஏதாவதோர் அடையாள அட்டை கொடுத்து, அவர்களுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி வழங்கி, எங்கு வேண்டுமானாலும் வேலை தேடிக்கொள்ள அனுமதி தர வேண்டும்.

3. எந்த மாநிலத்தில் அவர்கள் தங்கினாலும் ரேஷன் கார்டுகள் வழங்கி, குறைந்த விலையில் நியாய விலைக்கடைகளில் அவர்கள் பொருள்களைப் பெற அனுமதி வழங்க வேண்டும்.

4. இந்தியாவில் எந்த இடத்திலும் எந்தக் கல்விக்கூடத்திலும் அகதிக் குழந்தைகள் கல்வி பயில முழு உரிமை கொடுக்கவேண்டும்.

5. அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ வசதிகள் எவ்வாறு இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறதோ, அதேபோன்ற வசதிகள் அகதிகளுக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.

6. எந்த இடத்திலும் வீடு வாங்க, சொத்துகள் வாங்க உரிமை கொடுக்கவேண்டும். அவர்கள் சொத்துக்களை விற்கும்போது அந்தப் பணத்தை வேறு கரன்சிகளில் மாற்றி எடுத்துச் செல்ல அனுமதி தரவேண்டும்.

7. பிற நாடுகளுக்குப் பயணம் செய்ய அவர்களுக்கு முழு உரிமை கொடுக்கப்படவேண்டும்.

8. முக்கியமாக "usual suspects" என்று சொல்லி எதற்கெடுத்தாலும் அவர்களை ஜெயிலுக்குக் கொண்டுபோய் விசாரணை செய்வது போன்ற அபத்தமான, அபாண்டமான செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும்.

9. 1951 ஐ.நா கன்வென்ஷனில் கையெழுத்திட வேண்டும்.

அதற்குப்பின் ஏஞ்செலினா ஜோலீயைக் கூப்பிட்டு விழா எடுக்கட்டும்.

Thursday, November 02, 2006

சென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்

சென்ற பதிவு ஒன்றில் கூட்டம் நடத்த எந்த மாதிரியான அனுமதி வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தேன். இன்று தினமணியில் வெளியான கருத்துப் பத்தியில் இரா.செழியன் சில விவரங்கள் தருகிறார். ஆனால் தகவல் முழுமையாக இல்லை. அவரது கட்டுரையிலிருந்து சில தகவல்கள் இங்கே.

* கூட்டங்கள் நடத்துவதை அனுமதிக்கவும் தடுப்பதற்குமான அதிகாரம் சென்னைப் போலீஸ் சட்டம் 1888-ன் கீழ் சென்னைப் போலீஸ் கமிஷனருக்குத் தரப்பட்டிருக்கிறது. அதன்படி கூட்டத்தை நடத்த முற்படுபவர் தருகிற மனுவை ஆராய்ந்து, கூட்டத்தை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் போலீஸ் ஆணையர் அனுமதி வழங்கலாம், அல்லது வழங்காமல் போகலாம்.

* அனுமதி வழங்காத நிலையில் ... கூட்டம் நடத்துபவருக்கு வாய்ப்பளித்து நேரிடையாக அவரோ அல்லது அவரது வழக்குரைஞரோ கூட்டம் நடத்துவதற்கு உள்ள தமது வாதங்களை முன்வைக்கலாம்.

* அதன்பிறகும் அனுமதி வழங்கமுடியாது என்று போலீஸ் கமிஷனர் முடிவெடுத்தால் அனுமதி வழங்காததற்கான காரணங்களை எழுத்து மூலம் காட்டி, அனுமதி வழங்க மறுக்கும் உத்தரவைத் தரலாம்.

* கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வரவில்லை என்றால் 'தடையில்லை' என்று நினைத்து கூட்டத்தை நடத்தக்கூடாது. போலீஸ் சட்டம் 6-வது விதிமுறையில் உள்ள எச்சரிக்கையின்படி, அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தினால் ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது ஒரு மாதம் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து - என்ற தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

Monday, October 30, 2006

வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு

இன்று மாலை 6.00 மணி அளவில் சென்னை, வாலாஜா சாலை, கலைவாணர் அரங்கில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஏற்பாடு செய்துள்ள வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு நடக்க உள்ளது. முனைவர் பிரபாத் பட்னாயக் - "The State Under Neo-Liberalism" ("புதிய தாராளவாதத்தின் பிடியில் அரசு") என்ற தலைப்பில் பேச உள்ளார்.

Sunday, October 29, 2006

வங்கதேச அரசியல் குழப்பம்

நம் அண்டைநாடான வங்கதேசம் (பங்களாதேஷ்) இப்பொழுது மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலையில் உள்ளது.

தமிழக அரசியலில் எப்படி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆகாதோ அதைவிட மோசமான அரசியல் உறவு வங்கதேசத்தின் முக்கியமான கட்சிகளின் தலைவர்களான பேகம் காலீதா ஜியா, ஷேக் ஹசீனா ஆகியோரிடையே உள்ளது.

1971-ல் வங்கதேசம் உருவான பிறகு தலைவராக - முதலில் பிரதமராக, பின் அதிபராக - இருந்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவரும் இவரது குடும்பத்தோரும் சில வருடங்கள் கழித்து ராணுவப் புரட்சியின்போது கொல்லப்பட்டனர். இவரது குடும்பத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் இவரது மகள்களான ஹசீனா, ரெஹானா ஆகியோர். இந்த ஹசீனாதான் முஜிபுர் ரெஹ்மானின் கட்சியான அவாமி லீகின் தலைவர்.

முஜிபுர் ரெஹ்மான் கொலைக்குப் பிறகு சிலர் கைகளில் ஆட்சி சில நாள்கள் இருந்தாலும் சீக்கிரமே ராணுவ ஜெனரலான ஜியா-உர்-ரெஹ்மான் கைக்குக் வந்துவிட்டது. ஜியா நேரடியாக முஜிபின் கொலைக்குக் காரணம் என்று திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும், தான் பதவிக்கு வந்தவுடன் முஜிபின் கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கிவிட்டார். இந்த ஜியாவின் மனைவிதான் பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் கட்சியின் தற்போதைய தலைவர் காலீதா ஜியா.

ஷேக் ஹசீனா, காலீதா ஜியா இருவருக்கிடையேயான வெறுப்பு எப்படிப்பட்டது என்பதை இப்பொழுது உங்களால் புரிந்துகொள்ளமுடியும்!

ஜெனரல் ஜியா பதவியில் இருந்தபோதே மற்றொரு ராணுவப் புரட்சியில் கொலை செய்யப்பட்டார். அதை அடுத்து கொஞ்ச நாள்கள் பல்வேறு சிவிலியன், மிலிடரி ஆசாமிகள் பதவியில் இருந்தாலும் சீக்கிரமே பதவியைக் கைப்பற்றினார் மற்றொரு ராணுவ ஜெனரலான எர்ஷாத். 1990-ல் ஏற்பட்ட மக்கள்/மாணவர் புரட்சியில் எர்ஷாத் தூக்கி எறியப்பட்டார்.

அப்பொழுதுதான் தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டம், குடியாட்சி முறை ஆகியவை அமலுக்கு வந்தன. அதனையடுத்து இதுவரை மூன்று முறை தேர்தல்கள் நடந்துள்ளன. இரண்டு முறைகள் காலீதா ஜியாவும், ஒருமுறை ஷேக் ஹசீனாவும் - கருணாநிதி, ஜெயலலிதா போல - மாறி மாறி பிரதமராக இருந்துள்ளனர். கடைசியாக ஆட்சியில் இருந்தவர் காலீதா ஜியா.

இந்தியா போலவே, மேற்படி அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் வங்கதேசத்தில் பிரதமருக்குத்தான் முழு அதிகாரமும். குடியரசுத் தலைவர் டம்மிதான். ஆனால் இந்தியாவில் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதுபோல வங்கதேச தேர்தல் ஆணையம்மீது கட்சிகளுக்கு முழு நம்பிக்கை கிடையாது. அதனால்தான் அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒரு வழி உள்ளது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் ஆட்சி முடியும்போது நடுநிலையான ஒருவரை காபந்து ஆலோசகராக நியமிப்பார்கள். இவரது தலைமையில் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும். வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைத்ததும் இந்த நடுநிலையாளர் பதவியைக் காலி செய்துவிடுவார்.

இப்படிப்பட்ட நடுநிலையாளர் ஒருவர்தான் நியாயமான முறையில் தேர்தலை நடத்தக்கூடியவர் என்று கட்சிகள் நினைக்கின்றன. பொதுவாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவரை இந்தப் பொறுப்பில் அமர்த்திவிடுவார்கள். ஆனால், கடந்த இரண்டு முறைகளைப் போல் அல்லாமல் இந்தமுறை இந்த நடுநிலையாளர் விஷயத்திலேயே பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.எம்.ஹஸன் என்பவரை ஆளும் கட்சி BNP ஆலோசகராக நியமிக்க விரும்பியது. ஆனால் அவர் BNP ஆள் என்று சொல்லி, அவாமி லீக் அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

தன் மீதான அவநம்பிக்கையால் வெறுத்துப்போன ஹஸன், தனக்கு உடம்பு சரியில்லை என்று ஆலோசகர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அடுத்த இரண்டு முந்தைய நீதிபதிகளை அவாமி லீக் வலியுறுத்த அவர்களை ஏற்றுக்கொள்ள BNP மறுத்தது. தற்போதைய குடியரசுத் தலைவரான இயாஜுதீன் அஹமதையே ஆலோசகர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வைக்கலாம் என்று BNP யோசனை கூறியது. ஆனால் அவாமி லீக் அதனை ஏற்க மறுத்தது - ஏனெனில் இயாஜுதீன் அஹமது BNP கட்சியில் இருந்தவர், அந்த வழியில்தான் அவர் குடியரசுத் தலைவராகப் பதவிக்கு வந்தார்.

கடந்த சில தினங்களாக முக்கிய கட்சிகள் இரண்டும் தெருவில் இறங்கி அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் இறந்துள்ளனர்.

கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி குடியரசுத் தலைவர் இயாஜுதீன் அஹமத் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தானே ஆலோசகராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அதாவது இப்பொழுதைக்கு குடியரசுத் தலைவரும் அவரே. கேர்டேக்கர் பிரதமரும் அவரே. இது அரசியல் சட்டப்படி செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை.

இதை நிச்சயம் அவாமி லீக் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனை எதிர்த்து அவர்கள் தெருவில் இறங்கிப் போராடினால் பதிலுக்கு இயாஜுதீன் ராணுவத்தையும் காவலதுறையையும் ஏவிவிடலாம். விளைவு பல ஆயிரம் உயிர்கள் காலியாகும்.

பொதுவாக பொதுத்தேர்தல் என்றால் வங்கதேசத்தில் 2000 பேர்கள் வரை உயிரிழப்பார்கள்.

இம்முறை என்ன ஆகப்போகிறதோ!

முகமது யூனுஸுக்கு நோபல் பரிசு கிடைத்ததால் மகிழ்ந்திருக்கும் வங்கதேச மக்கள், அரசியல் ரீதியில் தம் நாட்டுக்கு எப்பொழுதுதான் முதிர்ச்சி கிட்டப்போகிறதோ என்று குழம்பிக் போயிருக்கிறார்கள்.

SC/ST கிரீமி லேயர்

நேற்றைய 'தி ஹிந்து' கருத்துப் பத்தியில் கே.வி.விஸ்வநாதன் என்னும் தில்லி வழக்கறிஞர், நாகராஜ் வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் 19 அக்டோபர் கொடுத்த தீர்ப்பில் SC/ST பிரிவினருக்குக் கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் விலக்கு இருக்க வேண்டும் என்று கருத்து சொல்லவில்லை என்று விளக்குகிறார்.
A close reading of the judgment shows that the expression "creamy layer" was used while interpreting Article 16(4), 16(4A), and 16(4B) compendiously and in the process of laying down limitations on the amending power of Parliament in the context of social reservations. The expression used in the judgment in the Nagaraj case is confined to Other Backward Classes (OBCs) and it is not in the context of SCs and STs. It should not be forgotten that the court was interpreting Article 16(4) and 16(4B) as much as it was interpreting 16(4A). The first two apply to OBCs also.

The issue of excluding the creamy layer among SCs and STs did not arise for consideration. That issue was already settled in 1992 by a larger bench of nine judges (Indra Sawhney versus Union of India — the `Mandal case,' AIR 1993 SC 447) and also in 2004 by a co-ordinate bench of five judges (E.V. Chinnaiah versus State of Andhra Pradesh and Others, AIR 2005 SC 162) by holding that the concept of creamy layer had no application to SCs and STs. The October 19, 2006 judgment in the Nagaraj case by five judges could not and, in fact, does not derogate from these earlier pronouncements.
நாகராஜ் வழக்கு தீர்ப்பு பற்றிய என் பதிவு. அதில் நான் என்ன சொல்லியிருந்தேன் என்று கொஞ்சம் மேற்கோள்:
இந்த வழக்கின் நோக்கமே மத்திய அரசு கொண்டுவந்திருந்த சில சட்டத்திருத்தங்கள் செல்லுபடியாகுமா ஆகாதா என்பதைக் கண்டறிவது. இதில் மத்திய அரசுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வந்துள்ளது.

ஆனால் இதுநாள்வரையில் நடைமுறையில் SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் தவிர்ப்பு என்ற ஒன்று இருந்ததில்லை. 19 அக்டோபர் 2006 தீர்ப்பு இதைப் புதிதாகப் புகுத்தவும் இல்லை. ஆனால் இனி யாரேனும் வழக்கு தொடர்ந்தால், இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பு (1992), நாகராஜ் வழக்கின் தீர்ப்பு (19 அக்டோபர் 2006) ஆகியவற்றை வைத்து கிரீமி லேயர் SC/ST பிரிவினருக்கும் செயல்படுத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வருவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
விஸ்வநாதன் மேற்கோள் காட்டியிருந்த சின்னையா வழக்கின் தீர்ப்பைப் படித்துப் பார்த்தேன். அந்தத் தீர்ப்பு SC பிரிவை மேலும் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்கக்கூடாது என்றுதான் வலியுறுத்துகிறது.

ஆந்திரா அரசு SC பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அனைத்து SC சாதியினருக்கும் சமமாகப் போய்ச்சேரவேண்டும் என்ற கருத்தில் SC சாதிகளை நான்காகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் இத்தனை இத்தனை என்று உள் ஒதுக்கீடு செய்திருந்தது. அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பாக ஆந்திர அரசின் சட்டம் செல்லுபடியாகாது, SC பிரிவினர் பலவேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒரே குழுவாக மட்டுமே கருதக்கூடியவர்கள், அந்த சாதியினருக்குள் பல குழுக்களைப் பிரிக்கக்கூடாது, அவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது, அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனப்பட்டது.

ஆனால் கிரீமி லேயர் SC பிரிவினருக்குத் தேவையில்லை என்று வெளிப்படையாக சின்னையா வழக்கின் தீர்ப்போ, இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்போ சொல்வதாகத் தெரியவில்லை. அதே சமயம் நாகராஜ் வழக்கும்கூட SC பிரிவினருக்கு கிரீமி லேயர் அவசியம் தேவை என்றும் சொல்லவில்லை.

எனவே இப்பொழுதைய நிலையில் அரசு SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் ஏதும் இல்லாமல் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி வரலாம். நாளை ஏதேனும் வழக்குகள் தொடுக்கப்பட்டால் அப்பொழுது எதிர்வினை ஆற்றலாம் என்று நினைக்கிறேன்.

Saturday, October 28, 2006

தேர்தல் அலசல் பற்றிய கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக Rajaji Centre for Public Affairs என்ற அமைப்பு 24 அக்டோபர், செவ்வாய்க்கிழமை அன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ராஜாஜி மையத்தின் தலைவராக இருப்பவர் B.S.ராகவன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, 80 வயதுக்கு மேற்பட்டவர். இன்னமும் ஆர்வமுடன் குடிமைச் சமூக மேம்பாட்டுக்காக தமிழகம் முழுவதும் சென்று பேசுவது, தி ஹிந்து, பிசினஸ் லைன் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதுவது என்று இருப்பவர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருந்தவர்கள் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, முன்னாள் தமிழக காவல்துறை தலைமை ஆணையர் (Director General of Police) வி.ஆர்.லட்சுமிநாராயணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் ஆகியோர்.

செவ்வாய்க்கிழமை மியூசிக் அகாடெமி அரங்கில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு நானும் செல்வதாக இருந்தேன். ஆனால் அன்று இருந்த வேலை நெருக்கடியால் போகமுடியவில்லை. புதன் தினமணியில் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததைக் கண்டித்து வைகோ ஓர் அறிக்கை விட்டிருந்தார்.
மண்டபங்களில் நடைபெறும் இப்படிப்பட்ட சிறப்புக் கூட்டங்களுக்கு வழக்கமாக காவல்துறை அனுமதி மறுக்கப்படுவது இல்லை.

...

விமர்சனங்களைச் சகிக்கும் மனநிலையை அடியோடு முதல் அமைச்சர் இழந்துவிட்டதால்தான், புதன்கிழமை பிரசுரமாக உள்ள முரசொலி உடன்பிறப்பு மடலில், நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பற்றி ராஜாஜி மையத்தின் சார்பில் நடத்த அர்ச்சனை ஒத்திகையுடன் தயாராகும் தினமணி கூட்டத்து நண்பர்கள் என்று ஏளனம் புரிந்து எழுதி, ஏடுகளுக்கும் அனுப்பி உள்ளார்.
ஏன் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் அன்றே தினமணி இணைய இதழில் காவல்துறை தரப்பிலிருந்து மறுப்பு அறிக்கை ஒன்று இருந்தது.
மழை மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ராஜாஜி பொது விவகார மையத்தினர் ரத்து செய்தனர். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதால்தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் உண்மைக்குப் பிறம்பானதாகும். இக்கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுக்கவில்லை.
சரி, வைகோ ஏதோ அரசியல் செய்கிறார், நாம் இதைப்பற்றி ஏன் எழுதவேண்டும் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் வியாழன் அன்று 'தி ஹிந்து'வில் வந்த செய்தியில் இரா.செழியன் 'அனுமதி மறுப்பை'க் கண்டித்துப் பேசியது வந்திருந்தது.
In his statement issued on Wednesday, Mr. Sezhian said that it was unfortunate that the police had refused permission though it was not required for hall meetings in Chennai. According to him, on the day before the meeting, the police told the organisers that the meeting would be allowed only if they had police permission; the organisers gave the application to the local police station as per the direction of the City Police Commissionerate; but even by Tuesday noon police permission was not forthcoming. As the organisers did not want to conduct the meeting and give room for any law and order problem they announced the cancellation of the meeting, Mr.Sezhian added.
இன்று இட்லிவடை பதிவில் ஜூனியர் விகடன் சோவுடன் நடத்திய பேட்டி வந்துள்ளது. அதிலிருந்து முக்கியமாக இரு மேற்கோள்கள்:
ஜூ.வி: நீங்கள் பேசவிருந்த கூட்டத்தை போலீஸ் ரத்து செய்ததன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?

சோ: ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அதிகார துஷ்பிரயோகத்தின் வெளிப்பாடுதான். அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசவிருந்த சப்ஜெக்ட் 'தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்' என்பது. ஒருவேளை இந்த அரசாங்கத்தைப் பற்றியும், அண்மையில் சென்னை மாநகரில் நடந்து முடிந்த கேலிக்கூத்தான தேர்தல் முறையைப் பற்றியும் நாங்கள் கடுமையாகப் பேசக்கூடும் என்று நினைத்து அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதி மறுத்திருக்கலாம். 'கூட்டத்துக்கு முறையான அனுமதி பெறவில்லை. குறைந்த கால அவகாசத்தில் அனுமதி கேட்கப்பட்டதால் தர முடியவில்லை' என்று போலீஸ் அதற்குக் காரணங்கள் சொல்லலாம். ஆனால் குறைந்த கால அவகாசத்தில் எத்தனையோ கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் போலீஸ் அனுமதி கொடுத்திருக்கிறது.
தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் துரைராஜ் கொடுத்த பதில்:
அந்தக் கூட்டம் ரத்தானதுக்கு எந்த வகையிலும் காவல்துறை பொறுப்பில்லை என்பதைக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்பினரே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் 'மழையின் காரணமாக கூட்டம் நடைபெறவில்லை' என்று அறிவித்தார்கள். அடுத்து அந்தக் கூட்டத்துக்கு அவர்கள் முறையாக அனுமதி பெறவில்லை. அனுமதி கேட்டு அவர்கள் கொடுத்த மனு உரிய காலத்தில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு வந்து சேரவில்லை. அவ்வளவுதான்.
இந்த ஒரு கூட்டம் ரத்தாவது பெரிய விஷயமில்லை. மீண்டும் காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்திவிடலாம். ஆனால் ஒரு குடிமகனாக எனக்குப் பல கேள்விகள் எழுகின்றன.

1. நான் பல கூட்டங்களை நடத்துகிறேன். முக்கியமாக புத்தகங்கள் தொடர்பான கூட்டங்கள். இவை எவற்றுக்கும் முன்னதாக அனுமதி ஏதும் யாரிடமும் இதுவரை பெற்றதில்லை. எந்த மாதிரியான கூட்டங்களுக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்?

2. உள் அரங்குகளில் நடைபெறும் கூட்டங்கள், வெளியிடங்களில் நடைபெறும் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஏதேனும் வித்தியாசங்கள் உள்ளனவா?

3. எந்தெந்தச் சட்டங்களின், அரசாணைகளின் அடிப்படையில் கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதி கொடுத்தல்/மறுத்தல் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன?

தகவல் தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லவும். நானும் வெளியே விசாரித்து, தகவல் பெற்றவுடன் அதை வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.

Thursday, October 26, 2006

இரண்டு புத்தக அறிமுக விழாக்கள்

27 அக்டோபர் 2006, வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு மதன் எழுதிய கி.மு கி.பி என்னும் நூல் வெளியிடப்படுகிறது. எழுத்தாளர் ஜெயகாந்தன் நூலை வெளியிடுகிறார்.

இடம்: ஒடிஸ்ஸி, 45&47, 3வது மாடி, முதல் மெயின் ரோட், காந்தி நகர், அடையார், சென்னை 20




28 அக்டோபர் 2006, சனிக்கிழமை - ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் நிகழ்வின் ஆறாவது வாரமாக மாலை 6.30 மணிக்கு பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி படம் எடுக்கிறார் பற்றி சோம.வள்ளியப்பன் பேசுகிறார். அதையடுத்து அப்புசாமி தாத்தாவின் பிறப்பு ரகசியம் பற்றி ஒரு சிறு உரையாடல் பாக்கியம் ராமசாமியுடன் இருக்கும்.

இடம்: வித்லோகா, பீமசேனா கார்டன் தெரு, மைலாப்பூர், சென்னை 4





சென்னை மாநகராட்சி தேர்தல்

இரா.செழியன் 'தி ஹிந்து'வில் சென்ற வாரம் எழுதியிருந்த கட்டுரை.
Electronic voting machines can help prevent rigging, which Chennai witnessed on a shocking scale on October 13. But to ensure fair and free elections, we need persons in office with credibility and commitment to implement justly the rules of law and order.
நான் ஏற்கெனவே எழுதியிருந்ததுபோல மிகக் குறைந்தது மின்னணு வாக்குப்பதிவையாவது அடுத்த தேர்தலுக்குக் கொண்டுவரவேண்டும். வேறு பல விஷயங்கள் - தமிழகத் தேர்தல் ஆணையகம் நியாயனமானவர்கள் நிரம்பியதாக, தமிழகக் காவல்துறை ஆட்சியாளர்களின் கையாள்களாக இல்லாமல் நடந்துகொள்வது ஆகியவை நடக்க இன்னமும் 20-30 ஆண்டுகள் ஆகலாம்.

பஞ்சாயத் ராஜ் சட்டத்துக்குப் பிறகு இப்பொழுது தமிழகத்தில் நடந்துள்ளது மூன்றாவது உள்ளாட்சித் தேர்தல். மாநிலத் தேர்தல் ஆணையங்கள் இந்த மூன்று தேர்தலிகளின்போதும் சரியாக நடந்துகொள்ளவில்லை. மத்தியிலும் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கையாளாகத்தான் பலமுறை நடந்துவந்துள்ளது. இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், எமர்ஜென்சியை ஒட்டி, பின்னர் என்றுகூடப் பார்த்தால் மிக மோசமான நிலைமை இருந்து வந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தேர்தல் ஆணையத்தின் கலாசாரம் மாறி வந்துள்ளது. பல அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் சில நெருக்கடி உத்தரவுகள் வெறுப்பைத் தந்தாலும் எந்த அரசியல்வாதியுமே இன்றைய நிலையில் மத்திய தேர்தல் ஆணையத்தை பக்கச் சார்புள்ளது என்றோ, ஒருவருக்கு மட்டும் ஊழல் செய்ய வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றோ சொல்லமாட்டார்கள்.

குடியாட்சி முறையில் தேர்தல்மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கவேண்டும். அது உள்ளாட்சித் தேர்தலில் இல்லை. இத்தனைக்கும் ஆளும் கட்சிக் கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி. எந்தத் தில்லுமுல்லும் செய்யாமலேயே உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களைப் பிடித்திருக்க முடியும். அப்படியும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை அந்தக் கூட்டணி. அஇஅதிமுகவின் அராஜகத்துக்குச் சற்றும் சளைத்ததல்ல எங்களுடையது என்றே செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.

அடுத்தமுறை அஇஅதிமுகவுக்கு வாய்ப்பிருந்தால் இதே மாதிரியான ரவுடித்தனம்தான் தலை தூக்கும். இது ஓரளவுக்கு ஒழுங்கு வரத்தொடங்கியிருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களையும் பாதிக்கும்.

மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனத்திலேயே சில பிரச்னைகள் உள்ளன.
Under the Tamil Nadu Panchayats Act, 1994, the State Election Commissioner shall hold office for a term of two years and shall be eligible for re-appointment for two successive terms provided that no person shall hold office of the State Election Commissioner for more than six years in the aggregate; provided further that a person appointed as State Election Commissioner shall retire from office if he completes the age of 62 years during the term of his office.
இதை மத்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
The President appoints Chief Election Commissioner and Election Commissioners. They have tenure of six years, or up to the age of 65 years, whichever is earlier. They enjoy the same status and receive salary and perks as available to Judges of the Supreme Court of India. The Chief Election Commissioner can be removed from office only through impeachment by Parliament.
மாநிலத் தேர்தல் ஆணையரின் நியமனத்தில் சில மாறுதல்களைச் செய்யவேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையரது பதவிக்காலம் இரண்டாடுகளுக்கு ஒருமுறை என்பதற்குபதில், நேரடியாக ஆறு ஆண்டுகள் என்று மாற்றப்படவேண்டும். ஒருமுறை அவரை நியமித்தபின் இம்ப்பீச்மெண்ட் முறையில் மட்டும்தான் அவரை வெளியேற்றலாம், இஷ்டத்துக்கு துரத்தமுடியாது என்ற நிலை வரவேண்டும். ஓய்வு பெறும் நிலையில் உள்ள - அதாவது 56 வயதைக் கடந்தவராகப் பார்த்து நியமிக்கலாம். மேலும் மாநிலத் தலைமை ஆணையருக்கு தேர்தல் நேரத்தில் காவல்துறையினைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களை மாற்றக்கூடிய அதிகாரமும் வழங்கப்படவேண்டும் (இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளதுபோல).

இப்படியான அதிகாரங்கள் இருந்தால் ஓரளவுக்கு, நாளடைவில், தமிழகத் தேர்தல் ஆணையகத்திலும் தரமானவர்கள் அமர்வார்கள் என்று நினைக்கிறேன். உள்ளாட்சித் தேர்தலும் நியாயமான முறையில் நடக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இவையெல்லாம் ஒரு பக்கம் நடக்கும்வரையில் மின்னணு வாக்குப்பதிவு என்பதைக் கட்டாயமாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

Wednesday, October 25, 2006

இட ஒதுக்கீடு - கிரீமி லேயர்

சமீபத்திய இட ஒதுக்கீடு மீதான ஒரு வழக்கின் தீர்ப்பு பற்றி அரசியல் கட்சிகள் சில பல கருத்துகளை முன்வைத்துள்ளன.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் சட்டமாக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஒன்று 'இந்திரா சாஹ்னி' வழக்கு (Indira Sawhney and others v. Union of India) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. இந்த வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் 16 நவம்பர் 1992-ல் தீர்ப்பு வழங்கியது. எட்டு நீதிபதிகள் ஒருமித்தும், ஒருவர் எதிர்த்தும் தீர்ப்பு வழங்கினர். இந்தத் தீர்ப்பில், அரசுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் உள்ளது என்றும் ஆனால் அப்படிப்பட்ட அதிகாரத்தைச் சில கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தவேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அந்தக் கட்டுப்பாடுகள்: (1) மொத்த இட ஒதுக்கீடு 50%த் தாண்டக்கூடாது. (2) கிரீமி லேயர் எனப்படுவோர் இட ஒதுக்கீடு பெறுவோர் பட்டியலில் இருக்கக்கூடாது. (அதாவது கிரீமி லேயருக்குள் தான் இல்லை என்று ஒருவர் சான்றிதழ் வாங்கி வைத்திருந்தால்தான் இட ஒதுக்கீடு அவருக்குக் கிடைக்கும். கிரீமி லேயர் என்றால் என்ன என்பதை வரையறுக்க மத்திய, மாநில அரசுகள் குழுக்களை அமைக்கவேண்டும்.)

அத்துடன் இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்ட மற்றும் ஒரு விஷயம் - இட ஒதுக்கீடு என்பது ஒருவர் படிப்பில் சேரும்போதோ அல்லது வேலையில் சேரும்போதோ கொடுக்கப்படவேண்டும்; அதற்குப் பிறகு மேற்கொண்டு பதவி உயர்வு ஆகியவற்றில் கொடுக்கப்படக்கூடாது.

இந்தத் தீர்ப்பு வரும் வரையில் SC/ST பிரிவினருக்கு கல்வி, வேலை, பதவி உயர்வு ஆகியவற்றுக்கு இட ஒதுக்கீடு இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு, SC/ST பிரிவினருக்குக் கொடுக்கப்பட்டு வந்த பதவி உயர்வை பாதிப்பதாக இருந்ததால் இந்திய அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 77வது சட்டத் திருத்தம் மூலம் Article 16 (4A) என்ற சேர்க்கையைக் கொண்டுவந்தது (1995). இதன்மூலம் SC/ST பிரிவினருக்கு வேலையில் பதவி உயர்வையும் இட ஒதுக்கீடு மூலம் கொடுக்கலாம்.
Amendment of Article 16. - In Article 16 of the Constitution, after clause (4), the following clause shall be inserted, namely:-

(4A) Nothing in this Article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of the State, are not adequately represented in the services under the State.
ஆனால் இதைத் தொடர்ந்து, பதவி உயர்வு கொடுத்தபின்னர் சீனியாரிட்டியை எவ்வாறு கணக்கிடுவது என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டது. அதாவது அரசுப் பணியில் ஆரம்ப நிலையில் 1000 பேர் பலப் பல நேரங்களில் சேர்கிறார்கள். அதில் 170 பேர் SC/ST, 830 பேர் பிறர். அடுத்து 100 பேருக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது. இதில் SC/ST வகுப்பினர் 17 பேர், பிறர் 83 பேர். 77வது சட்டத் திருத்தத்தின்படி ஜூனியரான ஒரு SC/ST வகுப்பினரும், அவரைவிட வருட அனுபவர் அதிகம் இருக்கும் பல பொதுவகுப்பினர் இருந்தாலும் பதவி உயர்வு பெறுகிறார். ஆனால் அடுத்த நிலையில் உள்ள 100 பேருக்கு அதற்கடுத்த நிலைக்கான பதவி உயர்வு வரும்போது மீண்டும் அந்நிலையில் உள்ள சீனியாரிட்டி மட்டுமே கவனிக்கப்படுமா அல்லது fast track முறையில் வந்த SC/ST வகுப்பினருக்கு எந்த சீனியாரிட்டி கொடுக்கப்படும் என்று கேள்வி எழுந்தது.

மற்றொரு பிரச்னையும் எழுந்தது. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் SC/ST, பிற்படுத்தப்பட்டோர் இடங்களை நிரப்புவதில் தேவையான ஆள்கள் கிடைக்காவிட்டால் அந்த இடங்கள் அடுத்த வருடத்தில் சேர்க்கப்பட்டன. இப்படிச் சேர்க்கும்போது அடுத்த ஆண்டில் SC/ST, பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் மொத்த இடங்களில் 50% தாண்டின. இந்திரா சாஹ்னி வழக்கு தீர்ப்பில் எந்த ஓர் ஆண்டிலும் இட ஒதுக்கீடு 50%த் தாண்டக்கூடாது என்றதன் காரணமாக SC/ST இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டது.

எனவே அரசியல் அமைப்புச் சட்டத்தில் மற்றொரு திருத்தம் - 81வது சட்டத் திருத்தம் - செய்யப்பட்டது (2000). இது Article 16 (4A)-ல் ஒரு மாற்றத்தையும், Article 16 (4B) என்ற புதிய சேர்க்கையைக் கொண்டுவந்தது.
Amendment of Article 16.-

In Article 16 of the Constitution, in clause (4A), for the words "in matters of promotion to any class", the words "in matters of promotion, with consequential seniority, to any class" shall be substituted.

...

In Article 16 of the Constitution, after clause (4A), the following clause shall be inserted, namely: -

(4B) Nothing in this Article shall prevent the State from considering any unfilled vacancies of a year which are reserved for being filled up in that year in accordance with any provision for reservation made under clause (4) or clause (4A) as a separate class of vacancies to be filled up in any succeeding year or years and such class of vacancies shall not be considered together with the vacancies of the year in which they are being filled up for determining the ceiling of fifty per cent reservation on total number of vacancies of that year.
மற்றுமொரு வழக்கில் (வினோத் குமார் வழக்கு) இட ஒதுக்கீடு தொடர்பான தரக்கட்டுப்பாட்டில் SC/ST பிரிவினருக்கு தகுதி மதிப்பெண் குறைவாக இருந்தாலே போதும் என்பது செல்லாது என்றும், இது Article 335-க்கு எதிரானது என்று தீர்ப்பு கிடைத்தது. Article 335 என்ன சொன்னது?
335. Claims of Scheduled Castes and Scheduled Tribes to services and posts.-

The claims of the members of the Scheduled Castes and Scheduled Tribes shall be taken into consideration, consistently with the maintenance of efficiency of administration, in the making of appointments to services and posts in connection with the affairs of the Union or of a State.
அதாவது SC/ST பிரிவினருக்குக் கொடுக்கப்படும் எந்த இட ஒதுக்கீடும் அரசு வேலைகளில் எந்தத் தரக்குறைவும் செயல்நேர்த்திக் குறைவும் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதைச் சரிக்கட்ட அரசியல் அமைப்பில் 82-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது (2000).
By the Constitution (Eighty-Second Amendment) Act, 2000, a proviso was inserted at the end of Article 335 of the Constitution which reads as under:

"Provided that nothing in this article shall prevent in making of any provision in favour of the members of the Scheduled Castes and the Scheduled Tribes for relaxation in qualifying marks in any examination or lowering the standards of evaluation, for reservation in matters of promotion to any class or classes of services or posts in connection with the affairs of the Union or of a State."
இப்படியான மூன்று சட்டத் திருத்தங்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே அசைக்கின்றனவா, இம்மாதிரியாக அரசியலமைப்புச் சட்டங்களை மாற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளதா இல்லையா என்பதுதான் நாகராஜ் மற்றும் பிறர் Vs இந்திய யூனியன் வழக்கு, 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கான தீர்ப்புதான் 19 அக்டோபர் 2006 அன்று வெளியானது.

இந்தத் தீர்ப்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச், நாடாளுமன்றத்துக்கு மேற்படி அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர உரிமை உண்டு, இந்தச் சட்டத் திருத்தங்கள் செல்லும் என்றது.

முக்கியமாக, இந்தச் சட்டத் திருத்தங்கள் கீழ்க்கண்ட எவற்றையாவது பாதிக்கிறதா என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்:

(1) the ceiling-limit of 50% (the numerical benchmark)
(2) the principle of creamy layer
(3) the compelling reasons, namely, backwardness, inadequacy of representation
(4) overall administrative efficiency

இந்த நான்கும் மேற்குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களால் பாதிக்கப்படவில்லை என்பதால் சட்டத் திருத்தங்கள் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால் அத்துடன், அவர்கள் கீழ்க்கண்டதையும் சொல்லியுள்ளனர்.
Social justice is concerned with the distribution of benefits and burdens. The basis of distribution is the area of conflict between rights, needs and means. These three criteria can be put under two concepts of equality, namely, "formal equality" and "proportional equality". Formal equality means that law treats everyone equal. Concept of egalitarian equality is the concept of proportional equality and it expects the States to take affirmative action in favour of disadvantaged sections of society within the framework of democratic polity. In Indra Sawhney all the judges except Pandian, J. held that the "means test" should be adopted to exclude the creamy layer from the protected group earmarked for reservation. In Indra Sawhney this Court has, therefore, accepted caste as determinant of backwardness and yet it has struck a balance with the principle of secularism which is the basic feature of the Constitution by bringing in the concept of creamy layer. Views have often been expressed in this Court that caste should not be the determinant of backwardness and that the economic criteria alone should be the determinant of backwardness. As stated above, we are bound by the decision in Indra Sawhney. The question as to the "determinant" of backwardness cannot be gone into by us in view of the binding decision.
பின்தங்கிய வகுப்பு என்பதைத் தீர்மானிக்க ஜாதியை அளவுகோலாக வைக்கலாம் என்பதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆனால் இந்திரா சாஹ்னி வழக்கில் பிற்படுத்தப்பட்டவர் என்றாலும் கிரீமி லேயர் (பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்தாலும் முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு சமமான சமூக, பொருளாதார நிலையை அடைந்துள்ளவர்) எனப்படுவோர் இட ஒதுக்கீடு பெற முடியாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கின் தீர்ப்பாக அனைத்து இட ஒதுக்கீடுகளிலும் 50% உச்சவரம்பு, கிரீமி லேயர் விலக்கு ஆகியவை இருக்கவேண்டும் என்று சொல்லியுள்ளனர். இதுகூட இந்த வழக்கின் தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே 1992-ல் கொடுக்கப்பட்டுள்ள இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பின் மேற்கோள்தான். இந்த வழக்கின் நோக்கமே மத்திய அரசு கொண்டுவந்திருந்த சில சட்டத்திருத்தங்கள் செல்லுபடியாகுமா ஆகாதா என்பதைக் கண்டறிவது. இதில் மத்திய அரசுக்குச் சாதகமாகத்தாண் தீர்ப்பு வந்துள்ளது.

ஆனால் இதுநாள்வரையில் நடைமுறையில் SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் தவிர்ப்பு என்ற ஒன்று இருந்ததில்லை. 19 அக்டோபர் 2006 தீர்ப்பு இதைப் புதிதாகப் புகுத்தவும் இல்லை. ஆனால் இனி யாரேனும் வழக்கு தொடர்ந்தால், இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பு (1992), நாகராஜ் வழக்கின் தீர்ப்பு (19 அக்டோபர் 2006) ஆகியவற்றை வைத்து கிரீமி லேயர் SC/ST பிரிவினருக்கும் செயல்படுத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வருவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஒரு கேள்வியை மட்டும் 5 நீதிபதிகள் அடங்கிய மற்றுமொரு அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் ஒன்றுக்கு மத்திய அரசு அனுப்பலாம். அல்லது இந்திரா சாஹ்னி வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமர்ந்திருந்ததால் 9 ஜட்ஜ்கள் அடங்கிய பெஞ்ச் ஒன்றைக் கூட்டலாம். அல்லது மத்திய அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தில் மற்றுமொரு சட்டத்திருத்தம் கொண்டுவரலாம். Article 16 (4A), Article 16 (4B) ஆகியவற்றில் "without a need for creamy layer" என்பதைச் சேர்க்கலாம்.

இதை விடுத்து உச்ச நீதிமன்றம்மீது தேவையின்றிப் பழிகூறுவது, அரசியல் அறிக்கைகளை விடுவது, விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் செய்ய விரும்புவது ஆகியவை தேவையற்றவை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் முழுமையாக இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருந்தால் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் கேட்டால் விளக்கிவிடுவார்கள்.

Sunday, October 22, 2006

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2006

தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடந்த சமயத்தில் நான் சென்னையில்/இந்தியாவில் இருக்கவில்லை. கடந்த சில நாள்களில் பலரிடம் பேசியதன்மூலம் தெரிந்துகொண்டதை வைத்து இதனை எழுதுகிறேன்.

சென்ற 2001-ல் நடந்ததைப் போலவே இம்முறையும் வன்முறை, கள்ள வாக்கு, வாக்குச்சாவடியைக் கைப்பற்றல், காவல்துறை உதவியுடன் ஆளுங்கட்சி அராஜகம் ஆகியன நடந்தேறியுள்ளன.

முறையான உள்ளாட்சித் தேர்தல்கள்மூலம் மட்டுமே நாளடைவில் சரியான குடியாட்சி நாட்டில் நடைபெறும் என்றால் அது இன்னமும் 20-30 வருடங்களில் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது.

சிறிது சிறிதாக இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து வெளியே வந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்துக்கு நிறைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தக்கூடியவர்கள் இல்லாதிருந்தனர். டி.என்.சேஷன் முதற்கொண்டு வரிசையாக அனைத்து தலைமை தேர்தல் ஆணையர்களுமே பக்கச்சார்புகளின்றிப் பணியாற்றுபவர்களாகக் கிடைத்துள்ளனர். இதே நிலை தொடரவும் தேர்தல் ஆணையம் மேலும் வலுப்பெறவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே மாநில சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்க்கும் நடக்கும் தேர்தல்கள் வன்முறைகள் குறைந்ததாகவும் பெருத்த நம்பிக்கை தரக்கூடியதாகவும் தோற்றமளிக்கின்றன.

ஆனால் மாநில தேர்தல் ஆணையங்களைப் பொருத்தமட்டில் இதே நம்பிக்கை இல்லை. தம்மளவில் அதிகாரப் பகிர்தலைக் கோருபவர்களாகவும் தமக்குக்கீழே அதிகாரத்தை மறுப்பவர்களாகவுமே நமது அரசியல்வாதிகள் நடந்துகொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் குலைக்கும்வண்ணம் நேரடி மேயர்/நகராட்சித் தலைவர் பதவிகள் சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்பட்டன. சென்ற சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெறக்கூடாது என்று அஇஅதிமுக திட்டமிட்டு கராத்தே தியாகராஜன், சேகர் பாபு போன்ற ரவுடிகளின் தலைமையில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல், கள்ள வாக்கு, வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களைக் கைப்பற்றுதல் ஆகியவற்றில் இறங்கினர். இம்முறை திமுக அதற்குச் சற்றும் சளைக்காமல் நடந்துகொண்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்களை நுழையவிடாமல் செய்தது, குண்டர்கள் வந்து வாக்குச்சீட்டுகளை தம்மிஷ்டத்துக்கு எடுத்து சீல் அடித்துத் திணித்தது ஆகியவை நடந்துள்ளன. முக்கியமாகச் சென்னையில். ஆளும் கட்சியின் குண்டர்களுக்கு மட்டும் காவல்துறையின் ஆதரவு கிடைத்துள்ளது!

வாய்ப்பு கிடைத்தால் வன்முறையில் இறங்கி அதன்மூலமாவது பதவியைக் கைப்பற்றுதல் என்பது வழக்கமாகிப் போன நிலையில் குடியாட்சி முறையில் நம்பிக்கை உள்ள நாம் என்ன செய்யவேண்டும்? அரசியல்வாதிகள், முக்கியமாக ஆளுங்கட்சியினர் ஆதரிக்க மாட்டார்கள் என்ற போதிலும் சிலவற்றுக்காக நாம் போராடவேண்டும்.

1. மாநிலத் தேர்தல் ஆணையம் - இந்த அமைப்பின்மீது நாம் நம்பிக்கை வைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தல்களையும் மத்திய தேர்தல் ஆணையமே நடத்தவேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவருமாறு நாம் போராடவேண்டும்.

2. மின்னணு வாக்குப்பதிவு - மேற்படி மாறுதல் நடக்கிறதோ இல்லையோ, சட்டத்திருத்தம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு நடத்தவேண்டும், அதற்கு செலவுகள் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்பதை முன்வைத்துப் போராடவேண்டும். இதன்மூலம் வாக்குச்சீட்டு களவாடுதல், கொத்து கொத்தாகக் கள்ள வாக்கு போடுதல், எதிர்க்கட்சி வாக்குகளை செல்லாததாகச் செய்தல் போன்ற குற்றங்கள் குறையும்.

3. மீண்டும் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டுவரப் போராடவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் செய்யப்பட்டுள்ள செலவுகள் பயமுறுத்துகின்றன. 700 குடும்பங்களை மட்டுமே கொண்டுள்ள ஒரு பஞ்சாயத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கிட்டத்தட்ட ரூ. 25 லட்சம் செலவு செய்துள்ளாராம். பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒருவர் ரூ. 7 லட்சம் செலவு செய்துள்ளார் (தன் சொத்துக்களை விற்று). தோல்வியுற்றவர் ரூ. 5 லட்சம் செலவு செய்துள்ளார். இவர்கள் அனைவருமே எப்படியாவது - அராஜக வழிகளின்மூலம் - செலவைவிட அதிக வருமானம் பார்க்க முயற்சி செய்வார்கள்.

உள்ளாட்சி அமைப்புகள் எந்த வகையில் மக்களை பாதிக்கின்றன, எவ்வாறு மக்களுக்கு இந்த அமைப்புகளால் நன்மை செய்யமுடியும் என்பது புரிந்தால்தான் மக்களும் அதற்கேற்றவாறு சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முனைவார்கள்.