Friday, September 30, 2005

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு

இன்று திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 10வது மாநில மாநாடு தொடங்கியது. ஞாயிறு வரையில் தொடரும்.

த.மு.எ.ச ஓர் இடதுசாரி அமைப்பு. தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் அரசியல் தளத்தில் பெருத்த பலத்துடன் இல்லாதிருந்தாலும், பல்வேறு தளங்களில் அமைப்பு ரீதியாக வலுவாக உள்ளனர். தொழிற்சங்கங்கள் ஒருபக்கம். இப்படி எழுத்தாளர்களை ஒன்றுதிரட்டி மாவட்டம் மாவட்டமாக அமைப்புகளை ஏற்படுத்துவது மற்றொன்று. (இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் என்ன செய்வார்கள் என்பது புரியவில்லை.) தமிழ்நாடு அறிவியல் அமைப்பு - TamilNadu Science Forum என்னும் அமைப்பும் இடதுசாரி அமைப்புதான் என்பதை வெகு சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். அவ்வப்போது தமிழில் சில அறிவியல் புத்தகங்கள் வெளியிடுவது, மாதாமாதம் தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவியலுக்கான இதழ்களை வெளியிடுவது (தமிழில் 'துளிர்' என்ற இதழ்), பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பது போன்றவை Science Forum வேலைகள்.

சில பத்திரிகைகள் (தீக்கதிர்...), புத்தக வெளியீட்டு நிலையம் (பாரதி புத்தகாலயம் நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்குவது. அதைத்தவிர பல இடதுசாரி சாயும் பதிப்பாளர்களும் உள்ளனர்), புத்தக விற்பனை நிலையங்கள் என்று இடதுசாரிகளின் கை கலை, இலக்கியத் துறைகள் - முக்கியமாக எழுத்துத் துறையில் - வலுவாக உள்ளது.

நான் திருவண்ணாமலை சென்றது அங்கு சில எழுத்தாளர்களைச் சந்திக்க. மற்றபடி எனக்கு தனிப்பட்ட முறையில் சுவாரசியமாக ஒன்றும் இல்லை. காலையில் அரங்கினுள் நான் நுழையும்போது தெலுகு கவிஞர் வோல்கா என்பவர் (லலிதா குமாரி) தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார். அதை ஒருவர் தமிழில் சொதப்பலாக, தப்பு தப்பாக மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். உலகமயமாதல், மத அடிப்படைவாதம், பெண்ணியம் என்று சில விஷயங்களைத் தொட்டுச் சென்றது பேச்சு. நாளைய தீக்கதிரில் முழுமையான தகவல்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

-*-

என் முதல் கேள்வி... ஏன் தமிழகத்தில் இடதுசாரிகளைத் தவிர பிற அரசியல் கட்சிகள் வெறும் முட்டாள்தனத்தை மட்டுமே வளர்க்கின்றன? ஏன் அவை சிறிதும் பிற விஷயங்களில் ஈடுபடுவதில்லை? அம்மாவுக்கும், ஐயாக்களுக்கும் கட் அவுட் வைப்பதைத் தவிர வேறு எதையுமே செய்யத் திராணியற்றவர்களாக உள்ளார்கள் அந்தந்தக் கட்சிகளின் அமைப்பாளர்கள்? கருணாநிதியாவது அவ்வப்போது முரசொலியில் புகுந்து விளையாடுகிறார். மற்ற எல்லோரும் ஒட்டுமொத்தமான முட்டாள்களாக உள்ளனர். மேடைப்பேச்சில் கண்டதையும் உளறி, அடுக்குமொழியில் எதையாவது பேசிப் பிழைத்தால் போதும் என்று காலத்தை ஓட்டுகிறார்கள்?

இரண்டாவது கேள்வி: இடதுசாரிகள் - முக்கியமாக கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்டுகள் (CPM) ஏன் தமிழகத்தில் நன்றாகக் காலூன்றவில்லை? ஏன் மக்கள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை?

-*-

பி.கு. இடதுசாரிகளுக்கும் இடது பக்கத்தில் சில fringe கோஷ்டிகள் உள்ளன. புரட்சிகர மாணவர் பேரவை (அல்லது அதைப்போல வேறெதோ பெயரில் ஒன்று) மாநாடு நடக்கும் இடத்துக்கு அருகில் போஸ்டர்களை அடித்து ஒட்டிவைத்திருந்தது. த.மு.எ.சங்கத்தைக் கேலி செய்து இவர்கள் பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிக்கிறார்கள், வழவழா கொழகொழா ஆசாமிகள் என்று பொருள் படும்படி நல்ல சிவப்பு வண்ணத்தில் போஸ்டர்.

பி.பி.கு. மக்கள் கலை இலக்கியக் கழகம் எங்கிருந்து வருகிறது; இடதுகளுக்கும் இடதா, வலதா என்று தெரியவில்லை. சமீபத்தில் தமிழ் எழுத்தாளர்கள் இரண்டு பேர் (தண்ணி அடித்து விட்டு) எழுதிய கூட்டுக் கவிதையில் ஏதோ சரியாக இல்லை என்று சொல்லி, அவர்களை மிரட்டி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதாகச் செய்தி வந்துள்ளது.

Thursday, September 29, 2005

நிலத்தடி, ஆற்று நீர் பராமரிப்பு

சமீப காலமாக பல இடதுசாரி இயக்கங்களும் கிராமத்து மக்களும் கோக், பெப்சி போன்ற நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை எதிர்க்கிறார்கள். கேரளாவில் பிளாச்சிமடாவில் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் தொடர்கிறது.

பாட்டிலில் தண்ணீரை அடைத்து லிட்டருக்கு ரூ. 12 என விற்கும் நிறுவனங்களுக்கும் கோக், பெப்சி போன்ற கார்போனிக் ஆசிட் பானங்களை வழங்கும் நிறுவனங்களுக்கும் அரசுகள் இலவசமாக நிலத்தடி நீரையோ அல்லது ஆற்றுத் தண்ணீரையோ தானம் செய்வது சரியா என்பது நியாயமான கேள்வி.

மக்கள் கலை இயக்கியக் கழகத்தினர் பல ஊர்களிலும் இதைப் பற்றிப் பேசி வருகிறார்கள். திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடக்கும் வளாகத்தின் வெளியே (மக்கள் மன்றம், தில்லை நகர்) அவர்கள் சில துண்டுப் பிரசுரங்களை அனைவருக்கும் விநியோகித்த வண்ணம் இருந்தனர். பல கார்ட்டூன்களை வரைந்து வைத்திருந்தனர். ஷரத் ஹக்சரின் புகழ் பெற்ற படமும் அதில் அடங்கும். அத்துடன் தமிழ் நடிகர்கள் கோக் பானத்துக்கான விளம்பரப் படங்களில் நடிப்பதை கேலிச்சித்திரமாக்கி வைத்திருந்தனர்.

கங்கை கொண்டான் கிராமத்துக்கு அருகில் தாமிரவருணி ஆற்றில் இருந்து லிட்டருக்கு ஒண்ணரை பைசாவுக்கு கோக் நிறுவனத்துக்குத் தண்ணீர் தருவதாக தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தி. இதை நாம் அனைவருமே எதிர்த்துப் போராட வேண்டும்.

என்னுடைய கருத்து: கோக், பெப்சி, இன்னபிற ரசாயனத் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு நிலத்தடி நீர், ஆற்று நீர் ஆகியவற்றை இலவசமாகவோ, மேற்படி சொன்னது போல பிச்சைக்காசு அளவுக்கோ உபயோகப்படுத்த உரிமையில்லை என்று சட்டம் கொண்டுவரவேண்டும். ஏனெனில் இந்தியாவின் தண்ணீர் நிலைமை அப்படி இருக்கிறது. தண்ணீர் என்பது பொது மக்களின் அத்தியாவசியப் பயன்பாட்டுக்கும் மட்டும்தான் என்றும், அதற்கு மேலாக விவசாயத்துக்கு மட்டும்தான் (அதிலும் சிறிய விவசாயிகளுக்கு இலவசமாகவும், பெரிய விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படவும் வேண்டும்) என்றும் இருக்க வேண்டும்.

ஆனால் அதே சமயம் கோக், பெப்சி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கவே கூடாதா என்ற கேள்வி எழுகிறது. இரண்டு வகைகளில் இந்த நிறுவனங்கள் இயங்கலாம்:

1. கடலிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வைத்து பானங்கள் தயாரிக்கலாம். சுத்திகரிப்பை அவர்களே செய்யலாம், அல்லது நீரைச் சுத்திகரிக்கும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களிடமிருந்து விலைக்கு தண்ணீரை வாங்கிக்கொள்ளலாம்.

2. கடலை ஒட்டி தொழிற்சாலைகளை அமைக்கமுடியாத பட்சத்தில், எப்படி மின்சார கிரெடிட் வழங்கப்படுகிறதோ அதைப்போல தண்ணீர் கிரெடிட் வழங்கும் முறை மூலம் இந்தத் தொழிற்சாலைகள் இயங்கலாம். மின்சாரம் கிரிட் மூலமாகப் பாயக்கூடியது. ஆனால் தண்ணீரை அவ்வளவு எளிதாகப் பாய வைக்க முடியாது. அதனால் சர்சார்ஜ் போடவேண்டியிருக்கும். உதாரணத்துக்கு உபரி நீர் கிடைக்கும் ஆற்றுக்குப் பக்கத்தில் கோக் ஆலை அமைக்கப்பட்டாலும், கோக் வேறு ஏதோ இடத்தில் கடலை ஒட்டி நீரைச் சுத்திகரிக்கும் நிலையத்தை அமைத்து, தான் உபயோகப்படுத்தும் அளவுக்கான நீரை கடலிலிருந்து எடுத்து சுத்திகரித்து அரசுக்கு வழங்கவேண்டும். அத்துடன் மேற்படி தண்ணீருக்கு லிட்டருக்கு ஒரு நியாயமான அளவு சர்சார்ஜ் வழங்க வேண்டும். இதை வைத்து அரசு இந்தத் தண்ணீரை மக்களுக்கு வழங்க முற்படலாம்.

இந்த இரண்டும் நியாயமான எண்ணங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

Wednesday, September 28, 2005

தென் தமிழ்நாட்டில் டான் கிஹோத்தே

கன்யாகுமரியிலிருந்து திருநெல்வேலி ரயில் பாதையில் பயணம் செய்தால் வயல்வெளிகளெங்கும் முளைத்திருக்கும் ராட்சஸக் காற்றாடிகளைப் பார்க்கத் தவறமாட்டீர்கள்!

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் விளைபொருள்களைப் பயிரிடுவதற்குப்பதில் காற்றாடிகளைப் பயிரிட்டு, மின்சாரத்தை விளைவிப்பதன் மூலம் அதிகமாகப் பணம் பார்க்கமுடியும் என்று மக்களுக்குத் தோன்றியுள்ளது என்று நினைக்கிறேன்.

அந்த அளவுக்கு ஏக்கருக்கு நூற்றுக்கணக்கில் காற்றாடிகள்.

இந்தியாவில் தனியார் நிறுவனங்களும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம், அதை பிற விநியோக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம், நிறுவனங்கள் மின்சாரத்துக்கான கிரெடிட்டைப் பெறலாம் என்ற நிலை புதிய மின்சாரக் கொள்கைகளுக்குப் பிறகு உருவானதாலும், மாற்று மின்சாரம் தயாரிப்பதன் அவசியத்தை இந்தியா உணர்ந்ததாலும் இன்று காற்றாடி மின்சாரம் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. மின்சார கிரெடிட் என்றால் எந்த ஒரு நிறுவனமும் எங்காவது மின்சாரத்தைத் தயாரித்து அதை பவர் கிரிட்டில் சேர்த்து, பின் வேறெங்காவது மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது தான் தயாரித்த அளவுக்கான மின்சாரத்தைக் கழித்துக்கொண்டு மீதிக்குப் பணம் செலுத்தினால் போதும்.

தூத்துக்குடியில் பல இடங்களில் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் காற்றாடிகளைப் பார்த்தேன்.

சுஸ்லான் எனப்படும் குஜராத்தி நிறுவனம் (இந்தியாவில் உருவான பன்னாட்டு நிறுவனம்) இப்பொழுது இந்தியாவில் சக்கைபோடு போடுகிறது. இப்பொழுது இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிட விரும்பி ஐபிஓ செய்கிறது.

இந்த நிறுவனத்தில் Red herring prospectus-ஐப் படித்துப் பார்த்தேன். நிறுவனத்தின் புரோமோட்டர்கள் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனாலும் கிரிஸ்கேபிடல், சிடிபேங் ஆகியவை இந்த நிறுவனத்தில் வென்ச்சர் முதலீடு செய்து நிகழும் ஐபிஓ சமயத்தில் கன்னா பின்னாவென்று பணம் பார்க்கப்போகின்றன. (சிடிகார்ப் ஒரு ஷேருக்கு ரூ. 21.60 என்று ஏப்ரல் 2004ல் முதலீடு செய்து இப்பொழுது 18 மாதங்களுக்குள்ளாக கிட்டத்தட்ட ரூ. 425-510 பார்க்கப்போகிறது. கிரிஸ்கேபிடல் ஷேருக்கு ரூ. 27.10 செலவு செய்து ஏற்கெனவே ரூ. 385.60 பார்த்து விட்டதாம்! இனி அதற்கு மேலும் கிடைக்கும்.)

சுஸ்லான் நிறுவனத்தின் கடந்த வருட வளர்ச்சிக்கு - நிகர லாபம் ரூ. 146 கோடியிலிருந்து ரூ. 361 கோடியாக உயர்ந்துள்ளது - தமிழகத்தில் அவர்களது விற்பனை பெரும் அளவு இருப்பதுதான் முக்கியக் காரணமாகும். தமிழகத்தில் தொடர்ச்சியாக தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் பாதிக்கப்படுவதால் நாளடைவில் தமிழகம் ஒட்டுமொத்தமாக மின்சார அறுவடையை நோக்கிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சில ஆச்சரியமான புள்ளிவிவரங்கள்:

காற்றாடி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் உலகிலேயே இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது - 3595 மெகாவாட். (ஜூலை 2005 வரையில்)

இந்தியாவிலேயே தமிழகம் மிக முன்னணியில் - முதல் இடத்தில் உள்ளது. 2037 மெகாவாட்! (அதில் பெரும்பகுதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களில்)

இது தமிழகத்தில் உற்பத்தியாகும் அனைத்துவகை மின்சாரத்திலுமாக 18% ஆகும்!

Tuesday, September 27, 2005

பாரமவுண்ட் ஏர்லைன்ஸ் தொடக்கம்

தமிழகத்தின் உட்புறத்தில் சேவையைத் தொடங்கும் இரண்டாவது தனியார் விமான நிறுவனம் பாரமவுண்ட் ஏர்லைன்ஸ். சென்ற வாரம் சேவையைத் தொடங்கிய இந்த நிறுவனம் கோவை-தில்லி, கொச்சி-தில்லி, கோவை-சென்னை ஆகிய வழிகளில் பறக்குமாம்.

இப்பொழுதைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் வகையறாக்கள் (அல்லயன்ஸ் ஏர் உடன் சேர்த்து) தவிர்த்து ஜெட் ஏர்வேஸ் கோவை, மதுரை நகரங்களுக்குப் பறக்கிறது. திருச்சிக்கு இந்தியன் ஏர்லைன்ஸை விட்டால் வேறு வழியில்லை.

கீழ்க்கண்ட வழிகளை ஏர்லைன்ஸ்காரர்கள் உடனடியாக யோசிக்கலாம்.

மதுரை-பெங்களூர்
மதுரை-மும்பை
கோவை-மும்பை
திருச்சி-மும்பை
மதுரை-தில்லி
திருச்சி-தில்லி
சென்னை-நாகர்கோவில் (ஏர்போர்ட் எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை!)

பல மதுரை, திருச்சி, கோவை ஆசாமிகள் மும்பை, தில்லிக்குப் போக வேண்டியுள்ளது.

டெக்கான் இன்னமும் தீவிரமாக தமிழக நகரங்களைக் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

ஹச் - பிபிஎல் மொபைல் நிறுவன இணைதல்

சில மாதங்களுக்கு முன்னர் தொலைதொடர்பு வட்டங்களான தமிழகம், சென்னை ஆகியவை மொபைல்களைப் பொறுத்தவரையில் இணைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் ஆகியவையும் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் ஏர்செல்லும் தமிழகம் முழுவதற்குமான ரோமிங்கை ரத்துசெய்து, மொபைல் -> மொபைல் அழைப்புகளின் விலையையும் குறைத்தன. ஆனால் சென்னையில் மட்டும் இயங்கும் ஹச், சென்னை தவிர்த்த தமிழகத்தில் மட்டும் இயங்கும் பிபிஎல் ஆகியவை சிறிது தடுமாற வேண்டியிருந்தது.

ஜூலை மாதத்தில் எஸ்ஸார் நிறுவனம் பிபிஎல் மொபைல் நிறுவனத்தை விலைக்கு வாங்க முடிவுசெய்தது. அதைத் தொடர்ந்து விரைவிலேயே பிபிஎல் நிறுவனம் ஹச்சிசன் எஸ்ஸார் நிறுவனத்துடன் இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படியான செய்திகள் அதிகாரபூர்வமாக நேற்று வெளியாயின.

தமிழகத்தில் பிபிஎல் நிறுவனம் வளர்ச்சி குறைவாகவே இருந்துவந்தது. தேவையான முதலீடு செய்யக்கூடிய சக்தி அவர்களிடத்தில் இல்லை. இனி விரைவில் தமிழகம் முழுவதும் ஹச் சேவை வேகமாகப் பரவத்தொடங்கும்.

கடந்த பத்து தினங்களாக தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்று வந்தேன். மொபைல் தொலைபேசிகள் எந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாததாகப் பயன்படுகிறது என்பதைப் பார்க்க முடிந்தது. அதே நேரம் கூட்டம் அதிகமான பேருந்தில் "நீங்க சொல்லுங்க மச்சான், நான் மதியமா வீட்டுக்கு வந்து பேசறேன்" என்று ஆரம்பித்து அடுத்த அரைமணிநேரம் குடும்பக் கதைகளை மிகச் சத்தமாகப் பேசுவதும் அதிகரித்துள்ளது. விரைவில் பிறருக்குத் தொல்லை கொடுக்காமல் பேச நம் மக்கள் கற்றுக்கொள்வார்களாக!

Friday, September 16, 2005

கர்நாடக ஜாதி அரசியல்

சில நாள்களுக்கு முன் கர்நாடகத்தின் ஆளும் காங்கிரஸ் + ஜனதா தளம் (எஸ்) கூட்டணியிலிருந்து சித்தராமையா என்னும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜனதா தள எம்.எல்.ஏ துணை முதல்வர் பதவியிலிருந்து விலக்கப்பட்டது பற்றி செய்தித்தாளில் படித்திருந்தேன்.

ஆனால் ஏன் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைக்கவில்லை. சித்தராமையா என்ன தவறு செய்துவிட்டார் என்பது சரியாகப் புரியவில்லை. ஏதோ பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் மாநாடு நடந்தது என்றும் அதற்கு சித்தராமையா தலைமை தாங்கினார் என்றும் இந்த மாநாடு கட்சிச் சார்பற்று கட்சிகளுக்குக் குறுக்காக நடைபெற்றது என்று மட்டும் புரிந்தது. அது எந்த வகையில் தேவ கவுடாவைப் பாதித்தது என்று புரியவில்லை.

இன்று, எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் கர்நாடகத்தின் ஜாதி அரசியல் பற்றிய ஒரு கட்டுரை படிக்கக் கிடைத்தது.

இப்பொழுது ஓரளவுக்கு அங்குள்ள அரசியல் நிலைமை புரிகிறது. குறைந்தபட்சம் இனி அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டுக்களை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று தோன்றுகிறது. ஆனாலும் சில விஷயங்கள் என்னைக் குழப்பிவிட்டன.

கர்நாடகத்தில் அரசியல் வலு பெற்ற இரண்டு முக்கிய ஜாதிகள் - லிங்காயத்கள், வொக்கலிகர்கள். காங்கிரஸ், ஜனதா தளம், பாஜக என்று மூன்று பெரும் கட்சிகள் அங்கு இருந்தாலும் ஜாதி அடிப்படையில்தான் பல விஷயங்கள் நடைபெறுகின்றன. பிற வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு (பிற மதமோ அல்லது பிற ஜாதிகளோ), காங்கிரஸில்தான் ஓரளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. பாஜக தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் அனந்த் குமாரைத் தவிர பிறர் அனைவரும் லிங்காயத்கள்.

தேவ கவுடா வொக்கலிகர். சித்தராமையா குருபா என்னும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஒரு கட்டத்தில் சித்தராமையா தனியாக, தன்னளவிலேயே முதல்வர் பதவியை நோக்கிப் போய்விட்டால் என்ன செய்வது என்பதற்காக அவரைக் கீழே இறக்கிவிட்டு MP பிரகாஷ் என்னும் லிங்காயத்தை துணை முதல்வராக ஆக்கியுள்ளார் தேவ கவுடா. சித்தராமையா துணை முதல்வராகத் தொடர்ந்தால் வொக்கலிகர்களின் வாக்குகள் ஜனதா தளத்துக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதால் அவரைப் ப்தவியிலிருந்து வெளியேற்றினார் தேவ கவுடா என்று கட்டுரை ஆசிரியர் சொல்கிறார். ஆனால் வொக்கலிகர்களை மகிழ்விக்க வேண்டுமென்றால் ஏன் தேவ கவுடா தனது மகன் குமாரஸ்வாமியை துணை முதல்வராக்கவில்லை? அந்தப் பதவியை ஒரு லிங்காயத் (பிரகாஷ்) தலைவருக்கு ஏன் கொடுத்தார்?

லிங்காயத் தலைவர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கு ஒருவர் உதவியது பற்றி கட்டுரை ஆசிரியர் ஓரிடத்தில் தகவல் தருகிறார். ஆனால் அப்படி இருக்கும்போது ஏன் வொக்கலிகரான தேவ கவுடா, கடந்த சட்டசபையில் முதலமைச்சராக இருந்த வொக்கலிகரான SM கிருஷ்ணாவை ஒழித்துவிட்டு வெளி வகுப்பினரான தரம் சிங்கை உள்ளே கொண்டுவந்தார் என்று புரியவில்லை.

-*-

தமிழகத்தில் மேலோட்டமாகப் பார்க்கும்போது தேவர், வன்னியர் என்ற இரண்டு குழுக்களும் பெரும் எண்ணிக்கையில் இருப்பது போலத் தெரிகிறது - கிட்டத்தட்ட கர்நாடகத்தில் லிங்காயத், வொக்கலிகர்கள் போல. முதலியார்கள், நாடார்கள், ஷெட்யூல்ட் இனத்தவர், பழங்குடியினர், இன்னபிறர் ஆகியோர் மேலே உள்ள இரண்டு குழுக்கள் அளவுக்கு இல்லை.

அதிமுகவில் தேவர்கள் செல்வாக்கு அதிகம் என்று தெரிகிறது. வன்னியர்கள் ராமதாஸ் தலைமையில் தனியாகத் தெரிந்தாலும் திமுக, அதிமுக என்று இரண்டிலும் ஓரளவுக்கு இருக்கிறார்கள். தலித்துகளுக்கு என்று இப்பொழுது தனிக்குரல் வெளிவரத் தொடங்கியுள்ளது.

தமிழகத்திலும் வரும் காலங்களில் கர்நாடகத்தைப் போலவே வன்னியர், தேவர் என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஜாதி வகையில் மட்டுமே அரசியல் நடத்தும் காலம் வருமா?

Wednesday, September 14, 2005

ராஜபக்ஷேயின் ஒப்பந்தங்கள்

இலங்கையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் SLFP கட்சியின் சார்பில் நிற்க இருக்கும் வேட்பாளரும் தற்போதைய பிரதமருமான மஹிந்தா ராஜபக்ஷே, ஜனதா விமுக்தி பெரமுன கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி ஒரு செய்தி வெளியானது. இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட முறையில் ராஜபக்ஷேயுடன் ஜே.வி.பி கட்சி செய்துகொண்டது என்று அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்துக்குப் பிறகு SLFP கட்சித் தலைவரும் தற்போதைய குடியரசுத் தலைவருமான சந்திரிகா குமரதுங்க, ராஜபக்ஷேயின் ஒப்பந்தத்தைக் கடுமையாக விமரிசித்துள்ளார். அவரது சகோதரர் அணுர பண்டாரநாயகவும் - கதிர்காமர் மரணத்துக்குப் பின்னான வெளியுறவுத்துறை அமைச்சரும், SLFPயின் அடுத்த பிரதமர் பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் - இந்த ஒப்பந்தத்தை விமரிசித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக இரண்டு ஷரத்துகள் பற்றி பிரச்னை எழுந்துள்ளது. ஒன்று, சுனாமிக்குப் பிறகான மறுசீரமைப்புக் குழுவில் விடுதலைப் புலிகளும் ஈடுபடுமாறு உருவாக்கிய P-TOMS எனப்படும் குழுவை ஒழித்துக்கட்டுவது. ஜே.வி.பி இந்தக் குழு மீண்டும் கொண்டுவரப்படக்கூடாது என்று விரும்புகிறது. ஜே.வி.பி தொடுத்த வழக்கால்தான் இந்தக் குழு இலங்கை உச்ச நீதிமன்றத்தால் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது, இலங்கையின் அரசியலமைப்பில் சமஷ்டி அரசுமுறை (federalism) கொண்டுவரப்படாமல், இப்பொழுது இருக்கும் unitary அமைப்பு முறை - அதாவது வலுவான, சர்வாதிகாரம் படைத்த மைய அரசு, ஒப்புக்குச் சப்பாணிகளான பிராந்திய அரசுகள் - பாதுகாக்கப்படவேண்டும் என்பது. அதாவது சிறுபான்மை இனக்குழுக்கள் நசுக்கப்படவேண்டும்.

ஜே.வி.பி ஓர் இடதுசாரி அமைப்பு என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது சமீபத்திய இயங்குமுறையைக் கவனித்தால் ஒரு மோசமான மதரீதியிலான வலதுசாரி எதிர்வினை அமைப்பைப் போலத்தான் காட்சியளிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தை அடுத்து, ராஜபக்ஷே சிங்கள வலதுசாரி புத்தபிட்சுக்களின் கட்சியான ஜாதிக ஹேல உருமயாவுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இது இன்னமும் கடுமையான சில ஷரத்துக்களைக் கொண்டுள்ளது.

அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கும்போது "வழமையான எல்லைகள் மதிக்கப்படாது", "எந்த ஒரு குழுவுக்கும் சுய-நிர்ணய உரிமை வழங்கப்படாது", போன்ற சில கருத்துக்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன என்று 'தி ஹிந்து' தெரிவிக்கிறது.

இதை ராஜபக்ஷே ஏற்றுக்கொண்டதே அமைதி ஒப்பந்தத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடியது.

சந்திரிகா, அணுர இருவருமே இன்று சக்தியற்றவர்களாக, வெறும் பார்வையாளர்களாக மாறியுள்ளனர்.

ராஜபக்ஷேயின் வெற்றி உறுதியாகவில்லை என்றாலும்கூட, விக்ரமசிங்கே குடியரசுத் தலைவர் ஆகவும் வாய்ப்பு உள்ளது என்றாலும் கூட, ஒரு கட்சியினால் மட்டும் அமைதியை முன்னெடுத்துச் செல்லமுடியாது. சிங்களப் பெரும்பான்மை அரசியல் கட்சிகளிடையே விடுதலைப் புலிகளுடனான உறவு குறித்த ஒருமித்த கருத்து இல்லாத பட்சத்தில் அமைதி வருவது சாத்தியமில்லை.

எனவே விடுதலைப்புலிகள் இந்நிலையில் செய்யக்கூடியது ஒன்றுதான். தன்னிச்சையாக தமிழர் பகுதிகள் விடுதலை பெற்றுவிட்டதாக அறிவித்து உலக நாடுகளிடையே அங்கீகாரம் பெற உழைக்க வேண்டும். இதையும் உடனடியாக, இலங்கை அதிபர் தேர்தல் நடக்கும் முன்னதாகவே செய்துவிட வேண்டும். இந்த அறிவிப்பின் அவசரம் என்ன என்பதை விடுதலைப் புலிகள் உலகுக்கு விளக்க இது வழிவகை செய்யும். உலக நாடுகள் பலவும் ராஜபக்ஷேயின் ஒப்பந்தங்கள் தமிழர்களின் விருப்பத்துக்கு முற்றிலும் எதிரானது, தமிழர்களின் இத்தனை வருடத்தைய போராட்டங்களை அவமதிப்பது போலாகும் என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.

Sunday, September 11, 2005

பெலித நாசி கந்தர்

(சரியான உச்சரிப்பா?)

நேற்று தியாகராய நகர் மலேசிய உணவகம் பெலித நாசி கந்தரில் சாப்பிட்டேன்.

மலேசிய ரொட்டிகள், (வட) இந்திய தொட்டுக்கொள்ளும் பதார்த்தங்கள். காரணம் மலேசிய சைட் டிஷ் எதுவும் மரக்கறி உணவாக இல்லை என்றார்கள்.

நம்மூர் பரோட்டாவைப் போல, ஆனால் அதைவிட மென்மையாக ஒரு ரொட்டி வகை. வட இந்திய பராத்தாவைப் போல, நடுவில் வெங்காயத் துண்டுகளை வைத்த ஒரு ரொட்டி.

நல்ல சுவை, சுமாரான விலை.

ஆண்களுக்கு மட்டும்...

பெண்களுக்கான சிகப்பழகுக் களிம்பை ஆண்களும் வெகுவாக உபயோகித்து வருகின்றனர் என்பது தெரிந்தவுடன் ஆண்களுக்காகவென்றே பிரத்யேகக் களிம்பு ஒன்றை இமாமி நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இதற்குப் பெயர் "Fair and Handsome". இந்தப் பொருளுக்கான விளம்பரத்தில், பெண்களுக்கெனத் தயாரிக்கப்படும் களிம்பு ஆண்களின் முரட்டுச் சருமத்துக்குப் பயன்படாது என்றும் மேற்படி தயாரிப்பு பிரத்யேகமாக ஆண்களின் சருமத்துக்கெனவே தயாரிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

சில மாதங்களாகவே இந்தப் பொருள் கடையில் கிடைத்தாலும் இப்பொழுதுதான் இதன் விளம்பரம் தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைத்தது.

Fair and Lovely எனப்படும் ஹிந்துஸ்தான் லீவர் தயாரிப்பை ஒத்ததாகப் பெயர் வைத்திருப்பதால் நீதிமன்ற வழக்குக்கு இந்தத் தயாரிப்பு உள்ளாகும் என்று நினைக்கிறேன்.

இன்று தொலைக்காட்சியில் பார்த்த மற்றுமொரு விளம்பரத்தில் பிரபல நடிகைகளைப் போல ஹிந்தி நடிகர் ஷா ருக் கான் குளியலறையில் ரோஜாப்பூ நிரம்பிய நீரில் குளித்தபடி லக்ஸ் சோப்பை விற்றார்.

Monday, September 05, 2005

தி எகனாமிக் டைம்ஸ் நேர்முகம்

நேற்று (ஞாயிறு) 'தி எகனாமிக் டைம்ஸ்' இதழில் வெளிவந்த எனது பேட்டியின் சுட்டிகள் (கிரிக்கெட் தொடர்பானவை):

Text msg waiting
Don't miss this e-ticket

ஞாயிறு இதழ் முழுவதிலும் கிரிக்கெட் தொடர்பான பல கட்டுரைகள் உள்ளன. தொடர்ச்சியாகப் படிக்க epaper சுலபமானது; சரியான தேதியைத் தேடவேண்டியிருக்கும். தி எகனாமிக் டைம்ஸ் சாதாரண (அதாவது epaper அல்லாத) இணைய எடிஷனில் மற்றபடி கட்டுரைகளைத் தேதிவாரியாகத் தேடிப்படிப்பது அவ்வளவு எளிதல்ல.

Saturday, September 03, 2005

Yes, Chief Minister

தி இந்தியன் எக்ஸ்பிரஸில் ஷேகர் குப்தா: Yes, Chief Minister

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமை ஆசிரியர் ஷேகர் குப்தா இந்திய அரசாட்சி முறையில் ஏற்பட்டிருக்கும் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆழமானதொரு கண்ணோட்டத்தை முன்வைக்கிறார். கடந்த சில வருடங்களில் மாநில முதல்வர்களின் பலம் வெகுவாக அதிகரித்துள்ளது என்கிறார். இதைப் பலரும் கவனிக்கவில்லை என்றும் சொல்கிறார்.

உண்மைதான். ஷேகரின் கட்டுரையைப் படிக்கும் முன்னால் இந்த விஷயத்தைப் பற்றி நான் இப்படி யோசிக்கவில்லை.

1. கூட்டணிக் கட்சிகளாலான ஆட்சி - இதற்கு மாற்று இனி அடுத்த 20 ஆண்டுகளுக்காவது இல்லை என்று தோன்றுகிறது.
2. பலமான மாநிலக் கட்சிகள் - பல மாநிலங்களில் இன்று இதுதான் நிலை
3. ஆர்டிகிள் 356ஐத் தன்னிஷ்டத்துக்குப் பயன்படுத்த முடியாத மத்திய அரசு - ஏனெனில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம்...

இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து மாநில முதல்வர்களை சூப்பர் ஸ்டார்களாக மாற்றியுள்ளது. மத்திய அரசு பெரும்பாலும் புதிய கொள்கைகளை முன் நிறுத்தவும், மாநில அரசுகள் அவற்றை நடைமுறைப்படுத்தவும் என்று நிலைமை மாறியுள்ளது. மாநில அரசுகள் நேரடியாக அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற விழைகிறார்கள். மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.

இதில் பாதிக்கப்படுவது திறமையுள்ள காங்கிரஸ் மாநில முதல்வர்கள்தான். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் எந்த நேரத்திலும் திறமையானவர்களைக் கவிழ்க்க முடியும் என்ற நிலை இன்றும் காங்கிரஸில் உள்ளது. ஷேகர் சொல்வதைப் போல காங்கிரஸும், கொஞ்சம் பாஜகவும் கூட மாநில முதல்வர்களின் முக்கியத்துவத்தை உணராவிட்டால் அதி வேகமாக அழிந்துபோவார்கள்.

செ.மெ.பழனியப்பச் செட்டியார் (பிறப்பு: 15-2-1920, இறப்பு: 1-9-2005)

பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனர் பழனியப்பச் செட்டியார் 1-9-2005 அன்று காலமானார்.

தமிழ்ப் பதிப்புலகில் நிறைய சாதித்தவர்களுள் முக்கியமானவர் பழனியப்பச் செட்டியார்.

பழனியப்பாவின் தந்தையார் மெய்யப்பச் செட்டியார், பிற நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பங்களைப் போலவே பர்மாவில் வியாபாரம் செய்துவந்தார். மூன்று வகுப்புகள் வரை தான் பிறந்த ராயவரத்தில் படித்த பழனியப்பா, ஆறாவது வரை பர்மாவில் படித்தார். ஏழாவது சிதம்பரத்தில். எட்டாவது முதல் பள்ளி இறுதிவரை கடியாபட்டியில்.

படிப்பு முடித்ததும் மலேசியாவுக்கு அனுப்பி வியாபாரம் செய்யவைக்க அவரது தந்தையார் விரும்பினாலும் அதை ஏற்காமல் பழனியப்பா தமிழகத்திலேயே வியாபாரம் செய்ய விரும்பினார். தனது தாயாரிடம் பெற்ற ரூ. 4,000 முதலாக வைத்து திருச்சியில், செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் பழனியப்பா பிரதர்ஸ் என்ற எழுதுபொருள் கடையை 1941-ல் தொடங்கினார். கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள், அழிப்பான், காகிதம் போன்றவற்றை விற்பனை செய்தார்.

அதைத் தொடர்ந்து பாடப் புத்தகங்கள் அல்லாத பிற புத்தகங்களை முதன்முதலாக திருச்சியில் அறிமுகப்படுத்தி விற்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழில் பாடநூல்களைத் தாமே அச்சிட்டுக் கொண்டுவரத் தொடங்கினார்.

செயிண்ட் ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில்தான் ஐயன்பெருமாள் கோனார் என்பவர் தமிழாசிரியராக இருந்துவந்தார்.

கோனார், 1937-ம் ஆண்டு முதல், பதினோராவது வகுப்புக்கு "எக்ஸ்பிளனேட்டரி தமிழ் நோட்ஸ்" என்ற பெயரில் ஒரு தமிழுரை எழுதி முதலில் தாமாகவும் பின் சில பதிப்பாளர்கள் மூலமும் வெளியிட்டு வந்தார். ஆனால் 1943-44(?) சமயத்தில் கோனாருக்கும் பதிப்பாளருக்கும் பண விஷயத்தில் பிரச்னை. இதனால் கோனார் பிரிந்து பழனியப்பா பிரதர்ஸ் மூலமாக கோனார் உரைகளைப் பதிப்பிக்க முடிவு செய்தார்.

தொடர்ந்து பழனியப்பா ஆங்கிலப் பாடத்துக்கும் நோட்ஸ் கொண்டுவந்தார். ஆனால் நாளடைவில் கோனார் தமிழுரை - கோனார் நோட்ஸ் தமிழகம் முழுவதும் பெரியதொரு பிராண்ட் ஆனது. ஒவ்வொரு வகுப்புக்கும் தமிழ்ப் பாடத்துக்கு உரை வந்தது. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்குப் பெரும் செல்வத்தை ஈட்டித்தந்தது.

பழனியப்பா பிரதர்ஸ் 1946-ல் சென்னைக்குப் பெயர்ந்தது. 1969-ல் ஐயன்பெருமாள் கோனார் இறந்தார்.

கோனார் உரைகளைத் தவிர, பழனியப்பா பிரதர்ஸ் பல குழந்தைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். குழந்தைப் பதிப்பகம் என்ற பெயரில் நிறுவி, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவை (பால்ய கால நண்பர்) ஆசிரியராகக் கொண்டு பல புத்தகங்களைக் கொண்டுவந்தனர்.

பழனியப்பாவின் முதல்மகன் காந்தி மருத்துவராக அமெரிக்காவில் இருந்ததனால் அங்கு சுற்றுப்பயணம் செய்து இந்தியா திரும்பிய பழனியப்பா, 1960களில் இன்சுலின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்கலாமா, டிஸ்போஸபிள் சிரிஞ்ச் உற்பத்தி செய்யலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறார். ஆனால் அவை ஏதும் நடக்கவில்லை.

ஆனால் பழனியப்பா விடவில்லை. அவரும் பிறரைப் போல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விடுவது அல்லது வட்டிக்கு விட்டுப் பணம் சம்பாதிப்பது என்று இருந்திருக்க முடியும். ஆனால் புத்தகப் பதிப்புத் துறையைத் தவிர வேறு ஏதேனும் பொறியியல் தொழில் துறையில் எப்படியாவது காலூன்றி விடவேண்டும் என்று நினைத்தார். அதன் விளைவாக உருவானதுதான் ஏஷியன் பேரிங் லிமிடெட் (Asian Bearing Limited). கிழக்கு ஜெர்மன் தொழில்நுட்பத்தில் பேரிங்குகளை உருவாக்கும் தொழிற்சாலையை தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில் 1982-ல் அமைத்தார். அதில் பங்குதாரராக தமிழக அரசின் TIDCOவையும் உள்ளே இழுத்தார்.

தமிழகத் தொழில் துறையிலும் புத்தகப் பதிப்புத் துறையிலும் திறமையான முன்னோடியாக இருந்தவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

Thursday, September 01, 2005

விதிகளை மீறும் சட்டங்கள்

(காலச்சுவடு செப்டெம்பர் 2005 இதழில் வெளியான என் கட்டுரை)

ஜூலை 2005-ல் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தொடர்ந்து ஜூலை 31க்குப் பின், அடுத்த பத்து மாதங்களில் விளையாடப்படும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்த மாறுதல்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூலை 7, 10, 12 நாள்களில் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த நாட்வெஸ்ட் சேலஞ்ச் ஒருநாள் ஆட்டங்களில் இந்த விதி மாற்றங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டன.

-*-

கிரிக்கெட் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் அதற்கென அடிப்படையான சில விதிகள் இருக்கின்றன. இவற்றை Laws of Cricket என்று சொல்லுவர். இஷ்டத்துக்கு மாறும் சட்ட திட்டங்கள் அல்ல இவை. முடிந்தவரையில் மாறாமல், தேவை ஏற்படும்போது மட்டும் வெகு குறைந்த அளவு மட்டுமே மாறுவதால்தான் இவற்றை "Laws" என்ற பெயரில் அழைக்கின்றனர், "Rules", "Conditions" போன்ற ஆங்கிலச் சொற்கள் கொண்டு அழைப்பதில்லை. இயல்பியலில் நியூட்டனின் மூன்று விதிகள் என்று சொல்கிறோமல்லவா, அதைப்போல!

இந்த கிரிக்கெட் விதிகள் 1788-ம் ஆண்டு எம்.சி.சியால் (Marleybone Cricket Club - MCC) ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சில மாறுதல்களும் எம்.சி.சியால் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் பொதுவாக ஏற்கெனவே இருக்கும் விதிகளில் ஓட்டைகள் கண்டுபிடிக்கப்படும்போதுதான் செய்யப்படுகின்றன. சும்மா செய்துதான் பார்ப்போமே என்று செய்யப்படுவதில்லை. கடைசியான சில மாற்றங்களுக்குப் பிறகு இப்பொழுதிருக்கும் சட்டங்கள், The Laws of Cricket (2000 Code 2nd Edition - 2003) என்ற பெயரில் வழங்கி வருகிறது. ஏதோ கணினி மென்பொருளுக்கான பெயர் போல இருப்பதைக் கண்டு பயப்படவேண்டாம். சில மாற்றங்கள் 2000 வருடத்தில் மேற்கொள்ளப்பட்டு அக்டோ பர் 2000 முதற்கொண்டு புழக்கத்தில் இருந்து வருகிறது. அதிலும் சிற்சில மாற்றங்களை 2003-ம் வருடம் ஏற்படுத்தியதன் விளைவுதான் இப்பொழுதிருக்கும் விதிகள்.

இங்கு எம்.சி.சி என்பதே லண்டனில் இருக்கும் ஒரு சாதாரண கிரிக்கெட் கிளப். ஆனால் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை கிரிக்கெட் விதிகளைப் பராமரிப்பது, அதில் மாற்றங்களைக் கொண்டுவருவது ஆகியவை இவர்களின் கையில்தான் இருக்கிறது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். ஒரு காலத்தில் எம்.சி.சிதான் இங்கிலாந்தின் சர்வதேச கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்தது. பின் நாளடைவில் டி.சி.சி.பி (TCCB) என்றோர் அமைப்பு அதற்கென உருவாகி, இன்று ஈ.சி.பி (ECB) என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஐ.சி.சி (ICC) எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள், சர்வதேச ஒருநாள் போட்டிகளை நிர்வகிக்கத் தொடங்கியதும், அவ்வப்போது இந்தப் போட்டிகளுக்கான சட்டதிட்டங்களை மாற்றியமைத்துள்ளது. அப்பொழுதெல்லாம் மாற்றங்களை "ஆட்டக் கட்டுப்பாடுகள்" (Match Playing Conditions) என்ற பெயரிலேயே வழங்கி வந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகளும் எம்.சி.சியின் கிரிக்கெட் விதிகளின் மீது செய்யப்பட்ட மாற்றங்களாகவே அமைந்துள்ளன. அதாவது ஐ.சி.சி தானாக கிரிக்கெட் ஆட்டங்களுக்கான முழு விதிகளை உருவாக்குவதில்லை. எம்.சி.சி வெளியிட்ட விதிகளை எடுத்துக்கொண்டு அதில் எங்கெல்லாம் மாறுதல்கள் உண்டு என்பதை மட்டும் கோடிட்டுக் காண்பிக்கும். அவ்வளவே.

இப்படி, விதிகள், சட்டங்கள், கட்டுப்பாடுகள் என்றெல்லாம் பிற விளையாட்டுகளில் இருப்பதில்லை என்பதை கவனிக்கவும். வேறெந்த விளையாட்டுக்கும் என்று குறிப்பாக "Laws" என்று எதுவும் வழங்கப்படுவதில்லை.

-*-

சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகள் ஆரம்பித்ததே விதிவசம்தான். யாரும் அப்படியோர் ஆட்டத்தை முன்கூட்டியே தீர்மானிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஜனவரி 5, 1971 அன்று மெல்போர்ன் நகரில் நடந்த, அணிக்கு 40 எட்டு பந்து ஓவர்களுக்கான, ஆட்டமே முதல் சர்வதேச ஒருநாள் போட்டி. பலத்த மழையின் காரணமாக மெல்போர்ன் ஆடுகளத்தில் நடக்க இருந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. ரசிகர்களின் ஆறுதலுக்காக ஓர் ஆட்டம் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே நாள், இரண்டு அணிகளும் ஆளுக்கு நாற்பது ஓவர்கள் விளையாடுவார்கள். (அப்பொழுதெல்லாம் ஆஸ்திரேலியாவில் மட்டும் ஓர் ஓவருக்கு எட்டு பந்துகள் வீதம் வீசுவார்கள்.) முதலில் பேட்டிங் செய்யும் அணி நாற்பது ஓவர்களில் எத்தனை எண்ணிக்கை எடுத்திருந்தாலும் அத்துடன் அதனது இன்னிங்ஸ் முடிவடையும். அடுத்து இரண்டாவது அணி பேட்டிங் செய்து முன்னர் விளையாடியிருந்த அணியின் எண்ணிக்கையைத் தாண்ட வேண்டும்

இதற்கு முன்னாலும் ஓர் இன்னிங்ஸ் ஆட்டங்கள் நடந்திருக்கின்றன. 1969-இலேயே இங்கிலாந்தில் முதல்-தர கிளப் அணிகளுக்கு இடையே குறிப்பிட்ட ஓவர்களை உடைய ஒருநாள் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. அதற்கும் முன்னாலேயே பல்வேறு இடங்களில் இதுபோன்ற ஆட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் 1971 ஜனவரியில்தான் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் ஆட்டம் - வரையறுக்கப்பட்டு ஓவர்களை உடைய ஆட்டம் - நடந்தது. அந்த ஆட்டத்தை 46,000 ரசிகர்கள் கண்டனர். A$ 33,000 பணம் கிடைத்தது. அன்றிலிருந்து படிப்படியாக சர்வதேச ஒருநாள் ஆட்டங்கள் தமது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் ஐந்து நாள்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை ஓரங்கட்டவும் ஆரம்பித்தன.

சர்வதேச ஒருநாள் போட்டிகள் தொடங்கி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஒருநாள் போட்டிகள் மீது பல விமரிசகர்களும் கடுமையான கருத்துக்களை வைத்திருக்கிறார்கள். "பைஜாமா ஆட்டம்" என்று கேவலமாகப் பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம் கிரிக்கெட் ஆட்டம் என்றே எடுத்துக்கொள்ளக்கூடாது, டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையான கிரிக்கெட் என்றும் பலர் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த பைஜாமா ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டை நிறைய வளப்படுத்தியது என்பதுதான் உண்மை. 1960கள், அதற்கு முந்தைய காலங்களில் விளையாடிய டெஸ்ட் ஆட்டங்களின் விடியோ துண்டுகளைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். மட்டையாளரின் மட்டையிலிருந்து புறப்படும் பந்து பந்துத் தடுப்பாளரைத் தாண்டிவிட்டால் அது அடுத்து எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றுவிடும். பந்துத் தடுப்பாளர் மெதுவாக அசைந்து சென்று பந்தை மீட்டுக்கொண்டுவருவார். அவ்வளவே. ஆனால் இன்று பந்தைத் துரத்திச் சென்று எல்லைக்கோட்டுக்கு வெகு அருகே ஆனாலும் உடலால் பந்தைத் தடுத்துத் திருப்பி எறிவது என்பது முழுக்க முழுக்க ஒருநாள் போட்டிகளின் தாக்கத்தால் வந்தது. டெஸ்ட் ஆட்டம் என்றாலே யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை என்ற டிரா நிலையை 2000 வருடத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட முற்றிலுமாகப் போக்கியது ஒருநாள் போட்டிகளால்தான். ஆஸ்திரேலியா போன்ற சூப்பர் ஸ்டார் அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் படுவேகமாக ரன்களைக் குவிப்பதும் ஆட்டத்தை சுவாரசியமாக வைத்திருப்பதும் ஒருநாள் போட்டிகளால்தான்.

-*-

ஒருநாள் போட்டிகள் மக்கள் கவனத்தைப் பெறத் தொடங்கியதும், அந்தக் கவனத்தைத் தக்கவைத்துக்கொள்ள நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தை விரும்பாதவர்கள்கூட மாற்றாந்தாய்ப் பிள்ளையான ஒருநாள் போட்டியில் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தாலும் அதைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, "பைஜாமா ஆட்டத்தில் வேறெதை எதிர்பார்க்க முடியும்" என்று கேலிதான் பேசினர்.

முதலில் ஒருநாள் போட்டிகள் மட்டையாளர்களுக்குப் புரிபடவில்லை. அதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மெதுவாக ரன்கள் பெற்றுவந்த மட்டையாளர்கள் இங்கு வேகமாக ரன்கள் எடுக்கவேண்டி இருந்தது. வேகமாக ஓடி ஒன்று, இரண்டு என்று ரன்கள் பெறவேண்டி இருந்தது. குண்டுத் தொப்பையும் சோம்பல் புத்தியும் உடைய ஆட்டக்காரர்கள் தடுமாறினர். ஆனால் அவர்களுக்கான உதவி வேறு ரூபத்தில் வந்தது.

ஒருநாள் போட்டிகள் என்றாலே கொட்டும் ரன்மழை என்று நினைக்கும் மக்களைத் தக்கவைக்க கிரிக்கெட் வாரியங்கள் ஆடுகளங்களை பேட்டிங்குக்கு உதவி செய்யுமாறு மாற்றினர். வேகப்பந்து வீச்சும் எடுபடாது, சுழல்பந்து வீச்சும் எடுபடாது என்னும் தட்டையான ஆடுகளங்கள் மட்டையாளர்களுக்கு ரன்களை வாரிக்கொடுத்தது. மிகக்கடுமையான வைட் பந்துவீச்சு விதி கொண்டுவரப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர்களைத் தடுக்க, ஓவருக்கு ஓர் உயரப்பந்து (பவுன்சர்) மட்டும்தான் வீசலாம் என்றனர்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைக்கும் விதமாக பந்துத் தடுப்பு வியூகத்திலும் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. அதன்படி முதல் பதினைந்து ஓவர்களில் பந்துத் தடுப்பாளர்கள் அத்தனை பேரும் - இருவரைத் தவிர - ஒரு குறிப்பிட்ட உள்வட்டத்துக்குள்தான் நிற்கவேண்டும். இதனால் முதல் பதினைந்து ஓவர்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் படுவேகமாக ரன்களைச் சேர்த்தனர். சமீப காலங்களில் முதல் பதினைந்து ஓவர்களில் ரன்கள் பெறும் வேகம் அதற்குப் பிறகு எட்டமுடியாத நிலைக்குப் போனது.

இந்நிலையில் ஒருநாள் ஆட்டம் மிகவும் எளிதாகக் கணிக்கக்கூடிய சூத்திரங்களுக்குள் அடங்கி விட்டது. முதல் பதினைந்து ஓவர்களில் விக்கெட்டுகளை அதிகம் இழக்காமல் அதிரடி ரன்கள் பெறுதல், அடுத்த 25 ஓவர்களில் ரன்கள் சற்றுக் குறைந்தாலும் விக்கெட் இழக்காமல் நிதானமாக ஆடுதல், கடைசி பத்து ஓவர்களில் விக்கெட்டை சற்றும் மதிக்காமல் அதிரடி ஆட்டத்தால் ரன்களை நிறையப் பெறுதல். இப்படி 250-300 ரன்கள் பெறாத அணி ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று ஆனது. பல ஆடுகளங்களில் 300ஐத் தாண்டினாலும் ஜெயிக்க முடியுமா என்றதொரு சந்தேகம் இருந்தது.

-*-

சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகள் எக்கச்சக்கமாக வளர்ந்துவிட்டன. சென்ற வாரம் கூட இந்தியா மற்றுமொரு முத்தரப்பு சர்வதேச ஆட்டத்தில் ஈடுபட்டு, நன்றாக விளையாடாமல் தோற்றுவிட்டு வந்துள்ளனர். ஆனால் இந்த ஆட்டங்களுக்கான வாசகர் வட்டம் சுருங்கிவிடுமோ என்றதொரு பயம் கிரிக்கெட் வாரியங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிதான் பணம் கொழிக்கும் ஒரே உபாயம். அதை இழக்க யாருக்கும் மனம் இல்லை.

எனவே predictable ஆக இருக்கும் ஓர் ஆட்டத்தில் இன்னமும் பல மாற்றங்களை ஏற்படுத்தினால் அதனாலாவது ஆட்டத்தை சுவாரசியம் மிக்கதாக மாற்றமுடியுமோ என்று கிரிக்கெட் வாரியங்கள் எதிர்பார்க்கின்றன. புதிதாகக் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் முக்கியமாக இரண்டு:

1. Super Sub - பலம்பொருந்திய மாற்று ஆட்டக்காரர்: இதுவரையில் மாற்று ஆட்டக்காரர் ஒருவர் பந்துத் தடுப்பாளராகக் களம் இறங்கி வந்தார். ஆட்டத்தின் இடையில் தடுப்பாளர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக பந்துத் தடுப்பில் ஈடுபடுவது மட்டுமே இவரது வேலையாக இருந்தது. இவரால் பேட்டிங் செய்யமுடியாது, பந்து வீசமுடியாது. விக்கெட் கீப்பிங் கூடச் செய்யக்கூடாது.

ஆனால் இப்பொழுது கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்களின்படி ஒவ்வோர் அணியும் ஆட்டம் தொடங்கும் முன்னரே 12வது ஆட்டக்காரராக ஒரு மாற்று ஆட்டக்காரரை நியமிக்கலாம். இவர் யாரை மாற்றுகிறாரோ அவருக்காக பேட்டிங் செய்யலாம், பந்து வீசலாம். உதாரணத்துக்கு இப்பொழுது களத்தில் மட்டையாடிக்கொண்டிருக்கும் ஒரு வீரர் 50 ரன்கள் அடித்துள்ளார். சற்று களைத்தமாதிரியாக இருக்கிறார். அவருக்கு பதிலாக ஓவர்களுக்கு இடையே 12வது வீரரை களமிறக்கலாம். அவரும் பேட்டிங் செய்யலாம். ஆனால் களத்தை விட்டு வெளியேறிய வீரர் மீண்டும் பேட்டிங்கோ, பந்துவீச்சோ செய்யமுடியாது. அதிகபட்சமாக பந்துத் தடுப்பு வேலையைச் செய்யலாம்.

மற்றொரு உதாரணம்: ஒருவர் நல்ல மட்டையாளர், ஆனால் பந்துவீச்சுக்கோ, பந்துத் தடுப்புக்கோ உதவாதவர். இந்தியாவின் வி.வி.எஸ் லக்ஷ்மணை உதாரணமாகச் சொல்லலாம். எனவே மற்றுமொரு நல்ல பந்துவீச்சாளரை - எல்.பாலாஜியை - அணியில் 12வது ஆட்டக்காரராக எடுத்துக்கொள்ளலாம். லக்ஷ்மண் காலையில் பேட்டிங் செய்து முடிக்கட்டும். மதியம் பந்துவீச பாலாஜியை அழைக்கலாம். ஆனால் இது அவ்வளவு எளிதானதல்ல. முன்னதாகவே பாலாஜியை 12வது ஆட்டக்காரர் என்று சொல்லிவிடவேண்டும். டாஸ் முடிந்தபின் நம் அணி முதலில் பந்துவீசுவதாக இருந்தால் பாலாஜியை முதலில் இறக்கி பந்துவீச வைத்துவிட்டு, அதன்பின் மதியம் லக்ஷ்மணை மட்டையாடச் சொல்லமுடியாது! ஒருமுறை இந்த மாற்றத்தை ஏற்படுத்தினால் அவ்வளவுதான்.

இரண்டாவதாக பேட்டிங் பிடிக்கப்போகும் அணி, முதல் 11 பேரில் ஒரு பந்துவீச்சாளரையும், 12வது ஆளாக ஒரு மட்டையாளரையும் வைத்திருக்கவேண்டும். அதாவது மேற்கண்ட உதாரணத்தில் அணியில் பாலாஜியும், 12வதாக லக்ஷ்மணும் இருக்கவேண்டும். முதலில் பாலாஜி பந்து வீசிவிட்டுச் சென்றுவிடுவார். பின் லக்ஷ்மண் வந்து பேட்டிங் செய்வார்.

ஆனால் டாஸ் போடுவதற்கு முன்னமேயே அணியையும் 12வது நபரையும் தீர்மானிக்க வேண்டும். அப்பொழுது யார் முதலில் பேட்டிங் செய்வார்கள் என்று தெரிந்திருக்காது. இப்பொழுது நடைபெறும் ஆட்டங்களில் மட்டையாளர்களின் கையே ஓங்கியிருப்பதாலும் பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை வைத்து பத்து ஓவர்கள் வீசப்படுவதாலும் எல்லா அணிகளுமே ஓர் அதிகப்படி மட்டையாளரையும் 12வதாக ஒரு பந்துவீச்சாளரையும் கொண்டுவர முனைவர். எனவே முதலில் மட்டையாடும் அணிக்கு மட்டுமே உபயோகம் உண்டு.

2. Powerplay five - இதைத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டிய அவசியமில்லை. வெற்று வாக்கியம். இதுவரையில் ஆட்டத் தொடக்கத்தில் செயல்படுத்திவந்த பதினைந்து ஓவர்கள் பந்துத் தடுப்பு வியூகக் கட்டுப்பாடு இப்பொழுது இருபது ஓவர்களுக்கு உண்டு. ஆனால் மூன்று பகுதிகளாக. முதல் பத்து ஓவர்கள் எப்பொழுதும் போலவே. அதாவது தடுப்பு வட்டத்துக்கு வெளியே இரண்டே இரண்டு தடுப்பாளர்கள் மட்டும்தான் இருக்கலாம். மட்டையாளருக்கு அருகில் இரண்டு கேட்ச் பிடிப்பவர்கள் கட்டாயமாக இருக்கவேண்டும். அதைத் தொடர்ந்து இரண்டு பகுதிகளாக ஐந்து, ஐந்து ஓவர்களில் பந்துத் தடுப்பு வியூகத்தின் மீது கட்டுப்பாடு உண்டு. இந்த இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை ஐந்து ஓவர்களின்போது நெருக்கத்தில் இரண்டு தடுப்பாளர்கள் இருக்கவேண்டும் என்பதில்லை. இந்த இரண்டாம், மூன்றாம் ஐந்து ஓவர்கள் கட்டுப்பாட்டை பந்துவீசும் அணியின் தலைவர் நடுவரிடம் சொல்லிவிட்டு எப்பொழுது வேண்டுமானாலும் செயல்படுத்தலாம். முதல் பத்து ஓவர்கள் முடிந்த உடனேயே செய்யலாம். ஆனால் எப்பொழுதுமே செய்ய மறந்துவிட்டால் கடைசி பத்து ஓவர்களில் இது தானாகவே அமலுக்கு வரும். அது பந்துவீசும் அணிக்கு பெருத்த நஷ்டத்தைக் கொடுக்கும்.

இந்த மாற்றத்தால் யாருக்கு லாபம்? மட்டையாளர்களுக்குத்தான். முன்னர் பதினைந்து ஓவர்கள் இருந்த தடுப்புக் கட்டுப்பாடு இப்பொழுது இருபது ஓவர்களுக்கு ஆகிறது.

-*-

இதுவரையில் மூன்று ஆட்டங்களில் இந்தப் புது மாறுதல்கள் செயல்படுத்தப்பட்டன என்று பார்த்தோம். அங்கு என்னதான் நடந்தது? முதல் ஆட்டம் 7 ஜூலை நடந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இருவருக்குமே பவர்பிளேயை எப்படி உபயோகிப்பது என்ற சிந்தனை இல்லை. அதனால் முதல் இருபது ஓவர்களில் தடுப்புக் கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டனர். இருவருமே மாற்று ஆட்டக்காரரைப் பயன்படுத்தினர். அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மட்டையாளர் மாத்தியூ ஹெய்டனுக்கு பதிலாக பிராட் ஹாக் வந்தார். அவர் பந்துவீசினார். இங்கிலாந்தும் வசதியாக தொடக்கப் பந்துவீச்சாளர் ஜோன்ஸ் தொடர்ச்சியாகப் பந்தை வீசிமுடித்ததும் அவரை அனுப்பிவிட்டு விக்ரம் சோலங்கி என்பவரை உள்ளே கொண்டுவந்தனர்.

10 ஜூலை நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மாற்று ஆட்டக்காரரை உபயோகப்படுத்தவேயில்லை! ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியபோது தொடர்ச்சியாக முதல் இருபது ஓவர்களில் தடுப்புக் கட்டுப்பாட்டினை வைத்துக்கொண்டது. இங்கிலாந்து, முதல் பத்து ஓவர்களுக்குப் பிறகு, 16-20, 34-38 ஓவர்களின்போது தடுப்புக் கட்டுப்பாட்டினை மேற்கொண்டது. ஆஸ்திரேலியா டாஸில் வென்று பேட்டிங் செய்ய விரும்பியதால் எடுத்த எடுப்பிலேயே பந்துவீச்சாளர் மெக்ராத்துக்கு பதிலாக 12ம் ஆட்டக்காரர் பிராட் ஹாட்டின் என்னும் மட்டையாளரைக் கொண்டுவந்தனர். ஆனால் அவரது உதவியில்லாமலே ஆட்டத்தை ஜெயித்தனர். இதனால் மெக்ராத் பந்துவீசவும் இல்லை. ஹாட்டின் மட்டை பிடித்து விளையாடவும் இல்லை!

மூன்றாவது ஆட்டம் 12 ஜூலை நடந்தது. ஆஸ்திரேலியா இங்கு மாற்று ஆட்டக்காரரைப் பயன்படுத்தவில்லை. இங்கிலாந்து முதல் ஆட்டத்தைப் போலவே ஜோன்ஸுக்கு பதிலாக விக்ரம் சோலங்கியைக் கொண்டுவந்தது. ஆனால் இம்முறை இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்யவேண்டி இருந்ததால் ஜோன்ஸ் பந்துவீச முடியவில்லை. இங்கும் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பாண்டிங் முதல் இருபது ஓவர்களில் பவர்பிளேயை முடித்துக்கொண்டார். இங்கிலாந்தோ தனது முதல் பத்து ஓவர்களுக்குப் பிறகு பவர்பிளேயை உபயோகப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியா 35 ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டத்தை ஜெயித்துவிட்டது.

இப்படியாக ஐ.சி.சியின் இரண்டு புது மாற்றங்களுமே ஆட்டத்தின் போக்கை எந்தவிதத்திலும் மாற்றவில்லை.

-*-

முக்கியமாக பவர்பிளே கட்டுப்பாடுகள் மிகவும் அபத்தமாக இருக்கின்றன. இது பந்துவீசும் அணிக்கு சாதகமான ஒரு விஷயமல்ல - அதாவது பந்துத் தடுப்பு வியூகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வது என்பது. அப்படியொரு பாதகமான விஷயத்தை அந்த அணித்தலைவரிடம் கொடுத்து எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள் என்று சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது. "இந்தா விஷம், ஆனால் ஒன்று இன்று மாலை 6.00 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும், உனக்குப் பிடித்த நேரத்தில் நீ இதை உட்கொள்ளலாம்... அப்படி நீயாகச் சாப்பிடவில்லை என்றால் சரியாக 6.00 அடிக்கும்போது நான் உனக்கு ஊட்டிவிடுவேன்" என்பதுதான் இந்தக் கட்டுப்பாடு. இது நாளடைவில் ஆடுபவர்களுக்கும், அணித்தலைவருக்கும் அலுப்பையே வரவழைக்கும். பார்வையாளர்களுக்கு இது ஒரு துக்ககரமான விஷயமும்கூட. ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி வர்ணனை நிபுணர்கள், இது ஏதோ முக்கியமான விஷயம் போலவும் இதை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும் போலவும் பேசிப்பேசியே நம்மைக் குதறிவிடுவார்கள்.

பலம்பொருந்திய மாற்று ஆட்டக்காரர் - முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு மட்டுமே சாதகமாக இருப்பார். ஏனெனில் ஆட்டமே மட்டையாளர்களுக்குச் சாதகமாக இருப்பதால் அணியில் அதிகப்படியாக ஒரு மட்டையாளரை எடுத்துக்கொண்டு 12-ம் ஆட்டக்காரராக ஒரு பந்துவீச்சாளரை எடுப்பதையே எல்லோரும் விரும்புவர். மாற்றாக அணியில் ஒரு கூடுதல் பந்துவீச்சாளரை எடுத்துக்கொண்டு, 12-ம் ஆட்டக்காரராக ஒரு மட்டையாளரை எடுப்பதை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். இதனால் டாஸில் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்க இன்னமும் ஆர்வம் கூடுதலாக இருக்கும். ஏற்கெனவே முதலில் பேட்டிங் செய்பவருக்கு என்று பல இடங்களிலும் சாதகம்தான். இது இன்னும் அவர்களுக்கு வலு சேர்க்கும். இதனால் ஆட்டம் இன்னமும் ஒருதலைப்பட்சமாகும்.

-*-

மொத்தத்தில் இந்த இரண்டு மாற்றங்களுமே தேவையற்ற, ஒருநாள் போட்டிகளுக்கு எந்தவிதத்திலும் நன்மை செய்யாத முடிவுகள்தான். அடுத்த பத்து மாதங்களில் இந்தச் சாயம் வெளுத்துவிடும் என்று உறுதியாகத் தோன்றுகிறது. குறுகிய காலத்தில் தொலைக்காட்சிகளுக்கு சில அதிகப் பார்வையாளர்கள் கிடைக்கலாம். கிரிக்கெட் சூதாட்டத்தில் சட்டபூர்வமாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் ஈடுபடுபவர்களுக்கு இன்னுமொரு விஷயம் கிடைத்துவிட்டது பெட் வைக்க - எப்பொழுது பவர்பிளே ஆட்டம் கொண்டுவரப்படும், எந்த விளையாட்டாளர் யாரால் மாற்றப்படுவார்? எத்தனையாவது ஓவரில்? மற்றபடி ஆட்டத்தின் முடிவு எவ்வகையிலும் பாதிக்கப்படாது என்றே தோன்றுகிறது.

ஒருநாள் போட்டிகள் predictableஆக இல்லாமல் இருக்கவேண்டும் என்று ஐ.சி.சி நினைத்தால் வேறு சிலவற்றைச் செய்யலாம். உதாரணமாக சில அறிவுரைகள்:

1. ஆடுகளத்தை பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகவும் உருவாக்குவது
2. பந்துத் தடுப்பு வியூகக் கட்டுப்பாட்டை முற்றிலுமாக நிறுத்துவது. வேண்டுமானால் முதல் ஓவரிலிருந்தே ஓர் அணி எல்லைக்கோட்டிலேயே தனது தடுப்பு வீரர்களை வைக்கட்டுமே? பந்துக்கு ஒரு ரன் வீதம் மட்டையாடும் அணி 300க்கு மேல் சேர்க்கலாம்! பந்துத் தடுப்பு வியூகத்தின் மீது கட்டுப்பாடு என்பது தேவையே இல்லை.
3. ஒவ்வொரு பந்து வீச்சாளருக்கும் அதிகபட்ச ஓவர்கள் இவ்வளவு என்பதைத் தீர்மானிக்கவேண்டியதில்லை. யார் நன்றாக வீசுகிறார்களோ அவருக்கு எத்தனை ஓவர்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று மாற்றலாம். இது ஆட்டத்தை மிகவும் சுவாரசியமாக்கும்! மட்டையாளர்களுக்கு என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும்தான் அதீதக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

அடடா... இப்படியே போனால் நாம் மீண்டும் கிரிக்கெட்டின் ஆரம்ப விதிகளுக்கு நெருக்கமாக வந்துவிட்டோ மே! ஆம். அணிக்கு ஓர் இன்னிங்ஸ், இன்னிங்ஸுக்கு 50 ஓவர்கள், ஓவருக்கு ஒரு பவுன்சர், வைட் என்பதைக் கறாராகத் தீர்மானிப்பது போன்ற நான்கே நான்கு விஷயங்களைத் தவிர டெஸ்ட் கிரிக்கெட் போன்றே ஒருநாள் கிரிக்கெட்டையும் மீட்டுக்கொண்டுவந்துவிட்டால் அதுதான் சுவாரசியமான ஆட்டங்களைத் தரும். புதுமையான கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டாம். கிரிக்கெட் விதிகளை வலிந்து மீறும் கட்டுப்பாடுகளை நீக்குவதே சரியான வழி!