சேது சமுத்திரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி இந்துக் கடவுள் ராமர் பற்றிப் பேசியது பிரச்னையை எழுப்பியுள்ளது. ராமர் உண்மையில் வாழ்ந்தார்; சமுத்திரத்தின்மீது பாலம் ஒன்றை எழுப்பினார் என்று பல இந்துக்கள் நம்புகின்றனர். அதைக் கேலி செய்யும் விதமாக அல்லது இதுபோன்ற நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் விதமாக யாராவது பேசினால் உடனே தலையை வெட்டுவோம், பஸ்ஸைக் கொளுத்துவோம் என்று முரட்டுத்தனமாக பலர் நடந்துகொள்கிறார்கள்.
1. மத உணர்வுகளைப் புண்படுத்துவது என்றால் என்ன?
(அ) ஒவ்வொரு மதமும் தனக்கென சில நம்பிக்கைகளை வைத்துள்ளன. அந்த நம்பிக்கைகளை யாராவது கேள்விக்கு உட்படுத்தினால் அந்த மத நம்பிக்கையாளர்களுக்குக் கடும் கோபம் வருகிறது.
(ஆ) ஒரு மதம் புனிதமாக நினைக்கும் சிலவற்றை சிலர் கேலி செய்யும்போது அந்த மதத்தவருக்குக் கோபம் வருகிறது.
(இ) ஒரு மதத்தவரின் புனிதச் சின்னங்களை, கோயில்களை, சிலைகளை அசுத்தம் செய்வதால், தாக்குவதால் கோபம் வருகிறது.
உதாரணம்: தமிழக முதல்வர் செய்தது (அ) மற்றும் (ஆ). ராமன் என்னும் கடவுள் இருந்தாரா இல்லையா என்ற கேள்வியை எழுப்பி, இல்லை என்பது தனது கருத்து என்றும் அதனால் ராம சேது என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அறிவியல்பூர்வமாக அது வெறும் மணல்திட்டு என்றும் கருணாநிதி பேசியிருந்தால் பிரச்னையை ஊதிப் பெரிதாக்க முடிந்திருக்காது. ஆனால் அரசியல் மேடைகளில் அடுத்தவரைக் குத்திக் காட்டிப் பேசுவது சர்வசாதாரணமானது. எனவே "ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான்?" என்று பேசும்போது பிரச்னை பெரிதாகிறது.
டென்மார்க் முகமது கார்ட்டூன் பிரச்னையை எடுத்துக்கொள்வோம். முகமது நபியை கார்ட்டூனாக உருவமாகவோ வரைவது ஏற்புடையதல்ல என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால் டென்மார்க் பத்திரிகை ஒன்று தன் வாசகர்களை முகமது நபியை கார்ட்டூனாகச் சித்திரிக்குமாறு அழைத்தது. அப்படி வரையப்பட்ட பல கார்ட்டூன்கள் வேண்டுமென்றே மோசமாகச் சித்திரிக்கப்பட்டவை. முஸ்லிம்கள் கோபம் கொள்ளவேண்டும் என்றே வரையப்பட்டவை.
2. யார் யாரெல்லாம் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள்?
(அ) அறிவியல், மருத்துவக் கண்டுபிடிப்புகள் அனைத்துமே மதங்களின் அடிப்படைகளைத் தவறு என்று அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இதனால் மத உணர்வாளர்கள் ஒரு காலத்தில் கடுமையாக அவதியுற்றனர். இப்பொழுது வேறு வழியில்லை என்று அறிவியலை, மருத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனாலும் பல இடங்களில் அறிவியல் அறிஞர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டனர் என்று மதவாதிகள் சண்டைக்கு வருகின்றனர்.
(ஆ) சமூக அறிவியல் அறிஞர்கள், சிந்தனைவாதிகள், அரசியல்வாதிகள் பலரும் மதங்களின் மோசமான பின்தங்கிய நோக்கைச் சாடுகின்றனர். கருத்து ரீதியில் மதங்களின் தவறான கருத்துகளை எதிர்கொள்வது அவசியம். இங்கு மத உணர்வுகளைப் புண்படுத்துவது அவசியமாகிவிடுகிறது. எல்லா மதங்களும் பெண்களை நடத்துவது; இந்து மதத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் போன்ற பலவற்றை எதிர்த்துப் போராடுவது அவசியமாகிறது.
(இ) மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் முன்னிலை வகிப்பவர்கள் பிற மதங்களின் அடிவருடிகள்தாம்! முஸ்லிம்கள் பலரும் ஒவ்வொரு நாளும் கிறித்துவ, இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். இந்துக்கள் பலரும் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். டென்மார்க் கார்ட்டூன் நிகழ்வின்போது சந்தோஷமாக அந்த கார்ட்டூன்களை மீண்டும் பரப்பியவர்கள் கிறித்துவ, இந்து அடிப்படைவாதிகள்.
(ஈ) நாத்திகர்கள். இவர்கள் அறிவியல் சார்ந்த நாத்திகவாதிகளாக இருக்கலாம்; அல்லது பெரியார் வழிவந்த 'நம்பிக்கை' சார்ந்த நாத்திகவாதிகளாகவும் இருக்கலாம்.
3. அடிப்படை உரிமை (பேச்சுரிமை) Vs மத உணர்வுகளைப் புண்படுத்துதல்.
இந்தியா போன்ற நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின்படிக் கிடைத்த பேச்சுரிமையைக் கொண்டு பிறரது மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசலாமா?
மத உணர்வுகளைக் கேலி செய்யும் விதமாகப் பேசுவது தவறில்லை என்பது என் வாதம். மதங்கள் முட்டாள்தனமான கருத்துக்களால் நிறைந்தவையாகவே எனக்குப் படுகிறது. இந்துமதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மூன்றுமே இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கருத்துகள் அந்தந்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்லாது அந்த மதத்தவர் இணைந்து வாழும் சமூகத்தையும் துன்பத்துக்குள்ளாக்குகிறது. (உதாரணம்: போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது, குழந்தை மணம், கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருத்தல், சதி... இப்படி எத்தனையோ.)
ஒரு மதத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனை முறையைத் தாண்டி, சுயமாகச் சிந்தித்து, தனிச் சிந்தனை வழியில் வருபவர்கள் மதங்களில் காணப்படும் மூடக் கருத்துகளை கேலி செய்தே தீரவேண்டும். அதனால்தான் சமூகத்தை பாதிக்கும் பல அவமானகரமான குற்றங்கள் நாளடைவிலாவது தடுக்கப்படும்.
தமிழக முதல்வர் ராமரைப் பற்றிப் பேசுவதற்கு முழு உரிமை அவருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். அவர் அப்படிப் பேசுவது பிடிக்கவில்லை என்றால் குடியாட்சி முறைக்குள்ளாக அவருக்கு எதிராக என்ன செய்ய முடியுமோ அதை அவரது எதிரிகள் செய்துகொள்ளலாம். ஆனால் அவரது கழுத்தை வெட்டினால் எடைக்கு எடை தங்கம் என்றெல்லாம் அறிவிப்பு செய்யும் அபத்தமானவர்களை சட்டம் உடனடியாகப் பிடித்து தண்டிக்கவேண்டும். ஆனால் இதுபோன்ற சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைவருக்கும் பொருந்துமாறு இருக்கவேண்டும். தஸ்லிமா நஸ்ரினைக் கொலை செய்யச் சொல்லித் தூண்டிய ஹைதராபாத் எம்.எல்.ஏ, டென்மார்க் கார்ட்டூனிஸ்டைத் தண்டிக்கச் சொன்ன உத்தர பிரதேச எம்.எல்.ஏ என்று அனைவரையும் உள்ளே தள்ளவேண்டும்.
புனிதமாகக் கருதப்படும் கருத்துகளைத் தாக்கலாம். ஆனால் புனித இடங்கள், மனிதர்கள் ஆகியோரைத் தாக்குவதை வரவேற்கக்கூடாது. இதுவும்கூட மதம், புனிதம் ஆகிய காரணங்களால் அல்ல. உயிர், உடைமை ஆகியவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டிய கடமை அரசுகளிடம் உண்டு.
4. அரசியலாக்கப்படும் மதம், மதத்தால் இயக்கப்படும் அரசியல்
மதமும் அரசியலும் இருக்கும்வரை ஒன்றோடு ஒன்று இணைந்தே செல்லும். மதத்துக்கு அரசியலின் ஆதரவு தேவை. அரசியல்வாதிகளுக்கு மதவாதிகளின் செல்வாக்கால் கிடைக்கும் வாக்குகள் தேவை. அதனால்தான் பாஜக ராமசேது விவகாரத்தைப் பெரிதாக்க நினைக்கிறது. அதில் கிடைக்கும் வாக்குகளால், சரிந்து கிடக்கும் தன் நிலையை முன்னுக்குக் கொண்டுவர விரும்புகிறது.
கருணாநிதி ராமர் பற்றி எதுவுமே சொல்லாவிட்டாலும்கூட பாஜக இதைப் பெரிய விஷயமாக மாற்றவே விரும்பும். ஆனால் கருணாநிதியின் பேச்சு காங்கிரஸை இக்கட்டில் மாட்டிவிட்டுள்ளது. கருணாநிதிக்கு பாஜக பற்றி எந்தக் கவலையுமில்லை. தமிழகத்தில் இப்பொழுதைக்கு பாஜக ஒரு பொருட்டே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு வட மாநிலங்களில் ராமரும் பாஜகவும் தலைவலிகள்.
கருணாநிதி மத அடிப்படைவாதத்தை ஒழிக்க காங்கிரஸுக்கு உதவ விரும்பினால் சிலவற்றைச் சொல்லாமல் விடுவது நலம்.
====
அறிவியல் ரீதியில் என் கருத்து...
ராமர் என்று ஒருவர் இருந்தாரா என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. காலத்தால் பிற்பட்டவர்களாகக் கருதப்படும் இயேசு இருந்ததற்கான ஆதாரங்களையே பல அறிஞர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள்.
ராமசேது என்ற கடல்மீது கல்லையும் மண்ணையும் போட்டு பல ஆயிரம் வானரங்கள் நடந்து செல்ல, பாலம் கட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. புஷ்பக விமானம், பத்து தலை அரக்கன், மாயாவிகள், சஞ்சீவி மலை, நாகாஸ்திரம், பிரம்மாஸ்திரம் என்று அனைத்துமே கற்பனை. இன்றைய தேதியில் இதுபோன்று ஏதும் முற்காலத்தில் இருந்திருப்பதற்கான/நடந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் முற்றிலும் இல்லை.
அறிவியல் கூறும் உண்மைகள் மட்டுமே இன்று ஏற்கக்கூடியன.
இலங்கையைச் சேர்ந்த செரான் தெரணியகல என்ற அகழ்வாராய்ச்சி நிபுணர் சென்னையில் கொடுத்த பேச்சில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாக் நீரிணைப்பில் கடந்த 7,00,000 ஆண்டுகளில் 17 முறை மண் திட்டாகவே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கடைசியாக இது நடந்தது கிட்டத்தட்ட 7,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். [
Search for a common past, S.Muthiah]
அப்படி முழுதும் மணலால் தொடர்பிருந்த ஒரு கால கட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளை கடல்மீது பாலம் கட்டியதாகக் கற்பனை செய்துகொள்ளும் வளம் மனிதனிடம் உண்டு. ஹோமரின் இலியட் போல வால்மீகியின் ராமாயணமும் அற்புதமான சம்பவங்கள் நிறைந்த அருமையான காவியம். [அவ்வளவே!]
எனவே, மத உணர்வுகள் என்னும் பூச்சாண்டியைத் தூக்கி மூட்டை கட்டி வைத்துவிட்டு, இந்தத் திட்டத்தால் பொருளாதார ரீதியில், சூழலியல் ரீதியில் என்ன நன்மை, தீமை என்பதை ஆராய்ந்து அதன்படி நடப்பதே நல்லது.