Monday, May 25, 2015

பாடத்திட்டம், தேர்வு, மதிப்பெண்கள்

தமிழகத்தில் சமச்சீர் கல்வியின் கீழான 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது. ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கூடவே மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. பத்தாம் வகுப்பில் ஒரு சிலராவது 500/500 பெற்றுவிடுகிறார்கள். தமிழை ஒரு பாடமாக எடுப்போர்கூட 499/500 பெறுகிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் 1196/1200 என்ற நிலை வந்துவிட்டது. வருமாண்டுகளில் 1200/1200 என்பது நிகழும்.

பத்தாம் வகுப்பில் 93% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பில் 90%. பொதுவாக ஆண்களைவிடப் பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது.

அதீதமான ரிசல்ட் இது என்று பலருமே நினைக்கிறார்கள். சமச்சீர் கல்வி பாடத்திட்டம் மிகவும் மோசம் என்றும் சிபிஎஸ்ஈ திட்டம் சிறப்பானது என்றும் சிலர் எழுதியதைப் படித்தேன். ஆனால் சிபிஎஸ்ஈ ரிசல்டைப் பார்த்தால் பெரும்பாலும் அது 98%-க்கு மேல்தான் இருக்கிறது. எனவே தேர்ச்சி விகிதத்தை மட்டும் வைத்துப் பாடத்திட்டத்தைச் சீர்தூக்கிப் பார்க்க முடியாது.

பாடத்திட்டம், வினாத்தாள்களின் தன்மை, திருத்துதல் எப்படி உள்ளது, தேர்வை நடத்தும் அமைப்பின் குறிக்கோள்கள் போன்றவற்றைத் தனித்தனியாகப் பரிசீலிக்கவேண்டும்.

சிபிஎஸ்ஈ - சமச்சீர் பாடத்திட்டங்கள்: என் கணிப்பில் சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் தேவையற்ற அளவு கடினமானதாக, விரிவானதாக இருப்பதாகத் தோன்றுகிறது. இதன் காரணமாக வகுப்பறையில் பாடங்கள் வேகவேகமாக நடத்தப்பட்டு, ஒப்பேற்றி முடிக்கப்படுகின்றன. சென்னையின் முக்கியமான சிபிஎஸ்ஈ பள்ளிகளிலும்கூடக் கேள்விகள் 'குறித்து' கொடுக்கப்பட்டு, மனப்பாடம் செய்ய வைக்கப்படுகிறது. பாடப்புத்தகத்தில் உள்ள அதே சொற்கள் பரீட்சையிலும் எழுதப்படவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

பாசிடிவாகச் சொல்லவேண்டும் என்றால், சிபிஎஸ்ஈ சிலபஸுக்காக என்.சி.ஈ.ஆர்.டி உருவாக்கியிருக்கும் புத்தகங்கள் மிக நன்றாக உள்ளன. பெரும்பாலும் தவறுகள் இல்லாமல், மிக நல்ல நடையில் உள்ளன. ஆனால் சிக்கல் புத்தகங்களில் அல்ல, அடிப்படையான பாடத்திட்டத்தில் உள்ளது. மிகக் கடினமான போர்ஷன் உள்ள காரணத்தால், மாணவர்கள் படிப்பதற்கும் ஆசிரியர்கள் சொல்லித்தருவதற்கும் நிச்சயமாகச் சிரமப்படுகிறார்கள்.

சமச்சீர் முறையை விதந்தோதிப் பல பதிவுகள் வந்திருப்பதையும் படித்தேன். சமச்சீர் முறை காரணமாகத்தான் அரியலூர் மாவட்ட கிராமத்திலும் ஒரு மாணவன் பத்தாம் வகுப்பில் முதல் இடம் பெற்றுள்ளான் என்றும் இப்போது நாம் பார்க்கும் மிகப் பிரமாதமான ரிசல்ட்டுக்குக் காரணம் கலைஞர் உருவாக்கிய சமச்சீர் கல்வி முறைதான் என்றும்கூடப் படித்தேன். சமச்சீர் சிலபஸ் வருவதற்கு முன்பும்கூட சிற்றூர்களில் உள்ள மாணவர்கள் முதலிடம் பெற்றிருக்கிறார்கள்.

சமச்சீர் சிலபஸுக்கும் சிபிஎஸ்ஈ சிலபஸுக்கும் இடையே குறைவான வித்தியாசங்கள்தான் உள்ளன. அதுவும் கணிதம், அறிவியல் ஆகியவற்றில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிடும் சமச்சீர் புத்தகங்களின் தரத்தில் நிச்சயம் குறைபாடுகள் உள்ளன. என்.சி.ஈ.ஆர்.டி புத்தகத் தரம் இங்கு நிச்சயம் இல்லை. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனப் புத்தகங்களில் காணப்படும் ஆங்கிலத்தின் தரம் படுமோசம். தமிழும் சுமார்தான். இவை சரி செய்யப்படவேண்டும். செய்வது கடினமும் அல்ல. அதற்கான விருப்பம்தான் தேவை.

இதைத் தாண்டி, சமச்சீர் - சிபிஎஸ்ஈ இரண்டையும் சில இடங்களில் ஒப்புநோக்கலாம். சிபிஎஸ்ஈ வினாத்தாள்கள், திருத்தும் முறை இரண்டும் சமச்சீர் கல்வியிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சமச்சீர் கல்வியில் இரண்டு இரண்டு தாள்கள் உள்ளன. சிபிஎஸ்ஈ தேர்வில் ஒரு தாள்தான். சிபிஎஸ்ஈ தேர்வில் பாடத்திலிருந்து நேரடியாக எழுதும் பகுதி குறைவாகவும் வெளியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியைப் படித்து, புரிந்துகொண்டு பதில் எழுதும் பகுதியும் இலக்கணப் பகுதியும் கூடுதலாகவும் உள்ளது. [சிபிஎஸ்ஈ ஆங்கிலம் 70 மதிப்பெண்கள் = 25 பாடப்பகுதி + 20 காம்ப்ரிஹென்ஷன் + 25 கிராமர்.]

சமச்சீர் கல்வி ஆங்கில வினாத்தாளில் சப்ஜெக்டிவான பகுதிகள் நிறைய உள்ளன. படங்களைக் கொடுத்து அவற்றைப் பற்றி ஒரு பத்தி எழுதச் சொல்கிறார்கள். சில கேள்விகள் கேட்கிறார்கள் தமிழில் இரண்டு வரிகள் கொடுத்து ஆங்கிலத்தில் மொழிமாற்றச் சொல்கிறார்கள். இம்மாதிரிக் கேள்விகளில் முழு மதிப்பெண் வாங்குவது எளிதல்ல. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விடைத்தாள்களைத் திருத்துவது என்பது மிகவும் லிபரலாக ஆகியுள்ளது. மதிப்பெண்களை அள்ளிப் போடுமாறு திருத்துனர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். சிபிஎஸ்ஈ விடைத்தாள் திருத்துவது இவ்வாறு நடப்பதில்லை.

பொதுத்தேர்வின் நோக்கம் மாணவர்களை வேண்டுமென்றே ஃபெயில் ஆக்குவதல்ல. பொதுவாக 100 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் 40 மதிப்பெண்களுக்கு மிக எளிதான, யார் வேண்டுமானாலும் பதில் சொல்லக்கூடிய கேள்விகளாக இருக்கவேண்டும். அடுத்த 40 மதிப்பெண்கள், கொஞ்சம் கடினமானதாக, ஆனால் நன்கு தயாரித்து வந்திருக்கக்கூடிய யாரும் சரியாக எழுதக்கூடியதாக இருக்கவேண்டும். கடைசி 20 மதிப்பெண்களுக்கான கேள்விகள் மிகவும் கடினமானவையாக இருந்தால், மிகச் சிறந்த மாணவர்களை இனம் கண்டுபிடிக்க உதவும். ஆக, பெரும்பாலான மாணவர்கள்ள் 80% மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். அதற்குமேல் மதிப்பெண் பெறவேண்டும் என்றால் அவர்கள் அந்தக் குறிப்பிட்ட பாடத்தில் நிஜமாகவே நல்ல புலமை உடையவர்களாக இருத்தல் வேண்டும். பொதுவாக சிபிஎஸ்ஈ வினாத்தாள்கள் இப்படிப்பட்டவையாக உள்ளன. சமச்சீர் தேர்வுகளில் இப்படிக் கிடையாது.

தேர்வுகள் மூன்று வகைப்படும். நுழைவுத் தேர்வு, பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு, தரப்படுத்தப்பட்ட தேர்வு. நுழைவுத் தேர்வின் நோக்கம் கழித்துக் கட்டுதல். மொத்தம் உள்ள 100 இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் போட்டி போடுகிறார்கள் என்றால் 99,900 பேரை எப்படியாவது கழித்துக் கட்டவேண்டும் என்பது மட்டும்தான் இந்தத் தேர்வின் நோக்கமாக இருக்கிறது.

பள்ளி இறுதிப் பொதுத் தேர்வின் நோக்கம், எழுதிய அனைவரையும் பெரும்பாலும் தேர்ச்சி பெறவைக்கவேண்டும் என்பதே. இங்கு, குறைந்தபட்சத் தகுதி இல்லாதவர்கள் மட்டும்தான் ஃபெயில் ஆக்கப்படவேண்டும். நாளையே 100% தேர்ச்சி நடைபெற்றால் நமக்கு அது மகிழ்ச்சியே. ஆனால் குறைந்தபட்சத் தரம் என்பதை அனைவரும் தாண்டியிருக்கிறார்களா என்பதை மட்டும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

தரப்படுத்தப்பட்ட தேர்வு இந்தியாவில் நடைபெறுவது இல்லை. அமெரிக்காவில் நடத்தப்படும் எஸ்.ஏ.டி (SAT), ஜி.ஆர்.ஈ (GRE) போன்றவை தரப்படுத்தப்பட்ட தேர்வுகள். இந்த வகைத் தேர்வு, நுழைவுத் தேர்வும் அல்ல, பொதுத் தேர்வும் அல்ல. பலதரப்பட்ட்ட பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை ஏதோ ஒருவகையில் ஒப்பிட்டு ஒவ்வொருவருடைய தரமும் எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறியும் ஒரு முயற்சி. இந்தத் தேர்வில் பாஸ் அல்லது ஃபெயில் கிடையாது. தேர்வு எழுதியவர்களில் நீங்கள் எந்த பெர்சண்டைலில் உள்ளீர்கள், அதாவது உங்களுக்கு மேல் எத்தனை பேர், கீழ் எத்தனை பேர் என்பதை இந்தத் தேர்வு தரும். இந்தத் தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கேள்வித்தாள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. வெவ்வேறு நாள்களில் தேர்வு எழுதலாம். இப்போதெல்லாம் ஒவ்வொரு மாணவருக்குமே முற்றிலும் வித்தியாசமான கேள்விகள் தரப்படுகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்பட்ட ஸ்கோர், பள்ளி இறுதித் தேர்வு ஸ்கோர், மேலும் பலவற்றை அடிப்படையாக வைத்து ஒரு மாணவருக்கு இடம் தருகிறார்கள். இம்மாதிரியான ஓர் அமைப்பை நோக்கித் இந்தியா செல்வது சிறப்பானதாக இருக்கும்.

தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காகத்தான் தேர்ச்சி விகிதமும் மதிப்பெண்களும் மிகவும் லிபரலாக வழங்கப்படுகின்றன என்று நான் கருதுகிறேன். பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் 12-ம் வகுப்புக்கு இணையான பியூசியின் தேர்ச்சி விகிதம் 60%-க்குக் கீழ்தான் உள்ளது. அம்மாநில மாணவர்களைவிட தமிழக மாணவர்கள் மிக மிகச் சிறப்பாகப் படிப்பவர்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை. சென்ற ஆண்டைவிட ஓரிரு சதவிதமாவது தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கவேண்டும் என்ற அழுத்தம் தமிழகப் பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது. கர்நாடகத்தில் அப்படி இல்லை. பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இப்போதைக்கு மாநிலங்களுக்கு இடையேயான போட்டிக்குரிய ஒரு விஷயமாகப் பார்க்கப்படவில்லை. அப்படிப் பார்க்கப்பட்டால், ஒவ்வொரு மாநிலமும் தாங்கள் கட்டுப்படுத்தும் தேர்வில் 100% ரிசல்டைப் பொய்யாகவாவது காட்ட முற்படுவார்கள்.

மொத்தத்தில், சிலபஸையும் தேர்வுமுறை மற்றும் திருத்துதல் முறை ஆகியவற்றையும் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இங்கே ஒப்பீடு, சிலபஸ்களுக்கு இடையே இருக்கவேண்டிய தேவை இல்லை. மாறாக சமச்சீர் கல்வி கற்பிக்கப்படும் முறையிலும், வினாத்தாள் தயாரிக்கப்படும் முறையிலும், மதிப்பெண்கள் வழங்கப்படும் முறையிலும் எம்மாதிரியான ஆரோக்கியமான மாற்றங்கள் தேவை என்பதைத் தமிழகக் கல்வியாளர்கள் சிந்திக்கவேண்டும். மதிப்பெண்களுக்கு பதில், சிபிஎஸ்ஈ போல் கிரேடுகளைத் தருவது சிறப்பாக இருக்கும்.

ஐஐடிக்கு மாணவர்களை அனுப்புவது ஒரு போர்டின் நோக்கமல்ல. விரும்பும் மாணவர்கள் தாங்களாகவேதான் அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவேண்டும். சிபிஎஸ்ஈ மாணவர்களும்கூடப் பிரத்யேகத் தயாரிப்பு காரணமாகத்தான் ஐஐடிக்குள் நுழைகிறார்கள். எனவே அதன் காரணமாக சமச்சீர் கல்வியைத் திட்டவேண்டிய அவசியமில்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை அதற்கெனச் சில கல்வி இலக்குகளை வைத்துக்கொண்டு அதன்படிச் செயல்பட்டாலே போதும்.

2 comments:

  1. //தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காகத்தான் தேர்ச்சி விகிதமும் மதிப்பெண்களும் மிகவும் லிபரலாக வழங்கப்படுகின்றன என்று நான் கருதுகிறேன்//.

    நான் ஒரு மாணவன் என்ற முறையில் என் கருத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். மதிப்பெண்கள் அடிப்படையில் ஒருவரின் திறமையை கணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதற்கு என்னையே ஒரு உதாரணமாக கூறுவேன். பாடங்களை மணப்பாடம் செய்து பரிட்சை எழுதுவது எனக்கு கடிணம் ஆகையால் எனது மார்க்குகளும் அதிகமாக இருந்ததில்லை ஆனால் எல்லா சலுகைகளும் வாய்ப்புகளும் மார்க்கின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.

    இன்னொருவிசயத்தையும் என்னால் கவனிக்க முடிகிறது. இக்கல்வி முறையினால் நாம் எம்மாதிரியான சமுதாயத்தை உருவாக்குகிறோம் என்றால் எல்லா விசயங்களையுமே ஒப்புக்கு (கடமைக்கு) செய்யதால் போதும் என்ற ஒன்றைத்தான், உணர்வுப்பூர்வமாக அனுகக்கூடிய மனநிலை மாணவர்களிடையே நிலவுவது மிகவும் அறிதாக இருக்கிறது இது நமது கல்விமுறை மூலம் ஊண்றப்படுகிறது என்பது என் வாதம். இன்னும் வேதனைப்படக் கூடிய உண்மை என்னவென்றால் பெரும்பாலான பொற்றோர்களே இவ்வாறு செயல்பட (உலகத்தோடு ஒட்ட ஒழுகல்...) ஊக்கப்படுத்துகின்றனர் என்பதுதான். உதாரணத்திற்கு பனிரெண்டாவதில் அதிக மார்க் எடுக்கவேண்டும் என்பதே இலக்காக நினைத்துக் கொள்வதால் அறிவியல் பாடங்கள் புரியாமலேயே போய்விடுகிறது இதனால் மேல்படிப்பு படிக்கும் போது சிரமங்களை சந்திக்கின்றனர். உண்மையான திறமைசாலிகள் ஊக்கப்ப்டுத்தி வாய்ப்பு அளிப்பதில் இந்த கல்வி முறை ஒரு சிக்கலான வரைமுறையைத்தான் கொண்டுள்ளது என்னைப் பொருத்தவரையில். கல்வியாளர்கள் சிந்தித்து மாற்றங்கள் நிகழும் என்பதில் எனக்கு துளிகூட் நம்பிக்கையில்லை.

    தா.அருள் செல்வம்,
    ஆராய்சி மாணவர்,
    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்,
    கோயமுத்தூர்.
    http://lottunorain.blogspot.in/

    ReplyDelete
  2. இந்தியாவில் கல்வி விஷய்த்தில் மிக ஏராளமான அளவுக்குப் பண்ம் வீணடிக்கப்படுகிறது. பல வேலைகளுக்குப் பட்டப்படிப்பே தேவையில்லை. ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் லட்சக்கணக்கில் பட்டப்படிப்பில் சேருகின்றனர். எஞ்சினீரிங் கல்லூரிகள் கூட இவ்வளவு தேவையில்லை. எஞ்சினீரிங் படித்து விட்டு வேலையில்லாதவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அல்லது அவர்கள் படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலையில் வேலை சேருகின்றனர்.சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இண்டர்மீடியட் படிப்பு இருந்தது. அதை முடித்தால் எப்.ஏ என்று பட்டம் கொடுத்தார்கள். நிறையப் பேர் அந்தப் பட்டத்துடன் நிறுத்திக் கொண்டனர். இப்போது கூட 12 ஆம் வகுப்புக்குப் பிறகு ஒரு பட்டத்தைக் கொடுத்து விட்டால் பலரும் அத்துடன் நிறுத்திக் கொள்வர்.
    இப்போதுள்ள கல்வி முறையில் பாடத் திட்டப் பிரச்சினை ஒரு புறம் இருக்க சரியான ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லை என்பது தான் பெரிய பிரச்சினை.
    பரீட்சைகளில் மார்க்குகளை அள்ளிப்போடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உண்மைதான். ஒரு காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி ( பதினோறாம் வகுப்புக்குச் சமம்) பரீட்சை என ஒன்று இருந்தது. பள்ளிகளில் அதுவே கடைசி பரீட்சை. அதை முடித்தால் கல்லூரியில் சேரலாம். ஆனால் எல்லோரும் அப்பரீட்சையை எழுதி விட முடியாது. பள்ளிகள் ஒவ்வொன்றும் செலக்ஷன் பரிட்சையை நடத்தும், இது டிசம்பரில் நடக்கும். இதில் தேறுபவர்கள் மட்டுமே எஸ்...எஸ்.எல்.சி பரீட்சை எழுத முடியும். இது பள்ளி நிர்வாகம் நடத்துகிற வடிகட்டும் பரீட்சை ஆகும்.எங்கே செலக்சன் பரீட்சையில் பாஸ் போடாமல் நிறுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் மாண்வர்கள் ஆசிரியர்களிடமும் தலைமை ஆசிரியரிடமும் ஒரு பயத்துடன் நடந்து கொள்வர்.ஒழுங்காகப் படிப்பார்கள். இப்போது எந்தக் கவலையும் இல்லை. பத்தாம் வகுப்பு பிளஸ் டூ ஆகியவற்றிலும் நிறைய மார்க் வாங்கி விட முடியும் என்று கருதுகிறார்கள். கல்வி முறை குறித்து ஆழ்ந்து ஆராய்து தக்க முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete