Sunday, August 31, 2008

விஷ்ணு என்னும் சொல்லின் வேர்

‘விஷ்ணு' என்ற சொல் எங்கிருந்து தோன்றியது என்பதற்கான ஊகங்கள் பல. எம்.ப்ளூம்ஃபீல்டும் எச்.கோல்டன்பர்கும் இதன் பொருளை, ‘உலகை அல்லது பூமிப் பகுதியைச் சுற்றிக் கடத்தல்' என்பதாக விளக்குகிறார்கள். எச்.குண்டெர்ட்டும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார். த்.ப்லாக், அந்தச் சொல் ஒரு பறவையைக் குறிக்கிறது என்கிறார். கே.எஃப்.ஜொஹான்ஸன், அது ‘பெரிய பறவை' அல்லது ‘சூரியப் பறவை' என்பதைக் குறிக்கிறது என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். ஹாப்கின்ஸ், அந்தப் பெயரின் வேரில் உள்ள ‘வி' என்பது ‘போகுதல், அவசரம், இயங்குதல்' ஆகியவற்றைக் குறிப்பதால், விஷ்ணு ‘நகர்தலின் கடவுள்' என்கிறார். மெக்டானல், ‘விஷ்ணு' என்பது ‘சூரியனின் இயக்கம்' என்கிறார். ஜே.ப்ரிசைலுஸ்கி, இந்தச் சொல், ஆரியத்துக்கு முந்தைய சொல் என்றும், ஆரியமல்லாச் சொல்லாகிய ‘விண்' (வானம்) என்பதுடன் இணைத்துப் பார்க்கவேண்டியது என்றும் சொல்கிறார். புராணங்களில் இந்தச் சொல்லுக்கு ‘(பிரபஞ்சம்) எங்கும் பரவியிருப்பவன்' என்று பொருள் வருகிறது.

இந்தச் சொல்லின் சரியான ஆதாரத்தைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றாலும் அனைத்துக் கோட்பாடுகளுமே ‘விஷ்ணு' என்பது வெளி தொடர்பான ‘நகர்தல்' என்பதைக் குறிப்பிடுகிறது என்பதை ஒப்புக்கொள்கின்றன. தமிழில் ‘இறைவன்' என்ற சொல் ‘விஷ்ணு'வுக்கு ஒப்பான சொல். ‘இறு' என்றால் ‘பரவுதல்'. நற்றிணை இறைவணக்கப் பாடலில் ‘எங்கும் பரவியிருக்கும் தன்மை'யுடன், விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரத்துடன் ஒப்பிட்டு ‘சூரியத் தன்மை'யும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழின் பழைமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் விஷ்ணு, காட்டுப் பகுதியின் (மேய்ச்சல்) கடவுளாகக் குறிப்பிடப்படுகிறார். இங்கு விஷ்ணு ‘மேயோன்' என்று அழைக்கப்படுகிறார். நச்சினார்க்கினியர், ‘மேயோன்' என்ற சொல்லை ‘கடல் நிறத்தை உடையவன்' என்று விளக்குகிறார். பதிற்றுப்பத்தின் ஏழாம் பகுதியின் பதிகத்தில் விஷ்ணு ‘மாய வண்ணன்' என்று அழைக்கப்படும்போது, அவரது வண்ணம் குறிப்பிடப்படுகிறது. ரிக் வேதம் ‘விஷ்ணு'வை ‘பசுக்களைக் காப்பவர்' என்று விளக்குகிறது. பவுதாயன தர்ம சூத்திரத்தில் அவர் ‘கோவிந்தா' என்றும் ‘தாமோதரா' என்றும் அழைக்கப்படுகிறார். ‘தாமோதரா' என்றால் கயிற்றால் வயிற்றில் கட்டப்பட்டவர். இந்த இரண்டு சொற்களுமே அவரது மேய்ச்சல் நிலப் பின்னணியைக் குறிப்பிடுகின்றன. இது தமிழ் பாரம்பரியத்தில் அவர் மேய்ச்சல் நிலத் தலைவராக இருப்பதுடன் ஒத்துப்போகிறது.

ஆக, இந்தச் சொல்லின் வேர் முற்றிலும் ஆரியமாக இருப்பதாகக் கருதமுடியாது. ப்ரிசைலுஸ்கியின் இந்தச் சொல் ஆரியத்துக்கு முந்தைய ஊற்றைக் கொண்டுள்ளது என்பது, சுனீதி குமார் சாட்டர்ஜியின் கருத்துகளால் மேலும் வலுவாகிறது: “விஷ்ணு என்பது சூரியக் கடவுளின் உருவாக்கம், இந்தப் பிரபஞ்சத்தைத் தனது கதிர்களால் வியாபித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, திராவிடக் கருத்தான வான் கடவுள், நீல நிறத்தவர், ஏனெனில் வான் நீலமானது என்பதுமாகும்.” ரூபன் ஒருபடி மேலே சென்று, “விஷ்ணு வேதத்துக்குப் பிந்தைய காலத்தில் பெரும் கடவுளாக ஆனதற்குக் காரணம் அவர் அதற்கு முன்னரேயே ஆரியர்களுக்கு முந்தைய இந்தியாவில் முக்கியமான கடவுளாக இருந்தார்” என்கிறார். வேதக் கடவுள்களின் கருத்துருவாக்கத்தில் ஆரியத்துக்கு முந்தைய அல்லது ஆரியமல்லாத பகுதிகளை தெளிவாகப் பிரித்துக்காட்ட முடியாவிட்டாலும்கூட, வேதக் கடவுள்களின் தெய்வீகத்தில் பழங்குடியினரின் தொன்மையும் கலந்துள்ளது என்பதை வெறும் ஊகம் என்று மட்டுமே ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.

[இது என்னோட எழுத்து இல்லைங்க. ஒரு பிரபல எழுத்தாளரின் பிஎச்.டி தீசிஸின் முதல் மூன்று பத்தி்களின் (என்னுடைய) தமிழாக்கம். அந்த எழுத்தாளர் யார் என்று கண்டுபிடியுங்கள்.]

Friday, August 29, 2008

காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள்

காந்தி தனது அரசியல் போராட்டங்களையும் அறப் போராட்டங்களாக, ஆன்மிகப் போராட்டங்களாகப் பார்த்தார். இதுதான் அவரது அடுத்த கட்ட சீடர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. நேரு ஒரு நாத்திகர். படேலோ, ராஜாஜியோ, பிரசாதோ, ஆசாதோ காந்தியின் ஆன்மிக நோக்கங்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டவர்கள் அல்லர்.

காந்தியின் ஆன்மிகம் இன்னதுதான் என்று விளக்கிச் சொல்லும் திறன் எனக்கு இப்போது இல்லை.

அவர் ஒரு நாத்திகராக ஆரம்பித்தார் என்று புரிகிறது. ஆனால் அவர் இங்கிலாந்து சென்றபோது கிறித்துவ மதத்துக்கு அவரை மாற்ற பலர் அப்போது முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவிலும் பலர் அவரை கிறித்துவ மதத்துக்கு மாற்ற முயன்றுள்ளனர். ஆனால் தன் மதமே தனக்குச் சரியாகப் புரியாத கட்டத்தில் என் மதம் மாறவேண்டும் என்று காந்தி மறுத்துவிட்டு, தன் மத நூல்களை ஆழ்ந்து கற்க விரும்பியுள்ளார். பகவத் கீதை, பைபிள், குர்-ஆன் ஆகியவற்றை அவர் அப்போதுதான் படித்துள்ளார். பின்னர் காந்தி கீதையால் பெரிதும் கவரப்பட்டார். ஆனால் கீதையின் பாரம்பரிய உரைகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தானாகவே கீதைக்கு ஓர் உரை எழுதினார்.

உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக ஒருவர் வைத்துக்கொண்டால் அதனால் ஆன்ம பலம் பெருகும் என்றும் அந்த ஆன்ம பலத்தின் துணையைக் கொண்டு உலகையே மாற்றலாம் என்றும் காந்தி தீவிரமாக நம்பினார்.

உடலைத் தூய்மையாக வைத்திருப்பது என்றால் குடலைத் தூய்மையாக வைத்திருப்பது. உணவுப் பழக்க வழக்கங்களில் காந்தி நிறைய மாற்றங்கள் செய்துபார்த்தார். எளிதாக மலம் கழிக்க ஏதுவான உணவுகளாக பல சோதனைகளைச் செய்திருக்கிறார். அதேபோல் குடலைத் தூய்மையாக வைத்திருக்க அவ்வப்போது உப்பு நீர் எனிமா கொடுத்துக்கொள்வது அவரது வழக்கம். அத்துடன் தனக்குப் பிடித்தமானவர்களுக்கு எனிமா கொடுப்பது காந்தியின் பழக்கம் என்று லூயி ஃபிஷர் எழுதுகிறார். காந்தியிடம் எனிமா பெறுவது என்றால் அவரிடம் தீட்சை வாங்குவதற்கு சமம்.

குடல் தூய்மை போல, மன மலத்தைத் துடைப்பதும் காந்திக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கிறது. காந்தியைப் பொருத்தமட்டில் அவர் எளிதாக பொய் பேசுவதை வென்றுவிட்டார். காசு, பணம், நகை மீதான ஆசைகளையும் அவர் எளிதாக வென்றுவிட்டார். தன் சொத்து அத்தனையும் தன் பிள்ளைகளுக்கோ மனைவிக்கோ கிடையாது என்று ஆசிரமத்துக்கு எழுதிவைக்கும் மனோபாவம் அவருக்கு இருந்தது. கஸ்தூர்பாவுடன் பண விஷயத்தில் பலமுறை சண்டை வந்திருக்கிறது. தனக்குக் கிடைத்த பரிசுகளையும் தன் குடும்பம் பயன்படுத்தக்கூடாது என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். சொத்தின் மீது ஆசையில்லை. பொய் சொல்வதில்லை. பிறர் கெடவேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியானால் இவரிடம் வேறென்ன கெட்ட பழக்கங்கள் இருக்கக்கூடும்?

செக்ஸ் ஆசை. பெண்ணின் உடல்மீதான ஆசை.

தன் மனைவியுடன் உறவு கொண்டிருக்கும் நேரத்தில் தனது தந்தை உயிர் பிரிந்தது காந்தியின் மனத்தை வாட்டிக்கொண்டே இருந்தது. ஆனால் அப்போது காந்தி மகாத்மா ஆகியிருக்கவில்லை. சாதாரணர்தான். பின்னர் காந்தி பாரிஸ்டர் படிப்புக்கு இங்கிலாந்து சென்றபோது அங்குள்ள ஆங்கிலேயப் பெண்களிடம் பழகும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. யாரிடமும் தான் ஏற்கெனவே மணமானவன் என்ற விஷயத்தை அவர் சொல்லவில்லை. ஓரிரு முறை சில பெண்களிடம் நெருக்கமாக இருந்திருக்கும் வேளையில் அதிலிருந்து “தப்பித்து” விட்டதாக எழுதியிருக்கிறார். மேலும் அவர் தனது தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்திருந்தார். பிற பெண்களைப் பார்க்கமாட்டேன் என்று.

காந்திக்கு இங்கிலாந்து செல்லும் முன் ஒரு குழந்தை. இந்தியா திரும்பியபின் ஒரு குழந்தை. தென்னாப்பிரிக்கா சென்று இரு குழந்தைகள் பிறந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் காந்தி பிரம்மச்சர்யம் - உடலுறவு இல்லாத நிலை என்பதை நோக்கிச் சென்றுள்ளார். பொதுவாகவே இந்திய முறையில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்று நான்கு அடுக்குகள் உள்ளன. காந்தி இருந்த நிலை வானப்பிரஸ்தம் என்றுதான் சொல்லவேண்டும்.

காந்திக்கு செயல் வேறு, மனம் வேறு என்றில்லை. செயலால் அவர் பாலுணர்ச்சி இல்லாதவராக இருந்தாலும் அவரது மனம் அலைபாய்ந்துள்ளது. பல பெண்கள் அவரால் கவரப்பட்டனர். அவரும் சில பெண்களால் கவரப்பட்டிருக்கலாம். ஆனால் தென்னாப்பிரிக்காவில் அவர் இருந்த காலகட்டத்தில் போராட்டமே குறியாக இருந்ததால் அவர் மனம் வேறு பக்கம் சாயவில்லை.

இந்தியா வந்தபின் காந்திக்கு மெடலைன் ஸ்லேட் என்ற பெண் (மீரா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டவர்) சீடராக வாய்த்தார். ஸ்லேடுடனான உறவு மிகவும் சிக்கலானது. காந்தியின் ஆஸ்ரமத்தில் பல பெண்கள் தங்கியிருந்தனர். நான்கு குழந்தைகள் பெற்ற, 50 வயதுக்கும் மேலான காந்தி உடலுறவற்ற நிலையை மணமான, மணமாகாத இளம் பெண்களிடமும் பரப்பியவண்ணம் இருந்தார். அப்படிப்பட்ட ஒரு சத்தியப் பிரமாணத்தைத்தான் ஜெயபிரகாஷ் நாராயணின் மனைவி பிரபாவதியும் எடுத்துக்கொண்டார். மேலும் பலரையும் காந்தி நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக வற்புறுத்தினார்.

இதற்கிடையில் காந்தி வங்காளத்தைச் சேர்ந்த தாகூரின் உறவுக்காரப் பெண்ணான சரளாதேவி சவுதராணி என்ற பெண்மீது மையல் கொண்டார். இந்தப் பெண், பஞ்சாபைச் சேர்ந்த ராம்புஜ் சவுதுரி என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருந்தார். ரவுலட் சட்டத்தை எதிர்த்து, ஜாலியன் வாலா பாக் படுகொலைகளை எதிர்த்துப் போராடிய பலர் சிறையில் அடைக்கப்பட்டபோது ராம்புஜ்ஜும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

காந்தி பஞ்சாப் சென்றபோது சரளாதேவியின் வீட்டில் தங்கினார். அங்கு அவர் இருந்த காலத்தில் சரளாதேவியுடனான உறவு நெருக்கமானது. சரளாதேவியைத் திருமணம் செய்வது என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் அந்தத் திருமணம் “உடல் அள்விலானதல்ல, தூய்மையான மன அளவிலானது” என்பது காந்தியின் கருத்து. ஆனால் ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி முதற்கொண்டு பலரும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இதனால் சுதந்தரப் போராட்டத்துக்குப் பின்னடைவு ஏற்படும் என்பது இவர்களது கருத்து.

[காந்தி சரளாதேவியுடனான “spritual marriage” பற்றிப் பேசும் காலகட்டத்தில் ராம்புஜ் சிறையிலிருந்து வெளியே வந்து இறந்தும் போயிருந்தார். சரளாதேவி, ராம்புஜ் தம்பதிகளுக்கு ஒரு வளர்ந்த மகன் இருந்தான்.]

இந்தக் காலகட்டத்தில் கஸ்தூர்பா என்ன நினைத்தார் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. கடைசியாக காந்தி, சரளாதேவியை மணக்க இயலாது என்று கடிதம் எழுதினார். அன்றிலிருந்து சரளாதேவி காந்தியை எதிர்க்க, வெறுக்க ஆரம்பித்தார். காந்தி அதற்குப்பின் சரளாதேவி பற்றி எங்குமே எழுதவில்லை.

காந்தி உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாக ஆக்கியது இதற்குப் பிறகுதான். உண்ணாவிரதத்தை தன் உடலைத் தூய்மை செய்யும் ஒரு கருவியாகவே காந்தி பார்த்தார். ஆனால் மனத்தைத் தூய்மை செய்யும் கருவி என்னவாக இருக்கும் என்று அவர் தேடியுள்ளார்.

தந்த்ரா முறையில் வழிபடுபவர்களுக்கு “கருவி” ஒன்று தேவை. அந்தக் கருவி, ஓர் இளம் கன்னிப் பெண். அந்தக் கன்னிப் பெண்ணின் மூலமாக மனத்தை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது. அதன் ஒரு நோக்கம் முற்றிலும் ஆடையில்லாத ஓர் இளம்பெண்ணைப் பார்க்கும்போதும் ஒருவர் மனத்தில் எந்தவித கிளர்ச்சியும் வராதிருப்பது.

காந்தி உடல் அளவில் பிற பெண்களுடனும் தன் மனைவியுடனும் உறவு கொள்ளாவிட்டாலும், மனத்தளவில் தனக்கு அந்தக் கட்டுப்பாடு இருக்கிறதா என்று சோதிக்க விரும்பினார். அதனால் ஆஸ்ரமத்தில் தன்னைச் சுற்றி பல பெண்களை வைத்திருந்தார். அவர்களுடன் நிறையப் பேசினார். பழகினார். அவர்களைத் தனது சகோதரிகள் என்றும் தான் அவர்களுக்குத் தாய்போல என்றும் சொன்னார்.

“மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி, மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது என்று குறிப்பிடுகிறார். மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்றுதான் காந்தி பலமுறை இதைப்பற்றி கடிதங்களில் குறிப்பிடுகிறார். இவை குஜராத்தி கடிதங்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவையா அல்லது ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவையா என்று நான் ஆராயவில்லை.)

ஆனால் இந்தப் பழக்கத்தை அவரது ஆண் சீடர்களும் தொண்டர்களும் கடுமையாக எதிர்த்தனர். காந்தி அதைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால் ஓரிருமுறை காந்திக்கு “இரவு வெளிப்பாடு” (nocturnal emission என்று காந்தி இதனைக் குறிப்பிடுகிறார். விந்து வெளியேறுதல்) ஏற்பட்டது. 60 வயதைத் தாண்டியிருந்த காந்தியை இது கடுமையாக பாதித்தது. தனது மனம் தூய்மையாக இல்லையோ என்று காந்தி சந்தேகித்தார். அதனால் பெண்களிடமிருந்து பெறும் “சேவையை” காந்தி நிறுத்திவைத்தார். அவ்வப்போது சேவையைப் பெறுவதும் நிறுத்துவதுமாக இருந்தார். அவரது மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது.

ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல், காந்தி அடுத்தகட்டப் பரிசோதனைக்குச் சென்றார். தனது பேத்தியான 18 வயது மனுவுடன் ஆடையின்றி சேர்ந்து படுத்துக்கொண்டு தனது ‘மனத் தூய்மையை' நிலை நாட்டப் பார்த்தார். மனுவிடம் காந்தி தொடர்ச்சியாக பிரம்மச்சரியத்தைப் பற்றிப் பேசிவந்திருக்கிறார். கடிதத்தில் எழுதியபடி இருந்திருக்கிறார். இந்த சோதனை காந்தி நவகாளியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் போராடும் கட்டத்தில், காந்தியின் 77வது வயதில், நடந்தது.

தனது மனம் பாலுணர்ச்சியின்றித் தூய்மையாக இருந்தால் தன்னால் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் கொண்டுவரமுடியும் என்று காந்தி நம்பினார் என்றே தோன்றுகிறது.

சுற்றிலும் வன்முறை நடக்கும்போது தன்னைத்தான் காந்தி நொந்துகொண்டார்.

***

இன்று காந்தியைப் பற்றிப் படிக்கும்போது இந்த விஷயங்கள் மிகவும் நெருடுகின்றன. அன்றே நேரு முதல் பிற அனைவருக்கும் இது நெருடலாகவே இருந்தது. “கருவி”களாகப் பயன்பட்ட பெண்களின் நிலையைப் பற்றி காந்தி நினைத்துப் பார்த்தாரா என்பது தெளிவாக விளங்கவில்லை.

காந்தி தன்னைச் சுற்றி இருந்த பெண்களின் வாழ்க்கையில் நிறையவே குறுக்கிட்டார். ஒரு கட்டத்தில் மெடலைன் ஸ்லேட் காந்தியிடம் சண்டை போட்டுக்கொண்டுதான் வெளியேறிப் போனார். அதிலும் ஸ்லேடின் மண ஆசை குறுக்கிட்டது. ஸ்லேட், பிருத்விராஜ் சிங் என்ற இந்திய தேசியப் படையில் சிப்பாயாக இருந்து அஹிம்சை வழிக்கு மாறிய ஒருவரை மணம் செய்ய விரும்பினார். காந்தி இதனை ஏற்கவில்லை. பின்னர் பிருத்விராஜும் தனக்கு ஸ்லேட்மீது காதல் இல்லை என்று சொல்லிவிட்டார்.

காந்தி, ஒரு பக்கம் தன் பேத்தி மனு பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று விரும்பினார். அதே நேரம் காந்தி, தன் உதவியாளர் பியாரேலாலும் மனுவும் மணந்துகொள்ளவேண்டும் என்றும் விரும்பினார். கடைசியில் இந்தத் திருமணமும் நடக்கவில்லை.

***

காந்தி, அவராகவே சில ஆன்மிக முறைகளை வகுத்துக்கொண்டு அதன்படி நடக்க முற்பட்டார். அரசியல் இல்லாவிட்டால், அவரே ஒரு குருவாகி, இந்துமதத்தின் ஒரு புதுப் பிரிவைத் தோற்றுவித்திருக்கலாம். அல்லது முற்றிலும் புதிய மதம் ஒன்றை அவர் தோற்றுவித்திருக்கலாம்.

நல்ல வேளை. அது நடக்கவில்லை.

Monday, August 25, 2008

ரயிலில் பார்த்த “எச்சரிக்கை” விளம்பரங்கள்

ஆனந்த விகடன் வடிவமைத்து (என்று நினைக்கிறேன்), ரயில்களில் இந்த எச்சரிக்கை நோட்டீஸ்கள் காணப்படுகின்றன. சுவாரசியமாக இருந்தன.


Friday, August 22, 2008

காலம் கம்ப்யூட்டர் காலம்

[எனது கணினியில் அடைந்துகிடக்கும் பல பழைய கோப்புகளை அழிக்கும் வேலையில் உள்ளேன். கீழே உள்ள கட்டுரை ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து கேட்டு, 17-09-2005 அன்று நான் எழுதிக்கொடுத்தது. அவர்கள் ஏதோ காரணத்தால் பிரசுரிக்க இயலாது என்று சொல்லிவிட்டனர். ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்த தரம் இல்லாது இருந்திருக்கலாம். எனவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே பிரசுரமாகிறது:-) எழுத்துப் பிழைகள் இருக்கலாம். சில கருத்துப் பிழைகளும் இருக்கலாம். தகவல்கள் பழையவை. நிச்சயமாக இன்று மாறியிருக்கும்.]

கடந்த காலாண்டில் (அதாவது ஏப்ரல், மே, ஜூன் 2005இல்) இந்தியாவில் மொத்தமாக 10 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளன. நடப்பு நிதியாண்டில் 45 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகும் என்று சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை வருடத்துக்கு 25-30% அதிகமாகிக் கொண்டே போகும். ஆனால் நம் மக்களுக்கு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று புரிந்துவிட்டால் இந்த எண்ணிக்கை இன்னமும் பலமடங்கு அதிகமாகும்.

இன்று கிட்டத்தட்ட அனைவருக்குமே மொபைலின் தேவை நன்றாகப் புரிந்துள்ளது. இப்பொழுது வரும் மொபைல் விளம்பரங்கள் ஏன் ஒருவருக்கு மொபைல் தேவை என்றெல்லாம் விளக்கிச் சொல்வதில்லை. ஆனால் இன்னமும் மக்களுக்கு கம்ப்யூட்டரின் தேவை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஓரளவு தெரிந்திருந்தாலும் என்ன மாதிரியான கம்ப்யூட்டரை வாங்கவேண்டும் என்று புரிவதில்லை.

இன்றைய தேதியில் கம்ப்யூட்டர் என்றாலே அத்துடன் இண்டெர்நெட் கனெக்ஷன் (இணைய வசதி) என்பதையும் சேர்ந்தே பெற வேண்டியுள்ளது. இணைய வசதி இல்லாத கம்ப்யூட்டர் கிட்டத்தட்ட வேஸ்ட் என்றே சொல்லிவிடலாம்.

மொபைலைப் போலவே இணைய வசதி உள்ள கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு பிறருடன் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் (Email) மூலம் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளலாம். மெசஞ்சர் எனப்படும் முறையில் உலகின் எந்தக் கோடியில் இருப்பவராக இருந்தாலும் அவருடன் எழுத்து மூலம் நேரடியாக உரையாடலாம். நல்ல பிராட்பேண்ட் (அகலப்பாட்டை) இணைய வசதியிருந்தால் எதிராளியுடன் பேசலாம். பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம்! இலவசமாக! டிஜிட்டல் கேமரா ஒன்று கையில் இருந்தால் அதில் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். ஒருவருடன் மெசஞ்சரில் எழுதிக்கொண்டோ, பேசிக்கொண்டோ படங்களை அவருக்கு அனுப்பி வைக்கலாம். வெப் கேமரா எனப்படும் கருவியை வைத்துக்கொண்டு விடியோ கான்ஃபரன்சிங் செய்யலாம்.

இந்தக் கடைசி விஷயம் எவ்வளவு பவர்ஃபுல் என்றால் அதுவே இப்பொழுது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைக்கான விளம்பரமாக உள்ளது. வேலைக்காக அமெரிக்காவில் கணவன். இந்தியாவில் மனைவி, குழந்தை. தினமும் பிராட்பேண்ட் இணைப்பின் மூலம் இரண்டு பக்கத்தினரும் முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொள்கிறார்களாம்! தனிக்கட்டணம் எதுவும் கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இதைத்தவிர சிறு குழந்தைகளுக்கு சிடியில் பாப்பாப் பாட்டு போட்டு சோறு ஊட்டிவிடுவது முதல், லேடஸ்ட் விசிடி, டிவிடி ஹாலிவுட் படங்கள் பார்ப்பது வரையில், இணையத்தில் மேய்ந்து பள்ளிக்கூட/கல்லூரி புராஜெக்ட் வேலைகளைச் செய்வது, சொந்தமாக வலைப்பதிவுகள் வைத்துக்கொண்டு எழுத்தாளராகி, புத்தகங்கள் பதிப்பிக்கும் அளவுக்கு முன்னேறுவது என்று ஏகப்பட்ட விஷயங்களைச் செய்யலாம்.

இதில் இன்னுமொரு முக்கிய விஷயம் - அத்தனையையும் ஒரே நேரத்தில் செய்யலாம்! அதாவது உங்கள் நண்பர்கள் பத்து பேருக்கு ஒரே மின்னஞ்சலை அனுப்பிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், இரண்டு நண்பர்களுடன் மெசஞ்சரில் சாட்டிங் செய்யலாம். அதே நேரத்தில் சிடியில் இளையராஜாவின் திருவாசகம் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும். வலையுலாவியில் (Browser) கிரிக்கெட் ஸ்கோர் ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கத்தில் கூகிள் தேடு இயந்திரத்தில் தேவையான விஷயங்களைத் தேடிக்கொண்டிருப்பீர்கள்.

தசாவதானியாவது அவ்வளவு எளிது - கையில் ஒரு கம்ப்யூட்டரும், இணைய வசதியும் இருந்துவிட்டால்!

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். வங்கிக் கணக்குகளை முழுக்க முழுக்க கவனித்துக்கொள்ளலாம். கிரெடிட் கார்ட், தொலைபேசிக் கட்டணம் என்று பலவற்றை வீட்டில் இருந்தவாறே கட்டலாம். ரெயில்வே டிக்கெட் புக் செய்யலாம். வீட்டுக்கே தபாலில் அனுப்பிவிடுவார்கள். வீட்டில் இருந்தவாறே உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆர்டர் செய்து வரவழைத்துக்கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் தங்க, வைர நகைகளைக் கூட இணையம் வழியாக விற்பனை செய்கிறார்கள்!

இதெல்லாம் சரி, எந்த கம்ப்யூட்டரை வாங்குவது?

கம்ப்யூட்டர் வாங்கும்போது சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. ஏகப்பட்ட விளம்பரங்கள் வருகின்றன. ரூ. 10,000க்கு கம்ப்யூட்டர் என்கிறார்கள். மறுபக்கம் ரூ. 20,000, ரூ. 30,000 என்றெல்லாம் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்கிறார்கள். எதை வாங்குவது? லாப்டாப் கம்ப்யூட்டர் என்று கையடக்கமாக, தோல்பையில் போட்டு தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் இளம் ஆண்களையும் பெண்களையும் பார்த்திருப்பீர்கள். அதை வாங்கலாமா என்று கூட உங்களுக்குத் தோன்றலாம்.

முதலில் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய கேள்வி என்ன காரணத்துக்காக உங்களுக்கு கம்ப்யூட்டர் தேவை என்பது. பிறருடன் தொடர்பு வைத்துக் கொள்ளவா? படிப்பின் காரணமாகவா? பொழுதுபோக்குச் சாதனமாகவா? இல்லை உங்களது வேலையைத் திறம்படச் செய்து அதன்மூலம் அதிகப் பணம் சம்பாதிப்பதற்கா? இந்தக் கேள்விக்கான விடையிலிருந்துதான் நீங்கள் எந்த மாதிரியான கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்க வெண்டும் என்று சொல்லலாம்.

இரண்டாவது உங்கள் பட்ஜெட். நம் ஆசை எப்படி இருந்தாலும் நம்மால் இவ்வளவுதான் செலவு செய்ய முடியும் என்று இருந்தால் அதற்குள்ளாகத்தானே வாங்க முடியும்?

மூன்றாவது இணைய வசதி. நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் விரும்பிய கம்ப்யூட்டரை வாங்கிவிட முடியும். ஆனால் இணைய வசதி என்பது நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்தது. இந்தியாவில் பல இடங்களில் இப்பொழுது அகலப்பாட்டை வசதிகள் (அகல அலைவரிசை என்று பி.எஸ்.என்.எல் கூறுகிறது) முழுமையாகக் கிடைப்பதில்லை. அகலப்பாட்டை இல்லாவிட்டால் பல காரியங்களைச் செய்வது எளிதாக இருக்காது. சாதாரண டயல்-அப் இணையம் மூலம் நண்பர்களுடன் பேசுவது கடினம். விடியோ கான்ஃபரன்சிங் பற்றியெல்லாம் மறந்துவிடலாம். கனமான டிஜிட்டல் கேமரா படங்களை அனுப்புவதோ பெறுவதோ கடினம். ஆக நீங்கள் வசிக்கும் இடத்தில் அகலப்பாட்டை கிடைக்கிறதா என்று பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அது கிடைக்காவிட்டால் விலை அதிகமான சூப்பர் டூப்பர் கம்ப்யூட்டரை வாங்கிவைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க வேண்டியிருக்கும்.

கம்ப்யூட்டரின் பாகங்கள் பற்றியும் ஆபரேடிங் சிஸ்டம் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். கம்ப்யூட்டரின் மூளை அதாவது கஷ்டமான கணக்குகளை எல்லாம் அநாயாசமாகப் போட்டுத் தள்ளும் சக்தி CPU எனப்படும். PC எனப்படும் கம்ப்யூட்டர்க்கான மூளையைத் தயாரிப்பவர்கள் மூன்று நிறுவனங்கள். இண்டெல், ஏ.எம்.டி, வயா. ஒரு காலத்தில் இண்டெலை விட்டால் வேறு வழியில்லை என்று இருந்தது. இப்பொழுது அப்படியில்லை. இண்டெல் நிறுவனம்தான் பெண்டியம், செலரான் என்ற இரண்டு சிப்களை உருவாக்குகிறது. இதில் பெண்டியம் என்பது அதிகத் திறனுடையது. செலரான் சற்றுக் குறைவு. விலையும்தான். ஏ.எம்.டி நிறுவனம் ஆப்டெரான், ஆத்லான் என்னும் பெயர்களில் சிப்களை வெளியிடுகின்றது. வயா நிறுவனம் அதே பெயரிலேயே ஒரு மிகக்குறைந்த விலை சிப்பை உருவாக்குகிறது.

விலை குறைவாக இருக்க வேண்டுமானால் இண்டெலின் செலரான் சிப், அல்லது ஏ.எம்.டியின் ஆத்லான் சிப் பொருத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை வாங்கலாம். இந்தக் கம்ப்யூட்டர்களில் அதிவேக கிராபிக்ஸ் அடங்கிய விளையாட்டுகளை விளையாடுவது சிரமம். ஆனால் சிடி போட்டு பாடல்கள் கேட்பது, விடியோ படங்கள் பார்ப்பது, எழுதுவது, படிப்பது, பேசுவது ஆகிய அனைத்தையும் கஷ்டமின்றிச் செய்யமுடியும். நீங்கள் முதல்முதலாக PC வாங்குவதென்றால், செலவைக் குறைக்க ஆசைப்பட்டால் செலரான், ஆத்லான் உள்ள கம்ப்யூட்டர்யை வாங்கலாம். இண்டெல்தான் வேண்டும் என்று கிடையாது. ஏ.எம்.டி சிப் உள்ள கம்ப்யூட்டர்யை தைரியமாக வாங்கலாம். இரண்டுக்கும் நம்மைப் பொறுத்தவரையில் எந்த வித்தியாசமும் இல்லை.

பணம் சில ஆயிரங்கள் அதிகமானால் பரவாயில்லை, ஆனால் கம்ப்யூட்டர் வேகமாக வேலை செய்யவேண்டும் என்று விரும்பினால் பெண்டியம் அல்லது ஆப்டெரான் சிப்களைத் தேர்ந்தெடுங்கள்.

இந்த வயா சிப் இருக்கிறதே, அது தொடக்க நிலைக் கம்ப்யூட்டர்களில் இப்பொழுது சேர்க்கப்பட்டு வருகிறது. ரூ. 10,000க்குக் கம்ப்யூட்டர் என்று விளம்பரம் வருகிறதல்லவா, அதில் இந்த சிப்தான் உள்ளது. இது ஒரே நேரத்தில் பல காரியங்களைச் செய்யத் திணறும். எனவே மிகக் குறுகிய நோக்கத்துக்காகக் கம்ப்யூட்டர்யை வாங்குவதாக இருந்தால் - அதாவது மின்னஞ்சல் மட்டும் செய்வதற்கு, எழுத்து வேலைகளைச் செய்வதற்கு, இணையத்தில் உலா வருவதற்கு, எப்பொழுதாவது பாட்டு கேட்பதற்கு என்று இருந்தால் - வயா கம்ப்யூட்டர்யை வாங்கலாம்.

அதற்கடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது RAM எனப்படும் மெமரி. ராம், ரேம் இரண்டுக்கும் இடைப்பட்ட உச்சரிப்பு. 64 மெகாபைட், 128 மெகாபைட், 256 மெகாபைட், 512 மெகாபைட், 1 கிகாபைட் என்ற கொள்ளளவுகளில் நிறுவப்படும். பல நேரங்களில் நல்ல வேகமான சிப் போட்டுவிட்டு மெமரியில் கோட்டைவிட்டு, எனது கம்ப்யூட்டர் ஏன் சரியாக, நினைத்தமாதிரி வேலை செய்யவில்லை என்று பலர் கேட்பார்கள். இன்றைய நிலையில் 256 மெகாபைட் மெமரியாவது இருப்பது நலம். 512 மெகாபைட் இருந்தால் உத்தமம். இன்னொரு 256 மெகாபைட் மெமரிக்காக நீங்கள் செலவழிக்கப்போவது வெறும் ரூ. 1,300 தான். ஆனால் அதனால் கிடைக்கும் பலன் எக்கச்சக்கம்.

அடுத்தது மல்ட்டிமீடியா PC என்பதற்கான உபகரணங்கள். வீட்டு உபயோகத்துக்கென வாங்கும் எந்தக் கம்ப்யூட்டரிலும் மல்ட்டிமீடியா விஷயங்களைச் சேர்த்தே வாங்குவது உசிதம். கம்ப்யூட்டர் ஒரு சிறந்த பொழுதுபோக்குக் கருவியுமாகும். ஒரு சிடி ரீடர் (அதாவது சிடி - காம்பாக்ட் டிஸ்க் - களைப் படிக்கும் கருவி), ஒரு சவுண்ட் கார்ட், இரண்டு ஸ்பீக்கர்கள் - இந்த மூன்றும் குறைந்தபட்சத் தேவைகள். சிடியைப் படிப்பதைப் போலவே சிடியில் எழுதவும் செய்ய முடியும். சாதாரண சிடிக்கு அடுத்த நிலையில் உள்ளது டிவிடி. ஒரு சிடியில் 650 மெகாபைட் அளவுக்கு சேமிக்கலாம். ஒரு டிவிடியில் 4.7 கிகாபைட்கள் அதாவது ஏழரை சிடிக்களின் உள்ள அளவுக்குச் சேர்த்து வைக்கலாம். இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி, ஒரே அளவில், வட்ட வடிவமாக இருக்கும்.

இப்படி சிடி, டிவிடி என்று இரண்டு இருப்பதால் இவற்றைப் படிக்க, எழுத என்று கீழ்க்கண்ட பல்வேறு வகைகளில் கருவிகள் உள்ளன.

பெயர்என்ன செய்யலாம்விலை சுமாராக
CD Rசிடியை மட்டும் படிக்கும், டிவிடியைப் படிக்காது.ரூ. 750
DVD Rசிடி, டிவிடி இரண்டையும் படிக்கும். எதிலும் எழுதாது.ரூ. 1,600
CD RWசிடியை மட்டும் படிக்கும், சிடியில் எழுதும். ஆனால் டிவிடையைப் படிக்காது.ரூ. 1,600
DVD R, CD RWடிவிடியைப் படிக்க மட்டும் செய்யும். சிடியைப் படிக்கும், அதில் எழுதவும் செய்யும்.ரூ. 2,500
DVD/CD RWடிவிடி, சிடி இரண்டையும் படிக்கும், இரண்டிலும் எழுதும்.ரூ. 3,500


ஆக, இதில் நமக்கு என்ன தேவை என்று பார்த்து வாங்கவேண்டும். டிவிடி படிக்கக்கூடிய வசதி இருந்தால்தான் டிவிடி சினிமாப் படங்களைப் பார்க்க முடியும். மற்றபடி பாடல்கள் நிறைந்த சிடி, விசிடி ஆகிய இரண்டையும் மேற்குறிப்பிட்ட எல்லாக் கருவிகளின் வழியாகவும் கேட்கலாம், பார்க்கலாம்.

ஸ்பீக்கர்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ரூ. 200இலிருந்து ஆரம்பித்து. ஆனால் உங்களுக்கு நல்ல அகலப்பாட்டை இணைய வசதி இருந்தால் காதோடு இருக்கும் இயர்போனுடன் மைக் செட் ஒன்று வாங்கிவிடுங்கள். காதில் மாட்டிக்கொண்டு நண்பர்களோடு மணிக்கணக்கில் பேச வசதியாக இருக்கும்.

தேவை இருப்பவர்கள் ஒரு வெப்கேம் வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் அறையில் நல்ல வெளிச்சம் இருந்தால்தான் எதிராளியால் உங்கள் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். அகலப்பாட்டை இல்லாவிட்டால் மிகச் சிறியதாக மட்டுமே முகங்களைப் பார்க்க முடியும்.

அடுத்து டிஜிட்டல் கேமரா. இதன் தேவையை இன்று அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். ஃபில்ம் சுருள் போடும் கேமராவை இன்று சாதாரண மக்கள் மறக்கத் தொடங்கிவிட்டனர். டிஜிட்டல் கேமராவில் வேண்டிய படங்களை எடுத்து நேரடியாக கம்ப்யூட்டரில் இணைத்து எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் சேர்த்துவிடலாம். பின் அதனை நண்பர்கள், உறவினர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். இது கம்ப்யூட்டரில் உள்ள USB port மூலம் இயங்குகிறது. டிஜிட்டல் கேமரா இப்பொழுது ரூ. 6500இலிருந்து கிடைக்கிறது.

இன்று யாரும் ஃபிளாப்பியைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதில் ஃபிளாஷ் டிரைவ் என்ற USB port வழியாக வேலை செய்யும் சிறு கருவி வந்துவிட்டது. இதை வைத்து ஒரு கம்ப்யூட்டரிலிருந்து கோப்புகளை எடுத்து இன்னொரு கம்ப்யூட்டருக்குக் கொண்டுசெல்ல முடியும். போர்ட்டபிள் எம்.பி3 பிளேயர்களைக் கூட இவ்வாறு கம்ப்யூட்டரில் சேர்த்து பாடல்களை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் கொண்டுசெல்ல முடியும். சில எம்.பி3 பிளேயர்களுடன் டிஜிட்டல் ஆடியோ ரெகார்டரும் இணைந்து கிடைக்கிறது. ஃபிளாஷ் டிரைவ் இப்பொழுது ரூ. 650இலிருந்து கிடைக்கிறது.

பிரிண்டர்கள் இன்று வெகுவாக விலை குறைந்து கிடைக்கின்றன. அறிமுக நிலையில் ரூ. 3,000க்குக் குறைவாக இங்க்ஜெட் பிரிண்டர்கள் கிடைக்கின்றன. பல வண்ணங்களில் அச்சிடலாம். டிஜிட்டல் கேமரா இருக்கும் காரணத்தால் இன்று ஸ்கேனர்கள் வாங்குவது வீடுகளுக்கு அவ்வளவாகத் தேவையில்லை. சில அலுவலகங்களில் வேலைக்கு ஏற்ப ஸ்கேனர்கள் வாங்க வேண்டியிருக்கலாம்.

அடுத்து இணைய இணைப்புக்கு. அகலப்பாட்டை இணைப்புக்கு USB வழியாக இயங்கும் பிராட்பேண்ட் மாடம் அல்லது ஓர் ஈதர்நெட் நெட்வொர்க் கார்ட் தேவைப்படும். டயல்-அப் என்றால் ஒரு சாதாரண மாடம் தேவைப்படும். இதையும் கம்ப்யூட்டர் வாங்கும்போதே வாங்கிவிடுவது நலம். பி.எஸ்.என்.எல் மாதம் ரூ. 250க்கு அகலப்பாட்டை இணைப்பு கொடுப்பதாகச் சொல்கிறார்கள். நீங்கள் இருக்கும் தொலைபேசி எக்ஸ்சேஞ்சில் இந்த இணைப்பு கிடைக்கிறதா என்று கேட்டுப்பார்க்கவும். இன்னமும் சில மாதங்களில் சென்ன்னை நகரில் வயர்லெஸ் அகலப்பாட்டை இணைப்பு வரப்போவதாகச் சொல்கிறார்கள்.

அடுத்து ஆபரேடிங் சிஸ்டம். இப்பொழுதைக்கு இரண்டு கிடைக்கிறது. ஒன்று லினக்ஸ். முழுதும் இலவசம்! அடுத்தது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்.பி என்பது. இது இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. ஹோம் எடிஷன் எனப்படுவது ரூ. 3,750. நமக்கெல்லாம் இதுவே போதுமானது. சில அலுவலக வேலைகளுக்கு புரொஃபஷனல் எடிஷன் என்ற சற்றே உயர்ந்த வடிவம் தேவைப்படலாம். அது சுமார் ரூ. 7,000. பலரும் ஆபரேடிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரையில் அதற்கென தனியாக காசு கொடுக்காமல் பிறரிடமிருந்து பிரதி எடுத்துக் கொள்கிறார்கள். அது சட்டப்படி குற்றம். அதற்கு பதில் லினக்ஸ் ஆபரேடிங் சிஸ்டத்தை வைத்துக்கொள்ளலாம். பல குறைந்த விலை கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களும் இதனால்தான் தங்களுடைய கம்ப்யூட்டர்களுடன் லினக்ஸைக் கொடுக்கிறார்கள்.

லினக்ஸ் நிறுவப்பட்ட கம்ப்யூட்டரில் உங்கள் தேவைகள் அனைத்தையுமே செய்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் எக்ஸ்.பி கம்ப்யூட்டரில் Plug and Play எனப்படும் ஒரு வசதி உண்டு. அதன்படி டிஜிட்டல் கேமரா, விடியோ கேமரா, ஃபிளாஷ் மெமரி போன்ற பல உபகரணங்களையும் அப்படியே விண்டோஸ் எக்ஸ்.பி உள்ள கம்ப்யூட்டரில் இணைத்தாலே போதுமானது. கம்ப்யூட்டரே தானாகவே என்ன கருவி இணைக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்து அதற்குத் தேவையான டிரைவர் மென்பொருள்களைச் சேர்த்து, அந்தக் கருவிகளை வேலை செய்ய வைக்கும். லினக்ஸில் இப்படி எளிதாகச் செய்ய முடியாது. உங்களுக்கு உதவ அருகில் கம்ப்யூட்டர் பற்றி நன்கு தெரிந்தவர் யாராவது இருந்தால் நிச்சயமாக லினக்ஸ் ஆபரேடிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தலாம்.

லினக்ஸில் ஒரு வசதி. வைரஸ் தொல்லைகள் ஏதும் கிடையாது. ஆனால் விண்டோஸ் எக்ஸ்.பி என்றால் ஆண்டி-வைரஸ் மென்பொருள் உங்களுக்குத் தேவைப்படும். இல்லாவிட்டால் உங்கள் கம்ப்யூட்டர் தேவையற்ற தொல்லைகளுக்கு ஆளாகும். நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் அழிந்து போகலாம், படிக்க முடியாமல் போகலாம்.

இதைத்தவிர கம்ப்யூட்டர் வைக்க ஒரு மேசை, உட்கார முதுகுக்கு இதமான சுழல் நாற்காலி, மின்சார பாதிப்புகளுக்கு உட்படாமல் இருக்க ஒரு UPS என்று அதிகப்படி செலவுகள் இருக்கும்.

ஆக, ரூ. 10,000 என்று விளம்பரப்படுத்தப்படும் கம்ப்யூட்டரை வாங்க மொத்தமாக ரூ. 18,000 வரை செலவாகிவிடும். சுமாரான மேசை கம்ப்யூட்டராக வாங்க வேண்டுமானால் அது மட்டுமே ரூ. 18,000-20,000 ஆகிவிடும். அதற்கு மேல் பிற செலவுகள் இருக்கும். மிக நல்ல மேசை கம்ப்யூட்டர் வாங்க ரூ. 28,000 வரை ஆகிவிடும்.

அதைப் பார்க்கும்போது ஒரு லாப்டாப் வாங்கிவிடலாமே என்று கூடத் தோன்றலாம். ரூ. 36,500 முதல் (எல்லாச் செலவுகளையும் சேர்த்து) லாப்டாப்கள் இப்பொழுது கிடைக்கின்றன. கையோடு எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம். UPS தேவையில்லை. மின்சாரம் போனாலும் ஓரிரு மணி நேரம் பேட்டரியிலேயே வேலை செய்யும்.

கம்ப்யூட்டர் விலைகள் கடும் போட்டியின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் வெகுவாகக் குறைந்து விட்டன. ஆனால் உலக அளவில் கம்ப்யூட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிப்பதில்லை. அதனால் இனியும் கம்ப்யூட்டர் விலைகள் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் இன்னமும் திறன்மிக்க கம்ப்யூட்டர்கள் கிட்டத்தட்ட இப்பொழுதுள்ள விலையிலேயே கிடைக்கத் தொடங்கும்.

இதுதான் சரியான நேரம் கம்ப்யூட்டர் வாங்குவதற்கு. கம்ப்யூட்டர் வாங்குவதுடன் சரியான இணைய வசதியும் சேர்த்துத் தேடி வாங்குங்கள்.

Thursday, August 21, 2008

ISBN என்றால் என்ன?

நேற்று கணித்தமிழ் சங்கத்துக்காக ISBN எண்கள் பற்றிப் பேசினேன். தமிழகத்தில் புத்தகப் பதிப்பாளர்கள் பலருக்கும் ISBN எண்கள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. வெகு சிலரே தங்களது புத்தகங்களுக்கு ISBN எண்களைப் பெற்றுத் தருகிறார்கள். புத்தகப் பதிப்பாளர்களே ISBN எண்ணைப் பயன்படுத்தாதபோது, பிற ஒலி, ஒளி, மென்பொருள் குறுந்தகடு, கேசட் தயாரிப்பாளர்கள் இந்த எண்ணைப் பயன்படுத்தப்போவதில்லை.

இந்த அறிமுகம் உபயோகமாக இருக்கலாம்.

What is ISBN?
View SlideShare presentation or Upload your own. (tags: cds books)

Tuesday, August 19, 2008

அமர்நாத் -- காஷ்மீர்

வருத்தம்தரத்தக்க வகையில் ஜம்மு காஷ்மீரில் இந்து - முஸ்லிம் கலவரம் பெரிதாவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.

எந்த ஒரு பிரச்னை என்றாலும் அது பெரிதாக ஒரு பொறி வேண்டும். காஷ்மீரில் அந்தப் பொறியாக அமர்நாத் ஆகியுள்ளது.

இதுநாள்வரையில் காஷ்மீர் முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மூன்று நிலைகளை எடுத்திருந்தார்கள்.

(1) இந்தியக் குடியாட்சி அமைப்புக்குள்ளாக இருந்துகொண்டு காஷ்மீரத்துக்குத் தனிச் சலுகைகள் சில வேண்டும் என்பவர்கள். நேஷனல் கான்ஃபரன்ஸ், பி.டி.பி போன்ற கட்சிகள்.

(2) காஷ்மீரம் தனி நிலப்பரப்பு, தேசம். பாகிஸ்தான் மற்றும் ஹிந்துஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளில் காஷ்மீரம் பாதிக்கப்படக்கூடாது. காஷ்மீரம் ஹிந்துஸ்தானத்துக்கும் சொந்தமல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமல்ல. பாகிஸ்தான் கைக்குள் இருக்கும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்/ஆசாத் காஷ்மீர் மற்றும் இந்தியா கையில் இருக்கும் காஷ்மீர் மாநிலம்/இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் ஆகிய இரண்டும் சேர்ந்து அங்குள்ள மக்கள் தங்களது தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். (இத்துடன் கூட, வடக்குப் பிராந்தியங்கள், ஜம்மு, லடாக் எல்லாம் சேரவேண்டும் என்ற கனவும் இவர்களுக்கு உண்டு.) ஜே.கே.எல்.எஃப், ஹூரியத் கான்ஃபரன்ஸ் போன்ற அமைப்புகள் இதில் அடங்கும்.

(3) காஷ்மீர் முழுக்க முழுக்க பாகிஸ்தானின் இடம். முஸ்லிம்களின் இடம். இங்கு இந்துக்களுக்கு இடமே இல்லை. இந்திய ராணுவம் ஆக்ரமித்துள்ள பகுதி காஷ்மீர். இவர்களை அழிக்கவேண்டும். இதுதான் பாகிஸ்தான், ஜிஹாதி ஆதரவு பயங்கரவதாக் குழுக்களின் கொள்கை. லஷ்கர்-ஈ-தொய்பா முதற்கொண்டவர்களின் கனவு இது.

ஜம்முவில் வசிக்கும் பெரும்பான்மை இந்துக்கள், இந்தியாவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். காஷ்மீரிலிருந்து விரட்டிவிடப்பட்ட பண்டிட் இந்துக்களும் அதையே விரும்புகிறார்கள். லடாக், கார்கில் பகுதியில் உள்ள மக்கள் (பெரும்பான்மை புத்தமதத்தினர்) இந்தியாவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள்.

வடக்குப் பிராந்தியம் (Northern Territories) இன்று முற்றிலுமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுவிட்டது. அங்குள்ள மக்கள் காஷ்மீர மொழிகூடப் பேசுவதில்லை.

***

இதுநாள்வரை, ஜம்முவில் இருந்த இந்துக்களுக்கு போராட்டம் நடத்த பொறி ஏதும் இருக்கவில்லை. ஆனால் அமர்நாத் ஷ்ரைன் போர்டுக்கு நிலம் கொடுப்பதை எதிர்த்த காஷ்மீர் பள்ளத்தாக்கு முஸ்லிம் கட்சிகளின், மக்களின் ஆவேசம் ஜம்மு இந்துக்களைப் பெருமளவு பாதித்துள்ளது. அதில் எண்ணெய் ஊற்றுமாறு பாஜக, பிற அமைப்புகள் வெறியை அதிகமாக்கியுள்ளனர். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் பொருளாதார அடிப்படையில் கையை வைக்கும் அளவுக்கு ஜம்முவில் போராட்டம் வெடித்தது. காஷ்மீரில் விளையும் பொருள்களை லாரியில் ஏற்றி இந்தியப் பகுதிக்கு வந்து விற்பதை ஜம்மு இந்துக்கள் தடுத்துள்ளனர்.

இதனால் உடனடியாக ஹூரியத் அமைப்புக்குத் தோன்றியது இந்தப் பழங்களை ஏன் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியின் முஸாஃபராபாத்துக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்பதே. இது மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்னை என்பதால் பி.டி.பியும் இதனை ஆதரித்தது. நேஷனல் கான்ஃபரன்ஸால் இதனை எதிர்க்கமுடியாத நிலை.

இதன் விளைவாக, காஷ்மீர் முஸ்லிம்கள், ஜம்மு இந்துக்கள் என இரண்டு குழுக்களும் முற்றிலும் எதிர்-எதிராகப் பிரிந்து போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நேஷனல் கான்ஃபரன்ஸ், பி.டி.பி கட்சிகள் குழப்பமான நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் காஷ்மீரில் எந்த ஆதரவும் இல்லை. பாகிஸ்தான் அரசாங்கத்திலும் அவர்களுக்கு ஆதரவு இல்லை. இன்று வீரியத்தைக் காட்டாவிட்டால், இந்திய காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களும் அவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

இதற்கிடையில், ஜம்மு பகுதியில் நடக்கும் போராட்டத்தை அடக்கமுடியாத இந்திய அரசு, முஸாஃபராபாத் பகுதிக்குச் சென்று பொருட்களை விற்பதையும் தடை செய்து, காஷ்மீர் முஸ்லிம் மக்கள்மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி பலரைக் கொன்றுள்ளது. இதனால் காஷ்மீர் முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இந்திய அரசு மேலும் அன்னியமாகியுள்ளது.

அமர்நாத் விவகாரத்தில் நேஷனல் கான்ஃபரன்ஸ், பி.டி.பி செய்த குழுப்பத்தால் ஏற்பட்டதே இத்தனையும் என்பது என் கருத்து. அமைச்சரவை முடிவின்படி, நிலத்தை அமர்நாத் ஷ்ரைன் போர்டுக்குக் கொடுப்பதால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஹூரியத் போன்றவர்கள் கொஞ்ச நாள் போராடியிருப்பார்கள். பிறகு பிசுபிசுத்துப்போயிருக்கும். ஜம்மு இந்துக்களை இப்படி வெறுப்பேற்றுவதற்கான வாய்ப்பு ஒன்று ஏற்படாமல் இருந்திருக்கும்.

இதில் பல விஷயங்கள் வெறும் அடையாளச் செய்கைகள்தான். “அமர்நாத் ஷ்ரைன் போர்டுக்கு நிலம் கிடையாது. ஆனால் அமர்நாத் யாத்ரீகர்களுக்கு எல்லா வசதிகளையும் காஷ்மீரி முஸ்லிம்கள் செய்துகொடுப்பார்கள்” என்பதுபோல ஹூரியத், ஜே.கே.எல்.எஃப் போன்றோர் பேசுவது அபத்தமாக உள்ளது. காஷ்மீர் பயங்கரவாதிகள் காஷ்மீர் பண்டிட்களை அடித்துத் துரத்தியது பற்றி மேலோட்டமாக மட்டுமே பேசும் அமைப்புகளின் கையில் காஷ்மீர் தனி நாடு மாட்டினால் அதில் இந்துக்களின் நிலை எப்படியிருக்கும் என்று ஜம்மு இந்துக்கள் நன்றாகவே உணர்வார்கள். அதனால்தான் அமர்நாத் பிரச்னை ஜம்முவில் இப்படி பூதாகாரமாக வெடித்துள்ளது.

ஆண்டுக்கு சில ஆயிரம் பேர் மட்டுமே போகும் அமர்நாத் அவ்வளவு முக்கியமான விஷயமே இல்லை. ஆனால் அதனால் உணர்வுகள் பாதிக்கப்பட்டு, கோபம் குமுறி வெளிப்படும்போது அது ஏற்படுத்தும் நிகழ்வுகள் அசாதாரணமானவை. ஜம்மு இந்துக்கள், காஷ்மீர் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை நாசமாக்குகிறார்கள் என்று பிரச்னை அடுத்த கட்டத்துக்குப் போகிறது.

சிறு பொறியிலிருந்துதான் பெரும் நெருப்பு உருவாகிறது.

ஜம்மு இந்துக்களுக்குப் போராட ஒரு துரும்பு கிடைத்துவிட்டது. இதனால் காஷ்மீர் பயங்கரவாதிகள் ஜம்முவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது மேலும் அதிகரிக்கும். பதிலுக்கு ஜம்மு இந்துக்கள் தங்களுக்கு இடையில் வசிக்கும் முஸ்லிம்களைக் குறிவைப்பார்கள்.

இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என் கருத்தில் பி.டி.பியும் நேஷனல் கான்ஃபரன்ஸும்தான். இதன் பலனாக இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள்? ஒன்றும் இல்லை. இவர்களது அபத்தமான போராட்டத்தால் ஹூரியத் கான்ஃபரன்ஸுக்குத்தான் நன்மையே. காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பி.டி.பியும் நேஷனல் கான்ஃபரன்ஸும் காணாமல் போகப்போகிறார்கள். பிரச்னை வெகு எளிதாக்கப்பட்டு இரு துருவ நிலைக்கு எடுத்துச் செல்லப்படும். காஷ்மீர் முஸ்லிம்கள் எதிர் ஜம்மு இந்துக்கள்.

இதில் ஜம்மு பகுதியில் காங்கிரஸும் பயங்கரமாக பாதிக்கப்படும். பாஜக முன்னிலைக்கு வரும். அடுத்து மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படுவதற்குபதில் கடும் பின்னடைவு ஏற்படும். மேலும் ஏகப்பட்ட உயிர்ச்சேதம்.

***

சில அதிரடி நடவடிக்கைகள்:

1. ஆர்டிகிள் 370-ஐ நீக்குதல்.
2. ஜம்மு, லடாக்கைத் தனி மாநிலமாக, பிற இந்திய மாநிலங்களுக்குச் சமமாக ஆக்குதல்.
3. பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இந்திய காஷ்மீர் + பாகிஸ்தான் காஷ்மீரை இணைத்து, ஐ.நா அமைதிப்படையைக் கொண்டுவந்து சுய நிர்ணய உரிமையைக் கொடுத்தல்.
4. வடக்குப் பிராந்தியங்கள் மீதான இந்தியாவின் உரிமையை ரத்து செய்து, அதனை முழுக்க முழுக்க பாகிஸ்தான் தன்னுடைய பகுதியாகக் கருத சம்மதம் தெரிவித்தல்.

இதுதான் நேற்று பதவியிலிருந்து விலகிய முஷரஃப் முன்வைத்தது. அவரது காலத்துக்குப் பிறகாவது இது நிறைவேறினால் அமைதி நிலவலாம்.

Sunday, August 17, 2008

சென்னையில் மாபெரும் நூலகம்

பல நாள்களாக சொல்லிக்கொண்டிருந்த இந்த நூலகத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் சிங்கப்பூர் நூலகத்துக்கு இணையாக இந்த நூலகம் கட்டப்படும் என்று பேசுகிறார்கள். நல்ல விஷயம்.

ஏற்கெனவே சென்னையில் இருக்கும் கன்னிமரா நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் ஆகியவையும், ஆங்காங்கே அமைந்திருக்கும் கிளை நூலகங்களும் எந்த அளவுக்கு உருப்படியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு அரசு சில புள்ளிவிவரங்களைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
என் அலுவலகத்தில் சில நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, கன்னிமரா நூலகத்தில், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை, யாருமே செல்லாத இடங்களில் ஒளித்துவைத்துவிட்டு பின்னர் எடுத்துவந்து படிப்பதாகச் சொன்னார்கள். இதனால் பிற வாசகர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு உண்டு என்பதை அவர்கள் அறிந்தார்களா என்று தெரியாது. நான் தேவநேயப் பாவாணர் நூலகத்துக்கு நான்கைந்து முறை சென்றிருக்கிறேன். அங்குள்ள சூழல் அவ்வளவாகக் கவரவில்லை. அங்கும் இங்குமாக சில புத்தகங்களைத் தேடிப்பார்த்து, போரடித்து வெளியே வந்திருக்கிறேன். கன்னிமரா நூலகத்துக்கு ஒருமுறை மட்டுமே சென்றிருக்கிறேன். அது கொஞ்சம் தேவலாம்.

நூலகத்துக்கு மிக முக்கியமான தேவை நூலகர்(கள்). புத்தகத்தை ஆசை ஆசையாகச் சேர்க்கவேண்டும். அவற்றை ஒழுங்காக அடுக்கி, “கேடலாகிங்” செய்து, தேடும் புத்தகம் உடனடியாகக் கையில் கிடைக்குமாறு செய்யவேண்டும். சரியான படிப்பும் இல்லாமல் சுய ஆர்வமும் இல்லாமல் சாதாரண அரசு ஊழியராக வந்துசேரும் நூலக அலுவலர்கள் ஒரு நல்ல நூலகத்தை “கைமா” செய்துவிடுவார்கள். 120 கோடி ரூபாய் கோட்டூர்புரம் நூலகம் அவ்வாறு ஆகாமல் இருக்க வேண்டுவோம்.

முதல்வர் கருணாநிதி நேற்று பேசும்போது இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
தமிழகத்தில் மொத்தம் 3,924 பொது நூலகங்கள் உள்ளன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்கூட, நூலகங்களின் சிறப்பு, செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எழுத்தாளர்களின் கோரிக்கையை ஏற்று, நூலகங்களில் பெறப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை 1000-மாக அரசு உயர்த்தியுள்ளது. நூலகங்களுக்கு மேலும் அதிக புத்தகங்கள் தேவைப்படுமானால், இதை 2 ஆயிரமாக உயர்த்த அரசுக்கு அதிக நேரம் ஆகாது. (தினமணி)

[நூலக ஆணைக்காக வாங்கப்படும் புத்தகங்களின் பிரதிகளை 1000-லிருந்து] 2000-க்கு உயர்த்துவதற்கு வெகு நேரம் ஆகாது. ஆனால் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் நூலகங்களின் தரத்தை உயர்த்துவதற்கு உதவ முன்வரவேண்டும். (தி ஹிந்து)
நான் நாகப்பட்டினம் கிளை நூலகத்தில் உறுப்பினராக இருந்து எத்தனையோ புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அதை மிகச்சிறந்த ஒரு நூலகம் என்று சொல்லமாட்டேன். ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஏற்கத்தக்க ஒரு நூலகமாக அது இருந்தது. தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் பல இருந்தன. ஒரு பள்ளி மாணவன் உறுப்பினராக முடிந்தது. புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துவந்து படிக்கமுடிந்தது. ஆனால் இன்று தமிழகமெங்கும் உள்ள கிளை நூலகங்களின் நிலை மோசமாகியுள்ளடு என்று பலரிடம் பேசியதில் தெரியவந்தது.

சில எண்ணங்கள்:

1. தமிழக நூலகங்களின் எண்ணிக்கை வெகு அதிகம் என்று சொல்லமுடியாது. தமிழகம் போன்ற பெரிய மாநிலத்துக்கு 4,000 கிளை நூலகங்கள் போதா. 10,000 அல்லது அதற்கு மேற்பட்டு இருக்கவேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்படி பல பஞ்சாயத்துகளில் நூலகங்கள் உருவாக்குவதாகப் பேசினார்கள். அந்த நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதாகச் சொன்னார்கள். இன்றுவரை புத்தகங்கள் வாங்கப்படவில்லை. மூன்று நிதியாண்டுகள் ஓடிவிட்டன. நூலகங்களும் கட்டப்பட்டிருக்க மாட்டா என்றே நினைக்கிறேன்.

2. இருக்கும் நூலகங்களுக்கு கமிட்டி அமைத்து மொத்தமாகப் புத்தகங்கள் வாங்குவதில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. இந்திய அரசியல், நிர்வாகத்தில் ஊழலுக்குப் பஞ்சம் இல்லை என்பதால் ஒரே இரவில் இந்த ஊழல்கள் காணாமல்போய்விடும் என்று நம்பமுடியாது. ஆனால் ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் இடையிலும் ஓரளவுக்காவது நல்ல நூல்கள் பல வாங்கப்படும் என்று நம்புவோம்.

ஒன்று செய்யலாம். மையமாக, அனைத்து நூலகங்களுக்கும் என்று சேர்த்துப் புத்தகங்களை வாங்குவதற்குபதில், கேரளத்தில் நடப்பதுபோல ஒவ்வொரு நூலகத்துக்கும் நிதி ஒதுக்கி, அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கவைக்கலாம். அப்போது, அந்தந்த நூலகங்கள் இருக்கும் பகுதிக்கேற்ப, அந்தந்த மக்கள் விரும்பும் நூல்களை வாங்குவது நடக்கக்கூடும். அந்தந்த வட்டார எழுத்தாளர்களது நூல்கள் அதிகம் வாங்குவதற்கான வாய்ப்பும் உண்டு. இந்த நூல்களைத் தேர்வு செய்யும் குழுவிலும் வாசகர்கள், நூலக உறுப்பினர்கள் சிலர் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் ஊழல் வெகுவாக அல்லது முற்றிலுமாகக் குறையலாம்.

3. கணினிமயமாக்கலும் இணையத்தில் படிக்கும் உரிமையும்: மொத்தம் 4,000 நூலகங்கள். அரசு அதிகபட்சம் 1,000 பிரதிகள் வாங்கும். என்றால், ஒரு நல்ல நூல் எந்தக் கட்டத்திலும் அனைத்து நூலகங்களிலும் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே அரசு நூலகங்கள் அனைத்தையும் கணினி, இணைய இணைப்பு கொண்டு இணைத்து, நூலக மின் - புத்தக உரிமையை பதிப்பாளர்களிடம் பெற்று புத்தகங்களை வாசகர்களுக்கு அளிக்கலாம். குறைந்தபட்சம், தமிழில் பதிப்பாகும் அனைத்து நூல்களுக்கும் மின் - புத்தக உரிமையை கோட்டூர்புரம் நூலகத்துக்காகவாவது வாங்கலாம். இதன்மூலம் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெருத்த உதவி கிடைக்கும்.

4. நூலகங்களில் எந்தப் புத்தகம் படிக்கப்படுகிறது என்னும் புள்ளிவிவரம் மிகவும் உபயோகமானது. இதனைக்கொண்டு, அடுத்த ஆண்டு என்னென்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என்று முடிவு செய்வது முக்கியமில்லை. ஆனால் இந்தத் தகவல், எழுத்தாளர், பதிப்பாளர் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கேற்ப, ஒவ்வொரு நூலகத்திலும் பயனர் புத்தகத்தைப் பெறுவதையும் தருவதையும் கணினிமயமாக்கவேண்டும்.

5. சொத்துவரியில் நூலக மீவரி (cess) வசூலிக்கப்படுகிறது. இது முழுவதும் நூலக மேம்பாட்டுக்கு, புத்தகம் வாங்குவதற்கு என்று பயன்படுகிறதா என்றால் சந்தேகமே. இதைப்பற்றி தெளிவான விளக்கத்தை எந்த அமைச்சரும் தருவதில்லை. யாரும் கேட்பதும் இல்லை.

6. நூலகங்கள் அந்தந்த ஊரின், பகுதியின் எழுத்து மற்றும் படிப்பு சார்ந்த மையமாகத் திகழவேண்டும். ஆனால் நான் பார்த்த சில சிற்றூர்களில் பாதி நேரம் அந்த இடம் பூட்டப்பட்டுள்ளது. முக்கியமாக சிறு கிராமங்களில். அந்த ஊரின் மக்கள் அந்த இடத்தின்மீது அதிகமான உரிமை கொண்டாடவேண்டும். இது எப்படி நடக்கும் என்பது எனக்குப் புரியவில்லை.

***

இந்த நிலையில் முதல்வர், எந்த விதத்தில் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் நூலகங்களின் செயல்பாட்டை முன்னேற்றமுடியும் என்று நினைக்கிறார் என்று தெரியவில்லை. தமிழக நூலகங்களில் முதலில் வாசகர்களேகூட ஒரு பங்குதாரராகக் கருதப்படவில்லை. ஒரு வாசகராக, ஓர் உறுப்பினராக, என்ன புத்தகங்கள் வேண்டும், வரவு என்ன, செலவு என்ன என்று கேட்கும் உரிமை என்னிடம் இல்லை. எழுத்தாளருக்கும் நூலகத்துறைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருப்பதில்லை. எழுத்தாளரே சொந்தமாகப் புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது, ஒரு பதிப்பாளராகவே நூலகத்துறையை அணுகுகிறார். ஆணை கிடைத்தால் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, பணத்தைப் பெற்றுக்கொள்கிறார். அவ்வளவுதான்!

இந்த நிலையை மாற்றவேண்டும் என்றால், வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோரை அரசுடன் பங்குதாரர்களாக ஆக்கவேண்டும். ஒவ்வொரு பகுதியின் நூலக வளர்ச்சியில் இவர்களைப் பங்குகொள்ளச் செய்யவேண்டும்.

முதல் கட்டமாக நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதை “decentralise” செய்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியான குழுக்கள் அமைக்கலாம். அப்போது அந்தக் குழுக்களில் வாசகர்கள், அந்தப் பகுதியின் எழுத்தாளர்கள், ஓரிரண்டு பதிப்பாளர்கள் ஆகியோரை உறுப்பினராக்கலாம். மொத்தம் 10 பேர் கொண்ட குழு என்றால், 2 நூலக அதிகாரிகள், 2 வாசகர்கள், 2 எழுத்தாளர்கள், 2 கல்வியாளர்கள், 2 பதிப்பாளர்கள் என்று இருக்கலாம்.

***

மற்றொரு பக்கம், பொதுமக்களாகச் சேர்ந்து அரசு சாராத நூலக வளர்ச்சியில் ஈடுபடலாம்.

கிழக்கு பதிப்பகம் சார்பாக மயிலாடுதுறை பக்கம் சில கிராமங்களில் (5-6 இடங்கள் இருக்கும்) ஒரு முயற்சியில் ஈடுபட்டோம். அந்த முயற்சி படுதோல்வியில் முடிந்தது. எங்களது புத்தகங்கள் அனைத்திலும் சில பிரதிகளைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு அந்த கிராமங்களில் நூலகம் ஒன்றை நடத்துவதுதான் நோக்கம். இந்த நூலகத்தைப் பயன்படுத்தக் கட்டணம் உண்டு. வருமானத்தில் பெரும்பான்மை நூலகத்தை நடத்துபவருக்கும், சிறு பங்கு எங்களுக்கும் வருவதாகக் கணக்கு. என்ன கட்டணம் வசூலிக்கவேண்டும் என்பதை அந்தந்த கிராமத்தில் நூலகத்தை நடத்துபவர் முடிவுசெய்துகொள்வார். ஆனால் இது ஆரம்பம் முதலே சரியாக நடக்கவில்லை. மிகக் குறைந்த கட்டணம்தான் வைக்கவேண்டும் என்பது எனது கொள்கை. ஒரு பயனருக்கு, மாதத்துக்கு 5 ரூபாய்க்குமேல் போகக்கூடாது என்றேன் நான். ஆனால் அதை அவர்கள் கேட்பதாக இல்லை.

கடைசியில், ஒழுங்காக நடத்தமுடியாமல், வருமானம் வராமல், புத்தகங்களையெல்லாம் திருப்பி அனுப்பிவிட்டனர்.

மீண்டும் வேறு இடத்தில், வேறு வடிவில் இந்த பைலட் சோதனையை நடத்திப் பார்க்கவேண்டும்.

Friday, August 15, 2008

ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி

இன்று சுதந்தர தினத்தை முன்னிட்டு 1982-ல் வெளியான “காந்தி” படத்தை பொதிகையில் காட்டினார்கள். தமிழாக்கப்பட்ட குரல்கள். ஆனாலும் அவ்வளவு மோசம் இல்லை.

காந்தியைப் படமாக ஆக்குவது எளிதான முயற்சி இல்லை. ஆனாலும் இந்தப் படத்தில் காந்தியின் போராட்டங்கள், காந்தியின் அடிப்படைக் கொள்கைகள், காந்தியின் தலைமைப் பண்பு ஆகியவை முழுமையாக வரவில்லை என்றே நினைக்கிறேன். காந்தியின் “உப்பு சத்தியாக்கிரகம்” என்ற கருத்து, கடற்கரையில், ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளருடன் உட்கார்ந்து பேசும்போது அவருக்குத் திடீரெனத் தோன்றியதாகக் காண்பிக்கப்படுகிறது. காந்தி உப்பைப் பற்றி பல ஆண்டுகளாக எழுதிவந்திருக்கிறார்.

காந்தி, தனது தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தின்போது பொதுமக்கள் அனைவரையும் தொட்டால்தான் புரட்சி சாத்தியம் என்பதை அறிந்திருந்தார். மேலும் சத்தியாக்கிரகம் என்பதே பல ஆயிரம் பேர் அமைதியாக, அடக்குமுறையை எதிர்கொண்டு எதிராளியை வெட்கவைப்பதில், மனம் மாறவைப்பதில்தான் உள்ளது. அப்படிப்பட்ட போராட்டத்தில் வன்முறைக்கு வழியே இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட நிலையில்தான் தென்னாப்பிரிக்காவில் கொத்தடிமைகள் மீதான வரியை எதிர்ப்பதன்மூலமாக, பெரும் ஆதரவைத் தேடிக்கொண்டார். ஆயிரக்கணக்கான கொத்தடிமைகள் போராட்டத்தில் இறங்கினர். இதன் பின்னணியில்தான் தென்னாப்பிரிக்க அரசு, காந்தியை முக்கியமான ஒருவராக எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு வந்தது.

இந்தியாவிலும் இதுதான் பிரச்னையாக இருந்தது. கடுமையாகப் பிளவுபட்டிருந்த இந்தியாவில் எந்தக் கடைக்கோடி மனிதனுக்கும் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடவேண்டும் என்று புரியவில்லை. “உப்பு” அனைவரையும் போராட்டத்தில் இறக்குவதற்கான ஒரு வழியாக மாறியது. ஏற்கெனவே காந்தி செயல்படுத்திய ஒத்துழையாமை இயக்கம் தோல்வியை அடைந்ததற்குக் காரணம், அது பலருக்கும் புரியாமல் போனதும், அதைச் செயல்படுத்துவதன்மூலம் பலருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் நஷ்டங்கள் ஏற்பட்டதுமே ஆகும்.

காந்தியின் முக்கியமான பண்பு, மிக முக்கியமான இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்கியது. இந்தத் தலைவர்களை அவர் கவனமாக உருவாக்கினார். தெற்குக்கு ராஜகோபாலாச்சாரியார், மேற்குக்கு வல்லபபாய் படேல், கிழக்குக்கு ராஜேந்திர பிரசாத் மற்றும் அபுல் கலாம் ஆசாத், நடு இந்தியாவுக்கு ஜவாஹர்லால் நேரு, வட மேற்குப் பிராந்தியங்களுக்கு கான் அப்துல் கஃபார் கான். இவர்கள் பலருக்கும் காந்தியை முழுமையாகப் பிடித்திருந்தது என்று சொல்லமுடியாது. பல விஷயங்களில் இவர்கள் காந்தியுடன் சண்டையிட்டனர். ஆனால் அரசியல் போராட்டங்களைப் பொருத்தமட்டில் காந்தியின் சிந்தனைக்கு முழுமையாக அடிபணிந்தனர்.

இந்தத் தலைவர்களை உருவாக்கியது, இவர்களை ஊர் ஊராகச் சென்று சாதாரண மக்களுடன் உறவாடச் செய்தது, என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பிரிந்து தனி அணி ஒன்றை உருவாக்காமல், சேர்ந்து பணியாற்ற வைத்தது ஆகியவை காந்தியின் மிக மிக முக்கியமான செயல்கள். இல்லாவிட்டால் சுதந்தரத்துக்குப் பிறகு இந்தியா ஆட்டம் கண்டிருக்கும்.

காந்திக்கு அரசியல் விடுதலை மட்டும் நோக்கமாக இருக்கவில்லை. துண்டு துண்டான மக்களாகப் பிரிந்திருக்கும் இந்தியாவில் நிச்சயம் வலியவர்கள் பிறரை அடக்கி ஆள்வார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆங்கிலேயர்கள் சென்றால், அந்த இடத்தில் வேறு சிலர்எளியோரைத் துன்புறுத்துவர் என்று அவர் நன்கு அறிந்திருந்தார். அதைப்பற்றி நிறைய எழுதினார்.

சமூக அளவில் மூன்று முக்கியமான பிரச்னைகள் இருப்பதை அவர் பார்த்தார். ஹிந்து-முஸ்லிம் பிரச்னை, ஹிந்துக்களுக்குள்ளாக “தீண்டாமை” மற்றும் சாதி வேறுபாட்டுப் பிரச்னை, ஆண்-பெண் உறவில் ஆணாதிக்கம். ஆனால் மொழி ஒரு பெரும் பிரச்னையாகப் பின்னர் ஆகக்கூடும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பல மொழிகளை எளிதில் கற்கக்கூடியவராகவும், பிற மொழிக்காரர்களுடன் எளிதில் பழகக்கூடியவராகவும் அவர் இருந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

இன்றும் ஹிந்து-முஸ்லிம் பிரச்னை தொடர்கிறது. சாதிப் பிரச்னை அப்படியே உள்ளது. ஒரு கட்டத்தில் இவ்விரண்டுக்குமே “கலப்பு மணம்” தீர்வாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய கட்டத்தில் நகர்ப்புறத்தில் மட்டுமே இது சாத்தியம். காந்தி ஹிந்து-முஸ்லிம் திருமணத்தை ஆதரிக்கவில்லை. அதைப்பற்றி அவர் முழுமையாக யோசிக்கவில்லை. அவரது இரண்டாவது மகன் மணிலால், தென்னாப்பிரிக்காவில் ஒரு முஸ்லிம் பெண்ணை மணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொன்னபோது, காந்தி மணிலாலை அந்த எண்ணத்திலிருந்து விலக்கினார். குஜராத்தி வைஸ்ய சாதி ஒன்றிலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தார். ஆனால் மற்றொரு மகனான தேவதாஸ், ராஜகோபாலாச்சாரியின் பெண் லக்ஷ்மியை மணக்க விரும்பியபோது அதனைத் தடுக்கவில்லை. சற்றே காலம் கடத்தினார். அவ்வளவே.

அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் குறைவில்லாமல் ஹிந்து-முஸ்லிம் + ஹிந்து சாதிப் பிரச்னைகள் இந்தியாவில் தொடர்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

ஹிந்து சாதிப் பிரச்னைகளை, ஹிந்து மதத்துக்கு உள்ளாகவே தீர்க்கமுடியுமா அல்லது மதத்துக்கு வெளியாகவா? நூறு திருமணங்களில் எத்தனை கலப்பு மணமாக இருந்தால், சாதி வித்தியாசம் பார்த்தல் என்பது அழிவதற்கான வாய்ப்பு உள்ளது? நகரமயமாக்கல் இதில் எந்த அளவுக்கு உதவியாக இருக்கும்? பொருளாதார உறவுகள் எந்த அளவுக்கு பாரம்பரிய சாதிக் கட்டுமானங்களைத் தொடரவைக்க அல்லது அழிக்க உதவும்?

ஹிந்து-முஸ்லிம் உறவு ஒருவகையில் சாதிப் பிரச்னையின் ஒரு நீட்சி என்றே எனக்குத் தோன்றுகிறது. ஹிந்துக்களுக்கு இடையேயான சாதிப் பிரச்னையைத் தீர்க்காமல் ஹிந்து-முஸ்லிம் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

Thursday, August 14, 2008

ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 3

[பாகம் 1 | பாகம் 2]

ஈர்ப்பு விசைக்கு எதிராக காற்றழுத்த மாறுபாட்டால் ஒரு விசையை உருவாக்கி, ஈர்ப்பை எதிர்கொண்ட பறப்பனவற்றைப் பற்றி முன்னர் பார்த்தோம். இதுதான் அடிப்படைத் தத்துவம். ஈர்ப்பு விசைக்கு மாற்றாக எதாவது ஒரு விசையை உயிர்கள் தங்களது உடல்மூலம் உருவாக்கவேண்டும்.

இதைப்பற்றி ஆழமாகப் பார்ப்பதற்குமுன், ஈர்ப்பு விசை போல அடிப்படையான விசைகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் நலம்.

***

எடையுள்ள பொருள்கள் ஒன்றை ஒன்று தம்மை நோக்கி இழுப்பதால் (எடை) ஈர்ப்பு விசை ஏற்படுவதுபோல, ஒன்று நேர் மின்னூட்டம் (+), மற்றொன்று எதிர் மின்னூட்டம் (-) கொண்டதாக இருக்கும் இரண்டு பொருள்களுக்கு இடையே மின் ஈர்ப்பு விசை ஏற்படும். இதற்கு நிலை மின் விசை (electrostatic force) என்று பெயர்.

எப்படி, வான்வெளியில் ஒரு கனமான நட்சத்திரத்தைச் சுற்றி பல கோள்கள், கற்கள் ஆகியவை எடை ஈர்ப்பு விசை காரணமாகச் சுற்றி வருகின்றனவோ, அதைப்போன்றே ஓர் அணுவுக்குள் நேர் மின்னூட்டம் கொண்ட அணுக்கருவை (nucleus), எதிர் மின்னூட்டம் கொண்ட மின்னணுக்கள் (electrons) சுற்றி வருகின்றன.

நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டானுக்கும் எதிர் மின்னூட்டம் கொண்ட மின்னணுவுக்கும் இடையேயான நிலை மின் விசை மிகவும் வலுவானது. அதே இரண்டு பொருள்களுக்கு இடையேயான எடை ஈர்ப்பு விசை, ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு.

சில வெவ்வேறு வகை அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. உதாரணத்துக்கு சோடியம் அணுவும் குளோரின் அணுவும் ஒன்று சேர்ந்து சோடியம் குளோரைட் (அல்லது தசாவதாரம் படத்தால் மிகவும் புகழ்பெற்ற NaCl) எனப்படும் சாதாரண கடல் உப்பு மூலக்கூறு உருவாகிறது. ஹைட்ரஜன் வாயுவும் ஆக்சிஜன் வாயுவும் இணையும்போது, நீர் உருவாகிறது. ஒரு நீர் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும் உள்ளன.

இவ்வாறு மூலக்கூறுகள், பலவகையான வேதிப் பிணைப்புகள் (chemical bonds) மூலம் உருவாகின்றன. சோடியம் குளோரைட், அயணிப் பிணைப்பு (ionic bond) என்னும் வகையின்மூலம் உருவாகிறது.

சோடியம், பொடாஷியம் போன்ற அணுக்களில், அவற்றின் அணுக்கருக்களைச் சுற்றி பல மின்னணுக்கள் பல்வேறு சுற்றுப்பாதைகளில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் வெளிவட்டத்தில் உள்ள ஒரு மின்னணு, விட்டால் ஓடிவிடக்கூடிய தன்மை வாய்ந்தது. நம்மூர் இலக்கிய வட்டங்களில்கூட இதைப் பார்க்கலாம். சில இலக்கிய பிரபலங்களைச் சுற்றி, “நகரவே மாட்டேன்” என்ற நிலையில் உள்வட்டத்தில் சில சீடர்கள் இருப்பார்கள். வேறு சிலரோ, “எப்படா, கழட்டிக்கொண்டு ஓடிவிடலாம்” என்ற நிலையில் வெளிவட்டத்தில் இருப்பார்கள்.

அதேபோல, குளோரின், ஃபுளோரின் போன்ற அணுக்களில், சீட்டுக்கட்டு விளையாடும்போது ஒரு கை குறைவதுபோல, ஒரு மின்னணு குறையும். “அந்த மின்னணுவும் வந்தா ஆட்டம் களை கட்டுமே” என்று இவை தேடிக்கொண்டிருக்கும். அதனால்தான் இயற்கையிலேயே சோடியத்துக்கும் குளோரினுக்கும் ஒரு ‘ஈர்ப்பு'. இரண்டையும் பக்கத்தில் கொண்டுபோய் விட்டால், பஞ்சு-நெருப்பு உதாரணமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம். அவ்வளவு தன்னிச்சையாக, சூடு கீடு செய்யாமலேயே இரண்டும் பற்றி எரிந்து, உப்பாகும். ஆனால் பொதுவாக நாம் இவ்விரண்டையும் அவற்றின் தனிம வடிவில் வினைபுரிய வைப்பதில்லை. ஹைட்ரோ குளோரிக் அமிலம், சோடியம் ஹைட்ராக்சைடு காரம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று ஊற்றிக் கலந்தால் அதிலிருந்து சோடியம் குளோரைடு உப்பும், நீரும் உடனடியாக, தன்னிச்சையாக உருவாகும்.

அயனி என்றால் ஒரு மின்னணுவை அல்லது சில மின்னணுக்களை விட்டொழித்த அணு அல்லது அவற்றைச் சேர்த்துக்கொண்ட அணு. இரு அயனிகளுக்கு இடையேயான பிணைப்புதான் அயனிப் பிணைப்பு. சோடியம் அணுவிலிருந்து ஒரு மின்னணு ஓடிப்போய்விடுவதால் உருவாகும் சோடியம் அயனி (Na+) நேர் மின்னூட்டம் கொண்டது. குளோரின் அணுவுடன் ஒரு மின்னணு சேர்ந்துகொள்வதால் உருவாகும் குளோரின் அயனி (Cl-), எதிர் மின்னூட்டம் கொண்டது. இந்த நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் கொண்ட அயனிகளுக்கு இடையே உருவாகும் நிலை மின் விசைதான் அயனிப் பிணைப்பை உருவாக்குகிறது.



அயனிப் பிணைப்பு மிகவும் வலுவானது. ஆனால் எல்லா மூலக்கூறுகளும் அயனிப் பிணைப்பால் மட்டுமே உருவானவை அல்ல. அயனிப் பிணைப்பில் ஓர் அணு தன்னுடைய மின்னணுவை முழுவதுமாக விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும். மற்றொரு அணு, அப்படித் தனக்குக் கிடைக்கும் மின்னணுவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். அதாவது பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களும் இருவேறு தன்மை உடையனவாக இருக்கவேண்டும். இதை மேலும் புரிந்துகொள்ள “தனிம வரிசை அட்டவணை” (periodic table), அல்லது மின்னணுக்களின் சுற்றுப்பாதைகள், ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் எத்தனை மின்னணுக்கள் ஒரே நேரத்தில் இருக்கலாம் போன்ற பல விஷயங்களை ஆராயவேண்டும். அதைப்பற்றி இந்தத் தொடரில் பேசப்போவதில்லை. வேறொரு கட்டத்தில் அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

இப்போது மற்றொரு வகையான அணுப் பிணைப்பைப் பார்ப்போம். கரி (கார்பன்), ஆக்சிஜன் ஆகியவை இணைந்து கரியமில வாயுவை (CO2) உருவாக்குகின்றன. இன்று புவி சூடேற்றத்துக்குக் காரணமான வில்லன் என்று எல்லோராலும் தூற்றப்படும் இந்தக் கரியமில வாயுவை நொடிக்கு ஒரு தரம், நீங்களும் நானும் மூச்சுவிடும்போது வெளியேற்றுகிறோம். நமது ஈருருளி வண்டிகளும் நான்குருளி வண்டிகளும் தூவும் கரும்புகையில் பெரும்பான்மை இந்தக் கரியமில வாயுதான்.



நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை இணைந்து நைட்ரஸ் ஆக்சைடு (N2O) என்ற வாயுவை உருவாக்குகின்றன. இதை முகர்ந்தால் முகத்தில் உள்ள நரம்புகள் சுளுக்கிக்கொண்டு நாம் சிரிப்பதுபோல இருக்குமாம். (நான் செய்துபார்த்தது இல்லை.) அதனால் இதற்கு சிரிப்பு வாயு என்று பெயர்.

இந்தச் சேர்மங்களில் எந்த அணுவும் தன்னுடைய மின்னணுவை முழுமையாக விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. “எனக்கு உன்னுடையது வேண்டும்” என்று அடுத்தவருடையதைக் கேட்கின்றன. ஆனால் அடுத்ததும் அப்படியே! ஆக, இரண்டு அணுக்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். “சரி, உனக்கும் வேண்டும், எனக்கும் வேண்டும். எனவே இருவரும் நமது மின்னணுக்களை பங்குபோட்டுக்கொள்வோமே.” இருவரது வெளிச்சுற்றுகளிலும் இருக்கும் சில மின்னணுக்கள் இரு அணுக்களையும் சேர்ந்து சுற்றுகின்றன. இதன் விளைவாக உருவாகும் பிணைப்புக்கு “சக பிணைப்பு” (co-valent bond) என்று பெயர்.

பல அணுக்கள் தனித்தனியாக இயங்கக்கூடியவை. ஆனால் வேறு பல அணுக்கள், நிலைத்தன்மை உடையதாக இருக்க இரட்டை இரட்டையாக சேர வேண்டியுள்ளது. சோடியம், பொடாஷியம் போன்றவை தனித்தனி அணுக்களாக இருக்கும். ஆனால் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்றவை H2, O2, N2 என்று இரட்டை இரட்டையாக இருக்கும். அப்போது அவை தமக்குள்ளாக உருவாக்கும் பிணைப்புகளும் சக பிணைப்புகள்தாம்.

இந்த சக பிணைப்புகளை சற்றே ஆழமாகப் பார்க்கலாம்.

இரண்டு அணுக்களில் ஒன்று முழுமையாகத் தன்னுடைய மின்னணுவை விட்டுக்கொடுக்காவிட்டாலும், பெரும்பான்மை நேரம் அதன் மின்னணு அதனிடத்தில் இல்லாமல் பங்காளியின் இடத்தில் இருக்கும். உதாரணத்துக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCl) என்ற சேர்மத்தை எடுத்துக்கொள்வோம். சோடியம், குளோரின் கதையில் சோடியத்திடமிருந்து பிரிந்து அந்த மின்னணு முழுவதுமாகவே குளோரின் பக்கம் வந்துவிடும். ஆனால் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில், ஹைட்ரஜன் தனது மின்னணுவை முழுவதுமாக விடாவிட்டாலும், அந்த மின்னணு கிட்டத்தட்ட குளோரின் பக்கம்தான் இருக்கும்.



இங்கு ஹைட்ரஜன் நேர் மின்னூட்டம் கொண்ட ஒரு பொருளாகவும், குளோரின் எதிர் மின்னூட்டம் கொண்ட ஒரு பொருளாகவும் இயங்குகின்றன. இதனால் இவற்றுக்கிடையே மின் ஈர்ப்பு ஏற்பட்டு நிலை மின்விசை உருவாகிறது. இதுபோன்ற பிணைப்புக்கு இருமுனை-இருமுனை விசை (dipole-dipole force) என்று பெயர். இருமுனை என்பது இரு மாறு மின்னூட்ட துருவங்கள் அல்லது இரு எதிர் காந்தத் துருவங்கள். இவற்றுக்கிடையேதான் ஈர்ப்பு சக்தி ஏற்படும். அயனிப் பிணைப்பும் இதுபோன்றதுதான். ஆனால் மிக வலுவானது.

இந்த இருமுனை-இருமுனை விசையிலும் ஒரு விசேஷ வகை உள்ளது. குளோரினுக்கு பதிலாக, ஃப்ளூரின், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற அணுக்களுடன் ஹைட்ரஜன் இணையும்போது இந்தப் பிணைப்பு மேலும் வலுவாகிறது. ஹைட்ரஜனும் ஃப்ளூரினும் சேர்ந்து ஹைட்ரோஃப்ளூரிக் அமிலத்தை (HF) உருவாகி்றது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து நீர் (H2O) உருவாகிறது. ஹைட்ரஜனும் நைட்ரஜனும் சேர்ந்து அம்மோனியா (H3N) உருவாகிறது. இந்த மூன்று மூலக்கூறுகளிலும் ஹைட்ரஜனது மின்னணுவை அதன் பங்காளிகள் சற்று அதிகமாகவே பிடுங்கிக்கொள்கிறார்கள். எனவே இங்கு உருவாகும் இருமுனை-இருமுனை விசை, சாதாரண இருமுனை-இருமுனை விசையைவிட அதிகமானது. இதற்கு “ஹைட்ரஜன் பிணைப்பு” என்ற விசேஷப் பெயர் உண்டு.

ஒரே அணு, நிலைத்தன்மையை அதிகரிக்க, இரட்டை இரட்டையாகத் தோன்றும் என்று மேலே பார்த்தோம் அல்லவா? ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்றவை H2, O2, N2 இப்படித்தான் இருக்கும் என்றோமல்லவா? சிறு சிறு இடைவெளிகளில், இந்த இரட்டையரில் ஒருவர் மற்றவரிடமிருந்து ஒரு மின்னணுவைத் திருடிக்கொள்வார். அந்தக் கணத்தில் ஓர் ஆக்சிஜன் அணு நேர் மின்னூட்டத்துடனும், மற்றொன்று எதிர் மின்னூட்டத்துடனும் இருக்கும். அப்போதும் அவற்றுக்கு இடையில் இருமுனை-இருமுனை விசை தோன்றும். ஆனால் இந்த விசை கணப்பொழுதில் மறையக்கூடியது. மிகவும் தாற்காலிகமானது. இப்படிப்பட்ட விசையை “கலையும் விசை” (dispersion force) என்கிறோம். உருவாகி, உருவாகி, கலைந்துகொண்டே இருக்கும் இருமுனை இது.



***

இவ்வாறு சக பிணைப்புகளில், ஹைட்ரஜன் பிணைப்பு விசை, இருமுனை-இருமுனை பிணைப்பு விசை, கலையும் விசை ஆகிய அனைத்தையும் சேர்த்து வான் டெர் வால்ஸ் விசைகள் என்கிறோம்.

யோஹானஸ் வான் டெர் வால்ஸ் என்பவர் நெதர்லாந்து நாட்டுக்காரர். இவர் வாயுக்கள், திரவங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்தார். அப்போதுதான் மேற்கண்ட விசைகளைப் பற்றி விளக்கமாகக் கண்டறிந்தார்.

அது என்ன, திரவத்துக்கும், வாயுக்கும், மேலே சொன்ன விசைகளுக்கும் சம்பந்தம் என்கிறீர்களா? உண்டு!

எந்த மூலக்கூறில் வெறும் “கலையும் விசை” மட்டும் உள்ளதோ, அது சாதாரண அறை வெப்பத்தில் வாயுவாக இருக்கும். ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், குளோரின் ஆகியவை எல்லாம் வாயுக்களே. ஆனால் எப்போது மூலக்கூறுகளுக்கு இடையே விசை அதிகமாக உள்ளதோ, அப்போது அவை நெருக்கமாக இருக்கும் காரணத்தால் திரவமாக ஆகும். அதனால்தான் ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய இரு வாயுக்கள் இணைந்து உருவாக்கும் நீர் என்ற மூலக்கூறு ஹைட்ரஜன் பிணைப்பு விசை காரணமாக திரவமாகிறது. அதைப்போன்றேதான் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (பிற அமிலங்களும் அப்படியே) திரவமாக உள்ளது.

அறை வெப்பத்தில் ஒரு பொருள் (தனிமம் அல்லது சேர்மம்) வாயுவாக இருக்குமா, திரவமாக இருக்குமா, திடமாக இருக்குமா என்ற கேள்வி உங்களுக்கு இயல்பாக எழவேண்டும். ஒரு திடப்பொருள் படிக வடிவில் (crystal) இருக்குமா அல்லது தூள் நிலையில் (amorphous) இருக்குமா என்பது அடுத்த பெரும் கேள்வி. இவற்றுக்குள் புக இங்கே நேரம் கிடையாது.

சரி, இந்த விசைகளை ஏன் இவ்வளவு விலாவரியாகப் பார்த்தோம்?

அவற்றை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

Friday, August 08, 2008

உண்ணாவிரதமும் காந்தியும்

இன்று ஆளுக்கு ஆள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். “அடையாள உண்ணாவிரதம்” முதற்கொண்டு “சாகும்வரை உண்ணாவிரதம்” வரை பல வெரைட்டிகளைப் பார்க்கலாம்.

உண்ணாவிரதம் என்று பயமுறுத்தினால் உடனே ஒருவரது கோரிக்கை நிறைவேறிவிடுமா? இதுபோன்ற எமோஷனல் பிளாக்மெயில்மூலம் காரியத்தை சாதிப்பது சரியா? இப்படியெல்லாம் கேள்விகள் எழலாம்.

உண்ணாவிரதம் என்பது அரசியல், சமூகப் போராட்டங்களின்போது ஓர் ஆயுதமாக காந்தியால் பயன்படுத்தப்பட்டது. அதையும் அவர் முதலில் அரசியல் களத்தில் பயன்படுத்தவில்லை. சுய தண்டனையாகவே இரண்டு முறைகள் பயன்படுத்தினார். ஒருமுறை தென்னாப்பிரிக்காவில் ஃபீனிக்ஸ் ஆசிரமத்தில் அவரது மகனும் மணமான இன்னொரு பெண்ணும் தகாத உறவு கொண்டிருந்ததாகத் தகவல் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த காந்தி, தனக்கான தண்டனையாக சில நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அதேபோன்று அவரது இரண்டாவது மகன் ஆசிரமப் பணத்தை எடுத்து முதல் மகனின் ஊதாரித்தனத்துக்காக அனுப்பியது தெரியவந்ததும் மீண்டும் உண்ணாவிரதம்.

இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னுடைய உயர்ந்த, நேர்மையான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதில்லையே என்ற வருத்தமே அவரை உண்ணாவிரதத்தை நோக்கி இழுத்துச் சென்றது.

அவர் முதல்முறையாக அரசியல் களத்தில் உண்ணாவிரதம் இருந்தது அஹமதாபாத் நெசவுத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக. அப்போதும், முந்தைய தருணங்களைப்போல, மனத்தில் காயம் பட்ட காரணத்தால்தான்.

***

1918. அஹமதாபாதில் பல நெசவுத் தொழிற்சாலைகள் இருந்தன. அதில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் 35% சம்பள உயர்வு கேட்டனர். ஆனால் முதலாளிகள் 20%-க்குமேல் கொடுக்கமாட்டோம் என்றனர்.

காந்தி அப்போது அஹமதாபாதில் தன் ஆஸ்ரமத்தை அமைத்திருந்தார். எனவே தொழிலாளர்கள் அவரிடம் சென்று தங்களது நிலைமையைத் தெரிவித்தனர். நன்கு விசாரித்துப் பார்த்த காந்திக்கு, தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது என்றே பட்டது.

எனவே நெசவாலை உரிமையாளர் அம்பாலால் சாராபாய் என்பவரிடம் காந்தி பேசினார். ஆனால் நெசவாலை உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள, மூன்றாம் நபராக ஓர் ஆர்பிட்ரேட்டரை நியமித்துக்கொள்ளுங்களேன் என்று காந்தி ஆலோசனை சொன்னார். ஆனால் அதற்கும் நெசவாலை உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

*

இங்கு அம்பாலால் பற்றிக் குறிப்பிடவேண்டும். காந்தி அஹமதாபாதில் ஆஸ்ரமம் அமைத்தவுடன் அந்த ஆஸ்ரமத்தில் தூதாபாய் தஃப்டா என்பவரும் அவரது மனைவியும் வந்து வசிக்க ஆரம்பித்தனர். அவர்கள் ‘தீண்டத்தகாத' சாதியைச் சேர்ந்தவர்கள். அதே ஆஸ்ரமத்தில் வசித்துவந்த காந்தியின் அக்கா மகன் மாகன்லாலின் மனைவிக்கு தீண்டத்தகாதவர்களுடன் சேர்ந்து வசிப்பது பிடிக்கவில்லை. எனவே சண்டைபோட்டுக்கொண்டு மாகன்லாலும் மனைவியும் வெளியேறிவிட்டனர். கஸ்தூர்பாகூட காந்தியுடன் இந்த விஷயத்தில் சண்டை போட்டார். ஆனால் காந்தி தனது நிலையிலிருந்து மாறவில்லை.

சீக்கிரமாகவே சாதி இந்துக்கள் ஆஸ்ரமத்தை பகிஷ்கரிக்க ஆரம்பித்தனர். பண வரவு குறைந்துவிட்டது. ஆஸ்ரமத்தைத் தொடர்ந்து நடத்துவது எப்படி என்று தெரியாத குழப்பமான நிலை.

அடுத்த வாரச் செலவுக்குப் பணம் இல்லை என்ற நிலையில் ஆஸ்ரம வாசலுக்கு திடீரென்று ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கும் ஒருவர் அவசர அவசரமாக காந்தியின் கையில் ரூ. 13,000 நோட்டுக்களைத் திணித்துவிட்டு சென்றுவிடுகிறார்.

தீவிர கடவுள் நம்பிக்கையாளரான காந்திக்கு, கடவுளே தனது செய்கை சரிதான் என்று காட்டுவதற்காக ஒருவரை அனுப்பியதாகத் தோன்றியது.

பின், மாகன்லாலும் அவரது மனைவியும் மனம் திருந்தி, தவறை ஒப்புக்கொண்டு ஆஸ்ரமத்துக்குத் திரும்பினர்.

அன்று காரில் வந்து கேள்வி ஏதும் கேட்காமல் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றவர்தான் அம்பாலால் சாராபாய்.

*

தொழிலாளர்களின் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்பதை காந்தி உணர்ந்தார். எனவே தொழிலாளர்களிடம் வேலை நிறுத்தம் பற்றிப் பேசினார். (ரஷ்யாவில் கம்யூனிசப் புரட்சி 1917-ல்தான் நடந்துமுடிந்தது என்று நினைவில் கொள்ளவும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இன்னமும் உருவாகாத தருணம் இது! தொழிற்சங்கங்கள் என்று எதுவுமே இந்தியாவில் இல்லாத நேரம் இது.)

“சாத்வீகமான முறையில் வேலை நிறுத்தத்தில் இறங்குங்கள். ஆனால் அடுத்த சில நாள்கள் கடினமானவை” என்றார் காந்தி. சுமார் 5000 தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அம்பாலால் சாராபாய் முதற்கொண்டு அனைத்து உரிமையாளர்களும் தொழிற்சாலைகளை இழுத்து சாத்தினர்.

சில தினங்களுக்குள்ளாக, வேலை நிறுத்தத்தை உடைக்க, 20% ஊதிய உயர்வில் வேலைக்குச் சேருபவர்களை முதலாளிகள் வரவேற்றனர். அதனை ஆரம்பத்தில் யாரும் ஏற்கவில்லை. ஆனால் நாளடைவில் வயிற்றுப்பாட்டுக்காக பலர் வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.

அம்பாலால் சாராபாயின் தங்கை அனுசூயா சாராபாய், காந்தியின்மீது பற்று கொண்டவர். அவர் காந்தியைச் சந்திக்க தனது காரில் தினமும் ஆஸ்ரமத்துக்கு வந்துகொண்டிருந்தார். வேலை நிறுத்தம் நடந்தபோது அம்பாலாலும் சிலமுறை ஆஸ்ரமத்துக்கு தனது மனைவி சரளாதேவியுடன் வந்து போவார்.

நாளாக நாளாக, சில தொழிலாளர்கள் வெளிப்ப்டையாகவே காந்தியை சந்தேகிக்கத் தொடங்கினர். “ஜாலியாக காரில் உலா வந்துகொண்டு, வயிறுமுட்டச் சாப்பிடும் காந்திக்கு எங்களோட பட்டினிப் பிரச்னை பற்றி என்ன தெரியும்” என்றனர்.

இந்த விஷயம் காந்தியின் காதுகளுக்கு எட்டியது.

உடனடியாக ஒரு முடிவெடுத்தார். “தொழிலாளர் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படும்வரையில் இனி நான் உண்ணப்போவதில்லை. காரிலும் ஏறி எங்கும் செல்லப்போவதில்லை.”

விஷயம் கேள்விப்பட்டு அம்பாலால் உடனே அங்கு ஓடிவந்தார். “இது எங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்னை. இதில் நீங்கள் என் தலையிட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறீர்கள்” என்று மன்றாடிப் பார்த்தார். ஆனால் காந்தி தன் முடிவிலிருந்து நகரவில்லை. அஹமதாபாத் நெசவாலை முதலாளிகளின் குடும்பத்திலிருந்தே அவர்களுக்கு எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. அவர்கள் அனைவரும் நேரடியாக காந்தியைப் பார்க்க வந்தனர். காந்தி என்ன சொன்னாலும் ஒப்புக்கொள்வதாகச் சொன்னார்கள்.

அப்போதே காந்தி உடனடியாக 35% சம்பள உயர்வைக் கேட்டுப் பெற்றிருக்கலாம். ஆனால் அவரது நோக்கம் அதுவாக இல்லை. இரண்டு எதிரெதிர் பக்கங்களும் ஒன்றாக வந்து தங்களது பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவரது நோக்கமே.

பேச்சுவார்த்தையில் இவ்வாறு முடிவானது:

1. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை விட்டுவிட்டு வேலைக்குச் சேர்வார்கள். முதல் நாள் அவர்களுக்கு 20% உயர்வில் சம்பளம் கிட்டும். இரண்டாம் நாள் 35% உயர்வில் சம்பளம். மூன்றாம் நாளிலிருந்து 27.5% உயர்வில் சம்பளம்.

2. ஓர் ஆர்பிட்ரேட்டர் நியமிக்கப்படுவார். அவர் கடைசியாக என்ன முடிவு கொடுக்கிறாரோ அதை இரண்டு பக்கங்களும் ஏற்றுக்கொள்ளும். அந்தச் சம்பள உயர்வுக்கும் 27.5%-க்கும் இடைப்பட்ட வித்தியாசம் பின்னர் சரிசெய்துகொள்ளப்படும்.

ஆக, ஒரு பக்கம் வெற்றி, மற்றொரு பக்கம் தோல்வி என்ற நிலையை விடுத்து, சமரசமான முடிவு எனதை நோக்கியே காந்தியின் எண்ணம் இருந்தது. அதேபோல பல முயற்சிகளையும் எடுத்துப் பார்த்து, பிரச்னைகளைத் தீர்க்க வேறு வழி இல்லை என்ற நிலையில்தான் உண்ணாவிரதம் என்பதை நோக்கி அவர் சென்றார். அதற்கு வேறு சில பேச்சுகளும் காரணம் என்பதையும் கவனிக்கவேண்டும்.

உண்ணாவிரதத்தின் முடிவாக அவர் எந்தத் தீர்ப்பையும் திணிக்கவில்லை. சத்தியத்தின் பலம் அவருக்குத் துணையாக நின்றது.

[இரு பக்கமும் மதித்த கல்லூரி முதல்வர் ஒருவர் ஆர்பிட்ரேட்டராக நியமிக்கப்பட்டு கடைசியில் 35% சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.]

***

உண்ணாவிரதம், ஒத்துழையாமை, வேலை நிறுத்தம் போன்ற பலவும் காந்தி இந்தியாவுக்கும் உலகுக்கும் அளித்த புது ஆயுதங்கள். அவை கத்தி, துப்பாக்கிகளைவிட வலிமையானவை. ஆனால் அவற்றின் பலம் அவற்றைப் பிரயோகிக்கும் ஆளுடைய ஆன்ம பலத்தைப் பொருத்தது.

அதனால்தான் இன்று உண்ணாவிரதங்கள் பொதுவாக ‘ஷோ' காண்பிக்க மட்டுமே பயன்படுகின்றன.

Sunday, August 03, 2008

மூன்று தங்கமுடி ராட்சசன்

[Grimms' Fairy Tales, The Giant with the Three Golden Hairs]

ஒரு பெற்றோருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த நேரத்தைக் கணக்கில் எடுத்த அந்த கிராமத்தவர் அனைவரும் இந்தப் பையன் நிச்சயம் ராஜாவின் மகளை மணம் செய்துகொள்வான் என்றனர்.

அந்தப் பக்கமாக அந்த நாட்டு ராஜா மாறுவேஷத்தில் போய்க்கொண்டிருந்தார். அவர் மக்களிடம் என்ன விசேஷம் என்று கேட்டார். அவர்களும் ராஜாவின் மகளை மணந்துகொள்ளப்போகும் பையன் அந்த ஊரில் பிறந்திருக்கிறான் என்று சொன்னார்கள். ராஜா அந்த வீடு எங்கே என்று விசாரித்துத் தேடிச் சென்றார்.

அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் அவர்களது பையனை நிறைய விலை கொடுத்து வாங்கிக்கொள்வதாகக் கேட்டார். அவர்கள் முதலில் மறுத்தனர். ஆனால், பின்னர் தங்களது ஏழைமையான நிலையைக் கருத்தில்கொண்டு, மாறுவேடத்தில் இருந்த ராஜா கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டனர்.

ராஜாவுக்கு யாரோ ஒரு ஏழைப் பயல் தனது மகளை மணந்துகொள்வதா என்ற கோபம். எனவே அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் தள்ளிவிட்டார். அந்தக் கூடை பத்திரமாக வெகுதூரம் சென்று ஆற்றங்கரையில் ஒதுங்கியது.

அந்தப் பகுதியில் இருந்த ஒரு மாவு அரைப்பவர், அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். 14 ஆண்டுகள் ஆயின. அந்தப் பகுதிக்கு ராஜா வந்திருந்தார். இந்தப் பையனைப் பார்த்ததும், அவனது தந்தையிடம், “இது உனது பையனா?” என்று கேட்டார். “இல்லை ராஜாவே, 14 ஆண்டுகளுக்குமுன் ஆற்றங்கரையில் ஒரு கூடையில் ஒதுங்கிய குழந்தை இவன்” என்றார் அவர்.

ராஜாவுக்கு இந்தப் பையன் யார் என்று புரிந்துபோனது. அவர் வேறு வேலையாகச் சென்றுகொண்டிருந்தார். ஆனாலும் இவனது கதையை உடனடியாக முடிந்துவிட எண்ணினார். மாவு அரைப்பவரிடம், “ராணிக்கு ஒரு தகவல் அனுப்பவேண்டும். அதற்கு உனது பையனின் உதவி தேவை” என்றார். அந்தப் பையனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, எங்கும் நிற்காமல் விரைந்து சென்று நேராக ராணியிடம் அந்தக் கடிதத்தைக் கொடுக்குமாறு சொன்னார்.

பையனும் உடனடியாகக் கிளம்பினான். ஆனால் போகும் வழியில் தொலைந்துபோய், ஒரு காட்டுக்குள் மாட்டிக்கொண்டான். அங்கே ஒரே ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்த வீட்டுக்குச் சென்ற பையன் அன்று இரவு அங்கேயே தங்கிக்கொள்ளமுடியுமா என்று அங்குள்ள கிழவியிடம் கேட்டான். அவள், “இந்த இடம் கொள்ளைக்காரர்கள் சிலருக்குச் சொந்தமானது. அதனால் நீ இங்கே தங்கமுடியாது. உடனடியாக இங்கிருந்து போய்விடு” என்றாள். ஆனால் பையன் மிகவும் களைப்புடன் இருந்ததால், அங்கேயே ஒரு பெஞ்சில் படுத்துத் தூங்கிவிட்டான்.

இரவு, கொள்ளைக்காரர்கள் அங்கே வந்தனர். படுத்திருப்பவன் யார் என்று கிழவியை மிரட்டினர். பையன் கொண்டுவந்திருந்த கடிதம் அவர்கள் கண்களில் பட்டது. உடனே அதை எடுத்துக் கிழித்துப் படித்தனர். “இந்தக் கடிதம் கொண்டுவருபவனை வெட்டிக் கொன்று, எரித்து, புதைத்துவிடு” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது. கொள்ளைக்காரத் தலைவன் உடனே அந்தக் கடிதத்தைக் கிழித்து எறிந்துவிட்டு, வேறொரு கடிதத்தில், “இந்தக் கடிதம் கொண்டுவருபவனுக்கு நமது மகளை மணம் முடித்துவிடு” என்று எழுதி வைத்தான். அன்று இரவே கொள்ளைக்காரர்கள் மீண்டும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

மறுநாள் காலை, பையன், கடிதத்தை எடுத்துக்கொண்டு நேராக ராணியிடம் சென்றான். கடிதத்தைப் படித்த அவள், வெகு விமரிசையாக, தனது மகளை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தாள்.

சில நாள்கள் கழித்து மீண்டும் நாட்டுக்கு வந்த ராஜா அதிர்ச்சி அடைந்தார். தனது மருமகனிடம், தான் அந்தத் திருமணத்தை விரும்பவில்லை என்றும், ஆனால் ஏற்கெனவே நடந்துவிட்டதால், இது தொடரவேண்டுமானால், அவன் எங்கோ தொலைவில் ஒரு குகையில் இருக்கும் ராட்சசனின் தலையில் உள்ள மூன்று தங்கமுடிகளையும் எடுத்துக்கொண்டுவந்து அவரிடம் கொடுக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

அவனும், அதனை ஏற்றுக்கொண்டு, தன் மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு, அங்கிருந்து கிளம்பினான்.

முதலில் அவன் ஒரு நகரத்தை அடைந்தான். அந்த நகரின் வாயிலில் இருந்த காவல்காப்போன், “நீ யார்? உனக்கு என்ன வேலைகள் தெரியும்?” என்று கேட்டான். “எனக்கு எல்லா வேலைகளும் தெரியும்” என்று இவன் பதில் சொன்னான். “அப்படியா? எங்கள் ஊரில் உள்ள நீர் ஊற்றில் இப்போது தண்ணீர் வருவது நின்றுவிட்டது. ஏன் என்று கண்டுபிடித்துச் சொல்வாயா? கண்டுபிடித்துத் தந்தால் இரண்டு கழுதை சுமந்துசெல்லும் அளவுக்கு உனக்குத் தங்கம் தருவோம்” என்றான். “ஓ, நிச்சயமாக, ஆனால் நான் திரும்பிவரும்போது செய்கிறேன்” என்றான் இவன்.

அடுத்த நகரை அடைந்ததும், அங்கிருந்த வாயில்காப்போனும் இவனது திறமை பற்றிக் கேட்டான். இவன், தன்னால் எல்லாக் காரியங்களையும் செய்யமுடியும் என்றான். “எங்கள் ஊரில் தங்க ஆப்பிள்கள் கொடுத்துவந்த ஒரு மரம் இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதில் இப்போது ஓர் இலைகூட முளைப்பதில்லை. அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தால் உனக்கு நிறையப் பரிசுகள் தருவோம்” என்றான் வாயில்காப்போன். திரும்பி வரும்போது செய்துதருகிறேன் என்று அவனுக்கும் பதில் சொன்னான் இவன்.

அடுத்து இவன் ஓர் ஏரியின் கரையை அடைந்தான். அங்கே ஒரு படகில் ஒரு படகோட்டி உட்கார்ந்திருந்தான். “நான் இந்தப் படகை பல காலமாக ஓட்டிவருகிறேன். என்னால் இந்தப் படகைவிட்டுக் கீழே இறங்கவே முடிவதில்லை. ஏன் என்று உன்னால் கண்டுபிடிக்கமுடியுமா” என்று கேட்டான் அந்தப் படகோட்டி. “நிச்சயம் செய்கிறேன். ஆனால் திரும்பி வரும்போது” என்று சொல்லி, அந்தப் படகில் ஏறிக்கொண்டான் இவன். படகோட்டி இவனை அடுத்த கரையில் இறக்கிவிட்டான்.

இப்படி, பல நகரங்கள் தாண்டி ஒரு காட்டுக்குள் ராட்சசன் வசிக்கும் குகையை வந்தடைந்தான் இவன். அப்போது ராட்சசன் எங்கோ வெளியே சென்றிருந்தான். ராட்சசனின் பாட்டி வீட்டில் இருந்தாள். இவன் பாட்டியிடம் சென்று, “எனக்கு ராட்சசனின் தலையில் இருக்கும் மூன்று தங்க முடிகளையும் எடுத்துத் தருவாயா” என்று கேட்டான். அத்துடன் தான் வரும் வழியில் தன்னிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளையும் பாட்டியிடம் கேட்டான். “நீ இங்கே இருப்பதே ஆபத்து. நான் முடிந்தவரை உனக்கு உதவி செய்கிறேன்” என்று சொல்லி, பாட்டி அவனை ஓர் எறும்பாக மாற்றி, மடியில் கட்டிவைத்துக்கொண்டாள்.

ராட்சசன் குகைக்குத் திரும்பியதும் மனித வாசனை இருப்பதைக் கண்டுகொண்டான். “இங்கே யார் வந்திருப்பது” என்று கத்தி, அங்கும் இங்கும் தேடினான். ஆனால் யாரையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சோர்வுடன் இருந்த ராட்சசன், பாட்டியின் மடியில் தலைவைத்து தூங்கப்போனான்.

கொஞ்ச நேரம் கழித்து பாட்டி ராட்சசனின் தலையில் இருந்த ஒரு தங்க முடியை வெடுக்கென்று பிடுங்கினாள். விழித்த ராட்சசன் கோபத்தில் கத்தினான். பாட்டி அவனிடம், “மன்னித்துக்கொள் அப்பா. தூக்கத்தில் ஒரு கனவு கண்டேன். அதில் ஓர் ஊரில் ஒரு நீரூற்றில் தண்ணீரே வராததுபோல் இருந்தது. அவசரத்தில் திடுக்கிட்டதில் இப்படி ஆகிவிட்டது” என்றாள். “ஓ, அதுவா. அந்த நீரூற்றின் அடியில் உள்ள கல்லில் ஒரு தேரை வளர்ந்துள்ளது. அந்தத் தேரையை எடுத்துவிட்டால், மீண்டும் அந்த நீரூற்றில் தண்ணீர் வரத்தொடங்கும்” என்று சொல்லிவிட்டு ராட்சசன் தூங்கப் போனான்.

சிறிது நேரம் கழித்து பாட்டி மீண்டும் ராட்சசனின் தலையில் இருந்த இரண்டாவது தங்க முடியையும் பிடுங்கினாள். தூக்கத்திலிருந்து விழித்த ராட்சசன் மீண்டும் கத்தினான். பாட்டி அவனிடம், “மன்னித்துக்கொள் அப்பா. மீண்டும் ஒரு கனவு. இதில் தங்க ஆப்பிள் மரம் ஒன்றில் இலையே துளிர்க்காமல் இருப்பது போலக் கண்டேன். திடுக்கிட்டதில் இப்படி ஆகிவிட்டது” என்றாள். “ஓ, அதுவா. அந்த மரத்தின் வேரை ஒரு சுண்டெலி கடித்துக்கொண்டே இருக்கிறது. அதுதான் பிரச்னை. அந்த சுண்டெலியைக் கொன்றுவிட்டால், அந்த மரம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கிவிடும்” என்று சொல்லிவிட்டு தூங்கச் சென்றான்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து பாட்டி மூன்றாவது தங்க முடியையும் பிடுங்கினாள். இப்போது விழித்த ராட்சசன், “இப்போது என்ன” என்ற கேட்டான். “இந்தக் கனவில், ஒரு படகோட்டி, படகை விட்டு இறங்கமுடியாத நிலையில் இருப்பதைக் கண்டேன்” என்றாள் பாட்டி. “அவன் கையில் இருக்கும் துடுப்புதான் காரணம். அதை அவன் யாரிடமாவது கொடுத்துவிட்டால், அவன் தப்பித்துவிடுவான். ஆனால் அந்தத் துடுப்பு யார் கையில் இருக்கிறதோ, அவனால் அந்தப் படகைவிட்டு விலகமுடியாது” என்றான் ராட்சசன்.

அடுத்த நாள் காலை ராட்சசன் கிளம்பிச் சென்றதும், பாட்டி எறும்பை மீண்டும் பையனாக மாற்றி, அவனிடம் தங்க முடிகளைக் கொடுத்து, மூன்று கேள்விகளுக்குமான விடையைக் கொடுத்தாள்.

பையன் படகோட்டியிடம் வந்து தன்னை அக்கரைக்குக் கொண்டுசெல்லுமாறு கேட்டான். கீழே இறங்கியதும் அவனிடம், யாராவது பயணியிடம் துடுப்பைக் கொடுத்துவிட்டு ஓடுமாறு சொன்னான். அடுத்த நகருக்குச் சென்று, தங்க ஆப்பிள் மரத்துக்கு அடியில் தோண்டி, அங்குள்ள சுண்டெலியைக் கொல்லச் சொன்னான். அவர்கள் கொடுத்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து பக்கத்து ஊருக்கு வந்தான். அங்கே நீரூற்றின் அடியில் உள்ள கல்லைப் பெயர்த்து அதிலிருக்கும் தேரையை எடுக்கச் சொன்னான். அவர்கள் இரண்டு கழுதை சுமக்கும் அளவுக்கு தங்கம் கொடுத்தனர். அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தான்.

ராஜாவுக்கு மகிழ்ச்சி. தங்க முடியுடன் ஏகப்பட்ட பரிசுகளும் தங்கமும் இருப்பதைப் பார்த்து, இவை எங்கே கிடைத்தன என்று கேட்டார். அதற்கு இவன், தொலைதூரத்தில் உள்ள ஏரிக்கு மறுபக்கம் நிறைய தங்கம் கிடைப்பதாகச் சொன்னான்.

உடனே ராஜா, பேராசையில் நேராக அந்த ஏரிக்கரைக்குச் சென்றார். படகோட்டியிடம் தன்னை மறுகரைக்கு அழைத்துச் செல்லக் கேட்டான். படகோட்டியும் ராஜாவிடம், “இந்தத் துடுப்பை சற்றே வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான். ராஜா துடுப்பை வாங்கிக்கொண்டதும், படகோட்டி, தாவிக் குதித்து ஓடிவிட்டான். அன்றுமுதல் ராஜா அந்தப் படகைவிட்டு வெளியேறாதபடி நன்கு மாட்டிக்கொண்டார்.

Friday, August 01, 2008

உயிர் கொடுக்கும் திரவம், உயிர் காக்கும் குழாய்


உலகில் இன்று பெரும்பான்மை மக்களை பாதிக்கும் ஒரு விஷயம் நல்ல குடிநீர் கிடைக்காதது. பல இடங்களில் தண்ணீரே கிடைப்பதில்லை. வேறுபல இடங்களில் தண்ணீர் கிடைக்கிறது; ஆனால் கலங்கிப்போய், மாசுபடுத்தப்பட்டு, நோய்க்கிருமிகள் பொங்கிப் பெருகும் தண்ணீராக உள்ளது.

“கிடைக்கும் தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்” என்று சுகாதார அமைப்பினர் அவ்வப்போது சொல்லி வருகிறார்கள். ஆனால் நீரைக் காய்ச்சுவதற்கு செலவாகிறது. ஒரு லிட்டர் தண்ணீரை 25 டிகிரியிலிருந்து 100 டிகிரிக்குக் கொண்டுசென்று கொதிக்கவைத்து, பிறகு மீண்டும் ஆறவைத்தால்தான் அதிலுள்ள கிருமிகள் அழியும். நீரில் உள்ள பிற மாசுக்களை - கரைந்த உப்புகளை, தூசுகளை என்ன செய்வது? கொதிக்கவைத்தால் போதாது. வடிகட்டவேண்டும். எதைவைத்து? சுத்தமான துணியாக இருக்கவேண்டும். ஆக செலவு, நேரம், கவனம் தேவை.

அரசாங்கம் இதில் வேண்டிய பணத்தைச் செலவழித்து, ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான நீர் வழங்கினால் நல்லது. ஆனால் செய்வதில்லை. எனவே நகரங்களில் மக்கள் தங்களுக்கான தனித் தீர்வைத் தேடிக்கொள்கிறார்கள். அது அக்வாஃபினா, கின்லே, பிஸ்லெரி என்று தொடங்கி ஊர் பேர் தெரியாத பிராண்ட் பாட்டில் தண்ணீரை நாடுவதாக இருக்கலாம். அல்லது அக்வா கார்ட், ஜீரோ பி, ப்யூர் இட் போன்ற மின்சாரத்தால் இயங்கும் வடிகட்டும் கருவிகளைப் பொருத்துவதாக இருக்கலாம். இங்கு கருவிக்கான செலவு, மின்சாரத்துக்கான செலவு உண்டு. டேங்கிலிருந்து கொட்டும் நீர் வேண்டும். இவை அனைத்துமே நகரங்களை நோக்கிய தீர்வுகள்.

கிராமங்களில், ஏழை மக்களுக்கு சாத்தியமான தீர்வு ஏதேனும் இருக்கிறதா? அதை எப்படி மக்களுக்குக் கொண்டுசெல்லலாம் என்று யோசித்து, ட்விட்டரில் “மின்சாரம் தேவைப்படாத நீர் சுத்திகரிப்புக் கருவி உள்ளதா?” என்று கேட்டேன். பலரிடமிருந்து பதில் வந்தது. மிகச் சிறந்த பதில், @srikan2 என்பவரிடமிருந்து வந்தது.
@bseshadri Not sure of availability in India: http://tinyurl.com/5ahzew
இந்தத் தளத்தை (http://www.vestergaard-frandsen.com/lifestraw.htm) நாகராஜன் பின்தொடர்ந்து, அவர்களுக்கு டில்லியில் ஓர் அலுவலகம் உள்ளது என்று கண்டுபிடித்தார். அங்குள்ள அலுவலர் ஒருவரிடம் பேசியதில், இந்தக் கருவி ரூ. 250-க்குக் கிடைக்கும் என்றும் குறைந்தது 500 ஆர்டர் செய்யவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

நாகராஜனின் டில்லி நண்பர் ஒருவர் இந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்று ஒரு மாதிரி ஒன்றைப் பெற்று சென்னைக்குக் கொண்டுவந்தார். இன்றுதான் கையில் கிடைத்தது.

***

இந்தக் கருவி பற்றிய தகவல்கள், அவர்களது இணையத்தளத்தில் கிடைக்கின்றன. மொத்தமாக வாங்கினால் $3 (ரூ. 130) என்ற விலைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இருக்கும் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் எண்ணிக்கை 1-1.5 கோடியைத் தாண்டாது. ஆண்டாண்டுக்கு டயோரியா, காலரா என்று நீரால் பரவும் நோய்கள் எக்கச்சக்கம். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு நினைத்தால் ஒரு கருவியை வாங்கிக் கொடுத்துவிடலாம். இதற்கு ஆகும் மொத்தச்செலவு (1.5 கோடி * 130 = ரூ. 200 கோடிதான்). அதாவது இலவச கலர் டிவி வாங்கிக்கொடுப்பதற்காக ஒதுக்கிய தொகையில் ஏழில் ஒரு பங்குதான்! (மொத்தம் அரசு கலர் டிவிக்காக ஒதுக்கியுள்ள தொகை ரூ. 1444 கோடிகளாம்.)

சரி, அரசுக்கு இதில் நாட்டமில்லை என்று வைத்துக்கொள்வோம்.

இந்தக் கருவியை ஒருவர் உபயோகித்தால் மூன்று ஆண்டுகள் தாங்கும். ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், இதற்குச் செலவழிக்கும் தொகைக்கு மேலாக மருத்துவச் செலவில் சேமித்துவிடுவார்கள். அப்படி ஒரேயடியாகக் கட்ட பணம் இல்லை என்றால், குறுங்கடன்மூலம் கடன் பெற்று, கட்டிவிடலாம்.

இது தொடர்பாக நான் ஈடுபட்டிருக்கும் ஒரு குறுங்கடன் நிறுவனத்துடன் பேசி ஏற்பாடு செய்யப்போகிறேன்.

ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 2

நாம் முதலில் பார்க்கப்போவது பறவைகளை. எப்படி அவற்றால் ஈர்ப்பை எதிர்த்து மேலே போகமுடிகிறது? உயர, உயரப் பறந்துகொண்டே இருக்கமுடிகிறது? நினைத்தமாத்திரத்தில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஆகாய மார்க்கமாக அலையமுடிகிறது?

ஒரு பறவையின் பறத்தலில் வெவ்வேறு அங்கங்கள் உள்ளன. அவற்றைத் தனித்தனியாகப் பார்ப்போம். அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து இயங்கும்போதுதான் ஒரு பறவையால் தான் விரும்பியவாறு பறக்கமுடியும்.
(அ) வானில் உயரத்தில் இருக்கும்போது புவியின் ஈர்ப்புக்கு எதிரான ஒரு விசையை உருவாக்குதல்.
(ஆ) முன்னோக்கி நகருதல்
(இ) மேல் நோக்கிச் செல்தல்
(ஈ) உடலின் வடிவத்தை ஒரு குறிப்பிட்ட வகையில் வைத்து செல்லும் திசைக்கு எதிராக காற்று ஏற்படுத்தும் விசையைக் குறைத்தல்
(உ) கீழ் நோக்கித் திரும்புதல்
(ஊ) வேகத்தைக் குறைத்தல் அல்லது அதிகரித்தல்

இதில் நாம் அனைத்தையும் பார்க்கப்போவதில்லை. முக்கியமாக (அ), (ஆ), (இ) ஆகியவற்றைப்பற்றி மட்டுமே கவனிக்கப்போகிறோம்.

திரவங்களுக்கும் வாயுக்களுக்கும் அழுத்தம் (pressure) என்ற ஒரு பண்பு உண்டு. புவியின்மேல் காற்று மண்டலம் உள்ளது. உயரம் செல்லச் செல்ல, காற்றின் அழுத்தம் குறைந்துகொண்டே வரும். இதே போல, ஒரு நீர் நிலையில் ஆழத்துக்குச் செல்லச் செல்ல, அழுத்தம் அதிகமாகிக்கொண்டே செல்லும். கடல் மட்டத்தில் ஒரு அழுத்தம் இருந்தால், கடலுக்கு அடியில் செல்லச் செல்ல, அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போகும்.

ஆங்கிலத்தில் திரவம் (liquid), வாயு (gas) இரண்டையும் சேர்த்து fluid என்று சொல்வார்கள். A fluid, flows. அதாவது பாயும். ஓடும். பரவும். தமிழில் இதனை “பாய்மம்” என்போம். இனி இந்தச் சொல்லையே பயன்படுத்துகிறேன்.

ஒரு குறிப்பிட்ட அழுத்தம் கொண்ட பாய்மத்துக்கு இடையே ஒரு பொருளை வைத்தால், பாய்மத்தின் அழுத்தம் காரணமாக அந்தப் பொருளின் பல்வேறு புள்ளிகளிலும் அழுத்து விசை ஏற்படும். இந்த அழுத்து விசை, அழுத்தத்தையும் (p), பரப்பையும் (A) பெருக்கினால் வரும் தொகை. இந்த விசை, பொருளின் பரப்புக்கு செங்குத்தாக (normal) இருக்கும். கீழே உள்ள படத்தில் இதனைக் காணலாம்.
ஒரு பாத்திரத்தில் அழுத்து விசை கீழே அதிகமாகவும், மேலே குறைவாகவும் இருப்பதால், மொத்தத்தில் மேல் நோக்கி இருக்கும். இதனால், பாத்திரத்தில் அழுத்தப்படும் பொருள் மேல்நோக்கி உந்தித் தள்ளப்படும். இந்தப் பொருள் அதிக அடர்த்தி (density) கொண்டதாக இருந்தால் அழுத்த விசையையும் தாண்டி கீழ்நோக்கி நீரில் அமிழும். இல்லாவிட்டால் அதே இடத்தில் மிதக்கும். மிகவும் லேசான பொருளாக இருந்தால் மேல்நோக்கிச் செல்லும். காற்றுள்ள (டென்னிஸ்) பந்தை தண்ணீருக்குள் அழுத்தினால் அது எதிர்த்துக்கொண்டு மேல்நோக்கி வருவதைப் பார்த்திருப்பிர்கள். அதே ஒரு கிரிக்கெட் பந்தைப் போட்டால் அது பாத்திரத்தின் அடிவரை சென்றுவிடும்.

காற்று மண்டலத்தைப் பொருத்தமட்டில், அழுத்தம் தண்ணீரின் அளவுக்கு மாறுபடாது. அதாவது நமது தலைமாட்டில் என்ன அழுத்தம் உள்ளதோ, கால்மாட்டிலும் கிட்டத்தட்ட அதே அளவுதான் என்று வைத்துக்கொள்ளலாம். சிறிய மாற்றம் இருக்கும், ஆனால் பொருட்படத்தக்க மாற்றம் அல்ல. எனவே காற்றில் அமிழுந்துள்ள ஒரு பொருளின் எல்லாப் பக்கங்களிலும் கிட்டத்தட்ட ஒரே அழுத்தம்தான் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். இதனால் அந்தப் பொருள்மீது உருவாகும் விசை, மொத்தத்தில் சுழியமாக ஆகிவிடும். எனவே அந்தப் பொருள் மேலும் போகாது, கீழும் போகாது. அப்படியே, அங்கேயே இருக்கும்.

அப்படியானால் ஒரு பொருள் எப்படித்தான் மேலே போவது? புவி ஈர்ப்பை எப்படித்தான் எதிர்ப்பது?

பாய்மம் சும்மா இருக்கும்போதுதான் அழுத்தத்தில் மாறுபாடுகள் ஏற்படுவதில்லை. ஆனால் பாய்மம் பாய்ந்து செல்லும்போது வெவ்வேறு இடங்களில் அதன் வேகத்தில் மாற்றங்கள் ஏற்படும். அப்போது வேகத்துக்குத் தகுந்தமாதிரி அந்த இடத்தின் அழுத்தம் மாறுபடும். வேகம் அதிகமாகும்போது அழுத்தம் குறையும். இதற்கு பெர்னோலி விளைவு என்று பெயர். உதாரணமாக கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள்.
இதில் அகலம் குறையும் இடத்தில், பாய்மத்தின் வேகம் அதிகரிக்கும். அப்போது பாய்மத்தின் அழுத்தம் சடாரெனக் குறையும்.

இதே வேலையைத்தான் பறவைகளின் இறக்கைகள் செய்கின்றன என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? பறவைகளின் இறக்கைகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பார்த்தால் அது இப்படித்தான் இருக்கும்.
இந்தத் தோற்றத்துக்கு aerofoil - காற்றுப்படலம் என்று பெயர். இந்த இறக்கை காற்றில் வேகமாக முன் நோக்கிச் செல்லும்போது, இதன் பரப்பின்மீதாக காற்று பாய்கிறது. அப்படிப் பாயும்போது, மேல்பரப்பின்மீது காற்று வேகமாகவும், கீழ்ப்பக்கம் சற்றே மெதுவாகவும் செல்கிறது. அது இந்த விசித்திரமான உருவத்தின் காரணமாக ஏற்படுகிறது. எனவே பெர்னோலி விளைவினால், மேல்பரப்பில் அழுத்தம் குறைவாகவும், கீழ்ப்பரப்பில் அழுத்தம் அதிகமாகவும் உள்ளது. முன்னோக்கிச் செல்லும் வேகம் அதிகமாக அதிகமாக, இந்த அழுத்த மாறுபாடு அதிகமாகும். இந்த அழுத்த மாறுபாடு, விசையாக உருமாறும். அதனை இந்தப் படத்தில் காணலாம்:
காற்றுப்படலத்தை மேல் நோக்கித் தள்ளும் விசைக்கு lift - ஏற்றவிசை என்று பெயர். காற்றுப்படலத்தை காற்றுக்கு எதிர் திசையில் தள்ளும் விசைக்கு drag - பின்னிழு விசை என்று பெயர். காற்றுப்படலத்தின் வடிவம், முன்னோக்கிச் செல்லும் வேகம், காற்றுப்படலம் காற்றை எதிர்கொள்ளும் கோணம் ஆகியவற்றைப் பொருத்து மேல்நோக்கிய ஏற்றவிசை அதிகமாகும் அல்லது குறையும். இந்த ஏற்றவிசை அதிகமாக அதிகமாக, ஒருவர் மேலே செல்லலாம், ஈர்ப்பை எதிர்கொள்ளலாம்.
பறவைகள் இதைத்தான் செய்கின்றன. அவற்றின் இறக்கைகளின் வடிவம் காரணமாக அவற்றால் ஏற்றவிசையை அதிகரிக்க முடிகிறது. அத்துடன், பறவைகள் அவற்றின் உருவத்துடன் ஒப்பிடும்போது எடை மிகக் குறைவாக உள்ளன. அவற்றில் எலும்புகள் வலிமையானவை, ஆனால் லேசானவை.

இறக்கைகளாலும், முன்னோக்கி உந்துவதாலும் உருவாவதே ஏற்றவிசை. இந்த ஏற்றவிசை புவி ஈர்ப்பு விசையைக் ஈடுகட்டுவதால் பறவை மேலே அந்தரத்தில் அப்படியே உள்ளது. கீழே விழுவதில்லை. காற்றே இல்லாவிட்டால் (வெற்றிடத்தில்) ஒரு பறவையால் பறக்கமுடியாது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்!

சரி, மேலே ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்தால் அங்கேயே அதனால் ஈர்ப்பு விசையை எதிர்கொள்ள முடியும். ஆனால் எப்படி தரையிலிருந்து அவ்வளவு உயரத்துக்குச் செல்கிறது? பறவை தனது இறக்கைகளை மேலும் கீழுமாக அடிப்பதால் இது ஏற்படுகிறது. பறவை தன் இறக்கைகளைக் கீழ்நோக்கிக் குமிக்கும்போது அதற்குள்ளாக மாட்டிக்கொண்ட காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. அது பறவையை மேல்நோக்கித் தள்ளுகிறது.

பறவை எப்படி முன்னோக்கிச் செல்கிறது? அதற்கு அது தனது கால்களைப் பின்னுக்குத் தள்ளி, மூக்கை முன்னோக்கி நகர்த்தி, வயிற்றை உந்துகிறது. கூடவே இறக்கைகளையும் அடிக்கும்போது, முன்னோக்கி, மேல்நோக்கிச் செல்கிறது. மேல் நோக்கிச் செல்லும்போது புவி ஈர்ப்பை எதிர்கொள்ள ஏற்றவிசை துணைபுரிகிறது.

பறவை எப்படிப் பறக்கிறது என்பதற்கான சிமுலேஷனை இந்தத் தளத்தில் காணமுடியும். இங்கிருந்துதான் கடைசியாக நீங்கள் பார்த்த மூன்று படங்களையும் எடுத்துள்ளேன்.

பறவையால் தொடர்ந்து வானில் இருந்தபடியே இருக்கமுடியாது. உடல் சோர்வடையும்போது எங்காவது உட்கார்ந்தாகவேண்டும். உடலுக்குத் தேவையான சக்தியை உணவின்மூலம் பெறவேண்டும். நல்ல உயரத்தில் இருக்கும்போது காற்றழுத்தம் குறைவாக இருப்பதால், உடலுக்குத் தேவையான ஆக்சிஜனும் குறைவாகக் கிடைக்கும். எனவே அதற்காக, பறவையின் நுரையீரல் சற்றே பெரிதாக இருக்கும் (அதன் அளவைப் பொருத்தமட்டில்).

***

பல பறக்கும் பூச்சிகளும் (தேனி, தும்பி, பட்டாம்பூச்சி) இப்படித்தான் செயல்படுகின்றன. ஹம்மிங்பர்ட் போன்றவை இறக்கைகளைப் படபடவென ஒரு விநாடிக்குள் பலமுறை அடித்துக்கொண்டே இருப்பதன்மூலம் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் முன்னோக்கிச் செல்லாமலேயே நிலையாக இருக்கும் காரியத்தைச் செய்கின்றன.

அடுத்து சுவற்றில் செல்லும் பூச்சிகளைப் பற்றிப் பார்ப்போம்.

மேக்சேசே விருது: பிரகாஷ் ஆம்டே, மந்தாகினி ஆம்டே

மேக்சேசே விருது பெற்ற முரளிதர் (பாபா) ஆம்டேயின் மகன் பிரகாஷ் ஆம்டேயும் அவரது மனைவி மந்தாகினி ஆம்டேயும் 2008-க்கான ராமோன் மேக்சேசே விருது பெறுபவர்களுள் ஒரு(இரு)வர்.

பாபா ஆம்டே பற்றிய பதிவு ஒன்றில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:
ஒரு கட்டத்தில் ஆம்டே மத்தியப் பிரதேச பழங்குடியினர் நல்வாழ்வில் ஈடுபட ஆரம்பித்தார். பழங்குடியினருக்காக மருத்துவமனை கட்டுதல், அவர்களுக்குக் கல்வி கற்பித்தல், நல்ல விவசாய முறைகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் ஆம்டேயின் மகன் பிரகாஷ் ஆம்டே ஈடுபட்டுவருகிறார்.
மடியா கோண்ட் என்ற மலைவாழ் பழங்குடியினர் மத்தியப் பிரதேச, மஹாராஷ்டிரா பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு எழுத்து மொழி கிடையாது. தந்தையைப் பின்தொடர்ந்து, பிரகாஷ் ஆம்டே இந்தப் பழங்குடியினர் வசித்துவரும் பகுதிக்கு வந்து குடியேறினார். இவர்களது மொழியைக் கற்றார். இங்குள்ள குழந்தைகளுக்குப் பாடங்கள் நடத்த பள்ளிகளைக் கட்டினார். விவசாய முறைகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். பிரகாஷ், மந்தாகினி இருவருமே மருத்துவப் பட்டம் பெற்றவர்கள். இந்தப் பழங்குடியினருக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் எதிர்த்தாலும் பின்னர் நாளடைவில் பழங்குடியினர் இந்த மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்தப் பகுதியில் காயமடைந்த வன விலங்குகள் (சிங்கம், புலி முதற்கொண்டு), அனாதையாகும் வனவிலங்குகளுக்கு சரணாலயம் ஒன்றை அமைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் மாநில அரசு, அனுமதியின்றி இவர்கள் வனவிலங்கு சரணாலயம் ஒன்றைக் கட்டுவதாகக் குற்றம் சாட்டியது. பிறகு, வேறு வழியின்றி ஆம்டேக்களின் விலங்குகள் சரணாலயத்துக்கு அனுமட்தி கொடுத்தது.