Monday, August 22, 2016

தெருவிளக்கும் மரத்தடியும் - ச.மாடசாமி

வெறும் 88 பக்கங்கள். 30-45 நிமிடங்களில் படித்துமுடித்துவிடக்கூடிய சிறிய புத்தகம்தான். ஆனால் கல்வியில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரையும் காலம் முழுதும் சிந்திக்க வைக்கும் சக்தி இப்புத்தகத்துக்கு உண்டு.

மாடசாமி நன்கு அறியப்பட்ட கல்வியாளர். இப்புத்தகத்தின் ஒரு குறை மாடசாமியைப் பற்றிய முறையான அறிமுகம் இல்லாமல் இருப்பதுதான். மாடசாமி 'புதிய தலைமுறை கல்வி' இதழில் 17 வாரங்களாக எழுதிவந்த கட்டுரைத் தொடரின் தொகுப்புதான் இந்நூல். சனிக்கிழமை அன்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அன்புடன் கொடுத்தார். நேற்று இரவு பாதியும் இன்று அதிகாலை பாதியுமாகப் படித்து முடித்தேன்.

மாடசாமியிடம் இருக்கும் மாணவர்கள் மீதுள்ள பரிவும் கல்வித்துறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆதங்கமும் புத்தகம் நெடுக விரிந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அவருக்கே உரித்தான மொழியில், போதனை இல்லாத குரலில் ஆங்காங்கே தொட்டுக் காட்டிச் செல்வது, அவரை நமக்கு அணுக்கமாக்குகிறது. அவருடைய சொந்த அனுபவங்களும் அவர் படித்த புத்தகங்களிலிருந்து பெற்ற புரிதல்களும் கட்டுரைகளுக்கு மிகுந்த வலு சேர்க்கின்றன. நாண் மேற்கொண்டு படிக்க குறைந்தது பத்து புத்தகங்களை இந்தக் கட்டுரைத் தொடரிலிருந்து பெற்றுள்ளேன். எல்லாமே கல்வி தொடர்பானவை. கூடவே அறிவொளி இயக்கத்தின்போது அவர் சந்தித்த மனிதர்களும் அவர்களுடைய எளிமையான நாட்டுப்புறக் கதைகளும் பழமொழிகளும் விடுகதைகளும் புத்தகத்துக்கு மண்ணின் மணத்தைக் கொடுக்கின்றன.

கணவன் இல்லாத அறிவொளித் தொண்டர் ரத்தினம்மாளின் ஒரே மகன் கெட்ட சகவாசம் கொண்டவனாக இருக்கிறான். மகன் தேறுவானா என்று கேட்கிறார் மாடசாமி. "புளிய மரத்துல ஏறினவன் பல் கூசுனதும் தானா எறங்குவான்" என்கிறார் தாய். வழிக்கு வராதவர்கள் என்போரைக் கழித்துக் கட்டவே ஆசிரியர்கள் விரும்புகிறோம்; அவர்கள் மாறுவார்கள் என்று காத்திருக்க விரும்புவதில்லை என்கிறார் மாடசாமி.

சமச்சீர்க் கல்வி பாடத்தில் "நோ (மாட்டேன், இல்லை, கூடாது)" என்ற சொல்லைச் சொல்வதற்கான பயிற்சிகளை இணைக்க மாடசாமி விரும்புகிறார். "நோ" சொல்வது அடங்காப்பிடாரிகளை உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்புகிறது. "மறுப்பது அடங்காமையா" என்ற கேள்வியை எழுப்புகிறார் மாடசாமி. "'கண்ட சாதிப் பயல்களோடு விளையாடாதே' என்று அப்பா போடும் உத்தரவுக்கு 'நோ' சொல்வது அடங்காமையா? பள்ளிக்கூடம் விட்டு நடந்துவரும் சிறுமியிடம் முன்பின் தெரியாத அயலான் வந்து 'பாப்பா! வா! உன்னை வீட்ல விடுறேன். சைக்கிள்ல ஏறு' என்று அழைக்கும்போது அவனுடைய அழைப்புக்கு 'நோ' சொல்வது அடங்காமையா?" என்று வினா எழுப்புகிறார் மாடசாமி. சிறிது வெற்றி. பாடத்திட்டத்தில் கொஞ்சமாக சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் சிறுமிகள் 'நோ' சொல்லவேண்டிய பயிற்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லையாம்!

ஐம்பத்தோராவது ராட்சதப் பூச்சி (Fity First Dragon) என்ற கதை, Evan Hunter எழுதிய The Blackboard Jungle என்ற நாவலில் வருகிறதாம். பொய்யான நம்பிக்கையையும் போலியான ஊன்றுகோலையும் மாணவர்களுக்குத் தரும்போது ஏற்படும் விளைவுகளைக் குறிக்கிறது கதை. இம்மாதிரியான கதைகளை நம் வகுப்பறைகளில் மாணவர்களுடன் சேர்ந்து விவாதிக்கவேண்டும் என்கிறார்.

ஆசிரியரையோ பள்ளியையோ மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை எனும்போது ஓராண்டு பள்ளியிலிருந்து விலகியிருந்தால் நன்மை கிடைக்கலாம் என்னும் தைரியமான கருத்தை முன்வைக்கிறார். நம் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் கருத்து இது. மாணவர்களின் தனித்திறமையை வளர்த்தெடுக்காமல் அனைவரும் அனைத்திலும் ஒரு தரத்தை எட்டவேண்டும் என்று போராடும் ஆசிரியர்களையும் பள்ளி முறையையும் எதிர்க்கிறார். இதன் விளைவு, வாத்துகள் பறக்க முயன்று அதிலும் தோல்வி, கால் ஜவ்வு கிழிந்து நீந்துவதும் போச்சு. அவரவர் திறமையைச் சடுதியில் கண்டுபிடித்து அந்தத் திறமைகளை அதிகம் வளர்த்தெடுப்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். “இறுகிய பாடத்திட்டங்களுக்கு ஏற்றபடி குழந்தைகளை வளைக்காதீர்கள்; குழந்தைகளுக்கு ஏற்றபடி பாடத்திட்டத்தை வளையுங்கள்."

வசந்தி தேவி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது ‘என் கிராமத்தின் கதை’ என்ற போட்டியை மாணவர்களுக்காக அறிவித்தார். இதனையடுத்து மாணவர்களிடமிருந்து சுவையான பல கட்டுரைகள் பிறந்தன. அடுத்து துணைவேந்தராக வந்த அறவாணன், மாணவர்களுக்கிடையே போட்டி என்றால் பேச்சு, பாட்டு, நடனம் ஆகியவை மட்டும்தானா, பிரச்னைகளை ஆராய்ந்து அறியும் அறிவு திறமைகளில் பட்டியலில் இல்லையா என்று கேள்வி எழுப்பினாராம். அதன் விளைவாக ‘சமூகமும் கல்விக்கூடமும் சந்திக்கட்டும்’ என்ற கருத்தை மையமாக வைத்து இளைஞர் விழா ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளை ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்தனராம். அதில் கிடைத்த சில புரிதல்களை மாடசாமி விவரிக்கிறார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் இவற்றை ஆவணப்படுத்தவேண்டும். அற்புதமான முயற்சிகள் ஏன் கண்காணாமல் போய்விடுகின்றன என்று புரியவில்லை. மதுரை சமூக அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ரெங்கசாமியுடன் நான் இதுபற்றி நிறையப் பேசியிருக்கிறேன். ஓரிரு கிராமங்களில் நாங்கள் முயற்சிகளையும் மேற்கொண்டோம். பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. வேறு வடிவில் வேறு இடங்களில் இவற்றை மீண்டும் செயல்படுத்த முனையவேண்டும்.

ஒரு கட்டுரையில் மாடசாமி சொல்லும் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பரிச்சயமானது. அதனை அப்படியே இங்கே தருகிறேன்:
தமிழகப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் அமெரிக்கப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றிய கல்வியாளர் ஒருவர், பின்வரும் கருத்தைப் பதிவுசெய்கிறார்.

"தமிழகத்து மாணவர்கள், இடையூறு செய்யாமல் நான் பேசியதைக் கேட்டார்கள். ஆனால், பேசி முடித்ததும் என் உரையின்மீது ஒரு வினாவும் எழுப்பவில்லை, பேசும்போதும் கப்சிப்! பேசிமுடித்ததும் கப்சிப்! அமெரிக்கப் பள்ளி மாணவர்கள், நான் பேசுகையில் பலவிதமான குறுக்கீடுகளை - இடையூறுகளைச் செய்தார்கள். அரங்கைவிட்டு இஷ்தப்படி வெளியேறினார்கள். ஆனால் பேசி முடித்ததும் சுயசிந்தனையுடன் பல கேள்விகளை எழுப்பினார்கள்."
சென்ற வாரம் வரை நான் சென்றுவந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் பெரும்பாலும் இதுதான் நிலைமை. ஓரோர் இடத்தில் சற்றே விலகல் இருக்கலாம். நான் மிகவும் தோண்டித் துருவினால் மட்டுமே ஒரு சிலர் பேசுவார்கள். ஆனால் பேச்சை முடித்து கீழே இறங்கியதும் சிலர் வந்து சூழ்ந்துகொள்வார்கள். நிறையக் கேள்விகளைக் கேட்பார்கள். சிலர் நின்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தில் கேள்விகள் தெரியும். ஆனால் கேட்கத் தயக்கம். கடைசிவரை கேட்காமலேயே போய்விடுவார்கள். பக்கத்து நபரிடம் தங்கள் கேள்விகளைச் சொல்லிக் கேட்கச் சொல்வார்கள். இதிலிருந்து மீண்டாலொழிய நம் மாணவர்களால் முன்னேற முடியாது.

அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவருவது, அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு அழிந்துவருவது ஆகியவை பற்றி மாடசாமி அங்கலாய்க்கிறார். ஆனால் அரசுப்பள்ளிகளில்தான் இன்னமும் ஆன்மா இருக்கிறது என்கிறார். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் குறித்த கருத்து இவரிடம் மட்டுமல்ல, இன்னும் பலரிடமும் அப்படியே மாறாமல் இருக்கிறது. இரண்டிலும் தங்களுக்கு விருப்பமான வகைமாதிரிகளை எடுத்துக்கொள்கிறார்கள். தனியார் பள்ளி என்றால் அதற்கு உள்ளதிலேயே மோசமான ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வது. அரசுப் பள்ளி என்றால் அதற்கு நம் மனம் விரும்பிய எடுத்துக்காட்டு, பிறகு இரண்டையும் ஒப்பிடுவது. இந்தக் கட்டுரையில் நான் என் எதிர்வாதத்தை வைக்கப்போவதில்லை. ஆனால் மாடசாமியின் இந்தச் சிந்தனையை மட்டும் முன்வைப்பேன்:
அரசுப் பள்ளிகள் இன்று காணும் தளர்ச்சி, ஒரே நாள் இரவில் நடந்தது அல்ல. முப்பது ஆண்டுகளாக நடந்துவரும் மாற்றம் இது. மாற்றம் இன்று கொதிநிலையை அடைந்திருக்கிறது. இனியும் கவனிக்காமல் இருக்க முடியாது.  … நாம் புது வடிவம் எடுக்காமல் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியுமா? ஆசிரியர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஒன்றுகூடிப் பேசிச் சிந்தித்துச் செயலபடவேண்டாமா? அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புதிய ரூபங்கள் எடுக்கவேண்டாமா? புதிய முயற்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பக்கபலமாய் வரவேண்டாமா?
கேள்விகள் நியாயமானவை. என்னைப் பொருத்தமட்டில், கல்வியாளர்கள், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இரண்டும் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணம் செய்வது எப்படி என்று சிந்திக்கவேண்டும். இரண்டும் மாணவர்களுக்குக் கல்வியைத் தரும் முக்கியமான பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. இரண்டிலும் கற்பித்தல் பிரச்னை ஒன்றுதான். கட்டுமானம், பணவசதி, இன்னபிறவற்றில்தான் வேற்றுமை. 

பல விவாதங்களை முன்வைக்கும் இந்தப் புத்தகம் அவசியம் படிக்கப்படவேண்டியது. 

தெருவிளக்கும் மரத்தடியும், சு. மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக் 88, விலை ரூ. 80

Monday, August 15, 2016

கண்டுபிடி!

$$\frac{200^2+199^2+198^2+197^2+\dots+2^2+1^2}{200^2-199^2+198^2-197^2+\dots+2^2-1^2}$$

Tuesday, June 14, 2016

பசித்திருக்கும் உலகத்துக்கு உணவு

ஆர்கானிக் விவசாயம் (இயற்கை விவசாயம்) பற்றி மட்டும்தான் இன்று அனைவரும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் நிஜத்தில் இன்று மிகப் பெரும்பான்மையான விவசாயம் ரசாயன உரத்தின் ஆதரவால்தான் நிகழ்ந்துவருகிறது. ரசாயன உரங்களை எடுத்துவிட்டால் உலகில் பட்டினியும் பஞ்சமும்தான் ஏற்படும்.

இண்டென்சிவ் விவசாயம் - அதாவது குறிப்பிட்ட ஒரு சதுர அடியில் கிடைக்கும் அதிகப் பயிர் மகசூல் வேண்டும் என்றால் தேவையான அளவு நீர், உரம் ஆகியவை வேண்டும். இந்த உரம் இயற்கை உரமாக இருக்கலாம் அல்லது பெரும் தொழிற்சாலையில் உருவான ரசாயன உரமாக இருக்கலாம். அதுதவிர, தேவைப்பட்டால் பூச்சிகளாலும், பேக்டீரிய, வைரஸ்களாலும் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிக்கவேண்டுமா அல்லது இயற்கை மருந்துகள் பயன்படுத்தலாம என்பது இன்னொரு விஷயம்.

தாமஸ் ஹேகர்
புத்தகத்திலிருந்து
ஒரு ஸ்க்ரீன் ஷாட்.
இயற்கை உரங்களாகப் பயன்பட்டவை பறவைகளின் எச்சங்கள், விலங்கின் கழிவுகள், ஏன் மனிதனின் கழிவுகள்கூட. இவை பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜனை மண்ணுக்குள் அனுப்பின. பயிர்களின் வேர்கள் இவற்றை மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டன. இயற்கையில் இந்த அளவுக்கு உயிரினக் கழிவுகள் கிடைக்காத நிலையில் அம்மோனியா (NH3) என்ற வேதிப்பொருளைத் தொழிற்சாலையில் உருவாக்கி, அதனைத் திடவடிவிலான வேதிப்பொருளாக ஆக்கி மண்ணில் சேர்க்கமுடியுமா என்ற ஆராய்ச்சியின் விளைவாக உருவானதுதான் யூரியா என்ற உரம். இன்று உலகெங்கும் உணவைப் பெற்றுத்தருவது யூரியாதான். இனி நம் நாட்டில் யூரியாவைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லிப் பாருங்கள். தெரியும் எம்மாதிரியான அரசியல் பிரச்னை ஏற்படும் என்று. 

இந்த யூரியா சிறுசிறு துகள்களாக இருக்கும். சர்க்கரைத் துகள்களைவிடப் பெரிதாக, கல்லுப்புத் துகள்களைவிடச் சிறிதாக. இவற்றை நெல் வயல்களில் தூவுவார்கள். ஆனால் இதனால் பெரும் லாபமல்ல. நீரில் கரைந்து பெருமளவு யூரியா வெளியேறிவிடும். காற்றில் பரவி மாசை விளைவிக்கும். பயிருக்கும் போய்ச் சேராது. 

சீனா போன்ற நாடுகளில் பாரம்பரிய (இயற்கை) உரங்களைப் பயன்படுத்த ஒரு முறையைக் கையாண்டுவந்தார்களாம். களிமண்ணைக் கையில் பந்தாகக் குழைத்து எடுத்துக்கொள்வார்கள். அப்படியே ஆங்காங்கே விரலை அதில் வைத்து அழுத்தி, குழியை உருவாக்கிக்கொள்வார்கள். அந்தக் குழிக்குள் இயற்கை உரத்தை அப்பிவிடுவார்கள். பின் நெல் நட்டுள்ள வயலில் ஆங்காங்கே இடையிடையே சற்றே ஆழத்தில் இந்த உரக் களிமண் உருண்டைகளை நட்டுவிடுவார்கள். இதனால் உரச் சத்து கொஞ்சம் கொஞ்சமாக வேண்டிய அளவில் மண்ணூடாக பயிருக்குப் போகிறது. வீணாவதில்லை.

பங்களாதேஷில் யூரியாவை வைத்து இதே முறைப்படிப் பயன்படுத்தினால் பலன் அதிகமாக இருக்குமா என்று முயற்சி செய்தார்கள். யூரியா துகள்களை கைக்கடக்கமான உருண்டைகளாக ஆக்கி, சரியான ஆழத்தில் நெல் வயலில் சீரான இடைவெளியில் புதைத்துவைத்து முயற்சி செய்தார்கள். UDP என்று இதற்குப் பெயர். Urea Deep Placement. இது மிகச் சிறப்பான பயன் அளித்தது. 1990களில் இம்முறையை அறிமுகப்படுத்தி, விரிவாக்கியதால், பங்களாதேஷ் உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்தது.

அதன்பின், Fertilizer Deep Placement (FDP) என்ற பெயரில், யூரியாவை மட்டுமின்றி பொட்டாஷ், பாஸ்பேட் உரங்களையும் வேறுசில நுண்சத்துகளையும் சரியான விகிதத்தில் சேர்த்து சரியான ஆழத்தில் வைத்து பயிர்களுக்குச் சத்தளிப்பது என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் பின்னணியில் இருந்தது IFDC - International Feritilizer Development Center என்ற அமெரிக்காவிலிருந்து இயங்கும் அமைப்பு. உலகமெங்கும் உணவுப் பற்றாக்குறை இருந்த காலகட்டத்தில் உரப் பயன்பாட்டை உலகமெங்கும் பரப்ப ஆராய்ச்சிகளைச் செய்து, அத்துடன் நிற்காமல் விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்த உதவிய அமைப்பு இது. ஐரோப்பியக் கண்டத்தில் கம்யூனிசம் வீழ்ந்தபின் இரும்புத் திரையிலிருந்து வெளியேறிய கம்யூனிச நாடுகள் பலவற்றிலும் உரங்களை உற்பத்தி செய்ய உதவி, உணவுத் தன்னிறைவை உருவாக்கிக்கொள்ள வழிவகுத்தவர்கள். ஆசியாவில் பங்களாதேஷ் அவர்களுடைய செயலுக்கு முக்கியமான எடுத்துக்காட்டு. ஐரோப்பாவில் அல்பேனியா ஒரு எடுத்துக்காட்டு. ஆப்பிரிக்காவில் வளமற்ற மண்ணுக்கு உரங்கள்மூலம் வளம் சேர்த்து விளைச்சலை அதிகப்படுத்தியதில் பெரும் பங்கு IFDC-க்கு உண்டு.

ஹேபர்-பாஷ் முறைமூலம் அம்மோனியா (அதிலிருந்து யூரியா) உருவாக்கப்பட்ட கதையை மிக அற்புதமாக எழுதிய தாமஸ் ஹேகர், IFDC-யின் 40 ஆண்டுகளைப் படம் பிடித்து எழுதிய புத்தகம்தான் "Feeding a Hungry World".

இதன் தலைமை அதிகாரியாகப் பல ஆண்டுகள் இருந்து மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்றவர் அமிதாவா ராய். ஐஐடியில் படித்தபின் அமெரிக்காவில் கெமிகல் எஞ்சினியரிங் துறையில், உரங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாக இவரைப் போன்றவர் குறித்து நம் நாட்டில் அதிகம் பேசப்படுவதில்லை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நான் இந்தப் பெயரையே முதன்முதலில் கேள்விப்பட்டேன். இவரைக் குறித்து மேலும் தகவல்களைத் திரட்டவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.


இயற்கை விவசாயம் நன்கு வளர்ந்து செழிக்கட்டும். அதே நேரம், நம் அனைவருக்கும் உணவளிக்கும் ரசாயன உரங்களைப் போற்றுவோம். அவற்றைச் சரியான முறையில், சரியான அளவில் நம் விவசாயிகள் பயன்படுத்திப் பலனைப் பெறட்டும்.

Tuesday, May 31, 2016

ரசாயன வண்ணச் சாயங்கள்

1856-ம் ஆண்டுதான் முதன்முதலாக நூல் இழைகள்மீது ஏற்றப்படும் வண்ணச் சாயங்கள் இயற்கையான உயிரினங்கள்மூலமாகத் தயாரிக்கப்படாமல் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படத் தொடங்கியது.

1856-க்குமுன்பாக மிகச் சில வண்ணங்கள்தான் ஆடைகள் தயாரிப்பில் பயன்பட்டன. அவுரி  (Indigofera Tinctoria) செடியிலிருந்து ஆழ்நீல வண்ணம். வோட் (Isatis Tinctoria) செடியிலிருந்து இளநீல வண்ணம், மஞ்சள் (Curcuma Longa) செடியிலிருந்து, அதேநிற வண்ணம், மேடர் (Rubia Tinctorum) என்ற செடியிலிருந்து சிவப்பு வண்ணம். கொச்சினீல் (Dactylopius Coccus) என்ற பூச்சியிலிருந்து சிவப்பு வண்ணம். இப்படிச் சில வண்ணங்களை மட்டுமே கொண்டு, பருத்தி, பட்டு, கம்பளி இழைகளுக்குச் சேர்த்து, நெய்து துணிகளை உருவாக்குவார்கள்.

1856-க்கு முன்னதாகவே ஆய்வகங்களில் ஒருசில வண்ணங்கள் உருவாக்கப்பட்டாலும் பெரும் தொழிற்சாலைகளில் அவற்றை யாரும் உருவாக்க முனையவில்லை. தொழில்ரீதியாக அது சாத்தியப்படும் என்று யாரும் நினைக்கவில்லை.

ஆனால் 1856-ல் வில்லியம் பெர்கின் என்ற பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான, வேதியியல் மாணவர் ‘மாவ்’ என்று அழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு வண்ணத்தை ஆய்வகத்தில் உருவாக்கினார். இதனை உருவாக்க அவர் எடுத்துக்கொண்டது நிலக்கரித் தார்க் கழிவை. கிட்டத்தட்ட அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயிரிகள் அனைத்தும் கரிம வேதிப்பொருள்களால் ஆனவை என்பதும், பெட்ரோலியம், நிலக்கரி ஆகியவை, உயிரிகள் பூமிக்கடியில் புதைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி, உருமாறியவை என்பதும் தெரியவந்திருந்தது. ஆனால் வேதிவினைகள் குறித்து ஆழ்ந்த கருத்துகள் இன்னமும் தோன்றியிருக்காத காலம். மெண்டலீவ் இன்னமும் தன் வேதி அட்டவணையை உருவாக்கியிருக்கவில்லை. அணு பற்றிய கொள்கைகள் தெளிவாகியிருக்கவில்லை. ஆனால் தாவரத்திலிருந்தோ, விலங்கிலிருந்தோ பெறப்படும் பொருள்களை, நிலக்கரி அல்லது பெட்ரோலியக் கழிவிலிருந்து தொடங்கி, சில வேதிவினைகள்மூலம் பெற்றுவிடக்கூடும் என்ற கருத்து உருவாகியிருந்தது.

பெர்கின், வண்ணச்சாயம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. மலேரியா நோய்க்கு மருந்தான க்வினைன் என்பது சிஞ்சோனா என்ற மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்டுவந்தது. இதனை ஆய்வகத்தில் தயாரிக்க முடியுமா என்ற முயற்சியில் பெர்கின் ஈடுபட்டபோது, அகஸ்மாத்தாக உருவானதுதான் இந்தச் சிவப்புநிறப் பொடி. இந்தப் பொடியைச் சுத்திகரித்து வண்ணச் சாயமாக மாற்றி சாயத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் கொடுத்துப் பார்த்ததில் அவர், இது ‘பத்தரை மாற்றுத் தங்கம்’ என்று சொல்லிவிட்டார்.

ஆனாலும் ஒரு 18 வயதுப் பையன் தைரியமாக இதனைக் கையில் எடுத்துக்கொண்டு, தொழிலில் இறங்க முடிவுசெய்தது மகா ஆச்சரியம். யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. ஆனால் அந்தப் பையனின் தந்தை - கப்பல் கட்டும் தொழிலில் இருந்தவர் - முதலீடு செய்ய முன்வந்தார். அண்ணனும் தொழிலில் கூட்டு சேர்ந்தார். மிகப் பெரிய லாபம் ஈட்டினார்கள். 

வில்லியம் பெர்கினின் இந்த வண்ணச் சாயக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ரசாயன வண்ணங்களைத் தயாரிக்கக் கடும் போட்டி நடைபெற்றது. ஜெர்மனி ஆழ்நீல வண்ணத்தை உருவாக்கியது. அது இந்தியாவின் அவுரிப் பயிர்களையும் வர்த்தகத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்தது. காந்தியடிகள் இந்தியாவில் ஈடுபட்ட முதல் பெரும் பிரச்னை, அவுரி பயிரிட்ட இந்திய விவசாயிகளுக்கும் அதனை வாங்கி வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டு, பின்னர் ஜெர்மனியின் கண்டுபிடிப்பினால் பின்வாங்கிய பிரிட்டிஷ் வர்த்தகர்களுக்கும் இடையேயான பிரச்னையில் சமரசம் ஏற்படுத்த முயற்சித்தது. நாளடைவில் இயற்கை வண்ணச் சாயம் என்ற ஒன்று முற்றிலுமாகக் காணாமல் போனது.

நிலக்கரி, பெட்ரோலியக் கழிவிலிருந்து வண்ணச் சாயங்கள் மட்டுமல்ல, ஆண்டிபயாடிக் என்ற நோய்க்கொல்லி மருந்துகளையும் கண்டுபிடிக்கலாம் என்பதை நோக்கி அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் இறங்கின. சல்ஃபா வகை மருந்துகளைக் கண்டுபிடித்ததன்மூலம் கெர்ஹார்ட் டோமாக் (Gerhard Domagk) இந்தத் துறையைத் தொடங்கிவைத்தார். இன்னொரு பக்கம் அம்மோனியாவைத் தயாரிக்கும் முயற்சியில் ஹேபர் ஆய்வகத்தில் வெற்றிபெற, பாஷ் அதனைப் பெருமளவில் தொழிற்சாலையில் தயாரிக்கும் முறையை உருவாக்கினார். இவ்வாறாக செயற்கை உரங்கள் உருவாக்கப்படலாயின. லேக்கர் என்னும் இயற்கைப் பிசின், மின்கடத்தாப் பொருளாகப் பயன்பட்டது. அதற்கு மாற்றாக பேகிலைட் என்னும் செயற்கைப் பொருள் உருவாக்கப்பட்டது. அதன்பின் பிளாஸ்டிக் வகைகள் உருவாக்கப்பட்டன. நைலான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகள் உருவாக்கப்பட்டன. 

இப்படியாக எதிர்பாராத வகையில் உருவான வண்ணச் சாயம் ஒன்றிலிருந்து மாபெரும் ரசாயனத் தொழிற்சாலைகள் உருவாகின. இவை சுற்றுச் சூழலுக்குக் கேடுகளை விளைவித்தன. உணவுப் பொருள்களில்கூட இவ்வகைச் சாயங்கள் கலக்கப்பட்டன. மக்களின் எதிர்ப்பை அடுத்து தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டன. உணவு மற்றும் மருந்து ஆகியவற்றில் நிறையக் கட்டுப்பாடுகள் உருவாகின. ஆனாலும் இன்றும் இத்தொழிற்சாலைகள் பிரச்னைகளுக்கு உரியவையாக இருப்பதைப் பார்க்கிறோம். இப்பொருள்கள் பலவற்றுக்கும் பக்கவிளைவுகள் இருப்பதையும் காண்கிறோம்.

உலகின் பல பாகங்களிலும், செயற்கையிலிருந்து விலகி மீண்டும் இயற்கையான பொருள்களை நாடிச் செல்லும் பயணம் தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயம், இயற்கை உணவு, இயற்கை இழைகள், இயற்கை வண்ணங்கள் போன்றவைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நான் ஏற்கெனவே ஹேபர்-பாஷ் + உரங்கள் பற்றியும் டோமாக் + மருந்துகள் பற்றியுமான இரண்டு அற்புதமான புத்தகங்களைப் படித்திருந்தேன். இரண்டுமே தாமஸ் ஹேகர் எழுதியவை. The Alchemy of Air: A Jewish Genius, a Doomed Tycoon, and the Scientific Discovery that Fed the World but Fueled the Rise of Hitler என்பது ஹேபர், பாஷ் கதையைச் சொல்வது. The Demon Under the Microscope: From Battlefield Hospitals to Nazi Labs, One Doctor's Heroic Search for the World's First Miracle Drug என்பது டோமாக்கின் கதையைச் சொல்வது.

இந்தப் புத்தகங்கள் அளவுக்கு அறிவியலையும் வாழ்க்கையையும் எளிதாகவும் அருமையாகவும் சொல்லிச் செல்வது கடினம் என்று எண்ணியிருந்தேன். சைமன் கார்ஃபீல்ட் எழுதியுள்ள Mauve: How One Man Invented a Colour that Changed the World அந்தத் தரத்தில் நின்று வில்லியம் பெர்கினின் கதையையும் வண்ணங்களின் ரசாயனத்தையும் சொல்லிச் செல்கிறது.

அறிவியல் ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்கள் இந்த மூன்று புத்தகங்களையும் படிக்கப் பரிந்துரைப்பேன்.

Friday, May 20, 2016

ஹயெக், பணவீக்கம், பிட்காயின், சுவாமி, ராஜன்

பிரெடெரிக் அகஸ்ட் ஹயெக் (FA Hayek) பற்றிய ஓர் அருமையான அறிமுகப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஹயெக் எழுதியவற்றைப் படிக்கத் தொடங்குமுன் இந்த அறிமுகப் புத்தகத்தைப் படித்துவிடலாம் என்று எடுத்திருந்தேன். Eamonn Butler எழுதிய Friedrich Hayek: The Ideas and Influence of the Libertarian Economist என்ற புத்தகம் இது.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது பற்றிப் பேசும் ஹயெக், பொதுவாகவே வரலாற்றைப் பார்க்கும்போது, அரசுகள் தங்களிடம் இருக்கும் ஏகபோக அதிகாரமான பணம் அச்சிடுவதை வைத்துக்கொண்டு மக்களைக் கொள்ளையடித்து, ஏய்க்கிறார்கள் என்கிறார். அதற்கு என்ன மாற்று இருக்கிறது?

ஒரேவழி, அரசுகளிடம் இருக்கும் பணத்தை அச்சிடும் ஏகபோக அதிகாரத்தை நீக்கி, பணம் வெளியிடுவதையும் போட்டிச் சந்தைக்குள் கொண்டுவரவேண்டியதுதான் என்று படுதைரியமான யோசனையை "Choice in Currency and Denationalisation of Money" என்ற ஆக்கத்தில் முன்வைக்கிறார். இதைப் படித்த உடனேயே பிட்காயின்தான் (Bitcoin) என் நினைவுக்கு வந்தது. அதுவும் சமீபத்தில்தான் சடோஷி நாகாமோட்டோ தான்தான் என்று ஆஸ்திரேலியர் ஒருவர் சொன்னதாகச் செய்திகள் வேறு வந்திருந்தன. ஓராண்டுக்குமுன் வாங்கிப் படிக்காமல் இருந்த Nathaniel Popper எழுதிய “Digital Gold: Bitcoin and the Inside Story of the Misfits and Millionaires Trying to Reinvent Money" என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. கூடவே, ஹயெக்-பிட்காயின் கனெக்‌ஷன் நமக்கே தோன்றுகிறது என்றால் இதைப்பற்றி வேறு பலரும் சிந்தித்திருப்பார்களே என்று நினைத்து இணையத்தைத் தேடினேன்.

ஃபோர்ப்ஸில் வந்த ஒரு கட்டுரையின் வழியே 2012-ல் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வெளியிட்டிருந்த Virtual Currency Schemes (pdf) என்ற ஓர் ஆவணம் கிடைத்தது.

அதில் இ.சி.பி, இவ்வாறு சொல்கிறது:
The theoretical roots of Bitcoin can be found in the Austrian school of economics and its criticism of the current fiat money system and interventions undertaken by governments and other agencies, which, in their view, result in exacerbated business cycles and massive inflation.
பிட்காயின் அல்லது வர்ச்சுவல் கரன்சி பற்றி எனக்கு ஆர்வம் அதிகம் இல்லாமல் இருந்தது. அவை குறித்த ஓர் அச்சமும் இருந்துவந்தது. ஆனால் ஹயெக், சந்தை அடிப்படையிலான கரன்சி பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இப்போது வந்துள்ளது. இந்த வார இறுதிக்கான அசைன்மெண்ட், மேலே உள்ள அனைத்தையும் படித்து முடிக்கவேண்டும்:-)

ஹயெக்கின் மிக முக்கியமான அறிவுரையே, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது. பணவீக்கத்தைப் போல ஒரு நாட்டை அழிப்பது வேறு ஒன்றுமில்லை என்கிறார் ஹயெக். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க மானிட்டரி பாலிசி, அவ்வப்போது வட்டி விகிதத்தைச் சற்றே அதிகமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். ஆனால் இது தொழில்துறைக்குச் சிரமத்தைத் தரும். மந்தமான தொழில் நிலைமையை மாற்ற வட்டி விகிதத்தைக் குறைப்பதை ஹயெக் கடுமையாக எதிர்த்தார். தேவையின்றி வட்டிவிகிதத்தை மத்திய வங்கி குறைக்கும்போது அது எந்த அளவுக்குப் பணப் புழக்கத்தை அதிகரித்து, விரைவில் மக்களுக்குப் பயன் ஒன்றுமே இல்லை என்றாகி, பெரும் நாசத்தையும் விளைவிக்கும் என்று ஹயெக் விளக்குகிறார். நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தால் அரசு பணத்தைக் கடன் வாங்கிச் செலவிடுவதால் பொருளாதாரத்தை உந்த முடியும் என்று ஜான் மேனார்ட் கீன்ஸ் சொன்னதையும் ஹயெக் கடுமையாக எதிர்த்தார்.

வட்டி விகிதம் குறையவேண்டும் என்றுதான் நானும் இதுவரை நினைத்துவந்தேன். ஆனால் ஹயெக் வட்டிவிகிதம் பற்றிச் சொல்லியுள்ளதைப் பார்க்கும்போது, நம் நோக்கம் குறைவான வட்டிவிகிதம் அல்ல, குறைவான பணவீக்கம் + அதற்கு ஏற்ற வட்டிவிகிதம் என்பதே என்பது புரிய ஆரம்பித்துள்ளது.

இதைத்தான் நம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முன்வைக்கிறார். இதைத்தான் சுப்ரமணியன் சுவாமி கடுமையாகச் சாடுகிறார். ராஜன் வட்டிவிகிதத்தைக் குறைக்காததுதான் இந்தியப் பொருளாதாரம் மந்தமாக இருக்கக் காரணம் என்கிறார் சுவாமி. எனவே ராஜனைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்கிறார் சுவாமி.

சுவாமியா, ராஜனா என்றால், ராஜன்தான் சரி என்று தோன்றுகிறது. எனவே சுவாமியின் அவதூறுகள் குறித்துக் கவலைப்படாமல் ராஜனுக்கு இன்னொருமுறையும் மோதி பதவி நீட்டிப்பு செய்யவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

Wednesday, May 18, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு - சில குறிப்புகள்

நியூஸ்7 தொலைக்காட்சியில் நேற்று இரவு நடந்த விவாதத்தில் கலந்துகொண்டேன். முழுமையாகப் பலவற்றைப் பேச முடியவில்லை. சில குறிப்புகள் இங்கே:

(1) ஒற்றை மருத்துவ நுழைவுத் தேர்வு - NEET - நியாயமற்றது. அது பல மொழிகளில் இருந்தாலுமே. இது எதிர்க்கப்படவேண்டியதற்கான முதன்மைக் காரணம், மாநிலங்களில் உரிமையில் முரட்டுத்தனமாக இது தலையிடுவதே. அதுவும், எதையும் பரிசீலிக்காமல் உச்ச நீதிமன்றம் தடாலடியாக இதுகுறித்துத் தீர்ப்பு சொல்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும்.

(2) பல மாநிலங்கள் இந்த ஒற்றை நுழைவுத் தேர்வை எதிர்க்கின்றன. தில்லி முதல்வர் கெஜ்ரிவால் இதனை வெகுவாக ஆதரிக்கிறார். தில்லி அரசு தான் ஏதும் மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதில்லை. பிற மாநில அரசுகள் நிறைய மருத்துவக் கல்லூரிகளை நடத்திவருகின்றன. அதுவும் இந்தியாவிலேயே தமிழக அரசுதான் அதிகபட்சமான மருத்துவக் கல்லூரிகளை நடத்திவருகிறது. தன் மருத்துவக் கல்லூரிகளை எப்படி நிரப்புவது என்பதை அதுதான் முடிவு செய்யவேண்டும். மத்திய அரசோ, சிபிஎஸ்சியோ, உச்ச நீதிமன்றமோ அல்ல.

(3) தமிழகத்தில் தற்போதைக்கு மருத்துவம், பொறியியலுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. கவுன்செலிங் முறையில் 12-ம் வகுப்பு பாடங்களில் மதிப்பெண்கள் அடிப்படையில் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இதுதான் ‘சமூக நீதி’, ‘சமதளம்’ என்று சொல்லப்படுகிறது. அதனை நான் ஏற்கமாட்டேன். நுழைவுத் தேர்வு பணம் படைத்தவர்களுக்கும் கோச்சிங் வகுப்புகளுக்குச் செல்லக்கூடிய நகர மக்களுக்கும் மட்டுமே உகந்தது என்பதை நான் முழுமையாக ஏற்கமாட்டேன். தற்போதைய 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கிராம மக்களுக்கும் பணம் இல்லாதவர்களுக்கும் வாய்ப்புகள் முன்பு இருந்ததைவிட அதிகமாகக் கிடைத்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து தமிழக அரசு, நுழைவுத் தேர்வு தேவையா என்பதைக் கருத்தில் கொள்ளலாம்.

(4) தனியார் மருத்துவக் கல்லூரிகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, எப்படி அவர்கள் அதீதமாகச் செய்யும் பணவசூலைத் தடுப்பது? NEET அதற்கு உதவும் என்று சிலர் கருதுகிறார்கள். NEET-க்குபதில், மாநில அரசு கொண்டுவரும் கட்டுப்பாட்டுக்குள் அந்தந்த மாநிலத்தின் தனியார் கல்லூரிகளின் அட்மிஷன் வரவேண்டும் என்று சொன்னால், தமிழகத்தில் அது 12-ம் வகுப்பு மதிப்பெண்ணின்கீழ் வரும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் இதிலிருந்து வழுக்கிச் செல்லப் பார்க்கும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் வருகின்றன. எனவே இக்கல்லூரிகளின் ஆள்சேர்க்கையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும், கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறது. தமிழக அரசு இதனை உடனடியாகச் செய்வது நல்லது. எம்.சி.ஐயின் பொறுப்பு புதிய கல்லூரிகள் உருவாக அனுமதி தருவதும், சரியான உள்கட்டமைப்புகள் கல்லூரிகளில் உள்ளனவா என்பதைப் பரிசோதிப்பதும் மட்டுமே. மற்ற எல்லாவற்றையும் டிகிரி வழங்கும் பல்கலைக்கழகம்தான் முடிவு செய்யவேண்டும்.

(5) நுழைவுத் தேர்வு (Entrance Test) vs தரப்படுத்தப்பட்ட தகுதித் தேர்வு (Standardised Eligibility Test): இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்வதில்லை.

12-ம் வகுப்புப் பரீட்சை என்பது ஒருவரைத் தேர்ச்சி பெற்றவர் என்று சொல்லலாமா, கூடாதா என்பதைப் பரிசோதிக்க வைப்பது. எனவே அது முழு சிலபஸையும் கருத்தில் கொள்ளும். ஒவ்வொரு பரீட்சையும் 3 மணி நேரம் எடுக்கும்.

நுழைவுத் தேர்வு என்பது உங்களுக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதைப் பரிசோதிக்காது. 1000 இடங்கள், ஒரு லட்சம் பேர். எனவே 99,000 பேரைக் கழித்துக்கட்டவேண்டும். அதற்காக மிகக் கடுமையான கேள்விகளைக் கேட்கும். எப்படியோ 99,000 பேரைக் கழித்துக்கட்டும். இன்னொரு நுழைவுத் தேர்வை அடுத்த நாள் வைத்தால், அதே 1,000 பேருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா என்றால் இருக்காது.

ஆனால் தரப்படுத்தப்பட்ட தேர்வின் நோக்கம் வேறு. அனைவருக்கும் ஒரே கேள்வித்தாள் கிடையாது. ஜி.ஆர்.இ, எஸ்.ஏ.டி போன்ற அமெரிக்கத் தேர்வுகளில் இப்போதெல்லாம் கணினியில் தேர்வை எடுக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கேள்விகள் வரும். மாணவர்கள் வெவ்வேறு நாள்களில் தேர்வுகளை எடுக்கலாம். குறிப்பிட்ட காலகட்டத்தில் சிலமுறை நீங்கள் அந்தத் தேர்வை மீண்டும் மீண்டும் எடுத்தாலும் நீங்கள் பெறும் “ஸ்கோர்” கிட்டத்தட்ட ஒரேமாதிரியானதாகத்தான் இருக்கும். இது யாரையும் கழித்துக்கட்டச் செய்யப்படும் தேர்வல்ல. ஒரு மாணவருடைய தற்போதைய தரமதிப்பெண் என்ன என்பதைக் காட்டுவது மட்டுமே. நான் சிபிஎஸ்இ, அவன் ஸ்டேட் போர்ட் என்றெல்லாம் சண்டை போடவேண்டியதில்லை.

எனவே... நம்மூரில் நுழைவுத் தேர்வு என்ற ஒன்றைக் கடாசிவிட்டு, தரத்தேர்வு என்பதை அறிமுகப்படுத்தலாம். இதன் மதிப்பெண் புள்ளியையும், +2-வில் பெற்ற மதிப்பெண்ணையும் வேறுசிலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஐயோ, இன்னொரு தேர்வா, பாவம் இந்தப் பிள்ளைகள் என்று அங்கலாய்ப்பது சரியாகத் தெரியவில்லை.

Thursday, March 31, 2016

ஜெயமோகனின் காண்டீபம் - செம்பதிப்பு முன்பதிவு

ஜெயமோகனின் மகாபாரதத் தொடர் நாவல்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழ்ப் படைப்புலகில் இது மாபெரும் சாதனை. இதுவரையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திர நீலம் என்று ஏழு தொகுதிகள் வெளியாகியுள்ளன.

தற்போது எட்டாவது தொகுதியான ‘காண்டீபம்’ செம்பதிப்புக்கான முற்பதிவு தொடங்கியிருக்கிறது.
அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான். 
மகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்து, கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்ததவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல். 
வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரததின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது. 
இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இல்லை.
இதன் விலை ரூ. 900/- ஏப்ரல் 20-ம் தேதி வரையில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ஆசிரியர் கையெழுத்துடன் மே முதல் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். முன்பதிவு செய்ய நீங்கள் செல்லவேண்டிய இடம் இது.

வெண்முரசு தொடர்வரிசையில் உள்ள முந்தைய புத்தகங்களை வாங்க, கீழ்க்கண்ட சுட்டிகளைப் பயன்படுத்துங்கள். இவை எல்லாமே பேப்பர்பேக் - சாதா அட்டைப் பதிப்புகள். இவை அனைத்தும் கெட்டி அட்டை, கிளாசிக் பதிப்புகளாகவும் கிடைக்கின்றன. ஏழில் சிலவற்றில் ஒருவேளை ஸ்டாக் இல்லாமல் போகலாம். அப்படியானாலும் மே முதல் வாரத்துக்குள் கிடைக்கும். சாதா அட்டைப் பதிப்புகள் எப்போதும் கிடைக்கும்.

இந்திர நீலம்
வெண்முகில் நகரம்
பிரயாகை
நீலம்
வண்ணக்கடல்
மழைப்பாடல்
முதற்கனல்

இவைதவிர, இவற்றிலிருந்து பிரித்தெடுத்து, சிறு நூலாக ஐந்து புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். விலை குறைவான, கையடக்கப் பதிப்புகள் இவை. பரசுராமன், திருதராஷ்டிரன், அம்பை, கர்ணன், துரோணர் ஆகியோரின் கதைகள் முறையே ஆயிரம் கைகள், இருள்விழி, எரிமலர், செம்மணிக் கவசம், புல்லின் தழல் என்னும் புத்தகங்களாக வெளியாகியுள்ளன.

ஆயிரம் கைகள்
இருள்விழி
எரிமலர்
செம்மணிக்கவசம்
புல்லின் தழல்

Tuesday, March 22, 2016

பேலியோ டயட் புத்தக விற்பனை

ஒவ்வொரு பதிப்பாளரும் ஒரு கனவுப் புத்தகத்தை எதிர்பார்த்தபடி இருக்கிறார். அந்தப் புத்தகம் பல பத்தாயிரம் பிரதிகள் விற்கவேண்டும் என்பது அவரது பெருவிருப்பம். அதுவும் அச்சாகி அடுத்த இரண்டு நாள்களில் ஆயிரம் பிரதி விற்பனை ஆகவேண்டும்.

அப்படி எங்களுக்குக் கிடைத்திருக்கும் கனவுப் புத்தகம்தான் நியாண்டர் செல்வன் எழுதியுள்ள “பேலியோ டயட்”.

நியாண்டர் செல்வன், பேலியோ டயட் எனப்படும் ஸ்டார்ச் இல்லாத, கொழுப்பு முதன்மையான உணவுமுறையை இணையத்தில் தமிழில் பிரபலப்படுத்தியவர். ஆரோக்கியம் & நல்வாழ்வு என்னும் ஃபேஸ்புக் குழுமத்தின் முக்கியப் பொறுப்பாளராக இருப்பவர். இந்தக் குழுமத்தில் கிட்டத்தட்ட 40,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கொழுப்பு உணவுமுறை குறித்து தினமணி.காம் இணைய இதழில் நியாண்டர் செல்வன் தொடர்ந்து எழுதிவந்ததன் தொகுத்து மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் “பேலியோ டயட்” கிழக்கு வெளியீடு.

இந்தப் புத்தகத்தை ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம் செய்து எத்தனை பேர் வாங்குவார்கள் என்று பார்க்க முடிவு செய்தோம். புத்தகம் வரப்போகிறது என்ற தகவல் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழும உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஞாயிறு காலை இந்திய நேரப்படி தகவல் வெளியானதும், முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 400 புத்தகங்களுக்குமேல் இணையம் வழியாக ஆர்டர் வந்துவிட்டது. முதல் இரண்டு நாள்களில் 1,000 புத்தகங்களுக்கு ஆர்டர் வந்துவிட்டது. இன்றுமுதல் புத்தகங்கள் ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அடுத்தவாரம் முதற்கொண்டுதான் புத்தகம் தமிழகத்தின் கடைகளுக்கே செல்லப்போகிறது. ஆஃப்லைன் வாசகர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றியோ அல்லது இந்த உணவுமுறை பற்றியோ கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

பொதுவாக இணையக் குழுக்கள் புத்தகம் விற்க உதவா என்று பலர் பேசி நாம் கேட்டிருக்கிறோம். இணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் பேசுவதற்குத்தான் லாயக்கு; புத்தகம் வாங்குபவர்கள் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் வேறு எங்கோ இருக்கிறார்கள் என்பதுதான் கன்வென்ஷனல் விஸ்டம். ஆனால் “ஆரோக்கியம் & நல்வாழ்வு” போன்ற இணையக் குழுக்கள் மிகுந்த ஃபோகஸ் கொண்டவை. பேலியோ உணவுமுறையைப் பயன்படுத்திப் பயனடைந்தவர்கள் பலர் அங்கிருக்கிறார்கள். இந்த உணவுமுறைமூலம் உடல் எடையைக் குறைக்க முடியுமா, ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியுமா, நீரிழிவு நோயை முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்று விரும்பும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒரு மதம்போல இந்த உணவுமுறை “எவாஞ்சலைஸ்” செய்யப்படுகிறது. அதனால்தான் இந்த அளவுக்கு விற்பனையில் வெற்றிகண்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் விற்பனை வரலாறு படைக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/9789384149680.html (ரூ. 150 மதிப்புள்ள இந்தப் புத்தகம் மார்ச் 26 வரை ரூ. 100-க்குக் கிடைக்கும்.) அடுத்த வாரத்துக்குள் டிஜிட்டல் வடிவில் டெய்லிஹண்ட், கூகிள் புக்ஸ் போன்ற இடங்களிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும். ஃபோன்மூலம் வாங்க விரும்புபவர்கள் 94459-01234 என்ற எண்ணை அழையுங்கள்.

Thursday, March 17, 2016

தனிமனித சுதந்தரம் என்னும் உரைகல்

தற்போது நாட்டில் பேசப்பட்டுவரும் பல்வேறு பிரச்னைகளில் என்ன நிலைப்பாடு எடுப்பது  என்பதற்கு நான் பயன்படுத்தும் உரைகல், ‘தனிமனித சுதந்திரம்’ என்பது. இதற்கு அடிப்படையாக இருப்பது தனிமனிதவாதம் (Individualism) என்ற கோட்பாடும் லிபரலிசம் என்ற கோட்பாடும்.

நாம் அனைவரும் அடிப்படையில் தனி மனிதர்கள். பிற குழுக்களின் உறுப்பினர்களாக இருக்கும் அதே நேரத்தில், நம் தனித்துவம் என்பது இந்தக் குழுக்களால் எவ்விதத்திலும் நசுக்கப்பட்டுவிடக்கூடாது. நம் வாழ்க்கை என்பது நம் சுயத்தை உணர விழையும், நம் மீட்சியை நோக்கிச் செல்லும் நம்முடைய ஒரு தனிப்பட்ட பயணம்.

தனிமனிதவாதம் என்பது ஒரு கொள்கையாக ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டில்தான் வலுப்பெறத் தொடங்கியது. இதிலிருந்துதான் அரசனுடைய ஆட்சி என்ற கருத்து விலகி மக்களுடைய ஆட்சி என்ற கருத்து உருவானது. ‘நாம் யார்க்கும் குடி அல்லோம்’ என்பதுதான் இதன் அடிப்படை. நாம் யார்க்கும் கடன்படவில்லை, நம் முடிவுகளை நாமேதான் தீர்மானிக்கிறோம் என்னும் உறுதி இதன் அடிப்படை.

இந்திய அளவில் குடும்பம், சாதி, சமூகம், மதம், தேசம் போன்ற கட்டுமானங்கள் நம் தனித்துவ அடையாளத்தையும் நம் சிந்தனையையும் செயல்பாடுகளையும் பல்வேறு பக்கங்களுக்கு இழுத்துச்செல்ல முயற்சி செய்கின்றன. இந்த அமைப்புகளுக்குள் இருக்கும் அதே நேரம், இவை நம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காது இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் பெரும் சவாலே.

பிற நாடுகளில் குடும்பம், தேசம், மதம் போன்றவை வெவ்வேறு அளவுகளில் தனிமனிதர்மீது தாக்கம் செலுத்துகின்றன. இந்தியாவில் இவற்றுடன் சாதி, சமூகம் இரண்டும் சேர்ந்துகொள்கிறது. சமூகம் என்பது இங்கே நம் சாதியைச் சேர்ந்த நம்முடைய நெருங்கிய உறவினர்களும் நம் சாதியைச் சேர்ந்த ஊர்க்காரர்களும் அடங்கிய ஒரு குழு.

இந்தியாவில் குடும்பமும் சாதி சமூகமும் மக்களுக்குப் பெரும் அரணாக விளங்குகின்றன. அதே நேரம் ஒரு பெரும் சிறைச்சாலையாகவும் விளங்குகின்றன. இந்த அமைப்புகளால் சில பயன்கள் கிடைக்கின்றன; ஆனால் சிலருக்கு இவை கடும் உளைச்சலையும் தருகின்றன. இதனால்தான் இந்தச் சிலர் இந்த அமைப்புகளிலிருந்து பிய்த்துக்கொண்டு வெளியேற விரும்புகிறார்கள். தனிநபருக்கும் குடும்பம் மற்றும் சமூகத்துக்கும் இடையேயான மோதலில் யார் பக்கம் நியாயம் என்ற கேள்வி வருமானால், நான் கண்ணை மூடிக்கொண்டு தனிநபர் பக்க நியாயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வேன். ஏனெனில் குடும்பம் முதற்கொண்டு தேசம் வரையிலான பிற அமைப்புகள் தனிநபர் என்பதற்குக் கீழ்ப்பட்ட நிலையில்தான் இருக்கவேண்டும்.

***

(1) இளவரசன்-திவ்யா, கௌசல்யா-சங்கர் காதலை, அவர்களுடைய திருமணத்தைத் தடுக்க அவர்களுடைய பெற்றோர்களுக்கே உரிமை இல்லை. இதுதான் தனிமனிதவாதமும் லிபரலிசமும் முன்வைக்கும் கருத்தாக்கம். பெற்றோருக்கே இடம் இல்லாதபோது சாதி, சமூகம் போன்றோருக்கு இங்கே சிறிதுகூட இடமில்லை. நாடகக் காதலா, ஏமாற்றா என்றெல்லாம் நாம் பேசவேண்டிய அவசியமே இல்லை. திவ்யாவோ, கௌசல்யாவோ, சங்கரோ, இளவரசனோ சுய நினைவுடன் இந்தச் செயலில் இறங்கியிருக்கிறார்கள். இதனால் நாளை அவர்கள் ஏமாற்றப்பட்டால் அது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்னை. அவர்களை அவர்களுடைய குடும்பங்கள் ஏற்காமல் போகலாம். ஆனால் கொடூரமான முறையில் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தற்கொலைக்குத் தூண்டி, வீடுகளை எரித்து, தெருவில் பட்டப்பகலில் வெட்டி வீழ்த்தி அராஜகம் புரிவது எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

இதுகுறித்த விவாதத்தில் ஈடுபடும் சிலர், ‘உன் பெண்ணை _________க்கு மணம் செய்து தருவாயா, தந்திருக்கிறாயா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். தனிநபர் சுதந்திரத்தை முன்வைக்கும்போது நாம் யாருக்கும் யாரையும் மணம் செய்துதருவதில்லை. அவரவர் தங்களுக்கான துணையைத் தேடிக்கொள்கிறார்கள். அதை நாம் ஏற்றால் கூடி மகிழ்ந்து விழா கொண்டாடுவோம். ஏற்க மனம் இல்லை என்றால் விலகிப்போவோம். அவ்வளவுதான்.

இங்கே நாம் கவனிக்கவேண்டியது, எந்தத் தனி நபரையும் இன்னொருவர் கட்டுப்படுத்தக்கூடாது என்பதே. இங்கே வயது ஒரு பொருட்டல்ல. அதனால்தான் குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் நிலைநாட்ட முனைகிறோம். பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் துன்புறுத்தக்கூடாது; உணவு கொடுக்காமல் தெருவில் ஓடவிடக்கூடாது. பிள்ளைகளைப் பெற்றால் அந்தப் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை எதையும் எதிர்பார்க்காமல் வளர்க்கவேண்டியது அந்தப் பெற்றோரின் கடமை. அவ்வாறு செய்யமுடியாது என்றால் பிள்ளைகளைப் பெறாமல் இருக்கவேண்டும். பெற்று சோறு போட்ட காரணத்தினாலேயே யாரை மணம் முடிக்கவேண்டும், எந்தப் படிப்பு படிக்கவேண்டும், எந்த வேலையில் சேரவேண்டும் என்றெல்லாம் பிள்ளைகளை வற்புறுத்த எந்தப் பெற்றோருக்கும் உரிமை இல்லை.

(2) அடிமை முறையை நாம் இதே உரைகல் கொண்டே எதிர்க்கிறோம். தனிநபர் ஒருவரது சுதந்திரத்தை நசுக்கி, அவரை அடிமையாக வைத்திருக்கும் எந்த முறையும் ஒவ்வாததே. தூக்கி எறியப்படவேண்டியதே.

(3) எந்த மதத்திலும் சேர, மாற, விலக எவருக்கும் உரிமை உண்டு. எந்த உணவையும் உண்ண எவருக்கும் உரிமை உண்டு. இவை மிக முக்கியமாண தனிநபர் சுதந்திரங்கள். ஒருவர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றோ, இந்து மதத்திலிருந்து விலகி கிறிஸ்தவ மதத்தில் சேரக்கூடாது என்றோ சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல ஒருவரை மதமாற்றம் செய்ய ஓர் அமைப்பை உருவாக்குவதையோ, அந்த அமைப்பின்மூலம் பெரும் மக்கள் திரளை மதமாற்றம் செய்ய முனைவதையோ யாரும் தடுக்கக்கூடாது.

ஆனால் இதற்கு எதிராக ஓர் அரசு சட்டங்களைக் கொண்டுவருகிறதே? உதாரணமாக நம் நாட்டின் பல மாநிலங்களில் மாட்டுக்கறி விற்கத் தடை இருக்கிறது. பல மாநிலங்கள் மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றியிருக்கிறார்கள், இயற்ற முனைகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி வருவதற்குமுன்னதாகவே இந்தச் சட்டங்கள் உள்ளன என்றாலும் இன்று பாஜகதான் இந்தச் சட்டங்களை முன்னெடுத்துச் செல்ல மிகவும் விரும்புகிறார்கள்.

அடிப்படையில் இந்தச் சட்டங்கள் யாவுமே மக்கள் விரோதச் சட்டங்கள்,. தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான சட்டங்கள். இம்மாதிரியான சட்டங்கள் உருவாவதைத் தடுக்கவேண்டியது தனிமனிதவாதத்தையும் லிபரலிசத்தையும் முன்வைக்கும் அனைவரும் ஒன்றுசேர்ந்து செய்யவேண்டியது.

(4) இதே தனிமனிதவாதத்தின் அடிப்படையில்தான் அரசு தொழில்துறையில் ஈடுபடுவதை நான் எதிர்க்கிறேன். அரசு தொழில்துறையில் ஈடுபடும்போது ஏற்படும் சமமின்மை மோசமானது. இரு தொழில் நிறுவனங்களிடையே நிகழும் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் இடத்தில் இதே அமைப்பான அரசு உள்ளது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அரசு ஏகபோகம் என்பதையும் நாம் இதற்காகத்தான் எதிர்க்கவேண்டும். உதாரணமாக, இந்தியாவில் நான் ரயில்வே துறையில் ஈடுபட முடியாது. ஏனெனில் அரசு மட்டுமே இதனைச் செய்ய முடியும். இது தனிநபர் சுதந்தரவாதத்துக்கு எதிரானது. எனவேதான் அரசு ரயில்வே துறையிலிருந்து விலகி வழிவிட்டு, தனிநபர்கள் அத்துறையில் ஈடுபட வகை செய்யவேண்டும். தனியார்மயம் ஒன்று மட்டுமே தனிமனித சுதந்திரத்தை முழுமையாக உறுதிசெய்யும்.

(5) தேசியவாதம் என்பது அதீதமாகப் போய்விடக்கூடாது என்பதையும் இந்தத் தனிமனிதவாதமே நிலைநாட்டுகிறது. இப்போது என்னிடம் ஒருவர் வந்து “பாரத் மாதா கீ ஜெய்” என்று சொல் என்று சொன்னால் ‘போடா ம__!” என்றுதான் சொல்வேன். ‘நீ யார் என்னை வற்புறுத்துவதற்கு’ என்பதுதான் என் பதில். ஒவைசியோ வாரிஸ் பட்டானோ ‘பாரத் மாதா கீ ஜெய்’ அல்லது ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்லவேண்டும் என்று அவர்களை வற்புறுத்துவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. அதீத தேசியவாதிகள்  அடுத்தவர் வாழ்க்கையில் தேவையின்றித் தங்கள் மூக்கை நுழைக்கிறார்கள். நான் எப்போது எழுந்து நிற்கவேண்டும், எப்போது உட்காரவேண்டும், என்ன சொல்லவேண்டும், என்ன செய்யவேண்டும், என்ன சாப்பிடவேண்டும் என்று மீண்டும் மீண்டும் அவர்கள் நம்மீது கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். இது முழுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.

***

அரசு என்ற அமைப்பு முக்கியமானது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, நீதியை நிலைநாட்ட, பொது வளங்களை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க, வறியவர்களைக் காக்க, எதிரிகளிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற என்று ஒரு சமூகம் முன்வந்து அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஓர் அரசை உருவாக்குகிறது. அந்த அரசு மக்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல; மக்களிடையே ஏற்படும் மோதல்களை சமரசமான வகையில் தீர்த்துவைப்பதற்காகத்தான் இருக்கிறது. அரசு என்பது மக்களுக்கு மேலானதாக எக்காலத்திலும் ஆகக்கூடாது. தனிமனித சுதந்திரத்தில் கைவைப்பதாக அது எக்காலத்திலும் இருக்கக்கூடாது.

ஆனால் உலகம் முழுவதிலும் உள்ள அரசமைப்புகளும் அவற்றின் அங்கங்களும் சிறிது சிறிதாகத் தங்கள் அதிகாரத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். கம்யூனிச அரசுகள் இதில் முழு மோசம். அவை தனிமனித சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தை மதிப்பதே இல்லை. ராணுவ பலத்தைக்கொண்டு நடத்தப்படும் சர்வாதிகார ஆட்சிகள், அரசர்கள் அல்லது அமீர்கள் தலைமையிலான ஆட்சிகள் போன்றவையும் இதே மாதிரியான ஆபத்தைக்கொண்டவை. எனவேதான் இவை தூக்கி எறியப்படவேண்டும். சிறிது சிறிதாக இது நடந்துகொண்டிருக்கிறது.

மக்களாட்சியில் ஓர் அரசு அதிகாரத்தைத் தன்னகத்தே குவிக்கும் வேலையில் இறங்கினால் அதனைத் தடுத்து நிறுத்தவேண்டியது மக்களின் கடமை.

***

சாதிக்கு எதிராக, மதத்துக்கு எதிராகப் பேசுவோர் இந்த அமைப்புகளைத் தகர்க்கவேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். என் நோக்கம் இஃதல்ல. இந்த சாதி, மத அமைப்புகள் வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. இவற்றை அழிக்கும் போராட்டத்தில் நேர விரயம் செய்ய நான் விரும்பவில்லை. இந்த அமைப்புகள் தனி மனித சுதந்திரத்தின்மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதைத் தடுப்பதுதான் என் நோக்கம். அகமணமுறை என்னும் கட்டுப்பாடு, தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே அது போகவேண்டும். ஆனால் குறிப்பிட்ட பண்டிகையைக் கொண்டாடுவது, குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விரதம் இருப்பது, சூரியனைப் பார்ப்பது, சந்திரனைப் பார்ப்பது என்று எதைவேண்டுமானாலும் நீங்கள் செய்துகொள்ளுங்கள். சொல்லப்போனால் அதைச் செய்யாதே என்று நான் சொல்ல முடியாது. ஏனெனில் அப்படி நான் சொல்வது உங்கள் தனிமனித உரிமையைத் தகர்க்கக்கூடியது.

இதேபோல்தான் மூடநம்பிக்கை எனப்படும் பழக்கவழக்கங்கள். நரபலி - கட்டாயம் தடுக்கப்படவேண்டும். குழந்தைகளை வற்புறுத்தி நெருப்புமீது ஓடவைப்பது - தடுக்கப்படவேண்டும். அதேபோல்தான் வற்புறுத்தி ஒருவரை அலகு குத்திக்கொள்ளச் சொல்வதும் காவடி தூக்கச் சொல்வதும். ஆனால் நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், நீங்கள் விரும்பி அலகு குத்திக்கொண்டால், காவடி தூக்கினால் அல்லது தீமிதித்தால் அதனால் எனக்குப் பிரச்னை இல்லை. அது உங்கள் தனிமனித சுதந்திரம்.

மயானக்கொள்ளையில் ஆட்டைப் பச்சையாகக் கடித்து, குடலை மாலையாக அணிந்து, ரத்தம் குடித்தால் அல்லது ஏறுதழுவுதல் என்று மாட்டை ஓடவைத்து அதன்மீது நூறு பேர் பாய்ந்து விழுந்தால் என்ன செய்யலாம்? இவை சர்ச்சைக்குரிய விஷயங்கள். இவைகுறித்து நாம் விவாதிக்கலாம். மனிதர்களுடைய சுதந்திரத்துக்கு இணையாக மிருகங்களுக்கு எம்மாதிரியான சுதந்திரம் தரப்படவேண்டும்? இறைச்சிக்காக எவற்றை வளர்க்கலாம், கூடாது? வனவிலங்குகள் என்ற பட்டியலில் எவை வரலாம், கூடாது? சிங்கங்களை தனியார் காடுகளில் வளர்த்து அவற்றை வேட்டையாடும் உரிமத்தைத் தனியாருக்குத் தரலாமா? இவையெல்லாம் சர்ச்சைக்குரிய விஷயங்கள். இவை ஒரு சமூகத்தில் விவாதத்துக்கு உரியவை. கூடி முடிவெடுத்து ஒரு திசையை நோக்கிச் செல்லவேண்டும்.

***

நாட்டுக்கு எதிரான செயல், நாட்டைப் பிளவுபடுத்தும் செயல், பேச்சு ஆகியவற்றை எப்படி எடுத்துக்கொள்வது? தனிமனிதர்களுக்கு இதற்கான சுதந்திரம் உள்ளதா? கனையா குமார், உமர் காலித் ஆகியோர் பற்றிய கருத்து என்ன?

ஒருவருடைய சுதந்திரம் என்பது பிறரது சுதந்திரத்தைப் பறிக்காதவரைதான். பிற மனித உயிர்களுக்கு ஆபத்து வரும் என்றால் அரசு இயந்திரம் தலையிடவேண்டியிருக்கும். அவ்வகையில் மாவோயிஸ்ட் இயக்கங்கள் தடை செய்யப்படவேண்டியவை, அவ்வியக்கங்களின் போராளிகள், முடிந்தால் உயிருடன் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டியவர்கள். ஆனால் பிரிவினையைப் பேசுவது, காஷ்மிர் அல்லது தமிழ்நாடு தனியாகப் போகவேண்டும் என்று விரும்புவது ஆகியவை எவ்வகையிலும் பிறருடைய சுதந்திரத்தைப் பாதிப்பதில்லை. எனவே இவற்றைக் கட்டாயம் அனுமதிக்கலாம். கனையா குமாரோ, உமர் காலீதோ அல்லது ஜே.என்.யுவில் முகமூடி அணிந்துகொண்டு ஆசாதி, ஆசாதி என்று கூடிக் கும்மி அடித்த வெளியாரோ, இவர்கள் யார்மீதும் குற்றம் சாட்டவேண்டிய தேவையில்லை. அபத்த சட்டங்களைத்தான் தூக்கி எறியவேண்டும்.

ஆனால் ஆயுதம் தாங்கிப் போரில் ஈடுபடுவோர், பொதுநன்மையைக் குலைப்போர், குண்டுவைப்போர் ஆகியோர் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.

*** முற்றும் ***

Thursday, February 18, 2016

கல்வியை யார் தரவேண்டும்? விவாதம். 21 பிப் 2016

வரும் ஞாயிறு மாலை 4.00 மணிக்கு கோடம்பாக்கம் சினி சிட்டி ஹோட்டலில் லோக்சத்தா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை ஏற்பாடு செய்திருக்கும் ஒரு விவாதத்தில் கலந்துகொள்கிறேன். கல்வி என்பது அரசின் கையில் மட்டுமே இருக்கவேண்டுமா, கல்வியில் தனியாரின் பங்கு என்ன போன்றவை விவாதப் பொருளாக இருக்கும். அனைவரும் பங்கேற்கலாம்.


Friday, February 12, 2016

ஊழலை ஒழிக்கவே முடியாதா?

நேற்று இரவு புதிய தலைமுறை ‘நேர்படப் பேசு’ விவாதத்தில் கலந்துகொண்டேன். அருணன், சுப.வீ, சுபகுணராஜன் ஆகியோர் பிறர். தலைப்பு ‘50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் செழித்துள்ளதா, சீரழிந்துள்ளதா?’ என்பது.


இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் போய்வந்திருக்கிறேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் பல மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். பொதுவான பார்வையில், பிற எந்த மாநிலத்தையும்விட தமிழகம் சிறப்பான நிலையில்தான் இருக்கிறது. பரவலான நகரமயமாக்கம், கல்வியிலும் தொழில்களிலும் உள்ள வளர்ச்சி, மாநில தனிநபர் மொத்த உற்பத்தி, அதிகாரப் பரவலாக்கம், சாலைகள், போக்குவரத்து வசதி, பொதுவிநியோகக் கட்டமைப்பு, மருத்துவ வசதி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இந்த வளர்ச்சியில் கட்டாயம் பங்குண்டு. இந்த வளர்ச்சிக்கு அடிபோட்ட காங்கிரஸ் ஆட்சியின் கடைசி ஆண்டுகளும் இதற்கு ஒரு காரணம்.

1990-களுக்குமுன் வேலை வாய்ப்பு தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் உலகமயமாக்கல் கொடுத்த வாய்ப்பைப் பிற மாநிலங்களைவிடத் தமிழகம் ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டது. தனியார் பொறியியல் கல்லூரிகளின் வளர்ச்சி காரணமாக நிறைய ஐடி பொறியாளர்கள் உருவாகினர். டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற பெரும் ஐடி நிறுவனங்கள் தமிழகத்தையும் தமிழ்ப் பொறியாளர்களையும் நம்பின. நான்கு சக்கர வாகன உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. இதனால் பல உபதொழில்கள் தமிழகத்தில் உருவாயின. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்லூரிக்குச் செல்வோர் விகிதம் அதிகமாக இருக்கிறது. குறைந்தபட்சம் தொலைநிலைக் கல்வி வழியாகவாவது பட்டம் வாங்கிவிடவேண்டும் என்று பலர் படிக்கிறார்கள்.

ஆனால் இவற்றைக் கொண்டு நாம் மகிழ்ச்சி அடைந்துவிட முடியுமா? வளர்ச்சியுடன் கூடவே நம்முடைய எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டேதானே இருக்கிறது? வெறும் தூரதர்ஷன் போதும் என்று இருக்க விரும்புகிறோமா? 100 தமிழ் சானல்களாவது வேண்டும் என்று விரும்புகிறோம் அல்லவா? அதுபோலத்தான்.

வளர்ந்த நாடுகளில் உள்ள வசதி வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துப் பாருங்கள். ஒழுங்குபடுத்தபட்ட நகர அமைப்புமுறை, சீரான சாலைகள், கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம், பலவிதமான பொதுப்போக்குவரத்து வசதிகள், வீடுகளுக்குத் தரமான 24x7 மின்சாரம், குடிநீர், பூங்காக்கள், நூலகங்கள் இவையெல்லாம் தமிழகத்தில் சாத்தியமில்லையா?

தரமான அரசுக் கல்விநிலையங்கள், தகுதியின் அடிப்படையில் (இட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு) தேர்ந்தெடுக்கப்படும் பேராசிரியர்கள், கல்வித்துறையில் ஆழ்ந்த முத்திரை பதித்த துணைவேந்தர்கள் - இவற்றை நாம் ஏன் தமிழகத்தில் எதிர்பார்க்கக்கூடாது?

ஒழுங்காகக் கட்டுப்படுத்தபட்ட தனியார் கல்விநிலையங்கள், தரமற்ற கல்வி நிலையங்களை இழுத்துமூடுவது அல்லது கடுமையான அபராதம் விதிப்பது, சீரான கட்டண நிர்ணயம், கேபிடேஷன் கட்டணம் வாங்குவதைத் தடுப்பது ஆகியவை ஏன் தமிழகத்தில் சாத்தியமில்லை?

மின் உற்பத்தியில் நாம் ஏன் இவ்வளவு பின்தங்கியுள்ளோம்? ஏன் திமுகவும் அஇஅதிமுகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கின்றனர்? ஏன் மக்களின் நியாயமான தேவைகளை அரசால் பூர்த்தி செய்ய முடியவில்லை?

மக்களால் இடைத்தரகர்களைத் தாண்டி நேரடியாக அரசை அணுக முடிகிறதா? தங்களுக்கான சேவைகளை சரியான கட்டணம் கொடுத்துப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறதா? ஏன் இவை இங்கே சாத்தியமாவதில்லை?

*

நம் வாழ்க்கைத்தரம் மேலும் உயராமல் இருப்பதற்கும் நம் மக்களுக்கான வசதி வாய்ப்புகள் வேண்டிய அளவு கிடைக்காமல் இருப்பதற்கும் மிக முக்கியமாண காரணம் ஊழல். இந்த ஊழலை சாதாரணமான ஒன்று என்று புறந்தள்ளிவிட முடியாது. இதில் என்ன சோகம் என்றால், திமுகவும் அஇஅதிமுகவும் மிக வசதியாக இதுகுறித்து விவாதத்தில் ஈடுபடவே மறுக்கிறார்கள். ஊழலை ஒழிக்கவே முடியாது; எந்த மாநிலத்தில்தான் ஊழல் இல்லை; மத்தியில் இல்லாத ஊழலா; ஊழல் என்பது ஒருவிதமான அதிகாரப் பகிர்வுதான் போன்ற பல சுவாரசியமான பதில்கள் வருகின்றன.

இன்னொரு வகையான பதில், மக்கள் நலக் கூட்டணி மட்டும் ஊழல் செய்யாமல் இருந்துவிடப் போகிறார்களா? அவர்களுக்கும் வாப்பு வந்தால் ஊழல் செய்யத்தான் போகிறார்கள் என்பது.

நிச்சயமாக இன்னார் ஊழல் செய்ய மாட்டார் என்று முன்கூட்டியே சொல்லிவிட முடியாது. ஆனால் திமுகவும் அஇஅதிமுகவும் ஊழல் செய்யாமல் இருக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். ஊழல் குறித்து எந்த உத்தரவாதத்தையும் அவர்கள் தரத் தயங்குகிறார்கள். திமுக அதிமுகவின் ஊழலைச் சாடும். அதிமுக, திமுகவின் ஊழலைச் சாடும். அவ்வளவுதான்.

ஊழலைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்பது இன்றைய கட்டாயம். இதை முன்வைக்கும் கட்சிகளை, கூட்டணியையே நாம் ஆதரிக்கவேண்டும். கொள்கைகளில் மாறுபாடு இருந்தால் விவாதிக்கலாம். மாற்றிக்கொள்ளலாம் அல்லது அவர்களை மாற்றவைக்கலாம். ஊழல்குறித்து விவாதிக்க எதுவுமே இல்லை. மக்கள் பணத்தை மடைமாற்றுவதற்கான மோசமான வழிமுறை இந்த ஊழல். கடந்த ஐம்பதாண்டுகளில் பல்கிப் பெருகி, விரிந்து, இன்று ஊழல் தொடாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துவிட்டோம். இந்த ஊழல்தான் நாம் தொடவேண்டிய உயரங்களை நம்மைத் தொடவிடாமல் செய்கிறது. இந்த ஊழல்தான் அரசு அதிகாரிகள் மனிதத்தன்மையை இழக்கச் செய்கிறது. இதுதான் தரமற்ற சேவையை மக்களுக்குத் தர அதிகாரிகளையும், ஒப்பந்தக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் தூண்டுகிறது. இதுதான் இளைஞர்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறது. தங்கள் பிழைப்புக்காக மோசமான வழிகளைத் தேடச் செய்கிறது.

*

Past record என்பதன் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இப்போதுதான் இப்படிப்பட்ட ஒரு கூட்டணியை உருவாக்குகிறார்கள். அதன் தலைவர்களை நம்ப முடியுமா? அவர்கள் தங்கள் நேர்மையை மட்டுமே முன்வைத்து இந்தத் தேர்தலில் இறங்கியுள்ளனர், ஆதாயத்தை முன்வைத்தல்ல என்பது என் கருத்து. ஊழலை ஒழிப்பதன் அவசியத்தைப் பேசுவதற்காகவாவது இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும். மக்கள் வளத்தைக் காப்பதுகுறித்துப் பேசுவதற்காகவது இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும்.

இப்போது நாம் இந்தச் செயலைச் செய்யாவிட்டால், ஊழல் எதிர்ப்பின்பின் அணி சேராவிட்டால், வருங்காலச் சந்ததியினர் ஊழலற்ற சமுதாயம் சாத்தியமே இல்லை என்று கருதிவிடுவார்கள்.

Thursday, February 11, 2016

ஆரியம் குறித்த மூன்று புத்தகங்கள்

இது தமிழ்நாட்டு அரசியல் விவகாரம் கிடையாது:-) இரண்டு புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டேன். மூன்றாவது படித்துக்கொண்டிருக்கிறேன். மூன்றையும் முடிந்தபின்னரே இவைகுறித்து எழுதவேண்டும் என்றிருந்தேன். அதற்கான முன்னெச்சரிக்கைப் பதிவு:
  1. Aryans and British India, Thomas R. Trautmann: ஆரியர்கள் என்ற இன/மொழிக்குடும்பத்தவர் குறித்த கருத்தாக்கம் எவ்வாறு கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாகி வளர்ந்தது என்பது குறித்த முழுமையான பதிவு.
  2. The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate, Edwin Bryant: கிழக்கிந்திய கம்பெனியின் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருதம், பாரசீகம், லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளுக்கிடையேயான ஒற்றுமையைப் புரிந்துகொண்டதிலிருந்து ஆரம்பிக்கும் மொழியியல் துறையில் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் குறித்து இதுகாறும் நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகள், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பரவியிருக்கும் பகுதியில் நிகழ்ந்துள்ள அகழ்வாய்வுகள், இந்தியாவில் ஆரியம் தொடர்பாக நிலவும் விவாதங்கள், அரசியல் பிரச்னைகள் என்ற பலவற்றையும் அலசி ஆராய்ந்து, தன் முடிவு என்று எதையும் சொல்லாமல் பின்புலங்களை மட்டும் விளக்கிச் சென்றிருக்கும் மிக அற்புதமான புத்தகம். இதில் பேசப்பட்டிருக்கும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்தப் புத்தகத்தைப் படித்ததில் ஒரு நன்மை, நான் தீவிரமாக சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்பதுதான்.
  3. The Roots of Hinduism: The Early Aryans and the Indus Civilization, Asko Parpola. இன்னும் பாதிப் புத்தகம் பாக்கி இருக்கிறது. பிரையண்ட் நடுவோடு சொல்லிச் செல்வதற்கு மாற்றாக பர்ப்போலா அடித்து விளையாடுகிறார். அருகிலேயே நின்று பார்த்தவர்போல இப்படித்தான் நடந்தது, அப்படித்தான் நடந்தது என்று சொல்கிறார். அவருக்குத் துளிக்கூடச் சந்தேகமே இல்லை! 

முதலில் முக்கியமானது மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைவரும் அறிஞர்கள். கல்லூரிப் பேராசிரியர்கள். ஆராய்ச்சி இதழ்களில் எழுதுவதோடு நிற்காமல், சாதாரணர்களும் புரிந்துகொள்ளவேண்டும் என்று முனைந்து பாபுலர் புத்தகங்களும் எழுதுகிறார்கள். அதனால்தான் அமெச்சூர் ஆசாமிகளான நமக்கும் கொஞ்சம் தெரிந்துகொள்ளக் கிடைக்கிறது.

இரண்டாவது, ஆரியம் குறித்த பிரச்னை அவ்வளவு எளிதானதல்ல என்பது. இது பல ஆயிரம் அறிஞர்கள் வேலை செய்துகொண்டிருக்கும் துறை. அதில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் மிக மிகக் குறைவானவர்கள். அவர்களில் பலரும் உண்மையில் அறிஞர்கள் இல்லை, அரைவேக்காடுகளே. இதுபற்றி ஓரளவு விஷயஞானம்கூடத் தமிழகக் கல்வி நிலையங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. Philology என்ற துறையில் கல்வி கற்பிக்கும், ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் இந்தியாவில் இருப்பதாகவே தெரியவில்லை. இந்தியாவில் அரசியல் சமூக வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதெல்லாம் பெரும்பாலும் அந்நிய நாட்டு அறிஞர்களே.

மூன்றாவது, இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் பரவியிருந்த பகுதிகளில் மிக விரிவான அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. கண்டுபிடிப்புகள் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றைக் குறித்து பிரையண்ட், பர்ப்போலா புத்தகங்களில்தான் நான் முதலாவதாகக் கேள்விப்படுகிறேன். நம் வரலாற்றுப் புத்தகங்கள் எல்லாமே வேஸ்ட். நாம் மேலோட்டமான சில விஷயங்களை முற்றுமுழுதான முடிவுகளாக நம் பாடப் புத்தகங்களில் போதித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போதைக்கு இது போதும். முடிந்தவரை இந்தப் புத்தகங்களைப் பற்றி பின்னர் எழுதப் பார்க்கிறேன்.

Wednesday, February 10, 2016

ஏன் ஆதரிக்கவேண்டும் மக்கள் நலக் கூட்டணியை?

1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு மிக மோசமானது அஇஅதிமுகதான் என்று நினைக்கிறேன். கடந்த ஆறு தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்துவந்திருக்கிறோம். அவ்வகையில் இம்முறை திமுகதான் வெற்றிபெறவேண்டும். ஆனால் நிலைமை வெகுவாக மாறியுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

கடந்த தேர்தல்களின்போது பிற சிறு கட்சிகளெல்லாம் திமுக, அஇஅதிமுக இருவரில் எவருடன் சேர்வது என்பதில்தான் குறியாக இருந்தனர். கூட்டணி உடன்படிக்கைகள் வெகு சீக்கிரமாக நடந்தேறிவிடும். பேரம் சரியாகப் படியாதபோது சில கட்சிகள் கோபம்கொண்டு தனித்து நிற்பது வழக்கம், அல்லது தேர்தலையே புறக்கணிப்பதும் நடக்கும். 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை விஜயகாந்தின் தேமுதிக மட்டும்தான் திமுக, அஇஅதிமுக இரண்டையும் விட்டு விலகி தனித்து நின்று தங்கள் வாக்குகளைப் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால் அதுவும் 2011-ல் அஇஅதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததுடன் அழிந்துபோனது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக, பாமகவுடனான கூட்டணியால் தேமுதிகவுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. அஇஅதிமுகவின் அதிரடி அரசியலுக்கு தேமுதிக தன் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் இழந்தது.

இந்நிலையில்தான் மதிமுக, விசி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என நால்வரும் திமுகவுடனும் அஇஅதிமுகவுடனும் கூட்டணி அமைப்பது தங்கள் கட்சிகளுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு ஒப்பானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டன. இவ்விரு பெரும் கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதால் தத்தம் கட்சிகளை வளர்க்க முடியாது என்பது மட்டுமல்ல; ஆட்சியில் எவ்விதத்திலும் பங்கு கிடையாது; கூடவே அரசின் திட்டங்களில் எந்தவிதத்திலும் தாக்கம் செலுத்தமுடியாது. ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கலாம். கிடைக்கும் ஓரிரு எம்.எல்.ஏ இடங்களை வைத்துக்கொண்டு அது தரும் வசதிகளை அனுபவித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கலாம்; அவ்வளவுதான்.

பாமகவும் இதனைப் புரிந்துகொண்டது என்றாலும், அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்ற பரப்புரையில் இறங்கி பிற சிறு கட்சிகளிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தது. மேலும் விசி-பாமக விரிசல், வெளிப்படையான தலித் எதிர்நிலைப் பிரசாரம் ஆகியவை அக்கட்சிக்கான ஆதரவுத் தளத்தைக் குறுக்கியது.

மக்கள் நலக் கூட்டணியின் தற்போதைய நான்கு கட்சிகளுக்கும் ஒருவிதத்தில் முன்னோடி தேமுதிகதான். ஆனால் இன்றுவரை தேமுதிக குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. தேமுதிக, தமாக இரண்டும் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்திருந்தால் உண்மையிலேயே மிகப்பெரிய எதிர்ப்பு சக்தியை தமிழகத்தில் உருவாக்கியிருக்க முடியும். மக்கள் நலக் கூட்டணியினர் இதனை உருவாக்கப் பெரிதும் முயன்றார்கள். ஒத்துழைக்க மறுத்தது விஜயகாந்த்தும் வாசனும்தான்.

***

தமிழகத்தில் ஊழலை ஆரம்பித்துவைத்தது கருணாநிதி என்றால் அதைப் பெரிதும் வளர்த்தது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவுமே. கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா செய்த மாபெரும் சாதனை ஊழலை முழுமைப்படுத்தி, மையப்படுத்தி, ஒழுங்குபடுத்தியது. அதாவது முன்பெல்லாம் லஞ்சம் கொடுக்காமல் சில செயல்கள் நடக்கலாம். இடையிடையே பலர் காசு பார்க்கலாம், சில அமைச்சர்கள், செயலர்கள் காசு வாங்காமலும் சில செயல்களைச் செய்யலாம். ஆனால் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஒழுங்குபடுத்தப்பட்டு, எந்தெந்தச் செயல்களுக்கு எவ்வளவு வாங்கவேண்டும் என்று ரேட் கார்ட் நிர்ணயிக்கப்பட்டு, இதிலிருந்து சிறிதும் வழுவாமல் செயல்படவேண்டும் என்று ஆணை விதிக்கப்பட்டு, சேர்க்கப்பட்ட பணம் எப்படிப் பிரித்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் வழிமுறை தரப்பட்டிருக்கிறது. இது தமிழகம் கண்ட மாபெரும் புதுமை.

அஇஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகிய பழ.கருப்பையா இதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் ஊடக நேர்காணல்களில் யாரும் அவரிடம் இதுகுறித்துக் கேள்விகள் கேட்கவே இல்லை. அவரைக் குடைந்து மட்டம் தட்டுவதிலேயே நேரம் போய்விட்டது. ஊழல் மலிந்த தேசம் என்பதைத் தாண்டி, ஊழலால் நெறிப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை, வாழ்க்கைமுறை என்று ஆகியிருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொதுமக்கள் உணரவில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பைசாகூட லஞ்சம் தராது ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் தராது வாங்கப்பட்ட பொது நூலக ஆணை என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது தரப்பட்ட சாலை போடும் ஒப்பந்தம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என்று எவரும் இல்லை. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், ஒவ்வொரு நியமனத்திலும் இலக்கு வைத்து அமைச்சர்கள்முதல் அதிகாரிகள்வரை விரட்டப்பட்டிருக்கின்றனர். முதல்வருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோதே இதுதான் நம் மாநிலத்தில் நடந்துகொண்டிருந்தது.

அஇஅதிமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் துளிக்கூட மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

***

அப்படியென்றால் திமுகவுக்கு வாக்களிக்கலாமே என்ற இயல்பான கேள்வி எழுகிறது. அப்படித்தானே இதற்குமுன்புவரை செயல்பட்டுக்கொண்டிருந்தோம்? இந்தக் கட்சிமீது கோபம் என்றால் அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சிமீது கோபம் என்றால் இந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதுதானே நடைமுறை? கிட்டத்தட்ட இரு கட்சி ஜனநாயகம்தானே தமிழகத்தில் நடந்துகொண்டிருந்தது?

கவனமாகப் பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் திமுக என்னும் கட்சி சுருங்கிக்கொண்டிருக்கிறது என்பது புரியவரும். சென்றமுறை திமுக ஆட்சியில் இருந்தபோது அது தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையைப் பெறவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிப்பதைக் காரணம் காட்டி, கூட்டணி ஆட்சி இல்லாமலேயே தமிழகத்தில் காங்கிரஸின் ஆதரவில் திமுக ஆட்சி நடத்தியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக எந்த அளவுக்குப் பலவீனமாக ஆகியுள்ளது என்பது மேலும் தெரியவந்தது.

ஆனாலும் இந்தப் பலவீனத்தை வெளிக்காட்டாமல், தாங்கள் தனித்து ஆட்சியைப் பிடிப்போம், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே திமுக தலைமை பேசியது. அஇஅதிமுக ஊழல் செய்கிறது என்றால் அதைத் தூக்கி எறிந்துவிட்டு திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த அனைத்துக் கட்சிகளும் தாமாக முன்வந்து உதவவேண்டும் என்று இறுமாப்புடன் எதிர்பார்த்தது திமுக. தன் பலத்தை அதிகமாக மதிப்பிட்டு, பிற கட்சிகளைக் கேவலமாகப் பார்த்ததன் விளைவுதான் மக்கள் நலக் கூட்டணி உருவானது. இன்றுவரை மக்கள் நலக் கூட்டணியை ‘அஇஅதிமுக பி டீம்’, ‘ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியவர்கள்’ என்று தூற்றுவது மட்டும்தான் திமுகவின் எதிர்வினையாக இருந்துவருகிறது.

மதிமுக, விசி, கம்யூனிஸ்டுக் கட்சிகள் திமுகவிடமிருந்து விலகி நிற்க வலுவான காரணங்கள் உள்ளன. ஆனால் மக்களாகிய நாம் திமுகவிடமிருந்து விலகி நிற்கக் காரணங்கள் உள்ளனவா?

திமுக இதுவரை பயணித்துவந்த பாதையிலிருந்து மாறி வேறுமாதிரியான ஆட்சியை அளிக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் நமக்கு இதுவரையில் கிட்டவில்லை. எப்போதெல்லாம் தாம் ஆட்சியில் இருக்கிறோமோ அப்போது தமிழகத்துக்கு நன்மை செய்வதாகவும் அஇஅதிமுக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்துக்குத் தீமை செய்வதாகவும் சொல்வது திமுகவினரின் வாடிக்கை. அப்படியானால் ஏன் மக்கள் ஒவ்வொரு முறையும் திமுகவை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்துள்ளனர்? ஏன் அஇஅதிமுகவுக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்?

திமுகவின் தலைமை உண்மையில் யார் கையில் உள்ளது? கருணாநிதியின் பங்களிப்பு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்? ஏன் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சி முழுமையான கட்டுப்பாட்டைத் தரவில்லை? திமுகமீதான ஊழல் குற்றச்சாட்டுகள், நில அபகரிப்பு வழக்குகள் உண்மையில்லை, பொய்யாகப் புனையப்பட்டவை என்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. புதிய ஆட்சியில் இம்மாதிரியான ஊழல்கள் தொடரா என்பதற்கான சான்றுகளும் இல்லை. புதிய சிந்தனை, தமிழகத்தை மேலெடுத்துச் செல்ல புதிய திட்டங்கள் என்று எவையும் திமுகவிடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கட்சி என்பதற்காகவே வாக்குகள் தாமாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்துவிடும் என்ற அவர்களுடைய தன்னம்பிக்கை நமக்கு ஆச்சரியத்தையே தருகிறது.

***

பாமகவின் அன்புமணியின் பேச்சில் தெரியும் தெளிவும் சிந்தனையும் எனக்குப் பிடித்துள்ளது. ஆனால் அந்தக் கட்சி தனித்து நிற்பதாலும் அதன் கடந்த சில ஆண்டுகளின் சாதிய நோக்காலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இந்தத் தேர்தலில் பாமக அதிகம் சாதிக்க முடியாது. காங்கிரஸ் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குச் செல்லும். பாஜக பெரும்பாலும் தனியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் அல்லது தனித்து நிற்கும் என்று தோன்றுகிறது. மேலும் பாஜக, காங்கிரஸ் இருவருமே தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. அதற்கான சிந்தனையும் இவர்களிடம் இல்லை; பலமும் இல்லை. தேமுதிக, தன் நிலையைத் தெளிவாக்காமல், எங்கே ஆதாயம் அதிகம் கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பதாலேயே தற்போதைக்கு நிராகரிக்கவேண்டிய கட்சியாக உள்ளது.

***

விலக்கவேண்டியவர்கள் அனைவரையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்பது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. இக்கூட்டணியில் இருப்போர் எல்லோரும் உத்தமமா என்று கேட்கலாம். கடந்த காலங்களில் திமுக, அஇஅதிமுக இருவருடனும் மாறிமாறிக் கூட்டணி வைத்தவர்கள்தானே இவர்கள், அப்போது தெரியவில்லையா திமுக, அஇஅதிமுகவினரின் ஊழல்பற்றி என்று கேட்கலாம். பாஜகவின் மதவாதம் பற்றிப் பேசுபவர்கள், மதிமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்ததே என்றும் குற்றம் சாட்டலாம். அந்தவகையில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்குமே ஒருவர் வாக்களிக்க முடியாது. இருக்கும் வாய்ப்புகளில் எது சிறப்பானது என்பதைப் பரிசீலித்து வாக்களிப்பதே சரியானதாக இருக்கும்.

அவ்வகையில் இப்போதைக்கு என் கண்ணில் படுவது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. அதன் உறுப்புக் கட்சிகளில் பலவற்றின் நிலைப்பாடுகளுடன் நமக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லாமல் போகலாம். உதாரணமாக, கம்யூனிஸ்டுகளின் பொருளாதாரக் கொள்கை எனக்கு ஏற்புடையது கிடையாது. ஆனால் இப்படிப் பார்த்துக்கொண்டே போனால் ‘நோட்டா அல்லது வீட்டோடு கிட’ என்பதுதான் பதிலாக வரும்.

மக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உண்டா? ஜெயித்தால் யார் முதல்வர் ஆவார் போன்ற கேள்விகளை சிலர் கேட்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியைப் பொருத்தமட்டில் முழுப் பெரும்பான்மையுடன் ஜெயிக்கவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியில் செய்ததுபோல, திமுக, அஇஅதிமுக இருவருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்து, மக்கள் நலக் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் கிடைத்தாலே போதும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக கெஜ்ரிவாலை காங்கிரஸ் ஆதரித்ததுபோல, திமுக, அஇஅதிமுக இரண்டில் ஒரு கட்சி மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கலாம். குறைந்தபட்சம், தேர்தலுக்குப்பின் மக்கள் நலக் கூட்டணி ஆதரவுடன்தான் யாராக இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் அதுவே மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

***

மக்கள் நலக் கூட்டணியும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் ஒன்றா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஆத்மி என்பது ஒற்றைக் கட்சி. மக்கள் நலக் கூட்டணி என்பது தற்போதைக்கு நான்கு கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணி. இவர்கள் நால்வரும் தேர்தலுக்குப் பிறகு (அல்லது தேர்தலுக்கு முன்னமேகூட) பிரிந்துபோய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? பிரிந்து திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோரிடம் விலை போய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

மிக நியாயமான கேள்விகள். இங்கு trust, personal integrity ஆகியவற்றைத்தான் நாம் அலசிப் பார்க்கவேண்டும். வேறு எந்தக் குறைகள் இருந்தாலும் நம்பிக்கை, தனிநபர் நாணயம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வைகோ ஆகியோரை நான் நம்பத் தயாராக இருக்கிறேன்.

இவர்கள் ஒரு கூட்டாக, ஒரே அணியாக தங்கள் குழுவை தேர்தலுக்குப் பின்னான பேச்சுவார்த்தைகளிலும் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். அப்போது தனிநபர் ஆதாயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் தங்கள் கூட்டணியின் நலனையும் மாநிலத்தின் நலனையும் மட்டுமே முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். தேர்தலுக்குப்பின் திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோருடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி நடத்தவேண்டிவந்தால் குறைந்தபட்சச் செயல் திட்டத்தின் அடிப்படையில் அது இருக்குமாறும், தனிநபர் துதிக்காக அரசின் பணம் விரயமாவதைத் தடுக்குமாறும், ஊழலற்ற ஆட்சி அமையுமாறும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

என் நம்பிக்கை நிறைவேறுமா, வீண்போகுமா என்று தெரியாது. ஆனால் ஏதோவொரு நம்பிக்கையை முன்வைத்துத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்களிக்கவேண்டியிருக்கிறது. முக்கியமாக திமுக, அஇஅதிமுக ஆகியோர் பெறக்கூடிய இடங்களை வெகுவாகக் குறைத்து, மக்கள் நலக் கூட்டணி பெறக்கூடிய இடங்களை அதிகரித்தால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலையை, அதாவது முழுப் பெரும்பான்மை இல்லாது குறைந்தபட்சச் செய்லதிட்டத்தின் அடிப்படையிலான, ஊழலற்ற ஒரு கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதை, அடைய முடியும்.

எனவேதான் மக்கள் நலக் கூட்டணிக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.

மந்தை வாக்காளர்கள் - அதாவது கட்சியின் அனுதாபிகள் - திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய தத்தம் கட்சிகளுக்கு வாக்களிக்கப்போகிறார்கள். அவர்களை மாற்றுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குழம்பும் நடுநிலை வாக்காளர்களை நோக்கியே இந்தப் பதிவு.

வாக்குகள் வீணாகப்போய்விடக்கூடாது என்ற அபத்தமான ஒரு கருத்தாக்கம் தமிழகத்தில் நிலவுகிறது. அதாவது நாம் ஒருவருக்கு வாக்களிக்க, அவர் தோற்றுப்போய்விட்டால் நாம் நம் வாக்கை வீணாக்கிவிட்டோம் என்று நினைக்கும் மனநிலை. ஜெயிப்பவருக்கே நம் வாக்கு போகவேண்டும் என்ற மனநிலை.

இது மிக மிக அபத்தமானது. யார் ஜெயிக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவர்களை நோக்கி நாம் செலுத்தும் எந்த வாக்கும் வீணாவதில்லை. நாம் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்காவிட்டாலும்கூட யாரோ ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார். யாரோ ஒருவர் முதல்வராகப் போகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முற்படாமல் வீட்டிலேயே இருப்பது அல்லது இவர் கட்டாயம் ஜெயித்துவிடுவார் என்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது - இவைதான் நாம் செய்யும் பெரும் தவறுகள். உபயோகமற்ற ஒருவருக்கு வாக்களிப்பது நம்மை எந்தவிதத்திலும் பெருமைப்படுத்தாது. நீங்கள் வாக்களித்து ஜெயிக்கவைத்த ஒருவர்தான் அஇஅதிமுக இந்த அளவுக்கு ஊழல் செய்யக் காரணமாக இருந்திருக்கிறார். இது நம்மைச் சிறுமைப்படுத்தத்தான் வேண்டும். எனவே நாம் வாக்களிக்கப்போகும் ஒருவர் தேர்தலில் ஜெயிக்கப்போகிறாரா அல்லது தோற்கப்போகிறாரா என்பதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம். நாம் விரும்பும் கூட்டணியை ஜெயிக்கவைக்க இன்னும் எத்தனை பேரை நம் தரப்புக்கு மாற்றுவது என்று சிந்தியுங்கள்.

***

இம்முறை நம் வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்குப் போகட்டும். தமிழகம் நல்ல மாற்றத்தைச் சந்திக்க உதவுவோம்.

Thursday, January 07, 2016

கிருஷ்ணகிரியின் (எச்.ஐ.வி) குழந்தைகள்

இன்று காலை, என் நண்பருடைய நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அபூர்வமாகத்தான் இப்படிப்பட்ட சந்திப்புகள் வாய்க்கும்.

அவர் பெயர் சுப்ரமணியம். முரளி என்று அழைக்கப்படுகிறார். பெங்களூரில் வசிக்கிறார். சொந்தமாகத் தொழில் செய்கிறார். நல்ல வருமானம் இருக்கும்.

சில ஆண்டுகளுக்குமுன் கிருஷ்ணகிரி பகுதியில் எச்,ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆரம்பித்திருக்கிறார். அதுதான் இப்போது இவருடைய பெரும்பகுதி நேரத்தை எடுத்துக்கொள்கிறது.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் கிட்டத்தட்ட நார்மலான வாழ்க்கையை வாழ முடியும், பிறரைவிட அதிக ஆண்டுகள்கூட உயிர்வாழ முடியும், திருமணம் செய்துகொள்ள முடியும், பாலுறவு வைத்துக்கொள்ள முடியும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் முரளி. இன்றைய மருத்துவ வளர்ச்சியில் தாயிடமிருந்து பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி தொற்றாமல் இருக்க மருந்துகள் உள்ளன என்றார் அவர்.

எங்கேயோ பெங்களூரில் நிறுவனம் ஒன்றை நடத்திக்கொண்டிருப்பவரை கிருஷ்ணகிரியை நோக்கி இழுத்தது எது என்று கேட்டேன். அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்று தோன்றியது ஏன் என்று கேட்டேன்.

ஒரு கதையைச் சொன்னார்.

ஸ்ரீதேவி என்று ஒரு பெண். அவளுக்கு ஒரு தம்பி. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவளுடைய பெற்றோர்கள் இருவரும் எச்.ஐ.வியால் இறந்துவிட்டனர். குழந்தைகள் இருவருக்குமே எச்.ஐ.வி பரவியிருந்தது. பெற்றோர் கட்டிய சிறு வீட்டில் இருந்துகொண்டு தம்பியைப் பார்த்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று படித்துவந்தாள் அந்தப் பெண். சுற்றி உள்ளவர்கள் ஏதோ உதவி செய்துள்ளனர். ஒரு தொண்டு நிறுவனத்தின்மூலம் குறைந்தபட்சம் ரேஷன் பொருள்கள் இந்தச் சிறு பிள்ளைகளுக்குக் கிடைத்துள்ளன. இப்படி மூன்று ஆண்டுகள் அந்த வீட்டில் தன்னந்தனியாக இந்த இரு குழந்தைகளும் வசிந்துவந்துள்ளன. உறவினர்கள், அக்கம்பக்கத்தவர் யாரும் இந்தப் பிள்ளைகளைத் தங்கள் வீட்டில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. நோய்க்கான மருந்து பற்றிய புரிதல் இல்லாததால் இந்தப் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்படத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு உடல் பாகங்களில் பிரச்னை. அப்படிப்பட்ட நிலையில்தான் முரளி இந்தப் பெண்ணையும் அவளுடைய தம்பியையும் பார்த்திருக்கிறார். வாழவேண்டும் என்ற விருப்பமும் தன் தம்பியைக் காப்பாற்றவேண்டும் என்ற விருப்பமும் இந்தச் சின்னப் பெண்ணிடம் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறார் முரளி.

ஸ்ரீதேவியை மருத்துவமனையில் சேர்த்தபின் உடல்நலம் ஓரளவுக்குத் தேறியுள்ளது. நல்ல சத்தான உணவும் சரியான மருந்துகளும் இருந்தாலே எச்.ஐ.,வியைக் கட்டுப்படுத்திவைக்கலாம். மருந்துகளைத் தமிழக அரசு இலவசமாகவே தருகிறது. உணவும் அன்பும் ஆதரவும்தான் இந்தப் பிள்ளைகளுக்குத் தேவை. இப்போது இந்தப் பெண் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதத் தயாராகிக்கொண்டிருக்கிறாள்.

இன்னொரு கதையையும் சொன்னார் முரளி. துர்கா என்றொரு பெண் குழந்தை, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர். பெற்றோர்கள் இறந்துவிட்டனர். அருகில் ஒரு வீட்டில் இருந்த கணவன், மனைவிக்கு மூன்று பிள்ளைகள். மிகச் சொற்ப வருமானம். ஆனாலும் துர்காவையும் தங்கள் வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். முரளி அந்தக் குடும்பத் தலைவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில், “அந்தப் பொண்ணுக்கு யாருமே இல்லைங்க, எப்படி தனியா விட முடியும்?”

இதுபோன்ற சம்பவங்கள்தாம் முரளியை ‘சில்ட்ரன் ஆஃப் கிருஷ்ணகிரி’ என்ற அமைப்பை ஆரம்பிக்கத் தூண்டின. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சுமார் 300 பெண் குழந்தைகளுக்கு சத்தான உணவு, தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பு, வாழ்வாதாரத்துக்குத் தேவையான படிப்பு, பயிற்சி, பிறகு ஏதேனும் ஒரு நல்ல வேலையை தேடித் தருவது - இதுதான் முரளியின் நோக்கம். இந்தப் பிள்ளைகள் பலரும் அவரவர் உறவினர்களிடமே வசித்துவருகிறார்கள். மருந்துகள், நான் முன்பே சொன்னபடி, தமிழக அரசிடமிருந்து இலவசமாகக் கிடைத்துவிடுகின்றன. சத்தான உணவை அவர்களிடம் கொண்டுசேர்க்கிறார் முரளி. பிள்ளைகள் அருகில் ஏதேனும் ஓர் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள். இப்போது கிருஷ்ணகிரியில் இந்தக் குழந்தைகள் படிப்பதற்காக ஒரு பள்ளியைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முரளி.

எச்.ஐ.வி நோய் பரவுவது குறித்தும், பெற்றோர்களின் (பெரும்பாலான நேரங்களில் ஆண்களின்) தவறால் எவ்வாறு அப்பாவிக் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகின்றன என்பது குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். கிருஷ்ணகிரி பகுதியில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் பாலியல் தொழில் குறித்துக் கொஞ்சம் தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.

குழந்தைகள் வளரும் பருவத்தில், அவர்களுடைய பதின்ம வயதுகளில் பலவிதமான உடல், மன பாதிப்புகளுக்கு ஆட்படுகிறார்கள். மத்திய வர்க்கக் குடும்பங்களில் உள்ள ஆரோக்கியமான குழந்தைகளாலேயே இதை எதிர்கொள்வது மிகவும் எளிதல்ல. ஆனால் பெற்றோரை இழந்த, எச்.ஐ.வி போன்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இத்தனையையும் மீறி இந்தக் குழந்தைகளிடம் ஒரு நம்பிக்கையை விதைக்க முடிகிறது, வாழ்க்கை குறித்த நேர்ச் சிந்தனையை உருவாக்க முடிகிறது என்கிறார் முரளி.

ஆனால் அதே நேரம், ஆண் குழந்தைகளைப் பராமரிப்பது மிகவும் கடினம் என்கிறார். இவருடைய அமைப்பில் பெண் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண்களுமே எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சமூக நலச் சேவகர்கள். ஆண் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளப் பொறுப்பான ஆண் சேவகர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கலைப் பற்றியும் முரளி பேசினார். இம்மாதிரியான பாதுகாப்பகங்களில் செக்ஸுவல் அப்யூஸ் என்பது பெரிய பிரச்னை. அம்மாதிரி இல்லாமல் பாதுகாப்பான ஓர் அமைப்பை உருவாக்குவது மிகவும் கடினமானது.

நம்மிடையே ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. தீர்க்கத்தான் பல்லாயிரம் பேர் வேண்டும்.