Monday, June 30, 2008

NHM Lister - புது இணையச் சேவை

சும்மா டைம் பாஸ் மச்சி!

தமிழ் வலைப்பதிவர்கள் தாங்கள் எழுதுவதை தாங்களே ஆராய்ச்சி செய்வதில்லை. என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்? அவற்றுள் எந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவர் அதிகமாகப் பயன்படுத்தும் சொல் “மொக்கை” அல்லது “கும்மி” அல்லது “ஜட்டி” அல்லது வேறு ஏதாவதா? சாரு நிவேதிதா மட்டும்தான் “ஒரு” அல்லது “ஓர்” என்பதைப் பயன்படுத்தாமல் ஒரு முழுப் புத்தகத்தை எழுதினாரா? ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் எந்தெந்தச் சொற்களை அதிகம் பயன்படுத்தி எழுதுகிறார்கள்?

இதுபோன்ற அற்புதமான கேள்விகளுக்கு விடை வேண்டுமா? NHM Lister என்ற இடத்தில் இந்தக் கேள்விகளுக்கான விடைகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஆராயவேண்டிய டெக்ஸ்டை அப்படியே வெட்டி, ஒட்டி, “Generate List” என்ற பட்டனைத் தட்டுங்கள். பக்கத்தில் வரும் பட்டியலைப் பார்த்து மனம் மகிழுங்கள்.

இதைத்தவிர மேலும் பல தகவல்களும் உங்களுக்குக் கிடைக்கும். முழு விவரமும் அறிய, இந்த இடத்துக்குச் செல்லுங்கள்.

[பின்குறிப்பு: இந்த பதிவுக்கான புள்ளிவிவரம் (பின்குறிப்பைச் சேர்க்காமல்):
மொத்தச் சொற்கள்: 95
தனிச் சொற்கள்: 84
அதிகம் பயன்படுத்திய தமிழ்ச் சொல்: அல்லது
மொத்த “ஒரு” = 3
மொத்த “ஓர்” = 1
மொத்த “என்ற” = 2
மொத்த “என்பதை” = 1]

புனிதப்பசு சிவாஜி

இன்று தி ஹிந்து செய்தித்தாளில் பார்த்த ஒரு செய்தி அதிரவைத்தது. இதுபோன்ற கொடுமைகள் நமக்கும் நிகழலாம். எனவே விழிப்புடன் இதுபோன்ற அபத்தங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த லக்ஷ்மண் கைலாஷ் என்ற தகவல் தொழில்நுட்பப் பணியாளரை பூனாவிலிருந்து வந்த காவலர்கள் கைது செய்துள்ளனர். என்ன குற்றம் என்பதைப் பின்னர் பார்ப்போம். கைது செய்து, பூனாவுக்கு அழைத்துச் சென்று, 7 நாள் காவலில் வைத்து, பின்னர் ஜாமீன் தராமல், சிறையில் அடைத்து 40 நாள் அங்கே வைத்துள்ளனர். பின்னர் உண்மையான “குற்றவாளி” பிடிபட்டதால், இவரை விடுவித்துள்ளனர்.

குற்றம்? ஆர்குட் வலைத்தளத்தில் சத்ரபதி சிவாஜி என்னும் பல ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஓர் அரசரைப் பற்றி “மோசமாக” எழுதியதாம். இது எந்தவகையில் குற்றமாகும்? இன்று தாக்கரே குடும்பத்தின் ஒவ்வொரு முட்டாளும் வாயைத் திறந்தால் அடுத்தவரைக் கேவலமாகப் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். என்றோ செத்த சிவாஜியைப் பற்றி தரக்குறைவாகப் பேசினால், எழுதினால் குற்றம் என்றால் இன்று வாழும் பீஹார், உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களைப்பற்றி தரக்குறைவாகப் பேசுவதும் எழுதுவதும் குற்றம் இல்லையா? இந்து தற்கொலைப் படைகளை உருவாக்கவேண்டும் என்று பேசுவது குற்றம் இல்லையா?

லக்ஷ்மண் கைலாஷின் சிறையடைப்புக்குப் பின் இருந்தது ஒரு மொபைல் நிறுவனம். தமிழ் வலைப்பதிவுகளில் ஐ.பி எண் வைத்து இவனைப் பிடித்து உள்ளே போடுகிறேன், அவனை ஜெயிலில் தள்ளுகிறேன் என்றெல்லாம் வீர வசனங்கள் வரும். அப்படித்தான் அப்பாவி லக்ஷ்மண் கைலாஷ் ஜெயிலுக்குப் போனார். ஆனால் மொபைல் கம்பெனி கொடுத்த தவறான ஐ.பி எண் தகவலால். அந்தக் குறிப்பிட்ட ஆர்குட் பக்கத்தை எழுதியவரது ஐ.பி எண், இந்த ஆசாமியின் மொபைல் போனுக்குத்தான் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கப்பட்டது என்று மொபைல் நிறுவனம் தவறான தகவலைக் கொடுக்க, ஓர் அப்பாவிக்கு 47 நாள் சிறை வாசம்.

இது உங்களுக்கும் எனக்கும் நடக்கலாம். யாரோ ஒரு மூடன் எதையோ தனது வலைப்பதிவிலோ, ஆர்குட்டிலோ எழுத, இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களோ மொபைல் போன் நிறுவனங்களோ அதைச் செய்தது நீங்களும் நானும் என்று தவறான தகவல் கொடுத்தால், காவலர்கள் உங்களையும் என்னையும் ஜாமீன் கொடுக்காமல் சிறையில் அடைக்கலாம்.

பாதிக்கப்பட்டவர், நஷ்ட ஈடு வேண்டி, அந்த மொபைல் போன் கம்பெனியை கோர்ட்டுக்கு இழுத்துள்ளார். அத்துடன் மஹாராஷ்டிர சட்டங்களையும் சேர்த்து கோர்ட்டுக்கு இழுக்கவேண்டும். சிவாஜி என்னும் புனிதப்பசுவைப் பற்றி பேசுவது, எழுதுவது, ஏன் அவதூறாக ஏதோ சொல்வது குற்றமா? இந்தக் கேள்விக்கு நாட்டின் நீதிமன்றங்கள் பதில் சொல்லவேண்டும். நாளை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் சில புனிதப்பசுக்கள் உருவாகும். அவற்றைப் பற்றியும் நாம் எழுதக்கூடாது, பேசக்கூடாது என்பார்கள்.

மேலும், மேற்கண்ட “குற்றத்தில்”, “உண்மையான் குற்றவாளி” கிடைத்துவிட்டார் என்கிறார்கள். அவரது நிலைமை என்ன? அவர் எத்தனை நாள் சிறையில் வாடவேண்டும்?

இது எங்கே போய் முடியும்?

Saturday, June 28, 2008

NHM ஆங்கிலம் தொடர்பான சில நிகழ்ச்சிகள்

[1] இன்று மாலை, 28-06-2008, 6.30 மணிக்கு சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள Crossword புத்தகக்கடையில் (திருப்பதி சாமிக்கும் நல்லி புடைவைக் கடைக்கும் இடையில்), இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலின் ஆங்கில மொழியாக்கம் The Ghosts of Arasur வாசிப்பு நடைபெறும்.

[2] திங்கள்கிழமை, 30-06-2008, மாலை 7.00 மணிக்கு சென்னை கன்னிமரா ஹோட்டலில், கே.ஆர்.ஏ நரசய்யா எழுதியுள்ள Madras - Tracing the Growth of the City Since 1639 என்ற புத்தகத்தின் அறிமுக விழா நடைபெறும்.

[3] வியாழக்கிழமை, 03-07-2008 அன்று மும்பையில் வோடஃபோன் கிராஸ்வேர்ட் விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. எங்களது இரண்டு புத்தகங்கள் The Ghosts of Arasur மற்றும் Star-Crossed போட்டியில் உள்ளன.

அனைவரும் வருக!

Friday, June 27, 2008

வில்லியம் கேட்ஸ் சகாப்தம்

பில் கேட்ஸ் பில் கேட்ஸ் என்று உலகெங்கும் அறியப்படும் கணினி மென்பொருள் விற்பன்னர். மைக்ரோசாஃப்ட் என்னும் மாபெரும் கணினி மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கியவர். தனது 52-வது வயதில், இன்றுடன் தனது தினசரி அலுவல்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். தன்னிடம் இருக்கும் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் காரணமாக நிறுவனத்தின் non-executive chairman-ஆகத் தொடர்ந்து இருப்பார்.

பில் கேட்ஸ்மீது பலருக்கு தீராக் காதலும் மிச்சம் உள்ளவர்களுக்கு கடும் வெறுப்பும் உண்டு. தசாவதாரம் படம் பார்த்தவர்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

பில் கேட்ஸ் கணினி மென்பொருள் எழுதுவதில் மாபெரும் மேதை என்று சொல்லமுடியாது. கணினி இயக்குதளங்கள், நிரல் மொழிகள், மென்பொருள் பேக்கேஜ்கள், கணினி உலகில் புதுச் சிந்தனைகள் என்று எதுவும் இவரிடமிருந்து வந்தது கிடையாது.

இவரது வெற்றியின் ரகசியம், விடாமுயற்சி, தளராமை, எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற வெறி. பிறரது உழைப்பையும் பிறரது சிந்தனைகளையும் தனதாக்கிக்கொண்டு அவற்றுக்கு விற்பனை முலாம் பூசி, வர்த்தக அளவில் பெரும் சாதனை புரிந்தவர்.

ஐ.பி.எம் நிறுவனம் செய்த சில தவறுகளால் பில் கேட்ஸுக்கு அடித்தது லக்கி பிரைஸ். தொடர்ந்து அவர் தவறுகள் செய்தபோதெல்லாம், பிறர் அந்தத் தவறுகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளாததால் அவருக்கு இன்றுவரை அதிர்ஷ்டம் தொடர்ந்துள்ளது.

இன்று மைக்ரோசாஃப்ட் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பல.

முதலாவதாக கூகிள் என்னும் அதிவேகமாக வளரும் இணையச் சேவை நிறுவனம். கணினி என்பது நிஜமாகவே வெறும் ஜன்னல்போலத்தான் என்பதை நிரூபித்துள்ள நிறுவனம். ஜன்னலுக்குப் பின்புலத்தில் கணினியின் இயக்குதளமோ, மென்பொருள்களே அவசியமே இல்லை, தடியான ஓர் இணையக் குழாய் போதும் என்கிறது கூகிள். அப்படியென்றால் மைக்ரோசாஃப்ட் ஒரு டம்மி. கூகிள் நினைப்பதுமட்டும் நடந்துவிட்டால் மைக்ரோசாஃப்ட் காலியாகிவிடும்.

இரண்டாவது இணையச் சேவை வழங்கிகள் துறையில் லினக்ஸ் பெற்றிருக்கும் பெரு வெற்றி. கூகிள் மேசைக்கணினிகளைத் தள்ளிக்கொண்டு போய்விடும் என்றால் மறுபக்கம் பல்வேறு இணையச் சேவைகளை வழங்குவதில் மைக்ரோசாஃப்டுக்குக் கடும் சவாலை அளிக்கிறது முற்றிலும் இலவசமான லினக்ஸ் இயக்குதளம். இந்தத் துறையில் மைக்ரோசாஃப்டுக்கு முன்னோடி யூனிக்ஸ் சேவை வழங்கிகளும் அதன் குழந்தையான லினக்ஸும். மைரோசாஃப்ட் அதற்குப் பின்னே சேவை வழங்கிகளை உருவாக்கத் தொடங்கினார்கள். ஆனால் செயல்திறனில் இவை லினக்ஸ் அருகே நெருங்கக்கூட முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனாலும் தனது சந்தைப்படுத்தும் திறனால் மைக்ரோசாஃப்ட் இங்கேயும் நிறையப் பணம் பண்ணுகிறது. இது தொடருமா என்பது பெரும் சந்தேகமே.

மூன்றாவது, கணினி சம்பந்தப்பட்டதே அல்ல. இன்று கையடக்கமான செல்பேசிகள் கணினி செய்யும் பலவற்றைச் செய்யத் தொடங்கியுள்ளன. இங்கு விரைவில் நோக்கியா வசமாகப்போகும், ஓப்பன் சோர்ஸாகவும் ஆகப்போகும் சிம்பயான் இயக்குதளம் முன்னணியில் உள்ளது. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இந்தவகை செல்பேசிகளில் மிகக் குறைவான அளவே உள்ளது. சந்தையில் சதவிகிதத்தை அதிகரிக்க மைக்ரோசாஃப்டால் முடியும் என்று தோன்றவில்லை.

நான்காவது, கேளிக்கை சம்பந்தப்பட்டது. ஆப்பிளின் ஐபாட், அடுத்து ஐஃபோன் ஆகியவை மக்கள் மனத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மைக்ரோசாஃப்டிடமிருந்து இதைப்போன்ற ஒரு யோசனை வரவில்லை.

மற்றவர் செய்வதை உடனடியாகப் பார்த்து காப்பியடித்து வெற்றிபெறும் மைக்ரோசாஃப்ட், நான்கு பக்கமும் நெருக்கடி ஏற்படும்போது யாரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்புகிறது.

பில் கேட்ஸ் உருவாக்கி வைத்துள்ள கணினி சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காப்பது எளிதான விஷயமல்ல. நான்கு பக்கத்திலிருந்தும் நான்கு படைகள் முற்றுகையிடுகின்றன. அதைத்தவிர ஃபேஸ்புக், மைஸ்பேஸ், கூகிளின் ஆர்க்குட், ட்விட்டர் என்று புதிய புதிய விஷ சர்ப்பங்கள் முளைத்து பயமுறுத்துகின்றன.

ஆனாலும் இதையெல்லாம் மீறி, இன்று மைக்ரோசாஃப்ட் தனது மென்பொருள்களையும் இயக்குதளங்களையும் விற்று பெரும் காசு பார்க்கிறது. இது எத்தனை நாள்களுக்குத் தாங்கும் என்று தெரியாவிட்டாலும்கூட, இன்றும் வருமானம், லாபம் ஆகியவற்றைப் பார்க்கும்போது மைக்ரோசாஃப்ட் அளவுக்குப் பெரிய நிறுவனம் இந்தத் துறையில் இல்லை.

ராஜ பரம்பரைகளில் ஒரு குறிப்பிட்ட ராஜாவின் பெயர் தனியாக நிற்கும். அவரது காலத்தில் மிகப்பெரும் உன்னத நிலையை அடைந்தபிறகு அந்த சாம்ராஜ்யம் அடுத்த சிலரது ஆட்சியில் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பிக்கும். ஒரு ராஜராஜனுக்குப் பிறகு சோழ சாம்ராஜ்யமும், நரசிம்மவர்மனுக்குப் பிறகு பல்லவ சாம்ராஜ்யமும்போல.

பில் கேட்ஸும் மைக்ரோசாஃப்ட் சாம்ராஜ்யமும்கூட அப்படித்தான் என்பது என் கருத்து.

[அட்டைப்படம்: சொக்கன் எழுதி கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியான புத்தகம் பில் கேட்ஸ் - சாஃப்ட்வேர் சுல்தான்]

பிரெடெரிக்கும் கேதரைனும்

(From: Grimm's Fairy Tales, abridged and retold by Badri)

பிரெடெரிக் என்பவனுக்கு கேதரைன் என்ற மனைவி இருந்தாள். அவர்கள் நெடுநாட்களாக மணவாழ்க்கை வாழ்ந்துவந்தனர். ஒரு நாள், பிரெடெரிக் கேதரைனிடம், தான் வயலுக்குச் சென்று வேலைசெய்துவிட்டு வரப்போவதாகவும் நல்ல இரவு உணவு தயார்செய்து வைக்குமாறும் சொல்லிவிட்டுச் சென்றான்.

கேதரைன் நல்ல ஆட்டுக்கால் ரோஸ்ட் செய்து, கூட ஒரு கூஜா மதுவையும் கொடுக்க நினைத்தாள். இறைச்சியை அடுப்பில் வைத்து வறுத்தாள். இன்னும் சிறிதுநேரத்தில் நன்கு சமைந்துவிடும் என்ற நிலையில் அதை அப்படியே அடுப்பில் வைத்துவிட்டு, மது வைத்திருக்கும் சுரங்க அறைக்குச் சென்று ஒரு கூஜாவில் மதுவை நிரப்ப ஆரம்பித்தாள். பீப்பாயிலிருந்து மதுவைப் பிடித்துக்கொண்டிருக்கும்போது திடீரென, வாசல் கதவைத் தாழிடாமல் வந்தது நினைவுக்கு வந்தது. ‘அய்யோ, நாய் வந்து சமையல் அறையில் இருக்கும் ஆட்டுக்கால் சதையை எடுத்துக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது' என்று போட்டது போட்டபடி, அலறியடித்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

அங்கே நாய் ஏற்கெனவே மாமிசத்தை சுவைத்துக்கொண்டிருந்தது. கேதரைன் அதைத் துரத்த அது வேகமாக ஓடியது. அதனைத் துரத்திக்கொண்டு வந்தவள், அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாததால், மீண்டும் வீட்டுக்குத் திரும்பினாள். கீழே அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவளுக்கு அப்போதுதான் பீப்பாயிலிருந்து கூஜாவில் கொட்டிக்கொண்டிருக்கும் மது ஞாபகத்துக்கு வந்தது. குழாயை மூடவில்லையே என்று மீண்டும் மது வைத்திருக்கும் இடத்துக்கு ஓடினாள். அங்கே பீப்பாய் மதுவும் காலியாகி அறை முழுதும் கொட்டிக்கிடந்தது.

இப்போது என்ன செய்வது என்ற கவலையில் இருந்தவளுக்கு சந்தையில் வாங்கிவந்த மாவு மூட்டை ஞாபகத்துக்கு வந்தது. அந்த மூட்டையிலிருந்து மாவைக் கொண்டுவந்து கொட்டிக்கிடக்கும் மதுவில் போட்டால், அது மதுவை உறிஞ்சி, அறையைச் சுத்தம் செய்துவிடும் என்று நினைத்தாள். அவ்வாறு செய்யும்போது நடந்த களேபரத்தில், ஏற்கெனவே கூஜாவில் நிரம்பியிருந்த மதுவும் கைதவறிக் கீழே விழுந்து கொட்டியது.

மதியம் வீட்டுக்கு வந்த பிரெடெரிக் இரவு உணவு எப்படிச் செல்கிறது என்று கேட்டான். நடந்தது அனைத்தையும் கேதரைன் அவனுக்குச் சொன்னாள். ஆடிப்போன அவன், ‘ஏன் இப்படி அடுப்பில் ஒரு பொருளை வைத்துவிட்டு, கதவைச் சாத்தாமல் மதுவைப் பிடிக்கப் போனாய்' என்று அவளைத் திட்டினான். ‘நான் என்ன செய்வேன்? நல்லதாக நடக்கும் என்றுதானே நான் நினைத்தேன்? இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று நீ முன்னாலேயே என்னிடம் சொல்லியிருந்தால் நான் இப்படிச் செய்திருக்கமாட்டேன்' என்றாள்.

இந்த மாதிரி இவள் வீட்டைப் பார்த்துக்கொண்டால், அதோகதிதான் என்ற முடிவுக்கு வந்தான் பிரெடெரிக். வீட்டில் கொஞ்சம் தங்கக் கட்டிகளை வைத்திருந்தான். அவற்றை எப்படியாவது பாதுகாக்கவேண்டும் என்ற முடிவுடன், அதைக் கொண்டுபோய் தோட்டத்தில் புதைத்துவிட்டு வந்தான். வந்து மனைவியிடம், ‘கொஞ்சம் மஞ்சள் துண்டுகள் இருந்தன. அவற்றை தோட்டத்தில் புதைத்துவைத்துள்ளேன். அதன் பக்கம் போகவே போகாதே' என்றான். அவளும் தான் அதன் பக்கம் நெருங்கமாட்டேன் என்று உறுதி கூறினாள்.

அவன் மீண்டும் வயலுக்குச் சென்றபிறகு, இரண்டு ஆசாமிகள் பண்டபாத்திரம் விற்க வந்தார்கள். தட்டுகள், பாத்திரங்கள் என்று அவளுக்குப் பலவற்றையும் காட்டினார்கள். ‘என்னிடம் பணம் இல்லை, அதனால் இவற்றை வாங்கமுடியாது. தோட்டத்தில் வேண்டுமானால் கொஞ்சம் மஞ்சள் துண்டுகள் இருக்கின்றன. அவை உங்களுக்குப் பயன்படுமா என்று பாருங்கள்' என்றாள் அவள். அந்த இரண்டு ஆசாமிகளும் பெரும் போக்கிரிகள். அவர்கள் தோட்டத்துக்குச் சென்று தோண்டிப் பார்த்து, தங்கம் என்று கண்டுகொண்டார்கள். அவற்றை அப்படியே லவட்டிக்கொண்டு ஓடிவிட்டார்கள். கேதரைன் அவர்கள் விட்டுச் சென்ற பண்டபாத்திரங்களை வீடுமுழுதும் வைத்து அழகுபார்க்கத் தொடங்கினாள்.

இரவு வீட்டுக்கு வந்த பிரெடெரிக், விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோனான். ‘நான்தான் உன்னை மஞ்சள் துண்டுகள் பக்கம் போகவே கூடாது என்று சொன்னேனே?' என்றான். ‘நான் போகவே இல்லை. அவர்கள்தான் போய் எடுத்துக்கொண்டார்கள். நான் இங்கேயேதான் இருந்தேன்' என்றாள் அவள். தலையில் இடிவிழுந்ததைப் போல அவன் உட்கார்ந்துவிட்டான். கேதரைன் அவனிடம், நாம் ஏன் ஒடிச்சென்று அந்தத் திருடர்களைப் பிடிக்ககூடாது என்றாள்.

‘நல்ல யோசனையாக இருக்கிறது, வா, செல்வோம்' என்று இருவரும் ஓடத் தொடங்கினர். சாப்பாட்டுக்கு இருக்கட்டும் என்று பிரெட், சீஸ், வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொண்டாள் அவள். பிரெடெரிக் வேகமாக ஓடினான். கேதரைன் பின்தங்கினாள். வழியில் ஒரு குறுகிய பாதையில் இரு பக்கங்களிலும் உள்ள மரங்களில் வண்டிகளின் சக்கரம் உராய்வதால் வெட்டுப்பட்டிருப்பதை அவள் கவனித்தாள். ‘அய்யோ, பாவம் இந்த மரங்கள்' என்று சொல்லிவிட்டு மரங்களின் வெட்டுப்பகுதியில் வெண்ணெயைத் தடவினாள்.

தொடர்ந்து செல்லும்போது கையில் வைத்திருந்த பையிலிருந்து சீஸ் கட்டி ஒன்று கீழே விழுந்து உருண்டு ஓடியது. அது எங்கே சென்றிருக்கும் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஒரு சீஸ் கட்டி எங்கே சென்றிருக்கும் என்பது பிற சீஸ் கட்டிகளுக்குத் தெரியலாம் என்பதால் கையில் வைத்திருந்த எல்லா சீஸ் கட்டிகளையும் கீழே போட்டாள். எல்லாம் கொட்டிச் சிதறி காணாமல் போய்விட்டன.

மேலும் நடந்து, தன் கணவன் பிரெடெரிக் இருக்கும் இடத்தை வந்தடைந்தாள். அவன் சாப்பிடுவதற்குக் கேட்க, கையில் வைத்திருந்த வெறும் பிரெட்டை மட்டும் கொடுத்தாள். சீஸ், வெண்ணெய் எங்கே என்று அவன் கேட்க, அதற்கு அவள் சொன்ன பதில் அவனது கோபத்தை அதிகரித்தது. வெறும் பிரெட்டை இருவரும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தனர்.

அவள் வாசல் கதவைப் பூட்டிவிட்டு வந்தாளா என்று பிரெடெரிக் கேட்டான். யோசித்துப் பார்த்த அவள் இல்லையென்று பதில் சொன்னாள். ‘போ, ஓடு! கதவைப் பூட்டிவிட்டு வா. இல்லாவிட்டால் திருடர்கள் திருடிக்கொண்டு போய்விடுவார்கள்' என்று அவளை அனுப்பினான்.

மீண்டும் வீட்டுக்கு வந்த அவள், ஏன் கதவைக் கணவன் பூட்டச்சொன்னான் என்று புரியாமல், கதவையே ஒட்டுமொத்தமாகப் பெயர்த்து எடுத்துக்கொண்டாள். கதவைத் தன்னுடனேயே வைத்திருந்தால், அது பத்திரமாக இருக்கும் என்று நினைத்தாள். கணவன் பிரெட் சாப்பிட விரும்பவில்லை என்று நினைத்துக்கொண்டு, கொஞ்சம் முந்திரி, பாதாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டாள். குடிக்க மது இல்லாததால், கொஞ்சம் வினீகரை எடுத்துக்கொண்டாள்.

பெயர்த்தெடுத்த கதவையும் பருப்புகளையும் வினீகரையும் எடுத்துக்கொண்டு வேகமாக வந்து கணவனை அடைந்தாள். அவன் அதிர்ந்துபோனான். ‘கதவை ஏன் பெயர்த்துக்கொண்டு வந்தாய்? இப்போது ஊரில் உள்ள அனைவருமே வீட்டுக்குள் செல்லமுடியுமே' என்றான். ‘நீ அப்படிச் செய்யக்கூடாது என்று சொல்லவில்லையே? அதனால்தான் அப்படிச் செய்தேன்' என்று கேதரைன் பதில் சொன்னாள்.

கதவு கனமாக இருந்ததால் அதைத் தூக்கிக்கொண்டு நடக்க கேதரைனால் முடியவில்லை. இனி பருப்புகளையும் வினீகரையும் தன்னால் தூக்கிக்கொண்டு செல்லமுடியாது என்றாள். அதற்கு பதில், அவற்றை கதவில் கட்டிவிடுவதாக அவள் சொன்னது அவனுக்கு ஏற்புடையதாக இருந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு மரத்தை அடைந்தனர். அப்போது அந்த இடத்தை நோக்கி அந்த இரண்டு போக்கிரித் திருடர்களும் வந்துகொண்டிருந்தனர். உடனே பிரெடெரிக்கும் கேதரைனும் மரத்தின்மீது ஏறிக்கொண்டனர்.

இரண்டு திருடர்களும் மரத்தடியில் வந்து உட்கார்ந்துகொண்டனர். தங்கள் கையில் இருந்த தங்கக் கட்டிகளைக் கீழே வைத்தனர். கேதரைனால் தன் கையில் வைத்திருந்த பளுவைத் தாங்கமுடியவில்லை. தான் கதவில் கட்டிவைத்திருக்கும் முந்திரிப் பருப்புதான் காரணமோ என்று நினைத்து அதனைக் கீழே போடப்போவதாக அவள் சொன்னாள். பிரெடெரிக் வேண்டாம் என்று தடுத்தான். திருடர்களுக்குத் தெரிந்தால் பிரச்னை என்றான். ஆனால் கேதரைன் தன்னால் தாங்கமுடியவில்லை என்று பருப்புகளைக் கீழே போட்டாள். சரசரவென்ற சத்தம் கேட்டு மழைவரப்போகிறது என்று திருடர்கள் நினைத்துக்கொண்டனர்.

சிறிது நேரம் கழித்து வினீகரையும் கீழே போட விரும்பினாள் கேதரைன். பிரெடெரிக் தடுத்தான். ஆனால் கேட்காமல் கேதரைன் வினீகர் குடுவையைக் கீழே போட்டாள். தெறிக்கும் வினீகரைப் பார்த்து மழைச்சாரல் என்று திருடர்கள் நினைத்தனர்.

கடைசியில் தன் தலையில் இருக்கும் பளுவுக்குக் காரணம், தான் கொண்டுவந்திருக்கும் கதவுதான் என்று கேதரைனுக்குப் புரிந்தது. அதைக் கீழே போட எத்தனித்தாள். பிரெடெரிக் தடுத்தான். ஆனால் கேதரைன் கதவைக் கீழே எறிய, அது திருடர்கள்மீது விழுந்ததும் அவர்கள் பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டனர். தங்கக் கட்டிகளை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.

கேதரைனும் பிரெடெரிக்கும் கீழே இறங்கி வந்தபோது தங்கக் கட்டிகள் அங்கேயே இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு பிரெடெரிக்கும் கேதரைனும் சந்தோஷமாக வீடு திரும்பினர்.

Thursday, June 26, 2008

நாயும் குருவியும்

Grimm's Fairy Tales என்ற புத்தகத்திலிருந்து தினமும் என் பெண்ணுக்குக் கதைகள் சொல்லி வருகிறேன். எல்லாக் கதைகளும் ‘சிறுவர்களுக்கு உகந்தது' என்று சொல்லமுடியாது. நிறைய வன்முறைகள் கொண்ட கதைகளும் உள்ளன.

இந்தக் கதைகளின் சுருக்கமான வடிவத்தை அவ்வப்போது எழுதலாம் என்று உத்தேசம். இன்று படித்துக்காட்டிய கதையின் சுருங்கிய தமிழ் வடிவம் இதோ:

***

ஓர் ஆட்டிடையனிடம் நாய் ஒன்று இருந்தது. ஆனால் அந்த இடையன் அந்த நாயைச் சரியாகப் பராமரிக்கவில்லை. பல நாள்கள் அதனைப் பசியால் துடிக்க விட்டுவிடுவான். தாங்கமுடியாத நாய் ஒரு நாள் அவனிடமிருந்து தப்பித்து ஓடியது.

வழியில் அந்த நாயைக் கண்ட குருவி ஒன்று ‘ஏன் சோகமாக இருக்கிறாய்?' என்று கேட்டது. சாப்பிட உணவில்லாததால்தான் என்று பதில் சொன்னது நாய். ‘அவ்வளவுதானே? வா, நான் உனக்கு உணவு தருகிறேன்' என்றது குருவி.

குருவி நாயை ஓர் இறைச்சிக் கடைக்கு அழைத்துச் சென்றது. உள்ளே நுழைந்து, யாரும் பார்க்காதபோது ஒரு துண்டு இறைச்சியைக் கொத்திக் கொத்திக் கீழே தள்ளியது. நாய் அதைக் கவ்வி சாப்பிட்டது. நாய்க்கு மேலும் பசி இருந்ததால் அங்கிருந்து இன்னொரு கடைக்குச் சென்று இதேபோல இறைச்சித் துண்டை எடுத்துக்கொடுத்தது. நாய் அடுத்து கொஞ்சம் பிரெட் வேண்டும் என்றது. குருவி அங்கிருந்து ஒரு பேக்கரிக்குச் சென்று வாயால் கொத்திக் கொத்தி இரண்டு பிரெட் துண்டங்களைக் கீழே தள்ளியது. நாயும் அதனைச் சாப்பிட்டது. மேலும் பிரெட் வேண்டும் என்று கெட்டதால் இன்னொரு கடைக்குச் சென்று அதேபோல பிரெட் எடுத்துக் கொடுத்தது.

நன்கு வயிறு நிரம்பிய நாய், குருவியுடன் நடந்து சென்றது. நாய்க்கு அசதியாக இருந்ததால் அங்கேயே தூங்க விரும்பியது. நெடுஞ்சாலையில் படுத்துக்கொண்டது. குருவியும் பக்கத்தில் ஒரு கிளையில் உட்கார்ந்துகொண்டது.

அப்போது மூன்று குதிரைகள் பூட்டிய ஒரு வண்டியில் மது நிரம்பிய பீப்பாய்கள் இரண்டை வைத்துக்கொண்டு ஒரு வண்டியோட்டி வந்துகொண்டிருந்தான். அந்த வண்டி, நாய் இருந்த பக்கம் சென்றது. குருவி உடனே வண்டிக்காரனை அந்தப் பக்கம் போகவேண்டாம் என்று எச்சரித்தது. ஆனால் வண்டிக்காரன் கேட்கவில்லை. குருவியை கேலி செய்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று நாயின்மீது ஏற்றிக் கொன்றுவிட்டான்.

குருவிக்குக் கடுமையான கோபம் வந்தது. ‘என் ஒரே நண்பனைக் கொன்றுவிட்டாய்! இப்போது நான் உன்னை அழிக்கப்போகிறேன்' என்றது. வண்டிக்காரன் அலட்சியமாக வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பினான்.

குருவி பறந்துசென்று வண்டியின் பின்புறம் ஏறிக்கொண்டது. வண்டிக்காரனுக்குத் தெரியாமல் மது நிரம்பிய பீப்பாயை அலகால் கொத்தி பொத்தல் போட்டது. மது கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே கொட்டி, அந்தப் பீப்பாய் காலியானது. இதனைக் கவனித்த வண்டிக்காரன், ‘அய்யோ, என்ன துரதிர்ஷ்டம், என் பீப்பாய் மது வீணாகப் போய்விட்டதே!' என்றான். ‘இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன், முடியும்போது பார், உனக்கு என்ன ஆகும்' என்றது குருவி. வண்டிக்காரன் வண்டியை நிறுத்திவிட்டு குருவியைத் துரத்த ஓடினான்.

அதற்குள் குருவி வண்டியின் முன்பக்கம் வந்து ஒரு குதிரையின்மீது ஏறி அதனைக் கொத்தத் தொடங்கியது. இதனால் மிரண்ட குதிரை அங்கும் இங்குமாக வண்டியை அலைக்கழித்தது. வண்டிக்காரன் குருவியை நோக்கி தன் கையிலிருந்து கத்தியை எறிந்தான். குருவி சரியான நேரத்தில் பறந்துவிட, கத்தி குதிரையைக் குத்தி அதன் உயிரை எடுத்தது. ‘அய்யோ, என்ன துரதிர்ஷ்டம்!' என்று புலம்பினான் வண்டிக்காரன். ‘இன்னும் நிறைய வரும்!' என்றது குருவி.

மிச்சமுள்ள இரண்டு குதிரைகளைக் கொண்டு வண்டியைச் செலுத்த ஆரம்பித்தான் வண்டிக்காரன். குருவி மீண்டும் பின்பக்கம் சென்று இரண்டாவது பீப்பாயையும் ஓட்டை போட்டு அந்த மதுவையும் நாசம் செய்தது. வண்டிக்காரன் துரத்திக்கொண்டுவரும்போது முன் பக்கம் வந்து இரண்டாவது குதிரைமீது உட்கார்ந்து அதனைக் கொத்தத் தொடங்கியது. வண்டிக்காரன் கத்தியை எறிய, அப்பொதும் குருவி தப்பித்தது; குதிரை செத்தது. மூன்றாவது குதிரையும் இப்படியே செத்துப்போனது.

கொண்டுவந்த மது, மூன்று குதிரைகள் என அனைத்தையும் இழந்த வண்டிக்காரன் கோபத்தோடு வீட்டை நோக்கி நடந்துசெல்ல ஆரம்பித்தான். குருவி வீட்டிலும் அவனுக்கு நாசத்தை உண்டுபண்ணுவதாகச் சொல்லிவிட்டுப் பறந்துசென்றது.

வீட்டை அடைந்த வண்டிக்காரன் தன் மனைவியிடம் நடந்ததைச் சொன்னான். அவள், ‘ஓ, அந்தக் குருவியா? அது தன் கூட்டாளிப் பறவைகளுடன் வந்து வீட்டில் உள்ள சோளத்தையெல்லாம் கொத்தித் தின்கிறது', என்றாள். வண்டிக்காரன் துரத்த, குருவி கண்ணாடி ஜன்னலுக்கு வெளிப்புறம் போய் நின்றுகொண்டது.

கடும் கோபத்தில் இருந்த வண்டிக்காரன் கையில் வைத்திருந்த கத்தியை குருவியை நோக்கி வீசி எறிந்தான். அது கண்ணாடியைச் சுக்கு நூறாக உடைத்தது. குருவி அந்த ஓட்டை வழியாக உள்ளே வந்து, ‘இப்போது நான் உன்னைக் கொல்லப்போகிறேன்' என்று சொல்லிவிட்டு அவனைக் கொத்தத்தொடங்கியது.

ஆனால் வண்டிக்காரன் அந்தக் குருவியைக் கையில் பிடித்துவிட்டான். மனைவியை அழைத்து, ‘கத்தி ஒன்றை எடுத்துவா, இதை இங்கேயே கொன்று அடுப்பில் வாட்டித் தின்றுவிடலாம்' என்றான். மனைவி ஓடிச்சென்று கத்தியைக் கொண்டுவந்தாள். வண்டிக்காரன் குருவியைப் பிடித்தபடி மனைவியிடம் கத்தியால் அதனை வெட்டச்சொன்னான். அதுவரை அமைதியாக இருந்த குருவி, அவள் கத்தியை ஓங்கும்போது படபடவென இறக்கைகளை அடித்தபடி வண்டிக்காரன் கைகளிலிருந்து விடுபட்டுத் தப்பியது. ஆனால் மனைவி வீசிய கத்தி, வண்டிக்காரனை வெட்டியது. அவன் அங்கேயே ரத்தம் கொட்டத் துடிதுடித்து இறந்தான்.

***

(கதை அவ்வளவுதான்!)

Wednesday, June 25, 2008

தமிழ் + செல்பேசிகள் + சிம்பயான் + நோக்கியா

இன்று உலகில் அதிகமாக விற்பனையாகும் செல்பேசிகள் பலவற்றுள்ளும் இருப்பது சிம்பயான் என்ற இயக்குதளம்.

இந்த நிறுவனத்தை பல செல்பேசி தயாரிப்பாளர்கள் சேர்ந்து உருவாக்கியிருந்தனர். நோக்கியா (47.9%), சோனி எரிக்சன் (13.1%), எரிக்சன் (15.6%), பானாசானிக் (10.5%), சீமென்ஸ் (8.4%), சாம்சுங் (4.5%) ஆகியோர் இதன் உரிமையாளர்கள். நோக்கியா இப்போது, பிறரது பங்குகளை வாங்கி, இந்த நிறுவனத்தை முழுமையாகக் தனது கைக்குள் கொண்டுவந்து, சிம்பயானை தளையறு, திறமூல இயக்குதளமாக மாற்ற எண்ணியுள்ளது. அதைத் தொடர்ந்து சிம்பயான் அறக்கட்டளை என்ற லாபநோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தி, செல்பேசிகளுக்கு திறமூல முறையில் இயக்குதள மற்றும் மென்பொருள் உருவாக்குதலை வேகப்படுத்த எண்ணுகிறது.

***

இன்று கணினியில் பிறமொழி மென்பொருள்களைத் தயாரிக்கும் வேகத்தில் செல்பேசிகளில் செய்யமுடியாது. கணினியில் எழுத்துரு தொழில்நுட்பம் எளிமையானதாக உள்ளது. ஒருசில தரக்கட்டுப்பாடுகளுக்குள் அடங்கியுள்ளது. எழுத்துக் குறியீட்டிலும் யூனிகோட் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே இவற்றைக் கொண்டு தமிழில் கணினியில் எழுத மென்பொருள் ஒன்றை உருவாக்குவது எளிதாக உள்ளது.

இதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் தமிழில் எழுதி, அவற்றைப் படிக்கிறோம். வலைப்பதிவுகள் என்ற பிரும்மாண்டமான விஷயம் உருவாகியுள்ளது.

ஆனால் தமிழில் சாதாரண குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதற்கு தடவ வேண்டியிருக்கிறது. ஏதோ சில செல்பேசிகளில் மட்டுமே இந்த வசதி உள்ளது. எழுத்துருக்களை மாற்ற, யூனிகோட் தமிழ் வேலை செய்ய என்று எளிதான, வரிசைக்கிரமமான செயல்பாட்டு வழிமுறைகள் ஏதும் இருப்பதில்லை.

சிம்பயான் ஃபோன்களில் எழுத்துரு GDR என்ற வடிவில் உள்ளது. புதிய ஃபோன்கள் சிலவற்றில் TTF எழுத்துருக்கள் வேலை செய்கின்றன. அதாவது TTF எழுத்துருக்களாக சிம்பயானுக்கு யூனிகோட் complex rendering புரியுமா என்று தெரியவில்லை. நான் கேள்விப்பட்டவரையில், பலர் லதா எழுத்துருவைத் தங்கள் செல்பேசியில் சேர்த்தபோது, 'கோ' என்ற எழுத்து க+'ஓ மார்க்கர்' என்றுதான் வந்ததாகச் சொன்னார்கள். பலரது விண்டோஸ் இயக்குதளத்தில், ஃபயர்ஃபாக்ஸில் இப்போதும் இப்படித்தான் தெரியும். இதனைச் சரியாகக் காண்பிப்பதற்குத்தான் complex rendering என்று பெயர்.

கணினியைப் பொருத்தமட்டில், முதல் தேவை, தமிழைப் படிப்பதாகவும், அடுத்த தேவை தமிழில் எழுதுவதாகவும் இருந்தது. அதனால்தான் ஆயிரக்கணக்கான எழுத்துருக்களும் டயனமிக் ஃபாண்ட் எனப்படும் இயங்கு எழுத்துருக்களும் உருவாயின. இன்று யூனிகோட் என்னும் ஒரேயொரு உலகளாவிய தரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். செல்பேசியிலும் ஆளுக்கொரு எழுத்துக் குறியீட்டை நோக்கிச் செல்லாமல், யூனிகோடையே பயன்படுத்துவது நலம். ஆனால் இடப் பிரச்னைகள் இல்லாமல் இல்லை.

ஒரு கட்டத்தில் கணினி இடைமுகம் தமிழில் வேண்டும் என்று ஏகப்பட்ட வேலைகள் நடைபெற்றன. மைக்ரோசாஃப்ட் இன்றும் இந்த வேலையில் இறங்கியுள்ளது. லினக்ஸ் ஆர்வலர்கள் பலரும் தமிழ் இடைமுகத்தில் வேலைசெய்துவருகின்றனர். ஆனால் அவை பெரிய பிரச்னைகளாக எனக்குத் தோன்றவில்லை. செய்யவேண்டியது அவசியமே, ஆனால் அதனையும்விட அவசியமான சில விஷயங்கள் உள்ளன.

SMS எனப்படும் குறுஞ்செய்திகளைப் தமிழில் படிப்பது உபயோகமானது. பதிலுக்கு தமிழிலேயே அனுப்பத் தெரியாவிட்டாலும்கூட. அடுத்து GPRS இணைப்பு உள்ளவர்கள், WAP/WEB பக்கங்களைத் தமிழிலேயே பார்வையிடவேண்டியது. மூன்றாவதாக, தமிழில் குறுஞ்செய்தியைத் தட்டித் தடவியாவது அடிக்கும் வசதி. அதாவது தனியான ஒரு செயலியாக இல்லாமல், இப்போது மெசேஜ் அடிக்கும் அதே வசதியிலேயே Abc, ABC, abc, 123, Abc+Dictionary போல, அஆஇ என்ற ஆப்ஷன் வருமாறு செய்யவேண்டும். அதில் ஆரம்பகாலத்தில் எந்த பட்டனை அழுத்தினால் எந்த எழுத்து வரவேண்டும் என்று ஆளுக்கொரு ஐடியா இருக்கும். ஏற்கெனவே முரசு அஞ்சல் மொபைலில் ஒரு மெத்தட் உள்ளது. சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வேறு சில முன்மொழிபுகளும் உள்ளன. இதில் ஏதோ ஒன்றை விரைவாகத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

***

நோக்கியா சிம்பயானை வாங்கி திறமூலமாகச் செய்தால் மேலே சொன்ன பலவற்றை வேகமாகச் செய்யலாம். ஆனால் திறமூல வடிவில் சிம்பயான் வருவதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். அதுவரை பொறுத்திருக்காமல், நாமே சில திட்டங்களைச் செயல்படுத்தியாகவேண்டும்.

Tuesday, June 24, 2008

சிதம்பரத்தில் ஒரு நாள்

சனிக்கிழமை அன்று நானும் என் அலுவலகத் தோழர் முத்துக்குமாரும் சிதம்பரம் சென்றிருந்தோம். மணிவாசகர் பதிப்பகம் நிறுவனர் மெய்யப்பன் பெயரால் இயங்கும் அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் புத்தகங்களுக்கு விருதுகள் வழங்குகிறது. அதில் இந்த ஆண்டு முத்துக்குமார் எழுதிய 'அன்புள்ள ஜீவா' என்ற புத்தகத்துக்கு விருது கிடைத்துள்ளது.

ஜெமினியிலிருந்து சாதா டவுன் பஸ்ஸில் வடபழனிவரை செல்ல வெறும் ரூ. 3.50தான். ஆனால் தாழ்தள சொகுசுப் பேருந்து என்ற பெயரில் இருந்த ஒரு வண்டியில் வடபழனியிலிருந்து கோயம்பேடு செல்ல ரூ. 5 ஆனது. கூட்டம் அதிகமாக இருந்ததால் சொகுசை உணரமுடியவில்லை. கோயம்பேட்டிலிருந்து சிதம்பரம் செல்ல 5.30 மணிநேரம் ஆனது. டிக்கெட் விலை ரூ. 75.

மாலை ஐந்து மணிக்கு சிதம்பரம் கீழ ரத வீதி ராசி திருமண மண்டபம் வந்து சேர்ந்தோம். 6.00 மணிக்குத் தொடங்க இருந்த விழா, சிறப்பு விருந்தினர் வருவதற்காக சுமார் 40 நிமிடங்கள் தாமதமானது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அகத்தியலிங்கம் கோட் சூட் போட்டுக்கொண்டு ஜம்மென்று வந்திருந்தார். விருதுகளை வழங்கியது மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சபாபதி மோகன், அரசியல்வாதிகளுக்கே உரித்தான வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியில் ஜம்மென்று இருந்தார். அவர் நெல்லையிலிருந்து ரயில் மாறி, பஸ் மாறி, கார் மாறி வருவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது.

மணிவாசகர் பதிப்பகம் மூத்த தமிழறிஞர் ஒருவருக்கு ரூ. 10,000 பணம், விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்குகிறது. அந்த விருதை இந்த ஆண்டு பெற்றவர் சோ.ந.கந்தசாமி என்பவர். இரண்டு நூல்கள் சிறந்த நூல்களுக்கான பரிசைப் பெற்றன. 85 வயதாகும் கே.ஜி.இராதாமணாளன் எழுதிய, பாரி நிலையம் வெளியிட்ட 'திராவிட இயக்க வரலாறு' என்ற நூல். 28 வயதாகும் முத்துக்குமார் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட 'அன்புள்ள ஜீவா' என்னும் நூல். இரண்டு நூல்களுக்கும் தலா ரூ. 5,000 பரிசு. இரண்டு புத்தகங்களையும் வெளியிட்ட பதிப்பகங்களுக்கு தலா ரூ. 2,500 பரிசு.

நடுவர் குழுவில் இருந்த பல்லடம் மாணிக்கம் (இவர் ஓர் அற்புதமான மனிதர், இவரைப் பற்றித் தனியாக எழுதவேண்டும்) வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். தமிழில் வெளியாகும் புத்தகங்கள்பற்றி, விகடன் அற்புதமாக தமிழில் வெளியிட்டுள்ள என்சைக்ளோபீடியாபற்றி, ஜோன் ஆஃப் ஆர்க் பற்றி என்று அங்கும் இங்கும் தாவிய பேச்சு இது. தமிழில் அறிவு நூல்கள் எக்கச்சக்கமாக வரவேண்டும் என்ற ஆர்வம் அவரது பேச்சில் தெறித்தது.

மணிவாசகர் பதிப்பகத்தினர்தான் தமிழ்நாட்டு மாணவர்கள் கல்விக்காக வேண்டி, வெற்றித் துணைவன் என்ற பெயரில் நோட்ஸ் வெளியிடுகிறார்கள். அதில் குலுக்கல் முறையில் பரிசு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் செலவை ஏற்றுக்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்ய விரும்பாத மாணவர்களுக்கு பணமாகக் கொடுக்கின்றனர். அந்த விழாவும் தொடர்ந்து நடந்தது.

விழா மேடையில் பலரும், நிறையப் பேசினர். பலருக்கும் விருதுகளும் பரிசுகளும் தரவேண்டியிருந்ததால் நிறைய நேரம் ஆனது. ஆனால் பொதுமக்கள் அமைதியாக இருந்து ரசித்தனர். பாரி நிலையம் அமர்ஜோதி, சென்னையில் இந்தமாதிரியான கூட்டம் வருவது அபூர்வம் என்றார்.

கூட்டம் முடிந்ததும் மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் வீட்டில் அற்புதமான இரவு விருந்து. இரவு சென்னைக்கான பேருந்து 11.45 மணிக்குத்தான் என்பதால் அப்படியே மெதுவாகக் கிளம்பி சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்குச் சென்றோம். உள்ளே எங்கு பார்த்தாலும் பக்கவாட்டில் குடுமி வைத்த தீட்சிதர் ஆண்கள் - 5 வயது முதல் 75 வரை ஆங்காங்கே காணப்பட்டனர். மடிசார் அணிந்த சின்னஞ்சிறு பெண்கள் (அப்படியானால் திருமணம் நடந்திருக்கும்) - தீட்சிதர் ஆண்களின் மனைவிமார்கள் - காணப்பட்டனர். சில பெண் குழந்தைகள் ஆங்காங்கே விளையாடிக்கொண்டிருந்தன. பாவம் எப்போது பிடித்து கல்யாணம் செய்துவைத்துவிடுவார்களோ.

தங்கக் கூரை வேய்ந்த விதானத்தின்கீழ் நடராஜர், தெற்கு நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதற்கு எதிராக இருந்த மண்டபத்தில் ஒருவர் அமர்ந்து தேவாரப் பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். அவரது முதுகில் பூணூல் இல்லை என்று தோன்றியது. அப்படியே ஒரு சுற்று சுற்றி, திருமங்கையாழ்வார் 'பல்லவர்கோன் பணிந்த செம்பொன் மணிமாடங்கள் சுழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம்' என்று மங்களாசாசனம் செய்த கிழக்கு பார்த்திருக்கும் கோவிந்தராஜரைப் பார்க்கச் சென்றால் கதவை இழுத்து மூடிக்கொண்டிருந்தார் பட்டாச்சாரியார்.

பேருந்துக்கு வெகு நேரம் இருந்ததால், மீண்டும் ராசி திருமண மண்டபம் சென்றோம். பட்டிமன்றம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்று சன் டிவி புகழ் ஆட்கள் அல்லது விஜய் டிவி புகழ் ஆட்கள். காமெடி கிங், காமெடி குயின் என்று அடைமொழியை வைத்துள்ளனர். “வாழ்க்கை என்பது இனிய பூந்தோட்டமா? நெடிய போராட்டமா?” என்பதுதான் தலைப்பு. ஆண்கள் மூவர் போராட்டம் என்றும், பெண்கள் மூவர் பூந்தோட்டம் என்றும் வாதிட்டனர்.

பொதுவாகவே இந்த பட்டிமன்றங்கள் எல்லாம் தென்னை மரத்தைப் பற்றி பேசச் சொன்னால், மாட்டைப் பற்றிப் பேசிவிட்டு இந்த மாட்டை தென்னை மரத்தில்தான் கட்டுவர் என்று சொல்லுமாப்போலே இருக்கின்றன.
“இப்பிடித்தாங்க ஒரு நாள், நான் தெருவுல போயிக்கிட்டிருந்தேனா, அங்க ஒருத்தர் தும்மிகிட்டிருந்தாரு. அட, ஏங்க இப்பிடித் தும்மிறீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு, ஏன் மூக்கு, நான் தும்முறேன், உனக்கென்னன்னு. எனக்கு ஏங்க இந்தத் தலையெழுத்து? இதைத்தாங்க வள்ளுவரும் அழகாச் சொன்னாரு... (ஏதாவது ஒரு குறளை எடுத்து விடுங்க இங்க) .... இந்தத் திருக்குறளை எடுத்துக்குங்களேன்... கால் வாங்காத ஒரு குறள் இருக்கு. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (இதை ரெண்டு தடவை சொல்லனும்). இந்த மாதிரி பெருமை வேற எதுக்குங்க வரும்? அதத்தான் அப்பவே பாரதி சொல்லிவெச்சான், காதுல தேனு...”

இப்படி எதை வேண்டுமானாலும் பேசலாம். பேசிவிட்டு கடைசில, “ஆகவே நடுவர் அவர்களே, வாழ்க்கை என்பது மத்தளமா, மயிலிறகா என்றால் எங்க அணியோட வாதம், மயிலிறகே, மயிலிறகே, மயிலிறகே என்று சொல்லி எனது வாதத்தை முடித்துக்கொள்கிறேன்” அப்பிடின்னா போதும். அதற்குப் பிறகு நடுவர் ஒரு பத்து நிமிஷம் நிறைய ஜோக்கெல்லாம் சொல்லி, கைதட்டல் வாங்கி கடைசியா ஒரு தீர்ப்பு வழங்கிடுவார்.

ஆனால் சிதம்பரம் மக்கள் இரவு 11.00 மணிவரை ரசித்து, சந்தோஷமாகக் கேட்டனர். பட்டிமன்றம் என்பதைவிட Stand-up comedy என்பதுதான் நமது மக்களுக்குத் தேவையோ என்று தோன்றுகிறது. இல்லாத பட்சத்தில் பட்டிமன்ற வழக்குரைஞர்களே அந்த வேலையைச் செய்துவிடுகிறார்கள்.

11.45-க்குக் கிளம்பிய ரதிமீனா டிராவல்ஸ் வண்டி (டிக்கெட் ரூ. 170), காலை 4.00 மணிக்கு அடையாறு வந்து சேர்ந்தது. சிதம்பரத்தில் சொட்டு மழை இல்லை. சென்னையில் அடித்துப் பிய்த்துக் கொட்டி, தெருவெல்லாம் நீர். அந்த அதிகாலையில் ஓர் ஆட்டோ கிடைத்ததே அபூர்வம். அவரிடம் பணத்துக்குப் பேரம் பேசலாமா? சொன்ன காசைக் கொடுத்து கோபாலபுரம் வந்து, ஒரு மணி நேரம் தூக்கம் போட்டு, மாமல்லபுரம் கிளம்பவேண்டிய வேலை. மாமல்லபுரம் தொடர்பாக சில புத்தகங்கள் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். அதுபற்றி பின்னர்.

Monday, June 23, 2008

மலையாளம் புத்தகப் பதிப்பு அறிமுகம்

எங்களது நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் மலையாளப் பதிப்பு புலரியின் புத்தகங்கள் சில மாதங்களாகவே உருவாகி வந்துள்ளன. ஆனால் கடைகளுக்கு அவை செல்லவில்லை. விற்பனைப் பிரதிநிதிகள் இல்லாமையே காரணம். அத்துடன் ப்ராடிஜி மலையாளத்தின் புத்தகங்களும் தயாராகிவந்தன. அவையனைத்தையும் எங்களது ஆங்கிலப் புத்தகங்களுடன் சேர்த்து மொத்தம் 125 புத்தகங்களுக்கு சென்ற வாரம் அறிமுக வெளியீட்டு விழா ஒன்றை திருவனந்தபுரத்தில் நடத்தினோம்.

அதற்குமுன்னரே எங்களது மலையாளப் புத்தகங்கள் சிலவற்றுக்கு கோழிக்கோட்டிலும் ஆலப்புழையிலும் திருவனந்தபுரத்திலும் வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் அவை குறிப்பிட்ட எழுத்தாளர்களின் ஓரிரு புத்தகங்களுக்கு மட்டுமே. இப்போது நடந்தது எங்களது அனைத்து புத்தகங்களுக்குமாகச் சேர்த்து நடந்த விழா.

புதிதாக ஒரு மொழிக்குச் செல்லும் ஒரு பதிப்பாளரை அந்த மொழியில் படிக்கும் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைக்கும் விழா.

தமிழ்நாட்டில் நடத்தப்படும் புத்தகம் தொடர்பான விழாக்களுக்கும் கேரளத்தில் நடைபெறும் விழாக்களுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. தொலைக்காட்சிகளைப் பொருத்தமட்டில் புத்தக வெளியீடு செய்திகளில் காண்பிக்கக்கூடிய ஒன்று. ஆறு தொலைக்காட்சிகள் கேமராக்களுடன் வந்திருந்தன. அது பெரிய ஆச்சரியம். அத்துடன் நிற்காது ஒவ்வொரு புத்தகக் கட்டைப் பிரித்து ஒவ்வொன்றாகக் காண்பிக்கும்போது அவற்றையும் முழுதாகப் படம் எடுத்தது அடுத்த ஆச்சரியம். நிகழ்ச்சி முடிந்த கையோடு கேசட்டை அனுப்பி அன்று இரவுக்குள்ளாக ஒரு சானலில் அதனைச் செய்தியில் காட்டியது அதைவிட ஆச்சரியம்.

செய்தித்தாள்கள், இதழியலாளர்கள் திரளாக வந்திருந்தனர். மற்ற பலரும் வந்திருந்தனர். இது பொது நிகழ்ச்சி அன்று. சிலர் வரவேண்டும் என்று எதிர்பார்த்து அவர்களை மட்டும் அழைத்திருந்த நிகழ்ச்சி. அவர்களுக்கு நிகழ்ச்சி நடந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்தும் இருந்தது. எனவே தலை எண்ணி அழைத்திருந்த நிகழ்ச்சி. 80 பேரை எதிர்பார்த்ததில் 100 பேர் வந்திருந்தனர்.

மேடையில் நான்கு பேர் புத்தகங்களை வழங்க, நான்கு பேர் பெற்றுக்கொண்டனர். அறிமுகவுரை, நன்றியுரை என்று மொத்தம் 10 பேர் பேசியிருப்போம். அத்தனையும் சேர்ந்து எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 40 நிமிடங்களே. அவர்களே, இவர்களே, இமயமலையில் கொடியை நாட்டி எறும்புக்கு கோட் சூட் ஈந்த புண்ணியவானே, புலிகேசியே என்றெல்லாம் யாரும் புகழாரம் சூட்டி நேரத்தை வீணாக்கவில்லை.

இனிதான் எங்களது புத்தகங்கள் பரவலாக சந்தைக்குச் செல்லவேண்டும். எங்களது விற்பனை அலுவலர்கள் இரண்டு, மூன்று மாதம் உழைத்து எவ்வளவு கடைகளில் புத்தகங்களை வைக்கமுடியுமோ அவ்வளவு இடங்களில் வைக்கவேண்டும். அதனை மக்கள் வாங்கவேண்டும். வாங்கி, நன்றாக இருக்கிறதா அல்லது மோசமா என்று கருத்து சொல்லவேண்டும். மலையாளத்தில் மாபெரும் பதிப்பாளர் ஒருவர் இருக்கிறார். டிசி புக்ஸ் என்று. டி.சி.கிழக்கேமூரி என்பவரால் உருவாக்கப்பட்டு இன்று அவரது மகன் ரவி டி.சி. என்பவரால் நடத்தப்படும் நிறுவனம் இது. மலையாளத்தில் பிரசுரமாகும் புத்தகங்களில் பாதிக்குமேல் இவர்கள்தான் பதிப்பிக்கிறார்கள். மலையாளத்தின் பிரபல நாளிதழ், வார இதழ்கள் நிறுவனம் மாத்ருபூமி, (தமிழில் விகடன் போன்று) புத்தகப் பதிப்புத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளது. இவற்றைத் தவிர நன்கு வேரூன்றிய ஒரு பத்து பதிப்பகங்களையாவது சொல்லலாம்.

இவற்றுடன் போட்டிபோட்டு நிற்க நாங்கள் நிறைய வேலைகளைச் செய்யவேண்டும்.

அடுத்த சில மாதங்கள் சுவாரசியமாகப் போகும்.

சம்பந்தமுள்ள பா.ராகவன் பதிவு

Thursday, June 19, 2008

இந்து தற்கொலைப் படை வேண்டும் - தாக்கரே

அனைவரும் கடுமையாகக் கண்டிக்கவேண்டிய ஒரு காரியத்தை மஹாராஷ்டிராவின் சித்தம் கலங்கிய அரசியல்வாதி பால் தாக்கரே செய்துள்ளார். உலகமே பயங்கரவாதத்தை எதிர்க்கும்போது, இஸ்லாமிய அறிஞர்கள் பயங்கரவாதத்துக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை என்று கூட்டம் போட்டுச் சொல்லும்போது, பால் தாக்கரே, இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்து தற்கொலைப் படை வேண்டும் என்று எழுதியுள்ளார். தி ஹிந்துவில் வந்துள்ள மேற்கோள் இதோ:
The threat of Islamic terror in India is rising. It is time to counter the same with Hindu terror. Hindu suicide squads should be readied to ensure existence of Hindu society and to protect the nation.
என்ன செய்யச் சொல்கிறார்? ஒரு பெரிய மைதானத்தில் இடுப்பில் குண்டுகளைக் கட்டிக்கொண்டிருக்கும் ஓர் இந்து பயங்கரவாதியும் ஓர் இஸ்லாமிய பயங்கரவாதியும் மோதி அதனை நேரடி ஒளிபரப்பாக தொலைக்காட்சியில் காண்பிக்கவேண்டும் என்கிறாரா? எப்படி இடுப்பில் குண்டுகட்டிய ஓர் இந்து பயங்கரவாதி, இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து உலகைக் காக்கப்போகிறார்?

உளறுவதற்கு ஒரு வரைமுறை கிடையாதா?

இந்த உளறலுக்காக இவரை சிறையில் தள்ளலாம் என்று தோன்றுகிறது. ஆனால் கருத்துகளுக்காக மட்டுமே ஒருவரை சிறையில் அடைப்பது நியாயமல்ல என்பது எனது கருத்தாக இருப்பதால், இவரைத் திட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

Wednesday, June 18, 2008

திமுக - பாமக

திமுக-பாமக கூட்டணி சாத்தியமில்லாத ஒன்று. இவ்வளவு நாள் தாங்கியதே பெரிய விஷயம். சென்ற சட்டமன்றத் தேர்தலிலேயே பாமகவுக்கு குறைந்த இடங்கள் கொடுக்கப்பட்டன என்றும், காங்கிரஸுக்கு அவர்களது மதிப்பையும்விட அதிகமான இடங்கள் கொடுக்கப்பட்டன என்றும் நான் நினைத்தேன்.

வளர்ந்து, பெரிய கட்சியாகி ஆட்சியைத் தனியாகவோ அல்லது தங்களது தலைமையிலான கூட்டணியாகவோ பிடிக்கவேண்டும் என்பது பாமகவின் ஆசை. மற்றொரு பக்கம், காங்கிரஸ் அந்த ஆசையைச் சுத்தமாகத் துடைத்து எறிந்துவிட்டு, யாராவது ஒருவருக்கு ஜிங்க்சா போட்டு, தங்களது பல்வேறு உட்குழுக்களுக்கு வேண்டிய இடங்கள் கிடைத்தால் மட்டும் போதும் என்று உட்கார்ந்திருக்கிறார்கள்.

திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே எப்போதும் சாசுவதம் இல்லை. உட்கட்சிப் பூசல்கள் வரும். குடும்ப உறுப்பினர்களுக்குள் சண்டை, போட்டி, குழப்பம். கட்சி உடைந்து சிதறலாம். அல்லது இரண்டாகப் பிளந்து வாக்குகள் சிதறலாம். அப்படிப் பார்த்தால் பாமக வளர்ந்து, சிதறும் வாக்குகளைப் பெற்று, ஆட்சியை அமைக்கக்கூடிய கட்சியாக வருவது சாத்தியமே.

பாமகவுக்கு ஆட்சி ஆசை உண்டு என்பதே திமுகவுக்கும் பாமகவுக்கும் உரசல்களை ஏற்படுத்தக் காரணம். ஆனால் அதற்கு மேற்கொண்டு, பாமக, திமுக அரசின் ஒவ்வொரு செயலையும் விமரிசனம் செய்தது. இது குடியாட்சி முறைக்கு மிகவும் அவசியமான செய்கை. ஆனால் தோழமைக் கட்சி விமரிசனம் செய்யலாமா என்று திமுகவிடமிருந்து கோபம்தான் கிடைத்ததே தவிர சரியான பதில் வரவில்லை. அடுத்து, பாமக, திமுக அரசுத் திட்டங்கள் பலவற்றுக்கும் கடுமையான எதிர்ப்பை முன்வைத்தது. ஆளும் தோழமைக் கட்சிக்கு குடைச்சல் தரலாமா என்று இங்கும் திமுக சுணங்கியதேதவிர, இந்த எதிர்ப்புகள் நியாயமானவையா என்று கொள்கை அளவில் இவற்றை எதிர்கொள்ளவில்லை.

தனது கட்சியினருக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல், மாற்று நிதிநிலை அறிக்கை தயாரித்தல், அரசின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் கொடுத்தல், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, கருத்தரங்கங்கள் மூலம் அவற்றைப் பொது விவாதத்துக்கு உட்படுத்துதல் என்று பல நல்ல விஷயங்களை முன்வைத்துள்ள ஒரே கட்சி தமிழகத்தில் பாமகதான். அனைத்தையும்விட, மதுவிலக்கு தொடர்பான தெளிவான கொள்கையை முன்வைப்பது, தமிழ் தொடர்பாக வெறும் வாய்ச்சொல் தவிர்த்து, ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது (தமிழிசை, தொலைக்காட்சியில் நல்ல தமிழ் ...) ஆகியவை அனைவராலும் பாராட்டப்படவேண்டியவை.

ராமதாஸ் நிச்சயம் மதிக்கப்படவேண்டியவர். ஆனால் அவரிடமும் குறைகள் இல்லாமல் இல்லை. ‘மரம் வெட்டிய' பின்னணி, வன்னியர் சங்க வாடை தூக்கலாக இருத்தல், குடும்பத்தை முன்நிறுத்துதல், காடுவெட்டி குரு போன்ற ரவுடிகள் உறவு ஆகியவை குறைந்தால், தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை இவர் ஏற்படுத்துவார்.

அடுத்த தேர்தல் வியூகத்தின்போது சகோதரியிடம் அடைக்கலம் புகாமல் தனித்திருந்தால், அது ராமதாஸின் வலிமை என்ன என்பதைப் பிறர் உணரவைக்கும். பலமுனைத் தேர்தல் போட்டிகளில் பாமக போன்ற கட்சிகளுக்கு நிறைய இடங்கள் கிடைக்காது போகலாம். ஆனால் அவர்களது உண்மையான பலம் என்ன என்பது அப்போதுதான் எதிராளிகளுக்குத் தெரியவரும்.

விஜயகாந்த் போன்றவர்கள் வளர்க்கும் கட்சிகள்மீது எனக்கு மரியாதையில்லை. களப்பணி செய்யாமல், வேரிலிருந்து கட்சியை உருவாக்காமல், சினிமா புகழை மட்டும் காண்பித்து மேலிருந்து உருவாக்கப்பட்ட கட்சியால் எதையும் சாதித்துவிடமுடியாது.

வரும் தேர்தல்களில் ராமதாஸ் ஜெயித்து, தமிழகத்தில் குடியாட்சி முறையை வலுவடையச் செய்ய எனது வாழ்த்துகள்.

Tuesday, June 17, 2008

ஜார்ஜ் புஷ்ஷைப் பதவி நீக்குவதா? கொலைக் குற்றம் சாட்டுவதா?

டென்னிஸ் குசினிச், டெமாக்ரடிக் கட்சிக்கான பிரைமரி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஆரம்பத்திலேயே ஆதரவு இல்லாமல் கழன்றுகொண்டார். ஒஹாயோ மாநிலத்திலிருந்து ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் உறுப்பினராக இருப்பவர்.

ஜூன் 9, 2008 அன்று, ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து பதவிநீக்கம் (impeach) செய்யவேண்டும் என்ற மசோதாவை முன்வைத்துள்ளார். இது தனிநபர் செயல். மற்றுமொரு உறுப்பினர் இந்த மசோதாவை ஆதரித்துக் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர்கள், சபாநாயகர் நான்சி பெலோசி முதற்கொண்டு, இதனை ஆதரிக்கவில்லை. எனவே இந்த மசோதா குப்பைக்கூடைக்குத்தான் போகும் என்று தோன்றுகிறது.

மற்றுமொரு பக்கம், முன்னாள் பப்ளிக் பிராசிகியூட்டர் வின்செண்ட் பூலியோசி (Vincent Bugliosi) என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்: The Prosecution of George W. Bush for Murder. இவர் பப்ளிக் பிராசிகியூட்டராக இருந்தபோது 21 கொலைக் குற்றங்களை வழக்காடி அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வாங்கிக்கொடுத்தவராம். இவர்கள் இருவரும் நான் தினமும் கேட்கும் democracynow.org நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பேசினர். இவை எழுத்துவடிவமாகவும் ஒலி வடிவமாகவும் இங்கே கிடைக்கின்றன.

பூலியோசியின் குற்றச்சாட்டுகள் இவ்வாறு:

அக்டோபர் 7, 2002 அன்று சின்சினாட்டி, ஒஹாயோவில் பேசும்போது, ஜார்ஜ் புஷ், அமெரிக்காவுக்கு சதாம் ஹுசேனால் உடனடியாக ஆபத்து வரப்போகிறது என்று சொன்னார். ஆனால் அக்டோபர் 1, 2002 அன்று சிஐஏ அனுப்பிய classified ரகசிய அறிக்கையில் சதாம் ஹுசேனால் அமெரிக்காவுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று சொல்லப்பட்டிருந்தது. அக்டோபர் 4, 2002 அன்று பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்ட வெள்ளை அறிக்கையில் சிஐஏவின் ‘ஹுசேனால் ஆபத்தில்லை' என்ற தகவல் நீக்கப்பட்டிருந்தது. எனவே பொய்யான தகவலைக் கொடுத்து ஈராக்மீதான போரை புஷ் நடத்தியுள்ளார்.

அடுத்து ஜனவரி 31, 2003 அன்று புஷ், பிளேர் மற்ற பிறர் இருந்த கூட்டத்தில் டோனி பிளேரின் அயலுறவுக் கொள்கை ஆலோசகர் டேவிட் மேன்னிங் என்பவரும் கலந்துகொண்டார். அவர் தயாரித்த அறிக்கையில் ஜார்ஜ் புஷ் இவ்வாறு சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளார்: “சதாம் ஹுசேனை எப்படியாவது தூண்டவேண்டும். ஈராக்மீது U2 வேவுப்பணி விமானத்தை, ஐ.நா சபை வண்ணமடித்து அனுப்பவேண்டும். அந்த விமானத்தை சதாம் ஹுசேன் தாக்கினால் அதைக் காரணமாகக் கொண்டு, ஈராக்மீது படையெடுக்கலாம்.”

தொடர்ந்து ஜார்ஜ் புஷ், அல் காயிதாவையும் சதாம் ஹுசேனையும் தொடர்புபடுத்தி பல இடங்களில் பேசியுள்ளார். அமெரிக்க மக்களை ஏமாற்றியுள்ளார். இதனால் ஏற்பட்ட படையெடுப்பில் அமெரிக்கப் போர்வீரர்கள் 4000 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

கொலைக்குற்றத்துக்கு சட்ட விலக்குரிமை கிடையாது. வாஷிங்டன் டிசியில் உள்ள மத்திய அட்டர்னி ஜெனரல்தான் இந்த வழக்கைக் கொண்டுவரவேண்டும் என்றில்லை. 50 மாநிலங்கள், அதில் உள்ள எந்த கவுண்டியாக இருந்தாலும் சரி, அந்த கவுண்டியைச் சேர்ந்த ஒரு சிப்பாய் ஈராக்கில் மரணமடைந்தாலும்சரி, அந்த கவுண்டியின் டிஸ்டிரிக்ட் அட்டர்னிகூட இந்த வழக்கைத் தொடுக்கலாம் என்கிறார் பூலியோசி.

அப்படிப்பட்ட வழக்குக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தனது புத்தகத்தில் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார் இவர்.

ஆனால் அமெரிக்க சிப்பாய்களின் மரணத்துக்கு என்று மட்டும்தான் ஜார்ஜ் புஷ்மீது வழக்கு தொடுக்கமுடியுமாம். சுமார் ஒரு லட்சம் ஈராக்கியர்களின் மரணத்துக்காக என்று அவர்மீது வழக்கு தொடுக்கமுடியாதாம். ஆனால் ஜார்ஜ் புஷ் குற்றவாளி என்று அமெரிக்க ஜூரி முடிவுசெய்தால், தண்டனை கொடுப்பதற்கு ஈராக்கியர்களைக் கொலை செய்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமாம்.

***

எனக்கென்னவோ, டென்னிஸ் குசினிச் விஷயம்போலவே இதுவும் நடக்காது என்றே தோன்றுகிறது. அமெரிக்கர்கள் எட்டு வருடங்களுக்குப் பிறகு விழித்துக்கொண்டுள்ளனர். இன்றுதான் ஜார்ஜ் புஷ்ஷின் தவறுகள் இவர்களது கண்ணுக்குப் படுகின்றன. ஈராக்மீது அவர் போர் தொடுத்தபோது கைதட்டி ஆரவாரித்து சந்தோஷப்பட்டவர்கள் அனைவரும் கதறிக் கண்ணீர் விடும் நேரம் இது. ஆனால் இதற்கான விலை: ஒரு லட்சம் ஈராக்கிய உயிர்கள், 4000 அமெரிக்க உயிர்கள், பல பில்லியன் டாலர்கள். ஈராக் என்னும் நாடு முற்றிலும் அழிபட்டது.

Useful read: Excerpts from Bugliosi's book

Monday, June 16, 2008

கேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ், தெலுங்கு சினிமாக்கள்

மார்ச் சமயத்தில் கேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ் சினிமா என்று ஒரு பதிவை எழுதியிருந்தேன். அதன் பின்னூட்டத்தில் அனானிமஸ் ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தார்:
நீங்கள் சென்ற இரண்டு இடங்களும் [ஆலப்புழை, திருவனந்தபுரம்] தமிழக எல்லையை ஒட்டிய கேரளப்பகுதிகள். அங்கே தமிழ்ப்படங்கள் ஓடுவதில் ஆச்சரியம் இல்லை. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் தமிழ் படங்களை பார்க்க முடியாது.
இன்று பல செய்தித்தாள்களில் பிடிஐ செய்தி ஒன்று வெளியாகியுள்ளது: Malayalam films have few takers in Kerala

தமிழ்ப்படங்கள் அப்படியே, தெலுங்குப் படங்கள் மொழிமாற்றப்பட்டு. இவை கேரளத்தை ஆக்ரமிப்பதால் உள்ளூர் மலையாளப் படங்கள் பயங்கரமாக அடிவாங்கியுள்ளனவாம். ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு கேரளாவிலிருந்தும் கொஞ்சம் பணம் கிடைக்கும்!

பட்டாம்பூச்சியின் படபடக்கும் இறக்கைகள்

ஸ்ரீதர் நாராயணன் எனது தசாவதாரம் பற்றிய பதிவில், பதிவைவிடச் சிறப்பான பின்னூட்டம் ஒன்றைப் பதிந்திருக்கிறார். தசாவதாரம் படத்தில் கேயாஸ் தியரி அடிப்படை சொல்லப்படுகிறது என்பது ஒன்று. அடுத்து தசாவதாரத்தின் ஒவ்வோர் அவதாரத்துக்கும் நெருக்கமான ஓர் அவதாரத்தை படத்தில் காண்பிக்கமுடியும் என்பது இரண்டாவது. ஸ்ரீதரின் தியரியை அங்கேயே சென்று படித்துவிடுங்கள்.

உண்மையில் தசாவதாரத்துக்கு நெருக்கமான பாத்திரங்களைச் செய்வதாக இருந்தால் கதையில் வேண்டிய மாற்றங்களை அழகாகச் செய்திருக்கலாம். இரண்டு, மூன்று ஆண்டுகளாக எடுத்த படம் இது. ஜார்ஜ் புஷ் என்ன அவதாரம் என்று ஸ்ரீதர் சொல்லவில்லை. ஒருவேளை வட இந்தியர்கள் புத்தரை ஓர் அவதாரம் என்று சொல்வதைப்போல புஷ் அவதாரத்தை புத்தர் அவதாரமாகக் கருதலாமோ:-) அல்லது உலகை ஒருவழியாக அழிக்க, ஆங்காங்கே அணுகுண்டைப் போடலாம் என்று கருத்து சொல்வதால் இவரும், ஃபிளெட்சரும் சேர்ந்து கல்கி அவதாரத்தில் பாதிப் பாதி என்று சொல்லலாமோ?

கேயாஸ் தியரி இன்று எங்கோ அறிவியலில் ஆரம்பித்து அரைகுறை சூடோ சயன்ஸ் விஷயம்வரை வந்தாயிற்று. டான்சிங் வு லி மாஸ்டர்ஸ், டாவோ ஆஃப் பிசிக்ஸ் மாதிரிதான் இது என்பது எனது தாழ்மையான கருத்து.

படபடக்கும் பட்டாம்பூச்சியின் இறக்கைகள் எங்கோ, வேறு எங்கோ ஓர் உலகில் நிகழ்வுகளை மாற்றக்கூடும் என்பது பேச்சுக்கு, சுவாரஸ்யத்துக்கு நன்றாக இருக்கும். ஒரு மூடிய நேரிலா சிஸ்டத்தில் தொடக்க நிலையில் ஏற்படும் மிகச்சிறு மாற்றங்கள்கூட நேரம் கடக்க கடக்க, பெரும் மாற்றங்களை உண்டாக்கும் என்பது கண்டறியப்பட்ட உண்மைதான். இதனை மனித நிலைப்பாடுகளுக்கும் இயக்கங்களுக்கும் மாற்றிப் பார்ப்பது மனிதனின் அடங்காத கற்பனை வளம்தானேயன்றி வேறொன்றுமில்லை.

11-12ம் நூற்றாண்டில் எறியப்பட்ட சிறு கல்துண்டு, டெக்டானிக் தகடுகள் உரசுவதை அதிகமாக்கி சுனாமியாக மாற்றக்கூடுமா? சுனாமி நிகழ்ந்தது இந்தோனேசியா அருகில் டெக்டானிக் தகடுகள் உரசியதால். சிதம்பரத்தில் எறிந்த கல் சிலை இந்தோனேசியா போய், தகட்டு இடைவெளியில் மாட்டி, உரசலை அதிகமாக்கி (அப்பொது நசுங்கிச் சேதமடைந்திருக்காதோ?) சுனாமியின்போது சிறிதும் சேதமடையாமல் இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டு, மீண்டும் இந்தியக் கடற்கரைக்கே வந்து சேர்ந்தது என்பது நம்பத்தகுந்த கற்பனையாகத் தோன்றவில்லை.

கேயாஸ் தியரியை அடிப்படையாகக் கொள்ளுமாறு பட்டாம்பூச்சியை கிராபிக்ஸில் பறக்கவிட்டார்களேதவிர, மேற்கொண்டு செல்லவில்லை. கோவிந்தராஜர் மூலவர் சிலையைக் கடலில் எறிந்ததால், தொடர்ந்த சரித்திர நிகழ்வுகளில் மாற்றம் ஏற்பட்டு, அதனால் கோவிந்த் என்பவர் பிறந்து, அமெரிக்கா சென்று, கொல்லுயிரி ஒன்றைக் கண்டுபிடித்து, அதனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடப்பதாகக் காட்டியிருந்தால், கேயாஸ் தியரியை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கலாம்.

ஆனால் இங்கே அந்த நூல் அவ்வளவு சரியாக வரவில்லை.

ஏதோ, கேயாஸ் தியரி பற்றி பேசுவதற்காவது வாய்ப்பு கொடுத்தார்கள் என்று சந்தோஷப்படுவோம்.

Sunday, June 15, 2008

கலாநிதி, அழகிரி, தொழில் ஒழுக்கம்

நல்ல குடியாட்சி முறை அமையாத நாடுகளில், சில தொழிலதிபர்கள் தங்களது அரசியல் உறவுகளை பலமாகக் கொண்டு தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டமைப்பார்கள். போட்டி நிறுவனங்களை வளரவிடாமல் செய்ய, சட்டபூர்வமான முறைக்கு அப்பால், மிரட்டல், அடிதடி, பொய் வழக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள்.

இந்தியா அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்று. ஆனால் இங்கே அரசியல் முறையில் கடந்த சில வருடங்களில் பல நல்ல மாறுதல்கள் ஏற்பட்டுவருகின்றன. சட்டம் ஒழுங்கில் நல்ல முன்னேற்றம் உள்ளது. தொழில்துறைகள் பலவற்றைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு வாரியங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம் இருப்பதில்லை. ஆனாலும் பல துறைகளில் தொழில் தொடங்க, தொழிலை நடத்த அரசியல் ஆதரவு இல்லாமல் முடிவதில்லை.

இன்று தொலைக்காட்சி சானல்கள் தொடங்குவதில் அரசியல் ஆதரவு தேவைப்படுவதில்லை. தினமும் ஒரு சானல் வருகிறது. ஆனால் தொலைக்காட்சி சானல்களை விநியோகம் செய்வது அவ்வளவு எளிதல்ல. தரைவழி சிக்னல்களை அனுப்பும் உரிமை (terrestrial television) தூரதர்ஷனுக்கு மட்டுமே உண்டு. மீதியெல்லாம் இப்போதைக்கு கேபிள் அல்லது டிடிஎச் எனப்படும் செயற்கைக்கோள் வழி விநியோகம். டிடிஎச் என்பது இந்தியாவைப் பொருத்தமட்டில் சமீபத்திய தொழில்நுட்பம். இந்தியாவுக்குமேல் உள்ள ஜியோ ஸ்டேஷனரி செயற்கைக்கோள்களில் உள்ள டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டுமட்டுமே இந்தச் சேவையை அளிக்கமுடியும்.

ஜியோ ஸ்டேஷனரி செயற்கைக்கோள் என்றால் பூமி தன் அச்சில் சுழலும் அதே வேகத்தில் பூமியைச் சுற்றிவரும், கிட்டத்தட்ட வட்டப் பாதையில் இருக்கும் ஒரு செயற்கைக்கோள். இதனால் இந்தச் செயற்கைக்கோள் பூமிக்கு மேல் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின்மீது அப்படியே நிலையாக இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இதனை இணைசுற்று செயற்கைக்கோள் என்பார்கள். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 35,786 கிலோமீட்டர் தூரத்தில் இயங்குவது. நமது சமீபத்திய இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்தவை. இவற்றில் இருக்கும் டிரான்ஸ்பாண்டர்கள் வழியாகத்தான் டிடிஎச் செயற்கைக்கோள் சிக்னல் நம் வீடுகளுக்கு வருகிறது.

இன்று இந்தியாவில் டிடிஎச் சேவையை அளிப்பவர்கள் சுபாஷ் சந்திராவின் டிஷ் நெட்வொர்க், மர்டாக்-டாடாவின் டாடா-ஸ்கை, தூரதர்ஷனின் சேவை ஒன்று, சன் டிவியின் சன் டைரக்ட். விரைவில் சேவையை ஆரம்பிக்க உள்ளன அனில் அம்பானியின் நிறுவனமும், சுனில் பார்த்தி மிட்டலின் நிறுவனமும். நினைத்த மாத்திரத்தில் நாளைக்கு யாரும் இந்தச் சேவையை ஆரம்பித்துவிட முடியாது. ஏனெனில் டிரான்ஸ்பாண்டர்கள் இடம் குறைவு. யார் முந்திக்கொண்டு முதலீட்டைப் போட்டு, டிரான்ஸ்பாண்டர்களுக்கு கியூவில் நின்று துண்டு போட்டார்களோ அவர்களால்தான் முதலில் ஆரம்பிக்கமுடிந்தது.

ஆனால் தரையில் போடும் கேபிளை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இங்குதான் அரசியல் புகுந்து விளையாடுகிறது. பிற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தில் கொஞ்சம் அதிகம்தான். மாறன்கள், கருணாநிதியுடன் சுமுக உறவு வைத்திருந்த காலத்தில் தங்களுக்குப் போட்டியாக எந்த கேபிள் கம்பெனியையும் வளரவிடவில்லை. இதில் பணம் படைத்தவர்கள், சாதாரணர்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மிரட்டல், கேபிளை வெட்டுதல், பொய் வழக்கு என்று பிரமாதமாக நடந்தேறியது. ஹாத்வே என்ற நிறுவனம் சென்னையிலிருந்து ஒழித்துக்கட்டப்பட்டது. பிற மாவட்டங்களின் நிலைமை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஜெயலலிதா ஆட்சிகளின்போது கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். மீண்டும் கருணாநிதி ஆட்சியில் SCV வேகமாக வளரும். இந்த அசிங்கத்தை மனத்தில் வைத்துதான் பலரும், டிடிஎச் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்திருந்தனர்.

பிறகு மாறன்கள் - கருணாநிதி உறவு முறிவின் காரணமாக கலைஞர் தொலைக்காட்சி உதயமானது. ஆனால் தொலைக்காட்சி சானல் வைத்திருந்தால் போதாது, அதைக் காண்பிப்பதில் விநியோகம் செய்யும் கம்பெனிக்கு நிறைய கண்ட்ரோல் உள்ளது என்பது கலைஞர் தொலைக்காட்சியினருக்குப் புரிந்தது. அரசு கேபிள் கார்பொரேஷன் உதவும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் பின்னர் அழகிரி கேபிள் கார்பொரேஷனாக இருந்தால் என்ன அரசு கேபிள் கார்பொரேஷனாக இருந்தால் என்ன, முந்தையதில் குடும்பத்துக்கும் நிறையப் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதே என்பதால் ராயல் கேபிள் வந்தது.

கேபிள் நிறுவனம் ஆரம்பித்தால் போதாது, இன்று சன் சானல்கள் இல்லாவிட்டால் பருப்பு வேகாது என்பதை அழகிரி வெகு சீக்கிரமே புரிந்துகொண்டார். சன் தனது சானல்களைக் கொடுக்க மறுக்க, அழகிரி டிடிசாட் தீர்ப்பாயத்துக்குச் சென்றார். ஆனால் கலாநிதி/தயாநிதிக்குத் தெரிந்த அளவு இந்த புரொசிஜர்கள் அழகிரிக்குத் தெரிய நியாயமில்லை. ஒரு கேபிள் கம்பெனி ஆரம்பித்தால் ஒரு சானல் உடனடியாகத் தனது சிக்னல்களை அந்த கேபிள் கம்பெனிக்குத் தரவேண்டும் என்பதில்லை. இது கேட்டால், அது கொடுக்கலாமா, வேண்டாமா என்று தீர்மானிக்க 90 நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். அந்தத் 90 நாள்களில் உலகமே மாறக்கூடுமே?

புதிதாக ஆரம்பித்த ராயல், மாறன்களின் சுமங்கலியின் கேபிள் விநியோகஸ்தர்களைத் தன் பக்கம் மிரட்டி இழுக்கிறது. அப்படி இழுத்தால் உங்களது வாடிக்கையாளர்களின் கதி அதோகதிதான் என்று காட்ட விரும்புகிறது சன். இப்படி யாரும் மிரட்டாத வகையில் சன்னின் டிடிஎச்சுக்கு மாறுங்கள் என்கிறார் 'வீட்டுக்கு வீடு சன் டைரக்ட்' தமன்னா. வெறும் 999 ரூபாய்தான், ஒரு வருடத்துக்கு எல்லா சானல்களும் உண்டு என்கிறது விளம்பர வாசகம்.

இந்தச் சண்டைகளால் நாம் தெரிந்துகொள்ளும் நீதி என்ன?

* அரசியல் உறவுகளைக் கொண்டு தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டினால் அதனாலேயே நாளை தீங்கு வரும். அந்தத் தீங்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தேவையின்றி சிரமப்படவேண்டிவரும்.

* அரசியல் உறவால் கட்டப்பட்ட சாம்ராஜ்யத்தை, அரசியல் உறவால் மட்டுமே அழித்துவிடமுடியாது. (ரஷ்யாவில் வேண்டுமானால் இப்போது அப்படிச் செய்யலாம்.) அடிப்படை சரக்கு மக்களால் ரசிக்கும்படி இருக்கும்போது (சன் சானல்கள்), அவற்றை அழிப்பது சுலபமல்ல. நேற்று ஆரம்பித்த கலைஞர் தொலைக்காட்சி போகவேண்டிய தூரம் அதிகம். அதற்கு நல்ல கண்டெண்ட் தேவை. பணபலமும் அரசியல் பலமும் மட்டும் போதாது.

* பாதிரியார் மார்ட்டின் நீமோல்லர் சொன்னதுபோல அரசியலும் தொழிலும் கூட்டுசேர்ந்து ஒரு போட்டித் தொழிலை அழிக்கும்போது, பிறர் வாய்பொத்தி உட்கார்ந்திருந்தால் நாளை நமக்கு அழிவு வரும்போது எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கமாட்டார்கள்.

நமக்குத் தேவை தொழில் ஒழுக்கம். நியாயமான வழியில் தொழில் தொடங்கி, நியாயமாகச் சம்பாதிப்பது மட்டுமே நாளடைவில் ஒட்டும். போட்டி போடுவது என்றாலும் நியாயமான வழியில் போட்டிபோட்டுச் சம்பாதிக்கவேண்டும். மற்றதெல்லாம் குருவி, மோகினி என்று அநியாயமாகப் போய்ச்சேரும்.

Saturday, June 14, 2008

முகுந்தா! முகுந்தா!

கோவிந்தா! கோவிந்தா!

நம்மூரில் மட்டும்தான் சினிமா எடுக்கும்போது நல்ல சினிமா ஒன்று எடுக்கவேண்டும் என்று யோசிக்கமாட்டார்கள் போல. என் மூஞ்சி எங்கப்பாத்தாலும் தெரியணும். கதை, வசனம், திரைக்கதை, டைரக்‌ஷன், பாட்டு எழுதறதும் நாந்தான், அத்தப் பாடறதும் நாந்தான்... லைட் பாயும் நாந்தான், கேட்டரிங்கும் நாந்தான். (பணம் மட்டும் இன்னோர்த்தன் போடுவான்.)

முதல் நாள் (அல்லது ரெண்டாவது நாள்) சத்யம்ல படம் பாக்க நண்பர் நாகராஜனுடன் - எப்படியோ டிக்கெட் வாங்கி வெச்சிருந்தார் மனுஷன் - போனேன். சிவாஜி படம்கூட இப்படி முத நாள் ஷோதான். காலைல அங்கயாவது பிரேக்ஃபாஸ்டுன்னு கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல கொடுத்தாங்க. இப்ப மத்தியானம் போனதால யாரும் எதுவும் ஃப்ரீயா கொடுக்கல. ஃப்ரீயா கிடைச்சது தலைவலி மட்டும்தான்.

ப்ராஸ்தெடிக் மேக்-அப் மொத்தமாகப் பார்க்க சகிக்கவில்லை. இது இல்லை என்று யார் அழுதார்கள்? அதேபோல பத்து வேஷங்களும் தேவையாகவே தோன்றவில்லை. பஞ்சாவதாரம் அல்லது திரியாவதாரம்னு போட்டு கழுத்தறுப்பைக் குறைத்திருக்கக்கூடாதா? போதாக்குறைக்கு நேத்திக்கு கேடிவில சிட்டிசன் போட்டு மூடை மொத்தமா அவுட் பண்ணிட்டாங்க.

ராகவன் குருவியோட கம்பேர் பண்ணிருந்தார். இன்னமும் அந்த எழவை பாக்கலை. சத்யம் ஸ்டுடியோ-5ல கூவிக் கூவி கூப்பிட்டும் நேத்தி யாரும் போகலை. இன்னும் பத்து இருபது நாள்ள, தசாவதாரமும் ஸ்டுடியோ-5, சீசன்ஸ் அப்படின்னு ஏதாவது 40-50 சீட் இருக்கற ஸ்கிரீனாப் பாத்து போயிடும்.

இந்தப் படத்துல இது ஓட்டை, அது ஓட்டைன்னு லாஜிக் எல்லாம் பேசினா நொந்துடும்னு தோணுது.

11, 12-ம் நூற்றாண்டுல ஸ்ரீவைஷ்ணவர்களிடையே வடகலை, தென்கலை பிரிவுகள் ஆரம்பிக்கல. அதுக்கு பின்னால நேரம் இருக்கு. பிள்ளை லோகாசாரியார், தேசிகர், மணவாள மாமுனி எல்லாரும் வந்து அவங்கவங்க கொள்கை ரீதியா சண்டைபோட்டு, பின்னாடி நெத்தி ரியல் எஸ்டேட்டுல யூவா, ஒய்யான்னு குதியாட்டம் போடறதுக்கு முன்னாடி எந்த ஷேப்ல நாமம் போட்டாங்கன்னு யாருக்கும் தெரியாது. சரியான ரெகார்ட் இல்லை.

அந்த ஆரம்ப சீன் கப்ஸா தவிர, சுமாராத்தான் இருந்தது. பக்கத்துல நாகராஜன் இதுக்கு மட்டுமே கொடுத்த காசு போதும்னு சொல்லிகிட்டிருந்தாரு. அப்ப பேசாம அதோட திரும்பி வந்திருக்கலாம். அதுக்கப்புறம் டார்ச்சர், டார்ச்சர், டார்ச்சர். எப்படி ப்ராஸ்தெடிக் மாஸ்க் மூஞ்சில ஒட்டலையோ, அதேமாதிரி என்னால கதைல ஒட்டவே முடியலை.

இப்ப டிரெண்டே பல பேரை பயன்படுத்திட்டு கதை-திரைக்கதை-வசனம்ன்னு தன்னோட பேரைப் போடறதுதான் போல இருக்கு.

கதையை ஏற்கெனவே கட்டுடைச்சு சிலர் எழுத ஆரம்பிச்சிட்டாங்க. தலித் சாவறது, சுனாமியோட நோக்கமே சில ஆயிரத்தைக் கொன்னு, பல கோடியைக் காப்பாத்த + கடலோட போன கோவிந்தராஜரை மீட்க போன்றதையெல்லாம் அடுத்த சில நாள்கள் பலரும் பிரிச்சு மேய என் வாழ்த்துகள்.

கதை எங்க நடக்குதுன்னு ஒரே குழப்பம் எனக்கு. சிதம்பரத்துலேர்ந்து சிலையோட கமல்-2-வும் அசின்-2-வும் ஓட அவங்க பாண்டிச்சேரி பக்கம் போயிட்டு திரும்பி சிதம்பரம் பக்கம் வண்டியைத் திருப்பிகிட்டு வராங்கன்னு நினைக்கறேன். ஆனா அந்த டிரெய்னப் பாத்தா மெட்ராஸ் லோகல் எலெக்ட்ரிக் டிரெய்னாட்டம் இருக்கு. அது சிதம்பரம் வரைக்கும் போகுதா? சுனாமி தாக்குதல் சிதம்பரம் பக்கம் அதிகமாக இல்லையே? கடலூர்ல கொஞ்சம் இருந்தது. ஆனா இதெல்லாம் ஏன் என் தலைக்குள்ள ஓடிட்டே இருக்குன்னு புரியலை.

ஏதோ நாலு மேட்டர் உள்ள வரணும். ஒரு டிரெய்ன், ஒரு பஸ். 'சார் இங்க மோட்டார் பைக்ல ஒரு சேஸிங் இருந்தா நல்லாருக்கும்.' 'சரி செஞ்சுடுவோம்.' 'தோட்டா தரணி சாரை வெச்சு ஒரு சுனாமி சீன் போட்டா சூப்பரா இருக்கும்.' 'சரி, அப்படியே ஒரு சர்ச் இருந்தா அதுவும் சூப்பர்.' 'சரி, வேளாங்கண்ணி சர்ச் மாடலை எடுத்து அவரை செய்யச் சொல்லு.' 'அப்ப சரி, ஆனா அந்த கத்தோலிக்க சர்ச் மாடலை எடுத்து அதப்போய் சர்ச் ஆஃப் சவுத் இண்டியான்னு ஏன் எழுதிப் போட்டீங்க?' 'அதெல்லாம் கண்டுக்காதீங்க. சினிமான்னா இதையெல்லாமா பார்த்துகிட்டு.' 'அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.'

இந்தியால உள்ளூர் மேட்டரை கவனிக்கற இண்டெலிஜென்ஸ் ஏஜென்சிக்குப் பேர் இண்டெலிஜென்ஸ் பீரோ (IB). வெளியூர் மேட்டர்ல குட்டைய குழப்பறதுதான் RAW வேலை. அதாவது, CIA, FBI மாதிரி. அதனாலதான நம்ம ஈழத்துத் தோழர்கள், ரா, ரான்னு ராவிக்கிட்டிருக்காங்க. ராவா, சிபிஐயான்னா ரான்னு போடுவோம், புதுசா இருக்கும்னு யார் ஐடியா கொடுத்தாங்க?

மத்தபடி, பிரான்ஸ் நாட்டு அறிஞன் வால்ட்டேர் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது.

'Music, to-day, is only the art of executing difficult things, and that which is only difficult cannot please long.'

ஒருத்தர் கஷ்டமான சில வேலைகளைச் செய்திருக்கார்ங்கற காரணத்துக்காக, ஆஹா, ஒஹோன்னு கொண்டாடமுடியுமா?

நீ என்ன உலக நாயகனா?

ஆமாம்.

blah blah blah, நாம எல்லோருமே உலக நாயகர்கள்தான். ஏன்னா, blah blah blah.

---*---

நமக்கு முதல் தேவை பணிவு. நாம போகவேண்டிய தூரம் அதிகம். மனசெல்லாம் ஆசை இருக்கு, ஆனா திறமை, உழைப்பு இன்னமும் நிறைய வேண்டும்ங்கற பணிவு. அது போதும்.

Tuesday, June 10, 2008

ஏன் பராக் ஒபாமா? - 2

பராக் ஒபாமா சோற்றுக்கு வழியில்லாத குடும்பத்திலிருந்து வரவில்லை. நன்கு படித்திருக்கிறார். நல்ல வேலையில் இருந்திருக்கிறார். இப்போது செனேடராக உள்ளார். ஆனாலும் ஒரு கென்ய நாட்டைச் சேர்ந்த, அமெரிக்காவுக்கு வந்த தந்தைக்கு மகனாகப் பிறந்திருக்கிறார். கறுப்பினப் பெண் ஒருவரை மணம் புரிந்திருக்கிறார். அமெரிக்காவில் கறுப்பர் நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்துவைத்திருப்பார் என்று நம்புகிறேன். Discrimination, இன/தோல்நிற வேறுபாடு காரணமாக வாய்ப்புகள் மறுக்கப்படுவது என்பதை நன்கு உணர்ந்தவராக இருப்பார் என்று நம்புகிறேன். உலகெங்கும் உள்ள பெரும்பான்மை பிரச்னைகள் மனிதர்கள் சமமாக நடத்தப்படாததால்தான். இதன் காரணமாகவே தீவிரவாதம், நாடுகளுக்கு இடையேயான போர் ஆகியவை ஏற்படுகின்றன. வாய்ப்பு மறுக்கப்படுவதை உணரும் ஒருவர் அது ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகே, போர் என்பது நாடுகளுக்கு இடையேயான எந்தப் பிரச்னையையும் தீர்க்காது என்று தெரிந்துவிட்டது. இதுவரையில் எந்தப் பிரச்னை போரால் தீர்ந்துள்ளது? ஆனால் அமெரிக்காவின் தலைவர்கள் அனைவருமே தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய ராணுவ பலத்தால், போரின்மூலம் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்ற எண்ணத்திலேயே இருக்கிறார்கள். பராக் ஒபாமா ஒருவர்தான் போர் கூடாது என்று தெளிவாகச் சொன்னவர். அப்படிச் சொல்வதால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை என்பதால்தான் அவர் அப்படிச் சொன்னார் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மெக்கெய்ன் ஈராக்கில் தொடர்ந்து போரை நடத்துவேன் என்று சொல்லும் ஒரே காரணத்துக்காக எதிர்க்கப்படவேண்டியவர்; தோற்கடிக்கப்படவேண்டியவர். நாளையும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மேற்கொண்டு போரை நடத்தவே இவர் விரும்புவார். அவ்வாறு அவரைத் தூண்ட, அமெரிக்காவின் நியோகான்கள் விரும்புவர்.

இன்று அமெரிக்காவின் தலைமையை ஏற்பவர் செய்யவேண்டியது:

* அரசு செய்யும் ஊதாரிச் செலவை ஒரேயடியாகக் குறைக்கவேண்டும். ராணுவம், அந்நிய நாட்டின்மீது படையெடுத்தல் போன்றவற்றை அறவே ஒழித்தால் போதும்.
* பொதுமக்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியைக் கட்டாயமாகச் சேமிக்கவேண்டும் என்று சொல்லி, அதற்கான வேலைகளில் ஈடுபடவேண்டும்.
* வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்து, டாலரை நிலையாக இருக்குமாறு செய்யவேண்டும். அதற்காக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க என்ன வேண்டுமோ அதனைச் செய்யவேண்டும். குறைந்த விலை இறக்குமதிகளைக் கொஞ்சம் தடுத்தாலும் தவறில்லை; அதற்காக சில பொருள்களின்மீது டாரிஃப் சுமத்துவதும் தவறில்லை. இதனால் சில ஆசிய நாடுகள் (இந்தியா சேர்த்து) பாதிக்கப்பட்டாலும் தவறில்லை.
* சப்-பிரைம் கடன்களால் வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு உதவி.
* ஏழை மக்களுக்கு ஹெல்த்கேர், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றில் பெரும் உதவிகளைச் செய்யவேண்டும். ராணுவத்துக்கும் போருக்கும் வீணாகும் பணத்தை உபயோகமாக இங்கே செலவழிக்கலாம்.
* சோஷியல் செக்யூரிட்டி, பென்ஷன் பிரச்னைகளுக்கு உடனடியாக சீரியசான தீர்வுகளை முன்வைக்கவேண்டும்.
* அமெரிக்காவில் சிறுபான்மையினர் - கறுப்பினத்தவர், செவ்விந்தியர்களில் எஞ்சியவர்கள், ஹிஸ்பானியர்கள், (இந்தியர்கள் சேர்த்து பிறர்), ஆகியோர் முன்னேற, அவர்களை பிறர் சமூக அளவில் சமமாக நடத்த வேண்டியவற்றைச் செய்வது.
* அமெரிக்கர்கள் குடம் குடமாக பெட்ரோலைக் குடிக்கும் கார்களை ஒழித்துக்கட்ட, கடுமையான வரிகளைக் கொண்டுவரவேண்டும். பொதுவாகவே அமெரிக்காவில் வீணாகும் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றைச் சேமிக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
* வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை இப்போது அதிகமாகிக்கொண்டு வருகிறது. பொருளாதாரம் ஆட்டம் காணும் நேரத்தில் இவ்வாறு இருப்பது இயல்பே. பொருளாதாரம் மீண்டு வரும்வரையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பலவற்றைச் செய்யவேண்டும்.
* கல்வியில் நிறைய முதலீடு.
* வெளியுறவுக் கொள்கையில் சண்டியர்தனம் செய்யாமல் தன்மையோடு நடந்துகொள்வது.
* உலக நாடுகளுடன் ஒத்திசைந்து போவது. கியோட்டோ புரோட்டோகால் முதல் உலக வர்த்தக நிறுவனம் வரையில் எதற்கெடுத்தாலும் தான் சொல்வதே சரியானது என்று சாதிக்காமல் பிறரது கருத்துகளுக்கும் இடம் கொடுப்பது.

அடுத்த பதிவுகளில் ஒபாமா, மெக்கெய்ன் இருவரும் முன்வைக்கும் கருத்துகளை ஆழ்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

ஏன் பராக் ஒபாமா? - 1

அமெரிக்கத் தேர்தல்பற்றி அமெரிக்கர்கள்தவிர பிறரும் கவனிக்கவேண்டியது அவசியம். அமெரிக்காவால் உலகில் சுபிட்சம் நிலவுமோ இல்லையோ, அமெரிக்காவால் உலகையே அழிக்கமுடியும். அந்த ஒரு காரணத்துக்காகவாவது அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பது அவசியம்.

அமெரிக்க நலன்கள் என்ற பெயரால் இதுவரையில் பல அமெரிக்க அதிபர்கள் தங்களது முரட்டுப் பிடிவாதக் கொள்கைகளை பிற நாடுகள்மீது புகுத்தி அந்த நாடுகளை அழித்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்தான் அமெரிக்காவின் கை ஓங்கத் தொடங்கியது. அமெரிக்கா தனது கொள்கைகளாக குடியாட்சி முறை, தாராளமயப் பொருளாதாரம், தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்லும் தொழில்மயம், கல்விக்கு முக்கியத்துவம், தனி நபர் சுதந்தரத்துக்கு மதிப்பு, மரியாதை ஆகியவற்றை முன்னிறுத்தியது. Life, Liberty, Pursuit of Happiness ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக அமெரிக்க சுதந்தரப் பிரகடனம் முன்வைத்திருந்தது. வெறும் வாழும் உரிமை மட்டுமல்ல, சுதந்தரமாக வாழும் உரிமை, மகிழ்ச்சியைத் தேடிச் சென்று அடையும் உரிமை ஆகியவையும் மனிதனுக்கு அவசியம் என்பதை முன்வைத்த சாசனம் இது.

ஆனால் இவை அமெரிக்கர்களுக்கு மட்டுமன்றி, உலக மக்கள் அனைவருக்குமே பொதுவானவை என்பதை அமெரிக்க ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

கம்யூனிசம் என்பது கொடும் தீமை, குடியாட்சி முறைக்கு முற்றிலும் எதிரானது என்ற நிலையை அமெரிக்கா எடுத்தது. கம்யூனிசத்தை ஒழிக்கவேண்டும் என்றால், எந்தவித முறையையும் கையாளலாம் என்ற அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை. இதன் விளைவாகத்தான் பல நாடுகளில் சர்வாதிகாரிகள், ராணுவ ஜெனரல்கள், மதத் தீவிரவாதிகள் ஆகியோரை அமெரிக்கா ஆதரித்தது. இவர்களில் பலர் கம்யூனிச நாடுகளைவிடக் கொடுமையான ஆட்சி நடத்தி, தம் மக்களையே கொன்று குவித்தவர்கள். ஆனாலும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றனர். அமெரிக்க மக்கள் இதனை எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை.

ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள்பற்றி அந்த நாட்டினர் கண்டுகொள்ளவே போவதில்லை என்ற நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக, ஆட்சியாளர்களின் போக்கு மேலும் மோசமானது.

அமெரிக்கா, தனது அனைத்து சக்திகளையும் கொண்டு, ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களில் பல நாடுகளில் அழிவு வேலைகளைச் செய்தது. பல நாடுகளிலும் தங்களுக்குப் பிடித்த ஆட்சியாளர்கள் பதவியில் இருக்க என்ன செய்யமுடியுமோ அனைத்தையும் செய்தது. தன் கொள்கைக்கு எதிரானவர்கள் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட என்ன சதிவேலைகள் வேண்டுமோ அதையும் செய்தது.

கம்யூனிசத்துக்கு எதிராக அல்லது தீவிரவாதத்துக்கு எதிராக என்று நாடுகள்மீது போர் தொடுத்தது. இதுவரையில் வியட்நாம், கொரியா தொடங்கி இன்றைய ஈராக்வரை இந்தப் போர்கள் அனைத்துமே உபயோகமானதாக இல்லை. இந்தப் போர்கள் மேலும் பிரச்னைகளையே உருவாக்கியுள்ளன. ஆனால் அமெரிக்காவின் கொள்கைகளை உருவாக்குபவர்கள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

(தொடரும்)

Sunday, June 08, 2008

திபெத் பற்றி பிகோ ஐயர்

ஜப்பானில் வசிக்கும் எழுத்தாளரான பிகோ ஐயர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கடைசியாக எழுதியது The Open Road: The Global Journey of the Fourteenth Dalai Lama. இவர் Dissent என்ற பத்திரிகைக்காக ஜான் வெய்னருக்குக் கொடுத்த நேர்முகத்திலிருந்து சில பகுதிகளைச் சேர்த்து ஒரு கட்டுரை வடிவில் கொடுத்துள்ளேன்.

லாசா இப்போது 65% ஹான் சீனர்களால் நிரம்பியுள்ளது. தங்களது நாட்டிலேயே திபெத்தியர்கள் இன்று சிறுபான்மையினர்களாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிவேக ரயில்சேவை தொடங்கப்பட்டது. இப்போது நாளுக்கு மேலும் 6,000 ஹான் சீனர்கள் திபெத்துக்கு வரமுடியும்.

ஒவ்வொரு மடத்திலும் எவ்வளவு துறவிகள் இருக்கலாம் என்பதற்கு ஒரு கட்டுப்பாடு நிலவுகிறது. பழைய திபெத்தில் 20% மக்கள் துறவிகளாக இருந்தனர். 8,000-10,000 துறவிகளைக் கொண்ட மடங்கள் இருந்தன. இப்போது ஒரு மடத்தில் 500 துறவிகளுக்குமேல் இருக்கமுடியாது.

1950-ல், சீன ஆக்ரமிப்பை எதிர்த்து திபெத் ஐ.நா சபைக்குச் சென்றபோது, திபெத்துக்கு ஆதரவாளர்களாக பிரிட்டனும் இந்தியாவும் இருந்தது என்றார்கள். ஆனால் இந்த இரு நாடுகளுமே, ஐ.நா சபையை திபெத்தின் கோரிக்கைகளைக் கேட்கவேண்டாம் என்று சொல்லிவிட்டனர். திபெத்துக்கு பதிலே கிடைக்கவில்லை. தனக்கு நண்பர்களே இல்லை, எந்த நாடும் தனக்கு உதவி செய்ய வரப்போவதில்லை என்று திபெத்துக்கு அப்போதுதான் புரிந்தது. பத்தாண்டுகள் கழித்து, அமெரிக்கா உள்ளே நுழைந்தது. சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் திபெத்தைப் பகடையாகப் பயன்படுத்தலாம் என்று புரிந்துகொண்டது.

1960-களில் சி.ஐ.ஏ, திபெத்தியர்களுக்கு கொலராடோவில் ஆயுதப் பயிற்சி கொடுத்து, நேபாளத்துக்குள் புகுத்தியது. சி.ஐ.ஏவுக்கு திபெத்மீது எந்த அக்கறையும் கிடையாது. பெரும் கம்யூனிஸ்ட் எதிரியான சீனாவைத் தடுக்கவேண்டும். அவ்வளவுதான். ஆனால் வன்முறைப் போராட்டத்தால் தனது மக்களுக்கு மேலும் தொல்லைதான் என்பதை உணர்ந்த தலாய் லாமா, வன்முறைப் போராட்டத்தைக் கைவிடுமாறு, நேபாளத்தில் இருந்த போராளிகளுக்கு, பதிவுசெய்த ஒலிநாடாவை அனுப்பிவைத்தார். அவர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் பல போராளிகளும் மனதுடைந்து தற்கொலை செய்துகொண்டனர்.

சீனக் கலாசாரப் புரட்சி காலகட்டத்தில் குறைந்தது 12 லட்சம் திபெத்தியர்கள் கொல்லப்பட்டிருக்கவேண்டும். அதாவது மொத்த மக்கள்தொகையில் 20%. 6,000 மடாலயங்களில் 13-ஐத் தவிர மீதி அனைத்தும் அழிக்கப்பட்டன. சிறு பிள்ளைகளைக் கொண்டே, அவர்களது பெற்றோர்கள் கொல்லப்பட்டனர். புனித நூலின் பக்கங்களை கழிவுகளைத் துடைப்பதற்குப் பயன்படுத்துமாறு துறவிகள் வற்புறுத்தப்பட்டனர். இன்று இந்தக் கொடுமைகளை சீன அரசு தவறு என்று மறுதலித்துள்ளது.

இன்று உலக வரைபடத்திலிருந்து திபெத் அழிக்கப்பட்டுவிட்டாலும் உலகெங்கும் பரவியுள்ளது. கலிஃபோர்னியாவில், சுவிட்சர்லாந்தில், ஜப்பானில். 1968-ல் மேற்கு உலகில் இரண்டே இரண்டு திபெத்திய புத்த மையங்கள் இருந்தன. இன்றோ, நியூ யார்க்கில் மட்டுமே 40 மையங்கள் உள்ளன. 'நான் எனது வீட்டை இழந்துள்ளேன்; ஆனால் இந்த உலகையே எனது சமூகமாகப் பெற்றுள்ளேன்' என்கிறார் தலாய் லாமா.

இந்தியாவில் தர்மசாலாவில் பல திபெத்தியர்கள், திபெத்திய கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் தங்கள் வாழ்நாளில் திபெத்தையே பார்த்ததில்லை. இவர்கள் ஓர் எழை நாட்டில், ஏழைமைக் குடியிருப்பில் வாழ்கிறார்கள். ஆனால் சுற்றிலும் அழகான கலிஃபோர்னிய ஆண்கள், பெண்களைப் பார்க்கிறார்கள். உலகில் வளரும் நாடுகளில் உள்ள பிறரைப் போன்றே, சுதந்தரமும் செல்வமும் நிரம்பியிருக்கும் அமெரிக்காவுக்குக் குடியேற விரும்புகிறார்கள்.

தலாய் லாமா இந்தியாவுக்குச் சென்றவுடனேயே, முதலில் செய்தது குடியாட்சி முறையை மதிக்கும் ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதுதான். தர்மசாலாவில் ஒரு நாடாளுமன்றத்தையும் பிரதமரையும் ஏற்படுத்தினார். தன்னையே பதவியிலிருந்து வெளியேற்றும் அதிகாரத்தையும் கொடுத்தார். ஆனால் ஒரேயொரு பிரச்னை, திபெத்தியர்கள் தலாய் லாமாவைக் கடவுளின் அவதாரமாகக் கருதுகிறார்கள். பிரதமரா, கடவுளா என்றால் அவர்கள் தலாய் லாமா சொல்வதையே கேட்கப்போகிறார்கள்.

இப்போதிருக்கும் 14-வது தலாய் லாமா இறந்தால், சீன அரசு உடனடியாக ஏதவது ஒரு கம்யூனிஸ்ட் உறுப்பினரின் சிறு குழந்தையைப் பிடித்து இதுதான் 15-வது தலாய் லாமா என்று அறிவித்துவிடும் என்பது அவருக்குத் தெரிந்துள்ளது. அந்தப் பையனும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாகவும் திபெத்துக்குப் பகைவனாகவும் இருப்பான் என்பதில்ல் சந்தேகமில்லை. இதனால்தான் 14-வது தலாய் லாமா, கடந்த 39 வருடங்களாக அடுத்த தலாய் லாமா திபெத்துக்கும் சீனாவுக்கும் வெளியிலிருந்துதான் வருவார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். 15-வது தலாய் லாமா என்று ஒருவருமே வராமல் இருக்கலாம் என்றும் சொல்கிறார். அல்லது அது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம்.

தலாய் லாமா திடீரென ஒருவரைக் காண்பித்து, 'இவர் எனக்காகப் பேசுகிறார், இவர் சொல்வதைக் கேளுங்கள்' என்று ஒருவரை அறிமுகப்படுத்தக்கூடும் என்று நினைக்கிறேன்.

Friday, June 06, 2008

சஹாரா வங்கியல்லா நிதி நிறுவனம் முடக்கம்

புதன்கிழமையன்று மத்திய ரிசர்வ் வங்கி, சஹாராவின் நிதி நிறுவனம் மேலும் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை வைப்பு நிதியாகப் பெறக்கூடாது என்று கட்டளையிட்டது. வியாழன் அன்று, இந்தக் கட்டளைக்கு எதிராக அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் சஹாரா தடை வாங்கியுள்ளது.

1990களில் இந்தியாவில் ஏகப்பட்ட வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் தோன்றின. சில மக்களை ஏமாற்றுவதற்கென்றே. ஆனால் பல நல்ல எண்ணத்தோடும், நியாயமாகப் பணம் சம்பாதிக்கவும் மட்டுமே உருவாயின. வங்கி உரிமம் பெற்று நடத்தப்படும் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. அவை, தாம் வைப்பு நிதியாகப் பெறும் பணத்திலிருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை மத்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கவேண்டும். இதற்கு கேஷ் ரிசர்வ் ரேஷியோ (CRR) என்று பெயர். நாட்டில் பணப்புழக்கம் அதிகமாவதுபோல் தெரிந்தால் ரிசர்வ் வங்கி இந்த CRR-ஐ அதிகமாக்கும். பணம் குறைவாக நடமாடினால், CRR-ஐக் குறைக்கும்.

அதேபோல வங்கிகள் எந்த அளவுக்கு வைப்பு நிதிக்கு வட்டி தரவேண்டும், எந்த வட்டியில் கடன் தரலாம் போன்றவற்றை பிரைம் லெண்டிங் ரேஷியோ (PLR) என்பதன்மூலம் ரிசர்வ் வங்கி ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும். ஓரளவுக்குத்தான்; ஏனெனில், வீட்டுக் கடன்களுக்கு PLR-ஐவிடக் குறைவான வட்டியில் வங்கிகள் பெரும்பாலும் பணம் கொடுக்கின்றன.

ஆனால் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் (Non-Banking Finance Corporations - NBFC) இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. 24%, 36% என்றெல்லாம் வட்டி தருகிறோம் என்று வைப்புத் தொகையைப் பெற்றனர். அப்படிப் பெற்ற பணத்தையெல்லாம் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி சவுக்குத் தோட்டம், ரியல் எஸ்டேட், தங்கம் என்று முதலீடு செய்தனர். ஆனால் இந்த முதலீடுகள் பொய்த்தபோது அவர்களால் பொதுமக்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கமுடியவில்லை. நாடெங்கிலும் தினமொரு வங்கியல்லா நிதிநிறுவனம் போண்டியானது. லட்சக்கணக்கான மக்களையும் சேர்த்தே போண்டியாக்கியது.

இதன் விளைவாக, ரிசர்வ் வங்கி கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டுவந்து, புதிதாக யாருமே NBFC தொடங்கமுடியாத அளவுக்குச் செய்துவிட்டது. அழிந்து ஒழிந்துபோன NBFC-க்களுக்குப் பிறகு, இன்று மிச்சமிருக்கும் சிலவற்றுள் சஹாரா மிகப்பெரியது. சஹாராவின் வாடிக்கையாளர்கள் 4.5 கோடி பேர். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் 10 கோடி பேர்! ஆக, பல வங்கிகளைவிடவும் சஹாராவின் வாடிக்கையாளர்கள் அதிகம்.

2006 கடைசியில் ஆந்திராவின் ஈநாடு பத்திரிகை குழும உரிமையாளர் ராமோஜி ராவ் மற்றும் குடும்பத்தினரின் மார்கதர்சி சிட் ஃபண்ட் மேலும் வைப்பு நிதிகளைப் பெறக்கூடாது என்று ரிசர்வ் வங்கி கட்டளையிட்டது. மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம் ஒரு கம்பெனியாக அமைக்கப்படவில்லை. Hindu Undivided Family என்ற சட்டபூர்வ அமைப்பின்கீழாக நிறுவப்பட்ட அமைப்பு அது. இது ரிசர்வ் வங்கிக்குக் கவலை அளித்தது. இந்த நிறுவனத்தின்மீது சில வாடிக்கையாளர்கள் புகார் செய்திருந்தனர். ராமோஜி ராவ் தரப்பிலிருந்து அவர்கள் காங்கிரஸுக்கு எதிரானவர்கள் என்பதால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி காரணமாகவே இது நடந்துள்ளது என்று சொல்லப்பட்டது.

இப்போது சஹாராவும் இதையே சொல்லக்கூடும். சஹாராவின் சுப்ரதா ராய், சமாஜவாதிக் கட்சியின் முலாயம் சிங் யாதவுக்கும் அமர் சிங்குக்கும் மிகவும் நெருக்கமானவர்.

1990களில், சஹாராவின் பெயர் எனக்குத் தெரியவரும்போதே என் நண்பர்கள் சிலர், இந்த நிறுவனம் உத்தர பிரதேச ஏழை மக்களின் பணத்தில் உருவானது; நிறைய தகிடுதத்தங்கள் செய்தே வளர்ந்தது என்று சொல்லியிருந்தனர். ஆனால் இத்தனை நாள் இந்த நிறுவனம் ஒரு ரெகுலேட்டர் கண்ணில் மாட்டாமல் இருந்ததே ஆச்சரியம். இந்த நிறுவனம் வெளிப்படையானதே அல்ல. இவர்கள் இதுவரை உருப்படியான, லாபம் தரக்கூடிய எந்த நிறுவனத்தையும் நடத்தியதே இல்லை. மக்களது வைப்புத்தொகையை மூலதனமாகக் கொண்டு, இவர்கள் விமானச் சேவை, தொலைக்காட்சி, ரியல் எஸ்டேட் என்று பலவற்றைச் செய்தனர். சென்ற ஆண்டு விமானச் சேவை நிறுவனத்தை ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்துக்கு விற்றனர். அது கடுமையான நஷ்டத்தில் சென்றுகொண்டிருந்த நிறுவனம். தொலைக்காட்சி நிறுவனம், சினிமா எடுக்கும் பிரிவு ஆகியவையும் பெரும் லாபம் சம்பாதிப்பவை அல்ல. இந்தத் துறையில் பத்தோடு பதினொன்றாக உள்ள ஒரு நிறுவனமே.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணி, ஹாக்கி அணி ஸ்பான்சர்ஷிப், தேச பக்தி அது இது என்று ரொம்பவே ‘ஃபீல் ஆவது' சுப்ரதா ராயின் திறமை.

இன்று உயர் நீதிமன்றத்தில் தடைவாங்கினாலும் இந்த நிறுவனத்தின் வண்டவாளங்கள் விரைவிலேயே வெளிவரப்போவது திண்ணம்.

Wednesday, June 04, 2008

திபெத் பற்றி சீனாவின் தூதர் கேள்வி-பதில்

தானே கேள்வி, தானே பதில் என்பது தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தமிழினத் தலைவர் மட்டுமல்ல, அவர் உலகுக்கே தலைவர் என்பதால், சீன அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவரைப் பின்பற்றத்தொடங்கியுள்ளனர்.

கொல்கத்தாவில் இருக்கும் சீனாவுக்கான தூதர் (மேற்கு வங்க கம்யூனிஸ்ட் பார்ட்டி தலைவர்கள் அல்ல) மாவோ சிவேய் என்பவர், தி ஹிந்து பத்திரிகையில் தானே கேள்வி, தானே பதில் கொடுத்திருக்கிறார்.

அதன் சுருக்கமான சில பகுதிகள் இங்கே:

1. தலாய் லாமாவின் ‘திபெத்துக்கான தன்னாட்சி' என்ற கோரிக்கையை ஏன் சீனர்கள் நேர்மையானது என்று நம்ப மறுக்கிறார்கள்?

தலாய் லாமா, 1951-க்கு முன், திபெத் சீனாவின் பகுதியாக இருந்தது என்பதை ஏற்க மறுக்கிறார். அப்படியென்றால் 1951-ல் (சீனாவின்) மக்கள் விடுதலைப் படை அத்துமீறி திபெத்துக்குள் நுடைந்தது என்றாகும். அப்படியென்றால் திபெத் இன்று ஆக்ரமிக்கப்பட்ட ஒரு பகுதி என்றாகும். இன்று தன்னாட்சி கோரிக்கையை முன்வைக்கும் தலாய் லாமா, நாளை வாய்ப்பு கிடைத்தவுடன் சுதந்தரப் பிரகடனத்தை முன்வைப்பார். பல முக்கியமான திபெத்தியத் தலைவர்கள் இதனை வெளிப்படையாகவே சொல்கின்றனர். எனவேதான் சீனர்கள் தலாய் லாமாவின் கோரிக்கை நேர்மையானது என்று நம்ப மறுக்கிறார்கள்.

2. திபெத்தில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக உலக ஊடகங்கள் சொல்வதை சீனா ஏன் ஏற்பதில்லை?

திபெத் மக்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்ற சீனா நிறைய முயற்சிகளை எடுத்துள்ளது. அடிப்படை மனித உரிமை என்பது முதலில் வாழ்வதற்கான உரிமை என்று இன்று திபெத்தில் இருக்கும் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். 1953-ல் திபெத்தில் 10 லட்சம் பேர் வாழ்ந்தனர். 2007 கடைசியில் இது 28 லட்சமாக உயர்ந்துள்ளது. 1950களில் திபெத்தியர்களின் சராசரி ஆயுள் 35.5 ஆண்டுகளாக இருந்தது. இன்று இது 67ஆக உயர்ந்துள்ளது.

[சொல்லாமல் விட்டது: இதற்குமேல் திபெத்தியர்கள் வேறு எதை எதிர்பார்க்கிறார்கள்? கிடைக்கும் சோற்றைத் தின்றுகொண்டு, எண்ணிக்கையைப் பெருக்கவேண்டியதுதானே?]

3. திபெத்தில் மத உரிமை இல்லை என்று உலக ஊடகங்கள் சொல்வதை சீனா ஏன் ஏற்க மறுக்கிறது?

மத உரிமை என்றால், லாமாக்கள் தெருவில் திபெத் விடுதலைக்காகக் கோஷம் எழுப்பி, கல்லை விட்டெறிவது என்றால் சீனாவில் எங்கும் அந்த உரிமை கொடுக்கப்படமாட்டாது. 1960, 1970களில் கலாசார புரட்சி என்று சொல்லப்பட்ட நேரத்தில் செஞ்சட்டையினர் சீனாவில் பல இடங்களிலும் கோயில்கள், சர்ச்களைத் தாக்கினர். அப்போது திபெத்தில் மடங்களையும் தாக்கினர்.

ஆனால் 1980-க்குப் பிறகு நிலைமை மாறியுள்ளது. இன்று திபெத்தில் 1700 மடங்களில் 46,000 துறவிகள் உள்ளனர். ஒரு லாமா தனது மடத்தில் முன்னர் 8000 லாமாக்கள் இருந்தனர், ஆனால் இப்போது 4000 ஆகக் குறைந்துள்ளது என்கிறார். இவரது கருத்தில் 4000 என்பது குறைவாம்! இப்படி எல்லா ஆண் திபெத்தியர்களும் துறவிகளாகப் போனதால்தான் பல நூற்றாண்டுகளாக திபெத் வலுவற்ற பகுதியாக இருக்கிறது.

[சொல்லாமல் விட்டது: அதனால்தான் எங்களால் எளிதாக இவர்களை ஆக்ரமிக்க முடிந்தது!]

4. சீனா கலாசாரப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்ற தலாய் லாமாவின் குற்றச்சாட்டு ஒரு பொய் என்று ஏன் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ சொன்னார்?

[சொல்லாமல் விட்டது: பிறகு உண்மை என்றா சொல்வார்?]

1951-க்கு முன் 2%-க்கும் குறைவான திபெத்தியக் குழந்தைகளே பள்ளிக்குச் சென்றனர். படிப்பறிவின்மை 95%-ஆக இருந்தது. இன்று குழந்தைகளிடையேயான படிப்பறிவின்மை 4.8% ஆகக் குறைந்துள்ளது. மொத்தப் படிப்பறிவின்மை 30%-க்கும் கீழாக உள்ளது.

சீன மொழியில் கல்வி கற்பிக்கிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். திபெத்திய மொழி, கலாசார, மதச் சிந்தனைகளை வெளிப்படுத்த நல்ல மொழி. ஆனால் அதனால் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளிப்படுத்த இயலவில்லை. இதற்கான முழுப் பழியையும் முந்தைய திபெத்திய அரசர்களே ஏற்கவேண்டும். எனவேதான் நாங்கள் சீன மொழியைக் கொண்டு திபெத்தியர்களுக்குக் கல்வி கற்பிக்கிறோம். திபெத்தில் இருக்கும் இளம் திபெத்தியர்கள் சீன மொழியில் கற்க விரும்புகிறார்கள். (இந்தியாவின்) தர்மசாலாவில் இருக்கும் திபெத்தியர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்க விரும்புகிறார்கள்.

5. ஏன் ‘பெரும் திபெத்' என்ற கொள்கை சீனாவுக்கு ஏற்புடையதல்ல?

'பெரும் திபெத்' என்று இவர்கள் கேட்பது திபெத், கிங்காய் மாகாணம் முழுவதும், சிச்சுவான் மாகாணத்தில் பாதி, கான்சு மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதி, யூனான் மாகாணத்தில் நான்கில் ஒரு பகுதி, சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் ஐந்தில் ஒரு பகுதி. மொத்தத்தில் சீனாவின் பரப்பில் நான்கில் ஒரு பகுதி!

இதில் பல பகுதிகளிலும் பல இன, மொழிக்குழுவினர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவருகிறார்கள். அந்தப் பகுதிகளையெல்லாம் தர்மசாலாவில் உள்ளவர்கள் பெரும் திபெத் பகுதிக்குள் சேர்க்க விரும்புகிறார்கள்.

சொல்லப்போனால் 1940-ல் 14-வது தலாய் லாமாவின் பதவியேற்பு வைபவத்தின்போது அவரது தந்தைக்கு திபெத்திய மொழி சரியாகப் பேசத்தெரியவில்லை; ஆனால் அவர் சீன மொழியின் கிங்காய் வட்டார வழக்கிலேயே பேசினார்.

[சொல்லாமல் விட்டது: எனவே திபெத்தியர்கள் திபெத் மொழி, திபெத் கலாசாரம் ஆகியவற்றை விட்டுவிட்டு, சீன மொழி கற்று, சீனர்களாக வாழ்வதே சிறந்தது. பெரும் திபெத் ஏன், பெரும் சீனா போதுமே?]

பராக் ஒபாமா

இன்னமும் முடிவாக டெமாக்ரடிக் கட்சியால் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கிட்டத்தட்ட அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டாகிவிட்டது. டெமாக்ரடிக் கட்சியின் பிரதிநிதியாக அமெரிக்க அதிபர் தேர்தல் 2008-ல் பராக் ஒபாமாதான் நிறுத்தப்படுவார். இவரை எதிர்த்துப் போராடப்போவது ஜான் மெக்கெய்ன், ரிபப்ளிகன் கட்சி பிரதிநிதி.

இந்தத் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றிபெற்று அமெரிக்க அதிபராக ஆவார் என்று வேண்டுவோம்.

Tuesday, June 03, 2008

வோடஃபோன் கிராஸ்வேர்ட் புத்தக விருதுகள் 2007

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் வெளியாகும் ஆங்கிலப் புத்தகங்களுக்காக கிராஸ்வேர்ட் புத்தகக் கடைச் சங்கிலி விருதுகள் தருகிறது. வோடஃபோன் செல்பேசிச் சேவை நிறுவனம் (முன்னர் ஹட்ச்) இதனை ஸ்பான்சர் செய்கிறது.

மொத்தம் மூன்று விருதுகள்:
  1. ஆங்கிலப் புதினம்
  2. ஆங்கில அ-புதினம்
  3. இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றப்பட்ட புதினம்.

ஒவ்வொரு விருதுக்கும் பல புத்தகங்கள் (லாங்லிஸ்ட்) வந்திருந்தன. இதிலிருந்து குறுக்கப்பட்ட பட்டியல் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளனர். முழுப் பட்டியல் இங்கே.

இதில் ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள புத்தகங்களாக ஆறு புத்தகங்கள் குறுகிய பட்டியலில் வந்துள்ளன. அதில் இரண்டு நியூ ஹொரைசன் மீடியாவின் இண்டியன் ரைட்டிங் பதிப்பிலிருந்து வெளியானவை:
  1. Star Crossed by Ashokamitran (கரைந்த நிழல்கள்)
  2. The Ghosts of Arasur by Era Murukan (அரசூர் வம்சம்)

Sunday, June 01, 2008

இந்தியப் பொருளாதாரம் - இன்றைய நிலை - 1

கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நிகழ்வுகள் பொதுவாக உலகையும், குறிப்பாக இந்தியாவையும் பயமுறுத்தும்விதத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றைத் தலைப்புச் செய்திகளாகப் படித்திருப்பீர்கள்.

1. உலகக் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்றம். இப்போது பேரலுக்கு $135 என்ற விலையைத் தாண்டிச் சென்றுள்ளது.

2. இந்தியாவில் பணவீக்கம். 5%-லிருந்து 6% ஆகி, அங்கிருந்து 7% நெருங்கும்போது எல்லோரும் கூச்சல்போட்டு, இதோ இறக்கிவிடுவோம் என்று சொல்ல, இப்போது பொறுமையாக 8%-ஐத் தாண்டியுள்ளது. இதற்கும் மேலே சொல்லியுள்ள பாயிண்ட் 1-க்கும் தொடர்பு உண்டு.

3. உலக உணவுப் பற்றாக்குறை. இந்தியாவில் உணவுப்பொருளின் விலைகளைக் குறைவாக வைக்க, இந்திய அரசு அரிசியை ஏற்றுமதி செய்யத் தடை விதித்துள்ளது. ஏற்கெனவே கோதுமையை வெளிநாடுகளிலிருந்து வாங்க முயற்சி செய்துள்ளோம். உலகம் முழுதிலும் பல நாடுகளில் உணவு ரேஷன் செய்யப்பட்டுள்ளது. பல நாடுகளில் உணவுப் பொருள்களை எத்தனால் அல்லது பயோ டீசல் என்ற எரிபொருளாக மாற்றும் வேலை நடந்துவருவதால்தான் இந்த உணவுப் பற்றாக்குறை என்ற வாதம் எழுந்துள்ளது. இதுவும் பாயிண்ட் 1-டன் தொடர்புடையது.

4. உலக கரன்சியில் டாலரின் மதிப்பு குறைதல். இதன் காரணமாக கச்சா எண்ணெயை டாலரில் விற்றுவரும் நாடுகள் விலைகளை ஏற்றுகின்றனர் என்று ஒரு வாதம். அமெரிக்காவின் தொடரும் வர்த்தகப் பற்றாக்குறை (Trade deficit) காரணமாகவும் டாலரின் மதிப்பில் நிறையவே சரிவு ஏற்பட்டுள்ளது.

5. அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு (Recession) ஏற்படப்போகிறது என்பதற்கான அனைத்துக் காரணிகளும் தெளிவாகத் தெரிகின்றன. அதன் காரணமாக, அங்கும், அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதால் பிழைக்கும் நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பயம்.

6. அமெரிக்க சப்-பிரைம் கடன் (அதாவது கடன் பெற்று அதனைத் திருப்பிக் கட்டும் தகுதியில்லாதவர்களுக்கு வரைமுறையின்றி அள்ளிக் கொடுத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னை), அதனால் ரியல் எஸ்டேட்டில் ஏற்பட்டுள்ள அடி, பணம் திரும்பி வராததால் பல வங்கிகள் தங்களது பேலன்ஸ் ஷீட்டில் (இருப்பு நிலைக் குறிப்பு) அடிவாங்கியுள்ளது, இதனால் பெரும் நஷ்டத்தைக் காட்டியுள்ளது, சொத்துக்களாகத் தாங்கள் நினைத்துள்ள கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக (அ) சில வங்கிகள் திவாலாகலாம் அல்லது (ஆ) தங்களது வேலைகளைக் குறுக்கிக்கொள்ளலாம்.

7. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த (பாயிண்ட் 2), மத்திய ரிசர்வ் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தல், அல்லது கேஷ் ரிசர்வ் ரேஷியோவை அதிகரித்தல், இதன்மூலம் கடன் பெற்று தொழில் நடத்துவோர் நிலையில் திண்டாட்டம். இதனால் புது வேலைகள், புதுக் கட்டுமானங்கள் குறைதல். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தல். ஏற்கெனவே வேலையில் சேர்ந்துள்ள பலருக்குச் சம்பளம் குறைதல், அல்லது வேலை போதல். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள பலருக்கும் அமெரிக்கப் பொருளாதாரச் சரிவும், இந்தியப் பணவீக்கமும், வீட்டுக் கடன் வட்டி விகிதம் அதிகரித்தலும் ஒன்றுசேர்ந்து தொல்லை கொடுக்கப்போகிறது.

8. பங்குச்சந்தை செண்டிமெண்ட்: ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சரிவு உலகெங்கும் ஏற்படும்போது, பங்குச்சந்தையில் பணம் போட யாரும் முன்வரமாட்டார்கள். பொதுமக்கள் கையில் மேலதிகப் பணம் ஏதும் இருக்கவும் இருக்காது. இதனால் சந்தையின் குறியீட்டு எண் சரியும். விற்பவர் நிறைய, வாங்குபவர் குறைவு என்னும் கரடிச் சந்தையாக இருக்கும். இதனால் புது நிறுவனங்கள் ஐ.பி.ஓ என்னும் பொதுமக்களுக்குப் பங்குகள் வழங்கி முதலீட்டைப் பெறுவதை நிறுத்திவைப்பார்கள். இதுவும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். ஏற்கெனவே பங்குச்சந்தை உச்சத்தில் இருந்தபோது பணம் போட்டிருந்த பலரும் குரங்கு பட்சண ஜாடிக்குள் கையை விட்டதுபோல், கையை வெளியே எடுக்கவும் முடியாமல், பட்சணத்தை விடவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பார்கள்.

9. மக்களது நுகரும் எண்ணங்கள் மாற்றமடையும். வீடு வாங்குதல், கார் வாங்குதல், ஊர் சுற்றுதல் (விமானப் பயணச்சீட்டின் விலை அதிகமாகும்), எல்லாமே குறையும். பொருளாதாரம் சுருங்கும் அல்லது வளர்ச்சி குறையும். செலவாகச் செய்யாமல் பணமாகப் பெட்டிக்குள், வங்கிக்குள் வைத்திருப்போம் என்ற மக்கள் மனநிலை அதிகமாகும்.

10. இந்தப் பிரச்னைகள் எல்லாம் மத்திய தர, பணக்காரர்களை மட்டும்தான் பாதிக்கும் என்பதில்லை. படு ஏழைகளாக இருப்பவர்கள் நிலை மேலும் படு மோசமாக இருக்கும்.

இந்தப் பிரச்னைகள் எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. இவற்றைப் பற்றிய புரிதல் அவசியம். ஏன் இப்படி ஏற்படுகிறது? பதில்: பொருளாதார உயர்வும் தாழ்வும் மாறி மாறி காலச் சக்கரம் போல வந்துகொண்டே இருக்கும் நிகழ்வுகள். பொருளாதார வீழ்ச்சி இதற்கு முன்னும் வந்துள்ளது; இனியும் வரும். சில வருடங்கள் கழித்து தேக்கம் மறைந்து வளர்ச்சி வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் எங்கே ஆரம்பிக்கிறது, எதனால் ஆரம்பிக்கிறது என்பது வேண்டுமானால் மாறலாம். எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதும் மாறும். இத்தகையை பொருளாதார மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட வயதினரையும், சமூகப் பொருளாதாரப் பின்னணியினரையும் மட்டுமே நேரடியாகப் பாதிப்பதால் அனைவரும் இதனைப் பற்றி அதிகம் அறிவதில்லை. மேலும் கடந்த உலகப் பொருளாதாரச் சரிவு நடந்தபோது இணையம் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. எனவே இதைப்பற்றிய விவாதங்கள் இணைய உலகில் வெகுவாக இல்லை.

அடுத்த சில பதிவுகளில் மேலே சொன்ன சில விவரங்களைக் குறிப்பாகப் பார்த்து, அவற்றை எப்படி எதிர்கொள்வது; நாடுகள் என்ன செய்யவேண்டும்; மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி விவாதிப்போம்.