Friday, March 25, 2011

கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு

1. ஷோரூம் ஒருங்கிணைப்பாளர் (Showroom coordinator)

வேலை: தமிழகம் முழுவதிலும் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் நேரடி விற்பனை மையங்கள், ஃபிரான்ச்சைஸி கடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்; புதிய நேரடி மையங்களை நிறுவுதல்.

தகுதி: எதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழ் நன்றாகப் படிக்கவும் தமிழில் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். கணினியை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும்.

பணி இடம்: சென்னை; தமிழகம் முழுவதும் பயணம் செய்யவேண்டியிருக்கும்.

மாதச் சம்பளம்: ரூ. 10,000 - 12,000 (தகுதிக்கேற்ப) + இதரப் படிகள்.

2. இணைய மார்க்கெட்டிங் + விற்பனை பிரதிநிதி (Online Marketing & Sales Executive)

வேலை: இணையத்தளங்கள் மற்றும் கூகிள் வாயிலாக விளம்பரம் செய்தல்; ட்விட்டர், ஃபேஸ்புக், கூகிள் பஸ், வலைப்பதிவு, பிற சோஷியல் மீடியா நெட்வொர்க் ஆகியவை மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவித்தல்; கிழக்கு பதிப்பகத்தின் இணைய வர்த்தகத்தை நிர்வகித்தல்.

தகுதி: ஏதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழில் நன்றாகப் படிக்கவும் எழுதவும் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். புத்தகம் படிப்பவராக இருத்தல் விரும்பத்தக்கது. கணினியை நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும். இணைய நுட்பங்கள் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்.

பணி இடம்: சென்னை.

மாதச் சம்பளம்: ரூ. 10,000 (தகுதிக்கேற்ப)

தொடர்புகொள்ள: hp@nhm.in   /   95000-45611

Thursday, March 24, 2011

உணவு மானியம்

உணவுப் பொருள்கள் மானிய விலையில் கிடைத்துவருவது உங்களுக்குத் தெரியும். ரேஷன் கடைகள் எனப்படும் Public Distribution System (PDS) கடைகள் மூலமாகக் கிடக்கின்றன இந்தப் பொருள்கள். இவற்றுக்கு மத்திய அரசு அடிப்படை மானியத்தைத் தருகின்றன. மாநில அரசுகள் இந்த மத்திய மானியத்துக்குமேல் அதிகப்படி மானியத்தையும் தரலாம்.

மானியம் என்பதை அதிகம் விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. அரசு கொள்முதல் செய்யும் உணவுப்பொருள்களுக்கு ஓர் அடக்கவிலை உள்ளது. அந்த விலையையும்விடக் குறைவான விலையில் மக்களுக்கு உணவுப்பொருள்கள் கிடைக்குமாறு அரசு செய்கிறது. இந்த வித்தியாசம்தான் மானியம்.

அடக்கவிலை - விற்பனை விலை = மானியம்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசிக்கு என்ன வசூலிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாகத்தான் கேரள ரேஷன் கடைகளில் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் மானிய விலை உணவுப்பொருள்கள், தேவைப்படும் அனைவரையும் சென்றடைவதில்லை, அதில் பல ஓட்டைகள் உள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இன்று மிண்ட் பத்திரிகையில் இது தொடர்பாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் இப்போதைக்கு மத்திய அரசிடம் இருக்கும் மூன்று திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ‘National Food Security Act’ சட்ட முன்வரைவு பற்றிய ஆலோசனைகள் தொடர்பானது.

1. தேசிய ஆலோசனைக் குழு - சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்டு செயல்படும் குழு. இது கொடுத்திருக்கும் திட்டம்:
  • 90% கிராமப்புற மக்கள், 50% நகர்ப்புற மக்கள் - ஆக மொத்தம் இந்திய மக்கள் தொகையில் 75%
  • இந்தக் குழுவிலிருந்து 46% கிராமப்புறத்தவர், 28% நகர்ப்புறத்தவருக்கு ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு 35 கிலோ உணவு தானியங்கள் மானிய விலையில் தரப்படும். அதாவது கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவை கிலோ 1 ரூபாய்க்கு. கோதுமை கிலோ 2 ரூபாய். அரிசி கிலோ 3 ரூபாய்.
  • 75%-ல் விடுபட்ட பிறருக்கு, உணவுப்பொருளின் அடக்கவிலையில் 50%-ல். அதாவது அரிசியை விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யும் குறைந்தபட்சக் கொள்முதல் விலையின்படிக் கணக்கிட்டால் கிலோவுக்கு அடக்கவிலை ரூ. 10 என்று வந்தால், இந்த மக்களுக்கு அரிசி கிலோவுக்கு ரூ. 5 என்று தரப்படும். ரூ. 12 என்று ஆனால், அரிசி விலை ரூ. 6-க்குத் தரப்படும். (இங்கு கொள்முதல் விலை ஏற ஏற, விற்பனை விலையும் ஏறும். ஆனாலும் மேலே உள்ள குழுவுக்கு விற்பனை விலை ஏறவே ஏறாது.
  • மிச்சமுள்ள 25%-னர், சந்தை விலைக்கு தனியார் கடைகளில் வாங்கிக்கொள்ளவேண்டும்.
2. ரங்கராஜன் குழு
  • சட்டப்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும்தான் மானியம். (சுமார் 25% பேர்?) பிறருக்கு சட்டப்படி மானியம் தருவதாக வைத்துக்கொள்ளக்கூடாது. வேண்டுமென்றால் ஆண்டாண்டுக்கு பட்ஜெட்டில் இடமிருந்தால் அரசாணையின்படி மானியம் தரலாம்.
3. அபிஜித் சென், ஹிமான்ஷு
  • குறிப்பிட்ட ஒரு குழுவைத்தவிர பிறருக்கு உணவு தானியத்தின் விலையை, குறைந்தபட்சக் கொள்முதல் விலையுடன் இணைக்கவேண்டும்.
  • அநாதைகள், கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோர் போன்றோருக்கு மட்டும் தேசிய ஆலோசனைக் குழு சொல்லியுள்ள மானியம்.
  • மொத்த மக்கள்தொகையில் 25%-பேர் தவிர்த்து அனைவருக்கும் குறைந்தபட்சக் கொள்முதல் விலையில் 75% விலைக்கு தலைக்கு, மாதத்துக்கு, 7 கிலோ உணவு தானியம். (அதாவது 25% மானியம்.)
  • வேண்டுமென்றால், அடிமட்டத்தில் இருக்கும் குழுவினருக்கு, முதல் 3.5 கிலோவில் தேசிய ஆலோசனைக் குழு குறிப்பிட்டுள்ள மானியம்.
***

அடிப்படையில் இவை எவையுமே சரியான செயல்களாக எனக்குத் தோன்றவில்லை. எந்த மானிய முறையுமே சிக்கல் இல்லாததாக, நடைமுறைப்படுத்த எளிதானதாக இருக்கவேண்டும். மேலே குறிப்பிட்டவற்றில் இரண்டு மாபெரும் குறைகள் உள்ளன.

1. குறைந்தபட்சக் கொள்முதல் விலை. நம் நாட்டில் சொந்த அரசாலேயே விவசாயிகள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களது விலைபொருளுக்கு சந்தை விலை என்று எதுவும் கிடையாது. அரசு நிர்ணயிக்கும் விலைதான். இதிலிருந்து நாம் முற்றிலும் வெளியேறவேண்டும். விவசாயிகளுக்கு அரசு வம்படியாகக் குறைந்த கூலி தருவதால், உண்மையான மானியம் என்ன என்பது வெளியே தெரிவதில்லை. இந்த விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள் மீண்டும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வந்து, மானிய உணவுப்பொருளை வாங்கிச் சாப்பிட்டு, வறுமையிலேயே உழலுகிறார்கள்.

அரசு குறைந்தபட்சக் கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் தவறில்லை. அனால் தான் கொள்முதலைச் செய்யும்போது வேறு எந்தத் தனியாரும் கொள்முதல் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பதில்தான் சிக்கல் உள்ளது. பல சிறு விவசாயிகளால் பல மாதங்களுக்குக் காத்திருக்க முடியாது. எனவே கிடைத்த விலைக்கு அரசுக்கே விற்றுவிடுகின்றனர். அரசும் உடனடியாகப் பணத்தைத் தருவதில்லை. பணம் கைக்குக் கிடைக்க நாளாகிறது. ஆனால் அரசு கொள்முதல் செய்யும் அதேநேரம் தனியாரையும் சந்தையில் இறக்கினால் என்ன ஆகும்? தனியார் குறைந்த கொள்முதல் விலையை முன்வைத்தால் விவசாயி தனியாரிடம் செல்லவேண்டியதில்லை. தனியார் அதிகக் கொள்முதல் விலையைக் காட்டினால், அதுவும் கைக்குமேல் பணம் என்றால் விவசாயி தனியாரிடம் விற்றுவிடலாம். விவசாயி ஒவ்வொரு முறையும் அரசிடம் சென்று கொள்முதல் விலையை ஏற்றிக்கொடுங்கள் ஐயா என்று பிச்சை எடுக்கவேண்டாம். தனியார் நிறுவனங்கள் சந்தை நிலையைப் பொருத்தும் போட்டியைப் பொருத்தும், கொள்முதல் விலையை ஏற்றும். அதற்கு இணையாக அரசும் கொள்முதல் விலையை ஏற்றித்தான் ஆகவேண்டும். அதேபோல தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலையை அதலபாதாளத்துக்கு இறக்கவும் முடியாது. அரசின் குறைந்தபட்சக் கொள்முதல் விலை, அதற்குக்கீழ் விலைகள் போகாமல் பார்த்துக்கொள்ளும்.

இப்போது மத்திய அரசு கிட்டத்தட்ட கிழக்கிந்தியக் கம்பெனி போலத்தான் மக்களை ஏய்த்துப் பிழைப்பு நடத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி, நெசவுத்தொழில் புரிவோர் அனைவரும் தம்மிடம்தான் துணிகளை விற்கவேண்டும் என்று வலியுறுத்தியது. அதற்கு கம்பெனி கொடுக்கும் பணத்தைத்தான் அவர்கள் வாங்கிகொள்ளவேண்டும். விவாதமே கிடையாது. மறுப்போரின் விரல்கள் வெட்டப்படும். (கையைக் காலை வெட்டுவதை மட்டும்தான் நம் அரசுகள் செய்வதில்லை.)

முதலில் நாம் விடுவிக்கவேண்டியது விவசாயிகளை.

2. இப்போது மானியத்துக்கு வருவோம்.

ஒரு நாட்டில் 75% பேர் மானியத்தால் உணவை வாங்கி உண்கிறார்கள் என்றால் அதைவிட அசிங்கம் வேறெதுவும் இல்லை. இந்தியாவில் 25% ஆசாமிகள் தவிர மீது எல்லாரும் பிச்சைக்காரர்கள், மாதாமாதம் உணவு தானியம் வாங்க குடும்பத்துக்கு 560 ரூபாய்கூடச் செலவழிக்கமுடியாமல் வாடுபவர்கள் என்றால், பிரச்னை வேறு எங்கோ உள்ளது! (குடும்பத்துக்கு 4 பேர். ஆளுக்கு மாதம் 7 கிலோ. கிலோவுக்கு சந்தை விலை ரூ. 20. மொத்தம் = 4*7*20 = ரூ. 560.)

முதலில், மானியம் என்பது கடைசி 25% பேருக்கு மட்டும்தான் இருக்கவேண்டும். அதுவும், கன்னாபின்னாவென்று, இவனுக்கு 30%, அவனுக்கு 17.5%, இவனுக்கு பிங்க் வண்ண ரேஷன் கார்டு, அவனுக்கு பச்சை வண்ண ரேஷன் கார்டு என்றெல்லாம் இருக்கவேண்டிய அவசியமே இல்லை.

இன்னும் அதிரடியாக யோசிப்பதென்றால் உணவு கார்பரேஷன், குறைந்தபட்சக் கொள்முதல் விலை ஆகிய அனைத்தையுமே ஒழித்துவிடலாம். உணவு கார்பரேஷன் என்றில்லாமல், Stretegic Food Storage என்ற அமைப்பு, Stretegic Fuel Storage என்ற அமைப்பு ஆகியவை வேண்டிய அளவு பெட்ரோலியம், வேண்டிய அளவு உணவு தானியம் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். தனியார் நிறுவனங்கள் தனியார் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வார்கள். இங்கு குறைந்தபட்சக் கொள்முதல் விலை என்ற ஒன்றை நிர்ணயம் செய்து, கொள்முதல் அதற்குக்கீழ் போகக்கூடாது என்று வலியுறுத்தவேண்டும். எப்படி minimum wage என்ற கருத்து இருக்கிறதோ, அதைப்போல. இந்த உணவுக் கிடங்கும் எரிபொருள் கிடங்கும், சந்தை விலை விழுகிற நேரத்தில் வாங்கிச் சேகரிக்கவேண்டும். விலை ஏறுகிற நேரத்தில் விற்று சந்தை விலையைக் குறைக்கவேண்டும். இது ஒன்றும் புதிதல்ல. அர்த்தசாஸ்திரத்திலேயே சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம்தான்.

25% அல்லது அதற்கும் குறைவான ஏழைகளுக்கு நேரடி மானியம் என்ற முறையில் மாதாமாதம் உதவித்தொகையை அளித்துவிடலாம். உணவுக்கு அவர்களே பொதுச்சந்தையில் செலவு செய்துகொள்வார்கள்.

இதன்மூலம் பெருகும் அரசுச் செலவுகளைக் குறைக்கலாம். ஊழலை நிச்சயமாகக் குறைக்கலாம். பணம் நேரடியாக, தேவைப்படுவோருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். விவசாயிகளுக்கு நிச்சயமாக சரியான கூலி கிடைக்கும். அவர்கள் விவசாயக் கூலிகளுக்கு அதிகச் சமபளம் தருவர். இதனாலேயே பலர் வறுமைக்கோட்டுக்கு மேலே வருவர்.

மாறாக நமது முறையில், மாபெரும் குழுவான விவசாயிகள், விவசாயக் கூலிகளை அழுத்தி தரையில் வைத்துள்ளோம். பின் அவர்களுக்கு இலவசங்கள், மானியங்கள் ஆகியவற்றைத் தருகிறோம். இதனால் அரசுக்கு நிதிப் பற்றாக்குறை வருகிறது என்று புலம்புகிறோம். இவற்றை எல்லாம் முற்றிலுமாகத் தவிர்க்கலாம்.

Thursday, March 17, 2011

குறுங்கடன் - 3 - சுய உதவி

முகமது யூனுஸ் பங்களாதேசத்தில் அறிமுகப்படுத்திய குறுங்கடன் மாதிரிக்குப் பெயர் ‘கிராமின் மாதிரி’. யூனுஸ் ஒரு ‘லாப நோக்குள்ள’ நிறுவனத்தைத்தான் தொடங்கினார். லாபம் அவசியம் என்பது யூனுஸின் கருத்து. ஆனால் அந்த லாபம் அதிகமாக இருக்கக்கூடாது. லாபத்தை மீண்டும் மீண்டும் முதலீடு செய்து கொடுக்கக்கூடிய கடன்களை அதிகரிக்கவேண்டும். இதுதான் அவரது கருத்து.

கிராமின் ஆரம்பம் கடினமாகத்தான் இருந்தது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் என்பதை அவர்களது கணவர்கள் எதிர்த்தனர். பெண்ணுக்குக் கையில் பணம் கிடைத்தால் அவளுக்கு மதிப்பு கூடும். கணவர்களால் அடித்து நொறுக்கி ஆகாத்தியம் செய்யமுடியாது. ஆனால் நாளடைவில் ஆண்கள் வழிக்கு வந்தனர். முல்லாக்கள் வட்டியுள்ள கடனுக்கு எதிரான போராட்டத்தை முன்வைத்தனர். ஆனால் செயல்முறையில் மக்கள் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் குறுங்கடன் மெதுவாக, மிக மெதுவாகத்தான் பங்களாதேச மக்களுக்கு நன்மை செய்தது.

முதலில் கிராமின் வளரவேண்டியிருந்தது. உலக அளவில் பலரது நம்பிக்கையைப் பெறவேண்டியிருந்தது. பங்களாதேசம் இயற்கைப் பேரிடர்களால் எப்போதும் தாக்கப்படும் ஒரு தேசம். வெள்ளம், புயல், பயிர் நாசம். உணவுக்குக் கஷ்டம். அங்கு உருப்படியான அரசியலும் கிடையாது. எர்ஷாதின் சர்வாதிகார ஆட்சியை ஏறக்கட்டியபிறகு இரு பெண்கள் ஆக்ரோஷமான அரசியலை நடத்தினர் - இன்றும் தொடர்கின்றனர். ஒருவர் கொல்லப்பட்ட பங்களாதேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா; தற்போதைய பிரதமர். இன்னொருவர் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர், ஜெனரல் ஜியாவுர் ரஹ்மானின் மனைவி பேகம் காலிதா ஜியா. இன்றுவரை இரு பெண்களுக்கும் இடையில் வெட்டுக் குத்துப் பழி. எர்ஷாதைப் பதவியிலிருந்து இறக்கமட்டுமே இருவரும் ஒன்று சேர்ந்தனர்.

பங்களாதேசத்தில் படிப்பறிவு இந்தியாவைவிடக் குறைவு. ஏழைமை இந்தியாவைவிட அதிகம். தொழில் வளர்ச்சி இந்தியாவைவிடக் குறைவு. அரசியல் இந்தியாவைவிட மோசம். அதனால் பங்களதேசத்தின் வளர்ச்சி மிக மிக மெதுவாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனாலும் பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று, யூனுஸின் குறுங்கடன் பல லட்சம் ஏழைகளின் வாழ்க்கையை சற்றேனுமாவது முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது என்பதுதான்.

ஆனால் யூனுஸுக்கு ஏகப்பட்ட எதிரிகள் உள்ளனர். இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது குறுங்கடன் என்பதையே எதிர்க்கும் உலகளாவிய இடதுசாரிகள். யூனுஸ் கார்பரேட் குழுமங்களின் கையாள் என்பதில் தொடங்கி, ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை என்பதுவரையில் இந்தக் குற்றச்சாட்டுகள் செல்கின்றன. பங்களாதேசத்துக்குள், மாற்று குறுங்கடன் நிறுவனர்கள் சிலரும் யூனுஸுக்குக் கிடைக்கும் உலகப் பெருமையைக் கண்டு பொருமுகிறார்கள். யூனுஸ்க்கு அமைதி நோபல் பரிசு கிடைத்ததும் அவர்மீது படியும் ஏச்சுகள் அதிகரிக்கவே செய்துள்ளன.

கிராமின் வெறும் குறுங்கடனுடன் நிற்கவில்லை. இந்தியா போலன்றி பங்களாதேசத்தில் பெரிய அளவில் தொழில்துறை கிடையாது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? கிராமின் வங்கிதான் புதிய பல தொழில்களுக்கு அடி போட்டுக்கொடுத்தது. நார்வேயின் டெலிநாருடன் இணைந்து கிராமின் டெலிகாம் என்ற செல்பேசி நிறுவனத்தை ஆரம்பித்தது. அதன்மூலம் போன் லேடீஸ் என்ற ஐடியாவை முன்வைத்து கிராமங்களில் குறுங்கடன்கள் மூலமாக, பெண்கள் நடத்தும் செல்பேசியால் ஆன பொதுத் தொலைபேசி முறையைக் கொண்டுவந்தது. முதன்முதலில் பங்களாதேசத்துக்கு உருப்படியான இண்டர்னெட் சேவையைக் கொண்டுவந்ததும் கிராமின் வங்கியின் கிராமின் இண்டெர்னெட்தான். பிரான்ஸின் குரூப் டானோனுடன் இணைந்து விடமின் கலந்த தயிர் தயாரித்து, ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அவற்றை விற்க முனைந்தது கிராமின். இப்படி கிராமினின் பல்வேறு நிறுவனங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதனால்தானோ என்னவோ, யூனுஸுக்கு 70 வயது ஆகிவிட்டது என்று அவரை கிராமின் வங்கியின் தலைமைப் பதவியிலிருந்து பங்களாதேச அரசு தூக்கிவிட்டது!

சில ஆண்டுகளுக்குமுன் காலிதா ஜியாவும் ஷேக் ஹசீனாவும் முடியைப் பிய்த்துக்கொண்டு சண்டை போட்டனர். தேர்தலுக்கு முந்தைய சண்டை இது. அப்போது யூனுஸ் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார். நோபல் பரிசு பெற்ற மிதப்பில் இருந்ததனாலோ என்னவோ, தானும் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அவர் முடிவு செய்தார். முன்னாள் பிரதமரும் இன்னாள் பிரதமரும் அடித்துக்கொள்ளும் சண்டை நாட்டு மக்கள் அனைவரையுமே வெறுப்பில் ஆழ்த்தியிருந்தது. தன்னை ஒரு மாற்றாக முன்வைக்க யூனுஸ் முன்வந்ததும் அரசியல்வாதிகள் அவருக்குக் கட்டம் கட்டினர். ஒருவிதமாக அரசியல் அமைதி வந்து, தேர்தல் நடத்தப்பட்டு, ஷேக் ஹசீனா ஜெயித்தார். அப்போதே யூனுஸுக்கு ஆப்படிப்பது என்று முடிவானது. ஹசீனா யூனுஸ்மீது பணம் கையாடல் குற்றச்சாட்டுகளை வைத்தார். பின்னர் இப்போது 70 வயதாகிவிட்டது; எனவே பதவியில் இருக்கமுடியாது என்ற சட்டப்படியான நடவடிக்கை.

யூனுஸ் இதனை எதிர்ப்பது எளிதல்ல. நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டுப் பார்த்தால், யூனுஸ் கட்சி வீக். அவர் பேசாமல் வேறு விஷயங்களில் இறங்கலாம். கட்சி பாலிடிக்ஸ் அவருக்குச் சரிப்படுமா என்று தெரியவில்லை.

***

இந்தியாவில் இதே நேரத்தில் வேறொரு சோதனை முயற்சி நடந்துகொண்டிருந்தது. சிட்பி, நபார்ட் போன்ற மத்திய அரசின் வங்கி அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் என்னும் முறையை ஊக்குவித்துக்கொண்டிருந்தன.

மக்களிடையே, குறிப்பாக, ஏழைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுதான் இதன் அடிப்படை. மக்கள் 20 பேர் கொண்ட குழுக்களாகக் கூடி, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை சேமிக்கவேண்டும். இவர்களுக்கு உதவ ஏதேனும் ஒரு தொண்டமைப்பு முன்வரும். இந்தப் பணத்தை ஏதெனும் ஒரு பொதுத்துறை வங்கியில் குழுக் கணக்காக எடுத்துக்கொள்வார்கள். இந்தப் பணத்திலிருந்து குழுவின் உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட வட்டியில் கடன் கொடுக்கலாம். அவர் கடனைக் குறிப்பிட்ட தினத்துக்குள் கட்டிவிடவேண்டும். நாளடைவில் அந்த வங்கியே மேற்கொண்டு கொஞ்சம் பணத்தைக் குழுவுக்குக் கடனாகக் கொடுக்கும். அந்தப் பணத்தையும் குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் கடனாகக் கொடுத்துக்கொள்ளலாம்.

பிரையாரிட்டி செக்டர் என்ற கணக்கில் இதுபோன்ற சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் தருவதை மத்திய அரசு ஊக்குவிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு பொதுத்துறை வங்கியும் குறிப்பிட்ட அளவு கடன்களை இந்த வழியில் கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த சுய உதவிக் குழுக்களைக் கட்டமைத்து இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் தொண்டமைப்புக்கு மாநில அரசுகள் மானியத் தொகை கொடுத்தனர்.

லாபநோக்கற்ற அமைப்புகள் என்றாலும் இவற்றில் நிறைய ஊழல்களும் நிறைந்திருந்தன. இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களது பணம் பிறருக்குப் பயன்பட ஆரம்பித்தது. தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்த ஓட்டுவங்கியாக குறிப்பிட்ட பணம் கைமாறினால் வாக்களிக்கப்படும் என்பதாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எந்த ஒரு தொண்டமைப்பாலும் சராசரியாக, 10-20 சுய உதவிக்குழுக்களுக்குமேல் நடத்தமுடியாது. இவர்களிடம் தேவையான தகவல் தொடர்பு மென்பொருள்கள் இருக்காது.

பணப் பட்டுவாடா என்பதைத் தாண்டி, ஸ்கில் பில்டிங் என்னும் திறன் மேம்பாடு இவர்களுடைய ஆதாரத் தேவை. ஆனால் எவ்வளவு குழுக்களில் இது முறையாக, ஒழுங்காக நடந்தது என்பது தெரியவில்லை.

***

மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்னும் அமைப்புகள் ஆங்காங்கே தோன்றி, மையமான தலைமை இல்லாமல் நடப்பதால், சில நன்மைகள் உண்டு, பல தீமைகள் உண்டு. பெயர் சொல்லும்படியாக ஓரிரு அமைப்புகளையே சொல்லலாம். ஆனால் ஸ்கேலபிலிடி கிடையாது. இவை அனைத்தும் அடிப்படையில் சேமிப்பையும் அதற்குப்பின் கடனையும் முன்வைக்கின்றன. ஆனால் பெரும்பாலான ஏழை மக்களுக்கு, சேமிக்கக் கையில் ஒன்றுமே இல்லை. அவர்களுக்குத் தேவை முதலில் கடன். பின் அதிலிருந்து வரும் வருமானத்தில் சேமிப்பு. பின் ஒழுங்கான குறுமுதலீடு, குறுங்காப்பீடு...

இங்குதான் மீண்டும் கிராமின் மாதிரி இந்தியாவுக்குள் புகுந்தது.

(தொடரும்)

Wednesday, March 16, 2011

குறுங்கடன் - 2 - எல்லோருக்கும் கடன்

கடன் பற்றி பல்வேறு கலாசாரங்களிலும் மதங்களிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இஸ்லாம், வட்டிக்குக் கடன் தருதலை அனுமதிப்பதில்லை. யூதர்களும் ஆரம்பத்தில் வட்டிக்குக் கடன் தருதலை அனுமதிக்கவில்லை. ஆனால் நாளடைவில், யூதர் அல்லாதோருக்கு யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கலாம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரம்பகாலக் கிறிஸ்தவமும் வட்டிக்குக் கடன் கொடுத்தலைக் கடுமையாக எதிர்த்தது. எனவே இயல்பாகவே ஐரோப்பா முழுமையிலும் கிறிஸ்தவர்கள் கடன் வாங்குபவர்களாகவும் யூதர்கள் அவர்களுக்குக் கடன் கொடுப்பவர்களாகவும் ஆனார்கள்! பின்னர் வங்கித் தொழில் என்ற ஒன்று ஐரோப்பாவில் ஆரம்பித்ததும், யூதக் குடும்பங்களே அதில் முதன்மையாக இருந்தன. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு அங்கு குடியேற்றங்கள் நடந்தபின்னும் இதுவே தொடர்ந்தது. வட்டிக்குக் கடன் கொடுத்தல் பற்றியும் அதற்கான விதிகள் பற்றியும் நாரத தர்மசாஸ்திரம் விரிவாகவே பேசுகிறது. பாஸ்கராசார்யா போன்றோரின் கணிதப் புத்தகங்களில் வட்டியைக் கணக்கிடுவது எப்படி என்றெல்லாம் கணக்குகள் வருகின்றன. தமிழ்க் காப்பியங்களில் வருவோர், வட்டிக்குக் கடன் வாங்கி, பொருள் வாங்கி, வாணிபம் செய்து பொருள் ஈட்டுதல் அல்லது பொருள் இழத்தல் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம். கம்ப ராமாயணம், கடன் பெற்றார் நெஞ்சம் போல ராவணன் கலங்கியதைச் சொல்வதிலிருந்து கடன் வாங்கினவர் கடனைத் திருப்பச் செலுத்த முழுமையான முயற்சிகளை மேற்கொள்வதை அறியலாம். இந்தியாவில் சில குறிப்பிட்ட சாதியினர் கடன் தருதலில் ஈடுபடுவதைப் பார்த்துள்ளோம்.

நெதர்லாந்தில் தொடங்கிய நவீன வங்கிச் சேவை இங்கிலாந்தை அடைந்து, அங்கிருந்து ஐரோப்பாவில் பரவி, பிரிட்டிஷார் மூலமாக இந்தியாவுக்கும் வந்தது. சென்னையில் ஆர்பத்நாட் வங்கி மூழ்கியதை அடுத்து இந்தியர்கள் தங்களுக்கென சுதேசி வங்கி ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டே இந்தியன் வங்கி, சில செட்டியார்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியா சுதந்தரம் பெறுவதற்குமுன்னரேயே பல வங்கிகள் செயல்பாட்டில் இருந்தன. சுதந்தரத்துக்குப் பிறகு, இந்திரா காந்தி காலத்தில் பல பெரிய வங்கிகள் கட்டாயமாக தேசியமயமாக்கப்பட்டன. இந்தியன் வங்கியும்கூட அப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1990-களின் தாராளமயமாக்கலின்போது தனியாரும் வங்கிகள் தொடங்கலாம் என்று உரிமம் தரப்பட்டு சில தனியார் வங்கிகள் உருவாகின. முற்றிலும் அந்நிய நாட்டின் வங்கிகளும் இந்தியாவில் சேவையைத் தர முடியும். இந்திய வங்கிகளில் அந்நிய நாட்டு அமைப்புகள் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்திருக்கமுடியும்.

பெருமளவு வங்கிச் சேவைகள் வளர்ந்தாலும் இவை ஏழைகளைச் சென்றடைவதில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். காரணம், இந்த வங்கிகள் அனைத்துமே, கடன் பெறத் தகுதியானோர் என்போருக்கே கடன் தரலாம். யாருக்குக் கடன் பெறத் தகுதி உண்டு என்பதை எப்படித் தீர்மானிப்பது என்பதற்கான சில விதிமுறைகள் (norms) உள்ளன. இதில் பெரும்பாலான மக்கள் விலக்கப்பட்டுவிடுவார்கள்.

வீட்டுக்கு எதிராகக் கடன், தங்கம் அல்லது பிற மதிப்புள்ள சொத்துகளுக்கு எதிராகக் கடன் என்பது கால காலமாக நிகழ்ந்துவரும் ஒன்று. வீடு கட்டக் கடன், வாகனம் வாங்கக் கடன் ஆகியவை கடந்த இருபது ஆண்டுகளில் பெருமளவு வளர்ந்தன. கிரெடிட் கார்டுகள், என்ன ஏது என்று கேள்வி கேட்காமல், ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கக்கூடிய அளவுக்குத் தனிநபர் கடன்களை அளித்தன. இதற்கான வட்டி அதிகம். பின்னர் வங்கிகள் நேரடியாகவே பெர்சனல் லோன் என்ற தனிநபர் கடன்களை எந்தவித பாதுகாப்பும் வைத்துக்கொள்ளாமல் தர ஆரம்பித்தன. ஒரு முறை கடன் வாங்கி சரியாகத் திருப்பிக் கட்டியிருந்தால் தானாகவே அடுத்தமுறை அதிகக் கடன் தர வங்கிகள் தயாராக இருந்தன.

அரசு வேலையில் இருப்போருக்கு பொதுத்துறை வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தன. தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் மாதச் சம்பளக்காரர்களுக்கு, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கௌரவத்துக்குப் பொருந்தினாற்போல கடன் கிடைத்தது. சுயதொழில் புரிவோருக்குக் கடன் பெறுதலில் சிக்கல் இருந்தது. ஆனால் இப்போது ஆண்டாண்டுக்குச் சரியாக வருமான வரி கட்டுவோருக்கு நல்ல கடன்கள் கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு கிளினிக்கில் கருவிகள் வாங்கக் கடன் கிடைக்கிறது. சுயதொழில் புரிவோர் சில பல லட்சங்களுக்கு அல்லது கோடிகளுக்கு ஆலைக்கான கருவிகளை வாங்கக் கடன் கிடைக்கிறது.

ஆனால் தெருவோர ஏழைக்கு கையேந்தி பவன் வைக்கத் தேவையான 10,000 ரூபாய் அல்லது இஸ்திரி வண்டி அமைக்கத் தேவையான 5,000 ரூபாய்தான் கடனாகக் கிடைப்பதில்லை. இவர்கள் பெரும்பாலும் வட்டிக் கடைகளை நம்பி, வாழ்க்கையை அழிக்கவேண்டியுள்ளது.

***

பங்களாதேசத்துக்காரர் முகமது யூனுஸ். அது கிழக்கு பாகிஸ்தானாக இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் பொருளாதாரத்தில் பிஎச்.டி முடித்துவிட்டு அங்குள்ள ஒரு கல்லூரியில் வேலை செய்துவந்தார் அவர். முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டு, மேற்கு பாகிஸ்தான் துருப்புகள் கிழக்கு பாகிஸ்தானில் அட்டகாசம் செய்து, அதன் விளைவாக அகதிகள் இந்தியாவுக்கு வந்ததும் இந்தியா தன் படைகளை அனுப்பி பங்களாதேசத்துக்கு விடுதலை பெற்றுத்தந்தது. உடனேயே தாய்நாட்டை முன்னுக்குக் கொண்டுவர என்று யூனுஸ் தன் வேலையை விட்டுவிட்டு பங்களாதேசத்துக்குத் திரும்ப வந்தார்.

அங்கே பல்கலைக்கழக வேலை ஒன்றை எடுத்துக்கொண்டு பொருளாதாரப் பாடத்தை நடத்தினார். ஆனால் வகுப்பறை பொருளாதாரமும் தெருவின் பொருளாதாரமும் ஒத்துப்போகாததைக் கண்டார். தன் மாணவர்களுடன் அருகில் இருந்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களின் தினசரி வேலை என்ன, எப்படி வருமானம் பெறுகிறார்கள் என்று பார்வையிட்டார். அந்த கிராமத்துப் பெண்கள் பிரம்பு பிளாச்சால் கூடை முடைபவர்கள். கையில் காசு இல்லாத காரணத்தால் தரகர்களிடமிருந்தே மூலப்பொருளை வாங்கி, கூடை முடைந்ததும் அவற்றை தரகர்களிடமே அவர்கள் சொன்ன காசுக்கே விற்றுவந்தார்கள். நாள் முழுதும் வேலை செய்தாலும் கையில் கிடைப்பதோ சில டாக்காக்கள் மட்டுமே. சொந்தமாகக் கொஞ்சம் பணம் இருந்தால் தாங்களே மூலப்பொருள்களை வாங்கி, கூடைகளை முடைந்து நல்ல விலைக்கு விற்கமுடியும் என்றும் தங்கள் அதே உழைப்பை அதிக வருமானமாக மாற்றமுடியும் என்று அந்தப் பெண்கள் சொன்னார்கள்.

உடனேயே யூனுஸ் தன் கையிலிருந்து அவர்களுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்தார். அடுத்த சில நாள்களில் அந்தப் பெண்கள் பெறும் வருமானம் அதிகமானது. இதே செயலை நாடு முழுவதும் ஏன் செய்யக்கூடாது என்று அவருக்குத் தோன்றியது.

அப்போதுதான் இது எளிதான செயல் அல்ல என்பதை அவர் உணர்ந்தார். முதலில் வங்கிகள் இந்த மக்களுக்குக் கடன் தர விரும்பவில்லை. தானே சொந்தமாக அவர்களுக்கு ஜவாப்தாரியாக இருப்பதாக யூனுஸ் சொன்னதும் ஒரு வங்கி கடன் தர முன்வந்தது. ஆனால் ஒவ்வொரு கடன் விண்ணப்பத்திலும் யூனுஸ் கையெழுத்திடவேண்டியிருந்தது. வங்கிகளுக்கு அதிக விருப்பம் இல்லாத காரணத்தால் தானே ஒரு வங்கியை உருவாக்கிவிட யூனுஸ் நினைத்தார்.

அப்போது ஜெனரல் எர்ஷாத், ராணுவப் புரட்சி மூலம் பங்களாதேசத்தின் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தார். அவரது நிதியமைச்சராக இருந்தவர் யூனுஸின் நண்பர். அவர்மூலமாக எர்ஷாதின் அனுமதியுடன் கிராமின் வங்கி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அரசு 60% பங்கும் கடன் பெறும் மக்கள் மீதம் 40% பங்கும் கொண்டதாகத் தொடங்கப்பட்ட வங்கியில் பின்னர் அரசின் பங்கு 40%-கக் குறைக்கப்பட்டது.

கிராமின் வங்கி குறுங்கடன் என்ற முறையைக் கொண்டுவந்தது. கொடுக்கப்படும் கடன் தொகை மிகக் குறைவானது. 2,000 டாக்கா அல்லது அதைப்போலத் தொடங்கி, பின்னர் 5,000 டாக்கா என்றுதான் ஆரம்பக் கடன் இருந்தது. இந்தத் தொகைக்கு வட்டி உண்டு. Equated Weekly Instalments எனப்படும் வாரா வாரத் தொகை மூலம் முதல், வட்டி இரண்டும் சேர்த்து அடைக்கப்படும். கிராமின் வங்கி தொடங்குவதற்கு முன்னமேயே யூனுஸ் நேரடி அனுபவமாக சிலவற்றைக் கண்டுகொண்டார்.

1. பெண்கள்தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள். ஆண்கள் பணத்தை நாசமாக்கிவிடுகிறார்கள். அவர்களை நம்பிக் கடன் கொடுப்பது உருப்படாது.
2. விவசாயத்துக்குக் கடன் கொடுப்பது உபயோகமானதல்ல. ஏனெனில் எப்படியும் அரசு விவசாயத்துக்கு கொடுக்கும் கடனை அவ்வப்போது தள்ளுபடி செய்துகொண்டே இருக்கும். எனவே தனியாரிடம் வாங்கும் கடனையும் திருப்பிச் செலுத்த விவசாயிகள் விரும்புவதில்லை.

எனவே பெண்களுக்குக் கடன் கொடுத்து, அவர்கள் ஏதேனும் சிறு தொழில் செய்வதுமூலம் அவர்கள் வாழ்க்கையை மாற்றலாம் என்று யூனுஸ் முடிவுசெய்தார்.

பெண்கள் கடனைத் திருப்பிக்கொடுப்பார்கள் என்றாலும் அவர்கள் கட்டாயமாகக் கடனைத் திருப்பிக்கொடுக்க என்ன செய்வது என்று யோசித்ததில் உருவானதுதான் குழுக்கடன். மொத்தம் ஐந்து நபர்கள் கொண்ட குழுக்களை கிராமின் வங்கி உருவாக்கும். இந்தக் குழுவில் ஒவ்வொருவர் வாங்கும் கடனுக்கும் மற்றவர்களும் சேர்ந்து பொறுப்பு. ஒருவர் கடனைக் கட்டாவிட்டாலும் மற்றவர்கள் கட்டவேண்டும். ஆனால் எந்தவித ஆவணமும் கிடையாது. அப்படி இருக்கும்போது மக்கள் ஏன் கடனைத் திரும்பச் செலுத்தவேண்டும்?

ஒரு குழுவில் இருக்கும் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் கடன் கிடைக்காது. இருவருக்கு மட்டும்தான். அவர்கள் ஒழுங்காகக் கட்டினால்தான் மற்ற இருவருக்குக் கொடுக்கப்படும். நால்வரும் கட்டி முடித்தால்தான் குழுத் தலைவருக்குக் கடன் கிடைக்கும். அவர் ஒழுங்காகக் கட்டினால்தான் மீண்டும் அடுத்த கடன் குழுவின் பிற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். கடன்மூலம்தான் வாழ்க்கை உயருகிறது என்னும்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டியாகவேண்டிய கட்டாயமாகிறது.

இந்த முறையில் பிரச்னையே இல்லையா? மக்கள் எல்லாம் வளம் பெற்று பங்களாதேசம் உலகிலேயே முதன்மை நாடானதா? கடனுக்கு எதிரான இஸ்லாமிய முல்லாக்கள் நிறைந்த பங்களேதேசம் யூனுஸை எப்படி எதிர்கொண்டது? அரசியல் உலகில் அவருக்கு எந்த மாதிரியான சிக்கல்கள் எழுந்தன?

அடுத்த பாகத்தில் இவற்றைப் பார்ப்போம்.

(தொடரும்)

Tuesday, March 15, 2011

குறுங்கடன் - 1

பொதுவாக வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படாத ஒரு செய்தி குறுங்கடன் (microfinance).

பின்தங்கியுள்ள ஒரு நாட்டில் நவீன பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கும்போது, அந்த வளர்ச்சி சீராக அனைத்து மக்களுக்கும் போய்ச் சேராது.

நிலத்தையும் கைவினைப் பொருள்களையும் மட்டுமே நம்பியிருந்த, இயந்திரமயமாதலுக்கு முந்தைய, சமுதாயத்தில் தனி ஒருவர் தன் வருமானத்தைத் தடாலடியாகப் பெருக்கச் சாத்தியங்கள் குறைவாக இருந்தது. அவர் முரட்டுத்தனமாகப் பிறரது நிலங்களைக் கையகப்படுத்தினாலோ அல்லது பல அடிமைகளைக் கொண்டு அவர்களது உழைப்பில் தன் செல்வத்தைப் பெருக்கினாலோதான் சாத்தியம். இயந்திரமயமானதும், மூலதனம்தான் முக்கியமான செல்வம் என்றானது. பொருள்களுக்கான பெரும் தேவை இருந்தது. பொருள்களும் எளிதானவை. எனவே மூலதனம் இருந்தால், அதனைக் கொண்டு ஆலை ஒன்றை ஏற்படுத்தி, அதில் பலரை வேலைக்கு வைத்து, அவர்கள் உருவாக்கும் உற்பத்தியைக் கொண்டு லாபம் ஈட்டலாம்.

ஆனால் இன்றைய நவீன பொருளாதாரம் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. வெறும் மூலதனம் மட்டும் போதாது. மூளை நிறைய வேண்டும். ஒரு தொழிலை ஆரம்பித்தால் லாபம் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. இதை கம்யூனிஸ்டு சித்தாந்திகள் புரிந்துகொள்வதே இல்லை. சொல்லப்போனால், இன்று மூளை மட்டும் இருந்தாலே போதும். மூலதனத்தைக் கொடுக்க வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களும் தனிப்பட்ட பணக்காரர்களும் உள்ளனர். மூளை என்றால் என்ன? ஒரு நல்ல ஐடியா. இந்தக் குறிப்பிட்ட சந்தையில், இந்தவிதமான பொருளை, இந்தத் தரத்தில் உற்பத்தி செய்து, இந்த விலைக்கு விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஐடியா. மூலதனத்தைவிட இதுபோன்ற ஐடியாக்களே முக்கியமானவை என்பதை நிதியுடையோர் புரிந்துகொண்ட காரணத்தால் உருவானவையே வென்ச்சர் கேபிடல் அமைப்புகள். இந்தத் தொழில்கள் பொருள் உற்பத்தியாக இருக்கலாம், சேவை வழங்குதலாக இருக்கலாம்.

நவீன பொருளாதாரத்தில் இப்படி எண்ணற்ற நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை உருவாக்குபவர்களால் நிறைய லாபம் சம்பாதிக்க முடிகிறது; இந்த நிறுவனங்களில் வேலை செய்வோரும் நிறையச் சம்பளம் பெற முடிகிறது. ஆனால் இந்த வாய்ப்புகளை அனைவரையும் சென்றடைவதில்லை.

முதலில் வேலை வாய்ப்புகளை மட்டும் பார்ப்போம். பெரும்பாலான அதிக சம்பளம் தரக்கூடிய நவீன வேலைகளை எடுத்துச் செய்ய ஒருவர் அதி புத்திசாலியாக எல்லாம் இருக்கவேண்டியதே இல்லை. அடிப்படையான சில திறன்கள் பெற்றவராக இருந்தாலேயே போதும். நுகர்வோர் சேவையை வழங்க, நன்கு பேசத் தெரிந்தவராக இருக்கவேண்டும். ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் நன்கு உரையாடத் தெரிந்தவராக இருக்கவேண்டும். விற்பனைத் துறையில் இருந்தால் நைச்சியமாகப் பேசி, எதிராளியை நிறையப் பொருள்களையோ சேவைகளையோ வாங்குமாறு செய்யவேண்டும். நன்கு பேச்சுவார்த்தை நடத்தத் தெரிந்தவராக இருக்கவேண்டும். எதிராளி பேசுவதைச் சட்டென்று புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்கவேண்டும். கணினிப் பயன்பாட்டுத் திறன் அவசியம். இன்னும் பலப் பல திறன்கள் உள்ளன. இந்தத் திறன்களுக்கும் பள்ளி, கல்லூரி பாடங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பெரும்பாலும் நகர்வாழ் மாணவர்கள், மத்தியதரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வேலைகளைப் பெறுகிறார்கள். அவர்களது குடும்பங்கள் வேகமாக முன்னேறவும் செய்கின்றன.

இந்த வாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இவர்களுக்கு குறைந்த சம்பளத்திலேயே வேலைகள் கிடைக்கின்றன. உள்ளார்ந்த திறன்கள் எவை என்பதை அறிந்துகொள்ளாமல், தவறாக, ஆங்கிலப் படிப்பு மட்டுமே போதும் அல்லது எஞ்சினியரிங் படிப்பு மட்டுமே போதும் என்று நினைத்துக்கொண்டு நிறையப் பணம் செலவுசெய்து தரமற்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து, எதையும் கற்றுக்கொள்ளாமல் வேலை தேட வந்து, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

தீர்வுதான் என்ன? அடிப்படையில் நம் கல்வி முறையைப் பெரிதும் மாற்றவேண்டும். என் கணிப்பில் பாடத்திட்டம் என்பது முக்கியமே அல்ல. சிலபஸ் என்ற பெயரில் ஏகப்பட்ட விஷயங்களைப் புகுத்தி, அதைச் சரியாகச் சொல்லித்தரத் தெரியாத ஆசிரியர்கள் கையில் மாட்டிக்கொண்டு பெரும்பாலான மாணவர்கள் நாசமாகப் போகிறார்கள். கல்விமீதே அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்னைப் பொருத்தமட்டில், 90% மாணவர்களின் தேவை, படிக்க, புரிந்துகொள்ள, எழுத, பேசக் கற்றுத்தருவதே. ஆங்கிலமும் தாய்மொழியும் அவசியம். முடியாவிட்டால் தாய் மொழியிலாவது மேலே சொன்ன நான்கையும் நன்றாகச் செய்யத் தெரியவேண்டும். அவை தாண்டி, ஏதேனும் ஒரு துறையை அவரவர் விருப்பம் சார்ந்து படித்துக்கொள்ளலாம். கணக்கு, அறிவியல், கணினி புரோகிராமிங், வரலாறு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதற்குமுன் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான திறன் வருமாறு செய்தல் வேண்டும். இதைப்பற்றி இங்கே மேலும் எழுதுவது இந்தக் கட்டுரைத் தொடரை வேறு திசையில் இழுத்துச் செல்லும் என்பதால் இத்தோடு விட்டுவிடுகிறேன்.

***

வேலைகளுக்கு வெளியே, சுயதொழில் புரிவதில் வேறொரு பிரச்னை உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு வங்கிக் கணக்கே கிடையாது. வங்கிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்கள். வளரும் நாட்டில் எண்ணற்ற சிறுதொழில் வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டு விஷயங்கள் தேவை. முதலாவது: ஓரளவுக்கான படிப்பு அல்லது சுய சிந்தனை. இரண்டாவது: கொஞ்சம் சொந்த மூலதனம், மீதம் கடன்.

நீங்கள் தெருவோரத்தில் ஒரு பெட்டிக்கடை வைக்க விரும்பலாம். அல்லது சில கோழிகளை வாங்கி முட்டை போடச் செய்து அவற்றை விற்க விரும்பலாம். இறால் வளர்க்க விரும்பலாம். தையல் தைத்துச் சம்பாதிக்க விரும்பலாம். கையேந்தி பவன் திறந்து சுடச்சுட சோறு விற்க விரும்பலாம். பரோட்டாக் கடை திறக்கலாம். சாண்ட்விச் விற்கலாம். பூ விற்கலாம். மொபைல் சிம் கார்டு விற்கும் பிசினஸ் செய்யலாம். ஒரு கார் வாங்கி, கால் டாக்ஸி நெட்வொர்க்கில் இணைந்துகொள்ளலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை மேலே சொன்ன இரண்டும். அடிப்படை வரவு செலவுக் கணக்கு தெரிந்திருக்கவேண்டும். லாபம் எது, நஷ்டம் எது என்று தெரிந்திருக்கவேண்டும். பணத்தை இழந்துவிடக்கூடாது. மற்றொரு பக்கம், மூலதனம் தேவை.

இந்த மூலதனம் எங்கிருந்து வரும்? தேவையான மூலதனம் அனைத்தையும் சொந்தமாகவே சேர்த்துவிட முடியுமா? பெரும்பாலானோருக்கு இது முடியாது. சொந்தக்காரர்களிடம் பெறமுடியுமா? அவர்களுக்கே சோற்றுக்கு வழி இல்லை. அப்போது ஓர் ஏழைக்கு வழிதான் என்ன?

அதுதான் தெருவுக்குத் தெரு வங்கிகள் உள்ளனவே?

ஆனால் இந்த வங்கிகளுக்குத் தினம் செல்வோர் யார் என்று பாருங்கள். நகரின் மக்கள் தொகையில் கீழே இருக்கும் 80% பேர் வங்கிக்குச் செல்லவே மாட்டார்கள். அவர்கள் சீட்டு கட்டிப் பணம் சேர்த்து, ஏலம் எடுப்பார்கள். பயங்கர வட்டிக்குக் கடன் வாங்கி அதில் மூழ்குவார்கள். மொத்தத்தில் அவர்களது தேவைக்கு ஏற்ப பணம் அவர்களுக்குக் கிடைக்காது. மறுபக்கம், பிசினஸ் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு 15,000 கோடி ரூபாய் கடன் பணம் திரட்டியது என்று செய்தி வரும். இங்கே இவர்களுக்கோ 15,000 ரூபாயைப் புரட்டுவது கடினம்.

இவர்கள் வளம் பெற வழியே இல்லையா?

(தொடரும்)

Sunday, March 13, 2011

திருப்பாண்மலை

திருமலைசென்ற அதே நாளில் திருப்பாண்மலை என்ற மற்றோர் இடத்துக்கும் சென்றிருந்தோம். இதுவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள இடம். இதுவும் ASI பராமரிப்பில் உள்ளது. இங்கு சிறு குன்றின்மேல் ஒரு தர்கா கட்டப்பட்டுள்ளது. இந்தக் குன்றின்மேல் உள்ள பாறையில் சிறப்பாகச் சொல்லவேண்டியவை இரண்டு கல்வெட்டுகள். ஒன்று பல்லவ அரசன் நந்திவர்மன் காலத்தது. கல்வெட்டு தமிழில் உள்ளது; பல்லவ கிரந்தத்தில் இல்லை. நந்தி போத்தரசன் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் பல்லவ அரசர்கள் ‘போத்ராதிராஜன்’ என்று அழைக்கப்படுவார்கள்.

நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு - பொன் இயக்கியைச் செதுக்கியுள்ளதைக் குறிக்கிறது.
அந்தக் கல்வெட்டு தென்படும் இடத்துக்கு அடியில் ஒரு சுனை உள்ளது. சுனையை ஒட்டிய கல்லில் ஒரு யக்ஷியின் சுமாரான புடைப்புச் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த யக்ஷியின் பெயர் அம்பிகை. தமிழ்க் கல்வெட்டு இவளை ‘பொன்னியக்கி’ என்று குறிப்பிடுகிறது (யக்ஷி = யக்கி = இயக்கி).

பொன்னியக்கி - யக்ஷி அம்பிகா
இதே பாறையின் மறுபக்கம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. கல்வெட்டு அடிப்பவர் ராஜராஜனுக்கு முன் ஸ்வஸ்திஸ்ரீ என்று எழுத விட்டுவிட்டார். பின் அவசர அவசரமாக சற்று தள்ளி கீழே அதனை எழுதியிருக்கிறார். நன்றாக அடிக்கோடிட்டு அழகாக எழுதப்பட்ட கல்வெட்டு. கீழே சோழர்களின் புலி பொறிக்கப்பட்டுள்ளது. (பார்த்தால் கொஞ்சம் நாய் மாதிரி இருக்கும்!)

ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு
சோழர்களின் புலி இலச்சினை
குன்றின் நடு மையத்தில் தீர்த்தங்கரர் ஒருவரின் புடைப்புச் சிற்பத்தை ஆரம்பித்துள்ளனர்.


குன்றைச் சற்றே சுற்றிவந்தால், ஒரு குகைக் கோவிலைக் காணலாம். ஏழு கருவறைகள் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் பாதியில் கைவிட்டுவிட்டு, கருவறைகளை முழுவதும் செதுக்காமலேயே சென்றுவிட்டனர். ஸ்டைலைப் பார்த்தால் நிச்சயமாக பல்லவர் காலக் குகைக் கோவில் என்றுதான் சொல்லவேண்டும். மகேந்திரன் காலமாக இருக்கலாம். ஆனால் அருகில் ஏ.எஸ்.ஐ பலகைகள் ஏதும் இல்லை.

மகேந்திரன் காலக் குகைக் கோவில்?
மேலே ஒரு தர்கா இருப்பதால் இந்த இடத்துக்கு நிறைய முஸ்லிம்கள் வருகின்றனர். ஆனால் அந்த தர்காவில் வழிபாடு எல்லாம் கிடையாது.

Saturday, March 12, 2011

கலைஞர் தொலைக்காட்சி சிபிஐ விசாரணை

சிபிஐ கனிமொழியிடமும், தயாளு அம்மாளிடமும், சரத்குமார் என்பவரிடமும் சில கேள்விகளைக் கேட்டுள்ளது பற்றி செய்திகளைப் படித்திருப்பீர்கள்.

தினகரன் பத்திரிகையில் நடத்தப்பட்ட சில கருத்துக் கணிப்புகளின் விளைவாக கோபம் கொண்டு வெகுண்டெழுந்த அழகிரியின் அடியாட்கள் மதுரையின் தினகரன் அலுவலகத்தை எரித்து அதில் மூன்று ஊழியர்கள் இறந்துபோனார்கள். அதையடுத்து நடந்த அதிரடி மாற்றங்களில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். (ஆ. இராசா அந்த இடத்துக்குச் சென்று பிற்காலத்தில் 2ஜி சர்ச்சை எழக் காரணமாக இருந்தார்!)

கலாநிதி, தயாநிதி மாறன்களின் பலமே சன் தொலைக்காட்சிதான் என்பதையும் அதனால் தம் அவசரத் தேவை ஒரு தொலைக்காட்சி சானல் என்பதையும் புரிந்துகொண்ட கருணாநிதி, அவசர அவசரமாக கலைஞர் தொலைக்காட்சியை ஆரம்பித்தார்.

ரியல் எஸ்டேட் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என்றால் உடன்பிறப்புகளைக் கொண்டு காரியத்தைச் சாதித்துவிடலாம். ஆனால் தொலைக்காட்சி ஆரம்பித்து நடத்துவது எளிதான விஷயமல்ல. ஜெயா டிவியைப் பார்த்தாலே இது தெரிந்துவிடும். தொழில்நுட்பம், புரோகிராம் உருவாக்கும் திறன், டிஆர்பி ரேட்டிங் போட்டிகளில் விளையாடும் திறன் ஆகியவை இருந்தால்தான், தொலைக்காட்சியை நஷ்டம் இல்லாது நடத்தமுடியும். கூட்டம் நம் டிவியைப் பார்த்தால்தான் அதன் வழியாகக் கொள்கை பரப்பு செய்யமுடியும். அதனால்தான் கலைஞர் தொலைக்காட்சியை நடத்த சரத்குமாரைக் கூப்பிட்டு வந்தார்கள். இவர் கலாநிதி மாறனின் கூட்டாளியாக இருந்து வஞ்சிக்கப்பட்டவர் என்கிறார்கள். அதனால் இந்த வாய்ப்பை பழிவாங்கக் கிடைத்த நல்ல வாய்ப்பாக அவர் கருதியிருக்கலாம். (அது எவ்வளவு தவறு என்பதை அவர் அப்போது உணர்ந்திருக்கமாட்டார்!)

இப்போது கிடைக்கும் தகவல்களின்படி, சரத்குமார் 20% (ஸ்வெட் ஈக்விடி?), தயாளு அம்மாள் 60%, கனிமொழி 20% என்ற அடிப்படையில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொருவரும் என்ன தொகை கொண்டுவந்தனர் போன்ற தகவல்கள் இல்லை. இதில்தான் ஸ்வான் டெலிகாம் புகழ் ஷாஹித் பால்வாவின் ஒரு நிறுவனம் வழியாகப் பங்குகளை வாங்க என்று பணம் தரப்பட்டு, பின் கடனாகவே வைக்கப்பட்டு, அசலும் வட்டியுமாகத் திரும்பத் தரப்பட்டுள்ளது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் எந்தப் பிரச்னையுமே இல்லை. எந்த ஒரு நிறுவனமும் எந்த நிறுவனத்துக்கும் convertible loan note (பங்காக மாற்றக்கூடிய கடன் பத்திரம்) என்ற முறையில் கடன் அளிக்கலாம். அந்தக் கடனை பங்குகளாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது பங்காக மாற்றாமல் வட்டியையும் அசலையும் பெற்றுக்கொண்டு கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

எனவே சிபிஐ ஆராய்ந்து என்ன கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கலைஞர் டிவியில் முதலீடாகக் கொண்டுவந்த தொகை எவ்வளவு? அந்தத் தொகையை தயாளு அம்மாளும் கனிமொழியும் எப்படிக் கொண்டுவந்தார்கள்? அவர்கள் முதலீடு செய்த தொகையை அவர்கள் எப்படிச் சம்பாதித்தார்கள்? அதற்குச் சரியான வருமான வரியை அவர்கள் கட்டியிருக்கிறார்களா?

இதையெல்லாம் தோண்டித் துருவ ஆரம்பித்தால் இந்தியாவில் எந்த அரசியல்வாதியுமே தப்பிக்க முடியாது. எனவே அடிப்படை நோக்கம் இந்த மாபெரும் அரசியல் ஊழலைக் கண்டுபிடித்துத் தடுப்பது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பரவியிருக்கும் இந்த ஊழலில் யார்தான் இல்லை?

தேர்தல் பேரம்தான் காரணம், சிபிஐ விசாரணை எல்லாம் பூச்சாண்டி என்றால், இது ஒருவகையில் மகா அசிங்கம். ஏனெனில் இந்த விசாரணையில் யாரையும் மாட்டவைக்க எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. முக்கியமாக டிபி ரியால்டி ஏன் பணம் கொடுத்தது என்று கேள்விக்கு, ஏன் பணம் கொடுக்கக்கூடாது என்ற மறு கேள்வியைக் கேட்கலாம். யார்தான் இன்னொரு கம்பெனியில் கன்வெர்டிபிள் லோன் நோட்ஸ் வாங்கிக்கொள்ளலாம் என்ற வரைமுறை கிடையாது. இவர் தெரிந்தவரா, தெரியாதவரா என்பதெல்லாம் கேள்வியே இல்லை. நடந்ததெல்லாம் சட்டப்படி நடந்ததாகவே தெரிகிறது. மாறாக, கலைஞர் தொலைக்காட்சி என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தேவையான பணம் தயாளு அம்மாளிடமும் கனிமொழியிடமும் எப்படி வந்தது என்று விசாரணை போகுமானால், அதில் 2ஜி சம்பந்தமே இல்லை. இதுபோன்ற விசாரணையை நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளிடமும் நடத்தவேண்டும். எனவே விரைவில் இந்த சிபிஐ நாடகம் மூடப்பட்டுவிடும். தேர்தல் பேரம்தான் படிந்துவிட்டதே...

இதில் பாவம் சரத்குமார்தான். ஏற்கெனவே தாத்தாவிடம் உடன்பாடு செய்துகொண்ட பேரன்கள் வீடு புகுந்து அவரை அடித்ததாகப் பத்திரிகையில் செய்தி வந்தது. இப்போது சிபிஐ விசாரணை வேறு. அவர் இந்தக் கழக உள்பிரச்னைகளுக்குள் ஈடுபடவே கூடாது. பேசாமல் துஷ்டர்களைக் கண்டு தூர விலகி, பஞ்சாபி, குஜராத்தி டெலிவிஷன் சானல்களை நடத்தி நன்கு சம்பாதிக்கலாம். அவருக்கு வேண்டாம் இந்தக் கேடு கெட்ட தமிழ்நாடு!

Monday, March 07, 2011

யக்ஷி அம்பிகாவின் கதை

இந்தக் கதை பேராசிரியர் ஜோப் தாமஸ் எழுதி நாங்கள் வெளியிட்டுள்ள Paintings in Tamil Nadu - A History என்னும் புத்தகத்திலிருந்து... கீழே காணப்படும் ஓவியம் ஒன்று அவர் எடுத்தது. இப்போது நான் திருமலை சென்றபோது இவையெல்லாம் காணப்படவில்லை. அழிந்துபோயிருக்கவேண்டும். யக்ஷி அம்பிகா வடிவிலான ஓவியம் மட்டும்தான் எஞ்சியுள்ளது.

***

சோமசர்மன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி அக்னிலா. அவன் ஒரு நாள் தன் மனைவியை சமையல் செய்யச் சொல்லிவிட்டு, சில பிராமணர்களை விருந்துண்ண அழைத்திருந்தான்.

விருந்துண்போர் வருவதற்கு முன்பாக, இரு சமண முனிவர்கள் அந்தப் பக்கம் வந்தனர். அக்னிலா, அந்த இருவருக்கும் உணவு பரிமாற விரும்பினாள். வேண்டிய அளவு உணவு இருந்த காரணத்தால் சமணர்களை அழைத்து, வணங்கி, அவர்களுக்கு உணவையும் பரிமாறினாள்.

அவர்கள் சென்றபிறகு விருந்துண்ண வந்த பிராமணர்கள் எப்படியோ இந்த விஷயத்தை அறிந்துகொண்டனர். சமணர்கள் சாப்பிட்ட மிச்சத்தைத் தாங்கள் சாப்பிடமாட்டோம் என்று மறுத்துவிட்டு, கோபமாக வெளியேறினர்.

தனது விருந்தினர்கள் இவ்வாறு அவமதிக்கப்பட்டதை எண்ணிக் கடுங்கோபம் அடைந்த சோமசர்மன், தன் மனைவி அக்னிலாவையும் அவளது மகன்களையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான்.

இதனால் காட்டுக்குப் போன அக்னிலாவை, கடவுள்கள் காப்பாற்றினர். அவளது பெயரும் புகழும் எங்கும் பரவியது.

சில நாள்கள் சென்றவுடன் சோமசர்மனுக்குத் தான் செய்த தவறு புலப்பட்டது. காட்டுக்குச் சென்று தன் மனைவி அக்னிலாவிடம் மன்னிப்பு கேட்க விரும்பினான்.

காட்டில் இருந்த அக்னிலா தூரத்தில் தன் கணவன் சோமசர்மன் வருவதைப் பார்த்தாள். அவன் தன்னைத் தாக்கத்தான் வருகிறான் என்று எண்ணிய அக்னிலா, பயந்துபோய், மலை முகட்டிலிருந்து கீழே குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டாள். அவளது நல்வினைகளால் அவள் ஒரு யக்ஷியாகப் பிறந்தாள். அந்த யக்ஷிதான் அம்பிகா.

மனைவி தன்னை தவறாகப் புரிந்துகொண்டு தன்னையே மாய்த்துக்கொண்ட காரணத்தால் வருத்தமுற்ற சோமசர்மன், சில காலம் கழித்து இறந்துபோனான். இறந்தபின் அவன் ஒரு சிங்கமாகப் பிறந்தான். யக்ஷி அம்பிகா அந்த சிங்கத்தைத் தன் வாகனமாகக் கொண்டாள்.

*

இந்தக் கதையைத்தான் விஜயநகரக் காலத்து ஓவியர்கள் தீட்ட முற்பட்டுள்ளனர். அக்னிலா சமண முனிவர்களை வரவேற்று வணங்கும் ஓவியத்தைக் கீழே காணலாம்.

திருமலை - அக்னிலா சமணர்களை வரவேற்பது (படம்: ஜோப் தாமஸ்)

இப்போது நான் சென்றிருந்தபோது இந்த ஓவியத்தைக் காணோம். முற்றிலுமாக அழிந்துவிட்டதா என்று தெரியவில்லை. அக்னிலா யக்ஷி அம்பிகாவாக ஆனபின் இருக்கும் தோற்றம் இப்போதும் இருக்கிறது. பெரும்பாலும் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

திருமலை - யக்ஷி அம்பிகா

பெரிதாக்கிப் பார்த்தால் அம்பிகாவுக்கு மூன்று கண்கள் இருப்பது தெரியும். அவளது தலையைச் சுற்றி அக்னிப் பிழம்புகள் தெரியும். சிங்க வாகனம், மூன்று கண்கள், தலையில் அக்னியுடன் இவள் ஹிந்து காளியைப் போன்றவள்.

சமணத்தில் ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் என்று யக்ஷிகள் உண்டு. அம்பிகா, நேமிநாதருக்குப் பணிவிடை செய்பவள். இந்தத் தலம் நேமிநாதருக்கானது என்பதால் யக்ஷி அம்பிகாவின் கதையைப் படமாக்கியுள்ளனர்!

விஜயநகர சாயலில் சமண முனிவர்களும்கூட தொந்தியும் தொப்பையுமாகக் காட்சி அளிப்பதைக் காணலாம். நீண்டு தொங்கும் காதுகள் மற்றுமொரு அடையாளம்.

ஓவியச் சிறப்பில், அஜந்தா வாகாடக ஓவியங்கள், சித்தன்னவாசல் பாண்டிய ஓவியங்கள், கைலாசநாதர்/பனமலை பல்லவ ஓவியங்கள் அளவுக்குத் திறம்படைத்தவையாக இல்லாவிட்டாலும், 700 ஆண்டுக்கும் மேற்பட்ட இந்த ஓவியங்களையும் நாம் ரசிக்கத்தான் வேண்டும்.

குந்தவை ஜீனாலயம்

வேலூர் மாவட்டத்தில் உள்ளது திருமலை என்று சிற்றூர். இங்கு ஒரு சமணக் கோயில் உள்ளது. அருகில் ஒரு சமண மடமும் உள்ளது. இந்த சமண மடம் ஒரு உறைவிடப் பள்ளியையும் நடத்திவருகிறது. இந்த ஊரில் உள்ள சமணக் கோவிலுக்கு குந்தவை ஜீனாலயம் என்று பெயர். குந்தவை என்ற ராஜராஜனின் தமக்கை இந்தக் கோவிலுக்குக் கொடை அளித்ததால் அதற்கு இந்தப் பெயர். ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகளுடன் ராஷ்டிரகூட அரசன் கிருஷ்ணா, பிறகாலத்திய விஜயநகரக் கல்வெட்டுகள் ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன.

சமண முனிவர்கள் எப்போதும் குன்றுகள் இருக்கும் இடமாகப் பார்த்து அங்கு வசிப்பது வழக்கம். இந்தக் குன்றில் சில சமணர் படுக்கைகள் உள்ளன. பல்லவர் காலத்தில் இந்தக் குன்றின் ஒரு பக்கத்தில் சில புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கவேண்டும். எப்படிப் பல்லவர் காலம் என்று சொல்லமுடியும்? அந்தச் சிற்பங்களைப் பார்த்தால் அவற்றில் பல்லவர் கால நேர்த்தியை நம்மால் காணமுடிகிறது. கிட்டத்தட்ட மாமல்லபுரத்தை ஒத்த வடிவ நேர்த்தி.

அடுத்து ராஜராஜன் காலத்தில் குந்தவையின் கொடையைக் கொண்டு சோழர்கள் கால மாதிரியிலான கோவில் கட்டப்பட்டிருக்கவேண்டும். இந்தக் கோவில், குன்றினை ஒட்டி, சமதரையில் அமைக்கப்பட்டுள்ளது. கருங்கல், செங்கல், சுதை கொண்ட சோழ நாட்டு மாதிரியிலான கோவில். கோபுரங்கள். மண்டபம், சந்நிதி. சந்நிதியில் நேமிநாதருக்கான கல் சிலை. முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல் சிலை பின்னம் அடைந்த காரணத்தால் அது வெளியே வைக்கப்பட்டு சந்நிதியில் வேறு ஒரு புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது.

அடுத்து விஜயநகர ஆட்சிக் காலத்தில் குன்றில் வடிக்கப்பட்டிருக்கும் அழகான புடைப்புச் சிற்பங்களை மறைக்கும்விதமாக செங்கல், சுதைக் கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் கோவர்தன புடைப்புச் சிற்பத்தை மறைத்துக் கட்டப்பட்டிருக்கும் கல் தூண்களால் ஆன கிருஷ்ண மண்டபத்தை இதற்கு இணையாகச் சொல்லலாம். இந்த செங்கல் சுதைக் கட்டடங்கள் சில அடுக்குகளால் ஆனவை. இங்குதான் விஜயநகரக் காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓவியங்கள் இன்று முற்றிலுமாக அழிந்துவிட்டுள்ளன. சில துண்டுகளை மட்டும்தான் காணமுடிகிறது.

மலைக்கு மேலே விஜயநகர அல்லது நாயக்கர் காலத்தில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரு மாபெரும் (18 அடி) மகாவீரர் புடைப்புச் சிற்பம் உள்ளது.

***

எனக்கு jain iconography தெரியாது. சமண புராணங்களும் தெரியாது. எனவே சில சிலைகளை அடையாளம் காண்பிப்பது கடினம். தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

முதலில் குன்றின்மீது செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைப் பார்ப்போம்:

திருமலை - பகுபலியும் சகோதரிகளும் (?)
திருமலை - யார் எனத் தெரியவில்லை
திருமலை - ஒரு தீர்த்தங்கரர் (யார்? நேமிநாதர்?)
திருமலை - நாக அரசன்(?)

பக்தி என்ற பெயரில் புடைவை கட்டி, நெற்றியில் குங்குமம் இட்டிருக்கும் கோலத்தையும் தாண்டி, இந்தப் புடைப்புச் சிற்பங்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட பல்லவ வளைவுகளைக் காணலாம். முதல் சிற்பம் ‘பகுபலியும் அவரது சகோதரிகளும்’ - இதில் பெண்கள் செதுக்கப்பட்டிருப்பது, மாமல்லபுரம் அர்ஜுன ரதத்தில் ‘அரச குமரியும் சேடியும்’, அல்லது ஆதிவராக மண்டபத்தில் ‘அரசனும் அவனது மனைவிகளும்’ ஆகியோருக்கு ஒப்பானதாகத் தோன்றும்.

மாமல்லை - அர்ஜுன ரதம் - அரச குமரியும் சேடியும்

இந்த மலையடிவாரத்தில்தான் குந்தவை ஜீனாலயம் கோவில் உள்ளது. அந்தக் கோயில் கட்டப்படும்போது (11-ம் நூற்றாண்டின் ஆரம்பம்) இந்த புடைப்புச் சிற்பங்கள் திறந்தவெளியில் இருந்திருக்கும். இவற்றில் மேல் உள்ள குகைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் பின்னர் விஜயநகர காலத்தில் இந்தப் புடைப்புச் சிற்பங்களைச் சுற்றி சந்நிதிகள் கட்டப்பட்டு மூடிமறைக்கப்பட்டன.

திருமலை - புடைப்புச் சிற்பத்தின்மேல் எழுப்பப்பட்ட விஜயநகர காலத்துச் சந்நிதி

அருகில் தரையில் கட்டப்பட்டிருக்கும் குந்தவை ஜீனாலயத்தின்:

குந்தவை ஜீனாலயத்தின் நுழைவாயில்
திருமலை - குந்தவை ஜீனாலயத்தின் கோபுரமும் சிகரம்

இந்தக் கோவிலில் ஆரம்பத்தில் வழிபாட்டில் இருந்த நேமிநாதர் சிலை (இப்போது உள்ளே வழிபாட்டில் இருப்பது வேறு சிலை)

குந்தவை ஜீனாலயம் - நேமிநாதர் (வழிபாட்டில் இல்லை)

விஜயநகர காலத்தில் மலையோரப் புடைப்புச் சிற்பங்கள்மீது உருவாக்கப்பட்ட சந்நிதியில் பல ஓவியங்களும் வரையப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை அழிந்துபோய்விட்டாலும் சில துண்டுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன. இவற்றில் பல கடந்த 20-30 ஆண்டுகளில் அழிந்துபோயுள்ளன என்பதுதான் சோகமே. 700 ஆண்டுகள் தாண்டிவிட்டன; ஆனால் அடுத்த பத்தாண்டுகளைத் தாண்டுவது கடினம்.

சமவசரணத்துக்குப் பின் நேமிநாதர் லக்ஷ்மிவரமண்டபத்தில் இருந்தபடித் தரும் பிரசங்கத்தைக் கேட்க வந்திருக்கும் தேவர்கள், முனிவர்கள்
யக்ஷி அம்பிகையாக உருவெடுத்த அக்னிலா (சோமசர்மனின் மனைவி) (இந்துக் கடவுள்களில் காளிக்கு ஒப்பானவள்)
கூரையின் மேற்பரப்பில் ஓவியம் - இந்நாளைய ஷாமியானாகளுடன் ஒப்பிடுங்கள்.
மற்றொரு கூரை. பாரசீக விரிப்புக் கம்பளங்களைத் தோற்கடிக்கும் திறன்!
சுவரில் வடிவங்களும் வண்ணங்களும்

அக்னிலா/சோமசர்மன் கதை இதில் சுவாரசியமான ஒன்று. இடப் பற்றாக்குறை காரணமாக அடுத்த பதிவில் எழுதுகிறேன். முடிப்பதற்குமுன்... மலையின் மேல்பகுதியில் 18 அடி உயர தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது. சிற்பத்தின் தரத்தின்படிப் பார்த்தால், நிச்சயம் பிற்காலத்தைச் சேர்ந்தது. தோள்பட்டைகள் சமமாக இல்லை. ஒன்று சற்று அதிகம் சாய்ந்துள்ளது.

18 அடி உயரம்

திருமலையில் காணக்கிடைத்த கல்வெட்டுகளில் ஒன்று:

தமிழ்தான்...

***

திருமலை பயணத்தின்போது திருப்பாண்மலை என்ற இடத்துக்கும் அருங்குன்றம் என்ற இடத்துக்கும் போயிருந்தோம். இவற்றைச் சுருக்கமாகவாவது அடுத்து எழுத முயற்சி செய்கிறேன்.

ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி சா. கந்தசாமி

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பாக சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளியில் தமிழ் எழுத்தாளர் சா. கந்தசாமி, 18-ம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த துபாஷ் ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி ஆற்றிய உரை:



=======

சா. கந்தசாமியுடன் நான் முன்னர் ஓர் ஆடியோ உரையாடலை நிகழ்த்தியிருந்தேன். அதன் ஆடியோவை archive.org தளத்தில் இட்டிருந்தேன். இன்று அந்தச் சுட்டி சரியாக வேலை செய்யவில்லை. ஒருவேளை உங்கள் கணினியில் வேலை செய்யலாம். ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி நான் முதலில் கேள்விப்பட்டதும் எழுதிய பதிவு.

இந்திய வானவியலின் வரலாறு - வீடியோ

முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் கிழக்கு மொட்டைமாடியில் நிகழ்த்திய மிக நீண்ட உரையின் வீடியோ கீழே. ஒரு கட்டத்தின் என் வீடியோ கருவியில் இடம் தீர்ந்துவிட கருவி தானாகவே அணைந்துவிட்டது. கேள்வி பதில்கள் அதற்குப் பின்னும் தொடர்ந்தன.

Wednesday, March 02, 2011

கொசுத்தொல்லை தாங்க முடியல! (ஸ்பெக்ட்ரம்)

மொபைல் போன் நிறுவனங்கள் அனைத்தைம் ஓர் ஆண்டில் பெறும் வருமானம் என்ன? துபாயில் பணிபுரியும் சிவகுமார் என்ற பொறியாளர் துரோகம் 1, 2, 3 என்று பட்டியல் போட்டுள்ளார். தான் மட்டும் இந்தியாவில் இருந்திருந்தால் அடித்து நொறுக்கி இன்னும் துல்லியமாகக் கணக்கு போட்டுக் காண்பிப்பதாகவும் அவர் சவால் விடுகிறார். இந்த துரோகப் பட்டியல் விகடனில் வெளியானது என்று நினைக்கிறேன். பிறகு மின்னஞ்சலில் எனக்கு இதுவரை பத்து முறைக்கும் மேலாக யார் யாராலோ அனுப்பப்பட்டுள்ளது.

அதன் அடிப்படைக் கணக்கு இதுதான். இந்தியாவில் 60 கோடி கைபேசிகளாம். ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 நிமிடங்கள் செல்பேசியைப் பயன்படுத்தினால் (Local calls only-யாம்!), நிமிடத்துக்கு 40 பைசா என்ற கணக்கு வீதம் (யார் கொடுத்த கணக்கு?), நாள் ஒன்றுக்குக் கட்டும் கட்டணம் = 15*0.4 = 6 ரூபாய். மாதத்துக்கு 6*30 = 180 ரூபாய்.

மாத மொத்த மொபைல் போன் வருமானம் = 60 கோடி * 180 = 10,800 கோடி ரூபாய்
ஆண்டு மொத்த வருமானம் = 12 * 10,800 கோடி = 1,29,600 கோடி ரூபாய்
இரண்டு ஆண்டுகளுக்கு = 2,59,200 கோடி ரூபாய்.

அடுத்து அவர் ஒரு ஜம்ப் விடுகிறார். இத்தனை பணமும் அரசுக்குக் கிடைத்திருக்கவேண்டுமாம். அதனை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றனவாம்.

லோக்கல் காலுக்கே இப்படி என்றால், எஸ்டிடி, ஐஎஸ்டி, டேட்டா, அது இது என்று என்ன ஆவது? இதுதான் துபாய் எஞ்சினியரின் கேள்வி.

***

2010-11 நிதி ஆண்டு இன்னமும் முடிவடையவில்லை. ஆனால் 2009-10 நிதி ஆண்டின் வரவு செலவுக் கணக்கை எடுத்துக்கொள்வோம்.

இந்தியாவின் முதன்மை கைபேசி நிறுவனம் பார்த்தி ஏர்டெல். 2009-10 ஆண்டுக்கான அதன் மொத்த வருமானம் (மொபைல், லோக்கல் கால், எஸ்டிடி, ஐஎஸ்டி, பிராட்பேண்ட் இணையம், விசாட் என அனைத்தையும் சேர்த்து!) ரூ. 41,829 கோடி. இதில் அனைத்துச் செலவுகளும் போக, வரி கட்டியது போகக் கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா? ரூ. 9,163 கோடி. இந்திய மொபைல் போன் நிறுவனங்களிலேயே மிகவும் செயல்திறன் மிக்கது பார்த்தி. பிற நிறுவனங்கள் ஒரு படி கீழேதான். பார்த்தியிடம் அந்தக் கட்டத்தில் இருந்தது 21.8% மார்க்கெட் ஷேர். அதாவது மொத்த செல்பேசி கஸ்டமர்களில் ஐந்தில் ஒருவர் பார்த்தியின் சேவையைப் பெற்றனர்.

அடுத்து பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல் என்ற அரசு அமைப்பைப் பார்ப்போம்.

எம்.டி.என்.எல் மொத்த வருமானம்: 3,781 கோடி; தொழிலிலிருந்து அடைந்த நஷ்டம்: 4694.5 கோடி ரூபாய்! இந்தக் கொடுமையைப் பாருங்கள். எம்.டி.என்.எல்லின் மொத்த வருமானமே ரூ. 3,781 கோடி. ஆனால் அது தன் ஊழியர்களுக்கு 2009-10-ம் ஆண்டில் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? 4,966.25 கோடி! இது விளையாட்டல்ல. அவர்களுடைய ஆன்னுவல் ரிப்போர்ட்டில் பாருங்கள். அல்லது nse-india.com தளத்துக்குச் சென்று MTNL என்ற குறியீட்டை இட்டு, தகவல்களைச் சேகரியுங்கள்.

சரி, பி.எஸ்.என்.எல் கதை என்ன? மொத்த வருமானம் 32,045 கோடி ரூபாய். நஷ்டம் 1,823 கோடி ரூபாய்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸை எடுத்துக்கொள்வோம். இங்கும் மொபைல் சேவைக்கு மேலாக இணையம் முதற்கொண்டு பல சேவைகள் உள்ளன. அப்படியே மொத்தமாக எடுத்துப் பார்த்தால், மொத்த வருமானம்: 12,511.72 கோடி ரூபாய். வரிக்குப் பிறகான லாபம்? வெறும் 478.93 கோடி ரூபாய்தான். இதுவே ஓராண்டுக்கு முன்பு (2008-09) 4,802 கோடி ரூபாயாக இருந்தது.

ஐடியா செல்லுலார் 2009-10 ஆண்டின் மொத்த வருமானம் 11,896 கோடி ரூபாய். வரிக்குப் பிறகான லாபம் 1,054 கோடி ரூபாய்.

வோடஃபோன் நிறுவனத்தின் தாய் கம்பெனி பிரிட்டனில் உள்ளது. அதன் ஆன்னுவல் ரிப்போர்ட்டில் தேடிப் பார்த்ததில் 2009-10 வருமானம் சுமார் 22,500 கோடி. EBIDTA என்பது 5800 கோடி ரூபாயாக இருந்தாலும், நிகர நஷ்டம் 266 கோடி.

மேலே சொன்ன கம்பெனிகள் கையில்தான் சுமார் 85% சந்தை உள்ளது. மிச்சம் துண்டு துக்கடா கம்பெனிகளை மறந்துவிட்டு மேலே சொன்னவற்றைப் பட்டியலிட்டால்:

நிறுவனம்வருமானம்
(கோடி ரூ)
லாபம்/நஷ்டம்
(கோடி ரூ)
பார்த்தி ஏர்டெல்41,8299163
வோடஃபோன்22,500-266
ரிலையன்ஸ்12,512479
ஐடியா11,8961,054
பி.எஸ்.என்.எல்32,045-1,823
எம்.டி.என்.எல்3,781-4,695

வெறும் கால்குலேட்டர் கையில் இருந்தால், தட்டித் தட்டியே பலவிதமான எண்ணிக்கைகளைக் கொண்டுவந்துவிடலாம். ஆனால் உண்மைக் கதை என்ன என்பதை ஆராய, வேண்டிய தரவுகள் கூகிள் வழியாகவே கிடைக்கும். அவற்றைப் பெற இந்தியா வரவேண்டிய அவசியமே இல்லை, துபாயிலோ லிபியாவிலோ இருந்தால்கூடப் போதுமானது!

இப்போது சிந்தியுங்கள். வருமானத்தை பெற ஒரு நிறுவனம் எத்தனை செலவழிக்கவேண்டும்? எனவே வருமானத்தைப் பற்றிப் பேசவேண்டுமா அல்லது லாபத்தைப் பற்றிப் பேசவேண்டுமா? தொலைதொடர்புத் துறையில் லாபம் எப்படி இருக்கிறது? அரசு நிறுவனங்கள் எந்தவிதமான லாபத்தை அடைகின்றன? எல்லா ஸ்பெக்ட்ரத்தையும் அரசே வைத்துக்கொண்டு சேவை அளித்தால் லாபம் பெறவேண்டுமானாலும் அரசு என்ன கட்டணத்தை உங்களிடமிருந்து வசூலிக்கும்? OYT, N-OYT போன்ற அற்புதமான சேவைகள் உங்களில் எவருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா? ஒரு தொலைபேசி இணைப்பு வாங்க எத்தனை சிங்கி அடிக்கவேண்டியிருந்தது என்று ஞாபகம் இருக்கிறதா?

இப்போது நாம் அனைவரும் நிஜமாகவே கவலைப்படவேண்டிய விஷயம், எப்படி பி.எஸ்.என்.எல்லையும் எம்.டி.என்.எல்லையும் காப்பாற்றப் போகிறோம் என்பதுதான்! அவை அடையும் நஷ்டத்துக்கு இன்று யார் காரணம்? விரைவில் மற்றுமொரு ஏர் இந்தியாவை எதிர்பாருங்கள்!

Tuesday, March 01, 2011

நேரடி மானியம், மறைமுக மானியம்

பொதுவாக எந்த பட்ஜெட் வந்தாலுமே எதிர்க்கட்சிகள் அதனை ‘சப்பையான பட்ஜெட்’, ‘மக்கள் விரோத பட்ஜெட்’, ‘ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்’ என்று சொல்லவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் எதிர்க்கட்சிக்கு லாயக்கற்றவர்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள்.

நேற்றைய பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கான நேரடி மானியம் பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியிருந்தார்.

பொதுவாக ஏழை மக்களுக்கு (வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள்) பலவிதங்களில் மானியங்கள் செல்கின்றன. இவை அனைத்துமே மறைமுக மானியங்கள். உதாரணமாக ரேஷன் அரிசி, கோதுமையை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு பொதுச்சந்தையில் என்ன விலைக்கு அரிசியும் கோதுமையும் விற்றாலும் அரசு மக்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் என்று வழங்க முடிவெடுக்கிறது. மத்திய அரசின் உணவு கார்பரேஷன் ஆஃப் இந்தியா கொள்முதல் விலை அரிசி கிலோ ஒன்றுக்கு ரூபாய் 10 என்று வைத்துக்கொள்வோம். அதனை மத்திய அரசு மாநில அரசுக்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 5 என்று விற்கலாம். அவர்கள் தரும் மானியம் கிலோவுக்கு 5 ரூபாய். அதனை வாங்கும் மாநில அரசு, மேலும் ரூ. 4 மானியம் கொடுத்து, கிலோ அரிசி 1 ரூபாய் என்று தருகிறது என்று வைத்துக்கொள்வோம். மொத்த மானியம் கிலோவுக்கு ரூ. 9. இது மறைமுக மானியம்.

இதில் என்ன குறை?

(1) அரிசி புழுத்துப்போன மோசமான ஒன்றாக இருக்கலாம். அதை வாங்கிச் சாப்பிட நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்.
(2) ரேஷன் அதிகாரிகள் அடாவடி செய்து, அரிசியைக் கேரளாவுக்குக் கடத்திச் சென்று விற்றுப் பணம் சம்பாதிக்கலாம்.
(3) உங்களுக்கு மாதத்துக்கு 20 கிலோ அரிசி என்று அதிகபட்ச அளவு இருந்தால், அரசு உங்களுக்கென முடிவு செய்திருக்கும் மானியம் 20*9 = 180 ரூபாய். ஆனால், உங்களுக்கு அந்த மாதம் 10 கிலோ அரிசி போதும் என்றால், பாதி மானியம்தான் உங்களுக்குக் கிடைக்கிறது. 90 ரூபாய் உங்களுக்கென அரசு கொடுக்கவேண்டியது உங்களிடம் வருவதில்லை.

சரி, இதனை வேறு எவ்வாறு செய்யலாம்? அரிசிக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ. 180 மானியம் என்று முடிவெடுத்துவிட்டால் அந்தந்த மாதத்துக்கு அந்தந்தக் குடும்பத்துக்கு அந்தக் குறிப்பிட்ட பணத்தை, பணமாகவே கொடுத்துவிடலாம். இதைத்தான் நேரடி மானியம் என்கிறோம்.

பொதுவாக பொருளாதார வலதுசாரிகள் மானியமே கூடாது என்பர். ஆனால் மானியம் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால் நேரடி மானியம் சிறந்தது என்பர். என்? ரேஷன் அரிசி கொடுக்கிறேன் பேர்வழி என்று அதற்காக ஒரு பெரும் டிபார்ட்மெண்ட், அதில் வேலை செய்ய ஏகப்பட்ட பேர், அவர்களுக்குச் சம்பளம், அவர்கள் செய்யும் ஊழலுக்குக் கிம்பளம் என்று அரசாங்கப் பணம் பாழாவதற்கு, பேசாமல் வீட்டுக்கு ரூ. 180 என்பதற்கு பதில், ரூ. 280 கொடுக்கலாமே என்பதுதான் இந்த வாதம்.

ஆனால் பொதுவாகவே இடதுசாரிகள் இதனை எதிர்க்கிறார்கள். (பின்னர்? வலது ஆதரித்தால் இடது எதிர்த்துத்தானே ஆகவேண்டும்?) இந்தப் பணம் மக்களிடம் நேரடியாகச் செல்வதால் ஆதாயம் அடையப்போவது தனியார்கள். ஏழை மக்கள் மீண்டும் பாதிக்கப்படத்தான் போகிறார்கள் என்கிறது இந்த வாதம்.

என்ன குறைகள்?

1. கொடுக்கப்படும் பணத்தை அவர்கள் அரிசி வாங்கத்தான் பயன்படுத்துவார்கள் என்றில்லை. மாறாக பெப்சி, சாராயம் என்று எதிலாவது வீணடிக்கலாம்.
2. மக்கள் கையில் அதிகம் பணம் கிடைக்கிறது என்று தெரிந்ததும் பொதுச்சந்தை அரிசி விலை அதிகரிக்கும். கடைசியில் இந்தப் பணத்துக்கு அவர்களுக்கு 4 கிலோ அரிசி கிடைக்குமா என்பதே சந்தேகம்!
3. இப்படிக் கொடுக்கப்படும் பணத்திலும் ஊழல் இல்லாமலா போய்விடும்? அதில் கமிஷன் அடிக்க அரசு ஊழியர்கள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை வந்து நிற்பார்களே?

சரி, என்னதான் அய்யா வழி என்று இடதுசாரிகளைக் கேட்டால், விலை ஏற்றத்தைக் குறைக்கவேண்டும், ஏழைமையைக் குறைக்க ஒட்டுமொத்த முயற்சிகள் எடுக்கவேண்டும், நியோ-லிபரல் கொள்கைகளைச் செயல்படுத்தக்கூடாது, வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவேண்டும், உள்கட்டமைப்புகளில் அரசு அதிகம் செலவழிக்கவேண்டும் என்றெல்லாம் பொதுவான பதில்கள் வரும்.

மானியத்தை நேரடியாகக் கொடுப்பதை ஆதரிப்போர் என்ன சொல்கிறார்கள்?

1. மக்களை நம்பவேண்டும். அவர்கள் பணத்தை வீணடிக்கக்கூடியவர்கள் என்றால் அவர்களுக்கு நெடுநாளைய நோக்கில் வாழ்வே கிடையாது. பணத்தைக் காத்து வைத்துக்கொள்வது எப்படி என்று அவர்களுக்கு நிச்சயம் தெரியும். ஏற்கெனவே அவர்கள் மாதத்துக்கு 2,000-3000 ரூபாய் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் கொடுப்பது வெறும் 500-600 ரூபாயோ என்னவோதான். அதை மட்டும் வீணடித்துவிடுவார்கள் என்பது அபத்தம்.
2. பணம் வீணாகமல் போக, அவர்கள் அனைவருக்கும் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு உருவாக்கி, ஏடிஎம் கார்டு கொடுத்துவிடலாம். மாதாமாதம் அவர்கள் வங்கிக் கணக்குக்குப் பணம் நேரடியாகப் போய்ச் சேர்ந்துவிடும். படு கிராமங்களில்கூட வங்கி வசதி கொடுக்க பிசினஸ் கரென்ஸ்பாண்டண்ட் என்ற முறையை இந்திய ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. கிராமப்புற ஏடிஎம் வசதிகள் வர ஆரம்பித்துள்ளன.
3. சந்தையில் விலை அதிகரிக்கும் என்பதை ஏற்க முடியாது. சந்தை விலை ஒரு சிலரது வாங்கும் சக்தியை மட்டும் கொண்டு முடிவாவது அல்ல. கையில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்று அரிசி வாங்கி பஸ்ஸில் ஏறி வந்துவிடலாம்.

***

நான் நேரடி மானியத்தை ஆதரிக்கிறேன். வேகமாக வளரும் எந்த ஒரு மூன்றாம் உலக நாட்டிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சகஜமே. இவற்றைச் சரிக்கட்ட அரசால் உடனடியாக முடியாது.

ஏனெனில், வளரும் பொருளாதாரத்தில் கிடைக்கும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஏழைகளால் எளிதில் முடிவதில்லை. தேவையான படிப்பு அவர்களிடம் இல்லை. கிரெடிட் வசதி அவர்களுக்குக் கிடைப்பதில்லை. மேலும் தொழில்முனைவதற்குத் தேவையான ‘ரிஸ்க் எடுக்கும் உணர்வு’ அவர்களிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. ‘ஓரிரு ஆண்டுகள் முயன்று பார்ப்போம்; கட்டி இழுப்போம்; கிடைத்தால் மலை, போனால் மயிர்’ என்ற தைரியத்தைப் பெறுவது எளிதல்ல. ஆண்டாண்டு காலமாக அரை வயிறும் கால் வயிறுமாக உணவு பெற்று, எப்படியடா வாழ்க்கையைக் கழிப்போம் என்ற புரியாத நிலையில் இருப்போர் ஒரேயடியாக தொழில்முனைவோர் ஆகிவிடுவதில்லை. (ஒரு சிலர் தவிர!) எனவே இந்த ஏழைகளின் தேவை வயிறு நிறைய உணவும், படிப்பும். படிப்பு அவர்களைத் தன்னம்பிக்கை உள்ளவர்களாக ஆக்கும். தொடர்ந்து, நிலையான வருமானம் தரும் வேலை கிடைத்தவுடன் அவர்களுடைய பிள்ளைகள் புதிய பொருளாதாரத்தில் தமக்குரிய இடம் என்ன என்பதை முடிவு செய்துகொள்ளமுடியும்.

இதுவரை நான் பேசியது உணவு பற்றி மட்டுமே. இந்த மக்களுக்குத் தேவையான தரமான கல்வியை எப்படி நாம் கொடுக்கப்போகிறோம், அங்கும் நேரடி மானியம் உதவுமா என்பது அடுத்த கேள்வி. அதனைத் தனியாகப் பார்க்கவேண்டும். ஆனால் இப்போதைக்கு உணவைப் பொருத்தமட்டில் நேரடி மானியம் நிச்சயம் அதிகப் பலன் தரும் என்பதே என் கருத்து.