Monday, July 31, 2006

Podcast xml - வலையொலிபரப்பு ஓடை

இனி தொடர்ச்சியாக வலையொலிபரப்பைச் செய்யப்போகிறேன் என்பதால் அதற்கென ஓர் ஓடையைத் தயார் செய்துள்ளேன்.

Itunes அல்லது அதுபோன்ற பிற podcast ஓடையைப் படிக்கக்கூடிய செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தலாம்.

http://thoughtsintamil.blogspot.com/podcasts/badripodcast.xml

தமிழக பட்ஜெட் 2006 - உரையாடல்

தமிழக சட்டமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் கண்ணியமான முறையில் நடைபெறவில்லை. நடைபெறும் விவாதம் 'உன் ஆட்சியில் நீ என்ன செய்தாய்', 'என் ஆட்சியில் நான் என்ன செய்தேன்' என்பதுமாகவும் அடுத்தவரை கேலி செய்வதாகவும் அவமதிப்பதாகவும் மட்டுமே உள்ளது.

குறைந்தபட்சம், வெளியிலாவது பட்ஜெட்டின் சில முக்கியமான பகுதிகள்மீது தீவிரமான விவாதம் நடக்கவேண்டியது அவசியம்.

தொடரும் என் வலையொலிபரப்பில் Dr. A.M.சுவாமிநாதன், ஓய்வுபெற்ற IAS, முன்னாள் தமிழக நிதித்துறைச் செயலருடன் பட்ஜெட் பற்றிய சிறு விவாதம் இங்கே.



பட்ஜெட் 2006 பற்றிய என் பதிவு

Sunday, July 30, 2006

இந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு

இந்திய அமெரிக்க அரசுகளுக்கிடையே அணு ஆற்றல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பயன், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை எப்படிப் பார்க்கிறது போன்ற விஷயங்கள் பற்றி எல். வி. கிருஷ்ணனுடன் (முன்னாள் இயக்குனர், கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு ஆய்வுப் பிரிவு, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம்) உரையாடினேன். அந்த வலையொலிபரப்பு இங்கே, உங்களுக்காக.



நியூ யார்க் டைம்ஸ் கருத்துப்பத்தி இங்கே.

[பி.கு: Quicktime player இருந்தால் முழு ஒலித்துண்டும் இறங்குவதற்கு முன்னமேயே ஒலி கேட்கத் தொடங்கிவிடும். நீங்கள் பொறுமையாகக் காத்திருக்கத் தேவையில்லை. Amplitude குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். வால்யூம் அதிகமாக இருந்தால்தான் நன்றாகக் கேட்கிறது. இதை இனி வரும் நாள்களில் சரி செய்கிறேன்.]

Saturday, July 29, 2006

சென்னை உயர்நீதிமன்றப் புது நீதிபதிகள்

கே.எம்.விஜயன் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள்:

1. K.வெங்கடராமன்
2. K.சந்துரு
3. V.ராமசுப்ரமணியன்
4. S.மணிகுமார்
5. A.செல்வம்

புகைப்படங்களும் செய்தியும் இங்கே.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்

டெண்டர் முடிந்து மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட எண்ணிக்கையில் அவை தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும்.

வீடியோகான் - 15,000
கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா - 7,500
டிக்சன் டெக்னாலஜிஸ் இந்தியா - 7,500

ஒரு பெட்டிக்கு ரூ. 2,965 விலை என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நான் ஒரு பெட்டி ரூ. 3,333 ஆகும் என்று கணித்திருந்தேன். எனவே இப்பொழுது கிடைத்திருப்பது நல்ல விலைதான்.

ஆக 30,000 பெட்டிகள் வாங்க ஆகும் செலவு = ரூ. 8.895 கோடி

அடுத்த கட்டத்தில் சர்வதேச அளவில் டெண்டர் என்று வரும்போது மேலே குறிப்பிட்ட தொகையைவிடக் குறைவாகவே கிடைக்கலாம். ஒரு பெட்டிக்கு ரூ. 2,800 என்று வைத்துக்கொள்வோம். அதற்குக்கீழே போவது கடினமாக இருக்கும். அப்படியானால் மீதமுள்ள ரூ. 741.105 கோடியில் நிச்சயம் 26.4 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்கும்.

கலர் டிவியினால் உபயோகமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, நாளையே ரூ. 5,000-ல் கணினி ஒன்றை வடிவமைத்தால் கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி செலவில் 40 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.

கலர் டிவி விஷயத்திலேயே பல பிரச்னைகளை இந்த அரசு சமாளிக்கவேண்டிவரும். கலர் டிவி ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் சப்ளையரே தனது வாரண்டி காலத்தில் தனது செலவில் சரிசெய்து தரவேண்டும். அடுத்து டிவி சரியாக இயங்க தரமான மின்சாரம் வேண்டும். ஸ்பைக் பஸ்டர் வேண்டும். கேபிள் இணைப்பு இருந்தால்தான் கொஞ்சமாவது உருப்படியான content கிடைக்கும். மக்களுக்கு கலர் டிவி தரும் கேளிக்கை வேண்டும் என்பதால் அதற்குத் தேவையானவற்றைத் தாங்களே செய்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் கலர் டிவி விநியோகம் எந்த அளவுக்கு வெற்றி என்று ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல நாளைக்கு குறைந்தவிலைக் கணினியை ஏழை மக்களிடையே கொண்டுசேர்க்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்கலாம்.

எனக்கு இந்த 'கலர் டிவி' விவகாரத்தில் வெறுப்பு இருந்தாலும் இப்பொழுது என் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டுள்ளேன்.

ஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா

சிறப்பு விருந்தினர் ரத்தன் டாடா. இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதைப்போன்ற கவுரவ டாக்டர் பட்டங்களால் என்ன பயன் என்று புரியவில்லை. இதனால் யாருக்கு என்ன லாபம்? ஏற்கெனவே ரத்தன் டாடாவுக்கு சில கவுரவ டாக்டர் பட்டங்கள் கிடைத்துள்ளன. இதற்குமேல் ஐஐடி மெட்ராஸ் வழங்கி என்ன ஆகப்போகிறது?

ரத்தன் டாடா தன் பேச்சின்போது பட்டம்பெறும் இளைஞர்கள் தத்தம் துறைகளில் தலைவர்களாக வர முயற்சி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். செய்வது எதுவாக இருந்தாலும் ஐந்து விஷயங்களை மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றார்.

1. Integrity - கண்ணியம் / வழுவாமை
2. Social responsibility - சமூகக் கடமை
3. Technical excellence and not just money - பணத்துக்காக மட்டும் என்றில்லாமல் நுட்பத்துறையில் மேன்மைக்காகவும் செய்யவேண்டும்.
4. Team work - கூட்டுமுயற்சி
5. Be just and fair to all the stakeholders - அனைத்துப் பங்காளிகளுக்கும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளுதல்

பட்டம் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல, இன்ன பிறருக்கும் தேவையான அறிவுரைகள்.

நமது சிந்தனை பொதுவாகவே 'சிறியதாகவே' உள்ளது. அதனை மாற்றி பெரிய அளவில் சிந்திக்க முயற்சி செய்யவேண்டும் என்றார்.

மற்றபடி புதிய சிந்தனைகள் என்று எதுவும் இல்லை அவரது பேச்சில்.

தி ஹிந்து செய்தி
படங்கள்

Thursday, July 27, 2006

இஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா

நிலமெல்லாம் ரத்தம் இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையை எளிமையான முறையில் அனைவரும் புரிந்துகொள்ளுமாறு எழுதப்பட்ட, குமுதம் ரிப்போர்டரில் வந்த தொடர். அது கிழக்கு பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. புத்தகத்தை எழுதிய பா.ராகவனுடன் இப்பொழுது இஸ்ரேல் லெபனான் மீது நடத்தும் தாக்குதல் பற்றி சிறிதுநேரம் பேசினேன். அந்த podcast இங்கே, உங்களுக்காக.



படிக்க வேண்டிய பிற பதிவுகள்:

இஸ்ரேலின் பயங்கரவாதம், சசியின் டைரி
Is Israel the lone culprit?, Snap Judge

ஐஐடி மெட்ராஸில் ரத்தன் டாடா

நாளை (வெள்ளி, 28 ஜூலை 2006) ஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. ரத்தன் டாடா சிறப்பு விருந்தினராக பேச வருகிறார். சென்ற ஆண்டு மாண்டேக் சிங் அஹ்லுவாலியா வந்திருந்தார். அதைப்பற்றிய என் கவரேஜ் [ஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழா | 8% விகிதத்தில் வளருமா இந்தியா?]

[நான் பட்டம் வாங்கியபோது வந்த சிறப்பு விருந்தினர் அப்துல் கலாம். அப்பொழுது அவர் குடியரசுத் தலைவராக இல்லை. பாதுகாப்புத்துறை சிறப்பு ஆலோசகராக இருந்தார் என்று நினைக்கிறேன்.]

Wednesday, July 26, 2006

நாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...

ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி இருவரும் சந்தித்து மேடை நாடகங்கள் (எழுதுவது, நடிப்பது, மேடையேற்றுவது) பற்றி விரிவாகப் பேசுகிறார்கள்.

தி ஹிந்து மெட்ரோ பிளஸ் இணைப்பில்.

[தரையில் உள்ள புத்தகங்கள் மூன்றும் என்னென்ன என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு காத்திருக்கிறது!]

Tuesday, July 25, 2006

தமிழக பட்ஜெட் 2006 - ஒரு கண்ணோட்டம்

சனிக்கிழமை (22 ஜூலை 2006) அன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான என் பார்வை.

1. விவசாயக் கூட்டுறவுக் கடன் ரத்து: கடன் ரத்து பற்றி நான் நிறைய எழுதியுள்ளேன். இப்பொழுதுதான் ஓரளவுக்கு எப்படி கடன் ரத்தை சரிக்கட்டப்போகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

மொத்தம் ரத்து செய்யப்பட்ட கூட்டுறவுக் கடன்: ரூ. 6,866 கோடி. கூட்டுறவு வங்கிகள் நபார்ட் வங்கியிடமிருந்து கடன் வாங்கி அதிலிருந்து விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து வந்துள்ளது. மேற்படிக் கடன் ரத்தால் கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்குக் கொடுக்கவேண்டிய கடன் ரூ. 1,668 கோடியை இனி தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். ஆக தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்குத் திருப்பித் தரவேண்டிய கடன் தொகை: ரூ. 5,198 கோடி. இந்தப் பணத்தை ஒரேயடியாக கூட்டுறவு வங்கிகளுக்குத் தராமல் ஐந்தாண்டுகளில் தருவதாகச் சொல்கிறார்கள். முதல் கட்டமாக இந்த நிதியாண்டில் ரூ. 1,000 கோடியைத் திருப்பித் தருகிறார்கள்.

இதனால் கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள், இந்த வங்கிகளில் பணத்தை வைப்பு நிதியாக வைத்துள்ளவர்கள் ஆகியவர்களுக்குத் தொல்லை தரக்கூடியது. வங்கி ஊழியர்கள் சிலர் வலைப்பதிவு வைத்துள்ளார்கள். அவர்கள் இதைப்பற்றி மேற்கொண்டு அலசவேண்டும். சில கூட்டுறவு வங்கிகள் திவாலாக வாய்ப்புகள் உள்ளன.

மஹாராஷ்டிராவையும் தமிழ்நாட்டையும் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மஹாராஷ்டிராவில் 633 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அவற்றுக்கு மொத்தமாக 4,232 கிளைகள் உள்ளன. தமிழகத்திலோ 133 கூட்டுறவு வங்கிகளும் 180 கிளைகளும் உள்ளன. 2005-ல் மஹாராஷ்டிராவில் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரூ. 65,398 கோடி பெறுமான டெபாசிட்கள் இருந்தன. தமிழகக் கூட்டுறவு வங்கிகளிலோ மொத்த டெபாசிட்கள் ரூ. 3,022 கோடி. இதிலிருந்தே தமிழகக் கூட்டுறவு வங்கிகள் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளன என்பது தெரியவரும். கூட்டுறவு வங்கிகள் தமது டெபாசிட்டிலிருந்தும் நபார்ட் போன்ற வங்கிகளிடமிருந்தும் பிறரிடமிருந்தும் வாங்கிய கடன்கள் மூலமும் விவசாயக் கடன்களைக் கொடுத்து வந்தன. இதிலிருந்து ரூ. 5,198 கோடியை அரசியல் காரணங்களால் துடைத்து எறிந்துவிட்டு, வெறும் ரூ. 1,000 கோடியை மட்டும் இந்த ஆண்டுக்கு என்று கொடுத்தால் தமிழகத்தில் எத்தனை கூட்டுறவு வங்கிகள் பிழைப்பு நடத்தும்? அவர்களுடைய பேலன்ஸ் ஷீட் எப்படி இருக்கும்? இந்த வங்கிகளில் பணம் போட்ட, கடன் வாங்காத டெபாசிட்தாரர்களின் நிலை என்னாகும்?

தமிழக அரசு என்ன செய்திருக்கலாம்? விவசாயிகளது கடன் ரத்து செய்யப்படவேண்டியது அவசியம் என்று உணர்ந்தால் அந்தப் பணத்தை கடன் பத்திரம் (Bonds) வெளியிடுவதன்மூலம் பொதுமக்களிடமிருந்து திரட்டி கூட்டுறவு வங்கிகளுக்குக் கொடுத்து அவற்றுக்கு பாதகம் வராமல் காக்கலாம். இப்பொழுது தமிழக அரசு செய்திருப்பது கண்டிக்கவேண்டியது.

2. பிற விவசாயத் திட்டங்கள்:

* விவசாயக் கடன்களுக்கான வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவு வங்கிகள் நஷ்டமடையாமல் இருக்க அரசே இந்த இழப்பை ஈடுகட்டும். => இது நல்ல விஷயம். வரவேற்கப்படவேண்டியதுதான்.

* விவசாயம் தொடர்பான (நீர்ப்பாசனம்) செலவுகள் சென்ற ஆண்டில் ரூ. 854 கோடியாக இருந்தது இந்த ஆண்டு ரூ. 977 கோடியாக உயர்த்தப்படுகிறது. நல்ல விஷயம்.

* மூன்று இடங்களில் குளிர்சாதன வசதி கொண்ட வணிக முனையங்களும், மேலும் மூன்று இடங்களில் குளிர்சாதனக் கிடங்கு வசதிகளும் தொடங்கப்பட உள்ளன. இதுவும் மிக நல்ல விஷயம். ஆனால் ஆறு போதமாட்டா. முப்பது தேவை (மாவட்டத்துக்கு ஒன்றுவீதம்). ஆனால் வரும் வருடங்களில் வருடத்துக்கு ஆறு வீதம் செய்தால் அதுவும் நல்லதுதான். பாராட்டுகள்.

* பாசனம், தண்ணீர் நிர்வாகம் தொடர்பாக பல நல்ல திட்டங்களை முன்வைக்கிறார்கள். செயல்பாடு எப்படி உள்ளது என்பதைக் கவனமாகப் பார்க்கவேண்டும்.

3. நியாய விலைக் கடைகள்: இதைப்பற்றியும் நான் ஏற்கெனவே நிறைய எழுதிவிட்டேன். நிதியமைச்சர், அரிசி மான்யமாக ரூ. 1,950 கோடி போதும் என்று சொல்கிறார். என் கணக்கின்படி ரூ. 2,500 கோடியாவது செலவாகும். எனவே இந்த நிதியாண்டு முடிந்ததும் அடுத்த நிதியாண்டின்போது குறிப்பிட்ட அமைச்சகம் வெளியிடும் Policy Notes மூலம் நிஜமாகவே எத்தனை செலவானது என்பதைப் பார்ப்போம்.

மேலும் அரிசி கடத்தல் அதிகமாகும் என்பதால் நியாய விலைப் பொருள்களைக் கடத்துபவர்களுக்கு குண்டர் சட்டத்தின்படி தண்டனை அளிக்கப்படும் என்கிறார். இதற்கு குண்டர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டி இருக்கலாம்.

4. அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டணங்களைக் குறைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர். இந்தச் செய்தி என் கண்ணில் படவில்லை. இது பற்றி மேற்கொண்டு விவரங்கள் ஏதும் தெரிந்தால் எனக்குத் தகவல் சொல்லவும்.

அண்ணா பல்கலைக்கழகம் போன்று திருச்சியிலும் கோவையிலும் இரண்டு பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும் என்கிறார். இது குழப்பத்தை விளைவிக்கும் என்பது என் கருத்து. முதலில் ஒவ்வொரு பிராந்தியப் பல்கலைக்கழகத்தின் கீழும் இருந்த பொறியியல் கல்லூரிகளை ஒன்றுதிரட்டி அவற்றை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வருமாறு அமைத்தனர். பின்னர் மீண்டும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளை மேய்க்க ஆங்காங்கே பல்கலைக்கழகங்களை அமைப்பதன் தேவை என்ன? மேலும் இதுபோன்ற கல்வித்துறை தொடர்பான Policy விஷயங்களை நிதியமைச்சர் ஏன் பட்ஜெட் அறிக்கையில் பேசவேண்டும் என்று புரியவில்லை.

மருத்துவக் கல்லூரிகள்: அவசியமான விஷயங்களை மேற்கொண்டு விளக்கங்கள் சொல்லாமல் விட்டுவிடுகிறார் நிதியமைச்சர். மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் இதற்கான வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார் நிதியமைச்சர். தமிழகத்தில் இருக்கும் MBBS மருத்துவக் கல்லூரிகள் பத்து மாவட்டங்களுக்குள் அடங்கி விடுகின்றன. இதில் நான் நர்சிங், ஹோமியோபதி, ஆயுர்வேதம், பிஸியோதெரப்பி போன்றவற்றைச் சேர்க்கவில்லை. ஆக இன்னமும் 19 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கிடையாது. ஆனால் விழுப்புரத்தில் மட்டும் மருத்துவக் கல்லூரி தொடங்கப்போவதாக அறிவிப்பு மட்டும் கொடுக்கிறார்.

ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க எத்தனை செலவாகும்? ரூ. 100-150 கோடி ஆகும் என்கிறார்கள். அப்படியானால் 19 இடங்களில் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 1,900 கோடி தேவை. பார்க்கப்போனால் இது பெரிய தொகையே அல்ல. (கலர் டிவி திட்டத்துக்கு ஆகும் செலவைப் பாருங்கள்!)

ஏன் பெரிய அளவில் இந்த வருடம் முதற்கொண்டே மீதமுள்ள 19 மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்றும் அதற்காக ரூ. 1,900 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் அதிரடி அறிவிப்பு செய்யக்கூடாது? அல்லது குறைந்த பட்சம் இந்த ஆண்டு 9, அடுத்த ஆண்டு 10 என்று செய்யக்கூடாது?

ம்ஹூம். ஒன்றே ஒன்று.

எது முக்கியம், எது அவசரத் தேவை. மருத்துவக் கல்லூரியா, கலர் டிவியா?

5. தொழில்துறை: சிறப்புத் தொழில்பேட்டைகளில் (SEZ) ரூ. 100 கோடிக்கு மேல் முதலீடு செய்து கணினிகளைத் தயாரித்து விற்பவர்களுக்கு பத்து வருடங்களுக்கு மொத்த விற்பனை வரியிலிருந்தும் விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. பாராட்டுகள்.

மற்றபடி உபயோகமாக எதையும் சொல்லவில்லை.

6. கலர் டிவிக்கு என்று ரூ. 750 கோடி + 30,000 டிவிக்களுக்கான காசு (ஒரு டிவி = குறைந்தது ரூ. 3,333 என்றால் 30,000 டிவிக்கள் = ரூ. 10 கோடி) = ரூ. 760 கோடி. ஆக மொத்தம் இந்தாண்டு 22.5 லட்சம் 14" கலர் டிவிக்கள் வழங்கப்படலாம். ரூ. 750 கோடி = 22.5 லட்சம் குட்டி கலர் டிவிக்கள் = 8 புது மருத்துவக் கல்லூரிகள். இங்கு பணம் வீணாவதைவிட மருத்துவக் கல்லூரிகளாக மாறினால் சந்தோஷம். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

முதல் 30,000 கலர் டிவிக்களுக்கான டெண்டர் நேற்றோடு முடிவடைந்துவிட்டது. ஜெயித்தது யார்? என்ன விலைக்குத் தரப்போகிறார்கள் போன்ற விவரங்கள் கூடிய சீக்கிரம் வெளியாகும். பார்ப்போம்.

7. சாலைகள்: சாலைகள் பராமரிப்புக்கு என ரூ. 804 கோடி. புதிதாக சாலைகள், பாலங்கள் அமைக்க ரூ. 2,461 கோடி. மத்திய அரசின் புண்ணியத்தில், மத்திய அரசின் பணத்தில் 4,122 கிமீ கிராமச் சாலைகள் சீரமைக்கப்படுமாம். மதுரை, திருப்பூர் இரண்டுக்கும் தலா ரூ. 70 கோடி நகரச் சாலைகள் அமைக்க, சீராக்க.

(இந்தச் செலவு குறைவு. இதைப்போல இரண்டு, மூன்று மடங்கு சாலைகளில் செலவழிக்க வேண்டியிருக்கும்.)

8. மின்சாரம்: தமிழக அரசு மின்சார உற்பத்திக்கு என செலவழிக்கப்போவது = ஜீரோ. ஜெயங்கொண்டம் திட்டத்தை நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனுக்குக் கொடுத்தாகிவிட்டது. கூடங்குளம் மத்திய அரசின் திட்டம். எனவே மாநில அரசின் பங்கு பிறர் தம் வேலையைச் செய்கிறார்களா என்று மேற்பார்வை பார்ப்பது.

அவ்வளவுதான்.

வருங்காலத் திட்டங்கள் = ஜீரோ.

மற்றபடி மின்சார விநியோகம் தொடர்பாக அரசு கொஞ்சம் பணம் செலவழிக்கப் போகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழைக் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் ஆகியவற்றுக்கான மான்யத் தொகை ரூ. 1,530 கோடி.

9. சென்னை மெட்ரோ ரயில்: மெட்ரோவே சென்னைக்கு வழி என்று தீர்மானித்திருக்கிறார்கள். சரி, அதற்கு என்ன செலவாகும்? யார் செய்வார்கள்? தெரியாது. வரும் வருடங்களில் ஏதேனும் விடிவுகாலம் பிறக்கலாம். இந்த பட்ஜெட்டில் அதற்கெல்லாம் தொகை ஒதுக்கப்போவதில்லை. (மும்பை மெட்ரோ திட்டம் வேலை தொடங்கியாகிவிட்டது.)

10. தண்ணீர்: கிராமப்புறங்களில் குறைந்தபட்ச தண்ணீர் வழங்கும் திட்டங்களுக்கு ரூ. 411 கோடி. காவேரித் தண்ணீரை (??) ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கொண்டுசென்று அங்கு குடிநீர் வழங்க ரூ. 671 கோடி.

11. இலங்கைத் தமிழ் அகதிகளுக்காகும் செலவு: ரூ. 34.53 கோடி. (எதற்கெல்லாமோ ஏகப்பட்ட செலவுகள் செய்யும்போது இதனை ரூ. 100-150 கோடியாக உயர்த்தி அவர்களுக்குக் கண்ணியமான வாழ்வைத் தர முயற்சி செய்யலாம்.)

12. மத்திய அரசின் ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். (ஏற்கெனவே தமிழக அரசில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கமாக உள்ளது. ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் வரும்போது அப்படியே ஏற்றால் கஜானா காலி!)

13. மதிப்புக் கூட்டு வரி ஜனவரி 2007 முதல் அமல். மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

14. "தமிழ்மொழியில் தயாரிக்கப்படும் உரிமம் அளிக்கப்பட்ட மென்பொருள்களுக்கு" விற்பனை வரி விலக்கப்படுகிறது. Will a macromedia flash content produced in Tamil (or in dual language - Tamil & English), packaged in a CDROM be considered as "Tamil software"?

15. மறுவிற்பனை வரி நீக்கப்படுகிறது. இது மிகவும் உபயோகமானது. நன்றி.

(மீதி அடுத்த பதிவில்)

Sunday, July 23, 2006

'தராகி' சிவராம் கொலையாளி?

இலங்கை பத்திரிகையாளர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) கடத்தப்பட்டு ஏப்ரல் 28, 2005 அன்று கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையைச் செய்ததாக ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா எனப்படும் PLOTE இயக்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு, ஜூலை 20, 2006 அன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவரது கடத்தல் மற்றும் கொலைக்குக் காரணமாக இந்திய அரசின் 'RAW' முதல் வேறு பலரும் தமிழீழ ஆதரவாளர்களால் குற்றம் சாட்டப்பட்டனர்.

தராகி எழுதிவந்த தளமான http://www.tamilnet.com/ இதுவரையில் மேற்படி செய்தியைப் பற்றிப் பேசவில்லை, கருத்து தெரிவிக்கவில்லை.

Friday, July 21, 2006

சிறுவர்கள் எடுத்த படம்

இன்று இரவு (வெள்ளி, 21 ஜூன்ஜூலை 2006) சென்னை ஹாரிசன் ஹோட்டலில் (சேத்துப்பட்டு) 7.00 - 9.00 மணி அளவில் நாலந்தாவே & யூனிசெஃப் இணைந்து வழங்கும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் எடுத்த சில படங்கள் காண்பிக்கப்பட்டன.

1. கல்வெட்டு - 8 வயது குழந்தைத் தொழிலாளியின் சோகக் கதை (6 நிமிடம்)
2. மெழுகுவர்த்தீ - விடலைப் பையன்கள் செய்யும் கேலியை தைரியமாக எதிர்கொள்ளும் பெண் (2 நிமிடம்)
3. 'மக்-அப்' மங்கம்மா - பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மீது ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் (15 நிமிடம்)

முதல் படம் சோகமான கதை என்றாலும் மனத்துக்கு ஏற்பில்லாத கடைசி காட்சியும் வசனமும் உறுத்தின. தந்தையின் கையில் மாட்டி நிறைய கஷ்டங்களை அனுபவித்த சிறுவன் கடைசியில் தான் காவல்துறை அதிகாரியாக மாறி தன் தந்தையைக் கொல்ல விரும்புகிறான். அதை symbolic-ஆக ஒரு சிறு மண்கட்டியை பெரிய கல் ஒன்றைத் தூக்கிப்போட்டு நசுக்குவதாகக் காட்டுகிறது காட்சியமைப்பு.

இரண்டாவது படம் அழுத்தமான கதை.

மூன்றாவது படம் - பள்ளிச் சிறுவர்கள் சினிமா போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பாடங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று விளக்குவது. "சினிமா பிடிக்குது, அதனால புரியுது" என்று ஒரு சிறுவன் சொல்லும்போது கிராமப் பள்ளிக்கூடங்கள் மீதான விமரிசனம் அற்புதமாக வெளிவருகிறது. நியூட்டனின் மூன்றாவது விதியை, புரிந்துகொள்ளாமல் (ஆங்கிலத்தில்) மனப்பாடம் செய்யும் சிறுமி, பக்கத்தில் இருக்கும் மற்றொருத்தி நெல்லிக்காய்களைக் கொண்டு விளக்கும்போது எளிதாகப் புரிந்துகொள்கிறாள். அதன்மூலம் எத்தகைய கல்வி தங்களுக்குத் தேவை என்று சிறுவர்களே தங்கள் பிரச்னைகளுக்கான தீர்வை முன்வைக்கின்றனர்.

நாலந்தா-வழி... நிறுவனம் பற்றிய முழுமையான தகவல் என்னிடம் இல்லை. அடுத்த வாரம் ஸ்ரீராம் ஐயருடன் பேசுவேன். அப்பொழுது அவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டதை வைத்து மற்றொரு பதிவை எழுதுகிறேன்.

படங்களுக்கான கதை கிருஷ்ணகிரி மாவட்டச் சிறுவர்களிடமிருந்து வந்துள்ளது. அந்தக் கதைகளைத் திரைவடிவம் கொடுத்து அதே சிறுவர்களை வைத்துப் படமாக்கியிருந்தனர் நாலந்தே-வே குழுவினர்.

படம் திரையிடல் நேரத்தில் சிறு அறை முழுவதும் ஏகப்பட்ட பேர் நிரம்பியிருந்தனர். ஊடகங்களிலிருந்து நிறைய பேர் வந்திருந்ததாலும் பலரும் வீடியோ கேமராக்களைக் கொண்டு அரங்கை நிறைத்ததாலும் பலரால் படங்களைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை.

சிறப்பு விருந்தினர்கள் யூனிசெஃப்பின் இந்தியப் பிரதிநிதி செசிலியோ அடோர்னா, தி ஹிந்து முதன்மை ஆசிரியர் என்.ராம் ஆகியோர்.

[22 ஜூலை 2006-ல் சேர்த்தது: தி ஹிந்து செய்தி]

நாளை தமிழக பட்ஜெட்

நாளை, இந்த நிதியாண்டின் மீதமுள்ள ஒன்பது மாதங்களுக்கான வரவு எதிர்பார்ப்பு, செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.

தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் உபயோகமற்றதாகத்தான் இருக்கும் நிதியமைச்சரின் பேச்சு. பேச்சு முடிந்ததும் தமிழக அரசின் இணையத்தளத்தில் கிடைக்கும் ஆவணத்தின் வாயிலாகத்தான் என்ன திட்டம் என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அதுபற்றி சில முன்னாள் அரசு அதிகாரிகள், விஷயம் தெரிந்தவர்களிடம் பேசி podcast ஆகச் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

உலகத் தமிழர் இயக்கம் மீதான விசாரணை

National Post செய்தி: Mounties call Tamil group 'arm of Tigers'

கனடாவில் உள்ள அமைப்பான 'உலகத் தமிழர் இயக்கம்' (World Tamil Movement) மீது கனடா காவல்துறை RCMP 2002-ம் ஆண்டு முதல் விசாரணை மேற்கொண்டிருந்தது. தமிழர் நலனுக்கான லாபநோக்கில்லாத அமைப்பு என்ற பெயரில் இருந்தாலும் இந்த அமைப்பு விடுதலைப் புலிகளின் முகப்பு நிறுவனம் என்றும் கனடாவில் பல்வேறு வழிகளில் பணம் சேர்ப்பதன்மூலம் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வாங்க இந்த அமைப்பு உதவி செய்கிறது என்றும் நேற்று ஒண்டாரியோ மாகாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் RCMP தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி அன்று விடுதலைப் புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடை செய்தது. அதைத் தொடர்ந்து WTM சில ஆவணங்களை மறைக்க முயற்சி செய்கிறார்கள் என்று அறிந்த RCMP, WTM-ன் Montreal கிளையை ஏப்ரல் 13-ம் தேதி சோதனையிட்டுள்ளனர். டொராண்டோ கிளையை ஏப்ரல் 22-ம் தேதி சோதனையிட்டுள்ளனர்.

ஆந்திரா பெறும் 'இலவச' மின்சாரம்!

இன்று தி ஹிந்துவில் தென்னிந்திய மின்னிணைப்பு வலையிலிருந்து ஆந்திரா எவ்வாறு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது என்று ஒரு கட்டுரை வந்துள்ளது.

நள்ளிரவு முதல் அதிகாலை 5.00 மணி வரையில் தமிழகத்துக்கு அதிக மின்சாரம் தேவைப்படுவதில்லை. ஆனால் பல மின் நிலையங்களும் அந்த நேரத்திலும் மின்சாரத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கும். தமிழகத்தில் பொதுவாகவே காற்றாலைகளும் தனியார் மூலம் உற்பத்தி செய்யப்படும் Captive மின்சாரமும் அதிக அளவில் உள்ளன. இவை இரவும் தொடர்ந்து மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த மின்சாரத்தை தமிழக மின்வாரியம் குறிப்பிட்ட விலைக்கு வாங்கி மின் வலைக்குள் (Power Grid) செலுத்துகிறது.

இப்படி உபரி மின்சாரம் வலைக்குள் வரும்போது மின் அலை வரிசை அதிகமாகிறது. சாதாரணமாக அலைவரிசை 50 ஹெர்ட்ஸ் இருக்கவேண்டும். மின்சாரம் அதிகமாக இழுக்கப்படும்போது இந்த அலைவரிசை 49.5 என்று குறையும். மின்சாரத்தின் தேவை குறைவாக இருக்கும்போது, உற்பத்தி அதிகமாக இருக்கும்போது அலைவரிசை 50.5 என்று அதிகமாகும். இப்படி அதிகமான அலைவரிசை இருக்கும்போது வலையிலிருந்து அதிகமாக மின்சாரத்தை எடுத்தால் யூனிட் செலவு குறைகிறது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆந்திர அரசு விவசாயிகளுக்குக் கொடுக்கும் இலவச மின்சாரத்தை இரவு நேரத்தில் வலையிலிருந்து எடுத்துக்கொள்கிறது. இதற்கு ஆந்திர அரசுக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ஜீரோ!

இதில் பாதிக்கப்படுவது தமிழக மின்வாரியம். ஏனெனில் இந்த உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தமிழக காற்றாலைகள். இவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழக மின்வாரியம் கொடுக்கவேண்டும்.

இதற்கு ஒரே மாற்று தமிழக மின்வாரியம் தன்னிடம் இருக்கும் உபரி மின்சாரத்தை வேறு யாரிடமாவது - பிற வட மாநிலங்களுக்கு - விற்க முன்வரவேண்டும். அதை எளிதாகச் செயல்படுத்தமுடியாமல் பல பிரச்னைகள் உள்ளன.

===

சரி, இவ்வளவுதானா? தமிழகத்துக்கு மின்சாரத் தேவையே இல்லையா?

* இன்னமும் பல தமிழக கிராமங்களுக்கு மின்சார வசதி கிடையாது. அதைச் செய்துகொடுத்து, இரவு நேரங்களில் மட்டுமாவது இந்த கிராமங்களுக்கு மிகக்குறைந்த விலையில், அல்லது இலவசமாக மின்சாரம் வழங்கலாம்.

* தமிழகம் முழுவதுமே நேரத்துக்குத் தகுந்தாற்போல மின் கட்டணம் வசூல் செய்யலாம். இரவு நேரம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 1 என்ற கணக்கிலும் Peak Hour சமயத்தில் அதிகமாகவும் கட்டணம் வசூலிக்குமாறு மின்சார மீட்டர்களை மாற்றலாம். (Like metered telephone calls, Internet time etc.)

* ஆந்திர விவசாயிகளுக்கு ஆந்திர அரசு செய்வதுபோலவே தமிழக விவசாயிகள் இரவு நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்த - இலவசம் அல்லது யூனிட்டுக்கு 50 பைசா - என்று வசூல் செய்யலாம்.

* இரவு நேரம் தொழிற்சாலைகள் ஷிஃப்ட் நடத்தினால் குறைந்த விலைக்கு மின்சாரம் வழங்கலாம்.

* இரவு நேரங்களில் மக்கள் Inverterகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்துக்கொண்டு பகல் நேரத்தில் - Peak Hour நேரத்தில் - அவற்றைப் பயன்படுத்தினால் யூனிட் விலை குறையும் என்று சொல்லலாம்.

* மாபெரும் பேட்டரிகளை இரவு நேரத்தில் தமிழக மின்வாரியமே இயக்கி உபரி மின்சாரத்தை அவற்றுள் தேக்கி காலை நேரங்களில் இந்த பேட்டரிகளிலிருந்து மீண்டும் மின்சாரத்தை Grid-டுக்குள் செலுத்தலாம்.

(யாராவது எலெக்ட்ரிகல் பொறியாளர் நான் சொல்வதில் எவையெல்லாம் சாத்தியப்படுவன என்று சொல்லுங்கள்.)

ஆனால் இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு "அய்யோ, ஆந்திரா திருடறான்" என்பதுபோல புலம்பல் மட்டும்தான் நம்மூரிலிருந்து வெளிவருகிறது.

Thursday, July 20, 2006

உள்ளாட்சித் தேர்தல்

மேயர், நகரமன்றத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் கிடையாது என்று தமிழக அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது.

இதற்காக தமிழக அரசு சொல்லும் சாக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. உள்ளாட்சி அமைப்பு சட்டமன்ற அமைப்பைப் பின்பற்றித்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.

உள்ளாட்சி அமைப்பிலாவது கட்சிகளுக்கு வெளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தோன்றியது. அல்லது இரண்டு வலுவான கூட்டணிக்கு வெளியிலிருந்து பிற கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பாவது இருந்தது. உதாரணத்துக்கு புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் ஒரு நகரமன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றினார்.

உள்ளாட்சி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதால் திமுக ஆட்சியை ஒரேயடியாகக் குற்றம் சொல்லமுடியாது. ஆனால் இதுபோன்ற பெரும் மாற்றங்களைச் செய்யும்போது முடிந்தவரை பிற கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு அதன்படி செய்வது நல்லது. அடுத்தமுறை ஜெயலலிதா ஜெயித்து வந்தால் மீண்டும் மேயர், தலைவர் தேர்தல்களில் மாற்றத்தைக் கொண்டுவருவார் என்றால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும்.

விவசாய வங்கிக்கடன் ரத்து

இன்றைய தி ஹிந்து செய்தியின்படி மேற்கொண்டு சில விவரங்கள்:

1. தமிழக அரசு ரூ. 6,866 கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்தது. அதில் கிட்டத்தட்ட 40% கடன்கள், அதாவது ரூ. 2,750 கோடி மதிப்புள்ள கடன்களை வெறும் 10% வாங்கியுள்ளனர். ஆக ஏழைகளைவிட பலனடைந்தவர்கள் பணக்காரர்களே. சிலருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம்.

2. இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பது விவசாயக் கூட்டுறவு வங்கிகள். தமிழக அரசு இந்த வங்கிகளுக்கு இந்தக் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் இதை தமிழக அரசு உடனடியாகச் செய்யப்போவதில்லையாம். வரும் ஐந்து வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யப்போகிறார்கள். வருடத்துக்கு சுமார் ரூ. 1,300 கோடி கொடுக்கப்போகிறார்கள். இதனால் யார் பாதிக்கப்படப்போகிறார்கள்? விவசாயிகள்தாம்! ஏனெனில் விவசாயிகள் மீண்டும் கடன் கேட்டால் கொடுப்பதற்கு விவசாயக் கூட்டுறவு வங்கிகளிடம் பணம் தேவைப்படும் அளவு இருக்காது.

3. "நியாயமான" விவசாயி, அதாவது கடனைத் திருப்பிக் கொடுத்த விவசாயி - இவரது கடன் தொகையும் இவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால் எப்பொழுது? தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்த பின்னர். அதாவது பணத்தை ஒழுங்காகச் செலுத்திய விவசாயிகள் இன்னமும் ஐந்து வருடங்கள்வரைகூடப் பொறுத்திருக்கவேண்டியிருக்கும்.

4. ஐந்து வருடங்கள் என்று காலம் தாழ்த்தாமல் ஒரேயடியாகப் பணத்தை வங்கிகளுக்கு கொடுக்கவேண்டும் என்று கூட்டுறவு வங்கிகளின் ஊழியர் சங்கம் மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. பல கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலை படுமோசமாக இருப்பதால் மேற்படி பணம் உடனடியாக அவர்களுக்குக் கிடைக்காவிட்டால் இந்த வங்கிகளால் மேற்கொண்டு விவசாயிகளுக்குக் கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

Sunday, July 16, 2006

புதுவையில் அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி

நேற்று முதல் புதுவையில் ரேஷன் கார்டுகள் அனைத்துக்கும் இலவசமாக பத்து கிலோ அரிசி வழங்கத் தொடங்கியுள்ளனர். காமராஜர் பாவம். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 36 கோடி அதிகச் செலவாகும்.

இந்தப் பணம் முழுமையாக "ஏழைகளுக்கு மட்டும்" என்று பயன்பட்டால் தேவலாம்.

புதுவையும் தமிழகம் வழியில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளதாம். காசுக்கு வந்த கேடு.

Friday, July 14, 2006

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006



சென்ற ஞாயிறோடு நெய்வேலி புத்தகக் கண்காட்சி முடிவுற்றது.

இம்முறை இரண்டு பிரச்னைகள் இருந்தன. ஒன்று டிஸ்-இன்வெஸ்ட்மெண்ட் தொடர்பான வேலை நிறுத்தப் போராட்டம். இதனால் அதிகம் பாதிப்பில்லை. ஒருநாள் மாலையில்தான் கண்காட்சி தொடங்கியது. மற்றொன்று நெய்வேலி ஊழியர்களது சம்பளத்தில் வீட்டுவரி தொடர்பான பிடித்தம். இதனால் disposable income கொஞ்சமாவது குறைந்திருந்தது. (என்.எல்.சி ஊழியர்கள் இந்த விவகாரத்தை முன்வைத்தும் போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.)

சென்ற ஆண்டு வந்த சில தமிழ் பதிப்பாளர்கள் இந்த ஆண்டு நெய்வேலிக்கு வரவில்லை. காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கியப் பதிப்பாளர்கள் வரவில்லை. வானதி, கலைஞன் போன்ற சிலரும் வரவில்லை. கிழக்கு, நர்மதா, கவிதா, கண்ணதாசன், திருமகள் நிலையம், மணிமேகலை, பழனியப்பா பிரதர்ஸ், தமிழினி போன்ற பலர் வந்திருந்தனர். கீழைக்காற்று, அலைகள், பாரதி புத்தகாலயம், என்.சி.பி.எச் போன்ற இடதுசாரிச் சிந்தனை புத்தகப் பதிப்பாளர்கள், திராவிடன் புத்தக நிலையம், நக்கீரன், ராமகிருஷ்ண மடம் போன்றோர் இருந்தனர். ஈஷா யோகம், 'இயேசு அழைக்கிறார்' (சரியான பெயர் ஞாபகம் இல்லை) ஆகியோர் புதுவரவுகள். உமா, பிரேமா பிரசுரம், செட்டியார் பதிப்பகம் என்று ஆரம்பித்து பல தமிழ் பதிப்பாளர்கள் இருந்தனர்.

பள்ளி (CBSE), கல்லூரிப் புத்தகங்கள் விற்கும் ஹிக்கின்பாதம்ஸ், பெல் கோ ஆகியோர் எப்பொழுதும் போல இந்த ஆண்டும் நல்ல விற்பனை செய்தன.

குழந்தைகள் புத்தகங்கள் (ஆங்கிலம்) நன்றாக விற்பனை ஆயின. பெரியவர்கள் பொதுவாக ரூ. 100க்குக் கீழாக உள்ள புத்தகங்களை வாங்கினர். அதற்குமேல் என்றால் தயங்கினர்.

இலக்கியம் வாங்குவது பெரிதும் குறைந்திருந்தது. சுஜாதா புத்தகங்களைக் கேட்டுத் தேடினர். ஆனால் உயிர்மை புத்தகங்கள் சிலவே சில விற்பனையாளர்களிடம் இருந்ததாலும் திருமகள் நிலையத்திலும் மிகச்சிலவே இருந்ததாலும் வாசகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான்.

சமையல் புத்தகங்கள், ஜாதகம், ராசிக்கல், பிரமிட், வாஸ்து ஆகியவை தொடர்ந்து விற்றாலும் முந்தைய வருடங்களிலிருந்து வெகுவாகவே குறைந்துள்ளன.

கிழக்கு புத்தகங்களைப் பொருத்தமட்டில் விற்பனை பெரிதும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 100% விற்பனை அதிகரித்துள்ளது (x, 2x, 4x). அடுத்து என்ன வாழ்க்கை வரலாறுகள், அரசியல் வரலாறுகள், நிர்வாகவியல் சார்ந்த புத்தகங்கள் வரப்போகின்றன என்று கேட்டு ஆர்வத்தோடு வாங்கினார்கள்.

நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் விற்பனைக்கு மேலான பல அம்சங்களும் உள்ளன. தென் தமிழகத்திலிருந்து பல எழுத்தாளர்கள் வருகின்றனர். பல புத்தக விற்பனையாளர்கள் வருகின்றனர். பலருடன் பேசமுடிகிறது.

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஈடாக மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கண்காட்சிகள் நடைபெறாத ஒரே காரணத்தால் நெய்வேலி கண்காட்சி ஒரு சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் ஈரோடு கண்காட்சிக்குப் பின்னணியில் உழைப்பவர்களைப் பார்க்கும்போது தமிழகத்தின் இரண்டாவது பெரிய புத்தகக் கண்காட்சி ஈரோடுதான் என்பதுபோல இந்த வருடத்திலிருந்தே ஆகிவிடும் என்று தோன்றுகிறது.

இம்சை அரசன்

இந்தப் படத்தை பிரிவியூ தியேட்டர் ஒன்றில் பார்த்தேன். அதனால் விசில் சத்தங்கள், ஓயாத சிரிப்பலைகள் என்று மக்களது நாடியைக் கணிக்க முடியவில்லை.

Spoof படங்கள் தமிழில் அதிகமாக வெளிவந்ததில்லை என்று நினைக்கிறேன். தமிழ் சினிமா ஞானசூன்யமாகிய நான் இதைப்பற்றி அதிகமாகப் பேசக்கூடாது. மெல் ப்ரூக்ஸ், வுடி ஆலன், மாண்டி பைதான் சாயல் பல இடங்களிலும் நன்றாக அடிக்கிறது. பல நல்ல ஜோக்குகள் படமெங்கும் உள்ளன.

படத்தில் சில குறைகள் எனக்குத் தென்பட்டது.

முதலாவது எல்லாத் தமிழ்ப்படங்களுக்குமான குறையான படத்தின் நீளம். 140-150 நிமிடப் படம் நிஜமாகவே போரடிக்கிறது. கதையை வேறுவழியின்றி இழுத்துப்போயிருக்கிறார்கள். 100-110 நிமிடத்தில் படத்தை முடித்திருக்கலாம். அடுத்தது படத்தில் வரும் ஓயாத பேச்சு. யாராவது ஒருவர் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கிறார். நாடகம் பார்க்கிறோமா அல்லது சினிமா பார்க்கிறோமா என்று தெரியவில்லை.

பழைய சினிமா பாணியில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் ரசிக்கக்கூடியனவாக இருந்தாலும் இவ்வளவு பாடல்கள் தேவையில்லை.

வடிவேலு - இரண்டு ரோல்களில். அதில் சொல்புத்தி வடிவேலு நன்றாக வருகிறார். சுயபுத்தி வடிவேலு வசன உச்சரிப்பில் சொதப்புகிறார். ழ/ல/ள, ன/ண தடுமாற்றம் தாங்க முடியவில்லை.

வெள்ளையன் என்பது ஆங்கிலேயனை மட்டும் குறிக்கிறது என்று நாமாக முடிவு செய்து கொள்ளவேண்டும். பிற நாட்டவர்கள் அந்தந்த நாட்டுப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்.

வடிவேலு, நாசரைத் தவிர பிறர் நடிப்பில் சுமார்தான்.

ஏகப்பட்ட பணத்தை செலவழித்து எடுத்திருந்தாலும் கத்திகள், வில் அம்பு ஆகியவை உலோகத்தால் ஆனதாகவே தெரியவில்லை. பேப்பர் கத்திகள்போலத்தான் தெரிந்தன.

இனி படத்தின் நிறைகள்.

நீளமாக இருந்தாலும் தொய்வில்லாத திரைக்கதை. கோகா கோலா, பெப்சி ஆகியவற்றைக் கேலி செய்து எடுக்கப்பட்டிருந்த நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் பிரமாதம். 10-ம் நம்பர் சட்டையணிந்த சச்சிதானந்த் man-of-the-match கோப்பை வாங்கிக்கொண்டு பேசுவது முதல் பல விஷயங்களில் கலக்கியிருக்கிறார்கள். இன்று கர்நாடகா படத்தை தடை செய்துள்ளது போல நாளை பெப்சி/கோக் கோர்ட்டுக்குப் போய் படத்தை நாடெங்கும் தடை செய்யச் சொல்வார்களா என்று தெரியவில்லை.

படத்தில் உணர்ச்சிபூர்வமான பல காட்சிகள் உள்ளன. ராஜா ஆள்மாறாட்டத்துக்குப்பின் நாட்டில் பல சீர்திருத்தங்கள் நடைபெறுவதும் அதனால் மக்கள் overnight சந்தோஷத்தில் திளைப்பதும் நாட்டில் சுபிட்சம் பெருகுவதுமாக. சாதாரணமாக எல்லா சினிமாக்களிலும் ஹீரோக்கள் செய்யும் காரியம்தான் இது. ஆனால் இந்தப் படம் ஒரு spoof என்று தெரிவதால் இதுபோன்ற காட்சிகளை நம்மால் சகித்துக்கொள்ள முடிகிறது.

சொல்புத்தி வடிவேலு செய்யும் ரகளைகளுக்காகவே படத்தை இரண்டு மூன்று முறைகள் பார்க்கலாம்.

படத்தில் ஹீரோயின்கள் ஒன்றும் செய்வதில்லை. இரண்டு மூன்று பாடல்களில் வருவதைத் தவிர. கடைசியில் கல்யாண கோலத்தில் நிற்பதைத் தவிர. ஆனால் இது அவ்வளவாக உறுத்துவதில்லை.

படத்தின் கடைசிக்காட்சியில் வரும் பத்து கட்டளைகளும் கடைசியாக வரும் பிரேவ்ஹார்ட் மெல் கிப்சன் ஜோக்கும் படத்தை சொதப்பாமல் நல்லபடியாக முடித்துவைக்க உதவுகின்றன. நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

Wednesday, July 12, 2006

முதல் புத்தகம்

"Giving children from low-income families the opportunity to read and own their first new books." - First Book

பல கோடிச் சிறுவர்களுக்கு அவர்களுக்கென்றே சொந்தமாக புத்தகங்கள் எதுவும் வாங்கிக்கொடுக்கப்படுவதில்லை. குறைந்த வருமானம் உடைய குடும்பங்களில் குழந்தைகள் புத்தகங்கள் படிக்காமல்தான் வளர்கின்றனர். பாடப்புத்தகங்கள் போதா. அவை பெரும்பாலும் அலுப்பை மட்டுமே ஏற்படுத்துகின்றன. சந்தோஷத்தை அல்ல.

இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும்தான். அதனால்தான் குறைந்த வருமானக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல தரமான, அழகான புத்தகங்களை - குழந்தைகள் ஆவலோடு வாங்கி, கூடவே வைத்திருக்கும் புத்தகங்களை - தருகிறது First Book என்னும் தொண்டமைப்பு. அவர்களது வலைப்பதிவு இங்கே உள்ளது.

நாட்டில் படிப்பறிவு வளரவேண்டுமானால் குழந்தைகள் அனைவரும் படித்து மகிழக்கூடிய வகையில் புத்தகங்கள் தேவை. புத்தகங்கள் மூலமாகத்தான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பெருகும்.

தமிழகத்திலும் இதைப்போன்ற ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கப்படவேண்டும்.

Monday, July 10, 2006

கண்டதேவி தேர் இழுப்பு

ரமணியின் அழகான நிரலியின்மூலம் என் கடந்த ஆண்டுப் பதிவுகளை ஒருசேரப் பார்க்கமுடிகிறது.

இன்றைய முக்கியச் செய்தி கண்டதேவி தேர்த் தெருவிழா. சென்ற ஆண்டு நடந்ததிலிருந்து இந்த ஆண்டு என்ன முன்னேற்றம் என்று பார்த்தேன். சென்ற ஆண்டு 24 தலித்கள் தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அது 25-ஆக உயர்த்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மேற்கொண்டு 10 தலித்கள் பார்வையாளராக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல தலித் தலைவர்கள் - திருமாவளவன், கிருஷ்ணசாமி உட்பட - கைது செய்யப்பட்டு கண்டதேவிக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.

Friday, July 07, 2006

NLC Disinvestment நாடகம்

அரசு தன்னிடம் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவெடுத்தால் உடனடியாக கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழில்சங்கங்கள், ஊழியர்கள், இன்ன பிறர் என்று போர்க்கொடி தூக்குவது வாடிக்கை. எதை எதிர்க்கிறோம், ஏன் எதிர்க்கிறோம் என்று தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று புரியவில்லை.

நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷன் பங்குகளில் 10% பொதுமக்களுக்கு விற்பது தவறு என்று இப்பொழுது போராட்டம் நடந்து, கருணாநிதி blackmail செய்தது போலவும் அதனை அடுத்து மத்திய அரசு பங்கு விற்பனையை (தாற்காலிகமாக) நிறுத்துவைத்தது போலவும் ஒரு நாடகம் நடந்தேறியுள்ளது.

இப்பொழுதைய பங்குவிற்பனை திட்டம் நடந்தேறியிருந்தாலும் இதனால் நாட்டுக்கு பெரிய அளவில் எந்த உபயோகமும் இல்லை. என்.எல்.சி விஷயத்தில் தேவையானது வேறு ஒன்று என்று நான் கருதுகிறேன்.

என்.எல்.சி இந்தியாவிலேயே மிகச்சிறந்த integrated கரி தோண்டியெடுக்கும்/மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம். மற்ற அனல் மின்நிலையங்களைக் காட்டிலும் மிக அதிகமான நிகர லாப சதவிகிதம் பெறும் நிறுவனம். கிட்டத்தட்ட 28-30% வரை நிகரலாபம். அப்படியென்றால் அதன் செயல்திறன் - efficiency - மிகவும் அதிகம் என்றுதான் அர்த்தம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நெய்வேலி நிலக்கரியின் தரம். நெய்வேலி நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் திறன். இந்தக் காரணங்களால் என்.எல்.சி வருடாவருடம் நல்ல லாபம் சம்பாதிக்கிறது. அரசாங்கத்துக்குப் பணம் கொடுக்கிறது (வரி + டிவிடெண்ட்).

ஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பிரச்னையே அதன் பெயரில் உள்ளது. நெய்வேலி மட்டும். நிலக்கரி மட்டும். இப்படியே இருந்தால் வரும் காலத்தில் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்க அல்லது அழிய வாய்ப்புள்ளது. என்.எல்.சியின் கஸ்டமர்களான தமிழக, கேரள, ஆந்திர, கர்நாடக அரசுகள் திடீரென வாங்கிய மின்சாரத்துக்குக் காசு செலுத்தவில்லையென்றால் என்.எல்.சி திண்டாடும். கருணாநிதி கலர் டிவிக்கு காசு செலவுசெய்துவிட்டு மன்மோகன் சிங்கை மீண்டும் blackmail செய்து மின்சாரத்துக்கு என்.எல்.சிக்கு காசு கொடுக்கமாட்டேன் என்றுகூட சொல்ல வாய்ப்புள்ளது!

மேலும் என்.எல்.சி பெறும் லாபத்தை என்ன செய்யலாம்? சும்மா மீண்டும் மீண்டும் அரசாங்கத்துக்கு டிவிடெண்டாகக் கொடுத்தால் அது ஏதாவது ஒரு 'யோஜனா'வுக்கு தாரை வார்க்கத்தான் போகிறது.

அதற்கு பதில் என்.எல்.சி வேறு சில காரியங்கள் செய்யவேண்டும்.

1. தமிழகத்தில் மேலும் பல இடங்களில் அனல் மின்நிலையங்களை உருவாக்க வேண்டும். இப்பொழுது ஜெயங்கொண்டம் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதான் சாக்கு என்று தமிழக அரசு, தான் கழன்றுகொண்டு தனக்கு பதில் என்.எல்.சியையே 'நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டனர்.

2. மேலும் பல மாநிலங்களில் அனல் மின்நிலையங்கள் அமைக்கவேண்டும். அதற்குத்தான் NTPC உள்ளதே என்று சும்மா இருக்கவேண்டியதில்லை. இன்னமும் பல ஆயிரம் மெகாவாட்கள் மின்சாரம் நாம் தயாரிக்கவேண்டியுள்ளது.

வளர்ச்சி என்பது அத்தியாவசியமானது.

இந்த வளர்ச்சியை எப்படிக் கொண்டுவருவது? அதற்கு என்.எல்.சிக்கு மேற்கொண்டு பணம் வேண்டும். ஒரு மெகாவாட் மின்சாரத்துக்கு ரூ. 3-4 கோடி அளவுக்கு முதலீடு வேண்டுமாம். தமிழகத்தில் மேலும் 4,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கத் தேவையான அனல் மின்நிலையங்களை அமைக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான முதலீடு ரூ. 12,000-16,000 கோடி. என்.எல்.சி வருடத்துக்குப் பெறும் லாபம் வெறும் ரூ. 1,000 கோடிதான். அதிலும் பெரும்பங்கு அரசுக்கு டிவிடெண்டாகப் போய்ச்சேருகிறது.

ஆனால் இந்த ரூ. 16,000 கோடியைப் பல்வேறு வகையில் பெறமுடியும். Disinvestment-க்கு பதில் என்.எல்.சிக்குத் தேவை Investment. அரசால் இது முடியாது. என்.எல்.சி பங்குச்சந்தைக்குப் போய் மேலும் 20-30% புதுப் பங்குகளை வெளியிடவேண்டும். இதன்மூலம் சுமார் ரூ. 4,000 கோடி ரூபாய்களைத் திரட்டமுடியும். மீதம் தேவையான ரூ. 12,000 கோடியை ஒரு பகுதி வங்கிக் கடன்களாகவும், மீதியை மக்களிடமிருந்தே 5-வருட, 10-வருட, 15-வருட கடன்பத்திரங்களாகவும் திரட்டலாம்.

என்.எல்.சி, தான் நெய்வேலியில் சாதிப்பது போல பிற மின்நிலையங்களிலும் சாதித்தால் (efficiency-ஐ அதே அளவில் இருந்தால்) என்.எல்.சியின் பங்கு விலைகள் தொடர்ச்சியாக ஏற ஆரம்பிக்கும்.

Disinvestment செய்து பங்குகளை என்.எல்.சி தொழிலாளர்களுக்கு விற்கிறேன் என்று சொல்வது அபத்தம். வைகோ போன்ற பலரும் கேட்டது போல ஆளுக்கு ஐந்து லட்சம் கொடுத்து பங்குகள் வாங்கும் நிலையில் இல்லை என்.எல்.சி ஊழியர்கள். ஆனால் அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஸ்டாக் ஆப்ஷன்ஸ்.

இவ்வளவு நன்றாக வேலை செய்யும் என்.எல்.சி ஊழியர்களுக்கு என்று என்.எல்.சி நிர்வாகம் கொடுக்கவேண்டியது ஐ.டி நிறுவனங்களில் கொடுப்பதுபோன்ற ஸ்டாக் ஆப்ஷன்ஸ். குறைந்தது 7-10% பங்குகளை என்.எல்.சி ஊழியர்களுக்கான ஸ்டாக் ஆப்ஷன்களாக நிறுவி, கடைமட்ட ஊழியர் வரை அனைவரும் ஆப்ஷன்ஸ் பெறுமாறு செய்யவேண்டும். இந்த ஆப்ஷன்ஸை வாங்க என்.எல்.சி ஊழியர்கள் பணம் செலவு செய்யவேண்டியதில்லை. ஆனால் அந்த ஆப்ஷன்ஸை வேண்டியபோது பங்குகளாக மாற்றி லாபத்தை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.

இதையெல்லாம் முன்னிறுத்தித்தான் தொழில்சங்கங்கள் போராடவேண்டும். அதைவிடுத்து நெய்வேலி ஊழியர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்தால் இப்பொழுது கிடைக்கும் குறைந்த சம்பளம், ஓய்வூதியம் மட்டுமே கிடைத்துக்கொண்டிருக்கும். நாளைக்கே டாடா பவர், ரிலையன்ஸ் எனெர்ஜி போன்ற கம்பெனிகள் என்.எல்.சியின் திறமை மிக்க சில அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் அதிக சம்பளம், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் என்று கொடுத்து தள்ளிக்கொண்டு போக நேரிடலாம்.

Thursday, July 06, 2006

தமிழ்நாடு பட்ஜெட் - என்ன செய்ய வேண்டும்?

"All for distribution, little for development" - S.விஸ்வநாதன், ஆசிரியர், பதிப்பாளர், Industrial Economist.

விஸ்வநாதன், வரவிருக்கும் தமிழ்நாடு பட்ஜெட்டை முன்னிட்டு தன் கருத்துகளை முன் வைத்தார். அதிலிருந்து சில துளிகள்:

* தமிழகம் கடந்த 15 வருடங்களில் வளர்ச்சிக்காக செலவழிக்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தமிழகத்தைவிட அதிகமாக சாலைகள், மின்சாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் செலவுகள் செய்துள்ளன.

* கல்வியில் கடந்த சில வருடங்களில் ஆந்திரா தமிழகத்தைவிட வெகுவாக முன்னேறியுள்ளது. மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ் பயிற்சிக்குத் தேர்வு பெற்றவர்கள், ஐஐடிக்கு தேர்வு பெறுபவர்கள், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை என்று பலவற்றைப் பார்த்தால் ஆந்திரா தமிழகத்தைவிட முன்னேறிச் செல்கிறது.

* Human Development Index - தமிழகம் கேரளாவைவிட வெகுவாகப் பின்தங்கியுள்ளது.

* தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. கடந்த பத்து வருடத்தில் வருவாய் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் கடனுக்காகத் திருப்பித் தரவேண்டிய வட்டி பத்து மடங்கும், வழங்கப்படும் ஓய்வூதியம் பத்து மடங்கும் அதிகரித்துள்ளன.

* தமிழகத்தின் வருடாந்திர பென்ஷன் பட்ஜெட்: ரூ. 4,800 கோடி! ஏன்? தமிழகத்தில்தான் அரசுப் பணியாளர்கள் அதிகம். தமிழக அரசு ஊழியர்கள் இப்பொழுது 13 லட்சத்துக்கு மேல் உள்ளனர். கருணாநிதி சாலைப் பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக்கிவிட்டால் இந்த எண்ணிக்கை 15-16 லட்சம் ஆகும். தமிழகத்தைவிடப் பெரிய மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஆந்திராவில் எத்தனை அரசு ஊழியர்கள் உள்ளனர் தெரியுமா? இந்த எண்ணிக்கையில் பாதிதான்!

* கடந்த சில வருடங்களில் தென்னிந்திய மாநிலங்கள் சில மின்சார வசதியை அதிகமாக்க எவ்வளவு செலவு செய்துள்ளன தெரியுமா?
ஆந்திரா - ரூ. 6,000 கோடி
கர்நாடகா - ரூ. 2,000 கோடி
தமிழகம் - ரூ. 275 கோடி

* கேரளாவில் மாநில அரசின் பட்ஜெட் (செலவுத்தொகை) எத்தனையோ அதே அளவு பணம் வெளிநாடு வாழ் மலையாளிகளால் அந்த மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது (consumptive). ஆந்திரத்தில் வெளிநாடுவாழ் தெலுங்கர்கள் எக்கச்சக்கமான பணத்தை முதலீடு செய்கிறார்கள் (investments). தமிழகத்தில் இது நிகழ்வதில்லை.

* பிற மாநிலங்களில் ஓரளவுக்கு பொருளாதாரம் தெரிந்தவர்களே நிதியமைச்சர்களாக வருகிறார்கள். தமிழகத்தில்தான் தமிழ் பண்டிதர்கள் நிதியமைச்சர்களாகிறார்கள்.

* பிற மாநிலங்களில் மின்சாரத் துறையில் சீர்திருத்தங்கள் தொடங்கிவிட்டன. உற்பத்தி, விநியோகம் ஆகியவை பிரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இது தொடங்கக்கூட இல்லை.

* பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 500க்கும் மேற்பட்ட குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் நான்கு கூட இல்லை. இதனால் விவசாயிகள் அதிகம் விளைவிக்கும்போது அத்தனையும் உடனடியாக சந்தைக்கு வருகிறது, இதனால் விலை பெருவீழ்ச்சி அடைந்து விவசாயிகளையே பாதிக்கிறது. குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு இருந்தால் அங்கு அதிக விளைச்சலை (காய்கறி/பழங்கள் போன்ற சீக்கிரம் வீணாகிவிடும் பொருள்கள்) சேமித்து அதிக விலை கிடைக்கும் இடங்களுக்கு மாற்றி விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்.

* தமிழகத்தில் மொத்தப் பொருளாதாரத்தில் 14% விவசாயம் சார்ந்தவை. ஆனால் கிட்டத்தட்ட 50% பேர் இதில் வேலை செய்கிறார்கள். 30% பொருள் உற்பத்தி. 56% சேவை. விவசாய வளர்ச்சி இல்லையென்றால் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கருணாநிதி அரசு என்ன செய்யவேண்டும்?

1. குளிர்சாதன வசதிகொண்ட சேமிப்புக் கிடங்குகளை பல இடங்களில் அமைக்க வேண்டும். இவற்றுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வகை செய்யவேண்டும்.

2. உயர் கல்விக்கு அளிக்கும் மான்யங்களை முற்றிலுமாக நிறுத்திவிட்டு அடிப்படைக் கல்விக்கு செலவழிக்க வேண்டும். (அதாவது தனியார் கலை/அறிவியல் கல்லூரிகள் பலவும் Govt. aided கல்லூரிகளாக உள்ளன. இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அரசே சம்பளம் கொடுக்கிறது. அதை நீக்கவேண்டும் என்கிறார். மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தில் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேண்டும் என்கிறார்.)

3. பொது மருத்துவமனை வசதிகளை அதிகரிக்கவேண்டும்.

4. தொழில்பேட்டைகளில் அடிப்படை வசதிகளை அதிகரிக்கவேண்டும்.

5. மதிப்புக் கூட்டு வரியை (VAT) அமல்படுத்தவேண்டும். கடந்த சில மாதங்களில் VAT-ஐ அமல்படுத்தாததால் மூன்று பெரிய நிறுவனங்கள் தமிழகத்துக்கு வருவதற்கு பதில் ஆந்திரா சென்றுவிட்டன.

6. கடற்கரையோரம் பல சிறு துறைமுகங்களை உருவாக்க வேண்டும். முரசொலி மாறன் இதைப் பல வருடங்களாகச் சொல்லிவந்தாராம். ஆனால் இதுவரையில் யாருமே செய்யவில்லை. உதாரணத்துக்காக குஜராத் - குஜராத்தில் ஐந்து சிறு துறைமுகங்கள் சேர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமான விசாகப்பட்டிணத்தைவிட அதிக சரக்குகளைக் கையாளுகின்றன. இதனால் குஜராத்துக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. தமிழகமும் இதேபோல செய்யமுடியும்.

7. Special Economic Zones - SEZ. நாங்குநேரி SEZ அம்மாவின் கருணையால் தொங்கலில் விடப்பட்டது. திமுக ஆட்சியில் வேகமாக எதையாவது செய்யவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஐந்து வருட அஇஅதிமுக ஆட்சியில் மீண்டும் முட்டுக்கட்டைகள் வரலாம்.

8. அந்நிய நேரடி முதலீடுகள். கடந்த பதினைந்து வருடங்களில் எந்தத் தமிழக முதல்வர்/அமைச்சர்களாவது வெளிநாட்டுக்குச் சென்று முதலீடுகளைப் பெற்றுள்ளார்களா? பிற மாநிலங்களைப் பாருங்கள். கடந்த ஐந்து வருடத்தில் டாடா ஹவுசிங் அதிகரிகள் பலமுறை ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை. கருணாநிதியையாவது சந்திக்க முடிகிறது. ஆனால் அவருக்கு வயதாகிவிட்டது! We need a young and energetic person to aggressively go after investments.

விவசாயம் பற்றி விரிவாகப் பேசினார். அமெரிக்காவில் ஓர் எக்கர் நிலத்தில் பத்து டன் சோளம் உற்பத்தியாகிறதாம். சீனாவில் 5 டன். தமிழகத்தில் ஒரு டன். இதைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு விவசாயிக்கு வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ. 24,000தான் வருமானமாக வரும். அதாவது மாதம் ரூ. 2,000. அதனால் விவசாயம் வேஸ்ட் என்று கருதி அவர்கள் நகரங்களுக்கு வந்து கூலிவேலை செய்வதே மேல் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால் குறைந்தது ஏக்கருக்கு 2 டன் என்று விளைச்சலைப் பெருக்கினால் வருமானம் அதிகமாகும். விஸ்வநாதன், வேறு சிலர் சேர்ந்து சென்னைக்கு அருகே படப்பையில் ஏழு ஏக்கர் அளவில் ஒரு விவசாய ஆராய்ச்சி/சோதனை மையம் வைத்து விளைச்சலைப் பெருக்குவதற்கான சோதனைகள் செய்துவருகின்றனர். (non-profit setup). அங்கு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி எழுதுகிறேன்.

Wednesday, July 05, 2006

கேரளா பட்ஜெட்: நல்லதா, கெட்டதா?

தமிழக பட்ஜெட் ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. கேரளா பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த பட்ஜெட்டை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார் R. Ramakumar, Assistant Professor, Tata Institute of Social Sciences, Mumbai.

ஆனால் அவர் எழுதியதைப் படித்தால் பட்ஜெட், வளர்ச்சிப் பாதைக்கு எதிரான வரிசையில் செல்வதாகத் தோன்றுகிறது. மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சி இந்தமாதிரியான பட்ஜெட்டைக் கொண்டுவராது.

* ஆடம்பரப் பொருள்கள்மீது அதிகமாக வரி வசூலித்துதான் ஏழைகளைக் காப்பாற்றவேண்டும் என்பதில்லை. இந்தியா போன்ற வளரும் நாட்டில் ஆடம்பரப் பொருள்கள் என்று கேரள கம்யூனிஸ்டுகள் எதையெல்லாம் வகை செய்கிறார்கள் என்பது திகிலூட்டக்கூடியதாக உள்ளது. பழைய சோற்றைத் தவிர மீது எல்லாவற்றையுமே இவர்கள் ஆடம்பரப் பொருள்கள் என்று நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

* கல்யாணமண்டபமும் இவர்களுக்கு ஆடம்பர வரிக்குள் அடங்குமாம். இனி கேரளாவில் கல்யாணம் செய்வதற்கான செலவு அதிகமாகும்.

* கேபிள் இணைப்புக்கு 5% ஆடம்பர வரி. நல்லவேளை - இதுமட்டும் தமிழகத்தில் நடக்காது, மாறன்களின் தயவில். தமிழகத்தில் ஏழைகளுக்கு இலவச டிவி. கேரளத்தில் கேபிள் இணைப்புக்கு ஆடம்பர வரி. நன்றாக உள்ளது.

* முந்தைய அரசு Kerala Fiscal Responsibility Act 2003 என்ற சட்டத்தை இயற்றி இருந்தது. பற்றாக்குறையைக் குறைத்தாகவேண்டும் என்ற சட்டம். முந்தைய அரசு Revenue Deficit Rs. 4,731 கோடி என்று தீர்மானித்திருக்க, கம்யூனிஸ்ட் அரசு இதெல்லாம் சரிப்படாது, இதை Rs. 5,415 கோடியாக்கி அதிகமாக செலவுகள் செய்வதாகச் சொல்லியுள்ளது. கம்யூனிஸ்டுகள் பலருமே பற்றாக்குறை அதிகமாக இருப்பதில் தவறில்லை என்று சொல்லிவருகின்றனர். எதிர்ப்பவர்கள் neo-liberal என்று முத்திரை குத்தப்பட்டு புஷ், செனி கூட்டத்தோடு சேர்த்து கல்லடி படுகிறார்கள். ஆனால் எப்படி பற்றாக்குறையைத் தொடர்ச்சியாக அதிகரிப்பதன்மூலம் நாட்டை நடத்தமுடியும் என்று சொல்வதில்லை.

* இன்று நாட்டில் VAT (மதிப்புக்கூட்டு வரி) நடைமுறையில் இல்லாத இரண்டு மாநிலங்கள் தமிழகம், உத்தர பிரதேசம். கேரளாவின் காங்கிரஸ் அரசு ம.கூ.வரியைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் அதில் கையை வைத்து உழப்ப முயற்சி செய்கிறது கம்யூனிஸ்ட் அரசு. VAT-ஆல் மாநிலங்களுக்கு நன்மை, நியாயமான, ஏமாற்றாத தொழில்களுக்கும் நன்மை என்றுதான் அதை அனைவரும் வரவேற்கின்றனர். மாநிலங்கள் பலவும் தமது வருமானம் அதிகரித்துள்ளது என்று சொல்கின்றன. ஆனால் ராமகுமார் VAT மூலம் கேரளா ரூ. 700 கோடி இழக்க நேரிடும் என்கிறார். (தமிழகத்தில் சில்லறை வியாபாரிகள் VAT-ஐ எதிர்ப்பதற்குக் காரணம் வரி கட்டுவதிலிருந்து தப்பி ஓடவே. அவர்களது லாபி பலமானது. அதனால் திமுக, அஇஅதிமுக என்று யாருமே VAT-ஐ நடைமுறைப்படுத்த விரும்புவதில்லை. VAT வந்தால் தமிழக அரசின் வரி வருமானம் அதிகமாகும். குறையாது.)

* அனைத்து மக்களுக்கும் கிலோ அரிசி ரூ. 3க்குக் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் இதைத் தொடரமுடியாது என்றும் செப்டெம்பர் வரை தொடர மட்டும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். அதன் பிறகு? கருணாநிதியிடம் அச்சுதானந்தன் கொஞ்சம் யோசனை கேட்கலாம்.

காந்தி எனக்குத் தாத்தா

தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வம்சத்தில் வந்த பேரன் என்று சி.பி.ஐ சோதனை செய்து அறிவிக்க வேண்டும் என்று ஒரு கோயிஞ்சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாராம். வேலையத்த வேலையாக அதனை நீதிமன்றத்தில் விசாரணைக்குக் கொண்டுவந்த நீதிமன்றப் பதிவாளர்மீதும் உச்ச நீதிமன்றம் கடுப்படித்துள்ளது.

சிரிப்பு வருமாறு தினமணியில் எழுதப்பட்டிருந்த வரி: "பித்துக்குளித்தனமான இந்த மனுவை விசாரிக்க முடியாதென்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், டி.கே.ஜெயின் அடங்கிய பெஞ்ச் நிராகரித்து விட்டது."

பேக்டீரியங்கள் பற்றிய சுவையான தகவல்

மனிதர்களின் குடல்களில் வாழும் பேக்டீரியங்கள் - மீத்தேனை உண்டாக்குகிற Archaea என்ற வகை பேக்டீரியங்கள் உட்பட - சர்க்கரைகளையும் அமினோ ஆஸிட்களையும் (amino acids) ரசாயன மாற்றங்கள் ஏற்படச் செய்வது, நம் உடலால் தானாக உண்டாக்க இயலாத வைட்டமின்களை உற்பத்தி செய்தல் போன்ற குடலில் நடைபெறும் காரியங்களைக் கையாண்டு நன்மை பயக்கின்றன. மீதி தினமணியில்

Sunday, July 02, 2006

ம.பொ.சிவஞானம் எழுத்துகள் நாட்டுடைமை

தினமணி செய்தி

புலவர் குழந்தை எழுத்துகளை நாட்டுடைமையாக்கியதைத் தொடர்ந்து நேற்றி முதல்வர் கருணாநிதி ம.பொ.சிவஞானம் அவர்களது எழுத்துகளை நாட்டுடைமையாக்கியுள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாராம்.

ம.பொ.சியின் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்படுகிறது.