Monday, April 26, 2010

பொன் முட்டை இடும் வாத்து - 0

கிரிக்கெட் உரிமங்கள் பற்றி மிக விரிவாக என் ஆங்கில வலைப்பதிவில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஆனால் அவற்றை அதிகம் யாரும் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். இப்போது ஐ.பி.எல் ஊழல் மிகப் பெரிதாகப் பேசப்படுவதாலும் இன்று மதியம் போட்ட தூக்கம் காரணமாக இரவில் தூக்கம் வரவில்லை என்பதாலும் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்துள்ளேன். (ஏற்கெனவே ஆரம்பித்த தொடர்கள் எல்லாம் என்ன கிழித்தன என்று கேட்கிறீர்களா? இப்போது எழுதிவைக்கவில்லை என்றால் மறந்துவிடும் என்ற நிலை. எனவே, நிறைய தொடரும்... போட்டு வரிசையாக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவிடப்போகிறேன்.)

***

விளையாட்டுகளைப் பணமாக மாற்றும் வித்தையை பலர் புரிந்திருக்கின்றனர். சமீபத்திய உதாரணம் லலித் மோதியும் ஐ.பி.எல்லும். ஆனால் தேன் எடுப்பவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் என்ற திருவாக்கின்படி மோதி கொஞ்சம் அதிகமாகவே நக்கிவிட்டார் என்று நினைக்கிறேன். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஆதியோடு அந்தமாக கிரிக்கெட்டில் உள்ள பணத்தைப் புரிந்துகொள்ள சில முக்கியஸ்தர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். மார்க் மெக்கார்மாக் என்ற அமெரிக்கர். மைக்கல் வாட் என்ற நியூசிலாந்துக்காரர். மார்க் மாஸ்கரானஸ் என்ற இந்தியர். ரூப்பர்ட் மர்டாக், கெர்ரி பேக்கர், சுபாஷ் சந்திரா, ஹரீஷ் தவானி, ஷேமஸ் ஓபிரையன், சித்தார்த் ரே போன்றோர். ஜக்மோகன் தால்மியா, இந்தர்சிங் பிந்த்ரா, ஏ.சி.முத்தையா, சரத் பவார், என்.சீனிவாசன், லலித் மோதி போன்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தினர். சில ஐசிசி ஆள்கள், வெவ்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள், இந்தியாவின் கிரிக்கெட் மார்க்கெட்டிங்கில் விளையாடிய சிறிய, பெரிய தலைகள்...

பணம் என்றாலே மோசம், வியாபாரம் என்றாலே தில்லுமுல்லு, ஊழல் என்பதைத் தாண்டி, ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் என்பதில் தெரிந்துகொள்ளவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.

இந்த அறிமுகத்துடன்,

தொடரும்...

Monday, April 19, 2010

பிரபாகரனின் தாய், நாடுகடத்தப்பட்டது

சென்ற வாரம் விடுதலைப் புலிகள் தலைவர் (மறைந்த) பிரபாகரனின் தாய், 81 வயதான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே மடக்கி மீண்டும் மலேசியா அனுப்பிய செய்கை வருந்தத்தக்கது, கடுமையாகக் கண்டிக்கவேண்டியது.

ப.சிதம்பரம் தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம்தான் குடியேறல் துறைக்குப் பொறுப்பு. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் பார்வதிக்கு விசா வழங்கியுள்ளது. அது எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான வெளியுறவு அமைச்சகத்தின்கீழ் வருகிறது. நாட்டுக்கு உள்ளே வர அனுமதியற்றோர் பட்டியலில் பார்வதியின் பெயர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அதுவே முதல் அபத்தம். அந்தப் பட்டியல் பற்றித் தெரியாமல் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் விசா வழங்கியது இரண்டாவது அபத்தம். தமிழக அரசின் வேண்டுகோள் காரணமாகவே (எந்த அரசு? ஜெயலலிதா தலைமையிலானதா, கருணாநிதி தலைமையிலானதா?) உள்துறை அமைச்சகம் பார்வதியின் பெயரையும் அவரது கணவர் (மறைந்த) வேலுப்பிள்ளையின் பெயரையும் ‘எச்சரிக்கைப் பட்டியலில்’ சேர்த்தது என்கிறார்கள். இதையும் ஆராயவேண்டும்.

சிதம்பரம் கட்டாயம் இதற்கு பதில் சொல்லியாகவேண்டும். காங்கிரஸ் அரசும் இதற்கு பதில் சொல்லியாகவேண்டும். திமுக இதனைப் பிரச்னையாக எழுப்பாவிட்டால் கருணாநிதியும் இதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

மனிதாபிமானமற்ற செயல் இது.

Saturday, April 17, 2010

இரும்பை எப்படி வெட்டுவது?

(அம்ருதா ஏப்ரல் மாத இதழில் வெளியான கட்டுரை)

கற்காலத்திலிருந்து முன்னேறி உலோகங்களை மனித சமுதாயம் பயன்படுத்த ஆரம்பித்தது என்று நீங்கள் படித்திருப்பீர்கள். உலோகங்களைப் பயன்படுத்துவதன்மூலம் மனிதர்கள் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார்கள்.

கற்களையே கருவிகளாக்கும் திறன் குரங்குகளுக்கும் உண்டு, வேறு சில உயிரினங்களுக்கும் உண்டு. சீ லயன் (Sea Lion), ஆட்டர் (Otter) எனப்படும் சில மிருகங்கள் ஒரு குறிப்பிட்ட கல்லை வைத்து, கிளிஞ்சல்களை அதில் உடைத்து உள்ளே இருக்கும் பூச்சியைத் தின்னும். (ஒரு ஆட்டர் கடலில் நீந்தியபடி மார்பில் ஒரு கல்லை வைத்து, அதில் கிளிஞ்சல்களை உடைப்பதை இந்த யூட்யூப் படத்துண்டில் காணலாம்.) குரங்குகள் கற்களைக் கொண்டு கொட்டைகளை உடைத்து உள்ளே உள்ள பருப்பைத் தின்னும்.

மனிதன் கற்களைக் கொண்டு கத்திபோல், அம்பின் நுனிபோல் கருவிகளைச் செய்து, அவற்றைக் கொண்டு வேட்டையாடுதல், இறைச்சியை அறுத்தல் போன்றவற்றைச் செய்தான்.

கற்களைக் கொண்டு நாம் விரும்பும் அனைத்துக் கருவிகளையும் செய்யமுடியாது. அந்த நிலையில்தான் செம்பு, இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களைப் பிரித்தெடுக்கும் திறனையும் வெங்கலம் போன்ற உலோகக் கலவைகளை உருவாக்கும் திறனையும் மனிதன் பெற்றான். அது ஒரு தனிக்கதை. அதற்குள் நாம் போகப்போவது இல்லை. சில விஷயங்களை மட்டும் தெரிந்துகொண்டால் போதும்.

உலோகங்கள் தனியாகக் கட்டி கட்டியாகக் கிடைப்பதில்லை. மண்ணில் அவற்றின் தாது வடிவங்களில் கிடைக்கின்றன. அந்தத் தாதுவிலிருந்து உலோகத்தைத் தனியாகப் பிரித்தெடுக்கவேண்டும். தாதுவுடன் சில ரசாயனங்களைச் சேர்த்து கொதிக்கவைக்கும்போது உலோகம் தனியாகப் பிரியும். அந்த உருகி ஓடும் உலோகத்தை வழித்தெடுத்து குளிரவைத்தால் உலோகக் கட்டி கிடைக்கும்.

அவ்வளவுதான். ஆனால் ஒவ்வொரு உலோகத்தையும் தயாரிக்க வெவ்வேறு வழிமுறைகள். செம்பை எடுக்கும் முறையில் இரும்பைப் பிரித்தெடுக்கமுடியாது. தங்கத்துக்கு வேறு வழி, வெள்ளிக்கு வேறுவழி.

உலோகங்கள் அற்புதமான குணம் கொண்டவை. கடினமானவை. அதே சமயம், அவற்றைச் சூடாக்கினால் பாகுபோல இளகக்கூடியவை. எனவே சூடாக்கிய நிலையில் அவற்றை வெவ்வேறு வடிவங்களுக்கு மாற்றி, பின்னர் குளிரவைத்தால் விரும்பிய வடிவம் கிடைக்கும். கொல்லன் பட்டறையில் இதுதான் நடக்கும். இரும்பைப் பழுக்கக் காய்ச்சி சம்மட்டியால் அடித்து அடித்தே பல்வேறு பொருள்களை உருவாக்கிவிடுவார் ஒரு கொல்லன்.

உலோகத்தை சூடாக்கி அதன் வடிவை மாற்றுவதற்கு ஆங்கிலத்தில் forming அல்லது metal forming என்று பெயர். தமிழில் இதனை உருவடித்தல் அல்லது வடிவமாக்கல் எனலாம். நம் வீட்டில் உள்ள எவர்சில்வர் பாத்திரங்கள் பலவும் இந்த வகையில் உருவானவையே: காபி டம்ளர், டவரா, சாப்பிடும் பிளேட், தண்ணீர் கொதிக்கவைக்கும் அண்டா, வாணலி.... இப்படி அனைத்துமே.

இதைத்தவிர, metal cutting, அதாவது உலோகத்தை வெட்டுதல் என்ற வகையிலும் ஒரு கட்டி உலோகத்தை எடுத்து வெவ்வேறு வடிவத்துக்கு மாற்றமுடியும். ஒரு சாதாரண ஸ்க்ரூ ஆணி இப்படித்தான் உருவாக்கப்படுகிறது. எந்த ஒரு உலோக மெஷினை எடுத்துக்கொண்டாலும் - கார், ஸ்கூட்டர், ரெஃப்ரிஜிரேட்டர், மைக்ரோவேவ் அவன் என எதுவாக இருந்தாலும் - அதில் உள்ள பல உலோக பாகங்கள் வெட்டுதல் மூலம் உருவானவையே.

நம் ஊரில் ‘லேத்து பட்டறை’ என்று சொல்வோமே, அந்த லேத் என்பது ஒரு வெட்டும் மெஷின்.

அதேபோல மில்லிங் மெஷின் என்று ஒன்று உள்ளது. ஓட்டை போட, டிரில்லிங் மெஷின் என்பதைப் பயன்படுத்துவோம்.

இப்போது ஒரு இரும்புக் கட்டியை எடுத்துக்கொள்வோம். இதில் ஒரு ஓட்டையைப் போடவேண்டும். எதைக் கொண்டு ஓட்டையைப் போடுவது?

மேலும் புரிவதுபோலச் சொல்லவேண்டும் என்றால், ஒரு மரத்துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மற்றொரு மரத்துண்டை வைத்து ஓட்டை போடமுடியுமா? முடியாதல்லவா? மரத்தில் ஓட்டைபோட ஒரு கூர்மையான இரும்புக் கருவியை எடுத்துக்கொள்கிறீர்கள். அதை ஒரு மின்சார டிரில்லிங் கருவியில் செருகி சர்ர்ர்ர்ர் என்று சுழற்றினால், அது பட்ட இடத்தில் மரத்துண்டில் ஓட்டை ஏற்படுகிறது.

இப்போது இரும்புக் கட்டியில் ஓட்டை போடவேண்டும் என்றால் எந்தக் கருவியை எடுத்துக்கொள்வீர்கள்? இரும்பை இரும்பாலேயே வெட்டமுடியுமா?

முதலில் வெட்டுதல் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளவேண்டும். எல்லாப் பொருள்களுக்கும் என்று ஒரு கடினத்தன்மை உள்ளது. மெழுகை கையால் அழுத்தினாலேயே அசையும். விரல் நகத்தாலேயே அதைச் சுரண்டி ஓட்டை போட்டுவிடலாம். ஆனால் மரத்தில் ஓட்டைபோட நமக்கு ஒரு கருவி வேண்டும். (ஆனால் மரங்கொத்திப் பறவைக்கு அதன் மூக்கே போதும்!) மரத்தை ஓட்டைபோடும் அதே கருவியைக் கொண்டு இரும்பை ஓட்டைபோட முடியுமா?

பொதுவாக, முடியாது! ஆனால் இரும்பிலேயே பல விதங்கள் உள்ளன. இரும்பில் கரி சேரச் சேர இரும்பின் கடினத்தன்மை அதிகரிக்கிறது. சில கடினவகை இரும்புகளைக் கொண்டு சாதாரண இரும்பை வெட்டலாம். ஆனால் அப்படிப்பட்ட வெட்டுகருவி விரைவில் பழுதாகிவிடும்.

எனவே இரும்பைவிடக் கடினமான ஒரு பொருள் இருந்தால் அதைக்கொண்டு வெட்டுகருவிகளைச் செய்யமுடியும். அப்படிப்பட்ட சில பொருள்கள் டங்ஸ்டன் கார்பைட், டைடானியம் கார்பைட் போன்றவை. டங்ஸ்டன், டைடானியம் போன்றவையும் உலோகங்களே. பூமியின் மேற்பரப்பில் மிகவும் குறைவாகக் கிடைக்கக்கூடியவை. துரு பிடிக்காதவை. டங்ஸ்டன்தான் மின்சார பல்புகளில் இழையாகப் பயன்படுகின்றன. இந்த உலோகங்களை கரியுடன் சேர்த்து வேதிவினை புரிய வைக்கும்போது மேலே சொன்ன சேர்மங்கள் உருவாகின்றன. இவை மிக மிகக் கடினமான தன்மையைக் கொண்டவை. இவற்றைக் கொண்டு வெட்டு கருவிகளை உருவாக்கினால் இரும்பை எளிதில் வெட்டிவிடலாம்.

ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக, இயற்கையிலேயே கிடைக்கும் ஒரு பொருள் உள்ளது. உலகிலேயே மிகமிகக் கடினமான பொருள் அதுதான். அதைக் கொண்டு இரும்பை அல்வாத் துண்டு வெட்டுவது போல சரக் என்று வெட்டிவிடலாம். அது என்ன தெரியுமா?

அதுதான் வைரம்!

வைரம் என்பது வெறும் கரி! ஆனால் கரியிலேயே ஒரு குறிப்பிட்ட உள் வடிவம் கொண்டது. கரி அணுக்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் ஒன்று சேர்ந்து இருப்பதால், மிக மிகக் கடினமான பொருள் ஆகிவிடுகிறது. இதைக்கொண்டு இரும்பை மட்டுமல்ல, டங்ஸ்டன் கார்பைட், டைடானியம் கார்பைட் போன்றவற்றையும் அறுக்கலாம்.

சரி, உலகிலேயே கடினமானது வைரம் என்றால், அந்த வைரத்தை எதைக்கொண்டு அறுப்பது?

போரான் கார்பைட் என்று ஒரு பொருள் இருக்கிறது. அதுவும் வைரத்தைப் போன்றே கடினமான ஒரு சேர்மம். அதைக்கொண்டு செய்த வெட்டுமுனையால் வைரத்தை அறுக்கலாம். அதேபோல கியூபிக் போரான் நைட்ரைட் என்று மற்றொரு பொருள். அதைக்கொண்டும் வைரத்தை அறுக்கலாம்.

கடினத்தை வைத்து வகையிட்டால் முதலில் வருவது வைரம். இரண்டாம் இடத்தில் கியூபிக் போரான் நைட்ரைட். மூன்றாம் இடத்தில் போரான் கார்பைட். பிறகுதான் எல்லாமே.

இப்படி ஒரு பொருளை வைத்து மற்றொரு பொருளை அறுக்கலாம் என்றாலும் இறுதியில் அப்படி உருவான வெட்டுமுனை கருவிகள் அனைத்தும் வேகமாக வீணாகிவிடும். இன்றோ வேறு பல வழிகளையும் கையாளுகிறார்கள்.

உதாரணமாக, தண்ணீராலேயே இரும்பை அறுக்கலாம்! நம்புங்கள்.

ஒரு சிறு முனை வழியாக அதிவேகமாக நீரைப் பீய்ச்சினால் அந்த நீர் கடும் வேகத்துடனும் அழுத்தத்துடனும் வெளியேறும். அந்த வேகத்தைக் கொண்டே ஓர் இரும்புத் தகடை அறுத்துவிடமுடியும்.

அதேபோல இன்று லேசர் கருவிகள் மூலம் எல்லாவற்றையும் அறுத்துத் தள்ளிவிடுகிறார்கள்.

லேசர் கருவியிலிருந்து புறப்படும் ஒருங்காகக் குவிக்கப்பட்ட அதிக ஆற்றல் உள்ள ஒளி அலைகள் உலோகத்தில் அல்லது வைரத்தில் மோதும்போது அந்த ஒளி அலைகள் உடனடியாக வெப்பமாக மாறிவிடுகின்றன. விழுந்த இடத்தில் உள்ள அணுக்களை மட்டும் பொசுக்கி, உருக்கி, ஏன் வாயுவாகக்கூட மாற்றிவிடுகின்றன இந்த அதி ஆற்றல் ஒளி அலைகள். அதனால் மிகத் துல்லியமான வடிவங்களில் உலோகங்களை வெட்டமுடிகிறது.

*

இன்று உலோகத்தை வெட்டுதல் என்பது சர்வசாதாரணமான விஷயமாகிவிட்டது. முற்காலத்தில் இந்தியர்கள் இந்தத் துறையில் மிகவும் முன்னணியில் இருந்தனர். உலகின் பிற நாடுகளில் வைரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோதே இந்தியர்கள் வைரத்தை வெட்டி அற்புதமான அணிகலன்களை உருவாக்கியிருந்தனர்.

அதேபோல இந்தியாவில் செய்யப்பட்ட இரும்பு வாள் உலக அளவில் பிரசித்தி பெற்றிருந்தது. இன்று உலகம் எங்கோ சென்றுவிட்டது. பழங்கால இந்தியர்கள் அறிவியல் ஆராய்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தினர். அதனால்தான் அவர்களால் உலகின் பிற நாடுகளைவிடச் சிறப்பான கருவிகளை உருவாக்கமுடிந்தது.

அந்த அளவுக்கு இக்கால இந்தியர்களும் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். அதன்மூலம்தான் இந்தியாவின் பல்வேறு பிரச்னைகளையும் தீர்க்கமுடியும்.

செம்மொழிக் களஞ்சியம்

நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு நானும் நாகராஜனும் சென்றிருந்தோம். அங்குள்ள சில ஆராய்ச்சி மாணவர்களிடம் பேசுவதற்காக.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காக நாங்கள் ஒரு மென்பொருளை உருவாக்கிவருகிறோம். வேலைகள் முடிந்துவிட்டன. விரைவில் வலையேற்றப்பட்டு அதன் சுட்டியைத் தருகிறேன். தமிழ் பா இலக்கியங்களை தரவுத்தள வடிவமைப்பில் சேர்த்து அவற்றில் சொற்களைத் தேடுவதற்கான ஓர் இடைமுகம் இது.

உரைநடை இலக்கியம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழ் செம்மொழி இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், பதிணெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம் ஆகிய நூல்களும், அவற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பக்தி இலக்கியங்கள் (ஆழ்வார்கள், நாயன்மார்கள்), கம்பராமாயணம் என்று இருபதாம் நூற்றாண்டு வரையிலும் தொடரும் பாடல் வகைகள் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியிலிருந்தே தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் உரைநடை பாடல் மரபை ஒழித்துக்கட்டிவிட்டது. புதுக்கவிதை என்ற வடிவம் மேலோங்கியது. அதே நேரம் சினிமாப் பாடல்கள் என்பவை பல்கிப் பெருகியுள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் இந்த பாடல் corpus-ஐ ஆராயவேண்டும் என்றால் இவற்றை வெறும் பிரதிகளாக வைத்து கூகிள் தேடுதலை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. இந்தப் பிரதிகள் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் தரவுத்தளத்தில் போய் விழுமாறு வடிவமைக்கவேண்டும்.

அதன் விளைவாக உருவான திட்டமே தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நாங்கள் செய்துதரும் மென்பொருள்.

பாடல்கள், XML கோப்புகளாக மாற்றப்படுகின்றன. Tag மூலம் ஒரு hierarchy உருவாக்கப்படுகிறது. உதாரணத்துக்கு திருக்குறள் என்றால், அதில் பால், அதிகாரம், பாடல் எண், அடி எண், சீர் எண் என்பது ஒரு குறிப்பிட்ட சீரைக் குறிப்பது. ஆனால் ஒரு சீரில் இருப்பது ஒரு முழுச் சொல்லாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களும் ஒரு சீரில் இருக்கலாம். எனவே பாக்களை இரு பிரதிகளாகச் சேர்க்கவேண்டும். ஒன்று பாக்களின் இலக்கணப்படி சீர் பிரித்து உருவாக்கப்பட்ட பாடம். எ.கா:

காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்

இங்கு, மேலே உள்ள நான்கு சீர்களில் இரண்டாம் சீர், தளை காரணமாக கன்னாபின்னாவென்று உடைக்கப்பட்டுள்ளது. இதையே இன்றைய உரைநடையில் எழுதவேண்டும் என்றால்

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்

என்று எழுதுவோம். இந்த இரண்டு பாடங்களையும் சேர்த்தால்தான் வார்த்தைகளைத் தேடும்போது சரியாக பதில் கிடைக்கும்.

கூடவே ஒரு கட்டத்தில் காலத்தினால் = காலம்+த்+இன்+ஆல் என்று பெயர்ச்சொற்களையும் அவற்றின் வேற்றுமை உருபுகளையும் சந்தி, சாரியைகளையும் பிரிப்பது, செய்த = செய்+த்+அ என்று வினை எச்சங்களையும் வினை முற்றுகளையும் சரியாகப் பிரிப்பது போன்றவற்றையும் செயல்படுத்தவேண்டும்.

மற்றொரு கட்டத்தில் on mouse over, சொற்களின் பொருள்கள், அவற்றின் synonyms போன்றவை தென்படுமாறு செய்தல் வேண்டும். ஒரே பொருளைத் தரும் பல்வேறு சொற்களைக் கொண்டு ஒரே நேரத்தில் corpus முழுவதிலும் தேடும் வகையில் அமைக்கவேண்டும்.

***

ஜூன் 2010-ல் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக செம்மொழிக் களஞ்சியத்தை உருவாக்கி முடித்திட தமிழ்ப் பல்கலைக்கழகம் விரும்புகிறது. அதற்காக, செம்மொழி இலக்கியங்கள் (என நான் மேலே சொன்னவை) அனைத்தையும் தரவுத்தளத்தில் ஏற்றவேண்டும். அதற்காக அவை அனைத்தையும் XML கோப்புகளாக மாற்றவேண்டும். இதனை தமிழ் அறிந்த சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு செய்துமுடிப்பது என்பது திட்டம்.

இதனால்தான் இந்த மென்பொருளை சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களிடம் காண்பித்து அது பற்றிப் பேசவேண்டி இருந்தது. நாங்கள் பார்த்த மாணவர்கள் அனைவருமே பிஎச்.டி செய்பவர்கள். எல்லா மாணவர்களையும் போலவே இதில் பலருக்கு நாங்கள் காண்பித்ததில் எந்த விருப்பமும் இல்லை. மகிழ்ச்சி என்னவென்றால் பலருக்கும் கொஞ்சமாவது விருப்பம் இருந்தது என்பதே. அதில் பெண்கள் கணிசமானவர்கள். ஒரு பெண் ‘தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இடைச்சொற்கள்’ என்பது பற்றி ஆராய்ச்சி செய்கிறார். அதற்கு இந்த மென்பொருள் எப்படிப் பயன்படும் என்பதை விளக்கியவுடன் அவர் முகத்தில் ஒரே பிரகாசம்.

அங்கே பேரா. ஜெயதேவன் மேஜையில் ஒரு எம்.ஃபில் தீசிஸ் இருந்தது:- ‘இராமானுச நூற்றந்தாதியில் (திருவரங்கத்தமுதனார்) அகழ்வாய்வும் சொல்லடைவும்’. உள்ளே இருக்கும் அனைத்தையும் பார்த்தபின், அந்த தீசிஸையே இந்த மென்பொருள் கொண்டு தானாகவே உருவாக்கிவிடலாம் என்று தோன்றியது.

சில மாணவர்கள், ‘கூகிள் தேடுதல் இருக்கும்போது இந்த மென்பொருள் எதற்கு?’ என்றனர். அதனை விளக்கவேண்டியிருந்தது.

இதில் வேலை செய்ய கம்ப்யூட்டர் வேண்டுமே என்று மாணவர்கள் அங்கலாய்த்தனர். அதிர்ச்சியாக இருந்தது. இந்த 21-ம் நூற்றாண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில்கூட பிஎச்.டி மாணவர்கள் அனைவருக்கும் கணினிகள் இல்லையா? கோடி கோடியாகக் கிடைக்கும் நிதி அனைத்தும் எங்கே போகிறது? இவர்கள் அனைவரும் ஒரு கணினியை வைத்துக்கொண்டு அடிதடி சண்டை போட்டுக்கொண்டு... பாவமாக இருந்தது. என் வீட்டிலேயே மூன்று கணினிகள் உள்ளன!

கம்ப்யூட்டர் புரோகிராமிங் என்பது ஏதோ கணினியியல் ஆசாமிகளுக்கானது என்ற எண்ணம் மாறவேண்டும். தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் கணினி புரோகிராமிங் கற்றுத்தரவேண்டும். String processing பற்றியும் யூனிகோட் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் மட்டும் அவர்களிடம் சொன்னேன். நாகராஜன் ஒரு XML கோப்பை எடுத்துக் காட்டி, அதில் தமிழிலேயே Tags இருப்பதைக் காண்பித்தபோது மாணவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. இது எச்.டி.எம்.எல் போன்றதா என்று ஒரு மாணவி வினவினார். அவருக்கு எச்.டி.எம்.எல் என்பது தெரிந்திருந்தது. பிற மாணவர்களுக்கு அதுவும் தெரிந்திருக்கவில்லை. சிறிது நேரம், எச்.டி.எம்.எல், ஜாவாஸ்கிரிப்ட், எக்ஸ்.எம்.எல், எஸ்.கியூ.எல், பி.எச்.பி போன்றவற்றைப் பற்றி அவர்களிடம் பேசினேன்.

நம் கல்வி நிறுவனங்களில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்துடன் நானும் நாகராஜனும் திரும்பிவந்தோம்.

விரைவில் இந்த மென்பொருளின் சுட்டியை உங்களுக்குத் தருகிறேன்.

Friday, April 16, 2010

கேபிள் போட்டி

மத்திய ரசாயனத் துறை அமைச்சர் (அதாங்க, அழகிரி) அவர்களது புதல்வர் தயாநிதி அழகிரி சென்னையில் கேபிள் வழியாக தொலைக்காட்சி சிக்னல்களைத் தரும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். தமிழ்ப் புத்தாண்டு அன்று கோலாகலமாகக் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம்.

இதுநாள்வரையில் சென்னையில் தான் வைத்ததுதான் சட்டம் என்று கோலோச்சி வந்த எஸ்.சி.வி-க்கு கொஞ்சம் அல்லு பெயரும் என்பது பொதுமக்களுக்கு நல்ல செய்திதான். கருணாநிதி - மாறன்கள் பனிப்போர் சமயத்தில் அரசு கேபிள் என்றொரு கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு அது இப்போது உடைப்பில் போடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஹாத்வே போன்றவர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விரட்டப்பட்டனர். பின் பனிப்போர் காலத்தில் மீண்டும் உள்ளே நுழைய முயற்சி செய்த ஹாத்வே மீண்டும் ஓடிப்போனது.

இப்போது போட்டி குடும்பத்தின் உள்ளிருந்தே வந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது. அடாவடிக்கு பதில், அடாவடியாகவே இருக்கும்.

சினிமாத்துறையில் தயாநிதி அழகிரி, மாறன் பிரதர்ஸ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தத்தம் எல்லைகளை வரையறுத்துக்கொண்டிருப்பதுபோல, கேபிள் டிவி பிசினஸிலும் அப்படியே ஆகுக, ததாஸ்து! விரைவில் உதயநிதி ஸ்டாலின் பூஜை போட்டு ஆரம்பிக்க இருக்கும் கேபிள் டிவி விநியோக நிறுவனத்தை வாழ்த்தி வணங்கி மகிழும் கோபாலபுரம் பத்ரி சேஷாத்ரி...

Tuesday, April 13, 2010

சட்ட மேலவை

திமுக தலைமையிலான தமிழக அரசு சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவரும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் கொண்டுவந்து வாக்கெடுப்பில் வென்றுள்ளது. இந்த அரசின் காலம் முடிவதற்குள் மத்திய அரசின்/குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று மேலவையைக் கொண்டுவந்தால்தான் உண்டு. (அல்லது வரும் தேர்தலிலும் தொடர்ந்து திமுகவே ஜெயிக்கவேண்டும்.)

1986-ல் கருணாநிதிமீதான வெறுப்பால் எம்.ஜி.ஆர் மேலவையை அழித்தார். வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவைக்கான நியமன உறுப்பினர் ஆக்கியதில் நடந்த குளறுபடிகளும் இதற்கு ஒரு காரணம்.

ஆனால் ஒருவிதத்தில் மேலவை இருந்தால் நல்லதுதான் என்று தோன்றுகிறது. புதிய திட்டத்தில் 63 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதனால் அரசுக்கு அதிகச் செலவு. இந்த உறுப்பினர்களுக்கும் பஞ்சப்படி, பயணப்படி, சம்பளம் எல்லாம் பேரவை மாதிரியே அளிக்கவேண்டும். இதிலும் கட்சி ஜிஞ்சாக்கள், விசுவாசிகள் ஆகியோர் பேரவைக்கான தேர்தலில் தோல்வியுற்றால் இங்கே திணிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. போகட்டும். அதையும் மீறி இங்கே சில மாறுதல்களைக் காணமுடியும்.

உதாரணமாக பஞ்சாயத்துகள் ஒன்றுசேர்ந்து 21 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். இதை மிக முக்கியமான போக்காக நான் பார்க்கிறேன். அடுத்து பட்டதாரிகளுக்கான இடங்கள் போன்றவை. இவற்றை பட்டதாரிகள் என்பதிலிருந்து மாற்றி, தொழில்துறைக்கான இடங்கள் என்றாக்கலாம். அதாவது சிறு வியாபாரிகள், பெரும் தொழிலகங்கள், கைத்தறித் துறை, விவசாயத்துறை போன்றவை. இதனால் தொழில்துறையைச் சேர்ந்த சிலர் உறுப்பினராக முடியும். ஆசிரியர்கள் சிலர் உறுப்பினர் ஆகமுடியும். தொழிற்சங்கங்களுக்கு என்று சில இடங்களை ஒதுக்கலாம். (கம்யூனிஸ்ட்களைத் திருப்திப்படுத்த!)

இவர்கள் கல்வி, தொழில், விவசாயம் போன்றவற்றைப் பற்ற் ஒரு விவாதத்தை சட்டமன்றம் என்ற களத்தில் கொண்டுவரமுடியும். மற்றபடி இன்றைய சட்டப் பேரவையில் நடக்கும் விவாதங்கள் அனைத்துமே தம் தலைவரைத் துதிபாடுதலும் எதிர்க்கட்சித் தலைவரைத் தூற்றுவதையுமே முக்கியமாகக் கருதுகின்றன.

சட்ட மேலவை (ஏன், பேரவைகூட) அமெரிக்க பாணியில் குறிப்பிட்ட தொழில்துறையைச் சேர்ந்தவர்களைக் கூப்பிட்டு பொது விசாரணையைச் செய்யமுடியும். இதற்கான முன்னுதாரணங்கள் தமிழக சட்டமன்றத்திலேயே நடந்துள்ளன. உதாரணத்துக்கு இப்போது காலாவதியான மருந்து தொடர்பாக பெரும் குழப்பம் மாநிலத்தில் நடந்துவருகிறது. இது தொடர்பாக அரசு வெள்ளையறிக்கை வெளியிடவேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கவும் இல்லை; அரசும் அதுமாதிரி ஒன்றை வெளியிடவேண்டும் என்று நினைக்கவும் இல்லை.

ஆனால் சட்ட மேலவை ஓரளவுக்கு கட்சிக் கட்டுப்பாடு என்றில்லாமல் இருந்தால், சில என்.ஜி.ஓக்கள், நிபுணர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரை அழைத்து குறுக்கு விசாரணை செய்து ஏன் இந்தமாதிரி நடந்தது என்று கண்டறியலாம். அப்படிச் செய்யும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். செய்தித்தாள்களால் வெளியிடப்படும்.

இப்போதைய சட்டப் பேரவையில் நடக்கும் தரமற்ற விவாதங்களுக்கு மாற்றாக சட்ட மேலவை இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படியே நடக்காவிட்டால் வருத்தம் இருக்கும். தமிழக அரசின் செலவில் சுமார் 20-30 கோடி ரூபாய் அதிகமாகலாம். அது ஒன்றும் பெரிய தொகை கிடையாது. எனவே நல்லது நட்கக ஏதோ வாய்ப்பு உள்ளது என்பதால் மேலவை வருவதை நான் வரவேற்கிறேன்.

Friday, April 09, 2010

அமர சித்திரக் கதைகள் - இரண்டாவது செட்

முதல் நான்கு புத்தகங்களை அடுத்து மேலும் நான்கு புத்தகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளன.

  

  

அமர சித்திரக் கதைகள் - முதல் செட் - தமிழில்
.

Sunday, April 04, 2010

பட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா?

"The practice of wearing a traditional coloured gown during a convocation ceremony at any university is a barbaric colonial practice. Why can't we wear simple dress instead of these gowns."

பட்டமளிப்பு விழாவின்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், திடீரென கவுனைக் கழற்றி எறிந்துவிட்டு, ‘இது ஒரு காட்டுமிராண்டி காலனி ஆதிக்க வழக்கம்’ என்று சொல்லியிருக்கிறார்.

காட்டுமிராண்டி வழக்கம் என்று சொல்லியிருக்கக்கூடாது என்பது பலரது கருத்து. ஆனால் அடிப்படையில் ஜெயராம் ரமேஷ் சொல்லவந்தது, நாம் அனைவரும் பிரிட்டிஷ் நடைமுறையை, அவர்கள் பட்டம் அளிக்கும்போது நடந்துகொள்ளும் விதத்தை அப்படியே காப்பி அடித்து வருகிறோம் என்பதே.

***

சுமார் 20 வருடங்களுக்குமுன் நான் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழா நினைவுக்கு வருகிறது. ஒரு இனம்புரியாத படபடப்பு. ஒவ்வொரு பட்டத்துக்கும் என்று தனித்தனி வண்ண அங்கிகள். முன்னமே பணம் கட்டி, குறிப்பிட்ட நாள் அன்று அதனை சட்டை மேல் அணிந்துகொண்டேன். அதன் மணம் சகிக்கவில்லை. வியர்வை வேறு.


முதலில் ஐஐடி டைரக்டர், சேர்மன் என்று பலரும் பிளேடு போட்டுத் தள்ளினார்கள். இத்தனை பிஎச்டி, இத்தனை எம்.டெக், இத்தனை பி.டெக் என்று ஒரே புள்ளிவிவரக் குவியல். அடுத்து, கான்வொகேஷன் அட்ரஸ் என்று சிறப்பு விருந்தினர் பேசவேண்டும். அப்போது சிறப்பு விருந்தினராக வந்தவர் அப்துல் கலாம். (அவர் அவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்கவில்லை அப்போது.) ஜெயராம் ரமேஷ் போல அங்கியைக் கழற்றி விசிறவில்லை. மாறாக ‘எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனமு’ என்று ஆரம்பித்தார். கைத்தட்டல் பலமாக இருந்தது. அதன்பிறகு அவர் என்ன பேசினார் என்று ஒரு வரிகூட ஞாபகம் இல்லை.

இப்படி எல்லோரும் பேசி முடிந்து, முதலில் பிஎச்டி பட்டங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் சில கௌரவ டாக்டர் பட்டங்களும் இருந்தன. பின்னர் முதுநிலைப் பட்டங்கள். கடைசியாக எங்களுக்கு.

நான் பட்டம் பெற ஒருமுறையும், பிராஞ்சில் முதல் மாணவனாக வந்ததால் பதக்கம் பெற ஒருமுறையும் மேடை ஏறவேண்டி இருந்தது. எல்லாம் முடிந்துவிட்டது என்று கிளம்பும் நேரம் அட்மின் ஊழியர் ஒருவர் என் பெயரைச் சொல்லி விசாரித்து, என் கையில் இருந்த பட்டச் சான்றிதழைப் பிடுங்கிக்கொண்டார்! அதில் ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டதாம். ஆனால் மேடையில் கொடுக்கவேண்டுமே என்பதால் அதை அப்படியே கொடுத்துவிட்டார்களாம். அடுத்த நாள் அலுவலகம் வந்து புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொண்டு செல்லுமாறு சொன்னார்கள்.

உண்மையில் இந்தச் சான்றிதழ் பெரும் பிரச்னையாக ஆகிப்போனது. இரண்டு மூன்று முறை ஏதாவ்து சிக்கல். சேர்மன் எம்.எஸ்.சுவாமிநாதன் இடையில் வெளிநாடு சென்றுவிட்டார். அவரது கையெழுத்து வேண்டியிருந்தது. நடுவில் ஒருமுறை எல்லாம் சரியாக வந்தபின்னும் லாமினேஷன் செய்து வெட்டும்போது குறுக்கே வெட்டிவிட்டது. கடைசியில் நொந்துபோன ரெஜிஸ்திரார், ‘நீ கிளம்பி அமெரிக்கா போ, நான் நேராக உன் பல்கலைக்கழகத்துக்கே அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.

***

ஜெயராம் ரமேஷின் கதைக்கு வருவோம். இந்தியா இந்தப் பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடும் என்று நான் நினைக்கவில்லை. பாரம்பரியம் என்று வரும்போது அதில் உள்ள சில பகட்டுகள் நமக்குப் பிடிக்கின்றன. அந்த ஒரு தினத்தில், பட்டம் வாங்குபவர்கள் தனித்துத் தெரியவேண்டும் என்று நினைப்பார்கள். தலைக்கு மேல் தொங்கும் குஞ்சலம் வைத்த பட்டைத் தொப்பியோ, கன்னாபின்னாவென்று இருக்கும் அங்கியோ, ஏதோ ஒன்று வேண்டும். மாறாக இந்திய முறையில் நாமாக எதையாவது உருவாக்காதவரையில் பிரிட்டிஷ் வழக்கமான அங்கியும் குல்லாயும் இருந்தே தீரும்.

மாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாமி

தமிழ் பாரம்பரியம் குழுமம் சார்பாக நேற்று தக்கர் பாபா வித்யாலயா, வினோபா பாவே அரங்கில் நடைபெற்ற மாதாந்திர நிகழ்வில், முனைவர் பாலுசாமியின் அற்புதமான சொற்பொழிவு நடைபெற்றது.

அர்ச்சுனன் தபசு என்றும் பகீரதன் தபசு என்றும் அழைக்கப்படும் மாமல்லபுரத்தின் அற்புதமான வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதி பற்றி பாலுசாமி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த அருமையான ஆராய்ச்சியை அவர் மடைதிறந்த வெள்ளம் போல அழகு தமிழில் பேசினார். அரங்கில் இருந்த சுமார் 100 பேர் அப்படியே ஆடாது அசையாது 2 மணி நேரங்கள் உட்கார்ந்திருந்தனர்.

இதைப்பற்றி விவரமாகப் பின்னர் எழுதுவேன். இப்போது வீடியோ வடிவில் அதனைக் காணலாம்.


Watch Prof. S. Balusamy on The Great Penance Panel at Mamallapuram (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Prof. S. Balusamy on The Great Penance Panel at Mamallapuram (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

தொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)

சில மாதங்களுக்கு முன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் தொடர்பான ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. பேரா. தெய்வசுந்தரம் தலைமையிலான Computational Linguistics துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இது. மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான நிதி உதவியைச் செய்திருந்தது.

நிறைவு நாள் அன்று அவ்வை நடராஜன் தொல்காப்பியம் பற்றிய முக்கியமான சொற்பொழிவை நிகழ்த்தினார். அதே அமர்வில்தான் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் திருவாசகமும் உரை நிகழ்த்தினார். அது சீரியஸ் நிகழ்வில் கொஞ்சம் நகைச்சுவை அம்சம் கொண்டதாக இருந்தது. அதனால் அந்த வீடியோவை இங்கு சேர்க்கவில்லை. கீழே அவ்வை நடராஜனின் உரை பட வடிவில். (அவ்வை நடராஜனின் பல சொற்பொழிவுகளையும் ஒளி/ஒலி வடிவில் சேகரித்து இணையத்தில் ஏற்றுவது வரும் காலத் தமிழ் மாணவர்களுக்கு நல்ல பலன் தரும்.)


Watch Avvai Natarajan on Tholkappiyam in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

Saturday, April 03, 2010

உடைந்த கோயில், அப்புறப்படுத்தப்பட்ட சிலைகள்

சென்ற வாரம் அவ்வை சண்முகம் (லாயிட்ஸ்) சாலையில் உள்ள சாலையோரக் கோயில் ஒன்று உடைக்கப்பட்டது பற்றி எழுதியிருந்தேன்.

இன்று அதிகாலை கடற்கரைக்குச் சென்று நடந்துவிட்டுத் திரும்பினேன். நான் செல்லும்போது, சுமார் ஐந்து மணி அளவில், சாலை அமைதியாகவே இருந்தது. தெருவில் சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர். சுமார் 7 மணிக்கு நான் திரும்பி வந்தபோது தெருவில் கூட்டம். காவலர்கள். சிலைகள் இருந்த இடத்தில் ஒன்றும் காணோம்.


உடனே அருகில் இருந்த மக்களிடம் பேசினேன்.

காவலர்களும் மாநகராட்சி ஊழியர்களும் அதிகாலை வந்து தெருவில் இருப்பவர்களை அடித்து விரட்டிவிட்டு, சிலைகளைப் பெயர்த்து வண்டியில் போட்டு எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். சிலைகளை ஒன்றும் செய்யமாட்டோம் என்று உறுதி கொடுக்கப்பட்டது என்றும் ஆனாலும் இன்று காலை சிலைகள் பெயர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் சொன்னார்கள். மக்கள் முதலமைச்சர் வீட்டுக்குப் போய் கேள்வி கேட்டுள்ளனர். ஆனால் அதிகம் பேசினால், அவர்களும் காவலர்களால் தூக்கி எடுத்துச் செல்லப்படுவர் என்றதும் மக்கள் திரும்பி வந்துவிட்டனர். மீதியை அவர்களிடமிருந்தே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

Friday, April 02, 2010

எழுத்தாளர்கள், மொழிமாற்றுனர்கள் தேவை

NHM நிறுவனத்தின் பல்வேறு இம்பிரிண்டுகளுக்கு கீழ்க்கண்ட திறமை உள்ளவர்கள் (பகுதி நேரம் - ஃப்ரீலான்ஸ்)தேவைப்படுகிறார்கள்:

1. ஆங்கிலத்தில் non-fiction புத்தகங்கள் எழுதவிரும்புபவர்கள்
2. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்ற விரும்புபவர்கள்
3. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்ற விரும்புபவர்கள்

மொழிமாற்றல் என்றால் புத்தகங்களை டிரான்ஸ்லேட் செய்தல். பக்கத்துக்கு இவ்வளவு ரூபாய் என்று professional மொழிமாற்றம் வேலை செய்பவர்களுக்குக் கட்டுப்படியாகாது! நிச்சயம் சன்மானம் உண்டு. அது ராயல்டியாகவோ அல்லது ஒரு வேலைக்கு இவ்வளவு என்பதாகவோ இருக்கலாம்.

உடனடியாகத் தொடர்புகொள்ளவும். எனக்கு அஞ்சல் அனுப்பாமல் கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்: vaidehi@nhm.in

.

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி

(தமிழ் விக்கிபீடியா அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க...)

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி

உ லகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு - தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான “விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள்” என்ற போட்டியை நடத்துகிறது.

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு:

தமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது இணையத்தில் இயங்கும் தகவல் களஞ்சியத் திட்டம். இத்திட்டத்துக்கு ஏற்ற தகவல் பக்கங்களை எழுதும் போட்டியைத் தமிழக அரசு நடத்துகிறது.

கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயக்குநர் மருத்துவம் (பிசியோதெரப்பி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல தொழில்நுட்பப் பயிலகம் என அனைத்துத் துறைகளைச் சார்ந்த தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

விதிமுறைகள்:

தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமையவேண்டும்.

தகவல் பக்கங்களை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் தமிழில் எழுத வேண்டும். சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமையவேண்டும்.

தகவல் பக்கங்களை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நிறைவு செய்து http://tamilint2010.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனுப்பவேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும்.

பரிசுகள்

இப்போட்டியில் வெல்லும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன.

மேலும் விவரங்களுக்கு

மேலும் விவரங்களுக்கு, http://ta.wikipedia.org/ என்ற இணையதளத்தைப் பார்த்து வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

பதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு

22 ஏப்ரல் 2010 அன்று மாலை 6 மணிக்கு தேவநேயப் பாவாணர் நூலக வளாகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழ்.

அஜந்தா ஓவியங்கள் பற்றி பேரா. சுவாமிநாதன் (வீடியோ)

நவம்பர் 2009-ல் ஒரு நாள் பேரா. சுவாமிநாதன் வீடியோ புரொஜெக்டரை எடுத்துக்கொண்டு மைலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலுக்கு எதிராக இருக்கும் ஒரு தெருவுக்கு வரச் சொன்னார். அஜந்தா ஓவியங்கள் பற்றி ஒரு பிரசெண்டேஷன் செய்ய இருப்பதாகச் சொன்னார். போன இடம் எஸ். ராஜத்தின் வீடு. ராஜத்துக்கு 92 வயது அப்போது என்று நினைக்கிறேன். (அடுத்த சில மாதங்களில் அவர் காலமானார்.) ராஜம் சிறந்த ஓவியர், இசைக் கலைஞர், சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ராஜம் அஜந்தா பாணியில் சில ஓவியங்களை வரைந்துள்ளார். கல்கி இதழில் ராஜத்தின் மறைவை ஒட்டி வெளியான அஞ்சலிக் கட்டுரையில் ராஜம் வரைந்த அஜந்தா பாணி ஓவியம் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அஜந்தா சென்று பார்த்தபின் ஆறு மாதங்களுக்கு கையில் தூரிகையைத் தொடவே முடியவில்லை என்றார் ராஜம்.

மைலாப்பூரில் பழைய மாடல் வீட்டில் சுவரில் ஓர் இடத்தைத் திரையாகக் கொண்டு புரொஜெக்டரை வைத்தேன். அங்கே உட்கார இடம் அதிகம் இல்லை என்றாலும் சுமார் 25 பேர் கிடைத்த இடத்தில் எல்லாம் உட்கார்ந்திருந்தனர். தரையில், மாடிப்படியில்... வீடியோ கேமராவை வைக்க இடமே கிடையாது. நான் என்னுடைய Flip கேமராவைக் கொண்டு சென்றிருந்தேன். மற்றொருவர் பெரிய வீடியோ கேமராவைக் கொண்டுவந்திருந்தார். ஆனால் அங்கே குழுமியிருந்த மக்கள், சுவரில் பிரசெண்டேஷன் படங்கள் நன்றாகத் தெரியவேண்டும் என்றால் விளக்கு கூடாது என்று சொல்லிவிட்டனர். அதனால் வீடியோவின் தரம் சுமார்தான். பேசுபவரின் முகம் தெரியாது.

இடை இடையே தெருவில் ஓடும் வண்டிகளின் சத்தம், நடுவில் குக்கர் விசில் சத்தம் எல்லாமே கேட்கும். வேறு வழியில்லை.

இவை எல்லாவற்றையும் மீறி, 1 மணி 45 நிமிடங்கள் அமைதியாகப் பார்த்தால், அஜந்தாவைப் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள உதவும். இத்துடன் ஜனவரி, பிப்ரவரி 2010 மாத தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளின் வீடியோக்களையும் சேர்த்துப் பாருங்கள்.


Watch Prof. Swaminathan on Ajanta Paintings @ S. Rajam's house (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Prof. Swaminathan on Ajanta Paintings @ S. Rajam's house (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

அந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா?

சொல்வனம் இதழுக்காக நான் எழுதிய கட்டுரை.

Thursday, April 01, 2010

தமிழ் பாரம்பரியம்: விலையனூர் ராமச்சந்திரன் - நரம்பியலும் கலை மீதான பேரார்வமும்

தமிழ் பாரம்பரியம் குழுமத்தின் நவம்பர் 2009 நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார் விலையனூர் ராமச்சந்திரன். இவர் நன்கு அறியப்பட்ட மருத்துவர், நரம்பியல் துறை வல்லுனர், முனைவர், பேராசிரியர். மூளை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். மனிதர்கள் கலையை ரசிப்பது ஏன், எப்படி என்பது பற்றிய தன் கருத்துகளை ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டார்.

அன்று கொட்டும் மழை. அரங்கம் சுமாரானது. ஆங்காங்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. மைக்ரோஃபோன் சரியாக வேலை செய்யவில்லை. அவரது மேகிண்டாஷ் கணினியை புரொஜெக்டருடன் இணைப்பதில் சிரமம் இருந்தது. ஆனால், அனைத்தையும் தாண்டி அவரது பேச்சு அரங்கு நிறைந்திருந்த கூட்டத்தைக் கட்டிப்போட்டது.

இணையத்தில் ஏற்கெனவே இருக்கும் அவரது முந்தைய பேச்சுகளைப் பின்பற்றியதுதான் இதுவும்.

[கடந்த ஐந்து மாதங்களாக இந்தப் பேச்சின் வீடியோவை வலையேற்ற நான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. இன்றுதான் வாய்த்துள்ளது!]


Watch Vilayanur Ramachandran on Neurology and a Passion for Arts (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Vilayanur Ramachandran on Neurology and a Passion for Arts (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com