Monday, December 31, 2012

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை என்பது பேரா. சுவாமிநாதனைத் தலைவராகக் கொண்டு நடந்துவருகிறது. அதன் ஐந்து அறங்காவலர்களில் நானும் ஒருவன். இந்த அறக்கட்டளை சார்பாக சில நிகழ்ச்சிகளை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அவை பற்றிய சுருக்கமான பதிவு இது.

பேராசிரியர் பாலுசாமி மாமல்லபுரத்தின்
மகிஷாசுரமர்தினி சிற்பத்தை விளக்குகிறார்.
(1) மாதாந்திரக் கூட்டம். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை, சென்னை, வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில், வினோபா அரங்கில் மாலை 5.30 மணி முதல் 7.30 வரை ஒரு உரை நிகழ்த்தப்படும். ஒவ்வொரு மாதமும் இது நடந்துவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இது நடந்துவருகிறது. இலக்கியம், சிற்பம், கோவில் கட்டுமானம், ஓவியம், நாட்டியம், இசை, நாட்டார் கலைகள், தனி நபர் அனுபவங்கள் என்று பலவற்றை நிபுணர்களும் ஆர்வலர்களும் பேசி வருகிறார்கள். இந்த நிகழ்வுகளின் ஒளிப்பதிவு இணையத்தில் யூட்யூப் வழியாக சேர்க்கப்படுகிறது.

மாமல்லபுரத்தின் புலிக்குகை முன் குழுமியுள்ள
ஒரு மாணவர் சுற்றுலாக் குழு எங்களை
வேடிக்கை பார்க்கும் காட்சி.
இந்நிகழ்வுகள் பற்றிய விவரங்களை நீங்கள் http://blog.tamilheritage.in/ என்ற இடத்தில் காணலாம்.

சுமார் 30-40 பேர் மட்டுமே இந்தக் கூட்டங்களுக்கு வருகிறார்கள் என்பது சோகம். எங்களோடு சேர்ந்து வேலை செய்ய ஆர்வலர்கள் தேவை. இந்தக் கூட்டங்கள் பற்றிய தகவல்களை மக்களிட்ம கொண்டுசேர்க்க, கூட்டம் நடக்கும்போது ஒலி/ஒளிப்பதிவு செய்ய, பதிவுகளை செம்மையாக்கி, சிறிய கோப்புகளாக்கி, அவற்றை இணையத்தில் சேர்க்க என்று ஆர்வலர்கள் தேவை. விருப்பமும் நேரமும் இருப்போர் மட்டும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரவர்மனின் பகவதஜ்ஜுகம் நாடகத்தின்
ஒரு வடிவத்தை எங்கள் குழுவினர்
தெருக்கூத்து வடிவில் நிகழ்த்துகின்றனர்.
(2) Site Seminar: ஒவ்வோர் ஆண்டும் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடம் பற்றி ஓரிரு மாதங்கள் முன்னதாகவே படித்து, நிபுணர்களை அழைத்து அவர்கள் கொடுக்கும் உரைகளைக் கேட்டு, ஒரு கையேட்டைத் தயாரித்து, வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்து, குறிப்பிட்ட அந்த இடத்தில் 4-6 நாட்கள் தங்கி, அங்கேயே நிபுணர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து பல விஷயங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் ஒரு முயற்சி.

ஆவுடையார்கோவில் சிற்பங்களை
ஆச்சரியத்துடன் பார்க்கிறோம்.
2010-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் மூன்று நாட்கள் தங்கினோம். 2011-ல் அஜந்தா, எல்லோராவுக்கு 7 நாட்கள் பயணம். 2012-ல் புதுக்கோட்டையில் 4 நாட்கள். இப்போது 2013 ஜனவரியில் திருவரங்கத்தில் நான்கு நாட்கள். இதற்கான முன்னேற்பாடுகள் சென்ற மாதமே முடிந்துவிட்டன. சுமார் 30-35 பேர் செல்கிறோம்.

பேராசிரியர் வால்ட்டர் ஸ்பிங்குடன்
அஜந்தாவில் ஒரு எதிர்பாராத சந்திப்பு
திருவரங்கம் கோவில் என்பது வெறும் மற்றுமொரு கோவில் அல்ல. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இடம். ஊரையும் மக்களையும் உள்ளடக்கிய ஒரே கோவில். நீண்ட, நெடிய பாரம்பரியம் கொண்டது. சிலப்பதிகாரம் முதல் பேசப்பட்டு வரும் இடம். சங்க இலக்கியங்களில் இந்தக் கோவிலும் அதன் திருவிழாவும் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஹரி ராவ் போன்ற சான்றோர்கள். ஆதித்த, பராந்தக சோழன் காலம் தொட்டு (ஒன்பதாம் நூற்றாண்டு) கல்வெட்டுகள் இங்கு உள்ளன. சோழ, பாண்டிய ஆட்சியில் எண்ணற்ற கொடைகள். முஸ்லிம் படையெடுப்பில் அழிக்கப்பட்டு, மீண்டும் விஜயநகர காலத்தில் உச்சத்தைத் தொட்ட கோவில். ‘கோயில் ஒழுகு’ என்ற ஆவணத்தைக் கொண்டது. கல்வெட்டுகள், செப்பேடுகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் முதன்மைக் கோவில். வேறு எந்தக் கோவிலும் இத்தனை கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற ஆவணங்கள் கிடையாது. அனைத்து ஆழ்வார்களும் (மதுரகவி தவிர்த்து) பாடிய ஒரே கோவில். ஸ்ரீ வைணவம் என்ற மதம் (மதப்பிரிவு) இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில்தான் பிறந்தது. ராமானுசர், தேசிகர், மணவாள மாமுனி என அனைத்து வைணவ முதன்மை ஆசாரியர்களும் இங்கிருந்துதான் மதத்தைப் பரப்பினர். கோவிலின் சிற்பங்கள், நாயக்கர் கால ஓவியங்கள் எனப் பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

குடுமியான்மலையில் பேரா. சுவாமிநாதனுடன் நாங்கள்.
திருவரங்கத்தின் பாரம்பரியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள, கல்வெட்டாளர்கள், ஓவிய, சிற்ப வல்லுநர்கள், மத அறிஞர்கள் எனப் பலரது உதவியுடன் செல்கிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற ஒரு பயணத்தை ஜனவரி மாதம் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.

டான்கிராம் செய்யும் சிறுவர்கள்.
(3) பேச்சுக் கச்சேரி: 2011-ல் தொடங்கினோம். ஐந்து அல்லது ஆறு நாட்கள், டிசம்பர் மாதம் நடக்கும் தொடர் பேருரைகள். 2011-ல், ஜெயமோகன், ஸ்தபதி உமாபதி ஆசார்யா, பேரா. பாலுசாமி, முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஸ்வர்ணமால்யா ஆகியோர் சங்க இலக்கியம், கோவில் கட்டுமானக் கலை, பல்லவச் சிற்பம், சோழர் கோவில், நாயக்கர் நாட்டியம் எனப் பல துறைகளைத் தொட்டுச் சென்றனர். இம்முறை 2012-ல், ஓவியம் என்ற ஒற்றை விஷயத்தைச் சுற்றி ஆறு நாட்கள் பேருரைகள் நிகழ்ந்தன.

கிரிகாமி கலைமூலம் தோரணம் செய்யும் சிறுவர்கள்
சென்னையில் இசைக் கச்சேரி நடக்கும் டிசம்பரில் இசையுடன் பிற துறைகளைப் பற்றிய அறிவைப் பலருக்கும் கொண்டுசெல்லும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் அமையவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

(4) கோடை முகாம்: சிறுவர்களுக்கான நிகழ்ச்சி இது. ஏப்ரல்/மே மாதங்களில் இரண்டு நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சி. கடந்த இரு வருடங்களாக நடத்திவருகிறோம். சுமார் 30-40 சிறுவர்கள் பங்கேற்கின்றனர். (கட்டணம் உண்டு.) 10-15 வயதுக்கான சிறுவர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி இது. (பெற்றோர்கள் கலந்துகொள்ளலாம், அவர்களுக்கு இலவசம்!)

***

நாகேசுவரராவ் பூங்காவில் மரங்கள் பற்றித்
தெரிந்துகொள்ளும் சிறுவர்களும் பெரியவர்களும்
இந்த ஆண்டு, கடந்த ஆறு தினங்கள் நடந்த ஓவியம் பற்றிய பேருரைகள் மிகப் பிரமாதமாக இருந்தன. ஓர் ஏற்பாட்டாளனாக இல்லாமல், பார்வையாளனாக நான் சமீபத்தில் மிகவும் ரசித்த உரைகள் இவை. இந்திய ஓவிய மரபு பற்றிய புரிதலை எனக்கு அளித்தது என்று மகிழ்ச்சியுடன் சொல்வேன்.

நீங்கள் சென்னையில் இருந்தால், தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகளில் கலந்துகொள்ள விரும்பினால் அல்லது நிதி அளிக்க விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். மின்னஞ்சல்: bseshadri@gmail.com தொலைப்பேசி: 98840-66566

2012

(சொந்தக் கதை. விருப்பம் இல்லாதவர்கள் படிக்கவேண்டாம்.)

இந்த ஆண்டு, ஒரு ஐபேடும் ஒரு ஐஃபோனும் வாங்கினேன். முதலில் வந்தது ஐபேட். அதற்கு முன்பே மூன்று வெவ்வேறு ஆண்டிராய்ட் (குறைந்தவிலை) சிலேட்டுக் கணினிகளை வாங்கிப் பயன்படுத்திப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. ஆனால் ஐபேட் (2) அப்படியல்ல. கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கத்தில் புகுந்துகொண்டது. இரண்டு மாதங்கள் பயன்படுத்தியபின் என் பழைய நோக்கியா E51 மொபைலைத் தூர வைத்துவிட்டு, ஒரு குறைந்த விலை ஐஃபோன் வாங்கினேன். ஏர்செல், ஒரு ஆஃபரில், ரூ. 10,000-க்கு ஐஃபோன் 3GS கொடுத்தார்கள். போதும் என்று தோன்றியது. ஃபோன் வாங்க என் பட்ஜெட் அதிகபட்சம் 10,000 ரூபாய் மட்டுமே.

ஐஃபோன் 3GS வேகம் சற்றே குறைவுதான். கேமரா சுமார்தான். ஆனாலும் என் தேவைக்குப் போதுமானதாகவே இருக்கிறது. ஐஃபோனின் 3ஜி சேவையைக் கொண்டு ஐபேடுக்கும், வேண்டிய நேரங்களில் மடிக்கணினிக்கும் இணைய இணைப்பு கொடுத்துக்கொள்ள முடிகிறது. எனவே டாடா ஃபோட்டான், ரிலையன்ஸ் போன்ற துக்கடா இணைய இணைப்புகளைத் தூர எறிந்துவிட்டேன்.

அவ்வப்போது ஐஃபோனில் ட்விட்டர், ஃபேஸ்புக் பார்க்கிறேனே தவிர அவற்றில் எழுதுவது எளிதாக இல்லை. ஆனால் படமெடுத்து Instagram மூலம் உடனேயே இணையத்துக்குத் தள்ளுவது மிக எளிதாக உள்ளது. இன்ஸ்டாகிராம் தொடர்பாக ஏதோ பிரைவசி பிரச்னைகள் இருப்பதாகச் சொன்னார்கள். சோஷியல் மீடியாவுக்கு வருவதே பிரைவசியை இழப்பதுதான். என் கிரெடிட் கார்டுகள், இணைய வங்கிக் கணக்கு ஆகியவை தொடர்பாக எந்தச் சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். அதேபோல் மின்னஞ்சல் (கூகிள்) களவு போகாமல் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு வைத்துள்ளேன். மற்றவை பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

ஐபேடில்தான் இப்போது பெரும்பாலும் Powerpoint Presentations (Keynote) செய்கிறேன். முழுமையான production platform ஆக இல்லாவிட்டாலும் நல்ல, வசதியான consumption platform ஆக உள்ளது. நிச்சயமாக ஐஃபோன், ஐபேட் மூலம் productivity அதிகமாகியுள்ளதாக உணர்கிறேன்.

***

இந்த ஆண்டு காகிதப் புத்தகம் வாங்குவதைக் கடுமையாகக் குறைந்துக்கொண்டு கிண்டில் புத்தகங்களை வாங்கத் தொடங்கியுள்ளேன். படிப்பது பெரும்பாலும் ஐபேடில்தான். கிண்டிலில் கிடைக்காவிட்டால்தான் அச்சுப் புத்தகங்களை வாங்குகிறேன்.

***

நான் ஐபேடில் விளையாடும் ஒரே விளையாட்டு Solitaire. (செஸ் விளையாட்டில் அது என்னை அடித்துச் சாத்திவிடுகிறது.) உலகின் தலை சிறந்த விளையாட்டு சாலிடேர்தான் என்று நினைக்கிறேன். Angry Birds சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனவே அவை என் ஐஃபோன், ஐபேடில் இல்லை!

***

ஐபேடில் ஆடியோ ரெகார்டிங் செய்ய முடிகிறது. தரம் கொஞ்சம் சுமார்தான். நல்ல மேம்பட்ட ஒரு ஆப் கிடைத்தால் வாங்கத் தயார். WavePad என்ற இலவசச் செயலியைப் பயன்படுத்துகிறேன். ஆங்காங்கே தேவையற்ற ஒரு ‘டப்’ சத்தம் சேருகிறது.

***

ஐபேடில் ஸ்டைலஸ் கொண்டு எழுத, வரைய சில இலவச/இலவசமில்லா செயலிகளை இறக்கியுள்ளேன். விரைவில் இதன் விளைவுகளை நீங்கள் கண்டு களிக்கலாம்.

***

இந்த ஆண்டு Flip -க்கு ஒரு முழுக்கு போடவேண்டும். அதன் வீடியோ தரம் சுமார்தான். சிறந்த வீடியோ படம் எடுக்க, கைக்கு அடக்கமான நல்ல கருவியை யாராவது சிபாரிசு செய்ய முடியுமா? டிரைபாடில் இணைக்கக்கூடியதாக இருக்கவேண்டும். ஒலிப்பதிவும் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கவேண்டும்.

***

இந்த ஆண்டு, மேற்குத் தொடர்ச்சி மலையும் பின்னர் இமயமலையும் ஏறியது சுவாரசியமான அனுபவங்கள். ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க நினைத்தது முழுமையாக நடக்கவில்லை. சைக்கிள் வாங்க நினைத்தது நடக்கவில்லை. பொதுவாக உடலைக் கவனிக்கவேண்டும் என்று நினைத்தது நடக்கவே இல்லை. 2013-லாவது...

***

நேரமின்மை காரணமாக நிறைய ஹெரிடேஜ் இடங்களுக்குப் போக முடியவில்லை. வரும் ஆண்டில் நிச்சயமாக கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் சில இடங்களுக்காவது போகவேண்டும். தமிழகத்திலும்தான்.

***

இந்த ஆண்டு படித்ததில் மிக முக்கியமான புத்தகமாக நினைப்பது The Cage - Gordon Weiss. இந்த ஆண்டு ஒரே வாரத்தில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு (ஐபேடில்) படித்து முடித்தேன். வருமாண்டு சாண்டில்யனின் அனைத்துப் புத்தகங்களையும் முழுமையாக ஒரே முச்சில் - ஒரே மாதத்தில் - படித்து முடிக்கத் திட்டம். இந்த ஆண்டின் மற்றொரு முக்கியத் திட்டம் வில் தூராந்த் ‘நாகரிகங்களின் கதை’ (11 பாகங்கள்) அனைத்தையும் ஒரே மூச்சாகப் படிப்பது. முன்னது முடிந்துவிடும். பின்னது கஷ்டம் என்று தோன்றுகிறது.

***

எழுத/மொழிமாற்ற என்று இந்த ஆண்டில் ஆரம்பித்த சில, நிச்சயமாக வருமாண்டில் முடிந்துவிடும். வலைப்பதிவு எழுத அதிக நேரம் இல்லை.

***

இந்த ஆண்டு குடும்பத்துடன் சென்ற வெளிநாடு இங்கிலாந்து. ஏற்கெனவே பல முறை அங்கு சென்றிருக்கிறேன். ஆனால் மனைவி, மகளுக்குப் புதிய இடம். வருமாண்டு ஒரு வாரம் சீனா சென்று வரலாமா என்று யோசிக்கிறேன்.

***

தியேட்டர் சென்று சுமார் 10 சினிமாப் படங்கள் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். மிக விரும்பியது இங்கிலீஷ், விங்கிலீஷ் (இந்தி). தமிழில் மிகவும் ரசித்தது ‘நான் ஈ’, ஆங்கிலத்தில் 'Life of Pi', தெலுங்கில் ‘ரிபெல்’ (நிஜம்:-)

***

இந்த ஆண்டு கிரிக்கெட் பார்ப்பது மிகவும் குறைந்துபோயுள்ளது.

Tuesday, December 25, 2012

தமிழ் பாரம்பரியக் குழுமத்தின் ஓவியம் பற்றிய பேருரைகள்

இன்று (25 டிசம்பர் 2012) முதல் 30 டிசம்பர் 2012 வரை தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சென்னை, தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள தத்வாலோகா அரங்கில் காலை 10.00-12.00 மணிக்கு பேருரைகளை ஏற்பாடு செய்துள்ளது. (சில பேச்சுகள் தமிழிலும் சில ஆங்கிலத்திலும் இருக்கும்.)

25 டிசம்பர் 2012: தமிழகத்தின் பாறை ஓவியங்கள், காந்திராஜன்

காந்திராஜன் ஒரு கலை வரலாற்றாளரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். தமிழகத்தில், பழமையான பல பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்த பெருமை இவருடையது. பாறை ஓவியங்களையும் சுவரோவியங்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். வரலாறு, மானுடவியல் துறைகளில் ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.

26 டிசம்பர் 2012: இந்தியா முழுதும் பரவியுள்ள ஓவியக் கலை - ஒரு பார்வை, அர்விந்த் வெங்கட்ராமன்

அர்விந்த் வெங்கட்ராமன் ஒரு மென்பொருளாளர். நூற்றுக்கணக்கான கோயில்களில் உள்ள சிற்பங்களைப் படம் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளார்.

27 டிசம்பர் 2012: அஜந்தா குகை ஓவியங்கள், பேராசிரியர் சுவாமிநாதன்

சுவாமிநாதன், ஐஐடி தில்லியிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர். அஜந்தா குகை ஓவியங்கள் குறித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பேசியும் எழுதியும் வருபவர். தனிச்சுற்றுக்காக அஜந்தா ஓவியங்கள் குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார். அஜந்தா ஓவியங்கள் குறித்து மல்ட்டிமீடியா சிடி ஒன்றை வெளியிட்டுள்ளார். மாமல்லபுரம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் காஃபி டேபிள் புத்தககங்களை வெளியிட்டுள்ளார்.

28 டிசம்பர் 2012: காஞ்சி, பனமலை பல்லவ ஓவியங்கள், பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்

        சித்தன்னவாசல் ஜைன குகை ஓவியங்கள், ஓவியர் சந்ரு (சந்திரசேகரன்)

சிவராமகிருஷ்ணன், சென்னை நுண்கலைக் கல்லூரியில் ஓவியத்துறையில் பயிற்றுவிக்கிறார்.
ஓவியர் சந்ரு, சென்னை நுண்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.

29 டிசம்பர் 2012: தஞ்சை பிருகதீசுவரம் கோயிலின் சோழர் கால ஓவியங்கள், விஜய குமார்

விஜய குமார் Poetry in Stone (http://poetryinstone.in/) என்ற தளத்தின் மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்திய சிற்பக் கலை, ஓவியக் கலை ஆகியவை பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்.

30 டிசம்பர் 2012: விஜயநகர, நாயக்க கால ஓவியங்கள், பேராசிரியர் ச. பாலுசாமி

பாலுசாமி, சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக உள்ளார். விஜயநகர, நாயக்கர் கலைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர். விஜயநகர, நாயக்க ஓவியங்களை ஆவணப்படுத்தும் திட்டம் ஒன்றின் தலைவராக இருந்தார். மாமல்லபுரத்தின் அருச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், புலிக்குகை ஆகியவை பற்றி புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

Friday, December 14, 2012

பெங்களூரு புத்தகக் கண்காட்சி

பெங்களூரில் இன்று 14 டிசம்பர் முதல் 23 டிசம்பர் வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இடம்: மேக்ரி சர்க்கிள் அருகே பேலஸ் கிரவுண்ட்ஸ், அதனுள் திரிபுரவாசவி மைதானப் பகுதி.

‘டயல் ஃபார் புக்ஸ்’ என்ற பெயரில் பெரிய ஸ்டால் ஒன்றை எடுத்துள்ளோம். அங்கே கிழக்கு பதிப்பகம் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். கூடவே தமிழின் முன்னணிப் பதிப்பாளர்கள் பலருடைய முக்கியமான புத்தகங்களும் கிடைக்கும்.

கடை எண் 103.

தொடர்புக்கு: விஜயகுமார் (தொலைப்பேசி எண்: 095000-45609)

Wednesday, December 12, 2012

அண்ணா ஹசாரே - கெஜ்ரிவால்

அண்ணா ஹசாரே, ஊழலுக்கு எதிரான சில போராட்டங்களை சென்ற ஆண்டு தொடர்ந்து நடத்தினார். அதன் பின்னணியில் இருந்து, கூட்டங்களை நிர்வகித்து, பணப் பரிமாற்றத்தைக் கவனித்துக்கொண்டதில் பெரும் பங்கு ஆற்றியவர் அர்விந்த் கெஜ்ரிவால்/மனீஷ் சிசோதியா ஆகியோர் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

ஜன் லோக்பால் என்ற சட்ட வரைவை முன்வைத்து ஹசாரேயும் கெஜ்ரிவாலும் போராடினர். பின்னர் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைக் கலைத்துவிட்டு நான் என் வழி, நீ உன் வழி என்று இருவரும் பிரிந்துவிட்டனர்.

அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டார். அண்ணா ஹசாரே வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த சில தினங்களில் ஹசாரே வாயைத் திறந்தாலே உளறலாகக் கொட்டுகிறது. அவர் பேசாமல் மௌன விரதத்தைக் கடைப்பிடித்தல் நலம் என்று எனக்குத் தோன்றுகிறது.

கெஜ்ரிவால் தன் பெயரையோ படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றார் ஹசாரே. கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார். கெஜ்ரிவாலுக்கு அரசியல் ஆசைகள் இருக்கக்கூடாது என்றோ தேர்தலில் நின்று ஊழலுக்கு எதிராகப் போராடக்கூடாது என்றோ ஏன் ஒருவர் எதிர்பார்க்கவேண்டும்? அவரவர்க்கு அவரவர் வழி.

ஹசாரே நேற்று உதிர்த்த முத்தில், ‘நான் பலவற்றையும் வெளியே பேசிவிட முடியாது. பேசினால் பிரச்னை ஆகிவிடும்’ என்று தெரு ஓரத்தில் நின்றுகொண்டு சினிமா கிசுகிசு பேசுபவர்போல் பேசுகிறார். ஊழலுக்கு எதிரானவர்; தைரியமானவர் என்ற பிம்பம் இருக்கும்போது, கெஜ்ரிவால் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் ஹசாரேயிடம் இருந்தால் அதனை வெளியிடுவதுதானே முறை?

எனக்கு கெஜ்ரிவால் கட்சிமேல் பெரும் நம்பிக்கை இல்லை. அரசியலில் அடித்துப் புரட்டி மாற்றம் கொண்டுவந்துவிடுவார்கள் என்று நான் நம்பவில்லை. அரசியல் மாற்றங்கள் நடக்கப் பல பத்தாண்டுகள் தேவை. ஆனால் கெஜ்ரிவால் அவருக்கே உரித்தான அதிரடி முறையில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று நம்புகிறார். அது அவர் இஷ்டம். ஆனால் அவருடைய நேர்மைமீது சந்தேகம் வருவதுபோல் ஆதாரம் இன்றி ஹசாரே பேசுவது அழகல்ல.

[கெஜ்ரிவாலின் “ஸ்வராஜ்” புத்தகம் படித்துவிட்டேன். மிக அருமையாக எழுதியுள்ளார். தன் கட்சியின் அடிப்படைக் கொள்கையை, தான் நம்பும் அரசியல் மாற்றத்தை இப்படிப் புத்தகமாக ஒருவர் கொண்டுவந்திருப்பது மிகவும் பாராட்டக்கூடியது. கிராமத் தன்னாட்சி என்பதை நான் பெருமளவு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், கெஜ்ரிவாலின் இடதுசாரிச் சாயல் எனக்கு ஏற்புடையதல்ல. கெஜ்ரிவாலின் ஸ்வராஜ் புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் பதிப்பிக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். மிக அருமையான தமிழாக்கம் - ஜவர்லால் செய்துள்ளார். புத்தக அட்டையை அடுத்த இரு வாரங்களில் வெளியிடுகிறேன்.]

Monday, December 03, 2012

மின்சாரப் பிரச்னை + சோலார்

தமிழகத்தில் சென்னைக்கு வெளியே உள்ள மக்கள் மின்சாரம் இன்றித் தவிக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட/படாத மின்வெட்டு 10 முதல் 18 மணி நேரம் கூட உள்ளது. சென்னையில் இருக்கும் என் போன்ற பலருக்கு தினசரி 2 மணி நேர மின்வெட்டு + மாதம் ஒரு நாள் 8 மணி நேர மின்வெட்டு. இதை இன்வெர்ட்டர் கொண்டு எளிதாகச் சமாளித்துவிடலாம்.

திடீர் என இவ்வளவு மின்வெட்டு எங்கிருந்து வந்தது என்பது பலருக்கும் புரியவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தை மக்கள்மீது புகுத்தவே இந்தப் பிரச்னை மக்கள்மீது சுமத்தப்படுகிறது என்று ஒரு கான்ஸ்பிரசி தியரியும் மக்களிடையே பரவியுள்ளது. ஆனால் இதற்காகப் போய் ஒரு மாநிலத்தின் பெருமளவு மக்களை ஜெயலலிதா துன்புறுத்துவார் என்று நான் நினைக்கவில்லை.

தனியார் துறைமீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், இந்தப் பிரச்னைக்கான முழுமுதற் காரணமே, மின் உற்பத்தியைத் தனியார்மயமாக்கியதுதான் என்பார்கள். இதை நான் ஏற்கவில்லை. மாநில அரசு தன் எதிர்காலத் தேவையைச் சரியாகத் திட்டமிடாததே. மின்வாரியத்திலிருந்து ஓய்வுபெற்ற பொறியாளர் காந்தி என்பவர் எழுதிய “தமிழகத்தில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும்” (ஆழி பதிப்பகம்) புத்தகத்தில் பல காரணங்கள் குறிக்கப்பட்டுள்ளதாக ஞாநி தன் கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் உள்ளதைப் படித்தாலே காந்தி தெளிவாக, தரவுகளுடன் எழுதியிருக்கிறார் என்பது புரிகிறது. (புத்தகத்தை நான் இன்னமும் படிக்கவில்லை.)

ஆனால் காந்தியின் அனாலிசிஸில் சில குறைபாடுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். தனியார் உற்பத்திக்கு மாற்றாக அவர் அரசு உற்பத்தியை முன்வைக்கிறார். நிறுவுவதற்கான மூலதனச் செலவு அதிகமாக இருக்கும் என்னும் காரணத்தால்தான், அவ்வளவு பணம் கையில் இல்லை என்பதால்தான் தனியார் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவலாம் என்று மத்திய அரசு அனுமதித்தது. இந்த மூலதனச் செலவை நான்கு ஆண்டுகளில் திருப்பித் தருவதற்கே எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள் காந்தியும் ஞாநியும்.

மூலதனச் செலவு, அதற்கான வட்டிச் செலவு, மின் நிலையத்தை ஆண்டாண்டு இயக்கும் செலவு, கரி அல்லது இயற்கை எரிவாயு அல்லது நாப்தா போன்ற எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றம், பொதுவான பணவீக்கம் என அனைத்தும் சேர்ந்து அரசு மற்றும் தனியார் மின் நிலையங்களைப் பாதிக்கின்றன. எனவே அவ்வப்போது நுகர்வோருக்கான விலையை ஏற்றிக்கொண்டேதான் இருக்கவேண்டும். நான்கைந்து வருடத்துக்கு ஒருமுறை விலை ஏற்றும்போது மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இது ஏற்கமுடியாத ஒன்று. தனியார் என்றால் வெளிப்படையாக விலை ஏறிவிட்டதைச் சொல்வார்கள். அரசு என்றால் கொஞ்ச நாளைக்கு நஷ்டத்தைச் சகித்துக்கொண்டு பிறகு விலையை ஏற்றுவார்கள். ஆனால் அந்த நஷ்டத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டுதான் சரிக்கட்டியாகவேண்டும். எனவே இந்தச் சிக்கல் ஏதும் இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்சார விலையை ஏற்றுவது என்று முடிவெடுத்துவிடலாம்.

மாநில அரசுகள் மின் உற்பத்தி ஆலையை நிர்மாணிக்கக்கூடாது என்று மத்திய அரசு ஒருபோதும் சொல்லவில்லை. மாநில அரசுகள் செய்யத் தவறிவிட்டன என்பதுதான் உண்மை.

அடுத்து, காற்றாலை மின்சக்தி நம்மைக் காப்பாற்றிவிடும் என்பதுபோல ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது உண்மையே அல்ல. காற்றாலை மின்சக்தி யூனிட் ஒன்றுக்கு மிக அதிக விலை கொடுக்கவேண்டும். மேலும் installed capacity அதிகம் என்பதால் மட்டுமே இதிலிருந்து முழு மின்சாரமும் எல்லா நாளும் எல்லா நேரமும் கிடைத்துவிடாது. விக்கிபீடியா பக்கம் போய்ப் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமாக 6,970 மெகாவாட் அளவுக்கு காற்றாலைகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன என்று போட்டிருக்கும். ஆனால் ஒரு ஆண்டுக்கு அதிலிருந்து எத்தனை யூனிட்டுகள் கிடைத்தன, ஒவ்வொரு யூனிட்டுக்கும் எத்தனை பணம் மின்வாரியத்தால் கொடுக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். மேலும் மின் தொகுப்புக்கு ஒரு காற்றாலை கொடுக்கும் மின்சாரத்தின் அதே அளவை அந்த நிறுவனம் அதே ஆண்டில் வேண்டுமென்றால் மின் தொகுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றுகூட மின்சார வாரியம் குறை கூறியுள்ளது.

காற்றாலை மோசம் என்று நான் சொல்லவரவில்லை. மாற்று எரிசக்தி என்னும் வகையில் காற்றாலை மிக மிக முக்கியம். ஆனால், காற்றாலையால் நம் பிரச்னை எல்லாம் தீர்ந்துவிடும் என்று யாரேனும் சொன்னால் நம்பாதீர்கள். ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரைதான் காற்றாலை நன்றாக இயங்கும். பிறகு படுத்துவிடும்.

நம் அடிப்படை மின் தேவையை இரண்டு வழிகளில் மட்டுமே நம்மால் தீர்க்க முடியும்.

(1) அரசு, தனியார் என அனைவரும் இணைந்து அனல் மின் நிலையங்களையும் அணு மின் நிலையங்களையும் அமைத்து, ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிப்பது.
(2) நாம் ஒவ்வொருவரும் சூரிய ஒளி மின்சாரத்தை நேரடியாக வீடுகளில் அமைத்து மின் தொகுப்பின்மீதுள்ள நம் சார்பைக் குறைத்துக்கொள்வது.

காற்று, குப்பை, கடல் அலை, நீர் மின்சாரம், பிற அனைத்தும் அவ்வப்போது, கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு உதவலாம். ஆனால் அடிப்படைப் பிரச்னைகளை இவற்றால் சாதிக்க முடியாது. தினம் தினம் இத்தனை மெகாவாட் நம் அனைவருக்கும் வேண்டும்.

சூரிய ஒளி மின்சாரத்தைப் பொருத்தமட்டில் அரசோ தனியாரோ மாபெரும் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கை இல்லை. இங்கே 50, அங்கே 100 மெகாவாட் கிடைத்தால் பெரிய விஷயம். அரசும் தனியாரும், குறைந்தபட்சம் 1,000 மெகாவாட் மின்சாரம் இல்லாவிட்டால் அதில் அதிகக் கவனத்தைச் செலுத்தக்கூடாது.

மாறாக, தனித்தனியாக நாம் அனைவரும் நம் வீட்டின் சில பிரச்னைகளை சூரிய ஒளி மின்சாரம் கொண்டு தீர்க்கலாம்.

(அ) சூரிய ஒளியில் இயங்கும் தனிப்பட்ட விளக்கு யூனிட்டுகள். இவற்றில் சிலவற்றை நான் சோதனை முயற்சியில் பயன்படுத்த உள்ளேன். பிரகாசம் ஒருவேளை குறைவாக இருந்தாலும், ஒன்றுமே இல்லாமல் இருட்டில் இருப்பதற்கு, இவை எவ்வளவோ தேவலாம். நான் இதுவரையில் பார்த்தவற்றில் சில விளக்குகள் சூரிய ஒளியிலும் சார்ஜ் செய்யலாம். மின்சாரம் மூலவும் சார்ஜ் செய்யலாம்.

(ஆ) சூரிய ஒளி + பேட்டரி + சார்ஜிங் பிளக் (plug): என் வீட்டில் மூன்று செல்பேசிகள், இரண்டு லாப்டாப்கள், இரண்டு சிலேட்டுக் கணினிகள், ஒரு பாக்கெட் ரவுட்டர், ஒரு டி.எஸ்.எல் மாடம்/wi-fi ரவுட்டர் என அவ்வப்போது சார்ஜ் செய்யப்படவேண்டிய பல கருவிகள் உள்ளன. இவை உறிஞ்சும் மின் சக்தி மிகவும் குறைவுதான். இவற்றையெல்லாம் முழுமையாக சூரிய சக்திமூலமே சார்ஜ் செய்துகொள்ள முடியும். அதற்கெனத் தனியான ஒரு சோலார் பேனல் அமைத்து, தனி பேட்டரிமூலம் ஓரிடத்தில் சார்ஜிங் செய்ய வசதி செய்துவிட்டால் போதும்.

(இ) வீட்டில் உள்ள பிற விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவற்றை மட்டும் ஒரு தனிச் சுற்றில் வைத்து, அவை இயங்குவதற்கான இன்வெர்ட்டர் + பேட்டரி சிஸ்டம், அதனை சார்ஜ் செய்ய சோலார் பேனல்கள் என்று செய்யலாம். இதற்கான செலவு சற்று அதிகம் ஆகும்போலத் தெரிகிறது.

(ஈ) அதிக மின்சாரத்தை இழுக்கக்கூடிய ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் அடுப்பு, டிவி ஆகியவற்றை ஒரேயடியாக விட்டுவிடவேண்டும். மெயின்ஸில் கரண்ட் வந்தால் இவை இயங்கும். இல்லாவிட்டால் கோவிந்தா!

நீங்கள் செய்யும் பரிசோதனை முயற்சிகளைப் பற்றியும் எனக்குத் தகவல் தெரிவியுங்கள்.

Sunday, December 02, 2012

இராமாயணத்துக்குக் கம்பனின் கொடை

நேற்று, தமிழ் பாரம்பரியக் குழுமம் நடத்தும் மாதாந்திரக் கூட்டத்தில் பேச வந்திருந்தார் பன்மொழி வல்லுநர், இலக்கிய ஆய்வாளர், பேராசிரியர் ஏ.ஏ.மணவாளன். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பட்டங்கள் பெற்றவர். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராக, துறைத் தலைவராக இருந்தவர். கம்ப ராமாயணத்தில் அத்தாரிட்டி. அவருடைய பேச்சிலிருந்து கிடைத்த சில சுவாரசியமான தகவல்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். (முழு வீடியோவை ஒரு கட்டத்தில் இணையத்தில் சேர்ப்பேன்.)

வால்மிகி ராமாயண ஏட்டுச் சுவடிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் கிடைத்துள்ளன. அவற்றைத் தொகுத்து, அவற்றுக்கிடையேயான வித்தியாசங்களைக் குறிக்கவேண்டும் என்ற முயற்சியை எடுத்த பரோடா பல்கலைக்கழகம், பல்வேறு வெர்ஷன்களை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தது. அதன்படி, நான்கு ‘ரிசன்ஷன்கள்’ இருப்பதைக் கண்டுபிடித்தது. அவை, வடமேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு. ஆக, ஒருவிதத்தில் நான்கு வால்மிகி ராமாயணங்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகின்றன; சில இடங்களைத் தவிர.

அவ்வாறு விலகிப்போகும் இடங்கள்தான் மிகவும் சுவாரசியமானவை. உதாரணமாக, தெற்கு வால்மிகி ராமாயணப் பிரதியில் மட்டும் சில புதிய விஷயங்கள் உள்ளன. இவை எவையுமே பிற மூன்று வால்மிகி ராமாயணப் பிரதிகளில் இல்லை. இது எப்படிச் சாத்தியம்?

மணவாளனின் கருத்து இது. இவை அனைத்தையும் முதலில் கம்பன் தன் இராமகாதையில்தான் எடுத்தாள்கிறான். இந்த இராமகாதையையும் வால்மிகி ராமாயணத்தையும் எடுத்துக்கொண்டு வைணவ உரையாசிரியர்கள் பொதுமக்களிடம் பிரசங்களில் ஈடுபடுகின்றனர். அப்போது இரண்டிலும் சில வித்தியாசங்கள் இருப்பதைப் பார்க்கின்றனர். கம்பனின் இராமகாதையில் இருக்கும் விஷயங்களை அவர்கள் அப்போது இயல்பாக, இடைச்செருகல் சுலோகங்கள்மூலம் தெற்குப் பிரதிக்குள் நுழைத்துவிடுகின்றனர். இதன் காரணமாக மட்டுமே தெற்குப் பிரதியில் மட்டும் இவை காணப்படுகின்றன; பிற மூன்று இடங்களில் கிடைக்கும் பிரதிகளில் இவை காணப்படுவதில்லை.

அவற்றிலிருந்து ஒருசிலவற்றை மட்டும் மணவாளன் எடுத்துக்காட்டினார்.

(1) இராமனின் பிறந்த தினம். இன்று ராம நவமி என்று அனைவரும் இராமனின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் வடமேற்கு, வடக்கு, கிழக்குப் பிரதிகளில் இராமனின் பிறந்த நட்சத்திரம், ஜாதகம் என்று எந்தத் தகவலும் இல்லை. இவை முதலில் தமிழில் கம்பனிடம் மட்டுமே காணப்படுகின்றன. அதன்மூலம் அவை தெற்கு வால்மிகி ராமாயணப் பிரதியில் செருகப்படுகின்றன. பிற மூன்று பிரதிகளில் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கன பிறப்பு நட்சத்திரம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தசரதனின் பிறப்பு நட்சத்திரம் தொடர்பாக எல்லாத் தகவலும் அனைத்துப் பிரதிகளிலும் உள்ளன. தசரதனுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, முக்கியக் கதை மாந்தர்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் என்ன பொருள்?

கம்பன் எங்கிருந்தோ இந்தத் தகவலைப் பெற்றுள்ளான். இதற்கான சோர்ஸ் கம்பனுக்கு எங்கிருந்து கிடைத்துள்ளது என்று தெரியவில்லை. (வடமேற்கு இந்தியாமூலம், குஜராத் வழியாக, கர்நாடகப் பகுதிக்கும் பின்னர் அங்கிருந்து மலையாள, தமிழ் பகுதிக்கும் இந்த இராமன் பிறப்புத் தகவல் வாய்மொழியாக வந்து, மக்களிடையே பரவியிருந்தது என்கிறார் மணவாளன்.) இன்று இந்தியாவெங்கும் கொண்டாடப்படும் ஒரு விழாவுக்கான நாள், நட்சத்திரத்தைக் குறித்துக்கொடுத்தவன் கம்பன்.

(2) அகலிகை கதை. தெற்குப் பிரதியைத் தவிர பிற அனைத்திலும் அகலிகை கௌதமரால் சபிக்கப்படுகிறாள். ஆனால் கல்லாகப் போ என்று சபிக்கப்படவில்லை. காற்றைப் புசித்து, வேறு அன்ன ஆகாரம் இல்லாமல் கிடப்பாய் என்றுதான் பிற மூன்று பிரதிகளிலும் சொல்லப்படுகிறது. தெற்குப் பிரதியில் மட்டும்தான் ‘அன்ன ஆகாரம் இல்லாமல்’ என்பதற்குப் பதில் ‘கல்லாகக் கிடப்பாய்’ என்று வருகிறது. (“வாயுபக்ஷா நிராஹாரா தப்யந்தி” என்று பிற மூன்று பிரதிகளில் இருப்பது, தெற்குப் பிரதியில் “வாயுபக்ஷா ஷிலான்யாசா தப்யந்தி” என்று மாறிவருகிறது.) காரணம், கம்பன் மிக விரிவாக அகலிகை கல்லாகப் போவதைப் பற்றியும் அவளுடைய சாபவிமோசனம் பற்றியும் சொல்கிறான்.

அப்படியானால் கம்பனுடைய சோர்ஸ் யார்? அது பரிபாடல். பரிபாடலில் திருப்பரங்குன்றத்தைக் குறிக்கும் முருகன் பற்றிய பாடலில் “இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு” என்று வருகிறது. எனவே தனக்குமுன் தமிழகத்தில் இருந்த கதையைச் சேர்த்து கம்பன் படைத்திருக்கிறான்.

(3) இரணியன் வதைப்படலத்தை முழுவதுமாக இராமகாதைக்குள் புகுத்தியது கம்பனே. இதைப் பின்பற்றி, இந்தியாவின் பிற பகுதிகளில் எழுதப்பட்ட சில பிற்கால இராமாயணங்களிலும் இரணியன் கதை வருகிறது.

கோரக்பூர் பிரஸ்மூலம் இன்று வெளிவரும் வால்மிகி ராமாயணப் பதிவு, தெற்குப் பிரதி. (ஏன் அவர்கள் தெற்குப் பிரதியை எடுத்துப் பதிப்பித்துள்ளனர் என்பதற்கு விடை இல்லை.)

மணவாளன் பேசும்போது இராமசேது பற்றிச் சிலவற்றைச் சொன்னார். அவற்றையும் மிச்சத்தையும் வீடியோ வரும்போது பார்த்துத் தெரிந்துகொள்க.

Friday, November 23, 2012

சோனியா காந்தி போடும் நரகத்துக்கான பாதை

[எச்சரிக்கை. மிக நீண்ட போஸ்ட்.]

நரகத்துக்கான பாதை நல்லெண்ணத்துடனேயே போடப்படுகிறது.

ஒரு பக்கம் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அவ்வப்போது சுதந்தரவாதச் சிந்தனைகளுடன் சில நல்ல செயல்களில் ஈடுபடும். ஏதேனும் ஒரு துறையில் தனியார்மயம் அதிகரிக்கப்படும். ஏதேனும் ஒரு துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.

மறுபக்கம் சோனியா காந்தி தலைமையிலான சூப்பர் அரசு - இதற்கு நேஷனல் அட்வைசரி கவுன்சில் (என்.ஏ.சி) என்றும் பெயர் - மிக ஆழமாக யோசித்து அனைத்து ஏழைகளும் பலன் பெறவேண்டும் என்று சில திட்டங்களைத் தீட்டும். அதன் விளைவுகள் நாட்டை மிகக் கடுமையாகப் பாதித்து ஒட்டுமொத்த அழிவில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சோனியா/என்.ஏ.சி உருவாக்கிய இரண்டு திட்டங்களை எடுத்துக்கொள்வோம்.

முதலாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டம். இதற்கு 100 நாள் வேலைத் திட்டம் என்று உள்ளூரில் பெயர். இதன்படி, கிராமப் பகுதிகளில் உள்ள வயதுக்கு வந்த மக்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை கட்டாயமாகத் தரப்படும். அதாவது அவர்கள் கேட்டால், அரசு வேலை கொடுத்தே ஆகவேண்டும். இது மக்களின் உரிமை. அந்த வேலைக்கு அரசு அவர்களுக்கு நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட கூலி தந்துவிடும்.

இதன் அடிப்படை மிகுந்த நல்லெண்ணம் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. யாருமே தேசம் நாசமாகப் போகவேண்டும் என்று உட்கார்ந்துகொண்டு திட்டம் தீட்டுவதில்லை. என்ன நல்லெண்ணம்? புதிய தாராளக்கொள்கை வந்ததற்குப் பிறகு, நகரங்கள் வளரும் வேகத்தில் கிராமங்கள் வளர்வதில்லை. கிராம வருமானம் அதிகமாவதில்லை. ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த விலைவாசி அதிகரித்துக்கொண்டே போகிறது. விளைவாக கிராம மக்களின் வாழ்க்கை அழிந்துகொண்டே போகிறது. செல்வமானது, குறைவான இடத்திலிருந்து அதிகமான இடத்துக்குப் பாய்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் சாரி சாரியாக நகரங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இதனால் நகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. நகரத்துக்கு வரும் கிராமவாசிகளும் சேரிகளில் சிக்கிச் சீரழியவேண்டியிருக்கிறது.

கிராம மக்களுக்கு ஓரளவுக்காவது நிவாரணம் தரவேண்டுமானால் அவர்கள் கையில் கொஞ்சமாவது பணத்தைச் சேர்க்கவேண்டும். இதுதான் அந்த நல்லெண்ணம்.

ஆனால் என்ன நடந்தது?

இந்தப் பணத்தைத் தருவதற்கு என்.ஏ.சி கொண்டுவந்த திட்டம் எப்படிப்பட்டது? மக்கள் வேலை செய்யவேண்டும், செய்தால்தான் பணம் என்றார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? நாட்டில் பெரும்பாலான இடங்களில், பரம நிச்சயமாக தமிழ்நாட்டில், உருப்படியாக ஒரு வேலையும் நடப்பதில்லை. குழி தோண்டு, குழி மூடு என்ற அடிப்படையில் கிராமத்துக்கு டாஞ்சிபிள் சொத்து எதையும் உருவாக்காமல் இந்தப் பணம் கடைசியில் பட்டுவாடா ஆகிறது. வேலை எதுவுமே செய்யாமல் பணம் கிடைக்கிறது என்பதால் அரசு அதிகாரிகள் அடிக்கும் 30% கொள்ளையை மக்களால் தட்டிக்கேட்க முடிவதில்லை. நான் சென்னை அருகே ஒரு கிராமத்தில் எடுத்த ஒரு சர்வேயின்படி நாள் ஒன்றுக்கு 119 ரூபாய் கூலி இருந்தபோது மக்களுக்குக் கையில் கிடைத்த பணம் ரூ. 80-85 (சராசரி). ஓர் ஆண்டுக்கு வயது வந்த நபர் ஒருவருக்குக் கையில் கிடைப்பது சுமார் ரூ. 8,000/-

ஆனால் என்ன நடக்கிறது? மனத்தளவில் இது இலவசப் பணம் மாதிரிதான். விவசாயக் கூலி வேலை செய்வோர் பலரும் இதன் காரணமாகக் இனியும் கூலி வேலை செய்ய விரும்புவதில்லை. ஏற்கெனவே நசித்துப்போயிருக்கும் விவசாயம் மேலும் நசிகிறது. விவசாயிகள் இப்போது அரசிடம் தங்கள் வயல்களில் வேலை செய்வதற்கு ஈடாக 100 நாள் கூலியைத் தரச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசம். நடைமுறையில் வேலை செய்யாமல் இருப்பதற்குத்தான் நாள் ஒன்றுக்கு 80 ரூபாய். யாருக்கும் வேலை செய்யப் பிடிக்கவில்லை. எனவே விவசாயிகள் வயல்களுக்கு இவர்கள் வேலை செய்யப் போனாலும் சும்மாதான் உட்கார்ந்திருக்கப் போகிறார்கள். இதனால் விவசாயிக்கு எந்த நன்மையும் இல்லை.

அத்துடன் கிராமப் பகுதிகளில் இருக்கும் சிறு தொழில்களில் வேலை செய்துவந்தோர் பலரும் வேலைகளுக்குச் செல்வதில்லை என்று சமீபத்தில் வந்த ஓர் அறிக்கை சொல்கிறது. ஆண்டுக்குக் கிடைக்கும் 8,000 ரூபாயை வைத்துக்கொண்டு இவர்களால் எப்படி வாழ்க்கை நடத்தமுடியும்? இவர்கள் ஏன் வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை? ஏன் 8000 ரூபாய் போதும் என்றிருக்கிறார்கள்?

இது ஒரு லோக்கல் மினிமம். மாதம் முழுதும் லொங்கு லொங்கென்று வேலை செய்து லோல்பட்டு, வெறும் 2,000 ரூபாய் சம்பாதிப்பதற்கு, பேசாமல் வீட்டோடு உட்கார்ந்திருக்கலாம். ஏதோ ஒரு கைவேலை செய்யலாம். பணம் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும். வேலை செய்தால் குறைந்தது மாதம் 6,000 ரூபாயாவது வரவேண்டும். (சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சர்வே செய்தபோது, மாதத்துக்கு 10,000 அல்லது அதற்குமேல் இருந்தால்தான் வளமான வாழ்க்கை வாழமுடியும் என்று அவர்கள் சொன்னார்கள். நான் சொல்லும் 6,000 என்பது சற்றுத் தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தில்.) அப்படிக் கிடைக்கப்போவதில்லை என்றால் அந்த வேலைக்குப் போனால் என்ன, போகாவிட்டால் என்ன?

கிராமங்களில் அதிகச் சம்பள வேலைகளை உருவாக்க என்ன செய்யவேண்டும் என்று அரசுக்குத் தெரியவில்லை. (ஹிண்ட்: முதலில் ஒழுங்காக கரண்ட் கொடுங்கள்!) ஆனால் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இவர்களது வழிமுறையின் விளைவு இப்படியாக இருக்கிறது:

(அ) அரசு ஊழியர்களுக்கும் பிற இடைத்தரகர்களுக்கும் அதிக லஞ்சம் (30% கட்)
(ஆ) கடைமட்ட உழைப்பாளர்கள் உழைப்பை விட்டுவிட்டுச் சோம்பேறிகளாக ஆக்குவது
(இ) வேலை செய்யாமல் வேலை செய்ததுபோலப் பொய் சொல்லலாம் என்ற கெட்ட எண்ணத்தை மக்கள் மனத்தில் விதைப்பது
(ஈ) ‘இது நம்ம பணம்தான்யா!’ என்று உரிமை கொண்டாட வைக்கிறது மக்களை. இது மிக அபாயகரமான வாதம்.
(உ) விவசாயத்தை விரைந்து அழிக்கிறது.
(ஊ) கிராமப்புறக் கைத்தொழில்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது.

இப்படித்தான் நல்ல எண்ணம் நாசத்தை விளைவிக்கிறது. இனி இந்தத் திட்டத்தை நிறுத்த முடியாது. ஏனெனில் இடைத்தரகர்களுக்குக் கிடைக்கும் 30% கட் போவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் 8,000 ரூபாயை விட விரும்பமாட்டார்கள். தமிழ்கத்தில் ஏற்கெனவே நாள் கூலி 119 ரூபாய் என்பது 130+ என்றாகிவிட்டது. இரண்டாண்டுக்கு ஒரு முறை இது அதிகரித்துக்கொண்டே போகும். மேலும் கிராமம் என்று சொல்லப்படும் பகுதியில் யார் வேண்டும் என்றாலும் இந்தப் பணத்தை (வேலையை!) கொடுத்தே ஆகவேண்டும். ஏனெனில் இது உரிமை!

என்.ஏ.சியின் அடுத்த நல்லெண்ணத் திட்டத்தைப் பார்ப்போம்.

மக்களின் வாழ்க்கையைச் சரி செய்த கையோடு சோனியா அண்ட் கோ கல்வியைக் கையில் எடுக்க முடிவு செய்தனர். மீண்டும் புதிய தாராளமயக் கொள்கையை ஒரு பிடி பிடிக்கலாம். நாட்டில் தனியார் கல்வி நிலையங்கள் தறிகெட்டு வளர்கின்றன. இவை இரண்டு வகைப்படும். நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு, உயர் சாதி ஆட்களுக்காக மட்டும் நடக்கும் பந்தா பள்ளிகள். மறுபக்கம், அவற்றை போலி செய்து உள்ளே சரக்கு இல்லாமல், சரியான வசதிகூட இல்லாமல், மோசமான கட்டடங்களில் மோசமான கல்வி கொடுத்து ஆனால் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகள். இன்னொரு பக்கம் அரசுப் பள்ளிகளில் ஆட்கள் சேர்வதில்லை, கட்டடம் உடைந்து தொங்குகிறது, மேற்கொண்டு நிதி முதலீடு செய்தாலும் உருப்படி ஆக்கமுடியாத நிலையில் அந்தப் பள்ளிகள் உள்ளன.

என்ன செய்யலாம்?

முதலில் மோசமான தனியார் பள்ளிகளை எடுத்துக்கொள்வோம். அவர்கள் எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருக்கவேண்டும், என்ன மாதிரியான ஆசிரியர்-மாணவர் விகிதம் இருக்கவேண்டும், என்ன மாதிரியான வசதிகள் இருக்கவேண்டும் என்று மிரட்டுவோம். இதெல்லாம் இல்லாவிட்டால் அவர்களுடைய உரிமத்தைப் பிடுங்கிவிடுவோம் என்று மிரட்டுவோம்.

சரி, அப்புறம்?

அடுத்து, அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களை ஒரு பதம் பார்ப்போம். சும்மா D.T.Ed அல்லது B.Ed இல்லாமலேயே ஆசிரியர்கள் ஆகிவிடுகிறார்கள். அதை ஒரு வெட்டு வெட்டுவோம். இனி இந்தப் பட்டங்கள் இல்லாவிட்டால் ஆசிரியர் ஆகமுடியாது.

சரி, அப்புறம்?

இது போதாது; இவர்கள் பொய்யாக பி.எட் வாங்கிவிட்டு வந்திருக்கலாம். எனவே TET (டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) என்று ஒன்றை வைத்து அதில் பாஸ் ஆனால்தான் நீ டீச்சராக ஆகலாம் என்று சொல்வோம்.

சூப்பர். அப்புறம்?

இதுபோதும், லொட்டைத் தனியார் பள்ளிகளைப் பதம் பார்க்க. இப்போது பணக்காரப் பள்ளிகளை ஒரு வாங்கு வாங்குவோம்.

எப்படி?

சிம்ப்பிள். அவர்களுடைய 25% இடத்தை ஏழை/பிற்படுத்தப்பட்டோர்/தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்காக ஒதுக்கிவைக்கவேண்டும் என்று சொல்வோம். ஏழையா அல்லது பிற்படுத்தப்பட்டவரா, யாருக்கு எவ்வளவு என்ற கேள்விகளை ஒருமாதிரி பிறகு பார்த்துக்கொள்ளலாம். இந்தக் கட்டணத்தை அரசு கொடுக்கும். ஆனால் எவ்வளவு கட்டணம், எப்போது கொடுப்போம் என்பதையெல்லாம் பிறகு மெதுவாகப் பார்த்துக்கொள்வோம். முதலில் இந்தப் பள்ளிகள் உடனடியாக இதனைச் செயல்படுத்தியே ஆகவேண்டும் என்று மிரட்டுவோம்.

செய்தார்கள். ஆனால் பூதம் வெவ்வேறு வழிகளிலிருந்து கிளம்புகிறது.

(அ) முதலில் இந்த எந்தச் சட்டமும் அரசுப் பள்ளிகளைக் கட்டுப்படுத்தாது. ஒரே ஒன்றைத் தவிர. அதாவது அரசுப் பள்ளியில் சாக்கடை, மலசலக்கூடம் எல்லாம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றிக் கவலையில்லை. அதெல்லாம் தனியார் பள்ளிகளுக்குத்தான். ஆனால் அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்வு எழுதியாகவேண்டும். இது என்ன பெரிய விஷயம் என்று ஆர்.டி.ஈ சட்டம் இயற்றியோர் நினைத்திருக்கவேண்டும். ஆனால் இதில்தான் முதல் சனியே பிடிக்கப்போகிறது.

ஏற்கெனவே நடந்த டெட் பரீட்சை முடிவுகளைப் பார்த்தால் ஒரே ஜோக். நம் ஆசிரியச் செல்வங்களால் இந்தப் பரீட்சையை இந்த நூற்றாண்டில் எழுதி பாஸ் செய்ய முடியாது. இந்த டெஸ்டே தப்பு என்று ஒரு பக்கம் போராட்டம். தமிழக அரசு TET, TRB என்ற இந்த இரண்டு பரீட்சையையும் குழப்பி, ஒன்றாக்கிவிட்டது. ஒன்று ஆசிரியர்களிடம் இருக்கவேண்டிய தகுதி. இன்னொன்று, இருக்கும் அரசுப் பள்ளிக் காலி இடங்களில் யாரைக்கொண்டு வேலை பார்க்கவைப்பது என்று தீர்மானிப்பது. முந்தைய பரீட்சையை ஆர்.டி.ஈ சட்டப்படி, ஏற்கெனவே வேலையில் இருக்கும் ஆசிரியர்களும் எழுதியாகவேண்டும்.

இப்போது அனைத்து ஆசிரியர்களும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாங்கள் ஏற்கெனவே பி.எட் படித்துவிட்டுத்தானே வருகிறோம், இப்போது இன்னொரு டெஸ்ட் எல்லாம் எழுதமுடியாது என்கிறார்கள். சிலர் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்கள்.

டெட் எழுதியே ஆகவேண்டும் என்று அரசு வற்புறுத்தினால் அடுத்த முறை தேர்தல் நடக்கும்போது இது குறித்து தேர்தல் வாக்குறுதி வருமாறு செய்துவிடுவார்கள். ஆசிரியர்கள் பலம் மிக்க ஒரு வாக்கு வங்கி.

(ஆ) டெட், ஆர்.டி.ஈ போன்றவற்றை சமூக நீதிக்கு எதிரானதாகவும் ஃபெடரலிசத்துக்கு எதிரானதாகவும் இந்த ஆசிரியர்களும் அறிவுஜீவிகளும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இது ரொம்ப டேஞ்சர். சமூக நீதி சிறக்கத்தானே இதைச் செய்தோம், இப்படி ஆகிவிட்டதே என்று சோனியா காந்தி துடித்துப் போய்விடுவார். டெட் எப்படி சமூக நீதிக்கு எதிரானது என்று கேட்கிறீர்களா? டெட் எதிர்பார்க்கும் 60% மதிப்பெண்ணை தாழ்த்தப்பட்டோரால்/ பிற்படுத்தப்பட்டோரால் பெற முடியாது; எனவே அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காது என்கிறார்கள் இவர்கள். இது எப்படி ஃபெடரலிசத்துக்கு எதிரானது? டெட் வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை மிரட்டிப் பணிய வைத்துள்ளது. (இது உண்மையே.)

(இ) தனியார் கல்வி நிறுவனங்கள் பலவும், உன்னால் முடிந்ததைச் செய், நான் 25% கொடுக்கமாட்டேன் என்று தான் பாட்டுக்கு நடந்துகொள்கின்றன. இவர்களை யார் கண்காணிக்கப்போவது? அதற்கான ஆள்பலம் மாநில அரசுகளிடம் இல்லை.

(ஈ) இத்தனை ஏக்கர் நிலம் வேண்டும் என்றெல்லாம் மிரட்டினால் பள்ளிக்கூடமே நடத்தப்போவதில்லை, பேசாமல் அங்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் பார்க்கலாம் என்று சிலர் முடிவு செய்வார்கள். (எல்டாம்ஸ் ரோட்டில் எங்கள் அலுவலகம் முந்தி இருந்த இடத்துக்கு எதிரில் உள்ள ஒரு பள்ளி இப்படித்தான் இழுத்து மூடி அந்த இடத்தை ஆஃபீஸ் ஆக்கிவிட்டார்கள்!) சப்ளை குறையும்; அதிகரிக்காது.

(உ) இன்னும் இரண்டாண்டுகளில் தனியார் ஸ்கூல்களை மிரட்டி சைட் பிசினஸ் செய்து ஏற்கெனவே பார்க்கும் வருமானத்தைவிட அதிகம் பார்க்கக் கல்வித்துறைக்கு வழி பிறக்கும்.

(ஊ) தனியார் பள்ளியில் காசு கொடுத்துப் படிக்கும் மாணவர்களின் கட்டணம் உயரும். தமிழக அரசின் கட்டணக் கட்டுப்பாட்டுச் சட்டம் அத்துடன் மல்லுக்கு நிற்கும். மொத்தத்தில் தினசரிப் போராட்டமாக இது ஆகும். கிட்டத்தட்ட அனைவருமே நீதிமன்றம் போவார்கள்.

(எ) வேண்டிய அளவு பி.எட், டி.டி.எட் கல்லூரிகள் இப்போது இல்லை. ஆனால் ஆர்.டி.ஈ முழுமையாகச் செயல்படுத்தப்படவேண்டும் என்றால் எக்கச்சக்கக் கல்வியியல் கல்லூரிகள் திறக்கப்படவேண்டும். இப்போது உள்ள கல்லுரிகளில் பி.எட் என்பதே பெரும் பஜனைதான். பெரும் தொகை வாங்கிக்கொண்டு ஓராண்டு கழித்து கையில் டிகிரி கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். அப்படி வெளியே வருபவர்கள், சிடெட் அல்லது டெட் பரீட்சையில் ஆப்பு வாங்குகிறார்கள்.

ஆக, ஒட்டுமொத்தமாக கல்வித் துறையில் உள்ள அனைவரது வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்ள ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு.

நரகத்துக்கான பாதை நல்லெண்ணத்துடனேயே போடப்படுகிறது.

Friday, November 16, 2012

2ஜி ஏலம்

2ஜி ஏலம், நான் எதிர்பார்த்ததைப் போலவே குறைந்த பணத்தைத்தான் பெற்றுத் தந்துள்ளது. இது ஆ. இராசா குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளும் சிஏஜியும் கணக்கிடுதலில் பிசகியுள்ளனர் என்பதை  நிரூபித்ததாகவே ஆகிறது.

2010-ல் ஏலம் நடந்திருந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கும் என்றெல்லாம் சொல்வதை நான் நம்பவில்லை. 3ஜி ஏலமே தவறு என்பது என் கருத்து. இன்று டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் மார்ஜின் அழுத்தத்தில் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. 3ஜி ஏலத்துக்கான பணத்தை அவை கடனாகத்தான் பெற்றுள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியே அவற்றின் லாப விகிதத்தைக் கடுமையாகக் குறைக்கின்றன. இன்று 3ஜி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான தரத்தில் இல்லை. மேலும், 3ஜி ஸ்பெக்ட்ரத்தைப் பெற்றவர்கள், அதனை அடுத்தவர்களுக்கு வாடகைக்குத் தரக்கூடாது என்று டெலிகாம் அமைச்சகம் கழுத்தறுக்கிறது.

ஆ.இராசா மேலான குற்றம் என்ன என்று இன்னும் நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். இராசா லஞ்சம் வாங்கினாரா, அப்படியென்றால் எவ்வளவு, யாரிடமிருந்து, அந்தப் பணம் எங்கே என்று தெளிவாகக் காட்ட இன்றுவரை சிபிஐயால் முடியவில்லை. பால்வா - கலைஞர் டிவி விவகாரம் தவிர்த்து. அதிலுமே நிறையக் கேள்விகள் பாக்கி.

ஆனால் இதன் விளைவாக ஏலம் என்பதுதான் மிகச் சரியான முறை, அதிலிருந்து லட்ச லட்சம் கோடிகளாகக் கொட்டும் என்பது பரப்புரை செய்யப்பட்டு, இன்று இந்தியா முழுதுமே அதனை நம்புகிற நிலைக்கு வந்துவிட்டதுதான் துரதிர்ஷ்டம். பொருளாதார அடிப்படைகளின்படி, சில இடங்களில் ஏலம் மோசமான நிலைக்குத்தான் கம்பெனிகளைத் தள்ளும், மக்களையும் காயப்படுத்தும். டெலிகாம் நிச்சயமாக அதில் ஒன்று.

பாஜக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ரெவின்யூ ஷேர் என்பது மிக அற்புதமான ஒரு நடைமுறை. இன்றுவரை இந்திய தொழில்துறையின் எந்தப் பகுதிக்கும் இப்படிப்பட்ட தெளிவான ஒரு முறை அமல்படுத்தப்படவில்லை. அரசுதான் ஸ்பெக்ட்ரத்துக்குச் சொந்தக்காரர்; அதனைப் பயன்படுத்த ஒருசில நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தக் கூலி தரவேண்டும். அது, அதிலிருந்து பெறப்படும் வருமானத்தில் ஒரு பகுதி. இது தொழில் செய்வோருக்குத் தெளிவைத் தருகிறது. அரசுக்குத் தொடர்ந்த வருமானத்தைத் தருகிறது. நிறுவனங்களின் கடன் சுமையைக் குறைக்கிறது. பொதுமக்களின் போன் செலவைக் குறைக்கிறது. தொழில்நுட்பம் ஜனநாயகப் படுத்தப்பட்டு, அனைத்து மக்களின் கைகளிலும் செல்போனாக மிளிர்கிறது.

ஆனால் அதற்கடுத்த கட்டத் தாவலைச் செய்யாமல் நாம் இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறோம். இன்னும் 3ஜியே பரவல் அடையவில்லை. 4ஜி சேவையைச் செய்ய யாரும் தயாராக இல்லை. முகேஷ் அம்பானி கம்பெனி இதோ அதோ என்கிறது, ஆனால் சேவையைக் காணோம். குறைந்தவிலை இண்டெர்னெட் என்பது இன்னும் நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. மறுபக்கம் சிலேட்டுக் கணினிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. 3,000 ரூபாய்க்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க டேப்லட் கையில் கிடைக்கிறது. ஆனால் இணைய வசதிக்குத்தான் தகராறே. மாதம் 250 ரூபாய்க்கு நல்ல வயர்லெஸ் (4ஜி) பிராட்பேண்ட் இணைப்பு கிடைத்தால் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

2ஜி விவகாரத்தில் பலரும் சேர்ந்து அரசியல் செய்ததன் பலன், அடுத்த பத்து வருடங்களுக்கு நம்மைத் தரையோடு சேர்த்து வைத்து அழுத்தப்போகிறது.

Thursday, November 15, 2012

தேசிய புத்தக வாரம்

இந்த வாரம் தேசிய புத்தக வாரமாகக் கொண்டாடப்படுகிறது. நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில் ஒரு முழுப்பக்க விளம்பரத்தை இன்றைய ஹிந்து பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள்.

பொதுவாக நம் பள்ளிக் குழந்தைகள் பாடப்புத்தகம் தாண்டி வேறு புத்தகங்கள் படிப்பதில்லை. அவ்வாறு படிக்க அவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. வீட்டுக்கு வீடு வண்ணத் தொலைக்காட்சி உள்ளது. அதில் கிடைக்கும் கேளிக்கை ஆனந்தம் புத்தகங்களில் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. தொடர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டால் அதன் சுவையே தனிதான் என்று குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். ஆனால் சுவை தெரியவந்தால்தானே?

பள்ளிக் குழந்தைகளைப் (பாடப்புத்தகம் அல்லாத பிற) புத்தகங்கள் படிக்கவைக்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு நிறைய உண்டு. கிழக்கு பதிப்பகம் சார்பில் இதில் முடிந்த அளவு ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். புத்தகங்களை ஒரு பள்ளிக்குக் கொடுத்தால் மட்டும் போதாது; அங்குள்ள மாணவர்களுடன் அந்தப் புத்தகங்களை முன்வைத்து உரையாடுவதும் உறவாடுவதும் அவசியம்.

இதற்காக இரண்டு இடங்களைத் தேர்வு செய்துள்ளேன்.

1. சென்னை மாநகராட்சிப் பள்ளிகள். சென்னை மாநகராட்சி மேயர், கல்வி அலுவலர்கள் ஆகியோரிடம் அனுமதி பெற்று, ஒரு மாநகராட்சிப் பள்ளியை ‘மாதிரி’ பள்ளியாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள குழந்தைகள் என்ன படிக்கக்கூடியவர்கள், எம்மாதிரியான புத்தகங்களை இவர்கள் விரும்புவார்கள் போன்ற சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முற்பட்டுள்ளேன். இந்தப் புத்தகங்களை பள்ளியில் நூலகத்தில் அடைத்து வைக்காமல் பிள்ளைகளிடமே கொடுத்து அவர்கள் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்ததும் கொண்டுவந்து மற்றொரு மாணவருடன் மாற்றிக்கொள்ளுமாறு செய்யவேண்டும். வாரத்துக்கு இரண்டு வகுப்புகள் புத்தகம் படிப்பதற்காக ஒதுக்கப்படவேண்டும். இந்த வகுப்புகளில் வெளியிலிருந்து வரும் தன்னார்வலர்கள் மாணவர்களிடம் உறவாடி, அவர்களுக்கு வரும் சந்தேகங்களைப் போக்குவார்கள். (ஆசிரியர்களும் ஈடுபட்டால் நல்லது, ஆனால் ஈடுபடாவிட்டாலும் பரவாயில்லை.)

2. வேலூரைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள்.

வேலூரில் என் நண்பர் ஹரிகோபால் சன்பீம் மெட்ரிகுலேஷன்/சி.பி.எஸ்.ஈ பள்ளிகளை நடத்திவருகிறார். அவரிடம் என் திட்டத்தைப் பற்றிச் சொன்னேன். அவர் வேலூர் பகுதியில் தானே இதில் ஈடுபடுவதாகச் சொன்னார். இந்தத் திட்டத்துக்கு ‘ஞானதீபம்’ என்ற பெயரையும் அவர் வைத்தார். பள்ளிக்கூடங்களுக்கு வேண்டிய புத்தகங்களை கிழக்கு பதிப்பகம் கொடுக்கும். (அவை கிழக்கு பதிப்பித்த புத்தகங்கள் மட்டுமல்ல, பிற பதிப்பகங்களுடைய புத்தகங்களும்கூட.) சன்பீம்/காந்தி கல்வி அறக்கட்டளை நண்பர்கள் அவற்றை அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்து அம்மாணவர்கள் படிப்பதற்கு உதவுவார்கள். முதலாவதாக காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக்கு புத்தகங்களை அனுப்பியுள்ளோம். வாரம் இருமுறை தன்னார்வலர்கள் உதவியுடன் பள்ளி மாணவிகளுக்குப் புத்தகங்கள் தரப்படும். அவர்கள் படித்துவிட்டு புத்தகங்களை மாற்றிக்கொள்வார்கள்.

(இதுகுறித்த ஹிந்து செய்தி இங்கே: Project to motivate reading habit)

இந்த முயற்சிகள் மேற்கொண்டு எப்படி நடக்கப்போகின்றன, எவ்வளவு தூரம் செல்லப்போகின்றன என்று தெரியவில்லை. அவ்வப்போது இது குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Wednesday, November 14, 2012

ஞாநியுடன் ஒரு பேட்டி

இட்லிவடை சார்பாக பத்திரிகையாளர் ஞாநியுடன் ஒரு நேர்முகப் பேட்டியை நடத்தினேன். அதன் ஒலிப்பதிவு இட்லிவடை தளத்தில் உள்ளது. கேள்விகள் அனைத்தும் இட்லிவடை பதிவின் வாசகர்களுடையது. பேட்டியை வழிநடத்திச் சென்றது மட்டும்தான் நான்.

ஒலிப்பதிவைக் கேட்க

Thursday, October 25, 2012

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (3)

முதல் பகுதி | இரண்டாம் பகுதி

அந்நிய முதலீடுகளின்மீது, அந்நிய நிறுவனங்களின்மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இவை:

1. இந்த அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தவே இந்தியா வருகிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி மாதிரி. கொஞ்சம் கொஞ்சமாக நம்மவர்களை ஏமாற்றி, இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிக்கொள்வார்கள்.

2. எக்கச்சக்கமாகப் பணம் கையில் வைத்திருப்பவர்கள் இவர்கள். இவர்களுடைய போட்டியை இந்தியக் கம்பெனிகளால் எதிர்கொள்ள முடியாது. பவண்டோ. காலி மார்க் சோடா. பெப்சி, கோக கோலா. தங்கக் கம்பி என்று எடுத்துக் கண்ணைக் குத்திக் கொள்ளாதீர்கள்.

3. அரசால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஊழல், லஞ்சம் எல்லாம் இவர்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. என்ரான். வரி கட்டமாட்டார்கள். வோடஃபோன். கொலை செய்துவிட்டு ஊரை விட்டே ஓடிவிடுவார்கள். போபால் விஷவாயு.

***

கிழக்கிந்தியக் கம்பெனி என்பது நம்முடைய உளவியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. பிசினஸ் செய்ய என்று வந்துவிட்டு நாட்டைப் பிடித்துக்கொள்வான்; அப்புறம் காலனியம்தான். நாமெல்லாம் அடிமைகள் ஆகிவிடுவோம்.

இந்தக் கருத்தை முற்றிலுமாக அலசி ஆராய்ந்து இதனைத் தாண்டிச் செல்லாவிட்டால் வேறு வழியே இல்லை. இதே குழிக்குள் இறுகச் சிக்கிக்கொள்வோம். கிழக்கிந்தியக் கம்பெனி என்பது அந்தக் காலகட்டத்தில் நடந்த ஒன்று. அதற்கான வாய்ப்புகள் இருந்தன. ராபர்ட் கிளைவ் போன்ற ஒரு முரடன் அந்த வாய்ப்பை எடுத்துக்கொண்டான். முகலாயர்கள் மிகப் பலவீனமான நிலையில் இருந்தனர். பல்வேறு குழுக்களாகச் சிதைந்திருந்த இந்திய அரசர்களுக்கு இடையில் ஒற்றுமை சாத்தியமானதாக இல்லை. ஆனால் இன்று இந்தியா ஒரு நவீன நாடு. ஒற்றுமையான நாடு. அதற்கென மிக வலுவான ராணுவம் இருக்கிறது. ‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ போன்ற ட்ராஷ் புத்தகங்களைப் படித்துக் கற்பனையைப் பெருக்கடித்துக்கொள்ளாதீர்கள்.

இன்றைய உலகமயமான சூழலில் லட்சுமி மிட்டலாலும் டாடாவாலும் ஐரோப்பாவின் பல நாடுகளில் உருக்குக் கம்பெனிகளை வாங்கமுடிகிறது. அந்த நாடுகளிலும் இதுபோன்ற செயலுக்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் இந்திய காலனிய உளவியல் பிரச்னை அவர்களிடம் இல்லாத காரணத்தால் அவர்கள் அதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இந்த இந்தியர்கள் நம் நாட்டின் பெருமைமிகு நிறுவனங்களை எடுத்துக்கொண்டு, வேலைகளைக் குறைத்து, நாளை ஒரு பிரச்னை என்றால் நிறுவனத்தையே இழுத்து மூடிவிடுவார்கள் - என்பதுதான் அவர்களுடைய கவலை.

இன்றைய பிரச்னை காலனியம் சார்ந்ததில்லை. அந்நியர் கையில் எம்மாதிரியான நிறுவனங்கள் இருக்கலாம் என்பது. ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான தொழில்கள்மீது யார் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்பது பற்றியது. இதுவும் ஒவ்வொரு தேசத்தின் உளவியல் சார்ந்தது. பெரும்பாலான மேலை நாடுகள் எண்ணெய் வளங்களை முக்கியம் என்று நினைக்கின்றன. அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்களை சீனா வாங்க வருகிறது என்றால் முட்டுக்கட்டை போட்டுவிடுவார்கள். அமெரிக்கா, தன் நாட்டின் தொலைக்காட்சி நிலையங்கள்மீதும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால்தான் ஆஸ்திரேலியரான ரூப்பர்ட் மர்டாக் அமெரிக்கக் குடியுரிமை வாங்கிக்கொண்டார். இல்லாவிட்டால் அவரால் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிறுவனங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால், இந்தியாவில் எந்தத் துறையிலுமே அந்நிய முதலீட்டுக்குப் பெரும் எதிர்ப்பு உள்ளது. அந்நிய முதலீட்டின்மீது கடுமையான சந்தேகம். அந்நியர்கள்மீதே கடுமையான சந்தேகம். ஒன்றிரண்டு நிறுவனங்கள் செய்யும் தவறுகளுக்காக நாம் அந்தத் துறைமீதே சந்தேகம் கொள்வதற்கு ஒப்பானது இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் பழங்காலம் முதலே உலகின் பல பாகங்களுக்கும் இந்தியர்கள் வர்த்தகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். யவனர்களும் அரபிகளும் இந்தியா வந்து பெரும் வர்த்தகம் செய்துள்ளனர். சிந்து-சரசுவதி நாகரிக காலத்தில் பெருமளவு வர்த்தக்த் தொடர்புகள் உலகெங்கும் பரவியிருந்துள்ளது. ஆனால் காலனிய காலத்தின் மோசமான சூழல் மட்டும்தான் இன்று நம் மனத்தின் அடியில் தங்கியுள்ளது.

இது இப்படியிருக்க உண்மை என்ன என்று பார்ப்போம்.

இன்றைய நவீன உலகுக்குத் தேவையான எந்தப் பொருளையும் அந்நியர்கள் உதவியின்றி நம்மால் தயாரிக்க முடியாது. ஊசி, நூல் முதற்கொண்டு கார் வரை. இந்தியாவின் ஒவ்வொரு தொழிற்சாலையும் உபகரணமும் அந்நிய நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களே. அவற்றை அந்தந்த நாடுகள் தந்திருக்காவிட்டால் நாம் நவீன காலத்துக்கு வந்திருக்கவே மாட்டோம். சுதந்தர இந்தியா இன்றுவரையில் சொல்லிக்கொள்ளத்தக்க எந்தத் தொழிற்சாலை நுட்பத்தையும் உருவாக்கியதில்லை. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச சாதனை, வெளிநாட்டு இயந்திரங்களை உள்நாட்டில் நகலெடுத்து உற்பத்தி செய்வதுதான். இதனைக் கேவலமாகப் பார்க்கவேண்டியதில்லை. ஆனால் இதுதான் யதார்த்தம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்நிய நாட்டில் தொழில்நுட்பம் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் அந்நியனைக் கரித்துக்கொட்டுவதில் நமக்கு நிகர் இந்த உலகில் வேறு யாருமே இல்லை.

இன்று இந்தியர்கள் கை நீட்டித் தொடும் எந்தப் பொருளிலும் ஒரு சிறு துளியாவது அந்நிய நாட்டின் உதவி இல்லாமல், உள்ளீடு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது.

சரி, அந்நியத் தொழில்நுட்பம் வேண்டும், ஆனால் அந்நிய முதலீடு வேண்டாம் என்கிறீர்களா, அது ஏன் என்று பார்ப்போம். முதலில் கிழக்கிந்தியக் கம்பெனி மாதிரி இல்லை இன்றைய பன்னாட்டுக் கம்பெனிகள். அவற்றின் மிகப் பெரும்பான்மை ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள்தாம். தலைவர்களும் இந்தியர்கள்தாம். மேலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பிற நாட்டு நிறுவனங்களில் முக்கியப் பங்கு வகிப்பதும் பல இந்தியர்கள்தாம். இந்தியர்கள் கண்ணாடிக் கூரையை உடைக்க முடியாது என்றிருந்த முந்தைய நிலைமை இன்று மாறியுள்ளது.

அந்நிய முதல் ஏன் தேவை? இந்தியா மிக அதிகமாகச் சேமிக்கும் நாடு என்றாலும்கூட அந்தச் சேமிப்பை ரிஸ்க் உள்ள தொழில்களில் முதலீடு செய்வதில்லை. அந்தப் பாரம்பரியம் இந்தியாவுக்குக் கிடையாது. மிகச் சில தொழிற்குடும்பங்கள் தவிர பெருந்தொழில்களில் பெருமளவு நிதியை முதலீடு செய்யக்கூடிய வழி இருந்தாலும் மனது இல்லாமல்தான் இந்தியர்கள் இருக்கின்றனர். பணம் உள்ளவர்கள் இப்படி. பணம் இல்லாதவர்களை எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் வென்ச்சர் முதலீடு என்பது அரிச்சுவடியைத் தாண்டியே போகவில்லை. கரூரில் அல்லது கன்னியாகுமரியில் இருக்கும் இரு நண்பர்கள் அற்புதமான ஒரு ஐடியாவை யோசிக்கிறார்கள். மிக நுட்பமான வேதியியல் பரிசோதனையின் விளைவாக அவர்கள் புதிய வேதிப்பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். அதனைக் கொண்டு கடின நீரை மென் நீராக்க முடியும். உவர் நீரைக் குடி நீராக எளிதில் ஆக்கமுடியும். இந்தியா முழுதும் இதனைக் கொண்டு சென்று விற்று, பெரும் நிறுவனம் ஒன்றை உருவாக்கலாம். ஆனால் அவர்கள் டிவிஎஸ் குடும்பத்தில் அல்லது முருகப்பச் செட்டியார் குடும்பத்தில் பிறந்திருந்தால்தான் அவர்களுக்கு அது சாத்தியம். இல்லாவிட்டால் நாலு பத்திரிகையில் அவர்கள் பற்றிச் செய்தி வரும். அத்துடன் சரி.

பணமும் உண்டு, தொழில்நுட்பமும் உண்டு என்றால் மட்டும் போதாது. ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தவேண்டுவதற்கான சிஸ்டம், ப்ராசெஸ் என்று எதுவுமே நம் நாட்டில் போதாது. புரஃபஷனல் தலைமை நிர்வாகிகள் நம்மூரில் எளிதில் கிடைக்க மாட்டார்கள். ஒரு சில தீவுகளைத் தவிர, இந்தியா என்பது பெரும்பாலும் ஒரு மீடியாக்கர் நாடு. அந்நியத் தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் தொழிற்சாலைகளை நிறுவி, அதில் நம் மக்கள் வேலைக்கு சேர்வதன்மூலமே நம் திறனை நாம் வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு நல்ல இந்திய நிறுவனத்திலும் ஒரு நல்ல அந்நிய நிறுவனத்திலும் வேலை செய்திருக்கும் உங்களில் பலரால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

நமக்கு அந்நியத் தொழில்நுட்பம் நிறைய வேண்டும். அந்நியப் பண முதலீடு வேண்டும். அத்துடன் அந்நிய நாடுகளில் வெற்றிகரமாகத் தொழில் நடத்தி பிசினஸ் நுட்பங்களைத் தெரிந்துள்ள நிறுவனங்களின் நேரடி ஈடுபாடும் தேவை. அதைத்தான் அந்நிய நேரடி முதலீடு கொண்டுவருகிறது. அது இன்ஷூரன்ஸிலும் தேவை. சில்லறை வணிகத்திலும் தேவை. பலவிதக் கட்டுமானத்திலும் தேவை. கல்வியிலும் தேவை. இவையெல்லாம் இல்லாமலேயே இந்தியா வளரமுடியாதா என்றால், நிச்சயம் வளரலாம். ஆனால் நிறைய ஆண்டுகள் ஆகும். ஆனால் என்ன, குறைந்தா போய்விடுவோம் என்கிறீர்களா? ஆமாம், குறைந்துதான் போய்விடுவோம். 1950-லிருந்து 1990 வரை நாற்பது ஆண்டுகள் குறைந்துதான் போயிருந்தோம். இனியும் இந்தக் குறை இருக்கக்கூடாது.

(தொடரும்)

Thursday, October 18, 2012

பருவமழையில் சென்னை

சொன்னமாதிரியே 18 அக்டோபர் 2012 அன்று வடகிழக்குப் பருவமழை ஆரம்பம். அதற்கு இரண்டு மூன்று நாள் முன்னதாகவே கொஞ்சம் மழை பெய்தது என்றாலும் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கடும் மழை. கிண்டி பக்கம் தேவலாம். ஆனால் மைலாப்பூர் பகுதியில் பல தெருக்களில் ஒரே வெள்ளம். கார்கள், ஆட்டோக்கள் மிதக்கின்றன. இருசக்கர வாகனங்கள் பாடு திண்டாட்டம். இதில் தெருக்களில் பல இடங்களில் குழிகள் இருப்பதே தெரியவில்லை. தெருவோரம் வேறு சாக்கடைக்காகத் தோண்டி வைத்திருக்கிறார்கள். அதில் யாரெல்லாம் விழுந்து அடிபடப் போகிறார்களோ. படுமோசமான சிவிக் கட்டுமானம். இன்னும் ஒரு மாதத்தைத் தள்ளவேண்டும்.



Wednesday, October 17, 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - சுப்ரமணியன் சுவாமி

2ஜி விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து, திமுகவைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களான ஆ.இராசா, தயாநிதி மாறன் ஆகியோருடைய பதவிகளைக் காவு வாங்கியது. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ. இராசா ஆகியோரைச் சிறையில் தள்ளியது. கலைஞர் டிவி மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் ஓயவில்லை. அவர்களுக்கு எப்படி 200 கோடி ரூபாய் ஷாஹித் பால்வா மூலமாக வந்தது என்பதுதான் கனிமொழி மீதான வழக்கு. அந்தப் பணம் கடனாகப் பெறப்பட்டது, வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டது என்பது கலைஞர் தொலைக்காட்சி வாதம். அந்தப் பணம் எப்படித் திரும்பக் கட்டப்பட்டது, பணத்தின் ஊற்று என்ன என்பதில் மேலும் சில குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.

2ஜி வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இப்போது நடந்துவருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைக் கண்காணித்துவருகிறது.

இந்த வழக்கு இவ்வளவு தூரம் சென்றிருப்பதற்கு சுப்ரமணியன் சுவாமி ஒரு முக்கியக் காரணம். (பிரஷாந்த் பூஷன் இன்னொருவர்.)

சுப்ரமணியன் சுவாமி 2G Spectrum Scam (Har Anand publication, Delhi) என்ற தன் புத்தகத்தில் இந்த வழக்கின் ஆரம்பக் கட்டத்திலிருந்து தொடங்கி, பல்வேறு ஆவணங்களின் துணையுடன் தன் தரப்பை எடுத்துவைக்கிறார். சென்ற ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை இப்போது கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

இணையத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க

போன்மூலம் இந்தப் புத்தகத்தை வாங்க 094459-01234 என்ற எண்ணை அழையுங்கள்.

Tuesday, October 16, 2012

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (2)

முதல் பகுதி

சுதந்தர வர்த்தகம் நடக்காதிருக்க, அரசு பல வழிகளில் கட்டுப்பாடுகளை, தடைகளை விதிக்கிறது என்பதைப் பார்த்தோம்.

இந்தக் கட்டுப்பாடுகள் இருப்பதால் யார் பலன் பெறுகிறார்கள், யார் நஷ்டம் அடைகிறார்கள்? இந்தக் கட்டுப்பாடுகள் எப்போதும் இருக்கவேண்டுமா? அல்லது அவற்றை அவ்வப்போது நீக்கிவிட்டு, தேவை ஏற்பட்டால் மீண்டும் கொண்டுவரலாமா?

ஓரிரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

சென்ற பதிவில் பாம் ஆயில் பற்றிச் சொல்லியிருந்தேன். இந்தியாவின் எண்ணெய்த் தேவை ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் டன். இதில் 8 மில்லியன் டன்னை (50%-ஐ விட அதிகம்) நாம் மலேசியா, இந்தோனேசியா, பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அப்படி இருக்கும்போதும் நாம் இந்த இறக்குமதிமீது வரி விதிக்கிறோம். இந்த வரி, அரசின் வருமானத்தைப் பெருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக.

உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியாளர்களின் செயல்திறமின்மைக்காக இந்திய நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள். அரசு சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை நீக்கினால் ஒரு கிலோ எண்ணெயின் விலை சுமார் 40 ரூபாய் குறையும் என்பது என் கணக்கு. இப்போது வெவ்வேறு பிராண்ட் எண்ணெய்களின் விலையைப் பார்த்தால் லிட்டருக்கு சுமார் 80 முதல் 120 ரூபாய் வரை இருக்கிறது. இது 50-80 ரூபாய் என்றுதான் இருக்கவேண்டும்.

குறைந்த விலை என்பது நல்லதுதானே? பிறகு ஏன் இந்த இறக்குமதி வரி? ஏன் நுகர்வோரைப் பற்றிக் கவலைப்படாமல், உள்நாட்டு உற்பத்தியாளரைக் காப்பாற்றவேண்டிய அவசியம்? இதற்கு இரண்டு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒன்று: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி என்றால் அதற்கான பணம் அமெரிக்க டாலரில் இருக்கும். இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தால், நாளை இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாகக் குறைந்தால், நாம் அதிக அளவு அந்நியச் செலாவணியைச் செலவழிக்கவேண்டி வரும். (பெட்ரோல் கச்சா எண்ணெயுடன் ஒப்பிடுங்கள்.)

மற்றொன்று: இறக்குமதி வரி விதிக்கப்படவில்லை என்றால், இந்திய உற்பத்தியாளர்களால் தாக்குப்பிடிக்க முடியாது. விரைவில் அவர்கள் தொழிலை விட்டே போய்விடுவார்கள். அப்போது ஒட்டுமொத்த உற்பத்திக்கும் நாம் அந்நிய நாடுகளை மட்டுமே நம்பவேண்டியிருக்கும். அப்போது அவர்கள் விலையை ஏற்றத்தொடங்கினால் நாம் காலி! (இந்த விவாதத்தைக் கவனத்தில் வைத்திருங்கள். இதைத்தான் நாம் திரும்பத் திரும்பச் சந்திக்கப்போகிறோம்.)

இந்த இரண்டுமே பலவீனமான ஒரு நாடு யோசிக்கவேண்டிய விஷயங்கள். உலகமயமாதலில் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது மிகவும் பின்தங்கியுள்ள நாடுகள் - ஒரு கானாவோ ஒரு மலாவியோ - சிந்திக்கவேண்டிய விஷயங்கள். இந்தியா இப்படி யோசிக்கவேண்டுமா?

இந்திய விவசாயம் உற்பத்தியில் பின்தங்கியுள்ளது. நாட்டுக்குத் தேவையான எண்ணெய் வித்துக்களையும் பருப்பு வகைகளையும் நாம் வேண்டிய அளவு உற்பத்தி செய்வதில்லை. எண்ணெயும் பருப்பும் குறைந்தவிலையில் கிடைக்காததுமே மக்களுக்குச் சத்துணவு கிடைக்காமைக்கு ஒரு காரணம். அரிசியும் கோதுமையும்தான் குறைந்தவிலையில் ரேஷன் கடையில் கிடைக்கும். மீதமெல்லாம் தெருக்கோடி அண்ணாச்சி கடையில் காசு கொடுத்தால்தான் கிடைக்கும். உலகின் பல நாடுகளில் அவர்களுடைய மக்கள் தொகையின் தேவைக்கு மேலாகப் பருப்பும் எண்ணெய் வித்துக்களும் பயிராகின்றன. அவற்றை எவ்வளவு குறைந்த விலைக்குக் கிடைக்குமோ அந்த விலைக்கு வாங்குமாறு செய்வதுதானே நம் அரசின் கடமை? அதைவிடுத்து செயற்கையான தடைகளை நாமே நம் மக்கள்மீது சுமத்தியிருக்கிறோம்.

இது இந்தியாவின் சோஷலிசப் பின்னணியால் வரும் ஆபத்து. வெளிநாட்டில் பொருள்கள் வாங்குவதாலேயே நாம் நம்முடைய பொருளாதாரத்தைப் பாதிக்கப்போவதில்லை. தேவைகளை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அதே நேரம், பிற நாடுகளின் எந்தத் தேவையை நம் நாட்டிலிருந்தபடி பூர்த்தி செய்யவேண்டும் என்பதைச் சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம்.

***

இதேபோல இன்னொரு பிரச்னைதான், உலகச் சந்தைக்கு இந்தியா ஏற்றுமதி செய்யாதது. ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மிளகு போன்ற மசாலாப் பொருள்களை உலகுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இவை நாட்டில் அதிகமாக விளைகின்றன. இந்தியத் தேவைக்கு அதிகமாகவே.

ஆனால் பருத்தியை எடுத்துக்கொண்டால், நமக்குமே பற்றாக்குறைதான். அப்படியானால் விளைந்த பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாதா? ஒரு நாடு தன் தேவையை முழுவதுமாகப் பூர்த்தி செய்தபின்னர் உள்ள மிச்சத்தைத்தான் ஏற்றுமதி செய்யவேண்டுமா?

தனி நபர் லாபம் சம்பாதிக்கும் உரிமை, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான பொருள்கள் கிடைப்பதற்கான பொது நலம், ஓர் அரசு தன் நாட்டை, பிரச்னைகள் ஏதும் இன்றி வழிநடத்திச் செல்வதற்கான கடமை ஆகிய மூன்றையும் ஏறிட்டுப் பார்த்துதான் சில முடிவுகளை எடுக்கவேண்டும்.

தனி நபர் உரிமைகள்தான் முக்கியம் என்பதை முன்வைத்தால் ஒரு விவசாயி தன் விளைபொருள்களை உலகச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். ஓர் அரசு தன்னிடம் வேண்டிய அளவு உணவு தானியக் கையிருப்பு இருக்கவேண்டும் என்று முடிவு செய்தால் அந்தப் பொருள்களை அவற்றுக்கான நியாயமான விலை கொடுத்து இந்தியாவிலும் அதன்பின் வெளிநாடுகளிலும் வாங்கிக் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டுமே இந்தியாவில் நடைபெறுவதில்லை. இந்திய அரசு விவசாயிகள்மீது அழுத்தம் கொடுத்து, குறைந்த விலையில் பொருள்களை வாங்கி வைத்துக்கொள்கிறது. அவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளத் தேவையான பண்டகசாலைகளைக்கூட சரியாக அமைப்பதில்லை. நம் கண் முன்னேயே பல லட்சம் டன் தானியங்கள் வீணாகிக்கொண்டிருக்கின்றன.

விளைபொருள்களைத் தனியாருக்கு எந்தத் தடையுமின்றி விற்கலாம் என்ற நிலை வந்தால், உரிய விலையை சந்தை தீர்மானிக்கும். உலகின் வளர்ந்த நாடுகளின் விவசாயிகளைப் போல இந்திய விவசாயியும் வளமான வாழ்க்கையை நோக்கிப் போக இதுதான் ஆரம்பப் புள்ளி. இப்போது இந்திய விவசாயி ஒரு கொத்தடிமை போலத்தான் வாழ்கிறார்.

உடனேயே இடைத்தரகர்கள் பற்றிப் பேச்சு வரும். விவசாயிக்கு ஒன்றும் கிடைக்காது; எல்லாம் இடைத்தரகர்களுக்குத்தான் போய்ச் சேரும் என்பார்கள்.

எல்லாத் தொழில்களிலுமே இடைத்தரகர்கள் முக்கியமானதொரு வேலையைச் செய்துவருகிறார்கள். அவர்கள்தான் கல்யாணத் தரகர்கள். அவர்கள்தான் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒரு மேடைக்குக் கொண்டுவருகிறார்கள். இவ்விரண்டு தரப்பில் ஒரு பக்கம் இருப்பவர் ஏமாளி என்றால் தரகர்கள் கட்டாயம் அவர்களை ஏமாற்றத் தயங்கமாட்டார்கள். இது மனித குணம். எனவே ஏமாறாமல் இருப்பதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்குக் கல்வி அவசியம் என்றால் அதைக் கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். உலக கமாடிட்டி சந்தைகளில் ஓடும் விலைகளைப் பார்க்கவேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக லாபம் சம்பாதிப்பார்கள். இது தெரியாதவர்கள் தடுமாறுவார்கள். ஓர் அரசு, தடுமாறுபவர்களுக்கு உதவி செய்யவேண்டும். முன்னேறுபவர்களைத் தடுக்கக்கூடாது.

இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்காமல் இருக்க, நமக்கு ஆப்ஷன்ஸ் அதிகம் வேண்டும். அந்த வாய்ப்பை முற்றிலும் தனியார்மயமாக்கப்பட்ட சந்தை மட்டும்தான் கொடுக்க முடியும்.

இங்கு அரசுக்கும் இடம் உண்டு. அதுதான் முக்கியமான பொருள்களுக்கான strategic reserve. பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் ஒவ்வொன்றையும் அரசு கணக்கில் எடுத்து அதற்கான ஒரு குறிப்பிட்ட கையிருப்பைக் கையில் வைத்திருக்கவேண்டும். அந்தப் பொருள் சந்தையில் மிகக் குறைவாக வந்து, அதனால் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்தால் அரசு தலையிட்டு தன் ரிசர்விலிருந்து பொருள்களைச் சந்தைக்கு விடுவித்து விலையைக் குறைக்கலாம். அதேபோல உற்பத்தி மிக அதிகமாக ஆகிவிட்டால், விலை வீழ்ச்சியடைந்து விவசாயி நஷ்டப்படாமல் இருக்க, அதிக உற்பத்திப் பொருள்களை அரசு வாங்கிச் சேமித்துக்கொள்ளலாம். இது அர்த்தசாஸ்திரத்திலேயே விரிவாகச் சொல்லப்பட்ட ஒன்று. அமெரிக்க அரசின் கச்சா எண்ணெய் ரிசர்வ் இப்படிப்பட்ட ஒன்றுதான். இந்திய அரசு கட்டாயமாக கச்சா எண்ணெய், உணவு தானியம் இரண்டிலும் ரிசர்வ் வைத்திருக்கவேண்டியது அவசியம்.

***

கொள்கை முடிவுகளை எடுக்கும்போது அரசு முதலில் கவனத்தில் வைத்திருக்கவேண்டியது நுகர்வோரை மட்டுமே. நுகர்வோருக்கு நியாயமான, மலிவான விலையில், தரமான பொருள்கள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ரூல் நம்பர் ஒன். ஏனெனில் இது நாட்டின் அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடிய ஒரு செயல்.

அடுத்து, இந்தியாவின் ஸ்பெஷல் நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் இரண்டாவதாக வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் subsistence நிலையில் இருப்பவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளைப் பாதிக்காத செயல்கள் அல்லது விவசாயிக்கு அதிக வருமானம் கிடைக்கும் செயல்கள், கொள்கை முடிவுகள் எவை என்பதை அரசு எடுக்கவேண்டும். நுகர்வோருக்கும் விவசாயிக்கும் ஒரு பிரச்னை என்றால், பெரும்பாலும் நுகர்வோர் பக்கம்தான் அரசு சாயவேண்டும். ஆனால் விவசாயிக்கு அநீதி ஏற்பட்டுவிடக் கூடாது.

மூன்றாவதாக சிறு வியாபாரிகள். ஒரு சிறு வியாபாரி பணம் முதலிட்டு ஒரு பொருளை வாங்கி விற்கிறார். அதில் லாபம், நஷ்டம் என்பது சகஜம். அரசின் கொள்கை, முதலில் நுகர்வோருக்கு ஆதரவாகவும், அடுத்து விவசாயிக்கு ஆதரவாகவும், மூன்றாவதாக சிறு வியாபாரிக்கு ஆதரவாகவும் இருந்தால் போதும். வியாபாரி தான் செய்யும் வர்த்தகத்தில் நஷ்டப்படக்கூடும் என்றால் அதனை விட்டுவிட்டு வேறு பொருளை வர்த்தகம் செய்வதற்கு மாறிக்கொள்ளலாம்.

நான்காவதாகப் பெரு நிறுவனங்கள் பற்றிக் கவலைப்பட்டால் போதும். நுகர்வோர், விவசாயி, சிறு வியாபாரி ஆகியோரை அழித்துவிட்டு பெரு நிறுவனங்கள் வளர்வதை நாம் யாரும் விரும்பப் போவதில்லை. அது sustainable-உம் அல்ல.

கொஞ்சம் இருங்கள்... சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது அதைத்தானே செய்யப்போகிறது என்கிறீர்களா? அது உண்மைதானா என்பதைப் பார்த்துவிடுவோம்.

(தொடரும்)

Monday, October 15, 2012

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1)

ஊழலுக்கு அடுத்து இன்று பொதுத்தளத்தில் விரிவாகப் பேசப்படும் விஷயங்கள் இரண்டு: (1) அணு மின் நிலையங்கள் வேண்டுமா, வேண்டாமா. (2) சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாமா, வேண்டாமா.

அந்நிய நேரடி முதலீட்டைச் சற்றே அலசுவோம்.

இன்றைய சந்தைப் பொருளாதார முறையை எதிர்ப்பவர்கள் (இடதுசாரிகள்), கட்டாயமாக எல்லாவிதமான அந்நிய நேரடி முதலீட்டையும் எதிர்க்கிறார்கள். இது தத்துவார்த்த எதிர்ப்பு. அவர்களைப் பொருத்தமட்டில் சந்தைப் பொருளாதாரம் என்பதே மக்களுக்கு எதிரானது. எனவே எல்லா முதலாளிகளும் கெட்டவர்கள். தொழிலாளிகளை நசுக்குபவர்கள். மக்களைச் சுரண்டுபவர்கள். ஆனால் இரண்டு முதலாளிகளுக்கு இடையே என்று பார்த்தால், சிறு/குறு முதலாளியாவது பரவாயில்லை; பெருமுதலாளிதான் அதிகம் கெட்டவன். ஆனால் இந்தியப் பெருமுதலாளியையும்விடக் கெட்டவன் ஒருவன் இருக்கிறான். அவன் சர்வதேசப் பணமுதலை அல்லது பன்னாட்டு நிறுவனத்தான். இவன் நம் நாட்டையே கொள்ளையடித்துப் பணத்தை அள்ளிக்கொண்டு ஓடுவிடுவான்; ஊழல் மிகுந்தவன்; கிழக்கிந்தியக் கம்பெனியின் மறு அவதாரம்; என்ரான், யூனியன் கார்பைடு... போன்றவன்.

இப்படிப்பட்ட கொள்கை கொண்டோரிடம் விவாதம் செய்வது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர்கள் ஏற்கெனவே தங்கள் முடிவுகளை எடுத்துவிட்டனர்.

ஆனால் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் பலரும்கூட அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக எதிர்க்கிறார்கள். சிலரோ, சில துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஆதரித்தாலும் சில்லறை வணிகத்தில் மட்டும் கூடவே கூடாது என்கிறார்கள்.

இப்படி கருப்பு-வெள்ளை என்று இல்லாமல், இந்த விவாதத்தில் பல சாம்பல் நிறங்கள் பரவியுள்ளன.

சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்போருடனான விவாதமாகவே நான் என் கருத்துகளை இங்கு முன்வைக்கிறேன்.

***

சந்தைப் பொருளாதார முறை என்பது கட்டுப்பாடுகள் அற்ற ஒன்றாக எப்போதுமே இருந்ததில்லை. அமெரிக்காவில்கூட இதுதான் நிலை. பொதுவாக ஓர் அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவைத்திருக்கும். இந்தியாவில் நிலவும் சில கட்டுப்பாடுகளைப் பார்ப்போம்:

1. சில துறைகளில் சிறு, குறு அமைப்புகள் மட்டுமே ஈடுபடலாம்.


உற்பத்தித் துறை என்றால், குறுந்தொழில் (மைக்ரோ) என்றால் இயந்திரங்களில் முதலீடு ரூ. 25 லட்சத்துக்கு உள்ளாக இருக்கவேண்டும். சிறுதொழில் (ஸ்மால்) என்றால் இயந்திர முதலீடு ரூ. 25 லட்சத்துக்குமேல், ரூ. 5 கோடிக்குக்கீழ் இருக்கலாம்.

சேவைத் துறை என்றால் குறுந்தொழில் முதலீடு ரூ. 10 லட்சத்தைத் தாண்ட முடியாது. சிறுதொழில் என்றால் ரூ. 10 லட்சத்துக்குமேல், ரூ. 2 கோடிக்குக்கீழ் இருக்கவேண்டும்.

உதாரணமாக சில: ஊறுகாய், கடலை எண்ணெய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கண்ணாடி வளையல், எவர்சில்வர் அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றை மேற்படி நிறுவனங்கள் மட்டும்தான் செய்யமுடியும். நீங்களும் நானும் ரூ. 100 கோடி முதலீட்டில் இவற்றை உற்பத்தி செய்ய முன்வந்தால் நமக்கு அனுமதி கிடையாது.

2. சில பொருள்களை, உற்பத்தி செய்வோரிடமிருந்து யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியாது. 

உதாரணம்: விவசாய விளைபொருள்கள்.

ஒவ்வொரு மாநிலமும் Agricultural Produce Marketing Committee Act (விவசாய விளைபொருள் சட்டம்) என்ற ஒரு சட்டத்தைத் தன் கையில் வைத்துள்ளது. மத்திய அரசு இந்தச் சட்டத்தில் சில மாறுதல்களை கொண்டுவந்து, Model APMC Act என்ற ஒன்றை இயற்றியது. கடந்த சில வருடங்களில் 16 மாநிலங்கள் இதனைப் பின்பற்றித் தத்தம் சட்டங்களை ஓரளவுக்கு மாற்றிக்கொண்டுள்ளன. இருந்தாலும் அவை இந்தத் துறையில் கட்டுப்பாடுகளை முற்றிலுமாகத் தளர்த்திக்கொள்ளத் தயாராக இல்லை.

பொதுவாக, இந்தச் சட்டத்தின் அடிப்படை, விவசாய விளைபொருள்களை அரசு விரும்பினால் அரசு மட்டும்தான் வாங்கலாம் என்பதே. அடுத்ததாக, அரசு அனுமதி அளிக்கும் வியாபாரிகள் மட்டும்தான், அரசு அமைக்கும் சந்தையில் மட்டும்தான் மேற்படிப் பொருள்களை வாங்கலாம். அரசு தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கியபின்னரேயே தனியார் வர்த்தகர்களுக்கு இந்தப் பொருள்களை வாங்க அனுமதி தரும். உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பிற பணப்பயிர்கள், காய்கள், கனிகள் என்று அனைத்தையுமே இந்தச் சட்டங்கள் கட்டுப்படுத்தும். இதனால் சந்தை என்பது விலையை நிர்ணயிப்பதில்லை. அரசுதான் விலையை நிர்ணயிக்கிறது. பெரும்பாலான பொருள்களை அரசு கொள்முதல் செய்யும்போது அவர்களுக்கு விற்காமல் காத்திருந்து பிறகு தனியாரிடம் விற்று அதிக விலை பெறலாமா என்றால் அதற்கு உத்தரவாதம் இல்லை. அரசு வாங்கிச் சென்றபிறகு தனியார் வர்த்தகர்கள் யாருமே வாங்கத் தயாராக இல்லை என்றால் கோவிந்தாதான். எனவே பெரும்பாலான விவசாயிகள் அரசு கேட்கும் பொருள்களை அரசு சொல்லும் விலைக்கு விற்றுவிட்டு, பணம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். (அரசு கேட்கும் விலையில் நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்கிவிட்டுக் காத்திருக்கும் பதிப்பாளர்கள்போல.)

உங்களால் நேரடியாக முன்கூட்டியே விவசாயிகளிடம் கொள்முதல் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. ஒப்பந்த விவசாயத்தில் எளிதில் இறங்கமுடியாது. சந்தைக்குப் பொருள்கள் வந்து அங்கே கொள்முதல் செய்ய உங்களுக்கு உரிமம் இருந்தால்மட்டுமே உங்களால் அங்கே பொருள்களை வாங்க முடியும். இல்லாவிட்டால் வாங்கிய இடை நபரிடமிருந்து அவர் சொல்லும் விலைக்குத்தான் வாங்கிக்கொள்ள முடியும்.

3. சில துறைகளில் கார்பொரேட் நிறுவனங்கள் நுழைய அனுமதி இல்லை.

சில்லறை வணிகம் அப்படிப்பட்ட நிலையில்தான் சில ஆண்டுகளுக்குமுன்வரை இருந்தது. பின்னர் இதில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் விளைவாகத்தான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ், மோர் போன்ற நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் இறங்கின.

4. சில வகைப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடும் வரி விதிக்கப்படும்.


இந்தியப் பொருள்களுக்கான சந்தை அழிந்துபோய்விடாமல் இருக்க அந்நியப் பொருள்கள் மீதான வரி (tariff) அதிகரிக்கப்படும். உதாரணமாக பனை எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். ஆகஸ்ட் 1, 2012 தேதியிட்ட எகனாமிக் டைம்ஸ் இதழ் சொல்லும் செய்தி இது:
சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் உள்நாட்டுத் தொழில் துறையை அழியாது பாதுகாக்கவும் ஒரு டன் பனை எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 484 டாலர் என்பதிலிருந்து 1,053 டாலர் என்று இந்தியா உயர்த்தியுள்ளது.
அரசின் இந்த ஆணைமூலம் பனை எண்ணெய் விலை முன்னர் இருப்பதைவிட லிட்டருக்கு ரூ. 30 அதிகமாகியுள்ளது. இறக்குமதி வரியை ஒட்டுமொத்தமாக ஒழித்தால் இந்த விநாடியே பனை எண்ணெய் விலை லிட்டருக்கு 55 ரூபாய் குறையும்.

5. சில பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும்.

சில மாதங்களுக்குமுன் பருத்தி ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவித்தது மத்திய அரசு. பின் இரண்டே வாரங்களில் தன் கருத்தை மாற்றிக்கொண்டது. பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் லாபம். செய்யாவிட்டால் உள்ளூர் துணி ஆலைகளுக்கு லாபம். அவர்கள் குறைந்த விலையில் விவசாயிகளை நசுக்கித் தங்களுக்கு வேண்டிய பருத்தி இழைகளை வாங்கிக்கொள்ளலாம்.

6. உரிமங்கள், உற்பத்திக்கான கோட்டா ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு சில துறைகளை அரசு கட்டுப்படுத்தும்.

உரிமங்கள் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். 2ஜி ஸ்பெக்ட்ரம் குறைவாக இருப்பதால் ஒரு மாநிலத்தில் இத்தனை மொபைல் போன் நிறுவனங்கள்தாம், உரிமம் பெற்றுத் தொழிலை நடத்தலாம் என்று அரசு தீர்மானிக்கிறது.

அதேபோல முன்பெல்லாம், ஒரு துறையில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை மீட்டர் துணி உற்பத்தி செய்யலாம், எத்தனை டன் உருக்கு உற்பத்தி செய்யலாம் என்பதற்குக் கோட்டா பெறவேண்டியிருந்தது. பெற்ற கோட்டாவைவிட அதிகமாக நீங்கள் உற்பத்தி செய்யமுடியாது. நல்லவேளையாக அந்தச் சனியனிலிருந்து இன்று முற்றிலுமாக விடுதலை கிடைத்துவிட்டது.

உரிமங்கள் சில துறைகளில் இருக்கவேண்டியது அவசியம். இவை இரண்டு விதமானவை. ஒன்றில், அரசு மட்டுமே உற்பத்தியை, சேவையைச் செய்யலாம் (ராணுவத் தளவாடங்கள் முதலியன). இன்னொன்றில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டும்தான் இருக்கலாம் (தொலைத்தொடர்பு).

7. அந்நிய முதலீட்டை அரசு கட்டுப்படுத்தும்.

மேலே சொன்ன அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தாண்டி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை யார் வைத்திருக்கலாம் என்பதில் கட்டுப்பாடு. அதாவது யார் யார், எந்த எந்தத் துறைகளில், எந்த அளவுக்கு முதலீடு செய்யலாம், செய்யக்கூடாது என்பது பற்றியது. அதன்மூலமும் அரசு கட்டுப்படுத்துதலைச் செய்கிறது.

இந்திய நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், அந்நிய நேரடி நிறுவனங்கள் என்ற மூன்று வெவ்வேறு நபர்களை/அமைப்புகளை நாம் பார்க்கிறோம்.

அந்நிய நேரடி நிறுவனங்களுக்கும் அந்நிய நிதி நிறுவனங்களுக்குமான வித்தியாசம் என்ன? வால்மார்ட் இந்தியா வந்து சில்லறை வியாபாரம் செய்ய விரும்புவது அந்நிய நேரடி முதலீடு. ஒரு நிறுவனம் தனக்கு எந்தத் தொழிலில் அனுபவம் இருக்கிறதோ அதே தொழிலில் இந்தியாவில் முதலீடு செய்வது. மாறாக கலிஃபோர்னியா அரசுத் தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதி என்ற அமைப்பு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்குவது அந்நிய நிதி நிறுவன முதலீடு. இதில் அந்நிய நிறுவனத்தின் கட்டுப்பாடு இருக்காது. அதன் முதலீடு, வருமானத்தைப் பெருக்குவது என்பதற்காக மட்டுமே. நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுக்க முழுக்க இந்தியர்கள் கையில் இருக்கும்.

உதாரணமாக மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் என்ற நிலக்கரி வெட்டி எடுக்கும் கம்பெனியில் பிரிட்டனைச் சேர்ந்த தி சில்ரன்ஸ் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் (டி.சி.ஐ) என்ற நிதி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இது இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்மெண்ட் என்ற வகையைச் சாரும். அதே, பி.எச்.பி பில்லிடன் என்ற உலகிலேயே பெரிய கரி மற்றும் தாது நிறுவனம் கோல் இந்தியாவில் முதலீடு செய்ய வருகிறது என்றால் அது டிரெக்ட் இன்வெஸ்ட்மெண்ட்.

ஒரு துறையில் யார் முதலீடு செய்யமுடியும் என்பதைக் கட்டுப்படுத்துவதோடு, எத்தனை சதவிகிதம் பங்கு வைத்திருக்கலாம் என்பதையும் அரசு கட்டுப்படுத்துகிறது. சில துறைகளில் ஒரு நிறுவனத்தின் 100% பங்குகளையும் அந்நிய நிறுவனங்கள் தம் கையில் வைத்திருக்கலாம். சில துறைகளில் 74%, 51%, 49%, 26% என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருக்கும். அவ்வப்போது அரசு இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அந்நிய முதலீட்டின் சதவிகிதத்தை அதிகரிக்கும்.

(தொடரும்)

Monday, October 08, 2012

ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் இதுவரையில் அதிகம் புத்தகங்களை வெளியிடவில்லை. பெரும்பாலான நேரத்தை கல்வி சார்ந்த சில புத்தகங்களையும் பொதுத்தேர்வு சார்ந்த சில புத்தகங்களையும் வெளியிடுவதில் செலவிட்டோம். இனி மாதாமாதம் சில புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகும்.

சமீபத்தில் வெளியான கிழக்கு பதிப்பகப் புத்தகம்: ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா. 360 பக்கங்கள், ரூ. 200.

ஸ்ரீ வைஷ்ணவம் என்பது தென்னிந்தியாவில், முக்கியமாகத் தமிழ்நாட்டில், பின்பற்றப்பட்டுவரும் ஒரு வைணவ மரபு. இராமானுசரின் வேதாந்த தரிசனத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஐயங்கார்கள் எனப்படும் பிராமணப் பிரிவினர் மட்டுமின்றி பிற சாதியினரும் இந்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

வேணு சீனுவாசன் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இந்த மதத்தின் அடிப்படைகளை முழுமையாக விவரிக்க எடுக்கப்பட்டிருக்கும் மிக நல்ல முயற்சி.

இந்தப் புத்தகத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. பகுதி ஒன்று வைணவ வழிபாட்டு முறையை விளக்குகிறது. பகுதி இரண்டு, இராமானுசரின் விசிஷ்டாத்வைத அடிப்படையை விளக்குகிறது. பகுதி மூன்று பன்னிரு ஆழ்வார்களைப் பற்றியது. பகுதி நான்கு, விசிஷ்டாத்வைத ஆச்சாரியர்களையும்  மடங்களையும் பற்றியது.

இதன் விற்பனை குறுகிய காலத்திலேயே மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

டயல் ஃபார் புக்ஸ் வழியாக வாங்க அழையுங்கள்: 94459-01234, 94459-79797

கேளாய் திரௌபதி(தை)(தாய்)!

சென்ற ஆண்டு (2011) செப்டெம்பர் மாதம் தென்னிந்தியத் திரைப்படச் சங்க அரங்கில் சஷிகாந்தின் ‘கேளாய் திரௌபதாய்!’ என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். அப்போதே அதைப்பற்றி விவரமாக எழுதியிருந்தேன். இதனை முதலில் படித்துவிடுங்கள்.

இந்தப் படத்தை அக்டோபர் 6, 2012 அன்று தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை மாதாமாதம் நிகழ்த்தும் கூட்டத்தில் திரையிட்டோம். சென்ற வடிவத்திலிருந்து ஏழெட்டு நிமிடங்கள் வெட்டியுள்ளார் என்று தெரிந்தது. கொஞ்சம் வேகம் அதிகரித்துள்ளது. சிவ-அர்ஜுன சண்டையின்போதான சில profanities நீக்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.

கல்யாணராமன் படத்துக்கான முன்னுரையை வழங்குகிறார்.
இரண்டாவது முறையாகப் பார்க்கும்போதும் gripping என்றே சொல்வேன். இன்னும் பலமுறை பார்த்தாலும் சலிக்காது. ஓர் ஆவணப்படம் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை.

படத்தின் இயக்குனர் சஷிகாந்த்
எச்சூரில் நடக்கும் மகாபாரதக் கூத்துதான் ஆவணப்படத்தின் கரு. இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களை எடிட் செய்வதில் இறங்கியிருக்கிறார் சஷிகாந்த். இரண்டாவது, ‘நினைவின் நகரம்’. இதன் முதல் கட் எடிட் வடிவத்தை ஏற்கெனவே தமிழ் பாரம்பரிய நிகழ்வு ஒன்றில் திரையிட்டிருந்தோம். மூன்றாவது பகுதி, மகாபாரதக் கூத்தின் அழகியல் பற்றியது.

ஆவணப்படத்தில் முத்துக்குமாரசாமி சில விளக்கங்களைத் தருகிறார்.
படத்தின் இறுதியில் பேசிய சஷிகாந்த், உண்மையில் தான் இதன் இயக்குனர் அல்லன், அந்த கிராமத்து மக்கள்தான் படத்தை இயக்கினார்கள் என்றார். முதல் இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர்கள்தான் எங்கு கேமராவை வைத்தால் எந்தக் காட்சி நன்றாக வரும், எது எங்கு நடக்கிறது என்று படப்பதிவுக்கு வழி காட்டத் தொடங்கினராம்.

காந்தி மையத்தின் இயக்குநர் அண்ணாமலை நிகழ்ச்சியின் இறுதியில் தன் கருத்துகளை முன்வைக்கிறார்.
சனிக்கிழமை திரையிடலின்போதும் பெரும் கூட்டம் ஒன்றும் இல்லை. என் பதிவிலும், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடைய பதிவுகளிலும் இதுபற்றிய தகவல் இருந்தது. சஷிகாந்த் இந்தப் படத்தின் டிவிடியை அரங்கில் விற்பனை செய்தார். சிலர் வாங்கிக்கொண்டனர். அவரிடமிருந்து இதனை வாங்கிக்கொள்வது எப்படி என்று தகவல் கேட்டு எழுதுகிறேன்.

Saturday, October 06, 2012

நல்லி திசை எட்டும் 2012 மொழியாக்க விருதுகள் விழா

நாளை 7 அக்டோபர் 2012 மாலை 6.00 மணி தொடங்கி, நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் விழா சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெறுகிறது.

விருதுகள்:

வாழ்நாள் சாதனையாளர் விருது:

(1) கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி (தமிழிலிருந்து வங்காளத்துக்கும் வங்காளத்திலிருந்து தமிழுக்கும்)
(2) பேராசிரியர் (மறைந்த) ஆர். ராஜரத்தினம் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும்)

நூல்களுக்கான விருது பெறுவோர்:

(1) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு: Kurunthokai, ஆங்கிலமாக்கம்: அ. தட்சணாமுர்த்தி
(2) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (புனைவு): சோஃபியின் உலகம், தமிழாக்கம்: ஆர்.சிவகுமார்
(3) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (புனைவு): பாகிஸ்தான் போகும் ரயில், தமிழாக்கம்: ராமன் ராஜா
(4) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (அ-புனைவு): யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பாகம் ஒன்று | இரண்டு | மூன்று), தமிழாக்கம்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
(5) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (அ-புனைவு): காஷ்மீர்: முதல் யுத்தம், தமிழாக்கம்: பி.ஆர்.மகாதேவன்
(6) கன்னடத்திலிருந்து தமிழுக்கு: சர்வக்ஞர் வெண்பா, தமிழாக்கம்: தா.கிருட்டிணமூர்த்தி
(7) வங்காளத்திலிருந்து தமிழுக்கு: திஸ்தா நதிக்கரையின் கதை, தமிழாக்கம்: பி.பானுமதி
(8) அஸ்ஸாமியிலிருந்து தமிழுக்கு: தென் காமரூபத்தின் கதை, தமிழாக்கம்: அ.மாரியப்பன்
(9) தமிழிலிருந்து இந்திக்கு: பரம வாணி, இந்தியாக்கம்: பி.கே.பாலசுப்ரமணியன்
(10) மலையாளத்திலிருந்து தமிழுக்கு: உண்மையும் பொய்யும், தமிழாக்கம்: குளச்சல் மு. யூசுப்
(11) மலையாளத்திலிருந்து தமிழுக்கு: ஒற்றைக்கதவு, தமிழாக்கம்: கே.வி.ஜெயஸ்ரீ
(12) தமிழிலிருந்து மலையாளத்துக்கு: மணியபேர, மலையாளமாக்கம்: ஸ்டான்லி

மேலே உள்ள 12 நூல்களில் இரண்டு கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியானது: பாகிஸ்தான் போகும் ரயில் மற்றும் காஷ்மீர் முதல் யுத்தம்.

ஊடகம் பற்றி, பார்வையற்றோருக்கான ஒரு நாள் பயிலரங்கு

இன்று காலை 9.00 மணி முதல் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் பார்வையற்றோருக்கான ஒரு நாள் பயிலரங்கு ஒன்று நடைபெறுகிறது.  ரோட்ராக்ட் திருஷ்டி மற்றும் சென்னை கோரமண்டல் ரோட்டரி குழு இணைந்து நடத்தும் நிகழ்ச்சி இது. ‘நவீனத் தமிழ் ஊடகங்களில் பார்வையற்றோரின் பங்கேற்பு’ என்பது இதன் தலைப்பு.

காலை 9.00 மணி முதல் 9.30 வரையிலான தொடக்கவிழாவில் ச.சக்திவேல் (ஆசிரியர், பரிவு) தலைமையுரை ஆற்றுகிறார். மாலன் (ஆசிரியர், புதிய தலைமுறை) சிறப்புரை. கரிமல சுப்ரமணியம் (உதவி முதன்மை ஆசிரியர், தி ஹிந்து) வாழ்த்துரை.

9.30 முதல் 11.00 வரை மனுஷ்யபுத்திரன் (ஆசிரியர், உயிர்மை) ‘செய்தி: சேகரிப்பும் பதிவும்’ என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கிறார்.

11.15 முதல் 12.00 வரை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘ஊடகமும் அறமும்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

12.00 முதல் 12.45 வரை பழ. அதியமான் (ஆய்வாளர் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர், அகில இந்திய வானொலி நிலையம்) ‘ஒலி ஒளி ஊடகம்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.

1.30 முதல் 3.00 வரை பத்ரி சேஷாத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்), ‘செய்தி: தேர்வும் எடிட்டிங்கும்’ என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கிறார்.

3.15 முதல் 4.00 வரை நிறைவு விழா. அதில் அறிஞர் ஔவை. நடராசன் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றுகிறார். பாண்டிராஜ், திரைப்பட இயக்குனர் சிறப்புரை ஆற்றுகிறார்.

மயிலாப்பூர் பக்கமாக யாராவது சென்றுகொண்டிருந்தால் இந்த நிகழ்ச்சியில் தலை காட்டிப் பாருங்கள்.

Friday, September 28, 2012

பாய்ஸ் டவுன்

சில்ட்ரன்ஸ் டவுனில் சில குழந்தைகள்
இரு நாள்களுக்குமுன் மதுரை சென்றிருந்தபோது பேராசிரியர் ரெங்கசாமியுடன் பாய்ஸ் டவுன் என்ற நிறுவனத்துக்குச் சென்றோம். பாய்ஸ்டவுன் என்பது ஆதரவற்றோர் இல்லம். ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்க்கும் இடம். ஆதரவற்ற என்றால் பல நேரங்கள் தாய், தந்தை இருந்தும் வறுமை காரணமாகப் பிள்ளைகளை வளர்க்க முடியாத நிலை இருந்தால், அப்படிப்பட்ட பிள்ளைகளையும் எடுத்து வளர்க்கிறார்கள். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், அவர்கள் படித்து ஏதோ ஒருவிதத்தில் வாழ்க்கைக்கான பொருளை ஈட்டும் காலம் வரை ஆதரவளிக்கிறார்கள்.

இதைப்போன்ற அமைப்புகள் பல நாடு முழுதும் இருக்கலாம். ஆனால் பாய்ஸ் டவுனை ஏற்படுத்தியவரின் கதை சுவாரசியமாக இருந்தது. ஜோ ஹோமன் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் உருவாக்கிய அமைப்பு இது. பிரிட்டிஷ்காரரான இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து, உலகெங்கும் உள்ள பிற மத மக்களிடையே சுவிசேஷத்தை எடுத்துச் செல்லவும் அவர்களை மதம் மாற்றவும் அனுப்பப்பட்டார். பிரிட்டன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஆசிரியராக இருந்தபின், இந்தியாவில் மதுரையில் கல்வி கற்றுத்தரவும் மதம் மாற்றவும் அனுப்பப்பட்டார்.

இவர் 1960-களில் இந்தியா வந்தபோது மதம் மாற்றுவதைவிட மக்களின் ஏழைமையைப் போக்குவதே முக்கியம் என்று புரிந்துகொண்டார். தன் சக பாதிரியார்களின் மதமாற்ற அணுகுமுறையை எதிர்க்கலானார். இதனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து இவரை மீண்டும் பிரிட்டனிலிருந்து அழைத்துக்கொள்ளுமாறு செய்துவிட்டனர். பிரிட்டனில் சில மாதங்கள் பணியாற்றியவர், அங்கு கிடைத்த ஊதியத்தையும் நண்பர் ஒருவர் கொடுத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு மீண்டும் இந்தியா கிளம்பிவிட்டார். கத்தோலிக்க ஆர்டரிலிருந்து விலகி, மதமாற்ற எண்ணம் இல்லாமல் இந்தியர்களுக்காக ஒரு ஆதவற்றோர் இல்லம் தொடங்குவது அவருடைய இலக்காக இருந்தது.

கப்பல் வழியாகக் கொழும்பு வந்து, அங்கிருந்து தரை வழியாக யாழ்ப்பாணம் சென்று, யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சிக்கு விமானம் வழியாகவும் அங்கிருந்து மதுரைக்குத் தரை வழியாகவும் பயணம் செய்யவேண்டும். கையில் இருந்த 200 பவுண்டை டிரான்சிஸ்டர் ரேடியோக்களாக வாங்கிக்கொண்டார். அக்காலத்தில் இந்த ரேடியோக்களுக்கு இந்தியாவில் பெரும் தேவை இருந்தது. அவற்றின்மீது பெரும் சுங்கவரி விதிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இந்த ரேடியோக்களை கஸ்டம்ஸ் தாண்டி எடுத்துச் சென்று சந்தையில் விற்றால் கிடைக்கும் பணம் அதிகமாக இருக்கும். அதனைக் கொண்டு ஆதரவற்றோர் இல்லம் அமைப்பது எளிது.

திருச்சியில் கஸ்டம்ஸ் அதிகாரியைச் சரிக்கட்டி, வெளியேறி, மதுரை வந்து டிரான்சிஸ்டர் ரேடியோக்களை விற்றுக் கிடைத்த பணத்துடன், திருமங்கலம் அருகே தன் நண்பர்கள் கொடுத்த தரிசு நிலத்தில் ஆதரவ்ற்றோர் இல்லத்தை ஹோமன் ஆரம்பித்துவிட்டார்.

அது இன்று விரிவாகி, சில்ட்ரன்ஸ் டவுன், பாய்ஸ் டவுன், கர்ல்ஸ் டவுன் என்ற பெயரில் சுமார் பத்து இடங்களில் உள்ளது. சுமார் 850 பேர் அங்கே சேர்ந்து வசிக்கிறார்கள், படிக்கிறார்கள். சில்ட்ரன்ஸ் டவுன் என்ற இடங்களில் 5-10 வயதுக் குழந்தைகள் (இரு பாலர்) இருப்பார்கள். இவர்களுக்கு தாதித் தாய்கள் உண்டு. குழந்தைகளை வளர்ப்பது, உணவிடுவது, அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவது ஆகியவை தினசரி வேலைகள். 10 வயதைத் தாண்டி உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் ஆண்களாக இருந்தால் பாய்ஸ் டவுன், பெண்களாக இருந்தால் கர்ல்ஸ் டவுன்.

ஆண்களை 10-வது வரை படிக்கவைப்பார்கள். பெண்களை 12-வது வரை. ஆண்கள் பத்தாவது படித்தபின், நல்ல மதிப்பெண் இருந்தால் பாலிடெக்னிக். இல்லாவிட்டால் ஐடிஐ. பத்தாவது பாஸ் செய்ய முடியாவிட்டால் ஓராண்டுத் தொழில்பயிற்சி (ஆட்டோ மெக்கானிக், கார் டிரைவிங் போல்). இப்படிக் கற்று முடித்ததும் எப்படியாவது வேலையில் சேர்த்து, அவர்கள் வாழ்க்கை வசதியாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜோ ஹோமன் இன்று 80 வயதுக்கும் மேற்பட்டவர். தினசரி வேலைகளைப் பார்ப்பதில்லை. பெரும்பாறை என்ற இடத்தில் இப்போது வசிக்கிறார். இந்தத் தொண்டமைப்பின் செயலராகத் தற்போது இருப்பவர் பேரா. நாராயண் ராஜா என்பவர். இவர் மதுரை சமூக அறிவியல் கழகம் என்ற கல்லூரியில் பிரின்சிபலாக இருந்து ஓய்வு பெற்றவர். பேரா. ரெங்கசாமியும் இதே கல்லூரியில்தான் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

பேராசிரியர் ரெங்கசாமியும் பேராசிரியர் நாராயண் ராஜாவும்
ஒவ்வொரு பாய்ஸ் டவுன் இடமும் சில ஏக்கர்களில் மரம் செடி கொடிகளுடன் விஸ்தாரமாக உள்ளது. ஆடு, கோழிகள் வளர்க்கிறார்கள். எளிமையான கட்டடங்கள். நான் சென்றிருந்தபோது காலாண்டு விடுமுறை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். அவர்களுக்கு ஏதேனும் உறவினர்கள் இருக்கிறார்கள். ஒரு சில்ட்ரன்ஸ் டவுனில் நான்கைந்து குழந்தைகள் வீடு செல்லாமல் அங்கேயே இருந்தனர்.

அடுத்த தீபாவளி விருந்து
பாய்ஸ் டவுன் இருப்பிடங்கள் அனைத்திலும் இந்துக் கோயில் (போன்ற அமைப்பு) உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. முக்கியமாக தீபாவளியின்போது மாணவர்களின் உறவினர்களையும் வரவழைத்து ஆடு அடித்து, கறி சோறுடன் பெரும் விருந்துக் கொண்டாட்டமும் நிகழ்கிறது. இதெல்லாம் 1960-களிலிருந்தே தொடர்ந்து நடந்துவருவதாம்.

எந்தப் பகுதியில் இந்த இல்லங்கள் உள்ளனவோ அப்பகுதியில் உள்ள மக்களையும் ஈடுபடுத்தி, அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்கிறார்கள். இவ்வொரு இல்லத்திலும் ‘மாணவர்கள் பாராளுமன்றம்’ நடைபெறுகிறது. அவர்கள்தான் இல்லத்தை நடத்திச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

இந்த அமைப்புக்கான நிதி பெரும்பாலும் பிரிட்டனிலிருந்து வருகிறது. ஜோ ஹோமன் சாரிட்டி என்ற பிரிட்டிஷ் அமைப்பு நிதி திரட்டி, அதனை இந்திய அமைப்புக்கும் இதேபோன்ற அவர்களுடைய தாய்லாந்து அமைப்புக்கும் அனுப்புகிறது. ஒரு காலத்தில் பாய்ஸ் டவுனின் 100% நிதி பிரிட்டனிலிருந்து வந்துகொண்டிருந்தது. இப்போது உள்ளூரில் நிதி திரட்டத் தொடங்கியுள்ளனர். இப்போது சுமார் 20-25% நிதியை உள்ளூரிலேயே திரட்டிக்கொள்கிறார்கள். கிராம மக்கள் பலர், பணமாக இல்லாவிட்டாலும் உடல் உழைப்பாகவும் உதவுகிறார்கள்.

பாய்ஸ் டவுன் இந்தியாவின் இணையத்தளம்

நீங்கள் மதுரைப் பகுதியில் இருந்தால், பாய்ஸ் டவுன் அமைப்புக்கு எந்தவிதத்தில் உதவ முடியும் என்று பாருங்கள். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பணம் கொடுத்து உதவலாம்.

அவர்களைத் தொடர்புகொள்ள:

General Secretary
Boys Town Society,
Tirumangalam – 625 706
Ph. No: 04549-294473 / 294493
btsindia@yahoo.com

Thursday, September 27, 2012

ரயில் டிக்கெட் வித்தவுட்

இன்று காலை கிண்டி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் என்னைப் பிடித்துவிட்டார். என்னிடம் சரியான டிக்கெட் இல்லை என்றும் நான் அபராதம் கட்டவேண்டும் என்றும் சொன்னார்.

என்னிடம் கோவில்பட்டியிலிருந்து சென்னை எழும்பூர் செல்வதற்கான டிக்கெட் இருந்தது. நான் தாம்பரத்தில் இறங்கி புறநகர் மின்சார ரயிலில் ஏறி கிண்டி நிலையம் வந்து இறங்கியிருந்தேன். என் டிக்கெட் எப்படிச் செல்லுபடியாகாது என்று கேட்டேன்.

விதிப்புத்தகத்தை எடுத்துக் காட்டினார். பக்கம் 281-ல், விதி எண் 20-ல் நான் செய்தது தவறு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரயில் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் அந்த ரயிலைத் தவிர வேறு எதிலும் பயணம் செய்யக்கூடாது; முக்கியமாகப் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை என்று அந்த விதியில் போடப்பட்டிருந்தது.

இதே நீங்கள் டிக்கெட் கவுண்டரில் மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் என்று சொல்லி டிக்கெட் வாங்கிக்கொண்டு, பதிவு செய்யப்படாத கம்பார்ட்மெண்டில் ஏறி தாம்பரம் வந்து இறங்கி, அங்கே மின் ரயிலில் ஏறி கிண்டி வந்தால் நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையாம். ஆனால் முன்பதிவு செய்துவிட்டால் போச்சு. நீங்கள் தனியாக மின் ரயிலுக்கான டிக்கெட் வாங்கவேண்டும்.

எனவே என் தவறுக்காக, 250 ரூபாய் அபராதமும் தாம்பரத்திலிருந்து கிண்டி வருவதற்காக 5 ரூபாயும் சேர்த்து 255 ரூபாய் கட்டினேன். (ரசீதைப் பெற்றுக்கொண்டேன்.)

அதேபோல எழும்பூரிலிருந்து மதுரைக்கோ, திருச்சிக்கோ நீங்கள் முன்பதிவு டிக்கெட் வாங்கியிருந்தால், நீங்கள் கிண்டியில் அல்லது பறங்கிமலையில் வசித்தால், தாம்பரம் சென்று ஏறிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் கிண்டி-தாம்பரம் தனியாக டிக்கெட் வாங்கிக்கொண்டுதான் செல்லவேண்டுமாம்.

ஆனால் இது மிகவும் அபத்தமான விதி என்று தோன்றுகிறது; இதனைப் பற்றி ரயில்வே அமைச்சகத்துக்கு எழுதப்போகிறேன் என்று சொன்னேன். டிக்கெட் பரிசோதகர்மீது எந்தக் குற்றமும் இல்லை. இருக்கும் விதிகளின்படி அவர் நடந்துகொள்கிறார். விதிகள் மாறவேண்டுமானால், அது அமைச்சகத்தின் கைகளில்தான் இருக்கிறது.

உங்கள் கருத்து என்ன? முன்பதிவு செய்தபின் இஷ்டத்துக்கு இறங்கி, வெவ்வேறு ரயில்கள் மாற்றிச் செல்வது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லாதிருக்கலாம். ஆனால் கடைசிக் கட்டத்தில் தாம்பரத்தில் இறங்கி புறநகர் ரயில் மாற்றி நான்கு ஸ்டேஷன்கள் தாண்டி வந்து இறங்குவது தவறு என்றா உங்களுக்குத் தோன்றுகிறது? ஏன் ரயில்வே அமைச்சகம் இப்படிப்பட்ட ஒரு அபத்தமான விதியைக் கொண்டுவந்தது? எப்போதுமுதல் கொண்டுவந்தது? கையில் பெட்டிகளுடன் குழந்தை குட்டிகளுடன் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி வெளியே சென்று டிக்கெட் வாங்கிக்கொண்டு மீண்டும் நிலையத்துக்கு உள்ளே வந்து பயணத்தைத் தொடரவேண்டும் என்றா ரயில்வே அமைச்சகம் எதிர்பார்க்கிறது?

Monday, September 24, 2012

அசோகமித்திரன் 82


எழுத்தாளர் அசோகமித்திரனின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு விருட்சம் அழகியசிங்கர் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் 22 செப்டெம்பர் 2012 அன்று மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. சுமார் 20 பேர் பேச அழைக்கப்பட்டிருந்தனர். சச்சிதானந்தம் தலைமை தாங்க, எழுத்தாளர்கள் முதுபெரும் எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோரும் அசோகமித்திரன் புத்தகங்களைப் பதிப்பித்துவரும் கிழக்கு பதிப்பகம் (சார்பில் நான்), காலச்சுவடு (சார்பில் தேவிபாரதி) ஆகியோரும், உயிர்மையின் மனுஷ்ய புத்திரன், கல்கியின் வெங்கடேஷ், அசோகமித்திரனின் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் கல்யாணராமன், நிறைய எழுத்தாளர்கள், நண்பர்கள், வாசகர்கள் ஆகியோரும் ஆளுக்கு ஓரிரு வார்த்தைகள் பேசினர். ரவி சுப்ரமணியன் தான் பேசும்போது அசோகமித்திரனைக் கொஞ்சம் மிமிக்ரி செய்தார். (ரசிக்கத்தக்கதாக இருந்தது.)

நான் மூன்று மணி நேரம் அரங்கில் உட்கார்ந்துவிட்டு, வேறொரு வேலை இருப்பதால் கிளம்பிவிட்டேன். அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கவேண்டும், ஒளிப்பதிவு செய்து வலையில் ஏற்றவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சாஹித்ய அகாதெமிக்காக அம்ஷன் குமார் எடுத்திருந்த அசோகமித்திரன் குறும்படம் போட்டுக் காட்டப்பட்டது. ஏற்கெனவே பார்த்த குறும்படம்தான் என்றாலும் மீண்டும் பார்க்கும்போது அசோகமித்திரனை ஃப்ரெஷாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு பதிப்பாளன் என்பதைவிட அசோகமித்திரனின் வாசகன் என்றவகையில்தான் நான் பேசமுடியும். திரும்பத் திரும்பப் பலமுறை அவருடைய சிறுகதைகளை, குறுநாவல்களைப் படித்துக்கொண்டே இருப்பேன். இப்போதும் செய்கிறேன். அவருடைய நாவல்களில் ஒருசில என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை. சில எனக்குப் பிடிக்காதவை. தண்ணீர், கரைந்த நிழல்கள், 18-வது அட்சக்கோடு, ஒற்றன் - மிக அற்புதமானவை. மானசரோவர் எனக்குப் பிடிக்கவில்லை. ஒற்றன் அசோகமித்திரனின் ஆகச்சிறந்த படைப்பு என்பது ஒரு வாசகனாக என் அபிப்ராயம். (இப்போது காலச்சுவடு பதிப்பு. இதனைப் பதிப்பிக்கமுடியாதது என் வருத்தம்.) அவருடைய கட்டுரைகள் அனைத்தையும் பலமுறை படித்திருக்கிறேன்.

தமிழ் எழுத்துப் பரப்பில் அசோகமித்திரனின் இடம் இது என்றெல்லாம் சொல்லும் விருப்பமோ தகுதியோ எனக்கில்லை. ஆனால் நானும் அசோகமித்திரனின் பதிப்பாளன் என்று சொல்லிக்கொள்வதில் நிச்சயமாகவே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அசோகமித்திரனின் புத்தகங்கள் (எனக்குத் தெரிந்து) கலைஞன் பதிப்பகம் வாயிலாகவும் நர்மதா பதிப்பகம் வாயிலாகவும் வெளிவந்தன. அவருடைய சிறுகதைகள் இரு பெரும் தொகுதிகளாக கவிதா பதிப்பகம் வாயிலாக வெளிவந்தன. இப்போது அவற்றைப் பிய்த்து பல சிறுகதைத் தொகுதிகளாக கவிதா வெளியிட்டுள்ளது. அவருடைய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து இரு பெரும் தொகுதிகளாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து கிழக்கு அவருடைய பல்வேறு நூல்களைக் கொண்டுவந்துள்ளது. அனைத்தும் இப்போது அச்சில் உள்ளன. காலச்சுவடு ஒற்றன், தண்ணீர் ஆகிய நாவல்களை கிளாசிக் பதிப்புகளாகக் கொண்டுவந்தது. அவருடைய புதிய சிறுகதைகளை ஒரு பதிப்பாகக் கொண்டுவந்தது.

அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பத்தை அம்ருதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கிழக்கு பதிப்பகம் ஒரு பத்துக் கதைகளை ஒலிப்புத்தகமாக வெளியிட்டுள்ளது.

அசோகமித்திரனின் சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. அதில் மூன்றை நாங்கள் வெளியிட்டுள்ளோம். கரைந்த நிழல்கள் (Star-Crossed), இன்று (Today), தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (Men, Women and Mice ). கல்யாணராமனின் மொழிபெயர்ப்பில் இரு நாவல்கள்: ஒற்றன் (Mole!), மானசரோவர் (Manasarovar), சில சிறுகதைகள் (Sand and Other Stories) வெளியாகியுள்ளன. தவிர அவருடைய சிறுகதைகள் பல மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. அவை கீழ்க்கண்ட பெயர்களில் ஆங்கிலத்தில் வந்துள்ளன: The Colours of Evil, A Most Truthful Picture and Other Stories. லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ராம் அவருடைய தண்ணீர் (Water) நாவலையும் சில சிறுகதைகளையும் (My Father's Friend) மொழிபெயர்த்துள்ளார்.

மலையாளம் முதற்கொண்டு சில இந்திய மொழிகளில் அசோகமித்திரனுடைய புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அசோகமித்திரனின் படைப்புகள் (பெரும்பாலானவை) வாங்க

ஆங்கிலப் புத்தகங்களை வாங்க (அமேசான்)